Tamil

Translation: tam-abdulhameedbaqa

Author: Abdulhameed Baqavi

அல் ஃபாத்திஹா

Surah 1

[1] அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஓதுகிறேன்)

[2] எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! (அவன்தான்) அகிலத்தார் அனைவரையும் படைத்து வளர்த்து தகுந்த முறையில் பக்குவப்படுத்துபவன்

[3] (அவன்தான்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையவன்

[4] தீர்ப்பு நாளின் அதிபதி(யும் அவனே)

[5] (அல்லாஹ்வே!) நாங்கள் உன்னையே வணங்குகிறோம்; உன்னிடமே உதவி தேடுகிறோம்

[6] நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக

[7] (அவ்வழி) எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்கள் (சென்ற) வழி.(உன்) கோபத்திற்குள்ளானவர்களோ வழிதவறியவர்களோ சென்ற வழியல்ல

அல்பகரா

Surah 2

[1] அலிஃப் லாம் மீம். (அல்லாஹுதஆலா, வானவர் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் - அவர்கள் மூலமாக, நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் - அவர்களுக்கு அருளிய குர்ஆனாகிய)

[2] இதுதான் வேதநூல். இதில் சந்தேகமேயில்லை. இறையச்சம் உடையவர்களுக்கு (இது) நேரான வழியைக் காட்டும்

[3] அவர்கள் மறைவானவற்றை (உண்டென்று) நம்பிக்கை கொள்வார்கள். தொழுகையையும் நிலைநிறுத்துவார்கள் (தவறாது கடைபிடிப்பார்கள்). நாம் அவர்களுக்கு வழங்கிய (பொருள், செல்வம் போன்ற)வற்றிலிருந்து (தானமாக) செலவும் செய்வார்கள்

[4] (மேலும், நபியே!) அவர்கள் உமக்கு இறக்கப்பட்ட இ(வ்வேதத்)தையும், உமக்கு முன் (சென்ற நபிமார்களுக்கு) இறக்கப்பட்ட (வேதங்கள் யா)வற்றையும் நம்பிக்கை கொள்வார்கள். (நியாயத் தீர்ப்பு நாளாகிய) இறுதி நாளையும் (உண்மை என்று) உறுதியாக நம்புவார்கள்

[5] இவர்கள்தான் தங்கள் இறைவனின் நேரான வழியில் இருக்கிறார்கள். இவர்கள்தான் நிச்சயமாக வெற்றி பெற்றவர்கள்

[6] (நபியே!) எவர்கள் (இவ்வேதத்தை மனமுரண்டாக) நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும், எச்சரிக்கை செய்யாதிருப்பதும் உண்மையில் சமமே. அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்

[7] (அவர்கள் மனமுரண்டாக நிராகரித்ததன் காரணமாக) அவர்களுடைய உள்ளங்களின் மீதும், கேள்விப்புலன் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். அவர்களுடைய பார்வைகளின் மீதும் திரையிடப்பட்டு விட்டது. தவிர, அவர்களுக்கு கொடிய வேதனையும் உண்டு

[8] (நபியே!) அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டிருக்கிறோம் எனக் கூறுபவர்களும் மனிதர்களில் சிலருண்டு. ஆனால், (உண்மையில்) அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் அல்லர்

[9] அவர்கள் (இவ்விதம் கூறி) அல்லாஹ்வையும், நம்பிக்கை கொண்டவர்களையும் வஞ்சிக்(கக் கருது)கின்றனர். ஆனால், அவர்கள் தங்களையே தவிர (பிறரை) வஞ்சிக்க முடியாது. (இதை) அவர்கள் உணர்ந்து கொள்ள மாட்டார்கள்

[10] (ஏனென்றால்) அவர்களுடைய உள்ளங்களில் (வஞ்சகம் என்னும்) நோய் இருக்கிறது. ஆகவே, அவர்களுக்கு (அந்)நோயை அல்லாஹ் அதிகப்படுத்தியும் விட்டான். (இவ்விதம்) அவர்கள் பொய் சொல்வதனால் மிக்க துன்புறுத்தும் வேதனையும் அவர்களுக்கு உண்டு

[11] அவர்களை நோக்கி பூமியில் விஷமம் செய்(துகொண்டு அலை)யாதீர்கள் என்று கூறினால், அதற்கவர்கள் “நாங்கள் சமாதானத்தை உண்டாக்குபவர்கள்தான் (விஷமிகள் அல்லர்)'' எனக் கூறுகிறார்கள்

[12] நிச்சயமாக அவர்கள் விஷமிகளே! ஆனால், (தாங்கள்தான் விஷமிகள் என்பதை) அவர்கள் உணர்ந்துகொள்ள மாட்டார்கள்

[13] மேலும், அவர்களை நோக்கி “(மற்ற) மனிதர்கள் நம்பிக்கை கொண்டதைப் போன்று நீங்களும் (உண்மையாக) நம்பிக்கை கொள்ளுங்கள்'' என்று கூறினால், (அதற்கு) “அறிவீனர்கள் நம்பிக்கை கொண்டதுபோல் நாங்களும் நம்பிக்கை கொள்வதா?'' என்று அவர்கள் கூறுகிறார்கள். நிச்சயமாக அவர்கள்தான் முற்றிலும் அறிவீனர்கள். ஆனால், (தாங்கள்தான் அறிவீனர்கள் என்பதை) அவர்கள் அறிந்துகொள்ள மாட்டார்கள்

[14] தவிர அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களைச் சந்தித்தால் “நாங்களும் (உங்களைப்போல்) நம்பிக்கை கொண்டு விட்டோம்'' எனவும் கூறுகிறார்கள். ஆனால், அவர்கள் (நம்பிக்கையாளர்களை விட்டு விலகித்) தங்களின் (தலைவர்களாகிய) ஷைத்தான்களுடன் தனித்து விட்டாலோ “நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம். ஆனால், நாங்கள் (நம்பிக்கையாளர்களைப்) பரிகாசம் செய்(யவே அவ்விதம் அவர்களிடம் கூறு)கிறோம்'' எனக் கூறுகின்றனர்

[15] (அவ்வாறன்று!) அல்லாஹ்தான் அவர்களை பரிகசிக்கிறான். மேலும் அவர்களை அவர்களுடைய அட்டூழியத்தில் (இவ்விதம் தட்டழிந்து) கெட்டலையும்படி விட்டு வைத்துள்ளான்

[16] இவர்கள்தான் நேரானவழிக்குப் பதிலாகத் தவறான வழியை விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள். எனவே, இவர்களுடைய (இந்த) வியாபாரம் இலாபம் அளிக்கவில்லை. அன்றி, இவர்கள் நேர்வழி பெற்றவர்களாகவும் இருக்கவில்லை

[17] இவர்களுடைய உதாரணம் ஓர் உதாரணத்தை ஒத்திருக்கிறது. (அதாவது அபாயகரமான காட்டில், காரிருளில் அகப்பட்டுக் கொண்டவர்களுக்கு வழியை அறிவிப்பதற்காக) ஒருவர் தீயை மூட்டி (அதனால்) அவரைச் சூழ ஒளி ஏற்பட்ட சமயத்தில் (அவர்களுடைய தீய செயல்களின் காரணமாக) அல்லாஹ் அவர்களுடைய (பார்வை) ஒளியைப் போக்கி பார்க்க முடியாத காரிருளில் அவர்களை விட்டு விட்டான்

[18] (அத்துடன் இவர்கள்) செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கிறார்கள். ஆதலால், இவர்கள் (அபாயகரமான இந்நிலையிலிருந்து) மீளவே மாட்டார்கள்

[19] அல்லது (இவர்களுடைய உதாரணம்:) அடர்ந்த இருளும், இடியும், மின்னலும் கொண்ட மேகம் பொழியும் மழையில் அகப்பட்டுக் கொண்ட(வர்களின் உதாரணத்தை ஒத்திருக்கிறது. இவ்வாறு அகப்பட்டுக் கொண்ட இ)வர்கள் இடி முழக்கங்களால் மரணத்திற்குப் பயந்து தங்கள் விரல்களைத் தங்கள் காதுகளில் நுழைத்து (அடைத்து)க் கொள்கின்றனர். நிராகரிக்கும் இவர்களை அல்லாஹ் (எப்பொழுதும்) சூழ்ந்திருக்கிறான்

[20] (தவிர) அந்த மின்னல் இவர்களின் பார்வையைப் பறிக்கப் பார்க்கிறது. அது இவர்களுக்கு வெளிச்சம் தரும்போதெல்லாம் அ(ந்த வெளிச்சத்)தில் நடக்(க விரும்பு)கிறார்கள். (ஆனால், அம்மின்னல் மறைந்து) அவர்களை இருள் சூழ்ந்துகொண்டால் (வழி தெரியாது திகைத்து) நின்று விடுகிறார்கள். இன்னும் அல்லாஹ் விரும்பினால் இவர்களுடைய கேள்விப் புலனையும் பார்வையையும் போக்கிவிடுவான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் (எவ்விதமும் செய்ய) பேராற்றலுடையவன் ஆவான்

[21] மனிதர்களே! உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தவர்களையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் இறை அச்சமுடையவர்களாக ஆகலாம்

[22] அவனே பூமியை நீங்கள் வசிக்கும் இடமாகவும், வானத்தை ஒரு முகடாகவும் அமைத்து, மேகத்திலிருந்து மழையைப் பொழிவித்து, அதைக் கொண்டு (நீங்கள்) புசிக்கக்கூடிய கனிவர்க்கங்களையும் உங்களுக்கு வெளியாக்குகிறான். ஆகவே, (இவற்றையெல்லாம்) நீங்கள் தெளிவாக அறிந்துகொண்டே அல்லாஹ்வுக்கு இணைகளை ஆக்காதீர்கள்

[23] நாம் (நம் தூதர் முஹம்மது என்னும்) நம் அடியாருக்கு இறக்கிய இ(வ்வேதத்)தில் நீங்கள் சந்தேகப்பட்டு (இது அல்லாஹ்வினால் அருளப்பட்டதல்ல என்று கூறுகின்ற) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வைத் தவிர உங்களை ஆமோதிப்பவர்களையும் (திறமையாளர்களையும் உதவியாளர்களையும்) நீங்கள் அழைத்து(ச் சேர்த்து)க்கொண்டு இதைப் போன்ற ஓர் அத்தியாயத்தை (அமைத்து)க் கொண்டுவாருங்கள்

[24] நீங்கள் அவ்விதம் (கொண்டுவர) இயலாது போனால் - உங்களால் நிச்சயம் அவ்வாறு செய்ய முடியாது - மனிதர்களும் கற்களும் இரையாகின்ற (நரக) நெருப்புக்குப் பயந்து கொள்ளுங்கள். அது நிராகரிப்பவர்களுக்கென தயார் செய்யப்பட்டுள்ளது

[25] (நபியே!) எவர்கள் (இவ்வேதத்தை) நம்பிக்கை கொண்டு (அதில் கூறப்பட்டுள்ளபடி) நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு (சொர்க்கத்தில்) நிச்சயமாக சோலைகள் உண்டு என்று நீர் நற்செய்தி கூறுவீராக. அவற்றில் நீரருவிகள் (தொடர்ந்து) ஓடிக்கொண்டே இருக்கும். அவற்றிலிருந்து (அவர்களுக்கு) ஒரு கனி புசிக்கக் கொடுக்கப்படும் போதெல்லாம் முன்னர் நமக்குக் கொடுக்கப்பட்டதும் இதுதானே! என (ஆச்சரியப்பட்டுக்)கூறுவார்கள். (ஏனென்றால்) பார்வைக்கு ஒரேவிதமாகத் தோன்றக்கூடியவற்றையே கொடுக்கப் பெறுவார்கள். (எனினும் அவை சுவையில் விதவிதமாக இருக்கும்.) பரிசுத்தமான மனைவிகளும் அங்கு அவர்களுக்கு கிடைப்பார்கள். மேலும், அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்

[26] கொசு அல்லது அதைவிட (அற்பத்தில்) மேலான எதையும் உதாரணமாகக் கூறுவதற்கு அல்லாஹ் நிச்சயமாக வெட்கப்படமாட்டான். ஆதலால், எவர்கள் (உண்மையாக) நம்பிக்கை கொண்டிருக்கிறார்களோ அவர்கள் (அவ்வுதாரணம்) தங்கள் இறைவனால் கூறப்பட்ட உண்மையான உதாரணம்தான் என்று உறுதியாக அறிந்து கொள்வார்கள். எனினும், (இவ்வேதத்தை) நிராகரிப்பவர்களோ இதை உதாரணமாக்குவதைக்கொண்டு அல்லாஹ் என்னதான் நாடுகிறான்? எனக் கூறுவார்கள். இதைக்கொண்டு பலரை வழிகெடும்படியும் செய்கிறான். இதைக்கொண்டு பலரை நேர்வழி பெறும்படியும் செய்கிறான். (ஆனால், இவ்வேதத்தை மனமுரண்டாக நிராகரிக்கும்) பாவிகளைத் தவிர (மற்றவர்களை) இதைக்கொண்டு வழிகெடும்படி அவன் செய்யமாட்டான்

[27] அல்லாஹ்விடத்தில் (இவர்கள்) செய்த உடன்படிக்கையை இவர்கள் உறுதிப்படுத்திய பின்னும் அதை முறித்து விடுகின்றனர். எ(ந்த இரத்த சொந்தத்)தைச் சேர்த்து வைக்கும்படி அல்லாஹ் கட்டளையிட்டானோ அதைப் பிரித்தும் விடுகின்றனர். பூமியில் விஷமம் செய்துகொண்டும் இருக்கின்றனர். இவர்கள்தான் நஷ்டமடைந்தவர்கள்

[28] (மனிதர்களே!) நீங்கள் அல்லாஹ்வை எப்படி நிராகரிக்கிறீர்கள்? உயிரற்றவர்களாக இருந்த உங்களை அவன்ன உயிர்ப்பித்தான். பின்னும் அவன்ன உங்களை மரணிக்கச் செய்வான். பின்னும் அவனே உங்களை உயிர்ப்பிப்பான். அதன் பின்னும் நீங்கள் (உங்கள் செயல்களுக்குரிய கூலியை அடைவதற்காக) அவனிடமே (விசாரணைக்கு) திரும்ப கொண்டு வரப்படுவீர்கள்

[29] அவன்தான் (பூமியையும்) பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பிறகு, அவன் வானத்திற்கு மேல் (தன் தகுதிக்குத் தக்கவாறு) உயர்ந்து அதை ஏழு வானங்களாக அமைத்தான். மேலும், (அவற்றிலும் அகிலத்திலும் உள்ள) அனைத்தையும் அவன் நன்கறிந்தவன் ஆவான்

[30] (நபியே!) உமது இறைவன் வானவர்களை நோக்கி “நான் பூமியில் (என்) பிரதிநிதியை (ஆதமை) நிச்சயமாக ஏற்படுத்தப் போகின்றன்'' எனக் கூறிய சமயத்தில் (அதற்கு) அவர்கள் “(பூமியில்) விஷமம் செய்து இரத்தம் சிந்தக்கூடிய (சந்ததிகளைப் பெறும்) அவரை அதில் (உன் பிரதிநிதியாக) ஆக்குகிறாயா? நாங்களோ உன் பரிசுத்தத் தன்மையைக்கூறி உன் புகழைக்கொண்டு உன்னைப் புகழ்ந்து கொண்டிருக்கிறோம்'' என்று கூறினார்கள். அதற்கு அவன் “நீங்கள் அறியாதவற்றை எல்லாம் நிச்சயமாக நான் நன்கறிவேன்'' எனக் கூறிவிட்டான்

[31] பின்பு (ஆதமைப் படைத்து) ஆதமுக்கு எல்லாப் (பொருள்களின்) பெயர்களையும் (அவற்றின் தன்மைகளையும்) கற்றுக் கொடுத்து, அவற்றை அந்த வானவர்களுக்கு முன்பாக்கி “(வானவர்களே! ஆதமுக்கு என் பிரதிநிதியாக ஆவதற்குரிய தகுதியில்லை என்று கூறினீர்களே! இதில்) நீங்கள் உண்மையானவர்களாக இருந்தால் (இதோ உங்கள் முன்னிருக்கும்) இவற்றின் பெயர்களை எனக்கு அறிவியுங்கள்'' எனக் கூறினான்

[32] (அவ்வாறு அறிவிக்க முடியாமல்) அவர்கள் (இறைவனை நோக்கி) “நீ மிகத் தூய்மையானவன். நீ எங்களுக்கு அறிவித்தவற்றைத் தவிர (வேறொன்றையும்) நாங்கள் அறியமாட்டோம். நிச்சயமாக நீதான் மிக அறிந்தவன், ஞானம் உடையவன்'' எனக் கூறினார்கள்

[33] (பின்னர் இறைவன்) “ஆதமே! அவற்றின் பெயர்களை அவர்களுக்கு அறிவிப்பீராக!'' எனக் கூறினான். அவர் அவர்களுக்கு அவற்றின் பெயர்களை அறிவித்தபொழுது அவன் (வானவர்களை நோக்கி) “பூமியிலும் வானங்களிலும் (உங்களுக்கு) மறைவானவற்றை நிச்சயமாக நான் நன்கறிபவன் என்று நான் உங்களுக்குக் கூறவில்லையா? ஆகவே, நீங்கள் (ஆதமை பற்றி) வெளியிட்டதையும், மறைத்துக் கொண்டதையும் நிச்சயமாக நான் (நன்கு) அறிவேன்'' என்றான்

[34] பின்னர், நாம் வானவர்களை (நோக்கி) “ஆதமுக்கு நீங்கள் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்'' எனக் கூறியபோது இப்லீஸைத் தவிர (அனைவரும்) ஸுஜூது செய்தார்கள். அவனோ பெருமைகொண்டு விலகி (நம் கட்டளையை) நிராகரிப்பவர்களில் ஆகி விட்டான்

[35] பின்னர், நாம் (ஆதமுக்குத் துணையாக அவர் மனைவியைப் படைத்து ஆதமை நோக்கி) “ஆதமே! நீர் உமது மனைவியுடன் சொர்க்கத்தில் வசித்திருப்பீராக. நீங்கள் இருவரும் இதில் விரும்பும் இடத்தில் (விரும்பியவற்றைத்) தாராளமாகப் புசியுங்கள். ஆனால், இந்த மரத்தை நெருங்காதீர்கள். நெருங்கினால் நீங்கள் இருவரும் (உங்களுக்குத்) தீங்கிழைத்துக் கொண்டவர்களாவீர்கள்'' என்று கூறினோம்

[36] எனினும், (இப்லீஸாகிய) ஷைத்தான் அதை காரணமாக வைத்து, அவ்விருவரையும் தவறிழைக்கும்படிச் செய்து, (சொர்க்கத்திலிருந்தும்) அவ்விருவரும் இருந்த (மேலான) நிலைமையிலிருந்தும் அவர்களை வெளியேறும்படி செய்துவிட்டான். ஆகவே, (அவர்களை நோக்கி) “உங்களில் சிலர் சிலருக்கு எதிரியாவர். (சொர்க்கத்திலிருந்து) நீங்கள் இறங்கிவிடுங்கள். உங்களுக்கு பூமியில்தான் வசிக்க இடமுண்டு. அதில் சிறிது காலம் வரை சுகமும் அனுபவிக்கலாம்'' என நாம் கூறினோம்

[37] பின்னர் ஆதம் சில வாக்கியங்களைத் தன் இறைவனிடமிருந்து கற்றுக்கொண்டார். (அவ்வாக்கியங்களைக்கொண்டு அவர் பிரார்த்தனை செய்த வண்ணமாகவே இருந்தார்.) அதனால் அவரை (அல்லாஹ்) மன்னித்து விட்டான். நிச்சயமாக அவன் தான் மிக மன்னிப்பவன், மிக்க கருணையுடையவன் ஆவான்

[38] (பின்னர்) நாம் கூறினோம்:- “நீங்கள் அனைவரும் இதிலிருந்து இறங்கிவிடுங்கள். என்னிடமிருந்து உங்களுக்கு (என் தூதர்கள் மூலம்) நேர்வழி நிச்சயமாக வரும். (உங்களில்) எவர்கள் என் நேர்வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு ஒரு பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்

[39] (தவிர) எவர்கள் (என் நேர்வழியை) நிராகரித்து என் வசனங்களைப் பொய்யாக்குகிறார்களோ அவர்கள் நரகவாசிகள்தான்! அவர்கள் அதில் என்றென்றும் தங்கி விடுவார்கள்

[40] இஸ்ராயீலின் சந்ததிகளே! உங்களுக்கு நான் அருள் புரிந்திருந்த என் அருட்கொடையை நினைத்துப் பாருங்கள். நீங்கள் எனக்களித்த வாக்கை நிறைவேற்றுங்கள், நான் உங்களுக்களித்த வாக்கை நிறைவேற்றுவேன். என்னையே (பயந்து) அஞ்சுங்கள்

[41] நான் இறக்கிய (இவ்வேதத்)தை நீங்கள் நம்புங்கள். இது உங்களிடமுள்ள (‘தவ்றாத்' என்னும் வேதத்)தையும் உண்மையாக்கி வைக்கிறது. இதை நிராகரிப்பவர்களில் நீங்களே முதன்மையானவர்களாக ஆகிவிட வேண்டாம். (இவ்வேதத்தைப் பற்றி உங்களிடமுள்ள ‘தவ்றாத்'தில் கூறப்பட்டுள்ள) என் வசனங்களை (மாற்றிச்) சொற்ப விலைக்கு விற்றுவிட வேண்டாம். நீங்கள் (மற்ற எவருக்கும் பயப்படாது) எனக்கே பயப்படுங்கள்

[42] நீங்கள் உண்மையை அறிந்துகொண்டே அதை மறைத்துப் பொய்யை உண்மையென புரட்டிவிட வேண்டாம்

[43] நீங்கள் தொழுகையை நிலைநிறுத்துங்கள். ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். (தொழுகையில் ஒன்றுசேர்ந்து குனிந்து) ருகூஉ செய்பவர்களுடன் நீங்களும் (குனிந்து) ருகூஉ செய்யுங்கள்

[44] நீங்கள் (தவ்றாத்) வேதத்தை ஓதிக்கொண்டே உங்களை(ச் செய்யும்படி அதில் ஏவப்பட்டிருப்பதை) மறந்துவிட்டு (மற்ற) மனிதர்களை நன்மை செய்யும்படி நீங்கள் ஏவுகிறீர்களா? (இவ்வளவுகூட) நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா

[45] (எத்தகைய கஷ்டத்திலும்) நீங்கள் பொறுமையைக் கைக்கொண்டு, தொழுது (இறைவனிடத்தில்) உதவி தேடுங்கள். ஆனால், நிச்சயமாக இது உள்ளச்சமுடையவர்களுக்கே தவிர (மற்றவர்களுக்கு) மிகப்பளுவாகவே இருக்கும்

[46] (உள்ளச்சமுடைய) அவர்களோ தங்கள் இறைவனை நிச்சயமாக சந்திப்போம் என்றும், அவனிடமே நிச்சயமாக செல்வோம் என்றும் உறுதியாக நம்புவார்கள்

[47] இஸ்ராயீலின் சந்ததிகளே! (முற்காலத்தில்) நான் உங்களுக்கு அருள் புரிந்திருந்த என் அருட்கொடையையும் உலகத்தார் அனைவரையும் விட உங்களை நான் மேன்மைப்படுத்தி வைத்திருந்ததையும் நினைத்துப் பாருங்கள்

[48] நீங்கள் ஒருநாளைப் பற்றியும் பயந்து கொள்ளுங்கள்: (அந்நாளில்) எந்த ஆத்மாவும் எந்த ஆத்மாவுக்கும் எதையும் (கொடுத்து அதன் கஷ்டத்தைத்) தீர்க்க மாட்டாது. அதற்காக (எவருடைய) பரிந்துரையும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அதற்காக ஒரு பரிகாரத்தையும் (ஈடாகப்) பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மேலும், அவர்கள் (எவராலும் எவ்வித) உதவியும் செய்யப்பட மாட்டார்கள்

[49] மேலும், உங்களுக்குத் தீய நோவினை செய்து கொண்டிருந்த ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிலிருந்து நாம் உங்களை விடுவித்தோம். அவர்கள் உங்கள் ஆண் பிள்ளைகளைக் கொன்றுவிட்டு உங்கள் பெண் (பிள்ளை)களை (மட்டும்) உயிருடன் வாழவிட்டு வந்தார்கள். அதில் உங்கள் இறைவனுடைய ஒரு பெரும் சோதனை ஏற்பட்டிருந்தது

[50] மேலும், உங்களுக்காகக் கடலைப் பிளந்து நாம் உங்களை காப்பாற்றி (உங்களைப் பின்தொடர்ந்து வந்த) ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுதே மூழ்கடித்தோம்

[51] இன்னும் (தவ்றாத் வேதத்தைக் கொடுக்க) மூஸாவுக்கு நாம் நாற்பது இரவுகளை வாக்களித்திருந்தோம். (அதற்காக அவர் சென்ற) பின்னர் (அவர் திரும்பி வருவதற் குள்ளாகவே) நீங்கள் வரம்புமீறி ஒரு காளைக் கன்றை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டீர்கள்

[52] நீங்கள் நன்றி செலுத்துவீர்களென்று இதற்குப் பின்னும் நாம் உங்களை மன்னித்தோம்

[53] நீங்கள் நேர்வழி பெறுவதற்காக மூஸாவுக்கு (தவ்றாத் என்னும்) வேதத்தையும், பிரித்து அறிவிக்கக்கூடிய (சட்ட திட்டத்)தையும் நாம் கொடுத்தோம்

[54] இன்னும் (நினைத்துப் பாருங்கள்:) மூஸா தன் சமூகத்தாரை நோக்கி “என் சமூகத்தாரே! நீங்கள் காளைக் கன்றை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டதனால் (பகுத்தறிவுடைய) நீங்கள் (கேவலம் ஒரு மிருகத்தை வணங்கி) உண்மையாகவே உங்களுக்கு தீங்கிழைத்துக் கொண்டீர்கள். நீங்கள் மனம் வருந்தி உங்களை படைத்தவனிடம் மீண்டு உங்(களிலுள்ள வரம்பு மீறியவர்)களை நீங்களே கொன்று விடுங்கள். இதுதான் உங்களை படைத்தவனிடம் உங்களுக்கு நன்மை தரும்'' என்று கூறினார். ஆகவே, (அவ்வாறே நீங்களும் செய்ததனால்) உங்களை (அல்லாஹ்) மன்னித்து விட்டான். நிச்சயமாக அவன்தான் மிக மன்னிப்பவன், மகாக் கருணையாளன் ஆவான்

[55] மேலும், நீங்கள் மூஸாவை நோக்கி “நாங்கள் அல்லாஹ்வைக் கண்கூடாக காணும்வரை உங்களை நம்பவே மாட்டோம்'' என்று கூறியபொழுது, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உங்களை (பூகம்பம் போன்ற) பெரும் சப்தம் பிடித்துக் கொண்டது

[56] நீங்கள் (அந்த பெரும் சப்தத்தால்) இறந்து விட்டதற்குப் பின்னும் நீங்கள் நன்றி செலுத்துவீர்கள் என்பதற்காக உங்களை நாம் உயிர்ப்பித்தோம்

[57] மேலும், நாம் உங்களுக்கு மேகம் நிழலிடும்படிச் செய்து, உங்களுக்கு (உணவாக) ‘மன்னு-ஸல்வா' (என்ற இருவகை உண)வையும் இறக்கி வைத்து (அவர்களை நோக்கி) “நாம் உங்களுக்கு அளித்துவரும் பரிசுத்தமான இவற்றைப் புசித்து வாருங்கள்'' என்று கட்டளையிட்டிருந்தோம். (எனினும் நம் கட்டளையை மீறிய) அவர்கள் நமக்கொன்றும் தீங்கிழைத்து விடவில்லை; தங்களுக்குத்தாமே அவர்கள் தீங்கிழைத்துக் கொண்டனர்

[58] மேலும், (உங்கள் மூதாதையர்களை நோக்கி) “நீங்கள் இந்த நகருக்கு சென்று அதில் உங்களுக்கு விருப்பமான இடத்தில் (விருப்பமானவற்றைத்) தாராளமாகப் புசியுங்கள்; அதன் வாயிலில் (நுழையும்பொழுது) தலை குனிந்து செல்லுங்கள்; ‘ஹித்ததுன்' (எங்கள் பாவச்சுமை நீங்குக!) எனவும் கூறுங்கள். உங்கள் குற்றங்களை நாம் மன்னித்து விடுவோம். நன்மை செய்தவர்களுக்கு (அதன் கூலியை) அதிகப்படுத்தியும் கொடுப்போம்'' எனக் கூறியிருந்தோம்

[59] ஆனால், வரம்பு மீறிக்கொண்டே வந்த (அ)வர்கள் தங்களுக்குக் கூறப்பட்ட வார்த்தையை மாற்றிவிட்டு கூறப்படாத ஒரு வார்த்தையை (‘ஹின்ததுன்' கோதுமை என்று) கூறினார்கள். அவர்கள் இவ்விதம் (மாற்றிக் கூறி) பாவம் செய்ததனால் வரம்பு மீறிய (அ)வர்கள் மீது வானத்திலிருந்து வேதனையை இறக்கி வைத்தோம்

[60] மூஸா தன் இனத்தாரு(டன் ‘தீஹ்' என்னும் பகுதிக்குச் சென்ற சமயத்தில் தண்ணீர் கிடைக்காமல் தாகத்தால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அவர்களுக்)குத் தண்ணீர் தேடியபோது (நாம் அவரை நோக்கி) “நீங்கள் உங்கள் தடியால் இக்கல்லை அடியுங்கள்'' எனக் கூறினோம். (அவர் அவ்வாறு அடித்ததும்) உடனே அதில் இருந்து பன்னிரண்டு ஊற்றுகள் உதித்தோடின. (அவருடைய பன்னிரண்டு பிரிவு) மக்கள் அனைவரும் தாங்கள் அருந்தும் தண்ணீர்த் துறையைத் தெளிவாக அறிந்து கொண்டார்கள். (அப்பொழுது நாம் அவர்களை நோக்கி “உங்களுக்கு) அல்லாஹ் கொடுத்த (‘மன்னு மற்றும் ஸல்வா' என்னும் உணவு பதார்த்தத்)திலிருந்து புசியுங்கள். (கல்லிலிருந்து உதித்தோடும் இந்நீரைப்) பருகுங்கள். ஆனால், பூமியில் கடுமையாக விஷமம் செய்துகொண்டு அலையாதீர்கள்'' (என்று கூறினோம்)

[61] ஆனால், (நீங்கள் மூஸாவை நோக்கி) ''மூஸாவே! ஒரே (விதமான) உணவை உட்கொண்டிருக்க எங்களால் முடியாது. பூமியில் விளையக்கூடிய கீரை, வெள்ளரிக்காய், கோதுமை, பருப்பு, வெங்காயம் ஆகியவற்றை அவன் வெளிப்படுத்தித் தரும்படி உமது இறைவனை எங்களுக்காக நீர் கேட்பீராக'' என அவரிடம் கேட்டீர்கள். அதற்கு (மூஸா) ''மேலானதற்குப் பதிலாகத் தாழ்ந்ததை மாற்றிக்கொள்(ள விரும்பு)கிறீர்களா? (அவ்வாறாயின்) நீங்கள் ஏதேனும் ஒரு பட்டணத்தில் இறங்கி விடுங்கள். நீங்கள் கேட்பது நிச்சயமாக (அங்குதான்) உங்களுக்குக் கிடைக்கும்'' என்று கூறிவிட்டார். ஆகவே, வீழ்ச்சியும் இழிவும் அவர்கள் மீது விதிக்கப்பட்டுவிட்டன. அல்லாஹ்வின் கோபத்திலும் (அவர்கள்) சார்ந்து விட்டார்கள். மெய்யாகவே அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரித்ததும், நியாயமின்றி இறைத்தூதர்களைக் கொலை செய்து வந்ததும் இதற்குக் காரணமாகும். இ(வ்வளவு பெரிய குற்றங்களை அவர்கள் செய்யும்படி நேர்ந்த)தற்குக் காரணம்: அவர்கள் (அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு) மாறு செய்தனர். மேலும், வரம்பு மீறிக்கொண்டிருந்தனர்

[62] நம்பிக்கை கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் எவர்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் உண்மையாகவே நம்பிக்கைகொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுடைய கூலி அவர்களுடைய இறைவனிடத்தில் அவர்களுக்கு நிச்சயமாக உண்டு. மேலும், அவர்களுக்கு எவ்விதப் பயமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்

[63] தூர்' என்னும் மலையை நாம் உங்களுக்கு மேல் உயர்த்தி உங்களிடம் வாக்குறுதி வாங்கிய சமயத்தில் “நாம் உங்களுக்குக் கொடுத்த (தவ்றாத் என்னும் வேதத்)தை உறுதியாகக் கடைப்பிடியுங்கள், அதிலுள்ளதை (எப்பொழுதும்) சிந்தனையில் வையுங்கள். (அதனால்) நீங்கள் இறையச்சமுடையவர்களாக ஆவீர்கள்'' (என்று கூறினோம்)

[64] இதற்குப் பின்னும் நீங்கள் (வாக்கு) மாறிவிட்டீர்கள். ஆனால், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும் அவனது அன்பும் இல்லாதிருந்தால் நீங்கள் (முற்றிலும்) நஷ்டமடைந்தவர்களில் ஆகியிருப்பீர்கள்

[65] மேலும், சனி(க்கிழமை)யில் (மீன் பிடிக்காதீர்கள் என்ற தடையை) உங்களில் எவர்கள் மீறிவிட்டார்கள் என்பதையும், அதற்காக நாம் அவர்களை நோக்கி ''நீங்கள் சிறுமைப்பட்ட குரங்குகளாகி விடுங்கள்!'' எனக் கூறினோம் என்பதையும் நீங்கள் தெளிவாக அறிந்தே இருக்கிறீர்கள்

[66] ஆகவே, இதை (அக்காலத்தில்) அவர்களுக்கு எதிரில் இருந்தவர்களுக்கும், அவர்களுக்குப் பின் (பிற்காலத்தில்) வருபவர்களுக்கும் ஓர் எச்சரிக்கை மிகுந்த படிப்பினையாகவும், இறையச்சம் உடையவர்களுக்கு ஓர் உபதேசமாகவும் ஆக்கினோம்

[67] தவிர, ''ஒரு மாட்டை நீங்கள் அறுக்கும்படி நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிடுகிறான்'' என மூஸா தன் சமூகத்தார்களுக்குக் கூறியதற்கு அவர்கள் (மூஸாவே!) “நீர் எங்களைப் பரிகாசம் செய்கிறீரா?'' என்றார்கள். (அதற்கு) ''நான் (பரிகாசம் செய்யும்) அறிவீனர்களில் ஆவதை விட்டும் அல்லாஹ்விடத்தில் பாதுகாப்புத் தேடுகின்றன்'' என்றார்

[68] அ(ந்த மாட்டின் வய)து என்ன என்று எங்களுக்கு அறிவிக்கும்படி உமது இறைவனைக் கேட்பீராக!'' என்றார்கள். (அதற்கு மூஸா) “நிச்சயமாக அது கிழடும் அல்ல; இளங்கன்றும் அல்ல. மத்திய பருவத்திலுள்ள ஒரு மாடு என அவன் கூறுகிறான்'' எனக் கூறி ''உங்களுக்கு இடப்பட்ட கட்டளையை நீங்கள் நிறைவேற்றுங்கள்'' என்றார்

[69] அதற்கவர்கள் “அதன் நிறம் என்னவென்று அறிவிக்கும்படி நீர் உமது இறைவனைக் கேட்பீராக!'' என்றார்கள். (அதற்கு மூஸா) “அது பார்ப்பவர் மனதைக் கவரக்கூடிய கலப்பற்ற மஞ்சள் நிறமான மாடு என அவன் கூறுகிறான்'' என்றார்

[70] அதற்கவர்கள் நிச்சயமாக அம்மாடு (எது என) எங்களுக்குச் சந்தேகமாக இருக்கிறது. அது எது? (வேலை செய்து பழகியதா) என எங்களுக்கு விவரித்து அறிவிக்கும்படி உமது இறைவனைக் கேட்பீராக. அல்லாஹ் நாடினால் நிச்சயமாக நாங்கள் (இவ்விஷயத்தில்) நேர்வழி பெற்றுவிடுவோம்'' எனக் கூறினார்கள்

[71] (அதற்கு மூஸா) “நிச்சயமாக அது பூமியில் உழவடிப்பதற்கும், பயிருக்குத் தண்ணீர் இறைப்பதற்கும் பயன்படுத்தப்படாத, அதில் அறவே வடுவில்லாத குறையற்ற ஒரு மாடு'' என்று அவன் கூறுகிறான் என்றார். (அதற்கு) அவர்கள் ''இப்பொழுதுதான் நீர் சரியான விவரம் கொண்டு வந்தீர்'' எனக் கூறிய பின்னும் அவர்கள் அறுக்க மனமின்றியே அதை அறுத்தார்கள்

[72] நீங்கள் ஒருவனைக் கொலை செய்துவிட்டு (தப்பித்துக் கொள்ள) அதைப் பற்றி நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருந்த சமயத்தில் (அம்மாட்டை அறுக்கும்படிக் கட்டளையிட்டு கொலை விஷயத்தில்) நீங்கள் மறைத்து வைத்திருந்ததை அல்லாஹ் வெளியாக்கினான்

[73] ஆகவே, அவர்களை நோக்கி (நீங்கள் அதை அறுத்து) ''அதில் ஒரு பாகத்தைக் கொண்டு (கொலையுண்ட) அவனை அடியுங்கள்'' என நாம் கூறினோம். (அவ்வாறு அடித்தவுடன் இறந்தவன் உயிர்பெற்றெழுந்து கொலையாளியை அறிவித்தான். அவன் உயிர்பெற்ற) இவ்வான்ற இறந்தவர்களை அல்லாஹ் உயிர்ப்பிப்பான். மேலும், நீங்கள் அறிந்துகொள்வதற்காக அவன் தன் (ஆற்றலை அறிவிக்கக்கூடிய) அத்தாட்சிகளை உங்களுக்குக் காட்டுகிறான்

[74] இதற்குப் பின்னும் உங்கள் உள்ளங்கள் இறுகிவிட்டன. அவை கற்பாறைகளைப் போல் அல்லது அவற்றைவிடக் கடினமானவையாக இருக்கின்றன. (ஏனென்றால்) கற்பாறைகளிலும் தொடர்ந்து (தானாகவே) ஊற்றுகள் உதித்தோடிக் கொண்டிருப்பவையும் நிச்சயமாக உண்டு. பிளந்து அதிலிருந்து நீர் புறப்படக்கூடியவையும் அவற்றில் உண்டு. அல்லாஹ்வுடைய பயத்தால் (மலை மீதிருந்து) உருண்டு விழக் கூடியவையும் அவற்றில் உண்டு. (ஆனால், யூதர்களே! நீங்கள் தானாகவும் திருந்தவில்லை. நபிமார்களின் போதனைக்கும் செவிசாய்க்கவில்லை. அல்லாஹ்வுக்கும் பயப்படவில்லை.) உங்கள் செயலைப்பற்றி அல்லாஹ் பராமுகமாயில்லை

[75] (நம்பிக்கையாளர்களே!) உங்(கள் வார்த்தை)களுக்காக இவர்கள் நம்பிக்கை கொள்வார்கள் என எதிர்பார்க்கிறீர்களா? அல்லாஹ்வின் வசனத்தைக் கேட்டு அதை நன்கு புரிந்த பின்னரும், (அதன் சரியான பொருளை) அறிந்துகொண்டே அதை மாற்றிவிடும் ஒரு பிரிவினரும் அவர்களில் இருந்தனர்

[76] மேலும், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களைச் சந்தித்தால் (“தவ்றாத்தில் உங்கள் நபியைப் பற்றி கூறப்பட்டிருக்கிறது. ஆதலால்,) நாங்களும் (அவரை) நம்பிக்கை கொள்கிறோம்'' எனக் கூறுகிறார்கள். ஆனால், அவர்கள் தனித்தபொழுது ஒருவர் மற்றவரை நோக்கி “(உங்கள் வேதத்தில்) அல்லாஹ் உங்களுக்குத் தெரிவித்திருப்பதை அவர்களுக்கு நீங்கள் அறிவிக்கிறீர்களா? உங்கள் இறைவன் முன்பாக அதைக் கொண்டு அவர்கள் உங்களுடன் தர்க்கிப்பதற்காகவா? (அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்கள்.) இவ்வளவுகூட நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?'' என்று கூறுகின்றனர்

[77] அவர்கள் மறைப்பதையும் பகிரங்கப்படுத்துவதையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான் என்பதை அவர்கள் அறிய வேண்டாமா

[78] மேலும், கல்வி அறிவு இல்லாதவர்களும் அவர்களில் உண்டு. வேதத்தைப் பற்றி (கேள்விப்பட்டுள்ள) வீண் நம்பிக்கைகளைத் தவிர (உண்மையை) அவர்கள் அறியவே மாட்டார்கள். அவர்கள் வீண் சந்தேகத்தில் (ஆழ்ந்து) கிடப்பவர்களைத் தவிர (வேறு) இல்லை

[79] எவர்கள் தங்கள் கைகளைக் கொண்டு (கற்பனையாக) எழுதிய புத்தகத்தை ஒரு சொற்பக்கிரயத்தை அடைவதற்காக “இது அல்லாஹ்விடமிருந்து வந்ததுதான்'' என்று கூறுகிறார்களோ அவர்களுக்குக் கேடுதான்! (அதை) அவர்களுடைய கைகள் எழுதியதனாலும் அவர்களுக்குக் கேடுதான்! அவர்கள் (அதைக்கொண்டு பொருள்) சம்பாதிப்பதாலும் அவர்களுக்குக் கேடுதான்

[80] ‘‘ஒரு சில நாள்களுக்கேத் தவிர நரக நெருப்பு எங்களைத் தீண்டவே செய்யாது'' என அவர்கள் கூறுகிறார்கள். (அதற்கு நபியே! அவர்களை) கேட்பீராக: அல்லாஹ்விடம் ஏதேனும் (அவ்வாறு) ஓர் உறுதிமொழியை நீங்கள் பெற்றிருக்கிறீர்களா? அவ்வாறாயின் நிச்சயமாக அல்லாஹ் தன் வாக்கு மாறமாட்டான். அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது (பொய்) சொல்கிறீர்களா

[81] அவ்வாறன்று! எவர்கள் பாவத்தையே சம்பாதித்துக் கொண்டிருந்து, அவர்களுடைய பாவம் அவர்களை சூழ்ந்து கொண்டதோ அவர்கள் (யாராக இருப்பினும்) நரகவாசிகளே! அதில்தான் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள்

[82] ஆனால், எவர்கள் (இவ்வேதத்தை) உண்மையாகவே நம்பிக்கைகொண்டு நற்காரியங்களைச் செய்கிறார்களோ அவர்கள் சொர்க்கவாசிகளே! அதில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள்

[83] மேலும், (நினைத்துப் பாருங்கள்:) இஸ்ராயீலின் சந்ததிகளிடம் ‘‘நீங்கள் அல்லாஹ்வைத் தவிர (வேறொன்றையும்) வணங்காதீர்கள்; தாய், தந்தைக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நன்மை செய்யுங்கள்; அனைத்து மனிதர்களிடமும் அழகாகப் பேசுங்கள் (நல்ல பேச்சுகளை பேசுங்கள்); தொழுகையை நிலைநிறுத்துங்கள்; ஜகாத்து கொடுத்து வாருங்கள்'' என்று நாம் வாக்குறுதி வாங்கியபொழுது, உங்களில் சிலரைத் தவிர மற்ற அனைவரும் புறக்கணித்து (மாறி) விட்டீர்கள். (எப்பொழுதும், இவ்வாறே) நீங்கள் புறக்கணித்தே வந்திருக்கிறீர்கள்

[84] மேலும், உங்கள் (சகோதரர்களுடைய) இரத்தங்களை ஓட்டாதீர்கள் என்றும், உங்கள் இல்லங்களை விட்டு உங்க(ள் சகோதரர்க)ளை வெளியேற்றாதீர்கள் என்றும், உங்(கள் மூதாதை)களிடம் நாம் உறுதிமொழி வாங்கியதை நீங்களும் (மனம் விரும்பி சம்மதித்து) அதை உறுதிப்படுத்தி இருக்கிறீர்கள் என்பதை நினைத்துப் பாருங்கள்

[85] இவ்வாறு உறுதிப்படுத்திய பின்னரும் நீங்கள் உங்(கள் மனிதர்)களைக் கொலை செய்து விடுகிறீர்கள். உங்களில் பலரை அவர்களின் இல்லங்களில் இருந்தும் வெளியேற்றி விடுகிறீர்கள். அவர்களுக்கு எதிராக பாவமாகவும் அநியாயமாகவும் (அவர்களுடைய எதிரிகளுக்கு) நீங்கள் உதவியும் செய்கிறீர்கள். (ஆனால், நீங்கள் வெளியேற்றிய) அவர்கள் (எதிரிகளின் கையில் சிக்கிக்) கைதிகளாக உங்களிடம் (உதவிதேடி) வந்துவிட்டாலோ அவர்களுக்காக நீங்கள் (பொருளை) ஈடுகொடுத்து (அவர்களை மீட்டு) விடுகிறீர்கள். ஆனால், அவர்களை அவர்கள் இல்லங்களிலிருந்து வெளியேற்றுவதும் உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. (இவ்வாறு செய்யும்) நீங்கள் வேதத்தில் (உள்ள) சில கட்டளைகளை நம்பிக்கைகொண்டு, சில கட்டளைகளை நிராகரிக்கிறீர்களா? உங்களில் எவர்கள் இவ்வாறு செய்கிறார்களோ அவர்களுக்கு இவ்வுலகத்தில் இழிவைத் தவிர (வேறொன்றும்) கிடைக்காது. மறுமையிலோ, (அவர்கள்) கடுமையான வேதனையின் பக்கம் விரட்டப்படுவார்கள். உங்கள் இச்செயலைப் பற்றி அல்லாஹ் பராமுகமாயில்லை

[86] இவர்கள்தான் மறுமை (வாழ்க்கை)க்குப் பதிலாக இவ்வுலக வாழ்க்கையை விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்கள். ஆதலால், அவர்களுக்கு (கொடுக்கப்படும்) வேதனை ஒரு சிறிதும் இலேசாக்கப்பட மாட்டாது. அவர்கள் (ஒரு) உதவி(யும்) செய்யப்பட மாட்டார்கள்

[87] தவிர, (யூதர்களே!) நிச்சயமாக நாம் மூஸாவுக்கு (ஒரு) வேதத்தைக் கொடுத்தோம். அவருக்குப் பின் தொடர்ச்சியாகப் பல தூதர்களையும் அனுப்பிவைத்தோம். மர்யமுடைய மகன் ஈஸாவுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்து அவரை (ஜிப்ரீல் என்னும்) பரிசுத்த ஆத்மாவைக் கொண்டும் பலப்படுத்தி வைத்தோம். (ஆனால்,) உங்கள் மனம் விரும்பாத எதையும் (நமது) தூதர் ஒருவர் உங்களிடம் கொண்டு வந்தபோதிலும் நீங்கள் கர்வம் (கொண்டு விலகிக்) கொள்ளவில்லையா? மேலும், (தூதர்களில்) சிலரை நீங்கள் பொய்யாக்கி, சிலரை கொலை செய்தும் விட்டீர்கள்

[88] ‘‘எங்கள் உள்ளங்கள் திரையிடப்பட்டிருக்கின்றன'' என்று அவர்கள் (பரிகாசமாகக்) கூறுகின்றனர். அவ்வாறன்று, அவர்களின் நிராகரிப்பின் காரணத்தால் அல்லாஹ் அவர்களை சபித்து விட்டான். ஆதலால், அவர்கள் நம்பிக்கை கொள்வது வெகு சொற்பமே

[89] அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு ஒரு வேதம் வந்தது. அது அவர்களிடமுள்ள வேதத்தை உண்மையாக்கியும் வைக்கிறது. இதற்கு முன்பு அவர்கள் நிராகரிப் பவர்களுக்கு எதிராக தங்களுக்கு வெற்றியை அளிக்கும்படி (இந்த வேதத்தின் பொருட்டால் இறைவனிடம்) பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் நன்கறிந்(து, வருமென எதிர்பார்த்)திருந்த இவ்வேதம் அவர்களிடம் வந்த சமயத்தில் இதை அவர்கள் நிராகரிக்கிறார்கள். ஆகவே, (அந்த) நிராகரிப்பவர்களின் மீது அல்லாஹ்வின் சாபமுண்டாகுக

[90] (இந்த குர்ஆனை தங்கள் மீது இறக்காமல்) அல்லாஹ் தன் அடியார்களில், தான் விரும்பியவர்கள் மீது தன் அருளை இறக்கி வைத்ததைப்பற்றி பொறாமைகொண்டு, அல்லாஹ் இறக்கிவைத்த (இ)தையே நிராகரிப்பதன் மூலமாக அவர்கள் தங்களுக்காக எதை வாங்கிக் கொண்டார்களோ அது (மிகக்) கெட்டது. (குர்ஆனைத் தங்கள் மீது இறக்கவில்லையென்ற) கோபத்தினால் (அதை நிராகரித்து அல்லாஹ்வின்) கோபத்தில் அவர்கள் சார்ந்து விட்டார்கள். ஆதலால், (அந்)நிராகரிப்பவர்களுக்கு இழிவு தரும் வேதனையுண்டு

[91] ‘‘அல்லாஹ் இறக்கிவைத்த (இ)தை நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள்'' என அவர்களுக்குக் கூறப்பட்டால் ‘‘எங்கள் (நபிமார்கள்) மீது இறக்கப்பட்டவற்றை (மட்டுமே) நம்பிக்கை கொள்வோம்'' எனக் கூறி அவற்றைத் தவிர உள்ள இ(ந்)த(க் குர்ஆ)னை நிராகரித்து விடுகிறார்கள். ஆனால், இதுவோ அவர்களிடமுள்ள (தவ்றாத்)தை மெய்யாக்கி வைக்கின்ற உண்மையா(ன வேதமா)க இருக்கிறது. (நபியே! அவர்களை நோக்கிக்) கேட்பீராக: ‘‘(உங்கள் வேதத்தை) உண்மையாகவே நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாயிருந்தால் (உங்களில் தோன்றிய) அல்லாஹ்வுடைய நபிமார்களை இதற்கு முன் நீங்கள் ஏன் கொலை செய்தீர்கள்

[92] (இஸ்ராயீலின் சந்ததிகளே!) நிச்சயமாக மூஸா உங்களிடம் தெளிவான அத்தாட்சிகளையே கொண்டு வந்திருந்தார். ஆனால், நீங்களோ அதற்குப் பின்னும் ஒரு காளைக் கன்றை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டீர்கள். (இவ்வாறே ஒவ்வொரு விஷயத்திலும்) நீங்கள் (வரம்பு கடந்த) அநியாயக்காரர்களாகவே இருக்கிறீர்கள்

[93] உங்க(ள் மூதாதை)களிடம் நாம் வாக்குறுதி வாங்கிய நேரத்தில் அவர்களுக்குமேல் (‘தூர்') மலையை உயர்த்தி ‘‘உங்களுக்கு நாம் கொடுத்த (தவ்றாத்)தை உறுதியாகக் கடைப்பிடியுங்கள். (அதற்குச்) செவிசாயுங்கள்'' என்று கூறியதற்கு (அவர்கள் ‘‘நீங்கள் கூறியதைச்) செவியுற்றோம். (ஆனால் அதற்கு) மாறு செய்வோம்'' என்று கூறினார்கள். ஆகவே, அவர்கள் (நம் கட்டளையை) நிராகரித்(து மாறு செய்)ததன் காரணமாக அவர்களுடைய உள்ளங்களில் ஒரு காளைக் கன்று(டைய பிரியம்) ஊட்டப்பட்டார்கள். ‘‘(இந்நிலையிலும்) நீங்கள் (தவ்றாத்தை) நம்பிக்கை கொண்டவர்கள் என்(று உங்களைக் கூறுவதென்)றால் இவ்வாறு செய்யும்படி உங்களைத் தூண்டும் அந்த நம்பிக்கை (மிகக்) கெட்டது'' என்று (நபியே!) கூறுவீராக

[94] ‘‘(யூதர்களே!) அல்லாஹ்விடமிருக்கும் மறுமை(யின் சொர்க்க) வீடு (மற்ற) மனிதர்களுக்கு இல்லாமல் உங்களுக்கே சொந்தமென (கூறுகின்ற) நீங்கள் உண்மை கூறுபவர்களாக இருந்தால் (உங்களுக்குச் சொந்தமான அவ்வீட்டிற்குச் செல்வதற்கு) நீங்கள் மரணத்தை விரும்புங்கள்'' என (நபியே!) கூறுவீராக

[95] (ஆனால்,) அவர்கள் கரங்கள் (செய்து) அனுப்பியிருக்கும் (பாவங்களின்) காரணத்தால் அதை அவர்கள் அறவே விரும்பவே மாட்டார்கள். (இந்த) அநியாயக்காரர்களை அல்லாஹ் நன்கறிவான்

[96] மேலும், (நபியே! அந்த யூதர்கள்) மற்ற மனிதர்களை விடவும் (குறிப்பாக) இணைவைப்பவர்களை விடவும் (நீண்ட நாள்) உயிர்வாழ மிகவும் பேராசை உடையவர்களாக இருப்பதை நிச்சயம் காண்பீர்! அவர்களில் ஒவ்வொருவனும் ‘‘தான் ஆயிரம் ஆண்டுகள் உயிர் வாழ வேண்டுமே?'' என்று விரும்புவான். (அவ்வாறு நீண்ட நாள்) உயிருடன் இருக்க அவனை விட்டுவைத்தாலும் அது வேதனையிலிருந்து ஒரு சிறிதும் அவனைத் தப்பிக்க வைத்துவிடாது. அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்குபவன் ஆவான்

[97] ‘‘(உங்களில்) எவர் ஜிப்ரீலுக்கு எதிரி'' என (நபியே! யூதர்களை)க் கேட்பீராக. நிச்சயமாக அவர் இதை அல்லாஹ்வின் கட்டளைப்படியே உமது உள்ளத்தில் இறக்கி வைத்தார். இது தனக்கு முன்னுள்ள (வேதத்)தை உண்மைப்படுத்துவதாகவும், நேரான வழியை அறிவிக்கக்கூடியதாகவும், நம்பிக்கை உடையவர்களுக்கு நற்செய்தியாகவும் இருக்கிறது

[98] (உங்களில்) எவரேனும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய வானவர்களுக்கும், அவனுடைய தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீக்காயீலுக்கும் எதிரியாகி (அவர்களை நிராகரித்து) விட்டால் (அந்)நிராகரிப்பவர்களுக்கு நிச்சயமாக அல்லாஹ்வும் எதிரி ஆவான்

[99] (நபியே!) நிச்சயமாக மிகத் தெளிவான வசனங்களையே உமக்கு இறக்கி இருக்கிறோம். பாவிகளைத் தவிர (மற்றெவரும்) அவற்றை நிராகரிக்க மாட்டார்கள்

[100] அவர்கள் (தங்கள் நபியிடம்) ஓர் உடன்படிக்கையைச் செய்தபோதெல்லாம் அவர்களில் ஒரு பிரிவினர் அதை (நிறைவேற்றாது) எடுத்தெறிந்து விடவில்லையா? மாறாக, அவர்களில் பெரும்பாலோர் (இதை) நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்

[101] அல்லாஹ்விடமிருந்து தூதர் ஒருவர் அவர்களிடம் வந்து அவர்களிடமுள்ள (வேதத்)தை உண்மைப்படுத்தியபோதிலும், (முந்திய) வேதம் வழங்கப்பட்ட (அ)வர்களில் பலர் அல்லாஹ்வுடைய (இந்த) வேதத்தையே தாங்கள் அறியாதது போல் தங்கள் முதுகுக்குப் பினோல் தூக்கிப்போட்டு விடுகின்றனர்

[102] மேலும், (அந்த யூதர்கள்) ஸுலைமானுடைய ஆட்சியைப் பற்றி (அவர்களுக்கு) ஷைத்தான் ஓதிக் (கற்றுக்) கொடுத்திருந்த (சூனியம், மாய மந்திரம் ஆகிய)வற்றைப் பின்பற்றினார்கள். ஆனால், ஸுலைமானோ ‘நிராகரிப்பவராக' இருக்கவில்லை; அந்த ஷைத்தான்கள்தான் உண்மையாகவே நிராகரிப்பவர்களாக இருந்தார்கள். ஏனென்றால், அவர்கள் மனிதர்களுக்கு சூனியத்தையும் ‘பாபிலூன்' (என்னும் ஊரில்) ‘ஹாரூத்' ‘மாரூத்' என்னும் இரு வானவர்களுக்கு இறக்கப்பட்டவற்றையும் கற்றுக்கொடுத்து வந்தார்கள். அவ்விரு வானவர்களோ (அவர்களிடம் சூனியத்தைக் கற்கச்சென்ற மனிதர்களை நோக்கி) ‘‘நாங்கள் சோதனையாக இருக்கிறோம். (இதைக் கற்றால் நீங்கள் நிராகரிப்பவர்களாகி விடுவீர்கள். ஆதலால், இதைக் கற்று) நீங்கள் நிராகரிப்பவர்களாகிவிட வேண்டாம் என்று கூறும்வரை அவர்கள் அதை ஒருவருக்கும் கற்றுக் கொடுப்பதேயில்லை, (இவ்விதம் கூறிய பின்னும் இதைக் கற்க விரும்பியவர்கள்) கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் பிரிவினை உண்டு பண்ணக்கூடிய வழியை அவர்களிடமிருந்து கற்றுக் கொள்வார்கள். அல்லாஹ்வின் கட்டளையின்றி அதன் மூலம் அவர்கள் ஒருவருக்குமே தீங்கிழைத்திட முடியாது. அவர்களுக்கு ஒரு பலனுமளிக்காமல் தீங்கிழைக்கக்கூடியது எதுவோ அதைத்தான் அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். (இறை நம்பிக்கைக்குப் பதிலாக) அ(ச் சூனியத்)தை எவன் விலைக்கு வாங்கிக் கொண்டானோ அவனுக்கு மறுமையில் ஒரு பாக்கியமும் இல்லை என்பதைத் தெளிவாக சந்தேகமற அவர்களும் அறிந்திருக்கிறார்கள். தங்களையே விற்று அவர்கள் எதை வாங்கிக் கொண்டார்களோ அது நிச்சயமாக (மிகக்) கெட்டது. (இதை) அவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமே

[103] ஆகவே, அவர்கள் (இவ்வேதத்தை) நம்பிக்கை கொண்டு, (அச்சூனியங்களை விட்டு) விலகிக்கொண்டால் (அவர்களுக்கு) அல்லாஹ்விடம் கிடைக்கும் சன்மானம் நிச்சயமாக மிக மேலானதாயிருக்கும். (இதை) அவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமே

[104] நம்பிக்கையாளர்களே! நீங்கள் (நபியை நோக்கி) ‘ராயினா' எனக் கூறாதீர்கள். (அதற்குப் பதிலாக ‘‘எங்களைப் பாருங்கள்!' என்ற பொருளைத் தரும்) ‘‘உன்ளுர்னா'' எனக் கூறுங்கள். (மேலும், நபி கூறுவதை முழுமையாக) செவிமடுங்கள். (இதற்கு மாறாகக் கூறும்) நிராகரிப்பவர்களுக்கு மிகத் துன்புறுத்தும் வேதனை உண்டு

[105] (நம்பிக்கையாளர்களே!) வேதத்தையுடையவர்களிலும், இணைவைத்து வணங்கு பவர்களிலும் உள்ள (இவ்வேதத்தை) நிராகரிப்பவர்கள் (தங்களிடம் உள்ளதைவிட) சிறந்த ஒன்று உங்கள் இறைவனால் உங்கள் மீது அருளப்படுவதை விரும்பவே மாட்டார்கள். ஆனால், அல்லாஹ், தான் விரும்பியவர்களுக்குத் தன் கருணையை சொந்தமாக்கி விடுகிறான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன் ஆவான்

[106] (நபியே!) ஒரு வசனத்தை நாம் மாற்றினாலும் அல்லது அதை மறக்கடித்தாலும் அதற்கு ஒப்பானதை அல்லது அதைவிடச் சிறந்ததை நாம் கொண்டு வருவோம். அல்லாஹ் எல்லாவற்றிற்கும் நிச்சயமாக பேராற்றலுடையவன் என்பதை நீர் அறியவில்லையா

[107] வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது என்பதை நீர் அறியவில்லையா? (நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வைத் தவிர உங்களுக்குப் பாதுகாவலனும் இல்லை; உதவி செய்பவனும் இல்லை

[108] (நம்பிக்கையாளர்களே!) இதற்கு முன்னர் மூஸாவிடம் (அவருடைய மக்கள் வீணான கேள்விகளைக்) கேட்டதைப் போல் நீங்களும் உங்களுக்கு அனுப்பப்பட்ட தூதரிடம் கேட்க விரும்புகிறீர்களா? எவர் (இத்தகைய கேள்விகளைக் கேட்டு) தன் நம்பிக்கையை நிராகரிப்பைக் கொண்டு மாற்றிக் கொள்கிறாரோ அவர் நேரான வழியைவிட்டு மெய்யாகவே தவறிவிட்டார்

[109] வேதத்தையுடையவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கையாளர்களாகிய உங்களை நிராகரிப்பவர்களாக மாற்றிவிட வேண்டுமே! என்று விரும்புகிறார்கள். அவர்களுக்கு உண்மை (இன்னதெனத்) தெளிவாகத் தெரிந்த பின்னும் இவ்வாறு அவர்கள் விரும்புவதன் காரணமெல்லாம் அவர்களுக்கு (உங்கள் மீது)ள்ள பொறாமைதான். ஆகவே, அல்லாஹ்வுடைய (மற்றொரு) கட்டளை வரும்வரை (அவர்களை) நீங்கள் மன்னித்தும் புறக்கணித்தும் வாருங்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் மிகவும் பேராற்றலுடையவன் ஆவான்

[110] மேலும், நீங்கள் தொழுகையைக் கடைப்பிடித்தும், ‘‘ஜகாத்' கொடுத்தும் வாருங்கள். ஏனென்றால் (மரணத்திற்கு) முன்னதாக உங்களுக்காக நீங்கள் என்ன நன்மையை முன்கூட்டி அனுப்பிவைப்பீர்களோ அதையே அல்லாஹ்விடம் (மறுமையில்) பெற்றுக்கொள்வீர்கள். (ஆதலால், இறப்பதற்கு முன்னரே இயன்ற அளவு நன்மை செய்துகொள்ளுங்கள்.) நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்றுநோக்குபவன் ஆவான்

[111] (நபியே!) கிறிஸ்தவராகவோ யூதராகவோ இருப்பவரைத் தவிர (மற்ற எவரும்) சொர்க்கம் நுழையவே மாட்டார்கள் என அவ(ரவ)ர்கள் கூறுகிறார்கள். இது அவர்களுடைய வீண் நம்பிக்கையே (தவிர உண்மை அல்ல. ஆதலால், அவர்களை நோக்கி நபியே!) கூறுவீராக: ‘‘நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் உங்கள் (இக்கூற்றுக்குரிய) ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள்

[112] (உண்மை) அவ்வாறல்ல! எவர் (அல்லாஹ்வுக்காக) நன்மை செய்து தன்னை (முற்றிலும்) அல்லாஹ்வுக்கு அர்ப்பணம் செய்து விடுகிறாரோ அவருக்கே அவர் செய்யும் நன்மையின் கூலி அவருடைய இறைவனிடம் உண்டு. மேலும், இவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை; இவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்

[113] இன்னும், ‘‘கிறிஸ்தவர்கள் எ(ந்த மார்க்கத்)திலுமில்லை'' என யூதர்கள் கூறுகின்றனர். (அவ்வான்ற) ‘‘யூதர்கள் எ(ந்த மார்க்கத்)திலுமில்லை'' எனக் கிறிஸ்தவர்களும் கூறுகின்றனர். ஆனால், இவ்விருவருமே (தங்களின் கூற்றுக்கு ஆதாரமாக பைபிளின் ‘பழைய ஏற்பாடாகிய' தவ்றாத் என்னும் ஒரே) வேதத்தை(த்தான்) ஓதுகிறார்கள். இவர்கள் கூறிக்கொள்வது போலவே (வேதத்தை) அறியாத (இணைவைத்து வணங்குப)வர்கள் (‘‘யூதர்களும் கிறிஸ்தவர்களும் எம்மார்க்கத்தையும் சேர்ந்தவர்கள் அல்ல'' எனக்) கூறுகிறார்கள். ஆனால், இவர்கள் செய்து கொண்டிருக்கும் இந்த தர்க்கத்தைப் பற்றி மறுமையில் அல்லாஹ் இவர்களுக்குத் தீர்ப்பளிப்பான்

[114] அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அவனுடைய பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயற்சிப்பவனைவிட பெரிய அநியாயக்காரன் யார்? அஞ்சியவர்களாகவே தவிர அவற்றில் நுழைய அவர்களுக்கு உரிமையே இல்லை. (அவ்வாறிருக்க அதற்கு மாறாக நடக்கும்) அவர்களுக்கு இவ்வுலகில் இழிவுதான். மறுமையிலோ கொடிய வேதனை உண்டு

[115] கிழக்கு திசையும் மேற்கு திசையும் அல்லாஹ்வுக்கே (உரியன). ஆதலால், நீங்கள் எத்திசையை நோக்கினும் அங்கு அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன்; மிக அறிந்தவன்

[116] ‘‘அல்லாஹ் (தனக்கு) சந்ததி ஏற்படுத்திக் கொண்டான்'' என்றும் கூறுகின்றனர். அவ்வாறல்ல; அவனோ மிக்க பரிசுத்தமானவன். வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அவனுக்குரியனவே! இவை அனைத்தும் அவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்கின்றன(வே தவிர சந்ததியாக ஆகக்கூடிய தகுதியில் எந்த ஒன்றுமே இல்லை)

[117] அவனே வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றியே படைத்தவன். அவன் ஒரு காரியத்தை முடிவு செய்துவிட்டால் அதை ‘ஆகுக!' எனக் கூறிய மாத்திரத்தில் உடனே அது ஆகிவிடும்

[118] மேலும், கல்வி (அறிவு) இல்லாதோர் ‘‘அல்லாஹ் நம்முடன் (நேரடியாகப்) பேச வேண்டாமா? அல்லது (எழுதப்பட்ட) ஒரு வசனம் (நேராக) நமக்கு வரவேண்டாமா?'' எனக் கேட்கின்றனர். இவர்கள் கேட்டது போன்றே இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (மூஸாவிடம்) கேட்டார்கள். (அவர்களுடைய உள்ளங்களை) இவர்களுடைய உள்ளங்கள் ஒத்திருக்கிறேன். (உண்மையை) நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நம் அத்தாட்சிகளை நிச்சயமாக நாம் தெளிவாக்கி இருக்கிறோம்

[119] (நபியே! நன்மை செய்பவர்களுக்கு) இவ்வேதத்தின் மூலம் நீர் நற்செய்தி கூறுபவராகவும், (பாவிகளுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் (மட்டுமே) நிச்சயமாக நாம் உம்மை அனுப்பி வைத்திருக்கிறோம். ஆகவே, (அவர்கள் உமது சொல்லை நிராகரித்து நரகம் சென்றால், அந்)நரகவாசிகளைப் பற்றி நீர் கேட்கப்படமாட்டீர்

[120] (நபியே!) யூத மற்றும் கிறிஸ்தவர்களுடைய மார்க்கத்தை நீர் பின்பற்றும் வரை உம்மைக் குறித்து அவர்கள் திருப்தியடையவே மாட்டார்கள். (ஆகவே, அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ்வின் நேர்வழி(யாகிய இஸ்லாம்)தான் நேரான வழி. (அதையே பின்பற்றுவேன்)'' எனக் கூறிவிடுவீராக. மேலும், உமக்கு (மெய்யான) ஞானம் வந்த பின்னும் அவர்களுடைய விருப்பங்களை பின்பற்றினால் அல்லாஹ்விடத்தில் (அதற்காக விசாரணை செய்யப்படும் நாளில்) உம்மை காப்பவனும் இல்லை; உமக்கு உதவி செய்பவனும் இல்லை

[121] (நபியே!) எவர்கள் நாம் கொடுத்த (‘தவ்றாத்') வேதத்தை அதன் முறைப்படி (அறிந்து) ஓதுகிறார்களோ அவர்கள், (குர்ஆனாகிய) இதையும் (அவசியம்) நம்பிக்கை கொள்வார்கள். (ஆகவே, அவர்களில்) எவரேனும் இதை நிராகரித்தால் அவர்கள் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்களே

[122] இஸ்ராயீலின் சந்ததிகளே! உங்களுக்கு வழங்கியிருந்த என் அருட்கொடையையும், நிச்சயமாக உங்களை உலக மக்கள் அனைவரையும்விட மேன்மையாக்கி வைத்திருந்த தையும் நினைத்துப் பாருங்கள்

[123] இன்னும், ஒரு நாளைப் பற்றியும் பயந்து கொள்ளுங்கள். அந்நாளில் ஓர் ஆத்மா மற்றோர் ஆத்மாவுக்கு எவ்வித பயனுமளிக்காது. அதனிடமிருந்து ஒரு பரிகாரமும் ஏற்கப்பட மாட்டாது; எவ்வித பரிந்துரையும் அதற்குப் பயன்தராது. மேலும், அவர்கள் (யாராலும் எவ்வித) உதவியும் செய்யப்பட மாட்டார்கள்

[124] இப்றாஹீமை அவருடைய இறைவன் (பெரும் சோதனையான) பல கட்டளைகளையிட்டு சோதித்த சமயத்தில் அவர் அவற்றை நிறைவு செய்தார். (ஆதலால், இறைவன்) ‘‘நிச்சயமாக நான் உம்மை மனிதர்களுக்கு (நேர்வழி காட்டக்கூடிய) தலைவராக ஆக்கினான்'' எனக் கூறினான். அதற்கு (இப்றாஹீம்) ‘‘என் சந்ததிகளையுமா (தலைவர்களாக ஆக்குவாய்?)'' எனக் கேட்டார். (அதற்கு ‘‘உமது சந்ததியிலுள்ள) அநியாயக்காரர்களை என் (இந்த) உறுதிமொழி சாராது'' எனக் கூறினான்

[125] (மக்காவில் இப்றாஹீம் கட்டிய ‘கஅபா' என்னும்) வீட்டை மனிதர்கள் ஒதுங்கும் இடமாகவும், (அவர்களுக்கு) பாதுகாப்பு அளிக்கக்கூடியதாகவும் நாம் ஆக்கியிருக்கிறோம். (அதில்) இப்றாஹீம் நின்ற இடத்தை (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் தொழும் இடமாக வைத்துக் கொள்ளுங்கள். ‘‘(ஹஜ்ஜூ செய்ய அங்கு வந்து) அதை சுற்றுபவர்களுக்கும், தியானம் புரிய (அதில்) தங்குபவர்களுக்கும், குனிந்து சிரம் பணி(ந்து அதில் தொழு)பவர்களுக்கும் எனது அந்த வீட்டை சுத்தமானதாக ஆக்கி வையுங்கள்'' என்று இப்றாஹீமிடத்திலும் இஸ்மாயீலிடத்திலும் நாம் வாக்குறுதி வாங்கியிருக்கிறோம்

[126] இப்றாஹீம் (இறைவனிடம்) ‘‘என் இறைவனே! (மக்காவாகிய) இதை பாதுகாப்பு அளிக்கும் ஒரு பட்டணமாக ஆக்கி, இதில் வசிப்பவர்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கைக் கொள்கிறாரோ அவருக்கு உணவாகப் பலவகைக் கனிவர்க்கங்களையும் அளித்துவா!'' எனக் கூறியதற்கு (இறைவன் ‘‘என்னை நம்பிக்கை கொள்பவருக்கு நான் உணவளிப்பதுபோல என்னை) நிராகரிப்ப(வனுக்கும் உணவளித்து அ)வனையும் சிறிது காலம் (அங்கு) சுகமனுபவிக்க விட்டுவைப்பேன். பின்னர் நரக வேதனையின் பக்கம் (செல்லும்படி) அவனை நிர்ப்பந்திப்பேன். அவன் செல்லும் (அந்த) இடம் (மிகக்) கெட்டது'' என்று கூறினான்

[127] இப்றாஹீமும், இஸ்மாயீலும் அவ்வீட்டின் அஸ்திவாரத்தை உயர்த்தியபொழுது ‘‘எங்கள் இறைவனே! (உனக்காக நாங்கள் செய்த இப்பணியை) எங்களிடமிருந்து ஏற்றுக்கொள்வாயாக! நிச்சயமாக நீதான் (எங்கள் பிரார்த்தனையை) நன்கு செவியுறுபவன், நன்கு அறிந்தவன்

[128] எங்கள் இறைவனே! எங்களிருவரையும் உனக்கு (முற்றிலும்) வழிப்படும் முஸ்லிம்களாகவும், எங்கள் சந்ததியிலிருந்தும் ஒரு கூட்டத்தினரை உனக்கு (முற்றிலும்) வழிப்படும் முஸ்லிம்களாகவும் ஆக்கிவைப்பாயாக! (‘ஹஜ்ஜூ' காலத்தில்) நாங்கள் புரியவேண்டிய வணக்கங்களை எங்களுக்கு அறிவிப்பாயாக! (நாங்கள் தவறிழைத்து விட்டாலும்) எங்களை நீ மன்னிப்பாயாக! நிச்சயமாக நீதான் மிக மன்னிப்பவன், மிக்க கருணையுடையவன்

[129] எங்கள் இறைவனே! (என் சந்ததிகளாகிய) அவர்களில் இருந்து உன் வசனங்களை அவர்களுக்கு ஓதிக்காண்பித்து, வேதத்தையும் ஆழ்ந்த ஞானங்களையும் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்து அவர்களைப் பரிசுத்தமாக்கி வைக்கும் ஒரு தூதரை அவர்களுக்கு அனுப்புவாயாக! நிச்சயமாக நீதான் மிக்க வல்லவன், ஞானமுடையவன்'' (என்று பிரார்த்தித்தனர்)

[130] எவன், தானே மூடனாகி விட்டானோ அவனைத் தவிர இப்றாஹீமுடைய (இஸ்லாம்) மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்? நிச்சயமாக நாம் அவரை இந்த உலகில் தேர்ந்தெடுத்தோம், மறுமையிலும் நிச்சயமாக அவர் நல்லடியார்களில்தான் இருப்பார்

[131] இப்றாஹீமை (நோக்கி) அவருடைய இறைவன் ‘‘நீ (எனக்கு) பணிந்து வழிப்படு!'' எனக் கூறிய சமயத்தில் அவர் (எவ்வித தயக்கமுமின்றி) ‘‘அகிலத்தாரின் இறைவனுக்கு (இதோ) நான் பணிந்து வழிப்பட்டேன்'' எனக் கூறினார்

[132] அதையே இப்றாஹீம் தன் சந்ததிகளுக்கும் உபதேசித்தார். யஅகூபும் (தன் சந்ததிகளை நோக்கி) ‘‘என் சந்ததிகளே! உங்களுக்காக அல்லாஹ் இ(ஸ்லா)ம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்திருக்கிறான். ஆதலால், நீங்கள் உண்மையான முஸ்லிம்களாகவே தவிர இறந்துவிட வேண்டாம்'' (என்றே கூறினார்)

[133] (யூதர்களே!) யஅகூபுக்கு மரணம் வந்த சமயத்தில் (அவருக்கு) அருகாமையில் இருந்தீர்களா? அவர் தன் சந்ததிகளை நோக்கி ‘‘எனக்குப் பின்னர் எதை வணங்குவீர்கள்?'' எனக் கேட்டதற்கு ‘‘உமது இறைவனும், உமது மூதாதைகளான இப்றாஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியவர்களின் இறைவனுமான ஒரே ஓர் இறைவனையே வணங்குவோம். அவனுக்கு முற்றிலும் பணிந்து வழிப்பட்ட முஸ்லிம்களாகவே இருப்போம்'' என்றே கூறினார்கள்

[134] (மேற்கூறிய நபிமார்களாகிய) அந்தக் கூட்டத்தினர் சென்று விட்டனர். அவர்கள் செய்த (நற்)செயல்கள் அவர்களுக்கே (பலனளிக்கும்), நீங்கள் செய்த (நற்)செயல்கள்தான் உங்களுக்கு(ப் பலனளிக்கும்). அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று நீங்கள் கேட்கப்படமாட்டீர்கள்

[135] (நம்பிக்கையாளர்களை நோக்கி) ‘‘நீங்கள் யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக ஆகிவிடுங்கள். நேரானவழியை அடைந்து விடுவீர்கள்'' என அவர்கள் கூறுகிறார்கள். அதற்கு, ‘‘இல்லை! நேரான வழியைச் சார்ந்த இப்றாஹீமின் மார்க்கத்தையே (பின்பற்றுவோம்). அவர் (உங்களைப்போல்) இணைவைத்து வணங்கியவர்களில்'' இல்லை என்று (நபியே!) கூறுவீராக

[136] (நம்பிக்கையாளர்களே!) நீங்களும் கூறுங்கள்: ‘‘அல்லாஹ்வையும் எங்களுக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், இப்றாஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் ஆகியவர்களுக்கும், அவர்களுடைய சந்ததிகளுக்கும் அருளப்பட்ட அனைத்தையும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டிருந்ததையும், (மற்றைய) நபிமார்களுக்கு தங்கள் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டிருந்தவற்றையும் நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம். அவர்களிலிருந்து எவரையும் (நபியல்ல என்று) பிரித்துவிட மாட்டோம். மேலும், அவனுக்கே நாங்கள் முற்றிலும் பணிந்து வழிப்படுவோம்

[137] (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் நம்பிக்கை கொண்டவாறே அவர்களும் நம்பிக்கை கொண்டால் நிச்சயமாக அவர்கள் நேரான வழியை அடைந்து விடுவார்கள். அவர்கள் புறக்கணித்து விட்டால் நிச்சயமாக வீண் பிடிவாதத்தில்தான் அவர்கள் இருக்கின்றனர். (நபியே!) அவர்களைப் பற்றி உமக்கு(ப் பயம் வேண்டாம்) அல்லாஹ் போதுமானவன். மேலும், அவன் (அனைத்தையும்) செவியுறுபவன், நன்கறிபவன் ஆவான்

[138] ‘‘அல்லாஹ்வுடைய மார்க்கத்தையே நாங்கள் பின்பற்றுவோம். அல்லாஹ்வை விட மார்க்கத்தால் மிக அழகானவன் யார்? (யாருமில்லை) நாம் அவனையே வணங்குவோம்'' (என்றும் கூறுவீர்களாக)

[139] ‘‘நீங்கள் அல்லாஹ்வைப் பற்றி நம்மிடம் தர்க்கிக்கிறீர்களா? எங்கள் இறைவனும் உங்கள் இறைவனும் அவனே! எங்கள் செயல்கள் (உடைய பலன்) எங்களுக்கே; உங்கள் செயல்கள் (உடைய பலன்) உங்களுக்கே. நாங்கள் அவனுக்கு இணைவைக்காது, வணக்கங்களை முற்றிலும் அவனுக்கே கலப்பற்றதாக ஆக்குவோம்'' என்றும் கூறுவீராக

[140] ‘‘நிச்சயமாக இப்றாஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் இவர்களும், இவர்களுடைய சந்ததிகளும் யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக இருந்தார்கள் என கூறுவீர்களா? (இதை) நன்கறிந்திருப்பது நீங்களா? அல்லாஹ்வா? என்று (நபியே!) கேட்பீராக. மேலும், (இதைப்பற்றி) தன்னிடமிருக்கும் அல்லாஹ்வின் சாட்சியத்தை மறைப்பவனைவிடப் பெரிய அநியாயக்காரன் யார்? உங்கள் இச்செயலைப் பற்றி அல்லாஹ் பராமுகமாக இல்லை'' (என்றும் கூறுவீராக)

[141] (மேற்கூறப்பட்ட நபிமார்களாகிய) அவர்கள் சென்றுபோன ஒரு (நல்ல) சமுதாயத்தினர். அவர்கள் செய்தவை அவர்களுக்கே; நீங்கள் செய்தவை உங்களுக்கே. அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று நீங்கள் கேட்கப்படமாட்டீர்கள்

[142] (நபியே! ‘‘முஸ்லிம்கள்) முன்நோக்கி வந்த கிப்லாவிலிருந்து அவர்களைத் திருப்பி விட்டது எது?'' என மனிதர்களில் சில அறிவீனர்கள் கேட்க ஆரம்பிப்பார்கள். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘கிழக்குத் திசையும் மேற்குத் திசையும் அல்லாஹ்வுக்குரியதே! அவன் விரும்புகிறவர்களை நேரான வழியில் செலுத்துவான்

[143] (நம்பிக்கையாளர்களே!) அவ்வாறே (ஏற்றத்தாழ்வற்ற) நடுநிலையான வகுப்பினராகவும் நாம் உங்களை ஆக்கினோம். ஆகவே, நீங்கள் (மற்ற) மனிதர்களுக்கு (வழிகாட்டக்கூடிய) சாட்சிகளாக இருங்கள். (நம்) தூதர் உங்களுக்கு (வழி காட்டக் கூடிய) சாட்சியாக இருப்பார். (நபியே!) நீர் (இதுவரை முன்னோக்கித் தொழுதுகொண்டு) இருந்த (பைத்துல் முகத்தஸின்) திசையை (மாற்றாமல் நீர் அதையே நோக்கித் தொழுது வரும்படி இதுவரை) நாம் விட்டு வைத்திருந்ததெல்லாம் (அதை மாற்றிய பின் நம்) தூதரைப் பின்பற்றுபவர் யார்? பின்பற்றாமல் தன் குதிங்கால் புறமாகவே (புறமுதுகிட்டு) திரும்பி(ச் சென்று) விடுகிறவர் யார்? என்பதை நாம் அறி(வித்து விடு) வதற்காகத்தான். ஆனால், எவர்களை அல்லாஹ் நேர்வழியில் நடத்துகிறானோ அவர்களைத் தவிர மற்றவர்களுக்கு அ(வ்வாறு கிப்லாவை மாற்றுவ)து நிச்சயமாக மிகப்பளுவாக இருக்கும். (நம்பிக்கையாளர்களே! இதற்கு முன்னர் நீங்கள் பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுது வந்த) உங்கள் நம்பிக்கையையும் அல்லாஹ் வீணாக்கிவிட மாட்டான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிக இரக்கமுள்ளவன், மிகக் கருணையாளன் ஆவான்

[144] (நபியே!) உமது முகம் (பிரார்த்தனை செய்து) அடிக்கடி வானத்தை நோக்குவதை நாம் காண்கிறோம். ஆதலால், நீர் விரும்பும் கிப்லா(வாகிய மக்கா)வின் பக்கமே நாம் உம்மை நிச்சயமாகத் திருப்புகிறோம். எனவே, நீர் (தொழும்போது மக்காவிலுள்ள) ‘மஸ்ஜிதுல் ஹராமின்' பக்கமே உமது முகத்தைத் திருப்புவீராக. (நம்பிக்கையாளர்களே!) நீங்களும் எங்கிருந்த போதிலும் (தொழுகையில்) அதன் பக்கமே உங்கள் முகங்களைத் திருப்புங்கள். வேதம் கொடுக்கப்பட்ட (யூதர்களும், கிறிஸ்தவர்களும் (நீங்கள் மக்காவின் திசையளவில் திரும்பிய) ‘‘இது தங்கள் இறைவனிடமிருந்(து வந்)த உண்மை(யான உத்தரவு)தான்'' என நிச்சயமாக அறிவார்கள். (ஏனென்றால், அவ்வான்ற அவர்களுடைய வேதத்தில் இருக்கிறது. எனவே, உண்மையை மறைக்கும்) அவர்கள் செயலைப்பற்றி அல்லாஹ் பராமுகமாயில்லை

[145] ஆகவே, (நபியே!) வேதம் கொடுக்கப்பட்ட (அ)வர்களிடம் (அவர்களை திருப்திபடுத்தக்கூடிய) அத்தாட்சிகள் அனைத்தையும் நீர் கொண்டுவந்த போதிலும் அவர்கள் உமது கிப்லாவைப் பின்பற்றப் போவதில்லை. நீரும் அவர்களுடைய கிப்லாவைப் பின்பற்றப் போவதில்லை. (வேதம் கொடுக்கப்பட்ட) அவர்களிலும் ஒருவர் மற்றொருவரின் கிப்லாவைப் பின்பற்றப் போவதுமில்லை. (ஆதலால், மக்காவை நோக்கித் தொழும்படி) உமது வஹ்யி(ன் மூலம் உத்தரவு) வந்ததன் பின்னரும் அவர்களுடைய விருப்பங்களை நீர் பின்பற்றினால் நிச்சயமாக நீரும் அநியாயக்காரர்களில் உள்ளவர்தான் (என்று கருதப்படுவீர்)

[146] எவர்களுக்கு நாம் வேதம் கொடுத்திருக்கிறோமோ அவர்கள் தங்கள் பிள்ளை களை(ச் சந்தேகமற) அறிவதைப் போல் அ(ந்த மக்காவின் திசையளவில் நீங்கள் திரும்பித் தொழுவீர்கள் என்ப)தை அறிவார்கள். ஆனால், நிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவினர் நன்கறிந்து கொண்டே (இந்த) உண்மையை மறைக்கின்றனர்

[147] (நபியே! கிப்லாவைப் பற்றி) உமது இறைவனிடமிருந்து வந்த இதுதான் உண்மை(யான கட்டளை)யாகும். ஆதலால், நீர் சந்தேகிப்பவர்களில் ஒருவராக ஒரு சிறிதும் ஆகிவிட வேண்டாம்

[148] (நம்பிக்கையாளர்களே!) ஒவ்வொரு (கூட்டத்த)வருக்கும் ஒரு திசையுண்டு. அவ(ரவ)ர் அதன் பக்கம் முன்னோக்குவார். (திசை மட்டும் நோக்கமல்ல) நன்மையானவற்றை செய்வதில் நீங்கள் ஒருவரை ஒருவர் முந்திச் செல்லுங்கள். நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்கள் அனைவரையும் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்

[149] ஆகவே, (நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழும்போது மக்காவிலுள்ள) ‘மஸ்ஜிதுல் ஹராமின்' பக்கமே உமது முகத்தைத் திருப்புவீராக. நிச்சயமாக இதுதான் உமது இறைவனுடைய உண்மை(யான கட்டளை)யாகும். (ஆகவே, இதைப் பற்றி வீண் தர்க்கம் செய்பவர்களே!) நீங்கள் செய்வதைப்பற்றி அல்லாஹ் பராமுகமாயில்லை

[150] (நபியே!) நீர் எங்கு சென்றாலும் (தொழும்போது) ‘மஸ்ஜிதுல் ஹராமின்' பக்கமே உமது முகத்தைத் திருப்புவீராக. (நம்பிக்கையாளர்களே!) அவர்களில் வரம்பு மீறியவர்களைத் தவிர மற்ற மனிதர்கள் உங்களுடன் (வீண்) விவாதம் செய்ய எந்த ஆதாரமும் இருக்கக்கூடாது என்பதற்காக நீங்களும் எங்கிருந்தபோதிலும் ‘மஸ்ஜிதுல் ஹராமின்' பக்கமே உங்கள் முகங்களைத் திருப்புங்கள். ஆகவே, அவர்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம். எனக்கே நீங்கள் பயப்படுங்கள். (கிப்லாவைப் பற்றிய இக்கட்டளையின் மூலம்) என் அருட்கொடையை நான் உங்கள் மீது முழுமையாக்கி வைப்பேன். (அதனால்) நிச்சயமாக நீங்கள் நேரான வழியை அடைவீர்கள்

[151] அவ்வான்ற, உங்களுக்கு நம் வசனங்களை ஓதிக் காண்பித்து உங்களைப் பரிசுத்தமாக்கி வைக்கவும், உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்பித்து, நீங்கள் அறியாதவற்றையும் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கக்கூடிய ஒரு தூதரை உங்களிலிருந்தே நாம் அனுப்பிவைத்தோம்

[152] ஆகவே, நீங்கள் என்னை நினைத்துக் கொண்டேயிருங்கள். நானும் உங்களை நினைத்து (அருள் புரிந்து) வருவேன். நீங்கள் எனக்கு நன்றி செலுத்தி வாருங்கள்; எனக்கு மாறு செய்யாதீர்கள்

[153] நம்பிக்கையாளர்களே! (நீங்கள் உங்கள் முயற்சிகளில் வெற்றி அடைவதற்காக) பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்

[154] அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிந்து (எதிரிகளால்) வெட்டப்பட்டவர்களை இறந்தவர்கள் எனக் கூறாதீர்கள். மாறாக, (அவர்கள்) உயிரோடு இருக்கிறார்கள். ஆனால், (அதை) நீங்கள் உணர்ந்துகொள்ள மாட்டீர்கள்

[155] (நம்பிக்கையாளர்களே!) பயம், பசி மேலும், பொருள்கள், உயிர்கள், கனிவர்க்கங்கள் ஆகியவற்றில் நஷ்டத்தைக் கொண்டு நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம். (நபியே! இச்சோதனைகளால் ஏற்படும் கஷ்டங்களைச்) சகித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக

[156] (சோதனைக்குள்ளாகும்) அவர்கள் தங்களுக்கு எத்தகைய துன்பம் ஏற்பட்ட போதிலும் ‘‘நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்காகவே இருக்கிறோம். நிச்சயமாக நாம் அவனிடமே மீளுவோம்'' எனக் கூறுவார்கள்

[157] அவர்கள் மீதுதான் அவர்களுடைய இறைவனிடமிருந்து (மன்னிப்பும்) புகழுரைகளும் கருணையும் ஏற்படுகின்றன. மேலும், அவர்கள்தான் நேரான வழியையும் அடைந்தவர்கள்

[158] நிச்சயமாக ‘ஸஃபா' (மலையும்) ‘மர்வா' (மலையும், வணக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்ட) அல்லாஹ்வின் அடையாளங்களில் உள்ளவையாக இருக்கின்றன. ஆகையால் எவர்கள் (‘கஅபா' என்னும்) அவ்வீட்டை ‘ஹஜ்ஜூ' அல்லது ‘உம்ரா' செய்தார்களோ அவர்கள், அவ்விரண்டையும் சுற்றி வருவது குற்றமில்லை. ஆகவே, எவரேனும் நன்மையை நாடி (அவ்வாறு) செய்தால் நிச்சயமாக அல்லாஹ் (அதற்கு) நன்றி பாராட்டுவான், அவருடைய (எண்ணங்களை) நன்கறிவான்

[159] நேர்வழியையும் தெளிவான அத்தாட்சிகளையும் நாம் இறக்கி, அவற்றை மனிதர்களுக்காக வேதத்தில் தெளிவுபடுத்தி(க் கூறி)ய பின்னர் எவர்கள் அவற்றை மறைக்கிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ்வும் சபிக்கிறான். (மற்றும்) சபிப்பவர்களும் அவர்களைச் சபிக்கின்றனர்

[160] ஆயினும், அவர்களில் எவர்கள் வருந்தி வேதனைப்பட்டு, (வேதங்களில் தாம் மறைத்தவற்றை) சீர்திருத்தி, அவற்றை (மனிதர்களுக்குத்) தெளிவாக எடுத்துரைக்கின்றனரோ அவர்களை நான் மன்னித்து விடுவேன். நானோ மிக்க மன்னிப்பாளன்; மிகக் கருணையாளன்

[161] எவர்கள் (தங்கள் வேதத்திலுள்ள உண்மைகளை மறைத்து) நிராகரித்து விட்டு (அதை சீர்திருத்தாமல்) நிராகரித்தவர்களாகவே இறந்து விடுகிறார்களோ அவர்கள்மீது அல்லாஹ், வானவர்கள், மனிதர்கள் ஆகிய அனைவரின் சாபமும் நிச்சயமாக உண்டாகட்டும்

[162] (மேலும், அவர்கள்) அ(ச்சாபத்)தில் என்றென்றும் தங்கிவிடுவார்கள். (மறுமையில்) அவர்களுடைய வேதனை இலேசாக்கப்படவும் மாட்டாது. அவர்கள் (ஓய்வு எடுப்பதற்கு) அவகாசம் கொடுக்கப்படவும் மாட்டார்கள்

[163] (மனிதர்களே!) உங்கள் வணக்கத்திற்குத் தகுதியானவன் ஒரே ஓர் இறைவனே ஆவான். அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையவனுமாகிய அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு எவனுமில்லை

[164] (அவன்) வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும், இரவு, பகல் மாறி மாறி வருவதிலும், மனிதர்களுக்குப் பயன் தருபவற்றை (ஏற்றி)க் கொண்டு கடலில் செல்கின்ற கப்பல்களிலும், வானத்திலிருந்து மழையை இறக்கி அதைக்கொண்டு (வறண்டு) இறந்துவிட்ட பூமியை அல்லாஹ் உயிர்ப்பி(த்துச் செழிப்பாக்கி வை)ப்பதிலும், கால்நடைகள் அனைத்தையும் பூமியில் பரவவிட்டிருப்பதிலும், காற்றை(ப் பல கோணங்களில் திருப்பி)த் திருப்பி விடுவதிலும், வானத்திற்கும் பூமிக்கும் இடையில் அமர்த்தப்பட்டிருக்கும் மேகத்திலும், (மனிதர்களுக்குள்ள பயன்களை ஆராய்ந்து) சிந்திக்கும் மக்களுக்கு (அவனுடைய அருளையும், அன்பையும் ஆற்றலையும் அறிவிக்கக்கூடிய) பல அத்தாட்சிகள் நிச்சயமாக இருக்கின்றன

[165] மேலும், அல்லாஹ் அல்லாதவற்றை அவனுக்கு இணைகளாக எடுத்துக் கொண்டு, அல்லாஹ்வை நேசிப்பது போல அவற்றை நேசிப்பவர்களும் மனிதர்களில் பலர் இருக்கின்றனர். எனினும், இறை நம்பிக்கையாளர்கள் (இவர்களைவிட) அதிகமாக அல்லாஹ்வை நேசிப்பார்கள். (தவிர) இந்த அநியாயக்காரர்கள் (சிறிது) சிந்திக்க வேண்டாமா? இவர்கள் வேதனையைத் (தங்கள் கண்ணால்) காணும்போது வேதனை செய்வதில் அல்லாஹ் மிகவும் கடுமையானவனாக இருப்பதுடன், எல்லா வல்லமையும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே இருக்கின்றன. (தாங்கள் நேசித்தவற்றுக்கு இல்லை என்று அறிந்து கொள்வார்கள்)

[166] (இவர்களுக்குத் தவறான) இவ்வழியைக் காட்டியவர்களும் (மறுமையில்) வேதனையைக் (கண்ணால்) கண்டவுடன் (தங்களைப்) பின்பற்றிய இவர்களை (முற்றிலும் கைவிட்டு) விட்டு விலகிக் கொள்வார்கள். அவர்களுக்கு(ம், அவர்களைப் பின்பற்றிய இவர்களுக்கு)மிடையில் இருந்த தொடர்புகள் அனைத்தும் அறுபட்டுவிடும்

[167] தவிர, (அவர்களைப்) பின்பற்றிய இவர்கள் மற்றொரு முறை நாம் (உலகத்துக்கு) திரும்ப செல்லக் கூடுமாயின் (எங்களுக்கு வழி காட்டிய) அவர்கள், (இப்பொழுது முற்றிலும்) எங்களைக் கைவிட்டு விலகிக் கொண்டபடியே நாங்களும் அவர்களை விட்டு நிச்சயமாக விலகிக் கொள்வோம் என்று கூறுவார்கள். (அவர்களுடைய உடல்கள் நரகில் வேதனைப்படும்.) இவ்வாறே (அவர்களுடைய உள்ளங்களும் வேதனையடைவதற்காக) அவர்களுடைய (தீய) செயல்களை அல்லாஹ் அவர்களுக்கு கைசேதமாக எடுத்துக் காண்பிப்பான். மேலும், அவர்கள் (நரக) நெருப்பிலிருந்து மீளவே மாட்டார்கள்

[168] மனிதர்களே! பூமியிலுள்ளவற்றில் (புசிக்க உங்களுக்கு) அனுமதிக்கப்பட்ட நல்லவற்றையே புசியுங்கள். (இதற்கு மாறுசெய்யும்படி உங்களைத் தூண்டும்) ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாவான்

[169] தீமைகள் மற்றும் மானக்கேடானவற்றை நீங்கள் செய்வதற்கும், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்யாக) கூறுவதற்கும் ஷைத்தான் உங்களைத் தூண்டுகிறான்

[170] மேலும், அல்லாஹ் இறக்கிவைத்த (இவ்வேதத்)தைப் பின்பற்றுங்கள் என அவர்களுக்குக் கூறப்பட்டால் (அவர்கள்) “இல்லை, எவற்றின் மீது எங்கள் மூதாதைகள் (இருந்து, அவர்கள் எவற்றைச் செய்து கொண்டு) இருக்க நாங்கள் கண்டோமோ அவற்றையே நாங்கள் பின்பற்றுவோம்'' எனக் கூறுகின்றனர். அவர்களுடைய மூதாதைகள் ஒன்றையுமே அறியாதவர்களாகவும் நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தாலுமா? (அவர்களைப் பின்பற்றுவார்கள்)

[171] (அறியாமையில் தங்கள் மூதாதைகளைப் பின்பற்றும்) அந்த நிராகரிப்பாளர்களின் உதாரணம், (அர்த்தத்தை உணராது) கூச்சலையும் ஓசையையும் மட்டும் கேட்கக்கூடியதின் (அதாவது கால்நடைகளின்) உதாரணத்தை ஒத்திருக்கிறது. (மேலும், அவர்கள்) செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கின்றனர். ஆதலால், அவர்கள் (எதையும்) அறிந்து கொள்ளவே மாட்டார்கள்

[172] நம்பிக்கையாளர்களே! நாம் உங்களுக்கு வழங்கிய நல்லவற்றில் இருந்தே புசியுங்கள். மேலும், நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருந்தால் அவனுக்கு நன்றியும் செலுத்திவாருங்கள்

[173] (நம்பிக்கையாளர்களே!) தாமாக செத்தது, இரத்தம், பன்றியின் மாமிசம், அல்லாஹ் அல்லாத (வேறு) பெயர் கூறப்பட்டவை ஆகியவற்றைத்தான் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்துள்ளான். ஆதலால், எவரேனும் வரம்பு மீறாமலும், பாவம் செய்யும் நோக்கமில்லாமலும் இருந்து (இவற்றைப் புசிக்க) நிர்ப்பந்திக்கப்பட்டு விட்டால் (அது) அவர் மீது குற்றமாகாது. நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்க கருணையுடையவன்

[174] எவர்கள் வேதத்தில் அல்லாஹ் இறக்கியவற்றை மறைத்துவிட்டு அதற்கு விலையாகச் சொற்பத் தொகையைப் பெற்றுக்கொள்கின்றனரோ அவர்கள் நிச்சயமாகத் தங்கள் வயிற்றில் நெருப்பையே நிரப்பிக் கொள்கிறார்கள். மறுமையில் அல்லாஹ் அவர்களுடன் (விரும்பிப்) பேசவும் மாட்டான். அவர்களை (மன்னித்து)ப் பரிசுத்தமாக்கி வைக்கவும் மாட்டான். அவர்களுக்கு மிக்க துன்புறுத்தும் வேதனைதான் உண்டு

[175] இவர்கள்தான் நேர்வழிக்குப் பதிலாக வழிகேட்டையும், மன்னிப்புக்குப் பதிலாகத் தண்டனையையும் விலைக்கு வாங்கிக் கொண்டவர்களாவர். (நரக) நெருப்பை (இவ்விதம்) அவர்கள் (சுவைத்து) சகிக்கும்படிச் செய்தது எதுவோ

[176] இதன் காரணம்: நிச்சயமாக அல்லாஹ் (முற்றிலும்) உண்மையாகவே வேதத்தை இறக்கியிரு(க்க, சொற்பத் தொகையைப் பெறுவதற்காக அதன் வசனங்களை மறை)ப் பதுதான். மேலும், வேதத்தைப் புரட்டுகிறவர்கள் நிச்சயமாக (நேர்வழியை விட்டுப்) பிரிந்து வெகுதூரத்தில் இருக்கிறார்கள்

[177] மேற்கிலோ கிழக்கிலோ உங்கள் முகங்களை நீங்கள் திருப்பி விடுவதனால் மட்டும் நன்மை செய்தவர்களாக ஆகிவிடமாட்டீர்கள். (உங்களில்) எவர் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் (மறுமை நாளையும்), வானவர்களையும், வேதங்களையும், நபிமார்களையும், நிச்சயமாக நம்பிக்கை கொண்டு தனக்கு விருப்பமுள்ள பொருளை அல்லாஹ்வுக்காக உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசகர்களுக்கும், விடுதலையை விரும்பிய (அடிமைகள், கடன்காரர்கள் ஆகிய)வர்களுக்கும் கொடுத்து (உதவி செய்து,) தொழுகையையும் கடைப்பிடித்து தொழுது, ஜகாத்தும் கொடுத்து வருகிறாரோ அவரும்; வாக்குறுதி செய்த சமயத்தில் தங்கள் வாக்குறுதியை(ச் சரிவர) நிறைவேற்றுபவர்களும்; கடினமான வறுமையிலும், நோய் நொடிகளிலும், கடுமையான போர் நேரத்திலும் பொறுமையைக் கைக்கொண்டவர்களும் ஆகிய (இவர்கள்தான் நல்லோர்கள்.) இவர்கள்தான் (அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதில்) உண்மையானவர்கள். இவர்கள்தான் இறையச்சமுடையவர்கள்

[178] நம்பிக்கையாளர்களே! கொலை செய்யப்பட்டவர்களுக்காக பழிவாங்குவது உங்கள்மீது கடமையாக்கப்பட்டுள்ளது. (ஆகவே, கொலைசெய்யப்பட்டவன்) சுதந்திரமானவனாயின் (அவனை கொலை செய்த) சுதந்திரமானவனையே, (கொலை செய்யப்பட்டவன்)அடிமையாயின் (அவனை கொலை செய்த அந்த) அடிமையையே, (கொலை செய்யப்பட்டவள்) பெண்ணாயின் (கொலை செய்த அந்தப்) பெண்ணையே நீங்கள் கொலை செய்துவிடுங்கள். (ஆயினும், பழிவாங்கும் விஷயத்தில்) ஒரு சிறிதேனும் அ(க்கொலையுண்ட)வனுடைய சகோதரரால் மன்னிக்கப்பட்டுவிட்டால், மிக்க கண்ணியமான முறையைப் பின்பற்றி (அவனைக் கொலை செய்யாது விட்டு) விடவேண்டும். (பழிவாங்குவதற்குப் பதிலாகக் கொலையாளி ஒரு தொகையைத் தருவதாக ஒப்புக் கொண்டிருந்தால், அந்த நஷ்டஈட்டைத்) தயக்கமின்றி நன்றியோடு அவன் செலுத்திவிட வேண்டும். இ(வ்வாறு நஷ்டஈட்டை அனுமதித்திருப்ப)து உங்கள் இறைவனுடைய சலுகையும், அருளுமாகும். இ(வ்வாறு நஷ்ட ஈட்டைப் பெற்றுக் கொண்ட)தற்குப் பின் எவரேனும் வரம்பு மீறி (நஷ்டஈடு கொடுத்த கொலையாளியைத் துன்புறுத்தி)னால் அவனுக்கு (மறுமையில்) மிக்க துன்புறுத்தும் வேதனையுண்டு

[179] அறிவாளிகளே! (கொலைக்குப்) பழிவாங்குவதில் உங்களுக்கு வாழ்க்கை உண்டு. (ஏனென்றால், பழிவாங்கி விடுவார்கள் என்ற பயத்தால் கொலை செய்யக் கருதுபவனும், அவனால் கொலை செய்யக் கருதப்பட்டவனும் தப்பித்துக் கொள்ளலாம்.) நீங்கள் (அல்லாஹ் தடுத்தவற்றிலிருந்து விலகி அவனை) அஞ்சிக் கொள்ளுங்கள்

[180] (நம்பிக்கையாளர்களே!) உங்களில் எவருக்கும் மரணம் சமீபித்து அவர் பொருளை விட்டுவிட்டு இறப்பவராகவும் இருந்தால், (அவர் தன்) தாய் தந்தைக்கும், உறவினர்களுக்கும், நியாயமான முறைப்படி (பொருள் சேர்வதற்காக) மரண சாசனம் (கூற) விதிக்கப்பட்டிருக்கிறது. (இது) இறையச்சமுடையவர்கள் மீது கடமையாகும்

[181] (மரண சாசனமாகிய) அதைக் கேட்டதற்குப் பின்னர், எவரேனும் அதை மாற்றி விட்டால் அதன் பாவமெல்லாம் மாற்றியவரின் மீதே (சாரும்). நிச்சயமாக அல்லாஹ் (மரணிப்பவர் கூறும் சாசனத்தை) நன்கு செவியுறுபவன், (அதை மாற்றும் பாவிகளின் செயலை) நன்கறிந்தவன்

[182] ஆனால், மரணசாசனம் கூறியவரி(ன் சாசனத்தி)ல் அநீதம் அல்லது தவறு இருப்பதை எவரேனும் பார்த்து பயந்து, அ(ந்த சாசனப் பொருளை அடையக்கூடிய)வர்களுக்கிடையே சமாதானம் செய்து அதை மாற்றிவிட்டால் அவர் மீது குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன், மிக்க கருணையாளன் ஆவான்

[183] நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. (அதனால்) நீங்கள் இறையச்சமுடையவர்களாக ஆகலாம்

[184] குறிப்பிட்ட நாள்களில்தான் (நோன்பு நோற்பது கடமையாகும்.) ஆயினும் (அந்நாள்களில்) உங்களில் யாராகிலும் நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் (அவர் நோன்பு நோற்க வேண்டியதில்லை. அதை ரமழான் அல்லாத) மற்ற நாள்களில் கணக்கி(ட்டு நோற்று வி)டவும். தவிர, (ஏதாவது ஒரு காரணத்தினால்) நோன்பு நோற்க சிரமப்படுபவர்கள் அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும். எவரேனும் நன்மையை நாடி (பரிகாரத்திற்குரிய அளவைவிட அதிகமாகத்) தானம் செய்தால் அது அவருக்கே நன்மை. ஆயினும், (பரிகாரமாகத் தானம் கொடுப்பதை விட நோன்பின் நன்மையை) நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் நோன்பு நோற்பதே உங்களுக்கு சிறந்தது (என்பதை தெரிந்து கொள்வீர்கள்)

[185] ரமழான் மாதம் எத்தகைய (மகத்துவமுடைய)து என்றால் அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழி காட்டும் திருகுர்ஆன் (என்னும் வேதம்) இறக்கப்பட்டது. அது (நன்மை, தீமையைப்) பிரித்தறிவித்து நேரான வழியைத் தெளிவாக்கக்கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கிறது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும். ஆனால், (அக்காலத்தில் உங்களில்) யாராவது நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் (ரமழான் அல்லாத) மற்ற நாள்களில் (விட்டுப்போன நாள்களின் நோன்பைக்) கணக்கிட்டு (நோற்று) விடவும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவா(ன கட்டளையைக் கொடு)க்க விரும்புகிறான்ன தவிர சிரமத்தை(க் கொடுக்க) விரும்பவில்லை. மேலும், (தவறிய நாள்களைக் கணக்கிடும்படி கட்டளையிட்டதெல்லாம், உங்கள்மீது கடமையாக உள்ள ஒரு மாத நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் முழுமை செய்வதற்காகவும்; (அவ்வான்ற) அல்லாஹ் உங்களை நேரான பாதையில் நடத்தியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்துவதற்காகவும்; (நோய், பிரயாணம் போன்ற சந்தர்ப்பங்களில் நோன்பு நோற்காதிருக்க உங்களுக்கு அனுமதி வழங்கியதற்காக) நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதற்காகவுமே ஆகும்

[186] (நபியே!) உம்மிடம் என் அடியார்கள் என்னைப் பற்றிக் கேட்டால் (அதற்கு நீர் கூறுவீராக:) ‘‘நிச்சயமாக நான் உங்களுக்கு சமீபமானவன். (எவரும்) என்னை அழைத்தால் அந்த அழைப்பாளரின் அழைப்புக்கு விடையளிப்பேன்.'' ஆதலால், அவர்கள் என்னிடமே பிரார்த்தனை செய்யவும்; என்னையே நம்பிக்கை கொள்ளவும். (அதனால்) அவர்கள் நேர்வழி அடைவார்கள்

[187] (நம்பிக்கையாளர்களே!) நோன்பு (நாள்களின்) இரவுகளில் நீங்கள் உங்கள் மனைவிகளுடன் வீடு கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கிறீர்கள். (நோன்புடைய காலத்தில் இஷாவுக்குப் பின்னர் உங்கள் மனைவிகளுடன் கூடாமலும், ஒரு பொருளை புசிக்காமலும் இருந்து) நிச்சயமாக நீங்கள் உங்களைத் துன்பத்திற்குள்ளாக்கிக் கொண்டீர்கள் என்பதை அல்லாஹ் அறிந்து உங்கள் மீது இரக்கமுற்று உங்கள் சிரமத்தை நீக்கிவிட்டான். ஆகவே, இனி இருள் நீங்கி விடியற்காலை (ஃபஜ்ர்) ஆகிவிட்டது என்று உங்ளுக்குத் தெளிவாகும்வரை (நோன்பின் இரவு காலங்களில் உங்கள்) மனைவிகளுடன் சேர்ந்து அல்லாஹ் உங்களுக்கு(ச் சந்ததியாக) விதித்திருப்பதைத் தேடிக் கொள்ளுங்கள். இன்னும் (அந்நேரங்களில்) புசியுங்கள், பருகுங்கள். (கிழக்கு வெளுத்த) பின்பு இரவு (ஆரம்பமாகும்) வரை (மேலே கூறியவற்றைத் தவிர்த்து) நோன்புகளை (நோற்று) முழுமையாக்குங்கள். ஆயினும், நீங்கள் (வணங்குவதற்காக) மஸ்ஜிதுகளில் தங்கி (இஃதிகாஃப்) இருக்கும்போது (உங்கள்) மனைவிகளுடன் கூடாதீர்கள். இவை அல்லாஹ்வுடைய திட்டமான சட்ட வரம்புகளாகும். ஆதலால், அவ்வரம்புகளை (மீற) நெருங்காதீர்கள். மனிதர்கள் இறையச்சமுடையவர்களாக ஆவதற்காக அல்லாஹ் தன் வசனங்களை அவர்களுக்கு இவ்வாறு தெளிவாக விவரிக்கிறான்

[188] (மேலும்,) உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருள்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள். (உங்கள் வாதம் பொய்யானதென) நீங்கள் அறிந்திருந்தும் (இதர) மனிதர்களின் பொருள்களில் எதையும் பாவமான வழியில் (அநியாயமாக லஞ்சம் கொடுத்து) அபகரித்துக்கொள்ள அதிகாரிகளிடம் செல்லாதீர்கள்

[189] (நபியே! மாதந்தோறும் பிறந்து, வளர்ந்து, தேயும்) பிறைகளைப்பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘அவை மனிதர்களுக்கு ஒவ்வொரு மாதத்தையும் ஹஜ்ஜூடைய காலங்களையும் அறிவிக்கக்கூடியவை.'' மேலும், (நம்பிக்கையாளர்களே! இஹ்ராம் கட்டிய) நீங்கள் (உங்கள்) வீடுகளுக்கு அவற்றின் பின்புறமாக வந்து விடுவதனால் நல்லவர்களாக ஆகிவிட மாட்டீர்கள். எனினும், எவர் அல்லாஹ்வுக்குப் பயந்து நடக்கிறாரோ அவரே நல்லவர். ஆதலால், நீங்கள் (உங்கள்) வீடுகளுக்கு அவற்றின் தலை வாசல்களின் வழியாக வாருங்கள். அல்லாஹ்வுக்குப் பயந்தும் நடந்துகொள்ளுங்கள். இதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்

[190] உங்களை எதிர்த்து போர் புரிய முற்பட்டோரை அல்லாஹ்வுடைய பாதையில் நீங்களும் எதிர்த்து போர் புரியுங்கள். ஆனால், நீங்கள் அத்துமீறாதீர்கள். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் அத்துமீறுபவர்களை நேசிப்பதில்லை

[191] ஆகவே, (உங்களை எதிர்த்து போர்புரிய முற்பட்ட) அவர்களை கண்டவிடமெல்லாம் வெட்டுங்கள். உங்களை (உங்கள் ஊரிலிருந்து) அவர்கள் வெளியேற்றியவாறே நீங்களும் அவர்களை வெளியேற்றி விடுங்கள். (அவர்கள் செய்யும்) கலகம் கொலையைவிட மிகக் கொடியது. ஆனால், (அவர்களில்) எவரேனும் அபயம் தேடி மஸ்ஜிதுல் ஹராமில் இருந்தால், அங்கு அவர்கள் உங்களை எதிர்த்து போர்புரிய முற்படும்வரை நீங்கள் அவர்களை வெட்டாதீர்கள். (அவ்விடத்திலும்) அவர்கள் உங்களை எதிர்த்து போர் புரிந்தால் நீங்களும் அவர்களை வெட்டுங்கள். (அந்த) நிராகரிப்பவர்களுக்கு (உரிய) கூலி இப்படித்தான்

[192] (இதன்) பின்னர் அவர்கள் (உங்களை எதிர்த்து போர் புரியாது) விலகிக்கொண்டால் (நீங்கள் அவர்களை வெட்டாதீர்கள்.) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன், மிக்க கருணையுடையவன் ஆவான்

[193] (இஸ்லாமிற்கு எதிராக செய்யப்படும்) கலகம் (முற்றிலும்) நீங்கி, அல்லாஹ்வுடைய மார்க்கம் உறுதியாக நிலைபெறும் வரை அவர்களை எதிர்த்து போர் புரியுங்கள். ஆனால், அவர்கள் (கலகம் செய்யாது) விலகிக் கொண்டால் (அவர்களுக்கு மன்னிப்பு உண்டு). அநியாயம் செய்பவர்களைத் தவிர (மற்றவர்கள் மீது) அறவே அத்துமீறக்கூடாது

[194] (போர் செய்வது தடுக்கப்பட்டுள்ள ரஜப், துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய) சிறப்புற்ற மாதங்களுக்கு சிறப்புற்ற மாதங்களே ஈடாகும். ஆகவே, சிறப்புகளுக்கு(ச் சமமான) ஈடு உண்டு. ஆதலால், எவரேனும் உங்கள் மீது வரம்பு மீறி (அம்மாதங்களில் போருக்கு) வந்தால், அவர் வரம்பு மீறிய விதமே நீங்களும் அவர் மீது வரம்புமீறி (போருக்கு)ச் செல்லுங்கள். ஆனால், நீங்கள் அல்லாஹ்வுக்கு பயந்து (அம்மாதங்களில் போரை ஆரம்பம் செய்யாது இருந்து) கொள்ளுங்கள். அல்லாஹ் இறையச்சமுடையவர்களுடன் இருக்கிறான் என்பதையும் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்

[195] நீங்கள் அல்லாஹ்வுடைய பாதையில் (தாராளமாகச்) செலவு செய்யுங்கள்; அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்யாது) உங்களை நீங்களே ஆபத்திற்குள்ளாக்கிக் கொள்ளாதீர்கள்; (பிறருக்கு உதவியும்) நன்மையும் செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (பிறருக்கு) நன்மை செய்பவர்களை நேசிக்கிறான்

[196] அல்லாஹ்வுக்காக (ஆரம்பம் செய்த) ஹஜ்ஜையும் உம்ராவையும் நீங்கள் முழுமையாக்குங்கள். ஆனால், (மக்கா செல்ல முடியாதவாறு) நீங்கள் தடுக்கப்பட்டு (ஹஜ்ஜை முழுமையாக்க முடியா)விட்டால் ‘ஹத்யு' (என்னும் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவை)களில் (உங்களுக்குச்) சாத்தியமானவை பரிகாரமாகும். தவிர, அந்த ஹத்யுக்கள் தாம் செல்ல வேண்டிய (மக்காவிலுள்ள ஹரம் என்னும்) இடத்தை அடையும்வரை நீங்கள் உங்கள் தலைமுடியைச் சிரைத்துக் கொள்ளாதீர்கள். ஆயினும், (இஹ்ராம் கட்டிய) உங்களில் எவரேனும் நோயாளியாகவோ அல்லது தலையில் (பேன், புண், வலி ஆகியவற்றால்) இடையூறு உள்ளவராகவோ இருந்து (முடியிறக்கிக் கொண்டு) விட்டால், அதற்குப் பரிகாரமாக (அவர் மூன்று) நோன்புகள் நோற்கவும். அல்லது, (ஆறு ஏழைகளுக்கு உணவு) தானம் செய்யவும். அல்லது, (ஓர் ஆடு) குர்பானி கொடுக்கவும். மேலும், (இஹ்ராம் அணிந்த) நீங்கள் எவ்விதத் தடையுமில்லாது (ஹஜ்ஜூ செய்ய) வசதி பெற்றவர்களாக இருந்து (மக்கா சென்ற பின் உங்களில்) எவரேனும் உம்ராவை (மட்டும்) செய்துவிட்டு ஹஜ்ஜூக்கு முன்னதாகவே (ஹஜ்ஜூடைய காலத்தில் தடுக்கப்பட்டிருந்த) சுகத்தை அனுபவித்து விட்டால் (அதற்குப்) பரிகாரமாக ஹத்யுக்களில்* இயன்றதைக் கொடுக்கவும். ஆனால், (ஹத்யுக்களில் எதையுமே) பெற்றுக் கொள்ளாதவர், ஹஜ்ஜூடைய காலத்தில் மூன்றும் (தன் இருப்பிடம்) திரும்பியபின் ஏழும், ஆக முழுமையாகப் பத்து நாட்கள் நோன்பு நோற்கவும். (தடுக்கப்பட்ட சுகத்தை அனுபவிக்கும்) இ(வ்வுரிமையான)து எவருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமில் (மக்காவில்) குடியிருக்கவில்லையோ அவருக்குத்தான். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (குற்றவாளிகளை) வேதனை செய்வதில் மிகக் கடுமையானவன் என்பதையும் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்

[197] ஹஜ்ஜூ (அதற்கெனக்) குறிப்பிட்ட (ஷவ்வால், துல்கஅதா, துல்ஹஜ்ஜூ ஆகிய) மாதங்களில்தான். ஆகவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தன்மீது கடமையாக்கிக் கொண்டால் ஹஜ்ஜூ (மாதத்தின் பத்தாம் தேதி) வரை வீடு கூடுதல், தீச்சொல் பேசுதல், சச்சரவு செய்தல் கூடாது. நீங்கள் என்ன நன்மை செய்தபோதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறி(ந்து அதற்குரிய கூலி தரு)வான். தவிர, (ஹஜ்ஜூடைய பயணத்திற்கு வேண்டிய) உணவுகளை (முன்னதாகவே) தயார்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால், நிச்சயமாக (நீங்கள்) தயார்படுத்திக்கொள்ள வேண்டியவற்றில் எல்லாம் மிக மேலானது இறையச்சம்தான். ஆதலால், அறிவாளிகளே! நீங்கள் (குறிப்பாக ஹஜ்ஜூடைய காலத்தில்) எனக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள்

[198] (ஹஜ்ஜூ பயணத்தின்போது) நீங்கள் (தொழில் செய்து) உங்கள் இறைவனுடைய அருளை(க் கொண்டு கிடைக்கும் லாபத்தை)த் தேடிக் கொள்வது உங்கள் மீது குற்றமாகாது. (ஹஜ்ஜூக்குச் சென்ற) நீங்கள் அரஃபாவிலிருந்து திரும்பினால் ‘மஷ்அருல் ஹராம்' என்னும் இடத்தில் அல்லாஹ்வை நினைவு கூருங்கள். நீங்கள் இதற்கு முன் வழி தவறியவர்களாக இருந்தபொழுது உங்களுக்கு அவன் நேரான வழியை அறிவித்ததற்காக மேலும், அவனை ‘திக்ரு' செய்யுங்கள்

[199] பின்னர் மனிதர்கள் திரும்புகின்ற (‘முஸ்தலிபா' என்னும்) இடத்திலிருந்து நீங்களும் (‘மினா'வுக்குத்) திரும்பி விடுங்கள். மேலும், அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மகா கருணையாளன் ஆவான்

[200] (ஹஜ்ஜூக்குச் சென்ற) நீங்கள் உங்கள் (ஹஜ்ஜின்) கடமைகளை நிறைவேற்றி விட்டால், நீங்கள் (இஸ்லாமிற்கு முன்) உங்கள் மூதாதை(களின் பெயர்)களை (சப்த மிட்டு பெருமையாக) நினைவு கூர்ந்து கூறிவந்ததைப்போல் அல்லது அதைவிட அதிகமாக அல்லாஹ்வை ‘திக்ரு' (செய்து உங்களுக்கு வேண்டியவற்றையும் அவனிடம் கேட்டுப் பிரார்த்தனை) செய்யுங்கள். (பிரார்த்தனையில்) ‘‘எங்கள் இறைவனே! எங்களுக்கு (வேண்டியவற்றை எல்லாம்) இம்மையிலேயே கொடுத்து விடுவாயாக!'' என்று கோருபவரும் மனிதர்களில் உண்டு. ஆனால், இவருக்கு மறுமையில் ஒரு பாக்கியமும் இல்லை

[201] மேலும், ‘‘எங்கள் இறைவனே! எங்களுக்கு நீ இம்மையிலும் நன்மை தருவாயாக! மறுமையிலும் நன்மை தருவாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் எங்களை நீ பாதுகாப்பாயாக!'' எனக் கோருபவர்களும் மனிதர்களில் உண்டு

[202] தாங்கள் செய்த (நற்)செயல்களின் (பயனை இம்மையிலும் மறுமையிலும் அடையும்) பாக்கியம் இவர்களுக்குத்தான் உண்டு. தவிர, (சிரமமேற்படாத வண்ணம் இவர்களின் செயலைப் பற்றி மறுமையில்) அல்லாஹ் வெகு விரைவாகக் (கேள்வி) கணக்கெடுப்பான். (அவனுக்கு அது சிரமமல்ல)

[203] (நம்பிக்கையாளர்களே! துல்ஹஜ்ஜூ மாதத்தில்) குறிப்பிடப்பட்ட (மூன்று) நாள்கள்வரை (‘மினா' என்னும் இடத்தில் தாமதித்திருந்து) அல்லாஹ்வை ‘திக்ரு' செய்யுங்கள். ஆனால், எவரேனும் இரண்டாம் நாளில் அவசரப்பட்டு(ப் புறப்பட்டு) விட்டால் அவர் மீது குற்றமில்லை. எவரேனும் (மூன்று நாள்களுக்குப்) பிற்பட்(டுப் புறப்பட்)டால் அவர் மீதும் குற்றமில்லை. அவர் இறையச்சமுடையவராக (இருந்து ஹஜ்ஜூடைய காலத்தில் தடுக்கப்பட்டவற்றிலிருந்து விலகி) இருந்தால் (மட்டும்) போதுமானது. ஆகவே, (நம்பிக்கையாளர்களே!) நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்விடமே (நியாயத் தீர்ப்புக்கு எழுப்பிக்) கொண்டு வரப்படுவீர்கள் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள்

[204] (நபியே! உம்மிடம்) இவ்வுலக வாழ்க்கையைப் பற்றி(ப் பேசும் பொழுது) தன் (சாதுரியமான) வார்த்தையைக் கொண்டு உம்மை ஆச்சரியத்திற்குள்ளாக்கக்கூடிய ஒருவன் அம்மனிதர்களில் உண்டு. அவன் (உம் மீது அன்பு கொண்டிருப்பதாகக் கூறி) தன் மனதில் உள்ளவற்றிற்கு (சத்தியம் செய்து) அல்லாஹ்வை சாட்சி ஆக்குவான். (உண்மையில்) அவன்தான் (உமக்குக்) கொடிய எதிரியாவான்

[205] அவன் (உம்மிடமிருந்து) விலகினாலோ, பூமியில் விஷமம் செய்து (உங்கள்) விவசாயத்தையும் கால்நடைகளையும் அழித்துவிட முயற்சி செய்கிறான். விஷமத்தை அல்லாஹ் விரும்புவதில்லை

[206] தவிர, ‘‘நீ அல்லாஹ்வுக்குப் பயந்துகொள். (விஷமம் செய்யாதே)'' என அவனுக்குக் கூறப்பட்டால் (அவனுடைய) பெருமை அவனை (விஷமம் செய்து) பாவத்தைச் செய்யும்படியே (இழுத்துப்) பிடித்துக்கொள்கிறது. ஆகவே, அவனுக்கு நரகமே தகுதியாகும். நிச்சயமாக (அது) தங்குமிடங்களில் மிகக் கெட்டது

[207] அல்லாஹ்வின் (திருப்)பொருத்தத்தைப் பெறுவதற்காகத் தன் உயிரையே தியாகம் செய்யக்கூடியவர்களும் மனிதர்களில் உண்டு. அல்லாஹ் (இத்தகைய) அடியார்கள்மீது மிகவும் இறக்கமுடையவன்

[208] நம்பிக்கையாளர்களே! நீங்கள் (தயங்கிக் கொண்டிருக்க வேண்டாம்.) இஸ்லாமில் முற்றிலும் நுழைந்து விடுங்கள். (இதைத் தடை செய்யும்) ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாவான்

[209] (மனிதர்களே! சந்தேகத்திற்கிடமில்லாத) தெளிவான அத்தாட்சிகள் உங்களிடம் வந்த பின்னரும் நீங்கள் (இஸ்லாமில் உறுதியாக இல்லாமல்) நழுவி விடுவீர்களானால் (உங்களைத் தண்டிப்பதில்) நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனும் (உங்களை எவ்விதம் நடத்த வேண்டும் என்பதை நன்கறிந்த) நுண்ணறிவுடையவனும் ஆவான் என்பதை நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்

[210] (நபியே! இவ்வளவு தெளிவான வசனங்களை நிராகரிக்கின்ற அவர்கள்) அல்லாஹ்வும் வானவர்களும் (வெண்) மேகத்தின் நிழலில் அவர்களிடம் வந்து (அவர்களை அழித்து) அவர்களின் வேலையை முடிப்பதைத் தவிர (வேறு எதையும்) அவர்கள் எதிர்பார்க்கின்றனரோ? (அவர்களுடைய) எல்லா விஷயங்களும் (மறுமையில்) அல்லாஹ்விடமே (விசாரணைக்குக்) கொண்டுவரப்படும்

[211] (நபியே!) இஸ்ராயீலின் சந்ததிகளைக் கேட்பீராக: ‘‘எத்தனை தெளிவான அத்தாட்சிகளை நாம் அவர்களுக்குக் கொடுத்திருக்கிறோம்.'' (அவ்வாறிருக்க) எவரேனும் அவை தன்னிடம் வந்ததன் பின் அல்லாஹ்வின் (அத்தாட்சிகளான) அருட்கொடையை மாற்றிவிடுவாரானால் (அவரை) வேதனை செய்வதில் நிச்சயமாக அல்லாஹ் மிகக் கடுமையானவன் ஆவான்

[212] நிராகரிப்பவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையே அலங்காரமாக(த் தோன்றும்படி) செய்யப்பட்டிருக்கிறது. ஆதலால், அவர்கள் (ஏழைகளாக இருக்கும்) நம்பிக்கையாளர்களைப் பரிகசிக்கிறார்கள். ஆனால், (நம்பிக்கையாளர்களான) இறையச்சம் உள்ளவர்களோ மறுமையில் அவர்களைவிட (எவ்வளவோ) மேலாக இருப்பார்கள். மேலும், அல்லாஹ் விரும்புகின்ற (இ)வர்களுக்குக் கணக்கின்றியே வழங்குவான்

[213] (ஆரம்பத்தில்) மனிதர்கள் (அனைவரும்) ஒரே இனத்தவராகவே இருந்தனர். (அவர்கள் நேரான வழியில் செல்வதற்காக நன்மை செய்பவர்களுக்கு) நற்செய்தி கூறும்படியும், (தீமை செய்பவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும்படியும் அல்லாஹ் நபிமார்களை அனுப்பிவைத்தான். மேலும், அம்மனிதர்களுக்குள் ஏற்படும் கருத்து வேற்றுமைகளைத் தீர்த்து வைப்பதற்காக (சத்திய) வேதத்தையும் அருளினான். இவ்வாறு தெளிவான அத்தாட்சிகள் (உள்ள வேதம்) வந்ததன் பின்னர் அதைப் பெற்றுக்கொண்ட அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட பொறாமையின் காரணமாகவே (அந்த சத்திய வேதத்திற்கு) மாறு (செய்ய முற்)பட்டனர். ஆயினும், அவர்கள் மாறுபட்டு(ப் புறக்கணித்து)விட்ட அந்த சத்தியத்தின் பக்கம் செல்லும்படி நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் தன் அருளைக்கொண்டு நேர்வழி காட்டினான். இன்னும் (இவ்வான்ற) தான் விரும்பியவர்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறான்

[214] (நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு முன் சென்றவர்களுக்கு ஏற்பட்டது போன்ற (கஷ்டமான) நிலைமை உங்களுக்கு வராமலே நீங்கள் சொர்க்கத்தில் நுழைந்து விடலாம் என்று நினைத்துக் கொண்டீர்களோ? (உங்களைப் போல) நம்பிக்கை கொண்ட அவர்களையும் அவர்களுடைய தூதரையும், வாட்டும் வறுமையிலும், நோயிலும் பீடித்து (அவர்கள் வருந்தித் தங்கள் கஷ்டங்களை நீக்கி வைக்க) ‘‘அல்லாஹ்வுடைய உதவி எப்பொழுது (வரும்? எப்பொழுது வரும்?)'' என்று கேட்டதற்கு ‘‘அல்லாஹ்வுடைய உதவி நிச்சயமாக (இதோ) சமீபத்திலிருக்கிறது'' என்று (நாம் ஆறுதல்) கூறும் வரை அவர்கள் ஆட்டிவைக்கப்பட்டார்கள்

[215] (நபியே! பொருள்களில்) ‘‘எதைச் செலவு செய்வது? (யாருக்குக் கொடுப்பது?)'' என்று உம்மிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீர் கூறுவீராக: (நன்மையைக் கருதி) ‘‘நீங்கள் எத்தகைய பொருளைச் செலவு செய்தபோதிலும் (அதைத்) தாய், தந்தை, சுற்றத்தார், அநாதைகள், ஏழைகள், வழிப்போக்கர்கள் ஆகியோருக்குக் கொடுங்கள். இன்னும், நீங்கள் (வேறு) என்ன நன்மையைச் செய்தபோதிலும் அதையும் நிச்சயமாக அல்லாஹ் அறி(ந்து அதற்குரிய கூலியும் தரு)வான்

[216] (நம்பிக்கையாளர்களே!) போர் செய்வது உங்களுக்கு வெறுப்பாய் இருந்தும் (உங்களையும் உங்கள் மார்க்கத்தையும் காப்பதற்காக) அது உங்கள்மீது கடமையாக்கப்பட்டிருக்கிறது. ஒன்று உங்களுக்கு மிக நன்மையாக இருந்தும் அதை நீங்கள் வெறுக்கக்கூடும். ஒன்று உங்களுக்குத் தீங்காக இருந்தும் அதை நீங்கள் விரும்பக்கூடும். (அவை உங்களுக்கு நன்மை அளிக்குமா தீமையளிக்குமா என்பதை) அல்லாஹ்தான் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்

[217] (நபியே! துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய இச்)சிறப்புற்ற மாதங்களில் போர் செய்வதைப் பற்றி உங்களிடம் அ(ந்நிராகரிப்பவர்கள் கேட்கின்றனர். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘அவற்றில் போர் புரிவது பெரும் பாவம்(தான்). ஆனால், அல்லாஹ்வுடைய மார்க்கத்(தில் சேருவ)தை விட்டு மக்களை (நீங்கள்) தடுப்பதும், அல்லாஹ்வை நீங்கள் நிராகரிப்பதும், (ஹஜ்ஜூக்கு வருபவர்களை) மஸ்ஜிதுல் ஹராமுக்கு வரவிடாது தடுப்பதும், அதில் வசிப்போ(ரில் நம்பிக்கை கொண்டோ)ரை அதிலிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ்விடத்தில் (அதைவிட) மிகப் பெரும் பாவங்களாக இருக்கின்றன. தவிர, (நம்பிக்கையாளர்களுக்கு நீங்கள் செய்துவரும்) விஷமம் கொலையைவிட மிகக் கொடியது. மேலும், (நம்பிக்கையாளர்களே! நிராகரிப்பாளர்களாகிய) அவர்களுக்குச் சாத்தியப்பட்டால் உங்களை உங்கள் மார்க்கத்திலிருந்து திருப்பி விடும்வரை உங்களை எதிர்த்து ஓயாது போர் செய்து கொண்டே இருப்பார்கள். ஆகவே, உங்களில் எவரேனும் தன் மார்க்கத்தை (நிராகரித்து)விட்டு மாறி, (அதை அவ்வாறு) நிராகரித்(ததைப் பற்றி வருத்தப்பட்டு மீளா)தவராகவே இறந்துவிட்டால் அவருடைய (நற்)செயல்கள் எல்லாம் இம்மையிலும் மறுமையிலும் அழிந்துவிடும். இன்னும், அவர்கள் நரகவாசிகளாகி, என்றென்றுமே அதில் தங்கி விடுவார்கள்

[218] எவர்கள் மெய்யாகவே நம்பிக்கை கொண்டிருக்கிறார்களோ அவர்களும்; எவர்கள் (நிராகரிப்பாளர்களின் துன்பத்தால் ‘மக்கா'வாகிய) தம் ஊரைவிட்டும் வெளியேறினார்களோ அவர்களும்; எவர்கள் அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிகிறார்களோ அவர்களும்தான் அல்லாஹ்வின் கருணையை நிச்சயமாக எதிர்பார்க்கின்றனர். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மகா கருணையுடையவன் ஆவான்

[219] (நபியே!) மதுவைப் பற்றியும் சூதாட்டத்தைப் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீர் கூறுவீராக! ‘‘அவ்விரண்டிலும் பெரும் பாவங்களும் இருக்கின்றன; மனிதர்களுக்குச் சில பயன்களும் இருக்கின்றன. ஆனால், அவற்றில் உள்ள பாவம் அவற்றிலுள்ள பயனைவிட மிகப் பெரிது. மேலும், (நபியே! தர்மத்திற்காக) எவ்வளவு செலவு செய்வதென உம்மிடம் கேட்கின்றனர். (அதற்கு ‘‘அவசியத்திற்கு வேண்டியது போக) மீதமுள்ளதை(ச் செலவு செய்யுங்கள்)'' எனக் கூறுவீராக. (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் இம்மை, மறுமை(யின் நன்மை)களை கவனத்தில் வைத்துக் கொள்வதற்காக உங்களுக்கு அல்லாஹ் தன் வசனங்களை இவ்வாறு விவரிக்கிறான்

[220] (நபியே!) அநாதைகளை (வளர்ப்பதை)ப் பற்றியும் உம்மிடம் கேட்கிறார்கள். (அதற்கு) நீர் கூறுவீராக: அவர்களைச் சீர்திருத்துவது மிகவும் நன்றே! மேலும், நீங்கள் அவர்களுடன் கலந்(து வசித்)திருக்க நேரிட்டால் (அவர்கள்) உங்கள் சகோதரர்களே! (ஆதலால், அவர்களுடைய சொத்தில் இருந்து அவசியமான அளவு உங்களுக்காகவும் செலவு செய்து கொள்ளலாம்.) ஆனால், ‘‘நன்மை செய்வோம்'' என்று (கூறிக் கொண்டு) தீமை செய்பவர்களை அல்லாஹ் நன்கறிவான். அல்லாஹ் நாடினால் உங்களை (மீள முடியாத) சிரமத்திற்குள்ளாக்கி விடுவான். நிச்சயமாக அல்லாஹ் (எவ்விதமும் செய்ய) வல்லவன், நுண்ணறிவுடையவன் ஆவான். (ஆகவே, அநாதைகள் விஷயத்தில் மோசம் செய்யாது மிக்க அனுதாபத்துடனும் நீதமாகவும் நடந்து கொள்ளுங்கள்)

[221] (நம்பிக்கையாளர்களே!) இணைவைத்து வணங்கும் பெண்களை அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை நீங்கள் மணந்து கொள்ளாதீர்கள். (ஏனென்றால்,) இணைவைத்து வணங்கும் ஒரு பெண் உங்களைக் கவரக்கூடியவளாக இருப்பினும், நம்பிக்கை கொண்ட ஓர் அடிமைப் பெண் அவளைவிட நிச்சயமாக மேலானவள். (அவ்வாறே) இணை வைத்து வணங்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும்வரை அவர்களுக்கு (நம்பிக்கையாளர்களான பெண்களை) நீங்கள் மணமுடித்துக் கொடுக்காதீர்கள். இணைவைத்து வணங்கும் ஓர் ஆண் உங்களைக் கவரக்கூடியவனாக இருப்பினும், நம்பிக்கை கொண்ட ஓர் அடிமை அவனைவிட நிச்சயமாக மேலானவன். (இணைவைக்கும்) இவர்கள் எல்லாம் நரகத்திற்கு அழைப்பார்கள். ஆனால், அல்லாஹ்வோ தன் அருளால் சொர்க்கத்திற்கும் (தன்) மன்னிப்புக்கும் (உங்களை) அழைக்கிறான். மனிதர்கள் கவனித்து உபதேசம் பெறுவதற்காக தன் வசனங்களை (மேலும்) விவரிக்கிறான்

[222] (நபியே!) மாதவிடாயைப் பற்றியும் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறுவீராக: ‘‘அது (அசுத்தமான) ஓர் இடையூறு. எனவே, மாதவிடாய்க் காலத்தில் பெண்களை விட்டு விலகி, அவர்கள் சுத்தமாகும் வரை அவர்களை அணுகாதீர்கள். (உறவு கொள்ளாதீர்கள்) அப்பெண்கள் சுத்தமாகிவிட்டால் அல்லாஹ் உங்களை ஏவிய முறைப்படி அவர்களிடம் செல்லுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (பாவத்தை விட்டு) வருத்தப்பட்டு மீளுகிறவர்களையும், தூய்மையானவர்களையும் விரும்புகிறான்

[223] உங்கள் மனைவிகள் உங்கள் விளைநிலங்கள் ஆவர். ஆகவே, உங்கள் விளைநிலங்களுக்கு நீங்கள் விரும்பியவாறு சென்று உங்கள் பிற்காலத்திற்கு (வேண்டிய சந்ததிகளை)த் தேடிக் கொள்ளுங்கள். நிச்சயமாக, நீங்கள் அல்லாஹ்வைச் சந்திப்பீர்கள் என்பதையும் உறுதியாக அறிந்து அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். (நபியே! நேர்மையுள்ள) நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி கூறுவீராக

[224] நீங்கள் நன்மை செய்வதற்கோ அல்லது இறைவனை அஞ்சிக் கொள்வதற்கோ அல்லது மனிதர்களுக்கிடையில் சமாதானம் செய்து வைப்பதற்கோ தடையாக ஏற்படக்கூடிய விதத்தில் நீங்கள் செய்யும் சத்தியங்களுக்கு அல்லாஹ்வை இலக்காக்காதீர்கள். அல்லாஹ் (சத்தியத்தை) நன்கு செவியுறுபவன், (மனதில் உள்ளதை) நன்கறிபவன் ஆவான்

[225] (மனதில் நாட்டமின்றி, பொய் இல்லாமல் அடிக்கடி நீங்கள் செய்யும்) வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களை குற்றம் பிடிப்பதில்லை. ஆனால், உங்கள் உள்ளங்கள் (உறுதியுடன்) செய்யும் சத்தியங்களுக்காக, (அதை நீங்கள் நிறைவேற்றவில்லையாயின்) அவன் உங்களை குற்றம் பிடிப்பான். அல்லாஹ் (குற்றங்களை) மிக்க மன்னிப்பவன், அதிகம் பொறுமை உடையவன் ஆவான்

[226] தங்கள் மனைவிகளுடன் சேருவதில்லை என்று சத்தியம் செய்து கொண்டவர்களுக்கு நான்கு மாதங்கள் தாமதிக்க அனுமதியுண்டு. ஆகவே, (அதற்குள்) அவர்கள் மீண்டு(ம் சேர்ந்து) கொண்டால் (அல்லாஹ் அவர்களை மன்னித்திடுவான். ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கருணையுடையவன் ஆவான்

[227] ஆனால், அவர்கள் (தவணைக்குள் சேராமல்) திருமண முறிவை உறுதிப்படுத்திக் கொண்டால், (அத்தவணைக்குப் பின் ‘தலாக்' விவாகரத்து ஏற்பட்டுவிடும்.) நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய சத்தியத்தை) செவியுறுபவன், (அவர்கள் கருதிய ‘தலாக்'கை) நன்கறிபவன் ஆவான்

[228] ‘தலாக்' கூறப்பட்ட பெண்கள், தங்களுக்கு மூன்று மாதவிடாய்கள் வரும் வரை எதிர்பார்த்திருக்கவும். அவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் அல்லாஹ் அவர்களுடைய கர்ப்பப்பையில் (சிசுவை) படைத்திருந்தால் அதை மறைப்பது அவர்களுக்கு ஆகுமானது அல்ல. தவிர (‘ரஜயி'யான தலாக்குக் கூறப்பட்ட) அப்பெண்களின் கணவர்கள் (சேர்ந்து வாழக் கருதி, தவணைக்குள்) சமாதானத்தை விரும்பினால் அவர்களை (மனைவிகளாக)த் திருப்பிக்கொள்ள (அக்கணவர்கள்) மிகவும் உரிமையுடையவர்கள். (ஆகவே, மறுவிவாகமின்றியே மனைவியாக்கிக் கொள்ளலாம். ஆண்களுக்கு) முறைப்படி பெண்களின் மீதுள்ள உரிமைகள் போன்றதே (ஆண்கள் மீது) பெண்களுக்கும் உண்டு. ஆயினும், ஆண்களுக்குப் பெண்கள் மீது (ஓர்) உயர் பதவி உண்டு. அல்லாஹ் மிகைத்தவன், நுண்ணறிவு உடையவன் ஆவான்

[229] (ரஜயியாகிய) இந்தத் தலாக்(கை) இருமுறைதான் (கூறலாம்). ஆகவே, (தவணைக்குள்) முறைப்படி தடுத்து (மனைவிகளாக) வைத்துக் கொள்ளலாம். அல்லது (அவர்கள் மீது ஒரு குற்றமும் சுமத்தாமல்) நன்றியுடன் விட்டுவிடலாம். தவிர, நீங்கள் அவர்களுக்கு (வெகுமதியாகவோ, மஹராகவோ) கொடுத்தவற்றிலிருந்து எதையும் எடுத்துக் கொள்வது உங்களுக்கு ஆகுமானதல்ல. (ஆனால், இருவரும் சேர்ந்து வாழ்க்கை நடத்த முற்பட்டபோதிலும்) அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புக்குள் நிலைத்திருக்க முடியாதென்று இருவருமே பயப்படும் சமயத்தில் (இதற்குப் பஞ்சாயத்தாக இருக்கும்) நீங்களும் அவ்வாறு மெய்யாக பயந்தால் அவள் (கணவனிடமிருந்து) பெற்றுக் கொண்டதில் எதையும் (விவாகரத்து நிகழ) பிரதியாகக் கொடுப்பதிலும் (அவன் அதைப் பெற்றுக் கொள்வதிலும்) அவ்விருவர் மீதும் குற்றமில்லை. இவை அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகளாகும். ஆதலால், நீங்கள் இவற்றை மீறாதீர்கள். எவரேனும் அல்லாஹ்வுடைய வரம்புகளை மீறினால் நிச்சயமாக அவர்கள்தான் அநியாயக்காரர்கள்

[230] (இரண்டு தலாக்குச் சொல்லிய) பின்னர் (மூன்றாவதாகவும்) அவளை அவன் தலாக்குச் சொல்லிவிட்டால் அவனல்லாத (வேறு) கணவனை அவள் மணந்து கொள்ளும் வரை அவள் அவனுக்கு ஆகுமானவளல்ல. (ஆனால், அவனல்லாத வேறொருவன் அவளை திருமணம் செய்து) அவனும் அவளைத் தலாக்குக் கூறிவிட்டால், அதன்பின் (அவளும் முதல் கணவனும் ஆகிய) இருவரும் (சேர்ந்து) அல்லாஹ் ஏற்படுத்திய வரம்பை நிலை நிறுத்திவிடலாம் என்று எண்ணினால் அவர்கள் இருவரும் (திரும்பவும் திருமணம் செய்து கொண்டு மணவாழ்வில்) மீண்டு கொள்வதில் அவர்கள் மீது குற்றமில்லை. இவை அல்லாஹ் ஏற்படுத்திய சட்ட வரம்புகளாகும். அறிந்துகொள்ளும் மக்களுக்காக இவற்றை அவன் விவரிக்கிறான்

[231] (உங்கள்) மனைவிகளை நீங்கள் (ரஜயியான) தலாக்குக் கூறி, அவர்கள் தங்கள் (இத்தாவின்) தவணையிலிருந்தால் (அத்தவணை முடிவதற்குள்) அவர்களை முறைப்படி (மனைவிகளாகவே) நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள். அல்லது (இத்தாவின் தவணையை முடித்துக் கொண்டு) முறைப்படி விட்டுவிடுங்கள். ஆனால், நீங்கள் அநியாயமாகத் துன்புறுத்துவதற்காக அவர்களைத் தடுத்து வைத்துக் கொள்ளாதீர்கள். இவ்விதம் எவரேனும் செய்தால் நிச்சயமாக அவர் தனக்குத்தான்ன தீங்கிழைத்துக் கொண்டவராவார். ஆகவே, அல்லாஹ்வுடைய வசனங்(களில் கூறப்பட்டுள்ள விஷயங்)களைப் பரிகாசமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடையையும், உங்கள் மீது அவன் இறக்கிய வேதத்தையும், ஞானத்தையும் சிந்தித்து (ஆராய்ந்து) பாருங்கள். அவன் இதைக் கொண்டு உங்களுக்கு உபதேசிக்கிறான். அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிவான் என்பதையும் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்

[232] நீங்கள் ‘தலாக்' கூறிய பெண்கள், தங்கள் (இத்தாவின்) தவணையை முழுமைப்படுத்திவிட்ட பின்னர், அவர்கள் தங்கள் (முந்திய) கணவன்மார்களை (அல்லது தாங்கள் விரும்புகின்ற வேறு ஆண்களை) ஒழுங்கான முறையில் திருமணம் செய்வதை தடுக்காதீர்கள் (திருமணம் செய்து கொள்ள விரும்பும்) அவர்கள் தங்களுக்குள் ஒருவர் மற்றவரை திருப்தி கொண்டால். உங்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டிருக்கிறாரோ அவர் இதைக் கொண்டு உபதேசிக்கப்படுகிறார். இது உங்களை மிக தூய்மைப்படுத்துவதாகவும், மிக பரிசுத்தமாக்குவதாகவும் இருக்கிறது. (இதிலுள்ள நன்மைகளை) அல்லாஹ்வே அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்

[233] எவரேனும் (‘தலாக்' கூறப்பட்ட மனைவிகளிடம் தங்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்குத் தலாக்குக் கூறப்பட்ட மனைவிகளைக் கொண்டே) பாலூட்டுவதை முழுமையாக்க விரும்பினால், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு (அவை பிறந்ததிலிருந்து) இரண்டு ஆண்டுகள்வரை முழுமையாகப் பாலூட்டுவார்கள். தவிர (அத்தாய்மார்கள் பாலூட்டும் வரை) அவர்களுக்கு ஆடையும், உணவும் முறைப்படிக் கொடுத்து வருவது குழந்தையின் உரிமையாளரான தந்தை மீது கடமையாகும். ஓர் ஆத்மா அதன் சக்திக்கு மேல் (செய்யும்படியாக) நிர்பந்திக்கப்பட மாட்டாது. (ஆகவே,) குழந்தைக்காக (தனக்கு வேண்டிய உணவின்றியே பாலூட்டும்படி) அதன் தாயையோ அல்லது (சக்திக்கு அதிகமாகக் கொடுக்கும்படி) தந்தையையோ துன்புறுத்தப்பட மாட்டாது. தவிர, இவ்வாறே (குழந்தையின் தந்தை இறந்துவிட்டால் அதை பராமரிப்பது) வாரிசுகள் மீது கடமையாகும். (குழந்தையின் தாய், தந்தை) இருவரும் ஆலோசனை செய்து (குழந்தையின்) பால்குடியை (இரண்டு ஆண்டுகளுக்குள்) மறக்கடிக்க(வோ அல்லது தாயை விட்டுக் குழந்தையைப் பிரித்துவிடவோ) நாடினால் (அவ்வாறு செய்வது) அவர்கள் மீது குற்றமல்ல. மேலும், நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு செவிலித் தாயைக்கொண்டு பாலூட்டக் கருதி (அதுவரை பாலூட்டி வந்த பெற்றதாய்க்கு) நீங்கள் கொடுக்க வேண்டியதை முறைப்படிக் கொடுத்துவிட்டால் (அவ்வாறு செவிலித் தாயைக்கொண்டு பாலூட்டுவது) உங்கள் மீது குற்றமாகாது. (இவற்றில்) நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குகிறான் என்பதையும் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்

[234] உங்களில் எவரேனும் மனைவிகளை விட்டு இறந்தால், (அம்)மனைவிகள் நான்கு மாதம் பத்து நாட்கள் (இத்தா முடிவதை) எதிர்பார்த்திருக்கவும். (இதற்கு ‘மரண இத்தா' என்று பெயர்.) ஆதலால், அவர்கள் தங்கள் (இத்தாவின்) தவணையை முடித்து விட்டால் (அவர்களில் மறுமணம் செய்ய விருப்பமுள்ளவர்கள்) தங்களை ஒழுங்கான முறையில் (அலங்காரம்) ஏதும் செய்து கொள்வதைப் பற்றி குற்றமில்லை. நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிவான்

[235] (இத்தா இருக்கும் ஒரு பெண்ணை நீங்கள் திருமணம் செய்யக் கருதினால் உங்கள்) திருமண விருப்பத்தை நீங்கள் ஜாடையாக அறிவிப்பதினாலோ அல்லது உங்கள் மனதில் மறைவாக வைத்துக் கொள்வதினாலோ உங்கள் மீது குற்றமில்லை. (ஏனெனில்) நீங்கள் (உங்கள் எண்ணத்தை இத்தா முடிந்த பின்) அவர்களிடம் நிச்சயமாகக் கூறுவீர்கள் என்பதை அல்லாஹ் நன்கறிவான். ஆதலால், நீங்கள் கண்ணியமான முறையில் (ஜாடையாகக்) கூறுவதைத் தவிர (இத்தாவுடைய காலத்தில், திருமணத்தைப் பற்றி) அவர்களுடன் இரகசியமாகவும் வாக்குறுதி செய்துகொள்ள வேண்டாம். மேலும், இத்தாவின் தவணை முடிவதற்குள் (அவர்களை) திருமணம் செய்து கொள்ளவும் நாடாதீர்கள். உங்கள் மனதிலுள்ளவற்றை நிச்சயமாக அல்லாஹ் அறிவான் என்பதை நீங்கள் உறுதியாக அறிந்து அவனுக்குப் பயந்து கொள்ளுங்கள். (இத்தகைய எண்ணத்தைத் தவிர்த்துக் கொண்டால்) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், பொறுமையுடையவன் என்பதை அறிந்துகொள்ளுங்கள்

[236] பெண்களின் மஹரைக் குறிப்பிடாமல் (திருமணம் செய்து) அவர்களுடன் நீங்கள் வீடு கூடாமல் தலாக்குக் கூறிவிட்டாலும் உங்கள் மீது குற்றமில்லை. ஆயினும் அவர்களுக்கு ஏதும் கொடுத்துப் பயனடையச் செய்யவும். பணக்காரன் தன் தகுதிக்கேற்பவும், ஏழை தன் சக்திக்கேற்பவும் கண்ணியத்தோடு (அவர்களுக்குக் கொடுத்து) பயனடையச் செய்யவேண்டியது நல்லோர் மீது கடமையாகும்

[237] ஆனால், அவர்களுடைய மஹரை நீங்கள் குறிப்பிட்டிருந்து, அவர்களைத் தொடுவதற்கு முன்னதாகவே தலாக்குக் கூறிவிட்டால் நீங்கள் (மஹராகக்) குறிப்பிட்டிருந்ததில் பாதி அப்பெண்களுக்கு உண்டு. எனினும், யாருடைய கையில் திருமண தொடர்பு இருக்கிறதோ அவன் (கணவன்) அல்லது அவள் (மனைவி) விட்டுக் கொடுத்தாலே தவிர (அதாவது கணவன் முழு மஹரையும் கொடுத்திடலாம் அல்லது மனைவி பாதி மஹரையும் வாங்காமல் விட்டு விடலாம்.) ஆயினும், நீங்கள் (ஆண்கள்) விட்டுக் கொடுப்பது இறையச்சத்திற்கு மிக நெருக்கமானதாகும். ஆதலால், உங்களுக்குள் உபகாரம் செய்து கொள்வதை மறந்து விடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குகிறான்

[238] (நம்பிக்கையாளர்களே!) அனைத்து தொழுகைகளையும் (குறிப்பாக நடுத் தொழுகையையும் (நேரம் தவறாமல்) பேணி(த் தொழுது) கொள்ளுங்கள். மேலும், (தொழுகையில்) அல்லாஹ்வுக்குப் பயந்து மிக்க உள்ளச்சத்தோடு நில்லுங்கள்

[239] ஆனால், (தொழுகையின் நேரம் வந்து, எதிரி போன்ற ஏதேனும் ஒரு காரணத்தால் ஓரிடத்தில் நின்று தொழ) நீங்கள் பயந்தால், நடந்தவர்களாக அல்லது வாகனத்தின் மீது இருந்தவர்களாக (தொழுங்கள்). தவிர (உங்கள் பயம் நீங்கி) நீங்கள் அச்சமற்று விட்டால் நீங்கள் (தொழுகையை) அறியாமலிருந்த சமயத்தில் அல்லாஹ் உங்களுக்கு(த் தொழுகையை)க் கற்றுக் கொடுத்தபடி (தொழுது) அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்

[240] உங்களில் மனைவிகளை விட்டுவிட்டு இறப்பவர்கள் ‘தங்கள் மனைவிகளை (வீட்டைவிட்டு) அப்புறப்படுத்தி விடாது, ஓர் ஆண்டுவரை உணவு உடை போன்ற செலவுகளை வழங்குமாறு' (வாரிசுகளுக்கு) மரண சாசனம் கூறவும். ஆனால், அவர்கள் (தாமாகவே) வெளியில் சென்று தங்களுக்கு முறைப்படி (திருமணம்) ஏதும் செய்து கொண்டா(ல், அ)தனால் உங்கள் மீது குற்றமில்லை. அல்லாஹ் மிகைத்தவன், நுண்ணறிவுடையவன் ஆவான்

[241] இன்னும், தலாக்குக் கூறப்பட்ட பெண்களுக்கு, (அவர்களுடைய இத்தாவின் தவணை வரையிலும்) முறைப்படி (கணவனுடைய சொத்திலிருந்தே) பராமரிப்பு பெறத் தகுதியுண்டு. (அவ்வாறு அவர்களை பராமரிப்பது) இறையச்சமுடையவர்கள் மீது கடமையாகும்

[242] நீங்கள் அறிந்து கொள்வதற்காக தன் வசனங்களை அல்லாஹ் உங்களுக்கு இவ்வாறு தெளிவாக விவரிக்கிறான்

[243] (நபியே!) மரணத்திற்குப் பயந்து தங்கள் வீடுகளை விட்டு ஆயிரக்கணக்கில் வெளியேறியவர்களை நீர் கவனித்தீரா? அல்லாஹ் அவர்களை இறக்கும்படிக் கூறி (இறக்கச் செய்து) பின்னர் அவர்களை உயிர்ப்பித்தான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள்மீது கருணையுள்ளவன் ஆவான். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் நன்றி செலுத்துவது இல்லை

[244] (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (உங்கள் பிரார்த்தனையை) செவியுறுபவன், (உங்கள் கஷ்டத்தை) அறிபவன் என்பதையும் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்

[245] (சிரமத்தில் இருப்பவர்களுக்கு தர்மம் கொடுப்பதன் மூலம்) அழகான முறையில் அல்லாஹ்விற்கு கடன் கொடுப்பவர் யார்? அதை அவன் அவர்களுக்கு பன்மடங்கு அதிகரிக்கும்படிச் செய்வான். அல்லாஹ் (பொருளை சிலருக்குச்) சுருக்கியும் கொடுப்பான். (சிலருக்குப்) பெருக்கியும் கொடுப்பான். இன்னும், அவனிடமே நீங்கள் மீண்டும் கொண்டு வரப்படுவீர்கள்

[246] (நபியே!) இஸ்ராயீலின் சந்ததிகளில் மூஸாவுக்குப் பின் இருந்த தலைவர்களை நீர் கவனிக்கவில்லையா? (அவர்கள்) ‘‘அல்லாஹ்வுடைய பாதையில் நாங்கள் போர் புரிய எங்களுக்கு(த் தலைமை வகிக்கின்ற) ஓர் அரசனை அனுப்பிவைப்பீராக!'' என்று தங்கள் நபியிடம் கூறியபோது, (அவர்) ‘‘போர் செய்வது உங்கள் மீது விதிக்கப்பட்டால் நீங்கள் போர் செய்யாமல் (விலகி) இருந்து விடுவீர்களா?'' என்று கேட்டார். (அதற்கு) அவர்கள் ‘‘எங்கள் மக்களையும், எங்கள் வீடுகளையும் விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டிருக்க, (எங்களை வெளியேற்றிய) அவர்களிடம் அல்லாஹ்வுடைய பாதையில் நாங்கள் போர் செய்யாதிருக்க எங்களுக்கென்ன நேர்ந்தது?'' என்று கூறினார்கள். ஆனால், போர் செய்யும்படி கட்டளையிடப்பட்ட பொழுதோ அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள் போர் செய்யாது) பின் சென்றுவிட்டார்கள். (இத்தகைய) அநியாயக்காரர்களை அல்லாஹ் நன்கறிவான்

[247] மேலும், அவர்களுடைய நபி அவர்களை நோக்கி ‘‘நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசராக அனுப்பியிருக்கிறான்'' என்று கூறியதற்கு (அவர்கள்) ‘‘எங்கள் மீது அரசாலும் உரிமை அவருக்கு எவ்வாறு ஏற்படும். அவரை விட நாங்கள்தான் அரசாட்சி புரிய மிகத் தகுதியுடையவர்கள், (அரசாட்சி புரிவதற்கு அவசியமான) திரளான செல்வத்தையும் அவர் அடையவில்லை'' என்று கூறினார்கள். (அதற்கு அவர்களுடைய நபி) ‘‘நிச்சயமாக அல்லாஹ், உங்கள் மீது (ஆட்சி புரிய) அவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறான். அன்றி (போர்க்) கல்வியிலும், உட(ல் ஆற்ற)லிலிலிலும் உங்களைவிட அவரை அதிகப்படுத்தியும் இருக்கிறான். அல்லாஹ் தான் விரும்பியவர்களுக்கே தன் ஆட்சியை வழங்குவான். அல்லாஹ் (வழங்குவதில்) அதிக விசாலமானவன், (அரசாட்சி புரியத் தகுதியுடையவர்களை) நன்கறிந்தவன்'' என்று கூறினார்

[248] இன்னும், அவர்களுடைய நபி அவர்களை நோக்கி ‘‘அவருடைய அரசுரிமைக்கு அறிகுறியாவது:- உங்கள் இறைவனிடமிருந்து வானவர்கள் சுமந்த வண்ணமாக ஒரு பேழை திண்ணமாக உங்களிடம் வரும். அதில் உங்களுக்கு ஆறுதல் அளிக்கக்கூடியதும், மூஸாவின் சந்ததிகள் மற்றும் ஹாரூனுடைய சந்ததிகள் விட்டுச் சென்றதில் மீதமுள்ளதும் இருக்கும். நீங்கள் உண்மை நம்பிக்கையாளர்களாக இருந்தால் நிச்சயமாக உங்களுக்கு அதில் ஓர் அத்தாட்சி உண்டு'' என்று கூறினார்

[249] பின்னர், தாலூத் படைகளைத் திரட்டிக்கொண்டு புறப்பட்டபொழுது அவர் (தன் இராணுவத்தை நோக்கி) ‘‘நிச்சயமாக (நீங்கள் செல்லும் வழியில்) அல்லாஹ் ஓர் ஆற்றைக் கொண்டு உங்களைச் சோதிப்பான். (உங்களில்) எவர் அதிலிருந்து தனது கைக்கொண்டு ஒரு உள்ளங்கை அளவு நீரைவிட அதிகமாகக் குடிக்கவில்லையோ அவர்தான் என்னைச் சார்ந்தவர். எவர் அதிலிருந்து (அதற்கதிகமாகக்) குடிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்ல'' எனக் கூறினார். ஆனால், (ஆற்றைக் கடக்கவே) அவர்களில் சிலரைத் தவிர (பெரும்பாலோர்) அதிலிருந்து (அதிகமாகக்) குடித்து விட்டார்கள். பின்னர், அவர் (தம்முடன் இருந்த) நம்பிக்கையாளர்களுடன் அதைக் கடந்து சென்ற பொழுது, (அதிகமாகக் குடித்த அவர்கள்) ஜாலூத்துடனும் அவனுடைய இராணுவத்துடனும் ‘‘இன்று (போர் புரிய) எங்களுக்குச் சக்தியில்லை'' என்று கூறி (விலகி) விட்டார்கள். (ஆனால், அவர்களில்) எவர்கள் நிச்சயமாக அல்லாஹ்வைச் சந்திப்போம் என உறுதி கொண்டிருந்தார்களோ அவர்கள் மற்றவர்களை நோக்கி ‘‘(எவ்வளவோ) பெரும் கூட்டத்தினரை எத்தனையோ சிறு கூட்டத்தினர் அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு வெற்றி பெற்று இருக்கிறார்கள், அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்'' என்று கூறினார்கள்

[250] மேலும், அவர்கள் ஜாலூத்தையும் அவனுடைய படைகளையும் (போர்க்களத்தில்) எதிர்த்தபொழுது ‘‘எங்கள் இறைவனே! நீ எங்கள் மீது பொறுமையைச் சொரிவாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்தி வைப்பாயாக! மேலும், நிராகரிக்கும் இந்த மக்கள் மீது (வெற்றி பெற) எங்களுக்கு நீ உதவி புரிவாயாக!'' என்றும் பிரார்த்தனை செய்தார்கள்

[251] ஆதலால், அவர்கள் அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு அவர்களை முறியடித்து விட்டார்கள். இதில் (எதிரிகளின் அரசனாகிய) ஜாலூத்தை (தாலூத்துடைய படையிலிருந்த) தாவூத் வெட்டினார். பின்னர், அவருக்கு அல்லாஹ் ஞானத்தையும், அரசாங்கத்தையும் அளித்து (போர்க்கவசம் செய்வது போன்ற) தான் விரும்பியவற்றை எல்லாம் அவருக்குக் கற்பித்துக் கொடுத்தான். (இவ்வாறு) மனிதர்களில் (தீங்கு செய்யும்) சிலரை மனிதர்களில் (நல்லவர்கள்) சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காவிட்டால் இப்பூமி அழிந்தேயிருக்கும். ஆயினும் நிச்சயமாக அல்லாஹ் உலகத்தார் மீது கருணையுடையவன் ஆவான்

[252] (நபியே!) இவை அல்லாஹ்வுடைய வசனங்களாகும். நாம் அவற்றை உமக்கு உண்மையில் ஓதிக்காண்பிக்கிறோம். தவிர, நிச்சயமாக நீர் (நம்மால்) அனுப்பப்பட்ட தூதர்களில் ஒருவர்தான்

[253] (நம்மால் அனுப்பப்பட்ட) அத்தூதர்கள் (அனைவரும் ஒரே பதவி உடையவர்கள் அல்லர்.) அவர்களில் சிலரை, சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கிறோம். அவர்களில் சிலருடன் அல்லாஹ் (நேரடியாகப்) பேசியிருக்கிறான். அவர்களில் சிலரை (சிலரைவிட) பதவியில் உயர்த்தியும் இருக்கிறான். தவிர, மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்து (ஜிப்ரயீல் என்னும்) ‘பரிசுத்த ஆத்மா'வைக் கொண்டு அவருக்கு உதவி செய்தோம். (ஒருவருக்கொருவர் சண்டையிடக் கூடாதென்று) அல்லாஹ் நாடியிருந்தால் (அவன் அனுப்பிய தூதர்களான) அவர்களுக்குப் பின் வந்தவர்கள், தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னரும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால், அவர்களோ தங்களுக்குள் வேறுபாடு கொண்டு (பிரிந்து) விட்டனர். அவர்களில் (நம்மையும், நம் வசனங்களையும்) நம்பிக்கை கொண்டவர்களும் உண்டு. அவர்களில் (அதை) நிராகரிப்பவர்களும் உண்டு. ஆகவே, அல்லாஹ் நாடியிருந்தால் (இவ்வாறு) அவர்கள் சண்டையிட்டிருக்க மாட்டார்கள். ஆனால், அல்லாஹ் தான் நாடியவற்றையே செய்வான்

[254] நம்பிக்கையாளர்களே! பேரமும், நட்பும், பரிந்துரையும் இல்லாத (நியாயத் தீர்ப்பின்) நாள் வருவதற்கு முன்னர் நாம் உங்களுக்கு வழங்கியிருப்பதிலிருந்து (நன்மையான வழியில்) நீங்கள் செலவு செய்யுங்கள். (இதை) நிராகரிப்பவர்கள்தான் (தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்ளும்) அநியாயக்காரர்கள்

[255] அல்லாஹ் (எவ்வித மகத்துவமுடையவனென்றால்) அவனைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் வேறுயாரும் இல்லவே இல்லை. அவன் (மரணமில்லா) உயிருள்ளவன்; என்றும் நிலையானவன்; அவனை சிறு உறக்கமும் பீடிக்காது; பெரும் நித்திரையும் பீடிக்காது. வானங்கள், பூமியில் உள்ளவை அனைத்தும் அவனுடையதே. அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் (எவருக்காகிலும்) யார்தான் பரிந்து பேசக்கூடும்? அவர்களுக்கு முன் இருப்பவற்றையும் அவர்களுக்குப் பின் இருப்பவற்றையும் அவன் நன்கறிவான். அவனுடைய விருப்பமின்றி அவனுக்குத் தெரிந்தவற்றிலிருந்து எதையும் (மற்றெவரும் தங்கள் அறிவால்) அறிந்துகொள்ள முடியாது. அவனுடைய ‘‘குர்ஸி' வானங்கள், பூமியைவிட விசாலமாய் இருக்கிறது. அவ்விரண்டையும் பாதுகாப்பது அவனுக்குச் சிரமம் இல்லை. மேலும், அவன்தான் மிக உயர்ந்தவன்; மிக மகத்தானவன்

[256] (இஸ்லாம்) மார்க்கத்தில் நிர்ப்பந்தமேயில்லை. ஏனென்றால் வழிகேட்டிலிருந்து (விலகி) நேர்வழி (அடைவது எப்படியென) தெளிவாகி விட்டது. ஆகவே, எவர் ஷைத்தானை நிராகரித்துவிட்டு அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கிறாரோ, அவர் நிச்சயமாக அறுபடாத பலமானதொரு கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ், (அனைத்தையும்) நன்கு செவியுறுபவன், மிக அறிந்தவன் ஆவான்

[257] அல்லாஹ் நம்பிக்கையாளர்களின் பாதுகாவலன் ஆவான். அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் செலுத்துகிறான். ஆனால், நிராகரிப்பவர்களுக்கோ அவர்களின் பாதுகாவலர்கள் ஷைத்தான்கள்தான். அவை அவர்களை ஒளியிலிருந்து நீக்கி இருள்களின் பால் செலுத்துகின்றன. அவர்கள் நரகவாசிகள். மேலும், அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கி விடுவார்கள்

[258] (நபியே!) நீர் ஒருவனை கவனித்தீரா? அவனுக்கு அல்லாஹ் அரசாட்சி கொடுத்ததற்காக அவன் (கர்வம் கொண்டு) இப்ராஹீமிடம் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தான். இப்றாஹீம் ‘‘எவன் உயிர்ப்பிக்கவும் மரணிக்கவும் செய்கிறானோ அவன்தான் என் இறைவன்'' என்று கூறியதற்கு, அவன் ‘‘நானும் உயிர்ப்பிப்பேன், மரணிக்கவும் செய்வேன்'' என்று கூறினான். (அதற்கு) இப்றாஹீம் ‘‘(அவ்வாறாயின்) நிச்சயமாக அல்லாஹ் சூரியனை கிழக்குத்திசையில் உதயமாக்குகிறான். நீ அதை மேற்குத்திசையில் உதயமாக்கு'' எனக் கூறினார். ஆகவே, (அல்லாஹ்வை) நிராகரித்த அவன் (எவ்வித விடையுமளிக்க முடியாமல் திகைத்து) வாயடைப்பட்டான். அல்லாஹ் அநியாயக்கார கூட்டத்திற்கு நேர்வழி காட்டுவதில்லை

[259] (நபியே!) அல்லது ஒரு கிராமத்தை கடந்து சென்றவரைப்போல் (நீர் பார்த்திருக்கின்றீரா? அவர்) அ(க்கிராமத்)திலுள்ள (வீடுகளின்) முகடுகளெல்லாம் இடிந்து (பாழாய்க்) கிடக்க(க் கண்டு) ‘‘இவ்வூர் (மக்கள் இவ்வாறு அழிந்து) இறந்த பின் அல்லாஹ் இதை எப்படி உயிர்ப்பிப்பான்?'' என்று கூறினார். ஆகவே, (அவருடைய சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்காக) அல்லாஹ் அவரை நூறு ஆண்டுகள் வரை மரணித்திருக்கச்செய்து பின்னர் அவரை உயிர்ப்பித்து (அவரை நோக்கி ‘‘இந்நிலையில்) நீர் எவ்வளவு காலம் இருந்தீர்'' எனக்கேட்க ‘‘ஒருநாள் அல்லது ஒரு நாளின் சிறிது பாகம் இருந்தேன்'' எனக் கூறினார். (அதற்கு அவன்) ‘‘அல்ல! நீர் நூறு ஆண்டுகள் (இந்நிலையில்) இருந்தீர். (இதோ!) உமது உணவையும், உமது பானத்தையும் பார்ப்பீராக!. (அவை இதுவரை) கெட்டுப்போகவில்லை. (ஆனால்) உமது கழுதையைப் பார்ப்பீராக. (அது செத்து மக்கி எலும்பாகக் கிடக்கிறது.) இன்னும் உம்மை(ப் போல் சந்தேகிக்கும்) மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாக ஆக்குவதற்காக (கழுதையின்) எலும்புகளையும் நீர் பார்ப்பீராக. எப்படி அவற்றைக் கூடாகச் சேர்த்து அதன் மீது மாமிசத்தை அமைக்கிறோம் என்று கூறி (அவ்வாறே உயிர்ப்பித்துக் காட்டி)னான். (இவை அனைத்தும்) அவர் முன் தெளிவாக நடைபெற்றபோது “நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக பேராற்றலுடையவன் என்பதை நான் உறுதியாக அறிந்து கொண்டேன்'' என்று அவர் கூறினார்

[260] இப்றாஹீம் (இறைவனை நோக்கி), “என் இறைவனே! இறந்தவர்களை நீ எப்படி உயிர்ப்பிக்கிறாய். (அதை) நீ எனக்குக் காண்பி'' எனக் கூறியபோது, அவன் (இதை) ‘‘நீர் நம்பவில்லையா?'' என்று கேட்டான். (அதற்கு) அவர் ‘‘நான் நம்பியே இருக்கின்றன். ஆயினும், (அதை என் கண்ணால் கண்டு) என் உள்ளம் திருப்தியடைவதற்காக (அதைக் காண்பி)'' எனக் கூறினார். (அதற்கவன்) ‘‘நான்கு பறவைகளைப் பிடித்து நீர் அவற்றைப் பழக்கி, பின்னர் (அவற்றைத் துண்டு துண்டாக ஆக்கி) அவற்றில் ஒவ்வொரு பாகத்தை ஒவ்வொரு மலையின் மீதும் வைத்துவிட்டு (நடுவில் இருந்துகொண்டு) அவற்றை நீர் கூப்பிடுவீராக. அவை உம்மிடம் பறந்து வந்து சேரும் (எனக் கூறி, அவ்வாறு செய்து காண்பித்து) ‘‘நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், மிக்க நுண்ணறிவுடையவன் என்பதையும் நீர் உறுதியாக அறிந்து கொள்வீராக'' என்றான்

[261] (நபியே!) அல்லாஹ்வுடைய பாதையில் தங்கள் பொருள்களைச் செலவு செய்கிறவர்களுடைய (பொருள்களின்) உதாரணம், ஒரு வித்தின் உதாரணத்தை ஒத்திருக்கிறது. அ(ந்த வித்)து ஏழு கதிர்களைத் தந்தது. ஒவ்வொரு கதிரிலும் நூறு வித்துக்கள் (ஆக, எழுநூறு வித்துக்கள் அந்த ஒரு வித்திலிருந்து) உற்பத்தியாயின. அல்லாஹ், தான் விரும்பியவர்களுக்கு (இதை மேலும்,) இரட்டிப்பாக்குகிறான். ஏனெனில், அல்லாஹ் (வழங்குவதில்) மிக விசாலமானவன், நன்கறிந்தவன்

[262] எவர்கள் தங்கள் பொருள்களை அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்து (அப்பொருளை வாங்கியவனுக்குத்) தாங்கள் அதைக் கொடுத்ததற்காக இகழ்ச்சியையும், துன்பத்தையும் (அதனோடு) சேர்க்கவில்லையோ அவர்களுக்குரிய கூலி அவர்களின் இறைவனிடம் அவர்களுக்குண்டு. மேலும், அவர்களுக்கு ஒரு பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்

[263] (தர்மம் செய்து அதை வாங்கியவனுக்குத்) துன்பம் தொடரும்(படியாகச் செய்யும்) தர்மத்தைவிட (அன்புடன் கூறும்) இன்சொல்லும், மன்னிப்பும் மிக மேலாகும். அல்லாஹ் எத்தேவையுமற்றவன், மிக்க பொறுமையாளன் ஆவான்

[264] நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பாமல் மக்கள் காண்பதற்காக தன் பொருளை செலவு செய்(து வீணாக்கு)பவனைப் போல (நீங்கள் மனமுவந்து வழங்கும்) உங்கள் தர்மங்களை(ப் பெற்றவனுக்கு முன்னும் பின்னும்) சொல்லி காண்பிப்பதாலும் துன்புறுத்துவதாலும் (அதன் பலனை) பாழாக்கி விடாதீர்கள். இவனின் உதாரணம், ஒரு வழுக்கைப் பாறையை ஒத்திருக்கிறது. அதன் மீது மண்படிந்தது. எனினும், ஒரு பெரும் மழை பொழிந்து, அதை(க் கழுவி) வெறும் பாறையாக்கி விட்டது. (இவ்வாறே அவன் செய்த தானத்தை அவனுடைய பெருமை அழித்துவிடும்.) ஆகவே, அவர்கள் (தானம்) செய்ததில் இருந்து ஒரு பலனையும் (மறுமையில்) அடையமாட்டார்கள். மேலும், அல்லாஹ் (தன்னை) நிராகரிக்கும் கூட்டத்தை (அவர்களின் தீயச் செயல்களின் காரணமாக) நேரான வழியில் செலுத்தமாட்டான்

[265] எவர்கள் தங்கள் பொருள்களை அல்லாஹ்வுடைய திருப்பொருத்தத்தை நாடியும் தங்கள் உள்ளங்களில் (இறைநம்பிக்கையை) உறுதிப்படுத்துவதற்காகவும் செலவு செய்கிறார்களோ அவர்களுடைய (தர்மத்திற்கு) உதாரணம், உயர்ந்த பூமி(யாகிய மலை) மீதுள்ள ஒரு தோட்டத்தை ஒத்திருக்கிறது. அதில் ஒரு பெரும் மழை பெய்தால் இரு மடங்கு பலனைத் தருகிறது. பெரும் மழை பெய்யாவிட்டாலும் சிறு தூறலே அதற்குப் போதுமானது. மேலும், அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன் ஆவான்

[266] உங்களில் யார்தான் (இதை) விரும்புவார்: ஒருத்தருக்கு பேரீச்சை மற்றும் திராட்சைகளின் ஒரு தோப்பு இருக்கிறது. அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கின்றன. அதிலிருந்து எல்லா வகை கனிவர்க்கங்களும் அவருக்குக் கிடைக்கின்றன. முதுமை அவரை அடைந்தது. (சம்பாதிக்க) இயலாத பல சிறு குழந்தைகளும் அவருக்கு இருக்கின்றனர். (இந்த நிலைமையில்) நெருப்புடன் கூடிய புயல் காற்று அடித்து அதை எரித்துவிட்டது. (இத்தகைய நிலைமையை யார்தான் விரும்புவார்?) நீங்கள் ஆராய்ந்து நல்லுணர்ச்சி பெறுவதற்காக, அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு (உதாரணங்களைக் கொண்டு) இப்படி தெளிவுபடுத்துகிறான்

[267] நம்பிக்கையாளர்களே! (தர்மம் செய்யக் கருதினால்) நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும், நாம் உங்களுக்குப் பூமியிலிருந்து வெளியாக்கிய (தானியம், கனிவர்க்கம் ஆகிய)வற்றிலிருந்தும் நல்லவற்றையே (தர்மமாக) செலவு செய்யுங்கள். அவற்றில் கெட்டவற்றைக் கொடுக்க விரும்பாதீர்கள். (ஏனென்றால், கெட்டுப்போன பொருள்களை உங்களுக்கு ஒருவர் கொடுத்தால்) அவற்றை நீங்கள் (வெறுப்புடன்) கண் மூடியவர்களாகவே தவிர வாங்கிக்கொள்ள மாட்டீர்களே! (ஆகவே, நீங்கள் விரும்பாத பொருள்களை பிறருக்கு தர்மமாகக் கொடுக்காதீர்கள்.) நிச்சயமாக அல்லாஹ் எத்தேவையுமற்றவன், மிக்க புகழுடையவன் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்துகொள்ளுங்கள்

[268] (நீங்கள் தர்மம் செய்தால்) ஷைத்தான் உங்களுக்கு வறுமையைக் கொண்டு பயங்காட்டி மானக்கேடான (கஞ்சத்தனத்)தைச் செய்யும்படி உங்களைத் தூண்டுவான். ஆனால், அல்லாஹ்வோ (நீங்கள் தர்மம் செய்தால்) தன் மன்னிப்பையும், செல்வத்தையும் (உங்களுக்குத் தருவதாக) வாக்களிக்கிறான். மேலும், அல்லாஹ் (வழங்குவதில்) மிக்க விசாலமானவன், நன்கறிந்தவன் ஆவான்

[269] (அல்லாஹ்) தான் விரும்பியவர்களுக்கே ‘ஹிக்மா' (ஞானம், நுண்ணறி)வை கொடுக்கிறான். ஆதலால், எவர் ஹிக்மாவைக் கொடுக்கப் பெறுகிறாரோ அவர் நிச்சயமாக பல நன்மைகளைப் பெற்றுவிடுவார். ஆயினும் (இந்த நுண்ணறிவு, ஞானத்தைக்கொண்டு) அறிவாளிகளைத் தவிர (மற்றெவரும்) உணர்வு பெற மாட்டார்கள்

[270] (நன்மைக்காக உங்கள்) பொருளிலிருந்து நீங்கள் என்ன செலவு செய்தபோதிலும் அல்லது நீங்கள் என்ன நேர்ச்சை செய்த போதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிகிறான். மேலும், (நேர்ச்சை செய்தபின் அதை நிறைவேற்றாத) அநியாயக்காரர்களுக்கு உதவி செய்பவர்கள் (ஒருவருமே) இல்லை

[271] (நீங்கள் செய்யும்) தர்மங்களை நீங்கள் வெளிப்படையாக செய்தால் அதுவும் நன்றே. (ஏனெனில், அது பிறரையும் தர்மம் செய்யும்படி தூண்டும்.) ஆயினும், அதை நீங்கள் மறைத்தே கொடுப்பது, அதுவும் அதை ஏழைகளுக்குக் கொடுப்பது உங்களுக்கு மிகவும் நன்மை (பயக்கும்). மேலும், அது (அதாவது இருவகை தர்மமும்) உங்கள் பாவங்களுக்குப் பரிகாரமாகவும் ஆகும். நீங்கள் செய்யும் (வெளிப்படையான மற்றும்) மறைவான அனைத்தையும் அல்லாஹ் நன்கறிவான்

[272] (நபியே! மனிதர்களுக்கு நேரான வழியை அறிவிப்பதுதான் உங்கள் கடமை.) நேரான வழியில் அவர்களைச் செலுத்துவது உங்கள் கடமையல்ல. ஆயினும், அல்லாஹ், தான் நாடியவர்களையே நேரான வழியில் செலுத்துகிறான். (நம்பிக்கையாளர்களே!) நல்லதிலிருந்து நீங்கள் எதை செலவு செய்தபோதிலும் அது உங்களுக்கே (நன்மையாக அமையும்). அல்லாஹ்வின் முகத்தைத் தேடுவதற்கே தவிர, (பெருமைக்காக) நீங்கள் (எதையும்) செலவு செய்யாதீர்கள். (பெருமையை நாடாமல்) நன்மைக்காக எதைச் செலவு செய்தபோதிலும் அதன் கூலியை நீங்கள் முழுமையாக அடைவீர்கள், (அதில்) உங்களுக்கு அநீதி இழைக்கப்படமாட்டாது

[273] (நம்பிக்கையாளர்களே!) சில ஏழைகள் இருக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்காகவே தங்களை (முற்றிலும் அர்ப்பணம் செய்து) ஒதுக்கிக் கொண்டதால் (தங்கள் சொந்த வாழ்விற்குத் தேடக்கூட) பூமியில் நடமாட சாத்தியப்படாதவர்களாக இருக்கின்றனர். (மேலும், அவர்கள்) யாசிக்காததால் (அவர்களின் வறுமை நிலையை) அறியாதவர்கள் அவர்களை செல்வந்தர்களென எண்ணிக் கொள்கின்றனர். அவர்களுடைய (வறுமையின்) அடையாளங்(களாகிய ஆடை, இருப்பிடம் ஆகியவை)களைக் கொண்டு நீங்கள் அவர்களை அறிந்து கொள்ளலாம். அவர்கள் மனிதர்களிடத்தில் வருந்தியும் கேட்க மாட்டார்கள். (இத்தகைய ஏழைகளுக்கு) நீங்கள் நல்லதில் இருந்து எதைச் செலவு செய்தபோதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறி(ந்து அதற்குரிய கூலியை உங்களுக்குத் தரு)வான்

[274] (நம்பிக்கையாளர்களே!) எவர்கள் தங்கள் பொருள்களை (பிறருக்கு உதவிடும் நோக்கில்) இரவிலும், பகலிலும், இரகசியமாகவும், வெளிப்படையாகவும் செலவு செய்கிறார்களோ அவர்களுக்குரிய கூலி அவர்களின் இறைவனிடம் அவர்களுக்கு உண்டு. தவிர, அவர்களுக்கு (மறுமையில்) எவ்வித பயமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்

[275] வட்டி (வாங்கித்) தின்பவர்கள் ஷைத்தான் பிடித்துப் பித்தம் கொண்டவர்கள் எழும்புவது போலன்றி (வேறு விதமாக மறுமையில்) எழும்பமாட்டார்கள். காரணமாவது: ‘‘வட்டியைப் போலவே நிச்சயமாக வணிகமும் இருக்க, அல்லாஹ் வணிகத்தை ஆகுமாக்கி வைத்து வட்டியை (ஏன்) தடுத்துவிட்டான்?'' என்று அவர்கள் (பரிகாசமாகக்) கூறியதுதான். (வட்டி வாங்கக்கூடாது என்று) இறைவனிடமிருந்து வந்த அறிவுரைப்படி யாராவது (உங்களில் அதை விட்டு) விலகிக் கொண்டால் (அதற்கு) முன் (அவர் வாங்கிச்) சென்றுபோனது அவருக்குரியதே. (இதற்கு முன் வட்டி வாங்கிய) அவருடைய விஷயம் அல்லாஹ்விடமிருக்கிறது. (அல்லாஹ்வின் உத்தரவு வந்தபின் வட்டியை விட்டு விட்டதினால் அல்லாஹ் அவரை மன்னித்து விடலாம்.) தவிர, (இந்த உத்தரவு கிடைத்த பின்) எவரேனும் பிறகும் (வட்டியின் பக்கம்) திரும்பினால் அவர்கள் நரகவாசிகளே! அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள்

[276] அல்லாஹ் வட்டியை அழித்து தர்மங்களை வளர்க்கிறான். மேலும், (தன் கட்டளையை) நிராகரித்துக்கொண்டே இருக்கும் பாவிகள் அனைவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை

[277] எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்து, தொழுகையைக் கடைப் பிடித்து, மார்க்க வரியையும் (ஸகாத்து) கொடுத்து வருகிறார்களோ அவர்களுக்குரிய கூலி அவர்களின் இறைவனிடம் அவர்களுக்கு உண்டு. அவர்களுக்கு (மறுமையில்) எவ்வித பயமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்

[278] நம்பிக்கையாளர்களே! நீங்கள் (உண்மையாகவே) நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வுக்குப் பயந்து வட்டியில் (இதுவரை வாங்கியது போக) மீதமிருப்பதை (வாங்காமல்) விட்டுவிடுங்கள்

[279] இப்படி நீங்கள் நடக்காவிட்டால் அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போர் செய்யத் தயாராகி விடுங்கள். ஆயினும், நீங்கள் (வட்டி வாங்கியது பற்றி மனம் வருந்தி திருந்தி) பாவமன்னிப்பு கோரினால், உங்கள் பொருள்களின் அசல் தொகைகள் உங்களுக்கு உண்டு. (எவரும் அதை எடுத்துக்கொண்டு) உங்களுக்கு அநியாயம் செய்துவிட முடியாது. (அவ்வாறே) நீங்களும் (வட்டி வாங்கி) அநியாயம் செய்தவர்களாக மாட்டீர்கள்

[280] மேலும், (கடன் வாங்கியவன் அதைத் தவணைப்படி தீர்க்க முடியாமல்) அவன் சிரமத்திலிருந்தால் (அவனுக்கு) வசதி ஏற்படும் வரை எதிர்பார்த்திருங்கள். மேலும், (இதிலுள்ள நன்மைகளை) நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் (அதை அவனுக்கே) நீங்கள் தானம் செய்து விடுவது (பிறருக்கு தானம் செய்வதைவிட) உங்களுக்கு மிகவும் நன்மையாகும்

[281] மேலும், ஒரு நாளைப் பற்றிப் பயப்படுங்கள். அந்நாளில் (கடன் வாங்கியவர்கள், கொடுத்தவர்கள் ஆக) நீங்கள் (அனைவரும்) அல்லாஹ்விடம் கொண்டு வரப்படுவீர்கள். ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அவை செய்த செயல்களுக்கு முழுமையாகக் (கூலி) கொடுக்கப்படும். மேலும், அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்

[282] நம்பிக்கையாளர்களே! நீங்கள் ஒரு குறித்த தவணையின் மீது (உங்களுக்குள்) கடன் கொடுத்துக் கொண்டால் அதை எழுதிக் கொள்ளுங்கள். தவிர, (கடன் கொடுத்தவனோ அல்லது வாங்கியவனோ) உங்களில் (எவர் எழுதியபோதிலும் அதை) எழுதுபவர் நீதமாகவே எழுதவும். (அவ்விருவரும் எழுத முடியாமல், எழுத்தாளரிடம் கோரினால்,) எழுத்தாளர் (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவருக்கு அறிவித்திருக்கிறபடி, எழுதிக் கொடுக்க மறுக்கவேண்டாம்; அவர் எழுதிக் கொடுக்கவும். தவிர, கடன் வாங்கியவரோ (கடன் பத்திரத்தின்) வாசகத்தைக் கூறவும். (வாசகம் கூறுவதிலும் அதை எழுதுவதிலும்) தன் இறைவனாகிய அல்லாஹ்வுக்குப் பயந்துகொள்ளவும். ஆகவே, அதில் எதையும் குறைத்துவிட வேண்டாம். (வாசகம் கூறவேண்டிய) கடன் வாங்கியவர், அறிவற்றவராக அல்லது (வாசகம் கூற) இயலாத (வயோதிகராக அல்லது சிறு)வராக அல்லது தானே வாசகம் சொல்ல சக்தியற்ற (ஊமை போன்ற)வராகவோ இருந்தால், அவருடைய பொறுப்பாளர் நீதமாக வாசகம் கூறவும். மேலும், நீங்கள் சாட்சியாக (அங்கீகரிக்க)க்கூடிய உங்கள் ஆண்களில் (நேர்மையான) இருவரை (அக்கடனுக்குச்) சாட்சியாக்குங்கள். அவ்வாறு (சாட்சியாக்க வேண்டிய) இருவர் ஆண்களாக இல்லையெனில், ஓர் ஆணுடன் நீங்கள் சாட்சியாக அங்கீகரிக்கக்கூடிய இரு பெண்களை சாட்சியாக்க வேண்டும். ஏனென்றால், (பெண்கள் பெரும்பாலும் கொடுக்கல் வாங்கலை அறியாதவராக இருப்பதனால்) அவ்விரு பெண்களில் ஒருத்தி மறந்து விட்டாலும் மற்ற பெண் அவளுக்கு (அதை) ஞாபகமூட்டுவதற்காக (இவ்வாறு செய்யவும்). சாட்சிகள் (அவர்களுக்குத் தெரிந்தவற்றைக் கூற) அழைக்கப்படும் போது (சாட்சி கூற) மறுக்க வேண்டாம். மேலும், (கடன்) சிறிதாயினும் பெரிதாயினும் (உடனுக்குடன் எழுதிக் கொள்ளவும். அதன்) தவணை (வரும்)வரை அதை எழு(தாமல்) சோம்பல்பட்டு இருந்துவிடாதீர்கள். கடனை ஒழுங்காக எழுதிக் கொள்ளவும். இது அல்லாஹ்விடத்தில் வெகு நீதியானதாகவும், சாட்சியத்திற்கு வெகு உறுதியானதாகவும் (கடனின் தொகையையோ அல்லது தவணையையோ பற்றி) நீங்கள் சந்தேகப்படாமல் இருக்க மிக்க பக்க(பல)மாகவும் இருக்கும். ஆனால், நீங்கள் உங்களுக்கிடையில் ரொக்கமாக நடத்திக் கொள்ளும் வர்த்தகமாயிருந்தால் அதை நீங்கள் எழுதிக் கொள்ளாவிட்டாலும் அதனால் உங்கள் மீது குற்றமில்லை. ஆயினும், (ரொக்கமாக) நீங்கள் வர்த்தகம் செய்து கொண்ட போதிலும் அதற்கும் சாட்சி ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! மேலும், (தவறாக எழுதுமாறு) எழுத்தாளரையோ (பொய் கூறும்படி) சாட்சியையோ துன்புறுத்தக் கூடாது. (அவ்வாறு) நீங்கள் துன்புறுத்தினால் நிச்சயமாக அது உங்களுக்குப் பெரும் பாவமாகும். ஆதலால், அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். அல்லாஹ் (கொடுக்கல் வாங்கலைப் பற்றிய தன் சட்டங்களை) உங்களுக்கு (இப்படியெல்லாம்) கற்றுக் கொடுக்கிறான். மேலும், அல்லாஹ் அனைத்தையும் மிக அறிந்தவன் ஆவான்

[283] மேலும், நீங்கள் பிரயாணத்திலிருந்து (அது சமயம் கொடுக்கல் வாங்கல் செய்ய அவசியம் ஏற்பட்டு) எழுத்தாளரையும் நீங்கள் பெறாவிட்டால் (கடன் பத்திரத்திற்குப் பதிலாக) அடமானமாக (ஏதேனும் ஒரு பொருளைப்) பெற்றுக் கொள்ளுங்கள். (இதில்) உங்களில் ஒருவர் (ஈடின்றிக் கடன் கொடுக்கவோ விலை உயர்ந்த பொருளை சொற்பத் தொகைக்காக அடமானம் வைக்கவோ) ஒருவரை நம்பினால், நம்பப்பட்டவர் தன்னிடம் இருக்கும் அடமானத்தை (ஒழுங்காக)க் கொடுத்து விடவும். மேலும், தன் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு (மிகவும்) பயந்து (நீதமாக நடந்து) கொள்ளவும். தவிர, (அடமானத்தை எவரேனும் மோசம் செய்யக் கருதினால் உங்கள்) சாட்சியத்தை நீங்கள் மறைக்கவேண்டாம். எவரேனும் அதை மறைத்தால், அவருடைய உள்ளம் நிச்சயமாக பாவத்திற்குள்ளாகி விடுகிறது. (மனிதர்களே!) நீங்கள் செய்யும் அனைத்தையும் அல்லாஹ் நன்கறிவான்

[284] (ஏனென்றால்) வானங்களிலும், பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அல்லாஹ்வுக்கு உரியனவே! உங்கள் மனதில் உள்ளவற்றை நீங்கள் வெளியிட்டாலும் அல்லது மறைத்துக் கொண்டாலும் அவற்றைப் பற்றியும் அல்லாஹ் உங்களைக் கேள்வி கேட்பான். அவன் விரும்பியவர்களை மன்னிப்பான்; விரும்பியவர்களை வேதனை செய்வான். மேலும், அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக பேராற்றலுடையவன் ஆவான்

[285] (மனிதர்களே! நம்) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பட்ட (வேதத்)தை மெய்யாகவே நம்பிக்கை கொள்கிறார். (அவ்வாறே மற்ற) நம்பிக்கையாளர்களும் (நம்பிக்கை கொள்கின்றனர். இவர்கள்) அனைவரும் அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொள்கின்றனர். தவிர, ‘‘அவனுடைய தூதர்களில் எவரையும் (தூதர் அல்ல என்று) நாங்கள் பிரித்து (நிராகரித்து)விட மாட்டோம்'' என்றும், ‘‘(இறைவனே! உன் வேத வசனங்களை) நாங்கள் செவியுற்றோம். (உன் கட்டளைக்கு) நாங்கள் கீழ்ப்படிந்தோம். எங்கள் இறைவனே! நாங்கள் உனது மன்னிப்பைக் கோருகிறோம். உன்னிடம்தான் நாங்கள் சேர வேண்டியதிருக்கிறது'' என்றும் கூறுகிறார்கள்

[286] அல்லாஹ் ஓர் ஆத்மாவை அதன் சக்திக்கு மேல் நிர்ப்பந்திப்பதில்லை. அவை தேடிக் கொண்ட நன்மை அவற்றுக்கே (பயனளிக்கும்). அவை தேடிக்கொண்ட தீமை அவற்றுக்கே (கேடு விளைவிக்கும்). ‘‘எங்கள் இறைவனே! நாங்கள் (எங்கள் கடமைகளைச் செய்ய) மறந்து விட்டாலும் அல்லது அதில் தவறிழைத்துவிட்டாலும் அதைப் பற்றி நீ எங்களை (குற்றம்) பிடிக்காதே! எங்கள் இறைவனே! நீ எங்கள் மீது (கடினமான கட்டளைகளை விதித்து) பளுவான சுமையை சுமத்திவிடாதே. எங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது (கடினமான கட்டளைகளை) நீ சுமத்தியவாறு (சுமத்தாதே!). எங்கள் இறைவனே! நாங்கள் தாங்க முடியாத சிரமங்களை எங்கள் மீது சுமத்திவிடாதே! எங்கள் (குற்றங்களை) அழிப்பாயாக! எங்களை மன்னிப்பாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீதான் எங்கள் பாதுகாவலன்! ஆகவே, (உன்னை) நிராகரிக்கும் கூட்டங்கள் மீது (வெற்றிபெற) நீ எங்களுக்கு உதவி புரிவாயாக

ஆலு இம்ரான்

Surah 3

[1] அலிஃப் லாம் மீம்

[2] அல்லாஹ், அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு எவனுமில்லை. அவன் நிரந்தரமானவன்; என்றும் நிலையானவன்

[3] (நபியே!) இதற்கு முன்னுள்ள (வேதங்கள் யா)வற்றையும் உறுதிப்படுத்துகின்ற (முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை அவன்தான் உம்மீது இறக்கிவைத்தான். இதற்கு முன்னரும் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டியாக இருந்த தவ்றாத்தையும் இன்ஜீலையும் அவனே இறக்கிவைத்தான்

[4] (மேலும், நன்மை தீமைகளைப்) பிறித்தறிவிக்கக்கூடிய (மற்ற)வற்றையும் அருள் புரிந்திருக்கிறான். ஆகவே, எவர்கள் அல்லாஹ்வுடைய (அவ்)வசனங்களை நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக கடினமான வேதனையுண்டு. அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவன், (தீயவர்களைத்) தண்டிப்பவன்

[5] நிச்சயமாக பூமியிலோ, வானத்திலோ (உள்ள) எதுவும் அல்லாஹ்வுக்கு மறைந்ததல்ல

[6] அவன்தான் கர்ப்பப்பைகளில் தான் விரும்பியவாறு உங்களை (ஆணாக, பெண்ணாகவோ) உருவம் அமைக்கிறான். (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனுமான அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறுயாருமில்லை

[7] (நபியே!) அவனே இவ்வேதத்தை(யும்) உம் மீது இறக்கிவைத்தான். இதில் முற்றிலும் தெளிவான பொருள் கொண்ட வசனங்களும் இருக்கின்றன. இவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மேலும், (உங்களுக்கு) முழுமையான பொருள் தெரியமுடியாத வசனங்களும் இருக்கின்றன. எவர்களுடைய உள்ளங்களில் மாறுபாடு இருக்கிறதோ அவர்கள் தெளிவற்ற பொருள்களுடைய வசனங்களையே தேடிப் பின்பற்றுவார்கள். குழப்பத்தை உண்டுபண்ணக் கருதியும் அதை (தங்களின் தவறான நோக்கத்திற்கேற்ப) மாற்றுவதற்காகவும் இவ்வாறு செய்கின்றனர். ஆயினும், இதன் உண்மைக் கருத்தை அல்லாஹ்வைத் தவிர ஒருவரும் அறிய மாட்டார். உறுதிமிக்க கல்விமான்களோ (அதன் கருத்து தங்களுக்கு முழுமையாக விளங்காவிட்டாலும்) இதையும் நாங்கள் நம்பிக்கை கொண்டோம். (இவ்விருவகை வசனங்கள்) அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான் என்று கூறுவார்கள். அறிவுடையவர்களைத் தவிர மற்ற எவரும் (இவற்றைக் கொண்டு) நல்லுபதேசம் அடையமாட்டார்கள்

[8] (மேலும், அவர்கள்) ‘‘எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேரான வழியை அறிவித்ததன் பின்னர் எங்கள் உள்ளங்கள் (அதில் இருந்து) தவறி விடுமாறு செய்யாதே. உன் (அன்பான) அருளையும் எங்களுக்கு அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெரும் கொடையாளி

[9] ‘‘எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ ஒரு நாளில் மனிதர்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பாய். அ(ந்நாள் வருவ)தில் சந்தேகமேயில்லை. (ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் (தன்) வாக்குறுதியில் தவறுபவனல்ல'' (என்று கூறுவார்கள்)

[10] நிச்சயமாக எவர்கள் (அந்நாளை) நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு (அந்நாளில்) அவர்களுடைய செல்வங்களும், அவர்களுடைய சந்ததிகளும், அல்லாஹ்வி(னுடைய வேதனையி)லிருந்து எதையும் அறவே தவிர்த்துவிட முடியாது. இவர்கள்தான் (உண்மையாகவே) நரகத்தின் எரிகட்டைகள்

[11] (இவர்களின் நிலை) ஃபிர்அவ்னைச் சார்ந்தவர்கள் மற்றும் அவர்களுக்கு முன் இருந்தவர்களின் நிலை போன்று உள்ளது. அவர்களும் நம் வசனங்களைப் பொய்யாக்கினார்கள். ஆதலால், அல்லாஹ் அவர்களின் (இப்)பாவங்களின் காரணமாக அவர்களை தண்டித்தான். அல்லாஹ் தண்டிப்பதில் மிகக் கடுமையானவன் ஆவான்

[12] எவர்கள் இவ்வேதத்தை நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு (நபியே!) நீர் கூறுவீராக: ‘‘அதிசீக்கிரத்தில் நீங்கள் வெற்றி கொள்ளப்படுவீர்கள். மேலும், (மறுமையில்) நரகத்தில் சேர்க்கப்படுவீர்கள். அது மிகக்கெட்ட தங்குமிடமாகும்

[13] (பத்ரு போர்க்களத்தில்) சந்தித்த இரு சேனைகளில் மெய்யாகவே உங்களுக்கு ஓர் அத்தாட்சி இருந்தது. (ஒன்று) அல்லாஹ்வின் பாதையில் போர் புரியும் கூட்டம், மற்றொரு கூட்டத்தினர் நிராகரிப்பவர்கள். (நிராகரிப்பவர்கள் ஆகிய) இவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர்களை தங்களைவிட இரு மடங்காக(த் தங்கள்) கண்ணால் கண்டனர். அல்லாஹ், தான் விரும்பியவர்களைத் தன் உதவியைக் கொண்டு (இவ்வாறு) பலப்படுத்துகிறான். (படிப்பினை பெறும்) பார்வையுடையவர்களுக்கு நிச்சயமாக இதில் ஒரு (நல்ல) படிப்பினை இருக்கிறது

[14] பெண்கள், ஆண் பிள்ளைகள், தங்கம், வெள்ளிகளின் பெரும் குவியல்கள், உயர்ந்த குதிரைகள் (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடைகள், பயிர் நிலங்கள் ஆகியவற்றை விரும்புவது மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது. எனினும் இவை (அனைத்தும் நிலையற்ற) இவ்வுலக வாழ்க்கையின் (அற்ப) இன்பங்களே! அல்லாஹ்விடத்திலோ (நிலையான) அழகிய தங்குமிடமுண்டு

[15] (நபியே! மனிதர்களை நோக்கி) நீர் கூறுவீராக: ‘‘இவற்றைவிட மேலானதொன்றை நான் உங்களுக்கு அறிவிக்கவா? (இறைவனுக்குப்) பயந்து நடக்கிறவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் சொர்க்கங்கள் உண்டு. அவற்றில் நீரருவிகள் (தொடர்ந்து) ஓடிக்கொண்டேயிருக்கும். அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள். (அங்கு அவர்களுக்குப்) பரிசுத்தமான மனைவிகளும் உண்டு. இன்னும், அல்லாஹ்வின் திருப்பொருத்தமும் கிடைக்கும். அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குபவன் ஆவான்

[16] இவர்கள் (தங்கள் இறைவனை நோக்கி) ‘‘எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன்னை) நம்பிக்கை கொள்கிறோம். ஆதலால், நீ எங்கள் பாவங்களை மன்னித்து (அருள் புரிந்து, நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் எங்களை காப்பாற்றுவாயாக!'' என்றும் (தொடர்ந்து) பிரார்த்தித்துக் கொண்டிருப்பார்கள்

[17] (அவர்கள்) பொறுமையாளர்களாகவும், உண்மை பேசுகிறவர்களாகவும், (இறைவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டு நடப்பவர்களாகவும், தானம் செய்கிறவர்களாகவும், ‘ஸஹர்' நேரங்களில் (வைகறைப் பொழுதில் அல்லாஹ்விடம்) மன்னிப்புக் கோருகிறவர்களாகவும் இருக்கின்றனர்

[18] (நபியே! நீதவானாகிய) அல்லாஹ் சாட்சி கூறுகிறான்: ‘‘நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் வேறுயாரும் (இல்லவே) இல்லை.'' அப்படியே வானவர்களும் (வேதத்தை கற்றுத் தேர்ந்த) கல்வியாளர்களும் சாட்சி கூறுகின்றனர்; (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனுமான அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறுயாருமில்லை

[19] நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாம்தான். வேதம் அளிக்கப்பட்டவர்கள் (‘இதுதான் உண்மையான வேதம்' என்ற) ஞானம் அவர்களுக்கு கிடைத்த பின்னர் தங்களுக்கிடையே உள்ள பொறாமையின் காரணமாகவே (இதற்கு) மாறுபட்டனர். ஆகவே, எவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரிக்கிறார்களோ அவர்களுடைய கணக்கை நிச்சயமாக அல்லாஹ் வெகு சீக்கிரத்தில் எடுப்பான்

[20] (நபியே!) இதற்குப் பின்னும் அவர்கள் உம்முடன் தர்க்கித்தால் (அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நானும் என்னைப் பின்பற்றியவர்களும் அல்லாஹ்வு(டைய கட்டளைகளு)க்கு முற்றிலும் தலை சாய்த்துவிட்டோம் என்று கூறி வேதமளிக்கப்பட்டவர்களையும், (சிலையை வணங்கும்) பாமரர்களையும் நோக்கி ‘‘நீங்களும் (அவ்வாறே) அல்லாஹ்வுக்குத் தலை சாய்க்கிறீர்களா?'' என்று கேட்பீராக. (அவ்வாறே) அவர்களும் தலைசாய்த்தால் நிச்சயமாக அவர்கள் நேரான பாதையை அடைந்து விட்டார்கள். அவர்கள் புறக்கணித்து விட்டால் (அதற்காக நீர் கவலைப்படாதீர். நம் தூதை அவர்களுக்குத்) தெரிவிப்பதுதான் உம் மீது கடமையாக இருக்கிறது. அல்லாஹ் (தன்) அடியார்களை உற்று நோக்குகிறான்

[21] நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்து, நியாயமின்றி இறைத்தூதர்களையும், நீதத்தை ஏவுகின்ற (மற்ற) மனிதர்களையும் கொலை செய்கிறார்களோ அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையைக்கொண்டு (நபியே!) நற்செய்தி கூறுவீராக

[22] இவர்கள் செய்த (நற்) செயல்கள் (அனைத்தும்) இம்மையிலும் மறுமையிலும் (எத்தகைய பலனுமின்றி, முற்றிலும்) அழிந்துவிட்டன. (மறுமையில்) இவர்களுக்கு உதவி செய்பவர்கள் ஒருவருமில்லை

[23] (நபியே!) வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்ட (யூதர்களாகிய இ)வர்களை நீர் கவனிக்கவில்லையா? (அவர்களுக்குள் ஏற்பட்ட விவகாரத்தைத் தீர்த்து வைக்க அவர்களிடமுள்ள) அல்லாஹ்வின் வேதத்தின் மூலமே தீர்ப்பளிக்க அவர்கள் அழைக்கப்பட்டபோது, அவர்களில் ஒரு பிரிவினர் இதைப் புறக்கணித்து விலகிக் கொண்டார்கள்

[24] இதன் காரணம்: ‘‘சில நாள்களைத் தவிர நரகத்தின் நெருப்பு நிச்சயமாக எங்களைத் தீண்டாது'' என்று அவர்கள் கூறிக்கொண்டிருப்பதுதான். மேலும், தங்கள் மார்க்க (விஷய)த்தில் பொய்யாகக் கற்பனை செய்து கூறி வந்ததும் அவர்களையே ஏமாற்றிவிட்டது

[25] (நபியே!) சந்தேகமற்ற ஒரு (விசாரணை) நாளில் நாம் அவர்களை ஒன்று சேர்த்து (அவர்களுடைய) ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அதன் செயலுக்குத் தக்க பலன் முழுமையாக அளிக்கப்பட்டால் (அவர்களின் நிலைமை) எப்படி இருக்கும்? அவர்கள் (தங்கள் பிரதிபலனை அடைவதில்) சிறிதும் அநியாயம் செய்யப்படமாட்டார்கள்

[26] (நபியே! பிரார்த்தித்து) கூறுவீராக: ‘‘எங்கள் அல்லாஹ்வே! எல்லா தேசங்களுக்கும் அதிபதியே! நீ விரும்பியவர்களுக்கு ஆட்சியைக் கொடுக்கிறாய். நீ விரும்பியவர்களிடமிருந்து ஆட்சியை நீக்கி விடுகிறாய். நீ விரும்பியவர்களை கண்ணியப்படுத்துகிறாய். நீ விரும்பியவர்களை இழிவுபடுத்துகிறாய். நன்மைகள் அனைத்தும் உன் கையில் இருக்கின்றன. நிச்சயமாக நீ அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன் ஆவாய்

[27] நீதான் இரவைப் பகலில் நுழையவைக்கிறாய். நீதான் பகலை இரவில் நுழையவைக்கிறாய். இறந்ததிலிருந்து உயிருள்ளதை வெளியாக்குவதும் நீயே! உயிருள்ளதிலிருந்து இறந்ததை வெளியாக்குவதும் நீயே! நீ விரும்பியவர்களுக்கு கணக்கின்றியே அளிக்கிறாய்

[28] நம்பிக்கையாளர்கள் (தங்களைப் போன்ற) நம்பிக்கையாளர்களை விடுத்து நிராகரிப்பவர்களைத் தங்களுக்குப் பாதுகாவலர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டாம். அவர்களிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காகவே தவிர எவரேனும் இவ்வாறு செய்தால் அவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் எத்தகைய சம்பந்தமுமில்லை. அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு (அச்சமூட்டி) எச்சரிக்கை செய்கிறான். (நீங்கள்) அல்லாஹ்விடம்தான் (இறுதியாகச்) செல்ல வேண்டியதிருக்கிறது

[29] (நபியே!) கூறுவீராக: உங்கள் மனங்களில் நீங்கள் மறைத்துக் கொண்டாலும் அல்லது அதை வெளிப்படுத்தினாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிவான். (இது மட்டிலுமா?) வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும் அவன் அறிகிறான். (அறிவது மட்டுமல்ல) அல்லாஹ் (இவை) அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன்

[30] ஒவ்வோர் ஆத்மாவும் தான் செய்த நன்மைகளையும், தான் செய்த தீமைகளையும் தனக்கு முன் காணும் நாளில் (துக்கித்து) தனக்கும், தான் செய்த தீமைகளுக்கும் இடையில் நீண்ட தூரம் இருந்திருக்க வேண்டுமே? என்று விரும்பும். ஆகவே, அல்லாஹ் உங்களுக்குத் தன்னைப்பற்றி (அச்சமூட்டி) எச்சரிக்கை செய்கிறான். (ஏனென்றால்,) அல்லாஹ் (தன்) அடியார்களிடம் மிக்க இரக்கமுடையவன் ஆவான்

[31] (நபியே! மனிதர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘நீங்கள் மெய்யாகவே அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். உங்களை அல்லாஹ் நேசிப்பான். உங்கள் பாவங்களையும் அவன் மன்னித்து விடுவான். அல்லாஹ் மிக அதிகம் மன்னிப்பவன், பெரும் கருணையாளன் ஆவான்

[32] (நபியே! மேலும்,) கூறுவீராக: ‘‘அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நீங்கள் கீழ்ப்படியுங்கள். நீங்கள் புறக்கணித்தால் நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்களை நேசிப்பதில்லை

[33] நிச்சயமாக அல்லாஹ் ஆதமையும், (அவருக்குப் பின்னர்) நூஹையும் இப்ராஹீமுடைய குடும்பத்தையும், இம்ரானுடைய குடும்பத்தையும் அகிலத்தாரைவிட மேலாக (உயர்வாக) தேர்ந்தெடுத்தான்

[34] அவர்களில் ஒருவர் மற்றவருடைய சந்ததிதான். அல்லாஹ் (அனைத்தையும்) நன்கு செவியுறுபவன், நன்கறிபவன் ஆவான்

[35] இம்ரானுடைய மனைவி (கர்ப்பமானபொழுது ஆண் குழந்தை பெற விரும்பி இறைவனை நோக்கி) ‘‘என் இறைவனே! நிச்சயமாக நான் என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணம் செய்துவிட நேர்ச்சை செய்து கொண்டேன். ஆதலால், (அதை) என்னிடமிருந்து நீ அங்கீகரித்துக் கொள்வாயாக! நிச்சயமாக நீதான் (பிரார்த்தனைகளை) நன்கு செவியுறுபவன், (மனதில் உள்ளவற்றை) நன்கறிபவன்'' என்று (பிரார்த்தித்துக்) கூறியபின்

[36] அவர் (தன் விருப்பத்திற்கு மாறாக) ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தபோது ‘‘என் இறைவனே! நான் ஒரு பெண்ணையே பெற்றேன்'' என்று கூறினார். ஆயினும் (அவர் விரும்பிய) ஆண், இந்தப் பெண்ணைப் போன்றல்ல என்பதை அல்லாஹ்(தான்) நன்கறிவான். (பிறகு இம்ரானின் மனைவி) நிச்சயமாக நான் அதற்கு ‘மர்யம்' எனப் பெயரிட்டேன். அதையும், அதன் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் வஞ்சனைகளி)லிருந்து நீ காப்பாற்ற உன்னிடம் பிரார்த்திக்கிறேன்!'' (என்றார்)

[37] ஆகவே, அவருடைய இறைவன் அதை அன்பாய் அங்கீகரித்து பரிசுத்தமாகவும், அழகாகவும் அதை வளரச் செய்து அதை (வளர்க்க) ஜகரிய்யா பொறுப்பேற்றுக் கொள்ளுமாறும் செய்தான். ஜகரிய்யா அப்பிள்ளை இருந்த மாடத்திற்குள் நுழையும் போதெல்லாம், அவளிடத்தில் (ஏதேனும்) உணவுப் பொருள் இருப்பதைக் கண்டு ‘‘மர்யமே! இது உனக்கு ஏது? (எங்கிருந்து வந்தது?)'' என்று கேட்பார். அதற்கவள் ‘‘இது அல்லாஹ்விடமிருந்துதான் (வருகிறது). ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ், தான் விரும்பியவர்களுக்கு அளவின்றியே உணவளிக்கிறான்'' என்று கூறுவாள்

[38] (அப்பொழுது) ஜகரிய்யா, அவ்விடத்தில் (தனக்காகத்) தன் இறைவனிடம் பிரார்த்தித்து ‘‘என் இறைவனே! உன் புறத்திலிருந்து எனக்கொரு நல்ல சந்ததியை அளிப்பாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனைகளை செவியேற்பவன்'' என்று கூறினார்

[39] ஆகவே, அவர் மாடத்தி(‘மிஹ்ராப்')ல் நின்று தொழுது கொண்டிருந்த சமயத்தில் (அவரை நோக்கி) வானவர்கள் சப்தமிட்டுக் கூறினார்கள்: (ஜகரிய்யாவே!) நிச்சயமாக அல்லாஹ் ‘யஹ்யா' (என்ற ஒரு மக)வை உங்களுக்கு அளிப்பதாக நற்செய்தி கூறுகிறான். அவர் அல்லாஹ்வின் ஒரு வாக்கியத்தை (முன்னறிக்கையை) உண்மைப்படுத்திவைப்பார். (மனிதர்களுக்குத்) தலைவராகவும், (பெண்கள்) இன்பத்தைத் துறந்தவராகவும், நபியாகவும், நல்லொழுக்கம் உடையவராகவும் இருப்பார்

[40] (அதற்கு) ஜகரிய்யா (அல்லாஹ்வை நோக்கி) ‘‘என் இறைவனே! எனக்கு எப்படி சந்ததி உண்டாகும். நிச்சயமாக நானோ முதுமையை அடைந்துவிட்டேன். என் மனைவியோ மலடியாயிருக்கிறாள்'' என்று கூறினார். (அதற்கு இறைவன்) ‘‘இப்படியே (நடைபெறும்). அல்லாஹ், தான் விரும்பியதை (அவசியம்) செய்(தே தீரு)வான்'' என்று கூறினான்

[41] (அதற்கு) ஜகரிய்யா ‘‘என் இறைவனே! இதற்கு எனக்கொரு அத்தாட்சி அளிப்பாயாக'' என்று கேட்டார். அதற்கு (இறைவன்) ‘‘உமக்கு அளிக்கப்படும் அத்தாட்சியாவது மூன்று நாள்கள் வரை ஜாடையாகவே தவிர நீர் மனிதர்களுடன் பேசமாட்டீர். (அந்நாள்களில்) நீர் உமது இறைவனை அதிகமாக நினைத்துக் கொண்டும், காலையிலும் மாலையிலும் அவனைத் துதிசெய்து கொண்டும் இருப்பீராக'' என்று கூறினான்

[42] (நபியே! மர்யமை நோக்கி) வானவர்கள் கூறிய சமயத்தில் ‘‘மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உம்மை தேர்ந்தெடுத்திருக்கிறான். உம்மை பரிசுத்தமாகவும் ஆக்கியிருக்கிறான். உலகத்திலுள்ள பெண்கள் அனைவரையும்விட உம்மை மேன்மையாக்கியும் வைத்திருக்கிறான், (என்றும்)

[43] (ஆகவே,) மர்யமே! நீர் உமது இறைவனுக்கு வழிப்பட்டு குனிந்து (சிரம் பணிந்து) வணங்குபவர்களுடன் நீரும் குனிந்து (சிரம் பணிந்து) வணங்குவீராக!'' (என்று கூறினார்கள்)

[44] (நபியே!) இவை (அனைத்தும் நீர் அறியாத) மறைவான விஷயங்களாகும். இவற்றை நாம் உமக்கு வஹ்யின் மூலம் அறிவிக்கிறோம். மர்யமை (வளர்க்க) யார் பொறுப்பேற்றுக் கொள்வது என்று (அறிய) அவர்கள் தங்கள் எழுது கோல்களை (ஆற்றில்) எறிந்தபோதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை. (இதைப் பற்றி) அவர்கள் தர்க்கித்துக் கொண்டபோதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை

[45] (மேலும், மர்யமை நோக்கி) வானவர்கள் ‘‘மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன் (ஆகுக! என்ற) ஒரு வார்த்தையைக் கொண்டு உமக்கு (ஒரு குழந்தையை அளிக்க) நற்செய்தி கூறுகிறான்'' என்றும் ‘‘அதன் பெயர் அல் மஸீஹ் ஈஸா இப்னு மர்யம்'' என்பதாகும். அவர் இம்மை மறுமையில் மிக்க கம்பீரமானவராகவும், (இறைவனுக்கு) மிக்க நெருங்கியவர்களில் ஒருவராகவும் இருப்பார்'' என்றும் கூறினார்கள்

[46] மேலும், ‘‘அவர் தொட்டிலில் (குழந்தையாக) இருக்கும் பொழுது (தன் தாயின் பரிசுத்தத் தன்மையைப் பற்றியு)ம், (தன் நபித்துவத்தைப் பற்றி) வாலிபத்திலும் மனிதர்களுடன் பேசுவார். தவிர, நல்லொழுக்கமுடையவர்களில் ஒருவராகவும் இருப்பார்'' (என்றும் கூறினார்கள்)

[47] (அதற்கு மர்யம், தன் இறைவனை நோக்கி) ‘‘என் இறைவனே! (மனிதர்களில்) ஒருவருமே என்னைத் தீண்டாதிருக்கும் போது, எனக்கு எவ்வாறு சந்ததி ஏற்பட்டு விடும்?'' என்று கூறினார். (அதற்கு) ‘‘இப்படித்தான், அல்லாஹ் தான் நாடியதை படைக்கிறான். அவன் ஒரு பொருளை (படைக்க) நாடினால் அதை ‘ஆகுக' என அவன் கூறியவுடனே அது ஆகிவிடும்'' என்று கூறினான்

[48] மேலும், அவருக்கு வேதத்தையும் ஞானத்தையும், தவ்றாத்தையும் இன்ஜீலையும் கற்பிப்பான்

[49] இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு (அவரை) ஒரு தூதராகவும் ஆக்குவான் (என்றும் இறைவன் கூறினான். பின்னர், ஈஸா பிறந்து தன் வாலிபத்தை அடைந்து இஸ்ராயீலின் சந்ததிகளிடம் சென்றபொழுது அவர்களை நோக்கிக் கூறியதாவது:) ‘‘நிச்சயமாக நான் உங்கள் இறைவனிடமிருந்து (அனுப்பப்பட்ட ஒரு தூதர். அதற்காக) உங்களுக்கு ஓர் அத்தாட்சி கொண்டு வந்திருக்கிறேன். உங்களுக்காக களிமண்ணிலிருந்து பறவையைப் போல் செய்து அதில் நான் ஊதுவேன். அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு அது (பறக்கும்) பறவையாக ஆகிவிடும். பிறவிக் குருடனையும் வெண் குஷ்டரோகியையும் நான் குணப்படுத்துவேன். அல்லாஹ்வின் அனுமதி கொண்டு மரணித்தோரையும் நான் உயிர்ப்பிப்பேன். நீங்கள் புசித்தவற்றையும், உங்கள் வீட்டில் நீங்கள் சேகரித்து வைத்திருப்பவற்றையும் நான் உங்களுக்கு அறிவிப்பேன். மெய்யாகவே நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் இதில் உங்களுக்கு (திருப்தி அளிக்கக்கூடிய) ஓர் அத்தாட்சி இருக்கிறது (என்றும்)

[50] என் முன்னால் உள்ள தவ்றாத்தை(யும்) நான் உண்மையாக்கி வைத்து (முன்னர்) உங்களுக்கு விலக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு ஆகுமாக்கி வைப்பதற் காகவும் உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் கொண்டு வந்திருக்கிறேன். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து என்னைப் பின்பற்றுங்கள்

[51] நிச்சயமாக அல்லாஹ்தான் என் இறைவனும், உங்கள் இறைவனும் ஆவான். ஆகவே, அவனையே வணங்குங்கள். இதுதான் நேரான வழி'' (என்றும் கூறினார்)

[52] அவர்களில் பலர் (தம்மை) நிராகரிப்பதை ஈஸா உணர்ந்த பொழுது (அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்பவர் யார்?'' எனக் கேட்டார். (அதற்கு) அவருடைய தோழர்கள் ‘‘நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்களுக்கு) உதவி செய்கிறோம். மெய்யாகவே! அல்லாஹ்வை நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம். (ஆதலால்,) நிச்சயமாக நாங்கள் (முஸ்லிம்கள்) முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டோம் என்பதாக நீர் சாட்சி கூறுவீராக' என்று கூறினார்கள்

[53] ‘‘எங்கள் இறைவனே! நீ அருட்செய்த (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம். (உன்) இத்தூதரையும் நாங்கள் பின்பற்றி நடக்கிறோம். ஆதலால், (அவரை) உண்மைப்படுத்தியவர்களுடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக!'' (என்றும் அந்தத் தோழர்கள் பிரார்த்தித்தனர்)

[54] (ஈஸாவை நிராகரித்த) அவர்கள் (அவரைக் கொலை செய்ய) சதி செய்தார்கள். (எனினும், அல்லாஹ் அவரைக் காப்பாற்றி தங்களில் ஒருவனையே அவர்கள் கொலை செய்து விடும்படி) அல்லாஹ் (அவர்களுக்குச்) சதி செய்து விட்டான். அல்லாஹ், சதி செய்பவர்களில் மிக மேலான(சதி செய்ப)வன்

[55] (ஈஸாவை நோக்கி) அல்லாஹ் கூறியதை (அவர்களுக்கு) ஞாபகப்படுத்துவீராக!: ‘‘ஈஸாவே நிச்சயமாக நான் உமக்கு (உமது) ஆயுளை முழுமைப்படுத்துவேன். உம்மை நம்மளவில் உயர்த்திக்கொள்வேன். நிராகரிப்பவர்களி(ன் அவதூறி)லிருந்து உங்களைப் பரிசுத்தமாக்கிவைப்பேன். உங்களைப் பின்பற்றுபவர்களை நிராகரிப்பவர்கள் மீது இறுதி நாள்வரை மேலாக்கியும் வைப்பேன்'' (என்று கூறி, ஈஸாவே! அந்நிராகரிப்பவர்களை நோக்கி, நான் கூறியதாக நீர் கூறுவீராக: ‘‘அல்லாஹ்வாகிய) என்னிடமே நீங்கள் மீண்டும் வருவீர்கள். நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருப்பவற்றைப் பற்றி (அந்நேரத்தில்) நான் உங்களுக்கிடையில் தீர்ப்பளிப்பேன்'' (என்றும் கூறினான்)

[56] ஆகவே, (அவர்களில்) எவர்கள் (உம்மை) நிராகரிக்கிறார்களோ அவர்களை நான் இம்மையிலும் மறுமையிலும் கடினமாக வேதனை செய்வேன். அவர்களுக்கு உதவி செய்பவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்

[57] எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களையும் செய்கிறார்களோ அவர்களின் (நற்)கூலியை அல்லாஹ் அவர்களுக்கு முழுமையாக வழங்குவான். அல்லாஹ் அநியாயக்காரர்களை நேசிப்பதில்லை

[58] (நபியே!) நாம் உம் மீது ஓதிய இவை (இறைவனுடைய) வசனங்களாகவும், ஞான(ம் நிறைந்த) உபதேசங்களாகவும் இருக்கின்றன

[59] நிச்சயமாக அல்லாஹ்விடம் ஈஸாவுக்கு உதாரணம் ஆதமுடைய உதாரணத்தைப் போன்றதே! அவன் அவரை மண்ணால் உற்பத்தி செய்து (மனிதனாக) ‘ஆகு' என்று கூறினான். உடனே (அப்படி) ஆகிவிட்டது

[60] (நபியே! ஈஸாவைப் பற்றி) உமது இறைவனிடமிருந்து கிடைத்த இவ்விஷயங்கள் தான் உண்மையானவை. ஆகவே (இதைப்பற்றி) சந்தேகப்படுபவர்களில் நீரும் (ஒருவராக) ஆகிவிட வேண்டாம்

[61] (நபியே!) இதைப் பற்றி உமக்கு உண்மையான விவரம் கிடைத்த பின்னரும், உம்மிடம் எவரும் தர்க்கித்தால் (அவர்களுக்கு) கூறுவீராக: ‘‘வாருங்கள்! எங்கள் பிள்ளைகளையும், உங்கள் பிள்ளைகளையும், எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும், எங்களையும், உங்களையும் அழைத்து (ஒன்று சேர்த்து) வைத்துக் கொண்டு (ஒவ்வொருவரும் நாம் கூறுவதுதான் உண்மையென) சத்தியம் செய்து (இதற்கு மாறாகக் கூறும்) பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக! என பிரார்த்திப்போம்'' (என்று கூறும்படி கட்டளையிட்டான். இவ்வாறு நபியவர்கள் அழைத்த சமயத்தில் ஒருவருமே இப்படி சத்தியம் செய்ய முன்வரவில்லை)

[62] நிச்சயமாக இதுதான் உண்மை வரலாறு. வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாரும் (இல்லவே) இல்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் (அனைவரையும்) மிகைத்தவன், ஞானமுடையவன் ஆவான்

[63] (நபியே! இதற்குப் பின்னரும் உம்மை நம்பிக்கை கொள்ளாமல்) அவர்கள் புறக்கணிப்பார்களேயானால், நிச்சயமாக அல்லாஹ் (இந்த) விஷமிகளை நன்கறிவான்

[64] (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘வேதத்தை உடையவர்களே! நமக்கும் உங்களுக்கும் ஒரு சமத்துவமான விஷயத்தின் பக்கம் வருவீர்களாக! (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறொன்றையும் வணங்கமாட்டோம். நாம் அவனுக்கு எதையும் இணையாக்கமாட்டோம். நம்மில் ஒருவரும் அல்லாஹ்வைத் தவிர எவரையும் இறைவனாக எடுத்துக் கொள்ளமாட்டோம்'' (என்று கூறுங்கள். நம்பிக்கையாளர்களே! இதையும்) அவர்கள் புறக்கணித்தால் ‘‘நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் (அவன் ஒருவனுக்கே வழிப்பட்டவர்கள்) என்று நீங்கள் சாட்சி கூறுங்கள்!'' என்று நீங்கள் கூறிவிடுங்கள்

[65] வேதத்தையுடையவர்களே! இப்ராஹீமைப் பற்றி (அவர் யூதராகவோ அல்லது கிறிஸ்தவராகவோதான் இருந்தார் என்று) ஏன் வீணே தர்க்கம் செய்து கொள்கிறீர்கள். (யூதர்களுடைய வேதமாகிய) தவ்றாத்தும், (கிறிஸ்தவர்களுடைய வேதமாகிய) இன்ஜீலும் அவருக்கு (வெகு காலத்திற்குப்) பின்னரே அருளப்பட்டன. (இவ்வளவு கூட) நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா

[66] நீங்கள் கொஞ்சம் அறிந்த விஷயத்தில் வீணாக இதுவரை தர்க்கித்துக் கொண்டிருந்தீர்கள். நீங்கள் ஒரு சிறிதும் அறியாத விஷயத்திலும் ஏன் தர்க்கிக்க முன்வந்துவிட்டீர்கள். அல்லாஹ்தான் (இவை அனைத்தையும்) நன்கறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்

[67] இப்றாஹீம் யூதராகவும் இருக்கவில்லை, கிறிஸ்தவராகவும் இருக்கவில்லை. எனினும், இறைவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட நேரான கொள்கையுடைய முஸ்லிமாகவே இருந்தார். மேலும், அவர் இணைவைத்து வணங்குபவராகவும் இருக்கவில்லை

[68] நிச்சயமாக இப்ராஹீமுக்கு மனிதர்களில் நெருங்கியவர் (எவர் என்றால்) அவரைப் பின்பற்றியவர்களும், இந்த நபியும், (இவரை) நம்பிக்கை கொண்டவர்களும்தான். அல்லாஹ் இந்த நம்பிக்கையாளர்களை (நேசித்து) பாதுகாப்பான்

[69] வேதத்தையுடையவர்களில் ஒரு கூட்டத்தார் உங்களை வழி கெடுத்திட விரும்புகிறார்கள். அவர்கள் தங்களையே தவிர (உங்களை) வழி கெடுத்து விட முடியாது. (இதை) அவர்கள் உணர்வதில்லை

[70] வேதத்தையுடையவர்களே! நீங்கள் (பல அத்தாட்சிகளைக்) கண்டதன் பின்னரும், அல்லாஹ்வுடைய வசனங்களை ஏன் நிராகரிக்கிறீர்கள்

[71] வேதத்தையுடையவர்களே! உண்மையை பொய்யுடன் ஏன் கலக்கிறீர்கள். நீங்கள் நன்கறிந்துகொண்டே உண்மையை ஏன் மறைக்கிறீர்கள்

[72] வேதத்தையுடையவர்களில் ஒரு கூட்டத்தினர் (தங்கள் இனத்தாரை நோக்கிக்) கூறுகின்றனர்: ‘‘நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களுக்கு அருளப்பட்ட (இவ் வேதத்)தைக் காலையில் நம்பிக்கை கொண்டு மாலையில் (அதை) நிராகரித்து விடுங்கள். (இதனால் நம்பிக்கைகொண்ட) அவர்களும் (குழப்பமடைந்து தங்கள் நம்பிக்கையிலிருந்து) விலகி விடக்கூடும்'' (என்றும்)

[73] ‘‘உங்கள் மார்க்கத்தைப் பின்பற்றியவர்களைத் தவிர (மற்றெவரையும்) நீங்கள் நம்பாதீர்கள்'' (என்றும் கூறுகின்றனர்). இதற்கு (நபியே!) கூறுவீராக: ‘‘உண்மையான நேர்வழி அல்லாஹ்வின் நேர்வழிதான்.'' (மேலும், அவர்கள் தங்கள் இனத்தாரை நோக்கி) ‘‘உங்களுக்குக் கொடுக்கப்பட்டது போன்று (ஒரு வேதம்) மற்றெவருக்கும் கொடுக்கப்படும் என்பதையோ அல்லது அந்த நம்பிக்கையாளர்கள் உங்கள் இறைவன் முன்பாக தர்க்கித்து உங்களை வெற்றி கொள்வார்கள் என்பதையோ நம்பாதீர்கள்!'' (என்றும் கூறுகின்றனர். அதற்கு நபியே!) கூறுவீராக: ‘‘(வேதம் என்னும்) பெரும்பாக்கியம் நிச்சயமாக அல்லாஹ்வின் கையில்தான் இருக்கிறது. அதை அவன் விரும்பியவர்களுக்கே கொடுக்கிறான். அல்லாஹ் மிக விசாலமானவன், (மனிதர்களின் தகுதியை) நன்கறிந்தவன் ஆவான்

[74] அல்லாஹ் தான் விரும்பியவர்களை தன் அருளுக்குச் சொந்தமாக்கிக் கொள்கிறான். அவன் மகத்தான கொடையுடையவன் ஆவான்

[75] (நபியே!) வேதத்தையுடையவர்களில் சிலர் இருக்கின்றனர். அவர்களிடம் நீர் ஒரு (பொற்) குவியலையே நம்பி ஒப்படைத்தபோதிலும் (ஒரு குறைவுமின்றி) உம்மிடம் திரும்ப செலுத்தி விடுவார்கள். அவர்களில் வேறு சிலரும் இருக்கின்றனர். அவர்களிடம் நீர் ஓர் அற்ப நாணயத்தையே நம்பி ஒப்படைத்தாலும் அதற்காக நீர் (வம்பு செய்து) அவர்கள் (தலை) மேல் நிற்காத வரை அதைத் திரும்பக் கொடுக்கமாட்டார்கள். இதன் காரணம்: (தங்கள் இனம் அல்லாத மற்ற) ‘‘பாமரர் விஷயத்தில் (நாம் என்ன கொடுமை செய்தபோதிலும் அதற்காக) நம்மை குற்றம் பிடிக்க வழியில்லை'' என்று அவர்கள் (பகிரங்கமாகக்) கூறுவதுதான். ஆனால், அவர்கள் அறிந்து கொண்டே (அல்லாஹ் தங்களைக் குற்றம் பிடிக்கமாட்டான் என்று) அல்லாஹ்வின் மீது பொய் கூறுகின்றனர்

[76] (உண்மை) அவ்வாறல்ல. எவர்கள் தங்கள் வாக்குறுதியை நிறை வேற்றி, (இறைவனுக்கு) பயந்து நடக்கிறார்களோ (அவர்கள்தான் குற்றம் பிடிக்கப்பட மாட்டார்கள்.) நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) இறையச்சம் உடையவர்களை நேசிக்கிறான்

[77] எவர்கள் அல்லாஹ்விடத்தில் செய்த வாக்குறுதியையும், தங்கள் சத்தியங்களையும் சொற்பவிலைக்கு விற்றுவிடுகிறார்களோ அவர்களுக்கு மறுமையில் நிச்சயமாக ஒரு (நற்)பாக்கியமுமில்லை. மேலும், அல்லாஹ் (மறுமையில்) அவர்களுடன் (விரும்பிப்) பேசவுமாட்டான்; (அன்புடன்) அவர்களை இறுதி நாளில் திரும்பிப்பார்க்கவும் மாட்டான்; அவர்களைப் புனிதப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு

[78] நிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவினர் இருக்கின்றனர். (அவர்கள்)வேதத்தை ஓதும்போது (அத்துடன் பல வாக்கியங்களைக் கலந்து, அதுவும்) வேதத்திலுள்ளதுதான் என நீங்கள் எண்ணிக் கொள்வதற்காக தங்கள் நாவைக் கோணி உளறுகின்றனர். எனினும் அது வேதத்திலுள்ளது அல்ல. இன்னும், ‘‘அது அல்லாஹ்விடமிருந்து வந்தது'' என்றும் அவர்கள் கூறுகின்றனர். ஆனால், அது அல்லாஹ்விடமிருந்து வந்ததல்ல. அவர்கள் நன்கறிந்துகொண்டே அல்லாஹ்வின் மீது இப்படி பொய் கூறுகின்றனர்

[79] ஒரு மனிதருக்கு, வேதத்தையும், ஞானத்தையும், நபித்துவத்தையும் அல்லாஹ் கொடுத்த பின்னர் அவர் மனிதர்களை நோக்கி ‘‘அல்லாஹ்வை அன்றி என்னை வணங்குங்கள்'' என்று கூறமாட்டார். ஆயினும் (மனிதர்களை நோக்கி) ‘‘நீங்கள் வேதத்தை (மற்றவர்களுக்குக்) கற்றுக் கொடுத்துக் கொண்டும், ஓதிக்கொண்டும் இருப்பதன் காரணமாக, (அதில் உள்ளவாறு) இறைவன் ஒருவனையே வணங்கும் இறையச்சமுடைய நல்லவர்களாக ஆகிவிடுங்கள்'' என்றுதான் கூறுவார்

[80] தவிர ‘‘வானவர்களையும், நபிமார்களையும் தெய்வங்களாக எடுத்துக் கொள்ளுங்கள்'' என்றும் அவர் உங்களுக்குக் கட்டளையிடமாட்டார் என்னே! இறைவன் ஒருவனையே நீங்கள் அங்கீகரித்த பின்னர் (அவனை) நிராகரிக்கும்படி அவர் உங்களை ஏவுவாரா

[81] நபிமார்களிடம் அல்லாஹ் வாக்குறுதி வாங்கிய சமயத்தில் (அவர்களை நோக்கி) ‘‘வேதத்தையும், ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுத்திருக்கிறேன். இதற்குப் பின்னர் உங்களிடம் உள்ளதை உண்மைப்படுத்தும் ஒரு தூதர் உங்களிடம் வந்தால் அவரை நீங்கள் உண்மையாக நம்பிக்கை கொண்டு நிச்சயமாக அவருக்கு உதவி செய்யவேண்டும்'' (என்று கூறி) ‘‘இதை நீங்கள் உறுதிப்படுத்தினீர்களா? என் இக்கட்டளையை எடுத்துக் கொண்டீர்களா?'' என்று கேட்டதற்கு, அவர்கள் ‘‘நாங்கள் (அதை) அங்கீகரித்துக் கொண்டோம்'' என்றே கூறினார்கள். அப்போது (இறைவன் ‘‘இதற்கு) நீங்கள் சாட்சியாயிருங்கள். நானும் உங்களுடன் சாட்சியாக இருக்கிறேன்'' என்று கூறினான்

[82] இதற்குப் பின்னரும் எவரேனும் புறக்கணித்தால் அவர்கள்தான் பெரும் பாவிகள் ஆவர்

[83] அல்லாஹ்வுடைய மார்க்கத்தையன்றி (வேறு மார்க்கத்தை)யா இவர்கள் விரும்புகிறார்கள்? வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அனைத்துமே (அவை) விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அவனுக்குக் கீழ்ப்படிந்தே நடக்கின்றன. மேலும், (அவையனைத்தும்) அவன் பக்கமே திரும்பக் கொண்டு வரப்படும்

[84] (நபியே!) கூறுவீராக: ‘‘அல்லாஹ்வையும், நம்மீது அருளப்பட்டதையும்; இப்றாஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் ஆகியவர்கள் மீதும், அவர்கள் சந்ததிகள் மீது அருளப்பட்டவற்றையும்; மூஸா, ஈஸா மற்றும் அனைத்து நபிமார்களுக்கு அவர்கள் இறைவனால் அளிக்கப்பட்டவற்றையும் நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம். இவர்களில் ஒருவரையும் (நபியல்ல என்று) நாம் பிரித்துவிட மாட்டோம். அல்லாஹ் ஒருவனுக்கே நாங்கள் (முற்றிலும்) கீழ்ப்படிந்து நடப்போம்

[85] இஸ்லாமையன்றி (வேறொரு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் நிச்சயமாக அவரிடமிருந்து (அது) அங்கீகரிக்கவே படமாட்டாது. மறுமையில் அவர் நஷ்டமடைந்த வராகவே இருப்பார்

[86] அல்லாஹ் எப்படி ஒரு சமூகத்தினரை நேரான வழியில் செலுத்துவான். அவர்களோ, தங்களிடம் வந்த பல அத்தாட்சிகளின் மூலம் நிச்சயமாக (அல்லாஹ்வுடைய) தூதர் உண்மையானவர் என சாட்சியம் கூறி நம்பிக்கை கொண்டதன் பின்னரும் (அத்தூதரை) நிராகரிக்கின்றனர். அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்கார சமூகத்தினரை நேரான வழியில் செலுத்துவதில்லை

[87] இவர்களுக்கு (அவர்கள் செயலுக்குத் தக்க) பிரதிபலனாவது: இவர்கள் மீது நிச்சயமாக அல்லாஹ், வானவர்கள், மனிதர்கள் ஆகிய அனைவருடைய சாபம் உண்டாகுவதுதான்

[88] இ(ச்சாபத்)திலேயே அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். அவர்களுடைய வேதனை இலேசாக்கப்படவும் மாட்டாது. அவர்களுக்கு ஓய்வு கொடுக்கப்படவும் மாட்டாது

[89] எனினும், இதற்குப் பின்னரும் எவரேனும் வருத்தப்பட்டு (பாவங்களில் இருந்து) விலகி நற்செயல்களைச் செய்தவர்களைத் தவிர (அல்லாஹ் அவர்களை மன்னித்து விடுவான்). ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன், மகா கருணையுடையவன் ஆவான்

[90] ஆயினும், எவர்கள் நம்பிக்கை கொண்டதன் பின்னர் நிராகரித்துவிட்டு மென்மேலும், அந்நிராகரிப்பையே அதிகப்படுத்துகிறார்களோ, அவர்களுடைய மன்னிப்புக் கோருதல் நிச்சயமாக அங்கீகரிக்கப்பட மாட்டாது. இவர்கள்தான் (முற்றிலும்) வழி கெட்டவர்கள்

[91] நிச்சயமாக எவர்கள் நிராகரித்து (அந்நிராகரிப்பிலிருந்து மீளாது) நிராகரித்த வண்ணமே இறந்தும் விடுகின்றனரோ அவர்களில் ஒருவனுக்கு இப்பூமி நிறைய தங்கம் இருந்து, அதைத் (தன் குற்றத்தை மன்னிப்பதற்குத்) தனக்கு ஈடாக அவன் கொடுத்த போதிலும் (அது) அங்கீகரிக்கப்பட மாட்டாது. இவர்களுக்கு மிகத் துன்புறுத்தும் வேதனையுண்டு. இவர்களுக்கு உதவி செய்பவர்கள் (அங்கு) ஒருவரும் இருக்கமாட்டார்

[92] உங்களுக்குப் பிரியமான பொருளிலிருந்து நீங்கள் (தானமாக) செலவு செய்யாத வரை நிச்சயமாக நீங்கள் நன்மையை அடைய மாட்டீர்கள். நீங்கள் எதை தானம் செய்தபோதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிவான்

[93] இஸ்ரவேலர்களுக்கு தவ்றாத் அருளப்படுவதற்கு முன்னர் எல்லா உணவும் ஆகுமானதாகவே இருந்தது. எனினும், இஸ்ராயீல் தனக்கு விலக்கிக் கொண்டவற்றைத் தவிர. (ஆகவே, இதற்கு மாறாகக் கூறும் யூதர்களை நோக்கி நபியே!) கூறுவீராக: ‘‘நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் தவ்றாத்தைக் கொண்டு வந்து ஓதிக் காண்பியுங்கள்

[94] இதற்குப் பின்னரும் எவரேனும் அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய் கூறினால் அவர்கள்தான் அநியாயக்காரர்கள் ஆவர்

[95] (நபியே!) கூறுவீராக: ‘‘(இவற்றைப் பற்றி) அல்லாஹ் கூறியவைதான் (முற்றிலும்) உண்மை. ஆகவே, (நம்பிக்கையாளர்களே! இவர்களைப் புறக்கணித்துவிட்டு) நேரான வழியில் சென்ற இப்ராஹீமுடைய மார்க்கத்தையே பின்பற்றுங்கள். அவர் இணைவைத்து வணங்குபவராக இருக்கவில்லை

[96] (இவ்வுலகில் இறைவனை வணங்குவதற்கென) மனிதர்களுக்கு அமைக்கப்பட்ட ஆலயங்களில் முதன்மையானது நிச்சயமாக ‘பக்கா' (மக்கா)வில் இருப்பதுதான். அது மிக்க பாக்கியமுள்ளதாகவும், உலகத்தாருக்கு நேரான வழியை அறிவிக்கக் கூடியதாகவும் இருக்கிறது

[97] அதில் தெளிவான அத்தாட்சிகளும் இருக்கின்றன. இப்றாஹீம் (தொழுகைக்காக) நின்ற இடமும் இருக்கிறது. எவர் அதில் நுழைகிறாரோ அவர் (பாதுகாப்புப் பெற்று) அச்சமற்றவராகி விடுகிறார். ஆகவே, எவர்கள் அங்கு பிரயாணம் செல்ல சக்தி உடையவர்களாக இருக்கிறார்களோ அத்தகைய மனிதர்கள் மீது அல்லாஹ்வுக்காக (அங்கு சென்று) அந்த ஆலயத்தை ஹஜ் செய்வது கடமையாகும். எவரேனும் (இதை) நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்கு ஒன்றும் குறைந்து விடுவதில்லை. ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் உலகத்தாரின் தேவையற்றவன் ஆவான்

[98] (நபியே!) கூறுவீராக: ‘‘வேதத்தை உடையவர்களே! அல்லாஹ்வின் வசனங்களை நீங்கள் ஏன் நிராகரிக்கிறீர்கள். அல்லாஹ்வோ நீங்கள் செய்யும் அனைத்திற்கும் சாட்சியாவான்

[99] (மேலும்,) கூறுவீராக: வேதத்தையுடையவர்களே! அல்லாஹ்வின் பாதையை விட்டும் நம்பிக்கையாளர்களை ஏன் தடுக்கிறீர்கள். (அது உண்மைதான் என்று) நீங்கள் சாட்சி கூறிக்கொண்டே அதைக் கோணலாக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்வதைப்பற்றி அல்லாஹ் பராமுகமாய் இல்லை

[100] நம்பிக்கையாளர்களே! வேதத்தையுடையவர்களில் (உள்ள) ஒரு பிரிவினருக்கு நீங்கள் கீழ்ப்படிந்தால், நீங்கள் அல்லாஹ்வை நம்பிக்கைகொண்டதற்கு பின் உங்களை அவர்கள் நிராகரிப்பவர்களாக மாற்றிவிடுவார்கள்

[101] நீங்கள் எப்படி (அல்லாஹ்வை) நிராகரிப்பவர்களாக ஆகிவிட முடியும்? உங்கள் மத்தியில் அல்லாஹ்வுடைய தூதர் இருக்கிறார். அவனுடைய வசனங்கள் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்படுகின்றன. ஆகவே, எவர் அல்லாஹ்வை (அவனது மார்க்கத்தை) பலமாகப் பற்றிக் கொள்கிறாரோ அவர் நிச்சயமாக நேரான பாதையில் செலுத்தப்பட்டுவிட்டார்

[102] நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம்

[103] மேலும், நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வுடைய (வேதம் என்னும்) கயிற்றை பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். (உங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு) நீங்கள் பிரிந்திட வேண்டாம். உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருளை நினைத்துப் பாருங்கள். நீங்கள் (ஒருவருக்கொருவர்) எதிரிகளாக(ப் பிரிந்து) இருந்த சமயத்தில் உங்கள் உள்ளங்களுக்குள் (இஸ்லாமின் மூலம்) அன்பை ஊட்டி ஒன்று சேர்த்தான். ஆகவே, அல்லாஹ்வின் அருளால் நீங்கள் சகோதரர்களாகி விட்டீர்கள். (அதற்கு முன்னர்) நீங்கள் நரக நெருப்புக்கிடங்கிற்கு அருகில் இருந்தீர்கள். அதிலிருந்தும் அவன் உங்களை காப்பாற்றிக் கொண்டான். நீங்கள் நேர்வழி பெறுவதற்காக அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு இப்படி தெளிவுபடுத்திக் காண்பிக்கிறான்

[104] (நம்பிக்கையாளர்களே!) உங்களில் ஒரு கூட்டத்தார் (மனிதர்களை) சிறந்ததின் பக்கம் அழைத்து நன்மையைச் செய்யும்படி ஏவி, பாவமான காரியங்களிலிருந்து அவர்களை விலக்கிக் கொண்டும் இருக்கவும். இவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள் ஆவர்

[105] எவர்கள் தங்களிடம் அல்லாஹ்வின் தெளிவான வசனங்கள் வந்த பின்னரும் தங்களுக்குள் (கருத்து) வேறுபட்டு பிரிந்து போனார்களோ அவர்களைப் போல நீங்களும் ஆகிவிட வேண்டாம். இவர்களுக்கே (மறுமையில்) மகத்தான வேதனையும் உண்டு

[106] அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால் பிரகாசமுள்ள) வெண்மையாகவும், சில முகங்கள் (துக்கத்தால்) கறுத்து (வாடியு)மிருக்கும். எவர்களுடைய முகங்கள் கறுத்து (வாடி) இருக்கின்றனவோ (அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் நம்பிக்கை கொண்டபின் (அதை) நிராகரித்து விட்டீர்களா? ஆகவே, உங்கள் நிராகரிப்பின் காரணமாக நரக வேதனையை சுவைத்துக் கொண்டு இருங்கள்'' (என்று கூறப்படும்)

[107] எவர்களுடைய முகங்கள் (மகிழ்ச்சியால் பிரகாசமுள்ள) வெண்மையாக இருக் கின்றனவோ (அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் அல்லாஹ்வின் அருளில் தங்கிவிடுங்கள்'' (என்று கூறப்படும்.) அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்

[108] (நபியே!) இவையனைத்தும் அல்லாஹ்வுடைய வசனங்களாகும். அவற்றை உண்மையாகவே நாம் உமக்கு ஓதிக் காண்பிக்கிறோம். மேலும், அல்லாஹ் உலகத்தாருக்கு சிறிதளவும் அநியாயம் (செய்ய) நாடமாட்டான்

[109] வானங்களிலும், பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. (இவை சம்பந்தமான) எல்லா காரியங்களும் அல்லாஹ்விடமே கொண்டு வரப்படும்

[110] (நம்பிக்கையாளர்களே!) நீங்கள்தான், மனிதர்களில் தோன்றிய வகுப்பார்களிலெல்லாம் மிக்க மேன்மையானவர்கள். (ஏனென்றால்,) நீங்கள் (மனிதர்களை நன்மையான) காரியங்களை(ச் செய்யும்படி) ஏவி, பாவமான காரியங்களிலிருந்து (அவர்களை) விலக்கி, மெய்யாகவே அல்லாஹ்வை நம்பிக்கைக் கொள்கிறீர்கள். வேதத்தையுடையவர்களும் (இவ்வாறே) நம்பிக்கைகொண்டால் (அது) அவர்களுக்குத்தான் மிக நன்று. நம்பிக்கை கொண்டவர்களும் அவர்களில் இருந்தபோதிலும் அவர்களில் பெரும்பாலானவர்கள் (நிராகரிக்கும்) பாவிகள்தான்

[111] (நம்பிக்கையாளர்களே!) இவர்கள் ஒரு சொற்பச் சிரமத்தைத் தவிர (அதிகமாக) உங்களுக்கு (ஏதும்) தீங்கு செய்திடமுடியாது. உங்களை எதிர்த்து அவர்கள் போர்புரிய முற்பட்டாலோ புறங்காட்டியே ஓடுவார்கள். பின்னர் அவர்கள் (சென்ற இடத்திலும்) எவருடைய உதவியும் பெறமாட்டார்கள்

[112] அவர்கள் எங்கு சென்றபோதிலும் அவர்கள் மீது இழிவு விதிக்கப்பட்டு விட்டது. (இவ்வேதமாகிய) அல்லாஹ்வின் கயிற்றைக் கொண்டும் (நம்பிக்கை கொண்ட) மனிதர்கள் (அளிக்கும் அபயமென்னும்) கயிற்றைக் கொண்டுமே தவிர (அவர்கள் தப்பித்துக் கொள்ள முடியாது). அல்லாஹ்வின் கோபத்திலும் அவர்கள் சிக்கிக் கொண்டார்கள். (வீழ்ச்சி என்னும்) துர்ப்பாக்கியமும் அவர்கள் மீது விதிக்கப்பட்டு விட்டது. இதன் காரணம் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை (எப்பொழுதுமே) நிராகரித்துக் கொண்டும், நியாயமின்றி இறைத் தூதர்களைக் கொலை செய்து கொண்டும் இருந்ததுதான். தவிர, வரம்பு கடந்து பாவம் செய்து கொண்டிருந்ததும் இதற்குக் காரணமாகும்

[113] அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான (தீய)வர்கள் அல்லர். வேதத்தையுடைய இவர்களில் நல்லோரான ஒரு கூட்டத்தினர் இருக்கின்றனர். அவர்கள் இரவு காலங்களில் அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதி நின்று சிரம்பணிந்து வணங்குகின்றனர்

[114] அவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டு, (மனிதர்களுக்கு) நன்மையான காரியங்களை ஏவி, தீமையான காரியங்களிலிருந்து தடுத்து, நன்மையான காரியங்களைச் செய்ய விரை(ந்தும் செல்)கின்றனர். இவர்களும் நல்லவர்களில் உள்ளவர்களே

[115] இவர்கள் எந்த நன்மையைச் செய்தபோதிலும் அது நிராகரிக்கப்பட மாட்டாது. (அதற்குரிய பிரதிபலனை அடைந்தே தீருவார்கள். ஏனென்றால், இத்தகைய) இறையச்சமுடையவர்களை அல்லாஹ் நன்கறிவான்

[116] நிச்சயமாக (வேதத்தையுடையவர்களில்) எவர்கள் (மறுமையை) நிராகரிக்கிறார் களோ அவர்களுடைய செல்வங்களும், அவர்களுடைய சந்ததிகளும், (அந்நாளில்) அல்லாஹ்வி(னுடைய வேதனையி)லிருந்து அவர்களை ஒரு சிறிதும் காப்பாற்றி விடாது. அவர்கள் நரகவாசிகள்தான். அதில் என்றென்றும் அவர்கள் தங்கி விடுவார்கள்

[117] இவ்வுலக வாழ்க்கையில் (இஸ்லாமிற்கு எதிராக) அவர்கள் செலவு செய்யும் பொருளின் உதாரணம், ஒரு காற்றைப்போல் இருக்கிறது. அது (அளவு கடந்து) குளிர்ந்து (பனிப்புயலாகித்) தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொண்ட ஒரு வகுப்பாரின் பயிரில் பட்டு அதை அழித்து விட்டது. அல்லாஹ் இவர்களுக்கு ஒன்றும் தீங்கிழைத்து விடவில்லை. எனினும், இவர்கள் தங்களுக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்

[118] நம்பிக்கையாளர்களே! உங்(கள் மார்க்கத்தை சேர்ந்தவர்)களையன்றி (மற்றவர்களை) உங்களுக்கு மிக நெருக்கமானவர்களாக நீங்கள் ஆக்கிக் கொள்ளாதீர்கள். (ஏனென்றால்) அவர்கள் உங்களுக்குத் தீங்கிழைப்பதில் ஒரு சிறிதும் குறைவு செய்வதில்லை. உங்களுக்குத் துன்பம் ஏற்படுவதை அவர்கள் விரும்புகிறார்கள். அவர்களுடைய வாய்(ச் சொற்)களைக் கொண்டே (அவர்களுடைய) பகைமை வெளிப்பட்டுவிட்டது. (உங்களைப் பற்றி) அவர்களுடைய உள்ளங்கள் மறைத்திருப்பவையோ மிகக் கொடியவை. நிச்சயமாக நாம் (அவர்களுடைய) அடையாளங்களை உங்களுக்கு விவரித்துவிட்டோம். நீங்கள் அறிவுடையவர்களாக இருந்தால் (அறிந்து கொள்ளலாம்)

[119] (நம்பிக்கையாளர்களே!) இவர்களையா நீங்கள் நேசிக்கிறீர்கள்! அவர்களோ உங்களை நேசிப்பதில்லை. நீங்கள் (அவர்களுடைய) வேதங்கள் அனைத்தையும் நம்பிக்கை கொள்கிறீர்கள். (அவர்கள் உங்கள் வேதத்தை நம்பிக்கை கொள்வதில்லை. எனினும்) அவர்கள் உங்களைச் சந்தித்தால், ‘‘(உங்கள் வேதத்தையும்) நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம்'' என்று (பொய்) கூறுகின்றனர். உங்களைவிட்டு விலகினாலோ (உங்கள் மீதுள்ள) கோபத்தினால் தங்கள் (கை) விரல்களையே கடித்துக் கொள்கின்றனர். ஆகவே, (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘உங்கள் கோபத்திலேயே நீங்கள் சாவீர்களாக! நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) உள்ளங்களில் உள்ளவற்றை நன்கு அறிவான்

[120] உங்களுக்கு ஒரு நன்மை ஏற்பட்டால் (அது) அவர்களை வருந்தச் செய்கிறது. உங்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டாலோ அதற்காக அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். ஆகவே, நீங்கள் பொறுமையுடன் இருந்து (அவர்களை விட்டு) விலகியிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எத்தகைய தீங்கையும் விளைவித்து விடாது. (ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் அவர்களுடைய செயல்களை நன்கு சூழ்ந்து கொள்வான்

[121] (நபியே!) நீர் உமது குடும்பத்திலிருந்து அதிகாலையில் புறப்பட்டு(ச் சென்று) நம்பிக்கை கொண்டவர்களை போர்க்களத்தில் ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்ததை நினைத்துப் பார்ப்பீராக!. (அனைத்தையும்) அல்லாஹ் செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்

[122] உங்களில் இரு பிரிவினர் தைரியமிழந்து (‘உஹுத்' என்னும் போர்க்களத்தை விட்டுச் சென்று) விட(லாமா என்று) இருந்தனர். அல்லாஹ் அவர்களின் உதவியாளன் (பாதுகாவலன்). (ஆகவே,) நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைப்பார்களாக

[123] பத்ரில் (நடந்த போரில்) நீங்கள் (எதிரிகளைவிட ஆயுதத்திலும், தொகையிலும்) குறைந்தவர்களாக இருந்த சமயத்தில் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான். ஆகவே, அல்லாஹ்வுக்கு நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அவனுக்குப் பயந்து (வழிப்பட்டு) நடங்கள்

[124] (நபியே! அப்பொழுது) நீர் நம்பிக்கையாளர்களை நோக்கி ‘‘(வானத்திலிருந்து) இறக்கப்பட்ட மூவாயிரம் வானவர்களால் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவி செய்வது உங்களுக்குப் போதாதா?'' என்று கூறியதையும் நினைவு கூருவீராக

[125] நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயந்து பொறுமையுடன் இருந்தால், இதே சமயத்தில் (எதிரிகள்) உங்கள் மீது அடர்ந்தேறிய போதிலும் (மூவாயிரம் என்ன?) அடையாள மிடப்பட்ட ஐயாயிரம் வானவர்களால் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவிசெய்வான்

[126] உங்கள் உள்ளங்கள் திருப்தியடையவும், உங்களுக்கு ஒரு நற்செய்தியாகவுமே அல்லாஹ் இவ்வுதவியைப் புரிந்தான். (அனைவரையும்) மிகைத்தவனும், ஞானமுடையவனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே தவிர (வேறுயாரிடம் இருந்தும் இந்த) உதவி (உங்களுக்கு) கிடைக்கவில்லை. (கிடைக்கவும் செய்யாது)

[127] (அவன் உங்களுக்கு இவ்வுதவி புரிந்ததெல்லாம்) நிராகரிப்பவர்களில் ஒரு பாகத்தினரைக் குறைக்கவோ அல்லது அவர்கள் சிறுமைப்பட்டு (தோல்வி அடைந்தவர்களாகத்) திரும்பிச் சென்று விடுவதற்காகவேதான்

[128] (நபியே!) இவ்விஷயத்தில் உமக்கு ஓர் அதிகாரமுமில்லை. (அல்லாஹ்) அவர் களை (இஸ்லாமைத் தழுவும்படிச் செய்து) மன்னித்துவிடலாம். அல்லது அவர்கள் அநியாயக்காரர்களாக இருப்பதனால் அவர்களை வேதனையும் செய்யலாம்

[129] (ஏனென்றால்) வானங்களில் உள்ளவை அனைத்தும், பூமியிலுள்ளவை அனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே! அவன் விரும்பியவர்களை மன்னிப்பான்; அவன் விரும்பியவர்களைத் தண்டிப்பான். ஆனால், அல்லாஹ் மிக மன்னிப்பவன் மகா கருணையாளன் ஆவான்

[130] நம்பிக்கையாளர்களே! (அசலுக்கு அதிகமாகவும் வட்டிக்கு வட்டி போட்டும்) இரட்டித்துக் கொண்டே அதிகரிக்கக்கூடிய வட்டியை (வாங்கி)த் தின்னாதீர்கள். அல்லாஹ்வுக்குப் பயந்து (இதைத் தவிர்த்துக் கொண்டால்) நீங்கள் வெற்றியடைவீர்கள்

[131] (நரக) நெருப்பிற்குப் பயந்துகொள்ளுங்கள். அது (இறைவனுடைய இக்கட்டளையை) நிராகரிப்பவர்களுக்காக தயார்படுத்தப்பட்டுள்ளது

[132] அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் கீழ்ப்படிந்து நடங்கள். அதனால் நீங்கள் (அல்லாஹ்வின்) அன்பை அடையலாம்

[133] உங்கள் இறைவனின் மன்னிப்புக்கும், சொர்க்கத்துக்கும் விரைந்து செல்லுங்கள். அதன் விசாலம் வானங்கள், பூமியின் விசாலத்தைப் போன்றது. (அது) இறையச்சம் உடையவர்களுக்காக(வே) தயார்படுத்தப்பட்டுள்ளது

[134] அவர்கள் (எவர்கள் என்றால்) செல்வ நிலைமையிலும், வறுமை நிலைமையிலும் தானம் செய்து கொண்டே இருப்பார்கள். கோபத்தை விழுங்கிவிடுவார்கள். மனிதர்(களின் குற்றங்)களை மன்னித்துவிடுவார்கள். அல்லாஹ் (இத்தகைய) அழகிய குணமுடையவர்களை நேசிக்கிறான்

[135] இன்னும், அவர்கள் ஒரு மானக்கேடான காரியத்தைச் செய்து விட்டாலும் அல்லது தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அல்லாஹ்வை நினைத்து (அவனிடமே) தங்கள் பாவமன்னிப்பைத் தேடுவார்கள். (அல்லாஹ்வும் அவர்களை மன்னித்து விடுவான்.) அல்லாஹ்வைத் தவிர (இவர்களின்) குற்றங்களை மன்னிப்பவன் யார்? அவர்கள் செய்த (தவறான) காரியத்தை (தவறென்று) அவர்கள் அறிந்து கொண்டால் அதில் நிலைத்திருக்கவும் மாட்டார்கள். (உடனே அதில் இருந்து விலகி விடுவார்கள்)

[136] இவர்களுக்குப் பிரதிபலன், அவர்களின் இறைவனுடைய மன்னிப்பும், நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் சொர்க்கங்களும் ஆகும். அவர்கள் அங்கு என்றென்றும் தங்கிவிடுவார்கள். நன்மை செய்தவர்களின் கூலியும் நன்றே

[137] உங்களுக்கு முன்னரும் (இப்படி) பல நிகழ்வுகள் நிகழ்ந்திருக்கின்றன. (ஆகவே,) நீங்கள் பூமியில் சுற்றித் திரிந்து (இறைவனுடைய வசனங்களைப்) பொய்யாக்கியவர்களின் முடிவு எப்படி ஆனது என்பதைப் பாருங்கள்

[138] இது (பொதுவாக) மனிதர்களுக்கு (உண்மையைத்) தெளிவாக்கக் கூடியதும், (சிறப்பாக) இறையச்சமுடையவர்களுக்கு நேர்வழி காட்டியும், நல்லுபதேசமும் ஆகும்

[139] (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் தைரியத்தை இழந்திட வேண்டாம். கவலைப்படவும் வேண்டாம். (உண்மையாகவே) நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் நீங்கள்தான் மேன்மை அடைவீர்கள்

[140] நீங்கள் (தோல்வியுற்றுக்) காயமடைந்தால் (அதன் காரணமாக தைரியம் இழக்காதீர்கள். ஏனென்றால்,) அந்த மக்களும் இதைப்போன்றே (தோல்வியுற்றுக்) காயமடைந்திருக்கின்றனர். இத்தகைய கஷ்டகாலம் மனிதர்களுக்கு இடையில் மாறிமாறி வரும்படி நாம்தான் செய்கிறோம். ஏனென்றால், உங்களில் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்கள் யாரென்று அல்லாஹ் அறி(வித்து விடு)வதற்காகவும், உங்களில் (மார்க்கத்திற்காக உயிரை அர்ப்பணம் செய்யும்) மாபெரும் தியாகியை அவன் எடுத்த(றிவிப்ப)தற்காகவுமே (இவ்வாறு செய்கிறான்). அநியாயக்காரர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை

[141] அல்லாஹ் நிராகரிப்பவர்களை அழித்து உண்மை நம்பிக்கையாளர்களை வடிகட்டி எடுப்பதற்காகவும் (இவ்வாறு செய்கிறான்)

[142] (நம்பிக்கையாளர்களே!) உங்களில் (அல்லாஹ்வுக்காக) போர் புரிபவர்கள் யார்? (சிரமங்களைப் பொறுமையுடன்) சகித்துக் கொள்பவர்கள் யார்? என்பதை அல்லாஹ் (பரிசோதித்து) அறிவதற்கு முன்னதாகவே நீங்கள் சொர்க்கம் நுழைந்துவிடலாம் என்று எண்ணிக்கொண்டு இருக்கிறீர்களா

[143] நீங்கள் இறந்து விடுவதற்கு முன்னதாகவே, (அல்லாஹ்வின் பாதையில் உங்கள்) உயிரை அர்ப்பணம் செய்ய விரும்பிக் கொண்டிருந்தீர்களே! (இப்போது) அது உங்கள் கண் முன் இருப்பதைத் திட்டமாகப் பார்த்துவிட்டீர்கள். (ஆகவே, இந்த போரில் ஏன் தயங்குகிறீர்கள்)

[144] முஹம்மது (நபி) ஒரு தூதரே தவிர வேறில்லை. (ஆகவே, அவர் மரணமற்ற இறைவன் இல்லை.) அவருக்கு முன்னரும் (இவ்வாறே) (பல) தூதர்கள் சென்றிருக்கின்றனர். அவர் இறந்துவிட்டால் அல்லது வெட்டப்பட்டுவிட்டால் நீங்கள் புறங்காட்டிச் சென்று விடுவீர்களோ? (அவ்வாறு) எவரேனும் புறங்காட்டிச் சென்றுவிட்டால் அதனால் அவன் அல்லாஹ்வுக்கு ஒன்றும் நஷ்டம் உண்டாக்கிவிட மாட்டான். நன்றியறிபவர்களுக்கு அல்லாஹ் அதிசீக்கிரத்தில் (நற்)கூலியைத் தருவான்

[145] ஓர் ஆத்மா அல்லாஹ்வின் அனுமதியின்றி இறப்பதில்லை. இது தவணை நிர்ணயிக்கப்பட்ட விதியாகும். எவர் (தன் செயலுக்கு) இந்த உலகத்தின் நன்மையை (மட்டும்) விரும்புகிறாரோ அவருக்கு அதை (மட்டும்) அளிப்போம். எவர் மறுமையின் நன்மையை(யும்) விரும்புகிறாரோ அவருக்கு அதை(யும்) வழங்குவோம். மேலும், நன்றி செலுத்துபவர்களுக்கு நாம் அதிசீக்கிரத்தில் நற்பயனை வழங்குவோம்

[146] எத்தனையோ இறைத்தூதர்களும், அவர்களுடன் இறைவனின் பல நல்லடியார்களும் சேர்ந்து (அல்லாஹ்வின் பாதையில்) போர் புரிந்திருக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் (போர் செய்ததனால்) தங்களுக்கு ஏற்பட்ட சிரமத்தின் காரணமாக அவர்கள் தங்கள் தைரியத்தை இழந்திடவுமில்லை; பலவீனமாகிவிடவுமில்லை; (எதிரிகளுக்கு) பணிந்துவிடவுமில்லை. (இவ்வாறு சிரமங்களைச்) சகித்துக் கொள்பவர்களைத்தான் அல்லாஹ் நேசிக்கிறான்

[147] (இத்தகைய சந்தர்ப்பங்களில் அவர்கள் தங்கள் இறைவனை நோக்கி) ‘‘எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களை நீ மன்னிப்பாயாக! எங்கள் செயல்களில் நாங்கள் வரம்புமீறிய (குற்றத்)தையும் மன்னிப்பாயாக! எங்கள் பாதங்களை (போரில் நழுவாது) நீ உறுதிபடுத்தியும் வைப்பாயாக! (உன்னை) நிராகரிக்கும் மக்களை வெற்றிபெற நீ எங்களுக்கு உதவி புரிவாயாக!'' என்று அவர்கள் (பிரார்த்தித்துக்) கூறியதைத் தவிர (வேறொன்றும்) கூறியதில்லை

[148] ஆதலால், அல்லாஹ் அவர்களுக்கு இவ்வுலகத்தின் நன்மையையும், மறுமையின் அழகான நன்மையையும் வழங்கினான். அல்லாஹ் (இத்தகைய) நல்லவர்களையே நேசிக்கிறான்

[149] நம்பிக்கையாளர்களே! (அல்லாஹ்வை) நிராகரிப்பவர்களை நீங்கள் பின்பற்றினால் அவர்கள் உங்களை (உங்கள் நம்பிக்கையிலிருந்து நீங்கள் விலகி)ப் பின் செல்லும்படி திருப்பிவிடுவார்கள். அதனால் நீங்கள் நஷ்டமடைந்தவர்களாகவே மாறிவிடுவீர்கள்

[150] (இவர்கள்) அல்ல, அல்லாஹ்தான் உங்கள் பாதுகாவலன். அவன் உதவி செய்பவர்களில் மிகச் சிறந்தவன்

[151] நிராகரிப்பவர்களுடைய உள்ளங்களில் அதிசீக்கிரத்தில் நாம் திகிலை உண்டுபண்ணி விடுவோம். ஏனென்றால், அவர்கள் இணைவைப்பதற்கு அல்லாஹ் எவ்வித ஆதாரமும் அவர்களுக்கு அளிக்காதிருக்க அவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்கள். இவர்களுடைய தங்குமிடம் நரகம்தான். (நரகத்திலும்) அநியாயக்காரர்களின் தங்குமிடம் மிகக் கெட்டது

[152] (நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வின் கட்டளைப்படி (உஹுத் போரில்) நீங்கள் எதிரிகளை வெட்டி வீழ்த்திக் கொண்டிருந்த சமயத்தில் (உங்களுக்கு உதவி புரிந்து) அல்லாஹ் தன் வாக்கை நிச்சயமாக நிறைவேற்றி வைத்தான். ஆனால், நீங்கள் விரும்பியதை (அதாவது வெற்றியை) அல்லாஹ் உங்களுக்குக் காண்பித்ததன் பின்னர் (நபியின் கட்டளைக்கு) மாறுசெய்து அவ்விஷயத்தில் நீங்கள் உங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு, (நபி உங்களை நிறுத்திவைத்திருந்த மலையிலிருந்து விலகி இறுதியில்) தைரியத்தை இழந்துவிட்டீர்கள். உங்களில் இவ்வுலகை விரும்புபவர்களும் உள்ளனர். உங்களில் மறுமையை விரும்புகிறவர்களும் உள்ளனர். ஆகவே, உங்களைச் சோதிப்பதற்காக (அவர்களைத் துரத்திச் சென்ற உங்களை) அவர்களைவிட்டு பின்னடையும்படி செய்தான். (இதன் பின்னரும்) நிச்சயமாக அல்லாஹ் உங்களை மன்னித்துவிட்டான். ஏனென்றால், அல்லாஹ் நம்பிக்கையாளர்கள் மீது அருளுடையவன் ஆவான்

[153] (உஹுத் போரில் அல்லாஹ்வுடைய) தூதர் உங்களுக்கு பின்னால் இருந்தவாறு ‘‘(என்னிடம் வாருங்கள்!) வாருங்கள்'' என்று உங்களை(க் கூவி) அழைத்துக் கொண்டிருந்த சமயத்தில் நீங்கள் ஒருவரையுமே திரும்பிப்பாராது வெருண்டோடிக் கொண்டிருந்ததையும் சிந்தித்துப் பாருங்கள். (நம் தூதருக்கும் நீங்கள் உண்டு பண்ணிய) இத்துயரத்தின் காரணமாக உங்களுக்கும் (தோல்வியின்) துயரத்தையே பிரதிபலனாகக் கொடுத்தான். ஏனென்றால், உங்களிடமிருந்து (ஒரு பொருள்) தவறி விட்டதைப் பற்றியும், உங்களுக்கு ஏற்பட்ட (நஷ்டத்)தைப் பற்றியும் நீங்கள் துயரத்தில் ஆழ்ந்துவிடாமல் இருப்பதற்(குரிய சகிப்புத்தன்மையை உங்களுக்கு உண்டு பண்ணுவதற்)காகவே (இத்தகைய சிரமத்தை உங்களுக்குக் கொடுத்தான்). நீங்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் நன்கறிவான்

[154] (நம்பிக்கையாளர்களே!) இத் துயரத்திற்குப் பின்னர் (அல்லாஹ்) உங்களுக்கு ஆறுதலை அளிக்கக்கூடிய நித்திரையை இறக்கிவைத்தான். உங்களில் ஒரு கூட்டத்தினரை அது சூழ்ந்து கொண்டது. மற்றொரு கூட்டத்தினருக்கோ அவர்களுடைய கவலையே பெரிதாகி மடையர்கள் எண்ணுவதைப்போல அல்லாஹ்வைப் பற்றி உண்மை அல்லாதவற்றை எல்லாம் (தவறாக) எண்ண ஆரம்பித்து ‘‘நம்மிடம் (இதற்குப் பரிகாரம் செய்ய) அதிகாரம் ஏதும் உண்டா?'' என்று கேட்டனர். (இதற்கு,) ‘‘எல்லா அதிகாரங்களும் அல்லாஹ்வுடையதே!'' என்று (நபியே! பதில்) கூறுவீராக. (இவையன்றி) அவர்கள் உங்களுக்கு வெளியாக்காத பல விஷயங்களையும் தங்கள் மனதில் மறைத்துக் கொண்டு ‘‘நம்மிடம் ஏதும் அதிகாரம் இருந்திருந்தால், இங்கு வந்து (இவ்வாறு) நாம் வெட்டப்பட்டிருக்க மாட்டோம்'' எனவும் கூறுகின்றனர். (இதற்கு நபியே! அந்நயவஞ்சகர்களை நோக்கி) நீர் கூறுவீராக: ‘‘நீங்கள் உங்கள் வீட்டில் (தங்கி) இருந்தபோதிலும் எவர்கள் மீது வெட்டப்பட்டே இறக்க வேண்டுமென்று விதிக்கப்பட்டுள்ளதோ அவர்கள் தாங்கள் வெட்டப்படவேண்டிய இடங்களுக்கு(த் தாமாக) வந்தே தீருவார்கள்'' என்றும், (நம்பிக்கையாளர்களை நோக்கி) அல்லாஹ் உங்கள் மனதிலுள்ளதைப் பரிசோதனை செய்வதற்காகவும், உங்கள் உள்ளங்களில் உள்ளவற்றைப் பரிசுத்தமாக்குவதற்காகவும் (இவ்வாறு சம்பவிக்கும்படிச் செய்தான் என்றும் கூறுவீராக. உங்கள்) உள்ளங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கறிவான்

[155] (நம்பிக்கையாளர்களே!) இரு கூட்டத்தாரும் (உஹுது போருக்காகச்) சந்தித்த நாளில் உங்களில் எவர்கள் அதிலிருந்து வெருண்டோடினார்களோ, (அவர்கள் நிராகரிப்பின் காரணமாக ஓடவில்லை.) அவர்கள் செய்த சில தவறுகளின் காரணமாக ஷைத்தான்தான் அவர்களுடைய கால்களைச் சறுக்கும்படிச் செய்தான். எனினும், அல்லாஹ் அவர்களின் குற்றங்களை மன்னித்துவிட்டான். நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன், மிக்க பொறுமையுடையவன் ஆவான்

[156] நம்பிக்கையாளர்களே! நிராகரிப்பவர்களைப் போல நீங்களும் ஆகிவிட வேண்டாம். வெளியூருக்கோ அல்லது போருக்கோ சென்று (இறந்து)விட்ட தங்கள் சகோதரர்களைப் பற்றி ‘‘அவர்கள் நம்மிடமே இருந்திருந்தால் இறந்திருக்கவும் மாட்டார்கள்; கொல்லப்பட்டிருக்கவும் மாட்டார்கள்'' என்று (அந்நிராகரிப்பாளர்கள்) கூறுகின்றனர். அவர்களுடைய உள்ளங்களில் (என்றென்றுமே) இதை ஒரு கடும் துயரமாக்குவதற்காகவே இவ்வாறு (அவர்கள் நினைக்கும்படி) அல்லாஹ் தருகிறான். அல்லாஹ்வே உயிருடன் வாழச் செய்பவன்; மரணிக்கவும் வைப்பவன். நீங்கள் செய்பவற்றை எல்லாம் அல்லாஹ் உற்று நோக்குகிறான்

[157] அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் கொல்லப்பட்டாலும் அல்லது இறந்து விட்டாலும் (அதற்காக உங்களுக்கு) நிச்சயமாக அல்லாஹ்விடம் கிடைக்கும் மன்னிப்பும், அவனுடைய அன்பும் அவர்கள் சேகரித்து(க் குவித்து) வைத்திருக்கும் பொருள்களைவிட மிக மேலானதாகும்

[158] நீங்கள் (அல்லாஹ்வுடைய பாதையில்) இறந்துவிட்டாலும் அல்லது கொல்லப்பட்டாலும் (அதற்காக ஏன் கவலைப்பட வேண்டும்? ஏனெனில், கருணைமிக்க) அல்லாஹ்விடம்தான் நீங்கள் கொண்டுவரப்படுவீர்கள்

[159] (நபியே!) அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே நீர் அவர்கள் மீது மென்மையானவராக நடந்து கொண்டீர். நீங்கள் கடுகடுப்பானவராகவும், கடின உள்ளம் கொண்டவராகவும் இருந்திருப்பீரானால் உம்மிடமிருந்து அவர்கள் வெருண்டோடி இருப்பார்கள். ஆகவே, அவர்(களின் குற்றங்)களை நீர் மன்னித்து (இறைவனும்) அவர்களை மன்னிக்கப் பிரார்த்திப்பீராக! மேலும், (யுத்தம், சமாதானம் ஆகிய) மற்ற காரியங்களிலும் அவர்களுடன் கலந்து ஆலோசித்தே வருவீராக! (ஒரு விஷயத்தை செய்ய) நீர் முடிவு செய்தால் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படைப்பீராக. ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் (தன்னிடம்) பொறுப்பு சாட்டுபவர்களை நேசிக்கிறான்

[160] (நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தால் உங்களை வெற்றி கொள்பவர் எவருமில்லை. உங்களை அவன் (கை) விட்டு விட்டாலோ அதற்குப் பின்னர் உங்களுக்கு எவர்தான் உதவி செய்ய முடியும்? ஆதலால், அல்லாஹ்விடமே நம்பிக்கையாளர்கள் பொறுப்பை ஒப்படைக்கவும்

[161] மோசம் செய்வது எந்த நபிக்கும் தகுதியன்று. எவரேனும் மோசம் செய்தால் அவர் அந்த மோசம் செய்த பொருளையும் மறுமையில் (தம்முடன்) கொண்டுவர வேண்டியதாகும். பின்னர் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது செய்த செயலுக்கு(ரிய பலனை) முழுமையாக அளிக்கப்படும். அவை அநீதி செய்யப்பட மாட்டாது

[162] அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றுபவர் அல்லாஹ்வின் கோபத்தில் சிக்கியவனைப் போல் ஆவாரா? (அல்ல! கோபத்தில் சிக்கிய) அவனின் தங்குமிடம் நரகமாகும். அது மிகக் கெட்ட தங்குமிடமாகும்

[163] (அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றிய) அவர்கள் அல்லாஹ்விடத்தில் பல (உயர்) பதவிகளை அடைகின்றனர். அல்லாஹ் அவர்களின் செய்கைகளை உற்று நோக்குகிறான்

[164] அல்லாஹ், நம்பிக்கையாளர்களின் மீது மெய்யாகவே அருள் புரிந்திருக்கிறான். அவர்களுக்காக ஒரு தூதரை (அதுவும்) அவர்களில் இருந்தே அனுப்பினான். அவர் அவர்களுக்கு அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து, அவர்களை பரிசுத்தமாக்கியும் வைக்கிறார். மேலும், அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுக்கிறார். நிச்சயமாக அவர்கள் இதற்கு முன் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருந்தனர்

[165] (நம்பிக்கையாளர்களே! ‘‘பத்ரு' போரில்) இதைவிட இருமடங்கு சிரமத்தை நீங்கள் அவர்களுக்கு உண்டு பண்ணியிருந்தும் இந்த சிரமம் (உஹுத் போரில்) உங்களுக்கு ஏற்பட்ட சமயத்தில் இது எப்படி (யாரால்) ஏற்பட்டது? என நீங்கள் கேட்(க ஆரம்பித்துவிட்)டீர்கள். (நீங்கள் செய்த தவறின் காரணமாக) உங்களால்தான் இது ஏற்பட்டதென்றும், நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன் என்றும் (நபியே!) கூறுவீராக

[166] இரு படைகளும் சந்தித்த அன்று உங்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் அல்லாஹ்வின் கட்டளைப்படியேதான் (ஏற்பட்டது). உண்மை நம்பிக்கையாளர்களையும், நயவஞ்சகர்களையும் பிரித்தறிவிப்பதற்காகவே (இவ்வாறு செய்தான்)

[167] (நம்பிக்கையாளர்களே! அந்நயவஞ்சகர்களை நோக்கி நம்முடன் சேர்ந்து) அல்லாஹ்வின் பாதையில் போர்புரிய வாருங்கள் அல்லது அ(ந்த நிராகரிப்ப)வர்களைத் தடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறப்பட்டதற்கு ‘‘(இதை) நாங்கள் போர் என்று கருதியிருந்தால் நிச்சயமாக உங்களைத் தொடர்ந்(தே வந்)திருப்போம்'' என்று அவர்கள் கூறினார்கள். அன்றைய தினம் அவர்கள் நம்பிக்கையைவிட நிராகரிப்புக்கே மிகவும் நெருங்கி இருந்தார்கள். தங்கள் மனதில் இல்லாதவற்றையே அவர்கள் தங்கள் வாயால் கூறினார்கள். அவர்கள் (தங்கள் மனதில்) மறைத்துக் கொண்டிருப்பதை அல்லாஹ் நன்கறிவான்

[168] இவர்கள் (தங்கள் வீட்டில்) இருந்து கொண்டே (போரில் இறந்துபோன) தங்கள் சகோதரர்களைப் பற்றி ‘‘அவர்களும் எங்களைப் பின்பற்றி இருந்தால் (போருக்குச் சென்று இப்படி) கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்'' என்றும் கூறினார்கள். (ஆகவே, நபியே!) கூறுவீராக: ‘‘நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் (அவர்களை என்ன, முதலில்!) நீங்கள் உங்களை விட்டு மரணத்தைத் தடுத்துப் பாருங்கள்

[169] (நபியே!) அல்லாஹ்வின் பாதையில் (போர்செய்து) வெட்டப்பட்டோரை இறந்து விட்டவர்கள் என நீர் ஒருபோதும் எண்ண வேண்டாம். மாறாக, அவர்கள் தங்கள் இறைவனிடத்தில் நிச்சயமாக உயிரோடு இருக்கிறார்கள். (மேலும்,) அவர்களுக்கு உணவும் அளிக்கப்படுகிறது

[170] அல்லாஹ் தன் அருளால் (வீரமரணம் எய்திய) அவர்களுக்கு அளித்தவற்றைக் கொண்டு ஆனந்தமடைகிறார்கள். இன்னும், தங்களுடன் சேராமல் தங்களுக்குப் பின் (இவ்வுலகில் உயிரோடு) இருப்பவர்களைப் பற்றி ‘‘அவர்களுக்கு எவ்வித பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்'' என்று மகிழ்ச்சியடைகின்றனர்

[171] அல்லாஹ்வி(ன் அருளி)னால் தாங்கள் அடைந்த பாக்கியத்தைப் பற்றியும், மேன்மையைப் பற்றியும் ‘‘நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கையாளர்களின் (நற்)கூலியை (ஒரு சிறிதும்) வீணாக்கி விடவில்லை'' என்றும் மகிழ்ந்து கொண்டிருப்பார்கள்

[172] அவர்கள் எத்தகையவர்கள் என்றால், காயமடைந்த பின்னரும் அல்லாஹ்வுடைய, (அவனுடைய) தூதருடைய அழைப்பை ஏற்று (போருக்கு)ச் சென்றனர். (அல்லாஹ்வுக்குப்) பயந்து நன்மை செய்த இவர்களுக்கு மகத்தான (நற்)கூலி உண்டு

[173] (சில) மக்கள் அவர்களிடம் (வந்து) ‘‘உங்களுக்கு எதிராக (போர்புரிய) எல்லா வகுப்பினரும் நிச்சயமாக ஒன்று சேர்ந்திருக்கின்றனர் (ஆதலால்,) அவர்களுக்குப் பயந்து கொள்ளுங்கள்'' என்று கூறிய சமயத்தில், அவர்களுக்கு (பயம் ஏற்படுவதற்குப் பதிலாக) நம்பிக்கையே அதிகரித்தது. மேலும், ‘‘அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன். அவன் சிறந்த பொறுப்பேற்பவன் (பாதுகாவலன்)'' என்றும் கூறினார்கள்

[174] ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடையையும் பாக்கியத்தையும் பெற்றுத் திரும்பி வந்தார்கள். அவர்களை எத்தகைய தீங்கும் அணுகவில்லை. (ஏனென்றால்) அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தையே பின்பற்றிச் சென்றார்கள். (பொருளை விரும்பிச் செல்லவில்லை.) அல்லாஹ்வோ மகத்தான கொடையுடையவன். (ஆகவே, பொருளையும் அவர்களுக்கு அளித்தான்)

[175] இவ்வாறு (அவர்களைப் பயமுறுத்தச்) செய்தது ஒரு ஷைத்தான் தான். அவன் தன் நண்பர்களைப் பற்றி (அவர்களுக்குப்) பயமுறுத்தினான். ஆகவே, நீங்கள் உண்மை நம்பிக்கையாளர்களாக இருந்தால் அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; எனக்கே பயப்படுங்கள்

[176] (நபியே!) நிராகரிப்பில் விரைந்து செல்பவர்களைப் பற்றி நீர் கவலைப்பட வேண்டாம். (ஏனென்றால், அதனால்) நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கு ஒரு தீங்கும் செய்துவிட முடியாது. மறுமையில் அவர்களுக்கு எத்தகைய பாக்கியமும் கிடைக்காமல் இருக்கும்படிச்செய்ய அல்லாஹ் விரும்புகிறான். (ஆகவேதான் அவர்கள் நிராகரிக்கின்றனர்.) அவர்களுக்கு பெரிய வேதனையும் உண்டு

[177] எவர்கள் (தங்கள்) நம்பிக்கையைக் கொடுத்து நிராகரிப்பைப் பெற்றுக் கொண்டார்களோ, அவர்கள் (அதனால்) நிச்சயமாக அல்லாஹ்வுக்கு ஒரு அற்ப அளவும் தீங்கிழைத்துவிட முடியாது. தவிர, அவர்களுக்குத்தான் துன்புறுத்தும் வேதனை உண்டு

[178] நிராகரிப்பவர்களை (தண்டிக்காமல்) நாம் தாமதப்படுத்துவது தங்களுக்கு நல்லதென்று நிச்சயமாக அவர்கள் எண்ணிவிட வேண்டாம். (வேதனையை) நாம் அவர்களுக்குத் தாமதப்படுத்துவதெல்லாம் (அவர்களுடைய) பாவம் (மேன்மேலும்,) அதிகரிப்பதற்காகவேதான். மேலும், (முடிவில்) அவர்களுக்கு இழிவு தரும் வேதனை உண்டு

[179] (நயவஞ்சகர்களே!) நீங்கள் இருக்கும் இந்த நிலைமையில் நல்லவர்கள் இன்னாரென்றும் தீயவர்கள் இன்னாரென்றும் பிரித்தறிவிக்கும் வரை (உங்களுடன் கலந்திருக்க) அல்லாஹ் (நம்பிக்கையாளர்களை) விட்டுவைக்க மாட்டான். மறைவானவற்றையும் அல்லாஹ் உங்களுக்கு அறிவிக்கமாட்டான். எனினும் தன் தூதர்களில் தான் விரும்பியவர்களை (இதை அறிவிக்க) அல்லாஹ் தேர்ந்தெடுத்துக் கொள்வான். ஆகவே, அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நம்பிக்கைகொள்ளுங்கள். நீங்கள் (உண்மையாகவே அல்லாஹ்வை) நம்பிக்கை கொண்டு (அவனுக்குப்) பயந்து (நடந்து)கொண்டால் உங்களுக்கு மகத்தான (நற்)கூலி உண்டு

[180] எவர்கள், அல்லாஹ் தன் அருளால் தங்களுக்கு வழங்கிய பொருள்களில் கஞ்சத்தனம் செய்கிறார்களோ அவர்கள் அது தங்களுக்கு நல்லது என்று எண்ணிவிட வேண்டாம். அது அவர்களுக்குத் தீங்காகவே இருக்கும். கஞ்சத்தனத்தால் சேர்த்த பொருள் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக (இரும்பு வளையமாக) மாட்டப்படும். வானங்கள் பூமியின் வாரிசுரிமை அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை எல்லாம் நன்கறிந்தவன் ஆவான்

[181] எவர்கள் ‘‘நிச்சயமாக அல்லாஹ் ஏழை; நாங்கள்தான் சீமான்கள்'' என்று கூறினார்களோ, அவர்களுடைய சொல்லை திட்டமாக அல்லாஹ் கேட்டுக் கொண்டான். (இப்படி) அவர்கள் கூறியதையும், நியாயமின்றி நபிமார்களை அவர்கள் கொலை செய்ததையும் நிச்சயமாக நாம் பதிவு செய்கிறோம். (ஆகவே, மறுமையில் அவர்களை நோக்கி) ‘‘எரிக்கும் வேதனையை நீங்கள் சுவைத்துப்பாருங்கள்'' என நாம் கூறுவோம்

[182] ‘‘நீங்கள் உங்கள் கைகளால் தேடிக் கொண்டதுதான் இதற்குக் காரணமாகும். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களுக்கு சிறிதும் அநியாயம் செய்வதில்லை'' (என்றும் கூறுவோம்)

[183] இவர்கள் ‘‘எத்தூதராயினும், அவர் கொடுக்கும் பலியை நெருப்பு (கரித்து) புசிப்பதை அவர் நமக்குக் காட்டும்வரை அவரை நாங்கள் நம்பிக்கை கொள்ளக் கூடாது என்று நிச்சயமாக அல்லாஹ் எங்களிடம் உறுதிமொழி வாங்கியிருக்கிறான்'' என்றும் கூறுகின்றனர். (அதற்கு நபியே!) கூறுவீராக: ‘‘எனக்கு முன்னர் உங்களிடம் வந்த நபிமார்களில் பலர் நீங்கள் கேட்ட இதையும் (வேறு பல) தெளிவான அத்தாட்சிகளையும் கொண்டு வந்தார்கள். (அப்படி இருக்க, உங்கள் கூற்றில்) நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் அவர்களை நீங்கள் ஏன் கொலை செய்தீர்கள்

[184] (இதற்குப்) பின்னரும் அவர்கள் உம்மைப் பொய்யரெனக் கூறினால் (அதைப்பற்றி நீர் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால்,) உமக்கு முன்னர் வந்த பல தூதர்களையும் அவர்கள் (இவ்வாறே) பொய்யரெனக் கூறினார்கள். அவர்களோ தெளிவான அத்தாட்சிகளையும், வேத நூல்களையும், பிரகாசமான வேதத்தையும் கொண்டு வந்தே இருந்தனர்

[185] ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரவேண்டும். (எனினும்) உங்கள் (செயல்களுக்குரிய) கூலிகளை நீங்கள் முழுமையாக அடைவதெல்லாம் மறுமை நாளில்தான். ஆகவே, (அந்நாளில்) எவர் (நரக) நெருப்பிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு சொர்க்கத்தில் நுழைவிக்கப்படுகிறாரோ அவர் நிச்சயமாக பெரும் பாக்கியத்தை அடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கக்கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிர வேறில்லை

[186] (நம்பிக்கையாளர்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் (நஷ்டம் இழைக்கப்படுவதன் மூலம்) நிச்சயமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களாலும், இணைவைத்து வணங்குபவர்களாலும், பல வசை மொழிகளை நிச்சயமாக நீங்கள் செவியுறுவீர்கள். (ஆகவே, இத்தகைய சிரமங்களை) நீங்கள் பொறுமையுடன் சகித்தவர்களாகவும், அல்லாஹ்வை பயந்தவர்களாகவும் வாழ்ந்துவந்தால் (நீங்கள் வெற்றியடைவீர்கள்)... நிச்சயமாக இதுதான் வீரச்செயலாக இருக்கும்

[187] வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் ‘‘(உங்களுக்குக் கொடுக்கப்பட்ட) வேதத்தை மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். அதை மூடி மறைத்துவிடக் கூடாது'' என்று அல்லாஹ் உறுதிமொழி வாங்கியதை (நபியே! அவர்களுக்கு) ஞாபகமூட்டுவீராக. (எனினும்) அவர்கள் (தங்களின்) இவ்வுறுதிமொழியைத் தங்கள் முதுகுப்புறமாக எறிந்துவிட்டு இதற்குப் பிரதியாகச் சொற்ப கிரயத்தைப் பெற்றுக்கொண்டனர். அவர்கள் பெற்றுக்கொண்டது மகா கெட்டதாகும்

[188] (நபியே!) எவர்கள் தாங்கள் செய்த (அற்ப) காரியத்தைப் பற்றி மகிழ்ச்சியடைந்து, தாம் செய்யாத (நன்மையான) காரியங்களைப் பற்றியும், (தாம் செய்ததாக மக்கள்) தம்மைப் புகழ்வதை விரும்புகிறார்களோ அவர்கள் வேதனையிலிருந்து தப்பித்துக் கொள்வார்கள் என்று நிச்சயமாக (ஒரு காலமும்) நீர் எண்ண வேண்டாம். கண்டிப்பாக அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையுண்டு

[189] வானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே! அனைத்தின் மீதும் அல்லாஹ் பேராற்றலுடையவன் ஆவான்

[190] வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறிமாறி வருவதிலும் அறிவுடையவர்களுக்கு நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன

[191] இவர்கள் நின்ற நிலையிலும், இருப்பிலும், படுக்கையிலும் அல்லாஹ்வையே நினைத்து, வானங்களையும் பூமியையும் அவன் படைத்திருப்பதை ஆராய்ச்சி செய்வார்கள். மேலும், ‘‘எங்கள் இறைவனே! நீ இவற்றை வீணாக படைக்கவில்லை. நீ மிகத்தூயவன். (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை நீ காப்பாற்றுவாயாக

[192] எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ எவர்களை (நரக) நெருப்பில் நுழைத்து விட்டாயோ அவர்களை நிச்சயமாக நீ இழிவுபடுத்திவிட்டாய். (அத்தகைய) அநியாயக்காரர்களுக்கு உதவி செய்பவர்கள் (ஒருவரும்) இல்லை

[193] எங்கள் இறைவனே! (உன்) தூதரின் அழைப்பை நாங்கள் நிச்சயமாக செவியுற்றோம். (அவர்) எங்களை நம்பிக்கையின்பக்கம் அழைத்து ‘‘உங்கள் இறைவனை நம்பிக்கை கொள்ளுங்கள்'' என்று கூறினார். நாங்களும் (அவ்வாறே) நம்பிக்கை கொண்டோம். ஆதலால், எங்கள் இறைவனே! நீ எங்கள் குற்றங்களை மன்னிப்பாயாக! எங்கள் பாவங்களை எங்களை விட்டும் அகற்றிடுவாயாக! (முடிவில்) நல்லவர்களுடன் எங்கள் உயிரை கைப்பற்றுவாயாக

[194] எங்கள் இறைவனே! உன் தூதர்கள் மூலம் எங்களுக்கு நீ வாக்களித்ததை எங்களுக்கு தந்தருள் புரிவாயாக! மறுமை நாளில் நீ எங்களை இழிவுபடுத்தி விடாதே! நிச்சயமாக நீ வாக்குறுதி தவறுபவனல்ல'' (என்று பிரார்த்தனை செய்து கொண்டிருப்பார்கள்)

[195] ஆதலால், அவர்களுடைய இறைவன் அவர்களுடைய பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொண்டதுடன் ‘‘உங்களில் ஆண், பெண் (இரு பாலரிலும்) எவர்கள் நன்மை செய்தபோதிலும் நிச்சயமாக நான் அதை வீணாக்கிவிடமாட்டேன். (ஏனென்றால்) உங்களில் (ஆணோ பெண்ணோ) ஒருவர் மற்றொருவரில் உள்ளவர் தான். (ஆகவே, கூலி கொடுப்பதில் ஆண், பெண் என்ற பாகுபாடில்லை. உங்களில்) எவர்கள் தங்கள் ஊரிலிருந்து வெளியேறியும், (பிறரால்) வெளியேற்றப்பட்டும், என் பாதையில் துன்புறுத்தப்பட்டும், போர் செய்து அதில் கொல்லப்பட்டும் (இறந்து) விடுகின்றனரோ அவர்களுடைய பாவங்களை அவர்களை விட்டு நிச்சயமாக நாம் அகற்றிடுவோம். தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சொர்க்கங்களிலும் நிச்சயமாக நாம் அவர்களை நுழையவைப்போம்'' (என்று கூறுவான். இது) அல்லாஹ்வினால் (அவர்களுக்குக்) கொடுக்கப்படும் நன்மையாகும். அல்லாஹ்விடத்தில் (இன்னும் இதைவிட) மிக்க அழகான வெகுமதியும் இருக்கிறது

[196] (நபியே!) நிராகரிப்பவர்கள் (பெரும் வியாபாரிகளாகவும் செல்வந்தர்களாகவும் ஆடம்பரமாக) நகரங்களில் சுற்றித்திரிந்து கொண்டிருப்பது உம்மை மயக்கி (ஏமாற்றி) விடவேண்டாம்

[197] (இது) அற்ப சுகமாகும். இதற்குப் பின்னர் அவர்களின் தங்குமிடம் நரகம்தான். அது தங்குமிடங்களில் மிகக்கெட்டது

[198] ஆயினும், எவர்கள் தங்கள் இறைவனுக்குப் பயந்து (ஒழுங்காக நடந்து) கொள்கிறார்களோ அவர்களுக்கு தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சொர்க்கங்களுண்டு. அதில் அல்லாஹ்வின் விருந்தினராக (என்றென்றுமே) தங்கிவிடுவார்கள். நல்லோருக்காக அல்லாஹ்விடம் இருப்பது மிகச் சிறந்ததாகும்

[199] (நம்பிக்கையாளர்களே!) வேதத்தையுடையவர்களில் நிச்சயமாக (இப்படியும்) சிலர் இருக்கின்றனர்; அவர்கள் அல்லாஹ்வையும், உங்களுக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், அவர்களுக்கு அருளப்பட்ட (மற்ற)வற்றையும் நம்பிக்கைகொண்டு அல்லாஹ்வுக்கும் பயந்து நடக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களைக் கொடுத்து சொற்ப கிரயத்தைப் பெற்றுக் கொள்வதுமில்லை. இவர்களுக்கு இவர்களுடைய கூலி இவர்களது இறைவனிடத்தில் (மகத்தானதாக) இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகத்தீவிரமானவன்

[200] நம்பிக்கையாளர்களே! நீங்கள் பொறுமையைக் கடைப்பிடியுங்கள். (எதிரிகளை விட) நீங்கள் அதிகம் சகித்துக் கொள்ளுங்கள். (எதிரியை எதிர்க்க) எந்நேரமும் தயாராக இருங்கள். அல்லாஹ்வுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். நீங்கள் (இம்மையிலும் மறுமையிலும்)

அந்நிஸா

Surah 4

[1] மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்தக் கலப்பு உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான்

[2] நீங்கள் அநாதைகளின் பொருள்களை (அவர்கள் பருவமடைந்த பின் குறைவின்றி) அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள். (அதிலுள்ள) நல்லதுக்குப் பதிலாகக் கெட்டதை மாற்றி விடாதீர்கள். அவர்களுடைய பொருள்களை உங்கள் பொருள்களுடன் சேர்த்து விழுங்கி விடாதீர்கள். நிச்சயமாக இது பெரும் பாவமாகும்

[3] அநாதை(ப் பெண்களை திருமணம் செய்துகொண்டு, அவர்)கள் விஷயத்தில் நீதமாக நடக்க மாட்டோம் என நீங்கள் அஞ்சினால், மற்ற பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நான்கு நான்காகவோ நீங்கள் திருமணம் செய்துகொள்ளலாம். (அவ்வாறு பலரை திருமணம் செய்தால் அப்போதும் அவர்களுக்கிடையில் நீங்கள் நீதமாகவே நடந்துகொள்ள வேண்டும்.) நீங்கள் நீதமாக நடக்க முடியாதென பயந்தால் ஒரு பெண்ணை (மட்டும் திருமணம் செய்துகொள்ள வேண்டும்). அல்லது நீங்கள் வாங்கிய அடிமைப் பெண்ணையே போதுமாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் தவறு செய்யாமலிருப்பதற்கு இதுவே சுலபமா(ன வழியா)கும்

[4] நீங்கள் (திருமணம் செய்துகொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய ‘‘மஹரை' (திருமணக் கட்டணத்தை)க் கண்ணியமான முறையில் கொடுத்து விடுங்கள். அதிலிருந்து ஒரு சிறிதை அவர்கள் (தங்கள்) மனமாற உங்களுக்கு விட்டுக் கொடுத்தால் அதை நீங்கள் மகிழ்ச்சியுடன் புசிக்கலாம்

[5] (அநாதைகளின் பொருளுக்குப் பொறுப்பாளரான நீங்கள் அந்த அனாதைகள்) புத்திக் குறைவானவர்களாயிருந்தால் வாழ்க்கைக்கே ஆதாரமாக அல்லாஹ் அமைத்திருக்கும் உங்களிடமுள்ள (அவர்களின்) பொருள்களை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். எனினும், (அவர்களுக்குப் போதுமான) உணவையும், அவர்களுக்கு (வேண்டிய) ஆடைகளையும், அதிலிருந்து கொடுத்து அவர்களுக்கு அன்பான வார்த்தைகளைக் கூறி (நல்லறிவைப் புகட்டி) வருவீர்களாக

[6] மேலும், அநாதை(ச் சிறுவர்களுக்கு நல்லொழுக்கம், கல்வி, தொழில் திறமைகளை கற்பித்து அவர்)களைச் சோதித்து வாருங்கள். அவர்கள் திருமண பருவத்தை அடைந்த பின்னர் (தங்கள் சொத்தை நிர்வகிக்கக்கூடிய) அறிவை (திறமையை) அவர்களிடம் நீங்கள் கண்டால், அவர்களுடைய செல்வங்களை அவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள். அவர்கள் பெரியவர்களாகி(த் தங்கள் செல்வங்களைப் பெற்றுக்கொண்டு) விடுவார்கள் என்ற எண்ணத்தின் மீது, அவர்களுடைய செல்வங்களை அவசரமாகவும் அளவு கடந்தும் சாப்பிட்டு அழித்து விடாதீர்கள். (அநாதைகளின் பொறுப்பாளர்) பணக்காரராக இருந்தால் (அநாதையின் செல்வங்களிலிருந்து தனக்காக எதையும் பயன்பெறாமல்) தவிர்த்துக் கொள்ளவும். அவர் ஏழையாக இருந்தாலோ முறையான அளவு (அதிலிருந்து) புசிக்கலாம். அவர்களுடைய செல்வங்களை நீங்கள் அவர்களிடம் ஒப்படைத்தால் அதற்காக சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். (உண்மைக்) கணக்கை அறிய அல்லாஹ் போதுமானவன். (ஆகவே, அவர்களுடைய கணக்கில் ஏதும் மோசம் செய்யாதீர்கள்)

[7] (இறந்துபோன) தாயோ, தந்தையோ, உறவினர்களோ விட்டுப்போன பொருள்களில் (அவை அதிகமாகவோ கொஞ்சமாகவோ இருந்த போதிலும்) ஆண்களுக்குப் பாகமுண்டு. (அவ்வான்ற) தாயோ, தந்தையோ, உறவினர்களோ விட்டுச் சென்ற பொருள்களில், அவை அதிகமாகவோ கொஞ்சமாகவோ இருந்தபோதிலும் பெண்களுக்கும் பாகமுண்டு. (இது அல்லாஹ்வினால்) ஏற்படுத்தப்பட்ட பாகமாகும்

[8] (பாகப்) பிரிவினை செய்துகொள்ளும் இடத்திற்கு (பங்குதாரல்லாத) உறவினர்களோ, அனாதைகளோ, ஏழைகளோ வந்துவிட்டால், அவர்களுக்கும் அதிலிருந்து (ஏதும்) கொடுத்து, அவர்களுக்கு அன்பான வார்த்தைகளைக் (கொண்டு ஆறுதல்) கூறி (அனுப்பி)விடுங்கள்

[9] எவர்கள் தாங்கள் மரணித்தால் தங்களுக்குப்பின் உள்ள பலவீனமான (தமது) சந்ததிகளுக்கு என்ன நிலைமை ஆகும் என்று பயப்படுகிறார்களோ அதுபோன்று அவர்கள் பிற (உறவினர்களின்) அநாதைகளின் விஷயத்திலும் பயந்து கொள்ளட்டும். அவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும். மேலும், நேர்மையான வார்த்தையை சொல்லட்டும்

[10] எவர்கள் அநாதைகளின் பொருள்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிற்றில் நிச்சயமாக நெருப்பையே கொட்டிக் கொள்கிறார்கள். பின்னர் (மறுமையில்) கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் புகுவார்கள்

[11] உங்கள் சந்ததியில் (ஆணும், பெண்ணும் இருந்தால்) ஓர் ஆணுக்கு இரு பெண்க ளுக்குரியது போன்ற பாகம் உண்டென்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கிறான். (உங்கள் சந்ததிகளாகிய) அவர்கள் (ஆண் இன்றி) பெண்களாகவே இருந்து அவர்கள் (இருவராகவும் அல்லது) இருவருக்கு அதிகமாகவும் இருந்தால் (எத்தனை பேர்கள் இருந்தபோதிலும்) அவர் (இறந்தவர்) விட்டுச் சென்ற (சொத்)தில் மூன்றில் இரண்டையே (சமமாக) அடைவார்கள். ஒரே ஒரு பெண்ணாக இருந்தால் அவளுக்கு (இறந்தவர் விட்டுச் சென்ற பொருளில்) பாதி உண்டு. (உங்களில்) இறந்தவருக்கு சந்ததியுமிருந்து (தாய் தந்தையும் இருந்தால்) தாய், தந்தை ஒவ்வொருவருக்கும் (இறந்தவர்) விட்டுச்சென்ற (சொத்)தில் ஆறில் ஒரு பாகமுண்டு. இறந்தவருக்கு வாரிசு இல்லாமலிருந்து தாய், தந்தைகளே, வாரிசுக்காரர்களானால் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம்தான். (மற்ற இரு பாகமும் தந்தையைச் சாரும். இத்தகைய நிலைமையில் இறந்தவருக்கு பல) சகோதரர்கள் இருந்தால் தாய்க்கு ஆறில் ஒன்றுதான் (மீதமுள்ளது தந்தையைச் சாரும். ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி மட்டும் இருந்தால் தாய்க்கு மூன்றில் ஒன்று உண்டு. இவை அனைத்தும் வஸீயத் எனும்) மரண சாசனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னரே (மீதமுள்ள சொத்தில் பங்கு பிரிக்க வேண்டும்). உங்கள் தந்தைகளோ அல்லது உங்கள் சந்ததிகளோ (இவர்களில்) உங்களுக்குப் பலனளிப்பதில் நெருங்கியவர்கள் யாரென்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள். (ஆகவே, இவை) அல்லாஹ்வினால் (உங்கள் மீது) விதிக்கப்பட்டுள்ளன. நிச்சயமாக அல்லாஹ் மிக அறிந்தவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான். (ஆகையால் அவன் விதித்தபடி பங்கிட்டுக் கொள்ளுங்கள்)

[12] உங்கள் மனைவி(கள் இறந்து அவர்)களுக்குப் பிள்ளைகளும் இல்லாவிட்டால் அவர்கள் விட்டுச் சென்ற சொத்தில் உங்களுக்குப் பாதி உண்டு. அவர்களுக்குப் பிள்ளைகள் இருந்தாலோ அவர்கள் விட்டுச் சென்றதில் உங்களுக்குக் கால் பாகம்தான் (கிடைக்கும்). அதுவும் அவர்களுடைய மரண சாசனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னரே! உங்களுக்குப் பிள்ளைகள் இல்லாத நிலைமையில் (நீங்கள் இறந்து விட்டாலோ) உங்கள் மனைவிகளுக்கு நீங்கள் விட்டுச்சென்ற (சொத்)தில் கால் பாகம்தான் (கிடைக்கும்). உங்களுக்குப் பிள்ளைகள் இருந்தாலோ நீங்கள் விட்டுச் சென்ற சொத்தில் எட்டில் ஒரு பாகம்தான் அவர்களுக்கு உண்டு. அதுவும் (உங்கள்) மரண சாசனத்தையும், கடனையும் நீங்கள் கொடுத்த பின்னரே! (தந்தை, பாட்டன், பிள்ளை, பேரன் ஆகிய) வாரிசுகள் இல்லாத ஓர் ஆணோ அல்லது ஒரு பெண்ணோ இறந்து, (அவர்களுக்கு) ஒரே ஒரு சகோதரன் அல்லது ஒரே ஒரு சகோதரி இருந்தால், ஒவ்வொருவருக்கும் (இறந்தவர் விட்டுச் சென்றதில்) ஆறில் ஒரு பாகமுண்டு. இதற்கு அதிகமாக (அதாவது ஒருவருக்கு மேற்பட்டு சகோதரனும், சகோதரியும் அல்லது இரண்டு சகோதரர்கள், சகோதரிகள்) இருந்தால் (சொத்தில்) மூன்றில் ஒரு பாகத்தில் அவர்கள் அனைவரும் சமமான பங்குதாரர்கள். இதுவும் (அவருடைய) மரண சாசனம், கடன் ஆகியவற்றைக் கொடுத்த பின்னரே! எனினும், (இந்தக் கடன், மற்றும் மரண சாசனத்தால் வாரிசுகளில் எவருக்கும்) நஷ்டம் ஏற்படுத்தாதவராக இருக்கவேண்டும். (இது) அல்லாஹ்வுடைய நல்லுபதேசமாகும். அல்லாஹ் மிக அறிந்தவன், பொறுமையுடையவன் ஆவான்

[13] இவை அல்லாஹ்வின் சட்டவரம்புகளாகும். எவர்கள் (இவ்விஷயங்களில்) அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கிறார்களோ அவர்களை அல்லாஹ் சொர்க்கங்களில் சேர்க்கிறான். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும். அதிலேயே அவர்கள் (என்றென்றும்) தங்கிவிடுவார்கள். இதுதான் மகத்தான பெரும் வெற்றியாகும்

[14] எவன் (இவ்விஷயங்களில்) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறுசெய்து, அவன் ஏற்படுத்திய சட்டவரம்புகளை மீறுகிறானோ அவனை நரகத்தில் புகுத்தி விடுவான். அதிலேயே அவன் (என்றென்றும்) தங்கி விடுவான். இழிவுபடுத்தும் வேதனையும் அவனுக்கு உண்டு

[15] உங்கள் பெண்களில் எவளேனும் விபசாரம் செய்து விட்(டதாகக் குற்றம் சாட்டப்பட்)டால் (அக்குற்றத்தை நிரூபிக்க) அவளுக்காக உங்களில் நான்கு சாட்சிகளை அழையுங்கள். அவர்கள் (அதை உண்மைப்படுத்தி) சாட்சியம் கூறினால் மரணம் அவளுடைய காரியத்தை முடித்துவிடும் வரை அல்லது அல்லாஹ் அவளுக்கு ஒரு வழியை ஏற்படுத்தும் வரை அவளை வீட்டினுள் தடுத்து வைக்கவும்

[16] உங்கள் ஆண்களில் இருவர் மானக்கேடான காரியத்தைச் செய்துவிட்டால் அவ்விருவரையும் (நிந்தித்து, அல்லது அடித்துத்) துன்புறுத்துங்கள். அவ்விருவரும் (தங்கள் குற்றத்திற்காக) வருத்தப்பட்டு (அதிலிருந்து விலகி) ஒழுங்காக நடந்துகொண்டால் அவர்களைப் புறக்கணித்து (விட்டு)விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மகா கருணையாளனாக இருக்கிறான்

[17] எவர்கள் தங்கள் அறியாமையினால் பாவத்தைச் செய்து (அதை பாவமென அறிந்து) பின்னர் வருத்தப்பட்டு அதிசீக்கிரத்தில் (அதிலிருந்து) நீங்கி விடுகிறார்களோ அவர்களை மன்னிப்பதுதான் அல்லாஹ்வின் மீது கடமையாகும். ஆகவே, அல்லாஹ் அவர்களை மன்னித்து விடுகிறான். அல்லாஹ் நன்கறிந்தவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான்

[18] எவர்கள் பாவங்களைச் செய்துகொண்டேயிருந்து, அவர்களுக்கு மரணம் சமீபித்தபோது ‘‘இதோ நான் (என்) பாவங்களை விட்டுவிட்டேன்'' என்று கூறுகிறார்களோ அவர்களுக்கும், எவர்கள் (நம்பிக்கை கொள்ளாது நிராகரித்துவிட்டு) நிராகரித்த நிலையிலேயே இறந்தும் விடுகிறார்களோ அவர்களுக்கும் பாவமன்னிப்புக் கிடையாது. இவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையைத்தான் நாம் தயார்படுத்தி வைத்திருக்கிறோம்

[19] நம்பிக்கையாளர்களே! ஒரு பெண்ணை (அவள் உங்களை விரும்பாது வெறுக்க, இறந்தவனுடைய பொருளாக மதித்து அவளைப்) பலவந்தமாக அடைவது உங்களுக்கு ஆகுமானதல்ல. மேலும், பகிரங்கமாக ஒரு மானக்கேடான காரியத்தைச் செய்தாலன்றி (உங்கள் மனைவியாக வந்த) பெண்களுக்கு நீங்கள் கொடுத்ததில் சிலவற்றை எடுத்துக் கொள்வதற்காக அவர்களை (உங்கள் வீட்டில்) நீங்கள் தடுத்தும் வைக்காதீர்கள். மேலும், அவர்களுடன் கண்ணியமான முறையிலும் (சகிப்புத் தன்மையுடனும்) நடந்துகொள்ளுங்கள். அவர்களை நீங்கள் வெறுத்தபோதிலும் சரியே! ஏனென்றால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் பல நன்மைகளை வைத்திருக்கலாம்

[20] ஒரு மனைவி(யை நீக்கிவிட்டு அவளு)க்குப் பதிலாக மற்றொரு பெண்ணை (மணந்துகொள்ள) நீங்கள் கருதினால் (நீக்கிவிட விரும்பும்) அந்த முந்திய மனைவிக்கு நீங்கள் ஒரு (பொற்)குவியலைக் கொடுத்திருந்த போதிலும் அதிலிருந்து எதையும் நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள். அபாண்டமாகவும் பகிரங்கமாகவும் ஒரு குற்றத்தைச் சுமத்தி அ(வளுக்கு நீங்கள் கொடுத்த)தை நீங்கள் பறித்துக் கொள்ளலாமா

[21] அதை நீங்கள் எவ்வாறு எடுத்துக் கொள்ளலாம். உங்களிடமிருந்து அவள் உறுதியான வாக்குறுதியை (பலரும் அறிய) பெற்று உங்களில் ஒருவர் மற்றொருவருடன் (சேர்ந்து) கலந்து விட்டீர்களே

[22] முன்னர் நடந்துபோன சம்பவங்களைத் தவிர உங்கள் தந்தைகள் திருமணம் செய்துகொண்ட பெண்களில் எவரையும் (அவர்கள் இறந்த பின்னர் இனி) நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள். நிச்சயமாக இது மானக்கேடானதாகவும், வெறுக்கக்கூடியதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது

[23] உங்கள் தாய்மார்களும், உங்கள் பெண்பிள்ளைகளும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தந்தையின் சகோதரிகளும், உங்கள் தாயின் சகோதரிகளும், உங்கள் சகோதரனின் பெண்பிள்ளைகளும், உங்கள் சகோதரியின் பெண்பிள்ளைகளும், உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும், பால்குடி சகோதரிகளும், உங்கள் மனைவியின் தாய்மார்களும் (ஆகிய இவர்களை நீங்கள் திருமணம் செய்து கொள்வது) உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளது. அவ்வாறே நீங்கள் ஒரு பெண்ணை திருமணம் செய்து அவளுடன் நீங்கள் வீடு கூடிவிட்டால் அவளுக்கு முந்திய கணவனால் பிறந்த மகளையும் (நீங்கள் திருமணம் செய்வது கூடாது). அவளைத் திருமணம் செய்த பின்னர் அவளுடன் வீடு கூடாதிருந்தாலோ (அவளை நீக்கிவிட்டு அவளுக்கு முந்திய கணவனால் பிறந்த மகளை திருமணம் செய்து கொள்வதில்) உங்கள் மீது குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த ஆண்மக்களின் மனைவிகளையும் (நீங்கள் திருமணம் செய்வது தடுக்கப்பட்டிருக்கிறது). இரு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவிகளாக) ஒன்று சேர்த்து வைப்பதும் கூடாது. இதற்கு முன்னர் நடந்துவிட்டவற்றைத் தவிர (அறியாத நிலைமையில் முன்னர் நீங்கள் செய்துவிட்டதை அல்லாஹ் மன்னித்துவிடுவான். ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மிகக் கருணையுடையவனாக இருக்கிறான்

[24] கணவனுள்ள பெண்களையும் (நீங்கள் திருமணம் செய்துகொள்வது விலக்கப் பட்டுள்ளது). (எனினும், நிராகரிப்பவர்களுடன் நிகழ்ந்த போரில் பிடிக்கப்பட்டு உங்கள் ஆதிக்கத்தில் இருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர. (இவர்களை நீங்கள் திருமணம் செய்துகொள்ளலாம்.) இவை உங்கள் மீது விதிக்கப்பட்ட அல்லாஹ்வின் கட்டளையாகும். மேற்கூறப்பட்ட பெண்களைத் தவிர மற்ற பெண்களை உங்கள் செல்வங்களின் மூலம் (திருமணக் கட்டணமாகிய ‘மஹரைக்' கொடுத்து சட்டரீதியாக திருமணம் செய்யத்) தேடிக்கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் பத்தினித்தனம் உள்ளவர்களாக இருக்கவேண்டும், விபசாரர்களாக இருக்கக் கூடாது. நீங்கள் திருமணம் செய்துகொண்ட பெண்களில் எவர்களோடு வீடு கூடிவிட்டீர்களோ அவர்களுக்கு குறிப்பிட்ட ‘மஹரை' அவர்களிடம் (குறைவின்றி கண்டிப்பாக) நீங்கள் கொடுத்துவிடுங்கள். எனினும், மஹரைக் குறிப்பிட்டதன் பின்னர் (அதைக் குறைக்கவோ கூட்டவோ) நீங்கள் இருவரும் சம்மதப்பட்டால் அதனால் உங்கள் மீது ஒரு குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ், (உங்கள் செயலை) நன்கறிந்தவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான்

[25] உங்களில் எவருக்குச் சுதந்திரமான முஸ்லிம் பெண்களை திருமணம் செய்து கொள்ள சக்தியில்லையோ, அவர் நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண்களிலிருந்து திருமணம் செய்து கொள்ளலாம். அல்லாஹ் உங்கள் நம்பிக்கையை நன்கறிந்தே இருக்கிறான். (இவ்வடிமைப் பெண்களைக் கேவலமாக எண்ணாதீர்கள். நம்பிக்கையாளர்களாகிய) உங்களில் எவரும் மற்றவருக்குச் சமம்தான். ஆகவே, (நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண்களையும்) அவர்களுடைய எஜமானனின் அனுமதியைப் பெற்று சட்டப்படி அவர்களுக்குரிய மஹரையும் கொடுத்தே நீங்கள் அவர்களை திருமணம் செய்து கொள்ளவேண்டும். (அப்பெண்கள்) பத்தினிகளாக இருக்க வேண்டும். விபசாரிகளாகவோ அல்லது கள்ள நட்புக் கொள்பவர்களாகவோ இருக்கக்கூடாது. திருமணம் செய்துகொள்ளப்பட்ட (அடிமைப்) பெண் விபசாரம் செய்து விட்டால் அவளுக்கு (இத்தகைய குற்றம் செய்த அடிமையல்லாத) திருமணமான சுதந்திரமான பெண்ணுக்கு விதிக்கப்படும் தண்டனையில் பாதி விதிக்கப்படும். தவிர, உங்களில் எவர் தன்னால் பாவம் ஏற்பட்டுவிடுமென பயப்படுகிறாரோ அவருக்குத்தான் இந்த அனுமதி (அதாவது அடிமைப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என்பது.) எனினும், நீங்கள் சகித்துக்கொண்டு பொறுத்திருப்பது (முடியுமாயின் அதுவே) உங்களுக்கு நன்று. அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மகா கருணையுடையவன் ஆவான்

[26] அல்லாஹ் (தன் கட்டளைகளை) உங்களுக்குத் தெளிவாக்கி உங்களுக்கு முன்னிருந்த (நல்ல)வர்கள் சென்ற நேரான வழிகளில் உங்களையும் செலுத்தி உங்கள் குற்றங்களை மன்னிப்பதை(யும் உங்கள் மீது அன்பு செலுத்துவதையும்) விரும்புகிறான். அல்லாஹ் நன்கறிந்தவன், மிக ஞானமுடையவன் ஆவான்

[27] அல்லாஹ்வோ, (நீங்கள் பாவத்திலிருந்து மீண்ட பின்) உங்களை மன்னிப்பதையே விரும்புகிறான். (எனினும்) முற்றிலும் (சரீர) இச்சைகளை பின்பற்றி நடப்பவர்களோ (நேரான வழியிலிருந்து) நீங்கள் முற்றிலும் சாய்ந்து (பாவத்தில் ஆழ்ந்து) விடுவதையே விரும்புகின்றனர்

[28] அல்லாஹ் (தன் கட்டளைகளை) உங்களுக்கு இலகுவாக்கவே விரும்புகிறான். மனிதன் பலவீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான்

[29] நம்பிக்கையாளர்களே! உங்களுக்குள் சம்மதத்தின் பேரில் நடைபெறும் வர்த்தக மூலமாகவேயன்றி உங்களில் ஒருவர் மற்றவரின் பொருள்களைத் தவறான முறையில் விழுங்கிவிட வேண்டாம். (இதற்காக) உங்களில் ஒருவருக்கொருவர் (சச்சரவிட்டு) வெட்டிக்கொள்ள வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிகக் கருணையாளனாக இருக்கிறான்

[30] எவரேனும் (அல்லாஹ்வின்) வரம்பை மீறி அநியாயமாக இவ்வாறு செய்தால், நாம் அவரை (மறுமையில்) நரகத்தில் சேர்த்து விடுவோம். இவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு மிகச் சுலபமானதாக இருக்கிறது

[31] உங்களுக்கு விலக்கப்பட்ட பெரும் பாவமான காரியங்களில் இருந்து நீங்கள் விலகிக்கொண்டால், உங்கள் (மற்ற) சிறிய பாவங்களுக்கு (அதை) நாம் பரிகாரமாக்கி உங்களை (மிக்க) கண்ணியமான இடங்களிலும் நுழைவிப்போம்

[32] உங்களில் சிலரை சிலர் மீது அல்லாஹ் மேன்மையாக்கி (அருள்புரிந்து) இருப்பதைப் பற்றி பேராசை கொள்ளாதீர்கள். ஆண்கள் சம்பாதித்தவை ஆண்களுக்குரியனவே. (அவ்வாறே) பெண்கள் சம்பாதித்தவையும் பெண்களுக்குரியனவே. ஆகவே, (ஆண் பெண் ஒவ்வொருவரும் உழைப்பின் மூலம்) அல்லாஹ்வுடைய அருளைக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கிறான்

[33] தாய், தந்தை, உறவினர்கள் அல்லது நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்டவர்கள் விட்டுச் செல்லும் ஒவ்வொரு பொருளுக்கும் (விகிதப்படி அவர்களுடைய சொத்தை அடையக்கூடிய) வாரிசுகளை நாம் குறிப்பிட்டே இருக்கிறோம். ஆகவே, அவர்களுடைய பாகத்தை அவர்களுக்குக் கொடுத்துவிடவும். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் (நன்கறிந்த) சாட்சியாளனாக இருக்கிறான்

[34] (ஆண், பெண் இரு பாலாரில்) ஆண் பாலாரை(ப் பெண்பாலார் மீது) அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருப்பதுடன் (ஆண்பாலார்) தங்கள் பொருள்களை(ப் பெண் பாலாருக்கு)ச் செலவு செய்வதனாலும் ஆண்கள்தான் பெண்களை நிர்வகிக்கக் கூடியவர்களாக இருக்கின்றனர். ஆகவே, நல்லொழுக்கமுள்ள பெண்கள் (அல்லாஹ்வுக்கும் தங்கள் கணவனுக்கும்) பணிந்தே நடப்பார்கள். (தங்கள் கணவன்) மறைவாக உள்ள சமயத்தில் அல்லாஹ்வின் பாதுகாப்பைக்கொண்டு (தங்களையும் கணவனின் மற்ற பொருள்களையும்) பேணிக்காத்துக் கொள்வார்கள். எவளும் கணவனுக்கு மாறு செய்வாளென்று நீங்கள் அஞ்சினால் அவளுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள். (அவள் திருந்தாவிடில்) படுக்கையில் இருந்து அவளை அப்புறப்படுத்தி வையுங்கள். (அதிலும் அவள் திருந்தாவிட்டால்) அவளை (இலேசாக) அடியுங்கள். அதனால் அவள் உங்களுக்கு கட்டுப்பட்டுவிட்டால் அவள் மீது (வேறு குற்றங்களைச் சுமத்த) ஒரு வழியையும் தேடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக மேலானவனாக, மிகப் பெரியவனாக இருக்கிறான்

[35] (கணவன் மனைவியாகிய) இருவருக்குள் (பிணக்கு ஏற்பட்டு) பிரிவினை ஏற்பட்டுவிடுமோ என்று நீங்கள் அஞ்சினால் அவனுடைய உறவினர்களில் ஒருவரையும், அவளுடைய உறவினர்களில் ஒருவரையும் நடுவர்களாக நீங்கள் ஏற்படுத்துங்கள். (நடுவர்களாகிய) அவ்விருவரும் சமாதானம் ஏற்படுத்த விரும்பினால் கணவன் மனைவி இவ்விருவரையும் அல்லாஹ் ஒற்றுமையாக்கி விடுவான். நிச்சயமாக அல்லாஹ் (அனைவரையும்) நன்கறிந்தவனாக, நன்கு கவனிப்பவனாக இருக்கிறான்

[36] அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள். தாய், தந்தைக்கு நன்றி செய்யுங்கள். (அவ்வாறே) உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அந்நிய அண்டை வீட்டாருக்கும், (எப்பொழுதும்) உங்களுடன் இருக்கக்கூடிய நண்பர்களுக்கும், பயணிகளுக்கும், உங்களிடம் உள்ள அடிமைகளுக்கும், (அன்புடன் நன்றி செய்யுங்கள்). எவன் கர்வம் கொண்டவனாக, பெருமை அடிப்பவனாக இருக்கிறானோ அவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை

[37] அவர்கள் (தாங்கள்) கஞ்சத்தனம் செய்வதுடன் (மற்ற) மனிதர்களையும் கஞ்சத்தனம் செய்யும்படித் தூண்டி, அல்லாஹ் தன் அருளால் அவர்களுக்குக் கொடுத்ததையும் (பிறருக்குக் கொடுக்காமல்) மறைத்துக் கொள்கிறார்கள். அந்த நன்றிகெட்டோருக்கு இழிவுபடுத்தும் வேதனையையே நாம் தயார்படுத்தி வைத்திருக்கிறோம்

[38] எவர்கள் மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவே (பெருமைக்காகத்) தங்கள் பொருள்களைச் செலவு செய்வதுடன் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பிக்கை கொள்ளாதிருக்கின்றனரோ (அவர்களுக்கு ஷைத்தான்தான் நண்பன். ஆகவே,) எவனுக்கு ஷைத்தான் நண்பனாக இருக்கிறானோ அவன் நண்பர்களிலெல்லாம் மிகக் கெட்டவன் ஆவான்

[39] அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டு, அல்லாஹ் இவர்களுக்கு அளித்தவற்றையும் தானம் செய்து வந்தால் அதனால் இவர்களுக்கு என்னதான் நஷ்டமேற்பட்டு விடும்? அல்லாஹ் இவர்களை நன்கறிந்தவனாக இருக்கிறான்

[40] நிச்சயமாக அல்லாஹ் (யாருக்கும் அவர்களுடைய பாவத்திற்கு அதிகமான தண்டனையைக் கொடுத்து) ஓர் அணுவளவும் அநியாயம் செய்வதில்லை. ஆயினும், (ஓர் அணுவளவு) நன்மை இருந்தால் (கூட) அதை இரட்டிப்பாக்கித் தன் அருளால் மேலும், அதற்கு மகத்தான கூலியைக் கொடுக்கிறான்

[41] (நபியே!) ஒவ்வொரு சமூகத்தினரும் (தங்கள்) சாட்சி(களாகிய தங்கள் நபிமார்)களுடன் நம்மிடம் வரும் சமயத்தில் உம்மை இவர்கள் அனைவருக்கும் சாட்சியாக நாம் கொண்டு வந்தால் (உம்மை நிராகரித்த இவர்களுடைய நிலைமை) எப்படி இருக்கும்

[42] (இவ்வாறு அல்லாஹ்வை) நிராகரித்து, (அல்லாஹ்வுடைய) தூதருக்கு மாறுசெய்தவர்கள், பூமி தங்களை ஜீரணித்துவிட வேண்டுமே? என்று அந்நாளில் விரும்புவார்கள். (இவர்கள்) அல்லாஹ்விடத்தில் ஒரு விஷயத்தையும் மறைத்துவிட முடியாது

[43] நம்பிக்கையாளர்களே! நீங்கள் கூறுவது இன்னதென்று நீங்கள் அறிந்துகொள்ள முடியாதவாறு நீங்கள் போதையாயிருக்கும் சமயத்தில் தொழுகைக்குச் செல்லாதீர்கள். தவிர, நீங்கள் முழுக்காயிருந்தால் குளிக்கும் வரையிலும் (தொழுகைக்குச் செல்லாதீர்கள்). ஆயினும், பிரயாணத்தில் இருந்தாலே தவிர. ஆகவே, நீங்கள் நோயாளிகளாகவோ, பிரயாணத்திலோ, மலஜல உபாதைக் கழித்தோ, பெண்களைத் தீண்டி(ச் சேர்ந்து) இருந்தோ, (பிறகு, சுத்தம் செய்துகொள்ள) நீங்கள் தண்ணீரையும் பெற்றுக்கொள்ளாத சமயத்தில் (தொழுகையின் நேரம் வந்துவிடுமேயானால் அதற்காக நீங்கள் தொழுகையைப் பிற்படுத்த வேண்டியதில்லை.) சுத்தமான மண்ணைத் தொட்டு உங்கள் முகங்களையும் உங்கள் கைகளையும் துடைத்து ‘‘தயம்மும்' செய்துகொள்ளுங்கள். (பிறகு, தொழுங்கள்.) நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுப்பவனாக, குற்றங்களை மன்னிப்பவனாக இருக்கிறான்

[44] (நபியே!) வேதத்திலொரு பாகம் கொடுக்கப்பட்டவர்களை நீங்கள் கவனிக்க வில்லையா? அவர்கள், வழிகேட்டை விலைக்கு வாங்கிக் கொண்டதுடன் நீங்களும் வழிகெட்டுவிட வேண்டுமென்றே விரும்புகின்றனர்

[45] உங்கள் (இந்த) எதிரிகளை அல்லாஹ் மிக அறிவான். (உங்களை) காப்பதற்கு அல்லாஹ் போதுமானவன். (உங்களுக்கு) உதவி செய்யவும் அல்லாஹ் போதுமானவன்

[46] யூதர்களில் சிலர் (வேத) வசனங்களைக் கருத்து வேறுபடும்படிப் புரட்டி வருவதுடன் (உங்களை நோக்கி ‘‘நபியே! நீர் சொன்னதை) நாம் செவியுற்றோம். எனினும் நாம் (அதற்கு) மாறு செய்வோம்'' என்று கூறி (உமது) மார்க்கத்தில் குற்றம் சொல்லவும் கருதி (‘‘நபியே! நாம் சொல்வதை) நீர் கேட்பீராக. (இனி வேறு எதையும்) நீர் கேட்காதீர்'' என்றும் கூறி ‘ராயினா' என்று நாவைக் கோணி உளறுகின்றனர். (‘ராயினா' என்னும் பதத்திற்கு அரபி மொழியில் ‘எங்களைக் கவனிப்பீராக' என்பது அர்த்தம். எனினும் யூதர்களுடைய மொழியிலோ ‘மூடனே!' என்பது அர்த்தமாகும். எனினும் அவர்கள் உம்மை நோக்கி ‘‘நபியே! நீர் சொன்னதற்கு) நாம் செவிசாய்த்தோம். (உமக்கு) நாம் கட்டுப்பட்டோம். (நாம் சொல்வதை) நீர் கேட்பீராக (என்று கூறி ‘ராயினா' என்னும் பதத்திற்குப் பதிலாக ‘உன்ளுர்னா') ‘எங்களை அன்பாக நோக்குவீராக' என்றும் கூறியிருந்தால் அது அவர்களுக்கே மிக நன்றாகவும், நேர்மையானதாகவும் இருந்திருக்கும். எனினும், அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக அல்லாஹ் அவர்களைச் சபித்துவிட்டான். ஆதலால், அவர்களில் சிலரைத் தவிர (பெரும்பாலானவர்கள்) நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்

[47] வேதம் கொடுக்கப்பட்டவர்களே! நாம் இறக்கிய (இவ்வேதத்)தை நம்பிக்கை கொள்ளுங்கள். (இதுவோ) உங்களிடமுள்ள (வேதத்)தையும் உண்மையாக்கி வைக்கிறது. இன்றேல் (உங்கள்) முகங்களை மாற்றி அதைப் பின்புறமாகத் திருப்பிவிடுவோம். அல்லது (சனிக்கிழமைகளில் வரம்பு மீறியவர்களான) ‘அஸ்ஹாபுஸ் ஸப்த்தை' நாம் சபித்தவாறு உங்களையும் நாம் சபித்து விடுவோம். அல்லாஹ்வுடைய கட்டளை நடைபெற்றே தீரும்

[48] நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இதைத் தவிர (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். எவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகப்பெரும் பாவத்தையே கற்பனை செய்கிறார்கள்

[49] (நபியே!) பரிசுத்தவான்களென்று எவர்கள் தம்மைத் தாமே பரிசுத்தப்படுத்திக் கொள்கிறார்களோ அவர்களை நீர் கவனிக்கவில்லையா? (அவர்கள் கூறுவது சரியன்று.) அல்லாஹ், தான் விரும்பிய (நல்ல)வர்களைத்தான் பரிசுத்தமாக்கி வைப்பான். (இவ்விஷயத்தில் எவரும்) ஓர் அணுவளவும் அநீதி செய்யப்பட மாட்டார்கள்

[50] (நபியே!) அல்லாஹ்வுக்கு (இணையுண்டென்று) எவ்வாறு அவர்கள் அபாண்டமான பொய்யைக் கற்பனை செய்கின்றனர் என்பதை நீர் கவனிப்பீராக. பகிரங்கமான பாவத்திற்கு இதுவே போதுமா(ன உதாரணமா)க இருக்கிறது

[51] (நபியே!) வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்களை நீர் பார்க்கவில்லையா? அவர்கள் சிலைகளையும், ஷைத்தான்களையும் நம்பிக்கைகொண்டு (மற்ற) நிராகரிப்பவர் களைச் சுட்டிக் காண்பித்து ‘‘இவர்கள்தான் உண்மை நம்பிக்கையாளர்களைவிட மிகவும் நேரான பாதையில் இருக்கின்றனர்'' என்று கூறுகின்றனர்

[52] இவர்களைத்தான் அல்லாஹ் சபிக்கிறான். எவர்களை அல்லாஹ் சபித்து விடுகிறானோ அவர்களுக்கு உதவி செய்யும் ஒருவரையும் நீர் காணமாட்டீர்

[53] இவர்களுக்கு இவ்வுலக ஆட்சியில் சொற்ப பங்காவது இருக்கிறதா? அவ்வாறிருந்தால் மனிதர்களுக்கு ஓர் எள்ளளவும் கொடுக்க மாட்டார்கள்

[54] அல்லாஹ் மனிதர்களில் சிலருக்கு தன் அருளை வழங்கியுள்ளதைப் பற்றி இவர்கள் பொறாமை கொள்கின்றார்களா? நிச்சயமாக நாம் இப்ராஹீமுடைய சந்ததிகளுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்து, அத்துடன் மாபெரும் அரசாங்கத்தையும் அவர்களுக்குக் கொடுத்தோம்

[55] அவ்வாறிருந்தும் அவர்களில் சிலர்தான் அவ்வேதத்தை நம்பிக்கை கொண்டார்கள். மற்றவர்கள் அதை நிராகரித்து விட்டார்கள். (நிராகரித்த அவர்களுக்கு) கொழுந்து விட்டெரியும் நரகமே தகுமா(ன கூலியா)கும்

[56] எவர்கள் நம் (இவ்வேத) வசனங்களை நிராகரிக்கிறார்களோ அவர்களை நிச்சயமாக நாம் (மறுமையில்) நரகத்தில் சேர்த்து விடுவோம். அவர்கள் வேதனையைத் தொடர்ந்து அனுபவிப்பதற்காக அவர்களுடைய தோல்கள் கருகி விடும்போதெல்லாம் வேறு புதிய தோல்களை மாற்றிக்கொண்டே இருப்போம். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான்

[57] (அவர்களில்) எவர்கள் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு, நன்மைகளைச் செய்கிறார்களோ அவர்களை சொர்க்கங்களில் புகுத்துவோம். அதில் தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டே இருக்கும். அவர்கள் அதில் என்றென்றுமே தங்கி விடுவார்கள். பரிசுத்தமான மனைவிகளும் அங்கு அவர்களுக்கு உண்டு. அடர்ந்த (நீங்காத) நிழலிலும் அவர்களை நாம் அமர்த்துவோம்

[58] (நம்பிக்கையாளர்களே! உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருள்களை அதன் உரிமையாளர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விடும்படியும், மனிதர்களுக்கிடையில் நீங்கள் தீர்ப்புக் கூறினால் (பாரபட்சமின்றி) நீதமாகவே தீர்ப்பளிக்கும்படியும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். உங்களுக்கு அல்லாஹ் செய்யும் இவ்வுபதேசம் மெய்யாகவே எவ்வளவு சிறந்தது! நிச்சயமாக அல்லாஹ் செவியுறுபவனாக, உற்று நோக்குபவனாக இருக்கிறான்

[59] நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு நடங்கள். (அவ்வாறே அல்லாஹ்வுடைய) தூதருக்கும், உங்கள் அதிபர்களுக்கும் கட்டுப்பட்டு நடங்கள். (நம்பிக்கையாளர்களே!) உங்களுக்குள் ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்பட்டால் மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டவர்களாயிருந்தால் அதை அல்லாஹ்விடமும் (அவனுடைய) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள். (அவர்களுடைய தீர்ப்பை நீங்கள் மனதிருப்தியுடன் ஒப்புக் கொள்ளுங்கள்.) இதுதான் உங்களுக்கு நன்மையும், அழகான முடிவும் ஆகும்

[60] (நபியே!) உம் மீது இறக்கப்பட்ட (இவ்வேதத்)தையும், உமக்கு முன்னர் இறக்கப்பட்டுள்ள (வேதங்கள் யா)வற்றையும் நிச்சயமாகத் தாங்கள் நம்பிக்கை கொண்டிருப்பதாக எவர்கள் சாதிக்கின்றனரோ அவர்களை நீர் பார்க்கவில்லையா? புறக்கணிக்கப்பட வேண்டுமென்று கட்டளையிடப்பட்ட ஒரு விஷமியையே அவர்கள் (தங்களுக்குத்) தீர்ப்புக் கூறுபவனாக ஆக்கிக்கொள்ள விரும்புகின்றனர். (விஷமியாகிய) அந்த ஷைத்தானோ அவர்களை வெகு தூரமான வழிகேட்டில் செலுத்தவே விரும்புகிறான்

[61] ‘‘(நியாயம் பெற) அல்லாஹ் இறக்கிய (வேதத்)தின் பக்கம், (அவனது) தூதரின் பக்கம் நீங்கள் வாருங்கள். (அந்த ஷைத்தானிடம் செல்லாதீர்கள்.)'' என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் அந்நயவஞ்சகர்கள் உம்மை விட்டு முற்றிலும் விலகி விடுவதையே நீர் காண்பீர்

[62] (நபியே!) அவர்களின் கரங்கள் தேடிக்கொண்ட (தீய) செயலின் காரணமாக அவர்களுக்கு ஒரு கஷ்டம் ஏற்பட்ட சமயத்தில் (அதற்குப் பரிகாரம் தேடிக்கொள்ள முடியாமலாகிவிட்ட அவர்களின் இழிநிலைமை) எவ்வாறு இருந்தது (என்பதை நீர் கவனிப்பீராக)! பின்னர், அவர்கள் உம்மிடமே வந்து ‘‘(அந்த ஷைத்தானிடம் நாங்கள் சென்றதெல்லாம்) நன்மையையும் ஒற்றுமையையும் விரும்பியே தவிர, வேறொன்றையும் நாங்கள் விரும்பவில்லை'' என்று அல்லாஹ்வின் பெயரால் சத்தியம் செய்கின்றனர்

[63] இவர்களின் உள்ளங்களில் இருப்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தே இருக்கிறான். ஆகவே, (நபியே!) நீர் அவர்(களின் குற்றங்)களைப் புறக்கணித்து அவர்களுக்கு நல்லுபதேசம் செய்வீராக. மேலும், (அவர்களிடம் உள்ள கெடுதல்களை) அவர்களுக்கு மனதில் படும்படித் தெளிவாக எடுத்துக் கூறுவீராக

[64] அல்லாஹ்வுடைய அனுமதிகொண்டு (மக்கள்) அவருக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்பதற்காகவே தவிர வேறு எதற்காகவும் நாம் எந்த தூதரையும் அனுப்பவில்லை. ஆகவே, அவர்களில் (எவரும் இதற்கு மாறு செய்து) தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட சமயத்திலும், (நபியே!) உம்மிடம் வந்து அல்லாஹ்விடம் (தங்கள்) பாவமன்னிப்பைக் கோரினால், அத்துடன் அவர்களுக்காக அல்லாஹ்வுடைய தூத(ராகிய நீ)ரும் பாவமன்னிப்புக் கோரினால் பிழைபொறுத்தலை அங்கீகரிப்பவனாக மிகக் கருணையாளனாக அவர்கள் அல்லாஹ்வைக் காண்பார்கள்

[65] உமது இறைவன் மீது சத்தியமாக! அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவில் உம்மை நீதிபதியாக நியமித்து நீர் செய்யும் தீர்ப்பை தங்கள் மனதில் எத்தகைய அதிருப்தியுமின்றி முற்றிலுமாக ஏற்காதவரை அவர்கள் (உண்மை) நம்பிக்கையாளர்களாக ஆகமாட்டார்கள்

[66] நாம் அவர்களை நோக்கி ‘‘(நிராகரிக்கும்) உங்(கள் மக்)களை நீங்கள் வெட்டுங்கள். அல்லது உங்கள் இல்லங்களை விட்டு (வேறு நாட்டுக்குப்) புறப்பட்டுவிடுங்கள்'' என்று கட்டளையிட்டிருந்தால் அவர்களில் சிலரைத் தவிர (பெரும்பான்மையினர் இவ்வாறு) செய்யவே மாட்டார்கள். எனினும், அனைவரும் தங்களுக்கு அறிவுறுத்தியபடி செய்திருப்பார்களேயானால் அது அவர்களுக்கே மிக்க நன்றாய் இருந்திருக்கும். மேலும், (நம்பிக்கையில் அவர்களை) மிக உறுதிப்படுத்தியும் இருக்கும்

[67] அது சமயம் அவர்களுக்கு நம்மிடமிருந்து மேலும், மகத்தான கூலியை நிச்சயமாக நாம் கொடுத்திருப்போம்

[68] மேலும், அவர்களை நாம் நேரான வழியில் செலுத்தியிருப்போம்

[69] எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ் அருள்செய்த நபிமார்கள், சத்தியவான்கள், சன்மார்க்கப் போரில் உயிர்நீத்த தியாகிகள், நல்லொழுக்கம் உடையவர்கள் ஆகியவர்களுடன் (மறுமையில்) வசிப்பார்கள். இவர்கள்தான் மிக அழகான தோழர்கள்

[70] இது அல்லாஹ்வின் மகத்தான அருட்கொடையாகும். அல்லாஹ்தான் நிறைவான அறிஞனாக இருக்கிறான்

[71] நம்பிக்கையாளர்களே! (எதிரிகளிடம் எப்பொழுதும்) எச்சரிக்கையாகவே இருங்கள் உங்களின் தற்காப்பு சாதனங்களை உங்களுடன் எடுத்துக் கொள்ளுங்கள். சிறு சிறு கூட்டங்களாகவோ அல்லது அனைவரும் ஒன்று சேர்ந்தோ போருக்கு புறப்படுங்கள்

[72] (போருக்கு வராது) பின்தங்கி விடுபவர்களும் நிச்சயமாக உங்களில் சிலர் இருக்கின்றனர். (அவர்கள் நயவஞ்சகர்களே! ஏனெனில், போருக்குச் சென்ற) உங்களுக்கு ஒரு கஷ்டமேற்பட்டாலோ (அவர்கள்) ‘‘நாங்கள் உங்களுடன் வராமல் இருந்தது அல்லாஹ் எங்கள் மீது புரிந்த அருள்தான்'' என்று கூறுகிறார்கள்

[73] அல்லாஹ்வுடைய அருள் உங்களுக்குக் கிடைத்தாலோ ‘‘நானும் உங்களுடன் இருந்திருக்க வேண்டாமா? அவ்வாறு இருந்திருந்தால் பெரும் பாக்கியத்தை நானும் அடைந்திருப்பேனே!'' என்று உங்களுடன் நட்பு(ம் நேசமும்) இல்லாதவர்கள் கூறுவதைப்போல் அவர்கள் கூறுகின்றனர்

[74] மறுமை (வாழ்க்கை)க்காக இவ்வுலக வாழ்க்கையைத் துறப்பவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யட்டும். எவரேனும் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிந்து வெட்டப்பட்டாலும் அல்லது வெற்றி பெற்றாலும் நாம் அவருக்கு அதிசீக்கிரத்தில் மகத்தான கூலியைக் கொடுப்போம்

[75] பலவீனமான ஆண்களையும், பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக அல்லாஹ்வுடைய பாதையில் நீங்கள் போர்புரியாதிருக்க நேர்ந்த காரணம் என்ன? அவர்களோ (இறைவனை நோக்கி) ‘‘எங்கள் இறைவனே! அநியாயக்காரர்கள் வசிக்கும் இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்று! நீ எங்களுக்கு உன்னிடமிருந்து பாதுகாவலரையும் ஏற்படுத்து! நீ எங்களுக்கு உன்னிடமிருந்து உதவி செய்பவரையும் ஏற்படுத்து!'' என்று பிரார்த்தனை செய்த வண்ணமாய் இருக்கின்றனர்

[76] (ஆகவே, இத்தகைய சமயத்தில்) உண்மை நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் வழியில் (அவசியம்) போர்புரிவார்கள். நிராகரிப்பவர்களோ (இவர்களுக்கு எதிராக) ஷைத்தானுடைய வழியில்தான் போர்புரிவார்கள். ஆகவே, ஷைத்தானுடைய நண்பர்களிடம் நீங்கள் போர்புரியுங்கள். (அவர்களின் என்னிக்கையைப் பார்த்து தயங்கி விடாதீர்கள்.) நிச்சயமாக ஷைத்தானுடைய சூழ்ச்சி மிகவும் பலவீனமானதாகவே இருக்கிறது

[77] உங்கள் கைகளைத் (தற்சமயம் போர்புரியாது) தடுத்துக் கொள்ளவும், தொழுகையை உறுதியாகக் கடைப்பிடிக்கவும், ஜகாத்தைக் கொடுத்துவரவும் என்று எவர்களுக்குக் கூறப்பட்டதோ அவர்களை நீர் பார்க்கவில்லையா? போர்புரிய அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டபொழுது அவர்களில் ஒரு பிரிவினரோ அல்லாஹ்வுக்குப் பயப்படுவதைப்போல் அல்லது அதைவிட அதிகமாகவே மனிதர்களுக்குப் பயந்து ‘‘எங்கள் இறைவனே! ஏன் எங்கள் மீது போரைக் கடமையாக்கினாய்? இன்னும் சிறிது காலத்திற்கு இதைப் பிற்படுத்த வேண்டாமா?'' என்று கூற ஆரம்பித்து விட்டார்கள். (இதற்கு நபியே!) நீர் கூறுவீராக: ‘‘இவ்வுலக வாழ்க்கை வெகு அற்பமானதே! எவன் (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடக்கிறானோ அவனுக்கு மறுமை(யின் வாழ்க்கை)தான் மிக மேலானது. (உங்கள் நன்மையைக் குறைத்தோ, பாவத்தைக் கூட்டியோ) நீங்கள் ஒரு நூலளவும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்

[78] நீங்கள் எங்கிருந்தபோதிலும் மரணம் உங்களை அடைந்தே தீரும்; மிகப் பலமான உயர்ந்த (கோட்டை) கொத்தளத்தின் மீது நீங்கள் இருந்தபோதிலும் சரியே! (நபியே! உமது கட்டளைப்படி போருக்குச் சென்ற) அவர்களை ஒரு நன்மை அடையும் பட்சத்தில் ‘‘இது அல்லாஹ்விடமிருந்து (எங்களுக்குக்) கிடைத்தது'' எனக் கூறுகின்றனர். அவர்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டு விட்டாலோ ‘‘(நபியே!) இது உம்மால்தான் (எங்களுக்கு ஏற்பட்டது)'' எனக் கூறுகின்றனர். (ஆகவே,) நீர் கூறுவீராக: ‘‘(நானாக என் இஷ்டப்படி உங்களுக்குக் கட்டளையிடவில்லை. அல்லாஹ் அறிவித்தபடியே நான் உங்களுக்கு கட்டளையிட்டேன். ஆகவே,) அனைத்தும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கின்றன. இவர்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? எவ்விஷயத்தையுமே இவர்கள் அறிந்து கொள்வதில்லையே

[79] மேலும், (இவ்வாறு கூறுகின்றவனை நோக்கி) ‘‘உனக்கு ஒரு நன்மை ஏற்பட்டால் அது அல்லாஹ்வினால் ஏற்பட்டது'' என்றும் ‘‘உனக்கு ஒரு தீங்கேற்பட்டால் அது (நீ இழைத்த குற்றத்தின் காரணமாக) உன்னால்தான் வந்தது'' (என்றும் கூறுவீராக. நபியே!) நாம் உம்மை ஒரு தூதராகவே மனிதர்களுக்கு அனுப்பியிருக்கிறோம். (இதற்கு) அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கிறான்

[80] எவர் (அல்லாஹ்வுடைய) தூதருக்கு (முற்றிலும்) கட்டுப்பட்டு நடக்கிறாரோ அவர்தான் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே கட்டுப்பட்டார்.ஆகவே, (நபியே! உம்மை) எவர்களும் புறக்கணித்தால் (அதற்காக நீர் கவலைப்பட வேண்டாம்.) அவர்களை கண்காணிப்பவராக உம்மை நாம் அனுப்பவில்லை

[81] (நபியே! ‘‘உமக்கு நாம் முற்றிலும்) கட்டுப்பட்டோம்'' என அவர்கள் (தங்கள் வாயால்) கூறுகின்றனர். (எனினும்,) அவர்கள் உமது சமூகத்தில் இருந்து சென்றுவிட்டாலோ அவர்களில் ஒரு கூட்டத்தினர் (தங்கள் வாயால்) கூறியதற்கு மாறாக இரவெல்லாம் சதி ஆலோசனை செய்து கொண்டே இருக்கின்றனர். அவர்கள் இரவெல்லாம் சதி ஆலோசனை செய்பவற்றை அல்லாஹ் பதிவு செய்து கொள்கிறான். ஆதலால், நீர் அவர்களைப் புறக்கணித்து அல்லாஹ்வையே நம்புவீராக. (உங்களுக்கு) பொறுப்பேற்க அல்லாஹ்வே போதுமானவன்

[82] இந்த குர்ஆனை அவர்கள் ஆழ்ந்து கவனிக்க வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் பல (தவறுகளையும்) முரண்பாடுகளை(யும்) அவர்கள் கண்டிருப்பார்கள்

[83] பயத்தையோ (பொது மக்களின்) பாதுகாப்பையோ பற்றிய ஒரு செய்தி அவர்களுக்கு எட்டினால் (உடனே) அதை (வெளியில்) கூற ஆரம்பித்து விடுகின்றனர். (அவ்வாறு செய்யாது) அதை (அல்லாஹ்வுடைய) தூதரிடமும், தங்கள் அதிகாரிகளிடமும் (மட்டும்) தெரிவித்தால் அவர்களில் ஊகிக்கக்கூடிய (ஆராயக்கூடிய அ)வர்கள் உண்மையை நன்கறிந்து (தக்க நடவடிக்கைகளை எடுத்துக்) கொள்வார்கள். (நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வுடைய அருளும், அவனுடைய கருணையும் உங்கள்மீது இல்லையென்றால் (உங்களில்) சிலரைத் தவிர நீங்கள் அனைவரும் ஷைத்தானையே பின்பற்றியிருப்பீர்கள்

[84] (நபியே!) நீர் அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிவீராக. நீர் உம்மைத் தவிர (மற்றெவரையும் போருக்குச் செல்லும்படி) நிர்ப்பந்திப்பதற்கில்லை. (ஆயினும்,) நம்பிக்கையாளர்களை (போருக்குச் செல்ல) தூண்டுவீராக. நிராகரிப்பவர்களின் எதிர்ப்பை அல்லாஹ் தடுத்துவிடுவான். (ஏனென்றால்) அல்லாஹ் போர் செய்வதில் மிக வல்லவன், தண்டிப்பதில் மிகக் கடுமையானவன் ஆவான்

[85] எவரேனும் ஒரு நன்மையானவற்றுக்கு சிபாரிசு செய்தால் அந்த நன்மையில் ஒரு பங்கு அவருக்குண்டு. (அவ்வாறே) ஒரு தீய விஷயத்திற்கு யாரும் சிபாரிசு செய்தால் அத்தீமையில் இருந்தும் அவருக்கொரு பாகம் உண்டு. அல்லாஹ் அனைத்தையும் முறைப்படி கவனிப்பவனாக இருக்கிறான்

[86] (எவரேனும்) உங்களுக்கு ‘ஸலாம்' கூறினால் (அதற்குப் பிரதியாக) அதைவிட அழகான (வாக்கியத்)தைக் கூறுங்கள். அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்

[87] அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் அறவே இல்லை. அவன் நிச்சயமாக உங்கள் அனைவரையும் மறுமைநாளில் ஒன்று சேர்ப்பான். இதில் சந்தேகமேயில்லை. அல்லாஹ்வைவிட உண்மை சொல்பவர் யார்

[88] (நம்பிக்கையாளர்களே!) நயவஞ்சகர்களைப் பற்றி நீங்கள் ஏன் இருவகை கருத்துக் கொள்கிறீர்கள்? அவர்கள் செய்த தீங்கின் காரணமாக அல்லாஹ் அவர்களைத் தலை குனியும்படி செய்தான். எவர்களை அல்லாஹ் தவறான வழியில் செல்ல விட்டுவிட்டானோ அவர்களை நீங்கள் நேரான வழியில் செலுத்த விரும்புகிறீர்களோ? (அது முடியாத காரியம்! ஏனென்றால் நபியே!) எவரை அல்லாஹ் வழிதவற விட்டு விட்டானோ அவருக்கு (மீட்சி பெற்றுத் தர) ஒரு வழியையும் நீர் காணமாட்டீர்

[89] (நம்பிக்கையாளர்களே!) அவர்கள் நிராகரிப்பவர்களாகி விட்டபடியே நீங்களும் நிராகரிப்பவர்களாகி அவர்களுக்கு சமமாகிவிடுவதை அவர்கள் விரும்புகிறார்கள். ஆகவே, (தங்கள் இல்லங்களைவிட்டு) அல்லாஹ்வுடைய பாதையில் அவர்கள் வெளியே புறப்படும் வரை நீங்கள் அவர்களை நண்பர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம். (இல்லங்களைவிட்டு வெளியேற வேண்டுமென்ற கட்டளையை) அவர்கள் புறக்கணித்துவிட்டால் கண்ட இடமெல்லாம் அவர்களை(க் கைதியாக)ப் பிடித்துக்கொள்ளுங்கள்; (கைதியாகாது தப்ப முயற்சிப்பவரை) கொல்லுங்கள். தவிர, அவர்களில் எவரையுமே (உங்களுக்கு) நண்பர்களாகவும், உதவியாளர்களாகவும் எடுத்துக்கொள்ளாதீர்கள்

[90] (ஆயினும்) உங்களுடன் (சமாதான) உடன்படிக்கை செய்து கொண்டவர்களிடம் சென்று விட்டவர்களையும், உங்களை எதிர்த்து போர்புரிய மனம் ஒப்பாது (உங்கள் எதிரிகளை விட்டுப்பிரிந்து) உங்களிடம் வந்தவர்களையும், தங்கள் இனத்தாரை எதிர்த்துச் சண்டை செய்(ய மனம் ஒப்பாது உங்களிடமிருந்து பிரிந்)தவர்களையும் (வெட்டாதீர்கள்; சிறை பிடிக்காதீர்கள். ஏனென்றால்,) அல்லாஹ் நாடினால் உங்களை அவர்கள் வெற்றிகொண்டு (அவர்கள்) உங்களை வெட்டும்படிச் செய்திருப்பான். ஆகவே, (இவர்கள்) உங்களுடன் போர்புரியாது விலகியிருந்து சமாதானத்தைக் கோரினால் (அதை ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில்,) இவர்கள் மீது (போர்புரிய) அல்லாஹ் உங்களுக்கு ஒரு வழியையும் வைக்கவில்லை

[91] (நம்பிக்கையாளர்களே!) வேறுசிலரையும் நீங்கள் காண்பீர்கள். அவர்கள் உங்களிடம் பாதுகாப்பு பெற்றுக்கொள்வதுடன் (உங்கள் எதிரிகளாகிய) தங்கள் இனத்தாரிடமும் பாதுகாப்பு பெற்றிருக்க விரும்புவார்கள். எனினும், விஷமத்திற்கு இவர்கள் அழைக்கப்பட்டால் அதில் (கண்மூடி முகங்)குப்புற விழுந்து விடுவார்கள். இவர்கள் உங்களை எதிர்ப்பதிலிருந்து விலகாமலும், உங்களிடம் சமாதானத்தைக் கோராமலும், தங்கள் கைகளை (உங்களுக்குத் தீங்கிழைப்பதிலிருந்து) தடுத்துக் கொள்ளாமலும் இருந்தால், இவர்களை நீங்கள் கண்ட இடமெல்லாம் (சிறை பிடியுங்கள். தப்பி ஓடுகிறவர்களை) வெட்டிசாயுங்கள். இவர்களிடம் (போர்புரிய) உங்களுக்குத் தெளிவான அனுமதி கொடுத்துவிட்டோம்

[92] தவறுதலாகவே தவிர, ஓர் இறை நம்பிக்கையாளரை (முஃமினை) கொலை செய்வது வேறு எந்த இறை நம்பிக்கையாளருக்கும் ஆகுமானதல்ல. (உங்களில்) எவரேனும் ஓர் இறை நம்பிக்கையாளரை தவறுதலாகக் கொலை செய்து விட்டால் (அதற்குப் பரிகாரமாக) இறை நம்பிக்கையாளராகிய ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அத்துடன் இறந்தவருடைய வாரிசுகள் (மன்னித்துத்) தானமாக விட்டாலே தவிர, அதற்குரிய நஷ்ட ஈட்டையும் அவர்களிடம் செலுத்த வேண்டும். (இறந்த) அவன் உங்கள் எதிரி இனத்தவனாக இருந்து நம்பிக்கையாளராகவும் இருந்தால் நம்பிக்கையாளராகிய ஓர் அடிமையை விடுதலை செய்தால் போதும். (நஷ்ட ஈடு கொடுக்க வேண்டியதில்லை. இறந்த) அவன் உங்களுடன் உடன்படிக்கை செய்துகொண்ட வகுப்பாரில் உள்ளவனாக இருந்தால் அவனுடைய வாரிசுகளுக்கு நஷ்டஈட்டைச் செலுத்துவதுடன் நம்பிக்கையாளரான ஓர் அடிமையை விடுதலை செய்யவேண்டும். (இவ்வாறு பரிகாரம் செய்வதற்குரிய பொருளை) எவரேனும் அடையாவிட்டால் அவன் அல்லாஹ்விடம் (தன் குற்றத்தை) மன்னிக்கக் கோரி இரண்டு மாதம் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும். அல்லாஹ் நன்கறிந்தவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான்

[93] எவனேனும் ஒரு முஸ்லிமை (நன்கறிந்து) வேண்டுமென்றே கொலை செய்தால் அவனுக்குரிய தண்டனை நரகம்தான். அதில் அவன் நீண்ட காலம் தங்கி விடுவான். அவன்மீது அல்லாஹ் கோபம்கொண்டு அவனை சபித்துவிடுவான். இன்னும் மகத்தான வேதனையையும் அவனுக்கு தயார்படுத்தி வைத்திருக்கிறான்

[94] நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுடைய பாதையில் (போருக்காக) நீங்கள் சென்றால் (போர்முனையில் எதிர்படுபவர்கள் நம்பிக்கையாளர்களா? நிராகரிப்பவர்களா? என்பதைத்) தெளிவாக அறிந்து கொள்ளுங்கள். (அவர்களில் எவரேனும் தம்மை நம்பிக்கையாளர் என்று உங்களுக்கு அறிவிப்பதற்காக) உங்களுக்கு ஸலாம் கூறினால் (அவர்களிடமிருந்து) இவ்வுலக வாழ்க்கைக்குரிய (அற்பப்) பொருளை நீங்கள் அடையக்கருதி ‘‘நீ நம்பிக்கையாளரல்ல'' என்று அவரைக் கூறி (வெட்டி) விடாதீர்கள். அல்லாஹ்விடத்தில் ஏராளமான பொருள்கள் இருக்கின்றன. (அவற்றை நீங்கள் அடையலாம்.) இதற்கு முன்னர் நீங்களும் இவ்வாறே (பயந்து பயந்து இஸ்லாமை வெளியிட்டுக் கொண்டு) இருந்தீர்கள். அல்லாஹ் உங்கள் மீது அருள்புரிந்தான். (அதன் பின்னரே நீங்கள் உண்மை நம்பிக்கையாளராக ஆனீர்கள்.) ஆகவே, (போர்புரிவதற்கு முன்னதாகவே உங்கள் முன் இருப்பவர்கள் நம்பிக்கையாளர்களா? இல்லையா? என்பதைத் தீர விசாரித்துத்) தெரிந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாக இருக்கிறான்

[95] நம்பிக்கையாளர்களில் நோய் போன்ற (சரியான) காரணங்களின்றி (போருக்குச் செல்லாது) இருந்து கொண்டவர்கள் தங்கள் பொருள்களையும், உயிர்களையும், அல்லாஹ்வுடைய பாதையில் தியாகம் செய்து போர்புரிபவர்களுக்குச் சமமாக மாட்டார்கள். (ஏனென்றால்) தங்கள் பொருள்களையும் உயிர்களையும் தியாகம் செய்து போர்புரிந்தவர்களின் பதவியை (போருக்குச் செல்லாது) தங்கி விட்டவர்களைவிட அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருக்கிறான். எனினும் இவர்கள் அனைவருக்கும் (இவர்களிடம் இறைநம்பிக்கை இருப்பதால்) நன்மையையே அல்லாஹ் வாக்களித்திருக்கிறான். ஆயினும், போர் செய்தவர்களுக்கு மகத்தான கூலியையும் அருள்புரிந்து, தங்கி விட்டோரைவிட மேன்மையாக்கி வைக்கிறான்

[96] (இன்னும், அவர்களுக்குத்) தன்னிடமுள்ள (மகத்தான) பதவிகளையும், மன்னிப்பையும், அன்பையும் அருளுகிறான். (ஏனெனில்) அல்லாஹ், மிக மன்னிப்பவனாக மிகக் கருணையுடையவனாக இருக்கிறான்

[97] எவர்கள் (தங்கள் மார்க்கக் கட்டளையை சரிவர நிறைவேற்ற முடியாமல் நிராகரிப்பவர்களின் நாட்டில் இருந்து கொண்டு) தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கின்றனரோ அவர்களின் உயிரை வானவர்கள் கைப்பற்றும்பொழுது (அவர்களை நோக்கி ‘‘மார்க்கக் கட்டளையை நிறைவேற்றாது) நீங்கள் எவ்வாறு இருந்தீர்கள்'' என்று கேட்பார்கள். அ(தற்க)வர்கள் ‘‘அந்தப் பூமியில் நாங்கள் சிறுபான்மையினர்களாகவே இருந்தோம்'' என்று (பதில்) கூறுவார்கள். (அதற்கு வானவர்கள்) அல்லாஹ்வுடைய பூமி விசாலமானதல்லவா? நீங்கள் (இருந்த) அவ்விடத்தை விட்டு வெளியேறி இருக்கவேண்டாமா?'' என்று கேட்பார்கள். இவர்களின் ஒதுங்குமிடம் நரகம்தான். அது ஒதுங்கும் இடங்களில் மிகக் கெட்டது

[98] எனினும் ஆண், பெண், சிறியோர், பெரியோர் ஆகியோர்களில் (உண்மையில்) பலவீனமானவர்கள் ஒரு பரிகாரமும் தேடிக்கொள்ள சக்தியற்று (அதைவிட்டு வெளியேற) வழி காணாதிருந்தால்

[99] அவர்களை அல்லாஹ் மன்னித்து விடக்கூடும். ஏனென்றால், அல்லாஹ் மிக மன்னிப்பவனாக, பிழை பொறுப்பவனாக இருக்கிறான்

[100] (இத்தகைய நிலைமையில்) அல்லாஹ்வுடைய பாதையில் (தான் இருந்த இடத்தைவிட்டு) எவர் வெளியேறி விடுகிறாரோ, அவர் பூமியில் வசதியான பல இடங்களையும், சௌகரியத்தையும் அடைவார். எவரேனும் தன் இல்லத்தை விட்டு வெளியேறி அல்லாஹ்வின் பக்கமும், அவனுடைய தூதரின் பக்கமும் ஹிஜ்ரத் செல்லும் வழியில் இறந்துவிட்டால் அவருடைய வெகுமதி நிச்சயமாக அல்லாஹ்வின் மீது கடமையாகி விடுகிறது. (ஏனெனில்,) அல்லாஹ் மிக மன்னிப்பவனாக, மிகக் கருணையாளனாக இருக்கிறான்

[101] (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் பூமியில் பயணம் செய்தால் (நீங்கள் தொழுது கொண்டிருக்கும் போது) நிராகரிப்பவர்கள் உங்களைத் துன்புறுத்துவார்கள் என பயந்தால் நீங்கள் தொழுகையை ‘கஸ்ர்' செய்வது (சுருக்கிக் கொள்வது) உங்கள் மீது குற்றமாகாது. ஏனெனில், நிராகரிப்பவர்கள் உங்களுக்குப் பகிரங்கமான எதிரிகளாகவே இருக்கின்றனர்

[102] (நபியே! போர் முனையில்) நீரும் அவர்களுடன் இருந்து அவர்களுக்கு தொழ வைக்க நீர் (இமாமாக) முன்னின்றால், அவர்களில் ஒரு பிரிவினர் (மட்டும் தங்கள் கைகளில்) தங்கள் ஆயுதங்களைப் பிடித்துக்கொண்டே உங்களுடன் தொழவும். இவர்கள் உங்களுடன் (தொழுது) ‘ஸஜ்தா' செய்துவிட்டால் (அணியிலிருந்து விலகி) உங்கள் பின்புறம் (உங்களைக் காத்து) நிற்கவும். (அது சமயம்) தொழாமலிருந்த மற்றொரு கூட்டத்தினர் வந்து உங்களுடன் சேர்ந்து தொழவும். எனினும் அவர்களும் தங்கள் (கைகளில்) ஆயுதங்களைப் பிடித்த வண்ணம் அவர்களைப் பற்றி எச்சரிக்கையாய் இருக்கவும். ஏனென்றால், நீங்கள் உங்கள் பொருள்களிலிருந்தும், உங்கள் ஆயுதங்களிலிருந்தும் பராமுகமாகிவிட்டால் உங்கள் மீது ஒரேயடியாக பாய்ந்து தாக்குதல் நடத்திட வேண்டுமென்று அந்நிராகரிப்பவர்கள் விரும்புகின்றனர். இந்நிலைமையில், மழையின் தொந்தரவினால் அல்லது நீங்கள் நோயாளிகளாகவோ இருந்தால் உங்கள் ஆயுதங்களைக் (கைகளில் பிடிக்க முடியாவிட்டால்) கீழே வைத்து விடுவதில் உங்கள் மீது குற்றமில்லை. எனினும் நீங்கள் (அவர்களைப் பற்றி) எச்சரிக்கையாகவே இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்களுக்கு இழிவு தரும் வேதனையை தயார்படுத்தி வைத்திருக்கிறான்

[103] (நம்பிக்கையாளர்களே! இவ்வாறு) நீங்கள் (தொழுது) தொழுகையை முடித்துக் கொண்டால் உங்கள் நிலையிலும், இருப்பிலும், படுக்கையிலும் அல்லாஹ்வின் பெயரைக் கூறி ‘திக்ரு' செய்துகொண்டே இருங்கள். (எதிரியின் தாக்குதலிலிருந்து) நீங்கள் அச்சமற்றவர்களாகி விட்டால் (முறைப்படி) தொழுகையை நிலைநிறுத்துங்கள். ஏனென்றால், நிச்சயமாகத் தொழுகையோ குறிப்பிட்ட நேரத்தில் (தவறாமல்) நம்பிக்கையாளர்கள் நிறைவேற்ற வேண்டிய கடமையாகவே இருக்கிறது

[104] எதிரிகளைத் தேடிச் செல்வதில் நீங்கள் (சிறிதும்) சோர்வடையாதீர்கள். (அதனால்) உங்களுக்கு வலி ஏற்பட்டால் (பொருட்படுத்தாதீர்கள். ஏனென்றால்) நீங்கள் வலியை அனுபவிப்பதைப் போலவே அவர்களும் வலியை அனுபவிப்பதுடன் அவர்கள் எதிர்பார்க்க முடியாத (வெற்றி, நற்கூலி அனைத்)தையும் அல்லாஹ்விடமிருந்து நீங்கள் எதிர்பார்த்திருக்கிறீர்கள். அல்லாஹ் மிக அறிந்தவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான்

[105] (நபியே!) அல்லாஹ் உமக்கு அறிவித்தவற்றைக் கொண்டு மனிதர்களுக்கிடையில் நீர் தீர்ப்பளிப்பதற்காக முற்றிலும் உண்மையுடன் கூடிய இவ்வேதத்தை நாமே உம் மீது இறக்கினோம். (ஆகவே,) நீர் மோசடிக்காரர்களுக்கு தர்க்கிப்பவராக இருக்காதீர்

[106] (இதில் ஏதும் தவறேற்பட்டுவிட்டால் அதற்காக) நீங்கள் அல்லாஹ்விடம் மன்னிப்பைக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க பிழைபொறுப்பவனாக மிகக் கருணையுடையவனாக இருக்கிறான்

[107] (நபியே!) எவர்கள் (மனிதர்களுக்குத் தீங்கிழைத்து) தங்களுக்குத்தாமே சதி செய்துகொண்டார்களோ அவர்களுக்காக (என்னிடம் மன்னிப்பைக் கோரி) நீர் தர்க்கிக்க வேண்டாம். ஏனென்றால், எவன் சதிசெய்யும் பாவியாக இருக்கிறானோ அவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை

[108] இவர்கள் (சதி செய்யும் தங்கள் குற்றத்தை) மனிதர்களுக்கு மறைக்கிறார்கள். எனினும், (அதை) அல்லாஹ்வுக்கு மறைத்துவிட முடியாது. (அல்லாஹ்) விரும்பாத விஷயங்களைக்கொண்டு இவர்கள் இரவெல்லாம் பேசி சதி ஆலோசனை செய்யும் போது அவன் அவர்களுடன்தான் இருக்கிறான். அல்லாஹ் அவர்களுடைய (சதிச்) செயலை(த் தன் ஞானத்தால்) சூழ்ந்துகொண்டும் இருக்கிறான்

[109] நம்பிக்கையாளர்களே! இவர்களுக்(கு உதவுவதற்)காகவா நீங்கள் இவ்வுலகத்தில் தர்கிக்கிறீர்கள்? மறுமைநாளில் இவர்களுக்காக அல்லாஹ்விடம் தர்க்கிப்பவன் யார்? இன்னும், (அந்நாளில்) இவர்களுக்குப் பரிந்து பேசுபவன் யார்

[110] எவரேனும், ஒரு பாவத்தைச் செய்துவிட்டு அல்லது தனக்குத்தானே தீங்கிழைத் துக்கொண்டு, பின்னர் (அதிலிருந்து விலகி, உண்மையாகவே கைசேதப்பட்டு) அவன் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் அல்லாஹ்வை (அவனுடைய குற்றங்களை) மிக மன்னிப்பவனாகவும், (அவன் மீது) மிகக் கருணையுடையவனாகவும் காண்பான்

[111] எவன் பாவத்தைச் சம்பாதிக்கிறானோ அவன் நிச்சயமாகத் தனக்குக் கேடாகவே அதைச் சம்பாதிக்கிறான். அல்லாஹ் (அனைத்தையும்) மிக அறிந்தவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான்

[112] எவரேனும், ஒரு குற்றத்தையோ அல்லது பாவத்தையோ செய்து அதை(த் தான் செய்யவில்லையென்று மறைத்து) குற்றமற்ற (மற்றொரு)வர் மீது சுமத்தினால் நிச்சயமாக அவன் அபாண்டமான பொய்யையும் பகிரங்கமான பாவத்தையுமே சுமந்து கொள்கிறான்

[113] (நபியே!) அல்லாஹ்வின் அருளும், அவனது கிருபையும் உம் மீது இல்லாதிருந்தால் (நீர் தவறிழைத்திருக்கக் கூடும். ஏனென்றால், எந்தவிதத்திலும்) உம்மை வழி கெடுத்துவிட வேண்டுமென்று அவர்களில் ஒரு கூட்டத்தினர் முடிவு கட்டியிருந்தனர். எனினும், அவர்கள் தங்களையே அன்றி (உம்மை) வழிகெடுக்கவில்லை. அவர்கள் உமக்கு கொஞ்சமும் தீங்கிழைத்துவிட முடியாது. அல்லாஹ் இவ்வேதத்தையும், ஞானத்தையும் உம் மீது இறக்கி நீங்கள் அறியாத அனைத்தையும் உமக்குக் கற்பித்திருக்கிறான். உம் மீது அல்லாஹ்வுடைய அருள் மகத்தானதாகவே இருக்கிறது

[114] (நபியே!) அவர்கள் (உம்முடன்) பேசும் இரகசியங்களில் பெரும்பாலானவற்றில் ஒரு நன்மையுமில்லை. ஆயினும், தானம் கொடுப்பதைப் பற்றியோ, நன்மையானவற்றைப் பற்றியோ, மனிதர்களுக்கிடையில் சமாதானம் ஏற்படுத்துவதைப் பற்றியோ பேசுபவற்றைத் தவிர. ஆகவே, எவரேனும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி இவ்வாறு (இரகசியம்) பேசினால் (மறுமையில்) நாம் அவர்களுக்கு மகத்தான (நற்) கூலியைத் தருவோம்

[115] எவர் நேரான வழி இன்னதென்று தனக்குத் தெளிவானதன் பின்னரும் (அல்லாஹ்வுடைய) இத்தூதரை விட்டுப் பிரிந்து நம்பிக்கையாளர்களின் வழி அல்லாததில் செல்கிறாரோ அவரை நாம் அவர் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு (பின்னர்) அவரை நரகத்தில் சேர்த்து விடுவோம். அது செல்லும் இடங்களில் மிகக் கெட்டது

[116] நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான். இதை அல்லாத (குற்றத்)தை (அதுவும்) தான் விரும்பியவர்களுக்கே மன்னிப்பான். ஆகவே, எவரேனும் அல்லாஹ்வுக்கு இணைவைத்தால் அவர் வெகுதூரமான வழிகேட்டில்தான் இருக்கிறார்

[117] அல்லாஹ்வையன்றி அவர்கள் (தெய்வங்களாக) அழைப்பவைகள் பெண் (பெயருடையவை)களேயன்றி வேறில்லை. துஷ்ட ஷைத்தானை அன்றி (மற்றெதையும்) அவர்கள் அழைக்கவில்லை

[118] அந்த ஷைத்தானை அல்லாஹ் கோபித்து சபித்தான். அதற்கவன் ‘‘உன் அடியார்களில் ஒரு குறிப்பிட்ட தொகையினரை நிச்சயமாக நான் எடுத்துக் கொள்வேன்'' என்று கூறினான்

[119] அன்றி ‘‘நிச்சயமாக நான் அவர்களை வழிகெடுப்பேன். அவர்களுக்கு வீண் நம்பிக்கைகளை உண்டு பண்ணி (பிசாசுகளுக்காக பிரார்த்தனை செய்துவிடப்பட்ட) ஆடு, மாடுகளின் காதுகளை அறுத்து விடும்படியும் அவர்களை ஏவுவேன். அல்லாஹ்வின் படைப்பினங்(களின் கோலங்)களை மாற்றும்படியாகவும் நிச்சயமாக நான் அவர்களை ஏவுவேன்'' (என்று கூறினான்.) ஆகவே, எவன் அல்லாஹ்வையன்றி ஷைத்தானை (தனக்கு) பாதுகாவலனாக எடுத்துக் கொள்கிறானோ அவன் நிச்சயமாக பகிரங்கமான நஷ்டத்தையே அடைந்துவிடுவான்

[120] (ஷைத்தான்) அவர்களுக்கு வாக்களிக்கிறான். அவர்களுக்குப் பொய் நம்பிக்கையும் ஊட்டுகிறான். எனினும், ஏமாற்றுவதற்கே தவிர ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதில்லை

[121] இவர்களின் செல்லுமிடம் நரகம்தான். அவர்கள் அதிலிருந்து தப்ப ஒரு வழியையும் காணமாட்டார்கள்

[122] எவர்கள் (ஷைத்தானை நிராகரித்து விட்டு அல்லாஹ்வை) நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களை (மறுமையில்) நாம் சொர்க்கங்களில் புகுத்துவோம். அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அவர்கள் அவற்றில் என்றென்றுமே தங்கிவிடுவார்கள். அல்லாஹ்வுடைய (இவ்)வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே! அல்லாஹ்வைவிட உண்மை சொல்பவர் யார்

[123] (நம்பிக்கையாளர்களே! மறுமையில்) உங்கள் விருப்பப்படியோ, வேதத்தையுடை யவர்களின் விருப்பப்படியோ (காரியம் நடப்பது) இல்லை. ஆயினும், எவன் பாவம் செய்கிறானோ அவன் அதற்குரிய தண்டனையை அடைந்தே தீருவான். அவன் அல்லாஹ்வையன்றி தனக்கு உதவி செய்பவரையோ அல்லது துணை புரிபவரையோ (அங்கு) காணமாட்டான்

[124] ஆகவே, ஆணாயினும் பெண்ணாயினும் எவர்கள் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்கள்தான் சொர்க்கம் செல்வார்கள். அவர்கள் அற்ப அளவும் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்

[125] எவர் அல்லாஹ்வுக்கு முற்றிலும் தன்முகத்தை பணியவைத்து இஸ்லாமில் உறுதியானவராக இருந்து, நன்மையும்செய்து, இப்றாஹீமுடைய (நேரான) மார்க்கத்தையும் பின்பற்றுகிறாரோ அவரைவிட அழகான மார்க்கத்தை உடையவர் யார்? அல்லாஹ் இப்றாஹீமை(த் தன்) உண்மை நண்பராக எடுத்துக் கொண்டிருக்கிறான்

[126] வானங்களிலும், பூமியிலுமுள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே! அல்லாஹ் அனைத்தையும் (தன் ஞானத்தைக் கொண்டு) சூழ்ந்தறிபவனாக இருக்கிறான்

[127] (நபியே!) அவர்கள் உம்மிடம் பெண்களைப் பற்றிய மார்க்கக் கட்டளையைக் கேட்கின்றார்கள். (அதற்கு) நீர் கூறுவீராக: அவர்களைப் பற்றி அல்லாஹ் உங்களுக்கு (அடுத்த வசனத்திலிருந்து) கட்டளையிடுகிறான். இதற்கு முன்னர் (பெண்களைப் பற்றி) வேதத்தில் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டது அநாதைப் பெண்களைப் பற்றியதாகும். அவர்களுக்குக் குறிப்பிட்டுள்ள மஹரை நீங்கள் கொடுக்காமல் அவர்களை திருமணம் செய்துகொள்ள விரும்புவதைப் பற்றியும் (அவர்களிலுள்ள) விவரமறியா குழந்தைகளைப் பற்றியும் (அதில் கூறி) ‘‘அநாதைகள் விஷயத்தில் நீங்கள் நீதமாக நடந்து கொள்ளுங்கள்'' என்றும் கூறப்பட்டுள்ளது. ஆகவே, (அவர்களுக்கு) நீங்கள் என்ன நன்மை செய்த போதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்தவனாக இருக்கிறான்

[128] எந்த ஒரு பெண்ணாவது தன் கணவன் (தனக்கு) கடுமையாக இடையூறளிப்பான் என்றோ அல்லது புறக்கணித்து விடுவான் என்றோ பயந்தால், அவர்களிருவரும் (சம்மதித்து) தங்களுக்குள் ஒரு சமாதான முடிவை ஏற்படுத்திக் கொள்வதில் அவர்கள் மீது குற்றமில்லை. (எவ்விதத்திலும் இருவரும் சம்மதித்த) சமாதானமே மிக மேலானது. (இத்தகைய சந்தர்ப்பங்களில் ஏதும் பொருள் கொடுக்கும்படி நேரிட்டால் பொதுவாக) ஒவ்வொரு ஆத்மாவும் கஞ்சத்தனத்திற்கு உட்பட்டு விடுகிறது. ஆகவே, நீங்கள் (கஞ்சத்தனத்திற்கு உட்படாமல்) ஒவ்வொருவரும் மற்றவருக்கு நன்மை செய்பவராக இருந்து அல்லாஹ்வுக்கும் பயந்து நடந்து கொண்டால் (அது மிக நல்லது.) நிச்சயமாக அல்லாஹ் உங்கள் செயலை நன்கறிந்தவனாக இருக்கிறான்

[129] (நம்பிக்கையாளர்களே! உங்களுக்குப் பல மனைவிகளிருந்து) நீங்கள் (உங்கள்) மனைவிகளுக்கிடையில் அன்புகாட்டுவதில் நீதமாக நடக்க வேண்டுமென்று விரும்பியபோதிலும் (அது) உங்களால் சாத்தியப்படாது. என்றாலும், (ஒரே மனைவியின் பக்கம்) நீங்கள் முற்றிலும் சாய்ந்து மற்றவளை (அந்தரத்தில்) தொங்கியவளாக விட்டுவிடாதீர்கள்! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து (உங்களுக்கிடையில்) சமாதானமாக நடந்து கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) குற்றங்களை மன்னித்துக் கருணை புரிபவனாக இருக்கிறான்

[130] (சமாதானத்துடன் சேர்ந்து வாழ முடியாமல்) அவ்விருவரும் பிரிந்து விட்டாலோ அல்லாஹ் தன் (அருட்)கொடையைக் கொண்டு (ஒவ்வொருவரையும் மற்றவரிலிருந்து) முற்றிலும் தேவையற்றவராக ஆக்கிவிடுவான். (வழங்குவதில்) அல்லாஹ் மிக விசாலமானவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான்

[131] (ஏனென்றால்) வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும், அல்லாஹ்வுக்குரியனவே! (நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களுக்கும், உங்களுக்கும் ‘‘அல்லாஹ் ஒருவனையே பயப்படுங்கள்'' என்றே நல்லுபதேசம் செய்திருக்கிறோம். ஆகவே, (அவனுக்கு) நீங்கள் மாறுசெய்தால் (அதனால் அவனுக்கொன்றும் நஷ்டமில்லை.) நிச்சயமாக வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்குரியனவே. அல்லாஹ் தேவையற்றவனாக, (அனைவராலும்) புகழப்பட்டவனாக இருக்கிறான்

[132] வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வுக்கு உரியனவே! (இவற்றிலுள்ள எதைக் கொண்டும் உங்களுக்கு உதவி செய்ய) அல்லாஹ் (ஒருவனே) போதுமான பொறுப்பாளனாக இருக்கிறான்

[133] மனிதர்களே! அவன் விரும்பினால் உங்களை அழித்து (உங்களுக்குப் பதிலாக) வேறு மனிதர்களைக் கொண்டுவந்து விடுவான். அல்லாஹ் இவ்வாறு செய்ய பேராற்றலுடையவனாகவே இருக்கிறான்

[134] (நம்பிக்கையாளர்களே!) இம்மையின் பலனை மட்டும் எவன் விரும்புவான்? அல்லாஹ்விடத்திலோ இம்மை மற்றும் மறுமையின் பலன் இருக்கிறது. அல்லாஹ் (ஒவ்வொருவரின் பிரார்த்தனையையும்) செவியுறுபவனாக, (ஒவ்வொருவரின் உள்ளத்தையும்) உற்று நோக்குபவனாக இருக்கிறான்

[135] நம்பிக்கையாளர்களே! நீங்கள் நீதத்தின் மீதே உறுதியாக நிலைத்திருங்கள். (நீங்கள் சாட்சி கூறினால் அது) உங்களுக்கோ, உங்கள் தாய், தந்தைக்கோ அல்லது உங்கள் உறவினர்களுக்கோ பாதகமாக இருந்தபோதிலும் அல்லாஹ்வுக்காக (உண்மையையே) சாட்சி கூறுபவர்களாக இருங்கள். (நீங்கள் யாருக்காக சாட்சி கூறுகிறீர்களோ) அவர் பணக்காரராயினும் ஏழையாயினும் (உண்மையையே கூறுங்கள். ஏனென்றால்) அல்லாஹ் அவ்விருவருக்குமே (உதவி செய்ய) மிகத் தகுதியானவன். ஆகவே, நீங்கள் (உங்கள்) ஆசை (அபிலாஷை)களைப் பின்பற்றி வரம்பு மீறாதீர்கள்! (பரிவு அல்லது குரோதத்தை முன்னிட்டு) நீங்கள் தவறாக (சாட்சி) கூறினாலும் அல்லது (சாட்சி) கூற மறுத்தாலும் நிச்சயமாக அல்லாஹ் உங்கள் (இத்தவறான) செயலை நன்கறிந்தவனாக இருக்கிறான்

[136] நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், அவன் தன்தூதர் மீது அருளிய இவ்வேதத்தையும், இதற்கு முன்னர் அவன் அருளிய வேதங்களையும் நம்பிக்கை கொள்ளுங்கள். எவன் அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும், இறுதி நாளையும் நிராகரிக்கிறானோ அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில்தான் செல்கிறான்

[137] எவர்கள், நம்பிக்கை கொண்டதன் பின்னர் நிராகரித்து, பின்னர் நம்பிக்கை கொண்டு (அதன்) பின்னரும் நிராகரித்து (அந்த) நிராகரிப்பையே மென்மேலும் அதிகரிக்கிறார்களோ அவர்(களின் குற்றங்)களை நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பதில்லை. அன்றி, (அவர்களின் தீயசெயல்களின் காரணமாக) அவர்களை நேரான பாதையில் செலுத்தவுமாட்டான்

[138] (நபியே!) ‘‘நயவஞ்சகர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை நிச்சயமாக உண்டு'' என்று நீர் அவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக

[139] இவர்கள் நம்பிக்கையாளர்களை விடுத்து நிராகரிப்பவர்களையே (தங்கள்) நண்பர்களாகவும் எடுத்துக் கொண்டார்கள். இவர்கள் அவர்களிடத்தில் கண்ணியத்தை (பெற) விரும்புகிறார்களா? நிச்சயமாக கண்ணியங்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. (அவர்களுக்குரியவை அல்ல)

[140] நிச்சயமாக (அல்லாஹ்) இவ்வேதத்தின் மூலம் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்: அல்லாஹ்வுடைய வசனங்களை (எவரும்) நிராகரிப்பதையோ அல்லது பரிகசிப்பதையோ நீங்கள் செவியுற்றால் அவர்கள் இதைத் தவிர்த்து வேறு விஷயத்தில் ஈடுபடும் வரை நீங்கள் அவர்களுடன் உட்கார வேண்டாம். (அவ்வாறு உட்கார்ந்தால்) அந்நேரத்தில் நிச்சயமாக நீங்களும் அவர்களைப் போன்றுதான் (ஆவீர்கள்). நிச்சயமாக அல்லாஹ் இந்நயவஞ்சகர்களையும் அந்நிராகரிப்பவர்களுடன் நரகத்தில் ஒன்று சேர்த்துவிடுவான்

[141] (நயவஞ்சகர்களாகிய) இவர்கள் உங்களைக் கவனித்த வண்ணம் இருக்கின்றனர். அல்லாஹ்வி(ன் உதவியி)னால் உங்களுக்கு வெற்றி கிடைத்தால் (உங்களிடம் வந்து) நாங்களும் உங்களுடன் இருக்கவில்லையா? என்று கூறுகின்றனர். நிராகரிப்பவர்களுக்கு ஏதும் வெற்றி கிடைத்துவிட்டால் (அவர்களிடம் சென்று) ‘‘நாங்கள் (நம்பிக்கை கொண்டவர்களுக்கு உதவி புரிந்து) உங்களை வெற்றி கொள்ளக் கூடுமாயிருந்தும் நம்பிக்கைகொண்ட அவர்களிடமிருந்து நாம் உங்களைப் பாதுகாக்கவில்லையா?'' என்று கூறுகின்றனர். உங்களுக்கும் அ(ந்நய)வ(ஞ்சக)ர்களுக்கும் இடையில் அல்லாஹ் மறுமை நாளில் தீர்ப்பளிப்பான். அந்நிராகரிப்பவர்கள் நம்பிக்கையாளர்களை வெற்றிகொள்ள அல்லாஹ் ஒரு வழியையும் வைக்கமாட்டான்

[142] நிச்சயமாக (நிராகரிக்கும்) இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்(கக் கருது)கின்றனர். எனினும், அல்லாஹ்வோ அவர்களை வஞ்சித்து விடுகிறான். அவர்கள் தொழுகையில் நின்றாலோ சோம்பேறிகளாக நின்று மனிதர்களுக்குக் காண்பிக்(க விரும்பு)கிறார்கள். அவர்கள் வெகு சொற்பமாகவே தவிர அல்லாஹ்வை தியானிப்பதில்லை

[143] இவர்கள் (நிராகரிப்பவர்களாகிய) அவர்களுடனுமில்லை. (வஞ்சகர்களாகிய) இவர்களுடனுமில்லை. மத்தியில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். எவர்களை அல்லாஹ் வழிதவறவிட்டு விட்டானோ அவர்களுக்கு நீர் ஒரு வழியையும் காணமாட்டீர்

[144] நம்பிக்கையாளர்களே! நீங்கள் நம்பிக்கையாளர்களையன்றி நிராகரிப்பவர்களை (உங்களுக்குப்) பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (இதன் மூலம் உங்களைத் தண்டிக்க) அல்லாஹ்வுக்கு ஒரு தெளிவான அத்தாட்சியை ஏற்படுத்திவிட நீங்கள் விரும்புகிறீர்களா

[145] நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் நரகத்திலும் கீழ்ப்பாகத்தில்தான் இருப்பார்கள். (அங்கு) அவர்களுக்கு உதவி செய்யும் எவரையும் நீர் காணமாட்டீர்

[146] எனினும் எவர்கள் (தங்கள் பாவத்திற்காக கைசேதப்பட்டு அதிலிருந்து) விலகி, நற்செயல்களையும் செய்து, அல்லாஹ்வை (அவனுடைய கட்டளைகளை) உறுதியாகப் பிடித்துக் கொண்டு, தங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்காகக் கலப்பற்றதாகவும் ஆக்கி வைக்கிறார்களோ அவர்கள் உண்மை நம்பிக்கையாளர்களுடன்தான் (நேசமாக) இருப்பார்கள். உண்மை நம்பிக்கையாளர்களுக்கு (மறுமையில்) அல்லாஹ் மகத்தான (நற்)கூலியை அளிப்பான்

[147] நீங்கள் (இவ்வாறு) அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டும், அவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டுமிருந்தால் உங்களுக்கு வேதனை செய்து அவன் என்ன (லாபம்) அடையப்போகிறான்? அல்லாஹ்வோ (நீங்கள் செய்யும் ஒரு சொற்ப) நன்றிக்கும் கூலிகொடுப்பவனாக, யாவற்றையும் நன்கறிந்தவனாக இருக்கிறான்

[148] அநியாயத்திற்கு உள்ளானவர்களைத் தவிர (மற்றெவரும் யாரைப் பற்றியும்) பகிரங்கமாகக் (கூச்சலிட்டுக்) குற்றம் கூறுவதை அல்லாஹ் விரும்புவதே இல்லை. அல்லாஹ் செவியுறுபவனாக நன்கறிபவனாக, இருக்கிறான்

[149] (ஒருவருக்குச் செய்யும்) நன்மையை நீங்கள் வெளியாக்கினாலும் அல்லது அதை மறைத்துக் கொண்டாலும் அல்லது (ஒருவர் உங்களுக்குச் செய்த) தீங்கை நீங்கள் மன்னித்துவிட்டாலும் (அது உங்களுக்கே மிக நன்று. ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் (குற்றங்களை) மிக மன்னிப்பவனாக, பேராற்றலுடையவனாக இருக்கிறான்

[150] நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நிராகரித்துவிட்டு, அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதர்களுக்கும் இடையில் பிரிவினை செய்துவிடக் கருதி (தூதர்களில்) ‘‘சிலரை நம்பிக்கை கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்'' எனவும் கூறி (நிராகரிப்புக்கும் நம்பிக்கைக்கும்) மத்தியில் ஒரு பாதையை ஏற்படுத்த விரும்புகிறார்களோ

[151] அவர்கள்தான் உண்மையில் நிராகரிப்பவர்கள். நாம் நிராகரிப்பவர்களுக்கு இழிவு தரும் வேதனையையே சித்தப்படுத்தி வைத்திருக்கிறோம்

[152] எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொண்டு, அவர்களுக்கிடையில் பிரிவினை செய்யாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு அவர்களுடைய கூலிகளை (அல்லாஹ் மறுமையில்) கொடுப்பான். அல்லாஹ் மிக்க பிழைபொறுப்பவனாக, மிகக் கருணை காட்டுபவனாக இருக்கிறான்

[153] (நபியே!) வேதத்தையுடையவர்கள் (அவர்கள் விரும்புகிறபடி) வானத்திலிருந்து அவர்கள் மீது ஒரு வேதத்தை இறக்கிவைக்குமாறு உம்மிடம் கேட்கின்றனர். நிச்சயமாக இதைவிடப் பெரியதொன்றையே மூஸாவிடம் அவர்கள் கேட்டு ‘‘அல்லாஹ்வை எங்களுக்குக் கண்கூடாகக் காண்பிப்பீராக'' என்று கூறினார்கள்.ஆகவே, அவர்களின் அநியாயத்தின் காரணமாக அவர்களை இடி முழக்கம் பிடித்துக்கொண்டது. (இதுமட்டுமா?) அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்ததன் பின்னரும் காளைக்கன்றை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டனர். இதையும் நாம் மன்னித்து (அவர்களுடைய நபி) மூஸாவுக்கு தெளிவான அத்தாட்சியைக் கொடுத்தோம்

[154] அவர்களிடம் வாக்குறுதி வாங்குவதற்காகத் ‘தூர்' (ஸீனாய்) என்னும் மலையை அவர்கள் மீது உயர்த்திய சமயத்தில் ‘‘(இந்நகரத்தின்) வாயிலில் தலைகுனிந்து வணங்கியவர்களாகவே செல்லுங்கள்'' என்று நாம் அவர்களுக்கு கூறினோம். (மீன் வேட்டையாட) சனிக்கிழமையில் நீங்கள் வரம்பு மீறாதீர்கள் என்றும் அவர்களுக்குக் கூறி (இவற்றிற்காகவும்) உறுதியான வாக்குறுதியை நாம் அவர்களிடம் பெற்றிருந்தோம். (எனினும் அவர்கள் மாறிவிட்டனர்)

[155] ஆகவே, அவர்கள் தங்கள் வாக்குறுதிகளுக்கு மாறு செய்ததினாலும், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர்கள் நிராகரித்ததாலும், நியாயமின்றி நபிமார்களைக் கொலை செய்து கொண்டிருந்ததாலும், ‘‘எங்கள் உள்ளங்கள் திரையிடப்பட்டு விட்டன. (ஆகவே, எவருடைய உபதேசமும் பலனளிக்காது) என்று அவர்கள் கூறிவந்ததாலும் (நாம் அவர்களைச் சபித்து விட்டோம்). அவர்கள் கூறியதைப் போல் அல்ல! மாறாக, அல்லாஹ்தான் அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக அவர்களுடைய உள்ளங்களின் மீது முத்திரையிட்டுவிட்டான். ஆதலால், (அவர்களில் நல்லோர்) சிலரைத் தவிர (மற்றவர்கள்) நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்

[156] அவர்களின் (இத்தகைய) நிராகரிப்பினாலும், மர்யமின் மீது அபாண்டமான அவதூறைக் கூறியதனாலும் (அவர்களை நாம் சபித்தோம்)

[157] மேலும், ‘‘அல்லாஹ்வுடைய தூதர், மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹை நிச்சயமாக நாம் (சிலுவையில் அறைந்து) கொலை செய்துவிட்டோம்'' என்று அவர்கள் கூறியதனாலும் (அவர்களைச் சபித்தோம்). அவரை அவர்கள் கொலை செய்யவும் இல்லை. அவரை அவர்கள் சிலுவையில் அறையவும் இல்லை. (அவர் இருந்த அறைக்குள் அவரைத் தேடிச் சென்றவன் அவரைப்போல் ஆக்கப்பட்டு விட்டான். தேடிச்சென்ற மற்றவர்கள் அவனையே சிலுவையில் அறைந்தனர். இதனால்) அவர்கள் சந்தேகத்திற்குள்ளாக்கப்பட்டு விட்டனர். ஆகவே, எவர்கள் இதற்கு மாறான அபிப்பிராயம் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் வீண் சந்தேகத்திலேயே ஆழ்ந்துவிட்டனர். வீண் சந்தேகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அதில் அவர்களுக்கு உண்மையான ஞான (ஆதார)ம் கிடையாது. நிச்சயமாக அவர்கள் அவரைக் கொலை செய்யவே இல்லை

[158] எனினும், அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக்கொண்டான். அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான்

[159] வேதத்தையுடையவர்களில் ஒவ்வொருவரும் அவர் இறப்பதற்கு முன்னதாக அவரை நம்பிக்கை கொள்ளாமல் இருப்பதில்லை. எனினும், மறுமை நாளில் இவர்களுக்கு எதிராகவே அவர் சாட்சியம் கூறுவார்

[160] ஆகவே, யூதர்களின் (இத்தகைய) அநியாயங்களின் காரணமாகவும், (அவ்வாறே) அல்லாஹ்வின் பாதையை விட்டு பலரைத் தடுத்துக் கொண்டிருந்ததின் காரணமாகவும் அவர்களுக்கு அனுமதிக்கப் பட்டிருந்தவற்றில் நல்லவற்றை நாம் அவர்களுக்கு விலக்கிவிட்டோம்

[161] அவர்களுக்கு வட்டி விலக்கப்பட்டிருந்தும், அதை வாங்கி வந்ததினாலும், மனிதர்களின் பொருள்களை அவர்கள் நியாயமின்றி விழுங்கி வந்ததினாலும் (நாம் அவர்களைச் சபித்தோம்). அவர்களில் (இத்தகைய) நிராகரிப்பவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையை மறுமையில் தயார்படுத்தி வைத்திருக்கிறோம்

[162] எனினும் (நபியே!) அவர்களில் கல்வியில் உறுதி மிக்கவர்களும், உண்மை நம்பிக்கையாளர்களும், உம் மீது அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், உமக்கு முன்னர் அருளப்பட்டிருந்த (வேதங்கள் யா)வற்றையும் மெய்யாகவே நம்பிக்கை கொள்வார்கள் தொழுகையையும் கடைப்பிடித்துத் தொழுபவர்கள்; ஜகாத்தும் கொடுத்து வருபவர்கள்; அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவர்கள். ஆகிய இவர்களுக்கு (மறுமையில்) மகத்தான கூலியை நாம் கொடுப்போம்

[163] (நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின்னர் வந்த நபிமார்களுக்கும் நாம் வஹ்யி அறிவித்தவாறே உமக்கும் நிச்சயமாக நாம் வஹ்யி அறிவித்தோம். மேலும், இப்றாஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் ஆகியவர்களுக்கும், அவர்களுடைய சந்ததிகளுக்கும், ஈஸா, ஐயூப், யூனுஸ், ஹாரூன், ஸுலைமான் ஆகியவர்களுக்கும் (இவ்வாறே) நாம் வஹ்யி அறிவித்திருக்கிறோம். தாவூதுக்கு ‘ஜபூர்' என்னும் வேதத்தை நாமே கொடுத்தோம்

[164] (இவர்களைப்போல் இன்னும் வேறு) பல நபிமார்களையும் (நாம் அனுப்பி வைத்தோம்). அவர்களுடைய சரித்திரங்களையும் இதற்கு முன்னர் நாம் உமக்குக் கூறியிருக்கிறோம். வேறு பல நபிமார்களையும் (நாம் அனுப்பியிருக்கிறோம். எனினும்) அவர்களுடைய சரித்திரங்களை நாம் உமக்குக் கூறவில்லை. மூஸாவு(க்கு வஹ்யி அறிவித்தது)டன் அல்லாஹ் பேசியும் இருக்கிறான்

[165] அல்லாஹ்வின் மீது (குற்றம் கூற) மனிதர்களுக்கு ஓர் ஆதாரமும் இல்லாதிருக்க இத்தூதர்களுக்குப் பின்னரும் (யஹ்யா போன்ற வேறு) பல தூதர்களை (சொர்க்கத் தைக்கொண்டு) நற்செய்தி கூறுகிறவர்களாகவும், (நரகத்தைக் கொண்டு) அச்சமூட்டி எச்சரிக்கிறவர்களாகவும் (நாம் அனுப்பிவைத்தோம்). அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான்

[166] (நபியே! இவர்கள் உம்மை நிராகரித்து விட்டதனால் ஆவதென்ன?) உம்மீது அருளப்பட்ட வேதம் உண்மையானதென்றும் (உமது மேலான தகுதியை) அறிந்தே அதை (உம்மீது அவன்) இறக்கிவைத்தான் என்றும் அல்லாஹ்வே சாட்சியம் கூறுகிறான். (அவ்வாறே) வானவர்களும் சாட்சி கூறுகின்றனர். அல்லாஹ்வே போதுமான சாட்சி ஆவான்

[167] (நபியே! உம்மை) எவர்கள் நிராகரித்து (மற்றவர்களையும்) அல்லாஹ்வுடைய வழியிலிருந்து மக்களை தடுத்தார்களோ அவர்கள் நிச்சயமாக வெகுதூரமான ஒரு வழிகேட்டில்தான் சென்று விட்டனர்

[168] (நபியே!) எவர்கள் (உம்மை) நிராகரித்துவிட்டு அநியாயம் செய்கிறார்களோ அவர்களை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை. (நேரான) ஒரு வழியில் அவர்களைச் செலுத்தவும் மாட்டான்

[169] நரகத்தின் வழியைத்தவிர (அதில்தான் அவர்களை செலுத்துவான்.) அ(ந்த நரகத்)தில்தான் அவர்கள் என்றென்றும் தங்கியும் விடுவார்கள். இவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு மிகச் சுலபமே

[170] மனிதர்களே! உங்கள் இறைவனால் முற்றிலும் உண்மையைக் கொண்டே அனுப்பப்பட்ட தூதர் நிச்சயமாக உங்களிடம் வந்திருக்கிறார். ஆகவே, நீங்கள் அவரை நம்பிக்கைகொள்ளுங்கள். (அது) உங்களுக்கே மிக்க நன்று. நீங்கள் (அவரை) நிராகரித்துவிட்டால் (அல்லாஹ்வுக்கு ஒன்றும் குறைந்து விடாது. ஏனென்றால்) வானங்களிலும், பூமியிலுமுள்ள அனைத்தும் நிச்சயமாக அல்லாஹ்வுக்குரியனவே! அல்லாஹ் (அனைவரையும்) நன்கறிந்தவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான்

[171] வேதத்தையுடையவர்களே! உங்கள் மார்க்கத்தில் நீங்கள் அளவு கடந்து சென்றுவிடாதீர்கள். மேலும், அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதுவும்) கூறாதீர்கள். நிச்சயமாக மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹ், அல்லாஹ்வுடைய ஒரு தூதர்தான். (அவனுடைய மகனல்ல.) அவனுடைய (‘குன்' என்ற) வாக்கா(ல் பிறந்தவரா)கவும் இருக்கிறார். அல்லாஹ் (தன்) வாக்கை மர்யமுக்கு அளித்தான். (மற்ற ஆத்மாக்களைப் போன்று அவரும்) அவனால் படைக்கப்பட்ட ஓர் ஆத்மாவே. ஆகவே, அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள். (கடவுள்கள்) ‘மூவர்' என்றும் கூறாதீர்கள். (இவ்வாறு கூறுவதை) விட்டுவிடுங்கள். (அது) உங்களுக்குத்தான் மிக நன்று. ஏனென்றால், அல்லாஹ் ஒருவன்தான் வணக்கத்திற்குரியவன். அவன் சந்ததிகளை விட்டும் மிகப் பரிசுத்தமானவன். வானங்கள், பூமியில் இருப்பவை அனைத்தும் அவனுக்கு உரியவையே! (உங்கள் அனைவரையும்) பாதுகாக்க அல்லாஹ் (ஒருவனே) போதுமானவன். (ஈஸா அவசியமில்லை)

[172] ஈஸாவும், சிறப்பு வாய்ந்த வானவர்களும் அல்லாஹ்வுக்கு அடிமையாய் இருப்பதைப்பற்றி குறைவாகக் கருத மாட்டார்கள். எவர்கள் கர்வம் கொண்டு அல்லாஹ்வுக்கு அடிமையாயிருப்பதைக் குறைவாகக் காண்கின்றனரோ அவர்கள் அனைவரையும் (மறுமையில்) அவன் தன்னிடமே கொண்டுவரச் செய்வான்

[173] ஆகவே, எவர்கள் உண்மையாகவே நம்பிக்கை கொண்டு, நற் செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுடைய கூலிகளை அவன் அவர்களுக்கு முழுமையாக அளித்து, தன் அருளால் மென்மேலும், அவர்களுக்கு அதிகப்படுத்துவான். எவர்கள் கர்வம் கொண்டு (அல்லாஹ்வுக்கு அடிமையாய் இருப்பதைக்) குறைவாகக் காண்கின்றனரோ அவர்களைத் துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு வேதனை செய்வான். அல்லாஹ்வைத் தவிர தங்களுக்குத் துணை புரிபவர்களையும் உதவி புரிபவர்களையும் (அங்கு) அவர்கள் காணமாட்டார்கள்

[174] மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து (போதுமான) அத்தாட்சியாளர் நிச்சயமாக உங்களிடம் வந்துவிட்டார். (அவருடன்) மிகத்தெளிவான (வேதமென்னும்) ஒளியை நாம் உங்களுக்கு இறக்கியிருக்கிறோம்

[175] ஆகவே, எவர்கள் அல்லாஹ்வை உண்மையாகவே நம்பிக்கை கொண்டு, அ(ந்த வேதத்)தைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்கிறார்களோ அவர்களை அவன் தன் அன்பிலும், அருளிலும் செலுத்தி விடுகிறான். தன்னிடம் வருவதற்குரிய நேரான வழியிலும் அவர்களைச் செலுத்துகிறான்

[176] (நபியே!) ‘கலாலா' பற்றிய (அதாவது தந்தை, பாட்டன், பிள்ளை, பேரன் ஆகிய வாரிசுகள் இல்லாத பொருளைப் பற்றிய) மார்க்கக் கட்டளையை அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறுவீராக: ‘‘அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். சந்ததியில்லாத ஒரு மனிதன் இறந்து அவனுக்கு (ஒரே) ஒரு சகோதரி (மட்டும்) இருந்தால் அவளுக்கு அவன் விட்டுச் சென்ற (சொத்)தில் பாதி கிடைக்கும். (இதற்கு மாறாக ஒரு பெண் இறந்து) அவளுக்குச் சந்ததி இல்லாமலிருந்(து ஒரே ஒரு சகோதரன் மட்டும் இருந்)தால் அவள் விட்டுச்சென்ற அனைத்தையும் அவன் அடைவான். ஆணின்றி இரு பெண்கள் (மட்டும்) இருந்தால், அவள் விட்டுச் சென்றதில் மூன்றில் இரு பாகத்தை இவ்விருவரும் அடைவார்கள். மேலும், ஆணும் பெண்ணும் (ஆகப் பலர்) சகோதரர்களாயிருந்தால், (இறந்தவர் விட்டுச்சென்றதில்) ஆணுக்குப் பெண்ணுக்கிருப்பதைப் போல இரண்டு பங்கு உண்டு. (அதாவது பெண்ணுக்கு ஒரு பங்கும் ஆணுக்கு இரு பங்குகளும் கிடைக்கும்.) நீங்கள் வழி தவறாமல் இருப்பதற்காக (இவற்றை) அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) தெளிவாக விவரிக்கிறான். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவன் ஆவான்

அல்மாயிதா

Surah 5

[1] நம்பிக்கையாளர்களே! நீங்கள் (உங்கள்) உடன்படிக்கைகளை முழுமையாக நிறைவேற்றுங்கள். மேலும், உங்களுக்கு (பின்வரும் 3ஆம் வசனத்தில்) ஓதி காட்டப்படுபவற்றைத் தவிர (மற்ற) கால்நடைகள் அனைத்தும் உங்களுக்கு ஆகுமாக்கப் பட்டிருக்கின்றன. (அவற்றை எந்நேரத்திலும் புசிக்கலாம்; வேட்டையாடலாம். எனினும்) நீங்கள் இஹ்ராம் (ஹஜ், உம்ராவில்) உடையவர்களாக இருக்கும் சமயத்தில் (இவற்றை) வேட்டையாடுவது உங்களுக்கு ஆகுமானதல்ல. நிச்சயமாக அல்லாஹ், தான் நாடியதை (உங்களுக்குக்) கட்டளையிடுகிறான்

[2] நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் மார்க்க அடையாளங்களையும் (ரஜப், துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய) சிறப்புற்ற புனித மாதங்களையும், (ஹஜ்ஜின்) குர்பானிகளையும், (குர்பானிகளுக்காக) மாலை கட்டப்பட்டவற்றையும், தங்கள் இறைவனின் அருளையும், திருப்பொருத்தத்தையும் அடையக்கருதி கண்ணியமான அவனுடைய ஆலயத்தை நாடிச் செல்பவர்களையும் (அவமதிப்பதை) நீங்கள் ஆகுமாக்கிக் கொள்ளாதீர்கள். நீங்கள் உங்கள் இஹ்ராமை நீக்கிவிட்டால் (அனுமதிக்கப்பட்டவற்றை) நீங்கள் வேட்டையாடலாம். கண்ணியமான மஸ்ஜிதை விட்டு உங்களைத் தடுத்த வகுப்பார் மீது (உங்களுக்கு)ள்ள துவேஷம் (அவர்கள்மீது) நீங்கள் வரம்பு மீறும்படி உங்களைத் தூண்டாதிருக்கவும். மேலும், நன்மைக்கும் அல்லாஹ்வுடைய இறையச்சத்திற்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள். பாவத்திற்கும் அத்துமீறுவதற்கும் (அநியாயத்திற்கும்) நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டாம். அல்லாஹ்வுக்கே நீங்கள் பயப்படுங்கள். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ், வேதனை செய்வதில் மிகக் கடுமையானவன் ஆவான்

[3] (நம்பிக்கையாளர்களே! தானாக) செத்தது, இரத்தம், பன்றி இறைச்சி, அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் கூறப்பட்டவை ஆகியவையும், அடிப்பட்டுச் செத்ததும், (மேலிருந்து) விழுந்து செத்ததும், கழுத்து நெருக்கிச் செத்ததும், கொம்பால் குத்தப்பட்டுச் செத்ததும், (சிங்கப் பல்லும், வீர நகமுமுள்ள மாமிசம் தின்னும் மிருகங்களாகிய சிங்கம், புலி, சிறுத்தை போன்ற) ஐவாய் மிருகங்கள் கடித்(துச் செத்)தவையும் உங்களுக்கு விலக்கப்பட்டிருக்கின்றன. (எனினும், இம்மிருகங்கள் வேட்டையாடிய) அவற்றில் (உயிரோடிருப்பவற்றில்) முறைப்படி (பிஸ்மில்லாஹ் சொல்லி) அறுக்கப்பட்டவற்றைத் தவிர. (அவ்வாறு அறுக்கப்பட்டவற்றைப் புசிக்கலாம். பூஜை செய்வதற்காக) நடப்பட்ட (ஸ்தம்பம், கொடி, பாவட்டா, சிலை போன்ற)வற்றுக்காக அறுக்கப்பட்டவையும், அம்பு எய்து (குறி கேட்டுப்) பாகம் பிரித்துக் கொள்வதும் (உங்களுக்கு விலக்கப்பட்டிருக்கின்றன). இவை அனைத்தும் பாவங்களாகும். நிராகரிப்பவர்கள் உங்கள் மார்க்கத்தை (அழித்துவிடலாம் என்பதை)ப் பற்றிய நம்பிக்கையை இன்றைய தினம் இழந்துவிட்டார்கள். ஆகவே, அவர்களுக்கு நீங்கள் (ஒரு சிறிதும்) பயப்பட வேண்டாம். எனக்கே பயப்படுங்கள். இன்றைய தினம் நான் உங்களுக்கு உங்கள் மார்க்கத்தை முழுமையாக்கி வைத்து என் அருளையும் உங்கள் மீது முழுமையாக்கி வைத்துவிட்டேன். உங்களுக்காக இந்த இஸ்லாமை மார்க்கமாக திருப்தியடைந்தேன் (அங்கீகரித்துக் கொண்டேன்). எவரேனும், பாவம் செய்யும் எண்ணமின்றி பசியின் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (மேலே கூறப்பட்ட விலக்கப்பட்டவற்றைப் புசித்து) விட்டால் (அது குற்றமாகாது. ஏனென்றால்), நிச்சயமாக அல்லாஹ் (நிர்ப்பந்தத்திற்குள்ளான அவருடைய குற்றங்களை) மிகவும் மன்னிப்பவன், (அவர் மீது) பெரும் கருணை காட்டுபவன் ஆவான்

[4] (நபியே! புசிக்க) தங்களுக்கு அனுமதிக்கப்பட்டவை எவை என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘(சுத்தமான) நல்லவை அல்லாஹ் உங்களுக்குக் கற்பித்திருக்கிறபடி வேட்டையாடும் (நாய், சிறுத்தை போன்ற) மிருகங்களுக்கு(ம், ராஜாளி போன்ற பறவைகளுக்கும்) நீங்கள் வேட்டையாடக் கற்பித்து அவை (வேட்டையாடி,) உங்களுக்காகத் தடுத்(து வைத்)திருப்பவற்றை, (அவை இறந்துவிட்டபோதிலும்) நீங்கள் புசிக்கலாம். (அவையும் உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளன.) (எனினும், அவற்றை வேட்டைக்கு விடும் பொழுது ‘பிஸ்மில்லாஹ்' என்று) அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள். அல்லாஹ்வுக்குப் பயந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்பதில் மிகத் தீவிரமானவன்

[5] (நம்பிக்கையாளர்களே!) இன்றுமுதல் நல்லவை அனைத்தும் உங்களுக்கு (உண்பதற்கு) ஆகுமாக்கப்பட்டு விட்டன. வேதத்தை உடையவர்களின் உணவும் உங்களுக்கு ஆகுமானதே! உங்கள் உணவும் அவர்களுக்கு ஆகுமானதே! நம்பிக்கை கொண்ட கற்புடைய பெண்களையும், உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்ட கற்புடைய பெண்களையும், விபச்சாரிகளாகவோ வைப்பாட்டிகளாகவோ கொள்ளாமல், அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய மஹர்களையும் கொடுத்து (திருமணம் செய்து) கொள்வது (உங்களுக்கு ஆகும்). எவன் நம்பிக்கை கொண்டதன் பின்னர் (இந்த சட்டங்களை) நிராகரிக்கிறானோ அவனுடைய நற்செயல்கள் நிச்சயமாக அழிந்துவிடும். மறுமையிலோ அவன் (முற்றிலும்) நஷ்டமடைந்தவர்களில்தான் இருப்பான்

[6] நம்பிக்கையாளர்களே! நீங்கள் தொழுகைக்குச் சென்றால் (அதற்கு முன்னர்) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் கைகளையும், கணுக்கால்கள் வரை உங்கள் இரு பாதங்களையும் கழுவிக்கொள்ளுங்கள். (உங்கள் கையில் நீரைத் தொட்டு) உங்கள் தலையை(த் தடவி) ‘மஸஹு' செய்துகொள்ளுங்கள். நீங்கள் முழுக்குடையவர்களாக இருந்தால் (கை கால்களை மட்டும் கழுவினால் போதாது. உடல் முழுவதையும் கழுவி) தூய்மையாக்கிக் கொள்ளுங்கள். அன்றி, நீங்கள் நோயாளிகளாக இருந்தால் அல்லது பயணத்தில் இருந்தால் அல்லது உங்களில் எவரும் மலஜல பாதைக்குச் சென்று வந்திருந்தால் அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டியிருந்தால், (தொழுகையின் நேரம் வந்து உங்களைச் சுத்தம் செய்து கொள்வதற்கு வேண்டிய) தண்ணீரை நீங்கள் பெறவில்லையெனில் (தயம்மும் செய்து கொள்ளுங்கள். அதாவது) சுத்தமான மண்ணை (உங்கள் கைகளால் தொட்டு அதை)க்கொண்டு உங்கள் முகங்களையும், கைகளையும் துடைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குக் கஷ்டத்தைத் தர அல்லாஹ் விரும்பவில்லை. எனினும், அவன் உங்களைப் பரிசுத்தமாக்கி வைக்கவும், தன் அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கி வைக்கவுமே விரும்புகிறான். (இதற்காக) நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்துவீர்களாக

[7] (யூதர்களே!) உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருளையும், அவன் (உங்களிடம்) வாக்குறுதி வாங்கிய பொழுது அதை நீங்கள் உறுதிப்படுத்தி ‘‘நாங்கள் செவிசாய்த்தோம். (உனக்கு) கட்டுப்பட்டோம்'' என்று நீங்கள் கூறியதையும் ஞாபகப்படுத்திக் கொண்டு அல்லாஹ்வுக்குப் பயப்படுங்கள். (ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) உள்ளங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன் ஆவான்

[8] நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்காக நீதிவான்களாக நீதத்திற்கு சாட்சி சொல்பவர்களாக இருங்கள். ஒரு வகுப்பார் மீதுள்ள துவேஷம் அவர்களுக்கு அநியாயம் செய்யும்படி உங்களைத் தூண்டாதிருக்கட்டும். (பகைமை இருந்தாலும்) நீங்கள் நீதியே செலுத்துங்கள். அதுதான் இறையச்சத்திற்கு மிக நெருங்கியது. (எப்போதும்) நீங்கள் அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவன் ஆவான்

[9] எவர்கள், நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு பாவமன்னிப்பும், மகத்தான (நற்) கூலியும் உண்டு என அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்

[10] எவர்கள் நம் வசனங்களைப் பொய்யாக்கி நிராகரிக்கிறார்களோ அவர்கள் நரகவாசிகள்தான்

[11] நம்பிக்கையாளர்களே! ஒரு வகுப்பார் உங்களுக்குத் தீங்கிழைக்கத் தீர்மானித்து தங்கள் கைகளை உங்களளவில் நீட்டியபொழுது, அல்லாஹ் அவர்களது கைகளை உங்களை விட்டுத் தடுத்து உங்களுக்குப் புரிந்த அருளை நீங்கள் நினைத்துப் பாருங்கள். ஆகவே, அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள். மேலும், நம்பிக்கைகொண்டவர்கள் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படைக்கவும்

[12] நிச்சயமாக இஸ்ராயீலின் சந்ததிகளிடம் அல்லாஹ் உறுதிமொழி வாங்கியிருக்கிறான். இன்னும், அவர்களிலிருந்தே பன்னிரண்டு தலைவர்களை (அப்போஸ்தலர்களை) நாம் அனுப்பி இருக்கிறோம். (அவ்வாறு உறுதிமொழி வாங்கிய சமயத்தில் அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நான் உங்களுடனேயே இருக்கிறேன். நீங்கள் தொழுகையை(த் தவறாது) கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து, என் தூதர்களை நம்பிக்கைகொண்டு, அவர்களுக்கு உதவியும் புரிந்து, அல்லாஹ்வுக்(காக சிரமத்தில் இருப்பவர்களுக்)கு அழகான முறையில் கடன் கொடுத்தால், நிச்சயமாக நான் (இவற்றை) உங்கள் பாவங்களுக்குப் பரிகாரமாக்கி வைத்து, தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சொர்க்கங்களிலும் உங்களை நுழைய வைப்பேன்'' என்று அல்லாஹ் கூறினான். ஆகவே, உங்களில் எவரேனும் இதற்குப் பிறகும், நிராகரிப்பவராக ஆகிவிட்டால் நிச்சயமாக அவர் நேரான வழியில் இருந்து தவறிவிட்டார்

[13] அவர்கள் தங்கள் உறுதிமொழிக்கு மாறு செய்ததன் காரணமாக நாம் அவர்களைச் சபித்து, அவர்களுடைய உள்ளங்களை இறுகச்செய்து விட்டோம். அவர்கள் (தங்கள் வேத) வசனங்களை அவற்றின் (உண்மை) அர்த்தங்களிலிருந்து புரட்டுகிறார்கள். (நமது இந்நபியைப் பற்றி) அதில் அவர்களுக்குக் கூறப்பட்டிருந்த பாகத்தையும் மறந்து விட்டார்கள். ஆகவே, (நபியே!) சிலரைத் தவிர அவர்களி(ல் பெரும்பாலோரி)ன் மோசடியை(ப் பற்றிய செய்தியை) நீர் அடிக்கடி கேள்விப்பட்டு வருவீர். ஆகவே, இவர்களை நீர் மன்னித்துப் புறக்கணித்து வருவீராக. நிச்சயமாக அல்லாஹ் அழகிய பண்புடையவர்களை நேசிக்கிறான்

[14] எவர்கள் தங்களை ‘‘நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்கள்'' எனக் கூறுகிறார்களோ அவர்களிடமும் (இவ்வாறே) நாம் உறுதிமொழி வாங்கியிருக்கிறோம். எனினும், அவர்களும் (இந்நபியைப் பற்றி தங்கள் வேதத்தில்) தங்களுக்குக் கூறப்பட்டிருந்த பாகத்தை மறந்து விட்டார்கள். ஆதலால், அவர்களுக்குள் பகைமையையும் கோபத்தையும் மறுமை நாள் வரை (நீங்காதிருக்கும்படி) மூட்டிவிட்டோம். (இவ்வுலகில்) அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதை (மறுமையில்) அல்லாஹ் அவர்களுக்கு எடுத்துக் காண்பிப்பான்

[15] வேதத்தையுடையவர்களே! உங்களிடம் நிச்சயமாக நம் தூதர் வந்திருக்கிறார். வேதத்தில் நீங்கள் மறைத்துக்கொண்டிருந்த பல விஷயங்களை அவர் உங்களுக்குத் தெளிவாக எடுத்துக் காண்பிக்கிறார். மற்றும் பல விஷயங்களை (அவர் அறிந்திருந்தும் உங்களுக்கு கேவலம் உண்டாகக்கூடாது என்பதற்காக அவற்றைக் கூறாது) விட்டுவிடுகிறார். நிச்சயமாக, அல்லாஹ்விடமிருந்து ஒளியும் மிகத்தெளிவான ஒரு வேதம் (இப்போது) உங்களிடம் வந்திருக்கிறது

[16] (உங்களில்) எவர்கள் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பின்பற்றுகிறார்களோ அவர்களை அதன் மூலமாக அல்லாஹ் சமாதானத்திற்குரிய வழியில் செலுத்துகிறான். இன்னும், இருள்களில் இருந்தும் வெளியேற்றித் தன் அருளைக் கொண்டு ஒளியின் பக்கம் கொண்டு வருகிறான். மேலும், அவர்களை நேரான வழியில் செல்லும்படியும் செய்கிறான்

[17] எவர்கள், மர்யமுடைய மகன் மஸீஹை அல்லாஹ்தான் என்று கூறுகின்றனரோ அவர்கள் நிச்சயமாக நிராகரிப்பவர்களாகவே இருக்கின்றனர். ஆகவே, (நபியே!) நீர் கூறுவீராக: ‘‘மர்யமுடைய மகன் மஸீஹையும், அவருடைய தாயையும், உலகத்திலுள்ள (மற்ற) அனைவரையும் அல்லாஹ் அழித்துவிடக் கருதினால் (அவனைத் தடுக்க) எவன்தான் சிறிதேனும் சக்தி பெறுவான்? (ஏனென்றால்,) வானங்கள், பூமி இன்னும் இவற்றுக்கு மத்தியிலுள்ள அனைத்தின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே! அவன் விரும்பியதை (விரும்பியபடி) படைக்கிறான். அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக பேராற்றலுடையவன்

[18] யூதர்களும், கிறிஸ்தவர்களும் ‘‘நாங்கள் அல்லாஹ்வுடைய பிள்ளைகள், அவனுடைய அன்பிற்குரியவர்கள்'' என்று கூறுகின்றனர். (ஆகவே, நபியே! அவர்களை நோக்கி) நீர் கூறுவீராக: ‘‘அவ்வாறாயின், உங்கள் குற்றங்களுக்காக (இறைவன்) உங்களை ஏன் (அடிக்கடி துன்புறுத்தித்) தண்டிக்கிறான்? (உண்மை) அவ்வாறன்று. நீங்களும் அவனால் படைக்கப்பட்ட (மற்ற) மனிதர்கள் (போன்று)தான். (நீங்கள் அவனுடைய பிள்ளைகளல்ல. ஆகவே, உங்களிலும்) அவன் நாடியவர்களை மன்னிக்கிறான்; அவன் நாடியவர்களை வேதனை செய்கிறான். வானங்கள், பூமி இவற்றுக்கு மத்தியிலுள்ள அனைத்தின் ஆட்சி அல்லாஹ்வுக் குரியதே! அவனளவில்தான் (அனைவரும்) செல்ல வேண்டியதாக இருக்கிறது

[19] வேதத்தையுடையவர்களே! (ஈஸாவுக்குப் பின்னர் இதுவரை) தூதர்கள் வராது தடைப்பட்டிருந்த காலத்தில் ‘‘நற்செய்தி கூறுபவர், அச்சமூட்டி எச்சரிப்பவர் எங்களிடம் வரவேயில்லை'' என்று நீங்கள் (குறை) கூறாதிருக்க, (மார்க்கக் கட்டளைகளை) உங்களுக்குத் தெளிவாக அறிவிக்கக்கூடிய நமது (இத்)தூதர் நிச்சயமாக உங்களிடம் வந்துவிட்டார். ஆகவே, அச்சமூட்டி எச்சரிப்பவர், நற்செய்தி கூறுபவர் உங்களிடம் வந்திருக்கிறார். அல்லாஹ், அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்

[20] மூஸா தன் சமூகத்தாரை நோக்கி ‘‘என் சமூகத்தாரே! உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடையை நீங்கள் நினைத்துப் பாருங்கள். அவன் உங்களுக்குள் (மூஸா, ஹாரூன் போன்ற) நபிமார்களை ஏற்படுத்தி (எகிப்தியரிடம் அடிமைகளாய் இருந்த) உங்களை அரசர்களாகவும் ஆக்கி, உலகத்தில் மற்ற எவருக்குமே அளிக்காத (அற்புதங்களாகிய கடலைப் பிளந்து செல்லுதல், ‘மன்னு ஸல்வா' என்ற உணவு போன்ற)வற்றையும் உங்களுக்கு அளித்திருக்கிறான்'' என்று கூறியதை (நபியே! நீர் அவர்களுக்கு) ஞாபகமூட்டுவீராக

[21] (தவிர, அவர்) ‘‘என் சமூகத்தாரே! அல்லாஹ் உங்களுக்கென விதித்த பரிசுத்தமான பூமியில் (இருக்கும் உங்கள் எதிரியுடன் போர் புரிந்து அதில்) நுழையுங்கள். (அவர்களுக்கு) நீங்கள் புறங்காட்டித் திரும்பாதீர்கள். (புறம் காட்டினால்) நீங்கள் நஷ்டமடைந்தவர்களாகவே திரும்புவீர்கள்'' (என்றும் கூறினார்)

[22] (அதற்கு) அவர்கள் (மூஸாவை நோக்கி) ‘‘மூஸாவே! நிச்சயமாக அதில் மிக பலசாலிகளான மக்கள் இருக்கின்றனர். அவர்கள், அதைவிட்டு வெளியேறும் வரை நாங்கள் அதனுள் நுழையவே மாட்டோம். அவர்கள் அதைவிட்டு வெளியேறி விட்டால் நாங்கள் தவறாமல் நுழைந்துவிடுவோம்'' என்றனர்

[23] (இவ்வாறு) பயந்தவர்களில் (ஜோஷுவ, காலெப் என்ற) இருவர்மீது அல்லாஹ் அருள்புரிந்திருந்தான். அவர்கள் (மற்றவர்களை நோக்கி) ‘‘நீங்கள் (அவர்கள் பலத்தைப்பற்றி பயப்படவேண்டாம்.) அவர்களை எதிர்த்து (அந் நகரத்தின்) வாயில் வரை சென்றுவிடுங்கள். அதில் நீங்கள் நுழைந்து விட்டால் நிச்சயமாக நீங்கள் வெற்றி பெற்று விடுவீர்கள். நீங்கள் (உண்மை) நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்விடமே பொறுப்பை சாட்டுங்கள்'' என்று கூறினார்கள்

[24] (இதன் பிறகும் அவர்கள் மூஸாவை நோக்கி) ‘‘மூஸாவே! அவர்கள் அதிலிருக்கும் வரை ஒருக்காலும் நாங்கள் அதில் செல்லவே மாட்டோம். நீரும், உமது இறைவனும் (அங்கு) சென்று (அவர்களுடன்) போர் புரியுங்கள். நிச்சயமாக நாங்கள் இங்கேயே உட்கார்ந்து (கவனித்துக்) கொண்டிருப்போம்'' என்று கூறினார்கள்

[25] (அதற்கு மூஸா) ‘‘என் இறைவனே! நிச்சயமாக என் மீதும், என் சகோதரர் மீதும் தவிர, (மற்ற எவர் மீதும்) எனக்கு அதிகாரம் இல்லை. ஆகவே, பாவிகளான (இந்த) மக்களிலிருந்து நீ எங்களைப் பிரித்து விடுவாயாக!'' என்று (பிரார்த்தித்துக்) கூறினார்

[26] (அதற்கு இறைவன், அவ்வாறாயின் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட) ‘‘அந்த இடம் நாற்பது வருடங்கள் வரை அவர்களுக்கு நிச்சயமாகத் தடுக்கப்பட்டு விட்டது. (அதுவரை) அவர்கள் பூமியில் தட்டழி(ந்து கெட்டலை)வார்கள். ஆகவே, (இந்தப்) பாவிகளான மக்களைப் பற்றி நீர் கவலை கொள்ளாதீர்!'' என்று (மூஸாவுக்குக்) கூறினான்

[27] (நபியே!) ஆதமுடைய (ஹாபீல், காபீல் என்னும்) இரு மகன்களின் உண்மைச் செய்திகளை நீர் அவர்களுக்கு ஓதிக் காண்பிப்பீராக. இருவரும் ‘‘குர்பானி' (பலி) கொடுத்தபோது, அவ்விருவரில் ஒருத்தருடைய (குர்பானி யான)து ஏற்றுக் கொள்ளப்பட்டது. மற்றவருடையது ஏற்கப்படவில்லை. ஆதலால், ‘‘நிச்சயம் நான் உன்னைக் கொன்றுவிடுவேன்'' என்றார். உடனே (குர்பானி ஏற்றுக் கொள்ளப்பட்ட நல்லவர்) ‘‘அல்லாஹ் (குர்பானியை) ஏற்றுக் கொள்வதெல்லாம் இறையச்சமுள்ளவர்களிடமிருந்துதான்'' என்று பதில் கூறினார்

[28] ‘‘நீ என்னை வெட்டுவதற்காக உன் கையை என்னளவில் நீட்டினா(ல், அந்நேரத்தி)லும் நான் உன்னை வெட்டுவதற்காக என் கையை உன்னளவில் நீட்டவே மாட்டேன். ஏனென்றால், நிச்சயமாக நான் உலகத்தார் அனைவரையும் படைத்து வளர்த்து பாதுகாப்பவனாகிய அல்லாஹ்வுக்கு அஞ்சுகின்றன்

[29] என் பாவச் சுமையையும், உன் பாவச் சுமையுடன் நீ சுமந்துகொண்டு (இறைவனிடம்) வருவதையே நான் விரும்புகின்றன். அவ்வாறு நீ வந்தால் நரகவாசியாகி விடுவாய் இதுதான் அநியாயக்காரர்களுக்குரிய கூலியாகும்'' (என்று கூறினார்)

[30] (இதன் பின்னரும்) அவர் தன் சகோதரரை வெட்டிவிடும்படியாக அவருடைய மனம் அவரைத் தூண்டவே, அவர் அவரை வெட்டிவிட்டார். அதனால் அவர் நஷ்டமடைந்தவரானார்

[31] பின்னர் தன் சகோதரரின் பிரேதத்தை எவ்வாறு மறைக்க வேண்டும் என்பதை அவருக்கு அறிவிப்பதற்காக அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பிவைத்தான். அது (அவருடைய சகோதரரின் உடலை எவ்வாறு மறைப்பது என்பதை அவருக்குக் காண்பிப்பதற்காகப்) பூமியைத் தோண்டிற்று. (இதைக் கண்ட) அவர் ‘‘அந்தோ! இந்தக் காகத்தைப்போல் (சொற்ப அறிவுடையவனாக) நான் இருந்தாலும் என் சகோதரரின் சவத்தை நான் மறைத்திருப்பேனே! (அதுவும்) என்னால் முடியாமல் போய் விட்டதே!'' என்று (அழுது) கூறித் துக்கத்தில் ஆழ்ந்துவிட்டார்

[32] இதன் காரணமாகவே ‘‘எவனொருவன் மற்றோர் ஆத்மாவைக் கொலைக்குப் பதிலாக அல்லது பூமியில் குழப்பத்தைத் தடை செய்வதற்காகவே தவிர (அநியாயமாகக்) கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் அனைவரையுமே கொலை செய்தவன் போலாவான். மேலும், எவன் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறானோ அவன் மனிதர்கள் அனைவரையும் வாழவைத்தவன் போலாவான்'' என்று இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு (அளித்த கற்பலகையில்) நாம் வரைந்து விட்டோம். மேலும், அவர்களிடம் நமது பல தூதர்கள் நிச்சயமாகத் தெளிவான அத்தாட்சிகளையும் கொண்டு வந்திருந்தார்கள். இதற்குப் பின்னரும், அவர்களில் பெரும்பாலானவர்கள் பூமியில் வரம்பு கடந்தே வந்தனர்

[33] எவர்கள் அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போர் தொடுத்தும், பூமியில் விஷமம் செய்து கொண்டும் திரிகிறார்களோ, அவர்களுக்குரிய தண்டனை (அவர்களை) கொன்றுவிடுவது அல்லது சிலுவையில் அறைவது அல்லது மாறு கை(கள், மாறு) கால்களைத் துண்டிப்பது அல்லது (கைது செய்வது அல்லது) நாடு கடத்தி விடுவதுதான். இது இம்மையில் அவர்களுக்கு இழிவு (தரும் தண்டனை) ஆகும். மேலும், மறுமையிலோ மகத்தான வேதனையும் அவர்களுக்குண்டு

[34] எனினும், அவர்கள் மீது நீங்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கு முன்னதாகவே கைசேதப்பட்(டு, தங்கள் விஷமத்தில் இருந்து விலகிக்கொண்)டவர்களைத் தவிர நிச்சயமாக அல்லாஹ் (அவர்களை) மிக மன்னிப்பவன் பெரும் கருணை புரிபவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்

[35] நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்; அவனிடம் செல்வதற்குரிய வழியைத் தேடிக்கொள்ளுங்கள். அவனுடைய பாதையில் (போர் செய்ய) பெரும் முயற்சி எடுத்துக் கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றியடையலாம்

[36] நிச்சயமாக நிராகரிப்பவர்களுக்கு இப்பூமியில் உள்ள அனைத்தும், அத்துடன் அதைப்போன்ற ஒரு பாகமும் (சொந்தமாக) இருந்து, அவர்கள் இவை அனைத்தையும் தாங்கள் மறுமை நாளின் வேதனையிலிருந்து தப்பிக்க பிரதியாகக் கொடுத்தாலும் அவர்களிடமிருந்து (அது) அங்கீகரிக்கப்பட மாட்டாது. மேலும், அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையே கிடைக்கும்

[37] அவர்கள் (நரக) நெருப்பிலிருந்து வெளியேறவே விரும்புவார்கள். எனினும், அதிலிருந்து வெளியேற அவர்களால் (முடியவே) முடியாது. அவர்களுக்கு வேதனை (என்றென்றுமே) நிலைத்திருக்கும்

[38] ஆணோ, பெண்ணோ எவர் திருடினாலும் (இத்) தீயச் செயலுக்குத் தண்டனையாக அவர்களின் கைகளைத் துண்டித்து விடுங்கள். (இது) அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட தண்டனை ஆகும். அல்லாஹ் மிகைத்தவன், ஞானமுடையவன் ஆவான்

[39] எவரேனும் தன் (இத்) தீயச் செயலுக்குப் பின்னர் (கைசேதப்பட்டு தன் குற்றத்தை) சீர்திருத்திக்கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து விடுவான். (ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன், மிகக் கருணையுடையவன் ஆவான்

[40] (நபியே!) நிச்சயமாக வானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது என்பதை நீர் அறியவில்லையா? ஆகவே, அவன் நாடியவர்களை வேதனை செய்வான். அவன் விரும்பியவர்களை மன்னிப்பளிப்பான். அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக்க பேராற்றலுடையவன் ஆவான்

[41] (நம்) தூதரே! சிலர் நிராகரிப்பின் பக்கம் விரைந்தோடுவது உமக்குக் கவலையைத் தரவேண்டாம். ஏனென்றால், அவர்கள் தங்கள் வாயினால் மட்டும் ‘‘நம்பிக்கை கொண்டோம்'' என்று கூறினார்களே தவிர, அவர்களுடைய உள்ளங்கள் (அதை) ஒப்புக் கொள்ளவில்லை. (அவ்வாறே) யூதர்(களிலும் சிலருண்டு. அவர்)கள் பொய்(யான விஷயங்)களையே (ஆவலோடு) அதிகமாகக் கேட்கின்றனர். மேலும், (இதுவரை) உங்களிடம் வராத மற்றொரு கூட்டத்தினருக்(கு இவற்றை அறிவிப்பதற்)காகவும், (விஷமத்தனமான வார்த்தைகளையே) அதிகமாகக் கேட்கின்றனர். அவர்கள் (வேத) வசனங்களை அவற்றின் (உண்மை) அர்த்தத்திலிருந்து புரட்டி (இவர்களை நோக்கி) ‘‘உங்களுக்கு (இந்த நபியிடமிருந்து) இன்ன கட்டளைக் கிடைத்தால் அதை எடுத்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்குக் கிடைக்கா விட்டால் (அதிலிருந்து) விலகிக் கொள்ளுங்கள்'' என்றும் கூறுகின்றனர். அல்லாஹ் எவரையும் கஷ்டத்திற்குள்ளாக்க விரும்பினால் அவருக்காக அல்லாஹ்விடம் எதையும் செய்ய நீர் ஆற்றல் பெறமாட்டீர். இவர்களின் உள்ளங்களைப் பரிசுத்தமாக்கி வைக்க அல்லாஹ் விரும்பவேயில்லை. இவர்களுக்கு, இம்மையில் இழிவும் மறுமையில் மகத்தான வேதனையும் உண்டு

[42] இவர்கள் பொய்யையே அதிகமாகக் கேட்கின்றனர் (பொய்யான விஷயங்களையே அதிகம் பின்பற்றுகின்றனர்). ஆகாத பொருள்களையே அதிகமாக விழுங்கிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் (ஒரு நியாயத்திற்காக) உம்மிடம் வரும் சமயத்தில் அவர்களுக்கிடையில் நீங்கள் (நீதமாக) தீர்ப்பளிப்பீராக அல்லது (தீர்ப்பளிக்காது) அவர்களைப் புறக்கணித்து விடுவீராக. நீர் அவர்களைப் புறக்கணித்து விட்டாலும், அவர்கள் உமக்கு ஒரு தீங்கும் செய்ய முடியாது. அவர்களுக்கு இடையில் நீர் தீர்ப்பளித்தால், நீதமாகவே தீர்ப்பளிப்பீராக. ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் நீதவான்களை நேசிக்கிறான்

[43] (எனினும் நபியே!) இவர்கள் உம்மை (தங்களுக்குத்) தீர்ப்பு கூறுபவராக எவ்வாறு எடுத்துக் கொள்வார்கள்? (ஏனென்றால்,) இவர்களிடத்திலோ தவ்றாத் என்னும் வேதம் இருக்கிறது. அதில் அல்லாஹ்வுடைய கட்டளையும் இருக்கிறது. அவ்வாறிருந்தும் அதை இவர்கள் புறக்கணித்துவிட்டனர். ஆகவே, (அதையும்) இவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் அல்லர்

[44] ‘தவ்றாத்' (என்னும் வேதத்)தையும் நிச்சயமாக நாம்தான் இறக்கிவைத்தோம். அதில் நேர்வழியும் இருக்கிறது; ஒளியும் இருக்கிறது. (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் வழிப்பட்டு நடந்த நபிமார்கள் அதைக் கொண்டே யூதர்களுக்கு (மார்க்க)க் கட்டளையிட்டு வந்தார்கள். அவர்களுடைய (பண்டிதர்களாகிய) ரிப்பிய்யூன்களும், (குருமார்களாகிய) அஹ்பார்களும், அல்லாஹ்வுடைய வேதத்தைக் காப்பவர்கள் என்ற முறையில் (அதைக் கொண்டே தீர்ப்பளித்து வந்தார்கள். மேலும், அவர்கள்)அதற்கு சாட்சிகளாகவும் இருந்தார்கள். (அவ்விதமிருந்தும் யூதர்கள் புறக்கணித்து விட்டனர். நம்பிக்கையாளர்களே!) நீங்கள் மனிதர்களுக்கு அஞ்ச வேண்டாம்; எனக்கே அஞ்சிக் கொள்ளுங்கள். என் வசனங்களை ஒரு சொற்ப விலைக்கு விற்று விடாதீர்கள். எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்தவற்றைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் நிச்சயமாக நிராகரிப்பவர்களே

[45] அவர்களுக்காக அ(வர்களுடைய வேதமாகிய தவ்றாத்)தில் நாம் கட்டளையிட்டிருந்தோம்: ‘‘உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல், காயங்களுக்கும் (காயமாக) நிச்சயமாக பழி வாங்கப்படும்'' என்பதாக. எனினும், எவரேனும் பழிவாங்குவதை (மன்னித்து) நன்மைக்காக விட்டுவிட்டால் அது அவரு(டைய தீய செயலு)க்குப் பரிகாரமாகிவிடும். எவர்கள், அல்லாஹ் இறக்கி வைத்தவற்றைக்கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் நிச்சயமாக அநியாயக்காரர்கள்தான்

[46] (முன்னிருந்த நபிமார்களாகிய) அவர்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமுடைய மகன் ஈஸாவையும் நாம் அனுப்பிவைத்தோம். அவர் தன்முன்னிருந்த தவ்றாத்தை உண்மையாக்கி வைப்பவராக இருந்தார். அவருக்கு ‘இன்ஜீல்' என்னும் வேதத்தையும் நாம் அருளினோம். அதிலும் நேர்வழியும் ஒளியும் இருக்கின்றன. அது தன் முன்னுள்ள தவ்றாத்தை உண்மையாக்கி வைக்கிறது. இறையச்சமுடையவர்களுக்கு அது ஒரு நல்லுபதேசமாகவும், நேரான வழியாகவும் இருக்கிறது

[47] ஆகவே, இன்ஜீலை உடையவர்கள் அதில் அல்லாஹ் இறக்கிய (கட்டளைகளின்)படியே தீர்ப்பளிக்கவும். எவர்கள், அல்லாஹ் இறக்கிய (கட்டளைகளின்)படி தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் நிச்சயமாக பாவிகள்தான்

[48] (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தையும் நாமே உம் மீது இறக்கினோம். இது தனக்கு முன்னுள்ள (மற்ற) வேதங்களையும் உண்மையாக்கி வைக்கிறது. அவற்றைப் பாதுகாப்பதாகவும் இருக்கிறது. ஆகவே, (நபியே!) நீர் அல்லாஹ் (உமக்கு) இறக்கிய இதைக்கொண்டே அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பீராக. உமக்கு வந்த உண்மையைப் புறக்கணித்துவிட்டு அவர்களுடைய மண விருப்பங்களை நீர் பின்பற்றாதீர். உங்களில் ஒவ்வொரு வ(குப்பா)ருக்கும் ஒவ்வொரு மார்க்கத்தையும், வழியையும் நாமே ஏற்படுத்தினோம். அல்லாஹ் விரும்பினால் உங்கள் அனைவரையும் ஒரே (மார்க்கத்தைப் பின்பற்றும்) ஒரே வகுப்பாக ஆக்கியிருக்க முடியும். எனினும், உங்களுக்கு அவன் கொடுத்தவற்றில் (எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று) உங்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்திருக்கிறான்). ஆகவே, (இவற்றில் உயர்வான இஸ்லாம் கூறுகின்ற) நன்மைகளுக்கு விரைந்து செல்லுங்கள். அல்லாஹ்வின் பக்கம்தான் நீங்கள் அனைவரும் செல்ல வேண்டியதிருக்கிறது. நீங்கள் எதில் (அபிப்பிராய பேதப்பட்டுத்) தர்க்கித்துக் கொண்டிருந்தீர்களோ அதை அவன் உங்களுக்கு நன்கறிவித்து விடுவான்

[49] (நபியே!) அல்லாஹ் இறக்கிவைத்தவற்றைக் கொண்டே நீர் அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பீராக. நீர் அவர்களுடைய மன விருப்பங்களைப் பின்பற்றாதீர். உமக்கு அல்லாஹ் இறக்கிவைத்தவற்றில் எதிலிருந்தும் உம்மை அவர்கள் திருப்பிவிடாதபடியும் நீர் அவர்களைப் பற்றி எச்சரிக்கையாய் இருப்பீராக. (உமது தீர்ப்பை) அவர்கள் புறக்கணித்து விட்டால் நிச்சயமாக நீர் அறிந்துகொள்வீராக, அவர்களின் சில (கொடிய) பாவங்களின் காரணமாக அல்லாஹ் (அவர்களைத் தண்டிக்க) அவர்களுக்குக் கஷ்டத்தைத் தர விரும்புகிறான். நிச்சயமாக, மனிதர்களில் பெரும்பாலோர் பாவிகள்தான்

[50] அறியாமைக் காலத்தின் சட்ட (திட்ட)ங்களையா இவர்கள் விரும்புகின்றனர்? மெய்யாகவே, (மறுமையை) உறுதி கொண்ட மக்களுக்கு அல்லாஹ்வைவிட அழகான தீர்ப்பளிப்பவர் யார்

[51] நம்பிக்கையாளர்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் (உங்களுக்கு) நண்பர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். (உங்களை பகைப்பதில்) அவர்கள் ஒருவர் மற்றொருவருக்குத் துணையாக இருக்கின்றனர். உங்களில் எவரும் அவர்களில் எவரையும் (தனக்கு) நண்பராக்கிக் கொண்டால், நிச்சயமாக அவனும் அவர்களில் உள்ளவன்தான். நிச்சயமாக அல்லாஹ் (இந்த) அநியாயக்கார மக்களை (அவர்களின் தீய செயல்களின் காரணமாக) நேரான வழியில் செலுத்த மாட்டான்

[52] (நபியே!) உள்ளங்களில் (நயவஞ்சக) நோய் உள்ளவர்கள் அவர்களிடம் (தோழமை கொள்ளவே) விரைந்து செல்வதை நீர் காண்பீர்! மேலும், ‘‘(நாங்கள் அவர்களை பகைத்துக் கொண்டால்) எங்களுக்கு ஓர் ஆபத்து ஏற்பட்டுவிடுமென்று நாங்கள் பயப்படுகிறோம்'' என்று அவர்கள் கூறுகின்றனர். அல்லாஹ் தன்னிடமிருந்து வெற்றியையோ அல்லது ஒரு (நற்)காரியத்தையோ (அதிசீக்கிரத்தில் உங்களுக்கு) அளிக்கக் கூடும். அது சமயம் அவர்கள் தங்கள் உள்ளங்களுக்குள் மறைத்து வைத்திருந்த (மோசமான என்னத்)தைப் பற்றி கவலை அடைவார்கள்

[53] நம்பிக்கையாளர்கள் (மறுமையில்) இவர்களைச் சுட்டிக் காண்பித்து ‘‘நிச்சயமாக நாங்களும் உங்களுடன் இருக்கிறோம் என்று அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து கொண்டிருந்தவர்கள் இவர்கள்தானா?'' என்று கூறுவார்கள். இவர்களுடைய நன்மைகள் அனைத்தும் அழிந்து விட்டன. ஆகவே, (இவர்கள்) நஷ்டமடைந்தவர்களாகவே ஆகிவிட்டனர்

[54] நம்பிக்கையாளர்களே! உங்களில் எவரேனும் தங்கள் மார்க்கத்தில் இருந்து மாறிவிட்டால் (அதனால் அல்லாஹ்வுக்கு நஷ்டமொன்றுமில்லை. உங்களைப் போக்கி) வேறு மக்களை அல்லாஹ் கொண்டு வருவான். அவன் அவர்களை நேசிப்பான்; அவர்களும் அவனை நேசிப்பார்கள். அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களிடம் பணிவாக நடந்துகொள்வார்கள்; நிராகரிப்பவர்களிடம் கண்டிப்புடையவர்களாக இருப்பார்கள்; அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவார்கள். பழிப்பவனின் பழிப்பை அவர்கள் அஞ்சமாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருளாகும். அவன் விரும்பியவர்களுக்குத்தான் இதை அளிக்கிறான். அல்லாஹ் மிக விசாலமானவன், (அனைத்தையும்) நன்கறிந்தவன் ஆவான்

[55] அல்லாஹ், அவனுடைய தூதர், இன்னும் எவர்கள் உண்மையாகவே நம்பிக்கை கொண்டு, தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து, (அல்லாஹ்வின் கட்டளைக்கு எந்நேரமும்) தலை சாய்த்தும் வருகின்றனரோ இவர்கள்தான் நிச்சயமாக உங்கள் (உண்மையான) தோழர்கள் ஆவர்

[56] எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், நம்பிக்கை கொண்டவர்களையும் (தங்களுக்குத்) தோழர்களாக எடுத்துக் கொள்கிறார்களோ (அவர்கள்தான் நிச்சயமாக ‘ஹிஸ்புல்லாக்கள்' என்னும்) அல்லாஹ்வின் கூட்டத்தினர் (ஆவார்கள்). அவர்கள்தான் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள்

[57] நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டவர்களில், எவர்கள் உங்கள் மார்க்கத்தைப் பரிகாசமாகவும், (வீண்) விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டிருக்கின்றனரோ அவர்களையும், நிராகரிப்பவர்களையும் (உங்களுக்குத்) தோழர்களாக(வும், பாதுகாவலர் களாகவும்) எடுத்துக்கொள்ள வேண்டாம். நீங்கள் உண்மை நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கே பயந்து (நடந்து)கொள்ளுங்கள். (இவர்களில் எவருக்கும் அஞ்சாதீர்கள்)

[58] நீங்கள் (மக்களைத்) தொழுகைக்கு (அல்லாஹ்வை வணங்குவதற்கு)அழைத்தால் அதை அவர்கள் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கின்றனர். மெய்யாகவே அவர்கள் (முற்றிலும்) அறிவில்லாத மக்களாக இருப்பதுதான் இதற்குரிய காரணமாகும்

[59] ‘‘வேதத்தையுடையவர்களே! அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட (இவ்வேதத்)தையும், இதற்கு முன் (உங்களுக்கு) இறக்கப்பட்டவற்றையும் நாங்கள் நம்பிக்கை கொண்டதற்காகவா நீங்கள் எங்களை தண்டிக்கிறீர்கள்? (என்று நபியே! நீர் அவர்களைக் கேட்டு) நிச்சயமாக உங்களில் அதிகமானவர்கள் பாவிகள் (உங்களுக்குத் தகுதியான கூலி நரகம்தான்)'' என்று கூறுவீராக

[60] “அல்லாஹ்விடம் இதைவிடக் கெட்டதொரு தண்டனை அடைந்தவர்களை நான் உங்களுக்கு அறிவிக்கவா?'' (என்று நபியே! நீர் அவர்களிடம் கேட்டு) அல்லாஹ் எவர்களைச் சபித்து, அவர்கள் மீது கோபம்கொண்டு, அவர்களில் சிலரைக் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் ஆக்கினானோ அவர்களும்; எவர்கள் ஷைத்தானை வணங்கினார்களோ அவர்களும்தான் மிகத் தாழ்ந்த ரகத்தினர். நேரான வழியிலிருந்து முற்றிலும் வழி தவறியவர்கள்'' என்று நீர் கூறுவீராக

[61] (நம்பிக்கையாளர்களே!) இவர்கள் உங்களிடம் வந்தால் ‘‘நாங்கள் நம்பிக்கை கொண்டோம்'' என்று கூறுகின்றனர். எனினும் நிச்சயமாக அவர்கள் நிராகரிப்பை (மனதில் வைத்து)க் கொண்டே (உங்களிடம்) வந்தார்கள். நிச்சயமாக அத்துடனேயே (உங்களிடமிருந்து) அவர்கள் வெளியேறினார்கள். அவர்கள் (தங்கள் உள்ளங்களுக்குள்) மறைத்துக் கொண்டிருப்பவற்றை அல்லாஹ்தான் நன்கறிவான்

[62] (நபியே!) அவர்களில் பெரும்பான்மையினர் பாவத்திற்கும், அநியாயத்திற்கும், விலக்கப்பட்ட பொருள்களை விழுங்குவதற்கும் (மிகத் தீவிரமாக) விரைந்து செல்வதை நீர் காண்பீர்! அவர்கள் செய்பவை மிகத் தீயவையே

[63] அவர்கள் (பொய் சொல்லி) பாவமான வார்த்தைகள் கூறுவதையும், விலக்கப்பட்டவற்றை விழுங்குவதையும், அவர்களுடைய (பண்டிதர்களாகிய) ரிப்பியூன்களேனும் அவர்களுடைய (பாதிரிகளாகிய) அஹ்பார்களேனும் தடை செய்ய வேண்டாமா? இவர்களுடைய செயலும் மிகக் கெட்டதுவே

[64] ‘‘அல்லாஹ்வுடைய கை கட்டப்பட்டிருக்கிறது'' என்று இந்த யூதர்கள் கூறுகின்றனர். (அவ்வாறன்று) அவர்களுடைய கைகள்தான் கட்டப்பட்டிருக்கின்றன. மேலும், இவ்வாறு அவர்கள் கூறியதன் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டும் விட்டனர். மாறாக, அல்லாஹ்வுடைய இரு கைகளோ (எப்பொழுதும்) விரிந்தே இருக்கின்றன. அவன் விரும்பியவாறெல்லாம் (அள்ளி) அள்ளிக் கொடுக்கிறான். உமது இறைவனால் உமக்கு இறக்கப்பட்ட இவ்வேதம் அவர்களில் பெரும்பான்மையினருக்கு பொறாமையையும், நிராகரிப்பையுமே அதிகப்படுத்தி விடுகிறது. ஆகவே, நாம் அவர்களுக்கிடையில் பகைமையை, வெறுப்பை இறுதிநாள் வரை (இருக்கும்படி) விதைத்து விட்டோம். அவர்கள் (நம்பிக்கையாளர்களுக்கிடையில்) போர் நெருப்பை மூட்டும் போதெல்லாம் அல்லாஹ் அதை அணைத்து விடுகிறான். ஆனால், (இன்னும்) அவர்கள் பூமியில் விஷமம் செய்துகொண்டே அலைகிறார்கள். அல்லாஹ், விஷமம் செய்பவர்களை நேசிப்பதே இல்லை

[65] வேதத்தையுடைய இவர்கள் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு (அல்லாஹ்வுக்குப்) பயந்து (நடந்து) கொண்டால் (அதை) அவர்களுடைய பாவங்களுக்குப் பரிகாரமாக்கி, எல்லா இன்பங்களுமுள்ள சொர்க்கங்களில் நிச்சயமாக நாம் அவர்களை நுழைவிப்போம்

[66] தவ்றாத்தையும், இன்ஜீலையும், அவர்களுடைய இறைவனிடமிருந்து அவர்களுக்கு இறக்கப்பட்ட (மற்ற)வற்றையும் (உண்மையாகவே) அவர்கள் பின்பற்றி நிலைநிறுத்தி வந்தால் (எவ்விதக் கஷ்டமுமின்றி,) அவர்களுக்கு மே(ல் வானத்தி)லிருந்தும், அவர்களுடைய பாதங்களின் கீழ் (பூமியில்) இருந்தும் புசிப்பார்கள். ஆனால், அவர்களில் சிலர்தான் நேர்மையான கூட்டத்தினராக இருக்கின்றனர். அவர்களில் பெரும்பான்மையினர் செய்யும் காரியங்கள் (மிகக்) கெட்டவையாக இருக்கின்றன

[67] (நம்) தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டதை எல்லாம் (ஒரு குறைவுமின்றி அவர்களுக்கு) எடுத்துரைப்பீராக!. நீர் அவ்வாறு செய்யாவிடில் அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராக ஆக மாட்டீர். (இதில் எவருக்கும் அஞ்சாதீர்!) மனிதர்(களின் தீங்கு)களில் இருந்து, அல்லாஹ் உம்மைக் காப்பாற்றிக் கொள்வான். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் மக்களை நேரான வழியில் செலுத்த மாட்டான்

[68] (நபியே! அவர்களை நோக்கி) ‘‘வேதத்தையுடையவர்களே! நீங்கள் தவ்றாத்தையும், இன்ஜீலையும், உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்ட (மற்ற)வற்றையும் (உண்மையாகவே) நீங்கள் கடைப்பிடிக்காதவரை நீங்கள் எதிலும் சேர்ந்தவர்களல்ல'' என்று நீர் கூறுவீராக. உமது இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டவை அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு பொறாமையையும், நிராகரிப்பையுமே நிச்சயமாக அதிகப்படுத்தி வரும். ஆகவே, இந்நிராகரிப்பவர்களைப் பற்றி நீர் கவலை கொள்ளாதீர்

[69] நம்பிக்கை கொண்டவர்களிலும், யூதர்களிலும், சாபியீன்களிலும், கிறிஸ்தவர்களிலும் எவர்கள் (இந்த தூதர் கூறுகிறபடி) அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டு (அவர் கற்பித்த வழியில்) நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக ஒரு பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்

[70] நிச்சயமாக நாம் இஸ்ராயீலின் சந்ததிகளிடம் (நம் தூதர்களைப் பின்பற்றும்படி) உறுதிமொழி வாங்கி, அவர்களிடம் நம் பல தூதர்களை அனுப்பிவைத்தோம். (எனினும்) அவர்களுடைய மனம் விரும்பாத ஒன்றை (கட்டளையை நம்) தூதர் அவர்களிடம் கொண்டு வந்தபோதெல்லாம் (அத்தூதர்களில்) சிலரைப் பொய்யரெனக் கூறியும், சிலரைக் கொலை செய்து கொண்டுமே இருந்தார்கள்

[71] (இதனால் தங்களுக்கு) ஓர் ஆபத்தும் ஏற்படாது என்று அவர்கள் எண்ணிக் கொண்டனர். ஆதலால், அவர்கள் (உண்மையைக் காண முடியாத) குருடர்களாகவும், (அதைக் கேட்க முடியாத) செவிடர்களாகவும் ஆகிவிட்டனர். இதன் பின்னரும், அல்லாஹ் அவர்களை மன்னித்தான். எனினும், அவர்களில் பெரும்பான்மையினர் பிறகும் குருடர்களாகவும், செவிடர்களாகவுமே இருக்கின்றனர். ஆனால், அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன் ஆவான்

[72] ‘‘நிச்சயமாக மர்யமுடைய மகன் மஸீஹ் அல்லாஹ்தான்'' என்று கூறியவர்களும் உண்மையாகவே நிராகரிப்பாளர்களாகி விட்டார்கள். எனினும் அந்த மஸீஹோ ‘‘இஸ்ராயீலின் சந்ததிகளே! என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள்'' என்றே கூறினார். எவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறானோ அவனுக்கு நிச்சயமாக அல்லாஹ் சொர்க்கத்தைத் தடுத்து விடுகிறான். அவன் செல்லும் இடம் நரகம்தான். (இத்தகைய) அநியாயக்காரர்களுக்கு (மறுமையில்) உதவி செய்பவர்கள் ஒருவருமில்லை

[73] ‘‘நிச்சயமாக அல்லாஹ் (பிதா, சுதன், பரிசுத்த ஆவி ஆகிய இம்)மூவரில் ஒருவன்தான்'' என்று கூறியவர்களும் மெய்யாகவே நிராகரிப்பாளர்களாகி விட்டார்கள். ஏனென்றால், ஒரே ஓர் இறைவனைத் தவிர வேறு இறைவன் இல்லவே இல்லை. (ஆகவே, இவ்வாறு) அவர்கள் கூறுவதிலிருந்து விலகிக் கொள்ளாவிட்டால் அவர்களில் (அல்லாஹ்வை) நிராகரிப்பவர்களை துன்புறுத்தும் வேதனை நிச்சயமாக வந்தடையும்

[74] இவர்கள் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி, அவனிடம் தங்கள் குற்றத்தை மன்னிக்கப் பிரார்த்திக்க மாட்டார்களா? அல்லாஹ்வோ, மிக மன்னிப்பவன் மிகக் கருணையுடையவன் ஆவான்

[75] மர்யமின் மகன் மஸீஹ் ஒரு தூதரே! தவிர (இறைவனோ இறைவனுடைய மகனோ) அல்ல. இவருக்கு முன்னரும் (இவரைப் போல்) பல தூதர்கள் (வந்து) சென்றுவிட்டனர். அவருடைய தாயும் (கடவுள் அல்ல. அவர்) மிக்க உண்மையான ஒரு சத்தியவாதியாகத்தான் இருந்தார். இவ்விருவரும் (இவ்வுலகிலிருந்த காலமெல்லாம் மற்ற மனிதர்களைப்போல) உணவு உட்கொண்டு (வாழ்ந்து) வந்தனர். (ஆகவே, இவ்விருவரும் எவ்வாறு இறைவனாக ஆவார்கள்? இதை) நாம் பல அத்தாட்சிகளைக் கொண்டு அவர்களுக்கு எவ்வாறு தெளிவாக்கி வைத்திருக்கிறோம் என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக. (உண்மையில் இருந்து) அவர்கள் எவ்வளவு தூரம் விலகிச் சென்றுவிட்டனர் என்பதையும் நீர் கவனிப்பீராக

[76] (அன்றி அவர்களை நோக்கி) ‘‘உங்களுக்கு ஒரு நன்மையோ தீமையோ செய்யச் சக்தியற்ற அல்லாஹ் அல்லாதவற்றையா நீங்கள் வணங்குகிறீர்கள் ?'' என்று (நபியே!) நீர் கேட்பீராக. அல்லாஹ்தான் நன்கு செவியுறுபவன், (அனைத்தையும்) மிக அறிந்தவன் ஆவான்

[77] ‘‘வேதத்தையுடையவர்களே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் (எதையும்) மிகைபடக் கூறி வரம்பு மீறாதீர்கள். மேலும், இதற்கு முன்னர் (இவ்வாறு) வழி தவறிய மக்களின் விருப்பங்களையும் நீங்கள் பின்பற்றாதீர்கள். (ஏனென்றால்) அவர்கள் நேரான வழியில் இருந்து தவறிவிட்டதுடன் (மற்றும்) பலரை வழி கெடுத்தும் இருக்கின்றனர்'' என்றும் (நபியே!) நீர் கூறுவீராக

[78] இஸ்ராயீலின் சந்ததிகளில் எவர்கள் (இவ்வேதத்தை) நிராகரிக்கிறார்களோ அவர்கள் தாவூத் மற்றும் மர்யமின் மகன் ஈஸா ஆகிய இவர்கள் நாவாலும் சபிக்கப்பட்டே இருக்கின்றனர். ஏனென்றால், அவர்கள் (அக்காலத்திலும்) வரம்பு கடந்தே பாவம் செய்து வந்தனர்

[79] அவர்கள் செய்து வந்த பாவத்தை விட்டும் விலகிக் கொள்ளாதவர்களாக(வும், ஒருவர் மற்றவரை அதிலிருந்து தடுக்காதவர்களாகவும்) இருந்து வந்தனர். அவர்கள் செய்து கொண்டிருந்தவையும் மிகத் தீயவையே

[80] அவர்களில் பெரும்பான்மையினர் நிராகரிப்பவர்களை தோழமை கொள்வதை (நபியே!) நீர் காண்பீர்! அல்லாஹ் அவர்கள் மீது கோபிக்கும்படி அவர்கள் தாமாகவே தேடிக் கொண்டது மிகக் கெட்டது. அவர்கள் (நரக) வேதனையில் என்றென்றுமே தங்கிவிடுவார்கள்

[81] அவர்கள் அல்லாஹ்வையும், இந்த நபியையும் அவருக்கு இறக்கப்பட்ட (வேதத்)தையும் உண்மையாகவே நம்பிக்கை கொண்டிருந்தால் (நிராகரித்த) அவர்களைத் (தங்களுக்குத்) தோழர்களாக எடுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால், அவர்களில் பெரும்பான்மையினர் பாவிகள் ஆவர்

[82] (நபியே!) யூதர்களும், இணைவைத்து வணங்குபவர்களும் நம்பிக்கையாளர்களுக்கு மனிதர்கள் அனைவரிலும் கொடிய எதிரிகளாக இருப்பதை நிச்சயமாக நீர் காண்பீர்! எவர்கள் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று கூறுகின்றனரோ அவர்களை நம்பிக்கையாளர்களுக்கு (மற்றவர்களை விட) நட்பில் மிக நெருங்கியவர்களாக நீர் காண்பீர்! ஏனென்றால், அவர்களில் (கற்றறிந்த) குருக்களும், துறவிகளும் இருக்கின்றனர். மேலும், நிச்சயமாக அவர்கள் இறுமாப்பு கொள்வதுமில்லை

[83] தவிர, (இவர்களில் பலர் நம்) தூதர் மீது அருளப்பட்டவற்றை செவியுற்றால், உண்மையை அவர்கள் உணர்வதன் காரணமாக அவர்களின் கண்கள் (தாரை தாரையாக) கண்ணீர் வடிப்பதைக் காண்பீர் “எங்கள் இறைவனே! (இவ்வேதத்தை) நாங்கள் நம்பிக்கை கொண்டோம். ஆகவே, (இவ்வேதம் உண்மையானதென) சாட்சி கூறுபவர்களுடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக!'' என்றும் (பிரார்த்தித்துக்) கூறுகின்றனர்

[84] அல்லாஹ்வையும் (அவனிடமிருந்து) நமக்கு வந்த சத்திய (வேத)த்தையும் நாங்கள் நம்பிக்கை கொள்ளாமலிருக்க எங்களுக்கென்ன நேர்ந்தது? (நற்செயல்கள் செய்த) நல்லவர்களுடன் எங்களையும் எங்கள் இறைவன் சேர்த்து வைக்கவே நாங்கள் ஆசைப்படுகிறோம்'' என்றும் (கூறுகின்றனர்)

[85] அவர்கள் இவ்வாறு கூறுவதன் காரணமாக, தொடர்ந்து நீரருவிகள் ஓடிக் கொண்டிருக்கும் சொர்க்கங்களை அல்லாஹ் அவர்களுக்குப் பிரதிபலனாக அளிப்பான். அவற்றில் அவர்கள் (என்றென்றும்) தங்கிவிடுவார்கள். இதுவே நன்மை செய்பவர்களுக்குரிய கூலியாகும்

[86] எவர்கள் (நம் தூதரை) நிராகரித்து, நம் வசனங்களையும் பொய்யாக்குகின்றனரோ அவர்கள் நரகவாசிகளே

[87] நம்பிக்கையாளர்களே! அல்லாஹ் உங்களுக்கு ஆகுமாக்கி வைத்திருக்கும் நல்லவற்றை நீங்கள் ஆகாதவையாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். நீங்கள் வரம்பு மீறியும் செல்லாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ், வரம்பு மீறுபவர்களை நேசிப்பதேயில்லை

[88] அல்லாஹ் உங்களுக்கு அளித்தவற்றில் (நீங்கள் புசிக்க) அனுமதிக்கப்பட்ட நல்லவற்றையே புசியுங்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கும் அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள்

[89] உங்கள் வீணான சத்தியங்களைக் கொண்டு அல்லாஹ் உங்களை(க் குற்றம்) பிடிப்பதில்லை. எனினும், (எதையும்) உறுதிப்படுத்த நீங்கள் செய்கின்ற சத்தியத்தைப் பற்றி (அதில் தவறு செய்தால்) உங்களைப் பிடிப்பான். (அதில் தவறு ஏற்பட்டுவிட்டால்) அதற்குப் பரிகாரமாவது: நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்குக் கொடுத்து வரும் உணவில் மத்திய தரமான உணவை பத்து ஏழைகளுக்கு அளிக்க வேண்டும்; அல்லது (அவ்வாறே) அவர்களுக்கு ஆடையளிக்க வேண்டும். அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். (பரிகாரமாகக் கொடுக்கக்கூடிய இவற்றில் எதையும்) எவர் பெறவில்லையோ அவர் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். (உங்கள் சத்தியத்தை நிறைவேற்ற முடியாவிட்டால்) நீங்கள் செய்த சத்தியத்திற்குரிய பரிகாரம் இதுதான். எனினும், நீங்கள் உங்கள் சத்தியங்களை (மிக எச்சரிக்கையுடன் பேணி)க் காப்பாற்றிக் கொள்ளுங்கள். நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதற்காக அவன் தன் வசனங்களை இவ்வாறு உங்களுக்கு விவரித்துக் கூறுகிறான்

[90] நம்பிக்கையாளர்களே! நிச்சயமாக மது, சூதாட்டம், சிலை வணக்கம், அம்பெறிந்து குறி கேட்பது ஆகிய இவை ஷைத்தானுடைய அருவருக்கத்தக்க வேலைகளில் உள்ளவையாகும். ஆகவே, இவற்றில் இருந்து நீங்கள் விலகிக்கொள்ளுங்கள். (அதனால்) நீங்கள் வெற்றியடைவீர்கள்

[91] மதுவாலும் சூதாட்டத்தாலும் உங்களுக்கிடையில் பகைமையையும் பொறாமையையும் உண்டுபண்ணி அல்லாஹ்வின் ஞாபகத்திலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடவுமே நிச்சயமாக ஷைத்தான் விரும்புகிறான். (ஆகவே, அவற்றிலிருந்து) நீங்கள் விலகிக் கொள்வீர்களா? (மாட்டீர்களா)

[92] அல்லாஹ்வுக்கு கட்டுப்படுங்கள்; (அல்லாஹ்வுடைய) தூதருக்கும் கட்டுப்படுங்கள். (அவர்களுக்கு மாறு செய்யாது) எச்சரிக்கையாக இருங்கள். (இதை) நீங்கள் புறக்கணித்து விட்டால் (நம் கட்டளைகளை, உங்களுக்குத்) தெளிவாக எடுத்துரைப்பது மட்டுமே நம் தூதர்மீது கடமையாகும் என்பதை நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்

[93] நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறவர்கள் (தடுக்கப்பட்ட உணவில்) எதையும் (அது தடை செய்யப்படுவதற்கு முன்னர்) புசித்திருந்தால் (அது) அவர்களின் மீது குற்றமாகாது, (தடுக்கப்பட்டபின் அவற்றிலிருந்து) அவர்கள் விலகி, நம்பிக்கையின் மீதே உறுதியாக இருந்து, நற்செயல்களையும் செய்து, (மற்ற பாவங்களிலிருந்தும்) விலகி, நம்பிக்கையை உறுதிப்படுத்தி, (அல்லாஹ்வுக்குப்) பயந்து, (பிறருக்கு) நன்மையும் செய்து கொண்டிருந்தால் (போதுமானது. ஆகவே, தடுக்கப்பட்டவற்றை முன்னர் புசித்துவிட்டது பற்றிக் குற்றம் பிடிக்கப்பட மாட்டாது.) அல்லாஹ் (இத்தகைய) நல்லவர்களையே நேசிக்கிறான்

[94] நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வைப் பார்க்காமலே அவனை அஞ்சுபவர் யார் என்பதை அவன் அறி(வித்து விடு)வதற்காக (நீங்கள் இஹ்ராம் அணிந்திருக்கும் சமயத்தில்) உங்கள் கைகளும், அம்புகளும் (எளிதில்) அடையக்கூடிய ஒரு வேட்டைப் பொருளைக் கொண்டு நிச்சயமாக அல்லாஹ் உங்களைச் சோதிப்பான். இதற்குப் பின்னர் எவரேனும் (அல்லாஹ்வின் கட்டளையை) மீறினால் அவருக்கு துன்புறுத்தும் வேதனையுண்டு

[95] நம்பிக்கையாளர்களே! நீங்கள் இஹ்ராம் அணிந்திருக்கும் சமயத்தில் வேட்டையாடி மிருகங்களைக் கொல்லாதீர்கள். உங்களில் எவரேனும், அதை வேண்டுமென்ன்ற கொன்றுவிட்டால் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றில் அதற்குச் சமமானதை (பரிகாரமாக) ஈடு கொடுக்க வேண்டும். உங்களில் நேர்மையான இருவர் நீங்கள் (ஈடாகக்) கொடுக்கும் பொருள் அதற்குச் சமமெனத் தீர்ப்பளிக்க வேண்டும். இதைக் காணிக்கையாக கஅபாவுக்கு அனுப்பிவிட வேண்டும். அல்லது (அதன் மதிப்புக்கு) ஏழைகளுக்கு உணவு அளிப்பது கொண்டு பரிகாரம் செய்ய வேண்டும். (பரிகாரமளிக்கப் பொருள் இல்லாதவன்) தான் செய்த குற்றத்தின் பலனை அனுபவிப்பதற்காக (எண்ணிக்கையில்) அதற்குச் சமமான நோன்புகள் நோற்க வேண்டும். (இதற்கு) முன் நடந்தவற்றை அல்லாஹ் மன்னித்து விட்டான். எவரேனும் (இத்தகைய குற்றம் செய்ய) மீண்டும் திரும்பி விட்டால் அல்லாஹ் அவனை தண்டிப்பான். அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவன், (குற்றவாளிகளை) தண்டிப்பவன் ஆவான்

[96] (நம்பிக்கையாளர்களே!) நீரில் வேட்டையாடுவதும், அதை இன்பமாக புசிப்பதும் (இஹ்ராம் அணிந்துள்ள) உங்களுக்கும் (மற்ற) பிரயாணிகளுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளன. எனினும், நீங்கள் இஹ்ராம் அணிந்திருக்கும் வரை (நீர் நிலையில்லாமல்) தரையில் வேட்டையாடுவது உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளது. ஆகவே, அல்லாஹ்வுக்குப் பயந்து நட(ந்து கொள்ளு)ங்கள். அவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள்

[97] சிறப்புற்ற வீடாகிய கஅபாவை மனிதர்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடிய இடமாக அல்லாஹ் ஆக்கியிருக்கிறான். (அவ்வாறே துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய இந்நான்கு) சிறப்புற்ற மாதங்களையும், (ஹஜ்ஜின்) குர்பானிகளையும், (அல்லாஹ்வுடைய காணிக்கை என்பதற்காக) அடையாளம் இடப்பட்ட கால்நடைகளையும் (பாதுகாப்பு பெற்றவையாக ஆக்கியிருக்கிறான்). வானங்களிலும், பூமியிலுமுள்ள அனைத்தையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிகிறான்; மேலும், நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிபவன் என்பதை நீங்கள் அறிவதற்காகவே (இவ்வாறு செய்தான்)

[98] நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன்; (அத்துடன்) நிச்சயமாக அல்லாஹ் மிக்க பிழை பொறுத்து பெரும் கருணை காட்டுபவன் என்பதை நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்

[99] நம் தூதருடைய கடமை (நம்) தூதை எடுத்துரைப்பதே தவிர (அவ்வாறே நடக்கும்படி உங்களை நிர்ப்பந்திப்பது) அல்ல. நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைப்பதையும் அல்லாஹ் நன்கறிவான்

[100] (நபியே! நீர் அவர்களை நோக்கி ‘‘எங்கும்) தீயவை அதிகரித்திருப்பது உங்களை ஆச்சரியப்படுத்திய போதிலும், நல்லதும் தீயதும் சமமாகாது. ஆகவே, அறிவாளிகளே! அல்லாஹ்வுக்குப் பயந்து (தீயவற்றிலிருந்து விலகிக்) கொள்ளுங்கள். (அதனால்) நீங்கள் வெற்றி அடைவீர்கள்'' என்று கூறுவீராக

[101] நம்பிக்கையாளர்களே! (நபியிடம் அவசியமின்றி) ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் (துருவித் துருவிக்) கேட்டுக் கொண்டிருக்காதீர்கள். (பல விஷயங்கள்) உங்களுக்கு அறிவிக்கப்பட்டால் (அவை) உங்களுக்கு வருத்தம் தரக்கூடும். அதிலும் இந்தக் குர்ஆன் இறக்கப்படும் சமயத்தில், அத்தகைய விஷயங்களைப் பற்றி நீங்கள் கேட்டுக்கொண்டிருந்தால் அவை உங்களுக்கு தெளிவாக்கப்பட்டு (கடமையாகி)விடும். (அதனால் நீங்கள் சிரமத்திற்குள்ளாகி விடலாம். எனினும், இதுசமயம்) அதைப் பற்றி அல்லாஹ் உங்களை மன்னித்து விட்டான். ஏனென்றால், அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், அதிகம் சகித்துக்கொள்பவன் ஆவான்

[102] உங்களுக்கு முன்னிருந்த மக்களும் (அவர்களுடைய நபியிடம் இத்தகைய) கேள்விகளையே கேட்டுக் கொண்டிருந்தனர். (அவை அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட) பின்னர் அவர்கள் அவற்றை நிராகரிப்பவர்களாக(த்தான்) மாறிவிட்டார்கள்

[103] பஹீரா, ஸாயிபா, வஸீலா, ஹாம் (போன்ற) இவையெல்லாம் அல்லாஹ் ஏற்படுத் தியவையல்ல. எனினும், நிராகரிப்பவர்கள்தான் (இவை அல்லாஹ் ஏற்படுத்தியவை என) அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனை செய்(து கூறு)கின்றனர். அவர்களில் பலர் (உண்மையை) விளங்காதவர்களாகவே இருக்கின்றனர்

[104] “அல்லாஹ் இறக்கிவைத்த (வேதத்)தின் பக்கமும், (அவனுடைய) தூதரின் பக்கமும் வாருங்கள்'' என அவர்களுக்குக் கூறப்பட்டால், “எங்கள் மூதாதைகள் எதன் மீதிருக்க நாங்கள் கண்டோமோ அதுவே (நாங்கள் பின்பற்ற) எங்களுக்கு போதும்'' எனக் கூறுகின்றனர். அவர்களுடைய மூதாதைகள் எதையும் அறிந்து கொள்ளாமலும், நேரான வழியில் இல்லாமலும் இருந்தாலுமா (அவர்கள் தங்கள் மூதாதைகளைப் பின்பற்றுவார்கள்)

[105] நம்பிக்கையாளர்களே! நீங்கள் (தவறான வழியில் செல்லாது) உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நேரான வழியில் சென்றால் வழி தவறிய எவனுடைய தீங்கும் உங்களை பாதிக்காது. நீங்கள் அனைவரும் அல்லாஹ்விடமே செல்ல வேண்டியிருக்கிறது. நீங்கள் (இங்கு) செய்து கொண்டிருப்பவற்றைப் பற்றி (அது சமயம்) அவன் உங்களுக்கு அறிவித்துவிடுவான்

[106] நம்பிக்கையாளர்களே! உங்களில் எவருக்கும் மரணம் சமீபித்து (அவர் மரண சாசனம் கூற விரும்பினால்) அவர் மரண சாசனம் (வஸீயத்) கூறும் சமயத்தில் உங்களில் நம்பிக்கைக்குரிய (நேர்மையான) இருவர் சாட்சியாக இருக்கவேண்டும். அல்லது உங்களில் எவரும் பூமியில் பயணம் செய்துகொண்டு இருக்கும்பொழுது மரணம் சமீபித்தால் (அது சமயம் சாசனத்தின் சாட்சிக்காக முஸ்லிம்களாகிய இருவர் கிடைக்காவிடில்) நீங்கள் அல்லாத வேறிருவர் (சாட்சியாக) இருக்கவும். (இந்தச் சாட்சிகள் கூறும் விஷயத்தில்) உங்களுக்குச் சந்தேகமேற்பட்டால் அவ்விருவரையும் (அஸர்) தொழுகைக்குப்பின் தடுத்து வைத்துக்கொள்ளவும். அவ்விருவரும் ‘‘நாங்கள் கூறிய (சாட்சியத்)தைக் கொண்டு ஒரு பொருளையும் அதற்காக நாங்கள் அடையவிரும்பவில்லை. அவர்கள் எங்கள் உறவினர்களாக இருந்தபோதிலும் நாங்கள் அல்லாஹ்வுக்காக சாட்சி கூறியதில் எதையும் மறைக்கவே இல்லை. அவ்வாறு செய்திருந்தால் நிச்சயமாக நாங்கள் பாவிகளாகி விடுவோம்'' என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறவேண்டும்

[107] (இவ்வாறு அவர்கள் சத்தியம் செய்து கூறியதிலும்) அவர்கள் பொய்யே கூறினார்கள் என்று நிச்சயமாக தெரியவந்தால் (இந்தப் பொய் சாட்சியத்தினால்) எவருக்கு நஷ்டமேற்பட்டதோ அவர் சார்பில் வேறு இருவர், (முன்பு சத்தியம் செய்த) அவர்களுடைய இடத்தில் நின்று, ‘‘அவர்களுடைய சாட்சியத்தை விட எங்கள் சாட்சியம்தான் உண்மையானது (என உறுதி கூறுகிறோம்), நாங்கள் தவறாக ஏதும் கூறவில்லை. அவ்வாறு கூறினால் நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்களாகி விடுவோம்'' என்று அவ்விருவரும் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறவேண்டும்

[108] உள்ளதை உள்ளவாறு அவர்கள் சாட்சியம் கூறும்படி செய்வதற்கு இது மிக்க சுலபமான வழியாகும், அவர்கள் (பொய்) சத்தியம் செய்தாலும், மற்றவரின் சத்தியம் அதைத் தடுத்துவிடும் என்று அவர்கள் பயப்படுவதற்கும் இது மிக்க சுலபமான வழி. ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து (அவன் கட்டளைக்கே) நீங்கள் செவிசாயுங்கள். (இதற்கு மாறு செய்யும்) பாவிகளை அல்லாஹ் நேரான வழியில் செலுத்த மாட்டான்

[109] (நபியே!) ஒரு நாளில் அல்லாஹ், (தன்) தூதர்களை ஒன்று சேர்த்து ‘‘நீங்கள் எனது தூதை மக்களிடம் எடுத்துரைத்த சமயத்தில்) அவர்கள் உங்களுக்கு என்ன பதில் கூறினார்கள்?'' என்று கேட்பான். அதற்கவர்கள், (‘‘நாங்கள் உயிருடன் இருந்த வரை அவர்களுடைய வெளிக்கோலத்தையே நாங்கள் அறிவோம். அதற்கு மாறாக உள்ளத்தில் உள்ளதையோ, நாங்கள் இறந்தபின் அவர்கள் செய்ததையோ) நாங்கள் அறியமாட்டோம். நிச்சயமாக நீதான் மறைவான அனைத்தையும் நன்கறிந்தவன்'' என்று கூறுவார்கள்

[110] பிறகு அல்லாஹ் (ஈஸாவை நோக்கிக்) கூறுவான்: ‘‘மர்யமுடைய மகன் ஈஸாவே! உம் மீதும், உமது தாய் மீது(ம் நான் புரிந்து)ள்ள என் அருளை நினைத்துப் பார்ப்பீராக. பரிசுத்த ஆத்மாவைக் கொண்டு உமக்கு உதவி புரிந்து (உமது தாயின் பரிசுத்தத் தன்மையைப் பற்றி) நீர் தொட்டில் குழந்தையாக இருந்த சமயத்திலும் (உமது தீர்க்க தரிசனத்தைப் பற்றி) வாலிபத்திலும் உம்மைப் பேசச் செய்ததையும், (நினைத்துப் பார்ப்பீராக.) வேதத்தையும், ஞானத்தையும், தவ்றாத்தையும், இன்ஜீலையும் நான் உமக்குக் கற்பித்ததையும் (நினைத்துப் பார்ப்பீராக). மேலும், நீர் என் கட்டளைப்படி களிமண்ணால் பறவையின் உருவத்தைப் போல் செய்து அதில் நீர் ஊதிய சமயத்தில், அது என் கட்டளையைக் கொண்டு பறவையாக மாறியதையும், பிறவிக் குருடனையும், வெண் குஷ்டரோகியையும் என் உதவியினால் நீர் சுகமாக்கியதையும் (நினைத்துப் பார்ப்பீராக). நீர் என் அருளைக்கொண்டு மரணித்தவர்களை (கல்லறையிலிருந்து உயிர்கொடுத்து) புறப்படச் செய்ததையும் (நினைத்துப் பார்ப்பீராக). இஸ்ராயீலின் சந்ததிகளிடம் நீர் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது அவர்களில் நிராகரித்தவர்கள் நிச்சயமாக இது சந்தேகமற்ற சூனியத்தைத் தவிர வேறல்ல என்று கூறிய(துடன் உமக்குத் தீங்கிழைக்க முயற்சித்த) சமயத்தில் அவர்(களுடைய தீங்கு)களிலிருந்து நான் உம்மை தடுத்துக் கொண்டதையும் நினைத்துப் பார்ப்பீராக

[111] என்னையும், என் தூதரையும் (அதாவது உம்மையும்) நம்பிக்கை கொள்ளும்படி (அப்போஸ்தலர்கள் என்னும் உமது) சிஷ்யர்களுக்கு நான் வஹ்யின் மூலம் தெரிவித்த சமயத்தில், அவர்கள் (அவ்வாறே) நாங்கள் நம்பினோம்; நிச்சயமாக நாங்கள் (இறைவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்த) முஸ்லிம்கள் என்பதற்கு நீர் சாட்சியாக இருக்கவும்! என்று கூறியதையும் நினைத்துப் பார்ப்பீராக (என்றும் அந்நாளில் கூறுவான்)

[112] தவிர, (நபியே! நீர் அவர்களுக்கு ஞாபகமூட்டுவீராக:) அந்த சிஷ்யர்கள் (ஈஸாவை நோக்கி) ‘‘மர்யமுடைய மகன் ஈஸாவே! உமது இறைவன், வானத்திலிருந்து எங்களுக்காக ஓர் உணவு(ப் பொருள்கள் நிரம்பிய) தட்டை இறக்கி வைக்க முடியுமா?'' என்று கேட்டதற்கு (ஈஸா, அவர்களை நோக்கி) ‘‘மெய்யாகவே நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் (இத்தகைய கேள்வி கேட்பதைப் பற்றி) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள்'' என்று கூறினார்

[113] அதற்கவர்கள், ‘‘அதிலிருந்து நாங்கள் புசித்து, எங்கள் உள்ளங்கள் திருப்தியடையவும், நீர் (உமது தூதைப் பற்றி) மெய்யாகவே உண்மை கூறினீர் என்று நாங்கள் அறிந்து கொண்டு அதற்கு நாங்களும் சாட்சியாக இருக்கவுமே விரும்புகிறோம்'' என்று கூறினார்கள்

[114] அதற்கு மர்யமுடைய மகன் ஈஸா ‘‘எங்கள் இறைவனே! வானத்தில் இருந்து ஓர் உணவுத் தட்டை எங்களுக்கு நீ இறக்கிவைப்பாயாக! எங்களுக்கும், எங்கள் முன் இருப்பவர்களுக்கும், எங்களுக்குப் பின் வருபவர்களுக்கும் அது ஒரு பெருநாளாகவும், உன் (வல்லமைக்கு) ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும். ஆகவே, (அவ்வாறே) எங்களுக்கும் உணவை அளிப்பாயாக! நீயோ உணவளிப்பதில் மிகச் சிறந்தவன்'' என்று (பிரார்த்தித்துக்) கூறினார்

[115] அதற்கு அல்லாஹ் ‘‘நிச்சயமாக நான் (நீங்கள் கேட்டவாறு) அதை உங்களுக்கு இறக்கிவைப்பேன். (எனினும்) இதற்குப் பின்னர் உங்களில் எவரேனும் (என் கட்டளைக்கு) மாறு செய்தால், அவரை உலகத்தில் எவருக்கும் செய்திராத அவ்வளவு கொடியதொரு வேதனையைக் கொண்டு நிச்சயமாக நான் தண்டிப்பேன்'' என்று கூறினான்

[116] அல்லாஹ் (மறுமை நாளில் ஈஸாவை நோக்கி), ‘‘மர்யமுடைய மகன் ஈஸாவே! அல்லாஹ்வுடன் என்னையும், என் தாயையும் இரு கடவுள்களாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று மனிதர்களை நோக்கி நீர் கூறினீரா?'' என்று கேட்பான் என்பதையும் ஞாபகமூட்டுவீராக. அதற்கு அவர் கூறுவார்: ‘‘நீ மிகப் பரிசுத்தமானவன். எனக்கு ஒரு சிறிதும் தகாததை நான் ஒருபோதும் கூறமாட்டேன். அவ்வாறு நான் கூறியிருந்தால் நிச்சயமாக நீ அதை அறிந்திருப்பாயே! என் உள்ளத்திலுள்ளதை நீ நன்கறிவாய். உன் உள்ளத்திலுள்ளதை நான் அறியமாட்டேன். நிச்சயமாக நீதான் மறைவானவை அனைத்தையும் நன்கறிபவன்

[117] நீ எனக்கு ஏவியபடியே நான் (அவர்களை நோக்கி), ‘‘நீங்கள் எனக்கும் உங்களுக்கும் இறைவனாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்'' என்றுதான் கூறினேன். தவிர, வேறொன்றையும் (ஒருபோதும்) நான் கூறவில்லை. நான் அவர்களுடன் இருந்த வரை அவர்களின் செயலை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீதான் அவர்களைக் கவனித்தவனாக இருந்தாய். அனைத்திற்கும் நீயே சாட்சி

[118] அவர்களை நீ வேதனை செய்தால் நிச்சயமாக அவர்கள் உன் அடியார்களே! (உன் அடியார்களை உன் இஷ்டப்படிச் செய்ய உனக்கு உரிமையுண்டு.) அவர்களை நீ மன்னித்துவிட்டாலோ (அதைத் தடை செய்ய எவராலும் முடியாது. ஏனென்றால்,) நிச்சயமாக நீதான் (அனைவரையும்) மிகைத்தவன், மிக்க ஞானமுடையவன்'' (என்று கூறுவார்)

[119] அதற்கு அல்லாஹ் “உண்மை சொல்லும் சத்தியவான்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கக்கூடிய நாள் இதுதான். தொடர்ந்து நீரருவிகள் ஓடிக் கொண்டிருக்கும் சொர்க்கங்களும் அவர்களுக்கு உண்டு. அதில் அவர்கள் என்றென்றுமே தங்கிவிடுவார்கள்'' என்று கூறுவான். (அந்நாளில்) அவர்களைப் பற்றி அல்லாஹ்வும் மகிழ்ச்சியடைவான். அவர்களும் அவனைப் பற்றி மகிழ்ச்சியடைவார்கள். இது மிக்க மகத்தான பெரும் பாக்கியம் ஆகும்

[120] வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும், இவற்றில் உள்ள அனைத்தின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே! அவன் (இவை) அனைத்தின் மீதும் மிக்க பேராற்றலுடையவன்

அல்அன்ஆம்

Surah 6

[1] எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்குரியதே! அவனே வானங்களையும், பூமியையும் படைத்தான். மேலும், இருள்களையும், ஒளியையும் உண்டாக்கினான். இவ்வாறிருந்தும் நிராகரிப்பவர்கள் (அல்லாஹ்வாகிய) தங்கள் இறைவனுக்கு (பொய்யான தெய்வங்களை) சமமாக்குகின்றனர்

[2] அவன்தான் உங்களைக் களிமண்ணால் படைத்து (உங்களுக்குரிய) வாழ்நாளைக் (குறிப்பிட்டு) நிர்ணயம் செய்தவன். அவனிடத்தில் (உங்கள் விசாரணைக்காகவும்) ஒரு குறிப்பிட்ட காலமுண்டு. இவ்வாறிருந்தும் நீங்கள் (அவனுடைய இறைத்தன்மையை) சந்தேகிக்கிறீர்கள்

[3] வானங்களிலும், பூமியிலும் (வணக்கத்திற்குரிய) அல்லாஹ், அவன்தான். அவன் உங்கள் இரகசியத்தையும் வெளிப்படையானதையும் நன்கறிவான். (நன்மையோ, தீமையோ) நீங்கள் செய்யும் அனைத்தையும் நன்கறிவான்

[4] (இவ்வாறிருந்தும், நிராகரிப்பவர்களோ) தங்கள் இறைவனின் வசனங்களில் எது வந்தபோதிலும் அதை அவர்கள் புறக்கணிக்காமல் இருப்பதில்லை

[5] ஆகவே, அவர்களிடம் வந்திருக்கும் இந்த சத்திய (வேத)த்தையும் அவர்கள் பொய்யாக்குகின்றனர். ஆனால், எவ்விஷயங்கள் பற்றி (அவை பொய்யானவை என) அவர்கள் பரிகசித்து கொண்டிருக்கின்றனரோ அவை (உண்மையாகவே) அவர்களிடம் வந்தே தீரும்

[6] அவர்களுக்கு முன்னர் எத்தனையோ கூட்டத்தினரை நாம் அழித்திருக்கிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? பூமியில் உங்களுக்கு நாம் செய்து தராத வசதிகளையெல்லாம் அவர்களுக்கு நாம் செய்து தந்திருந்தோம். வானத்திலிருந்து தாரை தாரையாக மழை பெய்யும்படிச் செய்து, அவர்களின் (ஆதிக்கத்தின்) கீழ் நீரருவிகளும் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும்படி செய்தோம். (எனினும் அவர்கள் பாவத்திலேயே ஆழ்ந்து விட்டனர்.) ஆகவே, அவர்களுடைய பாவங்களின் காரணமாக அவர்களை அழித்துவிட்டோம். அவர்களுக்குப் பின்னர் மற்றொரு கூட்டத்தாரை நாம் உற்பத்தி செய்தோம்

[7] கடிதத்தில் எழுதப்பட்ட ஒரு வேதத்தையே நாம் உம்மீது இறக்கிவைத்து அதை அவர்கள் தங்கள் கைகளால் தொட்டுப் பார்த்தபோதிலும் ‘‘இது பகிரங்கமான சூனியத்தைத் தவிர வேறில்லை'' என்றே இந்நிராகரிப்பவர்கள் நிச்சயம் கூறுவார்கள்

[8] (‘‘இவர் உண்மையான தூதர்தான் என்று சாட்சி சொல்வதற்கு) அவருக்காக ஒரு வானவர் அனுப்பப்பட வேண்டாமா?'' என்று அவர்கள் கூறுகின்றனர். (அவர்கள் விரும்புகிறபடி) நாம் ஒரு வானவரை அனுப்பி வைத்திருந்தால், (அவர்களின்) காரியம் முடிவு பெற்றிருக்கும். பிறகு, (அதில்) அவர்களுக்கு அவகாசம் கிடைத்திருக்காது. (உடனே அவர்கள் அழிந்திருப்பார்கள்)

[9] (அல்லது நம்) தூதரை ஒரு மலக்காகவே அனுப்புவதாயினும் (அவர்களுக்கு வானவர்களைக் காணும் சக்தி இல்லாததனால்) அவரையும் ஒரு மனிதனுடைய ரூபத்தில்தான் நாம் அனுப்புவோம். (அது சமயத்தில்) இப்போது இருக்கும் (அதே) சந்தேகத்தையே அவர்களுக்கு நாம் ஏற்படுத்தி விடுவோம்

[10] (நபியே!) உமக்கு முன்னர் வந்த (நம் மற்ற) தூதர்களும் நிச்சயமாக (இவ்வாறே) பரிகசிக்கப்பட்டனர். முடிவில், அவர்களில் பரிகசித்தவர்களை அவர்கள் பரிகசித்துக் கொண்டிருந்தது (வேதனை) சூழ்ந்து கொண்டது

[11] (நபியே! நீர் அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் பூமியில் சுற்றித்திரிந்து (உங்களைப் போல்) பொய்யாக்கிக் கொண்டிருந்தவர்களின் முடிவு எவ்வாறு ஆயிற்று? என்று நீங்கள் கவனித்துப் பாருங்கள்'' என்று கூறுவீராக

[12] ‘‘வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் யாருக்குரியன?'' என நீர் (அவர்களைக்) கேட்பீராக. (இதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன? நீரே அவர்களை நோக்கி இவை அனைத்தும்) ‘‘அல்லாஹ்வுக்குரியனவே!'' என்று கூறுவீராக. அவன் கருணையைத் தன்மீது கடமையாக்கிக் கொண்டிருக்கிறான். (ஆகவேதான், உங்கள் குற்றத்திற்காக இதுவரை உங்களைத் தண்டிக்காதிருக்கிறான். எனினும்,) நிச்சயமாக உங்கள் அனைவரையும் மறுமை நாளில் ஒன்று சேர்ப்பான். அதில் சந்தேகமேயில்லை. எவர்கள் (உண்மையை நிராகரித்து) தங்களுக்குத் தாமே நஷ்டத்தை உண்டு பண்ணிக் கொண்டார்களோ அவர்கள் (இதை) நம்பவே மாட்டார்கள்

[13] (வானங்களிலோ, பூமியிலோ) இரவிலும், பகலிலும் வசித்திருப்பவை அனைத்தும் அவனுக்குரியனவே! அவன்தான் நன்கு செவியுறுபவனும், (அனைத்தையும்) நன்கறிந்தவனும் ஆவான்

[14] (நபியே!) கூறுவீராக: ‘‘வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ்வைத் தவிர்த்து (மற்றெவரையும் என்) பாதுகாவலனாக நான் எடுத்துக் கொள்வேனா? அவன்தான் (நமக்கு) உணவளிக்கிறான்; அவனுக்கு யாரும் உணவளிப்பதில்லை. (நபியே! மேலும்,) கூறுவீராக: ‘‘(இறைவனுக்கு) இணைவைத்து வணங்குபவர்களுடன் சேராது முற்றிலும் அவனுக்கு பணிந்து வழிப்பட்டவர்களில் முதன்மையானவனாக நான் இருக்கும்படியே எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது

[15] (நபியே! மேலும்,) கூறுவீராக: ‘‘என் இறைவனுக்கு நான் மாறுசெய்தால், மகத்தான நாளின் வேதனையை(யும் தண்டனையையும்) நிச்சயமாக நான் பயப்படுகிறேன்

[16] அந்நாளில் எவரை விட்டும் வேதனை தடுக்கப்படுகிறதோ அவருக்கு நிச்சயமாக அல்லாஹ் அருள் புரிந்தே விட்டான். இதுதான் தெளிவான வெற்றியாகும்

[17] (நபியே!) அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கிழைத்தால், அதை நீக்குபவர் அவனைத் தவிர வேறெவருமில்லை. உமக்கு ஒரு நன்மையை அவன் கொடுத்தாலும் (அதைத் தடுத்துவிடக் கூடியவன் எவனும் இல்லை.) அவன் அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன்

[18] அவனே தன் அடியார்களை அடக்கி ஆள்கிறான். அவன்தான் மிக்க ஞானமுடையவன், (அனைத்தையும்) நன்கறிந்தவன் ஆவான்

[19] (நபியே!) ‘‘சாட்சிகளில் மிகப் பெரியது எது?'' என நீர் (அவர்களைக்) கேட்பீராக. (அவர் களால் என்ன கூறமுடியும்? நீரே அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ்வே! (பெரியவன். அவனே) எனக்கும் உங்களுக்கும் இடையில் சாட்சியாக(வும்) இருக்கிறான். இந்தக் குர்ஆனைக் கொண்டு உங்களுக்கும், (அது) எட்டியவர்களுக்கும் நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவே இது எனக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறி, நிச்சயமாக வணக்கத்திற்குரிய மற்றெவரும் அல்லாஹ்வுடன் இருப்பதாக, (உண்மையாகவே) நீங்கள் சாட்சி கூறுவீர்களா?'' (என்றும் அவர்களை) நீர் கேட்பீராக. (இதற்கவர்கள் பதில் கூறுவதென்ன! ‘‘அவ்வாறு) நான் சாட்சி கூறமாட்டேன்!'' என்று நீர் கூறிவிட்டு, ‘‘நிச்சயமாக வணக்கத்திற்குரியவன் அவன் ஒருவன்தான்; (அவனுக்கு) நீங்கள் இணைவைப்பதை விட்டு மெய்யாகவே நான் வெறுத்து விலகுகின்றன்'' என்றும் கூறுவீராக

[20] எவரும் தங்கள் குழந்தைகளை(ச் சந்தேகமற) அறிவதைப்போல, வேதம் கொடுக்கப் பட்டவர்கள் (நம் தூதராகிய) இவரை (இவர் இறைவனுடைய தூதர்தான் என்று) நன்கறிவார்கள். (எனினும், அவர்களில்) எவர்கள் (இதை மறைத்து) தங்களுக்குத் தாமே நஷ்டமிழைத்துக் கொண்டனரோ அவர்கள்தான் (நம் தூதராகிய இவரை இறைவனுடைய தூதரென்று) நம்பமாட்டார்கள்

[21] அல்லாஹ்வைப் பற்றிக் கற்பனையாகப் பொய் கூறியவனை விடவோ, அவனுடைய வசனங்களைப் பொய்யாக்கியவனை விடவோ பெரும் அநியாயக்காரன் யார்? நிச்சயமாக (இந்த) அநியாயக்காரர்கள் வெற்றி அடைய மாட்டார்கள்

[22] நாம் இவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் நாளில் (இவர்களில்) இணைவைத்து வணங்கியவர்களை நோக்கி, ‘‘(அல்லாஹ்விற்கு) இணையானவை என நீங்கள் எவற்றை எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவை எங்கே?'' என்று நாம் கேட்போம்

[23] (அது சமயம்) அவர்கள், ‘‘எங்கள் இறைவன் அல்லாஹ்தான். நாங்கள் (அவனுக்கு எதையும்) இணைவைக்க வில்லையே!'' என்று (பொய்) கூறுவதைத் தவிர அவர்களது குழப்பம் வேறொன்றும் இருக்காது

[24] தங்களைப் பற்றியே அவர்கள் எவ்வாறு பொய் கூறுகின்றனர் என்பதை (நபியே!) கவனிப்பீராக. (அல்லாஹ்விற்கு இணையானவை என்று) அவர்கள் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டிருந்தவை அனைத்தும் அவர்களை விட்டு மறைந்துவிடும்

[25] (நபியே! உமக்கு கட்டுப்படுகிறவர்களைப் போல பாவனை செய்து நீர் கூறுவதைக் கேட்க) உமக்கு செவி சாய்ப்பவர்களும் அவர்களில் உண்டு. எனினும், அவர்கள் (தம் தீயச் செயல்களின் காரணமாக) அதை விளங்கிக் கொள்ளாதிருக்கும்படி அவர்களுடைய உள்ளங்களில் திரையையும் அவர்களுடைய காதுகளில் செவிட்டையும் நாம் ஏற்படுத்திவிட்டோம். ஆகவே, (இவர்கள் சத்தியத்திற்குரிய) அத்தாட்சிகள் அனைத்தையும் (தெளிவாகக்) கண்டபோதிலும் அவற்றை அவர்கள் (ஒரு சிறிதும்) நம்பவே மாட்டார்கள். (நபியே!) அவர்கள் உம்மிடம் வந்த போதிலும், உம்முடன் தர்க்கித்து, ‘‘இவை பழங்காலத்தில் உள்ளவர்களின் கட்டுக் கதைகளே தவிர வேறில்லை'' என்றே இந்நிராகரிப்பவர்கள் கூறுவார்கள்

[26] அவர்கள் (மற்றவர்களையும்) இ(தைக்கேட்ப)தில் இருந்து தடுத்துத் தாங்களும் இதைவிட்டு வெருண்டோடுவார்கள். (இதனால்) அவர்கள் தங்களையே நாசமாக்கிக் கொள்கிறார்கள். (இதை) அவர்கள் உணர்ந்து கொள்ளவே மாட்டார்கள்

[27] (நரக) நெருப்பின் முன் அவர்கள் நிறுத்தப்படும் பொழுது, (நபியே!) நீர் (அவர்களைப்) பார்த்தால், ‘‘நாங்கள் (உலகத்திற்கு)த் திரும்ப அனுப்பப்பட வேண்டுமே! (அவ்வாறாயின்) எங்கள் இறைவனின் வசனங்களை நாங்கள் பொய்யாக்காமல், நம்பிக்கையாளர்களில் ஆகிவிடுவோம்'' என்று அவர்கள் புலம்புவார்கள்

[28] (இதுவும் அவர்கள் மனமாறக் கூறவில்லை) மாறாக! இதற்கு முன்னர் (அவர்கள் தங்களுக்குள்) மறைத்து வைத்திருந்ததுதான் அவர்களிடம் தென்பட்டது. (ஏனென்றால்,) அவர்கள் (இவ்வுலகத்திற்குத்) திரும்ப அனுப்பப்பட்டால், அவர்களுக்குத் தடை செய்திருந்தவற்றின் பக்கமே மீண்டும் செல்வார்கள். நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள்தான்

[29] மேலும், ‘‘இவ்வுலகத்தில் நாம் வாழ்வதைத் தவிர (நாம் இறந்த பின் நமக்கு வேறு வாழ்க்கை) இல்லை; ஆகவே, (இறந்தபின்) நாம் உயிர்ப்பிக்கப்பட மாட்டோம்'' என்று அவர்கள் கூறுகின்றனர்

[30] (இவ்வாறு கூறும்) அவர்கள் (உயிர்ப்பிக்கப்பட்டு) தங்கள் இறைவனுக்கு முன் நிறுத்தப்படும்பொழுது (நபியே! நீர் அவர்களைக்) காண்பீராயின்! (அது சமயம் இறைவன் அவர்களை நோக்கி, ‘‘விசாரணை நாளாகிய) இது உண்மையல்லவா?'' என்று கேட்பான். (அதற்கு) அவர்கள், ‘‘எங்கள் இறைவனே! உண்மைதான்'' எனக் கூறுவார்கள். (அதற்கு) அவன் ‘‘(இதை) நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததன் காரணமாக (நரகத்தின்) வேதனையை நீங்கள் சுவைத்துக் கொண்டிருங்கள்'' என்று கூறுவான்

[31] (ஆகவே,) எவர்கள் அல்லாஹ்வைச் சந்திக்க வேண்டும் என்பதைப் பொய்யாக்குகின்றனரோ அவர்கள் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்களாகி விட்டனர். (எதிர்பாராதவாறு) திடீரென அவர்களுக்கு (விசாரணைக்) காலம் (என்ற மறுமை) வந்துவிட்டால், அவர்கள் தங்கள் பாவச் சுமைகளைத் தங்கள் முதுகுகளின் மீது சுமந்தவர்களாக, இ(ந்த வேதத்)தை நாங்கள் நம்பாத (குற்றத்)தால் எங்களுக்கு ஏற்பட்ட துக்கமே!'' என்று புலம்புவார்கள். அவர்கள் சுமந்து கொண்டிருப்பவை மிகக் கெட்டவை அல்லவா

[32] இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும் கேளிக்கையுமே தவிர வேறில்லை! எனினும் இறையச்சமுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமையின் வாழ்க்கையே மிக மேலானது. (இவ்வளவுகூட) நீங்கள் அறிந்து கொள்ள வேண்டாமா

[33] (நபியே! உம்மைப் பொய்யரென) அவர்கள் கூறுவது, நிச்சயமாக உமக்குக் கவலையைத் தருகிறது என்பதை உறுதியாக நாம் அறிவோம். நிச்சயமாக அவர்கள் உம்மைப் பொய்யாக்கவில்லை. ஆனால், இந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களைத்தான் (பொய்யாக்கி) நிராகரிக்கின்றனர்

[34] உங்களுக்கு முன்னிருந்த (நமது பல) தூதர்களும் (இவ்வாறு) பொய்யரெனவே கூறப்பட்டனர். அவர்களுக்கு நம் உதவி வரும் வரை அவர்கள் பொய்யரெனத் துன்புறுத்தப்பட்டதை அவர்கள் (உறுதியோடு) பொறுத்துக் கொண்டிருந்தனர். (ஆகவே, நபியே! நீரும் அவ்வாறே பொறுத்திருப்பீராக.) அல்லாஹ்வுடைய வாக்குகளை எவராலும் மாற்ற முடியாது. (உமக்கு முன்னிருந்த நம்) தூதர்களின் (இத்தகைய) செய்திகள் நிச்சயமாக உம்மிடம் வந்தே இருக்கின்றன

[35] (நபியே!) அவர்கள் (உம்மைப்) புறக்கணிப்பது உமக்குப் பெரும் சிரமமாகத் தோன்றினால், உம்மால் முடியுமானால் பூமியில் சுரங்கமிட்டு(ச் சென்றோ) அல்லது வானத்தில் ஓர் ஏணி வைத்து (ஏறியோ அவர்கள் விருப்பப்படி) அத்தாட்சி ஒன்றை நீர் அவர்களுக்குக் கொண்டு வருவீராக. (அப்பொழுதும் அவர்கள் உம்மை நிராகரித்துக் கொண்டே இருப்பார்கள்.) எனினும், அல்லாஹ் நாடினால், அவர்கள் அனைவரையும் நேரான வழியில் ஒன்று சேர்த்து விடுவான். ஆகவே, ஒருபோதும் நீர் அறியாதவர்களுடன் சேர்ந்துவிட வேண்டாம்

[36] எவர்கள் (உமக்குச்) செவிசாய்க்கக்கூடிய (உயிருள்ள)வர்களாக இருக்கின்றனரோ அவர்கள்தான் (உம்மை) ஏற்றுக்கொள்வார்கள். (ஆனால், இந்த நிராகரிப்பாளர்களோ செவிமடுக்க முடியாத இறந்தவர்களைப் போலவே இருக்கின்றனர்.) ஆகவே, இறந்தவர்களை (மறுமையில் தான்) அல்லாஹ் உயிர்ப்பிப்பான். பின்னர் அவனிடமே கொண்டுவரப்படுவார்கள்

[37] (‘‘நம் விருப்பப்படி) ஓர் அத்தாட்சியை அவருடைய இறைவன் அவர்மீது இறக்கிவைக்க வேண்டாமா?'' என்று அவர்கள் கூறுகின்றனர். அதற்கு (நபியே!) நீர் கூறுவீராக: (அத்தகைய) ஓர் அத்தாட்சியை இறக்கிவைக்க நிச்சயமாக அல்லாஹ் சக்தியுடையவன்தான். (அவ்வாறு இறக்கியும் வைத்துள்ளான்.) எனினும் அவர்களில் பெரும்பாலோர் (அதை) அறிந்து கொள்வதில்லை

[38] பூமியில் ஊர்ந்து திரியக்கூடியவையும், தன் இரு இறக்கைகளால் (ஆகாயத்தில்) பறக்கக் கூடியவையும் உங்களைப் போன்ற (உயிருள்ள) படைப்புகளே (சமுதாயங்களே) தவிர வேறில்லை. (இவற்றில்) ஒன்றையுமே (நம் பதிவுப்) புத்தகத்தில் (லவ்ஹுல் மஹ்ஃபூளில்) குறிப்பிடாது நாம் விட்டுவிடவில்லை. பின்னர், (ஒரு நாளில்) இவையும் தங்கள் இறைவனிடம் கொண்டு வரப்படும்

[39] எவர்கள் நம் வசனங்களைப் பொய்யாக்குகிறார்களோ அவர்கள் இருள்களில் (தட்டழியும்) செவிடர்களாகவும், ஊமையர்களாகவும் இருக்கின்றனர். அல்லாஹ், தான் நாடியவர்களைத் தவறான வழியில் செல்ல விட்டுவிடுகிறான்; அவன் நாடியவர்களை நேரான வழியில் செலுத்துகிறான்

[40] (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: உங்களுக்கு அல்லாஹ்வுடைய வேதனை வந்துவிட்டால் அல்லது உங்களுக்கு விசாரணைக்காலம் வந்துவிட்டால் அல்லாஹ் அல்லாத (இ)வற்றையா நீங்கள் (உங்கள் உதவிக்கு) அழைப்பீர்கள்! என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்த்தீர்களா? (இந்த சிலைகளை உங்கள் தெய்வங்கள் என்று கூறுகின்ற) நீங்கள் உண்மை சொல்பவர்களாயிருந்தால் (அவற்றையே உங்கள் உதவிக்கு அழையுங்கள்)

[41] அவ்வாறன்று! நீங்கள் இணைவைத்தவற்றை எல்லாம் மறந்துவிட்டு அவனையே அழைப்பீர்கள். நீங்கள் எ(வ்வேதனையை நீக்குவ)தற்காக அவனை அழைப்பீர்களோ அதை அவன் விரும்பினால் நீக்கியும் விடுவான்

[42] (நபியே!) உமக்கு முன்னிருந்த பல வகுப்பினருக்கும் நாம் (நம் தூதர்களை) நிச்சயமாக அனுப்பி வைத்தோம். (எனினும் அத்தூதர்களை அவர்கள் நிராகரித்து விட்டனர். ஆகவே,) அவர்கள் பணிந்து வருவதற்காக நோயைக் கொண்டும், வறுமையைக் கொண்டும் நாம் அவர்களைப் பிடித்தோம்

[43] நம் வேதனை அவர்களிடம் வருவதற்குள் அவர்கள் பணிந்துவிட வேண்டாமா? ஆனால், அவர்களுடைய உள்ளங்கள் இறுகிவிட்டன. அவர்கள் செய்து கொண்டிருந் ததையே (-பாவங்களையே) ஷைத்தான் அவர்களுக்கு அழகாகக் காண்பித்து விட்டான்

[44] அவர்களுக்குச் செய்யப்பட்ட நல்லுபதேசத்தை அவர்கள் மறந்து விடவே (அவர்களைச் சோதிப்பதற்காக) ஒவ்வொரு பொரு(ள் செல்வங்க)ளின் வாயிலையும் நாம் அவர்களுக்குத் திறந்துவிட்டோம். (அவர்களுக்கு வேண்டியவை எல்லாம் தாராளமாக கிடைத்துக் கொண்டிருந்தன.) அவர்களுக்குக் கொடுக்கப்பட்டவற்றைக் கொண்டு அவர்கள் பெருமையுடன் மகிழ்ச்சி அடைந்து கொண்டிருந்த சமயத்தில் (நமது வேதனையைக் கொண்டு) நாம் அவர்களைத் திடீரென பிடித்துக் கொண்டோம் (தண்டித்தோம்). அந்நேரத்தில் அவர்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்

[45] ஆகவே, அநியாயம் செய்து கொண்டிருந்த (அந்த) மக்களின் வேர் அறுபட்டுவிட்டது. எல்லாப் புகழும் அகிலத்தாரின் இறைவன் அல்லாஹ்வுக்கே

[46] ‘‘அல்லாஹ், உங்கள் கேள்விப்புலனையும் பார்வைகளையும் எடுத்து விட்டு உங்கள் உள்ளங்களின் மீது முத்திரை வைத்துவிட்டால், அல்லாஹ்வை அன்றி எந்த இறைவன் அவற்றை உங்களுக்குக் கொடுப்பான் என்பதை நீங்கள் சிந்தித்தீர்களா?'' என்று (நபியே!) (அவர்களைக்) கேட்பீராக. (நம் ஆற்றலுக்குரிய) அத்தாட்சிகளை எவ்வாறு (விதவிதமாக) விவரிக்கிறோம் என்பதை நீர் கவனிப்பீராக. (இவ்வாறிருந்தும்) பின்னும் அவர்கள் புறக்கணித்தே வருகின்றனர்

[47] (நபியே! அவர்களை நோக்கி) கேட்பீராக: ‘‘திடீரெனவோ அல்லது முன்னெச்சரிக் கையுடனோ அல்லாஹ்வுடைய வேதனை உங்களிடம் வந்து விட்டால் (என்னாகும் என்பதை) நீங்கள் சிந்தித்தீர்களா? (அந்நேரத்தில் இந்த) அநியாயக்கார மக்களைத் தவிர (மற்றெவரும்) அழிக்கப்படுவார்களா

[48] (நன்மையைக் கொண்டு) நற்செய்தி கூறுபவர்களாகவும், (தீமையைப் பற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவுமே தவிர, (நம்) தூதர்களை நாம் அனுப்பவில்லை. ஆகவே, எவர்கள் (இந்நபியை) உண்மையாகவே நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்கிறார்களோ, அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்

[49] ஆனால், (உங்களில்) எவர்கள் நம் வசனங்களைப் பொய்யாக்குகிறார்களோ அவர்களை, அவர்களுடைய (இப்)பாவத்தின் காரணமாக வேதனை பிடித்துக் கொள்ளும்

[50] (நபியே! நீர் அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ்வுடைய பொக்கிஷங்கள் என்னிடம் இருக்கிறதென்று நான் உங்களுக்குக் கூறவில்லை. மறைவானவற்றை நான் அறியவும் மாட்டேன். உண்மையாகவே நான் ஒரு வானவர் என்று நான் உங்களிடம் கூறவில்லை. எனினும், எனக்கு வஹ்யின் மூலம் அறிவிக்கப்பட்டவற்றைத் தவிர (வேறொன்றையும்) நான் பின்பற்றுவது இல்லை'' என்று கூறி, ‘‘குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? (இவ்வளவு கூட) நீங்கள் சிந்திக்க வேண்டாமா?'' என்றும் கேட்பீராக

[51] (நபியே!) எவர்கள், ‘‘(மறுமையில்) தங்கள் இறைவனிடம் (விசாரணைக்காகக்) கொண்டு போகப்படுவோம், அங்கு அவனைத் தவிர தங்களுக்கு பாதுகாவலரோ பரிந்துரை செய்பவரோ இருக்கமாட்டார்'' என்று பயப்படுகிறார்களோ அவர்களை இதன் மூலம் நீர் எச்சரிப்பீராக. அவர்கள் (பாவத்திலிருந்து விலகி) இறைவனை அஞ்சிக்கொள்வார்கள்

[52] (நபியே!) தங்கள் இறைவனின் திருமுகத்தை விரும்பி காலையிலும் மாலையிலும் பிரார்த்தித்துக் கொண்டிருப்பவர்களை நீங்கள் விரட்டி விடாதீர்! அவர்களுடைய கணக்கிலிருந்து எதுவும் உமது பொறுப்பாகாது. உமது கணக்கிலிருந்து எதுவும் அவர்களுடைய பொறுப்பாகாது. ஆகவே, நீர் அவர்களை விரட்டினால் அநியாயக்காரர்களில் நீரும் ஒருவராகிவிடுவீர்

[53] (நபியே!) இவ்வாறே அவர்களில் சிலரை சிலரைக் கொண்டு நாம் சோதித்ததில் ‘‘எங்களை விட்டு (ஏழைகளாகிய) இவர்கள் மீதா அல்லாஹ் அருள் புரிந்து விட்டான்?'' என்று (பணக்காரர்கள்) கூற முற்பட்டனர். நன்றி செலுத்துபவர்களை அல்லாஹ் மிக அறிந்தவனாக இல்லையா

[54] (நபியே!) நம் வசனங்களை நம்பிக்கை கொண்டவர்கள் உம்மிடம் வந்தால் (நீர் அவர்களை நோக்கி, ‘‘ஸலாமுன் அலைக்கும்) உங்கள் மீது சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக! உங்கள் இறைவன் (உங்களுக்கு) அருள் புரிவதைத் தன்மீது கடமையாக்கிக் கொண்டான். நிச்சயமாக உங்களில் எவரேனும் அறியாமையின் காரணமாக (ஒரு) பாவத்தைச் செய்துவிட்டு, பின்னர் அதற்காக கைசேதப்பட்டு (அதில் இருந்து விலகி) நற்செயல்களைச் செய்தால் (அவருடைய குற்றங்களை இறைவன் மன்னித்து விடுவான். ஏனென்றால்) நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவன், மிகக் கருணையுடையவன்'' என்று கூறுவீராக

[55] குற்றவாளிகள் செல்லும் வழி (இன்னதென சந்தேகமறத்) தெளிவாகி விடுவதற்காக (நம்) வசனங்களை இவ்வாறு விவரித்திருக்கிறோம்

[56] (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘அல்லாஹ்வையன்றி எவற்றை நீங்கள் (கடவுள்களென) அழைக்கிறீர்களோ அவற்றை வணங்கக்கூடாதென்று நிச்சயமாக நான் தடுக்கப்பட்டுள்ளேன். ஆகவே, உங்கள் மன விருப்பங்களை நான் பின்பற்ற மாட்டேன். அவ்வாறாயின், நிச்சயமாக நானும் வழி தவறிவிடுவேன்; நேரான வழியை அடைந்தவனாகமாட்டேன்

[57] (நபியே! மேலும்,) கூறுவீராக: ‘‘நிச்சயமாக நான் என் இறைவனின் தெளிவான அத்தாட்சியின் மீதே இருக்கிறேன். எனினும், அதை நீங்கள் பொய்யாக்கினீர்கள். எதற்கு நீங்கள் அவசரப்படுகிறீர்களோ அ(ந்த வேதனையான)து என்னிடம் இல்லை. (அதன்) அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே தவிர (வேறு) எவருக்குமில்லை. அவன் உண்மையையே கூறுகிறான். அவன் தீர்ப்பளிப்பவர்களில் மிக மேலானவன்

[58] ‘‘நீங்கள் அவசரப்படுவது என்னிடம் இருந்திருந்தால், உங்களுக்கும் எனக்குமிடையிலுள்ள விவகாரம் (இதுவரை) தீர்க்கப்பட்டே இருக்கும். அல்லாஹ், அநியாயக்காரர்களை நன்கறிந்தே இருக்கிறான்'' என்றும் கூறுவீராக

[59] மறைவானவற்றின் சாவிகள் அவனிடமே இருக்கின்றன. அவற்(றில் உள்ளவற்)றை அவனைத் தவிர வேறெவரும் அறியமாட்டார். நிலத்திலும், நீரிலும் உள்ளவற்றையும் அவன் நன்கறிவான். அவன் அறியாமல் ஓர் இலையும் உதிருவதில்லை. பூமியின் (ஆழத்தில்) அடர்ந்த இருளில் (புதைந்து) கிடக்கும் (கடுகு போன்ற சிறிய) வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் அவனுடைய தெளிவான (பதிவுப்) புத்தகத்தில் இல்லாமலில்லை

[60] (மனிதர்களே!) இரவில் (நீங்கள் நித்திரை செய்யும் பொழுது) அவன்தான் (உங்கள் உணர்ச்சியை நீக்கி) உங்களை இறந்தவர்களுக்குச் சமமாக்குகிறான். நீங்கள் பகலில் செய்பவற்றையும் அவன் நன்கறிகிறான். (உங்களுக்குக்) குறிப்பிட்ட காலம் பூர்த்தி ஆவதற்காக இதற்குப் பின்னர் (உணர்ச்சியை உண்டு பண்ணி) உங்களை எழுப்புகிறான். பின்னர், நீங்கள் அவனிடம்தான் திரும்பப்போவீர்கள். நீங்கள் (இங்கு) செய்து கொண்டிருந்தவற்றை (அங்கு) உங்களுக்கு அவன் அறிவிப்பான்

[61] அவன் தன் அடியார்களை அடக்கி ஆளுகிறான்; மேலும், உங்களுக்குப் பாதுகாவலர்களையும் ஏற்படுத்துகிறான். (மரண நேரம் வரும்வரை அவர்கள் உங்களை பாதுகாக்கின்றனர்,) பின்னர், உங்களில் ஒருவருக்கு மரணம் வந்தால் நமது (வானவத்) தூதர்கள் அவரை உயிர் வாங்குகின்றனர். அவர்கள் (குறித்த காலத்திற்கு முன்னரோ, பின்னரோ உயிரைக் கைப்பற்றி) ஏதும் தவறிழைப்பதில்லை

[62] (இதன்) பின்னர், அவர்கள் தங்களின் உண்மையான எஜமானாகிய அல்லாஹ்விடமே கொண்டு வரப்படுவார்கள். (அந்நேரத்தில்) தீர்ப்பு கூறும் அதிகாரம் அவனுக்கே உரியது என்பதை அவர்கள் அறிந்து கொள்ளட்டும். மேலும், கணக்கைத் தீர்ப்பதிலும் அவன் மிகத் தீவிரமானவன்

[63] நீங்கள் ‘‘தரையிலும், கடலிலும் இருள்களில் சிக்கி (மிக சிரமத்திற்குள்ளாகிவிட்ட சமயத்தில்) எங்களை இதிலிருந்து பாதுகாத்துக் கொண்டால் நிச்சயமாக நாங்கள் நன்றி செலுத்துபவர்களாகி விடுவோம் என்று மறைவாகவும், பணிவாகவும் நீங்கள் பிரார்த்திக்கும் சமயத்தில் உங்களைப் பாதுகாப்பவன் யார்?'' என்று (நபியே!) நீர் (அவர்களைக்) கேட்டு

[64] ‘‘இதிலிருந்தும் மற்ற எல்லா துன்பங்களிலிருந்தும் உங்களை பாதுகாப்பவன் அல்லாஹ் தான். (இவ்வாறிருந்தும்) பின்னும் நீங்கள் (அவனுக்கு) இணை வைக்கிறீர்களே!'' என்று நீர் கூறுவீராக

[65] (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘உங்க(ள் தலைக)ளுக்கு மேலிருந்தோ அல்லது உங்கள் பாதங்களுக்குக் கீழிருந்தோ உங்களுக்கு வேதனை ஒன்றை உண்டுபண்ணவும் அல்லது உங்களைப் பல பிரிவுகளாக்கி, உங்களுக்குள் சிலர் சிலருடன் போர் புரியும்படிச் (செய்து அதனால் உண்டாகும் துன்பத்தை நீங்கள் அனுபவிக்கும்படிச்) செய்யவும் அவன் சக்தி உடையவனாகவே இருக்கிறான்.'' அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக நாம் (நம்) வசனங்களை, எவ்வாறு பல வகைகளில் (தெளிவுபடுத்திக்) கூறுகிறோம் என்று நீர் கவனிப்பீராக

[66] (நபியே! திரு குர்ஆனாகிய) இது முற்றிலும் உண்மையாயிருந்தும், உமது மக்கள் இதையும் பொய்யாக்குகின்றனர். ஆகவே, (அவர்களை நோக்கி) நீர் கூறுவீராக: ‘‘நான் உங்களுக்கு பொறுப்பாளராக இல்லை

[67] ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒரு குறிப்பிட்ட காலமுண்டு. (நான் சொல்வதன் உண்மையை) பின்னர் (வேதனை வரும்போது) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்

[68] (நபியே!) நம் வசனங்களைப் பற்றி (வீண்) விவாதங்களில் மூழ்குபவர்களை நீர் கண்டால், அவர்கள் அதைத் தவிர்த்து வேறு விஷயத்தில் பிரவேசிக்கும் வரை நீங்கள் அவர்களைப் புறக்கணித்து விடுவீராக. (இக்கட்டளையை) ஷைத்தான் உமக்கு மறக்கடித்து (அவர்களுடன் நீரும் இருந்து) விட்டால், அது நினைவுக்கு வந்ததன் பின்னர் அந்த அநியாயக்கார மக்களுடன் நீர் அமர்ந்திருக்க வேண்டாம்

[69] (வீண் விவாதத்தில் மூழ்கிக் கிடக்கும்) அவர்களுடைய (செய்கையின்) கணக்கிலிருந்து எதுவும் இறையச்சமுடையவர்களின் பொறுப்பாகாது. எனினும், அவர்கள் (இதைத்) தவிர்த்துக் கொள்வதற்காக அவர்களுக்கு நல்லுபதேசம் செய்வது (இவர்கள் மீது) கடமையாகும்

[70] (நபியே!) எவர்கள் இவ்வுலக வாழ்க்கையால் மயக்கப்பட்டு, தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும் வேடிக்கையாகவும் எடுத்துக் கொண்டார்களோ அவர்களை (அவர்கள் போக்கில்) விட்டுவிடுவீராக. எனினும், ஒவ்வோர் ஆத்மாவும் தன் (தீய) செயல்களின் காரணமாக (மறுமை நாளில்) ஆபத்திற்குள்ளாகும் என்ற உண்மையை நீர் (அவர்களுக்கு) ஞாபகப்படுத்துவீராக. (அந்நாளில்) அதற்குப் பரிந்து பேசுபவர்களோ, உதவி செய்பவர்களோ அல்லாஹ்வையன்றி ஒருவரும் இருக்கமாட்டார். (சாத்தியமான) அனைத்தையும் (பாவிகள் தங்கள் வேதனைக்குப்) பிரதியாகக் கொடுத்தபோதிலும் அது அங்கீகரிக்கப்பட மாட்டாது. இவர்கள் தங்கள் (தீய) செயல்களின் காரணமாகவே ஆபத்திற்குள்ளானார்கள். இவர்களின் நிராகரிப்பின் காரணமாக மிக்க துன்புறுத்தும் வேதனையுடன் (குடிப்பதற்கு) கொதிக்கும் பானமே இவர்களுக்குக் கிடைக்கும்

[71] (நபியே!) நீர் கேட்பீராக: ‘‘அல்லாஹ்வை விட்டு விட்டு நமக்கு ஒரு நன்மையும், தீமையும் செய்ய சக்தி அற்றவற்றையா நாம் அழைப்போம்? அல்லாஹ் நம்மை நேரான வழியில் செலுத்திய பின்னரும் (நாம்) நம் பின்புறமே திரும்பி விடுவோமா? (அவ்வாறாயின்,) ஒருவனுக்கு நேரான வழியில் அழைக்கக்கூடிய நண்பர்கள் இருந்து அவனை அவர்கள் ‘தம்மிடம் வா' என அழைத்துக் கொண்டிருக்க, அவன் (அவ்வழியில் செல்லாது) ஷைத்தானுடைய ஏமாற்றத்தில் சிக்கி, பூமியில் தட்டழிந்து திரிபவனாக ஆகிவிட்டானோ அவனுக்கு ஒப்பானவர்களாகி விடுவோம்.'' (மேலும்,) நீர் கூறுவீராக: ‘‘நிச்சயமாக அல்லாஹ்வின் வழிதான் நேரான வழி. உலகத்தார் அனைவரின் இறைவனாகிய அவனுக்கே முற்றிலும் தலைசாய்க்க வேண்டும் என நாங்கள் கட்டளையிடப்பட்டுள்ளோம்

[72] தொழுகையைக் கடைப்பிடிக்கும்படியும், அவனுக்கே பயப்படும்படியும் (ஏவப்பட் டுள்ளோம்). அவனிடம்தான் நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்'' (என்றும் கூறுவீராக)

[73] வானங்களையும், பூமியையும் படைத்தவன் உண்மையாகவே அவன்தான். (அவன் எதையும் படைக்கக் கருதும்போது) ‘ஆகுக!' என அவன் கூறுவதுதான் (தாமதம்.) உடனே (அது) ஆகிவிடும்.அவனுடைய சொல்தான் உண்மை சூர் (எக்காளம்) ஊதப்படும் நாளில் அதிகாரம் அவன் ஒருவனுடையதாகவே இருக்கும். மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அவன் நன்கறிவான். அவன் ஞானமுடையவனாகவும் (அனைத்தையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கிறான்

[74] இப்றாஹீம் தன் தந்தையாகிய ஆஜரை நோக்கி, ‘‘நீர் சிலைகளைத் தெய்வங்களாக எடுத்துக் கொண்டீரா?'' என்று கேட்டு, ‘‘நிச்சயமாக நீரும் உமது மக்களும் பகிரங்கமான வழிகேட்டில் இருப்பதை நான் காண்கின்றன்'' என்று கூறினார்

[75] இப்றாஹீம் உறுதியான நம்பிக்கையுடையவர்களில் ஆவதற்காக வானங்களிலும், பூமியிலுமுள்ள (நம்) ஆட்சிகளை நாம் அவருக்கு இவ்வாறு காண்பித்து வந்தோம்

[76] (ஒரு நாள்) இருள் சூழ்ந்த இரவில் அவர் (மின்னிக் கொண்டிருந்த) ஒரு நட்சத்திரத்தைக் கண்டு, ‘‘இது என் இறைவன் (ஆகுமா?)'' என (தம் மக்களைக்) கேட்டு, அது மறையவே, ‘‘மறையக்கூடியவற்றை (இறைவனாக எடுத்துக் கொள்ள) நான் விரும்பமாட்டேன்'' எனக் கூறிவிட்டார்

[77] பின்னர், உதயமான சந்திரனைக் காணவே ‘‘இது என் இறைவன் (ஆகுமா?)'' எனக் கேட்டு, அதுவும் அஸ்தமித்து மறையவே (அதையும் நிராகரித்துவிட்டு), ‘‘எனது இறைவன் எனக்கு நேரான வழியை அறிவிக்காவிட்டால் வழி தவறிய மக்களில் நிச்சயமாக நானும் ஒருவனாகிவிடுவேன்'' என்று கூறினார்

[78] பின்னர், உதயமான (பளிச்சென்று நன்கு ஒளிரும்) சூரியனைக் கண்டபொழுது ‘‘இது மிகப்பெரியதாயிருக்கிறது. இது என் இறைவன் (ஆகுமா?)'' எனக் கேட்டு, அதுவும் அஸ்தமித்து மறையவே, அவர் (தம் மக்களை நோக்கி), ‘‘என் மக்களே! நீங்கள் (இறைவனுக்கு) இணையாக்கும் (இவை) ஒவ்வொன்றிலிருந்தும் நிச்சயமாக நான் வெறுத்து விலகிக்கொண்டேன்'' என்று கூறிவிட்டு

[79] ‘‘வானங்களையும் பூமியையும் எவன் படைத்தானோ அ(ந்த ஒரு)வனின் பக்கமே நிச்சயமாக நான் முற்றிலும் நோக்குகின்றன். நான் (அவனுக்கு எதையும்) இணைவைப்பவன் அல்ல'' (என்று கூறினார்)

[80] (இதைப் பற்றி) அவருடன் அவருடைய மக்கள் தர்க்கித்தார்கள். அதற்கு (அம்மக்களை நோக்கி) அவர் கூறினார்: ‘‘நீங்கள், (படைப்பவனாகிய) அல்லாஹ்வைப் பற்றியா என்னுடன் தர்க்கிக்கிறீர்கள்? நிச்சயமாக அவன் எனக்கு நேரான வழியை அறிவித்துவிட்டான். என் இறைவன் எதையும் விரும்பினாலன்றி நீங்கள் இணைவைத்து வணங்குபவை(கள் எனக்கு ஒரு தீங்கும் செய்துவிட முடியாது. ஆகவே, அவை)களுக்கு நான் பயப்படமாட்டேன். என் இறைவன் அனைவரையும்விட கல்வியில் மிக்க விசாலமானவன். (இவ்வளவுகூட) நீங்கள் சிந்திக்க வேண்டாமா

[81] உங்களுக்கு அல்லாஹ் எதற்கு அத்தாட்சியை இறக்கவில்லையோ அதை நீங்கள் அல்லாஹ்வுக்கு இணையாக்கியதைப் பற்றி ஒரு சிறிதும் நீங்கள் பயப்படாதிருக்க, நீங்கள் இணைவைத்தவற்றை நான் எவ்வாறு பயப்படுவேன். அச்சமற்றிருக்க நம்மிரு பிரிவினரில் மிகத் தகுதியுடையவர்கள் யார்? என்பதை நீங்கள் அறிவுடையவர்களாக இருந்தால் (கூறுங்கள்)

[82] எவர்கள் நம்பிக்கை கொண்டு, தங்கள் நம்பிக்கையுடன் (இணைவைத்தல் என்னும்) அநியாயத்தையும் கலந்து விடவில்லையோ அவர்களுக்கே நிச்சயமாக பாதுகாப்பு உண்டு. அவர்கள்தான் நேர்வழியாளர்கள் (என்று கூறினார்)

[83] (மேற்கூறப்பட்ட) இவை நமது உறுதிமிக்க ஆதாரங்களாகும். இப்றாஹீம் தன் மக்களைத் (தர்க்கத்தில்) வெல்வதற்காக, நாம் இவற்றை அவருக்குக் (கற்றுக்) கொடுத்தோம். நாம் விரும்பியவர்களின் பதவிகளை நாம் எவ்வளவோ உயர்த்தி விடுகிறோம். (நபியே!) நிச்சயமாக உமது இறைவன் மிக ஞானமுடையவன், மிகுந்த அறிவுடையவன் ஆவான்

[84] நாம் (இப்ராஹீமாகிய) அவருக்கு இஸ்ஹாக்கையும் (அவருடைய மகன்) யஅகூபையும் (சந்ததிகளாகத்) தந்தருள் புரிந்தோம். இவர்கள் அனைவரையும் நாம் நேரான வழியில் செலுத்தினோம். இதற்கு முன்னர் நூஹையும், அவருடைய சந்ததிகளாகிய தாவூத், ஸுலைமான், ஐயூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் ஆகியோரையும் நாம் நேரான வழியில் செலுத்தினோம். நன்மை செய்பவர்களுக்கு இவ்வாறே நாம் (நற்)கூலி அளிக்கிறோம்

[85] ஜகரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ் (ஆகியோரையும் நேரான வழியில் செலுத்தினோம்). இவர்கள் அனைவரும் நன்னடத்தை உடையவர்கள்

[86] இஸ்மாயீல், அல்யஸஉ (எலிஸே,) யூனுஸ், லூத் (இவர்களையும் நேரான வழியில் செலுத்தினோம்.) இவர்கள் அனைவரையும் உலகத்திலுள்ள அனைவரின் மீதும் மேன்மையாக்கியும் வைத்தோம்

[87] இவர்களுடைய மூதாதைகளிலும், இவர்களுடைய சந்ததிகளிலும், இவர்களுடைய சகோதரர்களிலும் (பலரை) மேன்மையாக்கி வைத்ததுடன் இவர்கள் அனைவரையும் தேர்ந்தெடுத்து நேரான வழியிலும் செலுத்தினோம்

[88] (இவர்கள் அனைவரும் சென்ற) இதுவே அல்லாஹ்வுடைய நேரான வழியாகும். தன் அடியார்களில் அவன் விரும்பியவர்களை அதில் செலுத்துகிறான். அவர்கள் (இதைத் தவிர்த்து அல்லாஹ்வுக்கு) இணைவைத்தாலோ அவர்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்கள் அனைத்தும் அழிந்துவிடும்

[89] இவர்களுக்குத்தான் வேதத்தையும், அதிகாரத்தையும், நபித்துவத்தையும் நாம் கொடுத்திருந்தோம். ஆகவே, அவற்றை (மக்காவாசிகளாகிய) இவர்கள் நிராகரித்து விட்டால் (இவர்களுக்குப் பதிலாக) நிராகரிக்காத (உண்மை முஸ்லிம்களான) மக்களை நிச்சயமாக நாம் ஏற்படுத்தி விடுவோம்

[90] (நபியே!) இவர்கள் அனைவரையும் அல்லாஹ் நேரான வழியில் செலுத்தினான். ஆகவே, அவர்களுடைய நேரான வழியை நீரும் பின்பற்றுவீராக. மேலும், ‘‘இ(ந்தக் குர்ஆனை உங்களுக்கு அறிவிப்ப)தற்காக நான் உங்களிடம் ஒரு கூலியையும் கேட்கவில்லை. உலகத்தார் அனைவருக்கும் இது ஒரு நல்லுபதேசமாகும்'' என்று கூறுவீராக

[91] அல்லாஹ்வின் தகுதியை அறிய வேண்டியவாறு அவர்கள் அறியவில்லை. ஏனென்றால், ‘‘மனிதர்களில் எவருக்கும் (வேதத்தில்) எதையும் அல்லாஹ் அருளவே இல்லை'' என்று அவர்கள் கூறுகின்றனர். ஆகவே, (நபியே! அவர்களை நோக்கி) நீர் கேட்பீராக: ‘‘மனிதர்களுக்கு ஒளியையும் நேர்வழியையும் தரக்கூடிய (‘‘தவ்றாத்' என்னும்) வேதத்தை நபி மூஸாவுக்கு அருளியது யார்? நீங்கள் அவ்வேதத்தைத் தனித்தனி ஏடுகளாகப் பிரித்து (அவற்றில்) சிலவற்றை வெளிப்படுத்துகிறீர்கள். (உங்கள் நோக்கத்திற்கு மாறான) பெரும்பாலானவற்றை நீங்கள் மறைத்து விடுகிறீர்கள். (அதன் மூலமாகவே) நீங்களும் உங்கள் மூதாதைகளும் அறியாமல் இருந்தவை உங்களுக்கு கற்பிக்கப்பட்டன. (இத்தகைய வேதத்தை உங்களுக்கு அருளியது யார்?'' இதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன! நீரே அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ்தான் (இறக்கி வைத்தான்)'' என்று கூறி அவர்கள் (தங்கள்) வீண் தர்க்கத்திலேயே விளையாடிக் கொண்டிருக்கும்படியும் விட்டுவிடுவீராக

[92] (நபியே!) இது நாம் உம் மீது இறக்கிய மிக்க பாக்கியமுடைய ஒரு வேதமாகும்.இது தனக்கு முன்னுள்ள (அவர்களுடைய வேதத்)தையும் உண்மைப் படுத்துகிறது. ஆகவே,நீர் (இதைக் கொண்டு தாய்நாட்டினராகிய) மக்காவாசிகளுக்கும், அதைச் சுற்றி உள்ளவர்களுக்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக. எவர்கள் மறுமையை நம்புகிறார்களோ அவர்கள் இவ்வேதத்தையும் (அவசியம்) நம்புவார்கள். அவர்கள் தவறாது தொழுதும் வருவார்கள்

[93] (நபியே!) கற்பனையாக அல்லாஹ்வின் மீது பொய் கூறுபவனைவிட அல்லது வஹ்யி மூலம் அவனுக்கு எதுவும் அறிவிக்கப்படாமலிருக்க ‘‘தனக்கும் வஹ்யி வந்தது'' என்று கூறுபவனைவிட அல்லது ‘‘அல்லாஹ் இறக்கிய இ(வ்வேதத்)தைப் போல் நானும் இறக்குவேன்'' என்று கூறுபவனைவிட மகா அநியாயக்காரன் யார்? இவ்வக்கிரமக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் சமயத்தில் நீர் அவர்களைப் பார்ப்பீராயின், வானவர்கள் தங்கள் கைகளை நீட்டி (அவர்களை நோக்கி) ‘‘உங்கள் உயிர்களைக் கொடுங்கள். இன்றைய தினம் இழிவு தரும் வேதனையே உங்களுக்குக் கூலியாகக் கொடுக்கப்படும். நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது (பொய்யாகக்) கூறி, நீங்கள் அவனுடைய வசனங்களை பெருமை கொண்டு புறக்கணித்ததுவே இதற்குக் காரணமாகும்'' (என்று கூறுவதை நீர் காண்பீர்)

[94] (இறைவன் மறுமையில் அவர்களை நோக்கி) ‘‘முன்னர் நாம் உங்களைப் படைத்தவாறே (உங்களுடன் ஒன்றுமில்லாது) நிச்சயமாக நீங்கள் தனியாகவே நம்மிடம் வந்து சேர்ந்தீர்கள். நாம் உங்களுக்குக் கொடுத்திருந்தவற்றையும் உங்கள் முதுகுப்புறமாகவே விட்டுவிட்டீர்கள். (உங்களைப் படைப்பதிலும் வளர்ப்பதிலும் இறைவனுக்குத்) துணையானவர்களென நீங்கள் எவர்களை எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவர்கள் உங்களுக்குப் பரிந்து பேச இவ்விடத்தில் இருக்கவில்லையே! (அவர்களுக்கும்) உங்களுக்கு(ம்) இடையில் இருந்த சம்பந்தங்கள் எல்லாம் நீங்கி, உங்கள் நம்பிக்கைகள் எல்லாம் தவறிவிட்டன'' (என்று கூறுவான்)

[95] வித்துக்களையும், கொட்டைகளையும் நிச்சயமாக அல்லாஹ்தான் வெடி(த்து முளை)க்கச்செய்கிறான். இறந்தவற்றில் இருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் அவனே வெளியாக்குகிறான். (இவ்வாறு செய்கின்ற) அவன்தான் உங்கள் அல்லாஹ். ஆகவே, நீங்கள் (அவனை விட்டு) எங்கு வெருண்டோடுகிறீர்கள்

[96] அவனே (பொழுதை) விடியச் செய்பவன். அவனே (நித்திரை செய்து நீங்கள்) சுகமடைவதற்காக இரவை ஆக்கினான். (நீங்கள் காலத்தின்) கணக்கை அறிவதற்காக சந்திரனையும் சூரியனையும் ஆக்கினான். இவை அனைத்தும் மிகைத்தவன், மிக்க அறிந்தவன் (ஆகிய அல்லாஹ்) உடைய ஏற்பாடாகும்

[97] உங்களுக்காக நட்சத்திரங்களை அமைத்தவனும் அவனே. தரையிலும் கடலிலும் உள்ள இருள்களில் அவற்றைக் கொண்டு நீங்கள் வழியறிந்து செல்கிறீர்கள். (உண்மையை) அறியக்கூடிய மக்களுக்கு (நம்) வசனங்களை நிச்சயமாக (இவ்வாறு) விவரிக்கிறோம்

[98] (மனிதர்களே!) உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆத்மாவில் இருந்து உற்பத்தி செய்து பின்னர் (உங்கள் தந்தையிடம்) தரித்திருக்கச் செய்து (உங்கள் தாயின் கர்ப்பத்தில்) ஒப்படைப்பவனும் அவனே! சிந்தித்து உணரக்கூடிய மக்களுக்கு (நம்) வசனங்களை நிச்சயமாக விவரித்தோம்

[99] அவன்தான் மேகத்திலிருந்து மழையை இறக்கிவைக்கிறான். அதைக் கொண்டே சகல வகைப் புற்பூண்டுகளையும் நாம் முளைக்க வைத்து, அதில் இருந்து பசுமையான தழைகளையும் நாம் வெளியாக்குகிறோம். அதிலிருந்தே அடர்ந்த வித்துக்களை(யுடைய கதிர்களை)யும் நாம் வெளியாக்குகிறோம். பேரீச்ச மரத்தின் பாளைகளில் வளைந்து தொங்கும் பழக்குலைகளும் இருக்கின்றன. (அவற்றையும் நாமே வெளியாக்குகிறோம்.) திராட்சைத் தோட்டங்களையும், (பார்வைக்கு) ஒன்றுபோலும் (ரசனையில்) வெவ்வேறாகவும் உள்ள மாதுளை, ஜெய்த்தூன் (ஒலிவம்) ஆகியவற்றையும் (நாமே வெளியாக்குகிறோம்). அவை (பூத்துக்) காய்ப்பதையும், பின்னர் கனிந்து பழமாகும் விதத்தையும் (மக்களே!) உற்று நோக்குங்கள். நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன

[100] (இவ்வாறெல்லாமிருந்தும்) அவர்கள் ஜின்களில் பலரை அல்லாஹ்வுக்கு இணையாக்குகின்றனர். எனினும், அந்த ஜின்களையும் அவனே படைத்திருக்கிறான். இவர்கள் (தங்கள்) அறிவீனத்தால் அல்லாஹ்வுக்கு ஆண், பெண் சந்ததிகளையும் கற்பிக்கின்றனர். அவனோ, இவர்கள் (இவ்வாறு) வர்ணிப்பவற்றில் இருந்து மிக்க பரிசுத்தமானவனாகவும் உயர்ந்தவனாகவும் இருக்கிறான்

[101] முன்மாதிரியின்றியே வானங்களையும் பூமியையும் அவன் படைத்தான் அவனுக்கு எவ்வாறு சந்ததியேற்படும்? அவனுக்கு மனைவி கிடையாதே! அனைத்தையும் அவனே படைத்திருக்கிறான். மேலும், அவன் அனைத்தையும் நன்கறிந்தவன்

[102] இத்தகைய அல்லாஹ்தான் உங்களைப் படைத்து வளர்த்து பரிபக்குவப்படுத்தும் இறைவன். வணக்கத்திற்குரியவன் அவனைத் தவிர வேறு ஒருவருமில்லை. அவனே அனைத்தின் படைப்பாளன். ஆகவே, அ(வன் ஒருவ)னையே நீங்கள் (அனைவரும்) வணங்குங்கள். எல்லா காரியங்களையும் கண்காணிப்பவனும் அவனே

[103] பார்வைகள் அவனை அடையமுடியாது. அவனோ பார்வைகள் அனைத்தையும் அறிந்து கொள்கிறான். அவன் (எவரின் பார்வைக்கும் அகப்படாத) மிக நுட்பமானவன்; மிக்க அறிந்தவன்

[104] உங்கள் இறைவனிடமிருந்து (சத்தியத்திற்குரிய பல) ஆதாரங்கள் உங்களிடம் வந்திருக்கின்றன. எவன் (அவற்றைக் கவனித்து) பார்க்கிறானோ (அது) அவனுக்கே நன்று. எவன் (அவற்றைப் பார்க்காது) கண்ணை மூடிக்கொள்கிறானோ (அது) அவனுக்கே கேடாகும். (நபியே! நீர் அவர்களை நோக்கி) ‘‘நான் உங்களைக் காப்பவன் அல்ல'' (என்று கூறிவிடுவீராக)

[105] (இதை) நீர் (எங்களுக்கு) நன்கு ஓதிக் காண்பித்(து அறிவித்)தீர் என்று அவர்கள் சொல்வதற்காகவும், அறியக்கூடிய மக்களுக்கு நாம் இதைத் தெளிவாக்குவதற்காகவும், (நம்) வசனங்களை இவ்வாறு பலவாறாக (அடிக்கடி) விவரிக்கிறோம்

[106] (நபியே!) உமது இறைவனால் உமக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டவற்றையே நீர் பின்பற்றுவீராக. அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறுயாரும் இல்லவே இல்லை. ஆகவே, (அவனுக்கு) இணைவைப்பவர்களை நீர் புறக்கணித்து விடுவீராக

[107] அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இணைவைத்திருக்கவே மாட்டார்கள். அவர்கள் மீது காப்பாளராக நாம் உம்மை ஏற்படுத்தவில்லை. நீர் அவர்களைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்புடையவருமல்ல

[108] (நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் அல்லாத எவற்றை அவர்கள் (தெய்வம் என) அழைக்கிறார்களோ அவற்றை நீங்கள் திட்டாதீர்கள். அதனால், அவர்கள் அறியாமையின் காரணமாக வரம்பு மீறி அல்லாஹ்வை திட்டுவார்கள். இவ்வாறே ஒவ்வொரு வகுப்பினருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக்கி வைத்திருக்கிறோம். பின்னர், அவர்கள் தங்கள் இறைவனிடமே செல்வார்கள். அவர்கள் செய்து கொண்டிருந்த செயலைப்பற்றி (அவற்றில் நன்மை எவை, தீமை எவை என்பதை) அவன் அவர்களுக்கு அறிவித்துவிடுவான்

[109] (அவர்கள் விருப்பப்படி) ஓர் அத்தாட்சி எங்களுக்காக வரும் சமயத்தில், ‘‘நிச்சயமாக நாங்கள் அதை நம்புவோம்'' என அவர்கள் அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து கூறுகின்றனர். (அதற்கு நபியே! நீர் அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக அத்தாட்சிகள் அனைத்தும் அல்லாஹ்விடமே இருக்கின்றன. (அவற்றை அவன் விரும்பியவாறே வெளியாக்குவான். நீங்கள் விரும்புவது போன்றல்ல) என்று கூறுவீராக. (அவ்வாறு) அவர்களிடம் (அவர்கள் விரும்பியவாறே) அத்தாட்சி வந்தாலும் அதை அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள் என்பதை (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அறிவீர்களா

[110] முன்னர் அவர்கள் இ(வ்வேதத்)தை நம்பிக்கை கொள்ளாமல் இருந்தபடியே (இப்பொழுதும் நம்பிக்கை கொள்ளாது இருப்பதற்காக) நாம் அவர்களுடைய உள்ளங்களையும் பார்வைகளையும் புரட்டி அவர்களுடைய வழிகேட்டிலேயே அவர்களை தட்டழிந்து திரியும்படி விட்டிருக்கிறோம்

[111] (அவர்கள் விரும்புகின்றவாறு) மெய்யாகவே நாம் அவர்களிடம் வானவர்களை இறக்கிவைத்தாலும், இறந்தவர்களை (எழுப்பி) அவர்களிடம் பேசும்படிச் செய்தாலும், (மறைவாயிருக்கும்) அனைத்தையும் அவர்கள் (கண்) முன் கொண்டு வந்து சேர்த்தாலும் அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள், ஆனால் அல்லாஹ் நாடினாலே தவிர. அவர்களில் பெரும்பான்மையினர் (அறிவில்லாத) மூடர்களாகவே இருக்கின்றனர்

[112] இவ்வாறே, ஒவ்வொரு நபிக்கும் மனிதரிலும், ஜின்னிலுமுள்ள ஷைத்தான்களை நாம் எதிரிகளாக்கி இருந்தோம். அவர்களில் சிலர் சிலரை ஏமாற்றுவதற்காக அழகான வார்த்தைகளை (காதில்) இரகசியமாகக் கூறிக் (கலைத்துக்) கொண்டிருந்தார்கள். உமது இறைவன் நாடியிருந்தால் இவ்வாறு அவர்கள் செய்திருக்க மாட்டார்கள். ஆகவே, (நபியே!) நீர் அவர்களையும் அவர்களுடைய பொய்க் கூற்றுகளையும் விட்டுவிடுவீராக

[113] மறுமையை நம்பாதவர்களின் உள்ளங்கள் (ஷைத்தானாகிய) அவர்களுக்கு செவிசாய்த்து அதை அவர்கள் பொருந்திக் கொள்வதற்காகவும், அவர்கள் செய்யும் தீய செயல்களை இவர்களும் செய்வதற்காகவும் (இவ்வாறு இவர்களை அவர்கள் மயக்கி வந்தனர்)

[114] ‘‘அல்லாஹ்வைத் தவிர மற்றவரையா (எங்களுக்கும் உங்களுக்கும் இடையில்) தீர்ப்பளிக்கும் அதிபதியாக நான் எடுத்துக்கொள்வேன்? அவன்தான் எல்லா விபரங்களுமுள்ள இவ்வேதத்தை உங்களுக்கு அருள் புரிந்திருக்கின்றான்'' (என்று நபியே! நீர் கூறுவீராக. இதற்கு முன்னர்) எவர்களுக்கு நாம் வேதம் கொடுத்திருக்கின்றோமோ அவர்கள், இது மெய்யாகவே உமது இறைவனிடமிருந்து உண்மையைக் கொண்டே அருளப்பட்டுள்ளது என்பதை உறுதியாக அறிவார்கள். ஆகவே, சந்தேகப்படுபவர்களில் நீரும் ஒருவராக ஒருபோதும் ஆகிவிடவேண்டாம்

[115] (நபியே!) உமது இறைவனின் வாக்கு உண்மையாகவும் நீதமாகவும் முழுமையாகி விட்டது. அவனுடைய வாக்குகளை மாற்றுபவன் யாருமில்லை. அவன் (அனைத்தையும்) செவியுறுபவன், நன்கறிந்தவன்

[116] இப்புவியிலிருப்பவர்களில் பலர் (இவ்வாறே) இருக்கின்றனர். நீர் அவர்களைப் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து திருப்பி விடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத் தவிர (உண்மையை) அவர்கள் பின்பற்றுவதில்லை. மேலும், (வெறும் பொய்யான) கற்பனையில்தான் அவர்கள் மூழ்கியிருக்கின்றனர்

[117] (நபியே!) நிச்சயமாக உமது இறைவன், தன் வழியில் இருந்து தவறியவர்கள் யார்? என்பதை நன்கறிவான். (அவ்வாறே) நேரான வழியில் இருப்பவர்களையும் அவன் நன்கறிவான்

[118] (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் உண்மையாகவே அல்லாஹ்வுடைய வசனங்களை நம்பிக்கை கொள்பவர்களாயிருந்தால் அல்லாஹ்வுடைய பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டவற்றையே புசியுங்கள்

[119] (உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவற்றை அறுக்கும் பொழுது) அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டவற்றை நீங்கள் புசிக்காதிருக்க உங்களுக்கு என்ன (தடை)? நீங்கள் நிர்பந்திக்கப்பட்டாலன்றி (புசிக்க) உங்களுக்குத் தடுக்கப்பட்டவை எவையென அவன் உங்களுக்கு விவரித்துக் கூறியே இருக்கிறான். (அவற்றைத் தவிர உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவற்றில் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்ட அனைத்தையும் நீங்கள் புசிக்கலாம்.) எனினும், பெரும்பான்மையினர் அறியாமையின் காரணமாக தங்கள் இஷ்டப்படியெல்லாம் (மக்களை) வழி கெடுக்கின்றனர். (நபியே!) நிச்சயமாக உமது இறைவன் வரம்பு மீறுபவர்களை நன்கறிவான்

[120] (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் பகிரங்கமான பாவத்தையும் ரகசியமான பாவத்தையும் விட்டுவிடுங்கள். ஏனென்றால், எவர்கள் பாவத்தை சம்பாதிக்கின்றனரோ அவர்கள் தாங்கள் செய்யும் தீய செயலுக்குத் தக்க பலனை அடைந்தே தீருவார்கள்

[121] (நம்பிக்கையாளர்களே! அறுக்கும்போது) அல்லாஹ்வுடைய பெயர் கூறப்படாத வற்றை நீங்கள் புசிக்காதீர்கள். நிச்சயமாக அது பெரும் பாவமாகும். (இதில்) உங்களுடன் தர்க்கிக்குமாறு நிச்சயமாக ஷைத்தான்கள் தங்கள் நண்பர்களைத் தூண்டுகின்றனர். நீங்கள் அவர்களுக்கு கீழ்ப்படிந்தால் நிச்சயமாக நீங்கள் (அவர்களைப் போல்) இணைவைத்து வணங்குபவர்கள்தான்

[122] (வீழ்ச்சி அடைந்து) மரணித்தவர்களாக இருந்தவர்களில் எவரை நாம் உயிர்ப்பித்து மனிதர்களுக்கிடையில் நடமாடுவதற்குரிய ஒளியையும் கொடுத்திருக்கின்றோமோ அவர், இருளில் சிக்கி அதிலிருந்து வெளியேற முடியாமலிருப்பவனுக்குச் சமமாவாரா? இவ்வாறே நிராகரிப்பவர்களுக்கு அவர்களுடைய (தீய)செயல்கள் அழகாக்கப்பட்டு விட்டன

[123] இவ்வாறே, ஒவ்வொரு ஊரிலும் ஆங்காங்குள்ள பாவிகளை நாம் தலைவர்களாக்கி இருக்கிறோம். அங்கு அவர்கள் விஷமம் (செய்ய சதி) செய்து கொண்டிருப்பார்கள். எனினும், அவர்கள் தங்களுக்கே தவிர, (மற்றெவருக்கும்) சதி செய்துவிட முடியாது. (இதை) அவர்கள் உணர்ந்து கொள்ளமாட்டார்கள்

[124] அவர்களிடம் ஒரு வசனம் வந்தால் ‘‘அல்லாஹ்வுடைய தூதர்களுக்குக் கொடுக்கப்பட்டது போன்ற (நபித்துவத்)தை எங்களுக்கும் கொடுக்கப்படாத வரை நாங்கள் (அதை) நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்'' என்று கூறுகின்றனர். நபித்துவத்தை எங்கு (எவருக்கு) அளிப்பது என்பதை அல்லாஹ்தான் நன்கறிவான். குற்றம் செய்யும் இவர்களை இவர்கள் செய்யும் சதியின் காரணமாக அல்லாஹ்விடமிருந்து சிறுமையும், கொடிய வேதனையும் அதிசீக்கிரத்தில் வந்தடையும்

[125] அல்லாஹ் எவர்களுக்கு நேர்வழி காண்பிக்க விரும்புகிறானோ அவர்களுடைய உள்ளத்தை இஸ்லாமின் பக்கம் (செல்ல) விரிவாக்குகிறான். எவர்களை, அவர்களுடைய வழிகேட்டிலேயே விட்டுவிட விரும்புகிறானோ அவர்களுடைய உள்ளத்தை (நிர்ப்பந்தத்தால்) வானத்தில் ஏறுபவ(னி)ன் (உள்ளம்) போல் கஷ்டப்பட்டு சுருங்கும்படியாக்கி விடுகிறான். இவ்வாறே, நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனை கொடுக்கிறான்

[126] (நபியே!) இதுவே உமது இறைவனின் நேரான வழியாகும். நல்லுணர்ச்சி பெறும் மக்களுக்கு நாம் (நம்) வசனங்களை நிச்சயமாக விவரித்திருக்கிறோம்

[127] அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் சாந்தியும் சமாதானமும் உள்ள சொர்க்கமுண்டு. அவர்கள் செய்து கொண்டிருந்த (நற்)செயல்களின் காரணமாக அவன் அவர்களுடைய நேசன் ஆவான்

[128] (இறைவன்) அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் (மறுமை) நாளில், (ஜின் இனத்தாரை நோக்கி) ‘‘ஜின் இனத்தோரே! நீங்கள் மனிதர்களில் பலரை(க் கெடுத்து) உங்களுடன் சேர்த்துக் கொண்டீர்கள் (அல்லவா)'' என்(று கேட்)பான். அதற்கு மனிதர்களில் உள்ள அவர்களின் நண்பர்கள் ‘‘எங்கள் இறைவனே! எங்களில் சிலர் (மாறு செய்த) சிலரைக்கொண்டு பயனடைந்து இருக்கின்றனர். எங்களுக்கு நீ ஏற்படுத்திய காலத்தை நாங்கள் அடைந்து விட்டோம். (எங்களுக்கு என்ன கட்டளை?)'' என்று கேட்பார்கள். (அதற்கு இறைவன்) ‘‘நரகம்தான் உங்கள் தங்குமிடம். (உங்களில்) அல்லாஹ் (மன்னிக்க) நாடியவர்களைத் தவிர (மற்ற அனைவரும் என்றென்றுமே) அதில் தங்கி விடுவீர்கள்'' என்று கூறுவான். (நபியே!) நிச்சயமாக உமது இறைவன், மிக்க ஞானமுடையவன் நன்கறிந்தவன் ஆவான்

[129] இவ்வாறு இவ்வக்கிரமக்காரர்கள் செய்த (தீய) செயலின் காரணமாக அவர்களில் ஒவ்வொருவரையும் (அநியாயக்காரர்களாகிய) மற்றவர்களுடன் (நரகத்தில்) ஒன்று சேர்த்துவிடுவோம்

[130] (இறைவன் மறுமையில் மனிதர்களையும் ஜின்களையும் நோக்கி) ‘‘மனித, ஜின் கூட்டத்தார்களே! உங்களில் தோன்றிய (நம்) தூதர்கள் உங்களிடம் வந்து நம் வசனங்களை உங்களுக்கு ஓதிக் காண்பித்து நீங்கள் நம்மைச் சந்திக்கும் இந்நாளைப் பற்றியும் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யவில்லையா?'' என்(று கேட்)பான். அதற்கவர்கள் ‘‘(எங்கள் இறைவனே! உண்மைதான்) இவ்வுலக வாழ்க்கை எங்களை மயக்கிவிட்டது'' என்று தங்களுக்கு எதிராக சாட்சியம் கூறுவதுடன், நிச்சயமாக தாங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததாகவும் தங்களுக்குத் தாமே எதிராக அவர்கள் சாட்சியம் கூறுவார்கள்

[131] (நபியே!) இ(வ்வாறு நபிமார்களை அனுப்புவ)தன் காரணமெல்லாம் அநியாயம் செய்த எவ்வூராரையும் அவர்கள் அஜாக்கிரதையாக இருக்கும் சமயத்தில் (எச்சரிக்கை செய்யாமல்) அவர்களை அழிப்பவனாக உமது இறைவன் இருக்கவில்லை என்பதுதான்

[132] (நபியே! அவர்கள்) அனைவருக்கும் அவர்களின் செயல்களுக்குத்தக்க பதவிகள் உண்டு. அவர்கள் செய்கின்ற செயல்களைப் பற்றி உமது இறைவன் பராமுகமாயில்லை

[133] (நபியே!) உமது இறைவன் தேவையற்றவன், அன்புடையவன். (மனிதர்களே!) அவன் விரும்பினால் உங்களைப் போக்கி, தான் நாடிய எவரையும் உங்கள் இடத்தில் அமர்த்தி விடுவான். இவ்வாறே (சென்று போன) மற்ற மக்களின் சந்ததிகளிலிருந்து உங்களை உற்பத்தி செய்திருக்கிறான்

[134] உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட (அந்த இறுதி) நாள் நிச்சயமாக வந்தே தீரும். அதை நீங்கள் தடுத்துவிட முடியாது

[135] (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘என் மக்களே! நீங்கள் உங்கள் போக்கில் (உங்கள்) காரியங்களைச் செய்துகொண்டே இருங்கள். நிச்சயமாக நானும் (என் போக்கில் என்) காரியங்களைச் செய்து கொண்டிருப்பேன். இம்மையின் முடிவு எவருக்குச் சாதகமாக இருக்கிறது என்பதை பின்னர் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றி பெறமாட்டார்கள்

[136] விவசாயம், ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற அல்லாஹ் உற்பத்தி செய்பவற்றில் ஒரு பாகத்தை தங்கள் விருப்பப்படி குறிப்பிட்டு, ‘‘இது அல்லாஹ்வுக்கு என்றும் (மற்றொரு பாகத்தை) இது எங்கள் தெய்வங்களுக்கு'' என்றும் கூறுகின்றனர். அவர்கள் தங்கள் தெய்வங்களுக்கென குறிப்பிட்ட பாகத்தில் எதுவும் அல்லாஹ்வுக்குச் சேருவதில்லை. எனினும், அல்லாஹ்வுக்கென குறிப்பிட்டவை (நல்லவையாக இருந்தால்) அவர்களுடைய தெய்வங்களுக்கே சேர்ந்து விடுகின்றன! அவர்கள் செய்யும் இத்தீர்மானம் மிகக் கெட்டது

[137] இவ்வாறே, இணைவைத்து வணங்குபவர்களில் பலர் (தாங்களே) தங்கள் குழந்தைகளைக் கொலை செய்வதை அவர்கள் அழகாகக் காணும்படி அவர்களுடைய தெய்வங்கள் செய்து அவர்களைப் படுகுழியில் தள்ளி, அவர்களுடைய மார்க்கத்தையும் குழப்பமாக்கிவிட்டன. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள். ஆகவே, (நபியே!) நீர் அவர்களையும் அவர்களுடைய பொய்க் கூற்றுகளையும் விட்டு விடுவீராக

[138] (மேலும், அவர்கள் தங்கள்) ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றிலும், விவசாயத்திலும் (சிலவற்றைக் குறிப்பிட்டு) ‘‘இது தடுக்கப்பட்டிருக்கிறது. எங்கள் கொள்கைப்படி நாங்கள் விரும்புகிற (புரோகிதர், துறவி ஆகிய)வர்களைத் தவிர (மற்றெவரும்) அதைப் புசிக்கக்கூடாது'' என்று (தங்கள் மூடக் கொள்கையின்படி) அவர்கள் கூறுகின்றனர். தவிர, அவ்வாறே வேறு சில) ஆடு, மாடு, ஒட்டகங்களின் முதுகுகள் தடுக்கப்பட்டிருக்கின்றன. (அவற்றின் மீது ஏறுவதும், சுமையேற்றுவதும் கூடாது) என்றும், (வேறு) சில ஆடு, மாடு, ஒட்டகங்களை(க் குறிப்பிட்டு அவற்றை அறுக்கும்பொழுது) அவற்றின் மீது அல்லாஹ்வின் திருப்பெயரைக் கூறக்கூடாது என்றும் (அல்லாஹ் கட்டளையிட்டிருப்பதாக) அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்(து கூறு)கின்றனர். அவர்களுடைய இப்பொய்க் கூற்றுக்குத்தக்க கூலியை (தண்டனையை, இறைவன்) பின்னர் அவர்களுக்குக் கொடுப்பான்

[139] மேலும், அவர்கள் (வேறு சிலவற்றைக் குறிப்பிட்டு) ‘‘இந்த ஆடு, மாடு, ஒட்டகங்களின் வயிற்றிலிருப்பவை எங்கள் ஆண்களுக்கு (மட்டும்) சொந்தமானவை. எங்கள் பெண்களுக்கு அவை தடுக்கப்பட்டு இருக்கின்றன. அவை செத்துப் பிறந்தால் அவற்றில் அவர்களுக்கும் பங்குண்டு'' (அப்போது பெண்களும் புசிக்கலாம்) என்றும் கூறுகின்றனர். ஆகவே, அவர்களுடைய இக்கூற்றிற்குரிய தண்டனையை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுத்தே தீருவான். நிச்சயமாக அவன் மிக்க ஞானமுடையவன், (அனைவரையும்) நன்கறிந்தவன்

[140] எவர்கள் அறிவின்றி மூடத்தனத்தால் தங்கள் குழந்தைகளைக் கொலை செய்தார்களோ அவர்களும், எவர்கள் அல்லாஹ் (புசிக்கக்) கொடுத்திருந்த (நல்ல)வற்றை (ஆகாதென) அல்லாஹ்வின் மீது பொய் கூறித் தடுத்துக் கொண்டார்களோ அவர்களும் நிச்சயமாக நஷ்டமடைந்து விட்டார்கள். ஆகவே, அவர்கள் நேர்வழி பெற்றவர்களாக இருக்கவில்லை; நிச்சயமாக தீய வழியிலேயே சென்று விட்டனர்

[141] (பந்தலில்) படர்ந்த கொடிகளும், படராத செடிகளும், பேரீத்த மரங்கள் உள்ள சோலைகளையும், புசிக்கக்கூடிய விதவிதமான (பயிர்களையும்) தானியங்களையும், (பார்வைக்கு) ஒன்றுபோலும் வெவ்வேறாகவும் தோன்றக்கூடிய ஒலிவம், மாதுளை (மற்றும் பலவகை கனிவர்க்கங்கள்) ஆகியவற்றையும் அவனே படைத்திருக்கிறான். ஆகவே, அவை காய்த்துப் பழுத்தால் அவற்றை (தாராளமாகப்) புசியுங்கள். அவற்றை அறுவடை செய்யும்போது (இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்காக) அதில் அவனுடைய பாகத்தையும் (ஜகாத்தை) கொடுத்து விடுங்கள். அளவு கடந்து (வீண்) செலவு செய்யாதீர்கள். ஏனென்றால், அளவு கடந்து (வீண்) செலவு செய்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை

[142] (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற பெரிய) கால்நடைகளில், சுமை சுமக்கக்கூடிய வற்றையும், (சுமை சுமக்க முடியாத) சிறிய கால்நடைகளையும் (அவனே படைத்திருக்கிறான். ஆகவே,) அல்லாஹ் உங்களுக்கு அளித்திருக்கும் இவற்றில் (புசிக்கக் கூடியவற்றை) நீங்கள் புசியுங்கள். (இதில்) ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாவான்

[143] (நபியே! அந்த மூடர்களை நோக்கி நீர் கேட்பீராக: ‘‘புசிக்கக்கூடிய ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றில்) எட்டு வகைகள் இருக்கின்றன. (அவையாவன:) செம்மறி ஆட்டில் (ஆண், பெண்) இருவகை; வெள்ளாட்டில் (ஆண், பெண்) இரு வகை (உண்டு). இவ்விரு வகை ஆண்களையா அல்லது பெண்களையா அல்லது இவ்விரு வகைகளிலுள்ள பெண்களின் கர்ப்பங்களில் உள்ளவற்றையா (இறைவன்) தடை செய்திருக்கிறான்? நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் ஆதாரத்துடன் இதை நீங்கள் எனக்கு அறிவியுங்கள்

[144] ஒட்டகையிலும் (ஆண், பெண்) இருவகை, பசுவிலும் இருவகை (உண்டு. இவ்விருவகைகளிலுள்ள) ஆண்களையா? (அல்லது இவ்விரு வகைகளிலுள்ள) பெண்களையா? அல்லது இவ்விரு வகைகளிலுள்ள பெண்களின் கர்ப்பங்களில் உள்ளவற்றையா (இறைவன்) தடை செய்திருக்கிறான்? இவ்வாறு (தடுத்து) அல்லாஹ் உங்களுக்குக் (கட்டளையிட்டதாகக் கூறுகிறீர்களே, அவ்வாறு அவன்) கட்டளையிட்டபோது நீங்களும் முன்னால் இருந்தீர்களா?'' என்றும் நபியே! நீர் அவர்களைக் கேட்பீராக. கற்பனையாக அல்லாஹ்வின் மீது பொய் கூறி, ஆதாரமின்றியே (அறிவில்லாத) மக்களை வழி கெடுப்பவனைவிட அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்கார மக்களை நேரான வழியில் செலுத்துவதில்லை

[145] (நபியே!) கூறுவீராக: ‘‘மனிதன் புசிக்கக்கூடியவற்றில் எதுவும் தடுக்கப்பட்டு விட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்ட வஹ்யில் நான் காணவில்லை. ஆயினும், செத்தவை, வடியக்கூடிய இரத்தம், பன்றியின் மாமிசம் ஆகியவை நிச்சயமாக அசுத்தமாக இருப்பதனால் இவையும், அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் கூறுவது பாவமாய் இருப்பதனால் அவ்வாறு கூறப்பட்டவையும் (தடை செய்யப்பட்டுள்ளன.)'' தவிர வரம்பு மீறி பாவம் செய்யும் நோக்கமின்றி எவரேனும் நிர்ப்பந்திக்கப்பட்டு (இவற்றை புசித்து) விட்டால், (அது அவர்கள் மீது குற்றமாகாது.) நிச்சயமாக உமது இறைவன் மிக்க மன்னிப்பவன், மிகக் கருணையுடையவன். (ஆகவே, மன்னித்து விடுவான்)

[146] (நபியே!) நகத்தையுடைய பிராணிகள் (பிளவில்லாத குளம்புகளை உடைய ஒட்டகை, தீப்பறவை, வாத்து போன்ற) அனைத்தையும் (புசிக்கக் கூடாது என்று) யூதர்களுக்கு நாம் தடுத்திருந்தோம். மேலும், ஆடு, மாடு ஆகியவற்றிலும், அவற்றின் முதுகிலோ அல்லது வயிற்றிலோ அல்லது எலும்புடன் கலந்தோ உள்ளவற்றைத் தவிர (மற்ற பாகங்களில் உள்ள) கொழுப்புக்களையும் நாம் அவர்களுக்கு விலக்கியே இருந்தோம். அவர்கள் (நமக்கு) மாறு செய்ததற்குத் தண்டனையாக இவ்வாறு (தடுத்துத்) தண்டித்து இருந்தோம். நிச்சயமாக நாம்தான் உண்மை கூறுகிறோம். (இதற்கு மாறாகக் கூறும் யூதர்கள் பொய்யர்களே)

[147] (நபியே! இதற்குப்) பின்னரும் அவர்கள் உம்மைப் பொய்யரெனக் கூறினால் (அவர்களை நோக்கி), ‘‘உங்கள் இறைவன் மிக விசாலமான அன்புடையவன்தான். எனினும் அவனது தண்டனை, குற்றவாளிகளை விட்டும் ஒருக்காலும் அகற்றப்பட மாட்டாது'' என்று கூறிவிடுவீராக

[148] ‘‘அல்லாஹ் நாடியிருந்தால் நாங்களும் எங்கள் மூதாதைகளும், (அல்லாஹ்வுக்கு எதையும்) இணை வைத்திருக்க மாட்டோம்; (புசிக்கக் கூடிய) எதையும் (ஆகாதென) நாங்கள் தடை செய்திருக்க மாட்டோம்'' என்று இணைவைத்து வணங்கும் இவர்கள் கூறக்கூடும். (நபியே! இவர்கள் பரிகசிக்கும்) இவ்வாறே இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் நம் வேதனையைச் சுவைக்கும் வரை (நபிமார்களைப்) பொய்யாக்கியே வந்தனர். ஆகவே, (நீர் அவர்களை நோக்கி ‘‘இதற்கு) உங்களிடம் ஏதும் ஆதாரமுண்டா? (இருந்தால்) அதை நம்மிடம் கொண்டு வாருங்கள். நீங்கள் சுயமாகவே கற்பனை செய்துகொண்ட (உங்கள்) வீண் எண்ணத்தில் மூழ்கிக் கிடப்பவர்களே தவிர, வேறில்லை'' என்று கூறுவீராக

[149] (நபியே!) கூறுவீராக: ‘‘(மறுக்க முடியாத) முழுமையான ஆதாரம் அல்லாஹ்வுடையதே! (அவர்களுடைய ஆதாரம் முற்றிலும் தவறானது.) அவன் நாடியிருந்தால் உங்கள் அனைவரையும் நேரான வழியில் செலுத்தியிருப்பான்

[150] (மேலும், அவர்களை நோக்கி) நிச்சயமாக அல்லாஹ் இதைத் தடை செய்தான் என்று நீங்கள் உறுதிப்படுத்துவதற்காக உங்கள் சாட்சிகளை அழைத்து வாருங்கள்'' என்று நீர் கூறுவீராக. (அவ்வாறு அவர்களை அழைத்து வந்து) அவர்களும் (அவ்வாறே பொய்) சாட்சி கூறியபோதிலும் (அதற்காக) நீரும் அவர்களுடன் சேர்ந்து (அவ்வாறு) சாட்சி கூறவேண்டாம். மேலும், நம் வசனங்கள் பொய்யெனக் கூறியவர்கள் மற்றும் இறுதி நாளை நம்பிக்கை கொள்ளாதவர்களுடைய மன விருப்பங்களை நீர் பின்பற்றாதீர். அவர்கள்தான் தங்கள் இறைவனுக்கு (பலவற்றை) இணையாக்குகின்றனர்

[151] (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை செய்தவற்றை(யும் ஏவியிருப்பவற்றையும்) நான் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கிறேன். (அவையாவன:) அவனுக்கு எதையும் நீங்கள் இணையாக்காதீர்கள். (உங்கள்) தாய் தந்தையுடன் மிக அழகிய முறையில் நடந்து கொள்ளுங்கள் (அவர்களுக்கு உதவி செய்யுங்கள்). வறுமைக்குப் பயந்து உங்கள் பிள்ளைகளை நீங்கள் கொலை செய்யாதீர்கள். (ஏனென்றால்,) உங்களுக்கும் அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். இரகசியமாகவோ, பகிரங்கமாகவோ உள்ள மானக்கேடான விஷயங்களில் எதற்கும் நெருங்காதீர்கள். (கொலை செய்யக்கூடாதென்று) அல்லாஹ் தடை செய்துள்ள எந்த மனிதனையும் நியாயமின்றி கொலை செய்யாதீர்கள். நீங்கள் (தவறு செய்யாது) உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு இவற்றை (விவரித்து) உபதேசிக்கிறான்

[152] ‘‘அநாதைகளின் பொருளை அவர்கள் பருவமடையும் வரை நியாயமான முறையில் தவிர நெருங்காதீர்கள். அளவை (சரியான அளவு கொண்டு) முழுமையாக அளங்கள். எடையை நீதமாக நிறுங்கள். ஓர் ஆத்மாவை அதன் சக்திக்கு மேல் நாம் நிர்ப்பந்திப்பதேயில்லை. நீங்கள் எதைக் கூறியபோதிலும் (அதனால் பாதிக்கப்படுபவர்கள்) உங்கள் உறவினர்கள் ஆயினும் (சரியே!) நீதத்தையே கூறுங்கள். நீங்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுங்கள். நீங்கள் நல்லுணர்ச்சி பெறுவதற்காகவே இவற்றை (உங்கள் இறைவன்) உங்களுக்கு உபதேசிக்கிறான்

[153] ‘‘நிச்சயமாக இதுதான் என் நேரான வழியாகும். அதையே நீங்கள் பின்பற்றுங்கள்; மற்ற வழிகளைப் பின்பற்றாதீர்கள். அவை அல்லாஹ்வுடைய வழியிலிருந்து உங்களைப் பிரித்துவிடும். நீங்கள் இறையச்சமுடையவர்களாக ஆவதற்காக (உங்கள் இறைவன்) இவற்றை உங்களுக்கு உபதேசிக்கிறான்'' (என்று கூறுங்கள்)

[154] (தங்களின் செயல்களையும் பண்புகளையும்) அழகுபடுத்திக் கொண்டவர் மீது (நம் அருட்கொடையை) முழுமைப்படுத்தி வைப்பதற்காக இதற்கு பிறகும் நாம் மூஸாவுக்கு ஒரு வேதத்தைக் கொடுத்தோம். அதில் ஒவ்வொரு விஷயமும் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. (அது) நேரான வழியாகவும் (இறைவனின்) அருளாகவும் இருக்கிறது. அவர்கள் தங்கள் இறைவனை சந்திப்போமென்று உறுதி கொள்ளும் பொருட்டே (அதைக் கொடுத்தோம்)

[155] (மனிதர்களே!) இதுவும் வேத நூலாகும். இதை நாமே இறக்கிவைத்தோம். (இது) மிக்க பாக்கியமுடையது. ஆகவே, இதையே நீங்கள் பின்பற்றுங்கள். (அவனுக்குப்) பயந்து (பாவத்திலிருந்து விலகிக்) கொள்ளுங்கள். அதனால் அவனது அருளுக்குள்ளாவீர்கள்

[156] (இணைவைத்து வணங்கும் அரபிகளே!) ‘‘நமக்கு முன்னர் (யூதர்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய) இரு கூட்டத்தினர் மீது (மட்டுமே) வேதம் அருளப்பட்டது. ஆகவே, (அவர்களுடைய மொழி எங்களுக்குத் தெரியாததால்) நாங்கள் அவர்களிடம் அதைப் படிக்கவும், படித்துக் கேட்கவும் முடியாமல் பராமுகமாகி விட்டோம்'' என்று நீங்கள் கூறாதிருப்பதற்காகவும்

[157] அல்லது ‘‘நிச்சயமாக நமக்காக ஒரு வேதம் அருளப்பட்டிருந்தால் நிச்சயமாக நாங்கள் அவர்களைவிட மிக்க நேர்மையாக நடந்திருப்போம்'' என்று நீங்கள் கூறாதிருப்பதற்காகவும் (இந்த வேதத்தை அருளினோம். ஆகவே,) உங்கள் இறைவனிடம் இருந்து, மிகத் தெளிவான (வசனங்களையுடைய) வேதம் உங்களிடம் வந்துவிட்டது. (அது) நேரான வழியாகவும் (இறைவனுடைய) அருளாகவும் இருக்கிறது. ஆகவே, எவன் அல்லாஹ்வுடைய (இத்தகைய) வசனங்களைப் பொய்யாக்கி அவற்றிலிருந்து விலகிக் கொள்கிறானோ அவனைவிட அநியாயக்காரன் யார்? நம் வசனங்களிலிருந்து (இவ்வாறு) விலகிக் கொண்டவர்களுக்கு அவர்கள் விலகிக் கொண்டதன் காரணமாக நாம் கொடிய வேதனையைக் கூலியாகக் கொடுப்போம்

[158] வானவர்கள் அவர்களிடம் (நேரில்) வருவதையோ அல்லது உங்கள் இறைவனே (அவர்களிடம்) வருவதையோ அல்லது உங்கள் இறைவனின் பெரியதோர் அத்தாட்சி வருவதையோ தவிர, (வேறெதனையும்) அவர்கள் எதிர் பார்க்கின்றனரா? உங்கள் இறைவனின் பெரியதோர் அத்தாட்சி(யாகிய இறுதி நாள்) வருவதற்கு முன்னர் நம்பிக்கை கொள்ளாதிருந்து அல்லது நம்பிக்கை கொண்டிருந்தும் ஒரு நற்செயலும் செய்யாதிருந்துவிட்டு அந்நாளில் அவர்கள் கொள்ளும் நம்பிக்கை ஒரு பலனையும் அளிக்காது. ஆகவே, (அவர்களை நோக்கி ‘‘அப்பெரிய அத்தாட்சிகளை) நீங்களும் எதிர்பார்த்திருங்கள்; நிச்சயமாக நாமும் எதிர்பார்த்திருக்கிறோம்'' என்று (நபியே!) கூறுவீராக

[159] எவர்கள் தங்கள் மார்க்கத்தை (தங்கள் இஷ்டப்படி பலவாறாக)ப் பிரித்து (அவர்களும்) பல பிரிவினராகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் உங்களுக்கு ஒரு சம்பந்தமும் இல்லை. அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே இருக்கிறது. அவர்கள் செய்து கொண்டிருந்த (இத்தீய)வற்றைப் பற்றி பின்னர் அவன் அவர்களுக்கு அறிவித்துவிடுவான்

[160] எவரேனும் ஒரு நன்மையைச் செய்தால் அவருக்கு அதைப்போல் பத்து பங்கு (நன்மை) உண்டு. எவரேனும் ஒரு தீமையைச் செய்தால் அதைப் போன்றதே அன்றி (அதிகமாக) அவருக்குக் கூலி கொடுக்கப்பட மாட்டாது. (குற்றத்திற்கு அதிகமான தண்டனையைக் கொடுத்தோ அல்லது நன்மைக்குரிய கூலியைக் குறைத்தோ) அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்

[161] ‘‘நிச்சயமாக என் இறைவன் எனக்கு நேரான பாதையை அறிவித்து விட்டான். (அது) மிக்க உறுதியான மார்க்கமாகும், இப்ராஹீமுடைய நேரான மார்க்கமாகும். அவர் இணைவைத்து வணங்குபவர்களில் (ஒருவராக) இருக்கவில்லை'' என்று (நபியே!) கூறுவீராக

[162] நீங்கள் கூறுங்கள்: ‘‘நிச்சயமாக என் தொழுகையும், என் (மற்ற) வணக்கங்களும், என் வாழ்வும், என் மரணமும் உலகத்தாரை படைத்து வளர்த்து பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ்வுக்கே உரித்தானவை

[163] அவனுக்கு ஒரு இணையுமில்லை; (துணையுமில்லை.) இவ்வாறே, நான் ஏவப்பட்டுள்ளேன். ஆகவே, அவனுக்கு பணிந்து வழிப்பட்டவர்களில் நான் முதன்மையானவன்'' (என்றும் கூறுவீராக)

[164] ‘‘அல்லாஹ்வே அனைவரையும் படைத்து பரிபாலிக்க அவனையன்றி மற்றெவரையும் எனக்கு இறைவனாக நான்எடுத்துக் கொள்வேனா? பாவம் செய்யும் ஒவ்வொரு ஆத்மாவும் தனக்கே கேட்டைத் தேடிக் கொள்கிறது. ஆகவே, ஓர் ஆத்மாவின் (பாவச்) சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது. (இறந்த) பின்னர் நீங்கள் அனைவரும் உங்கள் இறைவனிடமே செல்வீர்கள். நீங்கள் கருத்து வேற்றுமை கொண்டிருந்ததைப் பற்றி (அவற்றில் எது தவறு, எது சரி என்பதை அது சமயம்) அவன் உங்களுக்கு அறிவிப்பான்

[165] அவன்தான் உங்களை பூமியில் முன் சென்றவர்களின் இடத்தில் வைத்தான். உங்களில் சிலரை மற்றவர்களைவிட அந்தஸ்தில் உயர்த்தியும் இருக்கிறான். (இதன் மூலம்) உங்களுக்குக் கொடுத்தவற்றில் (நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்று) உங்களைச் சோதிக்கிறான். நிச்சயமாக உமது இறைவன் தண்டிப்பதில் மிகத் தீவிரமானவன். ஆயினும், நிச்சயமாக அவன் மிக்க பிழை பொறுப்பவன், பெரும் கருணையுடையவன் ஆவான்

அல்அஃராஃப்

Surah 7

[1] அலிஃப் லாம் மீம் ஸாத்

[2] (நபியே!) இவ்வேதம் உம் மீது இறக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றி உமது உள்ளத்தில் ஒரு தயக்கமும் வேண்டாம். இதைக் கொண்டு நீர் (மனிதர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக. நம்பிக்கை கொண்டவர்களுக்கு (இது) ஒரு நல்லுபதேசமாகும்

[3] (மனிதர்களே!) உங்களுக்காக உங்கள் இறைவனிடமிருந்து இறக்கப்பட்டதையே பின்பற்றுங்கள். அவனையன்றி (மற்றெவரையும் உங்களுக்குப்) பொறுப்பாளர்(களாக ஆக்கி, அவர்)களை நீங்கள் பின்பற்றாதீர்கள். (எனினும், இதைக் கொண்டு) நல்லுணர்ச்சி பெறுபவர்கள் உங்களில் மிகக் குறைவுதான்

[4] (பாவிகள் வசித்திருந்த) எத்தனையோ நகரங்களை நாம் அழித்திருக்கிறோம். அவற்றில் இருந்தவர்கள் இரவிலோ, பகலிலோ நித்திரையில் இருக்கும் பொழுது நம் வேதனை அவர்களை வந்தடைந்தது

[5] அவர்களிடம் நம் வேதனை வந்த சமயத்தில் ‘‘நிச்சயமாக எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டவர்களாகி விட்டோம்'' என்று கூறியதைத் தவிர வேறொன்றும் அவர்களால் கூறமுடியவில்லை

[6] ஆகவே, (இதைப் பற்றி நம்) தூதர்களையும், அவர்களை எவர்களிடம் அனுப்பி வைத்தோமோ அவர்களையும் நிச்சயமாக நாம் விசாரணை செய்வோம்

[7] (அப்போது அவர்களின் செயல்களை) நாம் நிச்சயமாக அவர்களுக்கு உறுதியுடன் விவரிப்போம். நாம் மறைவானவர்களாக இருக்கவில்லை

[8] (ஒவ்வொருவரின் நன்மை தீமைகளையும்) அன்றைய தினம் எடை போடுவது சத்தியம். ஆகவே, எவர்களுடைய (நன்மையின்) எடை கனத்ததோ அவர்கள்தான் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள்

[9] எவர்களுடைய (நன்மையின்) எடை (கனம் குறைந்து) இலேசாக இருக்கிறதோ அவர்கள் நம் வசனங்களுக்கு மாறுசெய்து தங்களுக்குத் தாமே நஷ்டத்தை உண்டுபண்ணிக் கொண்டவர்கள் ஆவர்

[10] (மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களுக்குப் பூமியில் எல்லா வசதிகளையும் அளித்து, அதில் (நீங்கள்) வாழ்வதற்குத் தேவையான காரணங்களை உங்களுக்கு ஏற்படுத்தினோம். (இவ்வாறிருந்தும்) நீங்கள் நன்றி செலுத்துவதோ மிகக் குறைவு

[11] நிச்சயமாக நாம் உங்களை படைக்க(க் கருதி) உங்களை (அதாவது உங்கள் முதல் தந்தையாகிய ஆதமை) உருவமைத்தோம். பின்னர் நாம் வானவர்களை நோக்கி ‘‘ஆதமுக்கு (சிரம்) பணியுங்கள்'' எனக் கட்டளையிட்டோம். இப்லீஸைத் தவிர (மற்ற வானவர்கள் அனைவரும் அவருக்குப்) பணிந்தார்கள். அவன் பணியவில்லை

[12] (ஆகவே, இறைவன் இப்லீஸை நோக்கி) ‘‘நான் உனக்குக் கட்டளையிட்ட சமயத்தில், நீ (சிரம்) பணியாதிருக்கும்படி உன்னைத் தடை செய்தது எது?'' என்று கேட்க, (அதற்கு இப்லீஸ்) ‘‘நான் அவரைவிட மேலானவன். (ஏனென்றால்,) நீ என்னை நெருப்பால் படைத்தாய். அவரை களிமண்ணால் படைத்திருக்கிறாய். (களிமண்ணைவிட நெருப்பு உயர்ந்தது)'' என்று (இறுமாப்புடன்) கூறினான்

[13] (அதற்கு இறைவன்) ‘‘இதிலிருந்து நீ இறங்கிவிடு! நீ பெருமை கொள்வதற்கு இங்கு இடமில்லை. (உன் பெருமையின் காரணமாக) நிச்சயமாக நீ சிறுமைப்பட்டவனாகி விட்டாய். (ஆதலால், இதிலிருந்து) நீ வெளியேறி விடு'' என்று கூறினான்

[14] (அதற்கு இப்லீஸாகிய) அவன் (‘‘இறந்தவர்களை) எழுப்பும் நாள்வரை எனக்கு அவகாசம் அளி'' என்று கேட்டான்

[15] (அதற்கு இறைவன்) ‘‘நிச்சயமாக நீ (அவ்வாறே) அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறாய்'' என்று கூறினான்

[16] (அதற்கு இப்லீஸ், இறைவனை நோக்கி) ‘‘நீ என்னை பங்கப்படுத்தியதால், (ஆதமுடைய சந்ததிகளாகிய) அவர்கள் உன் நேரான வழியில் செல்லாது (தடைசெய்ய வழி மறித்து அதில்) உட்கார்ந்து கொள்வேன்'' (என்றும்)

[17] ‘‘பிறகு, நிச்சயமாக அவர்களுக்கு முன்னும், பின்னும் அவர்களின் வலது பக்கத்திலும், இடது பக்கத்திலும் அவர்களிடம் வந்து (அவர்களை வழி கெடுத்துக்) கொண்டே இருப்பேன். ஆகவே, அவர்களில் பெரும்பாலானவர்களை (உனக்கு) நன்றி செலுத்துபவர்களாக நீ காணமாட்டாய்'' என்றும் கூறினான்

[18] (அதற்கு இறைவன்) ‘‘நீ நிந்திக்கப்பட்டவனாகவும் விரட்டப்பட்டவனாகவும் இதிலிருந்து வெளியேறிவிடு. நிச்சயமாக (உன்னையும்) எவர்கள் உன்னைப் பின்பற்றினார்களோ அவர்களையும் (ஆக) உங்கள் அனைவரையும் கொண்டு நரகத்தை நிரப்புவேன்'' என்று கூறினான்

[19] (பின்னர், இறைவன் ஆதமை நோக்கி) ‘‘ஆதமே! நீர் உமது மனைவியுடன் இச்சோலையில் வசித்திரும். நீங்கள் இருவரும் விரும்பிய இடத்திலெல்லாம் (சென்று விரும்பியவற்றையெல்லாம்) புசியுங்கள். எனினும், இந்த மரத்தின் சமீபத்தில்கூட நீங்கள் செல்லாதீர்கள். (அவ்வாறு சென்றால்) அதனால் உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொண்டவர்களாக ஆகிவிடுவீர்கள்'' (என்று கூறினான்)

[20] (எனினும்) அவ்விருவருக்கும் மறைந்திருந்த அவர்களுடைய மானத்தை அவர்களுக்கு வெளிப்படுத்துவதற்காக (இப்லீஸாகிய) ஷைத்தான் (தவறான எண்ணத்தை) அவர்கள் மனதில் ஊசலாடச் செய்து அவர்களை நோக்கி, ‘‘(அதன் கனியைப் புசித்தால்) நீங்கள் இருவரும் வானவர்களாகவோ அல்லது மரணமற்றவர்களாகவோ ஆகிவிடுவீர்கள் என்பதற்காகவே தவிர (வேறெதற்காகவும்) உங்கள் இறைவன் இம்மரத்தை விட்டு உங்களைத் தடுக்கவில்லை'' என்று கூறியதுடன்

[21] ‘‘நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மையையே கருதுகிறேன்'' என்று அவ்விருவரிடமும் சத்தியமும் செய்து

[22] அவர்களை மயக்கி, (அம்மரத்தின் கனியைப் புசிப்பதற்காக) அதன் பக்கம் அவர்களைச் செல்ல வைத்தான். அவ்விருவரும் அம்மரத்(தின் பழத்)தைச் சுவைக்கவே, அவ்விருவரின் மர்ம உறுப்புகளும் அவர்களுக்குத் தெரிந்து, அச்சோலையின் இலையைக் கொண்டு தங்களை மூடிக்கொள்ள அவர்கள் முயற்சித்தனர். அது சமயம் இறைவன் ‘‘அம்மரத்தை விட்டும் நான் உங்களைத் தடுத்திருக்கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்களிருவருக்கும் பகிரங்கமான எதிரி என்றும் நான் உங்களுக்குக் கூறவில்லையா?'' என்று அவ்விருவரையும் அழைத்துக் கூறினான்

[23] (அதற்கு அவர்கள்) ‘‘எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து எங்களுக்கு அருள் புரியாவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்'' என்று (பிரார்த்தித்துக்) கூறினர்

[24] (அதற்கு இறைவன் ‘‘இதிலிருந்து) நீங்கள் வெளியேறி விடுங்கள். உங்களில் ஒருவர் மற்றவருக்கு எதிரியாகி விடுவீர்கள். பூமியில்தான் உங்களுக்குத் தங்குமிடம் உண்டு. (அதில்) ஒரு காலம் வரை சுகம் அனுபவிக்கலாம்'' என்று கூறினான்

[25] ‘‘அதிலேயே நீங்கள் உயிர் வாழ்வீர்கள்; அதிலேயே நீங்கள் இறப்பீர்கள்; (பின்னர் ஒரு நாளில்) அதிலிருந்தே எழுப்பவும் படுவீர்கள்'' என்றும் கூறினான்

[26] ஆதமுடைய மக்களே! உங்கள் மானத்தை மறைக்கக்கூடிய, (உங்களை) அலங்கரிக்கக்கூடிய ஆடைகளை நிச்சயமாக நாம் உங்களுக்கு அருள் புரிந்திருக்கிறோம். எனினும், (பாவங்களை மறைத்து விடக்கூடிய) இறையச்சம் எனும் ஆடைதான் மிக்க மேலானது. இவை அனைத்தும் அல்லாஹ்வுடைய வசனங்களாகும். (இவற்றைக் கொண்டு) அவர்கள் நல்லுணர்ச்சி பெறுவார்களாக

[27] ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் தாய் தந்தையை (அவர்கள் இன்பமுடன் வசித்து வந்த) சொர்க்கத்திலிருந்து வெளியேற்றி (துன்பத்திற்குள்ளாக்கி)யது போல உங்களையும் துன்பத்திற்குள்ளாக்கிவிட வேண்டாம். அவர்களுடைய மானத்தை அவர்களுக்குக் காண்பிப்பதற்காக அவன் அவர்களுடைய ஆடையைக் களைந்து விட்டான். நிச்சயமாக அவனும் அவனுடைய இனத்தாரும் நீங்கள் அவர்களைக் காணமுடியாதவாறு (மறைவாக இருந்துகொண்டு) உங்களை (வழி கெடுக்க சமயம்) பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். நிச்சயமாக நம்பிக்கை கொள்ளாதவர்களுக்குத்தான் அந்த ஷைத்தான்களை நாம் நண்பர்களாக்கி இருக்கிறோம்

[28] (நம்பிக்கை கொள்ளாத) அவர்கள் ஒரு மானக்கேடான காரியத்தைச் செய்(யும் போது, அதைக் கண்ட எவரும் அவர்களைக் கண்டித்)தால், அவர்கள் ‘‘எங்கள் முன்னோர்களும் இவ்வாறு செய்யவே நாங்கள் கண்டோம். மேலும், இவ்வாறு (செய்யும்படியாகவே) அல்லாஹ்வும் எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறான்'' என்று கூறுகின்றனர். (அதற்கு நபியே! அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக அல்லாஹ் மானக்கேடான காரியங்களைச் செய்யும்படி ஏவவே மாட்டான். அல்லாஹ்வின் மீது நீங்கள் அறியாதவற்றை(ப் பொய்யாக)க்கூறலாமா?'' என்று கூறுவீராக

[29] ‘‘என் இறைவன் நீதத்தையே கட்டளையிட்டிருக்கிறான். ஒவ்வொரு தொழுகையின்போதும் (மனதில்) அவனையே நீங்கள் முன்னோக்கித் தொழுங்கள். நீங்கள் அவனுக்கே முற்றிலும் வழிப்பட்டு, கலப்பற்ற மனதோடு அவனிடமே நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். அவன் உங்களை (இல்லாமையில் இருந்து உலகத்தில்) ஆரம்பமாக படைத்ததுபோல் (நீங்கள் இறந்த பின்னர் மறுமை நாளில் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு அவனிடமே) மீள்வீர்கள்'' என்றும் (நபியே நீர்) கூறுவீராக

[30] (உங்களில்) சிலரை அவன் நேரான வழியில் செலுத்தினான். மற்றோர் மீது வழிகேடே விதிக்கப்பட்டது. அதன் காரணம், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையன்றி ஷைத்தான்களையே தங்கள் தோழர்களாக எடுத்துக் கொண்டதுடன் தாங்கள் நிச்சயமாக நேரான வழியில் இருப்பதாகவும் எண்ணிக் கொண்டனர்

[31] ஆதமுடைய மக்களே! தொழும்போதெல்லாம் (ஆடைகளினால்) உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள். (இறைவன் உங்களுக்கு அனுமதித்தவற்றை) நீங்கள் (தாராளமாகப்) புசியுங்கள்; பருகுங்கள். எனினும் (அவற்றில்) அளவு கடந்து (வீண்) செலவு செய்யாதீர்கள். ஏனென்றால், வீண் செலவு செய்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை

[32] (நபியே!) அல்லாஹ் தன் அடியார்களுக்காக அளித்திருக்கும் (ஆடை) அலங்காரத்தையும், நல்ல (மேலான) உணவையும் (ஆகாதவை என்று) தடுப்பவர் யார்?'' எனக் கேட்டு, ‘‘அது இவ்வுலகத்தில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு(ம் ஆகுமானதே! எனினும்) மறுமை நாளில் (அவர்களுக்கு மட்டுமே) சொந்தமானது'' என்று கூறுவீராக. அறியக்கூடிய மக்களுக்கு (நமது) வசனங்களை இவ்வாறு விவரிக்கிறோம்

[33] (நபியே!) கூறுவீராக: ‘‘நிச்சயமாக என் இறைவன் (ஹராம் என்று) தடை செய்திருப்பதெல்லாம்: பகிரங்கமாகவோ, இரகசியமாகவோ செய்யப்படும் மானக்கேடான காரியங்களையும், மற்ற பாவங்களையும், நியாயமின்றி ஒருவர் மீது (ஒருவர்) கொடுமை செய்வதையும், அல்லாஹ் எதற்கு ஆதாரம் இறக்கவில்லையோ அதை அல்லாஹ்வுக்கு இணையாக்குவதையும், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்) கூறுவதையும்தான் (அல்லாஹ் தடுத்திருக்கிறான்)

[34] ஒவ்வொரு வகுப்பாருக்கும் (அவர்கள் வாழவும், அழியவும்) ஒரு காலமுண்டு. அவர்களுடைய தவனைக் காலம் வரும் போது ஒரு வினாடி பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்

[35] ஆதமுடைய மக்களே! (என்) தூதர்கள் உங்களில் இருந்தே நிச்சயமாக உங்களிடம் வந்து என் வசனங்களை மெய்யாகவே உங்களுக்கு ஓதிக் காண்பிக்கும்போது, (அவற்றை செவியுற்ற உங்களில்) எவர்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து, (பாவங்களிலிருந்து) விலகி, நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை; அவர்கள் துயரம் அடையவும் மாட்டார்கள்

[36] (எனினும்) எவர்கள் நம் வசனங்களைப் பொய்யாக்கி, அவற்றைப் புறக்கணித்து கர்வம் கொள்கிறார்களோ அவர்கள் நரகவாசிகளே! அதில் அவர்கள் (என்றென்றும்) தங்கிவிடுவார்கள்

[37] எவன் அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யாக்கி, அல்லாஹ்வின் மீது பொய்யைக் கற்பனை செய்தும் கூறுகிறானோ அவனைவிட அநியாயக்காரன் யார்? (இவ்வுலகில் அவர்கள் உயிர் வாழும் வரை) அவர்களுக்கு விதிக்கப்பட்ட (உணவு, பொருள் ஆகிய)வை அவர்களுக்குக் கிடைத்துக் கொண்டேயிருக்கும். (அவர்களுடைய காலம் முடிந்து) அவர்களுடைய உயிரைக் கைப்பற்ற நம் வானவர்கள் அவர்களிடம் வரும் சமயத்தில் (அவர்களை நோக்கி) நீங்கள் ‘‘கடவுளென அழைத்துக் கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவை எங்கே?'' என்று அவர்கள் கேட்பார்கள். அதற்கு அவர்கள், ‘‘(அவை அனைத்தும்) எங்களை விட்டு (ஓடி) மறைந்துவிட்டன'' என்று கூறி, மெய்யாகவே அவர்கள் (சத்தியத்தை) நிராகரிப்பவர்களாக இருந்தார்கள் என்று தங்களுக்கு எதிராகவே சாட்சியம் கூறுவார்கள்

[38] (அதற்கு இறைவன் அவர்களை நோக்கி) ஜின்களிலும், மனிதர்களிலும் உங்களுக்கு முன்னர் சென்றுவிட்ட (உங்களைப் போன்ற பாவிகளான) கூட்டத்தினருடன் நீங்களும் சேர்ந்து நரகத்திற்குச் சென்று விடுங்கள்'' என்று கூறுவான். அவர்களில் ஒவ்வொரு வகுப்பினரும் (நரகத்திற்குச்) சென்றபொழுது (முன்னர் அங்கு வந்துள்ள) தங்கள் இனத்தாரை கோபித்து சபிப்பார்கள். (இவ்வாறு) இவர்கள் அனைவரும் நரகத்தையடைந்த பின்னர், (அவர்களில்) பின் சென்றவர்கள் (தங்களுக்கு) முன் சென்றவர்களைச் சுட்டிக்காட்டி, ‘‘எங்கள் இறைவனே! இவர்கள்தான் எங்களை வழி கெடுத்தார்கள். ஆகவே, அவர்களுக்கு (எங்களைவிட) இரு மடங்கு நரக வேதனையைக் கொடுப்பாயாக!'' என்று கூறுவார்கள். அதற்கு அவன், ‘‘உங்களில் அனைவருக்குமே இரு மடங்கு வேதனை உண்டு. எனினும் (இதன் காரணத்தை) நீங்கள் அறியமாட்டீர்கள்'' என்று கூறுவான்

[39] அவர்களில் முன் சென்றவர்கள், பின் சென்றவர்களை நோக்கி ‘‘எங்களைவிட உங்களுக்கு ஒரு மேன்மையும் கிடையாது. ஆதலால், நீங்களாகவே தேடிக்கொண்ட (தீய) செயலின் காரணமாக (நீங்களும் இரு மடங்கு) வேதனையைச் சுவையுங்கள்'' என்று கூறுவார்கள்

[40] நிச்சயமாக எவர்கள் நம் வசனங்களைப் பொய்யாக்கி, அதைப் புறக்கணிப்பதைப் பெருமையாகக் கொண்டார்களோ அவர்களுக்கு (இறைவனின் அருளுக்குரிய) வானத்தின் வாயில்கள் திறக்கப்பட மாட்டாது. ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரை அவர்கள் சொர்க்கத்தை அடையவே மாட்டார்கள். குற்றவாளிகளை இவ்வாறே நாம் தண்டிப்போம்

[41] நரகத்தில் அவர்களுக்கு (நெருப்பாலான) விரிப்புகளும் உண்டு. அவர்கள் மேல் போர்த்திக் கொள்வதற்கும் (நெருப்பாலான) போர்வைகள் உண்டு. அநியாயக்காரர்களை இவ்வாறே நாம் தண்டிப்போம்

[42] எவர்கள் நம்பிக்கை கொண்டு (தங்களால் இயன்றவரை) நற்காரியங்களைச் செய்கிறார்களோ அவர்களில் ஒருவரையும் அவரது சக்தியின் அளவுக்கதிகமாக நாம் நிர்ப்பந்திப்பதேயில்லை. இவர்கள் தான் சொர்க்கவாசிகள். அதில் அவர்கள் (என்றென்றும்) தங்கிவிடுவார்கள்

[43] (இவ்வுலகில் ஒருவரைப்பற்றி மற்றவருக்கு இருந்த) குரோதத்தையும் அவர்களுடைய உள்ளங்களிலிருந்து நீக்கி விடுவோம். (ஆகவே, ஒருவருக்கொருவர் மிக நெருங்கிய தோழர்களாகி விடுவார்கள்.) அவர்(களுடைய பாதங்)களுக்கு அருகில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அவர்கள் ‘‘இந்த (சொர்க்கத்தை அடையக்கூடிய) நேரான வழியில் எங்களை செலுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தாகும். இவ்வழியில் அல்லாஹ் எங்களை செலுத்தியிருக்காவிட்டால் நிச்சயமாக நாங்கள் (இதை) அடைந்திருக்கவே மாட்டோம். எங்கள் இறைவனின் தூதர்கள் (சந்தேகமற) சத்திய (மார்க்க)த்தையே (எங்களுக்குக்) கொண்டு வந்(து அறிவித்)தார்கள்'' என்று கூறுவார்கள். (அதற்குப் பிரதியாக) ‘‘பூமியில் நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்களின் காரணமாகவே இந்த சொர்க்கத்திற்கு நீங்கள் வாரிசாக ஆக்கப்பட்டுள்ளீர்கள்'' என்ற சப்தத்தை அவர்கள் கேட்பார்கள்

[44] (அந்நாளில்) சொர்க்கவாசிகள் நரகவாசிகளை நோக்கி, ‘‘எங்கள் இறைவன் எங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிச்சயமாக நாங்கள் பெற்றுக் கொண்டோம்; நீங்களும் உங்கள் இறைவன் உங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை உண்மையாகவே பெற்றுக் கொண்டீர்களா?'' என்று (சப்தமிட்டுக்) கேட்பார்கள். அதற்கவர்கள் ‘‘ஆம்! (பெற்றுக் கொண்டோம்)'' என்று கூறுவார்கள். அது சமயம் அவர்களுக்கு மத்தியில் ஒரு முனாதி (அறிவிப்பாளர்) கூறுவார்: ‘‘நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் (வரம்பு மீறிய) அநியாயக்காரர்கள் மீது உண்டாவதாக

[45] (ஏனென்றால்,) அவர்கள் அல்லாஹ்வின் பாதையைத் தடுத்து அதைக் கோணலாக்க விரும்பினார்கள். அவர்கள் மறுமையையும் நிராகரித்துக் கொண்டிருந்தார்கள்.’

[46] (நரகவாசிகளும் சொர்க்கவாசிகளும் ஆகிய) இவ்விருவருக்குமிடையில் ஒரு மதில் இருக்கும். அந்த மதிலின் சிகரத்தில் சில மனிதர்கள் இருப்பார்கள். (நரகவாசி சொர்க்கவாசியாகிய) ஒவ்வொருவரையும் அவர்களின் (முகக்) குறியைக் கொண்டே இவர்கள் அறிந்து கொள்வார்கள். இவர்கள் சொர்க்கவாசிகளை நோக்கி ‘‘(இறைவனுடைய) சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக!'' என்று சப்தமிட்டுக் கூறுவார்கள். (சிகரத்தில் இருக்கும்) இவர்கள் (இதுவரையிலும்) சொர்க்கத்தில் நுழையவில்லை. எனினும், அவர்கள் (அதில் நுழைவதை) மிக ஆவலுடன் ஆசைப்பட்டுக் கொண்டிருப்பார்கள்

[47] இவர்களின் பார்வை நரகவாசிகளின் பக்கம் திருப்பப்பட்டால் (அவர்கள் படும் வேதனையைக் கண்டு திடுக்கிட்டு) ‘‘எங்கள் இறைவனே! (இந்த) அநியாயக்கார மக்களுடன் (நரகத்தில்) எங்களையும் சேர்த்துவிடாதே!'' என்று (பிரார்த்தித்துக்) கூறுவார்கள்

[48] அந்த சிகரங்களில் உள்ளவர்கள், முக அடையாளத்தைக் கொண்டு (தண்டனைக் குள்ளானவர்கள் என) தாங்கள் அறிந்த சில மனிதர்களை கூவி அழைத்து, ‘‘நீங்கள் (உலகத்தில்) சம்பாதித்துச் சேகரித்து வைத்திருந்தவையும், நீங்கள் எவற்றைக் கொண்டு பெருமையடித்துக் கொண்டிருந்தீர்களோ அவையும் உங்களுக்குப் பலனளிக்கவில்லையே!'' என்று கூறுவார்கள்

[49] (அல்லாஹ் நிராகரித்தவர்களை அழைத்து சிகரவாசிகளைச் சுட்டிக் காண்பித்து,) ‘‘அல்லாஹ் அருள்புரிய மாட்டான் என்று நீங்கள் சத்தியம் செய்து கூறிக் கொண்டிருந்தீர்களே அவர்கள் (இதோ சிகரத்தில் இருக்கும்) இவர்கள் அல்லவா?'' (என்று கூறுவான்). (பிறகு, சிகரவாசிகளை நோக்கி) ‘‘நீங்கள் சொர்க்கம் சென்றுவிடுங்கள். உங்களுக்கு எவ்வித பயமுமில்லை. நீங்கள் கவலைப்படவும் மாட்டீர்கள்'' (என்று அல்லாஹ் கூறுவான்)

[50] நரகவாசிகள் சொர்க்கவாசிகளை நோக்கி ‘‘எங்கள் மீது சிறிது நீரைக் கொட்டுங்கள். அல்லது இறைவன் உங்களுக்கு (புசிக்க) அளித்திருப்பவற்றில் (ஒரு சிறிதேனும்) எங்களுக்குத் தாருங்கள்'' என்று (கெஞ்சிக்) கேட்பார்கள். அதற்கு அவர்கள், ‘‘நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்களுக்கு இவ்விரண்டையும் (விலக்கி) தடைசெய்து விட்டான்'' என்று பதிலளிப்பார்கள்

[51] இவர்களை இவ்வுலக வாழ்க்கை மயக்கிவிட்டதனால் தங்கள் மார்க்கத்தை வேடிக்கை யாகவும் விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் நம் வசனங்களை நிராகரித்து இந்நாளில் (நம்மைச்) சந்திப்பதையும் மறந்தவாறே நாமும் இன்றைய தினம் அவர்களை மறந்துவிடுவோம்

[52] நிச்சயமாக நாம் அவர்களுக்கு ஒரு வேதத்தைக் கொடுத்திருந்தோம். அதில் ஒவ்வொன்றையும் அறிவோடு விவரித்திருக்கிறோம். (அது) நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நேரான வழியாகவும் அருளாகவும் இருக்கிறது

[53] (மக்காவாசிகளாகிய) இவர்கள் (தங்களுக்கு எச்சரிக்கப்பட்டு வந்த) தண்டனை (நாள்) வருவதைத் தவிர (வேறு எதையும்) எதிர்பார்க்கின்றனரா? அந்தத் தண்டனை நாள் வந்தபொழுது இதற்கு முன் அதை (முற்றிலும்) மறந்திருந்த இவர்கள், ‘‘நிச்சயமாக எங்கள் இறைவனின் தூதர்கள் (எங்களிடம்) சத்திய (வேத)த்தைக் கொண்டு வந்தனர். (இன்று) எங்களுக்குப் பரிந்து பேசுபவர்கள் எவரும் உண்டா? அவ்வாறாயின் அவர்கள் எங்களுக்குப் பரிந்து பேசவும் அல்லது எங்களை (உலகத்திற்கு)த் திரும்ப அனுப்பப்பட்டால் (முன்னர்) நாங்கள் செய்து கொண்டிருந்தவற்றைத் தவிர்த்து வேறு (நன்மைகளையே) செய்வோம்'' என்று கூறுவார்கள். நிச்சயமாக இவர்கள் தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர். மேலும், இவர்கள் (தங்கள் தெய்வங்களென) பொய்யாகக் கூறிக் கொண்டிருந்தவை அனைத்தும் இவர்களை விட்டு மறைந்து (மாயமாகி) விடும்

[54] நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்து, அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான். அவனே இரவால் பகலை மூடுகிறான்; (பகலால் இரவை மூடுகிறான்.) அது வெகு தீவிரமாகவே அதைப் பின் தொடர்கிறது. (அவனே) சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் (படைத்தான். இவை அனைத்தும்) அவனது கட்டளைக்கு கட்டுப்பட்டவையாக படைத்தான். (படைத்தலும்) படைப்பினங்களும் (அவற்றின்) ஆட்சியும் அவனுக்கு உரியதல்லவா? அனைத்து உலகங்களையும் படைத்து, வளர்த்து, பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ் மிக்க பாக்கியமுடையவன்

[55] (ஆகவே, நம்பிக்கையாளர்களே!) நீங்கள் மிக்க தாழ்மையாகவும் அந்தரங்கமாகவும் (அத்தகைய) உங்கள் இறைவனிடமே (உங்களுக்கு வேண்டியவற்றைக் கோரி) பிரார்த்தியுங்கள். நிச்சயமாக அவன் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை

[56] (மனிதர்களே! சமாதானமும் அமைதியும் ஏற்பட்டு) நாடு சீர்திருந்திய பின்னர் அதில் விஷமம் செய்யாதீர்கள். (இறைவனுடைய தண்டனைக்கு) பயந்தும், (அவனுடைய சன்மானத்தை) விரும்பியும், அவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வுடைய அருள், நன்மை செய்யும் அழகிய குணமுடையவர்களுக்கு மிக சமீபத்திலிருக்கிறது

[57] அவன்தான் அவனுடைய அருள்மழைக்கு (முன்னர்) நற்செய்தியாக குளிர்ந்த காற்றை அனுப்பிவைக்கிறான். அது (கருக்கொண்டு) கனத்த மேகங்களைச் சுமந்த பின்னர், அதை (வரண்டு) இறந்து விட்ட பூமியின் பக்கம் நாம் ஓட்டிச் சென்று அதிலிருந்து மழை பெய்யச் செய்கிறோம். பின்னர், அதைக் கொண்டு எல்லா வகைக் கனிகளையும் வெளியாக்குகிறோம். இவ்வாறே, மரணித்தவர்களையும் (அவர்களின் சமாதிகளிலிருந்து) வெளியாக்குவோம். (இதை அறிந்து) நீங்கள் நல்லுணர்ச்சி பெறுவீர்களாக

[58] (ஒரேவிதமான மழை பெய்தபோதிலும்) வளமான பூமி, தன் இறைவனின் கட்டளையைக் கொண்டே எல்லா புற்பூண்டுகளையும் வெளியாக்குகிறது. எனினும், கெட்ட (வளமற்ற) பூமியிலோ வெகு சொற்பமாகவே தவிர முளைப்பதில்லை. நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறு பல வகைகளிலும் (நம்) வசனங்களை விவரிக்கிறோம்

[59] நிச்சயமாக நாம் நூஹை அவருடைய மக்களுக்கு (நம்) தூதராக அனுப்பி வைத்தோம். அவர் (அவர்களை நோக்கி) ‘‘என் மக்களே! நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனைத் தவிர வேறு இறைவன் உங்களுக்கில்லை. (இதற்கு நீங்கள் மாறு செய்தால்) உங்களுக்கு (வரக்கூடிய) மகத்தானதொரு நாளின் வேதனையை நான் பயப்படுகிறேன்'' என்று கூறினார்

[60] அதற்கு அவருடைய மக்களின் தலைவர்கள் (அவரை நோக்கி) ‘‘நீங்கள் பகிரங்கமான வழிகேட்டில் இருப்பதை மெய்யாகவே நாங்கள் காண்கிறோம்'' என்று கூறினார்கள்

[61] அதற்கவர் (அவர்களை நோக்கி), ‘‘என் மக்களே! நான் எத்தகைய வழிகேட்டிலும் இல்லை; மாறாக, நிச்சயமாக நான் உலகத்தார் அனைவரையும் படைத்து பரிபாலிக்கின்ற இறைவனுடைய ஒரு தூதன்'' என்று கூறினார்

[62] ‘‘நான் என் இறைவனின் தூதுகளையே உங்களுக்கு எடுத்துரைத்து உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறேன். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்விடமிருந்து நான் அறிகிறேன்

[63] உங்களிலுள்ள ஒரு மனிதர் மீது உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நல்லுபதேசம் வருவதைப் பற்றி நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவும், நீங்கள் இறையச்சமுடையவர்களாக ஆவதற்காகவும் (அது வந்திருக்கிறது.) அதனால் நீங்கள் (இறைவனின்) அருளை அடையலாம்'' (என்றும் கூறினார்)

[64] பின்னும், அவரை அவர்கள் பொய்யரெனவே கூறிவிட்டனர். ஆதலால், அவரையும், அவரைச் சார்ந்தவர்களையும் கப்பலில் (ஏற்றி) பாதுகாத்துக் கொண்டு, நம் வசனங்கள் பொய்யென்று கூறியவர்களை (வெள்ளப் பிரளயத்தில்) மூழ்கடித்து விட்டோம். நிச்சயமாக அவர்கள் (சத்தியத்தைக் காணமுடியாத) குருடர்களாகவே இருந்தனர்

[65] ‘ஆத்' (என்னும்) மக்களுக்கு அவர்களுடைய சகோதரர் ஹூதை (நம் தூதராக அனுப்பினோம்). அவர் (அவர்களை நோக்கி) ‘‘என் மக்களே! நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லை. (ஆகவே,) நீங்கள் (அவனுக்கு) பயப்பட வேண்டாமா?'' என்று கூறினார்

[66] அதற்கு அந்த மக்களிலிருந்த நிராகரித்தவர்களின் தலைவர்கள் (அவரை நோக்கி) ‘‘நிச்சயமாக நாம் உம்மை மடமையில் (ஆழ்ந்து) கிடப்பவராகவே காண்கிறோம். நிச்சயமாக நாம் உம்மை பொய்யர்களில் ஒருவரெனவே கருதுகிறோம்'' என்று கூறினார்கள்

[67] அதற்கு அவர் ‘‘என் மக்களே! மடமை என்னிடம் இல்லை. ஆனால், நிச்சயமாக நான் அகிலத்தார் அனைவரையும் படைத்து பரிபாலிக்கும் இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட ஒரு தூதரே!'' என்று கூறினார்

[68] ‘‘என் இறைவனின் தூதுகளையே நான் உங்களுக்கு எடுத்துரைக்கிறேன். நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய உபதேசியாகவும் இருக்கிறேன்

[69] உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக உங்களில் ஒருவர் மீது உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்காக நல்லுபதேசம் வருவதைப் பற்றியா நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்கள்? நூஹுடைய மக்களுக்குப் பின்னர் அவன் உங்களை (பூமியில்) அதிபதிகளாக்கி வைத்து, தேகத்திலும் (வலுவிலும் மற்றவர்களை விட) உங்களுக்கு அதிகமாகவே கொடுத்ததையும் நீங்கள் நினைத்துப் பாருங்கள். அல்லாஹ்வின் இவ்வருட்கொடைகளை எல்லாம் நீங்கள் நினைத்துப் பாருங்கள். (அதனால்) நீங்கள் வெற்றி பெறலாம்'' (என்றும் கூறினார்)

[70] அதற்கவர்கள் ‘‘எங்கள் மூதாதைகள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை நாங்கள் புறக்கணித்துவிட்டு அல்லாஹ் ஒருவனையே வணங்கும்படிச் செய்யவா நீங்கள் நம்மிடம் வந்தீர்கள்? (நாங்கள் அவ்வாறு செய்ய மாட்டோம்.) மெய்யாகவே நீங்கள் உண்மை சொல்பவராக இருந்தால் நீங்கள் நமக்கு அச்சமூட்டுவதை நம்மிடம் கொண்டு வாருங்கள்'' என்று கூறினார்கள்

[71] அதற்கவர் ‘‘உங்கள் இறைவனின் கோபமும், வேதனையும் உங்களுக்கு (விதிக்கப்பட்டு விட்டன. அது) நிச்சயமாக வந்தே தீரும். நீங்களும் உங்கள் முன்னோர்களும் (கடவுள்களென) வைத்துக் கொண்டவற்றின் (வெறும்) பெயர்களைப் பற்றியா நீங்கள் என்னுடன் தர்க்கிக்கிறீர்கள்? அதற்கு ஓர் ஆதாரத்தையும் அல்லாஹ் (உங்களுக்கு) இறக்கி வைக்க வில்லை. ஆகவே, (உங்களுக்கு வரக்கூடிய வேதனையை) நீங்கள் எதிர்பார்த்திருங்கள்; நானும் உங்களுடன் எதிர்பார்த்திருக்கிறேன்'' என்று கூறினார்

[72] ஆகவே, அவரையும் அவரைச் சார்ந்தவர்களையும் நம் அருளைக் கொண்டு நாம் பாதுகாத்துக் கொண்டு நம் வசனங்களைப் பொய்யாக்கி, நம்பிக்கை கொள்ளாதிருந்தவர்களை வேரறுத்து விட்டோம்

[73] ‘ஸமூத்' (என்னும்) மக்களிடம் அவர்களுடைய சகோதரர் ‘ஸாலிஹை' (நம் தூதராக அனுப்பிவைத்தோம்.) அவர் (அவர்களை நோக்கி) ‘‘என் மக்களே! அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். உங்களுக்கு அவனைத்தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவனில்லை. (இதற்காக) உங்கள் இறைவனிடம் இருந்து தெளிவான ஓர் அத்தாட்சியும் உங்களிடம் வந்திருக்கிறது. இது அல்லாஹ்வுடைய ஒட்டகமாகும். (இது) உங்களுக்கோர் அத்தாட்சியாகவும் இருக்கிறது. ஆகவே, அதை அல்லாஹ்வுடைய பூமியில் (எங்கும் தடையின்றி தாராளமாக) மேய விடுங்கள். அதற்கு எத்தகைய தீங்கும் செய்யாதீர்கள். (அவ்வாறு செய்தால்) துன்புறுத்தும் வேதனை உங்களைப் பிடித்துக்கொள்ளும்'' என்று கூறினார்

[74] ‘ஆத்' (என்னும்) மக்களுக்குப் பின்னர் (அவர்களுடைய) பூமியில் உங்களைக் குடியேறச்செய்து (அதற்கு) உங்களை அதிபதிகளாக்கி வைத்ததை நீங்கள் நினைத்துப் பாருங்கள். நீங்கள் அதன் சமவெளியில் மாளிகைகளையும், மலைகளைக் குடைந்து வீடுகளையும் அமைத்துக் கொள்கிறீர்கள். ஆகவே, அல்லாஹ்வின் இவ்வருட் கொடைகளை எல்லாம் நீங்கள் நினைத்துப் பாருங்கள். மேலும், பூமியில் கடுமையாக விஷமம் செய்து கொண்டு அலையாதீர்கள்'' (என்றும் கூறினார்)

[75] அதற்கு அவருடைய மக்களில் கர்வம் கொண்டிருந்த தலைவர்கள், தங்களைவிட தாழ்ந்தவர்களென எண்ணிக் கொண்டிருந்த நம்பிக்கையாளர்களை நோக்கி, ‘‘நிச்சயமாக இந்த ஸாலிஹ் தம் இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு தூதரென நீங்கள் உறுதியாக நம்புகிறீர்களா?'' என்று கேட்டார்கள். அதற்கவர்கள் ‘‘நிச்சயமாக நாங்கள் அவர் கொண்டுவந்த தூதை நம்பிக்கை கொள்கிறோம்'' என்று கூறினார்கள்

[76] அதற்கு கர்வம்கொண்ட அவர்கள் (அந்த நம்பிக்கையாளர்களை நோக்கி) ‘‘நீங்கள் நம்பியவற்றை நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கிறோம்'' என்று கூறினர்

[77] ஆகவே, தங்கள் இறைவனின் கட்டளையை மீறி, அந்த ஒட்டகத்தை அறுத்து (ஸாலிஹ் நபியை நோக்கி), ‘‘ஸாலிஹே! மெய்யாகவே நீர் இறைவனுடைய தூதர்களில் ஒருவராக இருந்தால் நீர் அச்சமூட்டும் அ(ந்)த (வேத)னை(யை) எங்களிடம் கொண்டு வருவீராக'' என்று கூறினார்கள்

[78] ஆகவே, (முன்னர் அவர்களுக்கு எச்சரிக்கப்பட்டு வந்த) பூகம்பம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. அதனால் அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவான்ற இறந்து அழிந்துவிட்டனர்

[79] (அந்நேரத்தில் ஸாலிஹ் நபி) அவர்களிலிருந்து விலகிக்கொண்டு (அவர்களை நோக்கி,) ‘‘என் மக்களே! நிச்சயமாக நான் உங்களுக்கு என் இறைவனின் தூதையே எடுத்துரைத்து உங்களுக்கு நல்லுபதேசம் செய்தேன். எனினும் நீங்களோ நல்லுபதேசம் செய்பவர்களை நேசிக்கவில்லை'' என்று கூறினார்

[80] லூத்தையும் (நம் தூதராக அவருடைய மக்களுக்கு நாம் அனுப்பிவைத்தோம்.) அவர் தம் மக்களை நோக்கி ‘‘உங்களுக்கு முன்னர் உலகத்தில் எவருமே செய்திராத மானக்கேடானதொரு காரியத்தையா நீங்கள் செய்கிறீர்கள்

[81] நிச்சயமாக நீங்கள் பெண்களை விட்டு (விட்டு) ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ளச் செல்கிறீர்கள். நீங்கள் மிக்க வரம்பு மீறிய மக்களாக இருக்கிறீர்கள்'' என்று கூறினார்

[82] அதற்கு அவருடைய மக்கள் (தங்கள் இனத்தாரை நோக்கி, லூத் நபியைச் சுட்டிக் காண்பித்து) ‘‘இவரையும் இவர் குடும்பத்தையும், உங்கள் ஊரிலிருந்து அப்புறப்படுத்தி விடுங்கள். நிச்சயமாக இவர்கள் மிகப் பரிசுத்தமான மனிதர்களாகிவிடலாமெனப் பார்க்கின்றனர்'' என்றுதான் பதில் கூறினார்கள்

[83] ஆகவே, அவருடைய மனைவியைத் தவிர, அவரையும் (மற்ற) அவருடைய குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொண்டோம். அவருடைய மனைவி (அவரைப்) பின்பற்றாதவர்களுடன் சேர்ந்துவிட்டாள்

[84] அவர்கள் மீது (கல்) மழையை பொழிந்து (அவர்களை அழித்து) விட்டோம். ஆகவே, (இக்)குற்றவாளிகளின் முடிவு எவ்வாறாயிற்று என்பதை (நபியே!) கவனிப்பீராக

[85] ‘மத்யன்' (என்னும்) நகரத்தாரிடம் அவர்களுடைய சகோதரர் ‘ஷுஐபை' (நம் தூதராக அனுப்பிவைத்தோம்.) அவர் (அவர்களை நோக்கி) ‘‘என் மக்களே! அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வணக்கத்திற்குரிய வேறு இறைவனில்லை. உங்கள் இறைவனிடமிருந்து நிச்சயமாக உங்களுக்குத் தெளிவான அத்தாட்சி வந்திருக்கிறது. ஆகவே, அளவை முழுமையாக அளந்து எடையை சரியாக நிறுங்கள். (நீங்கள் கொடுக்க வேண்டிய) மனிதர்களுடைய பொருள்களில் எதையும் குறைத்து விடாதீர்கள். பூமியில் (சமாதானமும் அமைதியும் ஏற்பட்டு) சீர்திருந்திய பின்னர் அதில் குழப்பமும் கலகமும் செய்யாதீர்கள். மெய்யாகவே நீங்கள் (என் வார்த்தையை) நம்புபவர்களாக இருந்தால் இவைதான் உங்களுக்கு நன்மை பயக்கும்'' என்று கூறினார்

[86] ‘‘நீங்கள் ஒவ்வொரு வழியிலும் உட்கார்ந்து கொண்டு அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களைப் பயமுறுத்தி, அல்லாஹ்வுடைய வழியில் அவர்கள் செல்வதைத் தடை செய்து அதில் கோணலை உண்டு பண்ணாதீர்கள். வெகு சொற்ப மக்களாக இருந்த உங்களை அதிக தொகையினராக ஆக்கி வைத்ததையும் எண்ணி (அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி) வாருங்கள். (பூமியில்) விஷமம் செய்துகொண்டு அலைந்தவர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதையும் கவனித்துப் பார்ப்பீர்களாக!'' (என்றும் கூறினார்)

[87] (நம்பிக்கையாளர்களே!) உங்கள் இனத்தில் ஒரு கூட்டத்தினர் மட்டும் நான் அனுப்பப்பட்ட தூதுத்துவத்தை நம்பிக்கை கொண்டு, மற்றொரு கூட்டத்தினர் அதை நம்பிக்கை கொள்ளாதிருந்தால் (அதைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள்.) நமக்கிடையில் அல்லாஹ் தீர்ப்பளிக்கும் வரை நீங்கள் பொறுத்திருங்கள். தீர்ப்பளிப்பவர்களிலெல்லாம் அவன் மிக்க மேலானவன்

[88] (ஷுஐப் நபியை நாம் நம் தூதராக அனுப்பிய பொழுது) அவருடைய மக்களில் கர்வம்கொண்ட தலைவர்கள் (அவரை நோக்கி) ‘‘ஷுஐபே! நீங்களும் உங்களை நம்பிக்கை கொண்டவர்களும் எங்கள் மார்க்கத்திற்கு திரும்பிவிட வேண்டும். இல்லையென்றால், நிச்சயமாக நாங்கள் உங்களை எங்கள் ஊரிலிருந்து துரத்தி விடுவோம்'' என்று கூறினார்கள். அதற்கு அவர் (அவர்களை நோக்கி ‘‘உங்கள் மார்க்கத்தை) நாங்கள் வெறுத்தபோதிலுமா?'' என்று கேட்டார்

[89] ‘‘உங்கள் மார்க்கத்திலிருந்து அல்லாஹ் எங்களை பாதுகாத்துக் கொண்டதன் பின்னர் உங்கள் மார்க்கத்திற்கு நாங்கள் திரும்பினால் நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவர்களாவோம். எங்கள் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நாங்கள் அதில் மீளவே முடியாது. எங்கள் இறைவனின் கல்வி ஞானம் அனைத்தையும் சூழ்ந்திருக்கிறது. அல்லாஹ்வையே நாங்கள் நம்பினோம்'' (என்றும் கூறி, இறைவனை நோக்கி) ‘‘எங்கள் இறைவனே! எங்களுக்கும் எங்கள் மக்களுக்கும் இடையில் நீ நியாயமான தீர்ப்பளிப்பாயாக! நிச்சயமாக நீ தீர்ப்பளிப்பவர்களில் மிக்க மேலானவன்'' (என்றும் பிரார்த்தித்தார்)

[90] (ஷுஐபை) நிராகரித்த மக்களின் தலைவர்கள் (மற்றவர்களை நோக்கி) ‘‘நீங்கள் ஷுஐபைப் பின்பற்றினால் நிச்சயமாக நஷ்டமடைந்தே தீருவீர்கள்'' என்று கூறினார்கள்

[91] ஆகவே, அவர்களை (மிகக் கொடூரமான) பூகம்பம் பிடித்துக் கொண்டது. அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறே இறந்து அழிந்து விட்டனர்

[92] ஷுஐபை பொய்யாக்கியவர்கள் தங்கள் ஊர்களில் (அழிந்து) எக்காலத்திலுமே வசித்திராதவர்களைப்போல் ஆகிவிட்டனர். எவர்கள் ஷுஐபை பொய்யாக்கினார்களோ அவர்கள்தான் முற்றிலும் நஷ்டமடைந்தார்கள்

[93] (அது சமயம்) ஷுஐப் அவர்களிலிருந்து விலகி (அவர்களை நோக்கி) ‘‘என் மக்களே! நிச்சயமாக நான் இறைவனின் தூது செய்திகளைத்தான் உங்களுக்கு எடுத்துரைத்து உங்களுக்கு நல்லுபதேசமும் செய்தேன். ஆகவே, (அதை) நிராகரித்த மக்களுக்காக நான் எவ்வாறு கவலை கொள்வேன்'' என்று கூறினார்

[94] நாம் நபிமார்களை அனுப்பிவைத்த ஒவ்வோர் ஊர் மக்களையும் (அவர்கள் நபிமார்களை நிராகரித்து விட்டால்) அவர்கள் (நம்பக்கம்) பணிந்து வருவதற்காக வறுமையைக் கொண்டும், நோயைக் கொண்டும் நாம் அவர்களைப் பிடிக்காமல் இருக்கவில்லை

[95] பின்னர், நாம் அவர்களுடைய துன்பங்களுக்குப் பதிலாக இன்பங்களை கொடுக்கவே (அதனால்) அவர்களின் தொகை அதிகரித்து (கர்வம் கொண்டு) ‘‘நம் மூதாதைகளுக்குமே இத்தகைய சுக, துக்கம் ஏற்பட்டிருக்கிறது'' என்று (தாங்கள் அனுபவித்த தண்டனையை மறந்து) கூற ஆரம்பித்தனர். ஆதலால், அவர்கள் (ஒரு சிறிதும்) உணர்ந்துகொள்ளாத விதத்தில் நாம் அவர்களை (வேதனையைக் கொண்டு) திடீரென பிடித்துக்கொண்டோம்

[96] அவ்வூர்களில் இருந்தவர்கள் நம்பிக்கை கொண்டு (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடந்திருந்தால், அவர்களுக்காக வானத்திலும், பூமியிலும் உள்ள அருட்கொடைகளின் வாசல்களைத் திறந்து விட்டிருப்போம். எனினும், அவர்களோ (நபிமார்களை நம்பிக்கைகொள்ளாது) பொய்யாக்கினார்கள். ஆகவே, அவர்களுடைய (தீய) செயலின் காரணமாக நாம் (வேதனையைக் கொண்டு) அவர்களைப் பிடித்துக் கொண்டோம்

[97] (நபியே!) இவ்வூரார் (தங்கள் வீடுகளில்) இரவில் நித்திரை செய்து கொண்டிருக்கும் பொழுதே நம் வேதனை அவர்களை வந்தடையாது என்று அவர்கள் அச்சமற்றிருக்கின்றனரா

[98] அல்லது இவ்வூரார் (கவலையற்று) பகலில் விளையாடிக் கொண்டு இருக்கும் போதே நம் வேதனை அவர்களை வந்தடையாது என்று அவர்கள் அச்சமற்று இருக்கின்றனரா

[99] அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அவர்கள் அச்சமற்று விட்டனரா? (முற்றிலும்) நஷ்டமடையக்கூடிய மக்களைத் தவிர எவரும் அல்லாஹ்வின் சூழ்ச்சிக்கு அச்சமற்று இருக்க மாட்டார்கள்

[100] பூமியில் (அழிந்துபோன) முன்னிருந்தவர்களுக்குப் பின்னர் அதற்கு வாரிசான இவர்களையும் நாம் நாடினால் இவர்களுடைய பாவங்களின் காரணமாக (அவ்வாறே அழித்து) தண்டிப்போம் என்ற விஷயம் இவர்களுக்கு நல்லறிவைத் தரவில்லையா? நாம் இவர்களுடைய உள்ளங்களின் மீது முத்திரையிட்டு விட்டோம். ஆகவே, இவர்கள் (நல்லுபதேசங்களைச்) செவியுற மாட்டார்கள்

[101] (நபியே!) இவ்வூர்களின் சரித்திரத்தை நாம் உங்களுக்குக் கூறுகிறோம். (அவற்றில் வசித்திருந்த) அவர்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்கள் நிச்சயமாகத் தெளிவான வசனங்களையே கொண்டு வந்தனர். எனினும், அவர்களோ முன்னர் ஏதாவது ஒன்றை பொய்யாக்கிவிட்டால் (பின்னர் அதை) ஒருக்காலத்திலும் நம்பிக்கை கொள்ளாதவர்களாகவே இருந்தனர். இவ்வாறே, நிராகரிப்பவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகிறான்

[102] அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு வாக்குறுதி(யை நிறைவேற்றும் தன்மை) இருப்பதாகவும் நாம் காணவில்லை. இன்னும், நாம் அவர்களில் பெரும்பாலானவர்களை பாவிகளாகவே கண்டோம்

[103] இதற்குப் பின்னரும் மூஸாவை நம் அத்தாட்சிகளுடன் ஃபிர்அவ்னிடமும் அவனுடைய தலைவர்களிடமும் அனுப்பிவைத்தோம். எனினும், அவர்களோ அந்த அத்தாட்சிகளை அவமதித்து (நிராகரித்து) விட்டனர். (இத்தகைய) விஷமிகளின் முடிவு எவ்வாறாயிற்று என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக

[104] மூஸா (ஃபிர்அவ்னை நோக்கி) ‘‘ஃபிர்அவ்னே! நிச்சயமாக நான் அகிலத்தார் அனைவரின் இறைவனால் (உன்னிடம்) அனுப்பப்பட்ட ஒரு தூதர் ஆவேன்'' என்று கூறினார்

[105] ‘‘நான் அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறு எதையும்) கூறாமலிருப்பது (என்மீது) கடமையாகும். உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சியை நிச்சயமாக நான் உங்களிடம் கொண்டு வந்திருக்கிறேன். ஆதலால், (நீ அடிமைப்படுத்தி வைத்திருக்கும்) இஸ்ராயீலின் சந்ததிகளை என்னுடன் அனுப்பிவை'' (என்றும் கூறினார்)

[106] அதற்கவன் ‘‘நீர் அத்தாட்சி கொண்டு வந்திருப்பதாகக் கூறும் உமது கூற்றில் நீர் உண்மை சொல்பவராக இருந்தால் அதைக் கொண்டு வருவீராக'' என்று கூறினான்

[107] ஆகவே, (மூஸா) தன் (கைத்)தடியை எறிந்தார். உடனே அது பெரியதொரு மலைப் பாம்பாகி விட்டது

[108] மேலும், அவர் தன் கையை (சட்டைப் பையிலிட்டு) வெளியில் எடுத்தார். அது பார்ப்பவர்களுக்கு மிக வெண்மையானதாக(வும், மிக பிரகாசமானதாகவும்) இருந்தது

[109] (இதைக் கண்ட) ஃபிர்அவ்னுடைய மக்களின் தலைவர்கள் (ஃபிர்அவ்னை நோக்கி) ‘‘நிச்சயமாக இவர் சூனியத்தில் மிக்க வல்லவராக இருக்கிறார்'' என்று கூறினார்கள்

[110] (அதற்கு ஃபிர்அவ்ன்) ‘‘இவர் உங்களை உங்கள் பூமியிலிருந்து வெளியேற்றிவிடவே எண்ணுகிறார். ஆகவே, இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?'' (என்று கேட்டான்)

[111] அதற்கவர்கள் ‘‘அவருக்கும் அவருடைய சகோதரருக்கும் தவணை கொடுத்துவிட்டு பல பட்டிணங்களுக்கும் துப்பறிபவர்களை அனுப்பிவை

[112] அவர்கள் சூனியத்தில் வல்லவர்களை உம்மிடம் அழைத்து வருவார்கள்'' என்று கூறினார்கள்

[113] (அவ்வாறு அனுப்பியதில் பல திசைகளிலும் இருந்த) சூனியக்காரர்கள் ஃபிர்அவ்னிடம் வந்து நாங்கள் ‘‘(மூஸாவை) ஜெயித்துவிட்டால் நிச்சயமாக எங்களுக்கு (அதற்குரிய) வெகுமதி உண்டு (அல்லவா?)'' என்று கேட்டனர்

[114] அதற்கவன் ‘‘ஆம்! (உங்களுக்கு வெகுமதி உண்டு.) மேலும், நிச்சயமாக நீங்கள் (நம் அரசவையிலும் எனக்கு) மிக்க நெருங்கியவர்களாக இருப்பீர்கள்'' என்றும் கூறினான்

[115] (பின்னர், அச்சூனியக்காரர்கள் மூஸாவை நோக்கி) ‘‘மூஸாவே! (முதலில் உமது தடியை) நீங்கள் எறிகிறீரா? அல்லது நாம் எறிவதா?'' என்று கேட்டனர்

[116] அதற்கு மூஸா ‘‘நீங்களே (முதலில்) எறியுங்கள்'' என்று கூறினார். அவ்வாறு அவர்கள் எறிந்து மக்களுடைய கண்களைக் கட்டி அவர்கள் திடுக்கிடும்படியான மகத்தான சூனியத்தைச் செய்தனர்

[117] அதுசமயம் நாம் ‘‘மூஸாவே! நீர் உமது தடியை எறிவீராக'' என்று அவருக்கு வஹ்யி அறிவித்தோம். அவ்வாறு அவர் எறியவே (அது பெரியதொரு பாம்பாகி) அவர்கள் (சூனியத்தால்) கற்பனை செய்த யாவையும் விழுங்கிவிட்டது

[118] இவ்வாறு அவர்கள் செய்த அனைத்தும் வீணாகி உண்மை உறுதியாயிற்று

[119] ஆகவே, (கர்வம் கொண்டிருந்த) அவர்கள், அங்கு தோல்வியுற்று சிறுமைப்பட்ட வர்களாக மாறினார்கள்

[120] அச்சூனியக்காரர்கள் சிரம் பணிந்து விழுந்தனர்

[121] ‘‘அகிலத்தார் அனைவரின் இறைவனாகிய அல்லாஹ்வையே நாங்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டு விட்டோம்'' என்று கூறினார்கள்

[122] மூஸா, ஹாரூனுடைய இறைவனை நாங்களும் (நம்பிக்கை கொண்டோம்'' என்று கூறினார்கள்)

[123] அதற்கு ஃபிர்அவ்ன் (அவர்களை நோக்கி) ‘‘உங்களுக்கு நான் அனுமதியளிப்பதற்கு முன்னதாகவே நீங்கள் அவரை நம்பிக்கை கொண்டு விட்டீர்கள். நிச்சயமாக இந்நகரவாசிகளை அதிலிருந்து வெளியேற்றுவதற்காக (மூஸாவுடன் கலந்து) நீங்கள் செய்த சதியாகும் இது. (இச்சதியின் பலனை) அதிசீக்கிரத்தில் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்

[124] நிச்சயமாக நான் உங்களை மாறு கை, மாறு கால் வெட்டி உங்கள் அனைவரையும் சிலுவையில் அறைந்து விடுவேன்'' என்று கூறினான்

[125] அதற்கவர்கள் ‘‘(அவ்வாறாயின்) நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடம்தான் திரும்பிச் செல்வோம். (அதைப்பற்றி எங்களுக்குக் கவலை இல்லை)'' என்று கூறினார்கள்

[126] ‘‘இன்னும், எங்களிடம் வந்த இறைவனின் அத்தாட்சிகளை நாங்கள் நம்பிக்கை கொண்டதைத் தவிர வேறு எதற்காகவும் நீ எங்களை பழிவாங்கவில்லை'' (என்று ஃபிர்அவ்னிடம் கூறிய பிறகு) ‘‘எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையைச் சொரிவாயாக! (உனக்கு) முற்றிலும் வழிப்பட்டவர்களாக (எங்களை ஆக்கி) எங்களை நீ கைப்பற்றிக் கொள்வாயாக!'' (என்று பிரார்த்தித்தார்கள்)

[127] அதற்கு ஃபிர்அவ்னுடைய மக்களிலுள்ள தலைவர்கள் (ஃபிர்அவ்னை நோக்கி) ‘‘மூஸாவும் அவருடைய மக்களும் பூமியில் விஷமம் செய்து உன்னையும், உனது தெய்வங்களையும் புறக்கணித்து விடும்படி நீ அவர்களை விட்டு வைப்பாயா?'' என்று கேட்டார்கள். அதற்கவன் (அல்ல!) அவர்களுடைய ஆண் மக்களை வெட்டிவிட்டு (அவர்களை இழிவுபடுத்துவதற்காக) அவர்களுடைய பெண் மக்களை (மட்டும்) உயிருடன் வாழவிடுவோம். நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஆதிக்கம் வகித்திருக்கிறோம். (ஆகவே, நாம் விரும்பியவாறெல்லாம் செய்யலாம்)'' என்று கூறினான்

[128] (அதற்கு) மூஸா தன் இனத்தாரை நோக்கி ‘‘நீங்கள் அல்லாஹ்விடம் உதவி தேடி (ஃபிர்அவ்னால் உங்களுக்கு ஏற்படும் துன்பங்களை) பொறுமையுடன் சகித்திருங்கள். நிச்சயமாக இந்த பூமி அல்லாஹ்வுக்குரியதே! அதை அவன் தன் அடியார்களில் தான் விரும்பியவர்களுக்குச் சொந்தமாக்கி விடுவான். (அல்லாஹ்வுக்கு) பயப்படுகிறவர்களே முடிவில் வெற்றி பெறுவார்கள்'' என்று கூறினார்

[129] (அதற்கு மூஸாவுடைய மக்கள் அவரை நோக்கி) நீங்கள் நம்மிடம் வருவதற்கு முன்னரும் நாங்கள் துன்புறுத்தப்பட்டோம்; நீங்கள் வந்ததன் பின்னரும் (துன்புறுத்தப்பட்டே வருகிறோம். நீங்கள் வந்ததால் எங்களுக்கு ஒன்றும் பயனேற்படவில்லை) என்று கூறினார்கள். (அதற்கு மூஸா) ‘‘உங்கள் இறைவன் உங்கள் எதிரிகளை அழித்து (அவர்களுடைய) பூமிக்கு உங்களை அதிபதியாக்கி வைக்கக்கூடும். உங்கள் நடத்தை எவ்வாறு இருக்கிறது என்பதை அவன் கவனித்துக் கொண்டு இருக்கிறான்'' என்று கூறினார்

[130] பின்னர், ஃபிர்அவ்னுடைய மக்களைப் பஞ்சத்தைக் கொண்டும் (அவர்களுடைய விவசாய) விளைச்சல்களில் நஷ்டத்தைக் கொண்டும் தண்டித்தோம். (இதனால்) அவர்கள் நல்லுணர்ச்சிப் பெற்றிருக்கலாம்

[131] எனினும் அவர்களோ, அவர்களுக்கு (ஒரு) நன்மை வரும் சமயத்தில் எங்களுக்கு (வரவேண்டியது)தான் வந்தது என்றும், ஒரு தீங்கேற்படும் சமயத்தில் ‘‘(இது எங்களுக்கு வரவேண்டியதல்ல. எனினும் பீடை பிடித்த இந்த) மூஸாவாலும், அவருடைய மக்களாலுமே வந்தது'' என்றும் கூறினார்கள். அவர்களுக்கு ஏற்பட்ட (இத்)துர்ப்பாக்கியம் அல்லாஹ்விடம் இருந்தே வந்தது என்பதை அறிந்து கொள்ளுங்கள். எனினும் அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிந்து கொள்வதில்லை

[132] இன்னும், அவர்கள் (மூஸாவை நோக்கி) ‘‘நீர் எங்களை வசப்படுத்துவதற்காக எவ்வளவோ (அற்புதமான) சூனியத்தை எங்கள் முன் செய்த போதிலும் நாங்கள் உம்மை நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்'' என்று கூறிவிட்டார்கள்

[133] ஆகவே, அவர்கள் மீது (மழையுடன் கூடிய) புயல் காற்று, வெட்டுக்கிளி, பேன், தவளை, இரத்தம் ஆகிய தெளிவான இவ்வத்தாட்சிகளை (ஒன்றன் பின் ஒன்றாக) நாம் அனுப்பிவைத்தோம். (இதன்) பின்னரும் அவர்கள் கர்வம்கொண்டு குற்றம் செய்யும் மக்களாகவே இருந்தார்கள்

[134] அவர்கள் மீது (இவற்றில் ஒரு) வேதனை வரும்போதெல்லாம் அவர்கள் (மூஸாவை நோக்கி) ‘‘மூஸாவே! உம் இறைவன் (உங்கள் பிரார்த்தனையை அங்கீகரிப்பதாக) உமக்கு அளித்திருக்கும் வாக்குறுதியின்படி (இந்த சிரமத்தை நீக்கும்படி) நமக்காக நீர் பிரார்த்தனை செய்யுங்கள். நமது சிரமத்தை நீங்கள் நீக்கினால் நிச்சயமாக நாங்கள் உம்மை நம்பிக்கை கொண்டு இஸ்ராயீலின் சந்ததிகளையும் நிச்சயமாக நாம் உம்முடன் அனுப்பி விடுகிறோம்'' என்று கூறுவார்கள்

[135] நாம் அவர்களுடைய வேதனையை நீக்கியபோதெல்லாம் (அவர்கள் தங்கள் வாக்குறுதிக்கு மாறுசெய்துகொண்டே வந்தார்கள்.) இவ்வாறு அவர்களுக்கு ஏற்பட்ட (இறுதி) தவணையை அவர்கள் அடையும்வரை (தொடர்ந்து) மாறு செய்தே வந்தனர்

[136] ஆகவே, அவர்கள் நம் அத்தாட்சிகளைப் பொருட்படுத்தாது (இவ்வாறு) அவற்றைப் பொய்யாக்கிக் கொண்டிருந்ததன் காரணமாக அவர்களை கடலில் மூழ்கடித்து அவர்களிடம் நாம் பழி வாங்கினோம்

[137] இன்னும், எவர்களை இவர்கள் பலவீனமானவர்களென்று (கேவலமாக) எண்ணிக் கொண்டிருந்தார்களோ அந்த மக்களுக்கே மிக்க பாக்கியமுள்ள (அவர்களுடைய) பூமியின் கிழக்குப் பாகங்களையும், மேற்குப் பாகங்களையும் சொந்தமாக்கிக் கொடுத்தோம். ஆகவே, இஸ்ராயீலின் சந்ததிகள் (ஃபிர்அவ்னால் ஏற்பட்ட கஷ்டங்களை) பொறுமையுடன் சகித்துக் கொண்டிருந்ததன் காரணமாக (அவர்களுக்கு) உங்கள் இறைவன் கொடுத்த வாக்கு மிக நல்ல விதமாகவே நிறைவேறிற்று. ஃபிர்அவ்னும் அவனுடைய மக்களும் கட்டியிருந்த மாட மாளிகைகளையும் (உற்பத்தி செய்திருந்த தோட்டம் துறவுகளையும்) நாம் தரைமட்டமாக்கி விட்டோம்

[138] நாம் இஸ்ராயீலின் சந்ததிகளை கடலைக் கடத்தி (அழைத்து)ச் சென்ற சமயம் சிலைகளை வணங்கிக் கொண்டிருந்த ஒரு சமூகத்தினர் அருகில் அவர்கள் சென்றபொழுது, (அதைக் கண்ணுற்ற அவர்கள் மூஸாவை நோக்கி) ‘‘மூஸாவே! அவர்கள் வைத்திருக்கும் சிலைகளைப் போல் எங்களுக்கும் ஒரு சிலையை (நாங்கள் வணங்குவதற்கு) ஆக்கிவைப்பீராக!'' என்று கூறினார்கள். அதற்கு (மூஸா அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நீங்கள் அறிவில்லாத மக்களாக இருக்கிறீர்கள்'' என்று கூறினார்

[139] (அந்த சிலைவணங்கிகளைச் சுட்டிக் காண்பித்து,) ‘‘நிச்சயமாக இந்த மக்கள் இருக்கின்ற மார்க்கம் அழிந்துவிடக்கூடியது. அவர்கள் செய்பவை அனைத்தும் வீணானவை. (அவர்களுக்கு ஒரு பலனையும் அளிக்காது'' என்றும் கூறினார்)

[140] (தவிர) ‘‘அல்லாஹ் அல்லாததையா நான் உங்களுக்கு இறைவனாக ஆக்கிவைப்பேன்? அவன்தான் உங்களை உலகத்தார் அனைவரையும் விட மேன்மையாக்கி வைத்தான்'' என்றும் அவர் கூறினார்

[141] (இஸ்ராயீலின் சந்ததிகளே!) உங்களுக்கு மிகக் கொடிய துன்பங்களை விளைவித்துக் கொண்டிருந்த ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிடமிருந்து நாம் உங்களை பாதுகாத்துக் கொண்டதை நீங்கள் நினைத்துப் பாருங்கள். அவர்கள் உங்கள் ஆண் பிள்ளைகளைக் கொலை செய்துவிட்டு உங்கள் பெண் பிள்ளைகளை (மட்டும்) உயிருடன் வாழவிட்டு வந்தார்கள். இதில் உங்களுக்கு உங்கள் இறைவனால் பெரியதொரு சோதனை ஏற்பட்டிருந்தது

[142] மூஸாவுக்கு நாம் முப்பது இரவுகளை வாக்களித்திருந்தோம். பின்னர் அத்துடன் பத்து (இரவுகளைச்) சேர்த்தோம். ஆகவே, அவருடைய இறைவனின் வாக்குறுதி நாற்பது இரவுகளாகப் பூர்த்தியாயிற்று. ஆகவே, அதுசமயம் மூஸா தன் சகோதரர் ஹாரூனை நோக்கி ‘‘நீர் எனது மக்களிடையே என் இடத்திலிருந்து அவர்களைச் சீர்திருத்துவீராக. மேலும், விஷமிகளுடைய வழியை நீர் பின்பற்றாதீர்'' என்று கூறினார்

[143] நாம் (குறிப்பிட்ட இடத்திற்கு) குறிப்பிட்ட நேரத்தில் மூஸா வந்த பொழுது அவருடைய இறைவன் அவருடன் பேசினான். (அப்பொழுது மூஸா தன் இறைவனை நோக்கி) ‘‘என் இறைவனே! நான் உன்னை (என் கண்ணால்) பார்க்க (விரும்புகிறேன்.) நீ உன்னை எனக்கு காண்பி'' என்று கூறினார். (அதற்கு இறைவன் ‘‘நேர்முகமாக) என்னைக் காண உம்மால் ஒருக்காலும் முடியாது. எனினும் இம்மலையை நீர் நோக்குவீராக. அது தன் இடத்தில் நிலைத்திருந்தால் பின்னர் நீர் என்னைக் காண்பீர்'' என்று கூறினான். அவருடைய இறைவன் அம்மலை மீது தோற்றமளிக்கவே அது தவிடு பொடியாயிற்று. மூஸா திடுக்கிட்டு (மூர்ச்சையாகி) விழுந்தார். அவர் தெளிவு பெறவே (இறைவனை நோக்கி) ‘‘நீ மிகப் பரிசுத்தமானவன். நான் (உன்னைப் பார்க்கக் கோரிய குற்றத்திலிருந்து விலகி) உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன். அன்றி, உன்னை நம்பிக்கை கொள்பவர்களில் நான் முதன்மையானவன்'' என்று கூறினார்

[144] (அதற்கு இறைவன்) ‘‘மூஸாவே! என் தூதராக அனுப்புவதற்கும், என்னுடன் பேசுவதற்கும் (உங்கள் காலத்தில் உள்ள) மனிதர்கள் அனைவரிலிருந்தும் நிச்சயமாக நான் உம்மைத் தேர்ந்தெடுத்து இருக்கிறேன். ஆகவே, நான் உமக்குக் கொடுப்பதை (பலமாக)ப் பற்றிப் பிடித்துக் கொள்வீராக! மேலும், (அதற்காக) நன்றி செலுத்துபவர்களில் (ஒருவராக) நீரும் இருப்பீராக'' என்று கூறினான்

[145] (நாம் அவருக்குக் கொடுத்த கற்)பலகைகளில் நல்லுபதேசங்கள் அனைத்தையும், ஒவ்வொரு கட்டளையின் விவரத்தையும் அவருக்காக நாம் எழுதி ‘‘நீர் இதைப் பலமாகப் பற்றிப் பிடித்துக்கொண்டு அதிலிருக்கும் மிக அழகியவற்றை எடுத்து நடக்கும் படி உம் மக்களுக்கு நீர் கட்டளையிடுங்கள். (உமக்கு மாறு செய்யும்) பாவிகள் தங்கும் இடத்தை அதிசீக்கிரத்தில் நாம் உங்களுக்குக் காண்பிப்போம்'' (என்றும் நாம் மூஸாவுக்குக் கூறினோம்)

[146] நியாயமின்றி பூமியில் கர்வம் கொண்டலைபவர்கள் நம் கட்டளைகளைப் புறக்கணிக்கும்படிச் செய்து விடுவோம். ஆகவே, அவர்கள் நம் அத்தாட்சிகள் அனைத்தையும் (தங்கள் கண்ணால்) கண்டபோதிலும் அவற்றை நம்பவே மாட்டார்கள். அவ்வாறே நேரான வழியை அவர்கள் கண்டபோதிலும் அவர்கள் அதை (தாங்கள்) செல்லும் வழியாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். எனினும், தவறான வழியைக் கண்டாலோ அதையே (தாங்கள்) செல்லும் வழியாக எடுத்துக் கொள்வார்கள். நிச்சயமாக அவர்கள் நம் வசனங்களைப் பொய்யாக்கி, அவற்றைப் புறக்கணித்து பராமுகமாயிருந்ததே இதற்குரிய காரணமாகும்

[147] ஆகவே, எவர்கள் நம் வசனங்களையும், மறுமையில் (நம்மைச்) சந்திப்பதையும் பொய்யாக்குகிறார்களோ அவர்களுடைய (நற்)காரியங்கள் அனைத்தும் அழிந்து விடும். (நம் வசனங்களைப் பொய்யாக்கி) அவர்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயல்களுக்குத் தவிர (வேறெதற்கும்) கூலி கொடுக்கப்படுவார்களா

[148] (தன் இறைவனிடம் உரையாட மூஸா சென்றதற்குப்) பின்னர் மூஸாவுடைய மக்கள் தங்கள் ஆபரணங்களைக் கொண்(டு செய்யப்பட்)ட கன்றுக் குட்டியின் சிலையை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டார்கள். அதற்கு (மாட்டின் சப்தத்தைப் போன்ற) சப்தமிருந்தது. எனினும் (அது உயிரற்ற வெறும் சிலை.) நிச்சயமாக அது அவர்களுடன் பேசுவதுமில்லை; அவர்களுக்கு ஒரு வழியை அறிவிப்பதுமில்லை என்பதையும் அவர்கள் கவனித்திருக்க வேண்டாமா? எனினும், அவர்கள் அதையே (தெய்வமாக) எடுத்துக் கொண்டு (அதனால் தங்களுக்குத்தாமே) தீங்கிழைத்துக் கொண்டவர்களாக ஆகிவிட்டார்கள்

[149] அவர்கள் நிச்சயமாகத் தாங்கள் வழிகெட்டு விட்டோம் என்பதைக் கண்டு கைசேதப்பட்டபொழுது ‘‘எங்கள் இறைவன் எங்களுக்கு அருள் புரிந்து எங்கள் குற்றங்களை மன்னிக்காவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்'' என்று கூறினார்கள்

[150] (இதைக் கேள்வியுற்ற) மூஸா கோபத்துடனும் துக்கத்துடனும் தன் மக்களிடம் திரும்பி வந்தபொழுது (அவர்களை நோக்கி) ‘‘நான் இல்லாத சமயத்தில் நீங்கள் செய்த இக்காரியம் மிகக் கெட்டது. உங்கள் இறைவனின் கட்டளை(யாகிய வேதனை)யை நீங்கள் அவசரப்படுத்துகிறீர்களா?'' என்று கூறி (இறைவனின் கட்டளைகள் எழுதப்பட்ட கற்)பலகைகளை எறிந்து விட்டு தன் சகோதரரின் தலை (முடி)யைப் பிடித்துத் தன் பக்கம் இழுத்தார். அ(தற்க)வர் ‘‘என் தாயின் மகனே! இந்த மக்கள் நிச்சயமாக என்னை பலவீனப்படுத்தி என்னைக் கொலை செய்துவிடவும் முற்பட்டனர். (ஆதலால், நான் ஒன்றும் செய்ய முடியாமலாகிவிட்டது. ஆகவே, என்னை அவமானப்படுத்தி) எதிரிகள் சந்தோஷப்படுமாறு நீர் செய்து விடாதீர். (இந்த) அநியாயக்கார மக்களுடனும் என்னை சேர்த்து விடாதீர்'' என்று கூறினார்

[151] (பிறகு மூஸா இறைவனை நோக்கி) ‘‘என் இறைவனே! எனக்கும் என் சகோதரருக்கும் நீ பிழை பொருத்தருள்வாயாக! உன் அன்பிலும் எங்களை சேர்த்துக் கொள்வாயாக! நீ கிருபை செய்பவர்களில் எல்லாம் மிக்க கிருபையாளன்'' என்று (பிரார்த்தனை செய்து) கூறினார்

[152] (பின்னர் இறைவன் மூஸாவை நோக்கிக் கூறினான்:) ‘‘எவர்கள் காளைக்கன்றை (தெய்வமாக) எடுத்துக் கொண்டார்களோ அவர்களை நிச்சயமாக இறைவனின் கோபமும் இழிவும் இவ்வுலக வாழ்க்கையிலேயே அதிசீக்கிரத்தில் வந்தடையும். பொய்யைக் கற்பனை செய்பவர்களுக்கு இவ்வாறே நாம் கூலி கொடுப்போம்

[153] (எனினும் இத்தகைய) பாவங்கள் செய்து கொண்டிருந்தவர்களிலும் எவர்கள் கைசேதப்பட்டு அதிலிருந்து விலகி உண்மையாகவே நம்பிக்கை கொள்கிறார்களோ (அவர்களை), அதற்குப் பின்னர் நிச்சயமாக உமது இறைவன் மன்னித்துக் கருணை செய்பவன் ஆவான்

[154] மூஸாவுடைய கோபம் தணிந்த பின்னர் அவர்(அக்கற்) பலகைகளை எடுத்துக் கொண்டார். அதன் ஏடுகளில் தங்கள் இறைவனை அஞ்சுபவர்களுக்கு நேரான வழியும் அருளும் இருந்தன

[155] மூஸா, நாம் குறித்த நேரத்தி(ல் ‘‘தூர்' என்னும் மலைக்குத் தம்முடன் வருவத)ற்காக தம் மக்களில் எழுபது ஆண்களைத் தேர்ந்தெடுத்தார். அவர்களை பூகம்பம் பிடித்(து மூர்ச்சையாகி விழுந்)ததும் அவர் (தன் இறைவனை நோக்கி) ‘‘என் இறைவனே! (எங்களை அழித்துவிட வேண்டுமென்று) நீ கருதியிருந்தால் இதற்கு முன்னதாகவே என்னையும் இவர்களையும் நீ அழித்திருக்கலாம். எங்களிலுள்ள சில அறிவீனர்கள் செய்த (குற்றத்)திற்காக எங்கள் அனைவரையும் நீ அழித்து விடுகிறாயா? இது உன் சோதனையே தவிர வேறில்லை. இதைக் கொண்டு நீ நாடியவர்களை வழி தவற விடுகிறாய்; நீ நாடியவர்களை நேரான வழியில் செலுத்துகிறாய். நீதான் எங்கள் இறைவன். நீ எங்களை மன்னித்து எங்களுக்கு நீ அருள் புரிவாயாக! மன்னிப்பவர்கள் அனைவரிலும் நீ மிக்க மேலானவன்'' என்று(ம் பிரார்த்தித்துக்) கூறினார்

[156] மேலும், ‘‘(இறைவனே!) இம்மையில் நீ எங்களுக்கு நன்மையை முடிவு செய்வாயாக! (அவ்வாறே) மறுமையிலும் (செய்வாயாக)! நிச்சயமாக நாங்கள் உன் பக்கமே முன்னோக்கினோம்'' (என்றும் பிரார்த்தித்தார்). அ(தற்கு இறை)வன் ‘‘நான் நாடியவர்களை என் வேதனை வந்தடையும். எனினும், என் அருட்கொடை அனைத்தையும்விட மிக விரிவானது. ஆகவே, எவர்கள் (எனக்குப்) பயந்து ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ அவர்களுக்கும், எவர்கள் நம் வசனங்களை நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களுக்கும் (என் அருளை) நான் முடிவு செய்வேன்'' என்று கூறினான்

[157] (ஆகவே, அவர்களில்) எவர்கள் எழுதப் படிக்கத் தெரியாத (நம்) தூதராகிய இந்த நபியைப் பின்பற்றுகிறார்களோ அவர்கள் தங்களிடமுள்ள தவ்றாத்திலும், இன்ஜீலிலும் இவருடைய பெயர் எழுதப்பட்டிருப்பதைக் காண்பார்கள். (இத்தூதரோ) அவர்களை நன்மையான காரியங்களைச் செய்யும்படி ஏவி, பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார். நல்லவற்றையே அவர்களுக்கு ஆகுமாக்கி வைப்பார். கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார். மேலும், அவர்களது சுமையையும் அவர்கள் மீதிருந்த (கடினமான சட்ட) விலங்குகளையும் (இறைவனின் அனுமதி கொண்டு) நீக்கிவிடுவார். ஆகவே, எவர்கள் அவரை உண்மையாகவே நம்பிக்கை கொண்டு, அவரை பலப்படுத்தி அவருக்கு உதவி செய்து, அவருக்கு இறக்கப்பட்ட பிரகாசமான (இவ்வேதத்)தைப் பின்பற்றுகிறார்களோ அவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள்

[158] (நபியே!) கூறுவீராக: ‘‘மனிதர்களே! (நீங்கள் எந்த நாட்டவர் ஆயினும் எவ்வகுப்பாராயினும்) நிச்சயமாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட தூதர் ஆவேன். வானங்கள் பூமியின் ஆட்சி அவனுக்குரியதே! (வணக்கத்திற்குரிய) இறைவன் அவனைத்தவிர வேறு ஒருவருமில்லை. அவனே உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கும்படி செய்கிறான். ஆகவே, அந்த அல்லாஹ்வையும், எழுதப் படிக்க அறியாத அவனுடைய இத்தூதரையும் நீங்கள் நம்பிக்கை கொள்வீர்களாக! அவரும் அல்லாஹ்வையும், அவனுடைய வசனங்களையும் நம்பிக்கை கொள்கிறார். ஆகவே, நீங்கள் நேரான வழியை அடைய அவரையே நீங்கள் பின்பற்றுங்கள்

[159] மூஸாவுடைய மக்களில் பலர் இருக்கின்றனர். அவர்கள் (தாங்கள் சத்திய வழியில் செல்வதுடன், மக்களுக்கும்) சத்திய வழியை அறிவித்து, அதன்படி நீதமாகவும் நடக்கின்றனர்

[160] மூஸாவின் மக்களைப் பன்னிரெண்டு கூட்டங்களாகப் பிரித்தோம். மூஸாவிடம் அவர்கள் குடிதண்ணீர் கேட்டபோது (நாம் அவரை நோக்கி) ‘‘உங்கள் (கைத்) தடியைக் கொண்டு இக்கல்லை அடியுங்கள்!'' என்று அவருக்கு வஹ்யி அறிவித்தோம். (அவ்வாறு அவர் அடிக்கவே) அதிலிருந்து பன்னிரெண்டு ஊற்றுக்கள் பீறிட்டோடின. (பன்னிரெண்டு வகுப்பினரில்) ஒவ்வொரு வகுப்பினரும் (அவற்றில்) தாங்கள் அருந்தும் ஊற்றை (குறிப்பாக) அறிந்து கொண்டனர். அன்றி, அவர்கள் மீது மேகம் நிழலிடும்படிச் செய்தோம். அவர்களுக்காக ‘மன்னு ஸல்வா'வையும் இறக்கிவைத்து ‘‘உங்களுக்குக் கொடுக்கும் இந்த நல்ல உணவுகளை (அன்றாடம்) புசித்து வாருங்கள். (அதில் எதையும் நாளைக்கு என்று சேகரித்து வைக்காதீர்கள்'' எனக் கூறினோம். அவ்வாறிருந்தும் அவர்கள் நமக்கு மாறுசெய்தனர். இதனால்) அவர்கள் நமக்கு தீங்கிழைத்து விடவில்லை. எனினும், அவர்கள் தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்

[161] (மேலும், அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் இவ்வூரில் வசித்திருங்கள். இதில் நீங்கள் விரும்பிய இடத்திலெல்லாம் (விரும்பிய பொருள்களைப்) புசித்துக் கொள்ளுங்கள். அன்றி ‘ஹித்ததுன்' (எங்கள் பாவச்சுமையை அகற்றுவாயாக!) என்று கூறிக்கொண்டே தலை குனிந்தவர்களாக அதன் வாயிலில் நுழையுங்கள். நாம் உங்கள் குற்றங்களை மன்னித்துவிடுவோம். நன்மை செய்பவர்களுக்கு மேலும், அதிகமாகவே நாம் (நற்)கூலி கொடுப்போம் என்று அவர்களுக்குக் கூறப்பட்டதற்கு

[162] அவர்களில் வரம்பு மீறியவர்களோ, அவர்களுக்குக் கூறப்பட்ட (‘ஹித்ததுன்' என்ப)தை மாற்றி (‘ஹின்த்ததுன்' கோதுமை என்று) கூறினார்கள். ஆகவே, (இவ்வாறு) அவர்கள் அநியாயம் செய்ததன் காரணமாக நாம் அவர்கள் மீது வானத்திலிருந்து வேதனையை இறக்கிவைத்தோம்

[163] (நபியே) கடற்கரையிலிருந்த ஊர் (மக்களைப்) பற்றி நீர் அவர்களைக் கேட்பீராக. (ஓய்வு நாளாகிய) சனிக்கிழமையன்று (மீன் வேட்டையாடக் கூடாதென்று தடுக்கப்பட்டிருந்தும்) அவர்கள் வரம்பு மீறி (மீன் வேட்டையாடி)க் கொண்டிருந்தார்கள். ஏனென்றால், சனிக்கிழமையன்று (அக்கடலில் உள்ள) மீன்கள் அவர்கள் முன் வந்து (நீர் மட்டத்திற்குத்) தலைகளை நீட்டிக் கொண்டிருந்தன. சனிக்கிழமையல்லாத நாள்களில் அவர்களிடம் அவை வருவதில்லை. அவர்கள் பாவம் செய்து கொண்டிருந்ததன் காரணமாக அவர்களை இவ்வாறு (மிகக் கடினமான) சோதனைக்கு உள்ளாக்கினோம்

[164] (இதை அவ்வூரிலிருந்த நல்லோர் அவர்களுக்கு நல்லுபதேசம் செய்து தடை செய்தார்கள். இதைக் கண்ட வேறு) ஒரு கூட்டத்தினர் (அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ் எவர்களை அழித்துவிட வேண்டுமென்றோ, கடினமான வேதனைக்குள்ளாக்க வேண்டுமென்றோ நாடியிருக்கிறானோ அந்த மக்களுக்கு நீங்கள் ஏன் நல்லுபதேசம் செய்கிறீர்கள்'' என்று கூறினார்கள். அதற்கவர்கள் ‘‘இதனால் நாம் உங்கள் இறைவனிடம் நம் பொறுப்பிலிருந்து நீங்கி விடுவதற்காக (நாங்கள் நல்லுபதேசம் செய்கிறோம் என்றும், இதனால் மீன் பிடிக்கும்) அவர்கள் (ஒருக்கால்) விலகிவிடலாம்'' என்றும் பதில் கூறினார்கள்

[165] அவர்களுக்கு எச்சரிக்கப்பட்டதை அவர்கள் (பொருட்படுத்தாது) மறந்து (தொடர்ந்து மீன் பிடிக்க முற்பட்டு)விடவே, பாவத்திலிருந்து விலக்கி வந்தவர்களை நாம் பாதுகாத்துக் கொண்டு வரம்பு மீறியவர்களை அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக கொடிய வேதனையைக் கொண்டு நாம் பிடித்துக் கொண்டோம்

[166] ஆகவே தடுக்கப்பட்டிருந்த வரம்பை அவர்கள் மீறவே, அவர்களை நோக்கி ‘‘நீங்கள் சிறுமைப்பட்ட குரங்குகளாகி விடுங்கள்'' என்று (சபித்துக்) கூறினோம். (அவ்வாறே அவர்கள் ஆகிவிட்டனர்)

[167] (நபியே!) அவர்களுக்குக் கொடிய நோவினை செய்யக்கூடியவர்களையே அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும்படி இறுதிநாள் வரை நாம் செய்து வருவோம் என்று உமது இறைவன் அவர்களுக்கு அறிக்கை இட்டதை (நீங்கள் அவர்களுக்கு) ஞாபகமூட்டுவீராக. நிச்சயமாக உமது இறைவன் வேதனை செய்வதில் மிகத் தீவிரமானவன். மேலும், நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவன், மகா கருணையாளன் ஆவான்

[168] அவர்களை இப்புவியில் பல பிரிவுகளாகப் பிரித்து (பூமியின் பல பாகங்களிலும் சிதறடித்து) விட்டோம். அவர்களில் நல்லவர்களும் இருக்கின்றனர்; இது அல்லாத (பொல்லாத)வர்களும் அவர்களில் இருக்கின்றனர். அவர்கள் (பாவத்திலிருந்து) மீள்வதற்காக இன்பங்களைக் கொண்டும், துன்பங்களைக் கொண்டும் நாம் அவர்களைச் சோதித்தோம்

[169] அவர்களுக்குப் பின்னர் அவர்களுடைய இடத்தை (சிறிதும் தகுதியற்ற) பலர் அடைந்தனர். அவர்கள், (தாங்கள்தான்) வேதத்திற்குச் சொந்தக்காரர்கள் என(க் கூறி), இவ்வற்ப (உலகின்) பொருளைப் பெற்றுக்கொண்டு (அதற்கேற்றவாறு வேத வசனங்களைப் புரட்டுகின்றனர். மேலும், இக்குற்றத்தைப் பற்றி) ‘‘நாங்கள் மன்னிக்கப்படுவோம்'' என்றும் கூறுகின்றனர். (வேதத்தில் இவர்கள் புரட்டியதை தொடர்ந்து முன்பு போல் புரட்டுவதற்காக) இதேபோன்ற அற்பப் பொருள்கள் பின்னரும் அவர்களிடம் வரும் சமயத்தில் அதையும் பெற்றுக்கொள்வார்கள். அவர்கள் அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறு எதையும்) கூறக்கூடாது என்று (அவர்களுடைய) வேதத்தின் மூலம் அவர்களிடம் உறுதிமொழி வாங்கப்படவில்லையா? அதை அவர்களும் படித்து (அறிந்து வைத்து)ள்ளனர். (எனினும் அதிலுள்ளவற்றைப் பொருட்படுத்துவது இல்லை.) இறையச்சமுடையவர்களுக்கு மறுமையின் வீடே மிக மேலானது. (யூதர்களே! இவ்வளவு கூட) நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டாமா

[170] எவர்கள் இவ்வேதத்தை(ச் சிறிதும் மாற்றாது) பலமாகப் பற்றிப் பிடித்துக் கொண்டு தொழுகையையும் கடைப்பிடித்து நிறைவேற்றி வருகிறார்களோ அத்தகைய சீர்திருத்தவாதிகளான நல்லவர்களின் கூலியை நிச்சயமாக நாம் வீணாக்குவதில்லை

[171] தங்கள் மீது விழுந்து விடுமென்று அவர்கள் எண்ணக்கூடியவாறு (சீனாய்) மலையை அவர்களுக்கு மேல் முகட்டைப்போல் நிறுத்தி (அவர்களை நோக்கி) ‘‘நாம் உங்களுக்குக் கொடுத்த (வேதத்)தைப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள்; அதிலுள்ளவற்றை (எப்பொழுதும்) கவனத்தில் வையுங்கள்; (அதனால்) நீங்கள் இறையச்சமுடையவர்களாகி விடலாம்'' (என்று நாம் அவர்களுக்குக் கூறியதை நபியே!) நீர் அவர்களுக்கு ஞாபகமூட்டுவீராக

[172] (நபியே!) உமது இறைவன் ஆதமுடைய மக்களை அவர்களுடைய (தந்தைகளின்) முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளாக வெளியாக்கி, அவர்களையே அவர்களுக்கு சாட்சியாகவும் வைத்து (அவர்களை நோக்கி) ‘‘நான் உங்கள் இறைவனாக இல்லையா?'' என்று கேட்டதற்கு, ‘‘ஏன் இல்லை (நீதான் எங்கள் இறைவன்! என்று) நாங்கள் சாட்சி கூறுகிறோம்'' என்று அவர்கள் கூறியதை (நீர்அவர்களுக்கு) ஞாபக மூட்டுவீராக. ஏனென்றால் (இதை ஒருவரும் எங்களுக்கு ஞாபகமூட்டாததால்) நிச்சயமாக நாங்கள் இதை (மறந்து) விட்டுப் பராமுகமாகி இருந்தோம்'' என்று மறுமை நாளில் சொல்லாமல் இருப்பதற்காகவும்

[173] அல்லது (பொய்யான தெய்வங்களை) இணையாக்கியதெல்லாம் (நாங்களல்ல;) எங்களுக்கு முன் சென்றுபோன எங்கள் மூதாதைகள்தான். நாங்களோ அவர்களுக்குப் பின்னர் வந்த அவர்களுடைய சந்ததிகள். ஆகவே, (அவர்களை நாங்கள் பின்பற்றினோம்.) அவர்கள் செய்த தகாத காரியங்களுக்காக நீ எங்களை அழித்து விடலாமா?'' என்று கூறாதிருப்பதற்காகவே (இதை நாம் ஞாபக மூட்டுகிறோம் என்று நபியே! நீர் கூறுவீராக)

[174] அவர்கள் (பாவங்களிலிருந்து) மீள்வதற்காக (நம்) வசனங்களை இவ்வாறு (தெளிவாக) விவரித்துக் கூறுகிறோம்

[175] (நபியே!) நீர் அவர்களுக்கு (‘பல்ஆம் இப்னு பாஊர்' என்னும்) ஒருவனுடைய சரித்திரத்தை ஓதிக் காண்பிப்பீராக. அவனுக்கு நாம் நம் அத்தாட்சிகளைக் கொடுத்(து கண்ணியமாக்கி வைத்)திருந்தோம். எனினும் அவன் ‘‘(பாம்பு தன் சட்டையை விட்டு வெளியேறுவதைப் போல) அதிலிருந்து முற்றிலும் வெளியேறிவிட்டான். ஆகவே, ஷைத்தான் அவனைப் பின்தொடர்ந்து சென்றான்; (அவனுடைய சூழ்ச்சிக்குள் சிக்கி) அவன் வழிதவறி விட்டான்

[176] நாம் எண்ணியிருந்தால் (நம்) அத்தாட்சிகளின் காரணமாக அவனை நாம் உயர்த்தியிருப்போம். எனினும், அவன் இவ்வுலக வாழ்க்கையை நிரந்தரம் என எண்ணி தன் (சரீர) இச்சையைப் பின்பற்றிவிட்டான். அவனுடைய உதாரணம் ஒரு நாயின் உதாரணத்தை ஒத்திருக்கிறது. நீங்கள் அதைத் துரத்தினாலும் நாக்கைத் தொங்கவிட்டுக் கொள்கிறது. அதை(த் துரத்தாது) விட்டுவிட்டாலும் நாக்கைத் தொங்கவிட்டுக் கொள்கிறது. இதுவே, நம் வசனங்களைப் பொய்யாக்கும் (மற்ற) மக்களுக்கும் உதாரணமாகும். ஆகவே, அவர்கள் சிந்தித்து நல்லுணர்ச்சி பெறுவதற்காக இச்சரித்திரத்தை (அடிக்கடி) ஓதிக் காண்பியுங்கள்

[177] நம் வசனங்களைப் பொய்யாக்கிய மக்களின் இவ்வுதாரணம் மிகக் கேவலமானது; அவர்கள் தங்களுக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்

[178] அல்லாஹ் எவர்களை நேரான வழியில் செலுத்துகிறானோ அவர்களே நேரான வழியை அடைந்தவர்கள்; எவர்களைத் தவறான வழியில் விட்டுவிட்டானோ அவர்கள் முற்றிலும் நஷ்டமடைந்தவர்களே

[179] நிச்சயமாக மனிதர்களிலும், ஜின்களிலும் பலரை நரகத்திற்காகவே நாம் படைத்திருக்கிறோம். (அவர்கள் எத்தகையவர்கள் என்றால்) அவர்களுக்கு உள்ளங்கள் இருக்கின்றன; எனினும் அவற்றைக் கொண்டு (நல்லுபதேசங்களை) அவர்கள் உணர்ந்துகொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு கண்களுமுண்டு; எனினும், அவற்றைக்கொண்டு (இவ்வுலகிலுள்ள இறைவனின் அத்தாட்சிகளை) அவர்கள் பார்க்க மாட்டார்கள். அவர்களுக்கு செவிகளுமுண்டு; எனினும், அவற்றைக் கொண்டு அவர்கள் (நல்லுபதேசங்களுக்கு) செவிசாய்க்க மாட்டார்கள். இவர்கள் மிருகங்களைப் போல் அல்லது அவற்றைவிட அதிகமாக வழி கெட்டவர்களாகவே இருக்கின்றனர். இவர்கள்தான் (நம் வசனங்களை) அலட்சியம் செய்தவர்கள் ஆவார்

[180] அல்லாஹ்வுக்கு மிக அழகான திருப்பெயர்கள் இருக்கின்றன. ஆகவே, அவற்றைக் கொண்டே நீங்கள் அவனை அழையுங்கள். (அவனிடம் துஆ கேளுங்கள்.) அவனுடைய திருப்பெயர்களில் தவறிழைப்பவர்களை நீங்கள் விட்டு விடுங்கள்; இவர்கள் தங்கள் செயலுக்குத் தக்க கூலியை விரைவில் கொடுக்கப்படுவார்கள்

[181] நாம் படைத்தவர்களில் சிலருண்டு; அவர்கள் சத்திய வழியை(ப் பின்பற்றுவதுடன், மற்ற மக்களுக்கும்) அறிவித்து அதைக் கொண்டே நீதியும் செய்கின்றனர்

[182] எவர்கள் நம் வசனங்களைப் பொய்யாக்குகிறார்களோ அவர்களை அவர்கள் உணர்ந்துகொள்ளாத விதத்தில் நாம் படிப்படியாக (கீழ் நிலைக்கு இறக்கி நரகத்திலும்) புகுத்தி விடுவோம்

[183] (இவ்வுலகில்) நான் அவர்களுக்கு (நீண்ட) அவகாசம் அளிக்கிறேன். நிச்சயமாக என் சூழ்ச்சி (திட்டம்) மிக்க உறுதியானது; (தப்பிக்க முடியாதது)

[184] (நம் தூதராகிய) அவர்களுடைய (இத்)தோழருக்கு எவ்வித பைத்தியமும் இல்லை என்பதை அவர்கள் சிந்தித்து உணர்ந்து கொள்ள வேண்டாமா? அவர் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றவரே அன்றி வேறில்லை

[185] வானங்கள், பூமியினுடைய ஆட்சியையும் அல்லாஹ் படைத்திருக்கும் மற்ற பொருள்களையும் அவர்கள் பார்க்கவில்லையா? அவர்களுடைய (மரண) தவணை நெருங்கி இருக்கக் கூடும் என்பதையும் (அவர்கள் எண்ணவில்லையா?) இவ்வேதத்திற்குப் பின்னர் எதைத்தான் அவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்

[186] எவர்களை அல்லாஹ் தவறான வழியில் விட்டு விடுகிறானோ அவர்களை நேரான வழியில் செலுத்த ஒருவராலும் முடியாது; அவர்கள் தங்கள் வழிகேட்டிலேயே தட்டழி(ந்து கெட்டலை)யும்படி விட்டுவிடுகிறான்

[187] (நபியே!) இறுதி நாளைப் பற்றி - அது எப்பொழுது வரும் என அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘அதன் அறிவு என் இறைவனிடத்தில்தான் இருக்கிறது. அது வரும் நேரத்தை அவனைத் தவிர மற்றெவரும் தெளிவாக்க முடியாது. (அது சமயம்) வானங்களிலும் பூமியிலும் மகத்தான சம்பவங்கள் நிகழும். திடீரென்றே தவிர (அது) உங்களிடம் வராது. அதை முற்றிலும் அறிந்து கொண்டவராக உம்மை அவர்கள் எண்ணி, (அதைப் பற்றி) உம்மிடம் கேட்கிறார்கள். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘அதன் அறிவு அல்லாஹ்விடத்தில்தான் இருக்கிறது; மனிதரில் பெரும்பாலானவர்கள் இதை அறிய மாட்டார்கள்

[188] (மேலும்,) நீர் கூறுவீராக: ‘‘அல்லாஹ் நாடினாலே தவிர நான் எனக்கு ஒரு நன்மையையோ தீமையையோ செய்து கொள்ள சக்தி பெறமாட்டேன். நான் மறைவானவற்றை அறியக்கூடுமாயின் நன்மைகளையே அதிகமாகத் தேடிக் கொண்டிருப்பேன்; ஒரு தீங்குமே என்னை அணுகி இருக்காது. நான் (பாவிகளுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நம்பிக்கை கொள்பவர்களுக்கு நற்செய்தி கூறுபவனுமே தவிர வேறில்லை

[189] ஒரே மனிதரிலிருந்து உங்களை படைத்தவன் அவன்தான்; அவருடன் (சுகமாகக்) கூடி வசிப்பதற்காக அவருடைய மனைவியை அவரிலிருந்தே உற்பத்தி செய்தான். அவளை அவர் (தன் தேகத்தைக் கொண்டு) மூடிக் கொண்டபோது அவள் இலேசான கர்ப்பமானாள். பின்னர் அதை(ச் சுமந்து) கொண்டு திரிந்தாள். அவள் சுமை பளுவாகவே ‘‘எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நல்லதொரு சந்ததியை அளித்தால் நிச்சயமாக நாங்கள் உனக்கு நன்றி செலுத்திக் கொண்டிருப்போம்'' என்று அவ்விருவரும் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள்

[190] (அவர்கள் பிரார்த்தனையின்படி) அவர்களுக்கு (இறைவன்) நல்லதோர் சந்ததியை அளித்தாலோ அதை அவர்களுக்கு அளித்ததில் (அவர்களுடைய தெய்வங்களும் துணையாய் இருந்தன என அவற்றை இறைவனுக்குக்) கூட்டாக்குகின்றனர். (அவர்கள் கூறும்) இணை துணைகளிலிருந்து அல்லாஹ் மிக உயர்ந்தவன்

[191] ஒரு பொருளையும் படைக்க சக்தியற்றவற்றை அவர்கள் (அவனுக்கு) இணையாக்குகின்றனரா? அவையோ (அவனால்) படைக்கப்பட்டவைதான்

[192] அவை இவர்களுக்கு எத்தகைய உதவியும் செய்ய சக்தியற்றவையாக இருப்பதுடன், தங்களுக்குத்தாமே ஏதும் உதவி செய்துகொள்ளவும் சக்தியற்றவையாக இருக்கின்றன

[193] நீங்கள் அவற்றை நேரான வழிக்கு அழைத்தபோதிலும் உங்களை அவை பின்பற்றாது. நீங்கள் அவற்றை அழைப்பதும் அல்லது அழைக்காது வாய்மூடிக் கொண்டிருப்பதும் சமமே

[194] நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர எவர்களை நீங்கள் (இறைவனென) அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடியார்களே! (உங்கள் கோரிக்கைகளை அவர்கள் நிறைவேற்றுகிறார்கள் என்று கூறுவதில்) நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் அவர்களை நீங்கள் அழையுங்கள்; உங்களுக்கு அவர்கள் பதிலளிக்கட்டும்

[195] (சிலை வணங்கிகளே! நீங்கள் வணங்கும்) அவற்றுக்குக் கால்கள் இருக்கின்றனவே; அவற்றைக் கொண்டு நடக்கின்றனவா? அவற்றுக்குக் கைகள் இருக்கின்றனவே; அவற்றைக் கொண்டு பிடிக்கின்றனவா? அவற்றுக்குக் கண்கள் இருக்கின்றனவே; அவற்றைக் கொண்டு பார்க்கின்றனவா? அவற்றுக்குக் காதுகள் இருக்கின்றனவே; அவற்றைக் கொண்டு கேட்கின்றனவா? (அவ்வாறாயின்) ‘‘நீங்கள் இணைவைத்து வணங்கும் (அத்)தெய்வங்களை (உங்களுக்கு உதவியாக) அழைத்துக் கொண்டு (நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எனக்கு ஒரு இடையூறை உண்டுபண்ண) எனக்கு சூழ்ச்சி செய்யுங்கள். (இதில்) நீங்கள் சிறிதும் எனக்கு அவகாசம் அளிக்க வேண்டாம்'' என்று (நபியே!) நீர் கூறுவீராக

[196] ‘‘நிச்சயமாக என் பாதுகாவலன் அல்லாஹ்தான்; அவனே இவ்வேதத்தை இறக்கினான். அவனே நல்லடியார்களை பாதுகாக்கிறான்

[197] ஆகவே, (இணைவைத்து வணங்குபவர்களே!) அல்லாஹ்வைத் தவிர எவற்றை (இறைவனென) நீங்கள் அழைக்கிறீர்களோ அவை உங்களுக்கு எத்தகைய உதவியும் செய்ய சக்தியற்றவையாக இருப்பதுடன், தமக்குத்தாமே உதவி செய்து கொள்ளவும் சக்தியற்றவையாக இருக்கின்றன

[198] நீங்கள் அவற்றை நேரான பாதையில் அழைத்த போதிலும் (நீங்கள் கூறுவதை) அவை செவியுறாது. (நபியே!) அவை உம்மைப் பார்ப்பதைப்போல உமக்குத் தோன்றுகிறது. உண்மையில் அவை (உம்மைப்) பார்ப்பதே இல்லை

[199] (நபியே!) இவ்வறிவீனர்(களின் செயல்)களை நீர் மன்னித்துப் புறக்கணித்து விட்டு (பொறுமையையும் கைக்கொண்டு, மற்றவர்களை) நன்மை (செய்யும்படி) ஏவி வருவீராக

[200] ஷைத்தான் ஒரு (தவறான) எண்ணத்தை உமது மனதில் ஊசலாடச் செய்து (தகாததொரு காரியத்தைச் செய்யும்படி உம்மைத் தூண்டினால் உடனே நீர் உம்மை காப்பாற்றும்படி அல்லாஹ்விடம் கோருவீராக. நிச்சயமாக அவன் நன்கு செவியுறுபவன், (அனைத்தையும்) நன்கறிந்தவன்

[201] நிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறார்களோ, அவர்களுக்குள் ஷைத்தானுடைய (தவறான) எண்ணம் ஊசலாடினால் அவர்கள் (அல்லாஹ்வை) நினைக்கிறார்கள்; அது சமயம் அவர்களுடைய (அறிவுக்) கண் திறந்து விழிப்படைந்து விடுகிறார்கள்

[202] எனினும் ஷைத்தானுடைய சகோதரர்களோ அவர்களை வழி கேட்டிலேயே இழுத்துச் செல்வார்கள். (அவர்களுக்குத் தீங்கிழைப்பதில்) ஒரு குறைவும் செய்வதில்லை

[203] (அவர்கள் விருப்பப்படி) ஒரு வசனத்தை நீர் அவர்களிடம் கொண்டு வராவிட்டால் (அதற்குப் பதிலாகத் தங்கள் விருப்பப்படி கற்பனையாக ஒரு வசனத்தை அமைத்து) ‘‘இதை நீர் வசனமாக எடுத்துக்கொள்ள வேண்டாமா?'' என்று (பரிகாசமாகக்) கூறுகின்றனர். அதற்கு (நபியே!) நீர் கூறுவீராக: ‘‘என் இறைவனால் எனக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டவற்றையே நான் பின்பற்றுகிறேன். இதுவோ உங்கள் இறைவனால் (உங்களுக்கு) அளிக்கப்பட்ட நல்லறிவாகவும், நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நேர்வழியாகவும், (இறைவனின்) அருளாகவும் இருக்கிறது

[204] (மனிதர்களே!) திரு குர்ஆன் ஓதப்பட்டால் வாய்மூடி, செவிதாழ்த்தி அதைக் கேளுங்கள். (அதனால்) நீங்கள் (இறைவனின்) அருளை அடைவீர்கள்

[205] (நபியே!) உமது மனதிற்குள் மிகப் பணிவோடு, உரத்த சப்தமின்றி பயத்தோடு, மெதுவாக காலையிலும், மாலையிலும் உமது இறைவனை நினைவு செய்து கொண்டிருப்பீராக! அவனை மறந்தவர்களில் நீர் ஆகிவிடாதீர்

[206] எவர்கள் நிச்சயமாக உமது இறைவனிடத்தில் இருக்கிறார்களோ அவர்கள் (வானவர்கள்) இறுமாப்பு கொண்டு அவனை வணங்காதிருப்பதில்லை. எனினும் ‘‘(நீ மிகப் பரிசுத்தமானவன்; நீ மிகப் பரிசுத்தமானவன்'' என்று) அவனை (எப்பொழுதும்) நினைவு செய்து கொண்டும், அவனுக்கு சிரம் பணிந்து (வணங்கிக்) கொண்டும் இருக்கின்றனர்

அல்அன்ஃபால்

Surah 8

[1] (நபியே!) ‘அன்ஃபால்' (என்னும் போரில் கிடைத்த பொருள்களைப்) பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘அன்ஃபால்' அல்லாஹ்வுக்கும், (அல்லாஹ்வுடைய) தூதருக்கும் சொந்தமானது. ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து (அதில் எதையும் மறைத்துக் கொள்ளாது) உங்களுக்கிடையில் ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள். உண்மையாகவே நீங்கள் உண்மை நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடங்கள்

[2] உண்மையான நம்பிக்கையாளர்கள் யாரென்றால், அல்லாஹ்வை (அவர்கள் முன்) நினைவு கூறப்பட்டால் அவர்களுடைய உள்ளங்கள் பயந்து நடுங்கிவிடும்; அல்லாஹ்வுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய நம்பிக்கை (மென்மேலும்,) அதிகரிக்கும். அவர்கள் தங்கள் இறைவனையே முற்றிலும் நம்பியிருப்பார்கள்

[3] அவர்கள் தொழுகையையும் கடைப்பிடிப்பார்கள்; நாம் அவர்களுக்குக் கொடுத்த பொருள்களிலிருந்து (தானமாக) செலவும் செய்வார்கள்

[4] இவர்கள்தான் உண்மையான நம்பிக்கையாளர்கள். அவர்களுக்கு அவர்கள் இறைவனிடத்தில் பல உயர் பதவிகளும் மன்னிப்பும் உண்டு; இன்னும், கண்ணியமான உணவும் உண்டு

[5] (நபியே!) உமது இறைவன் உமது இல்லத்திலிருந்து சத்தியத்தைக் கொண்டு உம்மை வெளியேற்றிய சமயத்தில் நம்பிக்கையாளர்களில் ஒரு கூட்டத்தினர் (உம்முடன் வர) விரும்பாதவாறே

[6] (போர் செய்வது அவசியம் என) அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்த பின்னரும் இவ்வுண்மை விஷயத்திலும் அவர்கள் உம்முடன் தர்க்கிக்கின்றனர். தங்கள் கண்களால் காணும் மரணத்தின் பக்கமே அவர்கள் ஓட்டிச் செல்லப்படுகின்றனர் போலும்

[7] (எதிரிகளின்) இரு கூட்டங்களில் ஒன்று, நிச்சயமாக உங்களுக்குக் கிடைத்து விடுமென்று அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்த சமயத்தில் நீங்கள் (அவ்விரண்டில்) பலமில்லாத (வர்த்தகக்) கூட்டத்தை (அடைய) விரும்பினீர்கள். எனினும், அல்லாஹ்வோ தன் வாக்கின்படி உண்மையை நிலைநாட்டி நிராகரிப்பவர்களின் வேரை அறுத்து விடவே நாடினான்

[8] பாவிகள் வெறுத்தபோதிலும் இறுதியில் பொய்யை அழித்து உண்மையை நிலை நாட்(டவே நா)டினான்

[9] (உங்களை) பாதுகாக்குமாறு நீங்கள் உங்கள் இறைவனிடம் கோரியபோது ‘‘அணியணியாக உங்களைப் பின்பற்றி வரக்கூடிய ஆயிரம் வானவர்களைக் கொண்டு நிச்சயமாக நான் உங்களுக்கு உதவி செய்வேன்'' என்று அவன் உங்களுக்குப் பதிலளித்தான்

[10] உங்கள் உள்ளங்கள் இதன் மூலம் திருப்தியடைவதற்காக ஒரு நற்செய்தியாகவே இதை அல்லாஹ் (உங்களுக்கு) ஆக்கி வைத்தான். அல்லாஹ்விடம் இருந்தே தவிர (உங்களுக்கு) இவ்வுதவி கிடைத்து விடவில்லை. நிச்சயமாக அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவன் ஞானமுடையவன் ஆவான்

[11] (நம்பிக்கையாளர்களே! உங்கள் மனம்) சாந்தியடைந்தவர்களாக, சிறியதொரு நித்திரை உங்களை சூழ்ந்து கொள்ளும்படி (இறைவன்) செய்ததை நினைத்துப் பாருங்கள்! அன்றி (அது சமயம்) உங்கள் தேகத்தை நீங்கள் சுத்தப்படுத்திக் கொள்வதற்காகவும், உங்களை விட்டு ஷைத்தானுடைய அசுத்தத்தைப் போக்கி விடுவதற்காகவும், உங்கள் உள்ளங்களை பலப்படுத்தி, உங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவதற்காகவும் (அவனே) வானத்திலிருந்து மழையை பொழியச் செய்தான்

[12] (நபியே!) உமது இறைவன் வானவர்களை நோக்கி ‘‘நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன். ஆகவே, நீங்கள் நம்பிக்கையாளர்களை உறுதிப்படுத்துங்கள்; (என்று கட்டளையிட்டு) நிராகரிப்பவர்களுடைய உள்ளங்களில் நான் திகிலை உண்டு பண்ணுவேன் (என்று கூறி, நம்பிக்கையாளர்களை நோக்கி) நீங்கள் அவர்களுடைய பிடரிகளின் மேல் வெட்டுங்கள். அவர்களை கணுக்கணுவாகத் துண்டித்து விடுங்கள்'' என்று அறிவித்ததை நினைத்துப் பாருங்கள்

[13] இதற்குக் காரணம், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்ததுதான். ஆகவே, எவரேனும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறுசெய்தால் நிச்சயமாக அல்லாஹ் (அவர்களை) மிகக் கடுமையாகவே வேதனை செய்வான்

[14] (நிராகரிப்பவர்களே! நீங்கள் அடையப்போகும் வேதனை) இதோ! இதை நீங்கள் சுவைத்துப் பாருங்கள். அன்றி (உங்களைப் போன்ற) நிராகரிப்பவர்களுக்கு (மறுமையில்) நிச்சயமாக நரக வேதனையும் உண்டு

[15] நம்பிக்கையாளர்களே! நீங்கள் நிராகரிப்பவர்களின் படையைச் சந்தித்தால் அவர்களுக்குப் புறங்காட்(டி ஓடிவி)டாதீர்கள்

[16] (எதிரியை) வெட்டுவதற்காகவோ அல்லது (தன்) கூட்டத்துடன் சேர்ந்து கொள்வதற்காகவோ தவிர, எவரேனும் அதுசமயம் புறங்காட்(டி ஓ)டினால் நிச்சயமாக அவன் அல்லாஹ்வுடைய கோபத்திற்குள்ளாகி விடுவான். அவன் தங்குமிடம் நரகம்தான்; அது மிகக்கெட்ட தங்குமிடம்

[17] (நம்பிக்கையாளர்களே! போர் புரிந்த சமயம்) நீங்கள் அவர்களைக் கொன்று விடவில்லை; அல்லாஹ்தான் அவர்களை கொன்றான். (நபியே! எதிரிகளின் மீது) நீங்கள் (மண்ணை) எறிந்தபோது (அதை) நீங்கள் எறியவில்லை; அல்லாஹ்தான் (அதை) எறிந்தான். நம்பிக்கையாளர்களை அழகான முறையில் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்தான்.) நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன், மிக அறிந்தவன் ஆவான்

[18] நிராகரிப்பவர்களின் சூழ்ச்சியை (இழிவுபடுத்தி) பலவீனப்படுத்துவதற்காகவே நிச்சயமாக அல்லாஹ் இவ்வாறு செய்தான்

[19] (நிராகரிப்பாளர்களே!) நீங்கள் வெற்றியின் மூலம் (முடிவான) தீர்ப்பைத் தேடிக் கொண்டிருந்தீர்கள். நிச்சயமாக அந்த வெற்றி உங்கள் முன் வந்துவிட்டது. (எனினும் அது உங்களுக்கல்ல; நம்பிக்கையாளர்களாகிய எங்களுக்கே! நாங்கள்தான் உங்களை வெற்றி கொண்டோம். ஆகவே, விஷமம் செய்வதிலிருந்து) இனியேனும் நீங்கள் விலகிக்கொண்டால் அது உங்களுக்கே நன்று. இனியும் நீங்கள் (விஷமம் செய்ய) முன் வரும்பட்சத்தில் நாமும் முன் வருவோம். உங்கள் கூட்டம் எவ்வளவு பெரிதாக இருந்த போதிலும் (அது) உங்களுக்கு ஒரு பலனையுமளிக்காது. ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கையாளர்களுடன் இருக்கிறான்

[20] நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். நீங்கள் (நம் வசனங்களை) செவியுற்ற பின் அதற்குக் கீழ்ப்படிவதிலிருந்து விலகாதீர்கள்

[21] (நம்பிக்கையாளர்களே! மனமாற) செவியுறாது ‘‘செவியுற்றோம்'' என்று (வாயால் மட்டும்) கூறியவர்களைப் போல் நீங்களும் ஆகிவிட வேண்டாம்

[22] நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் கால்நடைகளில் மிகக் கேவலமானவை (எவையென்றால் சத்தியத்தை) அறிந்துகொள்ள முடியாத செவிடர்களும், ஊமையர்களும்தான்

[23] அவர்களிடம் ஒரு நன்மை இருக்கிறதென்று அல்லாஹ் அறிந்திருந்தால் அவன் அவர்களை செவியுறச் செய்திருப்பான். (அவர்களிடம் ஒரு நன்மையும் இல்லாததனால் அல்லாஹ்) அவர்களைச் செவியுறச் செய்தபோதிலும் அவர்கள் புறக்கணித்து மாறிவிடுவார்கள்

[24] நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வும், (அவனுடைய) தூதரும் உங்களுக்குப் புத்துயிர் அளிக்க உங்களை அழைத்தால் (அவர்களுடைய அழைப்புக்குப்) பதில் கூறுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மனிதனுக்கும் அவனுடைய உள்ளங்களில் உள்ளதற்கும் இடையில் தடையேற்படுத்தி விடுகிறான் என்பதையும், நிச்சயமாக நீங்கள் அவனிடமே (கொண்டு வரப்பட்டு) ஒன்று சேர்க்கப்படுவீர்கள் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்

[25] நீங்கள் ஒரு வேதனையை பயந்துகொள்ளுங்கள். அது உங்களில் அநியாயக் காரர்களை மட்டுமே பிடிக்குமென்பதல்ல; (முடிவில் அது உங்களையும் சூழ்ந்து கொள்ளலாம்.) நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் கடுமையானவன் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்

[26] நீங்கள் பூமியில் (மக்காவில்) வலுவிழந்த வெகு குறைந்த தொகையினராக இருந்து உங்களை எம்மனிதரும் (எந்நேரத்திலும் பலவந்தமாக) திடீரென தாக்கிவிடுவார்களோ என்று நீங்கள் அஞ்சி (நடுங்கி)க் கொண்டிருந்த சமயத்தில் அவன் உங்களுக்கு (மதீனாவில்) இடமளித்துத் தன் உதவியைக் கொண்டு உங்களைப் பலப்படுத்தி நல்ல உணவுகளை உங்களுக்கு அளித்ததையும் நினைத்துப் பாருங்கள். (இதற்கு) நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக

[27] நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் மோசம் செய்யாதீர்கள். தவிர, நீங்கள் (செய்வது அநியாயம் என) அறிந்து கொண்டே உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களுக்கு மோசம் செய்யாதீர்கள்

[28] மேலும், உங்கள் பொருள்களும், உங்கள் சந்ததிகளும் (உங்களுக்குப்) பெரும் சோதனையாக இருக்கின்றன என்பதையும், நிச்சயமாக அல்லாஹ்விடத்தில்தான் (உங்களுக்கு) மகத்தான வெகுமதி உண்டு என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்

[29] நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயப்படுவீர்களாயின், அவன் உங்களுக்குக் கண்ணியத்தை அளிப்பான். மேலும், உங்கள் பாவங்களைப் போக்கி உங்களை மன்னித்து விடுவான். ஏனென்றால், அல்லாஹ் மிக மகத்தான அருளுடையவன் ஆவான்

[30] (நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை (ஊரைவிட்டு) அப்புறப்படுத்தவோ நிராகரிப்பவர்கள் சூழ்ச்சி செய்துகொண்டிருந்த (நேரத்)தை நினைத்துப் பார்ப்பீராக. அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; (அவர்களுக் கெதிராக) அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். ஆனால், சூழ்ச்சி செய்பவர்களிலெல்லாம் அல்லாஹ் மிக மேலானவன்

[31] நம் வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்படுமானால் அதற்கவர்கள், ‘‘நிச்சயமாக நாம் (இதை முன்னரே) செவியுற்றுள்ளோம்; நாம் விரும்பினால் இம்மாதிரியான வசனங்களை நாமும் கூறுவோம். இவை முன்னோரின் கட்டுக்கதைகளே தவிர வேறில்லை'' என்று கூறுகின்றனர்

[32] மேலும், (அந்நிராகரிப்பவர்கள்) ''எங்கள் அல்லாஹ்வே! இவ்வேதம் உன்னிடமிருந்து வந்தது உண்மையானால் எங்கள்மீது வானத்திலிருந்து கல்மாரியைப் பொழி! அல்லது துன்புறுத்தும் ஒரு வேதனையை எங்களுக்குக் கொண்டுவா!'' என்று அவர்கள் கூறியதையும் (நபியே!) நீர் நினைத்துப் பார்ப்பீராக

[33] ஆனால், நீர் அவர்களுக்கிடையில் இருக்கும் வரை அல்லாஹ் அவர்களை வேதனை செய்ய மாட்டான். மேலும், அவர்கள் மன்னிப்பைக் கோரிக்கொண்டிருக்கும் வரையிலும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்யமாட்டான்

[34] (இவ்விரு காரணங்களும் இல்லாதிருப்பின்) அல்லாஹ் அவர்களை வேதனை செய்யாமலிருப்பதற்கு என்ன (தடை) இருக்கிறது? ஏனென்றால், அவர்களோ சிறப்புற்ற மஸ்ஜிதுக்கு (மக்கள்) செல்வதைத் தடுக்கின்றனர். அவர்கள் அதற்கு பொறுப்பாளர்களல்ல. இறையச்சமுடையவர்களைத் தவிர வேறு எவரும் அதன் பொறுப்பாளர்களாக இருக்கமுடியாது. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிய மாட்டார்கள்

[35] அந்த அல்லாஹ்வின் வீட்டில் அவர்கள் புரியும் வணக்கமெல்லாம் சீட்டியடிப்பதும், கைதட்டுவதும் தவிர வேறில்லை! (ஆகவே, மறுமையில்) ‘‘உங்கள் நிராகரிப்பின் காரணமாக (இன்றைய தினம்) வேதனையை சுவைத்துப் பாருங்கள்'' (என்றே கூறப்படும்)

[36] நிச்சயமாக, நிராகரிப்பவர்கள் தங்கள் பொருள்களை (மக்கள்) அல்லாஹ்வுடைய வழியில் செல்வதைத் தடை செய்ய செலவு செய்கின்றனர். அவர்கள் மேலும், இவ்வாறே செலவு செய்வார்கள், முடிவில் அது அவர்களுக்கே துக்கமாக ஏற்பட்டுவிடும்! பின்னர் அவர்கள் தோற்கடிக்கப்பட்டு வெற்றி கொள்ளப்படுவார்கள். (இப்படிப்பட்ட) நிராகரிப்பவர்கள் (மறுமையில்) நரகத்தின் பக்கமே ஓட்டிச் செல்லப்படுவார்கள்

[37] அல்லாஹ் நல்லவர்களிலிருந்து கெட்டவர்களைப் பிரித்தெடுப்பதற்காகவும்; கெட்டவர்கள் ஒருவர் மீது ஒருவராக அடுக்கப்பட்டு ஒன்றாகக் குவிக்கப்பட்ட பின்னர் நரகத்தில் தூக்கி எறியப்படுவதற்காகவும் (இவ்வாறு செய்கிறான்.) இவர்கள்தான் முற்றிலும் நஷ்டமடைந்தவர்கள்

[38] (நபியே!) நிராகரிப்பவர்களுக்கு நீர் கூறுவீராக: இனியேனும் அவர்கள் (விஷமம் செய்யாது) விலகிக் கொண்டால் (அவர்களுடைய) முந்திய குற்றங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படும். (அவ்வாறில்லாமல் விஷமம் செய்யவே) முன் வருவார்களாயின் முன் சென்(ற இவர்கள் போன்)றவர்களின் வழி ஏற்பட்டே இருக்கிறது. (அவர்களுக்கு ஏற்பட்ட கதிதான் இவர்களுக்கும் ஏற்படும்)

[39] (நம்பிக்கையாளர்களே! இந்நிராகரிப்பவர்களின்) விஷமத்தனம் முற்றிலும் நீங்கி, அல்லாஹ்வுடைய மார்க்கம் முழுமையாக நிலைபெறும் வரை (மக்காவாசிகளாகிய நிராகரிக்கும்) இவர்களுடன் போர் புரியுங்கள். (விஷமம் செய்வதிலிருந்து) அவர்கள் விலகிக்கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்குகிறான்

[40] (இதற்கு) அவர்கள் மாறு செய்தால் நிச்சயமாக அல்லாஹ் உங்கள் பாதுகாவலன் (பொறுப்பாளன்) என்பதை நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். அவன் சிறந்த பாதுகாவலன்; அவன் சிறந்த உதவியாளன்

[41] (நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு போரில் கிடைத்த எந்தப் பொருளிலும் ஐந்தில் ஒருபாகம் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும், (அவருடைய) உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், பயணிகளுக்கும் உரித்தானது. உண்மையாகவே நீங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டிருப்பதுடன், இரு படைகளும் சந்தித்து (முடிவான) தீர்ப்பளித்த (பத்ரு) நாளில் நாம் நம் அடியார் மீது இறக்கி வைத்த உதவியை அவன்தான் இறக்கி வைத்தான் என்பதையும் நீங்கள் நம்புபவர்களாக இருந்தால், உறுதியாக இதை அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்

[42] நீங்கள் (‘பத்ரு' போர்க்களத்தில் மதீனாவுக்குச்) சமீபமாக உள்ள பள்ளத்தாக்கிலும், அவர்கள் (உங்களுக்கு எதிர்புறமுள்ள) தூரமான கோடியிலும், (வர்த்தகர்களாகிய) வாகனக்காரர்கள் உங்களுக்குக் கீழ்ப்புறத்திலும் இருந்ததை நீங்கள் நினைத்துப் பாருங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் (சந்திக்கும் காலத்தையும் இடத்தையும் குறிப்பிட்டு) வாக்குறுதி செய்து கொண்டிருந்தால் (நீங்கள் குறிப்பிட்ட காலத்தில் அங்கு வந்து சேர்ந்து) அவ்வாக்குறுதியை நிறைவேற்றி வைப்பதில் நீங்கள் (ஏதும்) தவறிழைத்தே இருப்பீர்கள். எனினும், அல்லாஹ் முடிவு செய்துவிட்ட காரியம் நடந்தேறுவதற்காக (உங்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் அங்கு ஒன்று சேர்த்தான்). அழிந்தவர்கள் தக்க ஆதாரத்துடன் அழிவதற்காகவும், (தப்பிப்) பிழைத்தவர்கள் தக்க ஆதாரத்தைக் கொண்டே தப்புவதற்காகவும் (அல்லாஹ் இவ்வாறு செய்தான்). நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன், (அனைத்தையும்) நன்கறிந்தவன் ஆவான்

[43] (நபியே!) உமது கனவில் அல்லாஹ், அவர்களை (எண்ணிக்கையில்) குறைத்துக் காண்பித்ததையும் நீர் நினைத்துப் பார்ப்பீராக. அவர்களை அதிகப்படுத்தி உமக்குக் காண்பித்திருந்தால் நீரும் மற்ற நம்பிக்கையாளர்களும் தைரியமிழந்து போர் செய்வதைப் பற்றி உங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு இருப்பீர்கள். எனினும், அல்லாஹ் (உங்களை) காப்பாற்றினான். நிச்சயமாக அவன், உள்ளங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன் ஆவான்

[44] அவர்களும் நீங்களும் சந்தித்துக்கொண்ட சமயத்தில், அவர்களை உங்கள் கண்களுக்குக் குறைத்தும், உங்களை அவர்களுடைய கண்களுக்குக் குறைத்தும் காண்பித்ததெல்லாம், அல்லாஹ் முடிவு செய்த காரியம் நடைபெற்று (அவர்களை அழித்து)த் தீருவதற்காகத்தான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்விடமே எல்லா காரியங்களும் சென்று முடிவடைகின்றன

[45] நம்பிக்கையாளர்களே! நீங்கள் (போரின்போது எதிரியின்) கூட்டத்தைச் சந்தித்தால் (கலக்கமுறாது) உறுதியாக (எதிர்த்து) நின்று, அல்லாஹ்வின் திருப்பெயரை நீங்கள் அதிகமாக (உரக்க) சப்தமிட்டுக் கூறுங்கள். (அதனால்) நீங்கள் வெற்றியடைவீர்கள்

[46] மேலும், நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். (உங்களுக்குள் ஒற்றுமையாயிருங்கள்.) உங்களுக்குள் தர்க்கித்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறாயின், நீங்கள் தைரியத்தை இழந்து, உங்கள் ஆற்றல் போய்விடும். ஆகவே, நீங்கள் (சிரமங்களைச் சகித்துக் கொண்டு) பொறுமையாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்

[47] பெருமைக்காகவும் மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவும் தங்கள் வீடுகளிலிருந்து (முஸ்லிம்களை எதிர்க்க ‘பத்ரு' போருக்குப்) புறப்பட்டும், மக்களை அல்லாஹ்வுடைய பாதையில் செல்வதைத் தடை செய்து கொண்டும் இருந்தவர்களைப் போல் நீங்களும் ஆகிவிட வேண்டாம். அல்லாஹ் அவர்களுடைய செயல்களைச் சூழ்ந்து கொண்டிருக்கிறான்

[48] ஷைத்தான் அவர்களுடைய செயல்களை அவர்களுக்கு அழகாகக் காண்பித்து ‘‘எம்மனிதராலும் இன்று உங்களை ஜெயிக்க முடியாது; நிச்சயமாக நானும் உங்களுக்கு(ப் பக்க) துணையாக நிற்கிறேன்'' என்று கூறிக்கொண்டிருந்ததையும் (நபியே!) நீர் நினைத்துப் பார்ப்பீராக. (இவ்வாறு கூறிக்கொண்டிருந்த) அவன், இரு படைகளும் நேருக்குநேர் சந்திக்கவே புறங்காட்டி (ஓடி) பின்சென்று ‘‘நிச்சயமாக நான் உங்களைவிட்டு விலகிக் கொண்டேன். நீங்கள் பார்க்கமுடியாத ஒன்றை நான் பார்க்கிறேன்; நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்குப் பயப்படுகின்றன்; வேதனை செய்வதில் அல்லாஹ் மிகக் கடுமையானவன்'' என்று கூறினான்

[49] (உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும்) நயவஞ்சகர்களும், உள்ளங்களில் (நிராகரிப்பு என்னும்) நோயுள்ளவர்களும், (நம்பிக்கையாளர்களைச் சுட்டிக் காண்பித்து) ‘‘இவர்களை இவர்களுடைய மார்க்கம் மயக்கிவிட்டது'' என்று கூறிக்கொண்டிருந்ததையும் (நபியே!) நீர் நினைத்துப் பார்ப்பீராக. எவர் அல்லாஹ்விடமே பொறுப்பு சாட்டுகிறாரோ (அவரே வெற்றி அடைந்தவர். ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவன், ஞானமுடையவன் ஆவான்

[50] வானவர்கள் நிராகரிப்பவ(ரின் உயி)ர்களைக் கைப்பற்றும் சமயத்தில், அவர்களின் முகங்களிலும் முதுகுகளிலும் அடித்து (நரகத்திற்கு ஓட்டிச் சென்று) ‘‘எரிக்கும் (நரக) வேதனையை சுவைத்துப் பாருங்கள்'' என்று கூறுவதை (நபியே!) நீர் பார்க்க வேண்டாமா

[51] (மேலும், வானவர்கள் அவர்களை நோக்கி) ‘‘முன்னர் உங்கள் கைகள் சம்பாதித்துக் கொண்டவற்றின் காரணமாகவே இது (இவ்வேதனை உங்களுக்கு) ஏற்பட்டது. நிச்சயமாக அல்லாஹ் (தன்) அடியார்களில் எவரையும் ஒரு சிறிதும் அநியாயம் செய்வதேயில்லை'' (என்றும் கூறுவார்கள்)

[52] ஃபிர்அவ்னுடைய மக்களின் நிலைமை, இன்னும் அவர்களுக்கு முன்னிருந்த வர்களின் நிலைமை போலவே (இவர்களுடைய நிலைமையும் இருக்கிறது.) அவர்களும் அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யாக்கிக் கொண்டே இருந்தனர். ஆதலால், அவர்களின் பாவங்களின் காரணமாக அல்லாஹ் அவர்களைத் தண்டித்தான். நிச்சயமாக அல்லாஹ் மிக வலிமையானவனும், வேதனை செய்வதில் மிகக் கடினமானவனும் ஆவான்

[53] எந்த மக்களும் தங்கள் நிலைமையை மாற்றிக் கொள்ளாத வரை நிச்சயமாக அல்லாஹ்வும் அவர்களுக்குப் புரிந்த அருளை மாற்றி விடுவதில்லை. (அவர்கள் தங்கள் நிலையை மாற்றிக் கொண்டதனால்தான் அவர்களுக்கு இவ்வேதனை ஏற்பட்டது.) நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன், மிக்க அறிந்தவன் ஆவான்

[54] (ஆகவே, இவர்களின் நிலைமை நாம் முன்பு கூறியபடி) ஃபிர்அவ்னின் மக்களின் நிலைமையைப் போலும், அவர்களுக்கு முன்னிருந்தவர்களின் நிலைமையைப் போலுமே இருக்கிறது. (அவர்களும் இவர்களைப் போலவே) தங்கள் இறைவனின் அத்தாட்சிகளைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தனர். ஆகவே, அவர்களுடைய பாவங்களின் காரணமாக நாம் (பலவகை வேதனைகளைக் கொண்டு ஃபிர்அவ்னுக்கு முன்னிருந்த) அவர்களை அழித்துவிட்டதுடன் ஃபிர்அவ்னுடைய மக்களையும் நாம் மூழ்கடித்துவிட்டோம். (இவர்கள்) அனைவரும் அநியாயக்காரர்களாகவே இருந்தனர்

[55] நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மிருகங்களிலெல்லாம் மிகக் கெட்ட மிருகங்கள் (எவையென்றால்) நிராகரிப்பாளர்கள்தான். ஆகவே, அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்

[56] (இவர்களில்) எவர்களுடன் நீர் உடன்படிக்கை செய்தபோதிலும் பின்னர், அந்த உடன்படிக்கையை ஒவ்வொரு முறையிலும் முறித்தே வருகின்றனர். இன்னும், அவர்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுவதேயில்லை

[57] போரில் நீர் அவர்களைச் சந்தித்தால் அவர்களுக்குப் பின்னால் இருப்பவர்களும் (திடுக்கிட்டு) பயந்தோடும்படி அவர்களைச் சிதறடித்து விடுவீராக. (இதனால்) அவர்கள் நல்லறிவு பெறலாம்

[58] (உங்களுடன் உடன்படிக்கை செய்திருக்கும்) எந்த வகுப்பினரும் துரோகம் செய்வார்களென நீர் பயந்தால், அதற்குச் சமமாகவே (அவ்வுடன் படிக்கையை) அவர்களிடம் எறிந்துவிடுவீராக. நிச்சயமாக அல்லாஹ், துரோகிகளை நேசிப்பதேயில்லை

[59] நிராகரிப்பவர்கள் தாங்கள் தப்பித்துக் கொண்டதாக ஒருபோதும் எண்ண வேண்டாம். நிச்சயமாக அவர்கள் (நம்மைத்) தோற்கடிக்க முடியாது

[60] அவர்களை எதிர்ப்பதற்காக (ஆயுத) பலத்தையும், லாயத்தில் (திறமையான) குதிரைகளையும், உங்களுக்கு சாத்தியமான அளவு நீங்கள் (எந்நேரமும்) தயார்படுத்தி வையுங்கள். இதனால் அல்லாஹ்வுடைய எதிரிகளையும், உங்கள் எதிரிகளையும் நீங்கள் பயப்படச் செய்யலாம். இவர்களைத் தவிர (எதிரிகளில்) வேறு சிலர் இருக்கின்றனர். அவர்களை நீங்கள் அறியமாட்டீர்கள். அல்லாஹ்தான் அறிவான். (இதனால் அவர்களையும் நீங்கள் திடுக்கிடச் செய்யலாம். இதற்காக) அல்லாஹ்வுடைய பாதையில் நீங்கள் எதைச் செலவு செய்தபோதிலும் (அதன் கூலியை) உங்களுக்கு முழுமையாகவே அளிக்கப்படும்; (அதில்) ஒரு சிறிதும் (குறைவு செய்து) நீங்கள் அநீதி இழைக்கப்படமாட்டீர்கள்

[61] (நபியே) அவர்கள் சமாதானத்திற்கு இணங்கிவந்தால், நீரும் அதன் பக்கம் இணங்கிவருவீராக. அல்லாஹ்விடமே பொறுப்பு சாட்டுவீராக; நிச்சயமாக அவன்தான் நன்கு செவியுறுபவன், (அனைத்தையும்) நன்கறிந்தவன்

[62] (நபியே!) அவர்கள் உமக்கு சதி செய்யக் கருதினால் (உம்மைப் பாதுகாக்க) நிச்சயமாக அல்லாஹ் உமக்குப் போதுமானவனாக இருக்கிறான். அவன்தான் உம்மை தன் உதவியைக் கொண்டும் நம்பிக்கையாளர்களைக் கொண்டும் பலப்படுத்தினான்

[63] அந்த நம்பிக்கையாளர்களுடைய உள்ளங்களில் (இஸ்லாமின் மூலம்) அன்பை ஊட்டி (சிதறிக்கிடந்த அவர்களை) ஒன்று சேர்த்தான். பூமியிலுள்ள அனைத்தையும் நீர் செலவு செய்தபோதிலும் அவர்களுடைய உள்ளங்களில் அன்பையூட்ட உம்மால் முடியாது. எனினும், அல்லாஹ்தான் அவர்களை (அன்பின் மூலம்) ஒன்று சேர்த்தான். நிச்சயமாக அவன் (அனைத்தையும்) மிகைத்தவன், ஞானமுடையவன்

[64] நபியே! உமக்கும், நம்பிக்கையாளர்களில் உம்மைப் பின்பற்றியவர்களுக்கும் அல்லாஹ்வே போதுமானவன்

[65] நபியே! நம்பிக்கையாளர்களை போருக்குத் (தயாராகும்படித்) தூண்டுவீராக. உங்களில் பொறுமையும், சகிப்புத்தன்மையும் உடைய இருபது பேர்கள் இருந்தால் இருநூறு பேர்களை வெற்றி கொள்வார்கள். உங்களில் (அத்தகைய) நூறு பேர்கள் இருந்தால் நிராகரிப்பவர்களில் ஆயிரம் பேரை வெற்றி கொள்வார்கள். (நீங்கள் மிகக் குறைவாக இருந்தும் அவர்களை துணிவுடன் எதிர்க்கலாம் என்று கூறியது, உங்களுக்கு அல்லாஹ் புரியும் உதவியை). நிச்சயமாக அவர்கள் அறியாத மக்களாக இருப்பதுதான் இதற்குக் காரணமாகும்

[66] எனினும், நிச்சயமாக உங்களில் பலவீனம் இருக்கிறது என்பதை அல்லாஹ் நன்கறிந்து கொண்டு தற்சமயம் (அதை) உங்களுக்கு இலகுவாக்கி விட்டான். ஆகவே, உங்களில் பொறுமையும், சகிப்புத் தன்மையும் உடைய நூறு பேர்களிருந்தால் (மற்ற) இருநூறு பேர்களை வென்றுவிடுவார்கள். (இத்தகைய) ஆயிரம் பேர் உங்களில் இருந்தால் அல்லாஹ்வின் உதவி கொண்டு (மற்ற) இரண்டாயிரம் பேர்களை வென்று விடுவார்கள். அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்

[67] (இஸ்லாமையும் முஸ்லிம்களையும் அழித்தொழிக்க வந்த) எதிரிகளை கொன்று குவிக்கும் வரை அவர்களை கைதியாக்குவது இறைத்தூதருக்கு ஆகுமானதல்ல. நீங்கள் இவ்வுலகப் பொருளை விரும்புகிறீர்கள். அல்லாஹ்வோ (உங்களுக்கு) மறுமை வாழ்க்கையை விரும்புகிறான். அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவன், ஞானமுடையவன் ஆவான்

[68] அல்லாஹ்விடம் (உங்களுக்கு மன்னிப்பு) ஏற்கனவே உறுதி செய்யப் படாமலிருப்பின் நீங்கள் (பத்ரு போரில் கைதிகளிடமிருந்து பிணைத் தொகையை) வாங்கியதில் பெரியதொரு வேதனை உங்களைப் பிடித்திருக்கும்

[69] ஆகவே, (எதிரிகளிடமிருந்து) உங்களுக்குக் கிடைத்தவற்றை, நல்ல ஆகுமான பொருள்களாகவே (கருதிப்) புசியுங்கள். (இனி இத்தகைய விஷயங்களில்) அல்லாஹ் வுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் மிக மன்னிப்பவன், மகா கருணையாளன் ஆவான்

[70] நபியே! உங்களிடம் சிறைப்பட்டிருப்பவர்களை நோக்கிக் கூறும்: ‘‘உங்கள் உள்ளங்களில் நல்லெண்ணம் இருப்பதை அல்லாஹ் அறிந்தால் உங்களிடமிருந்து எடுக்கப்பட்டவற்றைவிட மிக்க மேலானவற்றை உங்களுக்குக் கொடுத்து உங்கள் குற்றங்களை (அவன்) மன்னித்து விடுவான். ஏனென்றால், அல்லாஹ் மிக மன்னிப்பவன், மகா கருணையாளன் ஆவான்

[71] (நபியே!) அவர்கள் உமக்கு சதி செய்யக் கருதினால் (அதைப்பற்றி நீர் கவலைப்படாதீர்.) இதற்கு முன்னர் அவர்கள் அல்லாஹ்வுக்கும் சதி செய்யக் கருதினார்கள். ஆதலால்தான் அவர்களைச் சிறைப்படுத்த (உங்களுக்கு) வசதியளித்தான். அல்லாஹ் (அனைத்தையும்) மிக அறிந்தவன் ஞானமுடையவன் ஆவான்

[72] நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு (தங்கள்) ஊரை விட்டுப் புறப்பட்டு, அல்லாஹ்வுடைய பாதையில் தங்கள் உயிர்களையும் பொருள்களையும் தியாகம் செய்து போர் புரிந்தார்களோ அவர்களும், எவர்கள் அவர்களை (தங்கள் இல்லங்களில்) அரவணைத்து (மற்றும் பல) உதவி புரிந்தார்களோ அவர்களும் ஆகிய இவ்விரு வகுப்பாரும் ஒருவருக்கொருவர் பொறுப்பு வகிக்கும் உற்ற நண்பர்களாக இருக்கின்றனர். ஆயினும், நம்பிக்கை கொண்டவர்களில் எவர்கள் இன்னும் (தங்கள்) ஊரை விட்டுப் புறப்படாமல் இருக்கின்றனரோ அவர்கள் (தங்கள்) ஊரை விட்டுப் புறப்படும் வரை நீங்கள் அவர்களுடைய எவ்விஷயத்திற்கும் பொறுப்பாளிகளல்லர். எனினும், அவர்கள் மார்க்க விஷயத்தில் உங்களிடம் உதவி தேடினாலோ (அவர்களுக்கு) உதவி செய்வது உங்கள் மீது கடமையாகும். ஆயினும், உங்களிடம் உடன்படிக்கை செய்து கொண்டிருக்கும் ஒரு வகுப்பினருக்கு எதிராக (அவர்களுக்கு உதவி செய்வது) கூடாது. அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன் ஆவான்

[73] நிராகரிப்பவர்களில் சிலர், அவர்களில் சிலருக்கு நண்பர்களே! (ஆகவே, அவர்களில் சிலர் சிலருடைய பொருளை சுதந்திரமாக அடைய விட்டுவிடுங்கள்.) இவ்வாறு நீங்கள் செய்யாவிடில், பூமியில் பெரும் கலகமும் குழப்பமும் ஏற்பட்டுவிடும்

[74] எவர்கள் நம்பிக்கை கொண்டு (தங்கள்) ஊரைவிட்டுப் புறப்பட்டு அல்லாஹ்வுடைய பாதையில் போர்புரிகிறார்களோ அவர்களும், எவர்கள் அவர்களை (தங்கள் இல்லங்களில்) அரவணைத்து (மேலும், பல) உதவியும் செய்கிறார்களோ அவர்களும்தான் உண்மையான நம்பிக்கையாளர்கள். அவர்களுக்கு மன்னிப்பும் உண்டு; கண்ணியமான உணவும் உண்டு

[75] (இதன் பின்னரும் மக்காவாசிகளில்) எவர்கள் நம்பிக்கை கொண்டு (தங்கள்) ஊரை விட்டுப் புறப்பட்டு உங்களுடன் சேர்ந்து (எதிரியை எதிர்த்து) போர் புரிகிறார்களோ அவர்களும் உங்களைச் சேர்ந்தவர்களே! இனி அல்லாஹ்வுடைய வேதக் கட்டளைப்படி உங்கள் உறவினர்களில் உள்ளவர்களே, ஒருவர் மற்றவருக்கு பொறுப்பு வகிப்பார்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவன் ஆவான்

அத்தவ்பா

Surah 9

[1] (நம்பிக்கையாளர்களே!) இணைவைத்து வணங்குபவர்களில் எவர்களிடம் நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்டிருந்தீர்களோ அவர்களிடமிருந்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் விலகிக் கொண்டனர்

[2] ஆகவே, (இணைவைத்து வணங்குபவர்களை நோக்கி) ‘‘நீங்கள் (இன்றிலிருந்து) நான்கு மாதங்கள் வரை (மக்காவின்) பூமியில் (எங்கும்) சுற்றித் திரியலாம். நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வைத் தோற்கடிக்க மாட்டீர்கள் என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்களை இழிவுபடுத்துவான் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்'' (என்று நபியே! நீர் கூறுவீராக)

[3] அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் இணைவைத்து வணங்குபவர்களுடன் (செய்திருந்த உடன்படிக்கையில்) இருந்து நிச்சயமாக விலகிக் கொண்டார்கள் என்ற விஷயத்தை இம்மாபெரும் ஹஜ்ஜூடைய நாளில் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் மக்களுக்குப் பகிரங்கமாக அறிவிக்கின்றனர். ஆகவே, (இணைவைத்து வணங்குபவர்களே! இணைவைப்பதிலிருந்தும் நிராகரிப்பதில் இருந்தும்) நீங்கள் விலகிக் கொண்டால் அது உங்களுக்குத்தான் மிக்க நன்று. (இல்லையெனில்,) நீங்கள் புறக்கணித்தாலோ நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாது என்பதை உறுதியாக அறிந்துகொள்ளுங்கள். (நபியே! இந்) நிராகரிப்பவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு நீர் நற்செய்தி கூறுவீராக

[4] ஆயினும், நீங்கள் உடன்படிக்கை செய்துகொண்ட இந்த இணைவைத்து வணங்குபவர்களில் எவர்கள் (தங்கள் உடன்படிக்கையில்) எதையும் உங்களுக்குக் குறைவு செய்யாதும், உங்களுக்கு எதிராக எவருக்கும் உதவி செய்யாமலும் இருக்கின்றனரோ அவர்களுக்கு அவர்களின் உடன்படிக்கையை அதன் தவணை வரை (ஒரு குறைவுமின்றி) முழுமைப்படுத்தி வையுங்கள். நிச்சயமாக அல்லாஹ் இறையச்சமுடையவர்களை நேசிக்கிறான்

[5] (ஒவ்வொரு வருடத்திலும் துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய சிறப்புற்ற இந்நான்கு மாதங்களிலும் போர்புரிவது ஆகாது.) சிறப்புற்ற (இந்நான்கு) மாதங்கள் சென்றுவிட்டால் இணைவைப்பவர்களைக் கண்ட இடமெல்லாம் வெட்டுங்கள்; அவர்களைச் சிறைப்பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள். ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் (அவர்கள் வரவை எதிர்பார்த்து) அவர்களுக்காக நீங்கள் பதுங்கியிருங்கள். அவர்கள் (தங்கள் விஷமத்திலிருந்தும், நிராகரிப்பிலிருந்தும்) பாவத்திலிருந்து(ம்) விலகி (நம்பிக்கை கொண்டு) தொழுகையையும் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வந்தால் அவர்களை அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள். (அவர்கள் விஷயத்தில் குறுக்கிடாதீர்கள்.) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிகக் கருணையுடையவன் ஆவான்

[6] (நபியே!) இணைவைத்து வணங்குபவர்களில் எவனும் உம்மிடம் பாதுகாப்பைக் கோரினால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவன் செவியுறும்வரை அவனுக்கு பாதுகாப்பு அளிப்பீராக. (அவன் அதை செவியுற்றும் நம்பிக்கை கொள்ளாவிட்டால்) அவனை அவனுக்கு பாதுகாப்புள்ள (வேறு) இடத்திற்கு அனுப்பிவிடுவீராக! ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் அறிவில்லாத மக்கள் ஆவர்

[7] அல்லாஹ்விடத்திலும், அவனுடைய தூதரிடத்திலும் இணைவைத்து வணங்குபவர்களின் உடன்படிக்கைக்கு எவ்வாறு மதிப்பிருக்க முடியும்? ஆயினும், சிறப்புற்ற மஸ்ஜிதின் முன் உங்களுடன் உடன்படிக்கை செய்து கொண்டவர்கள் (தங்கள் உடன்படிக்கையின்படி) உங்களுடன் உறுதியாக இருக்கும் வரை, நீங்களும் அவர்களுடன் உறுதியாகவே இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் இறையச்சமுடையவர்களை நேசிக்கிறான்

[8] (எனினும் அவர்களின் உடன்படிக்கையையும்) எவ்வாறு (நம்ப முடியும்)? அவர்கள் உங்களை வெற்றி கொண்டாலோ (நீங்கள் அவர்களுக்கு) உறவினர்கள் என்பதையும் (உங்களுக்கும் அவர்களுக்கும் இடையிலுள்ள) உடன்படிக்கையையும் பொருட்படுத்துவதேயில்லை. தங்கள் வார்த்தைகளைக் கொண்டு (மட்டும்) உங்களைத் திருப்திபடுத்துகின்றனர்; ஆனால், அவர்களுடைய உள்ளங்களோ (உங்களிடமிருந்து) விலகிக் கொள்கின்றன. அவர்களில் பெரும்பாலானவர்கள் பாவிகளே ஆவர்

[9] அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை சொற்ப விலைக்கு விற்று விட்டு (மக்கள்) அவனுடைய பாதையில் செல்வதையும் தடுக்கின்றனர். நிச்சயமாக அவர்கள் செய்யும் காரியம் மிகவும் கெட்டது

[10] அவர்கள் எந்த நம்பிக்கையாளரைப் பற்றியும் (அவர் தமது) உறவினர் என்பதையும், (அவர்களுடன் செய்திருக்கும்) உடன்படிக்கையையும் பொருட்படுத்துவதேயில்லை. நிச்சயமாக இவர்கள்தான் வரம்பு மீறியவர்கள் ஆவர்

[11] அவர்கள் (தங்கள் நிராகரிப்பிலிருந்து விலகி அல்லாஹ்விடம்) மன்னிப்புக்கோரி, தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வந்தால் (அவர்கள்) உங்கள் மார்க்க சகோதரர்களே. அறிவுள்ள மக்களுக்கு (நம்) வசனங்களை (இவ்வாறு) விவரிக்கிறோம்

[12] (சத்தியம் செய்து) உடன்படிக்கை செய்து கொண்டதன் பின்னரும், அவர்கள் தங்கள் சத்தியங்களை முறித்து உங்கள் மார்க்கத்தைப் பற்றியும் தவறான குற்றங்குறைகள் கூறிக்கொண்டிருந்தால், நிச்சயமாக நிராகரிக்கும் (இத்தகைய) மக்களின் வாக்குறுதிகள் முறிந்துவிட்டன. ஆகவே, (இத்தகைய விஷமத்திலிருந்து) அவர்கள் விலகிக்கொள்வதற்காக நீங்கள் நிராகரிப்பை உடைய (அந்த) தலைவர்களிடம் போர் புரியுங்கள்

[13] தங்கள் சத்திய உடன்படிக்கைகளை முறித்து (நம்) தூதரை (ஊரைவிட்டு) வெளியேற்றவும் விரும்பி (அதற்காக) முயற்சித்த மக்களிடம் நீங்கள் போர் புரிய வேண்டாமா? அவர்கள்தான் (இத்தகைய விஷமத்தை) உங்களிடம் முதலில் ஆரம்பித்தனர். அவர்களுக்கு நீங்கள் பயப்படுகிறீர்களா? உண்மையாகவே நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் நீங்கள் பயப்படத் தகுதியானவன் அல்லாஹ் (ஒருவன்)தான்

[14] நீங்கள் அவர்களிடம் போர் புரியுங்கள். உங்கள் கைகளைக் கொண்டே அல்லாஹ் அவர்களுக்கு வேதனை கொடுத்து, அவர்களை இழிவுபடுத்தி, அவர்களை நீங்கள் வெற்றிபெற உங்களுக்கு உதவியும் புரிந்து, நம்பிக்கை கொண்ட மக்களின் உள்ளங்களுக்குத் திருப்தியுமளிப்பான்

[15] (அவர்கள் மீது) இவர்கள் உள்ளங்களில் (குமுறிக் கொண்டு) உள்ள கோபங்களையும் போக்கிவிடுவான். அல்லாஹ் (அவர்களிலும்) தான் விரும்பியவர்களின் மன்னிப்புக்கோருதலை அங்கீகரிக்கிறான். ஏனென்றால், அல்லாஹ் மிக அறிந்தவன் ஞானமுடையவன் ஆவான்

[16] (நம்பிக்கையாளர்களே!) உங்களில் (உண்மையாகவே மனம் விரும்பி) போர் புரிந்தவர்கள் யாரென்பதையும் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், நம்பிக்கையாளர்களையும் தவிர (மற்றெவரையும் தங்கள்) அந்தரங்க நண்பர்களாக எடுத்துக் கொள்ளாதவர்கள் யார் என்பதையும், அல்லாஹ் (உங்களைச் சோதித்து) அறிவிக்காமல், நீங்கள் விட்டு விடப்படுவீர்கள் என்று எண்ணிக் கொண்டீர்களா? அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவன் ஆவான்

[17] இணைவைத்து வணங்கும் இவர்கள், தாங்கள் நிராகரிப்பவர்கள்தான் என்று (பகிரங்கமாக) கூறிக் கொண்டிருக்கும் வரை, அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்ய அவர்களுக்கு உரிமையில்லை. இவர்களுடைய நன்மைகள் அனைத்தும் அழிந்துவிட்டன. அவர்கள் என்றென்றும் நரகத்திலேயே தங்கி விடுவார்கள்

[18] எவர்கள் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டு தொழுகையையும் கடைப் பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருவதுடன், அல்லாஹ்வைத் தவிர மற்றெவருக்கும் பயப்படாமலும் இருக்கிறார்களோ, அவர்கள்தான் அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளைப் பராமரிக்கத் தகுதியுடையவர்கள். இவர்கள்தான் நேரான வழியில் இருப்பவர்கள்

[19] (நம்பிக்கை கொள்ளாமல் இருந்துகொண்டு) ஹாஜிகளுக்குத் தண்ணீர் புகட்டுபவர் களையும், சிறப்புற்ற மஸ்ஜிதுக்கு ஊழியம் செய்பவர்களையும் அல்லாஹ்வை இன்னும் இறுதிநாளை நம்பிக்கை கொண்டு, அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிபவர்களுக்குச் சமமாக நீங்கள் ஆக்கி விட்டீர்களா? அல்லாஹ்வின் சமூகத்தில் (இவ்விருவரும்) சமமாக மாட்டார்கள். அல்லாஹ், அநியாயக்கார மக்களை நேரான வழியில் செலுத்துவதில்லை

[20] எவர்கள், நம்பிக்கை கொண்டு (தங்கள்) ஊர்களிலிருந்து வெளியேறி, அல்லாஹ்வுடைய பாதையில் தங்கள் பொருள்களையும் உயிர்களையும் தியாகம் செய்து போர்புரிகின்றனரோ அவர்கள் அல்லாஹ்விடத்தில் மகத்தான பெரும் பதவி பெற்றவர்கள். இவர்கள்தான் வெற்றி அடைந்தவர்கள்

[21] அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் தன் அன்பையும், திருப்பொருத்தத்தையும் அளித்து சொர்க்கங்களையும் தருவதாக நற்செய்தி கூறுகிறான். அவர்களுக்கு அவற்றில் என்றென்றும் நிலையான சுகபோகங்கள் உண்டு

[22] என்றென்றும் அவற்றில் அவர்கள் நிலை பெற்றிருப்பார்கள். அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக (அவர்களுக்கு மேலும்) மகத்தான கூலி உண்டு

[23] நம்பிக்கையாளர்களே! உங்கள் தந்தைகளும், சகோதரர்களும் நம்பிக்கையை விட்டு நிராகரிப்பை விரும்பினால், நீங்கள் அவர்களை (உங்கள்) பாதுகாப்பாளர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம். உங்களில் எவரேனும் அவர்களை பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொண்டால் நிச்சயமாக அவர்கள்தான் வரம்பு மீறியவர்கள்

[24] (நபியே! நம்பிக்கையாளர்களை நோக்கி) நீர் கூறுவீராக: உங்கள் தந்தைகளும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் சகோதரர்களும், உங்கள் மனைவிகளும், உங்கள் குடும்பங்களும், நீங்கள் சம்பாதித்து வைத்திருக்கும் (உங்கள்) பொருள்களும், நஷ்டமாகிவிடுமோ என நீங்கள் பயந்து (மிக எச்சரிக்கையுடன்) செய்து வரும் வர்த்தகமும், உங்களுக்கு மிக்க விருப்பமுள்ள (உங்கள்) வீடுகளும் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் விடவும், அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிவதைவிடவும் உங்களுக்கு மிக விருப்பமானவையாக இருந்தால் (நீங்கள் உண்மை நம்பிக்கையாளர்களல்ல. நீங்கள் அடைய வேண்டிய தண்டனையைப் பற்றிய) அல்லாஹ்வுடைய கட்டளை வரும் வரை நீங்கள் எதிர்ப்பார்த்திருங்கள். (இப்படிப்பட்ட) பாவிகளை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துவதில்லை

[25] பல போர்க்களங்களில் (உங்கள் எண்ணிக்கைக் குறைவாக இருந்தும்) நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்திருக்கிறான். எனினும், ஹுனைன் போர் அன்று உங்களை பெருமையில் ஆழ்த்திக் கொண்டிருந்த உங்கள் அதிகமான (மக்கள்) தொகை உங்களுக்கு ஒரு பலனும் அளிக்கவில்லை. பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும் (அதுசமயம் அது) உங்களுக்கு மிக நெருக்கமாகி (குறுகி) விட்டது. நீங்கள் புறங்காட்டி ஓடவும் தலைப்பட்டீர்கள்

[26] (இதன்) பின்னர், அல்லாஹ் தன் தூதர் மீதும், நம்பிக்கையாளர்கள் மீதும் தன் அமைதியை இறக்கி அருள்புரிந்தான். உங்கள் கண்ணுக்குத் தெரியாத படைகளையும் (உங்கள் உதவிக்காக) இறக்கி வைத்து நிராகரிப்பவர்களை வேதனை செய்தான். இதுதான் நிராகரிப்பவர்களுக்குரிய கூலியாகும்

[27] இதன் பின்னரும் (அவர்கள் பாவமன்னிப்புக் கோரினால் அவர்களில்) அல்லாஹ் விரும்பியவர்களை மன்னித்து அங்கீகரித்துக் கொள்கிறான். அல்லாஹ் மிக மன்னிப்பவன், மிகக் கருணையுடையவன்

[28] நம்பிக்கையாளர்களே! நிச்சயமாக இணைவைத்து வணங்குபவர்கள் அசுத்தமானவர்களே. ஆகவே, அவர்கள் இந்த ஆண்டுக்குப் பின்னர் இனி சிறப்புற்ற இந்த மஸ்ஜிதை நெருங்க வேண்டாம். (அவர்களைத் தடை செய்தால் அவர்களால் கிடைத்து வந்த செல்வம் நின்று உங்களுக்கு) வறுமை வந்துவிடுமோ என்று நீங்கள் பயந்தால் (அதைப் பற்றி பாதகமில்லை.) அல்லாஹ் நாடினால், அதிசீக்கிரத்தில் தன் அருளைக் கொண்டு உங்களை செல்வந்தர்களாக்கி விடுவான் (என்பதை அறிந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவன், ஞானமுடையவன் ஆவான்

[29] (நம்பிக்கையாளர்களே!) வேதம் அருளப்பட்டவர்களில் எவர்கள் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொள்ளாமல், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் தடை செய்தவற்றை தடையாகக் கருதாமல், மேலும், இந்த சத்திய மார்க்கத்தைப் பின்பற்றாமலும் இருக்கின்றனரோ அவர்கள், (தங்கள்) கையால் பணிவுடன் ‘ஜிஸ்யா' (என்னும் கப்பம்) கட்டும் வரை நீங்கள் அவர்களிடம் போர் புரியுங்கள்

[30] யூதர்கள் (நபி) ‘உஜைரை' அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகின்றனர். (இவ்வாறே) கிறிஸ்தவர்கள் ‘மஸீஹை' அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகின்றனர். இவர்கள் தங்கள் வாய்களால் கூறும் இக்கூற்றானது இவர்களுக்கு முன்னிருந்த நிராகரிப்பவர்களின் கூற்றையே ஒத்திருக்கிறது. அல்லாஹ் இவர்களை அழித்து விடுவான். (சத்தியத்தைப் புறக்கணித்து) இவர்கள் எங்கு வெருண்டோடுகின்றனர்

[31] இவர்கள் அல்லாஹ்வைத் தவிர்த்து தங்கள் பாதிரிகளையும், சந்நியாசிகளையும், மர்யமுடைய மகன் மஸீஹையும், (தங்கள்) கடவுள்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர். எனினும், வணக்கத்திற்குரிய ஒரே ஓர் இறைவனைத் தவிர மற்றெவரையும் வணங்கக் கூடாதென்றே இவர்கள் அனைவரும் ஏவப்பட்டு இருக்கின்றனர். வணக்கத்திற்குரிய இறைவன் அவனைத் தவிர (வேறெவனும்) இல்லை. அவர்கள் இணைவைக்கும் இவற்றைவிட்டு அவன் மிகவும் பரிசுத்தமானவன்

[32] இவர்கள் தங்கள் வாய்களைக் கொண்டே (ஊதி) அல்லாஹ்வுடைய பிரகாசத்தை அணைத்துவிட விரும்புகின்றனர். எனினும், இந்நிராகரிப்பவர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தனது பிரகாசத்தை முழுமைப்படுத்தி வைக்காமல் இருக்கப்போவதில்லை

[33] அவன்தான் தன் தூதரை நேரான வழியைக் கொண்டும், சத்திய மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பிவைத்தான். இணைவைத்து வணங்குபவர்கள் (அதை) வெறுத்தபோதிலும் (உலகிலுள்ள) எல்லா மார்க்கங்களையும் அந்த சத்திய மார்க்க(மான இஸ்லா)ம் வென்றுவிடும்படி அவன் செய்வான்

[34] நம்பிக்கையாளர்களே! (வேதக்காரர்களின்) பாதிரிகளிலும், (சிலை வணங்கிகளின்) சந்நியாசிகளிலும் பலர் மக்களின் செல்வங்களைத் தப்பான முறையில் விழுங்கி வருவதுடன் அல்லாஹ்வுடைய பாதையில் (மக்கள்) செல்வதையும் தடை செய்கின்றனர். ஆகவே, (இவர்களுக்கும் இன்னும் எவர்கள்) தங்கத்தையும், வெள்ளியையும் சேகரித்து வைத்துக்கொண்டு, அதை அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்யாதிருக்கின்றனரோ அவர்களுக்கும் (நபியே!) நீர் துன்புறுத்தும் வேதனையை நற்செய்தியாகக் கூறுவீராக

[35] (தங்கம், வெள்ளியாகிய) அவற்றை நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சி அவற்றைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும், அவர்களுடைய விலாக்களிலும், அவர்களுடைய முதுகுகளிலும் சூடிட்டு ‘‘உங்களுக்காக நீங்கள் சேகரித்து வைத்திருந்தவை இவைதான். ஆகவே, நீங்கள் சேகரித்து வைத்திருந்த இவற்றை சுவைத்துப் பாருங்கள்'' என்று கூறப்படும் நாளை (நபியே! நீர் அவர்களுக்கு ஞாபகமூட்டுவீராக)

[36] நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை (ஓர் ஆண்டுக்கு) பன்னிரண்டுதான். (இவ்வாறே) வானங்களையும், பூமியையும் படைத்த நாளிலிருந்து அல்லாஹ்வின் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு (மாதங்கள்) சிறப்புற்றவை. இதுதான் நேரான மார்க்கமாகும். ஆகவே, இவற்றில் நீங்கள் (போர் புரிந்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ள வேண்டாம். எனினும், இணைவைத்து வணங்குபவர்களில் எவரேனும் (அம்மாதங்களில்) உங்களுடன் போர் புரிந்தால் அவ்வாறே நீங்களும் அவர்கள் அனைவருடனும் (அம்மாதங்களிலும்) போர் புரியுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் இறையச்சமுடையவர்களுடன் இருக்கிறான் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்

[37] (போர் செய்யக்கூடாதென்று தடுக்கப்பட்டுள்ள மாதங்களை அவர்கள் தங்கள் இஷ்டப்படி) முன் பினோக்குவதெல்லாம் நிச்சயமாக நிராகரிப்பையே அதிகப்படுத்துகிறது. இதனால் நிராகரிப்பவர்களே வழி கெடுக்கப்படுகின்றனர். ஏனென்றால், (அவர்கள் தங்கள் இஷ்டப்படி மாதங்களை முன் பினோக்கி) ஓர் ஆண்டில் (அம்மாதங்களில் போர் புரிவதை) ஆகுமாக்கிக் கொள்கின்றனர். மற்றோர் ஆண்டில் (அதே மாதங்களில் போர் புரிவது கூடாது என்று) தடுத்து விடுகின்றனர். (இவ்வாறு அவர்கள் செய்வதன் நோக்கமெல்லாம் தாங்கள் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கையை) அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கைக்குச் சரியாக்கி அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களையும் தாங்கள் ஆகுமாக்கிக் கொள்வதற்குத்தான். அவர்களுடைய இத்தீயச் செயல்கள், (ஷைத்தானால்) அவர்களுக்கு அழகாக்கப்பட்டு விட்டன. நிராகரிக்கும் (இந்த) மக்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துவதில்லை

[38] நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுடைய பாதையில் (போர் புரிய) நீங்கள் புறப்படுங்கள் என்று உங்களுக்குக் கூறப்பட்டால் (அவ்வாறு புறப்படாமல்) நீங்கள் ஊரில் தங்கிவிடுவதன் காரணம் என்ன? மறுமையை விட இவ்வுலக வாழ்க்கையைக் கொண்டு நீங்கள் திருப்தியடைந்து விட்டீர்களா? மறுமை(யின் வாழ்க்கை)க்கு முன்பாக இவ்வுலக வாழ்க்கை வெகு அற்பமானதே

[39] (உங்களை போருக்கு அழைக்கப்பட்டு) நீங்கள் செல்லாவிட்டால், உங்களை மிகத் துன்புறுத்தும் வேதனையால் வேதனை செய்வான். (மேலும், உங்களைப் போக்கி) உங்கள் இடத்தில் மற்றவர்களை ஏற்படுத்தி விடுவான். (இதற்காக) நீங்கள் அவனுக்கு ஒரு தீங்கும் இழைக்க முடியாது. ஏனென்றால், அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக பேராற்றலுடையவன்

[40] (நம் தூதருக்கு) நீங்கள் உதவி செய்யாவிட்டால் (அதனால் அவருக்கு ஏதும் நஷ்டம் ஏற்பட்டு விடாது. ஏனென்றால்) நிராகரிப்பவர்கள் அவரை (ஊரைவிட்டு) வெளியேற்றிய சமயத்தில் நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவிசெய்தே இருக்கிறான். (மலைக்) குகையில் இருந்த இருவரில் ஒருவராக அவர் இருந்த (போது எதிரிகள் சூழ்ந்துகொண்ட) சமயத்தில் தன்னுடன் (குகையில்) இருந்த தோழ(ராகிய அபூபக்)ரை நோக்கி ‘‘நீர் கவலைப்படாதீர்! நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்'' என்று கூறியபோதும் அல்லாஹ் அவருக்குத் தன் புறத்திலிருந்து மனநிம்மதியை அளித்தான். (மற்ற போர் சமயங்களிலும்) நீங்கள் காணமுடியாத படைகளைக் கொண்டு அவருக்கு உதவி செய்து நிராகரிப்பவர்களின் வார்த்தையை (மார்க்கத்தை) தாழ்த்தினான். ஏனென்றால், அல்லாஹ்வின் வார்த்தை (மார்க்கம்)தான் மிக உயர்வானது. இன்னும், அல்லாஹ் (அனைத்தையும்) மிகைத்தவன், ஞானமுடையவன் ஆவான்

[41] நீங்கள் சொற்ப ஆயுதமுடையவர்களாக இருந்தாலும் சரி, முழு ஆயுத பாணிகளாக இருந்தாலும் சரி, நீங்கள் (கால்நடையாகவோ குதிரைமீதேறியோ) புறப்பட்டு, அல்லாஹ்வுடைய பாதையில் உங்கள் பொருள்களையும் உயிர்களையும் தியாகம் செய்து போர் புரியுங்கள். நீங்கள் அறிவுடையவர்களாய் இருந்தால் இதுவே உங்களுக்கு மிக நன்று

[42] (நபியே!) எளிதில் ஏதும் பொருள் கிடைக்கக் கூடியதாயிருந்து (நீங்கள் சென்ற இடம்) சமீபத்திலும் இருந்திருந்தால் நிச்சயமாக அவர்கள் உம்மைப் பின்பற்றி வந்தே இருப்பார்கள். எனினும் (நீர் சென்ற இடம் அவர்களுக்கு) வெகு தூரமாகி பெரும் சிரமமாகத் தோன்றியது. (ஆதலால்தான் அவர்கள் உம்மைப் பின்பற்றி வரவில்லை. ஆகவே, நீர் அவர்களை நோக்கி ‘‘நீங்கள் ஏன் வரவில்லை'' எனக் கேட்பீராயின் அதற்கவர்கள்) ‘‘எங்களுக்குச் சாத்தியப்பட்டிருந்தால் நிச்சயமாக நாங்கள் உங்களுடன் வந்திருப்போம்'' என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்(து கூறு)வார்கள். (இவ்வாறு பொய் சத்தியம் செய்யும்) அவர்கள் தங்களையே அழித்துக் கொள்கின்றனர். நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள் என்பதை அல்லாஹ் நன்கறிவான்

[43] (நபியே!) அல்லாஹ் உம்மை மன்னித்தருள்வானாக! (அவர்கள் உம்முடன் போருக்கு வராது தங்கிவிட உங்களிடம் அனுமதி கோரிய சமயத்தில்) நீர் ஏன் அவர்களுக்கு அனுமதியளித்தீர்? (அனுமதி அளிக்காது இருந்திருந்தால் அவர்களில்) உண்மை சொல்பவர்கள் (யார் என்று) உமக்குத் தெளிவாகி, (அவர்களில்) பொய் சொல்பவர்களை (அவர்கள் யார் என்பதையும்) நீர் நன்கு அறிந்திருப்பீர்

[44] அல்லாஹ்வையும் இறுதிநாளையும் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்கள் தங்கள் பொருள்களையும் உயிர்களையும் தியாகம் செய்து போர் புரியாமலிருக்க உம்மிடம் அனுமதி கோரவே மாட்டார்கள். இறையச்சம் உடைய (இ)வர்களை அல்லாஹ் நன்கறிவான்

[45] (போருக்கு வராதிருக்க) உம்மிடம் அனுமதி கோருவதெல்லாம், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் உண்மையாகவே நம்பிக்கை கொள்ளாதவர்கள்தான். அவர்களுடைய உள்ளங்கள் சந்தேகத்தில் ஆழ்ந்துவிட்டன. ஆகவே, அவர்கள் தங்கள் சந்தேகத்திலேயே சிக்கித் தடுமாறுகின்றனர்

[46] அவர்கள் (உங்களுடன் போருக்கு) புறப்பட (உண்மையாகவே) எண்ணியிருந்தால் அதற்கு வேண்டிய தயாரிப்புகளை (முன்னதாகவே) அவர்கள் செய்திருப்பார்கள். எனினும் (உங்களுடன்) அவர்கள் புறப்படுவதை அல்லாஹ் வெறுத்து அவர்கள் புறப்படாது தடை செய்து விட்டான். ஆகவே, (முதியோர் சிறியோர் பெண்கள் போன்ற, போருக்கு வரமுடியாது வீட்டில்) தங்குபவர்களுடன் நீங்களும் தங்கி விடுங்கள் என்று (அவர்களுக்குக்) கூறப்பட்டு விட்டது

[47] அவர்கள் உங்களுடன் வந்திருந்தால் ஒழுங்கீனத்தைத் தவிர (வேறு எதையும்) உங்களுக்கு அதிகரிக்கச் செய்திருக்க மாட்டார்கள். விஷமத்தைக் கருதி உங்கள் மத்தியில் அலங்கோலத்தையும் உண்டு பண்ணி இருப்பார்கள். அவர்களுடைய ஒற்றர்களும் உங்களுடன் இருக்கின்றனர். ஆனால், அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்காரர்களை நன்கறிந்தவன் ஆவான்

[48] (உங்களுக்கு) வெற்றி கிடைக்கும் வரை இதற்கு முன்னரும் அவர்கள் விஷமம் செய்யக் கருதி உங்கள் காரியங்களை (தலைகீழாய்)ப் புரட்டிக்கொண்டே இருந்தனர். (உங்கள் வெற்றியை) அவர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ்வுடைய கட்டளையே வெற்றியடைந்தது

[49] (நபியே! ‘‘போருக்கு அழைத்து) நீர் என்னைச் சோதனைக் குள்ளாக்காமலே (வீட்டில் நான் தங்கியிருக்க) எனக்கு அனுமதி தருவீராக'' என்று கோருபவர்களும் அவர்களில் சிலர் இருக்கின்றனர். (எனினும் இவ்வாறு கோரும்) அவர்கள் (கஷ்டமான பல) சோதனைகளிலேயே மூழ்கிக் கிடக்கவில்லையா? நிராகரிப்பவர்களை நிச்சயமாக நரகம் சூழ்ந்து கொண்டிருக்கிறது

[50] (நபியே!) உமக்கு ஒரு நன்மை ஏற்பட்டால் (அது) அவர்களுக்குத் துன்பத்தைத் தருகிறது. உமக்கு ஒரு தீங்கேற்பட்டாலோ ‘‘நிச்சயமாக நாங்கள் எங்கள் காரியத்தில் (உங்களைச் சம்பந்தப்படுத்தாது) ஏற்கனவே எச்சரிக்கையாய் இருந்து கொண்டோம்'' என்று கூறி மிக்க மகிழ்ச்சியுடன் உம்மை விட்டு) விலகிச் செல்கின்றனர்

[51] (ஆகவே, நபியே! அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர வேறொன்றும் நிச்சயமாக எங்களை அணுகாது. அவன் தான் எங்கள் இறைவன்'' என்று நீர் கூறுவீராக. நம்பிக்கையாளர்கள் அனைவரும் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படைக்கவும்

[52] (நபியே!) கூறுவீராக: (வெற்றி அல்லது சொர்க்கம் ஆகிய) மிகச் சிறந்த இவ்விரண்டு நன்மைகளில் ஒன்றைத்தவிர (வேறெந்தத் தீங்கையும்) நீங்கள் எங்களுக்கு எதிர்பார்க்க முடியுமா? (ஆகவே, இந்த இரண்டில் எது கிடைத்த போதிலும் எங்களுக்கு நன்மையே ஆகும்.) எனினும், உங்களுக்கோ அல்லாஹ் தன் வேதனையைக் கொண்டோ அல்லது எங்கள் கைகளைக் கொண்டோ உங்களுக்குக் கஷ்டம் உண்டாக்குவதையே நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆகவே, நீங்கள் (எங்களுக்கு வரவேண்டியதை) எதிர்பார்த்திருங்கள்; நாங்களும் (உங்களுக்கு வரவேண்டியதை) உங்களுடன் எதிர்பார்க்கிறோம்

[53] ‘‘நீங்கள் விருப்பத்துடனோ அல்லது வெறுப்புடனோ (எதைத்) தானம் செய்த போதிலும் (அது) உங்களிடமிருந்து அங்கீகரிக்கப்படவே மாட்டாது. ஏனென்றால், நிச்சயமாக நீங்கள் பாவிகளாகவே இருக்கிறீர்கள்'' என்றும் (நபியே!) நீர் கூறிவிடுவீராக

[54] அவர்கள் செய்யும் தானம் அங்கீகரிக்கப்பட மாட்டாது என்று (இறைவன்) தடுத்திருப்பதற்குக் காரணம், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்ததுதான். மேலும், அவர்கள் மிகச் சடைந்தவர்களாகவே தவிர தொழுவதில்லை; வெறுப்புடனே தவிர அவர்கள் தானம் செய்வதுமில்லை

[55] (நபியே!) அவர்களுடைய செல்வங்களும், அவர்களுடைய மக்களும் (பெருகியிருப்பது) உங்களை ஆச்சரியப்படுத்த வேண்டாம். அல்லாஹ் (அவற்றை அவர்களுக்குக் கொடுத்து) அவற்றைக் கொண்டு அவர்களை இவ்வுலக வாழ்விலேயே வேதனை செய்ய நிச்சயமாக நாடுகிறான். இன்னும், அவர்கள் நிராகரிப்பவர்களாக இருக்கும் நிலைமையில் அவர்களுடைய உயிர் போவதையும் நாடுகிறான்

[56] ‘‘நிச்சயமாக நாங்களும் உங்களைச் சார்ந்தவர்கள்தான்'' என்று அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கின்றனர். எனினும், அவர்கள் உங்களைச் சார்ந்தவர்களல்ல. அவர்கள் (தங்கள் உண்மைக் கோலத்தை வெளிப்படுத்த அஞ்சும்) கோழைகள்

[57] தப்பித்துக்கொள்ளக்கூடிய ஓர் இடத்தை அல்லது (மலைக்) குகைகளை அல்லது ஒரு சுரங்கத்தை அவர்கள் காண்பார்களேயானால் (உங்களிடமிருந்து விலகி) அவற்றின் பக்கம் அல்லோலமாக விரைந்து ஓடுவார்கள்

[58] (நபியே!) நீர் தானங்களைப் பங்கிடுவதில் பாரபட்சமுடையவர் என்று உம்மைக் குறை கூறுபவர்களும் அவர்களில் பலர் இருக்கின்றனர். (அவர்கள் விருப்பப்படி) அதிலிருந்து அவர்களுக்குக் கொடுக்கப்பட்டால் அவர்கள் திருப்தியடைகின்றனர். அதிலிருந்து (அவர்கள் விருப்பப்படி) கொடுக்கப்படாவிட்டாலோ ஆத்திரம் கொள்கின்றனர்

[59] அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அவர்களுக்குக் கொடுத்ததைப் பற்றி திருப்தியடைந்து, ‘‘அல்லாஹ் நமக்குப் போதுமானவன்; அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் இன்னும் நமக்கு அருள்புரியக் கூடும்; நிச்சயமாக நாம் அல்லாஹ்வையே நம்பியிருக்கிறோம்'' என்று அவர்கள் கூற வேண்டாமா

[60] (‘ஜகாத்து' மார்க்கவரியாகிய) தானமெல்லாம் வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்பவர்களுக்கும், புதிதாக இஸ்லாமைத் தழுவியவர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும், கடனில் மூழ்கியவர்களுக்கும், அல்லாஹ்வுடைய பாதையில் போர் செய்வதற்கும், வழிப்போக்கர்களுக்கும் (உரித்தானதாக) அல்லாஹ் ஏற்படுத்திய கட்டாய கடமையாகும். அல்லாஹ் (அனைத்தையும்) மிக அறிந்தவன், ஞானமுடையவன் ஆவான்

[61] (‘‘இந்த நபியிடம் எவர் எதைக் கூறியபோதிலும் அதற்குச்) செவி கொடுக்கக் கூடியவராக அவர் இருக்கிறார்'' என்று கூறி (நம்) நபியைத் துன்புறுத்துபவர்களும் அவர்களில் பலர் இருக்கின்றனர். அதற்கு (நபியே!) நீர் கூறுவீராக: ‘‘(அவ்வாறு அவர்) நன்மைக்கு செவி கொடுப்பது உங்களுக்கே நன்று. அவர் அல்லாஹ்வையும் நம்புகிறார்; நம்பிக்கையாளர்களையும் நம்புகிறார். இன்னும், உங்களில் நம்பிக்கை கொண்டவர்கள் மீது மிகக் கருணை உடையவராகவும் இருக்கிறார்.'' ஆகவே, (உங்களில்) எவர்கள் (இவ்வாறு கூறி) அல்லாஹ்வுடைய தூதரைத் துன்புறுத்துகிறார்களோ அவர்களுக்கு மிகத் துன்புறுத்தும் வேதனையுண்டு

[62] (நம்பிக்கையாளர்களே!) உங்களைத் திருப்திப்படுத்துவதற்காக உங்கள் முன்னிலையில் அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கின்றனர். அவர்கள் மெய்யாகவே நம்பிக்கையாளர்களாயிருந்தால், அவர்கள் திருப்திப்படுத்த அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்தான் மிகவும் தகுதியுடையவர்கள் (என்பதை அறிந்துகொள்வர்)

[63] எவன் உண்மையாகவே அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்கிறானோ அவனுக்கு நிச்சயமாக நரகத்தின் நெருப்புதான் கிடைக்கும். அதில் அவன் (என்றென்றும்) தங்கிவிடுவான் என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வில்லையா? இதுதான் மகத்தான இழிவாகும்

[64] நம்பிக்கையாளர்களுக்கு ஓர் அத்தியாயம் அருளப்பட்டு அது தங்கள் உள்ளங்களில் உள்ளவற்றை வெளிப்படுத்திவிடுமோ என்று பயப்படுகி(ன்றவர்களைப் போல் நயவஞ்சகர்கள் நடித்து பரிகசிக்கின்)றனர். (நபியே! அவர்களை நோக்கி) நீர் கூறும்: ‘‘நீங்கள் பரிகசித்துக் கொண்டே இருங்கள். ஆயினும், நீங்கள் பயப்படுவதை நிச்சயமாக அல்லாஹ் வெளியாக்கியே தீருவான்

[65] (இதைப் பற்றி) நீங்கள் அவர்களைக் கேட்பீராயின் ‘‘விளையாட்டுக்காக நாங்கள் தர்க்கித்துக் கொண்டிருந்தோம்'' என்று அவர்கள் கூறுவார்கள். அதற்கு (நபியே! அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ்வையும், அவனது வசனங்களையும், அவனது தூதரையுமா நீங்கள் பரிகசிக்கிறீர்கள்?'' என்று நீர் கேட்பீராக

[66] நீங்கள் (செய்யும் விஷமத்தனமான பரிகாசத்திற்கு) வீண் புகழ் கூற வேண்டாம். நீங்கள் நம்பிக்கை கொண்டதற்குப் பின்னர் நிச்சயமாக (அதை) நிராகரித்துவிட்டீர்கள். ஆகவே, உங்களில் ஒரு கூட்டத்தினரை நாம் மன்னித்த போதிலும் மற்றொரு கூட்டத்தினர் நிச்சயமாக குற்றவாளிகளாகவே இருப்பதனால், நாம் அவர்களை வேதனை செய்தே தீருவோம் (என்றும் நபியே! நீர் கூறுவீராக)

[67] ஆணாயினும் பெண்ணாயினும் நயவஞ்சகர்கள் அனைவரும் ஒரே இனத்தவரே! அவர்கள் (அனைவருமே) பாவமான காரியங்களைச் செய்யும்படித் தூண்டுவார்கள்; நன்மையான காரியங்களைத் தடை செய்வார்கள். (செலவு செய்ய அவசியமான சமயங்களில்) தங்கள் கைகளை மூடிக்கொள்வார்கள். அவர்கள் அல்லாஹ்வை மறந்து விட்டார்கள்; ஆதலால், அல்லாஹ்வும் அவர்களை மறந்து விட்டான். நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் தான் (சதி செய்யும்) கொடிய பாவிகள்

[68] நயவஞ்சகரான ஆண்களுக்கும் பெண்களுக்கும் (அவ்வாறே மற்ற) நிராகரிப்பவர்களுக்கும் நரக நெருப்பையே அல்லாஹ் வாக்களித்திருக்கிறான். அதில் அவர்கள் (என்றென்றும்) தங்கிவிடுவார்கள். அதுவே அவர்களுக்குப் போதுமா(ன கூலியா)கும். இன்னும், அல்லாஹ் அவர்களை சபித்தும் இருக்கிறான். மேலும், அவர்களுக்கு நிலையான வேதனையுண்டு

[69] (நயவஞ்சகர்களே! உங்கள் நிலைமை) உங்களுக்கு முன்னிருந்தவர்களின் நிலைமையை ஒத்திருக்கிறது. அவர்கள் உங்களைவிட பலசாலிகளாகவும், (உங்களை விட) அதிக பொருளுடையவர்களாகவும், அதிக சந்ததியுடையவர்களாகவும் இருந்து (இவ்வுலகில்) தங்களுக்குக் கிடைத்த இப்பாக்கியங்களைக் கொண்டு சுகமடைந்தார்கள். உங்களுக்கு முன்னிருந்த இவர்கள் தங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களைக்கொண்டு (இவ்வுலகில்) சுகமடைந்தவாறே, நீங்களும் உங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களைக் கொண்டு சுகமடைந்து விட்டீர்கள். அவர்கள் (வீண் விவாதங்களில்) மூழ்கிக் கிடந்தவாறே நீங்களும் மூழ்கிவிட்டீர்கள். இம்மையிலும் மறுமையிலும் அவர்களுடைய (நற்)செயல்கள் அனைத்தும் அழிந்துவிட்டன. (அதனால்) அவர்கள் பெரும் நஷ்டமடைந்து விட்டார்கள். (அவ்வாறே நீங்களும் நஷ்டமடைவீர்கள்)

[70] இவர்களுக்கு முன்னிருந்த நூஹ் (நபி) உடைய மக்களின் சரித்திரமும், ஆத், ஸமூத் (என்பவர்களின்) சரித்திரமும், இப்றாஹீம் (நபி) உடைய மக்களின் சரித்திரமும், மத்யன் (என்னும்) ஊராரின் சரித்திரமும், தலைகீழாகப் புரண்டுபோன ஊர்களின் சரித்திரங்களும் அவர்களுக்குக் கிடைக்கவில்லையா? (நம்மால் அனுப்பப்பட்ட) அவர்களுடைய தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைத்தான் அவர்களிடம் கொண்டு வந்தார்கள். (அவ்வாறிருந்தும் அந்த தூதர்களை அவர்கள் நிராகரித்ததன் காரணமாக அவர்கள் அனைவரும் அழிந்துவிட்டனர். இதில்) அல்லாஹ் அவர்களுக்கு (ஒரு) தீங்கும் இழைத்து விடவில்லை. எனினும், அவர்கள் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்(டு அழிந்து விட்)டனர்

[71] நம்பிக்கை கொண்ட ஆண்களும், நம்பிக்கை கொண்ட பெண்களும் (தங்களுக்குள்) ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாய் இருக்கின்றனர். அவர்கள், (ஒருவர் மற்றவரை) நன்மை செய்யும்படித் தூண்டியும், பாவம் செய்யாது தடுத்தும், தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்து கொடுத்தும் வருவார்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடப்பார்கள். இவர்களுக்கு அதிசீக்கிரத்தில் அல்லாஹ் அருள் புரிவான். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், ஞானமுடையவன் ஆவான்

[72] நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் அல்லாஹ் சொர்க்கங்களை வாக்களித்திருக்கிறான். அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அவர்கள் அவற்றிலேயே (என்றென்றும்) தங்கியும் விடுவார்கள். (அந்த) நிரந்தரமான சொர்க்கங்களில் நல்ல (அழகிய உயர்ந்த) மாளிகைகளையும் (வாக்களித்திருக்கிறான். அவை அங்கு அவர்களுக்குக் கிடைக்கும்.) ஆனால் (இவை அனைத்தையும்விட) அல்லாஹ்வின் திருப்பொருத்தம் மிகப் பெரியது. (அதுவும் அங்கு அவர்களுக்குக் கிடைக்கும். அனைத்தையும் விட) இது மகத்தான பெரும் பாக்கியமாகும்

[73] நபியே! நிராகரிப்பவர்களுடனும் நயவஞ்சகர்களுடனும் நீர் போர் செய்வீராக. அவர்களை (தாட்சண்யமின்றி) கண்டிப்பாக நடத்துவீராக. அவர்கள் தங்குமிடம் நரகம்தான். (அது) தங்குமிடங்களில் மிகக் கெட்டது

[74] (நம்பிக்கையாளர்களே! நயவஞ்சகர்களாகிய) இவர்கள் நிராகரிப்பான வார்த்தையை மெய்யாகவே கூறியிருந்தும் (அதைத்) தாங்கள் கூறவே இல்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கின்றனர். மேலும், இவர்கள் இஸ்லாமில் சேர்ந்த பின்னர் (அதை) நிராகரித்தும் இருக்கின்றனர். (அவர்கள் உங்களுக்குத் தீங்கிழைக்கக் கருதி) தங்களால் சாத்தியப்படாமல் போனதொரு காரியத்தைச் செய்யவும் அவர்கள் முயற்சித்தனர். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும், தங்கள் அருளைக் கொண்டு இவர்களை சீமான்களாக ஆக்கியதற்காகவா (முஸ்லிம்களாகிய உங்களை) அவர்கள் வெறுக்கின்றனர். இனியேனும் அவர்கள் கைசேதப்பட்டு இறைவனிடம் மன்னிப்புக் கோரி விலகிக் கொண்டால் (அது) அவர்களுக்கே நன்மையாகும். மேலும், அவர்கள் புறக்கணித்தாலோ இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ் அவர்களை மிகத் துன்புறுத்தும் வேதனையால் வேதனை செய்வான். அவர்களை பாதுகாப்பவர்களோ உதவி செய்பவர்களோ இவ்வுலகில் (ஒருவரும்) இல்லை

[75] அவர்களில் சிலர் இருக்கின்றனர். அவர்கள், ‘‘அல்லாஹ் தன் அருளைக் கொண்டு நமக்கு ஏதும் கொடுத்தால் நிச்சயமாக நாம் (அதை) நல்வழியில் (தாராளமாக) தானம் செய்து, நிச்சயமாக நாம் நல்லவர்களாகவும் ஆகிவிடுவோம்'' என்று அல்லாஹ்விடம் வாக்குறுதி செய்தனர்

[76] அவன் (அவ்வாறு) அவர்களுக்குத் தன் அருட்கொடையை அளித்த பொழுது, அவர்கள் கஞ்சத்தனம் செய்து (தங்கள் வாக்குறுதியிலிருந்து) திரும்பி விட்டனர். அவ்வாறு புறக்கணிப்பது அவர்கள் வழக்கமாகவும் இருந்து வருகிறது

[77] ஆகவே, அவனை சந்திக்கும் (இறுதி)நாள் வரை அவர்களுடைய உள்ளங்களில் வஞ்சகத்தை ஏற்படுத்தி விட்டான். இதன் காரணம், அவர்கள் அல்லாஹ்வுக்குச் செய்த வாக்குறுதிகளுக்கு மாறு செய்துகொண்டும், பொய் சொல்லிக் கொண்டும் இருந்ததாகும்

[78] அவர்கள் (தங்கள் உள்ளத்தில்) மறைத்து வைத்திருப்பதையும் (தங்களுக்குள்) அவர்கள் இரகசியமாகப் பேசிக்கொள்வதையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிகிறான் என்பதுடன், நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய மற்ற) இரகசியங்கள் அனைத்தையும் நன்கறிகிறான் என்பதையும் அவர்கள் அறிய வேண்டாமா

[79] அவர்கள் நம்பிக்கையாளர்களில் உள்ள செல்வந்தர்கள் (தங்கள் பொருள்களை) நல்வழியில் (தாராளமாக) தானம் செய்வது பற்றியும் (குறிப்பாக,) கூலிவேலை செய்து சம்பாதிப்போர் (தங்கள் பொருளை இவ்வாறு தானம் செய்வது) பற்றியும் குற்றம் கூறி அவர்களைப் பரிகசிக்கின்றனர். (நம்பிக்கையாளர்களைப் பரிகசிக்கும்) அவர்களை அல்லாஹ் பரிகசிக்கிறான். மேலும், (மறுமையில்) துன்புறுத்தும் வேதனையும் அவர்களுக்கு உண்டு

[80] (நபியே!) நீர் அவர்களுக்குப் பாவமன்னிப்பைக் கோரினாலும் அல்லது நீர் அவர்களுக்குப் பாவ மன்னிப்பைக் கோராவிட்டாலும் (இரண்டும்) சமம்தான். (ஏனென்றால்), அவர்களை மன்னிக்கும்படி நீர் எழுபது முறை மன்னிப்புக் கோரினாலும் நிச்சயமாக அல்லாஹ் அவர்களை மன்னிக்கவே மாட்டான். நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் (மனமுரண்டாக) நிராகரித்ததுதான் இதற்குக் காரணமாகும். அல்லாஹ், பாவம் செய்யும் (இத்தகைய) மக்களை நேரான வழியில் செலுத்துவதில்லை

[81] (போருக்குச் செல்லாது) பின் தங்கிவிட்டவர்கள் அல்லாஹ்வின் தூதரு(டைய கட்டளை)க்கு மாறாக(த் தங்கள் வீடுகளில்) இருந்து கொண்டதைப் பற்றி சந்தோஷ மடைகின்றனர். இன்னும், அல்லாஹ்வுடைய பாதையில் தங்கள் பொருள்களையும், உயிர்களையும் தியாகம் செய்து போர் செய்வதை வெறுத்து (மற்றவர்களை நோக்கி) ‘‘இந்த வெப்பகாலத்தில் நீங்கள் (போருக்குச்) செல்லாதீர்கள்'' என்றும் கூறுகின்றனர். (அதற்கு நபியே! அவர்களை நோக்கி) ‘‘நரகத்தின் நெருப்பு (இதைவிட) கொடிய உஷ்ணமானது'' என்று நீர் கூறுவீராக. (இதை) அவர்கள் அறிந்துகொள்ள வேண்டாமா

[82] (இம்மையில்) அவர்கள் வெகு குறைவாகவே சிரிக்கவும். அவர்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயலுக்குப் பிரதிபலனாக (மறுமையில்) அதிகமாகவே அழுது கொள்ளட்டும்

[83] (நபியே!) நீர் (போரில் வெற்றி பெற்றவராக) அவர்களில் ஒரு கூட்டத்தாரிடம் திரும்ப வரும்படி அல்லாஹ் செய்து (உங்கள் வெற்றியையும், நீங்கள் கொண்டு வந்த பொருள்களையும் அவர்கள் கண்டு, உங்களுடன் மற்றொரு போருக்குப்) புறப்பட உங்களிடம் அனுமதி கோரினால் (அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் (போருக்கு) ஒருக்காலத்திலும் என்னுடன் புறப்படவேண்டாம். என்னுடன் சேர்ந்து எந்த எதிரியிடமும் நீங்கள் போர்புரிய வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாக நீங்கள் முதன் முறையில் (வீட்டில்) தங்கிவிடுவதையே விரும்பினீர்கள். ஆதலால், (இப்பொழுதும்) நீங்கள் (வீட்டில்) தங்கிவிடுபவர்களுடன் இருந்து விடுங்கள்'' என்று (நபியே! நீர்) கூறுவீராக

[84] மேலும், அவர்களில் எவர் இறந்துவிட்டாலும் அவர்கள் மீது ஒருபோதும் (ஜனாஸா) தொழுகையும் தொழாதீர். அவர்களுடைய கப்ரில் (அவர்களுக்காக மன்னிப்புக்கோரி) நிற்காதீர். ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்து விட்டதுடன் பாவிகளாகவே இறந்தும் இருக்கின்றனர்

[85] அவர்களுடைய செல்வங்களும் அவர்களுடைய சந்ததிகளும் (அதிகரித்திருப்பது) உம்மை ஆச்சரியப்படுத்த வேண்டாம். (ஏனென்றால்) அவற்றைக்கொண்டு இவ்வுலகிலேயே அவர்களைத் துன்புறுத்துவதையும், அவர்கள் (கர்வம்கொண்டு) நிராகரித்த வண்ணமே அவர்களின் உயிர் போவதையும்தான் அல்லாஹ் விரும்புகிறான்

[86] அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, அவனுடைய தூதருடன் சேர்ந்து போர் புரியுமாறு ஓர் அத்தியாயம் இறக்கப்பட்டால், அவர்களிலுள்ள பணக்காரர்கள் (போர் புரிய வராதிருக்க) உங்களிடம் அனுமதிகோரி ‘‘எங்களை விட்டுவிடுங்கள்; (வீட்டில்) தங்கி இருப்பவர்களுடன் நாங்களும் தங்கிவிடுகிறோம்'' என்று கூறுகின்றனர்

[87] (சிறியோர், முதியோர், பெண்கள் போன்ற போருக்கு வரமுடியாமல் வீட்டில்) தங்கிவிடுபவர்களுடன் தாங்களும் இருந்துவிடவே விரும்புகின்றனர். அவர்களுடைய உள்ளங்கள் மீது முத்திரையிடப்பட்டுவிட்டது. (ஆதலால் இதிலுள்ள இழிவை) அவர்கள் உணர்ந்து கொள்ள மாட்டார்கள்

[88] எனினும் (அல்லாஹ்வுடைய) தூதரும், அவருடனுள்ள நம்பிக்கையாளர்களும் தங்கள் பொருள்களையும் உயிர்களையும் தியாகம் செய்து போர் புரிவார்கள். (இம்மை, மறுமையின்) நன்மைகள் அனைத்தும் இவர்களுக்குத்தான் உரியன. நிச்சயமாக இவர்கள்தான் வெற்றியாளர்கள்

[89] அல்லாஹ், அவர்களுக்காக சொர்க்கங்களை தயார் செய்துவைத்திருக்கிறான் அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருக்கும். அவற்றில் அவர்கள் (என்றென்றும்) தங்கிவிடுவார்கள். இதுவோ மாபெரும் பாக்கியமாகும்

[90] கிராமத்து அரபிகளில் சிலர், (போருக்குச் செல்லாதிருக்க) அனுமதிகோரி (உங்களிடம்) வந்து காரணம் கூறுகின்றனர். எனினும், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் பொய்யாக்கியவர்களோ (அனுமதி கோராமலேயே வீட்டில்) உட்கார்ந்து கொண்டனர். ஆகவே, இவர்களிலுள்ள (இந்)நிராகரிப்பவர்களை அதிசீக்கிரத்தில் மிகத் துன்புறுத்தும் வேதனை வந்தடையும்

[91] பலவீனர்களும், நோயாளிகளும், போருக்குச் செலவு செய்யும் பொருளை அடையாதவர்களும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கலப்பற்ற நம்பிக்கையாளர்களாக இருந்தால் (அதுவே போதுமானது. அவர்கள் போருக்குச் செல்லாவிட்டாலும் அதைப் பற்றி) அவர்கள் மீது ஒரு குற்றமுமில்லை. (இத்தகைய) நல்லவர்கள் மீது (குற்றம் கூற) ஒரு வழியும் இல்லை. அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கருணையுள்ளவன் ஆவான்

[92] எவர்கள் (போருக்குரிய) வாகனத்தை நீர் தருவீர் என உம்மிடம் வந்து, ‘‘உங்களை நான் ஏற்றி அனுப்பக்கூடிய வாகனம் என்னிடம் இல்லையே'' என்று நீர் கூறிய சமயத்தில், தங்களிடமும் செலவுக்குரிய பொருள் இல்லாதுபோன துக்கத்தினால் தங்கள் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வடித்தவர்களாக (தம் இருப்பிடம்) திரும்பிச் சென்றார்களோ அவர்கள் மீதும் (போருக்குச் செல்லாததைப் பற்றி ஒரு குற்றமும் இல்லை)

[93] (எனினும்,) எவர்கள் பணக்காரர்களாகவும் இருந்து (போருக்குச் செல்லாதிருக்க) உம்மிடம் அனுமதி கோரி (போருக்குச் செல்லாது வீட்டில்) தங்கி விடுபவர்களுடன் தாங்களும் இருந்துவிட விரும்பினார்களோ அவர்கள் மீதுதான் குற்றம். இவர்களுடைய உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். ஆகவே, அவர்கள் (இதனால் ஏற்படும் இழிவை) அறிந்துகொள்ள மாட்டார்கள்

[94] (நம்பிக்கையாளர்களே! போர் செய்து) நீங்கள் (வெற்றியோடும், சுகத்தோடும்) அவர்களிடம் திரும்பிய சமயத்தில், உங்களிடம் அவர்கள் (வந்து போருக்கு வராததைப் பற்றி மன்னிப்பைத் தேடி) காரணம் சொல்கின்றனர். (அதற்கு அவர்களை நோக்கி நபியே!) நீர் கூறுவீராக: ‘‘நீங்கள் காரணம் கூறாதீர்கள். நாங்கள் உங்களை நம்பவே மாட்டோம். உங்கள் (வஞ்சக) விஷயங்களை நிச்சயமாக அல்லாஹ் எங்களுக்கு அறிவித்துவிட்டான். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அதிசீக்கிரத்தில் உங்கள் செயலை அறிந்து கொள்வார்கள். முடிவில், மறைவானதையும் வெளிப்படையானதையும் அறிந்த (அ)வனிடம் தான் கொண்டு போகப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அது சமயம் அவனே உங்களுக்கு அறிவிப்பான்

[95] (நம்பிக்கையாளர்களே! போரிலிருந்து வெற்றியுடன்) அவர்களிடம் நீங்கள் திரும்ப வந்தால், நீங்கள் அவர்களை(க் குற்றம் பிடிக்காது) புறக்கணித்து (விட்டு)விட, அவர்கள் அல்லாஹ்வின் மீது உங்கள் முன் சத்தியம் செய்வார்கள். ஆகவே, நீங்களும் அவர்களை புறக்கணித்து (விட்டு)விடுங்கள். நிச்சயமாக அவர்கள் அசுத்தமானவர்கள். அவர்கள் செல்லுமிடம் நரகம்தான். (அதுவே) அவர்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயலுக்குரிய தண்டனையாகும்

[96] (நம்பிக்கையாளர்களே!) அவர்களைப் பற்றி நீங்கள் திருப்தி அடைவதற்காக அவர்கள் உங்களிடம் (இவ்வாறு பொய்) சத்தியம் செய்கின்றனர். அவர்களைப் பற்றி நீங்கள் திருப்தியடைந்த போதிலும் நிச்சயமாக அல்லாஹ் பாவிகளான இந்த மக்களைப் பற்றி திருப்தி அடையவே மாட்டான்

[97] நிராகரிப்பிலும் வஞ்சகத்திலும் கிராமத்து அரபிகள் மிகக் கொடியவர்கள். அல்லாஹ் தன் தூதர் மீது இறக்கி இருக்கும் (வேதத்தின்) சட்ட வரம்புகளை அறிந்து கொள்ளவும் வசதியற்றவர்கள். அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவன், மிக்க ஞானமுடையவன் ஆவான்

[98] (கல்வி ஞானமற்ற) கிராமத்து அரபிகளில் பலர் இருக்கின்றனர். அவர்கள் (தர்மத்திற்காகச்) செய்யும் செலவை நஷ்டம் என்று கருதி, நீங்கள் (காலச்) சக்கரத்தில் சிக்கி (கஷ்டத்திற்குள்ளாகி) விடுவதை எதிர்பார்க்கின்றனர். எனினும், அவர்கள் (தலை)மீதுதான் வேதனையின் சக்கரம் சுற்றிக் கொண்டு இருக்கிறது. அல்லாஹ் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்

[99] அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்ட (நாட்டுப்புறத்து) அரபிகளில் பலர் இருக்கின்றனர். அவர்கள், தாங்கள் செய்யும் தானங்களை அல்லாஹ்விடம் தங்களை நெருக்கமாக்கி வைக்கும் வணக்கங்களாகவும், (அவனுடைய) தூதரின் பிரார்த்தனைகளுக்கு வழியாகவும் எடுத்துக் கொள்கின்றனர். நிச்சயமாக அது அவர்களை (அல்லாஹ்வுக்கு)ச் சமீபமாக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ் அவர்களை அதிசீக்கிரத்தில் தன் அன்பிலும் புகுத்துவான். நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுத்துக் கருணை செய்பவன் ஆவான்

[100] முஹாஜிர்களிலும் அன்ஸார்களிலும் எவர்கள் (இஸ்லாமில்) முதலாவதாக முந்திக் (கொண்டு நம்பிக்கை) கொண்டார்களோ அவர்களையும், நற்செயல்களில் (மெய்யாகவே) இவர்களைப் பின்பற்றியவர்களையும் பற்றி அல்லாஹ் திருப்தியடைகிறான். இவர்களும் அல்லாஹ்வைப் பற்றி திருப்தியடைகின்றனர். மேலும், தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சொர்க்கங்களை இவர்களுக்கென தயார்படுத்தி வைத்திருக்கிறான். அவற்றிலேயே அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். இதுதான் மகத்தான வெற்றியாகும்

[101] (நம்பிக்கையாளர்களே!) உங்களைச் சூழவுள்ள (கிராமங்களில் வசிக்கும்) கிராமத்து அரபிகளில் நயவஞ்சகர்கள் (பலர்) இருக்கின்றனர். (அதிலும்) மதீனாவிலுள்ள பலர் வஞ்சகத்திலேயே ஊறிக் கிடக்கின்றனர். (நபியே!) நீர் அவர்களை அறியமாட்டீர்; நாம் அவர்களை நன்கு அறிவோம். அதிசீக்கிரத்தில் நாம் அவர்களை இருமுறை (கடினமாக) வேதனை செய்வோம். முடிவில் மகத்தான வேதனையின் பக்கம் அவர்கள் விரட்டப்படுவார்கள்

[102] வேறு சிலர் (இருக்கின்றனர். அவர்கள்) தங்கள் குற்றங்களை ஒப்புக் கொள்கின்றனர். (அறியாமையினால்) நல்ல காரியத்தையும் மற்ற (சில) கெட்ட(காரியத்)தையும் கலந்து செய்துவிட்டனர். அல்லாஹ் அவர்(களுடைய குற்றங்)களை மன்னித்துவிடலாம். நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன் மிகக் கருணையாளன் ஆவான்

[103] (நபியே! அவர்கள் தங்கள் குற்றத்திற்குப் பரிகாரமாகக் கொண்டு வந்திருக்கும்) அவர்களுடைய பொருள்களிலிருந்து தர்மத்தை நீர் எடுத்துக் கொண்டு அவர்களை (உள்ளும் புறமும்) பரிசுத்தமாக்கி வைத்து அவர்களுக்காக (துஆ) பிரார்த்தனை செய்வீராக. உங்கள் (துஆ) பிரார்த்தனை நிச்சயமாக அவர்களுக்கு ஆறுதலளிக்கும். அல்லாஹ் நன்கு செவியுறுபவன், நன்கறிபவன் ஆவான்

[104] நிச்சயமாக, அல்லாஹ் தன் அடியார்களின் மன்னிப்புக் கோருதலை அங்கீகரிக்கிறான் என்பதையும், தர்மங்களை அவனே எடுத்துக் கொள்கிறான் என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் பாவங்களை மன்னித்துக் கருணை காட்டுபவன் என்பதையும் அவர்கள் அறியவில்லையா

[105] (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘நீங்கள் செய்பவற்றை செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மற்ற நம்பிக்கையாளர்களும் உங்கள் செயலை பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். மேலும், மறைவானவற்றையும், வெளிப்படையானவற்றையும் அறிந்தவன் பக்கம் நிச்சயமாக நீங்கள் கொண்டு போகப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்த(து எத்தகையது என்ப)தை அது சமயம் அவன் உங்களுக்கு அறிவித்து விடுவான்

[106] அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்து(த் தீர்ப்புக்காக) நிறுத்தப்பட்டுள்ள வேறு சிலரும் இருக்கின்றனர். அல்லாஹ் அவர்களை தண்டிக்கலாம் அல்லது அவர்களை மன்னித்துவிடலாம். அல்லாஹ் (அவர்களுடைய செயல்களை) நன்கறிந்தவன், மிக்க ஞானமுடையவன் ஆவான்

[107] எவர்கள் (தங்கள் உள்ளங்களிலுள்ள) நிராகரிப்பின் காரணமாக, நம்பிக்கை யாளர்களுக்கு இடையில் பிரிவினையை உண்டு பண்ணி தீங்கு இழைப்பதற்காக, முன்னர் அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போர் புரிந்தவர்களுக்குப் பதுங்குமிடமாக இருப்பதற்கு ஒரு மஸ்ஜிதைக் கட்டி இருக்கிறார்களோ அவர்கள், (தங்கள் குற்றத்தை மறைத்துவிடக் கருதி) ‘‘நிச்சயமாக நாங்கள் நன்மையைத் தவிர (தீமையைக்) கருதவில்லை'' என்று சத்தியம் செய்கின்றனர். ஆனால் அல்லாஹ்வோ நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள்தான் என்று சாட்சி கூறுகிறான்

[108] ஆகவே, (நபியே!) நீர் ஒருக்காலத்திலும் (அங்கு போய்) அதில் நிற்க வேண்டாம். ஆரம்ப தினத்திலேயே (அல்லாஹ்வின்) பயத்தின் மீது (பரிசுத்தமான எண்ணத்துடன்) அமைக்கப்பட்ட மஸ்ஜிதுதான் நீர் நின்று தொழ(வும் தொழவைக்கவும்) மிகத் தகுதியுடையது. அதிலிருக்கும் மனிதர்களும் பரிசுத்தவான்களாக இருப்பதையே விரும்புகின்றனர். அல்லாஹ்வும் (இத்தகைய) பரிசுத்தவான்களையே நேசிக்கிறான்

[109] அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி, பரிசுத்த(மான எண்ண)த்தின் மீதே மஸ்ஜிதின் அஸ்திவாரத்தை அமைத்தவன் மேலா? அல்லது (சரிந்துவிடக் கூடியவாறு) ஓடையின் அருகில் அதுவும் சரிந்து அவனுடன் நரக நெருப்பில் விழக்கூடியவாறு மஸ்ஜிதின் அஸ்திவாரத்தை அமைத்தவன் மேலா? (இத்தகைய) அநியாயக்கார மக்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துவதில்லை

[110] தங்கள் உள்ளங்களில் சந்தேகத்துடன் அவர்கள் கட்டிய இக்கட்டடம் அவர்களுடைய உள்ளங்கள் துண்டு துண்டாகும் வரை (முள்ளைப் போல் தைத்துக் கொண்டே) இருக்கும். அல்லாஹ் (இவர்கள் அனைவரையும்) நன்கறிந்தவன், மிக்க ஞானமுடையவன் ஆவான்

[111] அல்லாஹ், நம்பிக்கையாளர்களுடைய உயிர்களையும் பொருள்களையும் கண்டிப்பாக அவர்களுக்குச் சொர்க்கம் தருவதாக(க் கூறி,) நிச்சயமாக விலைக்கு வாங்கிக் கொண்டான். அவர்கள் அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிந்து (எதிரிகளை) கொல்வார்கள்; (அல்லது) கொல்லப்பட்டு (இறந்து) விடுவார்கள். (இவ்விரு நிலைமைகளிலும் அவர்களுக்குச் சொர்க்கம் தருவதாக) தவ்றாத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் (அல்லாஹ்) வாக்களித்துத் தன்மீது கடமையாக்கிக் கொண்டிருக்கிறான். அல்லாஹ்வைவிட வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுபவன் யார்? ஆகவே, (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் செய்த இவ்வர்த்தகத்தைப் பற்றி மகிழ்ச்சியடையுங்கள். நிச்சயமாக இதுதான் மகத்தான வெற்றி

[112] பாவத்திலிருந்து விலகிக் கொண்டவர்களும், (இறைவன் ஒருவனையே) வணங்குபவர்களும், (இரவு பகலாக அவனைத்) துதி செய்து புகழ்பவர்களும், நோன்பு நோற்பவர்களும், (மார்க்கக் கல்வியைக் கற்றல், மார்க்கப் பிரச்சாரம் செய்தல் போன்ற மார்க்க விஷயத்திற்காக) பிரயாணம் செய்பவர்களும், குனிந்து சிரம் பணி(ந்து தொழு)பவர்களும் நன்மையான காரியங்களைச் செய்யும்படி ஏவுபவர்களும், பாவமான காரியங்களை விலக்குபவர்களும், அல்லாஹ்வுடைய சட்ட வரம்புகளைப் பேணி நடப்பவர்களும் ஆகிய இத்தகைய (உண்மை) நம்பிக்கையாளர்களுக்கு (சொர்க்கம் கிடைக்குமென்று நபியே!) நற்செய்தி கூறுவீராக

[113] இணைவைத்து வணங்குபவர்களுக்காக மன்னிப்புக் கோருவது நபிக்கோ நம்பிக்கையாளர்களுக்கோ தகுமானதல்ல; அவர்கள் (இவர்களுக்கு) நெருங்கிய உறவிர்களாகயிருந்தாலும் சரியே! அவர்கள் நிச்சயமாக நரகவாசிகள்தான் என்று இவர்களுக்குத் தெளிவானதன் பின்னர் (எவ்வாறு அவர்களுக்கு மன்னிப்புக் கோரலாம்)

[114] இப்றாஹீம் (நபி) தன் தந்தைக்காக மன்னிப்புக் கோரியதெல்லாம், அவர் தன் தந்தைக்குச் செய்திருந்த ஒரு வாக்குறுதிக்காகவே தவிர வேறில்லை. (அவருடைய தந்தை) அல்லாஹ்வுக்கு எதிரி எனத் தெளிவாகத் தெரிந்ததும் அ(வருக்காக மன்னிப்புக் கோருவ)திலிருந்து அவர் விலகிக் கொண்டார். நிச்சயமாக இப்றாஹீம் அதிகம் பிரார்த்திப்பவரும் மிக இரக்கமும் அடக்கமும் உடையவரும் ஆவார்

[115] ஒரு கூட்டத்தினரை அல்லாஹ் நேரான வழியில் செலுத்திய பின்னர், அவர்கள் தவறிழைக்கும்படி அவன் (விட்டு) விடமாட்டான், - அவர்கள் விலகிக்கொள்ள வேண்டிய விஷயங்கள் எவை என்பதை அவன் அவர்களுக்கு தெளிவாக அறிவிக்கின்ற வரை. நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் மிக அறிந்தவன் ஆவான்

[116] வானங்கள், பூமியின் ஆட்சி நிச்சயமாக அல்லாஹ்வுக்குரியதே! (அவனே) உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கும்படியும் செய்கிறான். ஆகவே, அல்லாஹ்வை தவிர்த்து உங்களை பாதுகாப்பவர்களும் இல்லை; (உங்களுக்கு) உதவி செய்பவர்களும் இல்லை

[117] நபியின் மீது நிச்சயமாக அல்லாஹ் மன்னித்தருள் புரிந்தான். (அவ்வாறே) கஷ்டகாலத்தில் அவரைப் பின்பற்றிய முஹாஜிர்கள் மீதும், அன்ஸாரிகள் மீதும் (மன்னித்தருள் புரிந்தான்). அவர்களில் ஒரு பிரிவினருடைய உள்ளங்கள் தடுமாறிக் கொண்டிருந்த பின்னரும் அவர்களை மன்னித்(து, அவர்கள் மீது அருள்புரிந்)தான். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் மீது மிக இரக்கமும் மிக்க கருணையும் உடையவன் ஆவான்

[118] (அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்துத் தீர்ப்புக் கூறாது) விட்டு வைக்கப்பட்ட மூவரையும் (அல்லாஹ் மன்னித்துவிட்டான்). பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும் (அது) அவர்களுக்கு மிக்க நெருக்கமாகி அவர்கள் உயிர் வாழ்வதும் மிக்க கஷ்டமாகி விட்டது. அல்லாஹ்வை விட்டுத் தப்புமிடம் அவனிடமே தவிர வேறு அவர்களுக்கு இல்லவே இல்லை என்பதையும் அவர்கள் நிச்சயமாக அறிந்துகொண்டனர். ஆதலால், அவர்கள் (பாவத்தில் இருந்து) விலகிக் கொள்வதற்காக அவர்(களுடைய குற்றங்)களை மன்னித்(து அவர்களுக்கு அருள் புரிந்)தான். நிச்சயமாக அல்லாஹ்தான் மிக மன்னிப்பவன், மகா கருணையுடையவன் ஆவான்

[119] நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள் மேலும், (சொல்லிலும் செயலிலும்) உண்மையாக இருப்பவர்களுடன் இருங்கள்

[120] மதீனாவாசிகள் இன்னும் அவர்களைச் சூழ்ந்து வசிக்கும் கிராமத்து அரபிகள் ஆகிய இவர்கள் அல்லாஹ்வுடைய தூதரை விட்டுப் (பிரிந்து) பின் தங்குவதும்; (அல்லாஹ்வுடைய) தூதரின் உயிரைவிட தங்கள் உயிரையே பெரிதாகக் கருதுவதும் தகுமானதல்ல. ஏனென்றால், அல்லாஹ்வுடைய பாதையில் இவர்களுக்கு ஏற்படும் தாகம், கலைப்பு, பசி (ஆகியவையும்), நிராகரிப்பவர்களைக் கோபமூட்டும்படியான இடத்தில் கால் வைத்து, அதனால் எதிரியிடமிருந்து ஒரு துன்பத்தை அடைதல் ஆகிய இவையனைத்தும் அவர்களுக்கு நன்மைகளாகவே பதிவு செய்யப்படுகின்றன. நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) நன்மை செய்பவர்களின் (அழகிய பண்பாளர்களின்) கூலியை வீணாக்கி விடுவதில்லை

[121] இவர்கள் சிறிதோ பெரிதோ (அல்லாஹ்வுடைய பாதையில்) எதைச் செலவு செய்தபோதிலும் (அவ்வாறே அல்லாஹ்வுடைய பாதையில்) எந்த பூமியைக் கடந்தபோதிலும் அவர்களுக்காக அது பதிவு செய்யப்படுகிறது. ஏனெனில், அவர்கள் செய்த இவற்றைவிட மிக அழகான கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுப்பான்

[122] (உங்கள் எதிரிகள் உங்களை அழித்துவிடுவதற்கு சந்தர்பத்தை எதிர்பார்த்துக் கொண்டேயிருப்பதனால்) நம்பிக்கையாளர்கள் அனைவருமே (தங்கள் ஊரை விட்டு) வெளிப்பட்டு விடுவது எப்பொழுதுமே தகாது. மார்க்க விஷயங்களை அறிந்துகொள்ள(க் கருதினாலும் அதற்காக) உங்களில் ஒவ்வொரு கூட்டத்தில் இருந்தும் சிலர் மாத்திரம் புறப்பட்டால் போதாதா? (அவர்கள் மார்க்க விஷயத்தைக் கற்று) தங்கள் மக்களிடம் திரும்பி வந்து அவர்களுக்கு(த் தாங்கள் கற்றதைக் கூறி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வார்கள். (ஊரில் இருப்பவர்கள்) எச்சரிக்கையாக இருந்து (தங்கள் மக்களைக் காத்துக்) கொள்வார்கள்

[123] நம்பிக்கையாளர்களே! பகைமையையும், விஷமத்தனத்தையும் வெளிப்படுத்துகின்ற உங்களை அடுத்திருக்கும் நிராகரிப்பவர்களுடன் போர் புரியுங்கள். அவர்கள் உங்களிடம் கடுமையையே காணவேண்டும். நிச்சயமாக அல்லாஹ் இறையச்சம் உடையவர்களுடன் இருக்கிறான் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்

[124] ஒரு (புதிய) அத்தியாயம் அருளப்பட்டால் ‘‘உங்களில் யாருடைய நம்பிக்கையை இது அதிகப்படுத்தியது?'' என்று கேட்கக்கூடியவர்களும் அவர்களில் பலர் இருக்கின்றனர். மெய்யாகவே எவர்கள் நம்பிக்கைக் கொண்டிருக்கிறார்களோ அவர்களுடைய நம்பிக்கையை (இது) அதிகப்படுத்தியே விட்டது. இதைப் பற்றி அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்

[125] ஆனால், எவர்களுடைய உள்ளங்களில் நோய் இருக்கிறதோ அவர்களுடைய (உள்ளங்களிலுள்ள) அசுத்தத்துடன் மேலும் அசுத்தத்தையே (அது) அதிகரித்து விட்டது! அவர்கள் நிராகரித்தவர்களாகவே இறந்தும் விட்டனர்

[126] ஒவ்வோர் ஆண்டிலும் ஒரு முறையோ அல்லது இருமுறைகளோ அவர்கள் சிரமத்திற்குள்ளாகி சோதிக்கப்படுகின்றனர் என்பதை அவர்கள் காணவில்லையா? இவ்வாறிருந்தும் அவர்கள் பாவத்தை விட்டுவிடுவதுமில்லை; நல்லுணர்ச்சி பெறுவதுமில்லை

[127] (புதிய) அத்தியாயம் ஒன்று அருளப்பட்டால், அவர்களில் சிலர் சிலரை விரைக்கப் பார்த்து (கண்ணால் ஜாடை செய்து) ‘‘உங்களை யாரும் பார்த்துக் கொண்டார்களோ?'' என்று (கேட்டு) பின்னர் (அங்கிருந்து) திரும்பி விடுகின்றனர். நிச்சயமாக அவர்கள் (சத்தியத்தை) அறிந்துகொள்ள முடியாத மக்களாக இருப்பதனால், அல்லாஹ் அவர்களுடைய உள்ளங்களையும் திருப்பிவிட்டான்

[128] (நம்பிக்கையாளர்களே! நம்) தூதர் ஒருவர் நிச்சயமாக உங்களிடம் வந்திருக்கிறார்; அவர் உங்களிலுள்ளவர்தான். (உங்களுக்கு ஒரு துன்பம் ஏற்பட்டு) நீங்கள் கஷ்டத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தமாகவே இருக்கும். (அவ்வளவு தூரம் உங்கள் மீது அன்புடையவர்.) உங்கள் நன்மையையே பெரிதும் விரும்புகிறவராகவும், நம்பிக்கையாளர்(களாகிய உங்)கள் மீது மிக்க இரக்கமும் கருணையும் அன்பும் உடையவராகவும் இருக்கிறார்

[129] (நபியே இதற்குப்) பின்னரும் அவர்கள் (உம்மைப் பின்பற்றாது) விலகிக் கொண்டால் (அவர்களை நோக்கி) கூறுவீராக ‘‘அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவனில்லை; (என் காரியங்கள் அனைத்தையும்) அவனிடமே நான் நம்பிக்கை வைத்து (ஒப்படைத்து) விட்டேன்; அவன்தான் மகத்தான ‘அர்ஷின்' அதிபதி ஆவான்

யூனுஸ்

Surah 10

[1] அலிஃப் லாம் றா. இவை ஞானம் நிறைந்த இந்த வேதத்தின் வசனங்களாகும்

[2] (நபியே!) மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும்படி (மனித இனத்தைச் சார்ந்த) அவர்களில் ஒருவருக்கு வஹ்யி மூலம் நாம் கட்டளையிடுவது இம்மனிதர்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? (நபியே!) நம்பிக்கை கொண்டவர்களுக்குத் தங்கள் இறைவனிடத்தில் பெரும் பதவி உண்டென்று நற்செய்தி கூறுங்கள். எனினும், (இவ்வாறு நீர் கூறுவதைப் பற்றி) இந்நிராகரிப்பவர்கள் உங்களை சந்தேகமற்ற ஒரு சூனியக்காரர்தான் என்று கூறுகின்றனர்

[3] (மனிதர்களே!) உங்கள் இறைவனாகிய அந்த அல்லாஹ்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாள்களில் படைத்து ‘அர்ஷின்' மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான். (இவை சம்பந்தப்பட்ட) எல்லா காரியங்களையும் அவனே திட்டமிட்டு (நிர்வகித்து)ம் வருகிறான். அவனுடைய அனுமதியின்றி (உங்களுக்காக அவனிடம்) பரிந்து பேசுபவர் எவருமில்லை. அந்த அல்லாஹ்தான் உங்களைப் படைத்து வளர்த்து காக்கும் இறைவன். ஆகவே, அவன் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். (நல்லுணர்ச்சி பெற இவற்றை) நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா

[4] இறந்த பின்னர் நீங்கள் அனைவரும் அவனிடமே செல்ல வேண்டியதிருக்கிறது. அல்லாஹ்வுடைய இவ்வாக்குறுதி உண்மையானதே! நிச்சயமாக அவன்தான் படைப்புகளை முதல் தடவையும் உற்பத்தி செய்கிறான். (இறந்த பின் மறுமுறையும்) அவர்களை உயிர்ப்பித்து, அவர்களில் நம்பிக்கைகொண்டு நற்செயல்களை செய்தவர்களுக்கு நீதமாக (நற்)கூலி கொடுக்கிறான். (இதை) எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு கடுமையாக கொதித்த நீர்தான் (மறுமையில்) குடிக்கக் கிடைக்கும். (இதை) நிராகரித்துக் கொண்டிருந்ததன் காரணமாக அவர்களுக்கு மிகத் துன்புறுத்தும் வேதனை உண்டு

[5] அவனே சூரியனை ஒளியாகவும் (பிரகாசமாகவும்), சந்திரனை (அழகிய) வெளிச்சம் தரக்கூடியதாகவும் ஆக்கி, ஆண்டுகளின் எண்ணிக்கையையும் (மாதங்களின்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவற்றுக்கு (மாறிமாறி வரக்கூடிய) தங்கும் இடங்களையும் நிர்ணயம் செய்தான். மெய்யான தக்க காரணமின்றி இவற்றை அல்லாஹ் படைக்கவில்லை. அறியக்கூடிய மக்களுக்காக(த் தன் ஆற்றலுக்குரிய) சான்றுகளை இவ்வாறு விவரிக்கிறான்

[6] இரவு பகல் மாறிமாறி வருவதிலும், வானங்கள் இன்னும் பூமியில் அல்லாஹ் படைத்திருப்பவற்றிலும் இறையச்சமுடைய மக்களுக்கு (நல்லுணர்வூட்டும்) பல சான்றுகள் நிச்சயமாக இருக்கின்றன

[7] நிச்சயமாக எவர்கள் நம்மைச் சந்திப்பதை (ஒரு சிறிதும்) நம்பாது இவ்வுலக வாழ்க்கையை விரும்பி, அதைக் கொண்டு திருப்தியடைந்து (அதிலேயே மூழ்கி) விட்டார்களோ அவர்களும், இன்னும் எவர்கள் நம் வசனங்களை (புறக்கணித்து) விட்டுப் பராமுகமாக இருக்கின்றனரோ அவர்களும்

[8] (ஆகிய) இவர்கள், இவர்கள் செய்து கொண்டிருந்த (தீய)வற்றின் காரணமாக இவர்களுடைய தங்குமிடம் நரகம்தான்

[9] நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களை அவர்களுடைய இறைவன் அவர்களின் நம்பிக்கையின் காரணமாக, நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கக்கூடிய மிக்க இன்பம் தரும் சொர்க்கங்களுக்குரிய வழியில் செலுத்துகிறான்

[10] அதில் அவர்கள் (நுழைந்ததும்) ‘‘எங்கள் இறைவனே! நீ மிகப் பரிசுத்தமானவன்; (நீ மிகப் பரிசுத்தமானவன்)'' என்று கூறுவார்கள். அதில் (தங்கள் தோழர்களைச் சந்திக்கும்போதெல்லாம்) ‘‘ஸலாமுன் (அலைக்கும்)'' என்று முகமன் கூறுவார்கள். முடிவில் ‘‘புகழனைத்தும் அகிலங்கள் அனைத்தையும் படைத்து வளர்த்து பரிபாலிக்கின்றவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமானது'' என்று புகழ்ந்து துதி செய்து கொண்டிருப்பார்கள்

[11] நன்மையை அடைய (மனிதர்கள்) அவசரப்படுவதைப் போல் அல்லாஹ்வும் (குற்றம் செய்த) மனிதர்களுக்குத் தீங்கிழைக்க அவசரப்பட்டால் (இதுவரை) நிச்சயமாக அவர்களுடைய காலம் முடிவு பெற்றேயிருக்கும். ஆகவே, (மறுமையில்) நம்மைச் சந்திக்க வேண்டியதிருக்கிறது என்பதை (ஒரு சிறிதும்) நம்பாதவர்களை அவர்களுடைய வழிகேட்டிலேயே தட்டழிந்து கெட்டலையும்படி (இம்மையில் சிறிது காலம்) நாம் விட்டு வைக்கிறோம்

[12] மனிதனுக்கு ஒரு தீங்கேற்பட்டால் (அதை நீக்கும்படி) அவன் தன் (படுத்த) படுக்கையிலும், (உட்கார்ந்த) இருப்பிலும், (நின்ற) நிலையிலும் நம்மிடமே பிரார்த்திக்கிறான். ஆனால், அவனுடைய துன்பத்தை அவனை விட்டு நாம் நீக்கிவிட்டாலோ அவன் தனக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கும்படி நம்மிடம் பிரார்த்தனையே செய்யாதவனைப் போல் (புறக்கணித்துச்) சென்று விடுகிறான்.வரம்பு மீறுகின்ற (இவர்களுக்கு) இவர்கள் செய்யும் காரியங்கள் இவ்வாறு அழகாக்கப்பட்டு விட்டன

[13] (மனிதர்களே!) உங்களுக்கு முன்னிருந்த எத்தனையோ வகுப்பினரை அவர்கள் செய்து கொண்டிருந்த அநியாயத்தின் காரணமாக நிச்சயமாக நாம் அழித்துவிட்டோம். அவர்களிடம் அனுப்பப்பட்ட (நம்) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளையே கொண்டு வந்தனர். எனினும் (அவற்றை) அவர்கள் நம்பவேயில்லை. குற்றம் செய்யும் மற்ற மக்களுக்கு இவ்வாறே நாம் கூலி கொடு(த்துத் தண்டி)ப்போம்

[14] அவர்களுக்குப் பின்னர் நாம் உங்களை (அவர்களுடைய) பூமிக்கு அதிபதிகளாக்கி, நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்று கவனித்து வருகிறோம்

[15] (முன்னர் அழிந்து விட்டவர்களின் இடத்தில் அமர்த்தப்பட்ட) இவர்களுக்கு நம் தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் (மறுமையில்) நம்மைச் சந்திப்பதை நம்பாத இவர்கள் (உம்மை நோக்கி) ‘‘இது அல்லாத வேறொரு குர்ஆனை நீர் கொண்டு வருவீராக; அல்லது எங்கள் இஷ்டப்படி இதை மாற்றிவிடுவீராக'' என்று கூறுகின்றனர். (அதற்கு அவர்களை நோக்கி ‘‘உங்கள் விருப்பத்திற்காக) நானே (என் இஷ்டப்படி) இதை மாற்றிவிட எனக்கு எவ்வித சக்தியுமில்லை. வஹ்யி மூலம் எனக்கு அறிவிக்கப்படுபவற்றைத் தவிர, (வேறொன்றையும்) நான் பின்பற்றுவதற்கில்லை. என் இறைவனுக்கு நான் மாறுசெய்தால் மகத்தான நாளுடைய வேதனைக்கு (ஆளாக வேண்டியதேற்படும் என்று) நிச்சயமாக நான் பயப்படுகிறேன்'' என்று (நபியே!) கூறுவீராக

[16] (மேலும்,) கூறுவீராக: ‘‘(உங்களுக்கு நான் இதை ஓதிக் காண்பிக்கக் கூடாதென்று) அல்லாஹ் எண்ணியிருந்தால், நான் இதை உங்களுக்கு ஓதிக் காண்பித்திருக்கவும் மாட்டேன். அவன் உங்களுக்கு இதை அறிவித்திருக்கவும் மாட்டான். நிச்சயமாக நான் இதற்கு முன்னரும் நீண்ட காலம் உங்களுடன் வசித்துள்ளேன் (அல்லவா? நான் பொய் சொல்பவன் அல்ல என்பதை நீங்கள் நன்கறிந்திருக்கிறீர்கள். இவ்வளவுகூட), நீங்கள் அறிந்துகொள்ள முடியாதா

[17] அல்லாஹ்வின் மீது பொய் சொல்பவனை விட அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்யாக்குபவனை விட அநியாயக்காரன் யார்? நிச்சயமாக (இந்த) குற்றவாளிகள் வெற்றி அடையவே மாட்டார்கள்

[18] (இணைவைப்பவர்கள்) அல்லாஹ்வை விட்டுவிட்டு அவர்களுக்கு நன்மையும் தீமையும் செய்ய முடியாதவற்றை வணங்குவதுடன் ‘‘இவை அல்லாஹ்விடத்தில் எங்களுக்கு சிபாரிசு செய்பவை'' என்றும் கூறுகின்றனர். (ஆகவே, நபியே! நீர் அவர்களை நோக்கி) ‘‘வானங்களிலோ பூமியிலோ அல்லாஹ்வுக்குத் தெரியாத(வை உள்ளனவா? அ)வற்றை (இவை மூலம்) நீங்கள் அவனுக்கு அறிவிக்கிறீர்களா? (அவனோ அனைத்தையும் நன்கறிந்தவன்;) அவன் மிகப் பரிசுத்தமானவன்; அவர்கள் இணை வைப்பவற்றை விட மிக உயர்ந்தவன்'' என்று கூறுவீராக

[19] மனிதர்கள் அனைவரும் (ஆரம்பத்தில் ஒரே மார்க்கத்தைப் பின்பற்றும்) ஒரே ஒரு வகுப்பினராகவே இருந்தனர். பின்னரே (தங்களுக்குள் ஏற்பட்ட பொறாமையின் காரணமாக பல வகுப்பினராகப்) பிரிந்து விட்டனர். (செயலுக்குரிய கூலி மறுமையில் தான் முழுமையாகக் கொடுக்கப்படும் என்று நபியே!) உமது இறைவனின் வாக்கு ஏற்கனவே ஏற்பட்டிருக்காவிடில், அவர்கள் மாறுபாடு செய்து கொண்டிருந்த விஷயத்தில் அவர்களுடைய காரியம் (இதுவரை) முடிவு பெற்றே இருக்கும்

[20] (தவிர ‘‘நாம் விரும்புகிறவாறு) ஏதாவது ஓர் அத்தாட்சி (இறைவனின் நபியாகிய) அவர் மீது அவருடைய இறைவனால் இறக்கப்பட வேண்டாமா?'' என்றும் அவர்கள் கூறுகின்றனர். அதற்கு (நபியே!) கூறுவீராக: ‘‘(நீங்கள் விரும்புகிறவாறு அத்தாட்சியை இறக்கி வைக்காத காரணம் உங்களுக்கு மறைவானது.) மறைவான விஷயங்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே. (ஆகவே, அதை நீங்கள் அறிய விரும்பினால்) நீங்கள் எதிர்பார்த்திருங்கள். நிச்சயமாக நானும் (உங்கள் விஷமக் கூற்றினால் உங்களுக்கு என்ன கேடு வருகிறதென்பதை) உங்களுடன் எதிர்பார்த்திருக்கின்றன்

[21] (இம்)மனிதர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களைப் போக்கி (பின்னர் நம்) அருளைக் கொண்டு அவர்கள் இன்பமடையும்படி நாம் செய்தால் (அதற்கு அவர்கள் நன்றி செலுத்துவதற்குப் பதிலாக) உடனே அவர்கள் நம் வசனங்களில் (தவறான அர்த்தம் கற்பிக்க) சூழ்ச்சி செய்கின்றனர். அதற்கு (நபியே! அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ் சூழ்ச்சி செய்வதில் மிக தீவிரமானவன். (எனவே அவனது சூழ்ச்சி உங்கள் சூழ்ச்சியைவிட முந்திவிடும்)'' என்று கூறுவீராக. நிச்சயமாக நம் தூதர்(களாகிய வானவர்)கள் நீங்கள் செய்யும் சூழ்ச்சிகளைப் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்

[22] நீரிலும் நிலத்திலும் அவனே உங்களை அழைத்துச் செல்கிறான். நீங்கள் கப்பலில் ஏறிய பின்னர் கப்பலில் உள்ளவர்களை நல்ல காற்று நடத்திச் செல்வதால் அவர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கும் சமயத்தில், புயல் காற்று அடிக்க ஆரம்பித்து நாலா பக்கங்களில் இருந்தும் அவர்களை அலைகள் வந்து மோதி ‘‘நிச்சயமாக நாம் (அலைகளால்) சூழ்ந்து கொள்ளப்பட்டோம்; (இதிலிருந்து தப்ப நமக்கு ஒரு வழியுமில்லை)'' என்று அவர்கள் எண்ணும் சமயத்தில் (நம்மை நோக்கி ‘‘எங்கள் இறைவனே!) இதிலிருந்து நீ எங்களை பாதுகாத்துக் கொண்டால் நிச்சயமாக நாங்கள் உனக்கு என்றென்றும் நன்றி செலுத்துபவர்களாக இருப்போம்'' என்று கலப்பற்ற மனதினராக அல்லாஹ்வை வழிபட்டு (மிக்கத் தாழ்மையுடன் அழுது கூக்குரலிட்டுப்) பிரார்த்திக்கிறார்கள்

[23] அவன் அவர்களை பாதுகாத்துக் கொண்டாலோ அவர்கள் (கரை சேர்ந்த) அச்சமயமே நியாயமின்றி பூமியில் அநியாயம் செய்யத் தலைப்படுகின்றனர். மனிதர்களே! உங்கள் அடாத செயல்கள் உங்களுக்கே கேடாக முடியும். (அதனால்) இவ்வுலக வாழ்க்கையில் சிறிது சுகம் அனுபவிக்கலாம். பின்னரோ நம்மிடம்தான் நீங்கள் திரும்ப வரவேண்டியதிருக்கிறது. நீங்கள் செய்து கொண்டிருந்தவை எவை என்பதை அச்சமயம் நாம் உங்களுக்கு அறிவித்து விடுவோம்

[24] இவ்வுலக வாழ்க்கையின் உதாரணம்: மேகத்திலிருந்து நாம் பொழியச் செய்யும் நீரை ஒத்திருக்கிறது. அது கால்நடைகளும் மனிதர்களும் புசிக்கக்கூடிய புற்பூண்டு ஆகியவற்றுடன் கலந்து (அடர்ந்த பயிராக வளர்ந்து, பூத்துக் காய்த்து) பூமியை அலங்காரப்படுத்திக் கொண்டிருக்கும் தறுவாயில், அதன் சொந்தக்காரர்கள் (நாம் செய்த வேளாண்மை அறுவடைக்கு வந்து விட்டது; நாளைக்கு) அதை நிச்சயமாக நாம் அறுவடை செய்துவிடுவோம் என்று எண்ணிக் கொண்டிருந்தனர். அச்சமயம், இரவிலோ பகலிலோ நம் கட்டளை(யினால் ஓர் ஆபத்து) வந்து அதனால் அவை நேற்றைய தினம் அவ்விடத்தில் இருக்கவேயில்லையென்று எண்ணக்கூடியவாறு அவற்றை நாம் அழித்து விட்டோம். (இந்த உதாரணத்தைச்) சிந்தித்து உணரக்கூடிய மக்களுக்கு நாம் (நம்) வசனங்களை இவ்வாறு தெளிவாக விவரிக்கிறோம்

[25] (மனிதர்களே!) ஈடேற்றம் அளிக்கக்கூடிய (சொர்க்க) வீட்டிற்கே அல்லாஹ் (உங்களை) அழைக்கிறான். அவன் விரும்புகிறவர்களை நேரான வழியில் செலுத்துகிறான்

[26] நன்மை செய்தவர்களுக்கு(க் கூலி) நன்மைதான். (அவர்கள் செய்ததை விட) அதிகமாகவும் கிடைக்கும். (அதனால் அவர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தவர்களாக இருப்பார்கள்.) அவர்கள் முகங்களை கவலையோ அல்லது இழிவோ சூழ்ந்து கொள்ளாது. நிச்சயமாக அவர்கள் சொர்க்கவாசிகளே. அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்

[27] தீமைகளை எவர்கள் செய்தபோதிலும் தீமைக்குரிய கூலி அதைப் போன்ற தீமையே! அவர்களை இழிவு வந்தடையும். அல்லாஹ்வி(ன் வேதனையி)லிருந்து அவர்களை பாதுகாத்துக் கொள்பவர்கள் ஒருவருமில்லை. இருண்ட இரவின் ஒரு பாகம் வந்து சூழ்ந்து கொண்டதைப்போல் அவர்களுடைய முகங்கள் (கருப்பாகக்) காணப்படும். அவர்கள் நரகவாசிகள்தான். அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள்

[28] (விசாரணைக்காக) அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று சேர்க்கும் நாளில் அவர்களில் இணைவைத்து வணங்கியவர்களை நோக்கி ‘‘நீங்களும் நீங்கள் இணைவைத்து வணங்கிய தெய்வங்களும் சிறிது இங்கு தாமதியுங்கள்'' என்று கூறி அவர்களுக்கிடையில் இருந்த தொடர்பை நீக்கி விடுவோம். அச்சமயம் அவர்களுடைய தெய்வங்கள் (என்று கற்பனையாக அவர்கள் வணங்கி வந்தவை) அவர்களை நோக்கி ‘‘நீங்கள் எங்களை வணங்கவே இல்லை'' என்றும்

[29] (இதற்கு) ‘‘நமக்கும் உங்களுக்குமிடையில் அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கிறான்; நீங்கள் (எங்களை) வணங்கியதை அறவே நாங்கள் அறியவும் மாட்டோம்'' என்றும் கூறும்

[30] அங்கு ஒவ்வோர் ஆத்மாவும் தான் செய்த செயலைச் சோதித்து (அது நன்மையா? தீமையா? என்பதை) அறிந்து கொள்ளும். பின்னர், அவர்கள் தங்கள் உண்மையான எஜமானாகிய அல்லாஹ்வின் பக்கமே கொண்டு வரப்படுவார்கள். அவர்கள் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டிருந்த தெய்வங்கள் அனைத்தும் அவர்களை விட்டு மறைந்துவிடும்

[31] (நபியே!) நீர் (அவர்களை நோக்கி) ‘‘வானத்திலிருந்தும் பூமியில் இருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிக்கும் பார்வைகளுக்கும் உரிமையாளன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ள வற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (உலகின்) எல்லாக் காரியங்களையும் திட்டமிட்டு நிர்வகித்து நிகழ்த்துபவன் யார்?'' என்று கேட்பீராக! அதற்கவர்கள் ‘‘அல்லாஹ்தான்'' என்று கூறுவார்கள். அவ்வாறாயின் (அவனுக்கு) நீங்கள் பயப்பட வேண்டாமா?'' என்று கேட்பீராக

[32] ‘‘அத்தகைய தன்மையுள்ள அல்லாஹ்தான் உங்கள் உண்மையான இறைவன். (இந்த) அளவு உண்மை விவரிக்கப்பட்ட பின்னர் (நீங்கள் அவனுக்கு அடிபணியாது இருப்பது) வழிகேட்டைத் தவிர வேறில்லை. (இவ்வுண்மையை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகிறீர்கள்?'' (என்றும் நபியே! கேட்பீராக)

[33] (அவர்கள் நம்பிக்கை கொள்ளாத) அவ்வாறே பாவத்தில் ஆழ்ந்து கிடக்கும் மற்றவர்களும், நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள் என்ற உமது இறைவனின் வாக்கு உண்மையாகி விட்டது

[34] (அவர்களை நோக்கி) ‘‘புதிதாக படைப்புகளை உண்டுபண்ணக் கூடியதும் (மரணித்த பின்) அவற்றை உயிர்ப்பிக்கக் கூடியதும் நீங்கள் இணைவைத்து வணங்கும் தெய்வங்களில் ஏதும் உண்டா?'' என்று (நபியே!) நீர் கேட்பீராக. (அதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன? நீர் அவர்களை நோக்கி) ‘‘படைப்புகளை முதலாவதாக உற்பத்தி செய்கிறவனும் (அவை மரணித்த) பின்னர் அவற்றை உயிர்ப்பிக்கக் கூடியவனும் அல்லாஹ்தான்'' (என்று கூறி ‘‘இந்த உண்மையை விட்டு) நீங்கள் எங்குச் செல்கிறீர்கள்?'' என்றும் கேட்பீராக

[35] ‘‘சத்திய மார்க்கத்தில் செலுத்தக்கூடியது நீங்கள் வணங்கும் தெய்வங்களில் ஏதும் உண்டா?'' என்றும் கேட்பீராக. (அதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன? நீர் அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ்தான் சத்திய மார்க்கத்தில் செலுத்தக்கூடியவன்'' (என்று கூறி) ‘‘நேரான வழியில் செலுத்தக்கூடியவனைப் பின்பற்றுவது தகுமா? அல்லது பிறர் அதற்கு வழி காண்பிக்காமல் தானாகவே வழி செல்ல முடியாததைப் பின்பற்றுவது தகுமா? உங்களுக்கு என்ன (கேடு) நேர்ந்தது? (இதற்கு மாறாக) நீங்கள் எவ்வாறு முடிவு செய்யலாம்'' என்றும் கேட்பீராக

[36] அவர்களில் பெரும்பாலானவர்கள் வீண் சந்தேகத்தையே தவிர வேறொன்றையும் பின்பற்றுவது இல்லை. நிச்சயமாக வீண் சந்தேகம் உண்மையை அறிவதற்கு ஒரு சிறிதும் பயன்படாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கறிந்தவன்

[37] இந்தக் குர்ஆன் அல்லாஹ்வினால் (அருளப்பட்டதே) தவிர (மற்ற எவராலும்) பொய்யாகக் கற்பனை செய்யப்பட்டதல்ல. மேலும், இதற்கு முன்னுள்ள வேதங்களை இது உண்மையாக்கி வைத்து அவற்றில் உள்ளவற்றை விவரித்துக் கூறுவதாகவும் இருக்கிறது. ஆகவே, (இது) உலகத்தாரின் இறைவனிடமிருந்து வந்தது என்பதில் அறவே சந்தேகமில்லை

[38] இதை (நம் தூதராகிய) ‘‘அவர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார்'' என அவர்கள் கூறுகின்றனரா? (அவ்வாறாயின் நபியே!) கூறுவீராக: ‘‘நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் அல்லாஹ்வை தவிர்த்து உங்களுக்குச் சாத்தியமானவர்கள் அனைவரையும் (உங்களுக்குத் துணையாக) அழைத்துக் கொண்டு (நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து,) இதிலுள்ளதைப் போன்றதோர் அத்தியாயத்தை (அமைத்து)க் கொண்டு வாருங்கள்

[39] எனினும், அவர்கள் தங்கள் அறிவால் தெரிந்து கொள்ள முடியாததையும், (நிகழுமென) அதில் கூறப்பட்டவை நிகழாதிருக்கையில் அவற்றையும் (அதில் கூறப்பட்ட மற்றவற்றையும்) பொய்யென அவர்கள் கூறுகின்றனர்.இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறே (தங்கள் அறிவுக்கு எட்டாததையும், தாங்கள் காணாததையும்) பொய்யெனக் கூறிக்கொண்டிருந்தனர். ஆகவே, அந்த அநியாயக்காரர்களின் முடிவு எப்படி முடிந்தது என்பதை (நபியே!) கவனிப்பீராக

[40] (திரு குர்ஆனில் கூறப்பட்டவை நிகழுமென) அதை நம்பக்கூடியவரும் அவர்களில் உள்ளனர்; (நிகழ்ந்த பின்னரும்) அதை நம்பாதவரும் அவர்களில் உள்ளனர். (அதை நம்பாத) இந்த விஷமிகளை உமது இறைவன் நன்கறிவான்

[41] (நபியே!) உம்மை பொய்யரென அவர்கள் கூறினால் (அவர்களை நோக்கி ‘‘நன்மையோ தீமையோ) என் செயல்(களின் பலன்) எனக்குரியது; (அவ்வாறே) உங்கள் செயல்(களின் பலன்) உங்களுக்குரியது. என் செயலில் இருந்து நீங்கள் விடுபட்டவர்கள்; உங்கள் செயலில் இருந்து நான் விடுபட்டவன்'' என்று கூறுவீராக

[42] அவர்களில், உங்கள் வார்த்தையைக் கேட்போ(ரைப் போல் பாவனை செய்வோ)ரும் இருக்கின்றனர். (அதனால் அவர்கள் உங்களுக்கு கட்டுப்பட்டு விட்டார்கள் என்று நீர் எண்ணி விட்டீரா?) ஒன்றையுமே (செவியுற்று) அறிந்து கொள்ள முடியாத முழுச் செவிடர்களை செவி கேட்கும்படிச் செய்ய உம்மால் முடியுமா

[43] உம்மைப் பார்ப்பவர்களும் அவர்களில் பலர் இருக்கின்றனர். (அதனால் அவர்கள் உம்மை அறிந்து கொண்டார்கள் என எண்ணி விட்டீர்களா?) எதையும் பார்க்க முடியாத பிறவிக் குருடர்களைப் பார்க்கும்படிச் செய்ய உம்மால் முடியுமா

[44] நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களுக்கு அறவே தீங்கிழைப்பது இல்லை. எனினும், மனிதர்கள் (தீய செயல்களைச் செய்து) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கின்றனர்

[45] (விசாரணைக்காக) அவர்களை ஒன்று சேர்க்கும் நாளில் பகலில் ஒரு சொற்ப நேரத்தைத் தவிர (இவ்வுலகில்) தாங்கள் தங்கவில்லை என்று அவர்கள் எண்ணுவதுடன், தங்களுக்குள் ஒருவரையொருவர் அறிந்தும் கொள்வார்கள். (ஆனால், ஒருவருக்கொருவர் உதவி செய்ய முன்வர மாட்டார்.) அல்லாஹ்வின் சந்திப்பைப் பொய்யாக்கியவர்கள் நிச்சயமாக (அந்த நாளில்) நஷ்டமடைந்தே இருப்பார்கள். (அந்நஷ்டத்திலிருந்து மீள) வழி காணாதவர்களாகவும் இருப்பார்கள்

[46] (நபியே!) நாம் அவர்களுக்கு வாக்களித்திருக்கும் (வேதனைகளில்) சிலவற்றை (உமது வாழ்க்கை காலத்திலேயே) நீர் பார்க்கும்படிச் செய்வோம்; அல்லது (அவை வருவதற்கு முன்னர்) நாம் உம்மைக் கைப்பற்றிக் கொள்வோம். எவ்வாறாயினும் அவர்கள் நம்மிடம்தான் திரும்ப வரவேண்டியதிருக்கிறது. அல்லாஹ் அவர்கள் செய்பவற்றைப் பார்(த்துக் கொண்டே இரு)க்கிறான்

[47] ஒவ்வொரு வகுப்பினருக்கும் ஒரு தூதர் (நம்மால்) அனுப்பப்பட்டார். அவர்களுடைய தூதர் (அவர்களிடம்) வந்த சமயத்தில் (அவரைப் பின்பற்றியவர்களை பாதுகாத்தும், பொய்யாக்கியவர்களை அழித்தும்) அவர்களுக்கிடையில் நீதமாகவே தீர்ப்பளிக்கப்பட்டது. அவர்களுக்கு (அணுவளவும்) அநியாயம் செய்யப்படவில்லை

[48] ‘‘நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் (நீங்கள் பயமுறுத்தும்) வேதனை எப்பொழுது (வரும்)?'' என்று அவர்கள் கேட்கின்றனர்

[49] (அதற்கு நபியே!) கூறுவீராக: ‘‘அல்லாஹ் நாடியதைத் தவிர ஒரு நன்மையோ தீமையோ நான் எனக்கே தேடிக்கொள்ள சக்தியற்றவன். ஒவ்வொரு வகுப்பாருக்கும் ஒரு குறிப்பிட்ட தவணையுண்டு. அவர்களுடைய தவணை வரும் சமயத்தில் ஒரு நாழிகை கூட பிந்த மாட்டார்கள்; முந்தக்கூட மாட்டார்கள்.'' (அத்தவணையில் அவர்கள் காரியம் முடிவு பெற்றுவிடும்)

[50] (நபியே) கூறுவீராக: ‘‘அவனுடைய வேதனை இரவிலோ பகலிலோ (எந்நேரத்திலாயினும்) உங்களிடம் வந்தால் (அதை நீங்கள் தடுத்துவிட முடியுமா என்பதைக்) கவனித்தீர்களா? (நபியே!) எதற்காக இக்குற்றவாளிகள் (வேதனை எப்பொழுது வரும்... எப்பொழுது வரும்... என்று கேட்டு) அவசரப்படுகின்றனர்

[51] ‘‘(இப்பொழுது நீங்கள் அவசரப்பட்டுக் கொண்டிருக்கும்) அது வந்ததன் பின்னரா அதை நீங்கள் நம்புவீர்கள்? (அச்சமயம் நீங்கள் அதை நம்புவதில் பயன் ஒன்றும் இல்லை.) நீங்கள் அவசரப்பட்டுக் கொண்டிருந்தது இதோ வந்துவிட்டது!'' (என்றுதான் அந்நேரத்தில் கூறப்படும்)

[52] பிறகு, இந்த அநியாயக்காரர்களை நோக்கி ‘‘நிலையான இந்த வேதனையை சுவைத்துக் கொண்டிருங்கள். நீங்கள் தேடிக்கொண்ட (தீய) செயலுக்குத் தகுதியான கூலியே உங்களுக்குக் கொடுக்கப்பட்டது'' என்றும் கூறப்படும்

[53] (நபியே!) ‘‘அது உண்மைதானா?'' என்று அவர்கள் உம்மிடம் வினவுகின்றனர். அதற்கு நீர் கூறுவீராக: ‘‘மெய்தான்! என் இறைவன் மீது சத்தியமாக! நிச்சயமாக அது உண்மைதான். (அதை) நீங்கள் தடுத்துவிட முடியாது

[54] அநியாயம் செய்த ஒவ்வோர் ஆத்மாவிடமும் உலகத்தில் உள்ள (பொருள்கள்) அனைத்தும் இருந்தபோதிலும் அவை அனைத்தையுமே (தனக்குப்) பரிகாரமாகக் கொடுத்துவிடக் கருதும்! மேலும், வேதனையைக் கண்ணால் காணும் அந்நேரத்தில் (மக்கள்) துக்கத்தை மறைத்துக் கொள்(ள கருது)வார்கள் (அந்நாளில்) அவர்களுக்கு நீதமாகவே தீர்ப்பளிக்கப்படும்; (அணுவளவும்) அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்

[55] (மனிதர்களே!) நிச்சயமாக வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்குரியன என்பதை அறிந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானதுதான் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். எனினும் (மனிதர்களில்) பலர் இதை நம்புவதில்லை

[56] அவனே (உங்களை) உயிர்ப்பித்தான்; அவனே (உங்களை) மரணிக்கச் செய்கிறான். பின்னர் அவனிடமே (மறுமையில்) நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்

[57] மனிதர்களே! நிச்சயமாக உங்கள் இறைவனிடமிருந்து நல்லுபதேசமும் உங்கள் உள்ளங்களிலுள்ள நோய்களை குணப்படுத்தக் கூடியதும், (அது) நம்பிக்கைக் கொண்டவர்களுக்கு நேர்வழி காட்டியும், இறை அருளும் வந்துள்ளன

[58] ‘‘(இதை) அல்லாஹ்வின் அருளாகவும் அன்பாகவும் (பாவித்து) இதற்காக அவர்கள் மகிழ்ச்சியடையட்டும். இது அவர்கள் சேகரித்து வைத்திருக்கும் (மற்ற பொருள்கள்) அனைத்தையும் விட மிக்க மேலானது'' என்றும் (நபியே!) கூறுவீராக

[59] (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘உங்களுக்காக அல்லாஹ் இறக்கி வைத்த உணவுகள் - அவற்றில் சிலவற்றை ஆகாதவை என்றும், சிலவற்றை ஆகுமானவை என்றும் (உங்கள் விருப்பப்படி) நீங்கள் ஆக்கிக் கொள்கிறீர்களே அதைப்பற்றி கூறுங்கள்!'' (‘‘இப்படி உங்கள் விருப்பப்படி செய்ய) அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்திருக்கிறானா? அல்லது அல்லாஹ்வின் மீது கற்பனையாக(ப் பொய்) கூறுகிறீர்களா?'' என்று (அவர்களைக்) கேட்பீராக

[60] அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய் கூறுபவர்கள், மறுமை நாளைப் பற்றி என்ன எண்ணுகின்றனர்? (அது பொய்யென எண்ணிக் கொண்டனரா?) நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது பெரும் கிருபையுடையவன். (அவ்வாறு இல்லையெனில் அவர்களை உடனுக்குடன் தண்டித்திருப்பான்.) இவ்வாறிருந்தும் அவர்களில் பலர் அவனுக்கு நன்றி செலுத்துவதில்லை

[61] நீங்கள் என்ன நிலைமையில் இருந்தபோதிலும், குர்ஆனிலிருந்து நீங்கள் எ(ந்த வசனத்)தை ஓதிய போதிலும், (உங்கள் காரியங்களில்) நீங்கள் எதைச் செய்த போதிலும், நீங்கள் அவற்றில் ஈடுபட்டிருக்கும்போதே உங்களை நாம் கவனிக்காமல் இருப்பதில்லை. பூமியிலோ, வானத்திலோ உள்ளவற்றில் ஓர் அணுவளவும் (நபியே!) உமது இறைவனுக்குத் தெரியாமல் தவறிவிடுவதில்லை. இவற்றைவிட சிறிதோ அல்லது பெரிதோ (எதுவாயினும்) அவனுடைய விரிவான பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்யப்படாமலில்லை

[62] (நம்பிக்கையாளர்களே!) ‘‘அறிந்து கொள்ளுங்கள் அல்லாஹ்வின் நேசர்க(ளான நல்லடியார்)களுக்கு நிச்சயமாக ஒரு பயமுமில்லை; அவர்கள் துன்பப்படவும் மாட்டார்கள்

[63] அவர்கள் (இறைவனை) உண்மையாகவே நம்பிக்கை கொண்டு (அவனுக்குப்) பயந்து நடக்கின்றனர்

[64] இவ்வுலக வாழ்விலும், மறுமையிலும் அவர்களுக்கு நற்செய்தி உண்டு. (மேலான பதவிகளை அவர்களுக்கு அளிப்பதாகக் கூறியிருக்கும்) அல்லாஹ்வுடைய வாக்குறுதிகளில் எவ்வித மாறுதலும் இருக்காது. இதுதான் மகத்தான வெற்றியாகும்

[65] (நபியே! உம்மை அவமதித்துக் கூறுகின்ற) அவர்களுடைய வார்த்தைகள் உம்மை சஞ்சலப்படுத்த வேண்டாம். நிச்சயமாக கண்ணியம், (மரியாதை) அனைத்தும் அல்லாஹ்வுக்கு உரியனவே! (அவன் விரும்பியவர்களுக்கு அவற்றைக் கொடுப்பான்.) அவன்தான் நன்கு செவியுறுபவன், (அனைத்தையும்) நன்கறிந்தவன் ஆவான்

[66] வானங்களிலும், பூமியிலும் உள்ள அனைத்தும் நிச்சயமாக அல்லாஹ்வுக்குரியனவே என்பதை அறிந்து கொள்ளுங்கள். (இவ்வாறிருக்க,) அல்லாஹ்வையன்றி மற்றவற்றையும் தெய்வங்கள் என அழைப்பவர்கள் எதைத்தான் பின்பற்றுகின்றனர்? வீண் சந்தேகத்தைதவிர வேறு எதையும் அவர்கள் பின்பற்றுவதில்லை; அவர்கள் வெறும் கற்பனை செய்பவர்களே

[67] நீங்கள் சுகம் பெறுவதற்காக இரவையும், நீங்கள் (அனைத்தையும் தெளிவாகப்) பார்ப்பதற்காகப் பகலையும் உங்களுக்கு அவனே உருவாக்கினான். (அவனுடைய வசனங்களுக்குச்) செவி சாய்க்கும் மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன

[68] அல்லாஹ்வுக்குச் சந்ததி உண்டென்று (சிலர்) கூறுகின்றனர். அவனோ (இக்கற்பனையிலிருந்து) மிகப் பரிசுத்தமானவன். அவன் (சந்ததியின்) தேவையற்றவன். வானங்களிலும், பூமியிலும் உள்ள அனைத்தும் அவனுக்கே சொந்தமானவை. (அவனுக்குச் சந்ததி உண்டென்று கூறுகின்ற) உங்களிடத்தில் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நீங்கள் நிச்சயமாக அறிந்து கொள்ளாமலேயே அல்லாஹ்வின் மீது (இப்படி பொய்) கூறுகிறீர்களா

[69] ‘‘எவர்கள் அல்லாஹ்வின் மீது (இப்படி) கற்பனையாகப் பொய் கூறுகின்றனரோ அவர்கள் நிச்சயமாக வெற்றி அடையமாட்டார்கள்'' என்று (நபியே!) கூறிவிடுவீராக

[70] (இவர்கள்) இவ்வுலகில் சிறிது சுகமனுபவிக்கலாம். பின்னர் (மறுமையிலோ) நம்மிடம்தான் அவர்கள் திரும்ப வரவேண்டியதிருக்கிறது. பின்னர், (உண்மையை) அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததன் காரணமாக அவர்களை கடினமான வேதனையை சுவைக்க வைப்போம்

[71] (நபியே!) நூஹ் உடைய சரித்திரத்தை அவர்களுக்கு ஓதிக்காண்பிப்பீராக. அவர் தன் மக்களை நோக்கி, ‘‘என் மக்களே! நான் (உங்களிடத்தில்) இருப்பதும், நான் (உங்களுக்கு) அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதிக் காண்பிப்பதும் உங்களுக்குப் பளுவாகத் தோன்றி (அதற்காக நீங்கள் எனக்கு ஏதும் தீங்கு செய்யக் கருதி)னால், நான் அல்லாஹ்வையே நம்பியிருக்கிறேன். நீங்கள் குறைவு செய்துவிட்டதாக பின்னர் உங்களுக்குக் கவலை ஏற்படாதவாறு நீங்கள் உங்கள் சகாக்களையும் சேர்த்துக் கொண்டு நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து (எனக்குத் தீங்கிழைக்க) ஒரு காரியத்தை முடிவு செய்துகொண்டு (அம்முடிவின் படி) எனக்குச் செய்து பாருங்கள். (இதில்) நீங்கள் சிறிதும் எனக்கு அவகாசமளிக்க வேண்டாம்'' என்று கூறினார்

[72] பின்னும் நீங்கள் (என்னைப்) புறக்கணித்(து நிராகரித்)தால் (அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஏனென்றால்,) நான் உங்களிடத்தில் ஒரு கூலியும் எதிர்பார்க்கவில்லை; என் கூலி அல்லாஹ்விடமே தவிர (மற்றெவரிடமும்) இல்லை. நான் அவனுக்கு முற்றிலும் பணிந்து வழிப்பட்டு நடக்கும்படியாகவே கட்டளையிடப் பட்டுள்ளேன்'' (என்று கூறினார்)

[73] (எனினும்,) அவர்களோ அவரைப் பொய்யரென்றே கூறினார்கள். ஆகவே, அவரையும் அவரைச் சார்ந்தவர்களையும் கப்பலில் (ஏற்றி) பாதுகாத்துக் கொண்டு நம் வசனங்களைப் பொய்யாக்கியவர்களை (வெள்ளப் பிரளயத்தில்) மூழ்கடித்தோம். அவர்களுக்குப் பதிலாக (அவர்களுடைய பூமியில் நாம் பாதுகாத்துக் கொண்ட) இவர்களை அதிபதிகளாக ஆக்கினோம். அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்ட அவர்களுடைய முடிவு எப்படி ஆயிற்று என்பதை (நபியே!) கவனிப்பீராக

[74] அவருக்குப் பின்னர் தோன்றிய மக்களுக்கும், (நாம்) தூதர்கள் பலரை அனுப்பி வைத்தோம். அத்தூதர்களும் தெளிவான பல அத்தாட்சிகளை அவர்களிடம் கொண்டு வந்தார்கள். ஆயினும், இவர்களுக்கு முன்னர் (இவர்களுடைய மூதாதைகள்) பொய்யாக்கிக் கொண்டிருந்த உண்மைகளை இவர்களும் நம்பிக்கைக் கொள்பவர்களாக இல்லை. வரம்பு மீறுபவர்களுடைய உள்ளங்கள் மீது (அவர்களின் பாவத்தின் காரணமாக) இவ்வாறே நாம் முத்திரையிட்டு விடுகிறோம்

[75] இவர்களுக்குப் பின்னர் மூஸாவையும், ஹாரூனையும் நம் அத்தாட்சிகளுடன் (நம் தூதர்களாக) ஃபிர்அவ்னிடமும், அவனுடைய தலைவர்களிடமும் அனுப்பி வைத்தோம். எனினும், அவர்கள் கர்வம் கொண்டு (சத்தியத்தை நிராகரித்து) குற்றம் செய்யும் மக்களாகவே ஆனார்கள்

[76] அவர்களிடம் நம் உண்மை(யான அத்தாட்சி) வந்தபொழுது ‘‘நிச்சயமாக இது தெளிவான சூனியம்தான்'' என்று கூறினார்கள்

[77] அதற்கு மூஸா (அவர்களை நோக்கி) ‘‘உங்களிடம் வந்த உண்மையை பார்த்தா நீங்கள் இவ்வாறு கூறுகிறீர்கள்? சூனியமா இது? (அறவே இது சூனியம் இல்லை) சூனியக்காரர்கள் வெற்றி பெறமாட்டார்கள்'' என்று கூறினார்

[78] அதற்கவர்கள் ‘‘எங்கள் மூதாதையர்கள் எதில் இருக்க நாங்கள் கண்டோமோ அதிலிருந்து எங்களைத் திருப்பிவிடவும், இப்புவியில் நீங்கள் இருவரும் பெரியவர்களாகி விடவுமா நீங்கள் எங்களிடம் வந்தீர்கள்? உங்கள் இருவரையும் (இறைவனின் தூதர்கள் என்று) நாங்கள் நம்பவே மாட்டோம்'' என்று கூறினார்கள்

[79] பின்னர், ஃபிர்அவ்ன் (தன் மக்களை நோக்கி) ‘‘சூனியத்தில் தேர்ச்சி பெற்ற அனைவரையும் என்னிடம் அழைத்து வாருங்கள்'' என்று கட்டளையிட்டான்

[80] (பல இடங்களிலுமுள்ள) சூனியக்காரர்கள் (குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்திற்கு) வந்து சேரவே, மூஸா அவர்களை நோக்கி ‘‘நீங்கள் (சூனியம் செய்ய) எறியக்கூடியதை எறி(ந்து உங்கள் சூனியத்தைச் செய்)யுங்கள்'' என்று கூறினார்

[81] (அவ்வாறு) அவர்கள் எறி(ந்து சூனியம் செய்)யவே, மூஸா (அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் செய்தவை அனைத்தும் (வெறும்) சூனியம்தான். அதிசீக்கிரத்தில் நிச்சயமாக அல்லாஹ் இவற்றை அழித்து விடுவான். நிச்சயமாக அல்லாஹ் (சூனியம் செய்து) விஷமம் செய்பவர்களின் செயலை சீர்படச் செய்வதில்லை

[82] ‘‘நிச்சயமாக, அல்லாஹ் தன் அத்தாட்சிகளைக் கொண்டு சத்தியத்தை நிலை நாட்டியே தீருவான். (அதைக்) குற்றவாளிகள் வெறுத்தபோதிலும் சரியே'' என்று கூறினார். (அவர் கூறியவாறே அவர்கள் செய்த சூனியங்கள் அனைத்தையும் அல்லாஹ் அழித்து விட்டான்)

[83] (இதைக் கண்ணுற்ற பின்னரும்) மூஸாவை அவர் இனத்தவரில் சிலர்தான் நம்பிக்கை கொண்டனர். அவர்களும் தங்களை ஃபிர்அவ்னும், அவனுடைய இனத்தவர்களும் துன்புறுத்துவார்களோ என்று பயந்து கொண்டே இருந்தனர். ஏனென்றால், நிச்சயமாக ஃபிர்அவ்ன் அந்த பூமியில் மிகச் சக்தி வாய்ந்தவனாக இருந்தான். நிச்சயமாக அவன் வரம்பு மீறி(க் கொடுமை செய்பவர்)களில் இருந்தான்

[84] மூஸா (தன் மக்களை நோக்கி) ‘‘என் மக்களே! நீங்கள் (மெய்யாகவே) அல்லாஹ்வை நம்பிக்கைக் கொண்டு, உண்மையாகவே நீங்கள் அவனுக்கு முற்றிலும் பணிந்து வழிப்படுகிறவர்களாகவும் இருந்தால், முற்றிலும் அவனையே நம்பி (அவனிடமே உங்கள் காரியங்கள் அனைத்தையும் ஒப்படைத்து) விடுங்கள்'' என்று கூறினார்

[85] அதற்கவர்கள், ‘‘(அவ்வாறே) அல்லாஹ்விடம் எங்கள் காரியங்கள் அனைத்தையும் ஒப்படைத்து விட்டோம். எங்கள் இறைவனே! நீ எங்களை அநியாயம் செய்யும் மக்களின் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிவிடாதே!'' என்று பிரார்த்தித்தார்கள்

[86] (எங்கள் இறைவனே!) ‘‘நிராகரிக்கும் மக்களிடமிருந்து உன் அருளைக் கொண்டு நீ எங்களை பாதுகாத்துக் கொள்வாயாக!'' (என்றும் பிரார்த்தித்தார்கள்)

[87] (ஆகவே,) மூஸாவுக்கும் அவருடைய சகோதரருக்கும் நாம் வஹ்யி அறிவித்தோம்: ‘‘நீங்கள் இருவரும் உங்கள் மக்களுக்காக ‘மிஸ்ரில்' பல வீடுகளை அமைத்துக் கொண்டு, உங்கள் அவ்வீடுகளையே மஸ்ஜிதுகளாக்கி (அவற்றில்) தவறாது தொழுது வாருங்கள்.'' (‘‘மேலும், நீங்கள் விடுதலையடைந்து விடுவீர்கள்'' என்று) நம்பிக்கை கொண்டவர்களுக்கு (மூஸாவே) நற்செய்தி கூறுவீராக

[88] மூஸா (தன் இறைவனை நோக்கி,) ‘‘என் இறைவனே! நிச்சயமாக நீ ஃபிர்அவ்னுக்கும், அவனுடைய மக்களுக்கும் (ஆடம்பர) அலங்காரங்களையும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய பொருள்களையும் அளித்திருக்கிறாய். ஆகவே, எங்கள் இறைவனே! அவர்கள் (அவற்றைக் கொண்டு மற்ற மனிதர்களை) உன் வழியிலிருந்து திருப்பி விடுகின்றனர். எங்கள் இறைவனே! அவர்களின் பொருள்களை நாசமாக்கி, அவர்களுடைய உள்ளங்களையும் கடினமாக்கி விடு. துன்புறுத்தும் வேதனையை அவர்கள் (கண்ணால்) காணும் வரை, அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்'' என்று பிரார்த்தித்தார்

[89] அதற்கு (இறைவன், ‘‘மூஸாவே ஹாரூனே!) உங்கள் இருவரின் பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட்டு விட்டது. ஆகவே, நீங்கள் (மார்க்கத்தில்) உறுதியாக இருங்கள்; அறிவில்லாத மக்களின் வழியை நீங்கள் பின்பற்றி விடாதீர்கள்'' என்று கூறினான்

[90] இஸ்ராயீலின் சந்ததிகள் கடலைக் கடக்கும்படி நாம் செய்தோம். ஃபிர்அவ்னும் அவனுடைய ராணுவங்களும் அளவு கடந்த கொடுமை செய்ய(க் கருதி) அவர்களைப் பின் தொடர்ந்து சென்றார்கள். (ஆகவே, அவர்களை நாம் கடலில் மூழ்கடித்து விட்டோம்.) ஃபிர்அவ்ன் மூழ்க ஆரம்பிக்கவே, ‘‘இஸ்ராயீலின் சந்ததிகள் நம்பிக்கை கொண்டிருக்கும் இறைவனை நானும் நம்பிக்கை கொள்கிறேன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை; நான் அவனுக்கு முற்றிலும் பணிந்து வழிபடுகிறேன்'' என்று (அபயமிட்டு) அலறினான்

[91] (அதற்கும் நாம் அவனை நோக்கி,) ‘‘இச்சமயம்தான் (நீ நம்பிக்கை கொள்கிறாய்!) சற்று முன் வரை நீ மாறு செய்துகொண்டு, விஷமிகளில் ஒருவனாகவே இருந்தாய்

[92] எனினும், உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாவதற்காக உன் உடலை (அது அழியாமல்) நாம் இன்றைய தினம் பாதுகாத்துக் கொள்வோம்'' (என்று கூறினோம்.) எனினும், நிச்சயமாக மனிதர்களில் பலர் நம் அத்தாட்சிகளைப் பற்றி பராமுகமாயிருக்கின்றனர்

[93] நிச்சயமாக, நாம் இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு (வாக்களித்த) மிக வசதியான இடத்தைத் தந்து, நல்ல உணவுகளையும் அவர்களுக்கு அளித்து வந்தோம். ஆகவே, உண்மையான ஞானம் (என்னும் இவ்வேதம்) அவர்களிடம் வரும் வரை இதற்கவர்கள் மாறுபடவில்லை; (வந்ததன் பின்னரே இதை நிராகரித்து மாறு செய்கின்றனர்.) எதில் அவர்கள் மாறு செய்கின்றனரோ அதைப் பற்றி அவர்களுக்கு மறுமை நாளில் நிச்சயமாக (அதுதான் உண்மை என்று) உமது இறைவன் தீர்ப்பளிப்பான்

[94] (நபியே!) நாம் உமக்கு இறக்கியிருக்கும் இதில் (சிறிதும் சந்தேகம் கொள்ளாதீர்.) நீர் சந்தேகித்தால் உமக்கு முன்னர் அருளப்பட்ட வேதங்களை ஓதுபவர்களிடம் நீர் கேட்டுப் பார்ப்பீராக. நிச்சயமாக உமது இறைவனிடமிருந்தே உண்மை(யான இவ்வேதம்) உம்மிடம் வந்தது. ஆதலால், சந்தேகப்படுபவர்களில் நீரும் (ஒருவராக) ஆகிவிட வேண்டாம்

[95] அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யாக்கியவர்களுடன் நீர் சேர்ந்துவிட வேண்டாம். அவ்வாறாயின் நஷ்டமடைந்தவர்களில் நீரும் ஒருவராகி விடுவீர்

[96] நிச்சயமாக எவர்கள் மீது (பாவிகளென) உமது இறைவனுடைய தீர்ப்பு ஏற்பட்டு விட்டதோ அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்

[97] துன்புறுத்தும் வேதனையை அவர்கள் (கண்ணால்) காணும் வரை, அத்தாட்சிகள் அனைத்தும் அவர்களிடம் வந்தாலும், (அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்)

[98] தங்கள் நம்பிக்கை பலனளிக்கக்கூடிய விதத்தில் (வேதனை வருவதற்கு முன்னர் வேதனையின் அறிகுறியைக் கண்டதும், நம்பிக்கை கொண்டு வேதனையில் இருந்து தப்பித்துக் கொண்ட) ‘யூனுஸ்' உடைய மக்களைப் போல மற்றோர் ஊரார் இருந்திருக்க வேண்டாமா? அவர்கள் (வேதனையின் அறிகுறியைக் கண்டதும் வேதனை வருவதற்கு முன்னதாகவே) நம்பிக்கை கொண்டதனால், இம்மையில் இழிவுபடுத்தும் வேதனையை அவர்களை விட்டு நாம் நீக்கிவிட்டோம். மேலும், சிறிது காலம் சுகம் அனுபவிக்க அவர்களை நாம் விட்டு வைத்தோம்

[99] (நபியே!) உமது இறைவன் விரும்பினால், பூமியிலுள்ள அனைவருமே நம்பிக்கையாளர்களாக ஆகிவிடுவார்கள். ஆகவே, மனிதர்கள் (அனைவருமே) நம்பிக்கையாளர்களாகிவிட வேண்டுமென்று அவர்களை நீர் நிர்ப்பந்திக்க முடியுமா

[100] எந்த ஆத்மாவும் அல்லாஹ்வின் நாட்டம் இன்றி நம்பிக்கைகொள்ள முடியாது. ஆனால், அறிவில்லாதவர்(களாகிய விஷமி)கள் மீதே (அவர்களின் விஷமத்தின் காரணமாகப்) பாவத்தின் தண்டனையை அவன்ஆக்கி விடுகிறான்

[101] (நபியே! அவர்களை நோக்கி) ‘‘வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றை (சிறிது) கவனித்துப் பாருங்கள்'' எனக் கூறுவீராக. எனினும், நம்பிக்கை கொள்ளாத மக்களுக்கு நம் வசனங்களும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும் ஒரு பயனுமளிக்காது

[102] (நபியே!) அவர்கள் தங்களுக்கு முன் சென்றவர்களுக்கு ஏற்பட்ட கஷ்டத்தைப் போன்றதேயன்றி (வேறு எதையும்) எதிர்பார்க்கின்றனரா? (எனவே, அவர்களை நோக்கி ‘‘அத்தகைய கஷ்டகாலம்தான் உங்களுக்கும் வர இருக்கிறது.) ஆகவே, (அதை) நீங்களும் எதிர்பார்த்திருங்கள்; நிச்சயமாக நானும் (அது உங்களுக்கு வருவதை) உங்களுடன் எதிர்பார்க்கிறேன்'' என்று கூறுவீராக

[103] (அவ்வாறு வேதனை வரும் காலத்தில்) நம் தூதர்களை பாதுகாத்துக் கொள்வோம். இவ்வாறே நம்பிக்கை கொண்டவர்களையும் பாதுகாத்துக் கொள்வோம். (ஏனென்றால்,) நம்பிக்கை கொண்டவர்களை பாதுகாத்துக் கொள்வது நம்மீது கடமையாகவே இருக்கிறது

[104] (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘மனிதர்களே! நீங்கள் என் மார்க்கத்தில் சந்தேகம் கொண்டபோதிலும், அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்குபவற்றை நான் எக்காலத்திலும் வணங்கப்போவதில்லை. எனினும், உங்கள் அனைவருடைய உயிரையும் கைப்பற்றும் (சக்தி பெற்ற) அல்லாஹ்வையே வணங்குவேன். நம்பிக்கையாளர்களில் நானும் ஒருவனாக இருக்க வேண்டுமென்றே கட்டளையிடப்பட்டுள்ளேன்

[105] (நபியே!) உறுதியுடையவராக நேரான மார்க்கத்தின் பக்கமே உமது முகத்தை தொடர்ந்து திருப்பி வைப்பீராக! இணைவைத்து வணங்குபவர்களில் நீரும் ஒருவராகிவிட வேண்டாம்

[106] ஆகவே, உமக்கு ஒரு நன்மையும், தீமையும் செய்ய சக்தியற்ற அல்லாஹ் அல்லாதவற்றை நீர் அழைக்க வேண்டாம். அவ்வாறு செய்தால் அநியாயக்காரர்களில் நீரும் ஒருவராகி விடுவீர்

[107] அல்லாஹ் உங்களுக்கு ஒரு தீங்கிழைக்கும் பட்சத்தில் அதை நீக்க அவனைத் தவிர மற்றெவராலும் முடியாது. அவன் உங்களுக்கு ஒரு நன்மையை நாடினால் அவனுடைய அக்கருணையைத் தடைசெய்ய எவராலும் முடியாது. அவன் அடியார்களில் அவன் விரும்பியவர்களுக்கே அதை அளிக்கிறான். அவன் மிக்க மன்னிப்பவன், மிகக் கருணையுடையவன் ஆவான்

[108] (நபியே!) நீர் கூறுவீராக: ‘‘மனிதர்களே! நிச்சயமாக உங்கள் இறைவனிடமிருந்தே இந்தச் சத்திய வேதம் உங்களிடம் வந்திருக்கிறது. எவன் (இதைப் பின்பற்றி) நேரான வழியில் செல்கிறானோ அவன் தன் நன்மைக்காகவே அந்த நேரான வழியில் செல்கிறான். எவன் (இதைப் பின்பற்றாது) வழிதவறி விடுகிறானோ அவன் நிச்சயமாகத் தனக்குக் கேடான வழியிலேயே செல்கிறான். மேலும், நான் உங்களை (நிர்ப்பந்தித்து) நிர்வகிக்க அதிகாரம் பெற்றவன் இல்லை

[109] (நபியே!) வஹ்யி மூலம் உமக்கு அறிவிக்கப்பட்டவற்றையே நீர் பின்பற்றி வருவீராக. அல்லாஹ் தீர்ப்பளிக்கின்ற வரை (எதிரிகளால் ஏற்படும் கஷ்டங்களை) பொறுமையுடன் சகித்துக்கொண்டிருப்பீராக. தீர்ப்பளிப்பவர்களில் அவன்தான் மிக்க மேலானவன்

ஹூது

Surah 11

[1] அலிஃப் லாம் றா. (இது) வேத நூல். அனைத்தையும் நன்கறிந்த ஞானவானால் இதன் வசனங்கள் (பல அத்தாட்சிகளைக் கொண்டு) உறுதி செய்யப்பட்ட பின்னர் (தெளிவாக) விவரிக்கப்பட்டுள்ளன

[2] (நபியே! மனிதர்களை நோக்கி கூறுவீராக:) “நீங்கள் அல்லாஹ்வைத் தவிர (வேறு யாரையும்) வணங்காதீர்கள். நிச்சயமாக நான் அவனிடமிருந்து உங்களுக்கு (அனுப்பப்பட்ட தூதரும்,) அச்சமூட்டி எச்சரிப்பவனும் நற்செய்தி கூறுபவனும் ஆவேன்

[3] நீங்கள் உங்கள் இறைவனிடத்தில் பாவமன்னிப்பைக் கோரி (பாவங்களை விட்டு) அவன் பக்கம் திரும்புங்கள். (அவ்வாறு செய்தால்) ஒரு குறிப்பிட்ட (நீண்ட) காலம் வரை உங்களை இன்பமடையச் செய்வான். (தன் கடமைக்கு) அதிகமாக நன்மை செய்தவர்களுக்கு (மறுமையில்) அதிகமாகவே கொடுப்பான். நீங்கள் (அவனைப்) புறக்கணித்தால் மாபெரும் நாளின் வேதனை நிச்சயமாக உங்களை அணுகுமென்று நான் பயப்படுகிறேன்

[4] நீங்கள் அல்லாஹ்விடமே வரவேண்டியதிருக்கிறது. அவன் அனைத்தின் மீதும் மிக்க ஆற்றலுடையவன் ஆவான்

[5] (இந்தப் பாவிகள் தங்கள் தீய எண்ணங்களை) அல்லாஹ்வுக்கு மறைப்பதற்காக (அவற்றைத்) தங்கள் உள்ளங்களில் (வைத்து) மடித்து மறைக்கக் கருதுகின்றனர் என்பதை (நபியே!) அறிந்து கொள்வீராக. (நித்திரைக்குச் செல்லும்போது) அவர்கள் தங்கள் போர்வையைக் கொண்டு தங்களை மறைத்துக்கொள்ளும் சமயத்தில் (தங்கள் உள்ளங்களில்) அவர்கள் மறைத்துக் கொள்வதையும் (அதற்கு மாறாக) அவர்கள் வெளியிடுவதையும் அவன் அறிகிறான் என்பதை அறிந்து கொள்வீராக. நிச்சயமாக அவன் உள்ளங்களில் உள்ள (ரகசியங்கள்) அனைத்தையும் நன்கறிந்தவன்

[6] உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத உயிரினம் ஒன்றுமே பூமியில் இல்லை. அவை (உயிருடன்) வாழுகின்ற இடத்தையும், அவை (இறந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிந்தே இருக்கிறான். இவை அனைத்தும் (லவ்ஹுல் மஹ்பூள் என்னும்) தெளிவான (அவனுடைய) பதிவுப் புத்தகத்தில் பதிவாகி இருக்கின்றன

[7] அவன்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாள்களில் படைத்தான். (அச்சமயம்) அவனுடைய ‘அர்ஷு' நீரின் மீதிருந்தது. உங்களில் நற்செயல்களைச் செய்பவர்கள் யார் என்று உங்களைப் பரிசோதிப்பதற்காக (உங்களையும், இவற்றையும் அவன் படைத்தான். நபியே! நீர் மனிதர்களை நோக்கி) ‘‘நீங்கள் இறந்த பின்னர் நிச்சயமாக (உயிர்கொடுத்து) எழுப்பப்படுவீர்கள்'' என்று கூறினால், அதற்கு அவர்களிலுள்ள நிராகரிப்பவர்கள் ‘‘இது பகிரங்கமான சூனியமே தவிர வேறில்லை'' என்று கூறுகின்றனர்

[8] (நிராகரிப்பின் காரணமாக) அவர்களுக்கு (வரவேண்டிய) வேதனையை ஒரு சொற்ப காலம் நாம் பிற்படுத்தியபோதிலும் ‘‘அதைத் தடுத்துக்கொண்டது எது?'' எனப் பரிகாசமாகக் கேட்கிறார்கள். அவர்களிடம் அது வரும் நாளில், அவர்களை விட்டு அதைத் தடுத்துவிட முடியாது என்பதையும், அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்த வேதனை அவர்கள் அனைவரையும் சூழ்ந்து கொள்ளும் என்பதையும் அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா

[9] நம் அருளை மனிதன் அனுபவிக்கும்படி நாம் செய்து, பின்னர் அதை அவனிடமிருந்து நாம் நீக்கிவிட்டால், நிச்சயமாக அவன் நம்பிக்கை இழந்து பெரும் நன்றி கெட்டவனாகிவிடுகிறான்

[10] அவனுக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கி அவன் இன்பம் அனுபவிக்கும்படி நாம் செய்தால், அதற்கவன் ‘‘நிச்சயமாக என் துன்பங்கள் அனைத்தும் தொலைந்து விட்டன. (இனி திரும்ப வராது)'' என்று கூறுகிறான். ஏனென்றால், நிச்சயமாக மனிதன் (அதிவிரைவில்) மகிழ்ச்சியடையக் கூடியவனாக, பெருமையடிப்பவனாக ஆகிவிடுகிறான்

[11] ஆயினும், எவர்கள் (துன்பங்களைப்) பொறுத்து சகித்துக் கொண்டு நன்மையான காரியங்களைச் செய்து வருகிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும் உண்டு; பெரும் கூலியும் உண்டு

[12] (நபியே! இவ்வேதத்தை அவர்கள் சரிவரக் கேட்பதில்லை என நீர் சடைந்து) உமக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டவற்றில் சிலவற்றை விட்டு விடுவீரோ? ‘‘உமக்கு ஒரு பொக்கிஷம் அருளப்பட வேண்டாமா? அல்லது உம்முடன் ஒரு வானவர் வரவேண்டாமா?'' என்று அவர்கள் கூறுவது உமது உள்ளத்தில் வருத்தத்தை உண்டு பண்ணலாம். (அது பற்றி நீர் கவலைப்பட வேண்டாம்.) நிச்சயமாக நீர் (அவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கின்ற ஒரு தூதர்தான். அல்லாஹ்தான் அனைத்தையும் நிர்வகிப்பவன்

[13] (நம் தூதர்) இதைப் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றனரா? அவ்வாறாயின், (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: இதைப் போன்ற பத்து அத்தியாயங்களையேனும் நீங்கள் கற்பனை செய்து கொண்டு வாருங்கள், அல்லாஹ்வைத் தவிர உங்களுக்குச் சாத்தியமான அனைவரையும் இதற்காக அழைத்து (உங்களுக்குத் துணையாக)க் கொள்ளுங்கள் - மெய்யாகவே (இது கற்பனை என்று) நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் (இவ்வாறு செய்யவும்)

[14] ‘‘நீங்கள் (உதவிக்கு) அழைத்த அவர்களாலும் அவ்வாறு செய்ய முடியாவிட்டால், (இது மனித அறிவால் சொல்லப்பட்டதல்ல;) நிச்சயமாக அல்லாஹ்வின் அறிவைக் கொண்டே (அமைக்கப்பட்டு) இறக்கப்பட்டது தான்; அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை என்பதையும் நிச்சயமாக அறிந்து கொள்ளுங்கள். (இனியேனும்) நீங்கள் (இறைவனுக்கு) முற்றிலும் பணிந்து வழிபடுவீர்களா

[15] எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டும்) விரும்பினால், அவர்கள் செயலுக்குரிய பலனை இவ்வுலகத்திலேயே நாம் முழுமையாகக் கொடுத்து விடுவோம். அதில் அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள்

[16] எனினும், மறுமையிலோ இவர்களுக்கு (நரக) நெருப்பைத் தவிர வேறொன்று மில்லை; அவர்கள் செய்தவை அனைத்தும் இங்கு அழிந்து விட்டன. அவர்கள் செய்து கொண்டிருப்பவையும் வீணானவையே

[17] எவர்கள் தங்கள் இறைவனின் (திருக் குர்ஆனுடைய) தெளிவான அறிவைப் பெற்றிருக்கிறார்களோ அவர்களும், எவர்களுக்கு இறைவனால் (‘ஈஸா'வுக்கு) அருளப்பட்டது (-இன்ஜீல்) ஒரு சாட்சியாக இருக்கிறதோ அவர்களும், இன்னும் எவர்களுக்கு இதற்கு முன்னர் அருளப்பட்ட மூஸாவுடைய வேதம் ஒரு வழி காட்டியாகவும் அருளாகவும் இருக்கிறதோ அவர்களும், அவசியம் இவ்வேதத்தையும் நம்பிக்கைக்கொள்வார்கள். (அவர்களுக்குரிய கூலி சொர்க்கத்தில்தான்.) இந்த (மூன்று) வகுப்பாரில் எவர்கள் இதை நிராகரித்தபோதிலும் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட இடம் நரகம்தான். ஆதலால், (நபியே!) நீர் இதில் சிறிதும் சந்தேகிக்க வேண்டாம். நிச்சயமாக இது உமது இறைவனால் அருளப்பட்ட சத்திய (வேத)மே! எனினும், மனிதர்களில் பலர் (இதை) நம்புவதில்லை

[18] அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய் கூறுபவர்களை விட அநியாயக்காரர் யார்? அவர்கள் (மறுமையில்) தங்கள் இறைவன் முன் நிறுத்தப்பட்டு ‘‘இவர்கள்தான் தங்கள் இறைவன் மீது பொய் கூறியவர்கள்'' என்று சாட்சிகள் (சாட்சியம்) கூறுவார்கள். இந்த அநியாயக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டு என்பதை அறிந்து கொள்ளுங்கள்

[19] அவர்கள் அல்லாஹ்வின் வழியைத் தடுத்து, அதில் கோணலை(யும் சந்தேகத்தையும்) உண்டு பண்ண விரும்புகிறார்கள். இன்னும் அவர்கள் மறுமையையும் நிராகரிப்பவர்கள்தான்

[20] இவர்கள் பூமியில் (ஓடி தப்பித்து அல்லாஹ்வை) தோற்கடிக்க முடியாது. அல்லாஹ்வை தவிர்த்து, இவர்களுக்கு உதவி செய்பவர்களும் இல்லை. (மறுமையிலோ) இவர்களுக்கு வேதனை இரட்டிப்பாக்கப்படும். இவர்கள் (தங்கள் பொறாமையின் காரணமாக நல்ல வார்த்தைகளைச்) செவியுற சக்தியற்றவர்கள்; (நேரான வழியைக்) காணவும் மாட்டார்கள்

[21] இவர்கள்தான் தமக்குத் தாமே நஷ்டத்தை உண்டு பண்ணிக்கொண்டவர்கள். இவர்கள் கற்பனை செய்து கொண்டிருந்த (தெய்வங்கள்) அனைத்தும் (அந்நாளில்) இவர்களை விட்டு மறைந்துவிடும்

[22] மறுமையில் நிச்சயமாக இவர்கள் முற்றிலும் நஷ்டமடைந்தவர்கள் என்பதில் ஐயம் ஒன்றுமில்லை

[23] நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்து தங்கள் இறைவனுக்கு மிக்க பணிவுடன் அடிபணிகின்றனரோ, அவர்கள் சொர்க்கவாசிகளே! அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள்

[24] இவ்விரு (பிரிவினரில் ஒரு) பிரிவினர் குருடனையும், செவிடனையும் (போலிருக் கின்றனர். மற்றொரு பிரிவினர்) பார்வையுடையவனையும் கேட்கும் சக்தியுடையவனையும் ஒத்திருக்கின்றனர். இவ்விரு பிரிவினரும் சமமாவார்களா? (இந்த உதாரணத்தைக் கொண்டு) நீங்கள் நல்லுணர்ச்சி பெற வேண்டாமா

[25] மெய்யாகவே நாம் ‘நூஹை' அவருடைய மக்களிடம் (நம் தூதராக) அனுப்பி வைத்தோம். (அவர், அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நான் உங்களுக்குப் பகிரங்கமாகவே அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறேன்

[26] அல்லாஹ்வைத் தவிர (மற்றெதையும்) நீங்கள் வணங்கக் கூடாது. (வணங்கினால்) துன்புறுத்தும் நாளின் வேதனையை நிச்சயமாக நான் உங்களுக்கு அஞ்சுகிறேன்'' (என்று கூறினார்)

[27] அதற்கு, அவரை நிராகரித்த அவருடைய மக்களின் தலைவர்கள் (அவரை நோக்கி) ‘‘நாம் உம்மை நம்மைப் போன்ற ஒரு மனிதனாகவே காண்கிறோம். வெளித்தோற்றத்தில் நம்மில் மிக்க இழிவானவர்களே தவிர (கண்ணியமானவர்கள்) உம்மைப் பின்பற்றவில்லை என்பதையும் நாங்கள் அறிவோம். எங்களைவிட உங்களிடம் ஒரு மேன்மை இருப்பதாகவும் நாங்கள் காணவில்லை. நீங்கள் (அனைவரும்) பொய்யர்கள் என்றே நாங்கள் எண்ணுகிறோம்'' என்று கூறினார்கள்

[28] (அதற்கு) அவர் (அவர்களை நோக்கிக்) கூறினார்: ‘‘என் மக்களே! நீங்கள் கவனித்தீர்களா? என் இறைவனுடைய அத்தாட்சியின் மீது நான் நிலையாக இருந்தும் அவன் தன் அருளையும் (நபித்துவத்தையும்) எனக்கு அளித்திருந்தும், அது உங்கள் கண்களுக்குப் புலப்படாமல் அதை நீங்கள் வெறுத்து விட்டால், அதைப் பின்பற்றும்படி நான் உங்களை நிர்ப்பந்திக்க முடியுமா

[29] ‘‘என் மக்களே! இதற்காக நான் உங்களிடம் ஒரு பொருளையும் (கூலியாகக்) கேட்கவில்லை. என் கூலி அல்லாஹ்விடமே தவிர (உங்களிடம்) இல்லை. (உங்களில் மிகத் தாழ்ந்தவர்களாயினும் சரி) நம்பிக்கை கொண்டவர்களை நான் விரட்டிவிட முடியாது. நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனை (கண்ணியத்துடன்) சந்திப்பவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால், நிச்சயமாக நான் உங்களை(த்தான் மிகத் தாழ்ந்த) மூடர்களாகக் காண்கிறேன்

[30] என் மக்களே! நான் அவர்களை விரட்டிவிட்டால் (அல்லாஹ் என்னைத் தண்டிக்க மாட்டானா? அச்சமயம்) அல்லாஹ்விடத்தில் எனக்கு உதவி செய்பவர் யார்? இவ்வளவு கூட நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டாமா

[31] அல்லாஹ்வுடைய பொக்கிஷங்கள் (அனைத்தும்) என்னிடம் இருக்கின்றன என்றும் நான் உங்களிடம் கூறவில்லை; நான் மறைவானவற்றை அறிந்தவனும் அல்லன்; நான் ஒரு வானவர் என்றும் கூறவில்லை. எவர்களை உங்கள் கண்கள் இழிவாகக் காண்கின்றனவோ அவர்களுக்கு அல்லாஹ் ஒரு நன்மையும் அளிக்க மாட்டான் என்றும் நான் கூறமாட்டேன். அவர்கள் உள்ளத்தில் உள்ள (நம்பிக்கை, நல்லெண்ணம் ஆகியவற்றை உங்களைவிட) அல்லாஹ்தான் மிகவும் அறிந்தவன். (இதற்கு மாறாக நான் கூறினால்) நிச்சயமாக நானும் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விடுவேன்'' (என்றும் கூறினார்)

[32] அதற்கவர்கள் ‘‘நூஹே! நிச்சயமாக நீர் எங்களுடன் தர்க்கித்தீர்; (அதுவும்) அதிகமாகவே தர்க்கித்து விட்டீர். (ஆகவே, இனி தர்க்கத்தை விட்டொழித்து, வேதனை வரும் என்று கூறுவதில்) நீர் மெய்யாகவே உண்மை சொல்பவராக இருந்தால், நீர் அச்சுறுத்தும் அதை நம்மிடம் கொண்டு வருவீராக'' என்று கூறினார்கள்

[33] அதற்கு அவர் ‘‘(வேதனையை கொண்டு வருபவன் நான் அல்லன்;) அல்லாஹ்தான். அவன் நாடினால் (அதிசீக்கிரத்தில்) அதை உங்களுக்கு நிச்சயமாகக் கொண்டு வருவான். அதைத் தடுத்துவிட உங்களால் முடியாது'' என்று கூறினார்

[34] ‘‘நான் உங்களுக்கு நல்லுபதேசம் செய்யக் கருதினாலும், உங்களை வழிகேட்டிலேயே விட்டுவிட வேண்டும் என்று அல்லாஹ் விரும்பியிருந்தால் என் நல்லுபதேசம் உங்களுக்கு ஒரு பயனுமளிக்காது. அவன்தான் உங்கள் இறைவன்; (மறுமையில்) அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்'' (என்றும் கூறினார்)

[35] (நபியே! இவ்வரலாற்றைப் பற்றி) ‘‘நீர் இதைப் பொய்யாகக் கற்பனை செய்து கூறுகிறீர்'' என்று அவர்கள் கூறுகின்றனரா? (அவ்வாறாயின்) நீர் கூறுவீராக: ‘‘நான் அதைக் கற்பனை செய்து கூறினால் அக்குற்றம் என் மீதே சாரும். (நீங்கள் பொறுப்பாளிகளல்லர்; அவ்வாறே) நீங்கள் (கற்பனை) செய்யும் குற்றங்களுக்கு நான் பொறுப்பாளியல்ல

[36] (நபி) நூஹ்வுக்கு வஹ்யி அறிவிக்கப்பட்டது: ‘‘முன்னர் நம்பிக்கை கொண்டவர்களைத் தவிர, இனி உமது மக்களில் ஒருவரும் நிச்சயமாக நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். ஆதலால், அவர்கள் செய்வதைப் பற்றி நீர் கவலைப்படாதீர்

[37] நாம் அறிவிக்குமாறு நம் கண் முன்பாகவே ஒரு கப்பலை நீர் செய்வீராக. அநியாயம் செய்தவர்களைப் பற்றி (இனி) நீர் என்னுடன் (சிபாரிசு) பேசாதீர். நிச்சயமாக அவர்கள் (வெள்ள பிரளயத்தில்) மூழ்கடிக்கப்படுவார்கள்'' (என்றும் அறிவிக்கப்பட்டது)

[38] அவர் கப்பலைச் செய்து கொண்டிருந்த சமயத்தில், அதன் சமீபமாகச் சென்ற அவருடைய மக்களின் தலைவர்கள் அவரைப் பரிகசித்தனர். அதற்கு அவர் ‘‘நீங்கள் (இப்போது) எங்களைப் பரிகசிக்கும் இவ்வாறே (அதிசீக்கிரத்தில்) நிச்சயமாக நாங்கள் உங்களைப் பரிகசிப்போம்'' என்று கூறினார்

[39] ‘‘இழிவுபடுத்தும் வேதனை யாரை வந்தடைகிறது, நிலையான வேதனை எவர் மீது இறங்குகிறது என்பதையும் அதி சீக்கிரத்தில் நீங்கள் (சந்தேகமற) தெரிந்து கொள்வீர்கள்'' (என்று கூறினார்)

[40] ஆகவே, (நாம் விதித்திருந்த) வேதனை நெருங்கி அடுப்புப் பொங்கவே (நூஹை நோக்கி ‘‘ஒவ்வொரு உயிருள்ள பிராணியில் இருந்தும்) ஆண், பெண் இரண்டு கொண்ட ஒவ்வொரு ஜோடியை அதில் ஏற்றிக் கொள்வீராக. (அழிந்துவிடுவார்கள் என) நம் வாக்கு ஏற்பட்டுவிட்ட (உங்கள் மகன் ஆகிய)வர்களைத் தவிர, உமது குடும்பத்தவரையும் (மற்ற) நம்பிக்கையாளர்களையும் அதில் ஏற்றிக்கொள்வீராக'' என்று நாம் கூறினோம். வெகு சொற்ப மக்களைத் தவிர (மற்றவர்கள்) அவருடன் நம்பிக்கை கொள்ளவில்லை

[41] அதற்கவர் (தன்னைச் சார்ந்தவர்களை நோக்கி,) ‘‘இதைச் செலுத்தவும் நிறுத்தவும் ஆற்றலுடையவனாகிய அல்லாஹ்வின் திருநாமத்தைக் கூறி இதில் நீங்கள் ஏறிக் கொள்ளுங்கள். நிச்சயமாக என் இறைவன் மிக்க மன்னிப்பவன், மிகக் கருணையுடையவன் ஆவான்'' என்று கூறினார்

[42] பின்னர் அக்கப்பல், மலைகளைப் போன்ற அலைகளுக்கிடையில் அவர்களைச் சுமந்து செல்ல ஆரம்பித்தது. (அச்சமயம்) நூஹ் தன்னை விட்டு விலகியிருந்த தன் மகனை நோக்கி ‘‘என் மகனே! எங்களுடன் (நம்பிக்கை கொண்டு) நீயும் இதில் ஏறிக்கொள். (எங்களை விட்டு விலகி) நிராகரிப்பவர்களுடன் நீ இருக்க வேண்டாம். (அவ்வாறாயின், நீயும் நீரில் மூழ்கி விடுவாய்)'' என்று (சப்தமிட்டு) அழைத்தார்

[43] அதற்கவன் ‘‘இந்த வெள்ள(ப் பிரளய)த்திலிருந்து என்னைக் காப்பாற்றக்கூடிய ஒரு மலையின் மேல் நான் சென்று விடுவேன்'' என்று கூறினான். அதற்கவர் ‘‘அல்லாஹ் அருள் புரிந்தாலன்றி அவனுடைய கட்டளையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள இன்று ஒருவராலும் முடியாது'' என்று கூறினார். (அச்சமயம்) அவர்களுக்கு இடையில் ஓர் அலை எழும்பி குறுக்கிட்டது; அவனும் மூழ்கியவர்களுடன் மூழ்கிவிட்டான்

[44] பின்னர் ‘‘பூமியே! நீ உன் தண்ணீரை விழுங்கி விடு; வானமே! (மழை பொழிவதை) நிறுத்திக்கொள்'' என்று கட்டளைப் பிறப்பிக்கப்படவே தண்ணீர் வற்றி (விட்டது. இதற்குள் அவர்கள் அழிந்து அவர்களுடைய) காரியம் முடிந்துவிட்டது. (அக்கப்பலும்) ‘ஜூதி' (என்னும்) மலையில் தங்கியது; அநியாயம் செய்த மக்களுக்கு (இத்தகைய) அழிவுதான்'' என்று (உலகெங்கும்) பறை சாற்றப்பட்டது

[45] (நூஹ் நபியினுடைய மகன் அவரை விட்டு விலகி நிராகரிப்பவர்களுடன் சென்றுவிடவே, அவனும் அழிந்து விடுவானென அஞ்சி) நூஹ் (தன் இறைவனை நோக்கி) ‘‘என் இறைவனே! என் மகன் என் குடும்பத்திலுள்ளவனே! (நீயோ என் குடும்பத்தவரை பாதுகாத்துக் கொள்வதாக வாக்களித்திருக்கிறாய்.) நிச்சயமாக உன் வாக்குறுதி உண்மையானது. தீர்ப்பளிப்பவர்களில் எல்லாம் நீ மிகவும் மேலான நீதிபதி'' என்று சப்தமிட்டுக் கூறினார்

[46] அதற்கவன், ‘‘நூஹே! நிச்சயமாக அவன் உமது குடும்பத்தில் உள்ளவனல்லன். நிச்சயமாக அவன் ஒழுங்கீனமான காரியங்களையே செய்து கொண்டிருந்தான். (ஒழுங்கீனமாக நடப்பவன் உமது குடும்பத்தைச் சார்ந்தவனல்ல.) ஆதலால், நீர் உமக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றி என்னிடம் (தர்க்கித்துக்) கேட்க வேண்டாம்; அறியாதவர்களில் நீரும் ஒருவராகிவிட வேண்டாம் என்று நிச்சயமாக நான் உமக்கு நல்லுபதேசம் செய்கிறேன்'' என்று கூறினான்

[47] அதற்கு (நூஹ் நபி) ‘‘என் இறைவனே! நான் அறியாத விஷயங்களைப் பற்றி (இனி) உன்னிடம் கேட்காது என்னை பாதுகாக்குமாறு உன்னிடம் நிச்சயமாக நான் பிரார்த்திக்கிறேன். நீ என்னை மன்னித்து எனக்கு நீ கிருபை செய்யாவிடில் நிச்சயமாக நானும் நஷ்டமடைந்தவர்களில் ஆகி விடுவேன்'' என்று கூறினார்

[48] (வெள்ளப் பிரளயத்தால் ஏற்பட்ட தண்ணீர் வற்றி, நூஹ் நபியின் கப்பல் ‘ஜூதி' என்னும் மலைமீது தங்கிவிடவே, நாம் நூஹை நோக்கி) ‘‘நூஹே! நம் சாந்தியுடனும் நற் பாக்கியங்களுடனும் (கப்பலில் இருந்து) நீர் இறங்கிவிடுவீராக. உங்களுக்கும் உம்முடனுள்ள மற்ற மக்களுக்கும் பெரும் பாக்கியங்கள் உண்டாவதாகுக! (பிற்காலத்தில் உங்கள்) சந்ததிகள் (பெருகுவர். இவ்வுலகில்) நாம் அவர்களை நிச்சயமாக சுகம் அனுபவிக்க விடுவோம். பின்னர் (அவர்களில் பலர் பாவமான காரியங்களில் ஈடுபடுவார்கள். அதனால்) அவர்களை நம் துன்புறுத்தும் வேதனை வந்தடையும்'' என்று கூறப்பட்டது

[49] (நபியே!) இது (உமக்கு) மறைவான சரித்திரங்களில் உள்ளதாகும். வஹ்யி மூலமாகவே நாம் இதை உமக்கு அறிவிக்கிறோம். இதற்கு முன்னர் நீரோ அல்லது உமது மக்களோ இதை அறிந்திருக்கவில்லை. ஆகவே, (நபியே! நூஹைப்போல் நீரும் சிரமங்களைச்) சகித்துப் பொறுத்திருப்பீராக. நிச்சயமாக முடிவான வெற்றி இறையச்சம் உடையவர்களுக்குத்தான்

[50] ‘ஆது' (என்னும்) மக்களிடம் அவர்களுடைய சகோதரர் ‘ஹூதை' (நம் தூதராக அனுப்பி வைத்தோம். அவர்களை நோக்கி) அவர் கூறினார்: ‘‘என் மக்களே! அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள்.அவனைத் தவிர வேறு இறைவன் உங்களுக்கு இல்லை. (வேறு இறைவன் உண்டென்று கூறும்) நீங்கள் கற்பனையாகப் பொய் கூறுபவர்களே

[51] என் மக்களே! இதற்காக நான் உங்களிடத்தில் ஒரு கூலியும் கேட்கவில்லை. என் கூலி என்னை படைத்தவனிடமே தவிர (வேறு யாரிடமும்) இல்லை. (இவ்வளவு கூட) நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா

[52] என் மக்களே! நீங்கள் உங்கள் இறைவனிடம் பாவ மன்னிப்பைக் கோரி (மனம்வருந்தி) அவன் பக்கமே திரும்புங்கள். (அவன் தடுத்திருக்கும்) மழையை உங்கள் மீது ஏராளமாகப் பொழியச் செய்வான். உங்கள் பலத்தை மேலும், (மேலும்,) அதிகரிக்கச் செய்வான். ஆகவே, நீங்கள் அவனைப் புறக்கணித்துக் குற்றமிழைத்து விடாதீர்கள்'' (என்று கூறினார்)

[53] அதற்கவர்கள், ‘ஹூதே! நீர் (நாம் விரும்பியவாறு) அத்தாட்சி எதையும் நம்மிடம் கொண்டு வரவில்லை. உமது சொல்லுக்காக நாங்கள் எங்கள் தெய்வங்களை விட்டு விட மாட்டோம். உம்மை நாங்கள் நம்பவும் மாட்டோம்'' என்று கூறினார்கள்

[54] ‘‘எங்களது சில தெய்வங்கள் உமக்குக் கேடு உண்டுபண்ணிவிட்டன. (ஆதலால், நீர் மதியிழந்து விட்டீர்! என்றும் கூறினார்கள்). அதற்கவர், ‘‘நிச்சயமாக நான் அல்லாஹ்வை சாட்சியாக்குகிறேன்; நிச்சயமாக நான் அவனையன்றி நீங்கள் இணைவைத்து வணங்குபவற்றிலிருந்து விலகிக்கொண்டேன். (இதற்கு) நீங்களும் சாட்சியாக இருங்கள்'' என்று கூறினார்

[55] ‘‘ஆகவே, நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எனக்கு(ச் செய்யக் கூடிய) சூழ்ச்சியைச் செய்து பாருங்கள். (இதில்) நீங்கள் எனக்குச் சிறிதும் அவகாசம் அளிக்க வேண்டாம்'' (என்றும்)

[56] “நிச்சயமாக நான் என் காரியங்கள் அனைத்தையும் என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்விடமே ஒப்படைத்து விட்டேன். ஒவ்வொரு உயிருள்ளவற்றின் உச்சிக் குடுமியையும் அவனே பிடித்துக் கொண்டிருக்கிறான். நிச்சயமாக என் இறைவன் (நீதியின்) நேரான வழியில் இருக்கிறான் (என்றும்)

[57] நீங்கள் (என்னைப்) புறக்கணிப்பீர்களாயின் (அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஏனென்றால்,) நான் உங்களிடம் எதற்காக அனுப்பப்பட்டேனோ அதை நிச்சயமாக நான் உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். (உங்களை அழித்து) நீங்கள் அல்லாத வேறு மக்களை என் இறைவன் உங்கள் இடத்தில் வைத்து விடுவான்; (இதற்காக) நீங்கள் அவனுக்கு ஒரு தீங்கும் செய்ய முடியாது. நிச்சயமாக என் இறைவன் அனைத்தையும் பாதுகாப்பவன். (ஆகவே, அவன் என்னையும் பாதுகாத்துக் கொள்வான்'' என்றும் கூறினார்)

[58] (இதன் பின்னும் அவர்கள் அவரை நிராகரித்து விட்டனர். ஆகவே,) நம் (வேதனையின்) உத்தரவு வந்தபொழுது ஹூதையும், அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் நம் அருளால்பாதுகாத்துக் கொண்டு, கடுமையான வேதனையில் இருந்து நாம் அவர்களைத் தப்பவைத்தோம்

[59] (நபியே!) இது ‘ஆது' மக்களின் (சரித்திரமாகும்). அவர்கள் தங்கள் இறைவனின் கட்டளைகளை நிராகரித்து அவனின் தூதர்களுக்கு மாறு செய்தார்கள். மேலும், பிடிவாதக்கார முரடர்கள் அனைவருடைய தீய வழிகாட்டல்களையும் அவர்கள் பின் பற்றினார்கள்

[60] இவ்வுலகில் (அல்லாஹ்வுடைய) சாபம் அவர்களைத் தொடர்ந்தது, மறுமை நாளிலும் (அவ்வாறே!) தொடரும். நிச்சயமாக ‘ஆது' மக்கள் தங்கள் இறைவனுக்கு மாறு செய்தார்கள் என்பதையும் (நபி) ஹூதுடைய ‘ஆது' சமுதாயத்தவர்களுக்குக் கேடுதான் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்

[61] ‘ஸமூது' (என்னும் மக்)களிடம் அவர்களுடைய சகோதரர் ‘ஸாலிஹை' (நம் தூதராக அனுப்பி வைத்தோம். அவர் அவர்களை நோக்கி) ‘‘என் மக்களே! அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள்; உங்களுக்கு அவனைத் தவிர, வேறு இறைவன் இல்லை. அவனே உங்களைப் பூமியிலிருந்து படைத்தான். அதிலேயே அவன் உங்களை வசிக்கவும் செய்தான். ஆதலால், நீங்கள் அவனிடமே மன்னிப்பைக் கோரி பிறகு, அவன் பக்கமே திரும்புங்கள். நிச்சயமாக என் இறைவன் (உங்களுக்கு) மிகச் சமீபமானவன், (பிரார்த்தனைகளை) அங்கீகரிப்பவன் என்று கூறினார்

[62] அதற்கவர்கள் (ஸாலிஹ் நபியை நோக்கி) ‘‘ஸாலிஹே! இதற்கு முன்னரெல்லாம், நீர் எங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமுடையவராக இருந்தீர். எங்கள் மூதாதைகள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களை நாங்கள் வணங்கக் கூடாதென்று நீர் எங்களைத் தடை செய்கிறீரா? நீர் எங்களை எதனளவில் அழைக்கிறீரோ அதைப் பற்றி நிச்சயமாக நாங்கள் பெரும் சந்தேகத்தில் இருக்கிறோம்'' என்று கூறினர்

[63] அதற்கவர் ‘‘என் மக்களே! நான் என் இறைவனின் நேரான வழியில் இருக்க, அவன் என் மீது (மகத்தான) அருள் புரிந்திருக்க, நான் அவனுக்கு மாறு செய்தால் (அவன் என்னைத் தண்டிக்க மாட்டானா? அந்நேரத்தில்) அல்லாஹ்விடத்தில் எனக்கு உதவி செய்பவர் யார்? என்பதை நீங்கள் கவனித்தீர்களா? நீங்களோ எனக்கு நஷ்டத்தைத் தவிர (எதையும்) அதிகமாக்கி விட மாட்டீர்கள்'' என்று கூறினார்

[64] ‘‘என் மக்களே! இது அல்லாஹ்வுடைய ஒரு பெண் ஒட்டகமாகும். உங்களுக்கு இது ஓர் அத்தாட்சியாகவே அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அல்லாஹ்வினுடைய பூமியில் (அது விரும்பிய இடத்தில்) மேய அதை விட்டுவிடுங்கள்; அதற்கு ஒரு கெடுதலும் செய்ய(க் கருதி) அதைத் தொடாதீர்கள். அவ்வாறு செய்தால் அதிசீக்கிரத்தில் வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளும்'' (என்று சொன்னார்)

[65] எனினும், அவர்கள் (அவருடைய கட்டளைக்கு மாறு செய்து) அதை வெட்டி விட்டார்கள். ஆகவே, அவர் (அவர்களை நோக்கி, ‘‘இனி) மூன்று நாள்கள்வரை உங்கள் வீடுகளில் (இருந்து கொண்டு) நீங்கள் சுகமடையலாம். (அதற்குப் பின்னர் அல்லாஹ்வுடைய வேதனை உங்களை வந்தடையும்) இது தவறாத வாக்காகும்'' என்று கூறினார்

[66] (வேதனையைப் பற்றிய) நம் கட்டளை(யின்படி வேதனை) வந்தபொழுது ஸாலிஹையும், அவருடன் நம்பிக்கைக் கொண்டவர்களையும் (வேதனையிலிருந்தும்) அந்நாளின் இழிவில் இருந்தும் நம் அருளைக் கொண்டு நாம் பாதுகாத்துக் கொண்டோம். (நபியே!) நிச்சயமாக உமது இறைவன் தான் பலமிக்கவனும் (அனைத்தையும்) மிகைத்தவனும் ஆவான்

[67] ஆகவே, வரம்பு மீறியவர்களை இடி முழக்கம் பிடித்துக் கொண்டது. அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறே இறந்து விட்டனர்

[68] (அதற்கு முன்னர்) அங்கு அவர்கள் ஒரு காலத்திலும் வசித்திருக்காததைப் போல் (அடையாளம் எதுவுமின்றி அழிந்து விட்டனர்). அறிந்து கொள்ளுங்கள்: நிச்சயமாக ‘ஸமூது' மக்கள் தங்கள் இறைவனை நிராகரித்து விட்டார்கள். அறிந்து கொள்ளுங்கள்: ‘ஸமூது' மக்கள் மீது சாபம் ஏற்பட்டு விட்டது

[69] நிச்சயமாக (வானவர்களிலுள்ள) நம் தூதர்கள் இப்றாஹீமுக்கு நற்செய்தி கொண்டு வந்து “ஸலாம்'' கூறினர். (இப்றாஹீம் அதற்குப் பிரதியாக “உங்களுக்கும்) ஸலாம்'' கூறி சிறிதும் தாமதிக்காது (அறுத்துச்) சுட்டதொரு கன்றுக்குட்டியைக் கொண்டு வந்(து அவர்கள் முன் வைத்)தார்கள்

[70] அவர்களுடைய கைகள் அதனிடம் செல்லாததைக் கண்டதும் அவர்களைப் பற்றி சந்தேகித்தார்; அவர்களைப் பற்றிய பயமும் அவர் மனதில் ஊசலாடியது. (அப்பொழுது) அவர்கள் (இப்றாஹீமை நோக்கி) ‘‘நீர் பயப்படாதீர். நிச்சயமாக நாங்கள் ‘லூத்'துடைய மக்களிடம் (அவர்களை அழித்துவிட) அனுப்பப்பட்டுள்ளோம்'' என்று கூறினார்கள்

[71] (அச்சமயம் அங்கு) நின்று கொண்டிருந்த அவருடைய (கிழ) மனைவி (லூத் நபியின் மக்கள் செய்யும் தீய காரியங்களைச் செவியுற்று) சிரித்தாள்; ஆனால், அதே சமயத்தில் அவளுக்கு ‘இஸ்ஹாக்' (என்னும் மகனைப்) பற்றியும், இஸ்ஹாக்குக்குப் பின்னர் ‘யஅகூப்' (என்னும் பேரன் பிறக்கப் போவதைப்) பற்றியும் நற்செய்தி கூறினோம்

[72] அதற்கவள், ‘‘என் துக்கமே! (மாதவிடாய் நின்று) நான் கிழவியாகவும், என் இக்கணவர் ஒரு வயோதிகராகவும் ஆனதன் பின்னர் நான் (கர்ப்பமாகி) பிள்ளை பெறுவேனா! நிச்சயமாக இது ஆச்சரியமான விஷயம்!'' என்றாள்

[73] அதற்கவர்கள், ‘‘அல்லாஹ்வுடைய சக்தியைப் பற்றி நீ ஆச்சரியம் அடைகிறாயா? அல்லாஹ்வுடைய அருளும், அவனுடைய நற்பாக்கியங்களும் (இப்றாஹீமுடைய) வீட்டிலுள்ள உங்கள் மீது நிலவுக. நிச்சயமாக அவன் மிக்க புகழுடையவன், மகிமை உடையவன்'' என்று கூறினார்கள்

[74] இப்றாஹீமுடைய திடுக்கம் நீங்கி அவருக்கு நற்செய்தி கிடைத்த பின்னர் ‘லூத்' தின் மக்களை (அழித்து விடுவதை)ப் பற்றி அவர் நம்மு(டைய வானவர்களு)டன் தர்க்கம் செய்ய ஆரம்பித்து விட்டார்

[75] நிச்சயமாக இப்றாஹீம் மிக்க சகிப்புடையவர், அதிகம் பிரார்த்திப்பவர் (எதற்கும்) நம்மையே முன்நோக்குபவர் ஆவார்

[76] (ஆகவே, அத்தூதர்கள் இப்றாஹீமை நோக்கி) இப்றாஹீமே! நீர் இதைப் (பற்றி தர்க்கம் செய்யாது) புறக்கணித்து விடுவீராக. நிச்சயமாக (அவர்களை அழிப்பதற்காக) உமது இறைவனுடைய கட்டளை பிறந்து விட்டது. மேலும், நிச்சயமாக அவர்களால் தவிர்க்க முடியாத வேதனை அவர்களை வந்தடையும் (என்று கூறினார்கள்)

[77] (இப்றாஹீமிடமிருந்து) நம் தூதர்கள் லூத்திடம் வந்தபொழுது, அவர் (அந்த வானவர்களைத் தம் மக்களிடமிருந்து எப்படி பாதுகாப்பது என்று) கவலைக்குள்ளாகி அவரது மனம் சுருங்கி ‘‘இது மிக நெருக்கடியான நாள்'' என்று கூறினார்

[78] (இதற்குள்) அவருடைய மக்கள் அவரிடம் விரைந்தோடி வந்தார்கள். இதற்கு முன்னரும் அவர்கள் தீய காரியங்களையே செய்து கொண்டிருந்தனர். (இதை நாடியே அவரிடம் அவர்கள் வந்தனர்.) அதற்கு (‘லூத்' நபி அவர்களை நோக்கி) ‘‘என் மக்களே! இதோ! என் பெண்மக்கள் இருக்கின்றனர். (அவர்களைத் திருமணம் செய்து கொள்வது) உங்களுக்கு மிக்க பரிசுத்தமானதாகும். அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள். என் விருந்தினர் விஷயத்தில் என்னை நீங்கள் அவமானப் படுத்தாதீர்கள். (உங்களுக்கு நல்லுபதேசம் செய்யும்) நல்ல மனிதன் ஒருவன் கூட உங்களில் இல்லையா?'' என்று கேட்டார்

[79] அதற்கவர்கள் ‘‘உமது பெண்மக்களிடம் எங்களுக்கு ஒரு தேவையும் இல்லை என்பதை நீர் நன்கறிவீர்; நாங்கள் விரும்புவது என்ன என்பதையும் நிச்சயமாக நீங்கள் நன்கறிவீர்'' என்றும் கூறினார்கள்

[80] அதற்கவர் ‘‘உங்களைத் தடுக்க போதுமான பலம் எனக்கு இருக்க வேண்டாமா? அல்லது (உங்களைத் தடுத்து விடக்கூடிய) பலமான ஆதரவை நான் அடைய வேண்டாமா?'' என்று (மிக துக்கத்துடன்) கூறினார்

[81] (அதற்கு லூத்துடைய விருந்தாளிகள் அவரை நோக்கி) ‘‘லூத்தே! நிச்சயமாக நாங்கள் உங்கள் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்(களாகிய வானவர்)களாவோம். இவர்கள் நிச்சயமாக உம்மை வந்தடைய முடியாது. (இன்று) இரவில் ஒரு சிறு பகுதி இருக்கும்பொழுது நீர் உம் குடும்பத்துடன் (இங்கிருந்து) வெளியேறி விடுவீராக; (உமது சொல் கேளாத) உமது மனைவியைத் தவிர, உங்களில் ஒருவரும் அவர்களைத் திரும்பியும் பார்க்க வேண்டாம். அவர்களை அடைகின்ற வேதனை நிச்சயமாக அவளையும் அடையும். (வேதனை வர) நிச்சயமாக இவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நேரம் விடியற்காலையாகும். விடியற்காலை சமீபமாக இல்லையா?'' என்று கூறினார்கள்

[82] நம் கட்டளை(யின் நேரம்) வந்ததும் அவர்களுடைய ஊரை தலைக்கீழாக கவிழ்த்து விட்டோம். (அதற்கு முன்னர்) அவர்கள் மீது சுடப்பட்ட செங்கற்களை (மழையைப் போல்) பொழியச் செய்தோம்

[83] (எறியப்பட்ட செங்கல் ஒவ்வொன்றிலும்) உங்கள் இறைவனால் அடையாளமிடப் பட்டிருந்தது. (புரட்டப்பட்ட) அவ்வூர் இவ்வக்கிரமக்காரர்களுக்கு வெகு தூரமுமல்ல; (விரும்பினால் அதை இவர்கள் நேரில் சென்று பார்த்துக் கொள்ளலாம்)

[84] ‘‘மத்யன்' (என்னும் ஊர்) வாசிகளுக்கு அவர்களுடைய சகோதரர் ஷுஐபை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்.) அவர் (அவர்களை நோக்கி) ‘‘என் மக்களே! அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள்; அவனைத் தவிர வேறு இறைவன் உங்களுக்கு இல்லை. அளவையையும் நிறுவையையும் குறைக்காதீர்கள். நீங்கள் நல்ல நிலைமையில் இருப்பதையே நான் காண்கிறேன். (அவ்வாறிருக்க அளவையையும் நிறுவையையும் குறைத்து ஏன் மோசம் செய்கிறீர்கள்? அவ்வாறு செய்தால்) நிச்சயமாக உங்களைச் சூழ்ந்து அழித்துவிடக்கூடிய வேதனை ஒரு நாளில் உங்களை வந்தடையும் என்று நான் பயப்படுகிறேன்

[85] என் மக்களே! அளவையையும் நிறுவையையும் நீதமாகவே முழுமைப்படுத்துங்கள். மனிதர்களுக்கு(க் கொடுக்க வேண்டிய) அவர்களுடைய பொருள்களைக் குறைத்து விடாதீர்கள். பூமியில் கடுமையாக விஷமம் செய்து கொண்டு அலையாதீர்கள்

[86] நீங்கள் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் (உங்கள் தொழிலில் இலாபகரமாக) அல்லாஹ் மீதப்படுத்துவதே உங்களுக்கு மிக்க மேலானதாகும். நான் உங்களைக் கண்காணிப்பவனல்ல; (அல்லாஹ்தான் உங்களைக் கண்காணிப்பவன். ஆகவே, அவனுக்கு நீங்கள் பயந்து நடந்து கொள்ளுங்கள்)'' என்றும் கூறினார்

[87] அதற்கவர்கள் ‘‘ஷுஐபே! நாங்கள் எங்கள் மூதாதைகள் வணங்கிய தெய்வங்களையும், நாங்கள் எங்கள் பொருள்களில் எங்கள் விருப்பப்படி நடந்து கொள்வதையும் விட்டுவிடும்படியாக (நீர் எங்களுக்குக் கட்டளை இடும்படி) உமது தொழுகையா உம்மைத் தூண்டுகிறது? நிச்சயமாக நீர்தான் மிக்க கண்ணியமுள்ள நேர்மையாளர்'' என்று (பரிகாசமாகக்) கூறினார்கள்

[88] அதற்கவர் ‘‘என் மக்களே! என் இறைவன் தெளிவான அத்தாட்சிகளை எனக்களித்திருப்பதையும், அவன் எனக்கு வேண்டிய உணவை நல்லவிதமாக அளித்து வருவதையும் நீங்கள் அறிவீர்களா? (இந்நிலைமையில் மக்களை நான் மோசம் செய்யவேண்டிய அவசியமில்லை; ஆகவே,) நான் (தீமையிலிருந்து) உங்களைத் தடுக்கும் விஷயத்தில் உங்களுக்கு மாறுசெய்ய விரும்பவில்லை. (நீங்கள் செய்யக்கூடாது என்று கூறும் காரியத்தை நானும் செய்யமாட்டேன்.) என்னால் இயன்றவரை (உங்களைச்) சீர்திருத்துவதைத் தவிர (வேறொன்றையும்) நான் விரும்பவில்லை. அல்லாஹ்வின் உதவியின்றி நான் (உங்களைச் சீர்திருத்தும் விஷயத்தில்) வெற்றியடைய முடியாது. அவனையே நான் நம்பியிருக்கிறேன்; அவனையே நான் நோக்கியும் நிற்கிறேன்

[89] ‘‘என் மக்களே! உங்களுக்கு என் மீதுள்ள விரோதம் ‘நூஹ்'வுடைய மக்களையும் ‘ஹூத்' உடைய மக்களையும், ‘ஸாலிஹ்' உடைய மக்களையும் பிடித்தது போன்ற வேதனை உங்களையும் பிடித்துக் கொள்ளும்படி செய்துவிட வேண்டாம். ‘லூத்து'டைய மக்கள் (இருந்த இடமும் காலமும்) உங்களுக்குத் தூரமாக இல்லை

[90] ஆகவே, உங்கள் இறைவனிடம் நீங்கள் மன்னிப்பைக் கோருங்கள். (உங்கள் பாவங்களை விட்டு மனம் வருந்தி) அவனிடமே நீங்கள் திரும்புங்கள். நிச்சயமாக என் இறைவன் மகா கருணையுடையவன், மிக்க நேசிப்பவன் ஆவான் என்று கூறினார்

[91] அதற்கவர்கள் ‘‘ஷுஐபே! நீர் கூறுபவற்றில் பெரும்பாலானதை நாம் விளங்க (முடிய)வில்லை. நிச்சயமாக நாம் உம்மை எங்களில் பலவீனமானவராகவே காண்கிறோம். உமது இனத்தார் இல்லாவிடில் உம்மைக் கல் எறிந்தே கொன்றிருப்போம். நீர் நம்மிடம் மதிப்புடையவரல்ல'' என்றார்கள்

[92] அதற்கவர் ‘‘என் மக்களே! அல்லாஹ்வைவிட என் இனத்தாரா உங்களுக்கு மிக்க மதிப்புடையவர்களாகி விட்டனர்? நீங்கள் அவனை உங்கள் முதுகுப்புறம் தள்ளி விட்டீர்கள். நிச்சயமாக என் இறைவன் நீங்கள் செய்வதைச் சூழ்ந்துள்ளான்'' என்று கூறினார்

[93] ‘‘என் மக்களே! நீங்கள் உங்கள் போக்கில் (உங்கள் காரியத்தைச்) செய்து கொண்டிருங்கள், நானும் (என் போக்கில் என் காரியத்தைச்) செய்து கொண்டிருக்கிறேன். இழிவுபடுத்தும் வேதனை யாரை வந்தடையும்? பொய் சொல்பவர் யார்? என்பதை நீங்கள் அதிசீக்கிரத்தில் அறிந்து கொள்வீர்கள். (அந்நேரத்தை) நீங்கள் எதிர்பார்த்திருங்கள்; நிச்சயமாக நானும் உங்களுடன் (அதை) எதிர்பார்த்திருக்கிறேன்'' (என்றும் கூறினார்)

[94] (பின்னர் அவர்களிடம்) நம் வேதனை வந்தபொழுது ஷுஐபையும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் நம் அருளைக் கொண்டு பாதுகாத்துக் கொண்டோம். அநியாயம் செய்தவர்களை விடியற்காலை நேரத்தில் இடிமுழக்கம் பிடித்துக் கொண்டது. அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறே (இறந்து) சடலமாக கிடந்தனர்

[95] அதில் அவர்கள் ஒரு காலத்திலும் வசித்திருக்காதவர்களைப் போல் (ஓர் அடையாளமுமின்றி) அழிந்து விட்டனர். ‘ஸமூத்' (சமுதாயத்தின்) மீது சாபம் ஏற்பட்டபடியே இந்த ‘மத்யன்' (நகர சமுதாயத்தின்) மீதும் சாபம் ஏற்பட்டுவிட்டது என்பதை அறிந்துகொள்ளுங்கள்

[96] நம் வசனங்களுடனும் தெளிவான அத்தாட்சியுடனும் மூஸாவை (நம் தூதராக) நிச்சயமாக நாம் அனுப்பிவைத்தோம்

[97] ஃபிர்அவ்னிடமும் அவனுடைய கூட்டத்தாரிடமும் (அனுப்பினோம்). ஃபிர்அவ்னுடைய கட்டளையை (அவனுடைய கூட்டத்தினர்) பின்பற்றிக் கொண்டிருந்தனர். ஃபிர்அவ்னுடைய கட்டளையோ நேரான வழியில் இருக்கவில்லை

[98] மறுமை நாளில் அவன் தன் மக்களுக்கு முன் (வழிகாட்டியாகச்) சென்று அவர்களை நரகத்தில் சேர்ப்பான். அவர்கள் செல்லுமிடம் மிகக் கெட்டது

[99] இம்மையிலும் மறுமையிலும் சாபம் அவர்களைப் பின்தொடர்கிறது. அவர்களுக்குக் கிடைக்கும் சன்மானம் மிகக் கெட்டது

[100] (மேலே கூறிய) இவை சில ஊர்(வாசி)களின் சரித்திரங்களாகும். இவற்றை நாம் உங்களுக்குக் கூறினோம். இவற்றில் சில (இப்போதும்) இருக்கின்றன; சில அழிந்து விட்டன

[101] இவர்களில் எவருக்குமே நாம் தீங்கிழைக்கவில்லை. எனினும், அவர்களே தங்களுக்கு தீங்கிழைத்துக் கொண்டனர். உங்கள் இறைவனின் வேதனை வந்த சமயத்தில் அல்லாஹ்வை தவிர்த்து அவர்கள் அழைத்துக் கொண்டிருந்த தெய்வங்களில் ஒன்றுமே அவர்களுக்கு ஒரு பயனும் அளிக்கவில்லை; மேலும், நஷ்டத்தையே அவை அவர்களுக்கு அதிகப்படுத்தின

[102] அநியாயம் செய்கின்ற ஊராரை அவர்களின் அநியாயத்தின் காரணமாக உம் இறைவன் பிடிக்கக் கருதினால் இவ்வாறே அவன் பிடித்துக் கொள்கிறான். ஏனென்றால், நிச்சயமாக அவனுடைய பிடி மிக்க கடினமானதும் துன்புறுத்தக் கூடியதும் ஆகும்

[103] மறுமையின் வேதனையைப் பயப்படக்கூடியவருக்கு நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. மனிதர்கள் அனைவரும் ஒன்று சேர்க்கப்படும் நாளாகும் அது. அவர்கள் அனைவரும் (இறைவனின் முன்னால்) கொண்டு வரப்படக்கூடிய நாளுமாகும் அது

[104] ஒரு சொற்ப தவணைக்கே தவிர அதை நாம் பிற்படுத்தி வைக்கவில்லை

[105] அது வரும் நாளில் அவனுடைய அனுமதியின்றி எந்த ஒரு மனிதனும் (அவனுடன்) பேசமுடியாது. அவர்களில் துர்ப்பாக்கியவான்களும் உள்ளனர்; நற்பாக்கியவான்களும் உள்ளனர்

[106] துர்ப்பாக்கியவான்கள் நரகத்தில் வீழ்த்தப்படுவார்கள். (வேதனையைத் தாங்க முடியாமல்) அதில் அவர்கள் பெரும் கூச்சலிட்டுக் கதறுவார்கள்

[107] உமது இறைவன் நாடினாலன்றி வானங்களும் பூமியும் நிலைத்திருக்கும் காலம் வரை அதில் அவர்கள் தங்கியும் விடுவார்கள். நிச்சயமாக உமது இறைவன், தான் விரும்பியவற்றை (தடையின்றி) செய்து முடிப்பவன்

[108] நற்பாக்கியவான்கள் சொர்க்கத்தில் நுழைவார்கள். உமது இறைவன் நாடினாலன்றி வானங்களும் பூமியும் நிலைத்திருக்கும் காலம் வரை அதில்தான் அவர்கள் தங்கி விடுவார்கள். (அது) முடிவுறாத (என்றும் நிலையான) ஓர் அருட்கொடையாகும்

[109] (நபியே! இணைவைத்து வணங்கும்) இவர்கள் வணங்குபவற்றைப் பற்றி (இவர்களிடம் ஏதும் ஆதாரம் இருக்குமோ என்று) நீர் சந்தேகப்பட வேண்டாம். (ஓர் ஆதாரமுமில்லை. எனினும்,) இதற்கு முன்னர் இவர்களுடைய மூதாதைகள் வணங்கிக் கொண்டிருந்தது போன்றே இவர்களும் (ஆதாரம் எதுவுமின்றியே) வணங்குகின்றனர். இவர்களுடைய (வேதனையின்) பாகத்தை (இவர்களுடைய மூதாதைகளுக்குக் கொடுத்து இருந்தவாறே) இவர்களுக்கும் முழுமையாக ஒரு குறைவுமின்றி நிச்சயமாக நாம் கொடுப்போம்

[110] நிச்சயமாக நாம் மூஸாவுக்கு ஒரு வேதத்தைக் கொடுத்திருந்தோம். (இந்தக் குர்ஆனில் இவர்கள் மாறுபடுகின்றவாறே) அதிலும் அவர்கள் மாறுபட்டார்கள். (அவர்கள் தண்டனை பெறுகின்ற காலம் மறுமைதான் என்று) உங்கள் இறைவனின் வாக்கு முன்னரே ஏற்பட்டிராவிடில் (இம்மையிலேயே) இவர்களுடைய காரியம் முடிவு பெற்றிருக்கும். நிச்சயமாக (மக்காவாசிகளாகிய) இவர்களும் (இந்தக் குர்ஆனைப் பற்றிக் குழப்பமான) சந்தேகத்தில் இருக்கின்றனர்

[111] நிச்சயமாக உமது இறைவன் (அவர்கள் ஒவ்வொருவருக்கும்) அவர்களுடைய செய்கைக்குரிய கூலியை முழுமையாகவே கொடுப்பான். நிச்சயமாக அவன் அவர்கள் செய்வதை நன்கறிந்தவன் ஆவான்

[112] ஆகவே, (நபியே!) உமக்கு ஏவப்பட்டது போன்றே, நீரும் இணை வைத்து வணங்குவதிலிருந்து விலகி உம்முடன் இருப்பவரும் (நேரான வழியில்) உறுதியாக இருங்கள். (இதில்) சிறிதும் தவறி விடாதீர்கள். நிச்சயமாக அவன் உங்கள் செயலை உற்று நோக்குபவன் ஆவான்

[113] (நம்பிக்கையாளர்களே!) வரம்பு மீறுபவர்கள் பக்கம் நீங்கள் (சிறிதும்) சாய்ந்து விடாதீர்கள். (அவ்வாறாயின்) நரக நெருப்பு உங்களையும் பிடித்துக் கொள்ளும். அதிலிருந்து உங்களைப் பாதுகாப்பவர் அல்லாஹ்வைத் தவிர (வேறு) யாருமில்லை; பின்னர், எவருடைய உதவியும் உங்களுக்குக் கிடைக்காது

[114] பகலில் இரு முனை(களாகிய காலை, மாலை)களிலும், இரவில் ஒரு பாகத்திலும், நீர் (தவறாது) தொழுது வருவீராக. நிச்சயமாக நன்மைகள் பாவங்களைப் போக்கிவிடும். இறைவனைத் துதி செய்து புகழ்பவர்களுக்கு இது ஒரு நினைவூட்டுதலாகும்

[115] (நபியே! துன்பங்களைப்) பொறுமையுடன் சகித்திருப்பீராக. நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்தவர்களின் கூலியை வீணாக்கிவிட மாட்டான்

[116] உங்களுக்கு முன்னிருந்த சந்ததிகளில் (தாங்களும் நல்லொழுக்கத்தைக் கடைபிடித்து மற்ற மனிதர்களும்) பூமியில் விஷமம் செய்யாது தடுத்து வரக்கூடிய அறிவாளிகள் (அதிகமாக) இருந்திருக்க வேண்டாமா? அவர்கள் ஒரு சொற்ப எண்ணிக்கையில்தான் இருந்தனர். நாம் அவர்களை பாதுகாத்துக் கொண்டோம். ஆனால், (பெரும்பாலான) அநியாயக்காரர்களோ தங்கள் ஆசாபாசங்களைப் பின்பற்றிக் குற்றம் செய்பவர்களாகவே இருந்தனர்

[117] (நபியே!) ஓர் ஊராரில் சிலர் (மற்றவர்களைப் பாவம் செய்யாது) சீர்திருத்திக் கொண்டிருக்கும் வரை (மற்ற) சிலரின் அநியாயத்திற்காக அவ்வூரார் அனைவரையும் உமது இறைவன் அழித்துவிட மாட்டான்

[118] உமது இறைவன் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் ஒரே வகுப்பினராக ஆக்கியிருப்பான். (அவ்வாறு நாடவில்லை.) அவர்கள் தங்களுக்குள் மாறுபட்டுக் கொண்டேயிருப்பார்கள்

[119] அவர்களில் உமது இறைவன் அருள் புரிந்தவர்களைத் தவிர. (அவர்கள் மார்க்கத்தில் முரண்பட மாட்டார்கள்) இதற்காகவே அவர்களைப் படைத்தும் இருக்கிறான். (பாவம் செய்த) ‘‘ஜின்களைக் கொண்டும் மனிதர்களைக் கொண்டும் நிச்சயமாக நான் நரகத்தை நிரப்புவேன்'' என்ற உமது இறைவனின் வாக்கு நிறைவேறியே தீரும்

[120] உமது உள்ளத்தைத் திடப்படுத்துவதற்காகவே, நம் தூதர்களின் சரித்திரங்களிலிருந்து இவை அனைத்தையும் நாம் உமக்குக் கூறினோம். இவற்றில் உங்களுக்கு உண்மையும், நல்லுபதேசமும் நம்பிக்கையாளர்களுக்கு அறிவுரையும் இருக்கின்றன

[121] நம்பிக்கை கொள்ளாதவர்களை நோக்கி (நபியே!) கூறுவீராக: ‘‘நீங்கள் உங்கள் போக்கில் (உங்கள் காரியங்களைச்) செய்து கொண்டிருங்கள்; நிச்சயமாக நாங்களும் (எங்கள் போக்கில்) செய்து கொண்டிருக்கிறோம்

[122] நீங்களும் (இதன் முடிவை) எதிர்பார்த்திருங்கள்; நிச்சயமாக நாங்களும் (அதை) எதிர் பார்த்திருக்கிறோம்

[123] வானங்களிலும் பூமியிலும் மறைந்திருப்பவை அனைத்தும் (அவற்றின் ஞானமும்) அல்லாஹ்வுக்குரியனவே! எல்லா காரியங்களும் அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படும். ஆதலால், அவன் ஒருவனையே நீர் வணங்குவீராக; அவனையே நம்புவீராக. உமது இறைவன் நீங்கள் செய்பவற்றைப் பற்றி பராமுகமாயில்லை

யூஸுஃப்

Surah 12

[1] அலிஃப் லாம் றா. இவை (-இந்த அத்தியாயம்) தெளிவான இவ்வேதத்தின் வசனங்களாகும்

[2] (அரபிகளே!) நீங்கள் நன்கறிந்து கொள்வதற்காக குர்ஆன் என்னும் இவ்வேதத்தை நிச்சயமாக நாமே அரபி மொழியில் இறக்கி வைத்தோம்

[3] (நபியே!) வஹ்யி மூலம் நாம் உமக்கு அறிவிக்கும் இந்தக் குர்ஆனின் மூலம் சரித்திரங்களில் மிக்க அழகானதொன்றை உமக்கு நாம் விவரிக்கிறோம். இதற்கு முன்னர் நிச்சயமாக நீர் இதை அறியாதவராகவே இருந்தீர்

[4] யூஸுஃப் (நபி, யஅகூப் நபியாகிய) தன் தந்தையை நோக்கி ‘‘என் தந்தையே! பதினொரு நட்சத்திரங்களும், சூரியனும், சந்திரனும் எனக்குச் சிரம் பணிய மெய்யாகவே நான் (கனவு) கண்டேன்'' என்று கூறிய சமயத்தில்

[5] (யஅகூப் நபி யூஸுஃபை நோக்கி) ‘‘என் அருமைக் குழந்தையே! நீ கண்ட கனவை உன் சகோதரர்களிடம் கூறாதே. (அவ்வாறு கூறினால்,) அவர்கள் உனக்கு யாதேனும் தீங்கிழைக்கச் சதி செய்வார்கள். ஏனெனில், நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்கமான எதிரி ஆவான். (சதி செய்யுமாறு அவர்களை அவன் தூண்டக் கூடும்)'' என்று கூறினார்

[6] மேலும், ‘‘(நீ கனவில் கண்ட) இவ்வாறே உன் இறைவன் உன்னைத் தேர்ந்தெடுத்து கனவுகளின் வியாக்கியானங்களையும் உனக்குக் கற்றுக் கொடுத்து, உன் மீதும், யஅகூபின் (மற்ற) சந்ததிகள் மீதும் அவன் தன் அருளை முழுமையாக்கி வைப்பான். இவ்வாறே இப்றாஹீம், இஸ்ஹாக் ஆகிய உன் இரு மூதாதைகள் மீதும் தன் அருளை முழுமைப்படுத்தி வைத்தான். நிச்சயமாக உன் இறைவன் (அனைத்தையும்) நன்கறிந்தவன், ஞானமுடையவன் ஆவான்'' (என்றும் கூறினார்)

[7] (நபியே!) நிச்சயமாக யூஸுஃப் மற்றும் அவரது சகோதரர்களுடைய சரித்திரத்தைப் பற்றி வினவுகின்ற (யூதர்களாகிய இ)வர்களுக்கு இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன

[8] (யஅகூப் நபி தன் பன்னிரண்டு மகன்களில் யூஸுஃபையும், புன்யாமீனையும் அதிகமாக நேசிப்பதைக் கண்ணுற்ற மற்ற மகன்கள் பொறாமை கொண்டு) நாம் பலசாலிகளாக இருந்தும் யூஸுஃபும், அவருடைய சகோதரரும் நம் தந்தைக்கு நம்மைவிட அதிகப் பிரியமுள்ளவர்களாக இருக்கின்றனர். (இதில்) நம் தந்தை நிச்சயமாக பகிரங்கமான தவறில் இருக்கிறார்'' என்றும்

[9] ஆகவே, ‘‘யூஸுஃபைக் கொலை செய்து விடுங்கள். அல்லது பூமியில் எங்கேனும் அப்புறப்படுத்தி விடுங்கள். (அதன் பின்) உங்கள் தந்தையின் பார்வை முற்றிலும் உங்கள் பக்கமே இருக்கும். இதன் பின்னர், நீங்கள் (இறைவனிடம் மன்னிப்புத் தேடிக்கொண்டு) நல்ல மக்களாகி விடுங்கள்'' என்றும் கூறினார்கள்

[10] (அதற்கு) அவர்களில் ஒருவர், ‘‘யூஸுஃபை நீங்கள் கொலை செய்யாதீர்கள். நீங்கள் அவருக்கு ஏதும் (கெடுதல்) செய்தே தீர வேண்டுமென்று கருதினால், ஆழமான ஒரு பாழ்கிணற்றில் அவரை எறிந்து விடுங்கள். வழிப்போக்கரில் எவரேனும் அவரை (கிணற்றில் இருந்து) எடுத்துக் கொள்ளக்கூடும்'' என்று கூறினார்

[11] (பின்னர் அவர்கள் தங்கள் தந்தையிடம் வந்து,) ‘‘எங்கள் தந்தையே! என்ன காரணத்தால் யூஸுஃபைப் பற்றி நீங்கள் எங்களை நம்புவதில்லை? நாங்களோ, மெய்யாகவே அவருக்கு நன்மையை நாடுபவர்கள் ஆவோம்'' என்றும்

[12] ‘‘நாளைய தினம் அவரை எங்களுடன் அனுப்பிவையுங்கள். அவர் (காட்டிலுள்ள கனிகளைப்) புசித்துக் கொண்டும், விளையாடிக் கொண்டும் இருப்பார். நிச்சயமாக நாங்கள் அவரைப் பாதுகாத்துக் கொள்வோம்'' என்றும் கூறினார்கள்

[13] (அதற்கவர்) ‘‘நீங்கள் அவரை அழைத்துச் செல்வது எனக்குத் துக்கத்தை உண்டு பண்ணிவிடும். நீங்கள் (விளையாடிக் கொண்டு) அவரை மறந்து பராமுகமாய் இருக்கும் சமயத்தில் ஓநாய் அவரை (அடித்துத்) தின்றுவிடும் என்றும் நான் பயப்படுகிறேன்'' என்று கூறினார்

[14] அதற்கவர்கள், ‘‘பலசாலிகளான நாங்கள் இருந்தும் அவரை ஒரு ஓநாய் தின்பதென்றால் அப்போது நிச்சயமாக நாங்கள் நஷ்டவாளிகள் ஆகிவிடுவோம்'' என்று கூறி (தங்கள் தந்தையை சம்மதிக்கச் செய்த)னர்

[15] (யூஸுஃபை) அழைத்துச் சென்று, அவரை ஆழமான ஒரு பாழ்கிணற்றில் எறிந்துவிட வேண்டுமென்றே அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முடிவு கட்டி (எறிந்தும் விட்ட)னர். ‘‘அவர்களுடைய இச்செயலைப் பற்றி (ஒரு காலத்தில்) நீர் அவர்களுக்கு அறிவுறுத்துவீர். அப்பொழுது அவர்கள் (உங்களை) அறிந்து கொள்ளவும் மாட்டார்கள்'' என்று நாம் யூஸுஃபுக்கு வஹ்யி அறிவித்தோம்

[16] அன்று பொழுதடைந்தபின், அவர்கள் தங்கள் தந்தையிடம் அழுது கொண்டே வந்தனர்

[17] ‘‘எங்கள் தந்தையே! நிச்சயமாக யூஸுஃபை எங்கள் சாமான்களிடம் விட்டுவிட்டு ஓடி (விளையாடிக் கொண்டே வெகுதூரம் சென்று) விட்டோம். அச்சமயம் அவரை ஓநாய் (அடித்துத்) தின்றுவிட்டது. நாங்கள் (எவ்வளவு) உண்மை சொன்ன போதிலும் (அதை) நீங்கள் நம்பவே மாட்டீர்கள்'' என்று கூறினார்கள்

[18] (தங்கள் தந்தைக்குக் காண்பிப்பதற்காக) அவருடைய சட்டையில் (ஆட்டின்) பொய்யான இரத்தத்தைத் தோய்த்துக் கொண்டு வந்(து காண்பித்)தார்கள். (இரத்தம் தோய்ந்த அச்சட்டைக் கிழியாதிருப்பதைக் கண்டு ‘‘அவரை ஓநாய் அடித்துத் தின்னவே) இல்லை'' உங்கள் மனம் ஒரு (தீய) காரியத்தை உங்களுக்கு அழகாகக் காண்பித்து விட்டது. (அவ்வாறு செய்து விட்டீர்கள்.) ஆகவே, (அத்துக்கத்தைச்) சகித்துக் கொள்வதுதான் நன்று. நீங்கள் கூறியவற்றில் (இருந்து யூஸுஃபை பாதுகாக்குமாறு) அல்லாஹ்விடம் உதவி தேடுகிறேன்'' என்று கூறினார்கள்

[19] பின்னர் (கிணற்றின் சமீபமாக) ஒரு பயணக் கூட்டம் வந்தது. அவர்கள் தங்கள் பணியாளை (தண்ணீர் கொண்டு வர) அனுப்பினார்கள். அவன் தன் வாளியைக் (கிணற்றில்) விட்டான். (அதில் யூஸுஃப் உட்கார்ந்து கொண்டார். அதில் யூஸுஃப் இருப்பதைக் கண்டு ‘‘உங்களுக்கு) நற்செய்தி! இதோ (அழகிய) சிறுவர் ஒருவர்! என்று (யூஸுஃபைச் சுட்டிக் காட்டிக்) கூறினான். (அவரைக் கண்ணுற்ற அவர்கள்) தங்கள் வர்த்தகப்பொருளாக (ஆக்கிக் கொள்ளக் கருதி) அவரை மறைத்துக் கொண்டார்கள். அல்லாஹ் அவர்கள் செய்வதை நன்கறிந்தவன் ஆவான்

[20] (இதற்குள் அவருடைய சகோதரர்கள் அங்கு வந்து ‘‘இவன் தப்பி ஓடி வந்து விட்ட எங்கள் அடிமை'' எனக் கூறி அவர்களிடமே) ஒரு சொற்ப தொகையான பணத்திற்கு விற்றுவிட்டார்கள். (ஏனென்றால், அவருடைய சகோதரர்கள்) அவரை மிக்க வெறுத்தவர்களாகவே இருந்தனர்

[21] (அவரை வாங்கியவர்கள், அவரை எகிப்துக்குக் கொண்டு வந்து அந்நாட்டு அதிபதியிடம் விற்று விட்டனர்.) எகிப்தில் அவரை வாங்கியவர், தன் மனைவியை நோக்கி ‘‘நீ இவரை கண்ணியமாக வைத்துக்கொள்; அவரால் நாம் நன்மை அடையலாம்; அல்லது அவரை நாம் நம் (வளர்ப்பு) மகனாக்கிக் கொள்ளலாம்'' என்று கூறினார். யூஸுஃப் அவ்வூரில் ஆதிக்கம் செலுத்துவதற்காகவும் (முன்னர் அவர் கண்டது போன்ற) கனவுகளின் வியாக்கியானங்களை அவருக்குக் கற்பிப்பதற்காகவும் இவ்வாறு நாம் அவருக்கு வசதி செய்தோம். அல்லாஹ், தன் காரியத்தை நிறைவேற்றுவதில் (அனைவரையும்) மிகைத்தவன் ஆவான். ஆனால், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிய மாட்டார்கள்

[22] அவர் தன் வாலிபத்தை அடைந்ததும், நாம் அவருக்கு ஞானத்தையும், கல்வியையும் கொடுத்தோம். நல்லொழுக்கமுடையவர்களுக்கு இவ்வாறு தான் நாம் கூலி தருகிறோம்

[23] அவர் இருந்த வீட்டின் எஜமானி (அவரைக் காதலித்துத் தன்னை அலங்கரித்துக் கொண்டு) எல்லாக் கதவுகளையும் மூடிவிட்டு தன் விருப்பத்திற்கு இணங்குமாறு அவரை ‘வாரும்' என்றழைத்தாள். அதற்கவர், ‘‘(என்னை)அல்லாஹ் பாதுகாத்துக் கொள்வானாக! நிச்சயமாக என் எஜமானாகிய (உன் கண)வர் என்னை மிக்க (அன்பாகவும்) கண்ணியமாகவும் வைத்திருக்கிறார். (இத்தகைய நன்மை செய்பவர்களுக்குத் துரோகம் செய்யும்) அநியாயக்காரர்கள் நலம்பெற மாட்டார்கள்'' என்று கூறினார்

[24] அவள் அவரை நடினாள்; அவரும் அவளை நாடினார். தன் இறைவனுடைய எச்சரிப்பைக் கண்டிராவிடில் (அவர் தவறு செய்திருப்பார்). எனினும், கெட்ட செயல்களிலிருந்தும் மானக் கேடான செயல்களிலிருந்தும் அவரைத் திருப்பி விடுவதற்காக நாம் அவருக்கு இவ்வாறு எச்சரிக்கை செய்தோம். நிச்சயமாக, அவர் நம் (உண்மையான) பரிசுத்தமான அடியார்களில் ஒருவராக இருந்தார்

[25] (யூஸுஃப் அவளை விட்டுத் தப்பித்துக்கொள்ளக் கருதி வெளியில் செல்ல ஓடினார். அவள் அவரைப் பிடித்துக்கொள்ளக் கருதி அவர் பின் ஓடினாள்.) இருவரும், ஒருவர் ஒருவரை முந்திக் கொள்ள கதவின் பக்கம் விரைந்து ஓடினார்கள். (யூஸுஃப் முந்திக் கொள்ளவே அவருடைய சட்டையைப் பிடித்திழுத்தாள்.) ஆகவே, அவருடைய சட்டையின் பின்புறத்தை கிழித்துவிட்டாள். அச்சமயம், வாசற்படியில் அவளுடைய கணவர் இருப்பதை இருவரும் கண்டனர். (ஆகவே, அவள் பயந்து, தான் தப்பித்துக் கொள்ளக் கருதி) அவரை நோக்கி ‘‘உமது மனைவிக்குத் தீங்கிழைக்கக் கருதியவனுக்குச் சிறையில் இடுவதோ அல்லது துன்புறுத்துகின்ற வேதனையைத் தருவதோ தவிர வேறு தண்டனை உண்டா?'' என்று கேட்டாள்

[26] (யூஸுஃப் அதை மறுத்து) ‘‘அவள்தான் என்னை வற்புறுத்தித் தன்னிடம் அழைத்தாள்'' என்று கூறினார். (இதற்கிடையில் அங்கிருந்த) அவளுடைய குடும்பத்திலுள்ள ஒருவர் (இதற்கு) சாட்சியமாகக் கூறியதாவது: ‘‘அவருடைய சட்டை முன்புறம் கிழிக்கப்பட்டிருந்தால் இவள் உண்மையே சொல்லுகிறாள்; அவர் பொய்யரே! (ஆனால்)

[27] அவருடைய சட்டைப் பின்புறம் கிழிக்கப்பட்டிருந்தால், இவள் பொய் கூறுகிறாள்; அவர் உண்மை கூறுபவர்தான்'' (என்றார்)

[28] (ஆகவே, அவளது கணவர்) யூஸுஃபுடைய சட்டையைக் கவனித்ததில், அது பின்புறமாகக் கிழிக்கப்பட்டிருப்பதைக் கண்டு (தன் மனைவியை நோக்கி) ‘‘நிச்சயமாக இது (பெண்களாகிய) உங்கள் சதியே; நிச்சயமாக உங்கள் சதி மகத்தானது'' என்று கூறி

[29] (யூஸுஃபை நோக்கி) ‘‘யூஸுஃபே! நீர் இதை இத்துடன் விட்டுவிடுவீராக. (இதைப்பற்றி எவரிடமும் கூற வேண்டாம்'' என்று கூறி மீண்டும் அவளை நோக்கி) ‘‘நீ உன் பாவத்திற்கு மன்னிப்பைத் தேடிக்கொள். நிச்சயமாக நீதான் குற்றம் செய்திருக்கிறாய்'' (என்று கூறினார்)

[30] (இவ்விஷயம் வெளியில் பரவவே) அப்பட்டிணத்திலுள்ள பெண்கள் பலரும் (இதை இழிவாகக் கருதி) ‘‘அதிபதியின் மனைவி தன்னிடமுள்ள ஒரு (அடிமையான) ஒரு வாலிபனைத் தனக்கு இணங்கும்படி வற்புறுத்துகிறாள். காதல் அவளை மயக்கி விட்டது! நிச்சயமாக அவள் மிகத் தவறான வழியில் இருப்பதையே நாங்கள் காண்கிறோம்'' என்று (இழிவாகப்) பேசலானார்கள்

[31] (அந்தப்) பெண்களின் (இந்த) இழிமொழிகளை அவள் செவியுறவே, அப்பெண்களுக்காக ஒரு விருந்து சபையைக் கூட்டி, அதற்கு அவர்களை அழைத்து வந்து ஒவ்வொருத்திக்கும் ஒரு கனியையும் (அதை அறுத்துப் புசிக்க) ஒரு கத்தியையும் கொடுத்து அவரை (அலங்கரித்து) அவர்கள் முன் வரும்படிக் கூறினாள். அவரை அப்பெண்கள் காணவே (அவருடைய அழகைக் கண்டு) அவரை மிக்க உயர்வானவராக எண்ணி (மெய் மறந்து, கனியை அறுப்பதற்குப் பதிலாக) தங்கள் கை (விரல்)களையே அறுத்துக் கொண்டு ‘‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இவர் மனிதரல்ல! இவர் (அனைவரின் மனதையும் கவரக்கூடிய) அழகு வாய்ந்த ஒரு வானவரே தவிர வேறில்லை'' என்று கூறினார்கள்

[32] அதற்கவள் ‘‘நீங்கள் எவரைப் பற்றி என்னை நிந்தித்தீர்களோ அவர்தான் இவர். நிச்சயமாக நான் இவரை எனக்கு இசையும்படி வற்புறுத்தினேன்; எனினும், இவர் தப்பித்துக்கொண்டார். இனியும் இவர் நான் கூறுவதைச் செய்யாவிடில் நிச்சயமாக இவர் சிறையிலிடப்பட்டு சிறுமைப்படுத்தப் படுவார்''என்று கூறினாள்

[33] அதற்கவர், ‘‘என் இறைவனே! அவர்கள் என்னை அழைக்கும் (இத்தீய) காரியத்தை விட சிறைக்கூடமே எனக்கு விருப்பமானது. ஆகவே, இப்பெண்களின் சூழ்ச்சியிலிருந்து நீ என்னைத் தடுத்துக் கொள்ளா விட்டால் இப்பெண்களிடம் சிக்கி (பாவம் செய்யும்) அறிவீனர்களில் நானும் ஒருவனாக ஆகிவிடுவேன்'' என்று பிரார்த்தித்தார்

[34] (அவரது பிரார்த்தனையை) அவருடைய இறைவன் அங்கீகரித்துக் கொண்டு, பெண்களின் சூழ்ச்சியை அவரைவிட்டுத் திருப்பிவிட்டான். நிச்சயமாக அவன்தான் (அனைத்தையும்) செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்

[35] (யூஸுஃப் நிரபராதி என்பதற்குரிய) ஆதாரங்களை அவர்கள் கண்டதன் பின்னரும் (இச்சம்பவத்தைப் பற்றி என்ன செய்யலாமென அவர்கள் ஆலோசனை செய்தனர். அவளுடைய பார்வையிலிருந்து யூஸுஃபை மறைத்து விடுவதே நலமெனக் கருதி அதற்காகச்) சிறிது காலம் அவரை சிறையிலிடுவதே தகுமென அவர்களுக்குத் தோன்றியது. (ஆகவே, அவரை சிறைக்கூடத்திற்கு அனுப்பி விட்டனர்)

[36] (அவர் சிறைச்சென்ற சமயத்தில் வெவ்வேறு குற்றங்களுக்காக இன்னும்) இரு வாலிபர்களும் அவருடன் சிறைச் சென்றார்கள். அவ்விருவரில் ஒருவன் (ஒரு நாளன்று யூஸுஃபை நோக்கி) ‘‘நான் திராட்சை ரஸம் பிழிந்து கொண்டிருப்பதாக மெய்யாகவே கனவு கண்டேன்'' என்று கூறினான். மற்றவன் ‘‘நான் என் தலையில் ரொட்டிகளைச் சுமந்து செல்வதாகவும், அதை பட்சிகள் (கொத்திக் கொத்திப்) புசிப்பதாகவும் மெய்யாகவே கனவு கண்டேன்'' என்று கூறி (யூஸுஃபை நோக்கி,) ‘‘நிச்சயமாக நாங்கள் உம்மை மிக்க (ஞானமுடைய) நல்லவர்களில் ஒருவராகவே காண்கிறோம்; ஆதலால், இக்கனவுகளின் வியாக்கியானங்களை நீர் எங்களுக்கு அறிவிப்பீராக!'' (என்று கூறினான்)

[37] (அதற்கு யூஸுஃப் அவர்களை நோக்கி,) ‘‘நீங்கள் புசிக்கக்கூடிய உணவு (வெளியிலிருந்து) உங்களிடம் வந்து சேருவதற்கு முன்னதாகவே அதன் விளக்கத்தை நான் உங்களுக்கு அறிவித்து விடுவேன்; (கனவுகளுக்கு வியாக்கியானம் கூறும்) இதை என் இறைவனே எனக்கு அறிவித்து இருக்கிறான். ஏனென்றால், அல்லாஹ்வை நம்பிக்கைக் கொள்ளாது மறுமையை நிராகரிக்கின்ற மக்களுடைய மார்க்கத்தை நிச்சயமாக நான் விட்டுவிட்டேன்

[38] என் மூதாதைகளாகிய இப்றாஹீம், இஸ்ஹாக், யஅகூப் ஆகிய இவர்களின் மார்க்கத்தையே நான் பின்பற்றியிருக்கிறேன். ஆதலால், அல்லாஹ்வுக்கு எதையும் நாங்கள் இணையாக்குவது எங்களுக்குத் தகுமானதல்ல. இக்கொள்கை மீது இருப்பது எங்கள் மீதும் மற்ற மனிதர்கள் மீதும் அல்லாஹ் புரிந்த ஓர் அருளாகும். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள், (அல்லாஹ்வின் அருளுக்கு) நன்றி செலுத்துவதில்லை

[39] சிறைக்கூடத்தில் இருக்கும் என்னிரு தோழர்களே! (ஒரு சக்தியுமற்ற) மாறுபட்ட பல்வேறு தெய்வங்கள் நன்றா? அல்லது அனைவரையும் அடக்கி ஆளுகின்ற ஒரே இறைவனாகிய அல்லாஹ் ஒருவனே நன்றா

[40] அல்லாஹ்வைத் தவிர்த்து நீங்கள் வணங்குபவை அனைத்தும், நீங்களும் உங்கள் மூதாதைகளும் வைத்துக் கொண்ட வெறும் (கற்பனைப்) பெயர்களைத்தவிர (உண்மையில் அவை ஒன்றுமே) இல்லை. அல்லாஹ் இதற்கு ஓர் ஆதாரத்தையும் இறக்கிவைக்கவுமில்லை; எல்லா அதிகாரங்களும் அல்லாஹ் ஒருவனுக்கே தவிர (மற்றெவருக்கும்) இல்லை. அவனைத் தவிர (மற்ற எவற்றையும்) நீங்கள் வணங்கக் கூடாதென்று அவனே கட்டளை இட்டிருக்கிறான். இதுதான் நேரான மார்க்கம். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறியவில்லை'' (என்று யூஸுஃப் அவர்களுக்கு நல்லுபதேசம் செய்து)

[41] (மேலும், அவர்களை நோக்கி) ‘‘சிறைக்கூடத்தில் இருக்கும் என்னிரு தோழர்களே! (உங்கள் கனவுகளின் பலன்களாவன:) ‘‘உங்களில் ஒருவன் (விடுதலையடைந்து அவன், முன்செய்து கொண்டிருந்த வேலையையும் ஒப்புக்கொண்டு, முன்பு போலவே) தன் எஜமானனுக்குத் திராட்சை ரஸம் புகட்டிக் கொண்டிருப்பான். மற்றவனோ தூக்கிலிடப்பட்டு அவன் தலையை (காகம், கழுகு போன்ற) பறவைகள் (கொத்திக் கொத்தித்) தின்னும். நீங்கள் வியாக்கியானம் கோரிய (கனவுகளின்) பலன் விதிக்கப்பட்டு விட்டது. (அவ்வாறு நடந்தே தீரும்'' என்று கூறினார்)

[42] மேலும், அவ்விருவரில் எவன் விடுதலை அடைவானென அவர் எண்ணினாரோ (அவனை நோக்கி) நீ உன் எஜமானனிடம் என்னைப் பற்றி (அநியாயமாக சிறையிடப்பட்டிருக்கிறேன் என்று) கூறுவாயாக! என்றும் சொன்னோர். எனினும் (சிறைக் கூடத்திலிருந்து விடுதலையாகி வெளியேறிய) அவன் தன் எஜமானனிடம் கூற இருந்த (எண்ணத்)தை ஷைத்தான், அவனுக்கு மறக்கடித்துவிட்டான். ஆதலால், அவர் சிறைக்கூடத்தில் (இன்னும்) பல ஆண்டுகள் தங்கிவிட்டார்

[43] (ஒரு நாளன்று) எகிப்தின் அரசர் (தன் பிரதானிகளை நோக்கி) ‘‘என் பிரதானிகளே! கொழுத்துப் பருத்த ஏழு பசுக்களை, இளைத்து வற்றிய ஏழு பசுக்கள் புசிப்பதாகவும், நன்கு விளைந்த பசுமையான ஏழு கதிர்களையும் காய்ந்து உலர்ந்த (சாவியான வேறு ஏழு) கதிர்களையும் என் கனவில் கண்டேன். என் பிரதானிகளே! நீங்கள் கனவுகளுக்கு வியாக்கியானம் கூறக்கூடியவர்களாக இருந்தால் என் இக்கனவின் பலனை அறிவியுங்கள்'' என்று கூறினார்

[44] அதற்கவர்கள், ‘‘இது (அஜீரணத்தாலும்) சிதறிய சிந்தனையாலும் ஏற்பட்ட (வீணான) கனவுதான். (இத்தகைய வீண்) கனவுகளுக்குரிய விளக்கங்களை நாங்கள் அறிந்தவர்களல்ல'' என்று கூறினார்கள்

[45] (யூஸுஃபின் சிறைத்) தோழர்கள் இருவரில் விடுதலை அடைந்தவன் பல ஆண்டுகளுக்குப் பின்னர் (அச்சமயம் அவரை) நினைத்து (அவர் தன் கனவுக்குக் கூறிய வியாக்கியானம் முற்றிலும் சரிவர நடைபெற்றதையும் எண்ணி, அரசரை நோக்கி) ‘‘அரசரது கனவின் வியாக்கியானத்தை நான் உங்களுக்கு அறிவிக்க முடியும். என்னை (சிறைக் கூடத்திலுள்ள யூஸுஃபிடம்) அனுப்பிவையுங்கள்'' என்று கூறினான். (அவ்வாறே அரசரும் யூஸுஃபிடம் அவனை அனுப்பிவைத்தார்)

[46] (அவன் சிறைக்கூடம் சென்று யூஸுஃபை நோக்கி “கனவுகளுக்கு) உண்மை(யான வியாக்கியானம்) கூறுபவரே! யூஸுஃபே! கொழுத்துப் பருத்த ஏழு பசுக்களை, இளைத்து வற்றிய ஏழு பசுக்கள் புசிப்பதைப் போலும், முதிர்ந்து விளைந்த பசுமையான ஏழு கதிர்களையும் (சாவியாகிய) காய்ந்த மற்ற ஏழு கதிர்களையும் (கனவில் கண்டால் அதன் பலன் என்ன? அதை) நீர் எங்களுக்கு அறிவிப்பீராக! (என்னை அனுப்பிய) மக்கள் (இதைத்) தெரிந்து கொள்வதற்காக அவர்களிடம் நான் செல்ல வேண்டியது இருக்கிறது'' என்று கூறினான்

[47] அதற்கவர் கூறியதாவது: ‘‘தொடர்ந்து (வழக்கம் போல் நல்லவிதமாக) ஏழு ஆண்டுகள் நீங்கள் விவசாயம் செய்வீர்கள். அதில் நீங்கள் அறுவடை செய்யும் விளைச்சல்களில் நீங்கள் புசிப்பதற்கு வேண்டிய ஒரு சொற்ப அளவைத்தவிர மற்ற அனைத்தையும் அதன் கதிர்களிலேயே விட்டு வையுங்கள்

[48] அதற்குப் பின்னர், கடினமான (பஞ்சத்தையுடைய) ஏழு ஆண்டுகள் வரும். நீங்கள் கதிர்களில் பத்திரப்படுத்தி வைத்திருந்தவற்றில் (விதைப்பதற்கு வேண்டிய) சொற்ப அளவைத் தவிர, (நீங்கள் சேகரித்திருந்த) அனைத்தையும் (அப்பஞ்சம்) தின்றுவிடும்

[49] அதற்குப் பின்னர் ஓர் ஆண்டு வரும்; அதில் ஏராளமாக மழை பெய்து (ஒலிவம், திராட்சை ஆகியவை நன்கு வளர்ந்து, திராட்சை ஆகியவற்றின்) ரஸத்தை மனிதர்கள் பிழிவார்கள்'' (என்றும் கூறினார்)

[50] (யூஸுஃப் நபி கூறியவற்றை அரசரிடம் வந்து அவன் விபரமாக அறிவித்தான்.) அதற்கு அரசர் ‘‘(இவ்வியாக்கியானம் கூறிய) அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்'' எனக் கட்டளையிட்டார். அவருடைய தூதர் யூஸுஃபிடம் (அவரை அழைத்துச்) செல்ல (வர)வே (அவர் தூதருடன் செல்ல மறுத்து அவரை நோக்கி) ‘‘நீர் உமது எஜமானனிடம் திரும்பிச் சென்று, தங்கள் கை (விரல்)களை வெட்டிக்கொண்ட பெண்களின் (உண்மை) விஷயமென்ன? (எதற்காக அப்பெண்கள் தங்கள் கைகளை வெட்டிக் கொண்டனர்?) என்று அவரைக் கேட்பீராக. நிச்சயமாக அந்தப் பெண்களின் சூழ்ச்சியை என் இறைவன் நன்கறிந்தவன்'' என்று கூறினார்

[51] (இதைக் கேள்வியுற்ற அரசர் அப்பெண்களை அழைத்து) ‘‘நீங்கள் யூஸுஃபை உங்கள் விருப்பத்திற்கிணங்குமாறு அழைத்த போது உங்களுக்கு ஏற்பட்டதென்ன?'' என்று கேட்டார். அதற்கு அப்பெண்கள் ‘‘அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன்; நாங்கள் அவரிடத்தில் ஒரு தீங்கையும் அறியவில்லை'' என்று கூறிவிட்டார்கள். அதிபதியின் மனைவியோ இச்சமயம் உண்மை வெளிப்பட்டு விட்டது; நான்தான் அவரை விரும்பி அழைத்தேன். (அவர் கூறியதில்) நிச்சயமாக அவர் உண்மையே சொன்னார்'' என்று கூறினாள்

[52] (இதைக் கேள்வியுற்ற யூஸுஃப் ‘‘முன்னர் சென்றுபோன விஷயங்களை இவ்வாறு விசாரணை செய்யும்படி நான் கூறிய) இதன் காரணம்; நிச்சயமாக நான் (என் எஜமானாகிய) அவர் மறைவாயிருந்த சமயத்தில் அவருக்கு நான் துரோகம் செய்யவில்லை என்பதை அவர் அறிந்து கொள்வதுடன், நிச்சயமாக அல்லாஹ் துரோகிகளின் சூழ்ச்சியை நடைபெற விடுவதில்லை என்(பதை அறிவிப்)பதற்காகவுமே'' (என்று கூறினார்)

[53] ‘‘நான் (தவறுகளிலிருந்து) தூய்மையானவன்'' என்று என்னை பரிசுத்தம் செய்து கொள்ளவில்லை. ஏனென்றால், என் இறைவன் அருள் புரிந்தாலன்றி மனிதனின் சரீர இச்சை, பாவம் செய்யும்படித் தூண்டக்கூடியதாகவே இருக்கிறது. நிச்சயமாக என் இறைவன் மிக்க மன்னிப்பவன் மகா கருணையாளன் ஆவான்'' (என்றார்)

[54] (யூஸுஃபின் ஞானத்தை அறிந்த அரசர்) ‘‘அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்! என் சொந்த வேலைக்கு அவரை அமர்த்திக் கொள்வேன்'' என்று (அழைத்து வரச் செய்து) அவருடன் பேசவே (அவரது தொலைநோக்கு சிந்தனையைக் கண்டு) ‘‘நிச்சயமாக நீர் இன்றிலிருந்து நம்மிடம் பெரும் மதிப்பும் நம்பிக்கையும் பெற்று விட்டீர்'' என்றார்

[55] (அதற்கவர்) ‘‘தேசியக் களஞ்சியங்களின் நிர்வாகியாக என்னை ஆக்கி விடுவீராக. நிச்சயமாக நான் அவற்றைப் பாதுகாக்க நன்கறிந்தவன்'' என்று சொன்னார். (அவ்வாறே அரசர் ஆக்கினார்)

[56] யூஸுஃப், அந்நாட்டில் தான் விரும்பிய இடமெல்லாம் சென்று, விரும்பும் காரியங்களை செய்துவர இவ்வாறு நாம் அவருக்கு வசதியளித்தோம். நாம் விரும்பியவர்களுக்கு (இவ்வாறே) அருள்புரிகிறோம். நன்மை செய்தவர்களின் கூலியை நாம் வீணாக்குவதில்லை

[57] எனினும், (நமக்குப்) பயந்து நடக்கும் நம்பிக்கையாளர்களுக்கு மறுமை(யில் நாம் கொடுக்கும்) கூலியோ (இதைவிட) மிக மேலானதாகும். (யூஸுஃப் கூறியவாறு தானியங்கள் பத்திரப்படுத்தப்பட்டு வந்தன. பஞ்சமும் ஏற்பட்டு, கன்ஆனிலிருந்த இவருடைய சகோதரர்கள் தானியத்திற்காக யூஸுஃபிடம் வந்தனர்)

[58] ஆகவே, யூஸுஃபினுடைய சகோதரர்கள் அவரிடம் வந்தபொழுது, அவர்களை அவர் (தன் சகோதரர்கள்தான் என) அறிந்துகொண்டார். ஆனால், அவர்களோ அவரை அறிந்து கொள்ளவில்லை

[59] (யூஸுஃப்) அவர்களுக்கு வேண்டிய தானியங்களை தயார்படுத்திக் கொடுத்து, (தம் சொந்த சகோதரர் புன்யாமீனின் சுகத்தை அவர்களிடம் தந்திரமாகப் பேசித் தெரிந்துகொண்டு ‘‘மறுமுறை நீங்கள் வந்தால்) தந்தை ஒன்றான உங்கள் சகோதர(ன் புன்யாமீ)னையும் என்னிடம் அழைத்து வாருங்கள். (நீங்கள் குறைந்த கிரயம் கொடுத்த போதிலும்) நிச்சயமாக நான் உங்களுக்கு(த் தானியங்களை) முழுமையாக அளந்து கொடுத்ததுடன், மிக்க மேலான விதத்தில் (உங்களுக்கு) விருந்து அளித்ததையும் நீங்கள் கவனிக்கவில்லையா

[60] நீங்கள் அவரை என்னிடம் கொண்டு வராவிட்டால் என்னிடமுள்ள (தானியத்)தை உங்களுக்கு அளந்து கொடுக்க முடியாது. நீங்கள் என்னை நெருங்கவும் முடியாது'' என்று கூறினார்

[61] அதற்கவர்கள் ‘‘நாங்கள் அவருடைய தந்தையிடம் கேட்டுக்கொண்டு (அவரை அழைத்துக் கொண்டு வருவதற்கு) வேண்டிய முயற்சிகளை நிச்சயமாகச் செய்வோம்'' என்று கூறினார்கள்

[62] (பின்னர் யூஸுஃப்) தன் (பணி) ஆட்களை நோக்கி ‘‘அவர்கள் கிரயமாகக் கொடுத்த பொருளை அவர்களுடைய (பொதி) மூட்டைகளில் (மறைத்து) வைத்துவிடுங்கள். அவர்கள் தங்கள் குடும்பம் சேர்ந்து (தானிய மூட்டைகளை அவிழ்க்கும்போது) அதை அறிந்துகொண்டு (அதை நம்மிடம் செலுத்தத்) திரும்பி வரக்கூடும்'' என்று கூறினார்

[63] (தானியம் வாங்கிய) அவர்கள் தம் தந்தையிடம் திரும்பி வந்த பொழுது ‘‘எங்கள் தந்தையே! (புன்யாமீனையும் நாங்கள் அழைத்துச் செல்லாவிட்டால்) எங்களுக்கு(த் தானியம்) அளப்பது தடுக்கப்பட்டுவிடும். ஆதலால், எங்கள் சகோதரனையும் எங்களுடன் அனுப்பிவைப்பீராக. நாங்கள் தானியம் வாங்கிக் கொண்டு நிச்சயமாக அவரையும் பாதுகாத்து வருவோம்'' என்று கூறினார்கள்

[64] (அதற்கு யஅகூப்) ‘‘இதற்கு முன்னர் இவருடைய சகோதரர் (யூஸுஃப்) விஷயத்தில் நான் உங்களை நம்பி (மோசம் போ)னது போல் இவர் விஷயத்திலும் நான் உங்களை நம்புவதா? (முடியாது.) பாதுகாப்பதில் அல்லாஹ் மிக்க மேலானவன்; அவனே அருள் புரிபவர்களிலெல்லாம் மிக்க அருளாளன்'' என்று கூறிவிட்டார்

[65] பின்னர், அவர்கள் தங்கள் சாமான் மூட்டைகளை அவிழ்த்தபொழுது அவர்கள் (கிரயமாகக்) கொடுத்த பொருள்கள் (அனைத்தும்) அவர்களிடமே திருப்பப்பட்டு விட்டதைக் கண்டு ‘‘எங்கள் தந்தையே! நமக்கு வேண்டியதென்ன? (பொருள்தானே!) இதோ! நாம் (கிரயமாகக்) கொடுத்த பொருள்கள் நம்மிடமே திருப்பப்பட்டு விட்டன. (புன்யாமீனையும் அழைத்துச் செல்ல அனுமதி தாருங்கள்.) நம் குடும்பத்திற்கு வேண்டிய தானியங்களை வாங்கி வருவோம். எங்கள் சகோதரனையும் காப்பாற்றி வருவோம். (அவருக்காகவும்) ஓர் ஒட்டக (சுமை) தானியத்தை அதிகமாகவே கொண்டு வருவோம். (கொண்டு வந்திருக்கும்) இது வெகு சொற்ப தானியம்தான்'' என்று கூறினார்கள்

[66] (அதற்கு அவர்களின் தந்தை) ‘‘உங்கள் அனைவரையுமே (ஒரு ஆபத்து) சூழ்ந்து கொண்டாலே தவிர நிச்சயமாக அவரை என்னிடம் நீங்கள் கொண்டு வருவீர்களென்று அல்லாஹ்வின் மீது நீங்கள் (அனைவரும்) எனக்குச் சத்தியம் செய்து கொடுக்கின்ற வரை நான் அவரை உங்களுடன் அனுப்பவே மாட்டேன்'' என்று கூறினார். அவர்கள் (அவ்வாறு) அவருக்குச் சத்தியம் செய்து கொடுக்கவே, அதற்கு அவர் ‘‘நாம் செய்துகொண்ட இவ்வுடன்பாட்டிற்கு அல்லாஹ்வே சாட்சியாக இருக்கிறான்'' என்று கூறினார். (பிறகு, புன்யாமீனை அழைத்துச் செல்ல அனுமதியளித்தார்)

[67] பின்னும் (அவர்களை நோக்கி) ‘‘என் அருமை மக்களே! (எகிப்தில் நீங்கள் அனைவரும்) ஒரே வாசலில் நுழையாதீர்கள். வெவ்வேறு வாசல்கள் வழியாக (தனித் தனியாக) நுழையுங்கள். அல்லாஹ்வின் கட்டளையில் எதையும் நான் உங்களுக்குத் தடுத்துவிட முடியாது. ஏனென்றால், எல்லா அதிகாரங்களும் அல்லாஹ்வுக்கே தவிர (வேறெவருக்கும்) இல்லை. நான் அவனிடமே பொறுப்பை ஒப்படைத்தேன். பொறுப்பை ஒப்படைக்க விரும்புபவர்களும் அவனிடமே பொறுப்பை ஒப்படைக்கவும்'' என்றார்

[68] (எகிப்துக்குச் சென்ற) அவர்கள் தங்கள் தந்தையின் கட்டளைப்படி (வெவ்வேறு பாதைகள் வழியாக) நுழைந்ததனால் யஅகூபினுடைய மனதிலிருந்த (ஓர்) எண்ணத்தை, அவர்கள் நிறைவேற்றியதைத் தவிர, அல்லாஹ்வுடைய (விதியில் உள்ள எந்த) ஒரு விஷயத்தையும் அவர்களை விட்டும் தடுக்கக்கூடியதாக இருக்கவில்லை. (ஏனென்றால், இறுதியாக புன்யாமீனை அவர்கள் விட்டுவிட்டு வரும்படியே நேர்ந்தது.) எனினும், நிச்சயமாக நாம் அவருக்கு (யூஸுஃபும் புன்யாமீனும் உயிருடன் இருக்கின்றனர் என்ற விஷயத்தை) அறிவித்திருந்ததால், அவர் (அதை) அறிந்தவராகவே இருந்தார். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (அதை) அறியாதவர்களாகவே இருந்தனர்

[69] அவர்கள் அனைவரும் யூஸுஃபிடம் சென்றபொழுது, அவர் தன் சகோதரன் புன்யாமீனை(த் தனியாக அழைத்து) அமர்த்திக்கொண்டு (அவரை நோக்கி) ‘‘நிச்சயமாக நான் உமது சகோதரன் (யூஸுஃப்)தான். எனக்கு இவர்கள் செய்தவற்றைப் பற்றி நீர் கவலைப்படாதீர்'' என்று (இரகசியமாகக்) கூறினார். (அன்றி, உம்மை நிறுத்திக்கொள்ள நான் ஓர் உபாயம் செய்வேன் என்றார்)

[70] பின்னர், அவர்களுக்கு வேண்டிய தானியங்களைத் தயார்படுத்தியபோது தன் சகோதர(ன் புன்யாமீ)னுடைய சுமையில் (ஒரு பொற்)குவளையை வைத்து விட்டார். பின்னர் (அவர்கள் விடை பெற்றுச் சிறிது தூரம் செல்லவே) ஒருவன் அவர்களை (நோக்கி) ‘‘ஓ! ஒட்டகக் கூட்டத்தார்களே! நிச்சயமாக நீங்கள் திருடர்கள்தான்'' என்று சப்தமிட்டான்

[71] அதற்கவர்கள், இவர்களை முன்னோக்கி வந்து ‘‘நீங்கள் எதை இழந்து விட்டீர்கள்?'' என்று கேட்டார்கள்

[72] அதற்கவர்கள், ‘‘அரசருடைய (அளவு) மரக்காலை நாங்கள் இழந்து விட்டோம். அதை எவர் (தேடிக்) கொடுத்த போதிலும் அவருக்கு ஓர் ஒட்டகைச் சுமை (தானியம் வெகுமதி) உண்டு. இதற்கு நானே பொறுப்பாளி'' என்று (அவர்களில் ஒருவன்) கூறினான்

[73] அதற்கு இவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் இவ்வூரில் விஷமம் செய்வதற்காக வரவில்லை என்பதை நீங்களும் நன்கறிவீர்கள். மேலும், நாங்கள் திருடுபவர்களும் அல்ல'' என்று கூறினார்கள்

[74] அதற்கு அவர்கள் ‘‘நீங்கள் (இதில்) பொய்யர்களாக இருந்தால் அதற்குரிய தண்டனை என்ன?'' என்று கேட்டனர்

[75] அதற்கவர்கள் ‘‘எவனுடைய சுமையில் அது காணப்படுகிறதோ அவனே அதற்குரிய தண்டனையாவான். (ஆகவே, அவனை அடிமையாக வைத்துக் கொள்ளலாம். திருடும்) அநியாயக்காரர்களுக்கு இவ்வாறே நாங்கள் தண்டனை அளிப்போம்'' என்று கூறினார்கள்

[76] பின்னர் தன் சகோதர(ன் புன்யாமீ)னின் பொதியி(னைச் சோதிப்பத)ற்கு முன்னதாக மற்றவர்களின் பொதிகளைச் சோதிக்க ஆரம்பித்தார். (அவற்றில் அது கிடைக்காமல் போகவே) பின்னர் தன் சகோதரனின் மூட்டையிலிருந்து அதை வெளிப்படுத்தினார். (தன் சகோதரனை எடுத்துக் கொள்ள) யூஸுஃபுக்கு இந்த உபாயத்தை நாம் கற்பித்தோம். அல்லாஹ் நாடினாலே தவிர அவர் தன் சகோதரனை எடுத்துக்கொள்ள (எகிப்து) அரசரின் சட்டப்படி முடியாதிருந்தது. நாம் விரும்பியவர்களின் பதவிகளை உயர்த்துகிறோம். ஒவ்வொரு கல்விமானுக்கும் மேலான ஒரு கல்விமான் இருக்கிறான். (ஆனால், நாமோ அனைவரையும்விட மேலான கல்விமான்)

[77] (புன்யாமீனின் பொதியில் அளவு பாத்திரத்தைக் கண்ட யூஸுஃபின் மற்ற சகோதரர்கள்) அவன் (அதைத்) திருடியிருந்தால் அவனுடைய சகோதரன் (யூஸுஃபும்) இதற்கு முன் நிச்சயமாகத் திருடியே இருப்பான் என்று (எப்ரூ மொழியில் தங்களுக்குள்) கூறிக்கொண்டனர். (இதைச் செவியுற்ற எப்ரூ மொழி அறிந்த) யூஸுஃப் (அதன் உண்மையை) அவர்களுக்கு வெளியாக்காது, அதைத் தன் மனத்திற்குள் வைத்துக் கொண்டு ‘‘நீங்கள் மிகப் பொல்லாதவர்கள். (அவருடைய சகோதரர் திருடியதாக) நீங்கள் கூறுகிறீர்களே. அதை அல்லாஹ் நன்கறிவான்'' என்று கூறிவிட்டார்

[78] அதற்கவர்கள் (யூஸுஃபை நோக்கி எகிப்தின் அதிபதியாகிய) ‘‘அஜீஸே! (அவரைப் பற்றி கவலைப்படக்கூடிய) முதிர்ந்த வயதுடைய தந்தை அவருக்கு உண்டு. (நீர் அவரைப் பிடித்துக் கொண்டால் இத்துக்கத்தால் அவர் இறந்துவிடுவார்.) ஆகவே, அவருக்குப் பதிலாக எங்களில் ஒருவரை நீர் எடுத்துக்கொள்வீராக. நிச்சயமாக நாம் உங்களைப் பெரும் உபகாரிகளில் ஒருவராகவே காண்கிறோம்'' என்று கூறினார்கள்

[79] அதற்கவர், எவரிடம் நம் பொருள் காணப்பட்டதோ அவரைத் தவிர (மற்றெவரையும்) நாம் பிடித்து வைப்பதை விட்டு அல்லாஹ் எங்களைக் காப்பானாக! (மற்றெவரையும் பிடித்துக்கொண்டால்) நிச்சயமாக நாம் பெரும் அநியாயக்காரர்கள் ஆகிவிடுவோம்'' என்று கூறிவிட்டார்

[80] அவரிடம் அவர்கள் நம்பிக்கையிழந்து விடவே, அவர்கள் (தங்களுக்குள்) தனித்து ஆலோசனை செய்தார்கள். அவர்களில் பெரியவர் (மற்றவர்களை நோக்கி) ‘‘உங்கள் தந்தை உங்களிடம் அல்லாஹ்வின் மீது உறுதியாக சத்தியம் வாங்கியிருப்பதை நீங்கள் அறியவில்லையா? இதற்கு முன்னர் நீங்கள் யூஸுஃப் விஷயத்தில் செய்த துரோகம் வேறு இருக்கிறது. ஆகவே, என் தந்தை எனக்கு அனுமதியளிக்கும் வரை அல்லது அல்லாஹ் எனக்கு ஒரு தீர்ப்பளிக்கும் வரை இங்கிருந்து நான் அகலவே மாட்டேன்; தீர்ப்பளிப்பவர்களில் எல்லாம் அவன்தான் மிக்க மேலானவன்'' என்று கூறினார்

[81] (மேலும், அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் (அனைவரும்) உங்கள் தந்தையிடம் திரும்பச் சென்று, எங்கள் தந்தையே! உங்கள் மகன் (புன்யாமீன்) மெய்யாகவே திருடிவிட்டான். உண்மையாகவே எங்களுக்குத் தெரிந்ததையே தவிர (வேறொன்றும்) கூறவில்லை. மறைவாக நடைபெற்ற (இக்காரியத்)தில் இருந்து (அவரை) பாதுகாத்துக் கொள்ள எங்களால் முடியாமலாகி விட்டது என்றும்

[82] (நாங்கள் சொல்வதை நீர் நம்பாவிட்டால்) நாங்கள் சென்றிருந்த அவ்வூராரையும் எங்களுடன் வந்த ஒட்டகக் கூட்டத்தினரையும் நீர் கேட்டறிந்து கொள்வீராக. நிச்சயமாக நாங்கள் உண்மையே கூறுகிறோம்'' (என்று சொல்லும்படியாகக் கூறி அவர்களை அனுப்பிவிட்டு, தான் மட்டும் யூஸுஃபிடமே இருந்து கொண்டார்)

[83] (ஊர் திரும்பிய மற்ற சகோதரர்கள் இதைத் தங்கள் தந்தை யஅகூப் நபியிடம் கூறவே, அதற்கவர் ‘‘நீங்கள் கூறுவது சரியல்ல!) மாறாக, உங்கள் மனம், ஒரு (தவறான) விஷயத்தைச் செய்யும்படி உங்களைத் தூண்டிவிட்டது. ஆகவே, (எவரையும் குறைகூறாது) சகித்துக் கொள்வதே மிக்க நன்று. அல்லாஹ் அவர்கள் அனைவரையும் என்னிடம் கொண்டு வந்து சேர்த்துவிடுவான். நிச்சயமாக அவன் அனைத்தையும் அறிந்தவன், ஞானமுடையவன் ஆவான்'' என்று கூறிவிட்டு

[84] அவர்களை விட்டுவிலகிச் சென்று, ‘‘யூஸுஃபைப் பற்றி என் துக்கமே!'' என்று அவர் சப்தமிட்டார். அவரது இரு கண்களும் துக்கத்தால் (அழுதழுது) வெளுத்துப் பூத்துப்போயின. பின்னர், அவர் தன் கோபத்தை விழுங்கி அடக்கிக் கொண்டார்

[85] (இந்நிலைமையைக் கண்ட அவருடைய மக்கள் அவரை நோக்கி,) ‘‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீர் யூஸுஃபை நினைத்து இளைத்து (உருகி) இறந்துவிடும் வரை (அவருடைய எண்ணத்தை) விடமாட்டீர்'' என்று கடிந்து கூறினார்கள்

[86] அதற்கவர் ‘‘என் கவலையையும் துக்கத்தையும் அல்லாஹ்விடமே நான் முறையிடுகிறேன். நீங்கள் அறியாதவற்றையும் அல்லாஹ்வி(ன் அருளி)னால் நான் அறிந்திருக்கிறேன்

[87] என் மக்களே! நீங்கள் சென்று யூஸுஃபையும், அவரது சகோதரரையும் தேடிப்பாருங்கள். அல்லாஹ்வின் அருளைப்பற்றி நீங்கள் நம்பிக்கை இழந்து விடாதீர்கள்; நிச்சயமாக (நன்றிகெட்ட) நம்பிக்கையற்றவர்களைத் தவிர (மற்றெவரும்) அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழந்துவிட மாட்டார்கள்'' என்று(ம், பின்னும் ஒருமுறை எகிப்துக்குச் சென்று தேடும்படியும்) கூறினார்

[88] பிறகு, இவர்கள் (எகிப்துக்கு வந்து) யூஸுஃபிடம் சென்று அவரை நோக்கி (‘‘மிஸ்ரின் அதிபதியாகிய) அஜீஸே! எங்களையும் எங்கள் குடும்பத்தையும் (பஞ்சத்தின்) கொடுமை பிடித்துக் கொண்டது. (எங்களிடமிருந்த) ஒரு அற்பப்பொருளையே நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். (அதைக் கவனியாது) எங்களுக்கு வேண்டிய தானியத்தை முழுமையாக அளந்து கொடுத்து மேற்கொண்டும் எங்களுக்குத் தானமாகவும் கொடுத்தருள்வீராக! நிச்சயமாக அல்லாஹ் தானம் செய்பவர்களுக்கு நல்ல பிரதிபலன் அளிப்பான்'' என்று கூறினார்கள்

[89] (அச்சமயம் அவர் அவர்களை நோக்கி,) ‘‘நீங்கள் அறியாமையில் ஆழ்ந்து கிடந்தபோது யூஸுஃபையும் அவருடைய சகோதரரையும் என்ன செய்தீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா?'' என்று கேட்டார்

[90] அதற்கவர்கள் (திடுக்கிட்டு) ‘‘மெய்யாகவே நீர் யூஸுஃபாக இருப்பீரோ?'' என்று கேட்டார்கள். அதற்கவர் ‘‘நான்தான் யூஸுஃப்! இவர் என் சகோதரர். நிச்சயமாக அல்லாஹ் எங்கள் மீது பேரருள் புரிந்திருக்கிறான். ஏனென்றால், நிச்சயமாக எவர் இறை அச்சமுடையவராக இருந்து, சிரமங்களையும் சகித்துக் கொள்கிறாரோ (அத்தகைய) நன்மை செய்தவர்களின் கூலியை நிச்சயமாக அல்லாஹ் வீணாக்கி விடுவதில்லை'' என்று கூறினார்

[91] அதற்கவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் (உமக்குப் பெரும்) தீங்கிழைத்தோம். ஆயினும் நிச்சயமாக அல்லாஹ் எங்களைவிட உம்மை மேன்மையாக்கி வைத்திருக்கிறான். (எங்களுக்கு நன்மை செய்ய அல்லாஹ் உங்களுக்குச் சந்தர்ப்பமும் அளித்திருக்கிறான்)'' என்று கூறினார்கள்

[92] அதற்கவர் ‘‘இன்றைய தினம் உங்கள் மீது ஒரு குற்றமும் இல்லை. அல்லாஹ்(வும்) உங்கள் குற்றங்களை மன்னித்து விடுவானாக! அவன் கருணையாளர்களிலெல்லாம் மகா கருணையாளன்'' என்று கூறினார்

[93] ‘‘நீங்கள் என் இந்தச் சட்டையைக் கொண்டு போய் என் தந்தை முகத்தில் போடுங்கள். (அதனால் உடனே) அவர் (இழந்த) பார்வையை அடைந்து விடுவார். பின்னர் நீங்கள் உங்கள் குடும்பத்திலுள்ள அனைவரையும் அழைத்துக் கொண்டு என்னிடம் வாருங்கள்'' என்று கூறி (அனுப்பி)னார்

[94] அவர்களின் ஒட்டக வாகனங்கள் (எகிப்திலிருந்து) பிரியவே, அவர்களின் தந்தை (‘‘இதோ) யூஸுஃபுடைய வாடையை நிச்சயமாக நான் நுகர்கிறேன்; (இதனால்) என்னை நீங்கள் பைத்தியக்காரன் என்று எண்ணாமலிருக்க வேண்டுமே!'' என்றார்

[95] (இதைச் செவியுற்ற அவருடைய மக்கள்) ‘‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! மெய்யாகவே நீர் உமது பழைய தவறான எண்ணத்தில்தான் இருக்கிறீர்'' என்று கூறினார்கள்

[96] அச்சமயம் (யூஸுஃபைப் பற்றி) நற்செய்தி கூறுபவரும் வந்து, (யூஸுஃபுடைய சட்டையை) அவர் (தந்தையின்) முகத்தில் போடவே, அவர் இழந்த (தன் கண்) பார்வையை அடைந்து ‘‘(யூஸுஃப் உயிரோடிருப்பதைப் பற்றி) நீங்கள் அறியாத வற்றையெல்லாம் அல்லாஹ்வின் அருளைக் கொண்டு நிச்சயமாக நான் அறிவேன் என்பதாக (முன்னர்) நான் உங்களுக்குக் கூறவில்லையா?'' என்று கேட்டார்

[97] (அதற்குள் எகிப்து சென்றிருந்த அவருடைய மற்ற பிள்ளைகளும் வந்து) ‘‘எங்கள் தந்தையே! எங்கள் பாவங்களை மன்னிக்கும்படி நீர் பிரார்த்திப்பீராக! மெய்யாகவே நாங்கள் பெரும் தவறிழைத்துவிட்டோம்'' என்று (அவர்களே) கூறினார்கள்

[98] அதற்கவர், நான் என் இறைவனிடம் பின்னர் உங்களுக்காக மன்னிப்பைக் கோருவேன். நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவன், மிக்க கருணையுடையவன் ஆவான்'' என்று கூறினார்

[99] (பின்னர், குடும்பத்துடன் கன்ஆனிலிருந்த) அவர்கள் யூஸுஃபிடம் (எகிப்துக்கு) வந்தபொழுது அவர் தன் தாய் தந்தையை (எகிப்தின் எல்லையில் காத்திருந்து) மிக மரியாதையுடன் வரவேற்று ‘‘(அல்லாஹ்வின் அருளால்) நீங்கள் எகிப்தில் நுழையுங்கள்! அல்லாஹ் நாடினால் நீங்கள் அச்சமற்றவர்களாய் இருப்பீர்கள்'' என்று கூறினார்

[100] பின்னர் அவர் தன் தாயையும், தந்தையையும் சிம்மாசனத்தின் மீது உயர்த்தி (அமர்த்தி)னார். (எகிப்தின் அதிபதியாக இருந்த) அவருக்கு (அக்காலத்திய முறைப்படி) அவர்கள் அனைவரும் சிரம் பணிந்து மரியாதை செலுத்தினார்கள். அச்சமயம் யூஸுஃப் (தன் தந்தையை நோக்கி) ‘‘என் தந்தையே! முன்னர் நான் கண்ட கனவின் வியாக்கியானம் இதுதான். என் இறைவன் அதை உண்மையாக்கி விட்டான். (எவருடைய சிபாரிசுமின்றியே) சிறைக்கூடத்திலிருந்து என்னை அவன் வெளியேற்றியதுடன் எனக்கும், என் சகோதரர்களுக்குமிடையில் ஷைத்தான் பிரிவினையை உண்டுபண்ணிய பின்னரும் உங்கள் அனைவரையும் பாலைவனத்திலிருந்து என்னிடம் கொண்டு வந்து ஒன்று சேர்த்ததன் மூலம் (என் இறைவன்) நிச்சயமாக என்மீது பேருபகாரம் புரிந்திருக்கிறான். நிச்சயமாக என் இறைவன், தான் விரும்பியவர்கள் மீது உள்ளன்புடையவன். நிச்சயமாக அவன்தான் (அனைத்தையும்) நன்கறிந்தவன், மிக்க ஞானமுடையவன் ஆவான்'' என்றார்

[101] ‘‘என் இறைவனே! நிச்சயமாக நீ எனக்கு ஓர் ஆட்சியையும் தந்தருள்புரிந்து, கனவுகளின் வியாக்கியானங்களையும் எனக்குக் கற்பித்தாய். வானங்களையும் பூமியையும் நீதான் படைத்தாய். இம்மையிலும், மறுமையிலும் என்னை பாதுகாப்பவனும் நீதான். முற்றிலும் (உனக்கு) வழிப்பட்டவனாகவே என்னை நீ கைப்பற்றிக் கொள்வாயாக! நல்லடியார் கூட்டத்திலும் என்னை நீ சேர்த்து விடுவாயாக!'' (என்று பிரார்த்தித்தார்)

[102] (நபியே) இது (நீர் அறியாத) மறைவான விஷயங்களில் உள்ளதாகும். அவர்கள் சூழ்ச்சி செய்து (யூஸுஃபைக் கிணற்றில் தள்ள வேண்டுமென்ற) தங்கள் திட்டத்தை வகுத்த பொழுது நீர் அவர்களுடன் இருக்கவில்லை. (எனினும்) இவற்றை நாம் உமக்கு வஹ்யி மூலமே அறிவித்தோம்

[103] நீங்கள் எவ்வளவுதான் விரும்பியபோதிலும் (அந்த)மனிதரில் பெரும் பாலானவர்கள் (உம்மை நபி என்று) நம்பவே மாட்டார்கள்

[104] இதற்காக நீர் அவர்களிடத்தில் ஒரு கூலியும் கேட்பது இல்லை. உலகத்தார் அனைவருக்கும் இது ஒரு நல்ல படிப்பினையே தவிர வேறில்லை

[105] (இவ்வாறே) வானங்களிலும் பூமியிலும் எத்தனையோ அத்தாட்சிகள் இருக்கின்றன. அவற்றின் முன் அவர்கள் (அனு தினமும்) செல்கின்றனர். எனினும், அவர்கள் அவற்றை (சிந்திக்காது) புறக்கணித்தே விடுகின்றனர்

[106] அவர்களில் பெரும்பாலானவர்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதில்லை, அவர்கள் அவனுக்கு இணைவைத்தே தவிர

[107] (அவர்களைச்) சூழ்ந்து கொள்ளக்கூடிய அல்லாஹ்வின் வேதனை அவர்களிடம் வராதென்றோ அல்லது அவர்கள் அறியாத நிலைமையில் திடுகூறாய் (அவர்களுடைய) முடிவு காலம் அவர்களுக்கு வராதென்றோ அவர்கள் அச்சமற்றிருக்கின்றனரா

[108] (நபியே!) கூறுவீராக: ‘‘இதுவே எனது (நேரான) வழி. நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன். தெளிவான ஆதாரத்தின் மீதே நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கிறோம். (இணை துணைகளை விட்டு) அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன். ஆகவே, நான் (அவனுக்கு) இணைவைப்பவர்களில் உள்ளவன் இல்லை

[109] உமக்கு முன்னர் பற்பல ஊராருக்கும் நாம் அனுப்பிய தூதர்கள் அவ்வூர்களிலிருந்த ஆடவர்களே தவிர வேறில்லை. எனினும், அவர்களுக்கு (நம் கட்டளைகளை) வஹ்யி மூலம் அறிவித்தோம். இவர்கள் பூமியில் பிரயாணம் செய்யவில்லையா? (அவ்வாறு செய்தால்) இவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதை இவர்கள் கண்டு கொள்வார்கள். மறுமையின் வீடுதான் இறையச்சம் உடையவர்களுக்கு மிக்க மேலானது. இவ்வளவுகூட நீங்கள் அறிந்து கொள்ள வேண்டாமா

[110] நம் தூதர்கள் (தாங்கள்) பொய்யாக்கப்பட்டு விட்டதாக நினைத்து, நம்பிக்கை இழந்து விடும்வரை (அவ்வக்கிரமக்காரர்களை நாம் விட்டு வைத்தோம்.) பின்னர், நம் உதவி அவர்களை வந்தடைந்தது. நாம் நாடியவர்கள் பாதுகாக்கப்பட்டனர். குற்றம் செய்யும் மக்களை விட்டு நம் வேதனை நீக்கப்படாது

[111] அறிவுடையவர்களுக்கு (நபிமார்களாகிய) இவர்களுடைய சரித்திரங்களில் நல்லதோர் படிப்பினை நிச்சயமாக இருக்கிறது. (இது) பொய்யான கட்டுக் கதையல்ல; ஆனால், அவர்களிடமுள்ள வேதத்தை உண்மையாக்கி வைத்து ஒவ்வொரு விஷயத்தையும் விவரித்துக் கூறுவதாக இருக்கிறது. மேலும், நம்பிக்கையாளர்களுக்கு நேரான வழியாகவும் ஓர் அருளாகவும் இருக்கிறது

அர்ரஃது

Surah 13

[1] அலிஃப் லாம் மீம் றா. இவை இவ்வேதத்தின் (சில) வசனங்களாகும். (நபியே!) உமது இறைவனால் உமக்கு இறக்கப்படும் இது முற்றிலும் உண்மையானது. எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) நம்புவதில்லை

[2] வானங்களை தூணின்றியே உயர்த்தியவன் அல்லாஹ்வே! அதை நீங்கள் (உங்கள் கண்களால்) காண்கிறீர்கள். அன்றி அர்ஷின் மீது அவன் (தன் மகிமைக்குத்தக்கவாறு) உயர்ந்து விட்டான். அவனே சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கிறான். (இவை) ஒவ்வொன்றும் (அவற்றிற்குக்) குறிப்பிட்ட கால திட்டப்படி நடந்து வருகிறது. (அவற்றில் நடைபெறும்) சகல காரியங்களையும் அவனே திட்டமிடுகிறான். நீங்கள் (இறந்த பின்னர் உயிர்பெற்று) உங்கள் இறைவனைச் சந்திப்பதை உறுதி கொள்வதற்காக (தன்) வசனங்களை (இவ்வாறு உங்களுக்கு) விவரித்து அறிவிக்கிறான்

[3] அவன்தான் பூமியை விரித்து, அதில் உறுதியான (பெரிய பெரிய) மலைகளையும் (நீண்ட) ஆறுகளையும் அமைத்தான். ஒவ்வொரு கனிவர்க்கத்(தின் மரங்களையும் ஆண் பெண் கொண்ட ஜ)தை ஜதைகளாக்கினான். இரவைக் கொண்டு பகலை மூடுகிறான். சிந்திக்கக்கூடிய மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன

[4] பூமியில் பல தொகுதிகளை சேர்ந்தாற்போல் அமைத்து (அதில்) திராட்சை, தானியப்பயிர் நிலங்களையும், பேரீச்சந்தோப்புகளையும் ஆக்கினான்; கிளைகள் உள்ளதும், கிளைகள் இல்லாததுமான மரங்களையும் (உற்பத்தி செய்கிறான். இவை அனைத்திற்கும்) ஒரேவித நீர் புகட்டப்பட்டபோதிலும், சிலவற்றைவிட சிலவற்றை சுவையில் நாம் மேன்மையாக்கி வைத்தோம். இதில், அறிவுடைய மக்களுக்கு நிச்சயமாக பல அத்தாட்சிகள் இருக்கின்றன

[5] (நபியே! இந்நிராகரிப்பவர்கள் உம்மைப் பொய்யாக்குவது பற்றி) நீர் ஆச்சரியப்படுவதாயின், அவர்கள் கூறுவது (இதை விட) மிக்க ஆச்சரியமானதே! (ஏனென்றால்) ‘‘நாம் (இறந்து உக்கி) மண்ணாய்ப் போனதன் பின்னரா புதிதாக நாம் படைக்கப்பட்டு விடுவோம்?'' என்று கூறுகின்ற இவர்கள், தங்களைப் படைத்த இறைவனையே நிராகரிக்கின்றனர். (ஆகவே, மறுமையில்) இவர்களுடைய கழுத்தில் விலங்கிடப்படும். இவர்கள் நரகவாசிகளே! அதில் என்றென்றும் இவர்கள் தங்கிவிடுவார்கள்

[6] (நபியே!) நன்மை வருவதற்கு முன்னதாகவே தீங்கை வரவைத்துக்கொள்ள இவர்கள் உம்மிடம் அவசரப்படுகின்றனர். இத்தகைய பல விஷயங்கள் இவர்களுக்கு முன்னரும் நிச்சயமாக நிகழ்ந்தே இருக்கின்றன. நிச்சயமாக உமது இறைவன் மனிதர்களின் குற்றங்களை மன்னிப்பவனாக இருந்த போதிலும், நிச்சயமாக உமது இறைவன் வேதனை செய்வதிலும் மிகக் கடுமையானவன் ஆவான்

[7] ‘‘(நபியே!) இந்நிராகரிப்பவர்கள் (உம்மைப் பற்றி) இவர் மீது இவருடைய இறைவனி டமிருந்து (நாம் விரும்புகிறவாறு) ஓர் அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?'' என்று கூறுகின்றனர். (நபியே!) நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவரே தவிர வேறில்லை; (ஆகவே, அவர்கள் விரும்பியவாறெல்லாம் செய்ய வேண்டுவது உமது கடமை இல்லை. இவ்வாறே) ஒவ்வொரு வகுப்பாருக்கும் (ஒரு) வழிகாட்டி வந்திருக்கிறார்

[8] ஒவ்வொரு பெண்ணும் (கர்ப்பத்தில்) சுமந்து கொண்டிருப்ப(து ஆணா, பெண்ணா என்ப)தையும் அல்லாஹ் நன்கறிகிறான். கர்ப்பப்பைகள் (கர்ப்பம் தரிக்கும் சமயம்) சுருங்குவதையும், (பிரசவிக்கும் பொழுது) அவை விரிவதையும் அவன் அறிகிறான். (கர்ப்பங்களிலுள்ள) ஒவ்வொன்றிலும் (அக்கர்ப்பங்களில் தங்கியிருக்க வேண்டிய காலம் ஆகியவை) அவனிடம் குறிப்பிடப்பட்டே இருக்கின்றன

[9] (இது மட்டுமா! எல்லா) மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அவன் நன்கறிந்தவன்; அவன் மிகப் பெரியவன்; மிக மிக உயர்ந்தவன்

[10] உங்களில் எவரேனும் (தன்) வார்த்தையை ரகசியமாக வைத்துக் கொண்டாலும் அல்லது அதை பகிரங்கமாகக் கூறினாலும் (அவனுக்கு இரண்டும்) சமமே! (அவ்வாறே உங்களில்) எவரும் இரவில் தான் செய்வதை மறைத்துக்கொண்டாலும் அல்லது பகலில் பகிரங்கமாகச் செய்தாலும் (அனைத்தும் அவனுக்குச் சமமே! அனைவரின் செயலையும் அவன் நன்கறிவான்)

[11] (மனிதன் எந்நிலைமையிலிருந்த போதிலும்) அவனுக்கு முன்னும் பின்னும் தொடர்ந்து வரக்கூடிய (வானவர்கள்) பலர் இருக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வுடைய கட்டளையைக் கொண்டு அவனை பாதுகாக்கிறார்கள். மனிதர்கள் (தங்கள் தீய நடத்தையை விட்டு) தங்களை மாற்றிக்கொள்ளாத வரை நிச்சயமாக அல்லாஹ்வும் (அவர்களுக்குப் புரிந்த அருளை) மாற்றி விடுவதில்லை. அல்லாஹ் ஒரு வகுப்பாரை வேதனை செய்ய நாடினால், அதைத் தடுப்பவர்கள் ஒருவரும் இல்லை; அவர்களுக்கு உதவி செய்பவர்களும் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை

[12] (உங்களுக்கு) பயத்தையும் ஆதரவையும் தரக்கூடிய மின்னலை அவனே உங்கள் முன் பிரகாசிக்கச் செய்கிறான். (மழையைச் சுமந்த) பளுவான மேகங்களையும் அவனே கிளப்புகிறான்

[13] இடிகளும் மற்ற வானவர்களும் அவனுக்குப் பயந்து அவனைத் துதி செய்து புகழ்கின்றனர். அவனே இடிகளை விழச்செய்து, அதைக்கொண்டு அவன் நாடியவர்களைத் தாக்குகிறான். (இவ்வாறு இருந்தும்) அவர்கள் அல்லாஹ்வை பற்றி (உங்களிடம்) தர்க்கிக்கின்றனர். அவனோ (அவர்களைத் தண்டிக்கக் கருதினால் அவர்கள்) நழுவாது மிக்க பலமாகப் பிடித்துக் கொள்பவன்

[14] (நாம் பிரார்த்தனை செய்து) உண்மையாக அழைக்கத் தகுதி உடையவன் அவனே. எவர்கள் அவனையன்றி (மற்ற பொய்யான தெய்வங்களைப் பிரார்த்தனை செய்து) அழைக்கிறார்களோ அவர்களுக்கு, அவை எதையும் கொடுத்து விடாது. (அல்லாஹ்வைத் தவிர மற்றவற்றை அழைப்பவர்களின் உதாரணம்:) தண்ணீர் (தானாகவே) தன் வாயில் சென்றுவிட வேண்டுமென்று கருதி, தன் இரு கைகளையும் (நீட்டி அள்ளிக் குடிக்காமல்) விரித்துக் கொண்டே இருப்பவனைப் போல் இருக்கிறது. (அதை அவன் தன் கையால் அள்ளிக் குடிக்கும் வரை அவனுடைய) வாயை அது அடைந்துவிடாது. (பொய்யான தெய்வங்களிடம்) நிராகரிப்பவர்கள் செய்யும் பிரார்த்தனை (இத்தகைய) வழிகேடாகவே இருக்கிறது

[15] வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் (அவை) விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அல்லாஹ்வுக்குச் சிரம்பணிந்து வழிபட்டே தீரும். காலையிலும் மாலையிலும் அவற்றின் நிழல்களும் (அவனுடைய கட்டளைக்கு வழிப்பட்டே முன் பின் செல்கின்றன)

[16] (நபியே! அவர்களை நோக்கி) ‘‘வானங்களையும், பூமியையும் படைத்து நிர்வகிப்பவன் யார்?'' என்று கேட்பீராக. (இதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன!) நீரே (அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ்தான்'' என்று கூறுவீராக. அவ்வாறிருக்க ‘‘அவனை அன்றி (பொய்யான தெய்வங்களை) பாதுகாவலர்களாக நீங்கள் எடுத்துக் கொள்கிறீர்களா? அவை தங்களுக்கே ஒரு நன்மையும் தீமையும் செய்ய சக்தியற்றவைகளாய் இருக்கின்றன'' என்றும் கூறுவீராக. (இன்னும், அவர்களை நோக்கி) ‘‘குருடரும், பார்வை உடையவரும் சமமாவாரா? அல்லது இருளும் பிரகாசமும் சமமாகுமா?'' என்று கேட்பீராக. அல்லது ‘‘அவர்கள் (இறைவனுக்கு) இணையாக்கிக் கொண்டிருக்கும் தெய்வங்கள் அல்லாஹ் படைத்திருப்பதைப் போல் எதையும் படைத்திருக்கின்றனவா?'' (என்றும் கேட்பீராக.) அவ்வாறாயின் (இந்த உலகைப்) படைத்தவன் (யாரென்பதில்) அவர்களுக்குள் சந்தேகமே ஏற்பட்டிருக்கலாம். (அவ்வாறும் இல்லையே! ஆகவே, அவர்களை நோக்கி) கூறுவீராக: (இவ்வுலகிலுள்ள) ஒவ்வொன்றையும் படைப்பவன் அல்லாஹ்தான். அவன் ஒருவனே! (அவனுக்கு இணை துணையில்லை.) அவனே (உலகிலுள்ள அனைத்தையும்) அடக்கி ஆளுகிறான்

[17] ‘‘அவன்தான் மேகத்திலிருந்து மழையைப் பொழிவிக்கிறான். (அது பொழிகின்ற) நீருக்குத் தக்கவாறு (சிறிய பெரிய) ஓடைகளாக ஓடுகிறது. (அவ்வோடைகளில்) வெள்ளம் நுரைகளை மேல் சுமந்து செல்கிறது. இவ்வாறே ஆபரணங்களுக்காகவோ அல்லது மற்ற சாமான்களுக்காகவோ (உலோகங்களை) நெருப்பில் வைத்து உருக்கும் பொழுதும் அதைப் போன்ற (அழுக்கு) நுரை மிதக்கிறது. சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் அல்லாஹ் இதை உதாரணமாகக் கூறுகிறான். ஏனெனில், (அழுக்கு) நுரையோ பயனற்றதாக (இருப்பதால்) அழிந்து (மறைந்து) விடுகிறது. மனிதனுக்குப் பயனளிக்கக்கூடியவையோ பூமியில் (சேர்த்து வைக்கப்பட்டு) நிலையாக இருக்கின்றன. இவ்வாறே (நம்பிக்கை அற்றவர்களை அழுக்கு நுரைக்கும், நம்பிக்கையாளர்களை பூமியில் சேர்த்து வைக்கப்படும் பயன்தரும் பொருள்களுக்கும் ஒப்பிட்டு) அல்லாஹ் (பல) உதாரணங்களை கூறுகிறான்

[18] எவர்கள் தங்கள் இறைவனுடைய அழைப்பை ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களுக்கு (அது) முற்றிலும் நன்மையாகும். எவர்கள் அவன் அழைப்புக்குப் பதில் கூறவில்லையோ அது அவர்களுக்கு(க் கேடாகும். ஏனென்றால்) பூமியிலுள்ள பொருள்கள் அனைத்தும் சொந்தமாக இருந்து, அத்துடன் அதைப் போன்றதொரு பாகமும் (அவர்களிடம்) இருந்தால் (மறுமையில் அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய) வேதனையிலிருந்து தப்பித்துக்கொள்ள இவை அனைத்தையும் தங்களுக்குப் பிரதியாகக் கொடுத்து விடவே விரும்புவார்கள். (எனினும், அது ஆகாத காரியம்!) மேலும், அவர்களிடம் மிகக் கடினமாகவே கேள்வி கணக்குக் கேட்கப்படும். அவர்களுடைய தங்குமிடம் நரகம்தான். அது தங்கும் இடங்களில் மிகக் கெட்டது

[19] உமது இறைவனால் உமக்கு இறக்கப்பட்ட (வேதத்)தை (அது) உண்மைதான் என்று உறுதியாக நம்பக்கூடியவன் (பார்வையிழந்த) குருடனுக்கு ஒப்பானவனா? (ஆகமாட்டான்.) நிச்சயமாக (இதைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுபவரெல்லாம் அறிவுடையவர்கள்தான்

[20] அவர்கள் (எத்தகையவர்கள் என்றால்) அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுவார்கள். இன்னும் (தாங்கள்) செய்த உடன்படிக்கையை முறித்துவிட மாட்டார்கள்

[21] மேலும், அவர்கள் அல்லாஹ் சேர்த்து வைக்கும்படி கட்டளையிட்டதைச் சேர்த்தும் வைப்பார்கள்; தங்கள் இறைவனுக்கு பயந்தும் நடப்பார்கள்; (மறுமையில்) கேட்கப்படும் கொடிய கேள்விகளைப் பற்றி (எந்நேரமும்) பயந்துகொண்டும் இருப்பார்கள்

[22] இன்னும், அவர்கள் தங்கள் இறைவனின் முகத்தை நாடி (எத்தகைய சிரமத்தையும்) பொறுமையுடன் சகித்துக் கொள்வார்கள்; தொழுகையையும் நிலைநிறுத்துவார்கள்; நாம் அவர்களுக்கு அளித்தவற்றை ரகசியமாகவும் வெளிப்படையாகவும் (நல்வழியில்) செலவு செய்வார்கள்; நன்மையைக் கொண்டே தீமையைத் தடுத்து விடுவார்கள். இவர்களுக்கு (மறுமையில்) நல்ல முடிவு உண்டு. (அதாவது நிலையான சொர்க்கம் கூலியாகக் கிடைக்கும்)

[23] நிலையான சொர்க்கங்களில் இவர்களும், நன்னடத்தையுடைய இவர்களுடைய தந்தைகளும், இவர்களுடைய மனைவிகளும், இவர்களின் சந்ததிகளும் நுழைந்து விடுவார்கள். ஒவ்வொரு வாசலிலிருந்தும் வானவர்கள் இவர்களிடம் வந்து

[24] (இவர்களை நோக்கி) ‘‘நீங்கள் (உங்கள் வாழ்க்கையில் சிரமங்களைப்) பொறுமையுடன் சகித்துக் கொண்டதன் காரணமாக உங்களுக்கு ஈடேற்றம் (ஸலாம்) உண்டாகட்டும்! (உங்கள் இந்த) இறுதி வீடு மிக்க நல்லதாயிற்று'' (என்று கூறுவார்கள்)

[25] எவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை அதை உறுதிப்படுத்திய பின்னரும் முறித்து விடுகிறார்களோ அவர்களுக்கும், எவர்கள் அல்லாஹ் சேர்த்து வைக்கும்படி ஏவியதைப் பிரித்து விடுகிறார்களோ அவர்களுக்கும், எவர்கள் பூமியில் விஷமம் செய்து கொண்டு அலைகிறார்களோ அவர்களுக்கும் (இறைவனுடைய) சாபம்தான் கிடைக்கும். அவர்களுக்கு மிகக் கெட்ட வீடும் (தயார் படுத்தப்பட்டு) இருக்கிறது

[26] அல்லாஹ், தான் விரும்பியவர்களுக்கு ஏராளமாகக் கொடுக்கிறான்; (தான் விரும்பியவர்களுக்கு) குறைத்தும் கொடுக்கிறான். எனினும், (நிராகரிப்பவர்கள்) இவ்வுலக வாழ்க்கையைக் கொண்டே மகிழ்ச்சியடைகின்றனர். இவ்வுலக வாழ்க்கையோ மறுமையுடன் (ஒப்பிட்டுப் பார்த்தால்) அற்ப சுகமே தவிர வேறில்லை

[27] (நபியே!) இந்நிராகரிப்பவர்கள், (நம் தூதராகிய உம்மைக் குறிப்பிட்டு) “இவர் மீது இவருடைய இறைவனிடமிருந்து (நாம் விரும்பியவாறு) ஏதேனுமோர் அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?'' என்று கூறுகின்றனர். அதற்கு நீர் கூறுவீராக: நிச்சயமாக அல்லாஹ் (தண்டிக்க) நாடியவர்களைத் தவறான வழியில் விட்டுவிடுகிறான். முற்றிலும் அவனையே நோக்கி நிற்பவர்களைத்தான் அவன் நேரான வழியில் செலுத்துகிறான்

[28] மெய்யாகவே நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் அவர்கள்தான்; (அவர்கள் முன்) அல்லாஹ்வின் திருப்பெயர் துதி செய்யப்பட்டால், அவர்களுடைய உள்ளங்கள் நிம்மதியடைந்து விடுகின்றன. (ஏனென்றால்,) அல்லாஹ்வின் திருப்பெயரை துதி செய்வதனால் (உண்மை நம்பிக்கையாளர்களின்) உள்ளங்கள் நிச்சயமாக நிம்மதி அடையும் என்பதை (நபியே!) அறிந்துகொள்வீராக

[29] எவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பதுடன், நற்காரியங்களையும் செய்து வருகிறார்களோ அவர்களுக்கே நற்பாக்கியமும், நல்ல இருப்பிடமும் உண்டு

[30] (நபியே! இதற்கு முன்னர் நாம் தூதர்கள் பலரை அனுப்பிய) இவ்வாறே உம்மையும் நாம் (நம் தூதராக) ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பிவைத்தோம். இவர்களுக்கு முன்னரும் (இவர்களில்) பல வகுப்பினர் சென்றிருக்கின்றனர். (நீண்ட காலமாக அவர்களிடம் ஒரு தூதரும் வரவில்லை.) ஆகவே, நாம் உமக்கு வஹ்யி மூலம் அறிவிப்பவற்றை இவர்களுக்கு நீர் ஓதிக் காண்பித்து வருவீராக. எனினும், இவர்களோ (உங்களை நிராகரிப்பது மட்டுமல்ல; தங்கள் மீது பல அருள்கள் புரிந்திருக்கும் அளவற்ற அருளாளனாகிய) ரஹ்மானையுமே நிராகரிக்கின்றனர். (நபியே! அவர்களை நோக்கிக்) கூறுவீராக: ‘‘அவன்தான் என் இறைவன்; அவனைத்தவிர வணக்கத்திற்குரிய இறைவன் ஒருவருமில்லை. அவனையே நான் நம்புகிறேன்; அவனிடமே நான் மீளுவேன்

[31] (நபியே! நாம் இவர்களுக்கு இதைத் தவிர வேறு) ஒரு குர்ஆனை அருள் செய்து, அதைக்கொண்டு மலைகள் நகரும்படியாகவோ அல்லது பூமியைத் துண்டு துண்டாகவோ அல்லது மரணித்தவர்களைப் பேசும் படியாகவோ செய்தபோதிலும், (நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்). எனினும், எல்லா காரியங்களும் அல்லாஹ்வுக்குரியனவே! ஆகவே, அல்லாஹ் நாடினால் மனிதர்கள் அனைவரையுமே நேரான வழியில் நடத்திவிடுவான் என்பதைப் பற்றி நம்பிக்கையாளர்களுக்குத் திருப்தி ஏற்படவில்லையா? நிராகரிப்பவர்களை அவர்களுடைய (தீய) செயலின் காரணமாக (அவர்கள் திடுக்கிடக்கூடிய) சம்பவம் ஒன்று அவர்களை வந்தடைந்து கொண்டேயிருக்கும். அல்லது அவர்களின் வீட்டிற்குச் சமீபத்திலேயே (அத்தகைய சம்பவங்கள்) சம்பவித்துக் கொண்டே இருந்து, (‘‘முஸ்லீம்களாகிய நீங்கள் வெற்றி கொள்வீர்கள்' என்று உங்களுக்குக் கூறப்பட்ட) அல்லாஹ்வின் வாக்குறுதி நிறைவேறியே தீரும். நிச்சயமாக அல்லாஹ் தன் வாக்குறுதியில் மாற மாட்டான்

[32] (நபியே!) உமக்கு முன்னர் (வந்த நம்) தூதர் பலரும் (இவ்வாறே) நிச்சயமாகப் பரிகசிக்கப் பட்டனர். (அவர்களை) நிராகரித்தவர்களையும் (உடனே தண்டிக்காது) நாம் தவணையளித்து விட்டு வைத்தோம். ஆயினும், பின்னர் நாம் அவர்களை (தண்டனையைக் கொண்டு) பிடித்துக் கொண்டோம். என் தண்டனை எப்படி இருந்தது? (என்பதைச் சிந்திப்பீராக)

[33] ஒவ்வோர் ஆத்மாவும் செய்பவற்றை நன்கறிந்தவன் எதற்கும் சக்தியற்ற பொய் தெய்வங்களுக்கு சமமாவானா? அவர்களோ பொய்யான தெய்வங்களை அல்லாஹ்வுக்கு இணையாக்குகின்றனர்! (இத்தகைய குற்றவாளிகளைத் தண்டிக்காது விட்டு விடுவானா? நபியே! நீர் அவர்களை நோக்கி, ‘‘நீங்கள் கூறுகின்ற தெய்வங்கள் மெய்யாகவே அவனுக்கு இணையானவையாக இருந்தால்,) அவற்றின் பெயர்களை கூறுங்கள் அல்லது பூமியில் (அவனுக்கு இணையான ஒன்றிருந்து அதை) அவன் அறியாது போய் அதைப் பற்றி அவனுக்கு நீங்கள் அறிவிக்கிறீர்களா? அல்லது (நீங்கள் கூறுவது, உண்மையில்லாத) வெறும் வார்த்தைகள்தானா?'' என்று கேட்பீராக. (இவற்றில் ஒன்றுமில்லை!) மாறாக, இந்நிராகரிப்பவர்களுக்கு அவர்களுடைய சூழ்ச்சிகளே அழகாகக் காண்பிக்கப்பட்டு விட்டன. (ஆதலால்தான் அவர்கள்) நேரான வழியிலிருந்தும் தடுக்கப்பட்டு விட்டனர். எவர்களை (அவர்களுடைய பாவங்களின் காரணமாக) அல்லாஹ் தவறான வழியில் விட்டுவிட்டானோ அவர்களை நேரான வழியில் செலுத்தக்கூடியவர் ஒருவருமில்லை

[34] அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும் வேதனையுண்டு. (மறுமையிலும் வேதனை உண்டு. எனினும், அவர்களுக்கு) மறுமையில் கிடைக்கும் வேதனையோ மிகக் கொடியது. அல்லாஹ்விடத்திலிருந்து அவர்களை பாதுகாத்துக் கொள்பவர்கள் ஒருவரும் இல்லை

[35] இறையச்சமுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தின் தன்மையோ அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டேயிருக்கும். அங்கு (அவர்களுக்குக்) கிடைக்கும் உணவுகளும். அதன் நிழலும் என்றும் நிலையானவையாகும். இதுதான் இறை அச்சமுடையவர்களின் முடிவாகும். நிராகரிப்பவர்களின் முடிவோ நரகம்தான்

[36] (நபியே! முன்னர்) நாம் எவர்களுக்கு வேதம் கொடுத்திருக்கிறோமோ அவர்கள் உமக்கு இறக்கப்பட்ட (இவ்வேதத்)தைப் பற்றி மகிழ்ச்சியடைவார்கள். எனினும், இ(வ்வேதத்)தில் சிலவற்றை நிராகரிப்பவர்களும் அவர்களில் உண்டு. ஆகவே, நீர் (அவர்களை நோக்கி,) ‘‘அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காது, அவன் ஒருவனையே நான் வணங்கும்படி எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. (உங்களை) நான் அவனிடமே அழைக்கிறேன்; நானும் அவனிடமே திரும்பச் செல்வேன்'' என்று கூறுவீராக

[37] (நபியே! நீர் நன்கறிந்து கொள்ளும் பொருட்டு) நாம் இதன் சட்ட திட்டங்களை அரபி (மொழி)யில் இவ்வாறு (விவரித்து) இறக்கிவைத்தோம். ஆகவே, (வஹ்யியின் மூலம்) உமக்கு (திருகுர்ஆனின்) ஞானம் கிடைத்ததற்குப் பின்னரும் நீர் அவர்களுடைய மன விருப்பங்களைப் பின்பற்றினால், அல்லாஹ்விடத்தில் (உம்மை) பாதுகாத்துக் கொள்ளவோ, உமக்கு உதவி செய்யவோ ஒருவருமிரார்

[38] (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு முன்னரும் தூதர்கள் பலரை அனுப்பி இருக்கிறோம். (உம்மைப் போலவே) அவர்களுக்கும் மனைவிகளையும், சந்ததிகளையும் கொடுத்திருந்தோம். (ஆகவே, உமக்கு மனைவி, மக்கள் இருப்பதைப் பற்றி இவர்கள் குறை கூறமுடியாது.) அல்லாஹ்வின் அனுமதியின்றி ஒரு தூதர் எத்தகைய அத்தாட்சியையும் கொண்டு வருவதற்கில்லை. (அவன் முடிவு செய்திருக்கும்) ஒவ்வொன்றுக்கும் தவணையும் (குறிப்பிட்டு) எழுதப்பட்டுள்ளது. (அது அத்தவணைக்கு முந்தியும் வராது; பிந்தியும் வராது)

[39] (எனினும், அதில்) அவன் நாடியதை அழித்து விடுவான்; (அவன் நாடியதை) உறுதியாக்கிவிடுவான். (அனைத்திற்கும்) அசல் பதிவு அவனிடத்தில் இருக்கிறது. (அதன்படி எல்லாக் காரியங்களும் தவறாது நடைபெறும்)

[40] (நபியே!) அவர்களுக்கு (வருமென) நாம் வாக்களித்த (தண்டனைகளில்) சிலவற்றை (நீர் உயிருடன் இருக்கும்போதே) உமது கண்ணால் காணும்படி செய்தாலும் அல்லது (அது வருவதற்கு முன்னர்) நாம் உம்மைக் கைப்பற்றிக் கொண்டாலும் (அதைப் பற்றி நீர் கவலைப்படாதீர்!) உமது கடமையெல்லாம் தூதை சேர்ப்பிப்பதுதான்! (அவர்களிடம் அதன்) கணக்கை வாங்குவது நம் கடமையாகும்

[41] (அவர்கள் வசித்திருக்கும்) பூமியை அதன் ஓரங்களிலிருந்து நிச்சயமாக நாம் (படிப்படியாகக்) குறைத்து வருவதை அவர்கள் காணவில்லையா? அல்லாஹ்வே தீர்ப்பளிக்கக்கூடியவன். அவனுடைய தீர்ப்பைத் தடை செய்யக்கூடியவன் ஒருவனுமில்லை. அவன் கேள்வி கணக்குக் கேட்பதில் மிகத் தீவிரமானவன்

[42] (நபியே!) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (நம் தூதர்களுக்கு விரோதமாக இவ்வாறே) பல சூழ்ச்சிகளைச் செய்து கொண்டிருந்தனர். எனினும், சூழ்ச்சிகள் அனைத்தும் அல்லாஹ்விடம் சிக்கிவிடும். (ஏனென்றால்,) ஒவ்வோர் ஆத்மாவும் செய்கின்ற (சூழ்ச்சிகள்) அனைத்தையும் அவன் (திட்டமாக) நன்கறிகிறான். ஆகவே, எவர்களுடைய காரியம் நன்மையாக முடியும் என்பதை இந்நிராகரிப்பவர்கள் அதி சீக்கிரத்தில் அறிந்து கொள்வார்கள்

[43] (நபியே!) ‘‘நீர் (இறைவனால்) அனுப்பப்பட்ட தூதர் அல்ல'' என்று இந்நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர். அதற்கு (அவர்களை நோக்கி, ‘‘இதைப் பற்றி) எனக்கும் உங்களுக்கும் இடையில் அல்லாஹ்வும், வேத ஞானம் உடையவர்களும் போதுமான சாட்சிகளாவர்'' என்று கூறுவீராக

இப்ராஹீம்

Surah 14

[1] அலிஃப் லாம் றா. (நபியே! இது) வேத நூல். இதை நாமே உம்மீது இறக்கியிருக்கிறோம். (இதன் மூலம்) மனிதர்களை அவர்கள் இறைவனின் கட்டளைப்படி இருள்களிலிருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் நீர் கொண்டு வருவீராக! (அந்த ஒளியோ) மிக்க புகழுக்குரிய (அல்லாஹ்வாகிய) அனைவரையும் மிகைத்தவனின் நேரான வழியாகும்

[2] அந்த அல்லாஹ் (எத்தகையவனென்றால்) வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் அவனுக்குச் சொந்தமானவையே! ஆகவே, (இதை) நிராகரிப்பவர்களுக்கு வந்தடையும் கடினமான வேதனையின் காரணமாக (அவர்களுக்குப்) பெரும்கேடுதான்

[3] இவர்கள் மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையையே விரும்புகின்றனர். அல்லாஹ்வுடைய வழியில் (அவர்கள் செல்லாததுடன், மற்றவர்களையும் அதில் செல்லாது) தடுத்துக்கொண்டு அதில் கோணலையும் உண்டுபண்ணுகின்றனர். இவர்கள் வெகு தூரமான வழிகேட்டில்தான் இருக்கிறார்கள்

[4] (நபியே!) ஒவ்வொரு தூதரும் தன் மக்களுக்குத் தெளிவாக விவரித்துக் கூறும் பொருட்டு, அந்தந்த மக்களின் மொழியைக் கொண்டே (போதனை புரியுமாறு) நாம் அவர்களை அனுப்பிவைத்தோம். (அந்தத் தூதர்கள் எவ்வளவு முயற்சித்த போதிலும் அவர்கள் செய்யும் நன்மை தீமைக்குத் தக்கவாறு) அல்லாஹ் நாடியவர்களை தவறான வழியில் விட்டுவிடுகிறான். (நற்செயல்கள் செய்யும்) அவன் விரும்புகிறவர்களை நேரான வழியில் செலுத்துகிறான். அவன் அனைத்தையும் மிகைத்தவன், ஞானமுடையவன் ஆவான்

[5] நிச்சயமாக நாம் மூஸாவை நம் பல அத்தாட்சிகளுடன் அனுப்பிவைத்து “நீங்கள் உமது மக்களை இருள்களில் இருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் கொண்டு வருவீராக. அல்லாஹ்வி(ன் கட்டளையி)னால் ஏற்பட்ட பல சம்பவங்களை நீங்கள் அவர்களுக்கு ஞாபகமூட்டுவீராக'' (என்று அவருக்குக் கட்டளையிட்டோம்.) (கஷ்டங்களைச்) சகித்துப் பொறுமையுடன் இருப்பவர்கள், நன்றி செலுத்துபவர்கள் ஆகிய அனைவருக்கும் நிச்சயமாக இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன

[6] மூஸா தன் மக்களை நோக்கிக் கூறிய சமயத்தில் ‘‘அல்லாஹ் உங்களுக்குப் புரிந்திருக்கும் அருளை நினைத்துப் பாருங்கள்: அவன் உங்களை ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிடமிருந்து காப்பாற்றினான். அவர்களோ உங்களுக்குக் கொடிய நோவினை செய்துகொண்டு வந்ததுடன், உங்கள் ஆண்பிள்ளையை வதை செய்து பெண் பிள்ளையை (மட்டும்) உயிருடன் வாழ விட்டுக் கொண்டுமிருந்தார்கள். இதில் உங்கள் இறைவனால் உங்களுக்குப் பெரும் சோதனை ஏற்பட்டிருந்தது'' (என்று கூறினார்)

[7] உங்கள் இறைவன் (உங்களை நோக்கி, ‘‘இதற்காக) நீங்கள் (எனக்கு) நன்றி செலுத்தினால் (நான் என் அருளை மேலும்) உங்களுக்கு அதிகப்படுத்துவேன். நீங்கள் (என் அருளுக்கு நன்றி செலுத்தாது) மாறுசெய்தால் நிச்சயமாக என் வேதனை மிகக் கொடியதாக இருக்கும் என்று அறிக்கையிட்டதையும் (நபியே!) நீர் (அவர்களுக்கு) ஞாபகமூட்டுவீராக

[8] இன்னும், மூஸா (தன் மக்களை நோக்கி) ‘‘நீங்களும் உலகிலுள்ள மக்கள் அனைவரும் (இறைவனுக்கு முற்றிலும்) மாறு செய்தபோதிலும் (அவனுக்கு ஒன்றும் நஷ்டம் ஏற்பட்டு விடாது.) ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் (எவருடைய உதவியும்) தேவையற்றவன், புகழுக்குரியவன் ஆவான்'' என்றும் கூறினார்

[9] உங்களுக்கு முன்னர் சென்றுபோன நூஹ், ஆது, ஸமூது இன்னும் அவர்களுக்குப் பின்னர் வந்தவர்களுடைய சரித்திரம் உங்களுக்குக் கிடைக்கவில்லையா? அவர்க(ளின் விபரங்க)ளை அல்லாஹ்வைத் தவிர மற்றெவரும் அறிந்துகொள்ள முடியாது. அந்த மக்களிடம் அனுப்பப்பட்ட (நம்) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களிடம் வந்(து நேரான வழிக்கு ‘‘வாருங்கள் வாருங்கள்'' என்று தங்கள் இரு கைகளையும் விரித்து அழைத்)த சமயத்தில், அவர்களுடைய கைகளை அவர்களுடைய வாயின் பக்கமே தட்டிவிட்டு (அவர்களை நோக்கி,) ‘‘நிச்சயமாக நாங்கள் (இறைவனின் கட்டளை என்று) நீங்கள் கொண்டு வந்திருப்பதை நிராகரிக்கிறோம். நீங்கள் எங்களை எதன் பக்கம் அழைக்கிறீர்களோ அதைப்பற்றி நிச்சயமாக நாங்கள் பெரும் சந்தேகத்தில் இருக்கிறோம்'' என்று கூறினார்கள்

[10] அதற்கு, அவர்களிடம் வந்த தூதர்கள் (அவர்களை நோக்கி) ‘‘வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ்வைப் பற்றியா (உங்களுக்குச்) சந்தேகம்? அவன் உங்கள் குற்றங்களை மன்னிப்பதற்காக உங்களை அழைக்கிறான். (அவனுக்கு பணிந்து வழிப்பட்டால்) ஒரு நீண்ட காலம் வரை உங்களை(ப் பூமியில் சுகமாக வாழ்ந்திருக்க) விட்டு வைப்பான்'' என்று கூறினார்கள். அதற்கவர்கள், நீங்கள் நம்மைப் போன்ற (சாதாரண) மனிதர்களே தவிர வேறில்லை. எங்கள் மூதாதைகள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களை விட்டு எங்களைத் தடை செய்யவா நீங்கள் விரும்புகிறீர்கள்? அவ்வாறாயின் (அதற்குரிய) தெளிவான ஆதாரத்தை நம்மிடம் கொண்டு வாருங்கள்'' என்று கூறினார்கள்

[11] அதற்கு அவர்களிடம் வந்த தூதர்கள் அவர்களை நோக்கி, நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள்தான். எனினும், அல்லாஹ் தன் அடியார்களில் தான் விரும்பியவர்கள் மீது அருள் புரிகிறான். அல்லாஹ்வுடைய அனுமதியின்றி (உங்கள் விருப்பப்படி) ஓர் ஆதாரத்தை நாம் உங்களிடம் கொண்டு வருவதற்கில்லை'' (என்று கூறி நம்பிக்கையாளர்களை நோக்கி,) ‘‘நம்பிக்கையாளர்கள் (அனைவரும்) அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைக்கவும்'' என்றும்

[12] ‘‘நாங்கள் அல்லாஹ்வை நம்பாதிருக்க எங்களுக்கென்ன (தடை நேர்ந்தது)? நிச்சயமாக அவன்தான் எங்களுக்கு நேரான வழியை அறிவித்தான். (நிராகரிப்பவர்களே!) நீங்கள் எங்களுக்கு இழைக்கும் துன்பங்களைச் சகித்துக் கொண்டு உறுதியாக இருப்போம். ஆகவே, நம்பிக்கை வைப்பவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைக்கவும்'' என்றும் கூறினார்கள்

[13] நிராகரித்தவர்கள் தங்களிடம் வந்த (நமது) தூதர்களை நோக்கி, ‘‘நிச்சயமாக நீங்கள் எங்கள் மார்க்கத்தில் திரும்பிவிட வேண்டும். இல்லையேல், நாங்கள் உங்களை எங்கள் ஊரிலிருந்து வெளியேற்றி விடுவோம்'' என்று கூறினார்கள். அதற்கு அவர்களுடைய இறைவன் (அந்த தூதர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நாம் இந்த அநியாயக்காரர்களை அழித்து விடுவோம்'' என்றும்

[14] ‘‘உங்களை அவர்களுக்குப் பின்னர் (அவர்களுடைய) பூமியில் நிச்சயமாக நாம் குடியேறச் செய்வோம்'' (என்றும் வஹ்யி மூலம் அறிவித்து) ‘‘இது எவன் என் முன்னால் (விசாரணைக்காக) நிற்பதைப் பயந்தும், என் அச்சமூட்டலைப் பயந்தும் நடக்கிறானோ அவனுக்கு ஒரு சன்மானமாகும்'' என்றும் அவர்களுடைய இறைவன் அறிவித்தான்

[15] ஆகவே, (நபிமார்கள்) அனைவரும் (அல்லாஹ்வின்) உதவியைக் கோரினார்கள். பிடிவாதக்கார வம்பர்கள் அனைவருமே ஏமாற்றமடைந்(து அழிந்)தனர்

[16] அவர்களுக்கு பின்னால் நரகம்தான் இருக்கிறது. (அங்குதான் அவர்கள் செல்ல வேண்டும். நரகவாசிகளின் தேகத்திலிருந்து வடியும்) சீழ்தான் அவர்களுக்கு (நீராக)ப் புகட்டப்படும்

[17] அதை அவர்கள் (மிக சிரமத்தோடு) சிறுகச் சிறுக விழுங்குவார்கள். எனினும், அது அவர்களுடைய தொண்டைகளில் இறங்காது; (விக்கிக் கொள்ளும்.) ஒவ்வொரு திசையிலிருந்தும் மரணமே அவர்களை நோக்கி வந்துகொண்டிருக்கும்; எனினும், அவர்கள் இறந்துவிட மாட்டார்கள். இதற்குப் பின் கடினமான வேதனையும் (அவர்களுக்கு) உண்டு

[18] எவர்கள் தங்களைப் படைத்து வளர்த்துப் பரிபாலிக்கின்ற இறைவனை நிராகரிக்கிறார்களோ அவர்களுடைய செயல்களின் உதாரணம்: சாம்பலைப்போல் இருக்கிறது! புயல் காலத்தில் அடித்த கனமான காற்று அதை அடித்துக்கொண்டு போய்விட்டது. தாங்கள் தேடிக்கொண்டதில் ஒன்றையும் அவர்கள் அடைய மாட்டார்கள். இது வெகு தூரமான வழிகேடாகும்

[19] நிச்சயமாக அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் மிக்க மேலான அமைப்பில் படைத்திருக்கிறான் என்பதை (மனிதனே!) நீ கவனிக்கவில்லையா? அவன் விரும்பினால் உங்களைப் போக்கிவிட்டு (உங்களைப் போன்ற) புதியதோர் படைப்பைக் கொண்டுவந்து விடுவான்

[20] அல்லாஹ்வுக்கு இது ஒரு சிரமமான காரியம் அல்ல

[21] (மறுமையில் பாவிகள்) அனைவரும் வெளிப்பட்டு அல்லாஹ்வின் முன் நிற்கும் சமயத்தில் (இவ்வுலகில்) பலவீனமானவர்கள் என்று கருதப்பட்டவர்கள், (பலசாலிகளென) பெருமையடித்துக் கொண்டிருந்தவர்களை நோக்கி ‘‘நிச்சயமாக நாங்கள் உங்களையே பின்பற்றி நடந்தோம். ஆகவே, அல்லாஹ்வுடைய வேதனையிலிருந்து ஒரு சிறிதளவையேனும் எங்களுக்கு நீங்கள் தடுத்து விட வேண்டாமா?'' என்று கூறுவார்கள். அதற்கு அவர்கள் (வேதனையிலிருந்து தப்பித்துக் கொள்ள) அல்லாஹ் எங்களுக்கு ஒரு வழி வைத்திருந்தால் (அதை) நாங்கள் உங்களுக்கு அறிவிப்போம். (தப்ப வழி இல்லை. எங்கள் வேதனையைப்பற்றி) நாங்கள் பதட்டப்பட்டு துடிதுடிப்பதும் அல்லது (அதைச்) சகித்துக் கொண்டு பொறுத்திருப்பதும் ஒன்றாகவே இருக்கிறது. (இவ் வேதனையிலிருந்து) தப்ப எங்களுக்கு ஒரு வழியும் இல்லையே!'' என்று புலம்புவார்கள்

[22] (இக்குற்றவாளிகளைப் பற்றி) தீர்ப்புக் கூறப்பட்டதும் பின்னர், ஷைத்தான் (இவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக அல்லாஹ் (இவ்வேதனையைத் தருவதாக) உங்களுக்கு மெய்யாகவே வாக்களித்திருந்தான். (அவ்வாறே கொடுத்தும் விட்டான்.) நானும் உங்களுக்கு(ப் பொய்யாக) வாக்களித்தேன்; எனினும், நான் உங்களை வஞ்சித்து விட்டேன்; ‘‘நான் உங்களை அழைத்தேன்; நீங்கள் என்னைப் பின்பற்றினீர்கள்'' என்பதைத் தவிர, உங்களை நான் நிர்ப்பந்திப்பதற்கு எனக்கு ஓர் அதிகாரமும் இல்லாமலே இருந்தது. ஆதலால், நீங்கள் என்னை நிந்திக்காதீர்கள்; உங்களையே நீங்கள் நிந்தித்துக் கொள்ளுங்கள். நான் உங்களுக்கு ஓர் உதவியும் செய்ய முடியாது. நீங்களும் எனக்கு ஓர் உதவியும் செய்ய முடியாது. இதற்கு முன்னர் நீங்கள் என்னை (அல்லாஹ்வுக்கு) இணையாக்கிக் கொண்டிருந்ததையும் நிச்சயமாக நான் நிராகரித்து விட்டேன். நிச்சயமாக (உங்களைப் போன்ற) அநியாயக்காரர்களுக்கு மிக்க துன்புறுத்தும் வேதனை உண்டு என்று கூறுவான்

[23] எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்கள் சொர்க்கங்களில் புகுத்தப்படுவார்கள். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். தங்கள் இறைவனின் கட்டளைப்படி அதில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். அவர்களில் (ஒருவர் மற்றொருவரை நோக்கி ‘‘உங்களுக்கு தொடர்ந்து) ஈடேற்றம் (ஸலாம்) உண்டாவதாகுக!'' என்று முகமன் கூறுவார்கள்

[24] (நபியே! ‘தவ்ஹீத் கலிமா' என்னும்) நல்ல வாக்கியத்திற்கு அல்லாஹ் எப்படி (மிக்க மேலான) உதாரணத்தைக் கூறுகிறான் என்பதை நீங்கள் கவனிக்கவில்லையா? (அவ்வாக்கியம்) வானளாவிய கிளைகளையும் (பூமியில்) ஆழப்பாய்ந்த வேரையும் உடைய ஒரு நல்ல மரத்திற்கு ஒப்பாக இருக்கிறது

[25] அது (பருவ காலத்தில் மட்டுமன்றி) இறைவனின் அருளைக் கொண்டு எக்காலத்திலும் கனிகளைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. மனிதர்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு, அவர்களுக்கு அல்லாஹ் (பல) உதாரணங்களை விவரிக்கிறான்

[26] (நிராகரிப்பவர்களின் குஃப்ரு, ஷிர்க்கான) கெட்ட வாக்கியத்திற்கு உதாரணம்: வேர் அறுபட்டு பூமிக்கு மேல் (உறுதியின்றி) நிற்கும் (பட்டுப் போன ஒரு) கெட்ட மரத்திற்கு ஒப்பாகும்; அது நிலைத்திருக்காது

[27] மெய்யாகவே எவர்கள் நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களை மறுமையிலும், இம்மையிலும் (‘கலிமா தையிப்' என்னும்) உறுதிமிக்க இந்த வார்த்தையைக் கொண்டு அல்லாஹ் உறுதிப்படுத்துகிறான். அநியாயக்காரர்களை (அவர்களுடைய பாவத்தின் காரணமாக) தவறான வழியில் அல்லாஹ் விட்டுவிடுகிறான்; அல்லாஹ் நாடியதைச் செய்கிறான். (அதைத் தடை செய்ய எவராலும் முடியாது)

[28] (நபியே!) அல்லாஹ்வின் அருளை நிராகரிப்பைக் கொண்டு மாற்றி, தங்கள் மக்களையும் அழிவுக்கிடங்கில் இறக்கிவிட்டவர்களை நீர் பார்க்கவில்லையா

[29] அவர்கள் நரகத்தைத்தான் வந்தடைவார்கள்; அது தங்குமிடங்களில் மிகக் கெட்டது

[30] அவர்கள் அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து (மக்களைத்) திருப்பிவிடும் பொருட்டு (பல பொய் தெய்வங்களை) அவனுக்கு இணையாக்குகின்றனர். (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘(இவ்வுலகில் சிறிது காலம்) நீங்கள் சுகமனுபவித்துக் கொள்ளுங்கள். (முடிவில்) நிச்சயமாக நீங்கள் சேருமிடம் நரகம்தான்

[31] (நபியே!) நம்பிக்கை கொண்ட என் அடியார்களுக்கு கூறுவீராக: அவர்கள் தொழுகையை நிலை நிறுத்தட்டும், நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து கொடுக்கல் வாங்கலும், நட்பும் இல்லாத நாள் வருவதற்கு முன்னதாகவே இரகசியமாகவும், வெளிப்படையாகவும் தானம் செய்யட்டும்

[32] அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் படைத்தவன். அவனே வானத்திலிருந்து மழை பொழியச் செய்து, அதைக் கொண்டு உங்களுக்கு உணவாக(ப் பற்பல) கனிவர்க்கங்களையும் வெளிப்படுத்துகிறான். (நீங்கள் பயணம் செய்யும் பொருட்டுத்) தன் கட்டளையைக் கொண்டு கப்பலை உங்கள் இஷ்டப்படி கடலில் செல்ல வைக்கிறான். ஆறுகளையும், (கால்வாய்களையும்) உங்கள் விருப்பப்படி பாய வசதியளித்தான்

[33] (தவறாது) ஒழுங்காக நடைபெற்று வருமாறு சூரியனையும் சந்திரனையும் (படைத்து) உங்களுக்குப் பயனளிக்கக்கூடிய விதத்தில் (அவற்றை)அமைத்தான். (மாறி மாறி) வரக்கூடிய இரவு பகலையும் உங்களுக்காக (அமைத்து அதில்) பயனடைய வகை செய்தான்

[34] இன்னும், நீங்கள் கேட்டவற்றை எல்லாம் அவன் உங்களுக்கு அளித்தான். ஆகவே, அல்லாஹ்வுடைய அருட் கொடைகளை நீங்கள் கணக்கிடும் சமயத்தில் அதை உங்களால் எண்ண முடியாது! (இவ்வாறு எல்லாமிருந்தும்) நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறவன், மிக மிக நன்றிகெட்டவன் ஆவான்

[35] இப்றாஹீம் (தன் இறைவனை நோக்கிக்) கூறியதை (நபியே!) (அவர்களுக்கு) ஞாபகமூட்டுவீராக. (அவர்கள் இறைவனை நோக்கி) ‘‘என் இறைவனே! (மக்காவாகிய) இவ்வூரை அபயமளிக்கும் பட்டணமாக நீ ஆக்கிவைப்பாயாக! என்னையும் என் சந்ததிகளையும் சிலைகளை வணங்குவதில் இருந்து தூரமாக்கி வைப்பாயாக

[36] என் இறைவனே! நிச்சயமாக இச்சிலைகள் மனிதர்களில் பலரை வழிகெடுத்து விட்டன. (ஆகவே, எவன் சிலைகளை வணங்காது) என்னைப் பின்பற்றுகிறானோ அவன்தான் நிச்சயமாக என்னில் (என் சந்ததியில்) உள்ளவன்; எவன் எனக்கு மாறுசெய்கிறானோ (அவன் என் சந்ததி இல்லை. எனினும், என் இறைவனே!) நிச்சயமாக நீ மிக்க மன்னிப்பவன், மிகக் கருணையுடையவன் ஆவாய்

[37] எங்கள் இறைவனே! நிச்சயமாக நான் என் சந்ததிகளை, மிக்க கண்ணியம் வாய்ந்த உன் வீட்டின் சமீபமாக வசித்திருக்கச் செய்து விட்டேன். அது விவசாய மற்றதொரு பள்ளத்தாக்கு! எங்கள் இறைவனே! அவர்கள் (உன்னைத்) தொழுது கொண்டிருப்பதற்காக (அங்கு வசிக்கச் செய்தேன்). மனிதர்களில் ஒரு தொகையினரின் உள்ளங்கள் அவர்களை நேசிக்கும்படி நீ செய்வாயாக! (பற்பல) கனிவர்க்கங்களையும் நீ அவர்களுக்கு உணவாக அளித்து வருவாயாக! (அதற்கு) அவர்கள் உனக்கு நன்றி செலுத்துவார்கள்

[38] எங்கள் இறைவனே! நாங்கள் (உள்ளங்களில்) மறைத்துக்கொள்வதையும், நாங்கள் வெளிப்படுத்துவதையும் நிச்சயமாக நீ நன்கறிவாய். வானத்திலோ பூமியிலோ உள்ளவற்றில் எதுவும் அல்லாஹ்வுக்கு மறைந்ததல்ல

[39] எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்குரியது; அவன்தான் இவ்வயோதிக (கால)த்தில் இஸ்மாயீலையும் இஸ்ஹாக்கையும் எனக்கு(ச் சந்ததிகளாக) அளித்தான். நிச்சயமாக என் இறைவன் பிரார்த்தனைகளை (கருணையுடன்) செவியுறுபவன் ஆவான்

[40] என் இறைவனே! என்னையும், என் சந்ததிகளையும் (உன்னைத்) தொழுது வருபவர்களாக ஆக்கிவை. எங்கள் இறைவனே! என் பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொள்வாயாக

[41] எங்கள் இறைவனே! எனக்கும், என் தாய் தந்தைக்கும், மற்ற நம்பிக்கையாளர்களுக்கும் கேள்வி கணக்கு நிறைவேறுகின்ற (மறுமை) நாளில் மன்னிப்பளிப்பாயாக!'' (என்று பிரார்த்தித்தார்)

[42] (நபியே!) இவ்வக்கிரமக்காரர்களின் செயலைப் பற்றி அல்லாஹ் பராமுகமாய் இருக்கிறான் என நீர் எண்ண வேண்டாம். அவர்களை (வேதனையைக் கொண்டு உடனுக்குடன் பிடிக்காது) தாமதப்படுத்தி வருவதெல்லாம், திறந்த கண் திறந்தவாறே இருந்து விடக்கூடிய (கொடிய தொரு மறுமை) நாள் வரும் வரைதான்

[43] (அந்நாளில்) இவர்களுடைய நிமிர்ந்த தலை குனிய முடியாது (தட்டுக்கெட்டுப் பல கோணல்களிலும்) விரைந்தோடுவார்கள். (திடுக்கிடும் சம்பவங்களைக் கண்ட) இவர்களுடைய பார்வை மாறாது, (அதையே நோக்கிக் கொண்டிருக்கும்.) இவர்களுடைய உள்ளங்கள் (பயத்தால்) செயலற்று விடும்

[44] ஆகவே, (நபியே!) இத்தகைய வேதனை நாள் வருவதைப் பற்றி நீர் மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக. வரம்பு மீறியவர்கள் (அந்நாளில் தங்கள் இறைவனை நோக்கி) ‘‘எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு ஒரு சொற்பத் தவணையளி! நாங்கள் உன் அழைப்புக்கு (இனி) செவி கொடுத்து, (உன்) தூதரைப் பின்பற்றி நடப்போம்'' என்று கூறுவார்கள். (அதற்கு இறைவன் அவர்களை நோக்கி) ‘‘இதற்கு முன்னர் நீங்கள் உங்களுக்கு (இவ்வுலகில்) அழிவே இல்லை என்று சத்தியம் செய்து கூறிக் கொண்டிருக்கவில்லையா?'' (என்று கேட்பான்)

[45] ‘‘தமக்குத்தாமே தீங்கிழைத்து(க் கொண்டு அழிந்து போனவர்கள்) வசித்திருந்த இடத்தில் நீங்களும் வசித்திருக்கவில்லையா? (என்றும்), நாம் அவர்களை என்ன செய்தோம் என்பது உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கவில்லையா? (இதைப் பற்றி) உங்களுக்குப் பல உதாரணங்களையும் நாம் எடுத்துக் கூறவில்லையா'' (என்றும் பதில் கூறுவான்)

[46] எனினும், அவர்கள் தங்கள் சூழ்ச்சிகளை இறைவன் முன்பாகவே செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களுடைய சூழ்ச்சிகளோ மலைகளையும் பெயர்த்து விடக்கூடியவையாக இருக்கின்றன! (ஆயினும், அவர்களுடைய சூழ்ச்சிகள் ஒன்றும் பலிக்கப் போவதில்லை)

[47] அல்லாஹ் தன் தூதர்களுக்கு அளித்த வாக்குறுதியில் மாறி விடுவான் என்று (நபியே!) நீர் ஒருக்காலும் எண்ண வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் (அவர்கள் அனைவரையும்) மிகைத்தவன், பழிவாங்குபவன் ஆவான்

[48] (நபியே! ஒரு நாளை அவர்களுக்கு ஞாபகமூட்டுவீராக:) அந்நாளில் இந்தப் பூமியை மாற்றி வேறுவித பூமியாக அமைக்கப்பட்டுவிடும்; வானங்களும் அவ்வாறே. (ஒவ்வொருவரும் தத்தம் இடத்திலிருந்து) வெளிப்பட்டு அனைவரையும் அடக்கி ஆளுகின்ற ஒரே இறைவனாகிய அந்த அல்லாஹ்வின் முன்னால் கூடிவிடுவார்கள்

[49] குற்றவாளிகள் அனைவரும், அந்நாளில் விலங்கிடப்பட்டிருப்பதையும் நீர் காண்பீர்

[50] அவர்களுடைய சட்டைகள் தாரால் செய்யப்பட்டிருக்கும். அவர்களுடைய முகத்தை நெருப்பு சூழ்ந்து கொண்டிருக்கும்

[51] ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது செய்த செயலுக்குத் தக்க கூலியை அல்லாஹ் (இவ்வாறு) அளிப்பான். நிச்சயமாக அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்பதில் மிக்க தீவிரமானவன்

[52] மனிதர்கள் இதைக்கொண்டு எச்சரிக்கப்பட்டு வணக்கத்திற்குரியவன் ஒரே ஓர் இறைவன்தான் என்று அவர்கள் உறுதியாக அறிந்து கொள்வதற்கும், அறிவுடையவர்கள் நல்லுணர்ச்சி பெறுவதற்கும் (குர்ஆனாகிய) இது (அல்லாஹ்வின் கட்டளைகள் உள்ளடங்கிய) ஓர் அறிக்கையாகும்

அல்ஹிஜ்ர்

Surah 15

[1] அலிஃப் லாம் றா. (நபியே!) இவை (முந்திய) வேதங்களுடைய இன்னும் தெளிவான (இந்த) குர்ஆனுடைய (சில) வசனங்களாகும்

[2] தாங்களும் முஸ்லிம்களாக இருந்திருக்க வேண்டுமே? என்று நிராகரிப்பவர்கள் (மறுமையில்) பெரிதும் விரும்புவர்

[3] (நபியே!) அவர்கள் (நன்கு) புசித்துக்கொண்டும், (தங்கள் இஷ்டப்படி) சுகம் அனுபவித்துக் கொண்டும் இருக்க (தற்சமயம்) நீர் அவர்களை விட்டுவிடுவீராக. அவர்களுடைய (வீண்) நம்பிக்கைகள் (மறுமையை அவர்களுக்கு) மறக்கடித்து விட்டன. இதன் (பலனை) பின்னர் அவர்கள் நன்கறிந்து கொள்வார்கள்

[4] (பாவத்தில் மூழ்கிய) எவ்வூராரையும் அவர்களுக்குக் குறிப்பிட்ட தவணையிலேயே தவிர நாம் அவர்களை அழித்து விடவில்லை

[5] ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்கள் தவணையை முந்தவும் மாட்டார்கள்; பிந்தவும் மாட்டார்கள்

[6] (நம் நபியாகிய உம்மை நோக்கி) ‘‘வேதம் அருளப்பட்டதாகக் கூறுகின்ற நீர் நிச்சயமாகப் பைத்தியக்காரர்தான்'' என்று கூறுகின்றனர்

[7] ‘‘மெய்யாகவே நீர் உண்மை சொல்பவராக இருந்தால் (உமக்குச் சாட்சியாக) நீர் வானவர்களை அழைத்துக் கொண்டுவர வேண்டாமா? (என்றும் கூறுகின்றனர்)

[8] (நபியே!) நாம் வானவர்களை இறக்கிவைப்பதெல்லாம் எவருடைய காரியத்தையும் அழித்து முடித்துவிடக் கருதினால்தான். அச்சமயம் அவர்களுக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்கப்படுவதில்லை. (உடனே அழிக்கப்பட்டுவிடுவர்)

[9] நிச்சயமாக நாம்தான் இவ்வேதத்தை (உம் மீது) இறக்கிவைத்தோம். ஆகவே, (அதில் எத்தகைய மாறுதலும் அழிவும் ஏற்படாதவாறு) நிச்சயமாக நாமே அதைப் பாதுகாத்துக் கொள்வோம்

[10] (நபியே!) உமக்கு முன்னர் சென்றுபோன கூட்டங்களுக்கும் நிச்சயமாக நாம் தூதர்கள் பலரை அனுப்பிவைத்தோம்

[11] (எனினும்,) அவர்களிடம் (நமது) தூதர் எவர் வந்தபோதிலும் அவர்கள் அவரைப் பரிகாசம் செய்யாதிருக்கவில்லை

[12] (அவர்கள் உள்ளங்களிலிருந்த) நிராகரிப்பைப் போலவே இக்குற்றவாளிகளின் உள்ளங்களிலும் (நிராகரிப்பைப்) புகுத்திவிட்டோம்

[13] (ஆகவே,) இவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள். முன் சென்றவர்களுடைய நடைமுறை சென்றிருக்கிறது. (அவர்கள் அழிந்தது போல இவர்களும் அழிந்து விடுவர்)

[14] வானத்தில் ஒரு வாசலை இவர்களுக்கு நாம் திறந்துவிட்டு, அதில் பகல் நேரத்திலே இவர்கள் ஏறியபோதிலும் (நம்பிக்கை கொள்ளாமல்)

[15] ‘‘எங்கள் கண்கள் மயங்கிவிட்டன; நாங்கள் சூனியம் செய்யப்பட்டு விட்டோம்'' என்றே கூறுவார்கள். (உண்மையை நம்பமாட்டார்கள்)

[16] நிச்சயமாக நாம்தான் வானத்தில் பெரிய பெரிய நட்சத்திரங்களை அமைத்து பார்ப்பவர்களுக்கு அதை அலங்காரமாகவும் ஆக்கி வைத்தோம்

[17] விரட்டப்பட்ட ஒவ்வொரு ஷைத்தானும் அவற்றை நெருங்காது காத்துக்கொண்டோம்

[18] ஆகவே, (வானவர்களின்) ஒரு வார்த்தையைத் திருட்டுத்தனமாகக் கேட்டுப் போவதைத் தவிர, (ஷைத்தான் அவற்றை நெருங்க முடியாது. அவ்வாறு ஷைத்தான் நெருங்கினால் சுடர் வீசும்) எரிகின்ற நெருப்பு ஜூவாலை அதை (விரட்டிப்) பின் தொடர்ந்து செல்லும்

[19] நாம் பூமியை விரித்து, அதில் உறுதிமிக்க அசையாத மலைகளை நட்டினோம். ஒவ்வொரு புற்பூண்டையும் (அதற்குரிய) ஒழுங்கான முறையில் அதில் நாம் முளைப்பித்தோம்

[20] உங்களுக்கும், நீங்கள் உணவு கொடுத்து வளர்க்காததுமான (ஆகாயத்திலும் பூமியிலும் வசிக்கின்ற எண்ணற்ற) உயிரினங்களுக்கும் வாழ்க்கைக்கு வேண்டிய பொருள்களை நாமே அதில் அமைத்தோம்

[21] ஒவ்வொரு பொருளின் பொக்கிஷங்களும் நம்மிடமே இருக்கின்றன. எனினும், அவற்றை (அந்தந்தக் காலத்தில் அவற்றிற்குக்) குறிப்பிட்ட அளவில்தான் நாம் இறக்கி வைக்கிறோம்

[22] மேகம் கருக்கொள்ளும்படியான காற்றையும் நாமே அனுப்பிவைக்கிறோம். அம்மேகத்திலிருந்து மழையையும் நாமே பொழியச் செய்கிறோம். அதை நாம் உங்களுக்குப் புகட்டுகிறோம். (மழை நீரை மேகத்திலும், நிலத்திலும்) நீங்கள் சேகரித்து வைக்கவில்லை; (நாம்தான் சேகரிக்கிறோம்)

[23] நிச்சயமாக நாம்தான் உயிர் கொடுக்கிறோம்; நாமே மரணிக்கச் செய்வோம். அனைத்திற்கும் நாமே வாரிசுகள்! (சொந்தக்காரர்கள்)

[24] உங்களுக்கு முன் சென்றவர்களையும் நிச்சயமாக நாம் அறிவோம்; (உங்களுக்குப்) பின் வரக்கூடியவர்களையும் நிச்சயமாக நாம் அறிவோம்

[25] (நபியே!) நிச்சயமாக உமது இறைவன்தான் இவர்கள் அனைவரையும் (விசாரணைக்காக மறுமையில் தன் முன்) ஒன்று கூட்டுவான். நிச்சயமாக அவன் ஞானமுடையவன், (அனைத்தையும்) நன்கறிந்தவன் ஆவான்

[26] (காய்ந்தபின் ‘கன் கன்' என்று) சப்தம் கொடுக்கக்கூடிய பிசுபிசுப்பான களிமண்ணால் நிச்சயமாக நாமே (உங்கள் மூலப் பிதாவாகிய முதல்) மனிதனை படைத்தோம்

[27] அதற்கு முன்னதாக ஜின்களைக் கொடிய உஷ்ணமுள்ள நெருப்பிலிருந்து படைத்தோம்

[28] (நபியே!) உமது இறைவன் வானவர்களை நோக்கி ‘‘நிச்சயமாக நான், மனிதனை (காய்ந்தபின்) சப்தம் கொடுக்கக்கூடிய பிசுபிசுப்பான களிமண்ணால் படைக்கப்போகிறேன்'' என்று கூறிய சமயத்தில்

[29] ‘‘நான் மனிதனை உருவாக்கி அதில் என் (படைப்புக்கு வேண்டிய) உயிரைப் புகுத்தினால் அவருக்கு (மரியாதை செலுத்த) நீங்கள் சிரம் பணியுங்கள்'' (என்று கூறி, பிறகு, சிரம்பணிய கட்டளையிட்டான்)

[30] அவ்வாறே வானவர்கள் அனைவரும் (அவருக்கு மரியாதை செலுத்த) சிரம் பணிந்தார்கள்

[31] இப்லீஸைத் தவிர; (அவன்) சிரம் பணிந்தவர்களுடன் சேர்ந்து சிரம் பணியாது விலகிக் கொண்டான்

[32] (அதற்கு உமது இறைவன் இப்லீஸை நோக்கி) ‘‘இப்லீஸே! சிரம் பணிந்தவர்களுடன் சேர்ந்து நீயும் சிரம் பணியாத காரணமென்ன?'' என்று கேட்டான்

[33] அதற்கவன் ‘‘(காய்ந்தபின்) சப்தம் கொடுக்கக்கூடிய பிசுபிசுப்பான களிமண்ணால் நீ படைத்த மனிதனுக்கு (நெருப்பால் படைக்கப்பட்ட) நான் சிரம் பணிய தயாரில்லை; (ஏனென்றால், நான் அவரைவிட மேலானவன்)'' என்று கூறினான்

[34] அதற்கு இறைவன் ‘‘நீ இங்கிருந்து அப்புறப்பட்டுவிடு. நிச்சயமாக நீ (நமது சமூகத்திலிருந்து) விரட்டப்பட்டு விட்டாய்'' என்று கூறினான்

[35] மேலும், ‘‘விசாரணை நாள் (வரும்) வரை உன் மீது நிச்சயமாக என் சாபமும் (கோபமும்) உண்டாவதாக!'' (என்றும் கூறினான்)

[36] அதற்கவன் ‘‘என் இறைவனே! (இறந்தவர்கள்) உயிர் பெற்றெழும்பும் நாள் (வரும்) வரை நீ எனக்கு அவகாசமளி'' என்று கேட்டான்

[37] அதற்கு (இறைவன்) ‘‘நிச்சயமாக (அவ்வாறே) குறிப்பிட்ட அந்நாள் வரையிலும் உனக்கு அவகாசமளிக்கப்பட்டது'' என்றான்

[38] அதற்கு (இறைவன்) ‘‘நிச்சயமாக (அவ்வாறே) குறிப்பிட்ட அந்நாள் வரையிலும் உனக்கு அவகாசமளிக்கப்பட்டது'' என்றான்

[39] அதற்கவன் ‘‘என் இறைவனே! நீ என்னை வழி கெடுத்ததன் காரணமாக பூமியிலுள்ள (பொருள்களை) நான் அவர்களுக்கு அழகாகக் காண்பித்து அவர்கள் அனைவரையும் வழிகெடுப்பேன்

[40] எனினும், அவர்களில் கலப்பற்ற (பரிசுத்த) உள்ளத்தை உடைய உன் (நல்ல) அடியார்களைத் தவிர; (அவர்களை வழி கெடுக்க என்னால் முடியாது)'' என்று கூறினான்

[41] அதற்கு (இறைவன்) கூறியதாவது: ‘‘அதுதான் என்னிடம் (வருவதற்குரிய) நேரான வழி.’‘

[42] (மனத்தூய்மையுடைய) என் அடியார்களிடத்தில் நிச்சயமாக உனக்கு ஒரு செல்வாக்கும் இருக்காது. வழிகேட்டில் உன்னைப் பின்பற்றியவர்களைத் தவிர

[43] (உன்னைப் பின்பற்றிய) அனைவருக்கும் வாக்களிக்கப்பட்ட இடம் நிச்சயமாக நரகம்தான்

[44] அந்நரகத்திற்கு ஏழு வாசல்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வாசலிலும் (செல்லக்கூடிய வகையில்) அவர்கள் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு விடுவார்கள்

[45] நிச்சயமாக, இறையச்சமுடையவர்களோ சொர்க்கங்களிலும் (அதிலுள்ள) நீரருவிகளிலும் (உல்லாசமாக) இருப்பார்கள்

[46] (அவர்களை நோக்கி) நீங்கள் ஈடேற்றத்துடனும் அச்சமற்றவர்களாகவும் இதில் நுழையுங்கள்'' (என்று கூறப்படும்)

[47] (ஒருவருக்கு ஒருவர்மீது இம்மையில்) அவர்களின் நெஞ்சங்களில் இருந்த குரோதங்களை நாம் நீக்கிவிடுவோம். (அவர்களும்) சகோதரர்களாக ஒருவர் ஒருவரை முகம் நோக்கி கட்டில்களில் (உல்லாசமாகச் சாய்ந்து) இருப்பார்கள்

[48] அதில் அவர்களை ஒரு சிரமமும் அணுகாது. அதில் இருந்து அவர்கள் வெளியேற்றப்படவும் மாட்டார்கள்

[49] (நபியே!) நீர் என் அடியார்களுக்கு அறிவிப்பீராக: ‘‘நிச்சயமாக நான் மிக்க மன்னிப்பவன், மிகக் கருணையுடையவன் ஆவேன்

[50] இன்னும் நிச்சயமாக என் வேதனைதான் மிக்க கொடிய வேதனை

[51] (நபியே!) இப்றாஹீமுடைய விருந்தாளிகளின் வரலாற்றை நீர் அவர்களுக்கு அறிவிப்பீராக

[52] அவர்கள் இப்றாஹீமிடம் சென்று ‘ஸலாமுன்' (உங்களுக்கு ஈடேற்றம் உண்டாவதாக!) என்று கூறியதற்கு, அவர் ‘‘நிச்சயமாக நான் உங்களைப் பற்றி பயப்படுகிறேன்' என்றார்

[53] அதற்கவர்கள், ‘‘நீர் பயப்படாதீர். நிச்சயமாக நாம் உமக்கு மிக்க ஞானமுடைய ஓர் மகன் ஒருவரைக் கொண்டு நற்செய்தி கூறுகிறோம்'' என்று கூறினார்கள்

[54] அதற்கவர் ‘‘இம்முதுமையிலா நீங்கள் எனக்கு மகனைக் கொண்டு நற்செய்தி கூறுகிறீர்கள்!'' என்று கூறினார்

[55] அதற்கவர்கள், (‘‘பரிகாசமாக அல்ல) மெய்யாகவே நாங்கள் உமக்கு (மகனைப் பற்றி) நற்செய்தி கூறுகிறோம். (அதைப் பற்றி) நீர் அவநம்பிக்கைக் கொள்ளாதீர்'' என்று கூறினார்கள்

[56] அதற்கவர், ‘‘வழிகெட்டவர்களைத் தவிர தன் இறைவனுடைய அருளைப் பற்றி எவன்தான் அவநம்பிக்கை கொள்ளக்கூடும்'' என்றார்

[57] (பின்னர் வானவர்களை நோக்கி, ‘‘இறைவனால்) அனுப்பப்பட்டவர்களே! உங்கள் விஷயமென்ன?'' என்று கேட்டார்

[58] அதற்கவர்கள் ‘‘(மிகப்பெரிய) குற்றம் செய்து கொண்டிருக்கும் மக்களிடம் (அவர்களை அழித்துவிட) மெய்யாகவே நாங்கள் அனுப்பப்பட்டிருக்கிறோம்'' என்று கூறினார்கள்

[59] ‘‘எனினும், லூத்துடைய சந்ததிகளைத் தவிர (மற்ற அனைவரையும் அழித்து விடுவோம்). நிச்சயமாக நாங்கள் அவர் (சந்ததி)கள் அனைவரையும் பாதுகாத்துக் கொள்வோம்

[60] எனினும், அவருடைய மனைவியைத் தவிர, நிச்சயமாக அவள் (அந்தப் பாவிகளுடன்) தங்கி விடுவாளென்று நாம் முடிவு செய்துவிட்டோம்'' (என்று இறைவன் கூறியதாகக் கூறினார்கள்)

[61] (இறைவனால்) அனுப்பப்பட்ட (அவ்)வானவர்கள் லூத்துடைய குடும்பத்தாரிடம் வந்தபொழுது

[62] (அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நீங்கள் (நான்) அறியாத மக்களாய் இருக்கிறீர்களே!'' என்று அவர் கூறினார்

[63] அதற்கவர்கள், ‘‘(உங்கள் மக்களாகிய) இவர்கள் எதைச் சந்தேகித்துக் கொண்டிருந்தார்களோ அதை நாம் உங்களிடம் கொண்டு வந்திருக்கிறோம்

[64] மெய்யான விஷயத்தையே நாம் உங்களிடம் கொண்டு வந்திருக்கிறோம். நிச்சயமாக நாம் (அவர்களை அழித்து விடுவோம், என்று உங்களுக்கு) உண்மையே கூறுகிறோம்

[65] ஆகவே, இன்றிரவில் சிறிது நேரம் இருக்கும்பொழுதே நீங்கள் உங்கள் குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு, (அவர்கள் முன்னும்) நீங்கள் பின்னுமாகச் செல்லுங்கள். உங்களில் ஒருவருமே திரும்பிப் பார்க்காது உங்களுக்கு ஏவப்பட்ட இடத்திற்குச் சென்று விடுங்கள்'' என்றார்கள்

[66] மேலும், நிச்சயமாக இவர்கள் அனைவரும் விடிவதற்குள்ளாகவே வேரறுக்கப்பட்டு விடுவார்கள் என்றும் நாம் (அவ்வானவர்கள் மூலமாக) அவருக்கு அறிவித்தோம்

[67] (இதற்கிடையில் லூத் நபியின் வீட்டிற்கு வாலிபர்கள் சிலர் வந்திருப்பதாக அறிந்து) அவ்வூரார் மிக்க சந்தோஷத்துடன் (லூத் நபியின் வீட்டிற்கு) வந்து (கூடி) விட்டனர்

[68] (லூத் நபி அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக இவர்கள் என் விருந்தாளிகள். ஆகவே, (அவர்கள் முன்பாக) நீங்கள் என்னை இழிவு படுத்தாதீர்கள்

[69] மேலும், நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள்; என்னை அவமானப்படுத்தாதீர்கள்'' என்று கூறினார்

[70] அதற்கவர்கள் ‘‘உலகில் யாராயிருந்தாலும் (சிபாரிசுக்கு) நீங்கள் வரக்கூடாதென்று நாம் உங்களைத் தடுத்திருக்கவில்லையா?'' என்று கூறினார்கள்

[71] அதற்கவர் ‘‘இதோ! என் பெண் மக்கள் இருக்கின்றனர். நீங்கள் (ஏதும்) செய்தே தீரவேண்டுமென்று கருதினால் (இவர்களைத் திருமணம்) செய்து கொள்ளலாம்'' என்று கூறினார்

[72] (நபியே!) உம் மீது சத்தியமாக! அவர்கள் புத்தி மயங்கி (வழிகேட்டில்) தட்டழிந்து கொண்டிருந்தார்கள். (ஆதலால், அதற்கு செவி சாய்க்கவில்லை)

[73] ஆகவே, சூரியன் உதித்ததற்கு பின்னுள்ள நேரத்தை அடைந்தபோது அவர்களை இடிமுழக்கம் பிடித்துக் கொண்டது

[74] அச்சமயம் அவர்கள் மீது செங்கற்களை பொழியச் செய்து அவர்களுடைய ஊரை தலைக் கீழாகப் புரட்டிவிட்டோம்

[75] உண்மையைக் கண்டறிபவர்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன

[76] நிச்சயமாக அவ்வூர் (நீங்கள் யாத்திரைக்கு) வரப் போகக்கூடிய வழியில்தான் (இன்னும்) இருக்கிறது

[77] நிச்சயமாக இதில் நம்பிக்கையாளர்களுக்கு ஒரு (நல்ல) படிப்பினை இருக்கிறது

[78] (இவர்களைப் போலவே ஷுஐபுடைய மக்களாகிய) தோப்புடையவர்களும் நிச்சயமாக அநியாயக்காரர்களாகவே இருந்தனர்

[79] ஆகவே, அவர்களையும் நாம் பழி வாங்கினோம். (அழிந்த) இவ்விரு (மக்களின்) ஊர்களும் தெளிவான வழியில்தான் இருக்கின்றன

[80] (இவ்வாறே) ‘ஹிஜ்ர்' என்னும் இடத்திலிருந்த (ஸமூது என்னும்) மக்களும் நம் தூதர்களைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தனர்

[81] நாம் அவர்களுக்கு நமது (பல) அத்தாட்சிகளைக் கொடுத்திருந்தும், அவற்றை அவர்கள் புறக்கணித்துக் கொண்டே வந்தார்கள்

[82] அச்சமற்று வாழலாம் எனக் கருதி அவர்கள் மலைகளைக் குடைந்து வீடுகள் அமைத்தார்கள்

[83] அவர்களையும் விடியற்காலையில் (பெரும்) சப்தம் பிடித்துக்கொண்டது

[84] அவர்கள் (தங்களை பாதுகாத்துக் கொள்ள) செய்திருந்தவற்றில் ஒன்றுமே அவர்களுக்குப் பலனளிக்க வில்லை

[85] வானங்களையும் பூமியையும், இவற்றுக்கு மத்தியில் உள்ளவற்றையும் தக்க காரணமின்றி நாம் படைக்கவில்லை. (நபியே! இவர்களுடைய தண்டனைக்குரிய) காலம் நிச்சயமாக வரக்கூடியதே! (அதுவரை இத்தீயவர்களின் விஷமத்தை) நீர் கண்ணியமான முறையில் புறக்கணித்து வருவீராக

[86] நிச்சயமாக உமது இறைவனே (அனைத்தையும்) படைத்தவன், இவர்கள் அனைவரையும்) நன்கறிந்தவன் ஆவான்

[87] (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு திரும்பத் திரும்ப ஓதப்படக்கூடிய ஏழு வசனங்களை (உடைய ‘அல்ஹம்து' என்னும் அத்தியாயத்தை)யும், இந்த மகத்தான (முழு) குர்ஆனையும் அளித்திருக்கிறோம்

[88] (பாவிகளாகிய) இவர்கள் (இவ்வுலகில்) பல வகைகளிலும் சுகமனுபவிக்க இவர்களுக்கு நாம் கொடுத்திருப்பவற்றின் பக்கம் நீர் உமது இரு கண்களையும் நீட்டாதீர்; நீர் இவர்களுக்காக கவலையும் படாதீர். எனினும், நீர் நம்பிக்கையாளர்களுக்கு உமது பணிவான அன்பைக் காட்டுவீராக

[89] ‘‘நிச்சயமாக நான் தெளிவான அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவன்'' என்றும் கூறுவீராக

[90] (நபியே! முன்னுள்ள வேதங்களைப்) பலவாறாகப் பிரித்தவர்கள் மீது முன்னர் நாம் (வேதனையை) இறக்கியவாறே

[91] இந்தக் குர்ஆனைப் பலவாறாகப் பிரிப்பவர்கள் மீதும் (வேதனையை இறக்கி வைப்போம்)

[92] (ஆகவே,) உமது இறைவன் மீது சத்தியமாக! அவர்கள் அனைவரிடமும் கேள்வி கணக்குக் கேட்போம்

[93] அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதைப் பற்றி

[94] ஆகவே, உமக்கு ஏவப்பட்டதை(த் தயக்கமின்றி) நீர் அவர்களுக்கு விவரித்தறிவித்து விடுவீராக. மேலும், இணைவைத்து வணங்கும் இவர்களைப் புறக்கணித்து விடுவீராக

[95] பரிகாசம் செய்யும் (இவர்களுடைய தீங்கை விட்டு) நிச்சயமாக நாமே உம்மைப் பாதுகாப்போம்

[96] இவர்கள் (உம்மைப் பரிகசிப்பது மட்டுமா?) அல்லாஹ்வுக்கு மற்றொரு (பொய்த்) தெய்வத்தைக் கூட்டாக்குகிறார்கள். (இதன் பலனை) பின்னர் இவர்கள் அறிந்து கொள்வார்கள்

[97] (நபியே! உம்மைப் பற்றி) அவர்கள் (கேவலமாகக்) கூறுபவை உமது உள்ளத்தை நெருக்குகிறது என்பதை நிச்சயமாக நாம் அறிவோம். (அதை நீர் ஒரு சிறிதும் பொருட்படுத்தாதீர்)

[98] நீர் உமது இறைவனைத் துதி செய்து புகழ்ந்து அவனுக்குச் சிரம் பணிந்து வணங்குவீராக

[99] உமக்கு ‘எகீன்' (என்னும் மரணம்) ஏற்படும் வரை (இவ்வாறே) உமது இறைவனை வணங்கிக் கொண்டிருப்பீராக

அந்நஹ்ல்

Surah 16

[1] (இதோ) அல்லாஹ்வுடைய கட்டளை வந்துவிட்டது! அதைப்பற்றி நீங்கள் அவசரப்பட வேண்டாம். அவன் மிகப் பரிசுத்தமானவன்; அவர்கள் இணைவைப்பவற்றை விட மிக்க மேலானவன்

[2] அவன் வானவர்களுக்கு வஹ்யி கொடுத்து, தன் அடியார்களில் தான் விரும்பியவர்களிடம் அனுப்பி வைத்து ‘‘வணக்கத்திற்குரியவன் என்னைத் தவிர வேறெவனுமில்லை; நீங்கள் எனக்கே பயப்படுங்கள்'' என்று எச்சரிக்கை செய்யுமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டான்

[3] வானங்களையும் பூமியையும் தக்க காரணத்தின் மீதே அவன் படைத்திருக்கிறான்; அவர்கள் இணைவைப்பவற்றைவிட அவன் மிக்க மேலானவன்

[4] அவனே ஒரு துளி இந்திரியத்தைக் கொண்டு மனிதனைப் படைக்கிறான்; அவ்வாறிருந்தும் அவன் (இறைவனுடன்) பகிரங்கமான எதிரியாய் இருக்கிறான்

[5] (மனிதர்களே!) கால்நடைகளையும் உங்களுக்காக அவனே படைத்திருக்கிறான். அவற்றில் (குளிரைத் தடுக்கும்) பொருள்களும் பல பயன்களும் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றைப் புசிக்கிறீர்கள்

[6] நீங்கள் அவற்றை (மேய்த்து) மாலையில் ஓட்டி வரும் பொழுதும் (மேய்ச்சலுக்குக்) காலையில் ஓட்டிச் செல்லும்பொழுதும் அவை உங்களுக்கு அழகாய் இருக்கின்றன

[7] மிகச் சிரமத்துடனன்றி நீங்கள் செல்ல முடியாத ஊர்களுக்கு அவை (உங்களையும்) உங்கள் பளுவான சுமைகளையும் சுமந்து செல்கின்றன. நிச்சயமாக உங்கள் இறைவன் (உங்கள் மீது) மிக்க இரக்கமுடையவன், மிகக் கருணையுடையவன் ஆவான்

[8] குதிரைகள், கோவேறு கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச் செல்வதற்காகவும் (உங்களுக்கு) அலங்காரமாகவும் (அவன் படைத்திருக்கிறான்). இன்னும் நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைப்பான்

[9] (மனிதர்களே! உங்களுக்கு இரு வழிகள் இருக்கின்றன. ஒன்று,) அல்லாஹ்வை நாடிச்செல்லக்கூடிய நேரானவழி; மற்றொன்று கோணலான வழி. அவன் நாடினால் உங்கள் அனைவரையும் நேரான வழியில் செலுத்திவிடுவான்

[10] அவன்தான் மேகத்திலிருந்து உங்களுக்கு மழை பொழியச் செய்கிறான். அதில்தான் நீங்கள் அருந்தக்கூடிய நீரும் இருக்கிறது; அதைக் கொண்டே புற்பூண்டுகளும் (வளர்ந்து) இருக்கின்றன. அதிலே நீங்கள் (உங்கள் கால்நடைகளை) மேய்க்கிறீர்கள்

[11] அதைக் கொண்டே விவசாயப் பயிர்களையும், ஜைத்தூன், பேரீச்சை, திராட்சை ஆகிய எல்லா கனிவர்க்கங்களையும் அவன் உங்களுக்கு உற்பத்தி செய்கிறான். நிச்சயமாக இதில் சிந்திக்கக்கூடிய மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது

[12] அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் உங்களுக்காக (படைத்துத்) தன் அதிகாரத்துக்குள் வைத்திருக்கிறான். (அவ்வாறே) நட்சத்திரங்கள் அனைத்தும் அவனுடைய கட்டளைக்கு உட்பட்டவையாகவே இருக்கின்றன. நிச்சயமாக இதிலும் சிந்தித்து அறியக்கூடிய மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன

[13] பூமியில் உங்களுக்காக அவன் படைத்திருப்பவை விதவிதமான நிறங்களும் (வகைகளும்) உடையவையாக இருக்கின்றன. நல்லுணர்ச்சி பெறும் மக்களுக்கு நிச்சயமாக இதிலும் ஓர் அத்தாட்சி இருக்கிறது

[14] அவன்தான் நீங்கள் சுவையான மீன் மாமிசங்களை (சமைத்துப்) புசிக்கவும், நீங்கள் ஆபரணமாக அணியக்கூடிய பொருள்களை எடுத்துக்கொள்ளவும் கடலை (உங்களுக்கு) வசதியாக்கித் தந்தான். (பல இடங்களுக்கும் சென்று வர்த்தகத்தின் மூலம்) இறைவனின் அருளை நீங்கள் தேடிக் கொள்ளும் பொருட்டு (கடலில் பயணம் செய்யும்பொழுது) கப்பல் கடலைப் பிளந்துகொண்டு செல்வதை நீங்கள் காண்கிறீர்கள். (இதற்காக இறைவனுக்கு) நீங்கள் நன்றி செலுத்திக் கொண்டிருப்பீர்களாக

[15] உங்களைச் சுமந்திருக்கும் பூமி அசையாதிருப்பதற்காகப் (பெரிய) பெரிய மலைகளை அதன் மீது வைத்தான். (உங்கள் போக்குவரத்துக்காக) ஆறுகளையும் நேரான வழிகளை அறிவதற்காகப் பல பாதைகளையும் அமைத்தான்

[16] (பகலில் திசைகளை அறிவிக்கக்கூடிய மலைகள் எனும்) அடையாளங்களை அமைத்தான். (இரவில்) நட்சத்திரங்களைக் கொண்டும் (பயணிகள்) தங்கள் வழியை அறிந்து கொள்கின்றனர்

[17] (இணைவைத்து வணங்குபவர்களே! இவை அனைத்தையும்) படைத்த வல்லவன் (நீங்கள் வணங்குகின்ற) ஒன்றையுமே படைக்க முடியாதவற்றைப் போலாவானா? இவ்வளவுகூட நீங்கள் நல்லுனர்வு பெற வேண்டாமா

[18] அல்லாஹ்வின் அரு(ள்க)ளை நீங்கள் கணக்கிட்டால் அவற்றை உங்களால் எண்ணிட முடியாது. நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், பெரும் கருணையுடையவன் ஆவான்

[19] நீங்கள் மனதில் மறைத்துக் கொள்வதையும் (அதற்கு மாறாக) நீங்கள் வெளிப்படுத்துவதையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான்

[20] (நபியே!) அல்லாஹ்வையன்றி எவற்றை அவர்கள் (தெய்வமென) அழைக்கிறார்களோ அவற்றால் எதையும் படைக்க முடியாது. அவை (அவனால்) படைக்கப்பட்டவையாகும்

[21] (அன்றி அவை) உயிருள்ளவைகளுமல்ல; உயிரற்றவைகளே. (இறந்தவர்கள்) எப்பொழுது (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவை அறியா. (ஆகவே, அவை இவர்களுக்கு என்ன பலனளித்துவிடும்)

[22] உங்கள் வணக்கத்திற்குரியவன் ஒரே ஓர் இறைவன்தான். ஆகவே, எவர்கள் மறுமையை நம்பவில்லையோ அவர்களுடைய உள்ளங்கள் (எதைக் கூறியபோதிலும்) நிராகரிப்பவைகளாகவே இருக்கின்றன. மேலும், அவர்கள் மிகக் கர்வம்கொண்டு பெருமையடிப்பவர்களாகவும் இருக்கின்றனர்

[23] நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் மறைத்துக் கொள்வதையும் (அதற்கு மாறாக) அவர்கள் வெளிப்படுத்துவதையும் நன்கறிவான் என்பதில் ஒரு சந்தேகமுமில்லை. நிச்சயமாக அவன் கர்வம் கொண்ட (இ)வர்களை விரும்புவதில்லை

[24] (நபியே! இந்தக் குர்ஆனைக் குறிப்பிட்டு அதில்) ‘‘உங்கள் இறைவன் என்ன இறக்கினான்'' என்று அவர்களிடம் கேட்கப்பட்டால் ‘‘(இது,) முன்னுள்ளோரின் கட்டுக்கதைகள்தான்'' என்று கூறுகின்றனர்

[25] மறுமை நாளில் தங்கள் பாவச்சுமைகளை இவர்கள் சுமப்பதுடன், அறிவின்றி இவர்கள் வழிகெடுத்த மற்றவர்களின் பாவச்சுமைகளையும் இவர்களே சுமப்பார்கள். (இவ்வாறு இருவரின் பாவச்சுமையை) இவர்களே சுமப்பது மிகக் கெட்டதல்லவா

[26] இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (இவ்வாறே) நிச்சயமாக சூழ்ச்சி செய்து கொண்டிருந்தார்கள். ஆகவே, அல்லாஹ் அவர்களின் (சூழ்ச்சிக்) கட்டடத்தை அடியோடு பெயர்த்து அவர்கள் (தலை) மீதே அதன் முகடு விழும்படி செய்தான். அவர்கள் அறிந்துகொள்ள முடியாத விதத்தில் வேதனையும் அவர்களை வந்தடைந்தது

[27] பின்னர், மறுமை நாளிலோ அவன் அவர்களை இழிவுபடுத்தி ‘‘நீங்கள் (உங்கள் தெய்வங்களை) எனக்கு இணையானவை என(க் கூறி நம்பிக்கையாளர்களுடன்) நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருந்தீர்களே அவை எங்கே?'' என்று கேட்பான். அச்சமயம் (இதை) அறிந்திருந்த (நம்பிக்கை கொண்ட)வர்கள் ‘‘இன்றைய தினம் இழிவும், வேதனையும் நிச்சயமாக நிராகரித்தவர்கள்மீதுதான்'' என்று கூறுவார்கள்

[28] தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்ட இவர்களுடைய உயிரை வானவர்கள் கைப்பற்றும் பொழுது (அவர்கள்) ‘‘நாங்கள் ஒரு குற்றமும் செய்யவில்லை'' என்று (கூறித் தங்களைத் துன்புறுத்த வேண்டாமென வானவர்களிடம்) சமாதானத்தைக் கோருவார்கள். (அதற்கு வானவர்கள்) ‘‘மாறாக! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை நன்கறிவான்'' (என்று பதிலளிப்பார்கள்)

[29] (மேலும், இவர்களை நோக்கி) ‘‘நீங்கள் நரகத்தின் வாயில்களில் புகுந்து என்றென்றுமே அதில் தங்கி விடுங்கள்'' (என்று கூறுவார்கள்). பெருமை அடித்துக் கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம் மகா கெட்டது

[30] இறையச்சமுடையவர்களை நோக்கி (இக்குர்ஆனைப் பற்றி) ‘‘உங்கள் இறைவன் என்ன இறக்கி வைத்தான்'' என்று கேட்கப்பட்டால், அதற்கவர்கள், ‘‘நன்மையையே (இறக்கி வைத்தான்)'' என்று கூறுவார்கள். (ஏனென்றால்) நன்மை செய்தவர்களுக்கு இவ்வுலகிலும் நன்மைதான். (அவர்களுடைய) மறுமையின் வீடும் மிக்க மேலானது. இறையச்சமுடையவர்களின் வீடு எவ்வளவு நேர்த்தியானது

[31] (அவ்வீடு) என்றென்றும் நிலைத்திருக்கக்கூடிய சொர்க்கங்களாகும். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருக்கும். அவர்கள் விரும்பியதெல்லாம் அங்கு அவர்களுக்குக் கிடைக்கும். இறையச்சமுடையவர்களுக்கு இவ்வாறே அல்லாஹ் கூலி கொடுக்கிறான்

[32] இவர்களின் உயிரை வானவர்கள், அவர்கள் நல்லவர்களாக இருக்கும் நிலைமையில் கைப்பற்றுகின்றனர். (அப்பொழுது அவர்களை நோக்கி) ‘‘ஸலாமுன் அலைக்கும் (உங்களுக்கு ஈடேற்றம் உண்டாவதாக!) நீங்கள் (நற்செயல்) செய்து கொண்டிருந்ததின் காரணமாக சொர்க்கத்திற்குச் செல்லுங்கள்'' என்று கூறுவார்கள்

[33] (அவ்வக்கிரமக்காரர்களோ தங்கள் உயிரைக் கைப்பற்றுவதற்காக) அவர்களிடம் வானவர்கள் வருவதையோ அல்லது உங்கள் இறைவனின் கட்டளை(ப்படி வேதனை) வருவதையோ தவிர (வேறெதனையும்) அவர்கள் எதிர்பார்க்கின்றனரா? இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறே (அநியாயம்) செய்து கொண்டிருந்தனர். அல்லாஹ் இவர்களுக்கு ஒரு தீங்கும் இழைக்கவில்லை. எனினும், அவர்கள் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்

[34] ஆகவே, அவர்கள் செய்துகொண்டிருந்த தீமைகளே அவர்களை வந்தடைந்தன. இன்னும், அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்ததும் அவர்களைச் சூழ்ந்துகொண்டது

[35] இணைவைத்து வணங்குபவர்கள் கூறுகின்றனர்: ‘‘அல்லாஹ் நாடியிருந்தால் நாங்களும் எங்கள் மூதாதைகளும் அவனைத் தவிர மற்றெதையும் வணங்கியே இருக்கமாட்டோம்; அவனுடைய கட்டளையின்றி எதையும் (ஆகாததெனத்) தடுத்திருக்கவும் மாட்டோம்.'' இவ்வாறே இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (வீண் விதண்டாவாதம்) செய்து கொண்டிருந்தனர். நம் தூதர்கள்மீது (அவர்களுக்கிடப்பட்ட கட்டளையை) தெளிவாக அறிவிப்பதைத் தவிர (வேறெதுவும்) பொறுப்புண்டா? (கிடையாது)

[36] (பூமியின் பல பாகங்களிலும் வசித்திருந்த) ஒவ்வொரு வகுப்பினருக்கும் நிச்சயமாக நாம் தூதரை அனுப்பியிருக்கிறோம். (அத்தூதர்கள் அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். (வழி கெடுக்கும்) ஷைத்தான்களிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் என்(று கூறிச் சென்)றார்கள். அல்லாஹ்வின் நேர்வழியை அடைந்தவர்களும் அவர்களில் உண்டு; வழி கேட்டிலேயே நிலை பெற்றோரும் அவர்களில் உண்டு. ஆகவே, நீங்கள் பூமியில் சுற்றித் திரிந்து (நபிமார்களைப்) பொய்யாக்கியவர்களின் முடிவு எப்படி இருந்தது என்பதைப் பாருங்கள்

[37] (நபியே!) அவர்கள் நேரான வழியில் செல்ல வேண்டுமென்று நீங்கள் எவ்வளவு விரும்பிய போதிலும் (அவ்வழிக்கு அவர்கள் வரமாட்டார்கள். ஏனென்றால், மன முரண்டாக) எவர்கள் தவறான வழியில் செல்கிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேரான வழியில் செலுத்துவதில்லை; அவர்களுக்கு உதவி செய்பவர்களும் ஒருவருமில்லை

[38] (நபியே!) இறந்தவர்களுக்கு அல்லாஹ் உயிர் கொடுத்து எழுப்ப மாட்டான் என்று இந்நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வின் மீதே மிக்க உறுதியான சத்தியம் செய்து கூறுகின்றனர். அப்படி இல்லை; (‘‘உங்களை உயிர்கொடுத்து எழுப்புவான்'' என்று) நான் கூறிய வாக்கு முற்றிலும் உண்மையானதே! எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிந்துகொள்ள மாட்டார்கள்

[39] (இம்மையில்) அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருந்ததை அவர்களுக்கு அல்லாஹ் தெளிவாக அறிவிப்பதற்காகவும், நிராகரிப்பவர்கள் கூறிக் கொண்டிருந்த பொய்யை அவர்கள் நன்கறிந்து கொள்வதற்காகவும் (மறுமையில் அவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள். அப்படி அவர்களை எழுப்புவது நமக்கு ஒரு பொருட்டல்ல)

[40] (ஏனென்றால்) நாம் ஒரு பொருளை (உண்டு பண்ண)க் கருதினால், அதற்காக நாம் கூறுவதெல்லாம் ‘‘ஆகுக!'' என்பதுதான். உடனே (அது) ஆகிவிடுகிறது

[41] (நம்பிக்கையாளர்களே! உங்களில்) எவர்கள் (எதிரிகளால்) துன்புறுத்தப்பட்டு பின்னர் அல்லாஹ்வுக்காக(த் தங்கள் ஊரை விட்டு)ப் புறப்பட்டார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக நாம் இவ்வுலகிலும் நல்ல இருப்பிடத்தையே தருவோம்; மறுமையின் கூலியோ (இதைவிட) மிகப் பெரிது. (இதை) அவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமே

[42] இவர்கள்தான் (சிரமங்களைப்) பொறுமையுடன் சகித்துக் கொண்டு தங்கள் இறைவனையே முற்றிலும் நம்பியிருப்பவர்கள்

[43] (நபியே!) உமக்கு முன்னர் வஹ்யி அறிவித்து நாம் அவர்களிடம் அனுப்பிவைத்த தூதர்களெல்லாம் ஆடவர்கள்தான். ஆகவே, (இவர்களை நோக்கி) ‘‘நீங்கள் (இதை) அறிந்து கொள்ளாமலிருந்தால் (முந்திய வேதங்களைக்) கற்றோரிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்'' (என்று கூறுவீராக)

[44] அத்தூதர்களுக்கும் தெளிவான அத்தாட்சிகளையும், வேதங்களையும் (கொடுத்து அனுப்பினோம்). அப்படியே இந்தக் குர்ஆனையும் (நபியே!) நாம் உமக்கு இறக்கி வைத்தோம். மனிதர்களுக்காக (உம்மீது) இறக்கப்பட்ட இதை நீர் அவர்களுக்குத் தெளிவாக எடுத்துக் காண்பிப்பீராக. (இதன் மூலம்) அவர்கள் கவனித்தறிந்து கொள்வார்கள்

[45] தீங்கிழைக்க சூழ்ச்சிகள் செய்கின்ற இவர்களைப் பூமி விழுங்கும்படி அல்லாஹ் செய்யமாட்டான் என்றோ அல்லது இவர்கள் அறிந்துகொள்ளாத விதத்தில் இவர்களை வேதனை வந்தடையாது என்றோ இவர்கள் அச்சமற்று இருக்கின்றனரா

[46] அல்லது இவர்கள் நடமாடிக் கொண்டிருக்கும் பொழுதே இவர்களை அவன் பிடித்துக்கொள்ள மாட்டான் என்றும் அச்சமற்றிருக்கின்றனரா? (அவ்வாறு அவன் பிடிக்கக் கருதினால், அவனிடம் இருந்து) இவர்கள் (தப்பி ஓடி அவனைத்) தோற்கடித்துவிட மாட்டார்கள்

[47] அல்லது (இவர்களை அழித்துவிடக்கூடிய ஒரு ஆபத்து வருமென்ற) திகிலின் மீது திகிலைக் கொடுத்து இவர்களைப் பிடித்துக்கொள்ள மாட்டான் என்று அச்சமற்று இருக்கின்றனரா? (அவன், தான் விரும்பிய வேதனையை இவர்களுக்கு கொடுக்க ஆற்றலுடையவன்.) எனினும், நிச்சயமாக உங்கள் இறைவன் மிக்க இரக்கமுடையவன், மிகக் கருணையுடையவன் ஆவான். (ஆதலால்தான், இதுவரை அவர்களை வேதனை செய்யாது விட்டு வைத்திருக்கிறான்)

[48] அல்லாஹ் படைத்திருப்பவற்றில் ஒன்றையுமே இவர்கள் பார்க்க வில்லையா? அவற்றின் நிழல்கள் வலமும் இடமுமாக சாய்வதெல்லாம் அல்லாஹ்வை மிக்க தாழ்மையாகச் சிரம் பணிந்து வணங்குவதுதான்

[49] வானங்களிலும் பூமியிலும் உள்ள மற்ற உயிரினங்களும் வானவர்களும் அல்லாஹ்வையே சிரம்பணிந்து வணங்குகின்றனர்.அவர்கள் (இப்லீஸைப் போல் அவனுக்கு சிரம் பணியாது) பெருமையடிப்பதில்லை

[50] அவர்கள் தங்களுக்கு மேலுள்ள தங்கள் இறைவனுக்குப் பயந்து தங்களுக்கு இடப்பட்ட கட்டளையையே செய்து கொண்டிருக்கின்றனர்

[51] (மனிதர்களே!) அல்லாஹ் கூறுகிறான்: (ஒன்றுக்குப் பதிலாக) இரு தெய்வங்களை நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள். நிச்சயமாக (உங்கள்) வணக்கத்திற்குரிய இறைவன் ஒரே ஒர் இறைவன்தான். ஆகவே, (அந்த ஒருவனாகிய) எனக்கு நீங்கள் பயப்படுங்கள். (மற்றெவருக்கும் பயப்பட வேண்டாம்)

[52] வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும் அவனுடையவையே! அவனுக்கு என்றென்றும் வழிபடுவது அவசியம். ஆகவே, அந்த அல்லாஹ் அல்லாதவற்றையா நீங்கள் பயப்படுகிறீர்கள்

[53] உங்களுக்குக் கிடைத்துள்ள அருட்கொடைகள் அனைத்தும் அல்லாஹ்விடமிருந்து வந்தவைதான். உங்களை ஒரு தீங்கு அணுகும் போது அவனிடமே முறையிடுகிறீர்கள்

[54] பின்னர், அவன் உங்களை விட்டு அத்தீங்கை நீக்கினாலோ உடனே உங்களில் ஒரு பிரிவினர் (இத்தகைய) தங்கள் இறைவனுக்கே இணை வைத்து வணங்க ஆரம்பிக்கின்றனர்

[55] நாம் அவர்களுக்குச் செய்த நன்றிகளையும் (நன்மைகளையும்) நிராகரித்து விடுகின்றனர். (ஆதலால், அவர்களை நோக்கி, ‘‘இவ்வுலகில்) சிறிது சுகமனுபவித்துக் கொள்ளுங்கள். பின்னர் (மறுமையில்) நீங்கள் (உண்மையை) அறிந்து கொள்வீர்கள்'' (என்று நபியே! கூறுவீராக)

[56] நாம் அவர்களுக்குக் கொடுத்த பொருள்களில் ஒரு பாகத்தைத் தங்கள் தெய்வங்களுக்கென்று குறிப்பிட்டுக் கூறுகின்றனர். இதை அவர்கள் அறிந்துகொள்ளவே முடியாது. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் கற்பனையாகக் கூறும் இப்பொய்(க் கூற்று)களைப் பற்றி (மறுமையில்) நிச்சயமாக நீங்கள் கேள்வி கேட்கப்படுவீர்கள்

[57] (நபியே!) இவர்கள் அல்லாஹ்வுக்குப் பெண் பிள்ளைகளையும்.தங்களுக்கு தாங்கள் விரும்புகின்றவர்களை (ஆண் பிள்ளைகளை) ஏற்படுத்திக் கொள்கின்றனர். அவனோ (இதைவிட்டு) மிக்க பரிசுத்தமானவன்

[58] அவர்களில் ஒருவனுக்கு பெண்குழந்தை பிறந்ததாக நற்செய்தி கூறப்பட்டால் அவனுடைய முகம் (துக்கத்தால்) கறுத்து கோபத்தை விழுங்குகிறான்

[59] (பெண் குழந்தை பிறந்தது என) அவனுக்குக் கூறப்பட்ட இந்தக் கெட்ட நன்மாராயத்தைப் பற்றி (வெறுப்படைந்து) இழிவுடன் “அதை வைத்திருப்பதா? அல்லது (உயிருடன்) அதை மண்ணில் புதைத்து விடுவதா?' என்று கவலைப்பட்டு மக்கள் முன் வராமல் மறைந்து கொண்டு அலைகிறான். (இவ்வாறு தங்களுக்கு ஆண் குழந்தையும் இறைவனுக்குப் பெண் குழந்தையுமாக) அவர்கள் செய்யும் தீர்மானம் மிகக் கெட்டதல்லவா

[60] (இத்தகைய) கெட்ட உதாரணமெல்லாம் மறுமையை நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கே (தகும்). அல்லாஹ்வுக்கோ மிக்க மேலான வர்ணிப்புகள் உண்டு. அவன் (அனைவரையும்) மிகைத்தவன், மிக்க ஞானமுடையவன் ஆவான்

[61] மனிதர்கள் செய்யும் குற்றங்குறைகளைப் பற்றி அவர்களை அல்லாஹ் (உடனுக்குடன்) பிடிப்பதாக இருந்தால் (பூமியில்) ஓர் உயிரினைத்தையுமே அவன் விட்டுவைக்க மாட்டான். எனினும், ஒரு குறிப்பிட்ட தவணை வரை (பிடிக்காது) அவர்களைப் பிற்படுத்துகிறான். அவர்களுடைய தவணை வரும் சமயத்தில் ஒரு விநாடி பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்

[62] தாங்கள் விரும்பாதவை(களாகிய பெண் குழந்தை)களை அல்லாஹ்வுக்குக் கற்பிக்கும்இவர்கள் (மறுமையில்) நிச்சயமாக தங்களுக்கு நன்மைதான் கிடைக்குமென்று அவர்களின் நாவுகள் பொய்யை வர்ணிக்கின்றன. நிச்சயமாக இவர்களுக்கு நரகம்தான் என்பதிலும் நரகத்திற்கு முதலாவதாக இவர்கள்தான் செல்வார்கள் என்பதிலும் சந்தேகமேயில்லை

[63] (நபியே!) அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உமக்கு முன்னிருந்த பல வகுப்பார்களுக்கும் நாம் (நம்) தூதர்களை அனுப்பிவைத்தோம். எனினும், ஷைத்தான் அவர்களுக்கும் அவர்களுடைய (தீய) காரியங்களையே அழகாகக் காண்பித்தான். இன்றைய தினம் இவர்களுக்கும் அவனே நண்பனாவான். ஆகவே, இவர்களுக்கு மிக்க துன்புறுத்தும் வேதனை உண்டு

[64] (நபியே!) இவர்கள் எவ்விஷயத்தில் தர்க்கித்துக் கொண்டார்களோ அதை நீர் தெளிவாக்குவதற்காகவே இவ்வேதத்தை உம் மீது நாம் இறக்கி வைத்தோம். மேலும், நம்பிக்கை கொண்ட மக்களுக்கு இது நேரான வழியாகவும், ஓர் அருளாகவும் இருக்கிறது

[65] அல்லாஹ்வே மேகத்திலிருந்து மழைய பொழியச் செய்து உயிரிழந்த பூமிக்கு உயிரூட்டுகிறான். (நல்லுபதேசத்திற்கு) செவிசாய்க்கும் மக்களுக்கு நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது

[66] (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடைகளிலும் உங்களுக்கு ஒரு படிப்பினை உண்டு. இரத்தத்திற்கும் சாணத்திற்கும் இடையில் அதன் வயிற்றில் இருந்து கலப்பற்ற தூய பாலை (உற்பத்தி செய்து) நாம் உங்களுக்குப் புகட்டுகிறோம். அது அருந்துபவர்களுக்கு மிக்க இன்பகரமானது

[67] பேரீச்சை, திராட்சைப் பழங்களிலிருந்து மதுவையும், நல்ல உணவுகளையும் நீங்கள் செய்கிறீர்கள். நிச்சயமாக இதிலும் அறிவுடைய மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது

[68] உமது இறைவன் தேனீக்கு, ‘‘நீ மலைகளிலும், மரங்களிலும், மக்கள் கட்டும் கட்டிடங்களிலும் கூடுகளை அமைத்துக் கொள்'' என அறிவூட்டினான்

[69] பின்னர் ‘‘நீ ஒவ்வொரு புஷ்பத்திலிருந்தும் புசித்து, உனதிறைவன் உனக்கு அறிவித்த எளிதான வழியில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல் (எனக் கட்டளை இட்டான்). இதனால் அதன் வயிற்றிலிருந்து பல நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது. அதில் மனிதர்களுக்கு நிவாரணமுண்டு. நிச்சயமாக இதிலும் சிந்திக்கக்கூடிய மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது

[70] உங்களைப் படைத்தவன் அல்லாஹ்தான். பின்னர் அவனே உங்களை மரணிக்கச் செய்கிறான். கற்றறிந்திருந்தும் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய பலவீனத்தை தருகின்ற முதுமை வரை வாழ்ந்திருப்பவர்களும் உங்களில் உண்டு. (உங்களில் யார், யாரை எவ்வளவு காலம் விட்டுவைக்க வேண்டும் என்பதை) நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன், (அவ்வாறு செய்ய) மிக்க ஆற்றலுடையவன் ஆவான்

[71] உங்களில் சிலரைவிட சிலரை செல்வத்தில் அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருக்கிறான். அப்படி மேன்மையாக்கப்பட்டவர்கள், தங்களுக்கு கட்டுப்பட்ட (வேலைக்காரர், அடிமை ஆகிய)வர்கள் தங்கள் செல்வத்தில் (தங்களுக்கு) சமமானவர்களாக இருந்தும் (முறைப்படி) அதை அவர்களுக்கு கொடுப்பதில்லை. (இப்படி செய்வதன் மூலம் அவர்களுக்கு அளித்திருக்கின்ற) அல்லாஹ்வின் அருளை அவர்கள் நிராகரிக்கின்றனரா

[72] உங்களிலிருந்தே உங்கள் மனைவிகளை அல்லாஹ் படைக்கிறான். உங்கள் மனைவிகளிலிருந்து சந்ததிகளையும், பேரன் பேத்திகளையும் படைக்கின்றான். உங்களுக்கு நல்ல உணவுகளை வழங்குகிறான். மேலும், (இப்படியிருக்க) அவர்கள் (தாங்களாகக் கற்பனை செய்து கொண்ட) பொய்யானவற்றை நம்பிக்கை கொண்டு அல்லாஹ்வின் அருட்கொடைகளை நிராகரிக்கின்றனரா

[73] அவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குகின்றனர். (அவை) வானங்களிலோ பூமியிலோ உள்ள ஒரு பொருளையும் இவர்களுக்கு அளிக்க உரிமையும் அற்றவை; ஆற்றலும் அற்றவை

[74] ஆகவே, (அவற்றை சர்வ வல்லமையுள்ள) அல்லாஹ்வுக்கு நீங்கள் உவமைகளாக ஆக்காதீர்கள். (அல்லாஹ்வுக்குரிய தன்மைகளை) நிச்சயமாக அல்லாஹ்தான் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்

[75] அல்லாஹ் (இதற்கு இருவரை) உதாரணமாகக் கூறுகிறான். ஒருவன் ஒரு (பொருளைச் சுயமாகச் செய்யவும் கொடுக்கவும்) சக்தியற்ற அடிமை; மற்றொருவனோ நாம் அவனுக்கு நல்ல பொருள்களை ஏராளமாகக் கொடுத்திருக்கிறோம். அவனும் அவற்றை இரகசியமாகவும் பகிரங்கமாகவும் தானம் செய்து வருகிறான். இவ்விருவரும் சமமானவரா? (சமமாக மாட்டார்கள்.) எல்லா புகழ்களும் அல்லாஹ்வுக்குரியன. அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிந்துகொள்வதில்லை

[76] இன்னும், இரு மனிதரை (மற்றொரு) உதாரணமாக அல்லாஹ் கூறுகிறான்: அதிலொருவர் ஊமை(யான அடிமை); ஏதும் செய்ய சக்தியற்றவர். அவர் தன் எஜமானருக்குச் சுமையாக இருக்கிறார். அவரை எங்கு அனுப்பியபோதிலும் (தீங்கைத் தவிர) நன்மை எதையும் அவர் செய்வதில்லை. மற்றொருவரோ (நல்லதை அறிந்து) நேரான வழியில் இருந்துகொண்டு (மற்றவர்களுக்கும்) நீதத்தையே ஏவுகிறார். இவருக்கு (ஊமையாகிய) அவர் சமமாவாரா

[77] வானங்களிலும் பூமியிலும் உள்ள ரகசியம் அல்லாஹ்வுக்கே சொந்தம். (அதை மற்றெவரும் அறிய மாட்டார்கள்.) ஆகவே உலக முடிவு, இமை மூடி விழிப்பதைப்போல் அல்லது அதைவிட விரைவாகவே முடிந்துவிடும். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக ஆற்றலுடையவன் ஆவான்

[78] ஒன்றையுமே நீங்கள் அறியாதவர்களாக இருந்த நிலைமையில், உங்கள் தாய்மார்களின் வயிற்றிலிருந்து அல்லாஹ்தான் உங்களை வெளிப்படுத்தினான். மேலும், உங்களுக்குச் செவிகளையும், கண்களையும், இதயங்களையும் (அறிவையும்) கொடுத்தவன் அவன்தான். இதற்கு நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாக

[79] ஆகாயத்தில் (பறந்து) செல்லும் பறவைகளை அவர்கள் பார்க்கவில்லையா? அவற்றை (ஆகாயத்தில்) மிதந்தவையாக நிற்க வைப்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறு ஒருவருமில்லை. நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக இதிலும் பல அத்தாட்சிகள் இருக்கின்றன

[80] உங்கள் வீடுகளை அல்லாஹ் உங்களுக்கு நிம்மதி தருவதாக அமைத்தான். கால்நடைகளின் தோல்களை நீங்கள் வீடுகளாக அமைக்க (வசதியான விதத்தில்) உங்களுக்காக அவன் படைத்திருக்கிறான். அது நீங்கள் பிரயாணம் போகும் சமயத்திலும், ஓர் இடத்தில் தங்குகின்ற சமயத்திலும் எளிதில் சுமந்து செல்லக்கூடியதாக இருக்கிறது. (ஆடைபோன்ற) பற்பல பொருள்களை தயாரிப்பதற்கு அவற்றில் (செம்மறியாட்டின்) கம்பளி, (ஒட்டகத்தின்) உரோமம் (வெள்ளாட்டின்) முடி ஆகியவற்றையும் (அவன் உங்களுக்காக படைத்திருக்கிறான். அந்த பொருள்கள்) ஒரு காலம்வரை உங்களுக்கு பயன்படுகின்றன

[81] அவன் படைத்திருப்பவற்றில் நிழல் தரக்கூடியவற்றையும் உங்களுக்காக அமைத்திருக்கிறான். மலை(க் குகை)களில் உங்களுக்குத் தங்குமிடங்களையும் அமைத்தான். வெப்பத்தையும் (குளிரையும்) உங்களுக்குத் தடுக்கக்கூடிய சட்டைகளையும், (கத்தி, அம்பு போன்ற) ஆயுதங்களைத் தடுக்கக்கூடிய கேடயங்(கள் செய்யக்கூடிய பொருள்)களையும் அவனே உங்களுக்காக அமைத்தான். அவன் தன் அருளை இவ்வாறே உங்கள் மீது முழுமையாக்குகிறான். (இதற்காக) நீங்கள் (அவனுக்கு) முற்றிலும் கட்டுப்பட்டு நடப்பீர்களாக

[82] (ஆகவே, நபியே!) அவர்கள் (உம்மைப்) புறக்கணித்தால் (அதைப் பற்றி நீர் கவலைப்படாதீர். ஏனென்றால் நம்) தூதை (அவர்களுக்குத்) தெளிவாக எடுத்துரைப்பதுதான் உம்மீதும் கடமையாகும்

[83] அல்லாஹ்வின் (இத்தகைய) அருட்கொடையை அவர்கள் நன்கறிந்த பின்னரும் அதை அவர்கள் நிராகரிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் நன்றி கெட்டவர்களாகவே இருக்கின்றனர்

[84] ஒவ்வொரு வகுப்பாரிடமும் (நாம் அனுப்பிய நம் தூதரை, அவர்களுக்குச்) சாட்சியாக நாம் அழைக்கின்ற (நாளை நபியே! நீர் அவர்களுக்கு ஞாபகமூட்டுவீராக. அந்)நாளில் (அத்தூதர்களை) நிராகரித்தவர்களுக்கு (ஏதும் பேசுவதற்கு) அனுமதி கொடுக்கப்படமாட்டாது. அவர்கள் சாக்குப் போக்குச் சொல்லவும் வழியிராது

[85] இவ்வக்கிரமக்காரர்கள் (மறுமையில்) வேதனையைக் (கண்ணால்) கண்ட பிறகு (அவர்கள் என்ன புகல் கூறியபோதிலும்) அவர்களுக்கு (வேதனை) குறைக்கப்படமாட்டாது. அவர்களுக்கு அவகாசமும் அளிக்கப்படவும் மாட்டாது

[86] இணைவைத்து வணங்குகின்ற இவர்கள் தாங்கள் இணையாக்கிய (பொய்) தெய்வங்களை (மறுமையில்) கண்டால் (இறைவனை நோக்கி) ‘‘எங்கள் இறைவனே! உன்னைத் தவிர தெய்வங்கள் என்று நாங்கள் அழைத்துக் கொண்டிருந்த எங்கள் தெய்வங்கள் இவைதான்'' என்று கூறுவார்கள். அதற்கு அவை இவர்களை நோக்கி ‘‘நிச்சயமாக நீங்கள் பொய் சொல்லுகிறீர்கள்; (நாங்கள் தெய்வங்களல்ல)'' என்று கூறும்

[87] பின்னர், இவர்கள் பொய்யாக (தெய்வங்கள் என்று) கூறிக் கொண்டு இருந்தவை அனைத்தும் இவர்களை விட்டு மறைந்து விடும். அந்நாளில் இவர்கள் அல்லாஹ்வை நோக்கி (உனக்கு) முற்றிலும் வழிப்படுவோம் என்று கூறுவார்கள்

[88] (எனினும், மறுமையையும்) நிராகரித்து அல்லாஹ்வுடைய பாதையை விட்டும் தடுத்து (விஷமம் செய்து) கொண்டிருந்த இவர்களுக்கு, இவர்களுடைய விஷமத்தின் காரணமாக வேதனைக்கு மேல் வேதனையை அதிகப்படுத்திக் கொண்டேயிருப்போம்

[89] (நபியே!) ஒவ்வொரு வகுப்பாருக்கும் அவர்களில் இருந்தே (அவர்களிடம் வந்த நபியை) சாட்சியாக நாம் அழைக்கின்ற நாளில், உம்மை (உமக்கு முன் இருக்கும்) இவர்களுக்குச் சாட்சியாகக் கொண்டுவருவோம். (நபியே!) ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாக விவரிக்கக்கூடிய இவ்வேதத்தை நாம்தான் உம்மீது இறக்கி இருக்கிறோம். இது நேரான வழியாகவும், அருளாகவும் இருப்பதுடன் (எனக்கு) முற்றிலும் பணிந்து கட்டுப்படுபவர்களுக்கு ஒரு நற்செய்தியாகவும் இருக்கிறது

[90] (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் நீதி செலுத்தும்படியாகவும், நன்மை செய்யும்படியாகவும், உறவினர்களுக்கு(ப் பொருள்) கொடுத்து உதவி செய்யும்படியாகவும் நிச்சயமாக அல்லாஹ் (உங்களை) ஏவுகிறான். மானக்கேடான காரியங்கள், பாவம், அநியாயம் ஆகியவற்றிலிருந்து (உங்களை) அவன் தடுக்கிறான். நீங்கள் நல்லுணர்வு பெறுவதற்காக அவன் உங்களுக்கு (இப்படி) நல்லுபதேசம் செய்கிறான்

[91] நீங்கள் அல்லாஹ்வின் பெயரால் செய்யும் உடன்படிக்கையை முழுமையாக நிறைவேற்றுங்கள். அல்லாஹ்வை சாட்சியாக வைத்து சத்தியம் செய்து அதை உறுதிப்படுத்திய பின்னர், அந்தச் சத்தியத்தை நீங்கள் முறித்துவிடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் செயலை நன்கறிவான்

[92] (மனிதர்களே! உறுதிப்படுத்திய சத்தியத்தை முறித்து) நீங்கள் ஒரு பெண்ணுக்கு ஒப்பாகிவிட வேண்டாம். அவள் மிக சிரமப்பட்டு நூற்ற நூலை, தானே பிரித்து துண்டு துண்டாக்கி விடுகிறாள். மேலும், ஒரு வகுப்பாரைவிட மற்றொரு வகுப்பார் பலம் வாய்ந்தவர்களாக ஆகவும் உங்கள் சத்தியத்தைக் காரணமாக்கிக் கொள்ளாதீர்கள். இவ்விஷயத்தில் (நீங்கள் சரியாக நடக்கிறீர்களா இல்லையா? என்று) நிச்சயமாக அல்லாஹ் உங்களை சோதிக்கிறான். தவிர, நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருந்தவற்றையும் மறுமை நாளில் அவன் உங்களுக்குத் தெளிவாக விவரித்துக் காண்பிப்பான்

[93] அல்லாஹ் நாடியிருந்தால் உங்கள் அனைவரையும் ஒரே (மார்க்கத்தைப் பின்பற்றும்) வகுப்பினராக ஆக்கியிருப்பான். எனினும், (இறைவன்) தான் நாடியவர்களை (அவர்களுடைய பாவத்தின் காரணமாக) தவறான வழியில் அவன் விட்டுவிடுகிறான். தான் நாடியவர்களை (அவர்களின் நற்செயல்களின் காரணமாக) நேரான வழியில் செலுத்துகிறான். நீங்கள் செய்து கொண்டிருந்த செயல்களைப் பற்றி நிச்சயமாக நீங்கள் (மறுமையில்) கேள்வி கேட்கப்படுவீர்கள்

[94] உங்களுக்குள் நீங்கள் (விஷமம் செய்வதற்காக) உங்கள் சத்தியத்தைக் காரணமாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். அப்படி செய்தால் நிலைபெற்ற (உங்கள்) பாதம் பெயர்ந்து உறுதி குலைந்துவிடும். தவிர, (சத்தியத்தை முறிப்பதினால்) அல்லாஹ்வின் பாதையை விட்டும் நீங்கள் தடுத்துக் கொள்வதன் காரணமாக பல துன்பங்களையும் நீங்கள் அனுபவிக்கும்படி நேரிடும். கடுமையான வேதனையும் உங்களுக்குக் கிடைக்கும்

[95] அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை ஒரு சொற்ப விலைக்கு நீங்கள் விற்றுவிடாதீர்கள். நீங்கள் அறிவுடையவர்களாக இருந்தால் அல்லாஹ்விடத்தில் இருப்பதுதான் உங்களுக்கு மிக மேலானதாகும்

[96] உங்களிடமுள்ள (பொருள்கள்) அனைத்தும் செலவழிந்துவிடும்; அல்லாஹ்விடத்தில் உள்ளவையோ (என்றென்றும்) நிலையாக இருக்கும். எவர்கள் (கஷ்டங்களை) உறுதியாகச் சகித்துக் கொண்டார்களோ அவர்கள் (செய்யும் பல நற்காரியங்களுக்கு அவர்கள்) செய்ததைவிட மிக்க அழகான கூலியையே நாம் அவர்களுக்குக் கொடுப்போம்

[97] ஆணாயினும், பெண்ணாயினும் நம்பிக்கை கொண்டு நற்செயல்களை எவர் செய்தாலும் நிச்சயமாக நாம் அவர்களை (இம்மையில்) நல்ல வாழ்க்கையாக வாழச் செய்வோம். மேலும், (மறுமையிலோ) அவர்கள் செய்து கொண்டிருந்ததைவிட மிக்க அழகான கூலியையே நிச்சயமாக நாம் அவர்களுக்குக் கொடுப்போம்

[98] (நபியே!) நீர் குர்ஆனை ஓத ஆரம்பித்தால் (அதற்கு முன்னதாக) விரட்டப்பட்ட ஷைத்தானைவிட்டு காக்கும்படி அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருவீராக

[99] எவர்கள் நம்பிக்கை கொண்டு தங்கள் இறைவனிடமே பொறுப்பை ஒப்படைத்து இருக்கிறார்களோ அவர்களிடத்தில் நிச்சயமாக (இந்த) ஷைத்தானுக்கு ஓர் அதிகாரமும் இல்லை

[100] அவனுடைய அதிகாரமெல்லாம் அவனுடன் சம்பந்தம் வைப்பவர்களிடமும் அல்லாஹ்வுக்கு இணைவைப்பவர்களிடமுமே செல்லும்

[101] (நபியே!) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தைக் கொண்டு மாற்றினால் இவர்கள் (உம்மை நோக்கி) ‘‘நிச்சயமாக நீர் பொய்யர்'' என்று கூறுகின்றனர். எ(ந்த நேரத்தில் எந்தக் கட்டளையை, எந்த வசனத்)தை அருள வேண்டுமென்பதை அல்லாஹ் நன்கறிவான்; இவர்களில் பெரும்பாலானவர்கள் (இந்த உண்மையை) அறியமாட்டார்கள்

[102] மெய்யாகவே இதை உமது இறைவனிடமிருந்து ‘ரூஹுல் குதுஸ்' (என்னும் ஜிப்ரயீல்)தான் இறக்கி வைத்தார் என்று (நபியே!) கூறுவீராக!. (இந்த குர்ஆன் இறைவனுக்கு) நம்பிக்கைக் கொண்டோரை உறுதிப்படுத்துவதற்காகவும், முற்றிலும் பணிந்து கட்டுப்பட்டவர்களுக்கு நேரான வழியாகவும் நற்செய்தியாகவும் இருக்கிறது

[103] (நபியே! ‘‘இவ்வேத வசனங்களை ரோமிலிருந்து வந்திருக்கும்) ஒரு (கிறிஸ்தவ) மனிதன்தான் நிச்சயமாக உமக்குக் கற்றுக் கொடுக்கிறான்; (இறைவன் கற்றுக்கொடுக்கவில்லை)'' என்று அவர்கள் கூறுவதை நிச்சயமாக நாம் அறிவோம். எவன் (உமக்குக்) கற்றுக் கொடுப்பதாக அவர்கள் கூறுகிறார்களோ அ(ந்தக் கிறிஸ்த)வன் (அரபி மொழியை ஒரு சிறிதும் அறியாத) அஜமி. இவ்வேதமோ மிக (நாகரிகமான) தெளிவான அரபி மொழியில் இருக்கிறது. (ஆகவே, அவர்கள் கூறுவது சரியன்று)

[104] நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை (மனமுரண்டாக) நம்பிக்கை கொள்ளவில்லையோ அவர்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்த மாட்டான். மேலும், அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனைதான் உண்டு

[105] (இது) பொய் என்று கற்பனை செய்பவர்களெல்லாம் அல்லாஹ்வுடைய வசனங்களை நம்பாதவர்கள்தான். (உண்மையில்) இவர்கள்தான் பொய்யர்கள்.(நபியே! நீர் பொய்யரல்ல)

[106] (ஆகவே,) எவரேனும் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டதன் பின்னர் அவனை நிராகரித்தால் அவனைப் பற்றி கவனிக்கப்படும். அவனுடைய உள்ளம் நம்பிக்கையை கொண்டு முற்றிலும் திருப்தியடைந்தே இருக்க, எவருடைய நிர்ப்பந்தத்தினால் அவன் (இப்படி) நிராகரித்தால் அவன் மீது ஒரு குற்றமுமில்லை. எனினும், அவனுடைய உள்ளத்தில் நிராகரிப்பே நிறைந்திருந்(து இப்படி செய்)தால் அவன் மீது அல்லாஹ்வுடைய கோபம்தான் ஏற்படும். அவனுக்கு கடுமையான வேதனையுமுண்டு

[107] ஏனென்றால், நிச்சயமாக இவர்கள் மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையின் மீதுதான் நேசம் கொண்டார்கள். நிச்சயமாக, நிராகரிக்கின்ற (இத்தகைய) மக்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்தமாட்டான்

[108] இவர்களின் இதயங்கள் மீதும், காதுகள் மீதும், கண்கள் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். இவர்கள்தான் (தங்கள் தீய முடிவை) உணர்ந்து கொள்ளாதவர்கள்

[109] மறுமையில் முற்றிலும் நஷ்டமடைபவர்கள் இவர்கள்தான் என்பதில் ஒரு ஐயமுமில்லை

[110] (நபியே!) எவர்கள் (எதிரிகளால்) துன்புறுத்தப்பட்டு, பின்னர் (தங்கள் இல்லத்திலிருந்து) வெளிப்பட்டு, போரும் புரிந்து (பல சிரமங்களையும்) சகித்துக் கொண்டு உறுதியாக இருந்தார்களோ அவர்களுக்(கு அருள் புரிவதற்)காகவே நிச்சயமாக உமது இறைவன் இருக்கிறான். நிச்சயமாக உமது இறைவன் இதற்குப் பின்னரும் (அவர்களை) மன்னிப்பவன் (அவர்கள் மீது) கருணையுடையவன் ஆவான்

[111] ஒவ்வோர் ஆத்மாவும் (எவரையும் கவனியாது) தன்னைப் பற்றி (மட்டும்) பேசுவதற்காக வருகின்ற (நாளை நபியே! அவர்களுக்கு ஞாபக மூட்டுவீராக. அந்)நாளில் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அதன் செயலுக்குரிய கூலி முழுமையாகக் கொடுக்கப்படும். (அதைக் கூட்டியோ குறைத்தோ எவ்வகையிலும்) அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்

[112] ஓர் ஊராரை அல்லாஹ் (அவர்களுக்கு) உதாரணமாகக் கூறுகிறான். அவ்வூர் (மிக்க செழிப்பாகவும், அதிலிருந்தவர்கள்) திருப்தியோடும் அச்சமற்றும் இருந்தனர். அவர்களுக்கு வேண்டிய பொருள்கள் அனைத்தும் ஒவ்வொரு திசையிலிருந்தும் தடையின்றி வந்து கொண்டிருந்தன. இந்நிலைமையில் (அவ்வூர் வாசிகள் அல்லாஹ்வை நிராகரித்து) அல்லாஹ்வுடைய அருட்கொடைகளுக்கு(ம் நன்றி செலுத்தாமல்) மாறு செய்தனர். ஆகவே, அவர்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயல்களின் காரணமாக அல்லாஹ் பசியையும் பயத்தையும் அவர்களுக்கு உடையாக அணிவித்து அவர்கள் அதைச் சுவைக்கும்படிச் செய்தான்

[113] (நபியே!) அவர்களிலிருந்தே (நாம் அனுப்பிய நம்) தூதரும் அவர்களிடம் வந்தார். எனினும், அவர்கள் அவரைப் பொய்யாக்கி விட்டார்கள். ஆகவே, (இவ்வாறு) அவர்கள் அநியாயக்காரர்களாக இருக்கும் நிலைமையில் அவர்களை வேதனைப் பிடித்துக் கொண்டது

[114] (நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் உங்களுக்கு அளித்தவற்றில் ஆகுமான நல்லவற்றையே புசியுங்கள். நீங்கள் அல்லாஹ்வை வணங்குபவர்களாக இருந்தால், அவனுடைய அருட்கொடைகளுக்கு நீங்கள் நன்றி செலுத்தி வாருங்கள்

[115] (புசிக்கக் கூடாதென்று) உங்களுக்கு விலக்கப்பட்டிருப்பவை எல்லாம் செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும் அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் கூறப்பட்டவையும் ஆகும். எவரேனும் பாவம் செய்யும் எண்ணமின்றி, (எவராலும்) நிர்ப்பந்திக்கப்பட்டு (அல்லது பசியின் கொடுமையால் அவசியத்திற்கு அதிகப்படாமல் இவற்றைப் புசித்து)விட்டால் (அவர் மீது குற்றமாகாது. ஆகவே, இத்தகைய நிலைமையில் அவரை) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னித்து மிகக் கருணை காட்டுவான்

[116] உங்கள் நாவில் வந்தவாறெல்லாம் பொய் கூறுவதைப்போல் (எதைப் பற்றியும் மார்க்கத்தில்) இது ஆகும்; இது ஆகாது என்று கூறாதீர்கள். (அவ்வாறு கூறினால் அல்லாஹ்வின் மீது அபாண்டமாகப் பொய் கூறுவது போலாகும்.) எவர்கள் அல்லாஹ்வின் மீதே பொய்யைக் கற்பனை செய்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக வெற்றி அடையவே மாட்டார்கள்

[117] (இவர்கள் இவ்வுலகில் அனுபவிப்பதெல்லாம்) சொற்ப இன்பம்தான். (மறுமையில்) அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையுண்டு

[118] (நபியே!) இதற்கு முன்னர் (6ம் அத்தியாயம் 146ம் வசனத்தில்) நாம் உங்களுக்கு விவரித்தவற்றை யூதர்களுக்குத் தடுத்துவிட்டோம். (எனினும்) நாமாகவே (அதைத் தடுத்து) அவர்களுக்குத் தீங்கிழைத்து விடவில்லை. எனினும், அவர்கள் (தாமாகவே அவற்றைத் தடுத்துக்கொண்டு) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்

[119] (நபியே!) எவர்கள் தங்கள் அறியாமையினால் பாவத்தைச் செய்துவிட்டு, அறிந்த பின்னர் அதிலிருந்து விலகி நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களை; (அவர்கள் பாவத்திலிருந்து விலகி நற்செயல்களைச் செய்த) பின்னர் நிச்சயமாக உமது இறைவன் மிக்க மன்னித்து, மிகக் கருணை காட்டுவான்

[120] நிச்சயமாக இப்றாஹீம் அல்லாஹ்வுக்கு மிக்க பயந்து நடக்கும் மிகுந்த மார்க்கப்பற்றுடைய வழிகாட்டியாக இருந்தார். மேலும், (இறைவனுக்கு) இணைவைத்து வணங்குபவர்களில் அவர் இருக்கவில்லை

[121] இறைவனின் அருட்கொடைகளுக்கு (எந்நேரமும்) நன்றி செலுத்துபவராகவும் இருந்தார். ஆகவே, (இறைவனும்) அவரைத் தேர்ந்தெடுத்து நேரான வழியில் செலுத்தினான்

[122] (ஆகவே, அவருடைய இறைவனாகிய) நாம் இம்மையிலும் நன்மையையே அவருக்குக் கொடுத்தோம். மறுமையிலும் நிச்சயமாக அவர் நல்லடியார்களில் (ஒருவராக) இருப்பார்

[123] ஆகவே, (நபியே!) நீர் மிக்க உறுதியோடு மேன்மையான (அந்த) இப்றாஹீமுடைய மார்க்கத்தை மிகுந்த பற்றுடையவராக பின்பற்றும்படி உமக்கு வஹ்யி அறிவித்தோம். அவர் இணைவைத்து வணங்குபவர்களில் (ஒருவராக) இருக்கவேயில்லை

[124] சனிக்கிழமையை(க் கௌரவிக்கும்படி) செய்யப்பட்டதெல்லாம், அதைப் பற்றி (யூதர்களில்) தர்க்கித்துக் கொண்டிருந்தவர்களுக்குத்தான். நிச்சயமாக உமது இறைவன் மறுமை நாளில் அவர்களுக்கிடையில், அவர்கள் (இம்மையில்) தர்க்கித்துக் கொண்டிருந்தவற்றைப் பற்றித் தீர்ப்பளிப்பான்

[125] (நபியே! மனிதர்களை) மதிநுட்பத்தைக் கொண்டும், அழகான நல்லுபதேசத்தைக் கொண்டுமே உமது இறைவனுடைய வழியின் பக்கம் அழைப்பீராக! மேலும், அவர்களுடன் (தர்க்கிக்க நேரிட்டால்) (கண்ணியமான) அழகான முறையில் தர்க்கம் செய்வீராக. உமது இறைவனுடைய வழியிலிருந்து வழி தவறியவர்கள் எவர்கள் என்பதை நிச்சயமாக அவன்தான் நன்கறிவான். நேரான வழியிலிருப்பவர்கள் யார் என்பதையும் அவன்தான் நன்கறிவான்

[126] (நம்பிக்கையாளர்களே! உங்களைத் தாக்கியவர்களை) நீங்கள் பதிலுக்குப் பதிலாய்த் தாக்கக் கருதினால் உங்களை அவர்கள் தாக்கிய அளவே அவர்களை நீங்கள் தாக்குங்கள். (அதற்கு அதிகமாக அல்ல. தவிர, உங்களைத் தாக்கியதை) நீங்கள் சகித்துக் கொண்டாலோ அது சகிப்பவர்களுக்கு மிக நன்றே

[127] ஆகவே, (நபியே!) சகித்துக்கொள்வீராக. எனினும், அல்லாஹ்வின் உதவியின்றி சகித்துக் கொள்ள உம்மால் முடியாது. அவர்களுக்காக (எதைப் பற்றியும்) கவலைப்படாதீர். அவர்கள் செய்கின்ற சூழ்ச்சிகளைப் பற்றி நெருக்கடியிலும் ஆகாதீர்

[128] நிச்சயமாக எவர்கள் மெய்யாகவே இறையச்சமுடையவர்களாக இருக்கிறார்களோ அவர்களுடனும், எவர்கள் நன்மை செய்கிறார்களோ அவர்களுடனும் தான் அல்லாஹ் இருக்கிறான்

அல்இஸ்ரா

Surah 17

[1] (அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் (முஹம்மது (ஸல்) என்னும்) தன் அடியாரை(க் கஅபாவாகிய) சிறப்புற்ற மஸ்ஜிதிலிருந்து (வெகு தூரத்தில் இருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஒரே இரவில் அழைத்துச் சென்றான். அதைச்சுற்றி நாம் அருள் புரிந்திருக்கிறோம். நம் அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காகவே (அங்கு அழைத்துச் சென்றோம்). அவன்தான் நிச்சயமாக நன்கு செவியுறுபவன், உற்று நோக்குபவன் ஆவான்

[2] நாம் மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம். இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு அதை ஒரு வழிகாட்டியாக அமைத்து ‘‘நீங்கள் என்னைத் தவிர (மற்ற எவரையும் உங்களுக்கு) பொறுப்பாளனாக எடுத்துக் கொள்ளக்கூடாது'' என்று அவர்களுக்குக் கட்டளையிட்டோம்

[3] நூஹ்வுடன் நாம் கப்பலில் ஏற்றி பாதுகாத்தவர்களுடைய சந்ததிகளே! அவர் நிச்சயமாக (அதற்கு) மிக்க நன்றி செலுத்தும் அடியாராகவே இருந்தார். (ஆகவே, அவர்களின் வழித்தோன்றல்களாகிய நீங்களும் எனக்கு நன்றி செலுத்துங்கள்)

[4] இஸ்ராயீலின் சந்ததிகளே! நிச்சயமாக நீங்கள் பூமியில் இரண்டு முறை விஷமம் செய்வீர்கள் என்றும், நிச்சயமாக நீங்கள் பெரும் மேன்மைகளை அடை(ந்து கர்வம் கொண்டு அநியாயம் செய்)வீர்கள்! என்றும் (உங்களுக்கு அளித்த) வேதத்தில் நாம் முடிவு செய்துள்ளோம்

[5] அவ்விரண்டில் முதல் தவணை வந்த சமயத்தில் (நீங்கள் செய்து கொண்டிருந்த குற்றங்களுக்குத் தண்டனையாக) நாம் படைத்த இரக்கமற்ற பெரும் பலவான்களாகிய மனிதர்களை உங்கள் மீது ஏவிவிட்டோம். அவர்கள் (பைத்துல் முகத்தஸிலிருந்த உங்கள்) வீடுகளுக்குள் ஊடுருவிச் சென்று (தங்கள் கைக்குக் கிட்டியதையெல்லாம் அழித்து நாசமாக்கி) விட்டார்கள். (அதனால் பைத்துல் முகத்தஸிலிருந்த ஆலயமும், அவ்வூரும் அழிந்து நாசமாயின. இவ்வாறு நமது முந்திய) வாக்குறுதி நிறை வேறியது

[6] பின்னர் அவர்களுக்கு எதிராக உங்களுக்கு சாதகமாக காலச் சக்கரத்தைத் திருப்பி (உங்களுக்கு வெற்றியைக் கொடுத்து) ஏராளமான பொருள்களையும் ஆண் மக்களையும் கொண்டு நாம் உங்களுக்கு உதவி புரிந்து, உங்களைப் பெரும் கூட்டத்தினராகவும் ஆக்கினோம்

[7] (அச்சமயம் அவர்களை நோக்கி) நீங்கள் நன்மை செய்தால் (அது) உங்களுக்குத்தான் நன்று. நீங்கள் தீமை செய்தால் அது உங்களுக்கே (கேடாகும் என்றும் நாம் கூறினோம். எனினும், அவர்கள் அநியாயம் செய்யவே ஆரம்பித்தனர். ஆகவே,) இரண்டாவது தவணை வந்த சமயத்தில் (உங்களைத் துன்புறுத்தி) உங்கள் முகங்களை கெடுத்து, முந்திய தடவை மஸ்ஜிதுல் அக்ஸாவில் நுழைந்தவாறே (இந்தத் தடவையும் அதனுள்) நுழைந்து, தங்கள் கைக்குக் கிடைத்தவற்றையெல்லாம் அழித்து நாசமாக்கக்கூடிய (கடின சித்தமுடைய) அவர்களை (நாம் உங்கள் மீது) ஏவினோம்

[8] (நீங்கள் விஷமம் செய்வதைவிட்டு விலகிக் கொண்டால்) உங்கள் இறைவன் உங்கள் மீது கருணை புரியலாம். (அப்படி இல்லாமல் உங்கள் விஷமத்தின் பக்கமே) பின்னும் நீங்கள் திரும்பினால் நாமும் (உங்களை முன் போல தண்டிக்க) முன் வருவோம். நிராகரிப்பவர்களுக்கு நரகத்தை விரிப்பாக ஆக்கி விடுவோம்

[9] நிச்சயமாக இந்த குர்ஆன் மிக நேரான, நீதமான பாதைக்கு வழி காட்டுகிறது; மேலும், (உங்களில்) நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்பவர்களுக்கு நிச்சயமாக மிகப் பெரிய கூலி உண்டு என்றும் நற்செய்தி கூறுகிறது

[10] (உங்களில்) எவர்கள் மறுமையை நம்பவில்லையோ அவர்களுக்கு நிச்சயமாக நாம் மிகத் துன்புறுத்தும் வேதனையை தயார்படுத்தி இருக்கிறோம் (என்றும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது)

[11] மனிதன் நன்மையைக் கோரி பிரார்த்திப்பதைப் போலவே (சில சமயங்களில் அறியாமையினால்) தீமையைக் கோரியும் பிரார்த்திக்கிறான். ஏனென்றால், மனிதன் (இயற்கையாகவே பொறுமையிழந்த) அவசரக்காரனாக இருக்கிறான்

[12] இரவையும் பகலையும் நாம் அத்தாட்சிகளாக ஆக்கினோம். (அதில்) இரவின் அத்தாட்சியை மங்கச் செய்தோம். (பல இடங்களிலும் சுற்றித் திரிந்து) உங்கள் இறைவனின் அருளை நீங்கள் தேடிக்கொள்வதற்காக பகலின் அத்தாட்சியைப் பிரகாசமாக்கினோம். ஆண்டுகளின் எண்ணிக்கையையும் (மாதங்களின்) கணக்கையும் (இதன் மூலம்) நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள். ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாகவே நாம் விவரித்துள்ளோம்

[13] ஒவ்வொரு மனிதனின் (செயலைப் பற்றிய விரிவான தினசரிக்) குறிப்பை அவனுடைய கழுத்தில் மாட்டியிருக்கிறோம். மறுமை நாளில் அதை அவனுக்கு ஒரு புத்தகமாக எடுத்துக் கொடுப்போம். அவன் அதை விரிக்கப்பட்டதாகப் பார்ப்பான்

[14] (அச்சமயம் அவனை நோக்கி) ‘‘இன்றைய தினம் உன் கணக்கைப் பார்க்க நீயே போதுமானவன். ஆகவே, உன் (குறிப்புப்) புத்தகத்தை நீ படித்துப் பார்'' (என்று கூறுவோம்)

[15] எவன் நேரான வழியில் செல்கிறானோ அவன் தன் நன்மைக்காகவே நேரான வழியில் செல்கிறான். எவன் தவறான வழியில் செல்கிறானோ அவன் (தவறான வழியில் சென்று) தனக்கே தீங்கிழைத்துக் கொள்கிறான். ஒருவனுடைய பாவச்சுமையை மற்றொருவன் சுமக்க மாட்டான். (நமது) தூதர் ஒருவரை அனுப்பாத வரை நாம் (எவரையும்) வேதனை செய்வதில்லை

[16] ஓர் ஊரை (அவ்வூராரின் தீய செயலின் காரணமாக) நாம் அழித்துவிடக் கருதினால், அதில் சுகமாக வாழ்பவர்களை நன்மையைக் கொண்டு நாம் ஏவுகிறோம். ஆனால், அவர்கள் அதில் விஷமம் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். பின்னர், அவர்கள் மீது நம் வாக்கு ஏற்பட்டு அவ்வூரை நாம் அடியோடு அழித்து விடுகிறோம்

[17] நூஹ்வுக்குப் பின்னர் நாம் எத்தனையோ வகுப்பாரை (அவர்களின் அநியாயத்தின் காரணமாக) அழித்திருக்கிறோம். தன் அடியார்களின் பாவங்களை உற்று நோக்கி அறிந்து கொள்வதற்கு உமது இறைவனே போதுமானவன். (மற்றெவரின் உதவியும் அவனுக்குத் தேவையில்லை)

[18] எவர்கள், (மறுமையைப் புறக்கணித்துவிட்டு) இம்மையை மட்டும் விரும்புகிறார்களோ அவர்களில் நாம் நாடியவர்களுக்கு நாம் நாடியதை இம்மையிலேயே கொடுத்து விடுகிறோம். பின்னர், மறுமையில் நரகத்தைத்தான் அவர்களுக்கு தயார்படுத்தி வைத்திருக்கிறோம். அவர்கள் நிந்திக்கப்பட்டவர்களாகவும், சபிக்கப்பட்டவர்களாகவும் அதில் நுழைவார்கள்

[19] எவர்கள் மறுமையை விரும்பி அதற்காகப் பெரும் முயற்சியையும் எடுத்துக் கொண்டு நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருக்கிறார்களோ, அவர்களின் செயல்கள் (அல்லாஹ் விடத்தில் மிக்க அன்பாக) அங்கீகரிக்கப்படுபவையாக இருக்கின்றன

[20] (இம்மையை விரும்புகிற) அவர்களுக்கும் (மறுமையை விரும்புகிற) இவர்களுக்கும் ஆக அனைவருக்கும் உமது இறைவன் தன் கொடையைக் கொண்டே உதவி செய்கிறான். உமது இறைவனின் கொடை (இவ்விருவரில் எவருக்குமே) தடை செய்யப்பட்டதாக இல்லை

[21] (நபியே!) அவர்களில் சிலரை சிலர் மீது எவ்வாறு மேன்மையாக்கி வைத்திருக்கிறோம் என்பதை கவனிப்பீராக! மறுமை (வாழ்க்கை)யோ பதவிகளாலும் மிகப் பெரிது; சிறப்பிப்பதாலும் மிகப்பெரிது

[22] (நபியே!) அல்லாஹ்வுடன் மற்றொருவனை வணக்கத்திற்குரியவனாக ஆக்காதீர். (அவ்வாறு செய்தால்) நீர் நிந்திக்கப்பட்டவராகவும் உதவியற்றவராகவும் அமர்ந்து விடுவீர்

[23] (நபியே!) உமது இறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்று (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். உம்மிடம் இருக்கும் அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமையை அடைந்து விட்டபோதிலும் அவர்களை வெருட்டவும் வேண்டாம்; அவர்களை (நிந்தனையாகச்) ‘சீ' என்றும் சொல்ல வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும்) மிக்க மரியாதையாக(வும் அன்பாகவுமே) பேசுவீராக

[24] அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக! மேலும், ‘‘என் இறைவனே! நான் குழந்தையாக இருந்த பொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்துப் பாதுகாத்தவாறே நீயும் அவ்விருவர் மீது அன்பும் அருளும் புரிவாயாக!'' என்றும் பிரார்த்திப்பீராக

[25] உங்கள் மனதிலுள்ளதை உங்கள் இறைவன்தான் நன்கறிவான். நீங்கள் நன்னடத் தையுடையவர்களாக இருந்து (உங்களில் எவர்) மன்னிப்புக் கோரிய(போதிலும் அ)வர்களின் குற்றங்களை நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவே இருக்கிறான்

[26] உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் அவரவர்களுடைய உரிமைகளைக் கொடுத்து வரவும். (செல்வத்தை) அளவு கடந்து வீண் செலவு செய்யவேண்டாம்

[27] ஏனென்றால், மிதமிஞ்சி செலவு செய்பவர்கள் ஷைத்தானுடைய சகோதரர்களாக இருக்கின்றனர். ஷைத்தானோ தன் இறைவனுக்குக்கூட நன்றி செலுத்தா(து மாறு செய்)தவனாக இருக்கிறான்

[28] (நபியே! உம்மிடம் பொருள்கள் இல்லாமல் அதற்காக) நீர் உமது இறைவனின் அருளை எதிர் பார்த்திருக்கும் சமயத்தில் (உம்மிடம் யாரேனும் வந்து ஏதும் கேட்டு) அவர்களை நீர் புறக்கணிக்கும் படி நேரிட்டால் (அவர்களுடன் கடுகடுப்பாகப் பேசாதீர்.) மிக்க அன்பான வார்த்தைகளையே அவர்களுக்குக் கூறுவீராக

[29] (உமது பொருள்களில் ஒன்றையுமே செலவு செய்யாது) உமது கைகளைக் கழுத்தில் மாட்டிக் கொள்ளாதீர்! (உம்மிடம் இருப்பதை எல்லாம் கொடுத்து) உமது கையை முற்றிலும் விரித்து விடாதீர்! அதனால் நீர் நிந்திக்கப்பட்டவராகவும் முடைப்பட்டவராகவும் தங்கிவிடுவீர்

[30] நிச்சயமாக உமது இறைவன், தான் விரும்பியவர்களுக்கு விரிவாகக் கொடுக்கிறான்; (தான் விரும்பியவர்களுக்கு சுருக்கிக் குறைத்து) அளவாக கொடுக்கிறான். ஏனென்றால், நிச்சயமாக அவன், தன் அடியார்(களின் தன்மை)களை நன்கறிந்தவனாகவும், உற்று நோக்குபவனாகவும் இருக்கிறான். (ஆதலால், ஒவ்வொருவரின் தகுதிக்குத் தக்கவாறு கொடுக்கிறான்)

[31] (மனிதர்களே!) நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொலை செய்து விடாதீர்கள். நாம்தான் அவர்களுக்கும் உங்களுக்கும் உணவளிக்கிறோம். அவர்களைக் கொலை செய்வது நிச்சயமாக (அடாத) பெரும் பாவமாகும்

[32] (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் விபசாரத்திற்கு நெருங்கவும் வேண்டாம்.ஏனென்றால், நிச்சயமாக அது மானக்கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது

[33] (எவரையும் கொலை செய்வது ஆகாதென்று) அல்லாஹ் தடுத்திருக்க, நீங்கள் எம்மனிதனையும் நியாயமின்றி கொலை செய்து விடாதீர்கள். எவரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டுவிட்டால், அவனுடைய வாரிசுகளுக்கு(ப் பழிவாங்க) நாம் அதிகாரம் அளித்திருக்கிறோம். ஆனால், (கொலையாளியான) அவனைப் பழிவாங்குவதில் அளவு கடந்து (சித்திரவதை செய்து)விட வேண்டாம். நிச்சயமாக அவன் (பழிவாங்க) உதவி செய்யப்படுவான். (அதாவது: கொலைக்கு பழிவாங்க வாரிசுகளுக்கு உதவி செய்ய வேண்டும்)

[34] (நம்பிக்கையாளர்களே!) அநாதைக் குழந்தைகள் வாலிபத்தை அடையும் வரை (அவர்களுடைய பொருளுக்குப் பாதுகாப்பாளராக இருந்தால்) நீங்கள் நியாயமான முறையிலேயே தவிர அவர்களுடைய பொருளை நெருங்காதீர்கள். உங்கள் வாக்குறுதியை நீங்கள் முழுமையாக நிறைவேற்றுங்கள். ஏனென்றால், மறுமையில் வாக்குறுதியைப் பற்றி (உங்களிடம்) நிச்சயமாகக் கேட்கப்படும்

[35] நீங்கள் அளந்தால் முழுமையாக அளங்கள்; (நிறுத்தால்) சரியான எடையைக் கொண்டு நிறுங்கள். இது (உங்களுக்கு) மிக்க நன்று; மிக்க அழகான பலனையும் தரும்

[36] (நபியே!) நீர் அறியாத ஒரு விஷயத்தை பின் தொடராதீர்! ஏனென்றால், நிச்சயமாக காது, கண், உள்ளம் ஆகிய இவை ஒவ்வொன்றுமே (அவற்றின் செயலைப்பற்றி மறுமையில்) கேள்வி கேட்கப்படும்

[37] பூமியில் (பெருமையுடன்) கர்வம் கொண்டு நடக்க வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாகப் பூமியைப் பிளந்து விடவோ அல்லது மலையின் உச்சியை அடைந்து விடவோ உம்மால் முடியாது

[38] இவை அனைத்தும் உம் இறைவனிடத்தில் வெறுக்கப்பட்ட தீய காரியங்களாகும்

[39] (நபியே!) இவை உமது இறைவனால் உமக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்ட ஞான (உபதேச)ங்களாகும். ஆகவே, அல்லாஹ்வுடன் மற்றொருவனை வணக்கத்திற்குரியவனாக ஆக்காதீர். (அவ்வாறு செய்தால்) நீர் நிந்திக்கப்பட்டவராகவும், சபிக்கப்பட்டவராகவும் நரகத்தில் எறியப்படுவீர்

[40] (மனிதர்களே!) உங்கள் இறைவன், ஆண் மக்களை உங்களுக்குச் சொந்தமாக்கி விட்டு, வானவர்களைத் தனக்குப் பெண் மக்களாக ஆக்கிக் கொண்டானா? (இவ்வாறு கூறுகின்ற) நீங்கள் நிச்சயமாக மகத்தான (பொய்க்) கூற்றையே கூறுகிறீர்கள்

[41] இவர்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு இந்த குர்ஆனில் நிச்சயமாக நாம் பற்பல வகைகளில் (நல்லுபதேசங்களைக்) கூறியிருக்கிறோம். எனினும், (இவை அனைத்தும்) அவர்களுக்கு வெறுப்பையே தவிர அதிகப்படுத்தவில்லை

[42] (ஆகவே, நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: நீங்கள் சொல்வது போல் அல்லாஹ்வுடன் வேறு தெய்வங்கள் இருந்தால், அவை அர்ஷையுடைய (அல்லாஹ்வாகிய அ)வன் பக்கம் செல்லக்கூடிய வழியைக் கண்டுபிடித்து (அவனிடம் சென்றே) இருக்கும்

[43] அவன் மிகப் பரிசுத்தமானவன். இவர்கள் கூறுகின்ற கூற்றில் இருந்து அவன் மிக்க உயர்ந்தவன்

[44] ஏழு வானங்களும் பூமியும் இவற்றிலுள்ள அனைத்தும் அவனைப் புகழ்ந்து கொண்டே இருக்கின்றன. (இவற்றில்) ஒன்றுமே அவனைத் துதி செய்து புகழாதிருக்க வில்லை. எனினும், அவை துதி செய்து புகழ்வதை நீங்கள் அறிந்து கொள்வதில்லை. நிச்சயமாக அவன் பொறுமையுடையவனாக, மன்னிப்புடையவனாக இருக்கிறான்

[45] (நபியே!) நீர் குர்ஆனை ஓத ஆரம்பித்தால் உமக்கும் மறுமையை நம்பாதவர்களுக்கும் இடையில் தடுத்துக் கொள்ளக்கூடிய ஒரு திரையை ஆக்கி விடுகிறோம்

[46] அவர்களுடைய உள்ளங்களிலும், (அவர்கள்) அதை விளங்கிக் கொள்ள முடியாதவாறு திரையை அமைத்து அவர்களுடைய காதுகளைச் செவிடாக்கி விடுகிறோம். திரு குர்ஆனில் உமது இறைவன் ஒருவனைப்பற்றியே நீர் கூறிக் கொண்டிருந்தால், அவர்கள் வெறுத்துத் தங்கள் முதுகுப்புறமே (திரும்பிச்) சென்று விடுகின்றனர்

[47] அவர்கள் உமக்கு செவி சாய்த்தால் என்ன நோக்கத்துடன் செவி சாய்க்கிறார்கள் என்பதை நாம் நன்கறிவோம். அவர்கள் (தங்களுக்குள் உம்மைப் பற்றி) இரகசியமாகப் பேசிக்கொண்டால், “சூனியத்திற்குள்ளான மனிதனைத் தவிர (வேறொருவரையும்) நீங்கள் பின்பற்றவில்லை'' என்று இவ்வக்கிரமக்காரர்கள் (நம்பிக்கையாளர்களை நோக்கிக்) கூறுகின்றனர் (என்பதையும் நாம் நன்கறிவோம்)

[48] (நபியே!) உமக்கு எத்தகைய பட்டம் சூட்டுகிறார்கள் என்பதை நீர் கவனிப்பீராக. இவர்கள் வழிகெட்டே விட்டார்கள். (நேரான) வழியை அடைய இவர்களால் முடியாது

[49] ‘‘நாம் (இறந்து) எலும்பாகி, உக்கி, மக்கிப்போனதன் பின்னர் புதிய ஒரு படைப்பாக உயிர்ப்பிக்கப்படுவோமா?'' என்று அவர்கள் கேட்கிறார்கள்

[50] (அதற்கு நபியே!) கூறுவீராக: நீங்கள் (உக்கி, மக்கி, மண்ணாவது என்ன?) கல்லாகவோ இரும்பாகவோ ஆகிவிடுங்கள்

[51] அல்லது மிகப் பெரிதென உங்கள் மனதில் தோன்றும் வேறொரு பொருளாக ஆகிவிடுங்கள். இவ்வாறு மாறிய பின்னர் ‘‘எங்களை எவன் உயிர்ப்பிப்பான்?'' என்று அவர்கள் கேட்கட்டும். (அவ்வாறு கேட்டால் நபியே! அவர்களை நோக்கி) ‘‘உங்களை முதலாவதாக எவன் படைத்தானோ அவன்தான் (நீங்கள் மரணித்த பின்னும் உங்களை எழுப்புவான்)'' என்று கூறுவீராக. அதற்கவர்கள் தங்கள் தலையை உங்கள் அளவில் சாய்த்து ‘‘அந்நாள் எப்பொழுது (வரும்)?'' என்று கேட்பார்கள். அதற்கு (அவர்களை நோக்கி ‘‘அது தூரத்தில் இல்லை,) வெகு சீக்கிரத்தில் வந்துவிடலாம்'' என்று கூறுவீராக

[52] (இன்றைய தினம் நீங்கள் இறைவனை வெறுத்தபோதிலும் அவன்) உங்களை (விசாரணைக்காக) அழைக்கின்ற நாளில் நீங்கள் அவனைப் புகழ்ந்து கொண்டே அவனிடம் வருவீர்கள். (இறந்த பின்) வெகு சொற்ப(நேர)மே தவிர தங்கியிருக்கவில்லை என்றும் (அன்றைய தினம்) நீங்கள் எண்ணுவீர்கள்

[53] (நபியே! எனக்கு கட்டுப்பட்ட) என் அடியார்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் (எந்த மனிதருடன் பேசியபோதிலும்) எது மிக அழகியதோ அதையே கூறவும். நிச்சயமாக ஷைத்தான் அவர்களுக்கிடையில் (கெட்ட வார்த்தைகளைக் கூறும்படி செய்து) கெடுதலே செய்வான். (ஏனென்றால்,) நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்கமான எதிரியாக இருக்கிறான். (ஆகவே, எச்சரிக்கையாக இருங்கள்)

[54] (மனிதர்களே!) உங்களை உங்கள் இறைவன் நன்கறிந்தே இருக்கிறான். அவன் விரும்பினால் உங்களுக்கு அருள்புரிவான் அல்லது அவன் விரும்பினால் உங்களை வேதனை செய்வான். ஆகவே, (நபியே!) நாம் உம்மை அவர்களுக்குப் பொறுப்பாளியாக அனுப்பவில்லை

[55] வானங்களிலும் பூமியிலும் என்னென்ன இருக்கிறது என்பதை உம் இறைவன் நன்கறிவான். (நபியே! உமது இறைவனாகிய) நாம் நபிமார்களில் சிலரை சிலர்மீது மெய்யாகவே மேன்மையாக்கி வைத்து, தாவூது (நபி)க்கு ‘ஜபூர்' என்னும் வேதத்தைக் கொடுத்தோம்

[56] (நபியே! இணைவைத்து வணங்குபவர்களை நோக்கி) கூறுவீராக: அல்லாஹ்வைத் தவிர்த்து (வேறு தெய்வங்கள் இருப்பதாக) நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீர்களே அவற்றை நீங்கள் (உங்கள் சிரமங்களை நீக்க) அழையுங்கள். (அவ்வாறு அழைத்தால்) அவை உங்கள் சிரமத்தை நீக்கி வைக்கவோ அல்லது (அதைத்) தட்டிவிடவோ சக்திபெறாது (என்பதை அறிந்து கொள்வீர்கள்)

[57] இவர்கள் யாரை பிரார்த்தித்து அழைக்கிறார்களோ அவர்களுமோ தங்கள் இறைவனிடம் தங்களில் மிக நெருக்கமானவராக யார் ஆகமுடியும் என்பதற்காக நன்மை செய்வதையே ஆசை வைத்துக்கொண்டும், அவனுடைய அருளையே எதிர்பார்த்து அவனுடைய வேதனைக்குப் பயந்து கொண்டும் இருக்கிறார்கள். ஏனென்றால், நிச்சயமாக உமது இறைவனின் வேதனையோ, மிக மிக பயப்படக்கூடியதே

[58] (அநியாயக்காரர்கள் வசிக்கின்ற) எந்த ஊரையும் மறுமை நாள் வருவதற்கு முன்னதாக நாம் அழித்து விடாமல் அல்லது கடினமான வேதனை செய்யாமல் விடுவதில்லை. இவ்வாறே (நம்மிடமுள்ள நிகழ்ச்சிக் குறிப்பாகிய) ‘லவ்ஹுல் மஹ்ஃபூளி'ல் வரையப்பட்டு இருக்கிறது

[59] (இவர்களுக்கு) முன்னிருந்தவர்களும் (அவர்கள் விரும்பியவாறு நாம் கொடுத்த) அத்தாட்சிகளை பொய்யாக்கி விட்டனர் என்ற காரணத்தைத் தவிர, (இப்போதுள்ளவர்கள் கோரும்) அத்தாட்சிகளை அனுப்பிவைக்க வேறொன்றும் நமக்கு தடையாக இல்லை. (இதற்கு முன்னர்) ‘ஸமூது' என்னும் மக்களுக்கு (அவர்கள் விரும்பியவாறே) ஒரு பெண் ஒட்டகத்தை அத்தாட்சியாகக் கொடுத்திருந்தோம். அவர்களோ வரம்பு மீறி அதற்குத் தீங்கிழைத்து விட்டனர். (அவர்கள் விரும்புகின்ற) அத்தாட்சிகளை (அவர்களைப்) பயமுறுத்துவதற்காகவே தவிர நாம் அனுப்புவதில்லை

[60] (நபியே!) ‘‘உமது இறைவன் அம்மனிதர்களைச் சூழ்ந்துகொண்டான். (அவர்கள் உமக்குத் தீங்கிழைக்க முடியாது)'' என்று நாம் உமக்குக் கூறியதை கவனிப்பீராக. உமக்கு நாம் (மிஃராஜில்) காண்பித்த காட்சியும், சபிக்கப்பட்ட (கள்ளி) மரத்தை (அது மறுமையில் பாவிகளின் உணவென) குர்ஆனில் நாம் கூறியிருப்பதும் மனிதர்களை சோதிப்பதற்காகவே தவிர வேறில்லை. (நபியே! நம் வேதனையைப் பற்றி) நாம் அவர்களைப் பயமுறுத்துவது (அவர்களுடைய) பெரும் அட்டூழியத்தையே அவர்களுக்கு அதிகரிக்கச் செய்கிறது

[61] வானவர்களை நோக்கி, ‘‘ஆதமுக்குச் சிரம் பணியுங்கள்'' என நாம் கூறிய சமயத்தில் இப்லீஸைத் தவிர (வானவர்கள் அனைவரும் அவருக்குச்) சிரம் பணிந்தார்கள். அவனோ ‘‘நீ மண்ணால் படைத்தவனுக்கு நான் சிரம் பணிவதா?'' என்று கேட்டான்

[62] (மேலும், இறைவனை நோக்கி) ‘‘என்னைவிட நீ கௌரவப்படுத்தி இருப்பவர் இவரல்லவா என்பதை நீ கவனித்தாயா?'' (என்று ஏளனமாக ஆதமைச் சுட்டிக் காண்பித்து) ‘‘நீ என்னை மறுமை நாள் வரை பிற்படுத்தி வைத்தால் வெகு சிலரைத் தவிர இவருடைய சந்ததிகள் அனைவரையும் நான் வழிகெடுத்து (வேரறுத்து) விடுவேன்'' என்று கூறினான்

[63] (அதற்கு இறைவன், இங்கிருந்து) ‘‘நீ அப்புறப்பட்டு விடு. அவருடைய சந்ததிகளில் உன்னைப் பின்பற்றியவர்களுக்கும் (உனக்கும்) முற்றிலும் தகுதியான கூலி நிச்சயமாக நரகம்தான்'' என்றும்

[64] ‘‘நீ உனக்குச் சாத்தியமான அளவு கூச்சல் போட்டு அவர்களைத் தூண்டிவிடு. உன் குதிரைப் படைகளையும், காலாட்படைகளையும் அவர்கள் மீது ஏவிவிடு. அவர்களுடைய பொருளிலும் சந்ததியிலும் நீ கூட்டாக இருந்து கொண்டு அவர்களுக்கு (நயத்தையும் பயத்தையும் காட்டி) வாக்களி'' என்றும் கூறினான். ஆகவே, ஷைத்தான் (ஆகிய நீ) அவர்களுக்கு வாக்களிப்பதெல்லாம் ஏமாற்றமே தவிர வேறில்லை

[65] நிச்சயமாக எனது (மனத்தூய்மையுடைய) அடியார்கள் மீது உனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை'' (என்றும் கூறினான். ஆகவே, அவர்களை) பொறுப்பேற்றுக் கொள்ள உமது இறைவ(னாகிய நா)னே போதுமானவன்

[66] (மனிதர்களே! கடலில் நீங்கள் பயணம் செய்யும் பொழுது) உங்கள் இறைவனே உங்கள் கப்பலைக் கடலில் செலுத்துகிறான். (அதன் மூலம் பல நாடுகளுக்கும் சென்று) அவனுடைய அருளை நீங்கள் தேடிக்கொள்கிறீர்கள். நிச்சயமாக அவன் உங்கள் மீது மிகக் கருணையுடையவனாக இருக்கிறான்

[67] உங்களுக்கு கடலில் ஒரு தீங்கேற்படும் சமயத்தில், அல்லாஹ்வைத் தவிர நீங்கள் (இறைவனென) அழைத்துக் கொண்டிருந்த அனைத்தும் மறைந்து விடுகின்றன. (இறைவன் ஒருவன்தான் உங்கள் கண் முன் இருப்பவன்.) அவன் உங்களைக் கரையில் சேர்த்து பாதுகாத்துக் கொண்டாலோ (அவனை) நீங்கள் புறக்கணித்து விடுகிறீர்கள். மனிதன் மகா நன்றி கெட்டவனாக இருக்கிறான்

[68] (நன்றி கெட்ட) உங்களைப் பூமி விழுங்கிவிடாதென்றோ அல்லது உங்கள் மீது கல்மழை பொழியாதென்றோ நீங்கள் அச்சமற்று விட்டீர்களா? (அவ்வாறு நிகழ்ந்தால்) உங்களுக்கு உதவி செய்பவர்கள் எவரையும் நீங்கள் காணமாட்டீர்கள்

[69] அல்லது மற்றொரு தடவை உங்களை கடலில் கொண்டு போய் கடினமான புயல் காற்றை உங்கள் மீது ஏவி, உங்கள் நன்றி கெட்ட தன்மையின் காரணமாக உங்களை மூழ்கடித்துவிட மாட்டான் என்று நீங்கள் அச்சமற்று விட்டீர்களா? அச்சமயம் (நான் உங்களை அழித்து விடாது தடுக்க) என்னைப் பின்தொடர்பவர்கள் ஒருவரையும் நீங்கள் காணமாட்டீர்கள்

[70] ஆதமுடைய சந்ததியை நிச்சயமாக நாம் கண்ணியப்படுத்தினோம். கரையில் (வாகனங்கள் மீதும்) கடலில் (கப்பல்கள் மீதும்) நாம்தான் அவர்களைப் பயணிக்க வைக்கிறோம். நல்ல உணவுகளையும் நாமே அவர்களுக்கு அளிக்கிறோம். நாம் படைத்த (மற்ற உயிரினங்களில்) பலவற்றின் மீது (பொதுவாக) நாம் அவர்களை மிக மிக மேன்மையாக்கி வைத்திருக்கிறோம்

[71] ஒவ்வொரு மனிதனையும் அவர்களின் தலைவர்களுடன் (விசாரணைக்காக) நாம் அழைக்கும் நாளில், அவர்களின் (தினசரி குறிப்புப்) புத்தகம் அவர்களுடைய வலது கையில் கொடுக்கப்பட்டால் அவர்கள் தங்கள் (அதே தினசரி குறிப்புப்) புத்தகத்தை (மிக்க மகிழ்ச்சியோடு) வாசிப்பார்கள். (அவர்களுடைய கூலியில்) ஓர் நூல் அளவு (குறைத்து)ம் அநியாயம் செய்யப்படமாட்டார்கள்

[72] எவர்கள் இம்மையில் (நேரான வழியைக் காணாது) குருடர்களாகி விட்டார்களோ அவர்கள் மறுமையிலும் குருடர்களே! ஆகவே, அவர்கள் வழி தவறி விடுவார்கள்

[73] நாம் உமக்கு வஹ்யி மூலம் அறிவித்ததை நீர் விட்டு(விட்டு) அதல்லாததை நம்மீது நீர் பொய்யாகக் கற்பனை செய்து கூறும்படி உம்மை அவர்கள் திருப்பிவிடவே இருந்தார்கள். (அவ்வாறு நீர் செய்திருந்தால்) உம்மை அவர்கள் தங்கள் நண்பராகவும் எடுத்துக் கொண்டிருப்பார்கள்

[74] உம்மை நாம் உறுதியாக்கி வைக்காவிடில் நீர் ஒரு சிறிதேனும் அவர்கள் பக்கம் சாய்ந்துவிட நெருங்கி இருப்பீர்

[75] (அவ்வாறு நீர் சாய்ந்திருந்தால்) அந்நேரத்தில் நீர் உயிராக இருக்கும் போதும் நீர் மரணித்த பின்னரும் இரு மடங்கு (வேதனையைச்) சுவைக்கும்படி நாம் செய்திருப்போம். அதன் பின்னர், நமக்கு எதிராக உமக்கு உதவி செய்பவர்கள் ஒருவரையும் நீர் காணமாட்டீர்

[76] (நபியே! உமது) ஊரிலிருந்து உமது காலைப்பெயர்த்து அதிலிருந்து உம்மை வெளிப்படுத்திவிடவே அவர்கள் முடிவு கட்டியிருந்தார்கள். அப்படி அவர்கள் செய்திருந்தால் உமக்குப் பின்னர் வெகு சொற்ப நாள்களே தவிர அங்கு அவர்கள் இருந்திருக்க மாட்டார்கள்

[77] உமக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களைப் பற்றி நடைபெற்ற வழக்கமும் (இதுவாகவே) இருந்தது. நமது அந்த வழக்கத்தில் ஒரு மாறுதலையும் நீர் காணமாட்டீர்

[78] (நபியே!) சூரியன் சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை (ளுஹர், அஸர், மஃரிப், இஷா ஆகிய நேரத்) தொழுகைகளைத் தொழுது வருவீராக. ஃபஜ்ர் தொழுகையும் தொழுது வருவீராக. ஏனென்றால், நிச்சயமாக ஃபஜ்ர் தொழுகையானது வானவர்கள் கலந்துகொள்ளும் தொழுகையாகும்

[79] (தஹஜ்ஜுது தொழுகை உம் மீது கடமையாக இல்லாவிடினும்) நீர், நஃபிலாக இரவில் எழுந்து ஒரு (சிறிது) பாகத்தில் தொழுது வருவீராக! (இதன் அருளால் ‘மகாமே மஹ்மூத்' என்னும்) மிக்க புகழ்பெற்ற இடத்தில் உமது இறைவன் உம்மை அமர்த்தலாம்

[80] அன்றி, ‘‘என் இறைவனே! என்னை (மதீனாவில் நுழைய வைக்க வேண்டுமென்று நீ கருதினால்) நல்லவிதமாகவே நுழையவை. (மக்காவிலிருந்து என்னை வெளிப்படுத்த வேண்டுமென்று நீ கருதினால்) நல்லவிதமாகவே என்னை வெளிப்படுத்திவை. உன்னிடமிருந்து ஒரு வெற்றியை நீ எனக்கு உதவியாக்கித் தந்தருள்'' என்று (நபியே!) பிரார்த்திப்பீராக

[81] மேலும், ‘‘சத்தியம் வந்தது; அசத்தியம் மறைந்தது. நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும்'' என்றும் கூறுவீராக

[82] நம்பிக்கை கொண்டவர்களுக்கு அருளாகவும் நோய் நிவாரணியாகவும் உள்ளவற்றையே இந்தத் திரு குர்ஆனில் நாம் இறக்கியிருக்கிறோம். எனினும், அநியாயக்காரர்களுக்கோ (இது) நஷ்டத்தையே தவிர (வேறு எதையும்) அதிகரிப்பதில்லை

[83] நாம் மனிதனுக்கு அருள் புரிந்தால் (அதற்கு அவன் நன்றி செலுத்துவதற்குப் பதிலாக நம்மை) புறக்கணித்து முகம் திரும்பிக் கொள்கிறான். அவனை ஒரு தீங்கு அணுகினாலோ நம்பிக்கை இழந்து விடுகிறான்

[84] (ஆகவே, நபியே!) கூறுவீராக: ஒவ்வொரு மனிதனும் தனக்குத் தோன்றியவற்றையே செய்கிறான். ஆகவே, நேரான வழியில் செல்பவன் யார் என்பதை உங்கள் இறைவன்தான் நன்கறிவான்

[85] (நபியே!) ரூஹைப் பற்றி (யூதர்களாகிய) அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். அதற்கு நீர் “அது எனது இறைவனின் கட்டளையால் ஏற்பட்டது. (அதைப் பற்றி) வெகு சொற்ப ஞானமே தவிர உங்களுக்குக் கொடுக்கப்படவில்லை. (ஆதலால், அதன் நுட்பங்களை நீங்கள் அறிந்து கொள்ள முடியாது)'' என்று கூறுவீராக

[86] (நபியே!) நாம் விரும்பினால் வஹ்யி மூலம் உமக்கு அறிவித்த இந்த குர்ஆனையே (உம்மிடமிருந்து) போக்கிவிடுவோம். பின்னர், (இதை உம்மிடம் கொண்டு வர) நமக்கு விரோதமாக உமக்கு உதவி செய்ய எவரையும் நீர் காணமாட்டீர்

[87] ஆனால், உமது இறைவனுடைய அருளின் காரணமாகவே (அவ்வாறு அவன் செய்யவில்லை.) நிச்சயமாக உம் மீது அவனுடைய அருள் மிகப்பெரிதாகவே இருக்கிறது

[88] (நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து, சிலர் சிலருக்கு உதவியாக இருந்து இதைப்போன்ற ஒரு குர்ஆனைக் கொண்டுவர முயற்சித்தபோதிலும் இதைப்போல் கொண்டு வர அவர்களால் (முடியவே) முடியாது

[89] இந்த குர்ஆனில் எல்லா உதாரணங்களையும் மனிதர்களுக்கு(த் திரும்பத் திரும்ப) விவரித்துக் கூறியிருக்கிறோம். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் இதை நிராகரிக்காமல் இருக்கவில்லை

[90] (நபியே!) ‘‘இப்பூமி வெடித்து, ஒரு ஊற்றுக்கண்ணை நீர் ஏற்படுத்தும் வரை நாம் உம்மை நம்பிக்கை கொள்ள மாட்டோம்'' என்று அவர்கள் கூறுகின்றனர்

[91] ‘‘அல்லது மத்தியில் தொடர்ந்து நீரருவிகளை நீர் ஓடவைத்துக் கொண்டிருக்கக்கூடிய திராட்சை, பேரீச்சை மரங்களையுடைய ஒரு சோலை உமக்கு ஆகும் வரை (உம்மை நம்பிக்கை கொள்ள மாட்டோம்'' என்றும் கூறுகின்றனர்)

[92] ‘‘அல்லது நீர் எண்ணுகிற பிரகாரம் வானத்தை பல துண்டுகளாக எங்கள் (தலை) மீது விழவைக்கின்ற வரை அல்லது அல்லாஹ்வையும் வானவர்களையும் நம் (கண்) முன் நீர் கொண்டு வருகின்றவரை (உம்மை நாம் நம்பிக்கை கொள்ள மாட்டோம்'' என்றும் கூறுகின்றனர்)

[93] ‘‘அல்லது (மிக்க அழகான) தங்கத்தினாலாகிய ஒரு மாளிகை உமக்கு ஆகும் வரை அல்லது வானத்தின் மீது நீர் ஏறுகின்ற வரை (நாம் உம்மை நம்பிக்கைகொள்ள மாட்டோம்). ஏறியபோதிலும் நாம் ஓதக்கூடிய ஒரு வேதத்தை (நேராக) நம்மீது நீர் இறக்கிவைக்காத வரை நீர் வானத்தில் ஏறியதையும் நாம் நம்பமாட்டோம்'' என்றும் கூறுகின்றனர். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘என் இறைவன் மிகப் பரிசுத்தமானவன். நான் (உங்களைப் போன்ற) ஒரு மனிதன்தான். எனினும், நான் (அவனால் அனுப்பப்பட்ட) ஒரு தூதர் என்பதைத் தவிர வேறெதுவும் உண்டா

[94] மனிதர்களிடம் ஒரு நேரான வழி வந்த சமயத்தில், ‘‘ஒரு மனிதரையா அல்லாஹ் (தன்) தூதராக அனுப்பி வைத்தான்?'' என்று கூறுவதைத் தவிர அவர்கள் நம்பிக்கை கொள்வதை விட்டும் அவர்களை எதுவும் தடுக்கவில்லை

[95] (அதற்கு) நீர் கூறுவீராக: பூமியில் (மனிதர்களுக்குப் பதிலாக) வானவர்களே வசித்திருந்து, அதில் அவர்கள் நிம்மதியாக நடந்து திரிந்து கொண்டுமிருந்தால் நாமும் வானத்திலிருந்து (அவர்கள் இனத்தைச் சார்ந்த) ஒரு வானவரையே (நம்) தூதராக அவர்களிடம் அனுப்பியிருப்போம். (ஆகவே, மனிதர்களாகிய அவர்களிடம் மனிதராகிய உம்மை நம் தூதராக அனுப்பியதில் தவறொன்றுமில்லை)

[96] (இன்னும்,) நீர் கூறுவீராக: ‘‘எனக்கும் உங்களுக்கும் இடையில் அல்லாஹ் ஒருவனே போதுமான சாட்சியாக இருக்கிறான். ஏனென்றால், நிச்சயமாக அவன்தான் தன் அடியார்களை நன்கறிந்தவனாக, உற்று நோக்குபவனாக இருக்கிறான்

[97] எவர்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறானோ அவர்கள் தான் நேரான வழியை அடைவார்கள். எவர்களை (அல்லாஹ்) தவறான வழியில் விட்டுவிடுகிறானோ அவர்களுக்கு உதவி செய்பவர்களை அவனைத் தவிர்த்து வேறுயாரையும் நீர் காண மாட்டீர். மேலும், மறுமைநாளில் அவர்களைக் குருடர்களாகவும், ஊமையர்களாகவும், செவிடர்களாகவும் (ஆக்கி) அவர்கள் தங்கள் முகத்தால் நடந்து வரும்படி (செய்து) அவர்களை ஒன்று சேர்ப்போம். அவர்களுடைய தங்குமிடம் நரகம்தான். (அதன்) அனல் தணியும் போதெல்லாம் மென்மேலும் கொழுந்து விட்டெரியும்படி செய்து கொண்டே இருப்போம்

[98] அவர்கள், நம் வசனங்களை நிராகரித்து விட்டதுடன், ‘‘நாம் (மரணித்து)எலும்புகளாகவும், உக்கி மண்ணாகவும் போனதன் பின்னர் மெய்யாகவே நாம் புதிய படைப்பாக எழுப்பப்படுவோமா?'' என்று கூறிக் கொண்டிருந்ததும்தான் இத்தகைய (கொடிய) தண்டனையை அவர்கள் அடைவதற்குரிய காரணமாகும்

[99] மெய்யாகவே வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ் (மறுமுறையும்) அவர்களைப் போன்றே படைக்க ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் அறிய வில்லையா? (இதற்காக) அவர்களுக்கு ஒரு தவணையை ஏற்படுத்தியிருக்கிறான். அதில் ஒரு சந்தேகமுமில்லை. (இவ்வாறிருந்தும்) இவ்வக்கிரமக்காரர்கள் இதை நிராகரிக்காமலில்லை

[100] (நபியே!) கூறுவீராக: என் இறைவனின் அருள் பொக்கிஷங்கள் அனைத்திற்கும் நீங்களே சொந்தக்காரர்களாக இருந்தால் அது செலவாகி விடுமோ! எனப் பயந்து (எவருக்கும் எதுவுமே கொடுக்காது) நீங்கள் தடுத்துக் கொள்வீர்கள். மனிதன் பெரும் கஞ்சனாக இருக்கிறான்

[101] நிச்சயமாக நாம் மூஸாவுக்கு தெளிவான ஒன்பது அத்தாட்சிகளைக் கொடுத்திருந்தோம். (நபியே! இதைப்பற்றி) இஸ்ராயீலின் சந்ததிகளைக் கேட்பீராக. (மூஸா) அவர்களிடம் வந்தபொழுது, ஃபிர்அவ்ன் அவர்களை நோக்கி, ‘‘மூஸாவே! நிச்சயமாக நீர் சூனியத்தால் புத்தி மாறியவர் என நான் உம்மை எண்ணுகிறேன்'' என்று கூறினான்

[102] அதற்கு மூஸா (அவனை நோக்கி) ‘‘வானங்களையும் பூமியையும் படைத்த இறைவனே இவ்வத்தாட்சிகளை மனிதர்களுக்குப் படிப்பினையாக இறக்கிவைத்தான் என்பதை நிச்சயமாக நீ அறிவாய். ஃபிர்அவ்னே! உன்னை நிச்சயமாக அழிவு (காலம்) பிடித்துக்கொண்டது என நான் எண்ணுகிறேன்'' என்று கூறினார்

[103] (அதற்கு அவன் மூஸாவையும் அவருடைய மக்கள்) அனைவரையும் தன் நாட்டிலிருந்து விரட்டிவிடவே அவன் எண்ணினான். எனினும், (அதற்குள்ளாக) அவனையும் அவனுடன் இருந்த (அவனுடைய மக்கள்) அனைவரையும் நாம் மூழ்கடித்து விட்டோம்

[104] இதன் பின்னர் இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு நாம் கூறினோம்: ‘‘நீங்கள் இப்பூமியில் வசித்திருங்கள். மறுமையின் வாக்குறுதி வந்தால், உங்கள் அனைவரையும் (விசாரணைக்காக) நம்மிடம் கொண்டு வந்து ஒன்று சேர்ப்போம்

[105] முற்றிலும் உண்மையைக் கொண்டே இவ்வேதத்தை நாம் இறக்கினோம். அதுவும் உண்மையைக் கொண்டே இறங்கியது. (நபியே!) உம்மை நாம் (நன்மை செய்தவர்களுக்கு) நற்செய்தி கூறுபவராகவும் (பாவம் செய்பவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே தவிர அனுப்பவில்லை

[106] (நபியே!) மனிதர்களுக்கு நீர் சிறிது சிறிதாக ஓதிக் காண்பிக்கும் பொருட்டு இந்த குர்ஆனை பல பாகங்களாக நாம் பிரித்தோம். அதற்காகவே நாம் இதைச் சிறுகச் சிறுகவும் இறக்கிவைக்கிறோம்

[107] (நபியே!) கூறுவீராக: ‘‘நீங்கள் (இந்த குர்ஆனை) நம்பிக்கைகொள்ளுங்கள் அல்லது நம்பிக்கை கொள்ளாதிருங்கள். (அதைப் பற்றி நமக்கு ஒன்றும் குறைவில்லை.) நிச்சயமாக இதற்கு முன்னுள்ள (வேதங்களின்) மெய்யான ஞானம் எவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அவர்களிடம் (இவ்வேதம்) ஓதிக் காண்பிக்கப்பட்டால் அவர்கள் (இதை நம்பிக்கை கொண்டு) முகங்குப்புற விழுந்து (எனக்கு) சிரம்பணிவார்கள்

[108] மேலும், (அவர்கள்) ‘‘எங்கள் இறைவன் மிகப் பரிசுத்தமானவன். எங்கள் இறைவனின் வாக்குறுதி நிச்சயமாக நிறைவேறிவிட்டது'' என்றும் கூறுவார்கள்

[109] மேலும், அவர்கள் முகங்குப்புற விழுந்து அழுவார்கள். அவர்களுடைய உள்ளச்சமும் அதிகரிக்கும்

[110] (நபியே!) கூறுவீராக: ‘‘நீங்கள் அல்லாஹ் என்று அழையுங்கள் அல்லது ரஹ்மான் என்று அழையுங்கள்; (இவ்விரண்டில்) எப்பெயர் கொண்டு நீங்கள் அவனை அழைத்தபோதிலும் (அழையுங்கள்.) அவனுக்கு அழகான (இன்னும்) பல திருப்பெயர்கள் இருக்கின்றன.'' (நபியே!) உமது தொழுகையில் நீர் மிக சப்தமிட்டு ஓதாதீர்! அதிக மெதுவாகவும் ஓதாதீர்! இதற்கு மத்திய வழியைக் கடைப்பிடிப்பீராக

[111] (நபியே!) கூறுவீராக: ‘‘புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியதே! அவனுக்கு ஒரு சந்ததியுமில்லை. அவனுடைய ஆட்சியில் அவனுக்குக் கூட்டாளி ஒருவருமில்லை. அவனுக்கு பலவீனம் இல்லை என்பதால் அவனுக்கு உதவியாளன் ஒருவனுமில்லை.'' ஆகவே, அவனை மிக மிகப் பெருமைப்படுத்திக் கூறுவீராக

அல்கஹ்ஃப்

Surah 18

[1] புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியதே! அவன்தான் தன் அடியார் (நபி முஹம்மது) மீது இவ்வேதத்தை இறக்கிவைத்தான். அதில் அவன் எத்தகைய (குறைபாட்டையும்) கோணலையும் வைக்கவில்லை

[2] இது உறுதியான அடிப்படையின் மீதுள்ளது. அல்லாஹ்வுடைய கடினமான வேதனையைப் பற்றி (நிராகரிப்பவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவும், எவர்கள் இதை நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு (அழகான) நற்கூலி(யாகிய சொர்க்கம்) நிச்சயமாக உண்டென்று நற்செய்தி கூறுவதற்காகவும் (இதை இறக்கிவைத்தான்)

[3] அ(ந்த சொர்க்கத்)தில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள்

[4] அல்லாஹ் சந்ததி எடுத்துக்கொண்டான் என்று கூறுபவர்களையும் இது கண்டித்து எச்சரிக்கை செய்கிறது

[5] அவர்களுக்கும் அவர்களுடைய மூதாதைகளுக்கும் இதற்குரிய ஆதாரம் ஒரு சிறிதும் இல்லை. இவர்கள் வாயிலிருந்து புறப்படும் இந்த வாக்கியம் மாபெரும் (பாவமான) வாக்கியமாகும்; பொய்யையே தவிர (இவ்வாறு) இவர்கள் (உண்மை) கூறவில்லை

[6] (நபியே!) இவ்வேதத்தை அவர்கள் நம்பிக்கை கொள்ளாவிட்டால் அதற்காக நீர் துக்கித்து அவர்களின் அடிச்சுவடுகள் மீது உமது உயிரை அழித்துக் கொள்வீரோ! (ஆகவே, அதற்காக நீர் கவலைப்படாதீர்)

[7] பூமியிலுள்ளவற்றை நாம் அதற்கு அலங்காரமாக்கி வைத்தது அவர்களில் எவர்கள் நல்ல நடத்தையுள்ளவர்கள் என்பதை நிச்சயமாக நாம் சோதிப்பதற்காகத்தான்

[8] (ஒரு நாளில்) நிச்சயமாக நாம் பூமியில் (அலங்காரமாக) உள்ள இவை அனைத்தையும் (அழித்து) வெட்டவெளியாக்கி விடுவோம்

[9] (நபியே! ‘அஸ்ஹாபுல் கஹ்ஃப்' என்னும் குகையுடையவர்களைப் பற்றி யூதர்கள் உம்மிடம் கேட்கின்றனர்.) அந்தக் குகையுடையவர்களும் சாசனத்தை உடையவர்களும் நிச்சயமாக நம் அத்தாட்சிகளில் ஆச்சரியமானவர்களாக இருந்தனர் என்று எண்ணுகிறீரா! (அவர்களின் சரித்திரத்தை உமக்கு நாம் கூறுகிறோம்)

[10] (அவர்கள்) ஒரு சில வாலிபர்கள், அவர்கள் குகையினுள் சென்றபொழுது ‘‘எங்கள் இறைவனே! உன் அருளை எங்களுக்கு அளிப்பாயாக! நீ எங்களுக்கு நேரான வழியையும் சுலபமாக்கி விடுவாயாக!'' என்று பிரார்த்தனை செய்தார்கள்

[11] ஆதலால், அக்குகையில் பல வருடங்கள் (நித்திரை செய்யும்படி) அவர்களுடைய காதுகளைத் தட்டிக் கொடுத்தோம்

[12] அவர்கள் அக்குகையில் இருந்த காலத்தை (அவர்களில் உள்ள) இரு வகுப்பாரில் எவர்கள் நன்கறிகிறார்கள் என்பதை நாம் (மனிதர்களுக்கு) அறிவிக்கும் பொருட்டு (நித்திரையிலிருந்து) அவர்களை எழுப்பினோம்

[13] (நபியே!) அவர்களுடைய உண்மையான சரித்திரத்தையே நாம் உமக்குக் கூறுகிறோம்: நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனை நம்பிக்கைகொண்ட வாலிபர்களாவர். (ஆகவே,) மேலும், நேரான வழியில் நாம் அவர்களை செலுத்தினோம்

[14] அவர்களுடைய உள்ளங்களையும் (நேரான வழியில்) நாம் உறுதியாக்கி விட்டோம். (அவர்கள் காலத்திலிருந்த அரசன் அவர்களை சிலைவணக்கம் செய்யும்படி நிர்ப்பந்தித்த சமயத்தில்) அவர்கள் எழுந்து நின்று ‘‘வானங்களையும் பூமியையும் படைத்தவன்தான் எங்கள் வணக்கத்திற்குரிய இறைவன். அவனைத் தவிர (வேறொருவரையும் வணக்கத்திற்குரிய) இறைவனாக நாங்கள் நிச்சயமாக அழைக்க மாட்டோம். (அப்படி அழைத்தால்) நிச்சயமாக நாங்கள் அடாத வார்த்தையைக் கூறியவர்களாவோம்'' என்றார்கள்

[15] ‘‘நமது இந்த மக்கள் அவனைத் தவிர்த்து வேறு இறைவனை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்குத் தெளிவான அத்தாட்சியை இவர்கள் கொண்டு வரவேண்டாமா? அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய் கூறுபவனை விட மகா அநியாயக்காரன் யார்?'' (என்றார்கள்)

[16] அவர்களிலிருந்தும் அவர்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றிலிருந்தும் நீங்கள் விலகிக்கொண்ட பின்னர் நீங்கள் (அவர்களை விட்டுத் தப்ப) இக்குகைக்குள் சென்றுவிடுங்கள். உங்கள் இறைவன் உங்கள் மீது தன் அருளைச் சொரிந்து, (வாழ்வதற்குரிய) உங்கள் காரியங்களை எளிதாகவும் உங்களுக்கு அமைத்து விடுவான் (என்றும் தங்களுக்குள் கூறிக்கொண்டனர்)

[17] (நபியே! அங்கு சென்று பார்ப்பீரானால்) சூரியன் உதிக்கும்போது அவர்கள் (இருக்கும் அக்)குகையின் வலது பக்கத்தில் சாய்வதையும், அது மறையும்போது, அவர்களின் இடது பக்கத்தை கடந்து செல்வதையும் நீர் காண்பீர்! அவர்கள் அதன் விசாலமான இடத்தில் (நிழலில் நித்திரை செய்து கொண்டு) இருக்கின்றனர். இது அல்லாஹ்வுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். எவனை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறானோ அவன்தான் நேரான வழியில் செல்வான். எவனை அவன் அவனுடைய (பாவத்தின் காரணமாக) தவறான வழியில் விட்டுவிடுகிறானோ அவனுக்கு உதவி செய்பவர்களையும், நேரான வழியை அறிவிப்பவர்களையும் நீர் காணமாட்டீர்

[18] (நபியே! அக்குகையிலுள்ள) அவர்கள் நித்திரை செய்து கொண்டிருந்த போதிலும் அவர்கள் விழித்துக் கொண்டிருப்பதாகவே நீர் எண்ணுவீர். அவர்களை வலப்பக்கமாகவும், இடப்பக்கமாகவும் (மாற்றி மாற்றி) நாம் திருப்பிக் கொண்டிருக்கிறோம். அவர்களுடைய நாயோ தன் இரு முன்னங்கால்களையும் விரித்துக்கொண்டு வாசலில் உட்கார்ந்து கொண்டிருக்கிறது (என்பதையும் நீர் காண்பீர்). அவர்களை நீர் எட்டிப் பார்த்தால் அவர்களைவிட்டு வெருண்டோடுவீர்; திடுக்கமும் (நடுக்கமும்) உம்மைச் சூழ்ந்துகொள்ளும்

[19] அவர்கள் (அதில் எவ்வளவு காலம் இருந்தனர் என்பதைத்) தங்களுக்குள் கேட்டறிந்து கொள்ளும் பொருட்டு இவ்வாறு (நித்திரை செய்யும்) அவர்களை நாம் எழுப்பினோம். அவர்களில் ஒருவர் (மற்றவர்களை நோக்கி) ‘‘நீங்கள் எவ்வளவு நேரம் நித்திரையில் இருந்தீர்கள்?'' என்று கேட்டார். அதற்கு அவர்களில் சிலர் ‘‘ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிது பாகம் (இருந்திருப்போம்)'' என்று கூறினர். (மற்றவர்கள்) ‘‘நீங்கள் நித்திரையிலிருந்த காலத்தை உங்கள் இறைவன்தான் நன்கறிவான்'' என்று கூறி ‘‘உங்களில் ஒருவரிடம் இந்த (வெள்ளி) நாணயத்தைக் கொடுத்து அவரைப் பட்டிணத்திற்கு அனுப்பிவையுங்கள். அவர் (அங்கு சென்று) நல்ல உணவுப் பொருள் எது (எங்கிருக்கிறது) என்பதைத் தேடிப்பார்த்து அதில் சிறிது வாங்கி வரவும். எனினும், உங்களை(ப் பட்டிணத்திலிருப்பவர்களில்) ஒருவரும் அறிந்து கொள்ளாதவாறு மிக்க எச்சரிக்கையாகவே அவர் நடந்து கொள்ளவும்

[20] ஏனென்றால், (ஊர் மக்கள்) உங்களை (இன்னாரென) அறிந்து கொண்டால் நிச்சயமாக அவர்கள் உங்களை கல்லெறிந்து கொன்று விடுவார்கள்; அல்லது உங்களை தங்கள் மார்க்கத்தில் சேர்த்து விடுவார்கள். (அப்படி நீங்கள் சேர்ந்தாலோ) ஒரு காலத்திலும் நீங்கள் வெற்றிபெற மாட்டீர்கள்'' (என்றார்கள்)

[21] (மரணித்தவர்களை அல்லாஹ் உயிர்ப்பிப்பான் என்ற) அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானது என்றும், மறுமை வருவதில் ஒரு சந்தேகமுமில்லை என்றும், (இதன் மூலம் அப்பட்டிணவாசிகளான) அவர்கள் உறுதியாக அறிந்து கொள்ளும் பொருட்டு இவ்வாறு (உணவு தேடி அங்கு செல்லும்படி செய்து) அவர்களுக்கு (இவர்களைக்) காட்டிக் கொடுத்தோம். (அந்நகரவாசிகள் இவர்கள் இருந்த குகைக்கு வந்து) ‘‘இவர்கள் யார் என்பதைப் பற்றித் (தங்களுக்குள்) தர்க்கித்துக் கொண்டு, இவர்களை இவர்களுடைய இறைவன்தான் நன்கறிவான் என்றும், இவர்கள் இருக்கும் இடத்தில் (உயர்ந்த) ஒரு கோபுரத்தை (ஞாபகார்த்தமாக) எழுப்புங்கள்'' என்றும் கூறினார்கள். (இந்தத் தர்க்கத்தில்) எவர்களுடைய அபிப்பிராயம் மேலோங்கியதோ அவர்கள் ‘‘இவர்கள் இருக்கும் இடத்தில் ஒரு மஸ்ஜிதை நிச்சயமாக நாம் அமைத்து விடுவோம்'' என்றார்கள்

[22] (குகையிலிருந்த அவர்கள்) மூன்று பேர்தான்; நான்காவது அவர்களுடைய நாய் என்று (சிலரு)ம்; (அவர்கள்) ஐந்து பேர், அவர்களுடைய நாய் ஆறாவதாகும் என்று (வேறு சிலரு)ம்; மறைவான விஷயங்களைத் தாங்கள் கண்டுபிடித்து விட்டவர்களைப் போல் (மிக்க உறுதியாகக்) கூறுகின்றனர். மற்றும் சிலரோ அவர்கள் ஏழு பேர், எட்டாவது அவர்களுடைய நாய் என்றும் கூறுகின்றனர். எனினும் (நபியே!) ‘‘அவர்களுடைய எண்ணிக்கையை சிலரைத் தவிர மற்றவர்கள் அறிய மாட்டார்கள். அவர்களுடைய எண்ணிக்கையை என் இறைவன்தான் நன்கறிவான்'' என்று கூறுவீராக. இன்னும், அவர்களைப் பற்றி மேலெழுந்த வாரியாகவே தவிர தர்க்கிக்காதீர். அவர்களைப் பற்றி இவர்களில் ஒருவனிடமும் (ஒன்றுமே) கேட்காதீர்

[23] (நபியே!) எந்த விஷயத்தைப் பற்றியும் ‘‘நிச்சயமாக நான் அதை நாளைக்குச் செய்துவிடுவேன்'' என்று கூறாதீர்

[24] ஆயினும், ‘‘இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால் நாளைக்குச் செய்வேன்) என்று கூறுவீராக. நீர் இதை மறந்து விட்டால் (ஞாபகம் வந்ததும் இவ்வாறு) உமது இறைவனின் பெயரைக் கூறுவீராக. தவிர, (நன்மைக்கு) இதைவிட இன்னும் நெருங்கிய பல விஷயங்களையும் என் இறைவன் எனக்கு அறிவிக்கக் கூடும்'' என்றும் கூறுவீராக

[25] அவர்கள் குகையில் (சூரிய கணக்கின்படி) முன்னூறு ஆண்டுகள் தங்கி இருந்தனர், (சந்திர கணக்கின்படி 309 ஆண்டுகள் தங்கி இருந்தனர்.) மேலும் (சிலர்) ஒன்பது ஆண்டுகளை அதிகப்படுத்தினர்

[26] (நபியே!) கூறுவீராக: அவர்கள் அதில் இருந்த காலத்தை அல்லாஹ் தான் நன்கறிவான். வானங்களிலும், பூமியிலும் மறைவாயிருப்பவை அனைத்தும் அவனுக்கு உரியவையே! இவற்றை அவன் எவ்வளவோ நன்றாகப் பார்ப்பவன்; எவ்வளவோ நன்றாகக் கேட்பவன். அவனைத் தவிர இவற்றை நிர்வகிப்பவன் யாருமில்லை. அவன் தன் அதிகாரத்தில் ஒருவரையும் துணையாக ஆக்கிக் கொள்ளவில்லை

[27] (நபியே!) வஹ்யி மூலம் உமக்கு அறிவிக்கப்பட்ட உமது இறைவனின் வேதத்தை நீர் (தொடர்ந்து) ஓதிக் கொண்டே இருப்பீராக! அவனுடைய கட்டளைகளை எவராலும் மாற்றிவிட முடியாது. அவனைத் தவிர உமக்கு பாதுகாக்கும் எந்த ஓர் இடத்தையும் காணமாட்டீர்

[28] (நபியே!) எவர்கள் சிரமங்களைச் சகித்துத் தங்கள் இறைவனின் திரு முகத்தையே நாடி அவனையே காலையிலும், மாலையிலும் (பிரார்த்தனை செய்து) அழைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களுடன் உம்மையும் நீர் ஆக்கிக் கொள்வீராக. இவ்வுலக அலங்காரத்தை நீர் விரும்பி அத்தகைய (நல்ல)வர்களை விட்டு உமது கண்களைத் திருப்பி விடாதீர். தன் சரீர இச்சையைப் பின்பற்றியதன் காரணமாக எவனுடைய உள்ளத்தை நம்மைத் தியானிப்பதிலிருந்து நாம் திருப்பி விட்டோமோ அவனுக்கும் நீர் கீழ்ப்படியாதீர். அவனுடைய காரியம் எல்லை கடந்து விட்டது

[29] (நபியே!) உமது இறைவனால் அருளப்பட்ட (இவ்வேதமான)து முற்றிலும் உண்மையானது. விரும்பியவர் (இதை) நம்பிக்கை கொள்ளலாம்; விரும்பியவர் (இதை) நிராகரித்துவிடலாம். (அதனால் நமக்கொன்றும் நஷ்டமில்லை. ஆனால் இதை நிராகரிக்கும்) அநியாயக்காரர்களுக்கு நிச்சயமாக நாம் நரகத்தைத்தான் தயார்படுத்தி உள்ளோம். அந்நரகத்தின் ஜூவாலைகள் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். அவர்கள் (தண்ணீர் கேட்டு) அபயமிட்டால் காய்ந்து உருகிய செம்பைப் போலுள்ள நீரே அவர்களுக்குக் கொடுக்கப்படும். (அவர் அதைக் குடிப்பதற்கு முன்னதாகவே) அது அவர்களுடைய முகத்தைச் சுட்டுக் கருக்கிவிடும். அன்றி அது மிக்க (அருவருப்பான) கெட்ட குடிபானமாகும். அவர்கள் இளைப்பாறும் இடமும் மிகக் கெட்டதாகும்

[30] (எனினும்,) நிச்சயமாக எவர்கள் (இக்குர்ஆனை) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ (அத்தகைய) நன்மை செய்பவர்களின் கூலியை நிச்சயமாக நாம் வீணாக்கி விடுவதில்லை

[31] இவர்களுக்கு நிலையான சொர்க்கங்கள் உண்டு. அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டேயிருக்கும். அவர்களுக்குப் (பரிசாகப்) பொற்கடகம் அணிவிக்கப்படும். மெல்லியதாகவோ அழுத்தமானதாகவோ (அவர்கள் விரும்பிய) பசுமையான பட்டாடைகளை அணிவார்கள். இருக்கைகளிலுள்ள தலையணைகள் மீது சாய்ந்து (மிக்க உல்லாசமாக) இருப்பார்கள். இவர்களுடைய கூலி மிக்க நன்றே! இவர்கள் இன்பம் அனுபவிக்கின்ற இடமும் மிக்க அழகானது

[32] (நபியே!) இரு மனிதர்களை அவர்களுக்கு உதாரணமாகக் கூறுவீராக: அவர்களில் ஒருவனுக்கு இரு திராட்சைத் தோட்டங்களைக் கொடுத்தோம். அவ்விரண்டைச் சூழவும் பேரீச்ச மரங்களை ஆக்கினோம். இவ்விரண்டிற்கும் மத்தியில் தானிய வயல்களை அமைத்தோம்

[33] அவ்விரு தோட்டங்களிலுமே அதன் பலனை ஒரு குறைவுமின்றி கொடுத்துக் கொண்டிருந்தன. அவ்விரண்டிற்கும் மத்தியில் ஒரு நதியையும் ஓடச்செய்தோம்

[34] அவனிடத்தில் இன்னும் (பல) கனி (தரும் மரங்)களும் இருந்தன. (இத்தகைய நிலைமையில் ஒரு நாள்) அவன் தன்னுடன் பேசிக் கொண்டிருந்த தன் நண்பனை நோக்கி ‘‘நான் உன்னைவிட அதிகப் பொருளுடையவன், மக்கள் தொகையிலும் நான் (உன்னை) மிகைத்தவன்'' என்று (கர்வத்துடன்) கூறினான்

[35] பின்னர், அவன் தன் தோப்புக்குள் நுழைந்து (அளவு மீறிய மகிழ்ச்சியின் காரணமாக) தனக்குத் தானே தீங்கிழைத்தவனாக ‘‘இவை ஒரு காலத்திலும் அழிந்துவிடுமென நான் நினைக்கவில்லை'' (என்றும்)

[36] ‘‘மறுமை நிகழும் என்றும் நான் நம்பவேயில்லை. ஒருகால் (மறுமை நிகழ்ந்து) நான் என் இறைவனிடம் கொண்டு போகப்பட்டாலும் இங்கிருப்பதைவிட அங்கு நான் மேலானவனாக இருப்பதையே காண்பேன்'' என்றும் கூறினான்

[37] அதற்கு அவனுடன் பேசிக் கொண்டிருந்த அவனுடைய நண்பன் அவனை நோக்கி ‘‘உன்னைப் படைத்தவனையே நீ நிராகரிக்கிறாயா? மண்ணிலிருந்து பின்னர் இந்திரியத்தின் ஒரு துளியிலிருந்து உன்னைப் படைத்த அவன், பின்னர் ஒரு முழு மனிதனாகவும் உன்னை அமைத்தான்

[38] எனினும், அந்த அல்லாஹ்தான் என்(னைப் படைத்த) இறைவன் என்று நான் உறுதியாக நம்பியிருக்கிறேன். ஆகவே, நான் என் இறைவனுக்கு ஒருவரையும் இணையாக்க மாட்டேன்

[39] நீ உன் தோட்டத்தில் நுழைந்தபொழுது (இவை அனைத்தும்) அல்லாஹ் (தன் அருளால்) எனக்குத் தந்தவையே! அல்லாஹ்வின் உதவியின்றி (நாம்) ஒன்றும் செய்து விட அறவே (நமக்கு) சக்தி இல்லை? என்று நீ கூறியிருக்க வேண்டாமா? பொருளிலும் சந்ததியிலும் நான் உன்னைவிட குறைவாக இருப்பதை நீ கண்டபோதிலும்

[40] உன் தோட்டத்தைவிட மிக்க மேலானதை என் இறைவன் எனக்குக் கொடுக்கவும் (உன் நன்றி கெட்ட தன்மையின் காரணமாக) உன் தோப்பின் மீது ஓர் ஆபத்தை வானத்தில் இருந்து இறக்கி (அதிலுள்ள மரம், செடிகளையெல்லாம் அழித்து) அதை வெட்டவெளியாக (என் இறைவன்) செய்து விடவும் கூடும்

[41] அல்லது அதன் நீர் முழுதும் பூமிக்குள் வற்றி(யிருப்பதை) நீ தேடிக் காண முடியாமலும் ஆக்கிவிடக் கூடும்'' என்றும் கூறினார்

[42] (அந்நண்பர் கூறியவாறே) அவனுடைய விளை பொருள் (செல்வம்)அனைத்தும் அழிந்தன. அத்தோட்டத்தின் மரங்கள், செடிகள் (ஆகிய அனைத்தும்) அடியுடன் சாய்ந்து விட்டன. ஆகவே, அவற்றில் அவன் செலவு செய்ததைப் பற்றி தன் இரு கைகளைப் பிசைந்து கொண்டான். (மறுமையில் இறைவன் முன் அவன் கொண்டுவரப்படும்போது) ‘‘என் இறைவனுக்கு நான் எவரையும் இணையாக்காமல் இருந்திருக்க வேண்டுமே?'' என்று (கைசேதப்பட்டு) கூறுவான்

[43] அச்சமயம் அல்லாஹ்வைத் தவிர அவனுக்கு உதவி செய்யக்கூடிய ஒரு கூட்டமும் (படையும்) அவனுக்கு இருக்கவில்லை. அவனும் (இதற்காக அல்லாஹ்விடம்) பழிவாங்க முடியாது போயிற்று

[44] அங்கு எல்லா அதிகாரங்களும் உண்மையான அல்லாஹ்வுக்கு உரியன. அவனே கூலி கொடுப்பவர்களில் மிக்க மேலானவன்; முடிவு செய்வதிலும் மிக்க மேலானவன். (இதையும் அவன் அங்கு அறிந்து கொள்வான்)

[45] (நபியே!) இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணத்தை அவர்களுக்குக் கூறுவீராக: அது மேகத்திலிருந்து நாம் இறக்கி வைக்கின்ற (மழை) நீருக்கு ஒப்பாக இருக்கிறது. பூமியிலுள்ள புற்பூண்டுகள் (அதைக் குடித்து) அதனுடன் கலந்து (நல்ல பயிராயிற்று. எனினும், அது பலன் தருவதற்குப் பதிலாக) பின்னர் காற்றடித்துக் கொண்டு போகக்கூடிய காய்ந்த சருகாகி விட்டது. (இதுவே இவ்வுலக வாழ்க்கைக்கு உதாரணமாகும்.) அனைத்தின் மீதும் அல்லாஹ் பேராற்றலுடையவனாக இருக்கிறான்

[46] (ஆகவே,) செல்வமும் ஆண் பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய அலங்காரங்களே (தவிர நிலையானவையல்ல). என்றுமே நிலையான நற்செயல்கள்தான் உமது இறைவனிடத்தில் நற்கூலி கிடைப்பதற்கு மிக சிறந்ததும், நல்லாதரவு வைப்பதற்கு மிக சிறந்ததும் ஆகும்

[47] (நபியே!) நாம் மலைகள் (மரங்கள், செடிகள், போன்ற பூமியிலுள்ள) அனைத்தையும் அகற்றிவிடுகின்ற நாளில், நீங்கள் பூமியைச் சமமான வெட்ட வெளியாகக் காண்பீர். (அந்நாளில்) மனிதர்களில் ஒருவரையுமே விட்டு விடாது அனைவரையும் ஒன்று சேர்ப்போம்

[48] உமது இறைவன் முன் அவர்கள் கொண்டுவரப்பட்டு, அணி அணியாக நிறுத்தப்படுவார்கள். ‘‘நாம் உங்களை முதல் தடவை படைத்தவாறே இப்பொழுதும் (உங்களுக்கு நாம் உயிர் கொடுத்து) நீங்கள் நம்மிடம் வந்திருக்கிறீர்கள். எனினும், (விசாரணைக்காக வாக்களிக்கப்பட்ட ஒரு நாளை) உங்களுக்கு நாம் ஏற்படுத்தவே மாட்டோம் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்கள்'' (என்று அவர்களிடம் கூறப்படும்)

[49] (நபியே அவர்களுடைய செயல்கள் எழுதப்பட்ட தினசரிக் குறிப்புப்) புத்தகம் அவர்கள் முன் வைக்கப்பட்டால் குற்றவாளிகள் (தாங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் அதில் இருப்பதைக் கண்டு) பயந்து ‘‘எங்கள் கேடே! இதென்ன புத்தகம்! (எங்கள் பாவங்கள்) சிறிதோ பெரிதோ ஒன்றையும்விடாது இதில் எழுதப்பட்டிருக்கின்றதே'' என்று அவர்கள் (புலம்பிக்) கூறுவதை நீர் காண்பீர். (நன்மையோ தீமையோ) அவர்கள் செய்த அனைத்தும் (அதில்) இருக்கக் காண்பார்கள். உமது இறைவன் எவனுக்கும் (அவனுடைய தண்டனையைக் கூட்டியோ, நன்மையைக் குறைத்தோ) அநியாயம் செய்யமாட்டான்

[50] வானவர்களை நோக்கி ‘‘ஆதமுக்குச் சிரம் பணியுங்கள்'' என்று நாம் கூறிய சமயத்தில், இப்லீஸைத் தவிர அவர்கள் அனைவரும் சிரம் பணிந்தார்கள். அவனோ ஜின்களின் இனத்தைச் சார்ந்தவன். அவன் தன் இறைவனுடைய கட்டளைக்கு மாறு செய்து பாவியானான். ஆகவே, (மனிதர்களே!) நீங்கள் என்னைத் தவிர்த்து அவனையும், அவனுடைய சந்ததிகளையும் பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்வீர்களா? அவர்களோ உங்களுக்குக் கொடிய எதிரிகளாக இருக்கிறார்கள். அநியாயக்காரர்கள் (என்னை விட்டு விட்டு அவர்களைத் தங்களுக்குப் பாதுகாவலர்களாக) மாற்றிக் கொண்டது மகா கெட்டது

[51] நாம் வானங்களையும் பூமியையும் படைத்தபொழுதும், அந்த ஷைத்தான்களை (நாம்) படைத்தபொழுதும் நாம் அவர்களை (உதவிக்கு) அழைக்கவில்லை. வழி கெடுக்கின்ற ஷைத்தான்களை (எவ்விஷயத்திலும்) நாம் நம் சகாக்களாக (-உதவியாளர்களாக) ஆக்கிக் கொள்ளவில்லை

[52] (இறைவன், இணைவைத்து வணங்குபவர்களை நோக்கி) ‘‘நீங்கள் எனக்குத் துணையானவை என எவற்றை எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவற்றை நீங்கள் அழையுங்கள்'' என்று கூறுகின்ற ஒரு நாளை (நபியே! அவர்களுக்கு) ஞாபக மூட்டுவீராக. ஆகவே, அவர்கள் அவற்றை அழைப்பார்கள். எனினும், அவை அவர்களுக்குப் பதில் கொடுக்கா. மேலும், நாம் (அவற்றுக்கும்) அவர்களுக்கும் இடையில் (சந்திக்க முடியாத) ஒரு தடையை ஏற்படுத்தி விடுவோம்

[53] குற்றவாளிகள் நரகத்தைக் காணும் சமயத்தில் ‘‘நிச்சயமாக அதில் விழுந்து விடுவோம்'' என்று உறுதியாக எண்ணுவார்கள். அவர்கள் அதில் இருந்து தப்ப எந்த ஒரு வழியையும் காணமாட்டார்கள்

[54] மனிதர்களுக்கு இந்த குர்ஆனில் ஒவ்வோர் உதாரணத்தையும் விவரித்திருக்கிறோம். எனினும், மனிதன்தான் அதிகமாக (வீண்) தர்க்கம் செய்பவனாக இருக்கிறான்

[55] மனிதர்களிடம் நேரான வழி வந்ததன் பின்னர் அவர்கள் அதை நம்பிக்கை கொண்டு தங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோருவதைத் தடை செய்வதெல்லாம் முன்சென்றவர்களுக்கு நிகழ்ந்த(தைப் போன்ற அபாயகரமான) சம்பவம் இவர்களுக்கு நிகழவேண்டும் என்பதற்காக அல்லது இவர்கள் (கண்) முன் நம் வேதனை வரவேண்டும் என்பதற்காகத்தான்

[56] நற்செய்தி கூறுபவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவுமே நாம் நம் தூதர்களை அனுப்பி வைத்திருக்கிறோம். எனினும், நிராகரிப்பவர்களோ (நம் தூதர்கள் கொண்டு வந்த) சத்தியத்தை அழித்துவிடக் கருதி வீணான தர்க்கங்கள் செய்ய ஆரம்பித்து நம் வசனங்களையும் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கப்பட்ட (தண்டனை வருவ)தையும் பரிகாசமாக எடுத்துக் கொள்கிறார்கள்

[57] எவன் தன் இறைவனின் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்ட சமயத்தில் அவற்றைப் புறக்கணித்து, தன் கைகளால் செய்த குற்றங்களை (முற்றிலும்) மறந்து விடுகிறானோ அவனைவிட அநியாயக்காரன் யார்? (இந்த அநியாயக்காரர்கள்) எதையும் அறிந்து கொள்ளாதவாறு நாம் அவர்களுடைய உள்ளங்களில் திரையையும், அவர்களுடைய காதுகளில் மந்தத்தையும் நிச்சயமாக ஆக்கிவிட்டோம். ஆதலால், (நபியே!) நீர் அவர்களை நேரான வழியில் (எவ்வளவுதான் வருந்தி) அழைத்தபோதிலும் ஒரு காலத்திலும் அவர்கள் நேரான வழிக்கு வரவே மாட்டார்கள்

[58] ஆனால், (நபியே!) உமது இறைவன் மிக்க மன்னிப்பவனும், கருணையுடையவனும் ஆவான். அவர்கள் செய்யும் (தீய) செயலின் காரணமாக அவன் அவர்களை (உடனுக்குடன்) பிடிப்பதாக இருந்தால் இதுவரை அவர்களை வேதனை செய்தேயிருப்பான். எனினும், (அவர்களைத் தண்டிக்க) அவர்களுக்கு ஒரு தவணை உண்டு. அதற்குப் பின்னர் அவர்கள் தப்ப வழி காணமாட்டார்கள்

[59] பாவம் செய்துகொண்டிருந்த இவ் ஊர்வாசிகள் அனைவரையும் நாம் அழித்து விட்டோம். எனினும், அவர்களை அழிப்பதற்கும் நாம் ஒரு தவணையை ஏற்படுத்தி இருந்தோம். (அத்தவணை வந்த பின்னரே நாம் அவர்களை அழித்தோம்)

[60] மூஸா தன்னுடன் இருந்த வாலிபனை நோக்கி ‘‘இரு கடல்களும் சந்திக்கின்ற இடத்தை நான் அடையும் வரை செல்வேன் அல்லது வருடக்கணக்கில் (இப்படியே) நான் நடந்துகொண்டே இருப்பேன்'' என்று கூறியதை (நபியே! அவர்களுக்கு) ஞாபகமூட்டுவீராக

[61] அவர்கள் இருவரும் இரு கடல்களும் சந்திக்கின்ற இடத்தை அடைந்த பொழுது தங்கள் மீனை அவர்கள் மறந்துவிட்டனர். அது கடலில் தன் வழியைச் சுரங்கம் போல் அமைத்துக் கொண்டு (சென்று) விட்டது

[62] (தாங்கள் விரும்பிச் சென்ற அவ்விடத்தை அறியாது) அவ்விருவரும் அதைக் கடந்த பின், மூஸா தன் வாலிபனை நோக்கி ‘‘நம் காலை உணவை நீர் கொண்டு வா. நிச்சயமாக நாம் இந்த பயணத்தில் மிகவும் களைப்படைந்து விட்டோம்'' என்று கூறினார்

[63] அதற்கு (அந்த வாலிபன் மூஸாவை நோக்கி) ‘‘அந்த கற்பாறை அருகில் நாம் தங்கிய சமயத்தில் (நிகழ்ந்த ஆச்சரியத்தை) பார்த்தீரா? நிச்சயமாக நான் (நம்முடன் கொண்டு வந்த) மீனை மறந்துவிட்டேன். அதை நான் (உமக்குக்) கூறுவதை ஷைத்தானைத் தவிர (வேறொருவரும்) எனக்கு மறக்கடிக்கவில்லை. (அவ்விடத்தில்) கடலில் (செல்ல) ஆச்சரியமான விதத்தில் அது தனக்கொரு வழியை ஏற்படுத்திக்கொண்டது'' என்று கூறினார்

[64] அதற்கு மூஸா ‘‘நாம் தேடிவந்த இடம் அது தான்'' என்று கூறி அவ்விருவரும் (அவ்விடத்தைத் தேடி) தங்கள் காலடிகளைப் பின்பற்றி வந்த வழியே சென்றார்கள்

[65] இவ்விருவரும் அங்கு வந்தபோது (அவ்விடத்தில்) நம் அடியாரில் ஒருவரைக் கண்டார்கள். அவர் மீது நாம் அருள்புரிந்து நம் புறத்திலிருந்து (சிறப்பான) ஞானத்தையும் நாம் அவருக்குக் கற்பித்திருந்தோம்

[66] மூஸா அவரை நோக்கி ‘‘உமக்குக் கற்பிக்கப்பட்ட கல்வியில் பயனளிக்கக்கூடியதை நீர் எனக்குக் கற்பிக்கும் நிபந்தனை மீது நான் உம்மைப் பின்பற்றலாமா?'' என்று கேட்டார்

[67] அதற்கவர் ‘‘என்னுடன் இருக்க நிச்சயமாக நீர் சக்தி பெறமாட்டீர்

[68] அவ்வாறிருக்க உமது அறிவுக்கு அப்பாற்பட்டவற்றை (நான் செய்யும்போது பார்த்துக் கொண்டு) நீர் எவ்வாறு சகித்துக் கொண்டு இருப்பீர்'' என்று கூறினார்

[69] அதற்கு மூஸா ‘‘இறைவன் அருளால் (எந்த விஷயத்தையும்) சகித்திருப்பவனாகவே நீர் என்னைக் காண்பீர். எந்த விஷயத்திலும் நான் உமக்கு மாறுசெய்ய மாட்டேன்'' என்று கூறினார்

[70] அதற்கு அவர் ‘‘நீர் என்னைப் பின்பற்றுவதாயின் (நான் செய்யும்) எவ்விஷயத்தைப் பற்றியும் நானாகவே உமக்கு அறிவிக்கும் வரை நீர் என்னிடம் அதைப் பற்றிக் கேட்காதீர்'' என்று சொன்னார்

[71] (இவ்வாறு முடிவு செய்துகொண்டு) அவ்விருவரும் சென்றவழியில் குறுக்கிட்ட ஒரு கடலைக் கடக்க கப்பலில் ஏறியபோது, அவர் அதன் (ஒரு) பலகையைப் பெயர்த்து அதை ஓட்டையாக்கி விட்டார். அதற்கு மூஸா ‘‘இதில் உள்ளவர்களை மூழ்கடிக்கவா நீர் துவாரமிட்டீர்? நிச்சயமாக நீர் மிக்க அபாயகரமான ஒரு காரியத்தைச் செய்துவிட்டீர்'' என்று கூறினார்

[72] அதற்கு அவர் (மூஸாவை நோக்கி) ‘‘நீர் என்னுடன் பொறுமையாக இருக்க நிச்சயமாக உம்மால் முடியாது என்று நான் கூறவில்லையா?'' என்றார்

[73] (அதற்கு) மூஸா, ‘‘நான் மறந்துவிட்டதைப் பற்றி என்னைக் குற்றம் பிடிக்காதீர். என் விஷயத்தில் இவ்வளவு கண்டிப்பும் செய்யாதீர்'' என்று கேட்டுக் கொண்டார்

[74] பின்னர் இருவரும் நடந்தனர். (வழியில் விளையாடிக் கொண்டிருந்த) ஒரு சிறுவனைச் சந்தித்தபோது அவர் அவனைக் கொலை செய்து விட்டார். அதற்கு மூஸா, ‘‘கொலை குற்றமின்றி ஒரு பரிசுத்தமான ஆத்மாவை கொலை செய்து விட்டீர்! நிச்சயமாக ஒரு தகாத காரியத்தையே நீர் செய்து விட்டீர்'' என்று கூறினார்

[75] அதற்கவர் (மூஸாவை நோக்கி) ‘‘நீர் என்னுடன் பொறுமையாக இருக்க நிச்சயமாக உம்மால் முடியாது'' என்று நான் உமக்கு (முன்னர்) கூறவில்லையா? என்று கேட்டார்

[76] அதற்கு (மூஸா) ‘‘இதன் பின்னர் நான் எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் உம்மிடம் கேட்பேனாயின் நீர் என்னை உம்முடன் வைத்திருக்க வேண்டாம். என்னை மன்னிக்கும் எல்லையை நிச்சயமாக நீர் கடந்து விட்டீர்'' என்று கூறினார்

[77] பின்னர் இருவரும் நடந்தனர். அவர்கள் ஓர் ஊராரிடம் வரவே தங்கள் இருவருக்கும் உணவளிக்கும்படி அவ்வூராரை வேண்டினார்கள். ஆனால், அவர்கள் இவ்விருவருக்கும் விருந்தளிக்காது விலகிக்கொண்டனர். பிறகு, இருவரும் அங்கு விழுந்து விடக்கூடிய நிலையில் இருந்த ஒரு சுவற்றைக் கண்டனர். ஆகவே, அவர் (அதற்கு மண் அப்பி செப்பனிட்டு) அதை (விழாது) நிறுத்திவைத்தார். (அதற்கு மூஸா அவரை நோக்கி) ‘‘நீர் விரும்பி (கேட்டு) இருந்தால் (இவ்வூராரிடம்) இதற்குரிய கூலியை நீர் வாங்கியிருக்கலாமே'' என்று கூறினார்

[78] அதற்கவர், ‘‘எனக்கும் உமக்கும் இடையில் இதுவே பிரிவினை(க்குரிய நேரம்) ஆகும். நீர் பொறுத்துக்கொள்ள முடியாமல்போன விஷயங்களின் விளக்கத்தை (இதோ) நான் உமக்கு அறிவிக்கிறேன் என்று கூறினார்

[79] (அவர் கூறினார்) ‘‘அக்கப்பல் கடலில் (கூலி) வேலை செய்து கொண்டிருந்த (சில) ஏழைகளுக்குரியது. அதைக் குறைபடுத்தவே நான் கருதினேன். (ஏனென்றால், அது செல்லும் வழியில்) இவர்களுக்கு முன் ஓர் (அநியாயக்கார) அரசன் இருக்கிறான். அவன் (நல்ல) கப்பல்கள் அனைத்தையும் அநியாயமாக அபகரித்துக் கொள்கிறான். (அவனிடமிருந்து காப்பாற்றுவதற்காகவே அதைக் குறைப்படுத்தினேன்)

[80] (கொல்லப்பட்ட) அந்தச் சிறுவனோ அவனுடைய தாயும் தந்தையும் நல்ல நம்பிக்கையாளர்களாக இருக்கிறார்கள். அவன் (வாலிபத்தை அடைந்து) அவ்விருவரையும் அநியாயம் செய்யும்படியும், (இறைவனை) நிராகரிக்கும்படியும் செய்து விடுவானோ என்று நாம் பயந்(து அவ்வாறு செய்)தோம்

[81] அவனுடைய தாய் தந்தைக்கு இறைவன் இவனைவிட மேலான, பரிசுத்தமானவனையும் (தாய் தந்தை மீது) அதிகம் அன்பு கொள்ளக் கூடியவனையும் மாற்றிக் கொடுப்பதை நாம் விரும்பினோம்

[82] அந்தச் சுவரோ அப்பட்டிணத்திலுள்ள இரு அனாதைக் குழந்தைகளுக்குரியது. அதற்குக் கீழ் அவர்களுக்குச் சொந்தமான புதையல் ஒன்று இருக்கிறது. அவ்விருவரின் தந்தை மிக்க நல்ல மனிதராக இருந்தார். ஆகவே, உமது இறைவன் அவ்விருவரும் தங்கள் வாலிபத்தை அடைந்த பின்னர் தங்கள் புதையலை எடுத்துக் கொள்ளும்படிச் செய்ய நாடினான். (எனவே, அதுவரை அச்சுவர் விழுந்து விடாதிருக்கும்படி அதைச் செப்பனிட்டேன். இது) உமது இறைவனின் அருள்தான். (இம்மூன்றில்) எதையும் நான் என் இஷ்டப்படி செய்துவிடவில்லை. நீர் பொறுத்துக் கொள்ள முடியாமல் போன (என்) செய்கைகளின் விளக்கம் இதுதான்'' (என்று கூறி முடித்தார்)

[83] (நபியே!) துல்கர்னைனைப் பற்றி (யூதர்களாகிய) அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். ‘‘அவருடைய சரித்திரத்தில் (இருந்து) உங்களுக்கு (பயனளிக்கும்) அறிவுரையை ஓதிக் காண்பிக்கிறேன்'' என்று கூறுவீராக

[84] நிச்சயமாக நாம் அவருக்குப் பூமியில் ஆதிக்கத்தைக் கொடுத்து வளமிக்க வசதி வாய்ப்பையும் அளித்திருந்தோம். ஒவ்வொரு பொருளையும் (தமது இஷ்டப்படி) செய்யக்கூடிய வழியையும் நாம் அவருக்கு அளித்திருந்தோம்

[85] அவர் (பூமியில்) ஒரு வழியைப் பின்பற்றிச் சென்றார்

[86] சூரியன் மறையும் (மேற்குத்) திசையை அவர் அடைந்த பொழுது சேற்றுக் கடலில் சூரியன் மறைவதை(ப் போல்) கண்டார். அவ்விடத்தில் ஒருவகை மக்களையும் கண்டார். (நாம் அவரை நோக்கி) ‘‘துல்கர்னைனே! நீர் (இவர்களைத் தண்டித்து) வேதனை செய்யவும், அல்லது அவர்களுக்கு நன்மை செய்யவும் (இரண்டுக்கும் முழு சுதந்திரம் உமக்கு அளித்திருக்கிறோம்)'' என்று கூறினோம்

[87] ஆகவே அவர் (அவர்களை நோக்கி ‘‘உங்களில்) எவன் (என் கட்டளையை மீறி) அநியாயம் செய்கிறானோ அவனை நாம் (தண்டித்து) வேதனை செய்வோம். பின்னர், அவன் தன் இறைவனிடம் கொண்டு போகப்பட்டு அவனும் அவனை மிக்க கடினமாக வேதனை செய்வான்'' என்றார்

[88] ‘‘எவன் நம்பிக்கை கொண்டு (நாம் கூறுகிறபடி) நல்லதை செய்கிறானோ அவனுக்கு (இறைவனிடத்திலும்) அழகான நற்கூலி இருக்கிறது. நாமும் நம் வேலைகளில் சுலபமான வேலைகளையே (செய்யும்படி) அவனுக்குக் கூறுவோம்

[89] பின்னர், அவர் (மற்ற) ஒரு வழியைப் பின்பற்றி நடந்தார்

[90] அவர் சூரியன் உதிக்கும் (கிழக்குத்) திசையை அடைந்த பொழுது சில மக்களைக் கண்டார். அவர்கள் மீது சூரியன் உதயமாகி (அவர்கள் வெயிலில்) இருப்பதையும் கண்டார். அவர்களுக்கும் சூரியனுக்கும் இடையில் நாம் ஒரு தடுப்பையும் ஏற்படுத்த வில்லை. (ஆடையணிந்தோ, வீடு கட்டியோ, சூரிய வெப்பத்தைத் தடுத்துக் கொள்ளக் கூடிய ஞானம் அவர்களிடம் இல்லை)

[91] (அவர்களுடைய நிலைமை உண்மையில்) இவ்வாறே இருந்தது. அவரிடமிருந்த எல்லா வசதிகளையும் நாம் நன்கறிவோம்

[92] பின்னர் அவர் (வேறு) ஒரு வழியைப் பின்பற்றிச் சென்றார்

[93] (அங்கிருந்த) இரு மலைகளின் இடைவெளியை அவர் அடைந்தபோது அவற்றிற்கு முன்னால் மக்கள் சிலரைக் கண்டார். அவர்கள் பேச்சை (எளிதில்) புரியக்கூடியவர்களாக இருக்கவில்லை

[94] அவர்கள் (இவரை நோக்கி ஜாடையாக) ‘‘துல்கர்னைனே! நிச்சயமாக யஃஜூஜ், மஃஜூஜ் (என்னும் மக்கள்) எங்கள் ஊரில் (வந்து) பெரும் விஷமம் செய்கிறார்கள். எங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் நீர் ஒரு தடையை ஏற்படுத்தும் பொருட்டு ஒரு தொகையை நாங்கள் உமக்கு சேகரம் செய்யலாமா?'' என்று கேட்டார்கள்

[95] அதற்கவர், ‘‘என் இறைவன் எனக்குக் கொடுத்திருப்பதே (போதுமானது,) மிக்க மேலானது. (உங்கள் பொருள் தேவையில்லை. எனினும், உங்கள்) உழைப்பைக்கொண்டு எனக்கு உதவிசெய்யுங்கள். உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் உறுதியான ஒரு தடுப்பை (சுவரை) எழுப்பிவிடுகிறேன்'' என்றும்

[96] ‘‘நீங்கள் (அதற்குத் தேவையான) இரும்புப் பாலங்களை என்னிடம் கொண்டு வாருங்கள்'' என்றும் கூறி, ‘‘(அவற்றைக் கொண்டுவந்து இரு மலைகளுக்கிடையில் இருந்த பள்ளத்தை நிறைத்து) இரு மலைகளின் உச்சிக்கு அவை சமமாக உயர்ந்த பின்னர், நெருப்பாக பழுக்கும் வரை அதை ஊதுங்கள்'' என்றார். (அதன் பின்னர்) ‘‘செம்பையும் என்னிடம் கொண்டு வாருங்கள். நான் அதை உருக்கி அதன் மீது ஊற்றுவேன்'' என்றார்

[97] ‘‘பின்னர், அதைக் கடந்து வர (யஃஜூஜ் மஃஜூஜ்களால்) முடியாது. அதைத் துளைத்துத் துவாரமிடவும் அவர்களால் முடியாது'' (என்று கூறினார்)

[98] (இவ்வாறு தயாரான தடுப்பைக் கண்ட அவர்) ‘‘இது என் இறைவனுடைய அருள்தான். என் இறைவனின் வாக்குறுதி(யாகிய யுக முடிவு) வரும்போது, இதை(யும்) தூள் தூளாக்கிவிடுவான். என் இறைவனின் வாக்குறுதி உண்மையாக இருக்கிறது!'' என்று கூறினார்

[99] அந்நாள் வருவதற்குள் சிலர் சிலருடன் (கடல்) அலைகளைப் போல் மோதும்படி நாம் விட்டுவிடுவோம். (பின்னர்) சூர் (எக்காளம்) ஊதப்பட்(டு அனைவரும் மடிந்து விட்)டால் பின்னர் (உயிர் கொடுத்து) அவர்கள் அனைவரையும் ஒன்றுசேர்த்து விடுவோம்

[100] கண்டிப்பாக, அந்நாளில் நரகத்தை நிராகரிப்பவர்களுக்கு முன்பாக்குவோம்

[101] (அவர்கள்) எனது நல்லுபதேசங்களைப் பார்க்காது அவர்களுடைய கண்களுக்குத் திரையிடப்பட்டு விட்டன; ஆகவே, அவர்கள் (நல்லுபதேசங்களைச்) செவியுற சக்தியற்று விட்டனர்

[102] நிராகரிப்பவர்கள் நம்மை விட்டுவிட்டு நம் அடியார்களை(த் தங்களுக்கு) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரா? நிச்சயமாக நிராகரிப்பவர்களுக்கு நரகத்தையே தங்குமிடமாக தயார்படுத்தி வைத்திருக்கிறோம்

[103] ‘‘(பாவமான) செயல்களில் இவர்களைவிட நஷ்டமடைந்தவர்களை நாம் உங்களுக்கு அறிவிக்கவா?'' என்று, (நபியே!) கேட்பீராக

[104] அவர்கள் (யாரென்றால்) இவ்வுலக வாழ்வில் தவறான வழியிலேயே முயற்சி செய்து கொண்டு, தாங்கள் மெய்யாகவே நல்ல செயல்களையே செய்வதாக எண்ணிக் கொள்வார்கள்

[105] இவர்கள்தான் தங்கள் இறைவனின் வசனங்களையும் அவனுடைய சந்திப்பையும் நிராகரித்து விட்டவர்கள். ஆகவே, அவர்களுடைய நன்மைகள் அனைத்தும் அழிந்துவிட்டன. (நன்மை, தீமையை நிறுக்க) அவர்களுக்காக மறுமை நாளில் எடைக் கோலையும் நாம் நிறுத்த மாட்டோம்

[106] அவர்கள் நம் வசனங்களையும், நம் தூதர்களையும் நிராகரித்து பரிகாசமாக எடுத்துக் கொண்டதன் காரணமாக அவர்களுக்குக் கூலி நரகம்தான்

[107] நிச்சயமாக, எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர் களுக்கு ‘ஃபிர்தவ்ஸ்' என்னும் (உயர்) சொர்க்கங்கள் தங்குமிடங்களாக இருக்கும்

[108] அதில், அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள். அதிலிருந்து வெளிப்பட அவர்கள் விரும்பவே மாட்டார்கள்

[109] (நபியே!) கூறுவீராக: கடல் நீர் அனைத்தும் மையாக இருந்து என் இறைவனின் வாக்கியங்களை எழுத ஆரம்பித்தால், என் இறைவனின் வாக்கியங்கள் முடிவதற்கு முன்னதாகவே இந்தக் கடல் (மை) அனைத்தும் செலவாகிவிடும். அதைப் போல் இன்னொரு பங்கு (கடலைச்) சேர்த்துக் கொண்ட போதிலும்கூட

[110] (நபியே!) கூறுவீராக: ‘‘நிச்சயமாக நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான். நிச்சயமாக உங்கள் இறைவன் ஒரே ஓர் இறைவன்தான் என்று எனக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, எவர் தன் இறைவனைச் சந்திக்க விரும்புகிறாரோ அவர் நற்செயல்களைச் செய்து தன் இறைவனுக்கு ஒருவரையும் இணையாக்காது (அவனையே) வணங்கி வருவாராக

மர்யம்

Surah 19

[1] காஃப் ஹா யா ஐன் ஸாத்

[2] (நபியே!) உமது இறைவன் தன் அடியார் ஜகரிய்யாவுக்குப் புரிந்த அருளை (இங்கு) நினைவு கூர்வீராக

[3] அவர் தன் இறைவனைத் தாழ்ந்த குரலில் (பணிவாக) அழைத்தபோது

[4] ‘‘என் இறைவனே! நிச்சயமாக என் எலும்புகள் பலவீனமாகி விட்டன. என் தலையும் நரைத்து விட்டது. என் இறைவனே! (இதுவரை) நான் உன்னிடத்தில் கேட்டதில் எதுவுமே தடுக்கப்படவில்லை. (நான் கேட்ட அனைத்தையும் நீ கொடுத்தே இருக்கிறாய்)

[5] நிச்சயமாக நான் எனக்குப் பின்னர் என் உரிமையாளர்களைப் பற்றிப் பயப்படுகிறேன். என் மனைவியோ மலடாகி விட்டாள். ஆகவே, உன் புறத்திலிருந்து எனக்கொரு பாதுகாவலனை (குழந்தையை) வழங்கு

[6] அவன் எனக்கும், யஅகூபுடைய சந்ததிகளுக்கும் வாரிசாகக் கூடியவனாக இருக்க வேண்டும். என் இறைவனே! அவனை (உனக்குப்) பிரியமுள்ளவனாகவும் ஆக்கிவை'' என்று பிரார்த்தித்தார்

[7] (அதற்கு இறைவன் அவரை நோக்கி) ‘‘ஜகரிய்யாவே! நிச்சயமாக நாம் ‘யஹ்யா' என்ற பெயர் கொண்ட ஒரு மகனை(த் தருவதாக) உமக்கு நற்செய்தி கூறுகிறோம். அப்பெயர் கொண்ட ஒருவரையும் இதற்கு முன் நாம் படைக்கவில்லை'' (என்று கூறினான்)

[8] அதற்கவர் ‘‘என் இறைவனே! எப்படி எனக்குச் சந்ததி ஏற்படும்? என் மனைவியோ மலடி. நானோ முதுமையின் கடைசிப் பாகத்தை அடைந்து விட்டேன்'' என்று கூறினார்

[9] அதற்கவன் ‘‘(நான் கூறிய) அவ்வாறே நடைபெறும். அ(வ்வாறு செய்வ)து எனக்கு மிக்க எளிதானதே. இதற்கு முன்னர் நீர் ஒன்றுமில்லாமல் இருந்த சமயத்தில் நானே உம்மைப் படைத்தேன் என்று உமது இறைவனே கூறுகிறான்'' என்றும் கூறினான்

[10] அதற்கவர் ‘‘என் இறைவனே! (இதற்கு) எனக்கோர் அத்தாட்சி அளி'' என்று கேட்டார். (அதற்கு இறைவன்) ‘‘உமக்கு (நான் அளிக்கும்) அத்தாட்சியாவது நீர் (சுகமாக இருந்துகொண்டே) சரியாக மூன்று இரவுகளும் (பகல்களும்) மனிதர்களுடன் பேச முடியாமல் ஆகிவிடுவதுதான்'' என்று கூறினான்

[11] பின்னர், அவர் (வழக்கப்படி மக்களுக்கு நல்லுபதேசம் செய்ய ஆலயத்தின் மிஹ்ராப்) மாடத்திலிருந்து வெளிப்பட்டுத் தன் மக்கள் முன் வந்தார். (எனினும், அவரால் வாய் திறந்து பேச முடியாமலாகி விட்டது.) ஆகவே, காலையிலும் மாலையிலும் (இறைவனைப்) புகழ்ந்து துதி செய்யுங்கள் என்று (தன் கையால்) அவர்களுக்கு ஜாடை காண்பித்தார்

[12] (நாம் கூறியவாறே ஜகரிய்யாவுக்கு யஹ்யா பிறந்த பின்னர் நாம் அவரை நோக்கி) ‘‘யஹ்யாவே! நீர் இவ்வேதத்தைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்வீராக'' என்று கூறி, நாம் அவருக்கு (அவருடைய) சிறு வயதிலேயே ஞானத்தையும் அளித்தோம்

[13] இன்னும், இரக்கமுள்ள மனதையும், பரிசுத்தத் தன்மையையும் நாம் அவருக்குக் கொடுத்தோம். ஆகவே, அவர் மிக இறையச்சமுடையவராகவே இருந்தார்

[14] மேலும், தன் தாய் தந்தைக்கு நன்றி செய்பவராகவே இருந்தார். (அவர்களுக்கு) மாறு செய்பவராகவோ முரடராகவோ இருக்கவில்லை

[15] அவர் பிறந்த நாளிலும், அவர் இறக்கும் நாளிலும் (மறுமையில்) அவர் உயிருள்ளவராக எழுப்பப்படும் நாளிலும் அவர் மீது ஸலாம் நிலவுக

[16] (நபியே!) இவ்வேதத்தில் (ஈஸாவின் தாயாகிய) மர்யமைப் பற்றியும் (சிறிது) கூறுவீராக: அவர் தன் குடும்பத்தினரை விட்டு விலகி கிழக்குத் திசையிலுள்ள (தன்) அறைக்குச் சென்று

[17] (குளிப்பதற்காகத்) தன் மக்களின் முன் திரையிட்டுக் கொண்ட சமயத்தில் (ஜிப்ரயீல் என்னும்) நம் தூதரை அவரிடம் அனுப்பிவைத்தோம். அவர் முழுமையான ஒரு மனிதனுடைய கோலத்தில் அவர் முன் தோன்றினார்

[18] (அவரைக் கண்டதும்) ‘‘நிச்சயமாக நான் உம்மிடமிருந்து என்னை பாதுகாக்க ரஹ்மானிடம் பிரார்த்திக்கிறேன். நீர் இறையச்சமுடையவராக இருந்தால் (இங்கிருந்து அப்புறப்பட்டு விடுவீராக)'' என்றார்

[19] அதற்கவர், பரிசுத்தமான ஒரு மகனை ‘‘உமக்களி(க்கப்படும் என்பதை உமக்கு அறிவி)ப்ப தற்காக உமது இறைவனால் அனுப்பப்பட்ட (வானவ) தூதர்தான் நான்'' என்றார்

[20] அதற்கவர் ‘‘எனக்கு எப்படி சந்ததி ஏற்படும்? எம்மனிதனும் என்னைத் தீண்டியதில்லையே; நான் கெட்ட நடத்தையுள்ளவளும் அல்லவே'' என்று கூறினார்

[21] அதற்கவர் ‘‘அவ்வாறே (நடைபெறும் என்று) உமது இறைவன் கூறுகிறான் (என்றும்), அது தனக்கு எளிது (என்றும்), அவரை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும், நம் அருளாகவும் நாம் ஆக்குவோம் (என்றும்) இது முடிவு செய்யப்பட்ட ஒரு விஷயமாக இருக்கிறது'' என்றும் கூறுகிறான்

[22] பின்னர், மர்யம் அந்த குழந்தையை கர்ப்பத்தில் சுமந்து அதனுடன் (அவர் இருந்த இடத்திலிருந்து வெளியேறி) தூரத்திலுள்ள ஓர் இடத்தைச் சென்றடைந்தார்

[23] பின்பு, அவர் ஒரு பேரீச்ச மரத்தடியில் செல்லும்பொழுது அவருக்குப் பிரசவ வேதனை ஏற்பட்டு ‘‘இதற்கு முன்னதாகவே நான் இறந்திருக்க வேண்டாமா? அவ்வாறு இறந்திருந்தால் என் எண்ணமே (ஒருவருடைய ஞாபகத்திலும் இல்லாதவாறு) முற்றிலும் மறக்கடிக்கப்பட்டிருப்பேனே'' என்று (வேதனையுடன்) கூறினார்

[24] (பேரீச்ச மரத்தின்) அடிப்புறமிருந்து (ஜிப்ரயீல்) சப்தமிட்டு ‘‘(மர்யமே!) கவலைப்படாதீர்! உமக்குச் சமீபமாக உமது இறைவன் ஓர் ஊற்றை (உதித்து) ஓடச் செய்திருக்கிறான்

[25] இப்பேரீச்ச மரத்தின் கிளையை, உமது பக்கம் பிடித்து (இழுத்து)க் குலுக்குவீராக. அது பழுத்த பழங்களை உம் மீது சொரியும்

[26] ஆகவே, (அப்பழங்களை) நீர் புசித்து (இந்த ஊற்றின் நீரைக்) குடித்து (இக்குழந்தையைக் கண்டு) கண் குளிர்ந்திருப்பீராக! மனிதரில் எவரைக் கண்ட போதிலும் ‘‘நிச்சயமாக நான் ரஹ்மானுக்கு நோன்பு நோற்க முடிவு செய்துள்ளேன்; ஆகவே, இன்றைய தினம் எம்மனிதருடனும் பேசமாட்டேன் என்று கூறிவிடுவீராக'' என்றும் கூறினார்

[27] பின்னர், (மர்யம் தான் பெற்ற) அக்குழந்தையைச் சுமந்து கொண்டு தன் மக்களிடம் வரவே, அவர்கள் (இவரை நோக்கி) ‘‘மர்யமே! நிச்சயமாக நீ மகா கெட்ட காரியத்தைச் செய்து விட்டாய்

[28] ஹாரூனுடைய சகோதரியே! உன் தந்தை கெட்டவராக இருக்கவில்லை(யே); உன் தாயும் நடத்தைக் கெட்டவளாக இருக்கவில்லையே!'' என்று கூறினார்கள்

[29] (அதற்கவர், இதைப் பற்றித் தன் குழந்தையிடம் கேட்கும்படி) அதன் பக்கம் (கையை) ஜாடை காண்பித்தார். அதற்கவர்கள் ‘‘மடியிலிருக்கக்கூடிய சிறு குழந்தையிடம் நாங்கள் எப்படி பேசுவோம்'' என்று கூறினார்கள்

[30] (இதைச் செவியுற்ற அக்குழந்தை அவர்களை நோக்கிக்) கூறியதாவது: ‘‘நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடிமை ஆவேன். அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்து என்னை நபியாகவும் ஆக்குவான்

[31] நான் எங்கிருந்தபோதிலும் அவன் என்னை மிக்க பாக்கியவானாகவே ஆக்குவான். நான் வாழும்வரை தொழுகையைக் கடைப்பிடித் தொழுகும்படியும், ஜகாத்து கொடுத்து வரும்படியும் அவன் எனக்கு உபதேசித்திருக்கிறான்

[32] என் தாய்க்கு நான் நன்றி செய்யும்படியாகவும் (எனக்கு உபதேசித்து) நான் முரடனாக வழி கெட்டவனாக ஆகாதபடியும் செய்வான்

[33] நான் பிறந்த நாளிலும், நான் மரணிக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிருள்ளவராக எழுப்பப்படும் நாளிலும், என்மீது ஸலாம் உண்டாகுக!'' (என்றும் அக்குழந்தை கூறியது)

[34] இவர்தான் மர்யமுடைய மகன் ஈஸா. அவரைப் பற்றி (மக்கள் வீணாகத்) தர்க்கித்துக் கொண்டிருக்கின்றனர். அதில் உண்மையான விஷயம் இதுதான்

[35] ஆகவே, ‘‘(அவர் இறைவனுமல்ல; இறைவனுடைய பிள்ளையுமல்ல. ஏனென்றால்) தனக்குச் சந்ததி எடுத்துக் கொள்வது அல்லாஹ்வுக்கு (ஒரு சிறிதும்) தகுதியல்ல. அவன் மிகப் பரிசுத்தமானவன். எதையும் படைக்கக் கருதினால் அதை ‘ஆகுக!' என அவன் கூறுவதுதான் (தாமதம்). உடனே அது ஆகிவிடும்

[36] நிச்சயமாக அல்லாஹ்தான் எனது இறைவனும், உங்கள் இறைவனும் ஆவான். (ஈஸாவல்ல; ஆகவே,) அவன் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். இதுதான் நேரான வழி'' (என்று நபியே! கூறுவீராக)

[37] ஆனால், அவர்களிலுள்ள ஒரு கூட்டத்தினர் (இதைப் பற்றி) தங்களுக்கு இடையே (வீணாகத்) தர்க்கித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே (நாம் கூறிய) இதை நிராகரிப்பவர்களுக்கு, அனைவரும் நம்மிடம் ஒன்று சேரக்கூடிய மகத்தான நாளில் கேடுதான்

[38] (இன்றைய தினம் இதை அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்தபோதிலும்) நம்மிடம் அவர்கள் வரும் நாளில் (நம் கட்டளைகளுக்கு) எவ்வளவோ நன்றாகச் செவிசாய்ப்பார்கள். (நம் வேதனைகளை) நன்றாகவே (தங்கள் கண்ணாலும்) காண்பார்கள். எனினும், அந்த அநியாயக்காரர்கள் இன்றைய தினம் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கிறார்கள்

[39] ஆனால், (நபியே!) நியாயத் தீர்ப்பளிக்கப்படும் மிக்க துயரமான நாளைப்பற்றி நீர் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக. எனினும், (இன்றைய தினம்) அவர்கள் கவலையற்றிருக்கின்றனர். ஆதலால், அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்

[40] நிச்சயமாக நாம்தான் பூமிக்கும், அதிலுள்ளவர்களுக்கும் சொந்தம் கொள்வோம். அவர்கள் நம்மிடமே கொண்டு வரப்படுவார்கள்

[41] (நபியே!) இவ்வேதத்தில் இப்றாஹீமை பற்றியும் கூறுவீராக: நிச்சயமாக அவர் மிக்க உண்மையானவராக, நபியாக இருந்தார்

[42] அவர் தன் தந்தையை நோக்கி ‘‘என் தந்தையே! பார்க்காத, கேட்காத, எந்த ஒரு தீங்கையும் உம்மை விட்டு தடைசெய்யாதவற்றை ஏன் வணங்குகிறீர்?'' என்று கேட்டார்

[43] ஆகவே, ‘‘என் தந்தையே! உமக்குக் கிடைக்காத கல்வி ஞானம் (என் இறைவன் அருளால்) எனக்கு கிடைத்துள்ளது. என்னைப் பின்பற்றுவீராக. நான் உம்மை நேரான வழியில் நடத்துவேன்

[44] என் தந்தையே! ஷைத்தானை வணங்காதீர். நிச்சயமாக ஷைத்தான் ரஹ்மானுக்கு மாறு செய்பவனாக இருக்கிறான்

[45] என் தந்தையே! ரஹ்மானுடைய வேதனை உம்மை பிடித்துக் கொள்ளுமோ என்று நிச்சயமாக நான் பயப்படுகிறேன். (ரஹ்மானுக்கு மாறு செய்தால்) ஷைத்தானுக்கு நண்பனாகிவிடுவீர்'' (என்று கூறினார்)

[46] அதற்கவர் ‘‘இப்றாஹீமே! நீ என் தெய்வங்களைப் புறக்கணித்து விட்டீரா? நீ இதிலிருந்து விலகிக் கொள்ளாவிடில், கல்லெறிந்து உன்னைக் கொன்று விடுவேன்; (இனி) நீ எப்பொழுதுமே என்னைவிட்டு விலகி நில்லும்'' என்று கூறினார்

[47] அதற்கு (இப்றாஹீம், இதோ நான் செல்கிறேன்) ‘‘உம்மீது ஸலாம் உண்டாவதாக! பின்னர் நான் உமக்காக என் இறைவனிடத்தில் மன்னிப்புக் கோருவேன். நிச்சயமாக என் இறைவன் என் மீது மிக்க இரக்கமுடையவனாக இருக்கிறான்'' என்று கூறினார்

[48] ‘‘உங்களை விட்டும் அல்லாஹ்வைத் தவிர்த்து நீங்கள் (தெய்வமென) அழைப்பவற்றை விட்டும் நான் விலகிக்கொள்கிறேன். என் இறைவனையே நான் (வணங்கி) பிரார்த்தித்துக் கொண்டிருப்பேன். என் இறைவனிடம் நான் செய்யும் பிரார்த்தனைகள் எனக்குத் தடுக்கப்படாதிருக்கும் என்று நான் நம்புகிறேன்'' (என்றும் கூறினார்)

[49] பின்னர் அவர் அவர்களை விட்டும் அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவற்றை விட்டும் விலகிக் கொண்டார். அதன் பின்னர் இஸ்ஹாக்கையும், யஅகூபையும் அவருக்கு(ச் சந்ததிகளாக) நாம் வழங்கினோம். அவர்கள் ஒவ்வொருவரையும் நபியாகவும் ஆக்கினோம்

[50] அவர்களுக்கு நம் அருட்கொடையையும் அளித்தோம். உண்மையே பேசும்படியான மேலான நாவையும் அவர்களுக்குக் கொடுத்தோம். (பின் வருபவர்கள் ‘அலைஹிஸ் ஸலாம்' (அவர்மீது சாந்தி நிலவுக!) என்று எந்நாளும் அவர்களுக்காக துஆ பிரார்த்தனை செய்யக்கூடிய உயர் பதவியையும் அவர்களுக்கு அளித்தோம்

[51] (நபியே!) இவ்வேதத்தில் மூஸாவைப் பற்றியும் (சிறிது) கூறுவீராக: நிச்சயமாக அவர் கலப்பற்ற மனதுடையவராகவும் (நம்) தூதராகவும் நபியாகவும் இருந்தார்

[52] தூர் (ஸீனாய் என்னும் பாக்கியம் பெற்ற) மலையின் வலது பக்கத்திலிருந்து அவரை நாம் அழைத்தோம். ரகசியம் பேசுகிறவராக அவரை (நமக்கு) நெருக்கமாக்கினோம்

[53] நம் கருணையினால் அவருடைய சகோதரர் ஹாரூனை நபியாக அவருக்கு வழங்கினோம்

[54] (நபியே!) இஸ்மாயீலைப் பற்றியும் இவ்வேதத்தில் (சிறிது) கூறுவீராக: நிச்சயமாக அவர் உண்மையான வாக்குறுதி உடையவராகவும், (நம்) தூதராகவும் நபியாகவும் இருந்தார்

[55] தொழுகையைக் கடைப்பிடிக்கும்படியும், ஜகாத்தும் கொடுத்து வரும்படியும் அவர் தன் குடும்பத்தினரை ஏவிக்கொண்டிருந்தார். அவர் தன் இறைவனால் மிகவும் விரும்பப்பட்டவராகவும் இருந்தார்

[56] (நபியே!) இத்ரீஸைப் பற்றியும் இவ்வேதத்தில் (சிறிது) கூறுவீராக: நிச்சயமாக அவர் மிக்க சத்தியவானாகவும் நபியாகவும் இருந்தார்

[57] இன்னும் அவரை மிக்க மேலான இடத்திற்கு உயர்த்தி விட்டோம்

[58] (ஆகவே, மேற்கூறப்பட்ட) இவர்கள் அனைவரும் அல்லாஹ் அருள் புரிந்த நபிமார்களாவர். இவர்கள் ஆதமுடைய சந்ததியிலும், நூஹ்வுடன் நாம் (கப்பலில்) ஏற்றிக் கொண்டவர்களி(ன் சந்ததியி)லும், இப்றாஹீமுடைய சந்ததியிலும், இஸ்ராயீல் (என்னும் யஅகூப்)உடைய சந்ததியிலும் உள்ளவர்களாவர். மேலும் நாம் தேர்ந்தெடுத்து நேரான வழியில் நடத்தியவர்களிலும் உள்ளவர்கள். அவர்கள் மீது ரஹ்மானுடைய வசனங்கள் ஓதப்பட்டால் (அதற்குப் பயந்து) அழுதவர்களாக (இறைவனுக்குச்) சிரம் பணிந்து தொழுவார்கள்

[59] (இவர்களுக்குப் பின்னர், இவர்களுடைய சந்ததியில்) இவர்களுடைய இடத்தை அடைந்தவர்களோ சரீர இச்சைகளைப் பின்பற்றி தொழுகையை(த் தொழாது) வீணாக்கி விட்டார்கள். அவர்கள் (மறுமையில்) தீமையையே (அழிவையே) சந்திப்பார்கள்

[60] ஆயினும், அவர்களில் எவர்கள் (கைசேதப்பட்டு) பாவத்தில் இருந்து விலகி, நம்பிக்கை கொண்டு, நற்செயல்களையும் செய்கிறார்களோ அவர்கள் சொர்க்கத்தில் நுழைவார்கள். (அவர்கள் அடையவேண்டிய கூலியில்) ஒரு சிறிதும் (குறைக்கப்பட்டு) அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்

[61] அது ‘அத்ன்' என்னும் என்றென்றும் நிலையான சொர்க்கங்களாகும். (அவை தற்சமயம்) மறைவாக இருந்தபோதிலும், அவற்றை ரஹ்மான் தன் நல்லடியார்களுக்கு வாக்களித்திருக்கிறான். நிச்சயமாக அவனுடைய வாக்குறுதி நடைபெற்றே தீரும்

[62] (அவற்றில்) ஸலாம் (என்ற முகமனைத்) தவிர வீணான வார்த்தைகளைச் செவியுற மாட்டார்கள். அங்கு அவர்களுக்குக் காலையிலும் மாலையிலும் (மிக்க மேலான) உணவு அளிக்கப்படும்

[63] இத்தகைய சொர்க்கத்திற்கு நம் அடியார்களில் இறையச்சமுடையவர்களை நாம் வாரிசாக்கி விடுவோம்

[64] (வானவர்கள் கூறுகின்றனர்: நபியே!) உமது இறைவனின் உத்தரவின்றி நாம் இறங்குவதில்லை. நமக்கு முன்னிருப்பவையும், பின்னிருப்பவையும், இவ்விரண்டிற்கு மத்தியில் இருப்பவையும் அவனுக்கே சொந்தமானவை. இதில் (எதையும்) உமது இறைவன் மறப்பவனல்ல

[65] வானங்களையும், பூமியையும், இவற்றிற்கு மத்தியில் உள்ளவற்றையும் படைத்த இறைவன் அவனே! ஆதலால், அவன் ஒருவனையே வணங்குவீராக. அவனை வணங்குவதில் (உமக்கு ஏற்படும் சிரமங்களை) சகித்துக் கொள்வீராக. அவனுடைய தன்மைக்கு ஒப்பான எவரையும் நீர் அறிவீரா? (இல்லையே)

[66] (இவ்வாறிருக்க) மனிதன் ‘‘நான் இறந்த பின்னர் உயிர் கொடுத்து எழுப்பப்படுவேனா?'' என்று (பரிகாசமாகக்) கேட்கிறான்

[67] இதற்கு முன்னர் ஒரு பொருளாகவும் இல்லாதிருந்த அவனை நாமே மனிதனாக படைத்தோம் என்பதை அவன் நினைத்துப்பார்க்க வேண்டாமா

[68] ஆகவே, (நபியே!) உமது இறைவன் மீது சத்தியமாக! அவர்களையும், (அவர்கள் வணங்குகிற) ஷைத்தான்களையும் நிச்சயமாக (உயிர் கொடுத்து) எழுப்பி நரகத்தைச் சுற்றி முழந்தாளிட்டவர்களாக அவர்களை ஒன்று சேர்ப்போம்

[69] பின்னர், ரஹ்மானுக்கு மாறுசெய்வதில் கடினமாக இருந்த அனைவரையும் ஒவ்வொரு கூட்டத்திலிருந்து நிச்சயமாக நாம் பிரித்து விடுவோம்

[70] பின்னர், நரகத்தில் எரிவதற்கு தகுதி உடையவர்கள் யார் என்பதை நிச்சயமாக நாம் அறிந்து கொள்வோம்

[71] அதைக் கடக்காது உங்களில் எவருமே தப்பிவிட முடியாது. இது உமது இறைவனிடம் முடிவு செய்யப்பட்ட மாற்ற முடியாத தீர்மானமாகும்

[72] ஆனால், இறையச்சத்துடன் வாழ்ந்தவர்களை நாம் பாதுகாத்துக் கொள்வோம். அநியாயக்காரர்களை (அவர்கள்) முழந்தாளிட்டவர்களாக (இருக்கும் நிலைமையில்) அதில் தள்ளிவிடுவோம்

[73] நிராகரிப்பவர்களுக்கு நமது தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் அவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கி ‘‘நம் இரு வகுப்பாரில் எவர்களுடைய வீடு (தற்சமயம்) மேலானதாகவும் அழகான தோற்றத்துடனும் இருக்கிறது?'' என்று கேட்கின்றனர்

[74] இவர்களை விட அழகான தோற்றத்தையும், தட்டு முட்டு சாமான்களையும் கொண்ட எத்தனையோ கூட்டத்தாரை இவர்களுக்கு முன் நாம் அழித்திருக்கிறோம்

[75] (நபியே!) கூறுவீராக: எவன் வழிகேட்டில் இருக்கிறானோ அவனுக்கு ஏற்பட்ட தண்டனையை அவன் கண்ணால் காணும் வரை ரஹ்மான் அவனுக்கு (இம்மையில்) தவணையளிக்கிறான். (அதை அவன் கண்டதன் பின்னரோ) அவனுக்கு வேதனை கிடைக்கும். அல்லது அவனுடைய காலம் முடிந்துவிடும். பின்னர், எவருடைய வீடு கெட்டது; எவருடைய கூட்டம் பலவீனமானது என்பதைத் திட்டமாக அவர்கள் (மறுமையில்) அறிந்து கொள்வார்கள்

[76] நேர்வழி பெற்றவர்களுக்கு அல்லாஹ் மென்மேலும் நேர்வழியை அதிகரித்து வழங்குகிறான். நிலையாக இருக்கக்கூடிய நற்செயல்கள்தான் உமது இறைவனிடத்தில் நற்கூலியை அடைவதற்கு சிறந்ததாகவும், நல்ல முடிவை தருவதற்கு சிறந்ததாகவும் இருக்கின்றன

[77] (நபியே!) நம் வசனங்களை நிராகரித்தவனை நீர் பார்த்தீரா? ‘‘(மறுமையிலும்) நிச்சயமாக நான் ஏராளமான பொருள்களும் சந்ததிகளும் கொடுக்கப்படுவேன்'' என்று கூறுகிறான்

[78] அவன் (மறுமையில் நடக்கக்கூடிய) மறைவான விஷயங்களை அறிந்து கொண்டானா? அல்லது ரஹ்மானிடத்தில் (இத்தகையதொரு) வாக்குறுதியைப் பெற்றிருக்கிறானா

[79] (இவன் கூறுகிறபடி) அல்ல! இவன் (பொய்யாகக்) கூறுகின்றவற்றை நாம் எழுதிக் கொண்டே வருகிறோம். (அதற்குத் தக்கவாறு) அவனுடைய வேதனையையும் நாம் அதிகப்படுத்திவிடுவோம்

[80] அவன் (தனக்குரியதென்று) கூறும் அனைத்துக்கும் நாமே வாரிசாகி விடுவோம். அவன் (இவற்றை விட்டுவிட்டு) நம்மிடம் தனியாகவே வருவான்

[81] (இணைவைத்து வணங்கும்) இவர்கள் தங்களுக்கு உதவியாக இருக்குமென்று அல்லாஹ் அல்லாதவற்றைத் தெய்வங்களாக எடுத்துக் கொள்கின்றனர்

[82] அவ்வாறல்ல; அத்தெய்வங்கள் இவர்கள் தங்களை வணங்கியதையும் நிராகரித்து, இவர்களுக்கு விரோதமாகவும் மாறிவிடும்

[83] (நபியே!) நிராகரிப்பவர்களை (பாவமான காரியங்களைச் செய்யும்படித்) தூண்டிக் கொண்டிருப்பதற்காகவே ஷைத்தான்களை நாம் (அவர்களிடம்) அனுப்பிவைக்கிறோம் என்பதை நீர் கவனிக்கவில்லையா

[84] ஆதலால், அவர்களுக்காக (வேதனை வரவேண்டுமென்று) நீர் அவசரப்படாதீர். அவர்களுக்கு (வேதனை வரக்கூடிய நாள்களை) நாம் எண்ணிக்கொண்டே இருக்கிறோம்

[85] இறையச்சமுடையவர்களை ரஹ்மானிடம் (விருந்தாளிகளைப் போல) குழுக்களாக நாம் ஒன்று சேர்க்கும் நாளில்

[86] இன்னும் குற்றவாளிகளை தாகத்துடன் நரகத்தின் பக்கம் நாம் ஓட்டுகின்ற நாளில்

[87] ரஹ்மானிடம் அனுமதி பெற்றவர்களைத் தவிர எவரும் (எவருக்கும்) சிபாரிசு பேச உரிமை பெறமாட்டார்

[88] ரஹ்மான் சந்ததி எடுத்துக் கொண்டதாக அ(ந்த கிறிஸ்தவர்கள், இன்னும் இணைவைப்ப)வர்கள் கூறுகின்றனர்

[89] (நபியே! அவர்களை நோக்கி கூறுவீராக:) நிச்சயமாக நீங்கள் பெரியதோர் அபாண்டத்தைக் கூறுகிறீர்கள்

[90] வானங்கள் கிழிந்து போகவும், பூமி பிளந்து விடவும், மலைகள் இடிந்து சரிந்து விடவும் நெருங்கி விட்டன

[91] ரஹ்மானுக்குச் சந்ததி உண்டென்று அவர்கள் கூறுவதன் காரணத்தால்

[92] சந்ததி எடுத்துக் கொள்வது ரஹ்மானுக்குத் தகுமானதல்ல

[93] ஏனென்றால், நிச்சயமாக வானங்களிலும் பூமியிலும் உள்ள ஒவ்வொன்றும் ரஹ்மானிடம் அடிமையாகவே வருகிறது

[94] அவை அனைத்தையும் அவன் சூழ்ந்து அறிந்து கணக்கிட்டும் வைத்திருக்கிறான்

[95] அவை ஒவ்வொன்றும் மறுமை நாளில் (எவருடைய உதவியுமில்லாமல்) அவனிடம் தனித்தனியாகவே வரும்

[96] நிச்சயமாக நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறவர்களை (அனைவரும்) நேசிக்கும்படி ரஹ்மான் செய்வான்

[97] (நபியே!) உமது மொழியில் நாம் இதை (இறக்கி) எளிதாக்கி வைத்ததெல்லாம், இதன்மூலம் இறையச்சமுடையவர்களுக்கு நீர் நற்செய்தி கூறுவதற்கும், (வீண்) விதண்டாவாதம் செய்யும் மக்களுக்கு இதன் மூலம் நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவுமே ஆகும்

[98] இதற்கு முன்னர் எத்தனையோ கூட்டத்தினரை நாம் அழித்திருக்கிறோம். அவர்களில் ஒருவரையேனும் நீர் காண்கிறீரா? அல்லது அவர்களுடைய சிறிய சப்தத்தையேனும் நீர் கேட்கிறீரா

தாஹா

Surah 20

[1] தா ஹா

[2] (நபியே!) நீர் சிரமப்படுவதற்காக இந்த குர்ஆனை நாம் உம் மீது இறக்கவில்லை

[3] ஆயினும், (இறைவனுக்கு அஞ்சக்கூடிய) இறையச்சம் உடையவர்களுக்கு ஒரு நல்லுபதேசமாகவே (இதை இறக்கி வைத்தோம்)

[4] உயர்ந்த வானங்களையும், பூமியையும் படைத்தவனிடமிருந்து இது அருளப்பட்டது

[5] (அவற்றைப் படைத்த) ரஹ்மான் (-அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ்) அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான்

[6] வானங்களிலும், பூமியிலும், இவற்றுக்கு மத்தியிலும், இன்னும் பூமிக்குக் கீழ் புதைந்து கிடப்பவையும் அவனுக்கே சொந்தமானவை

[7] (நபியே!) நீர் (மெதுவாக அல்லது) சப்தமிட்டு கூறினால் (இரண்டும் அவனுக்குச் சமம்தான். ஏனென்றால்,) நிச்சயமாக அவன் இரகசியத்தையும் அதைவிட மிக மறைவாக (மனதில்) இருப்பதையும் நன்கறிவான்

[8] அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு ஓர் இறைவன் அறவே இல்லை. அவனுக்கு அழகான (திருப்) பெயர்கள் இருக்கின்றன. (அவற்றில் எதைக் கொண்டேனும் அவனை அழையுங்கள்)

[9] (நபியே!) மூஸாவின் சரித்திரம் உம்மிடம் வந்திருக்கிறதா

[10] (அவர் தன் குடும்பத்தாருடன் சென்றபொழுது தான் செல்லவேண்டிய வழியை அறியாத நிலையில் தூர் என்னும் மலைமீது) அவர் நெருப்பைக் கண்ட சமயத்தில் தன் குடும்பத்தாரை நோக்கி ‘‘நீங்கள் (இங்கு சிறிது) தாமதித்திருங்கள். மெய்யாகவே நான் ஒரு நெருப்பைக் காண்கிறேன். அதிலிருந்து ஓர் எரி கொள்ளியை எடுத்துக்கொண்டு உங்களிடம் வருகிறேன். அல்லது நெருப்பி(ன் வெளிச்சத்தி)னால் (நாம் செல்லவேண்டிய) வழியை அறிந்து கொள்வேன்'' என்றார்

[11] அவர் அதனிடம் வரவே (அவரை நோக்கி) ‘‘மூஸாவே!'' என்று சப்தமிட்டழைத்து (நாம் கூறியதாவது)

[12] ‘‘நிச்சயமாக நான்தான் உமது இறைவன். உமது காலணிகள் இரண்டையும் கழற்றி விடுவீராக. நிச்சயமாக நீர் ‘துவா' என்னும் பரிசுத்த இடத்தில் இருக்கிறீர்

[13] நான் உம்மை (என் தூதராகத்) தேர்ந்தெடுத்துக் கொண்டேன். ஆதலால், வஹ்யி மூலம் (உமக்கு) அறிவிக்கப்படுவதற்கு செவிசாய்ப்பீராக

[14] நிச்சயமாக நான்தான் அல்லாஹ். என்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் அறவே இல்லை. என்னையே வணங்குவீராக. என்னை தியானித்துக்கொண்டே இருக்கும்பொருட்டு தொழுகையைக் கடைப்பிடிப்பீராக

[15] நிச்சயமாக மறுமை வந்தே தீரும். ஒவ்வோர் ஆத்மாவும் தன் செயலுக்குத் தக்க கூலியை அடையும் பொருட்டு அதை நான் (மனிதர்களுக்கு) மறைத்து வைக்க விரும்புகிறேன்

[16] ஆகவே, அதை (-மறுமையை) நம்பிக்கை கொள்ளாமல் சரீர இச்சையைப் பின்பற்றுபவன் அந்நாளை நம்பிக்கை கொள்வதிலிருந்து உம்மைத் தடுத்துவிட வேண்டாம். அவ்வாறாயின் நீர் அழிந்து விடுவீர்

[17] ‘‘மூஸாவே! உமது வலது கையில் இருப்பது என்ன?'' (என்று கேட்டான்)

[18] அதற்கவர் ‘‘இது என் கைத்தடி. இதன்மீது நான் சாய்ந்து கொள்வேன். இதைக் கொண்டு என் ஆடுகளுக்குத் தழை (குழை)களைப் பறிப்பேன். இன்னும் இதில் எனக்கு வேறு (பல) பயன்களும் இருக்கின்றன'' என்று கூறினார்

[19] அதற்கு (இறைவன்) ‘‘மூஸாவே! அதை(த் தரையில்) எறிவீராக'' எனக் கூறினான்

[20] அவர் அதை எறியவே அது ஒரு பெரிய பாம்பாகி ஓடிற்று

[21] அப்போது இறைவன் கூறினான்: (மூஸாவே!) ‘‘அதைப் பிடிப்பீராக; பயப்படாதீர். உடனே அதை (முன்பு போல் தடியாக) அதன் பழைய நிலைக்கு திருப்பி விடுவேன்

[22] உமது கையை உமது கக்கத்தில் சேர்த்து வைப்பீராக. (அதை எடுக்கும் போது) அது மிக்க ஒளியுடன் மாசற்ற வெண்மையாக வெளிவரும். (இது) மற்றொரு அத்தாட்சியாகும்

[23] (இவ்வாறு இன்னும்) நமது பெரிய அத்தாட்சிகளை உமக்கு நாம் காண்பிப்போம்

[24] ஃபிர்அவ்னிடம் செல்வீராக! நிச்சயமாக அவன் மாறு செய்து கொண்டிருக்கிறான்

[25] அவர் கூறினார் ‘‘என் இறைவனே! என் உள்ளத்தை(த் திடப்படுத்தி) விரிவாக்கு

[26] (நான் செய்ய வேண்டிய) என் காரியங்களை எனக்குச் சுலபமாக்கி வை

[27] என் நாவிலுள்ள (கொண்ணல்) முடிச்சை அவிழ்த்துவிடு

[28] என் வார்த்தையை (மக்கள்) விளங்கிக் கொள்வார்கள்

[29] என் குடும்பத்தில் ஒருவரை எனக்கு உற்ற துணையாக (மந்திரியாக) ஆக்கிவை

[30] அவர் என் சகோதரர் ஹாரூனாகவே இருக்கட்டும்

[31] அவரைக் கொண்டு என் ஆற்றலை உறுதிப்படுத்தி வை

[32] என் காரியங்களில் அவரையும் கூட்டா(ளியா)க்கி வை

[33] நாங்கள் (இருவரும்) உன்னை அதிகமதிகம் துதித்து புகழ்வதற்காக

[34] மேலும் உன்னை அதிகமாகவே நினைவு கூர்வதற்காக

[35] (எங்கள் இறைவனே!) நிச்சயமாக நீ எங்களை உற்று நோக்கியவனாக இருக்கிறாய்'' (என்று மூஸா பிரார்த்தனை செய்தார்)

[36] அதற்கு (இறைவன்) கூறினான், ‘‘மூஸாவே! நீர் கேட்ட அனைத்தும் நிச்சயமாக உமக்குக் கொடுக்கப்பட்டன

[37] (இதற்கு) முன்னரும் ஒருமுறை நிச்சயமாக நாம் உமக்குப் பேரருள் புரிந்திருக்கிறோம்.'' (அதாவது)

[38] வஹ்யில் அறிவிக்கப்படுபவற்றை நாம் உமது தாய்க்கு வஹ்யி அறிவித்தபோது, (அதாவது)

[39] ‘‘(உங்கள் இனத்தாரின் ஆண் குழந்தைகளை ஃபிர்அவ்ன் வதை செய்து கொண்டிருந்தான். உம்மைப் பற்றி உமது தாய் கவலை கொண்டாள். ஆகவே, உமது தாயை நோக்கி) ‘‘உம்மைப் பேழையில் வைத்து கடலில் எறிந்து விடு. அக்கடல் அதைக் கரையில் சேர்த்துவிடும். எனக்கும் அந்த குழந்தைக்கும் எதிரியாக உள்ளவனே அதை எடுத்துக்கொள்வான்'' (என்று உமது தாய்க்கு அறிவித்தோம்). நீர் என் கண் பார்வையில் வளர்க்கப்படுவதற்காக (இவ்வாறு) உம் மீது என் அன்பை சொரிந்(து உம்மைப் பார்ப்பவர்கள் விரும்பும்படிச் செய்)தோம்

[40] உமது சகோதரி சென்று (உம்மை எடுத்தவர்களிடம்) ‘‘இக்குழந்தைக்கு(ப் பால் கொடுக்கும்) பொறுப்பை ஏற்றுக் கொள்ளக்கூடியவரை நான் உங்களுக்கு அறிவிக்கவா?'' என்று கூறும்படிச் செய்து, உமது தாய் கவலைப்படாது அவளின் கண் குளிர்ந்திருக்கும் பொருட்டு, உமது தாயிடமே உம்மைக் கொண்டு வந்(து சேர்த்)தோம். பின்னர், நீர் ஒரு மனிதரைக் கொலை செய்துவிட்டு (அதற்காக) நீர் கொண்ட கவலையில் இருந்து உம்மைக் காப்பாற்றினோம். (இவ்வாறு) உம்மைப் பல வகைகளிலும் சோதித்தோம். பின்னர், மத்யன்வாசிகளிடமும் நீர் பல வருடங்கள் தங்கியிருந்தீர். மூஸாவே! இதற்குப் பின்னர்தான் நீர் (நமது தூதுக்குரிய) தக்க பக்குவமடைந்தீர்

[41] இன்னும் எனக்காகவே நான் உம்மை(உருவாக்கி)த் தேர்ந்தெடுத்திருக்கிறேன்

[42] ஆகவே, ‘‘நீர் உமது சகோதரருடன் என் அத்தாட்சிகளை எடுத்துக் கொண்டு செல்வீராக. நீங்கள் இருவரும் என்னை நினைவு கூர்வதில் சோர்வடைந்து விடாதீர்கள்

[43] நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள். நிச்சயமாக அவன் மிக்க வரம்பு கடந்துவிட்டான்

[44] நீங்கள் அவனுக்கு நளினமாகவே உபதேசம் செய்யுங்கள். அவன் நல்லுணர்ச்சி பெறலாம் அல்லது அச்சம் கொள்ளலாம்'' (என்றும் கூறினோம்)

[45] அதற்கு அவ்விருவரும் ‘‘எங்கள் இறைவனே! அவன் எங்கள் மீது (வரம்பு) மீறி கொடுமை செய்வானோ அல்லது விஷமம் செய்வானோ என்று நாங்கள் பயப்படுகிறோம்'' என்று கூறினார்கள்

[46] (அதற்கு இறைவன்) கூறினான்: ‘‘நீங்கள் பயப்படவேண்டாம். நான் உங்களுடன் இருந்து (அனைத்தையும்) கேட்டுக்கொண்டும் பார்த்துக் கொண்டும் இருப்பேன்

[47] நீங்கள் இருவரும் அவனிடத்தில் சென்று சொல்லுங்கள்: ‘‘நாங்கள் உன் இறைவனின் தூதர்கள். இஸ்ராயீலின் சந்ததிகளை எங்களுடன் அனுப்பிவிடு; அவர்களை வேதனை செய்யாதே! மெய்யாகவே நாங்கள் உன் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியைக் கொண்டு வந்திருக்கிறோம். நேரான வழியைப் பின்பற்றியவர்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்

[48] (எங்களை) பொய்யாக்கிப் புறக்கணிக்கின்றவன் மீது வேதனை இறங்குமென்று எங்களுக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டது'' (என்பதை தெரிவியுங்கள்)

[49] (அதற்கு) அவன் ‘‘மூஸாவே! உங்கள் (இருவரின்) இறைவன் யார்?'' என்றான்

[50] அதற்கு மூஸா ‘‘எவன் ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குரிய இயற்கைத் தன்மையைக் கொடுத்து (அவற்றை பயன்படுத்தும்) வழியையும் (அவற்றுக்கு) அறிவித்தானோ அவன்தான் எங்கள் இறைவன்'' என்றார்

[51] அதற்கவன் ‘‘முன்னர் சென்றுபோன (சிலை வணக்கம் செய்து கொண்டிருந்த)வர்களின் கதி என்னவாகும்?'' என்று கேட்டான்

[52] அதற்கவர் கூறினார்: ‘‘அதைப்பற்றிய ஞானம் என் இறைவனிடம் உள்ள பதிவுப் புத்தகத்தில் இருக்கிறது. என் இறைவன் (அவர்கள் செய்து வந்ததில் எதையும்) தவறவிடவும் மாட்டான்; மறந்து விடவும் மாட்டான்

[53] அவன்தான் பூமியை உங்களுக்கு இருப்பிடமாக அமைத்து (பயணத்திற்கான) வழிகளையும் அதில் உங்களுக்கு ஏற்படுத்தி மேகத்தில் இருந்து மழையையும் பொழியச் செய்கிறான்.'' (மேலும் என் இறைவன் கூறுகிறான்:) ‘‘நாம் இறக்கிவைக்கும் (ஒரே வித) மழை நீரைக்கொண்டு (குணத்திலும், ரசனையிலும் மாறுபட்ட) பல விதமான புற்பூண்டுகளில் (ஆண், பெண்) ஜோடிகளை வெளிப்படுத்துகிறோம்

[54] (ஆகவே, அவற்றை நீங்களும்) புசியுங்கள்; உங்கள் (ஆடு மாடு போன்ற) கால்நடைகளை(யும்) மேயவிடுங்கள். அறிவுடையவர்களுக்கு நிச்சயமாக இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன

[55] பூமியிலிருந்தே நாம் உங்களைப் படைத்தோம். பின்னர், அதிலேயே உங்களை மீண்டும் சேர்த்து விடுவோம். மற்றொரு தடவையும் (உங்களுக்கு உயிர் கொடுத்து) அதிலிருந்தே உங்களை வெளிப்படுத்துவோம்.'' (இவ்வாறு ஃபிர்அவ்னிடம் மூஸா கூறினார்)

[56] நம் அத்தாட்சிகள் அனைத்தையும் அவனுக்குக் காண்பித்தோம். எனினும், அவனோ (இவை அனைத்தும்) பொய்யெனக் கூறி (நம்பிக்கை கொள்ளாது) விலகிக்கொண்டான்

[57] ‘‘மூஸாவே! உமது சூனியத்தின் மூலம் எங்களை, எங்களின் ஊரை விட்டு வெளியேற்றவா எங்களிடம் வந்தீர்

[58] இதைப்போன்ற சூனியத்தை நாங்களும் உமக்குச் செய்து காண்பிப்போம். நாங்களோ அல்லது நீரோ தவறிவிடாதவாறு ஒரு சமமான பூமியில் (செய்து காண்பிக்க) எங்களுக்கும் உமக்குமிடையில் ஒரு தவணையைக் குறிப்பிடுவீராக!'' என்று கூறினான்

[59] அதற்கு மூஸா ‘‘(உங்கள்) பண்டிகை நாளே உங்களுக்குத் தவணையாகும். (ஆனால்,) மக்கள் அனைவரும் முற்பகலிலேயே கூட்டப்பட வேண்டும்'' என்று கூறினார்

[60] பின்னர், ஃபிர்அவ்ன் அவரைவிட்டு விலகி (தன் இருப்பிடம் சென்று சூனியத்திற்குரிய) தனது எல்லா சூழ்ச்சிகளையும் சேகரித்துக் கொண்டு பின்பு, (குறித்த நாளில், குறித்த இடத்திற்கு) வந்தான்

[61] மூஸா (அங்கு கூடியிருந்த மக்களை நோக்கி) ‘‘உங்களுக்கென்ன கேடு? அல்லாஹ்வின் மீது அபாண்டமாகப் பொய்யைக் கற்பனை செய்து கூறாதீர்கள். (அவ்வாறு கூறினால்) அவன் (தன்) வேதனையைக்கொண்டு உங்களை அழித்துவிடுவான். பொய் சொன்னவர்களெல்லாம் அழிந்தே போனார்கள்'' என்று கூறினார்

[62] (இதைக் கேட்ட) அவர்கள் தங்களுக்குள் இதைப் பற்றித் தர்க்கித்துக் கொண்டு இரகசியமாகவும் ஆலோசனை செய்து (ஒரு முடிவு கட்டிக்) கொண்டனர்

[63] அவர்கள் (மக்களை நோக்கி) ‘‘நிச்சயமாக இவ்விருவரும் சூனியக்காரர்களே! தங்கள் சூனியத்தின் மூலம் உங்களை உங்கள் ஊரை விட்டு வெளியேற்றி விடவும், உங்கள் மேலான மார்க்கத்தை அழித்து விடவும் விரும்புகிறார்கள்

[64] ஆதலால் உங்கள் சூனியங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்துக் கொண்டு பின்பு (அவரை எதிர்க்க) அணியணியாக வாருங்கள். இன்றைய தினம் எவருடைய காரியம் மேலோங்கியதோ அவரே நிச்சயமாக வெற்றி பெறுவார்'' என்று கூறினார்கள்

[65] பின்னர் (சூனியம் செய்ய வந்த) அவர்கள் (மூஸாவை நோக்கி) ‘‘மூஸாவே! (சூனியத்தை) நீர் எறிகிறீரா? அல்லது முதலாவதாக நாங்கள் எறியவா?'' என்று கேட்டார்கள்

[66] அதற்கவர், ‘‘இல்லை! நீங்களே (முதலாவதாக) எறியுங்கள்'' என்று கூறினார். (அவர்கள் எறியவே, எறியப்பட்ட) அவர்களுடைய கயிறுகளும், அவர்களுடைய தடிகளும் அவர்களுடைய சூனியத்தின் காரணமாக மெய்யாகவே அவை (பாம்புகளாகி) ஓடுவதுபோல் இவருக்குத் தோன்றின

[67] ஆகவே, மூஸா தன் மனதில் பயத்தை உணர்ந்தார்

[68] (அச்சமயம் நாம் அவரை நோக்கி) ‘‘பயப்படாதீர்! நிச்சயமாக நீர்தான் (இவர்களைவிட) மிக உயர்ந்தவர்'' என்று கூறினோம்

[69] இன்னும் உமது வலது கையில் இருப்பதை நீர் எறிவீராக! அவர்கள் செய்த (சூனியங்கள்) அனைத்தையும் அது விழுங்கிவிடும். அவர்கள் செய்ததெல்லாம் சூனியக்காரர்களின் (வெறும்) சூழ்ச்சியே (தவிர உண்மையல்ல). சூனியக்காரன் எங்கிருந்து வந்தபோதிலும் வெற்றி பெறவே மாட்டான்'' (என்றும் கூறினோம்)

[70] (மூஸா தன் தடியை எறியவே அது பெரியதொரு பாம்பாகி, அவர்கள் செய்திருந்த சூனியங்கள் அனைத்தையும் விழுங்கி விட்டது. இதைக் கண்ணுற்ற) அச்சூனியக்காரர்கள் சிரம் பணிந்தவர்களாக வீழ்த்தப்பட்டு ‘‘மூஸா, ஹாரூன் (ஆகிய இவ்விருவருடைய) இறைவனை நாங்களும் நம்பிக்கை கொண்டோம்'' என்று கூறினார்கள்

[71] (இதைக் கண்ட ஃபிர்அவ்ன்) ‘‘நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன்னரே நீங்கள் அவரை நம்பிக்கைகொண்டு விட்டீர்கள். நிச்சயமாக அவர்தான் உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுக் கொடுத்த உங்கள் தலைவராயிருக்கும் (போல் தோன்றுகிறது). உங்களை மாறுகை, மாறுகால் வெட்டிப் பேரீச்ச மரத்தின் கிளைகளில் நிச்சயமாக உங்களைக் கழுவேற்றி விடுவேன். வேதனை கொடுப்பதில் நம்மில் கடுமையான வரும் நிலையானவரும் யார் என்பதை நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள்'' என்று கூறினான்

[72] அதற்கவர்கள் (ஃபிர்அவ்னை நோக்கி) ‘‘எங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்ததன் பின்னர் எங்களைப் படைத்தவனைப் புறக்கணித்து விட்டு உன்னை நாங்கள் ஒரு காலத்திலும் விரும்பவே மாட்டோம். உன்னால் இயன்றதை நீ முடிவு செய்துகொள். நீ முடிவு செய்யக்கூடியதெல்லாம் இவ்வுலக வாழ்க்கையில்தான்

[73] நிச்சயமாக நாங்கள் (மெய்யான) எங்கள் இறைவனையே நம்பிக்கை கொள்வோம். எங்கள் குற்றங்களையும் உன் நிர்ப்பந்தத்தினால் நாங்கள் செய்த சூனிய(த்தின் குற்ற)ங்களையும் அவன் எங்களுக்கு மன்னித்து விடுவான். அல்லாஹ்தான் (உன்னைவிட) மிக்க மேலானவனும், என்றும் நிலையானவனும் ஆவான்'' என்று கூறினார்கள்

[74] உண்மையாகவே எவன் குற்றவாளியாகத் தன் இறைவனிடம் வருகிறானோ அவனுக்கு நிச்சயமாக நரகம்தான் (கூலியாகும்). அதில் அவன் சாகவும் மாட்டான்; (சுகத்துடன்) வாழவும் மாட்டான். (வேதனையை அனுபவித்துக்கொண்டு வாழவும் சாகவும் வழியில்லாமல் தவிப்பான்)

[75] எவர் நம்பிக்கை கொண்டவராக நற்செயல்களைச் செய்து (தன் இறைவனிடம்) வருகிறாரோ அவர்களுக்கு மேலான பதவிகள் இருக்கின்றன

[76] (மறுமையிலோ அவர்களுக்கு) ‘அத்ன்' என்ற நிலையான சொர்க்கங்கள் உள்ளன. அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டேயிருக்கும். அவற்றில் என்றென்றுமே தங்கிவிடுவார்கள். இதுதான் பரிசுத்தவான்களுடைய கூலியாகும்

[77] நிச்சயமாக நாம் மூஸாவுக்கு வஹ்யி மூலம் அறிவித்தோம். ‘நீர் என் அடியார்களை அழைத்துக் கொண்டு இரவோடு இரவாக நடந்து (சென்று) விடுவீராக. (வழியில் குறுக்கிடும்) கடலில் (உமது தடியால் அடித்து) உலர்ந்த வழியை அவர்களுக்கு ஏற்படுத்துவீராக. (உம்மை எதிரிகள்) அடைந்து விடுவார்கள் என்று நீர் பயப்பட வேண்டாம். (அக்கடலில் உமது மக்கள் மூழ்கி விடுவார்கள் என்றும்) நீர் அஞ்சாதீர்'' (என்றும் அறிவித்தோம்)

[78] (அவ்வாறே மூஸா நபி இஸ்ரவேலர்களை அழைத்துக் கொண்டு சென்றுவிடவே) ஃபிர்அவ்ன் தன் சேனைகளுடன் அவர்களைப் பின்பற்றிச் சென்றான். (அவன் கடலிலும் அவர்களைப் பின்பற்றிச் செல்லவே) கடலும் (இவர்களில் ஒருவரும் தப்பிவிடாதபடி) இவர்களை மூழ்கடிக்க வேண்டியவாறு மூழ்கடித்து விட்டது

[79] ஃபிர்அவ்ன் தன் மக்களை நேரான வழியில் செலுத்தாமல் தவறான வழியிலேயே செலுத்தினான்

[80] இஸ்ராயீலின் சந்ததிகளே! நிச்சயமாக நாம் உங்களை உங்கள் எதிரிகளிடமிருந்து காப்பாற்றி ‘தூர்' என்னும் மலையின் வலது பாக(ம் வந்தால் உங்களுக்குத் தவ்றாத்)த்தை(த் தருவதாக) வாக்களித்து (உணவு கிடைக்காத பாலைவனத்தில்) உங்களுக்கு ‘மன்னு சல்வா'வையும் இறக்கிவைத்தோம்

[81] நாம் உங்களுக்கு அளித்தவற்றில் நல்லதைப் புசித்து வாருங்கள். அதில் நீங்கள் வரம்பு மீறிவிடாதீர்கள். (மீறினால்) உங்கள் மீது என் கோபம் இறங்கிவிடும். எவன் மீது என் கோபம் இறங்குகிறதோ அவன் நிச்சயமாக அழிந்தே விடுவான்

[82] எவர் கைசேதப்பட்டு (பாவத்திலிருந்து) விலகி, நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்து நேரான வழியில் நிலைத்திருக்கிறாரோ அவரை நிச்சயமாக நான் மிக மன்னிப்பவன் ஆவேன்

[83] (மூஸா தூர் ஸீனாய் மலைக்கு விரைந்து வந்த சமயத்தில், அவரிடம்) ‘‘மூஸாவே! நீர் உமது மக்களை விட்டுப் பிரிந்து இவ்வளவு அவசரமாக ஏன் வந்தீர்?'' (என்று இறைவன் கேட்டான்)

[84] அதற்கவர் ‘‘அவர்கள் இதோ என்னைப் பின்தொடர்ந்தே வருகின்றனர். என் இறைவனே! நீ திருப்திபடுவதற்காக அவசர அவசரமாக (முன்னதாகவே) உன்னிடம் வந்தேன்'' என்று கூறினார்

[85] அதற்கு (இறைவன்) ‘‘நீர் வந்த பின்னர் நாம் உமது மக்களை ஒரு சோதனைக்குள்ளாக்கி விட்டோம். ‘ஸாமிரீ' (என்பவன்) அவர்களை வழிகெடுத்து விட்டான்'' என்று கூறினான்

[86] (உடனே) மூஸா பெரும் துக்கத்துடன் கோபம் கொண்டவராகத் தன் மக்களிடம் திரும்பி வந்து ‘‘என் மக்களே! உங்கள் இறைவன் உங்களுக்கு(த் தவ்றாத் என்னும் வேதத்தைத் தருவதாக) அழகான வாக்குறுதி அளிக்கவில்லையா? அவன் வாக்குறுதி அளித்து உங்களுக்கு அதிக நாட்களாகி விட்டனவா? அல்லது உங்கள் மீது உங்கள் இறைவனின் கோபம் இறங்க வேண்டும் என்று நீங்கள் விரும்பியே எனக்குச் செய்த வாக்குறுதிக்கு நீங்கள் மாறு செய்தீர்களா?'' என்று கேட்டார்

[87] அதற்கவர்கள் ‘‘நாங்கள் உமக்குச் செய்த வாக்குறுதிக்கு எங்கள் இஷ்டப்படி மாறுசெய்யவில்லை. ஆனால், நாங்கள் சுமந்துகொண்டு வந்த (ஃபிர்அவ்னுடைய) மக்களின் நகைகளை (நெருப்பில் எறியும்படி நிர்ப்பந்திக்கப்பட்டு அதில் அவற்றை) நாங்கள் எறிந்தோம். அவ்வாறே ஸாமிரீயும் (தன்னிடமிருந்த நகைகளை) எறிந்தான்

[88] பின்னர், அவன் ஒரு காளை கன்றின் சிலையை (மக்கள் முன்) வெளியாக்கினான். அதற்கு(க் காளை மாட்டின் சப்தத்தைப் போல் அர்த்தமற்ற) சப்தமும் இருந்தது. (இதைக் கண்ட) சிலர், இதுதான் உங்களுக்கும் மூஸாவுக்கும் இறைவனாகும். ஆனால் அவர் (இதை) மறந்து (விட்டு மலைக்குச் சென்று)விட்டார்'' என்று கூறினார்கள்

[89] (என்ன ஆச்சரியம்!) அவர்களு(டைய கேள்விகளு)க்கு அச்சிலை ஒரு பதில் கூறாமலிருப்பதையும், நன்மையோ தீமையோ (எதையும்) அவர்களுக்குச் செய்ய சக்தியற்று இருப்பதையும் அவர்கள் கவனித்திருக்க வேண்டாமா

[90] இதற்கு முன்னதாகவே ஹாரூன் அவர்களை நோக்கி ‘‘என் மக்களே! (இச்சிலையை வணங்கி) இதன் மூலம் நீங்கள் வழி தவறிவிட்டீர்கள். நிச்சயமாக உங்கள் இறைவன் (அல்லாஹ்வாகிய) ரஹ்மான்தான். (இச்சிலை அல்ல!) என்னைப் பின்பற்றுங்கள்; என் கட்டளைக்கு கட்டுப்படுங்கள்'' என்று கூறினார்

[91] அதற்கவர்கள் ‘‘மூஸா நம்மிடம் திரும்ப வரும்வரை இதன் ஆராதனையை நாங்கள் விடமாட்டோம்'' என்று கூறிவிட்டார்கள்

[92] (மூஸா அவர்களிடம் வந்தபின், ஹாரூனை நோக்கி) ‘‘ஹாரூனே! இவர்கள் வழிகெட்டே போனார்கள் என்று நீர் அறிந்த சமயத்தில் (என்னை நீர் பின்பற்றி நடக்க) உம்மைத் தடை செய்தது எது

[93] நீர் என்னைப் பின்பற்றி நடந்திருக்க வேண்டாமா? நீர் என் கட்டளைக்குமாறு செய்ய கருதினீரா?'' (என்று கூறி அவருடைய தாடியையும் தலை முடியையும் பிடித்து இழுத்தார்)

[94] அதற்கவர் ‘‘என் தாய் மகனே! என் தலையையும் என் தாடியையும் பிடி(த்திழு)க்காதீர். (நான் அச்சமயமே அவர்களை விட்டு விலகி இருந்தால்) ‘‘இஸ்ராயீலின் சந்ததிகளுக் கிடையில் நீ பிரிவினையை ஏற்படுத்தி விட்டாய். என் வார்த்தைகளை நீ கவனிக்கவில்லை என்று என்னை நீர் கடுகடுப்பீர் என நிச்சயமாக நான் பயந்(துதான் அவர்களுடன் இருந்)தேன்'' எனக் கூறினார்

[95] (பின்னர் மூஸா ஸாமிரீயை நோக்கி) ‘‘ஸாமிரீயே! உன் விஷயமென்ன? (ஏன் இவ்வாறு செய்தாய்?)'' என்று கேட்டார்

[96] அதற்கவன் ‘‘அவர்கள் பார்க்காத ஒன்றை நான் பார்த்தேன். (வானவத்) தூதர் காலடி மண்ணில் ஒரு பிடியை எடுத்து (பசுவின்) சிலையில் எறிந்தேன். (அது சப்தமிட்டது.) இவ்வாறு (செய்யும் படியாக) என் மனமே என்னைத் தூண்டியது'' என்று கூறினான்

[97] அதற்கு மூஸா (அவனை நோக்கி ‘‘இங்கிருந்து) அப்புறப்பட்டுவிடு. நிச்சயமாக நீ (எவரைக் கண்டபோதிலும்) ‘‘என்னைத் தீண்டாதீர்கள்'' என்று கூறித்திரிவதுதான் இவ்வுலகத்தில் உனக்குரிய தண்டனை. (மறுமையிலோ) நிச்சயமாக உனக்கு வாக்களிக்கப்பட்ட கொடிய வேதனையுண்டு. நீ அதிலிருந்து தப்பவே மாட்டாய். இதோ! நீ ஆராதனை செய்து கொண்டிருந்த தெய்வத்தைப் பார். நிச்சயமாக நான் அதை உருக்கி(ப் பஸ்பமாக்கி) கடலில் தூற்றி விடுவேன்'' என்றும் கூறினார்

[98] உங்கள் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவன்தான்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறொருவன் இல்லை. அவன் அனைத்தையும் அறியக்கூடிய விசாலமான கல்வி ஞானமுடையவன்'' (என்றும் கூறினார்)

[99] (நபியே!) இவ்வாறே உமக்கு முன்னர் சென்றுபோனவர்களின் சரித்திரத்தை (மேலும்) நாம் உமக்குக் கூறுவோம். நம்மிடமிருந்து நல்லுபதேசத்தை(உடைய இவ்வேதத்தை) நிச்சயமாக நாம்தான் உமக்கு அளித்தோம்

[100] எவன் இதை (நம்பிக்கை கொள்ளாமல்) புறக்கணிக்கிறானோ அவன் மறுமை நாளில் நிச்சயமாக(ப் பெரியதொரு) பாவத்தையே சுமப்பான்

[101] அதில் அவன் எந்நாளும் (அதைச் சுமந்து கொண்டே) இருப்பான். மறுமை நாளில் அவர்கள் சுமக்கும் இச்சுமை மிகக் கெட்டது

[102] எக்காளம் (சூர்) ஊதப்பட்டு குற்றவாளிகளை நாம் ஒன்று சேர்க்கும் நாளில் அவர்களுடைய கண்கள் (பயத்தினால்) நீலம் பூத்திருக்கும்

[103] அவர்கள் தங்களுக்குள் மெதுவாக(ப் பேசி) ‘‘நீங்கள் ஒரு பத்து (நாள்களு)க்கு அதிகமாக (உலகத்தில்) தங்கவில்லை'' (என்று கூறுவார்கள்)

[104] அவர்கள் என்ன பேசுவார்கள் என்பதை நாம் நன்கறிவோம். அவர்களில் மிக்க ஞானமுள்ளவன் (என்று கருதப்படுபவன் அவர்களை நோக்கி) ‘‘ஒரு நாளே தவிர நீங்கள் (அதிகம்) தங்கவில்லை'' என்று கூறுவான்

[105] (நபியே!) உம்மிடம் அவர்கள் மலைகளைப் பற்றி (அதன் கதி உலக முடிவின்போது என்னவாகும் என)க் கேட்கிறார்கள். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘என் இறைவன் அவற்றைத் தூள் தூளாக்கி(ப் பரப்பி) விடுவான்

[106] பூமியை சமமான வெட்டவெளியாக்கி விடுவான்

[107] அதில் ஒரு சிறிதும் மேடு பள்ளத்தை நீர் காணமாட்டீர்

[108] அந்நாளில் (அனைவரும் எக்காளத்தின் மூலம்) அழைப்பவனின் சப்தத்தையே பின்பற்றிச் செல்வார்கள். அதில் தவறு ஏற்படாது. ரஹ்மானுக்குப் பயந்து எல்லாச் சப்தங்களும் தணிந்து விடும். (மெதுவான) காலடி சப்தத்தைத் தவிர (வேறு எதையும்) நீர் கேட்கமாட்டீர்

[109] அந்நாளில் ரஹ்மான் எவருக்கு அனுமதி அளித்து அவரின் பேச்சைக் கேட்க அவன் விரும்பினானோ அவரைத்தவிர மற்ற எவருடைய சிபாரிசும் பயனளிக்காது

[110] அவர்களுக்கு முன்னுள்ளதையும் பின்னுள்ளதையும் அவன் நன்கறிவான். எனினும், அவர்கள் அவனை முழுமையாக அறிந்து கொள்ள முடியாது

[111] (அந்நாளில்) நிரந்தரமானவன், நிலையானவன் (அல்லாஹ்வின்) முன், அனைவருடைய (தலைகளும்) முகங்களும் குனிந்துவிடும். எவன் அநியாயத்தைச் சுமந்து கொண்டானோ அவன் நஷ்டம் அடைந்தே தீருவான்

[112] எவர் நம்பிக்கை கொண்டவராக இருந்து நற்செயல்களைச் செய்கிறாரோ அவர், (தன் நற்கூலி) அழிந்து விடுமென்றோ குறைந்து விடுமென்றோ பயப்படமாட்டார்

[113] இவ்வாறே இந்த குர்ஆனை அரபி மொழியில் நாம் இறக்கி வைத்தோம். இது அவர்களுக்கு நல்லுணர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் அவர்கள் (பாவத்திலிருந்து) விலகிக் கொள்வதற்காகவும் இதில் (நாம் நம் வேதனையைப் பற்றி) எச்சரிக்கைகளை விவரித்தோம்

[114] உண்மையான அரசனாகிய அல்லாஹ்தான் மிக உயர்ந்தவன். (நபியே!) குர்ஆனைப் பற்றி உமக்கு வஹ்யி அறிவித்து முடிவதற்கு முன்னதாகவே (அதை ஓத) நீர் அவசரப்படாதீர். ‘‘என் இறைவனே! என் கல்வி ஞானத்தை மேலும் அதிகப்படுத்து'' என்று நீர் பிரார்த்தனை செய்வீராக

[115] இதற்கு முன்னர் ஆதமிடம் நிச்சயமாக நாம் வாக்குறுதி வாங்கியிருந்தோம். எனினும், (அதை) அவர் மறந்துவிட்டார். ஆனால், (மனமுரண்டாக அதற்கு மாறு செய்யும்) உறுதியான எண்ணத்தை நாம் அவரிடம் காணவில்லை

[116] வானவர்களை நோக்கி ‘‘நீங்கள் ஆதமுக்குச் சிரம் பணியுங்கள்'' என்று கூறிய சமயத்தில் இப்லீஸைத் தவிர (அவர்கள் அனைவரும்) சிரம் பணிந்தார்கள். அவன் (சிரம் பணியாது) விலகிக் கொண்டான்

[117] ஆதலால், (நாம் ஆதமை நோக்கி) ‘‘ஆதமே! நிச்சயமாக இவன் உமக்கும் உமது மனைவிக்கும் எதிரியாவான். உங்கள் இருவரையும் இச்சோலையிலிருந்து அவன் வெளிப்படுத்தி விடவேண்டாம். (எச்சரிக்கையாக இருப்பீராக!) இன்றேல் நீர் கஷ்டத்திற்குள்ளாகி விடுவீர்'' என்று கூறினோம்

[118] ‘‘நிச்சயமாக நீர் இதில் பசியாகவோ நிர்வாணமாகவோ இருக்கமாட்டீர்

[119] நிச்சயமாக நீர் இதில் தாகிக்காமலும் வெயிலால் தாக்கப்படாமலும் இருப்பீர்'' (என்று கூறினான்)

[120] எனினும், ஷைத்தான் அவர்களுக்கு ஊசலாட்டத்தை உண்டுபண்ணி ‘‘ஆதமே! நிரந்தர வாழ்க்கைக்குரிய மரத்தையும், அழிவில்லாத அரசாங்கத்தையும் நான் உமக்கு அறிவிக்கவா?'' என்று கூறினான்

[121] ஆகவே, அவ்விருவரும் (தடுக்கப்பட்ட) அதைப் புசித்து விட்டார்கள். உடனே (நிர்வாணமாகி) அவ்விருவரின் மானம் அவ்விருவருக்கும் வெளியாகவே, அச்சோலையின் இலைகளைக் கொண்டு தங்களை மறைத்துக் கொள்ள முற்பட்டார்கள். ஆகவே, ஆதம் (இப்லீஸின் சூழ்ச்சியில் சிக்கித் தவறிழைத்துத்) தன் இறைவனுக்கு மாறுசெய்து வழி தவறிவிட்டார்

[122] பின்னர், (அவர் மன்னிப்புக் கோரவே) அவருடைய இறைவன் அவருடைய குற்றங்களையும் மன்னித்து அவரைத் தேர்ந்தெடுத்து நேரான வழியிலும் அவரை செலுத்தினான்

[123] ‘‘நீங்கள் இருவரும் இதிலிருந்து வெளியேறி விடுங்கள். உங்க(ளுடைய சந்ததிக)ளில் சிலர் சிலருக்கு எதிரிகளாக இருப்பார்கள். அச்சமயம் நிச்சயமாக என் நேர்வழி உங்களிடம் வரும். எவர் என் நேர்வழியைப் பின்பற்றுகிறாரோ அவர் வழி தவறவும் மாட்டார்; நஷ்டமடையவும் மாட்டார்.'' என்றும் கூறினான்

[124] எவன் என் நல்லுபதேசங்களைப் புறக்கணிக்கிறானோ அவனுடைய வாழ்க்கை நிச்சயமாக நெருக்கடியானதாகவே இருக்கும். மறுமை நாளிலோ நாம் அவனைக் குருடனாகவே எழுப்புவோம்

[125] (அச்சமயம்) அவன் ‘‘என் இறைவனே! நீ ஏன் என்னைக் குருடனாக எழுப்பினாய்? நான் பார்வையுடையவனாக இருந்தேன்ன!'' என்று கேட்பான்

[126] அதற்கு (இறைவன்) ‘‘இவ்வாறே (குருடனைப்போன்றே உன் காரியங்கள் இருந்தன) நம்வசனங்கள் உன்னிடம் வந்தன. நீ அவற்றை(க் கவனத்தில் வைக்காது) மறந்துவிட்டாய். அவ்வாறே இன்றைய தினம் நீயும் (கவனிக்கப்படாது) மறக்கப்பட்டுவிட்டாய்'' என்று கூறுவான்

[127] எவன் வரம்பு மீறி, தன் இறைவனின் வசனங்களை நம்பிக்கை கொள்ள வில்லையோ அவனுக்கும் இவ்வாறே நாம் கூலி கொடுப்போம். (அவனுக்குக் கிடைக்கும்) மறுமையின் வேதனையோ மகா கடினமானதும் நிலையானதும் ஆகும்

[128] இவர்களுக்கு முன்னிருந்த எத்தனையோ வகுப்பாரை நாம் அழித்து விட்டோம் என்ற விஷயம் இவர்களை நேரான வழியில் செலுத்தவில்லையா? (அழிந்து போன) அவர்கள் வசித்திருந்த இடங்களுக்குச் சமீபமாகவே இவர்கள் செல்கின்றனர். அறிவுடையவர்களுக்கு நிச்சயமாக அதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன

[129] (நபியே! அவர்களின் தண்டனைக்குரிய காலம் மறுமைதான் என்று) ஒரு தவணையைக் குறிப்பிட்டிருக்கும் உமது இறைவனின் வாக்கு முன்னதாகவே ஏற்பட்டிருக்காவிட்டால் (இச்சமயமே) வேதனை அவர்களைப் பிடித்துக் கொண்டிருக்கும்

[130] ஆகவே, அவர்கள் (உம்மைக் குறைவுபடுத்திக்) கூறுவதைப் பற்றி நீர் பொறுமையுடன் சகித்திருப்பீராக. சூரியன் உதயமாவதற்கு முன்னரும், சூரியன் மறைவதற்கு முன்னரும், இரவு காலங்களிலும், (பகல் காலங்களிலும்) பகலின் இருமுனைகளிலும் உமது இறைவனைப் புகழ்ந்து துதி செய்துகொண்டிருப்பீராக. (இதனால்) நீர் திருப்தி அடையலாம்

[131] (நபியே!) அவர்களில் சிலருக்கு சுகமனுபவிக்க நாம் கொடுத்தவற்றின் பக்கம் நீர் உமது பார்வையைச் செலுத்தாதீர். இவை அனைத்தும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களே! அவர்களைச் சோதிப்பதற்காகவே (நாம் இவற்றை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறோம்.) ஆனால், உமது இறைவன் உமக்குக் கொடுத்திருப்பதோ மிக்க மேலானதும் நிலையானதுமாகும்

[132] (நபியே!) தொழுது வருமாறு நீர் உமது குடும்பத்தினரை ஏவுவீராக. நீரும் அதன் மீது உறுதியாக இருப்பீராக. (இதற்காக) நாம் உம்மிடம் எதையும் கேட்கவில்லை. உமக்கு வேண்டியவற்றை எல்லாம் நாமே கொடுக்கிறோம். முடிவான நன்மை இறையச்சத்திற்குத்தான்

[133] (‘‘இறைவனின் தூதராகிய) அவர் தன் இறைவனிடமிருந்து (நாம் விரும்புகிறவாறு) நம்மிடம் ஓர் அத்தாட்சியைக் கொண்டு வரவேண்டாமா?'' என்று அவர்கள் கூறுகின்றனர். முந்திய வேதங்களிலுள்ள தெளிவான ஆதாரங்கள் அவர்களிடம் வரவில்லையா? (வந்தே இருக்கிறது)

[134] (நம் தூதராகிய) இவர் வருவதற்கு முன்னதாகவே நாம் அவர்களை வேதனை செய்தால் “எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு ஒரு தூதரை அனுப்பியிருக்க வேண்டாமா? (அவ்வாறு அனுப்பியிருந்தால்) நாங்கள் இந்த இழிவுக்கும் நிந்தனைக்கும் உள்ளாவதற்கு முன்னதாகவே உன் வசனங்களைப் பின்பற்றியிருப்போம்'' என்று கூறுவார்கள்

[135] (நபியே! நீர்) கூறுவீராக: ‘‘ஒவ்வொருவரும் (தங்களுக்கு வரவேண்டியதை) எதிர்பார்த்திருப்பவர்களே! ஆகவே, நீங்களும் (உங்களுக்கு வரவேண்டியதை) எதிர்பார்ப்பீராக. நேரான வழியில் இருப்பவர் யார்? (தவறான வழியில் இருப்பவர் யார்?) நேரான வழியை அடைந்து விட்டவர்கள் யார்? என்பதைப் பின்னர் நீங்கள் நிச்சயமாக நன்கறிந்து கொள்வீர்கள்

அல்அன்பியா

Surah 21

[1] மனிதர்களுக்கு அவர்களுடைய கேள்வி கணக்கு (நாள்) நெருங்கிக் கொண்டே வருகிறது; எனினும், அவர்களோ அதைப் புறக்கணித்துக் கவலை அற்றவர்களாக இருக்கின்றனர்

[2] தங்கள் இறைவனிடமிருந்து புதிதாக ஒரு நல்லுபதேசம் வரும் போதெல்லாம் அதை அவர்கள் (நம்பாது பரிகாசம் செய்து) விளையாடிக் கொண்டே கேட்கிறார்கள்

[3] அவர்களுடைய உள்ளங்கள் (உண்மையைச்) சிந்திப்பதே இல்லை. இத்தகைய அநியாயக்காரர்கள் (நம் தூதரைப் பற்றி) ‘‘இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரே தவிர வேறென்ன? நீங்கள் பார்த்துக் கொண்டே (அவருடைய) சூனியத்தில் சிக்க வருகிறீர்களா?'' என்று தங்களுக்குள் இரகசியமாகப் பேசிக் கொள்கின்றனர்

[4] ‘‘வானங்களிலோ பூமியிலோ (ரகசியமாகவும், வெளிப்படையாகவும் பேசப்படும்) எல்லா வாக்கியங்களையும் என் இறைவன் நன்கறிவான். ஏனென்றால், அவன்தான் (அனைத்தையும்) செவியுறுபவன், நன்கறிபவன் ஆவான்'' என்று (நம் தூதர்) பதில் கூறினார்

[5] (தவிர, அவர்கள் நம் வசனங்களைப் பற்றி) மாறாக, ‘‘இவை சிதறிய சிந்தனை(யால் ஏற்பட்ட வாக்கியங்)கள் என்றும், நம் தூதர் இதைப் பொய்யாகத் தாமே கற்பனை செய்துகொண்டார் என்றும், இவர் ஒரு கவிஞர்தான்; (தன் கவிதை ஆற்றலால் அமைத்த வாக்கியங்களே இவை) என்றும் (கூறுவதுடன்) முற்காலத்தில் அனுப்பப்பட்ட தூதர்கள் (கொண்டு வந்ததைப்) போல இவரும் (நாம் விரும்புகிறவாறு) ஓர் அத்தாட்சியை நம்மிடம் கொண்டு வரட்டும்'' என்றும் கூறுகின்றனர்

[6] இவர்களுக்கு முன்னர் நாம் அழித்துவிட்ட ஊராரில் ஒருவருமே (அவர்கள் விரும்பிய அத்தாட்சிகளைக் கண்ட பின்னர்) நம்பிக்கை கொள்ளவில்லை. (அவ்வாறிருக்க) இவர்களா நம்பிக்கை கொள்ளப் போகின்றனர்

[7] (நபியே!) உமக்கு முன்னரும் (மனிதர்களில்) ஆண்களையே தவிர வேறொருவரையும் நாம் நம் தூதராக அனுப்பவில்லை. (உமக்கு அறிவிப்பது போன்றே நம் கட்டளைகளை) அவர்களுக்கும் வஹ்யி (மூலம்) அறிவித்தோம். ஆகவே, (இவர்களை நோக்கி கூறுவீராக. இது) உங்களுக்குத் தெரியாதிருந்தால் (முன்னுள்ள வேத) ஞானமுடையவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்

[8] உணவே உட்கொள்ளாத உடலை அவர்களுக்கு (தூதர்களுக்கு) நாம் கொடுக்க வில்லை. தவிர, அவர்கள் (பூமியில் என்றுமே மரணிக்காத) நிரந்தரம் பெற்றவர்களாகவும் இருக்கவில்லை

[9] பின்னர், (அவர்களை பாதுகாத்துக் கொள்வதாக நாம்) அவர்களுக்களித்த வாக்குறுதியை உண்மையாக்கும் பொருட்டு அவர்களையும், நாம் விரும்பிய மற்றவர்களையும் பாதுகாத்துக் கொண்டு வரம்புமீறியவர்களை அழித்துவிட்டோம்

[10] உங்களுக்கு(ப் போதுமான) நல்லுபதேசங்கள் உள்ள வேதத்தையே நிச்சயமாக உங்களுக்கு அருளியிருக்கிறோம். இவ்வளவு கூட நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா

[11] அநியாயக்காரர்கள் வசித்த எத்தனையோ ஊர்களை நாம் அழித்து நாசமாக்கி விட்டோம். அவர்களுக்குப் பின்னர் (அவ்விடத்தில்) வேறு மக்களை உற்பத்தி செய்தோம்

[12] அவர்களும் நம் வேதனையின் அறிகுறியை உணர்ந்து கொண்ட மாத்திரத்தில் தங்கள் ஊரைவிட்டு விரைந்து ஓட ஆரம்பித்தார்கள்

[13] (அச்சமயம் நாம் அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் வேகமாக ஓடாதீர்கள்! நீங்கள் மிக்க ஆடம்பரமாக அனுபவித்து வந்த செல்வத்தின் பக்கமும், உங்கள் வீடுகளுக்கும் நீங்கள் திரும்புங்கள். அங்கு நீங்கள் அது பற்றி கேட்கப்படுவீர்கள்'' (என்று கூறினோம்)

[14] அதற்கவர்கள் ‘‘எங்கள் கேடே! நிச்சயமாக நாங்கள் (வரம்பு மீறிய) தீயவர்களாக இருந்தோம்'' என்று கூக்குரலிட்டார்கள்

[15] அவர்களுடைய அக்கூக்குரல் அவர்களை நாம் அழித்துச் சாம்பலாக்கும் வரை நீடித்திருந்தது

[16] வானங்களையும், பூமியையும், அதற்கு மத்தியில் உள்ளவற்றையும் வீண் விளையாட்டுக்காக நாம் படைக்கவில்லை

[17] நாம் வீண் விளையாட்டுக்காரனாக இருந்து விளையாட வேண்டும் என்று நாம் கருதியும் இருந்தால் நம்மிடமுள்ள (நமக்குத் தகுதியான)தை நாம் எடுத்து (விளையாடி)க் கொண்டிருப்போம்

[18] அவ்வாறன்று; மெய்யைப் பொய்யின் மீது எறிகிறோம். அது அதை (அதன் தலையை) உடைத்து விடுகிறது. பின்னர் அது அழிந்தும் விடுகிறது. (ஆகவே, இறைவனைப் பற்றி அவனுக்கு மனைவி உண்டென்றும், சந்ததி உண்டென்றும்) நீங்கள் கூறுபவற்றின் காரணமாக உங்களுக்குக் கேடுதான்

[19] வானங்களிலும் பூமியிலுமுள்ள அனைத்தும் அவனுக்குரியனவே! அவனிடத்தில் இருக்கக்கூடிய (வானவர்களாயினும் சரி; அவர்களும் அவனுடைய அடியார்களே! அ)வர்கள் அவனை வணங்காது பெருமை அடிக்கவும் மாட்டார்கள், சோர்வுறவும் மாட்டார்கள்

[20] அவர்கள் இரவு பகல் எந்நேரமும் இடைவிடாது அவனைப் போற்றி புகழ்ந்து துதித்துக் கொண்டே இருக்கின்றனர்

[21] பூமியில் உள்ளவற்றை இவர்கள் கடவுள்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனரே அவை (மரணித்தவர்களை) உயிர்ப்பிக்குமா

[22] வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால் அவை இரண்டுமே அழிந்தே போயிருக்கும். அர்ஷின் அதிபதியாகிய அல்லாஹ், அவர்கள் வர்ணிக்கும் (இத்தகைய குற்றம் குறைகளான) தன்மைகளிலிருந்து மிகப் பரிசுத்தமானவன்

[23] அவன் செய்பவற்றைப் பற்றி (ஏன் செய்தாய், எதற்காகச் செய்தாய் என்று) எவருமே அவனைக் கேட்க முடியாது. (அவ்வளவு சர்வ சுதந்திரமும், வல்லமையும் உள்ளவன் அவன்.) எனினும், படைப்புகள்தான் (அவரவர்களுடைய செயலைப் பற்றிக்) கேட்கப்படுவார்கள்

[24] (நபியே!) இவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றைக் கடவுள்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனரா? (அவ்வாறாயின் அவர்களை நோக்கி) ''என்னுடன் இருப்பவர்களின் வேதமும், எனக்கு முன்னுள்ளவர்களின் வேதமும் இதோ இருக்கின்றன. (இவற்றிலிருந்து இதற்கு) உங்கள் ஆதாரத்தை நீங்கள் கொண்டு வாருங்கள்'' என்று கூறுவீராக. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் உண்மையை அறிந்து கொள்ள சக்தி அற்றவர்கள். ஆதலால் அவர்கள் (இவ்வேதத்தையும்) புறக்கணிக்கின்றனர்

[25] உங்களுக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களுக்கெல்லாம், ‘‘நிச்சயமாக என்னைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லவே இல்லை; என்னையே நீங்கள் வணங்குங்கள்'' என்று நாம் வஹ்யி அறிவிக்காமலில்லை

[26] (அவ்வாறிருந்தும்) ரஹ்மான் (வானவர்களை தனக்குப் பெண்) சந்ததியாக்கிக் கொண்டான் என்று இவர்கள் கூறுகின்றனர். அவனோ மிகப் பரிசுத்தமானவன். (வானவர்கள் அவனுடைய சந்ததிகளன்று,) எனினும், (அவனுடைய) கண்ணியமிக்க அடியார்கள் ஆவர்

[27] (அவனுக்கு முன்னால்) இ(வ்வான)வர்கள் ஒரு வார்த்தையும் மீறிப் பேச மாட்டார்கள். அவன் இட்ட கட்டளையை இவர்கள் செய்து கொண்டு இருப்பார்கள்

[28] அவர்களுக்கு முன்னிருப்பவற்றையும், பின்னிருப்பவற்றையும் அவன் நன்கறிவான். அவன் விரும்பியவர்களுக்கே தவிர மற்றெவருக்கும் இவர்கள் சிபாரிசு செய்யமாட்டார்கள். இன்னும், அவனுக்குப் பயந்து நடுங்கிக் கொண்டே இருப்பார்கள்

[29] அவர்களில் எவரேனும் ‘‘அல்லாஹ்வையன்றி நிச்சயமாக நானும் வணக்கத்திற்குரிய ஓர் இறைவன்தான்'' என்று கூறினால், அவருக்கு நரகத்தையே நாம் கூலியாக்குவோம். அநியாயக்காரர்களுக்கு அவ்வாறே கூலி கொடுப்போம்

[30] (ஆரம்பத்தில்) வானம் (என்றும்) பூமி (என்றும் தனித்தனியாக) இல்லாமல் இருந்ததை நாமே பிரித்தமைத்து, (வானத்திலிருந்து மழையை பொழியச் செய்து அந்த மழை) நீரைக் கொண்டு உயிருள்ள ஒவ்வொன்றையும் (வாழ்ந்திருக்கச்) செய்தோம் என்பதையும் இந்நிராகரிப்பவர்கள் பார்க்கவில்லையா? ஆகவே, இவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்களா

[31] பூமி மனிதர்களுடன் சாய்ந்துவிடாதிருக்கும் பொருட்டு அதில் மலைகளை நாம்தான் நாட்டினோம். அவர்கள் விரும்பிய இடத்திற்கு சரியாக செல்லும் பொருட்டு அதில் விசாலமான வழிகளையும் நாம்தான் ஏற்படுத்தினோம்

[32] மேலும், வானத்தைப் பத்திரமான ஒரு முகட்டைப்போல் நாம்தான் அமைத்தோம். (இவ்வாறெல்லாமிருந்தும்) அவற்றிலுள்ள அத்தாட்சிகளை அவர்கள் புறக்கணிக்கின்றனர்

[33] அவனே இரவையும் பகலையும் (படைத்தான்.) சூரியனையும் சந்திரனையும் படைத்தான். இவை எல்லாம் வானத்தில் நீந்திச் செல்(வதைப் போல் செல்)கின்றன

[34] (நபியே!) உமக்கு முன்னர் எந்த மனிதனுக்குமே நாம் மரணமற்ற வாழ்க்கையை ஏற்படுத்தவில்லை. ஆகவே, நீர் இறந்துவிட்ட பின்னர் (என்ன) இவர்கள் என்றென்றும் வாழப்போகிறார்களா

[35] ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே தீரும். நன்மை, தீமை செய்யக்கூடிய நிலைமையில் உங்களை (வைத்து) நாம் சோதிப்போம். பின்னர் நீங்கள் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்

[36] (நபியே!) நிராகரிப்பவர்கள் உம்மைக் கண்டால் (தங்களுக்குள் ஒருவர் மற்றவரை நோக்கி) ‘‘உங்கள் தெய்வங்களைக் குறை கூறுபவர் இவர்தானா?'' என்று உம்மை(ச் சுட்டிக் காண்பித்து)ப் பரிகாசம் செய்யாமல் இருப்பதில்லை. எனினும், அவர்களோ ரஹ்மா(ன் அளவற்ற அருளாளன் என்று இறைவ)னின் பெயரைக் கூறுவதையும் மறுக்கின்றனர்

[37] மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கிறான். (ஆகவே, அவர்களை நோக்கி நபியே! கூறுவீராக: ‘‘வேதனைகளாகிய) என் அத்தாட்சிகளை நான் அதிசீக்கிரத்தில் உங்களுக்குக் காண்பிப்பேன். ஆகவே, நீங்கள் என்னிடம் அவசரப்பட வேண்டாம்

[38] (அந்நிராகரிப்பவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கி ‘‘வேதனை வரும் என்று) நீங்கள் கூறுவதில் உண்மையானவர்களாக இருந்தால் இந்த (மிரட்டல்) வாக்கு எப்பொழுது வரும்'' என்று அவர்கள் கேட்கிறார்கள்

[39] அவர்கள் தங்கள் முகங்களில் இருந்தும், தங்கள் முதுகுகளில் இருந்தும் நரக நெருப்பைத் தட்டிக்கொள்ள முடியாமலும், அவர்களுக்கு உதவி செய்ய ஒருவரும் கிடைக்காமலும் போகக்கூடிய (ஒரு) காலம் வருமென்பதை இந்த நிராகரிப்பவர்கள் அறிந்திருந்தால் (அது இவர்களுக்கே நன்று)

[40] எனினும், அது இவர்களிடம் திடுகூறாகவே வந்து அவர்களைத் தட்டுக் கெட்டுத் தடுமாறும்படிச் செய்து விடும்; அதைத் தட்டிக் கழித்துவிட இவர்களால் முடியாது. இவர்களுக்கு சிறிதும் அவகாசம் கொடுக்கப்படவும் மாட்டாது

[41] உமக்கு முன்னர் வந்த நம் தூதர்களும் (இவ்வாறே எதிரிகளால்) பரிகாசம் செய்யப்பட்டனர். ஆகவே, பரிகாசம் செய்து கொண்டிருந்தவர்களை அவர்கள் பரிகாசம் செய்த வேதனை வந்து சூழ்ந்து கொண்டது

[42] (நபியே! இவர்களை நோக்கி) ‘‘இரவிலோ பகலிலோ வரக்கூடிய ரஹ்மானுடைய வேதனையில் இருந்து உங்களை பாதுகாப்பவர் யார்?'' என்று கேட்பீராக. எனினும் இவர்களோ தங்கள் இறைவனை நினைப்பதையே முற்றிலும் புறக்கணித்து விட்டனர்

[43] இவர்களை (நம் வேதனையிலிருந்து) தடுக்கக்கூடிய தெய்வங்கள் நம்மைத் தவிர இவர்களுக்கு வேறு இருக்கின்றனவா? (இவர்கள் தெய்வங்கள் எனக் கூறும்) அவை (இவர்களுக்கு உதவி செய்வதென்ன!) தமக்குத்தாமே உதவி செய்துகொள்ளவும் சக்தியற்றவை. ஆகவே, நமக்கெதிராக அவை இவர்களுக்குத் துணை புரியாது

[44] இவர்களையும் இவர்களுடைய மூதாதைகளையும் (நீண்ட காலம் வரை) சுகமனுபவிக்கச் செய்தோம். அதனால் அவர்களின் ஆயுளும் அதிகரித்தது. (ஆகவே, அவர்கள் கர்வங்கொண்டு விட்டார்களா?) நிச்சயமாக நாம் இவர்களைச் சூழ்ந்துள்ள பூமியை(ப் படிப்படியாக)க் குறைத்து (இவர்களை நெருக்கி)க் கொண்டே வருவதை இவர்கள் காணவில்லையா? இவர்களா (நம்மை) வென்று விடுவார்கள்

[45] (நபியே! அவர்களை நோக்கி ‘‘வேதனையைக் கொண்டு) நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம் வஹ்யின் மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டவற்றையே! (நான் சுயமாக எதையும் கூறவில்லை)'' என்று கூறுவீராக. (எனினும், இவர்கள் செவிடர்களைப் போல் இருக்கின்றனர். ஆகவே) இந்த செவிடர்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்டால் அதை அவர்கள் செவியேற்க மாட்டார்கள்

[46] உமது இறைவனுடைய வேதனையின் வாடை இவர்கள் மீது பட்டாலே போதும் ‘‘நாங்கள் அழிந்தோம்; நிச்சயமாக நாங்களே எங்களுக்குத் தீங்கு இழைத்துக் கொண்டோம்!'' என்று கூச்சல் இடுவார்கள்

[47] மறுமை நாளில் சரியான தராசையே நாம் நிறுத்துவோம். எந்த ஓர் ஆத்மாவுக்கும் (நன்மையைக் குறைத்தோ, தீமையைக் கூட்டியோ) அநியாயம் செய்யப்பட மாட்டாது. (நன்மையோ தீமையோ) ஒரு கடுகின் அளவு இருந்தபோதிலும் அதையும் கொண்டு வருவோம். கணக்கெடுக்க நாமே போதும். (வேறெவரின் உதவியும் நமக்குத் தேவையில்லை)

[48] மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் (நன்மை தீமையைப்) பிரித்தறிவிக்கக்கூடிய வேதத்தையே நாம் கொடுத்திருந்தோம். அதை பிரகாசமாகவும், இறையச்சமுடையவர்களுக்கு நல்லுபதேசமாகவும் ஆக்கினோம்

[49] (இறையச்சமுடையவர்கள்) தங்கள் இறைவனைத் தங்கள் கண்ணால் பார்க்காவிடினும் அவனுக்குப் பயப்படுவதுடன், மறுமையைப் பற்றியும் அவர்கள் (எந்நேரமும் பயந்து) நடுங்கிக் கொண்டிருப்பார்கள்

[50] இந்த குர்ஆன் மிக்க பாக்கியமுடைய நல்லுபதேசமாகும். இதை நாமே இறக்கி வைத்தோம். இதை நீங்கள் நிராகரித்து விடுவீர்களா

[51] நிச்சயமாக நாம் இப்றாஹீமுக்கு இதற்கு முன்னரே நல்லறிவைக் கொடுத்திருந்தோம். (அதற்குரிய) அவருடைய தன்மையை நன்கறிந்தோம்

[52] அவர் தன் தந்தையையும், தன் மக்களையும் நோக்கி ‘‘நீங்கள் (மிக்க உற்சாகத்தோடு) வணங்கிவரும் இச்சிலைகள் என்ன? (எதற்காக நீங்கள் இவற்றை வணங்குகிறீர்கள்)'' என்று கேட்டதற்கு

[53] அவர்கள் ‘‘எங்கள் மூதாதைகள் இவற்றை வணங்கிக் கொண்டிருக்க நாங்கள் கண்டோம். (ஆதலால் நாங்களும் அவற்றை வணங்குகிறோம்)'' என்று கூறினார்கள்

[54] அதற்கவர் ‘‘நீங்களும் உங்கள் மூதாதைகளும் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கிறீர்கள்'' என்று கூறினார்

[55] அதற்கவர்கள் ‘‘நீர் ஏதும் உண்மையான செய்தியை நம்மிடம் கொண்டு வந்திருக்கிறீரா? அல்லது (இவ்வாறு கூறி நம்முடன்) நீர் விளையாடுகிறீரா?'' என்று கேட்டனர்

[56] அதற்கவர் ‘‘(நான் விளையாடுபவன்) இல்லை. உங்கள் (உண்மையான) இறைவன், வானங்களையும், பூமியையும் படைத்த இறைவன்தான். (இந்த சிலைகளல்ல) இதற்கு நானே உங்களுக்குச் சாட்சி கூறுகிறேன்'' என்று கூறினார்

[57] (இங்கிருந்து) ‘‘நீங்கள் திரும்பிச் சென்ற பின்னர் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்கள் சிலைகளைப் பங்கப்படுத்திவிடுவேன்'' (என்றும் கூறினார்)

[58] (அவ்வாறே அவர்கள் சென்ற பின்னர்) அவற்றில் பெரிய சிலையைத் தவிர (மற்ற) அனைத்தையும் துண்டு துண்டாக உடைத்துத் தள்ளிவிட்டார். அவர்கள் (திரும்ப வந்த பின்னர் இதைப் பற்றி விசாரிப்பதற்காகப்) பெரிய சிலையிடம் செல்லக் கூடும் (என்று அதை மட்டும் உடைக்கவில்லை)

[59] அவர்கள் (திரும்ப வந்து இக்காட்சியைக் கண்டதும்) ‘‘எங்கள் தெய்வங்களை இவ்வாறு செய்தவன் எவன்? நிச்சயமாக அவன் மகா அநியாயக்காரன்'' என்று கூறினார்கள்

[60] அதற்கு (அவர்களில் சிலர்) ‘‘ஒரு வாலிபர் இவற்றைப் பற்றி(க் குறை) கூறிக் கொண்டிருப்பதை நாங்கள் செவியுற்று இருக்கிறோம். அவருக்கு ‘இப்றாஹீம்' என்று பெயர் கூறப்படுகிறது'' என்று கூறினார்கள்

[61] அதற்கவர்கள் ‘‘(அவ்வாறாயின்) அவரை மக்கள் கண்களுக்கு முன் கொண்டு வாருங்கள். (அவர் கூறும் பதிலுக்கு) அனைவரும் சாட்சியாக இருக்கட்டும்'' என்று கூறினார்கள்

[62] (அவ்வாறு இப்றாஹீமைக் கொண்டு வந்து அவரை நோக்கி) ‘‘இப்றாஹீமே! எங்கள் தெய்வங்களை இவ்வாறு செய்தவர் நீர்தானோ?'' என்று கேட்டனர்

[63] அதற்கவர் ‘‘இல்லை. இவற்றில் பெரிய சிலை இதோ இருக்கிறதே! இதுதான் செய்திருக்கலாம்! (உடைப்பட்ட) இவை பேசக்கூடியவையாக இருந்தால் அவற்றையே கேளுங்கள்'' என்றார்

[64] அவர்கள் (இதற்குப் பதில் கூறமுடியாமல் நாணமுற்றுத்) தங்களுக்குள் (ஒருவர் மற்றவரை நோக்கி) “நிச்சயமாக நீங்கள்தான் (இவற்றைத் தெய்வமெனக் கூறி) அநியாயம் செய்து விட்டீர்கள்'' என்று கூறிக் கொண்டார்கள்

[65] பின்னர், அவர்கள் (வெட்கத்தால் சிறிது நேரம்) தலை குனிந்திருந்து (இப்றாஹீமை நோக்கி) ‘‘இவை பேசாது என்பதை நிச்சயமாக நீர் அறிவீரே! (அவ்வாறிருக்க இவற்றிடம் நாங்கள் கேட்கும்படி எங்களிடம் எவ்வாறு கூறுகிறீர்?)'' (என்று கூறினார்கள்)

[66] அதற்கவர் ‘‘உங்களுக்கு ஒரு நன்மையும் தீமையும் செய்ய சக்தியற்ற அல்லாஹ் அல்லாத (இ)வற்றையா நீங்கள் வணங்குகிறீர்கள்

[67] சீச்சி! (கேவலம் நீங்களென்ன) உங்களுக்கும் கேடுதான்; நீங்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாத இவைக(ளென்ன இவை)களுக்கும் கேடுதான். என்னே! இவ்வளவு கூட நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?'' என்று கூறினார்

[68] அதற்கவர்கள் (தங்கள் மனிதர்களை நோக்கி,) ‘‘நீங்கள் ஏதும் செய்ய வேண்டுமென்றி ருந்தால் இவரை நெருப்பில் எரித்து உங்கள் தெய்வங்களுக்காக இவரிடம் பழி வாங்குங்கள்'' என்று கூறினார்கள்

[69] (அவ்வாறே அவர்கள் இப்றாஹீமை நெருப்புக் கிடங்கில் எறியவே நெருப்பை நோக்கி) ‘‘நெருப்பே! நீ இப்றாஹீமுக்கு சுகம் தரும் விதத்தில் குளிர்ந்து விடு!'' என்று நாம் கூறினோம்

[70] அவர்கள் இப்றாஹீமுக்கு தீங்கிழைக்கக் கருதினார்கள். எனினும், நாம் அவர்களையே நஷ்டமடையும்படிச் செய்து விட்டோம்

[71] அவரையும் (அவருடைய சகோதரர் மகன்) லூத்தையும் நாம் பாதுகாத்துக் கொண்டு, மனிதர்கள் பெரும் பாக்கியம் அடையக்கூடியதாக நாம் செய்திருக்கும் (பைத்துல் முகத்தஸ் என்னும்) ஊருக்கு கொண்டு வந்து சேர்த்தோம்

[72] மேலும், நாம் அவருக்கு (அவருடைய) கோரிக்கைக்கு அதிகமாக இஸ்ஹாக்கையும், யஅகூபையும் அருள் புரிந்தோம். இவர்கள் அனைவரையும் நல்லடியார்களாகவும் நாம் ஆக்கினோம்

[73] மேலும், நம் கட்டளைகளை (மக்களுக்கு) ஏவி நேரான வழியை அறிவிக்கக்கூடிய தலைவர்களாகவும் அவர்களை ஆக்கினோம். நன்மையான காரியங்களைச் செய்யுமாறும், தொழுகையைக் கடைப்பிடிக்குமாறும், ‘ஜகாத்' கொடுத்து வருமாறும் அவர்களுக்கு வஹ்யி மூலம் அறிவித்தோம். அவர்கள் அனைவரும் நம்மையே வணங்கிக் கொண்டிருந்தார்கள்

[74] லூத்தையும் (நபியாக்கி) அவருக்கு ஞானத்தையும் கல்வியையும் கொடுத்துத் தீய காரியங்களைச் செய்து கொண்டிருந்த ஊர் மக்களில் இருந்தும் நாம் அவரை பாதுகாத்துக் கொண்டோம். நிச்சயமாக அவ்வூரார் (மனிதர்களில்) மிகக்கெட்ட மனிதர்களாகவும் பெரும் பாவிகளாகவும் இருந்தனர்

[75] நாம் அவரை நம் அருளில் புகுத்தினோம். நிச்சயமாக அவர் நல்லடியார்களில் உள்ளவராகவே இருந்தார்

[76] நூஹையும் (நபியாக அனுப்பிவைத்தோம்.) அவர் இதற்கு முன்னர் செய்து கொண்டிருந்த பிரார்த்தனையை அவருக்காக நாம் அங்கீகரித்துக் கொண்டு, அவரையும் அவரது குடும்பத்தினரையும் பெரும் சிரமத்தில் இருந்து பாதுகாத்துக் கொண்டோம்

[77] நம் வசனங்களைப் பொய்யாக்கிய மக்களுக்கு விரோதமாக அவருக்கு நாம் உதவி செய்தோம். நிச்சயமாக அவர்களும் மிகக் கெட்ட மக்களாகவே இருந்தனர். ஆதலால், அவர்கள் அனைவரையும் (வெள்ளப் பிரளயத்தில்) மூழ்கடித்து விட்டோம்

[78] தாவூதையும் ஸுலைமானையும் (நபியாக அனுப்பிவைத்தோம்). ஒருவருடைய ஆடுகள் மற்றொருவரின் பயிரை மேய்ந்து விட்டது பற்றி (தாவூத், சுலைமான் ஆகிய) இருவரும் தீர்ப்புக் கூற இருந்த சமயத்தில் அவர்களுடைய தீர்ப்பை நாம் (கவனித்துப்) பார்த்துக் கொண்டிருந்தோம்

[79] தீர்ப்புக் கூறுவதில் இவர்கள் இருவருக்குமே கல்வியையும் ஞானத்தையும் நாம் கொடுத்திருந்த போதிலும், ஸுலைமானுக்கு நியாயத்தை விளக்கிக் காண்பித்தோம். மலைகளையும் பறவைகளையும் தாவூதுக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். அவை அவருடன் அல்லாஹ்வை தஸ்பீஹ் (துதி) செய்தன. நாமேதான் இவற்றை எல்லாம் செய்தோம்

[80] (போரில் ஈட்டி, கத்தி ஆகியவற்றின்) காயத்தில் இருந்து உங்களை பாதுகாக்கக் கூடிய கவசங்கள் செய்வதை நாம் அவருக்குக் கற்றுக் கொடுத்தோம். இதற்கு நீங்கள் நன்றி செலுத்துவீர்களா

[81] ஸுலைமானுக்கு வேகமான காற்றையும் நாம் வசப்படுத்திக் கொடுத்திருந்தோம். அது அவருடைய உத்தரவின்படி மிக்க பாக்கியம்பெற்ற ஊருக்கு (அவரை எடுத்து)ச்செல்லும் எல்லா விஷயங்களையும் நாம் அறிந்திருந்தோம்

[82] கடலில் மூழ்கி (முத்து, பவளம் போன்றவற்றைக் கொண்டு) வரக்கூடிய (மூர்க்க) ஷைத்தான்களையும் நாம் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்திருந்தோம். இதைத் தவிர (அவருக்கு அவசியமான) பல வேலைகளையும் அவை செய்துகொண்டு இருந்தன. நாம்தான் அவர்களைக் கண்காணித்து வந்தோம்

[83] ஐயூபையும் (நாம் நம் தூதராக அனுப்பிவைத்தோம்). அவர் தன் இறைவனை நோக்கி ‘‘நிச்சயமாக நோய் என்னைப் பிடித்துக் கொண்டது. (அதை நீ நீக்கி விடு.) நீயோ கருணையாளர்களிலெல்லாம் மகா கருணையாளன்'' என்று பிரார்த்தனை செய்தார்

[84] ஆகவே, நாம் அவருடைய பிரார்த்தனையை அங்கீகரித்து, அவரைப் பீடித்திருந்த நோயையும் நீக்கி, அவருடைய குடும்பத்தையும் நாம் அவருக்கு அளித்து, நம் அருளால் மேலும் அதைப் போன்ற தொகையினரையும் அவருக்குக் (குடும்பமாகக்) கொடுத்தோம். இது (எனக்குப் பயந்து) என்னை வணங்குபவர்களுக்கு(ம் என்னிடம் பிரார்த்தனை செய்பவர்களுக்கும்) நல்லுணர்ச்சி ஊட்டக்கூடியதாக இருக்கிறது

[85] இஸ்மாயீலையும், இத்ரீஸையும், துல்கிப்லுவையும் (நாம் நம் தூதர்களாக அனுப்பிவைத்தோம்). இவர்கள் அனைவரும் (தங்களுக்கு ஏற்பட்ட சிரமங்களைச்) சகித்துக் கொண்டனர்

[86] ஆகவே, இவர்கள் அனைவரையும் நாம் நம் அருளில் புகுத்தினோம். ஏனென்றால், நிச்சயமாக இவர்கள் அனைவரும் நல்லவர்களே

[87] (யூனுஸ் நபியாகிய) துன்னூனையும் (நம் தூதராக ஆக்கினோம்). அவர் கோபமாகச் சென்ற சமயத்தில் நாம் அவரைப் பிடித்துக்கொள்ள மாட்டோம் என்று எண்ணிக்கொண்டார். (ஆதலால், அவரை ஒரு மீன் விழுங்கும்படிச் செய்து மீன் வயிற்றின்) இருள்களிலிருந்த அவர் (நம்மை நோக்கி) ‘‘உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறொருவனும் இல்லை. நீ மிகப் பரிசுத்தமானவன். நிச்சயமாக நானோ அநியாயக்காரர்களில் ஒருவனாகிவிட்டேன். (என்னை மன்னித்து அருள் புரிவாயாக!)'' என்று பிரார்த்தனை செய்தார்

[88] நாம் அவருடைய பிரார்த்தனையை அங்கீகரித்து (அவருடைய மிக்க துயரமான) சிரமத்திலிருந்தும் அவரை நாம் பாதுகாத்துக் கொண்டோம். இவ்வாறே, (சிரமத்தில் சிக்கி நம்மிடம் பிரார்த்தனை செய்யும்) நம்பிக்கையாளர்களையும் நாம் பாதுகாத்துக் கொள்வோம்

[89] ஜகரிய்யாவையும் (தூதராக அனுப்பிவைத்தோம்). அவர் தன் இறைவனை நோக்கி ‘‘என் இறைவனே! நீ என்னை(ச் சந்ததியற்ற) தனித்தவனாக விட்டுவிடாதே! நீயோ வாரிசாகக்கூடியவர்களில் மிக்க மேலானவன்'' என்று பிரார்த்தனை செய்த சமயத்தில்

[90] நாம் அவருடைய பிரார்த்தனையை அங்கீகரித்து (மலடாக இருந்த) அவருடைய மனைவியை குணப்படுத்தி, யஹ்யாவை அவருக்கு(ச் சந்ததியாகக்) கொடுத்தோம். நிச்சயமாக இவர்கள் அனைவரும் நன்மையான காரியங்களைச் செய்வதில் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டிருந்தார்கள். (நம் அருளை) விரும்பியும் (நம் தண்டனையைப்) பயந்தும் நம்மிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். இவர்கள் அனைவரும் நம்மிடம் மிக்க உள்ளச்சமுடையவர்களாகவும் இருந்தார்கள்

[91] தன் கற்பைக் காத்துக்கொண்ட (மர்யம் என்ப)வளை(யும் நீர் ஞாபக மூட்டுவீராக. நம் தூதர்) ஜிப்ரயீல் மூலம் அவளுடைய கர்ப்பத்தில் நாம் ஊதினோம். அவளையும் அவளுடைய மகனையும் உலகத்தாருக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம்

[92] (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அனைவரும் (ஒரே மார்க்கத்தைப் பின்பற்ற வேண்டிய) ஒரே வகுப்பார்தான். (இதில் ஜாதி வேற்றுமை கிடையாது.) உங்கள் அனைவருக்கும் இறைவன் நான் ஒருவனே! ஆகவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்

[93] எனினும் இவர்கள் தங்கள் காரியத்தில் (வேறுபட்டு) பல பிரிவுகளாக பிரிந்து விட்டனர். இவர்கள் அனைவரும் நம்மிடம் திரும்ப வரக்கூடியவர்கள்தான்

[94] ஆகவே, (இவர்களில்) எவர்கள் நம்பிக்கைகொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுடைய முயற்சி வீணாகிவிடாது. நிச்சயமாக நாம் அவற்றைப் பதிவு செய்து வருகிறோம்

[95] நாம் எவ்வூரார்களை அழித்துவிட்டோமோ அவர்கள் நிச்சயமாக (உலகிற்கு) திரும்பவே மாட்டார்கள் என விதிக்கப்பட்டுள்ளது

[96] யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்திற்கு வழி திறக்கப்பட்டால் அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் (தண்ணீர் பாய்ந்து ஓடுவதைப் போல்) வழிந்து (உலகின் பல பாகங்களிலும் அதிசீக்கிரத்தில் பரவி) விடுவார்கள்

[97] (உலக முடிவு பற்றிய) உண்மையான வாக்குறுதி நெருங்கி விட்டது. (அது வரும் சமயத்தில் அதைக் காணும்) நிராகரிப்பவர்களின் கண்கள் திறந்தது திறந்தவாறே இருக்கும். ‘‘எங்களுக்குக் கேடுதான். நிச்சயமாக நாங்கள் இதைப்பற்றி கவலையற்றவர்களாக இருந்தோமே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோமே!'' (என்றும் அவர்கள் புலம்புவார்கள்)

[98] (அச்சமயம் அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நீங்களும், நீங்கள் வணங்கிக் கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவையும் நரகத்தின் எரிகட்டையாகி விட்டீர்கள். நீங்கள் அனைவரும் அங்கு செல்ல வேண்டியவர்கள்தான்'' (என்று கூறப்படும்)

[99] (அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த) இவை (உண்மையான) தெய்வங்களாக இருந்தால் நரகத்திற்கு வந்தே இருக்காது. எனினும், அவர்கள் அனைவரும் (நரகத்தில் தள்ளப்பட்டு) என்றென்றும் அதில் தங்கிவிடுவார்கள்

[100] அதில் அவர்கள் திணறித் திணறிக் (கழுதையைப் போல்) கதறுவார்கள். அதில் (மற்றெவரின் சப்தத்தை) அவர்கள் செவியுற மாட்டார்கள்

[101] ஏற்கனவே நம்மால் எவர்களுக்கு நன்மைகள் எழுதப்பட்டு விட்டதோ அவர்கள், நிச்சயமாக நரகத்திற்கு வெகு தூரமாக இருப்பார்கள்

[102] அதன் இரைச்சலையும் அவர்கள் (தங்கள் காதால்) கேட்கமாட்டார்கள். இன்னும் அவர்கள் தாங்கள் விரும்பிய சுகபோகங்களை(ச் சொர்க்கத்தில்) என்றென்றும் அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்

[103] (மறுமையில் ஏற்படும்) பெரும் திடுக்கமும் அவர்களை துக்கத்திற்குள்ளாக்காது. (அச்சமயம்) வானவர்கள் அவர்களை எதிர்கொண்டழைப்பார்கள் ‘‘உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட (நல்ல) நாள் இதுதான்'' (என்று நற்செய்தியும் கூறுவார்கள்)

[104] எழுதப்பட்ட கடிதத்தைச் சுருட்டுவதைப் போல் நாம் வானத்தைச் சுருட்டும் நாளை (நபியே!) நீர் அவர்களுக்கு ஞாபகமூட்டுவீராக. முதல் தடவை நாம் அவர்களை படைத்தது போன்றே (அந்நாளில்) நாம் (அவர்களுக்கு உயிர் கொடுத்து) அவர்களை மீளவைப்போம். இது நம்மீது கடமையானதொரு வாக்குறுதியாகும். நிச்சயமாக நாம் இதைச் செய்தே தீருவோம்

[105] நிச்சயமாக நாம் ‘ஜபூர்' என்னும் வேதத்தில், நல்லுபதேசங்களுக்குப் பின்னர் எழுதியிருக்கிறோம், ‘‘நிச்சயமாக பூமிக்கு என் அடியார்களில் நன்நடத்தை உடையவர்கள்தான் வாரிசாவார்கள்'' என்று

[106] என்னையே வணங்குபவர்களுக்கு நிச்சயமாக இதில் ஒரு நற்செய்தி இருக்கிறது

[107] (நபியே!) உம்மை உலகத்தாருக்கு ஓர் அருளாகவே தவிர நாம் அனுப்பவில்லை

[108] (ஆகவே) நீர் கூறுவீராக: ‘‘எனக்கு வஹ்யி அறிவிக்கப்படுவதெல்லாம் ‘‘உங்கள் வணக்கத்திற்குரிய இறைவன் ஒரே ஓர் இறைவனே'' என்றுதான். ஆகவே, நீங்கள் அவனுக்கு முற்றிலும் பணிந்து கட்டுப்பட்டு நடப்பீர்களாக

[109] (நபியே!) அவர்கள் புறக்கணித்து விட்டாலோ (அவர்களை நோக்கி) ‘‘நான் (என் தூதை) உங்கள் அனைவருக்கும் சமமாக எடுத்துரைத்து விட்டேன். உங்களுக்குப் பயமுறுத்தப்படும் வேதனை (வந்தே தீரும். எனினும், அது) சமீபத்தில் இருக்கிறதா தூரத்தில் இருக்கிறதா என்பதை நான் அறியமாட்டேன்'' என்று கூறுவீராக

[110] நிச்சயமாக (என் இறைவன்) நீங்கள் (வாயால்) சப்தமிட்டுப் பேசுவதையும் (உங்கள் உள்ளங்களில் அதற்கு மாறாக) மறைத்து வைத்திருப்பதையும் அறிந்து கொள்கிறான்

[111] (இன்னும் இதுவரை வேதனை செய்யாது) உங்களை விட்டு வைத்திருப்பது உங்களைச் சோதிப்பதற்காகவோ அல்லது குறித்த காலம் வரை நீங்கள் வாழ்ந்திருப்பதற்காகவோ என்பதை நான் அறிய மாட்டேன்

[112] (மேலும் முஹம்மது) கூறினார்: ‘‘என் இறைவனே! (எனக்கும் இந்நிராகரிப்பவர்களுக்கும் இடையில்) நீ நீதமான தீர்ப்பளிப்பாயாக! எங்கள் இறைவன்தான் பேரருளாளன். உங்கள் (பொய்யான) கூற்றுகளுக்கு எதிராக அவனிடமே உதவி தேடுகிறோம்

அல்ஹஜ்

Surah 22

[1] மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயப்படுங்கள். நிச்சயமாக விசாரணை நாளின் அதிர்ச்சி மிக்க கடுமையானது

[2] அந்நாளில் பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தாயும், தான் பாலூட்டும் குழந்தையை மறந்துவிடுவதையும் ஒவ்வொரு கர்ப்பினிப் பெண்ணிண் கருவும் சிதைந்து விடுவதையும் நீங்கள் காண்பீர்கள். (நபியே!) மனிதர்களை மதி மயங்கியவர்களாக நீர் காண்பீர். அவர்கள் (மதியிழக்கும் காரணம்) போதையினால் அல்ல. அல்லாஹ்வுடைய வேதனை மிக்க கடினமானது. (அதைக் கண்டு திடுக்கிட்டு அவர்கள் மதியிழந்து விடுவார்கள்)

[3] மனிதர்களில் பலர் ஏதும் அறியாமலிருந்து கொண்டே அல்லாஹ்வைப் பற்றித் தர்க்கித்து வரம்பு மீறும் ஷைத்தான்களையே பின்பற்றுகின்றனர்

[4] எவன் (ஷைத்தானாகிய) அவனை நண்பனாக எடுத்துக் கொள்கிறானோ அவன் அவனை நிச்சயமாக வழிகெடுத்துக் கொடிய வேதனையின் பக்கமே செலுத்தி விடுவான் என்று விதிக்கப்பட்டு விட்டது

[5] மனிதர்களே! (மறுமையில் உங்களுக்கு உயிர் கொடுத்து) எழுப்புவதைப் பற்றி நீங்கள் சந்தேகம் கொண்டால், (உங்களை முதலில் எவ்வாறு படைத்தோம் என்பதைக் கவனியுங்கள்.) நிச்சயமாக நாம் உங்களை (உங்கள் மூலப் பிதாவாகிய ஆதமை) மண்ணில் இருந்து (படைத்துப்) பின்னர் இந்திரியத் துளியிலிருந்து, பின்னர் அதை ஓர் இரத்தக் கட்டியாகவும், பின்னர் (அதை) குறை வடிவ அல்லது முழு வடிவ மாமிசப் பிண்டமாகவும் (நாம் உற்பத்தி செய்கிறோம். நம் வல்லமையை) உங்களுக்குத் தெளிவாக்கும் பொருட்டே (இவ்வாறு படிப்படியாகப் பல மாறுதல்களை அடைய) ஒரு குறிப்பிட்ட காலம் வரை தங்கி இருக்கும்படி செய்கிறோம். பின்னர், உங்களைச் சிசுக்களாக வெளிப்படுத்தி நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். (இதற்கிடையில்) இறந்துவிடுபவர்களும் உங்களில் பலர் இருக்கின்றனர். (அல்லது வாழ்ந்து) அனைத்தையும் அறிந்த பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப்போல் ஆகிவிடக்கூடிய தள்ளாத வயது வரை விட்டு வைக்கப்படுபவர்களும் உங்களில் இருக்கின்றனர். (மனிதனே!) பூமி (புற்பூண்டு ஏதுமின்றி) வறண்டு இருப்பதை நீ காணவில்லையா? அதன் மீது நாம் மழையை பொழியச் செய்தால், அது பசுமையாகி வளர்ந்து அழகான பற்பல வகை (ஜோடி ஜோடி)யான உயர்ந்த புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது

[6] நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையான இறைவன். நிச்சயமாக அவன் மரணித்தவர்களை உயிர் கொடுத்து எழுப்புவான். நிச்சயமாக அவன் அனைத்தின் மீதும் பேராற்றல் உடையவன் என்பதற்கு இதுவே போதுமான (அத்தாட்சியாக இருக்கிற)து

[7] விசாரணைக் காலம் நிச்சயமாக வரக்கூடியது. அதில் சந்தேகமேயில்லை. (அந்நாளில்) சமாதிகளில் (புதைந்து) கிடப்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் (உயிர் கொடுத்து) எழுப்புவான்

[8] மனிதர்களில் பலர் (இருக்கின்றனர். அவர்கள்) எந்தவித கல்வியும், தர்க்கரீதியான ஆதாரமும், வேத நூலின் தெளிவான ஆதாரமும் இல்லாமலே அவர்கள் அல்லாஹ்வைப் பற்றித் தர்க்கிக்கின்றனர்

[9] அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து (மக்களைத்) திருப்பிவிடும் பொருட்டு தன் கழுத்தை திருப்பியவர்களாக (கர்வம் கொண்டு இவ்வாறு தர்க்கிக்கின்றனர்). இம்மையில் அவர்களுக்கு இழிவுதான். மறுமை நாளிலோ சுட்டெரிக்கும் நெருப்பின் வேதனையை அவர்கள் சுவைக்கும்படிச் செய்வோம்

[10] (அங்கு அவர்களை நோக்கிக் கூறப்படும்:) இவை ஏற்கனவே உங்கள் கைகள் செய்து அனுப்பிய செயல்களின் பலன்தான். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களில் எவருக்கும் (தண்டனையைக் கூட்டியோ, நன்மையைக் குறைத்தோ) அநியாயம் செய்பவனல்ல

[11] மனிதரில் பலர் (மதில்மேல் பூனையைப் போல்) உறுதியற்ற நிலைமையில் அல்லாஹ்வை வணங்குகின்றனர். அவர்களை ஒரு நன்மை அடைந்தால் அதைக்கொண்டு திருப்தி அடைகின்றனர். அவர்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டாலோ அவர்கள் தங்கள் முகத்தை (அல்லாஹ்வை விட்டும்) திருப்பிக் கொள்கின்றனர். இவர்கள் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைந்து விட்டனர். இதுதான் (சந்தேகமற்ற) தெளிவான பெரும் நஷ்டமாகும்

[12] இவர்கள் தங்களுக்கு நன்மையோ தீமையோ செய்ய சக்தியற்ற, அல்லாஹ் அல்லாதவற்றை (உதவிக்கு) அழைக்கின்றனர். இதுதான் வெகுதூரமான வழிகேடாகும்

[13] நன்மை ஏற்படுவதைவிட தீங்கு ஏற்படுவது எவர்களால் அதிகம் சாத்தியமாக இருக்கிறதோ அவர்களைத்தான் இவர்கள் (தங்கள் பாதுகாவலர்கள் என) அழைக்கின்றனர். (இவர்களுடைய) அந்த பாதுகாவலர்களும் கெட்டார்கள்; அவர்களை அண்டி நிற்கும் இவர்களும் கெட்டார்கள்

[14] நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் சொர்க்கங்களுக்குள் புகச்செய்கிறான். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். நிச்சயமாக அல்லாஹ், தான் நாடியதைச் செய்வான்

[15] எவன் (நம் தூதர் மீது பொறாமை கொண்டு) அவருக்கு அல்லாஹ் இம்மையிலோ மறுமையிலோ நிச்சயமாக உதவி செய்யமாட்டான் என்று (தன் பொறாமையின் காரணமாக) எண்ணுகிறானோ அவன் (வீட்டின்) முகட்டில் ஒரு கயிற்றைக் கட்டி(ச் சுருக்குப் போட்டு அதில் கழுத்தை மாட்டி) நெரித்துக் கொள்ளட்டும். தான் பொறாமை கொண்ட (அல்லாஹ்வின் உதவியை) தன் சூழ்ச்சி மெய்யாகவே போக்கிவிட்டதா? என்று பார்க்கவும்

[16] இவ்வாறு தெளிவான வசனங்களாகவே நாம் (குர்ஆனாகிய) இதை இறக்கி வைத்தோம். நிச்சயமாக அல்லாஹ், தான் விரும்பியவர்களை (இதன் மூலம்) நேரான வழியில் செலுத்துகிறான்

[17] நம்பிக்கையாளர்களும், யூதர்களும், ஸாபியீன்களும், கிறிஸ்தவர்களும், (நெருப்பை வணங்கும்) மஜூஸிகளும், இணைவைத்து வணங்குபவர்களும் ஆகிய (ஒவ்வொருவரும், தாங்கள்தான் நேரான வழியில் இருப்பதாகக் கூறுகின்றனர். எனினும், யார் நேரான வழியில் இருக்கிறார்கள் என்பதை) இவர்களுக்கிடையில் நிச்சயமாக அல்லாஹ் மறுமை நாளில் தீர்ப்புக் கூறுவான். (இவர்களுடைய செயல்கள்) அனைத்தையும் அல்லாஹ் நிச்சயமாக பார்(த்துக்கொண்டே இரு)க்கிறான்

[18] (நபியே!) வானங்களில் இருப்பவர்களும், பூமியில் இருப்பவர்களும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும் மலைகளும், மரங்களும், கால்நடைகளும், மனிதரில் ஒரு பெரும் தொகையினரும் நிச்சயமாக அல்லாஹ்வுக்குச் சிரம் பணிந்து வணங்குகின்றனர் என்பதை நீர் காணவில்லையா? எனினும், மனிதரில் பெரும்பாலானவர்கள் மீது வேதனையே விதிக்கப்பட்டு விட்டது. எவனை அல்லாஹ் இழிவுபடுத்துகிறானோ அவனை ஒருவராலும் கண்ணியப்படுத்த முடியாது. நிச்சயமாக அல்லாஹ், தான் நாடியதையே செய்கிறான்

[19] (இறைவனுக்கு கட்டுப்படுபவர்கள், இறைவனுக்கு மாறு செய்பவர்கள் ஆகிய) இவ்விரு வகுப்பாரும் தங்கள் இறைவனைப் பற்றித் தர்க்கித்துக் கொண்டிருக்கின்றனர். ஆகவே, அவர்களில் எவர்கள் (உண்மையான இறைவனை) நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நெருப்பினால் ஆன ஆடை தயார் செய்யப்பட்டிருக்கிறது. (அக்னியைப் போல்) கொதித்துக் கொண்டிருக்கும் தண்ணீர் அவர்களுடைய தலைகளின் மீது ஊற்றப்படும்

[20] அவர்களுடைய வயிற்றினுள் இருக்கும் குடல்களும் (தேகத்தின் மேல் இருக்கும்) தோல்களும் அதனால் உருகிவிடும்

[21] அவர்களுக்காக இரும்புச் சம்மட்டிகள் உண்டு. (அதைக் கொண்டு அவர்களை அடிக்கப்படும்)

[22] இத்துயர(மான நரக)த்திலிருந்து அவர்கள் வெளிப்படக் கருதி முயற்சிக்கும் போதெல்லாம் அதில் அவர்கள் தள்ளப்பட்டு “எரிக்கும் (நெருப்பு) வேதனையைச் சுவைத்துக் கொண்டிருங்கள்'' (எனவும் கூறப்படும்)

[23] நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறவர்களை நிச்சயமாக அல்லாஹ் சொர்க்கத்தில் புகுத்துகிறான். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். (பின்னும்) பொற்கடகமும், முத்து ஆபரணமும் (விருதுகளாக) அவர்களுக்கு அணிவிக்கப்படும். அதில் அவர்களுடைய ஆடைகளோ மிருதுவான பட்டினால் ஆனதாக இருக்கும்

[24] பரிசுத்த வாக்கியம் (ஆகிய கலிமா தய்யிப்) அவர்களுக்கு (இம்மையில்) கற்பிக்கப்பட்டு மிக்க புகழுக்குரிய இறைவனின் பாதையிலும் அவர்கள் செலுத்தப்படுவார்கள்

[25] நிச்சயமாக எவர்கள் நிராகரித்து (மக்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டு தடுத்துக்கொண்டு (மக்காவாகிய) அங்கு வசித்திருப்பவர்கள் ஆயினும், வெளியிலிருந்து வருபவர்கள் ஆயினும், மனிதர்கள் அனைவருக்குமே சமமான உரிமையுள்ளதாக நாம் ஏற்படுத்திய சிறப்புற்ற மஸ்ஜிதை விட்டும் தடை செய்து கொண்டு இருக்கிறார்களோ, (அவர்கள் நேர்வழி பெறமாட்டார்கள்.) எவராவது அதில் மார்க்கத்திற்கு விரோதமாக அநியாயம் செய்ய விரும்பினால், அவர்களை, துன்புறுத்தும் வேதனையைச் சுவைக்க வைப்போம்

[26] (நபியே!) இப்றாஹீமை நம் வீட்டின் சமீபமாக வசிக்கும்படிச் செய்து (அவரை நோக்கி) “நீர் எனக்கு எவரையும் இணையாக்காதீர். என் (இந்த) வீட்டை (தவாஃப்) சுற்றி வருபவர்களுக்கும், அதில் நின்று, குனிந்து, சிரம் பணிந்து தொழுபவர்களுக்கும் அதைப் பரிசுத்தமாக்கி வைப்பீராக'' என்று நாம் கூறிய சமயத்தில்

[27] (அவரை நோக்கி) “ஹஜ்ஜூக்கு வருமாறு நீர் மனிதர்களுக்கு அறிக்கையிடுவீராக. (அவர்கள்) கால்நடையாகவும் உங்களிடம் வருவார்கள்; இளைத்த (ஒட்டக) வாகனங்களின் மீது வெகு தொலை தூரத்திலிருந்தும் (உங்களிடம்) வருவார்கள்

[28] (வர்த்தகத்தின் மூலம்) தங்கள் பயனை நாடியும் (அங்கு வருவார்கள்). குறிப்பிட்ட நாள்களில் அல்லாஹ் அவர்களுக்குக் கொடுத்த (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடை பிராணிகள் மீது அவனது திருப்பெயரைக் கூறி அறுப்பதற்காகவும் அ(ங்கு வருவார்கள். ஆகவே, அவ்வாறு அறுக்கப்பட்ட)வைகளிலிருந்து நீங்களும் புசியுங்கள்; சிரமப்படும் ஏழைகளுக்கும் புசிக்கக் கொடுங்கள்

[29] பின்னர் (தலைமுடி இறக்கி, நகம் தரித்து, குளித்துத்) தங்கள் அழுக்குகளைச் சுத்தம் செய்து, தங்கள் நேர்ச்சைகளையும் நிறைவேற்றி, கண்ணியம் பொருந்திய பழமை வாய்ந்த ஆலயத்தையும் தவாஃப் செய்யுங்கள்

[30] இவ்வாறே அல்லாஹ் கண்ணியப்படுத்திய சிறப்பானவற்றை எவர் மகிமைப்படுத்துகிறாரோ அவருக்கு அது அவருடைய இறைவனிடத்தில் மிக்க நன்மையாகவே முடியும். (நீங்கள் புசிக்கக்கூடிய ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடைகளைப் பற்றி உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்ட (செத்தது, இரத்தம், பன்றியின் மாமிசம், அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் கூறி அறுக்கப்பட்ட)வற்றைத் தவிர மற்றவை ஆகுமாக்கப்பட்டு விட்டன. (அவற்றை நீங்கள் புசிக்கலாம்.) ஆகவே, சிலை வணக்க அசுத்தத்திலிருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ளுங்கள். மேலும், பொய்யான வார்த்தைகளில் இருந்தும் நீங்கள் தப்பித்துக் கொள்ளுங்கள்

[31] அல்லாஹ்வுக்கு இணைவைக்காது, அவன் ஒருவனுக்கே முற்றிலும் தலைசாய்த்து விடுங்கள். எவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறானோ, அவன் வானத்திலிருந்து (தலைகீழாக) விழுந்தவனைப் போலாவான். அவனை (கழுகு போன்ற) பறவைகள் இறாஞ்சி (கொத்தி)க் கொண்டு போய்விடும் அல்லது காற்று வெகு தூரத்திற்கு அடித்துக் கொண்டு சென்றுவிடும்

[32] இதுவே (அவனுடைய கதியாகும்.) எவர் அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட அடையாளங்களை கண்ணியப்படுத்துகிறாரோ அது அவருடைய உள்ளத்தின் இறையச்சத்தை அறிவிக்கிறது

[33] (குர்பானிக்காக உள்ள ஆடு, மாடு, ஒட்டகங்களின் பாலை அருந்தலாம்; சவாரி செய்யலாம். இவ்வாறு) ஒரு குறிப்பிட்ட காலம் வரை நீங்கள் அவற்றைக் கொண்டு பயனடையலாம். பின்னர், அவற்றை கண்ணியம் பொருந்திய பழமை வாய்ந்த ஆலயத்திடம் சேர்ப்பித்து விட வேண்டும்

[34] குர்பானி செய்வதை ஒவ்வொரு வகுப்பினருக்கும் கடமையாக்கி இருக்கிறோம். அல்லாஹ் கொடுத்திருந்த ஆடு, மாடு, ஒட்டகங்களின் மீது அவன் பெயரைக் கூறி குர்பானி செய்யுங்கள். ஆகவே, உங்கள் இறைவன் ஒரே ஓர் இறைவன்தான். ஆதலால், அவன் ஒருவனுக்கே நீங்கள் முற்றிலும் பணிந்து கட்டுப்பட்டு நடங்கள். உள்ளச்சம் உடையவர்களுக்கு (நபியே!) நற்செய்தி கூறுவீராக

[35] அவர்கள் எத்தகையவர்கள் என்றால், அல்லாஹ்வுடைய திருப்பெயர் கூறப்பட்டால் அவர்களுடைய உள்ளங்கள் பயந்து நடுங்கிவிடும். அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களைப் பொறுமையுடன் சகித்துக் கொள்வார்கள். தொழுகையையும் கடைப்பிடிப்பார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றில் தானமும் செய்வார்கள்

[36] குர்பானியின் ஒட்டகத்தை அல்லாஹ்வின் அடையாள சின்னங்களில் ஒன்றாக நாம் உங்களுக்கு ஆக்கியிருக்கிறோம். அதில் உங்களுக்குத் தான் பெரும் நன்மை இருக்கிறது. ஆகவே, (அதன் இடப்பக்க முன் காலைக்கட்டி மற்ற மூன்று கால்களில்) நிறுத்தி வைத்து அல்லாஹ்வின் பெயரைக் கூறி அறுங்கள். அது கீழே விழுந்து (உயிர்)விட்டால் அதிலிருந்து நீங்களும் புசியுங்கள். அதைக் கேட்டவர்களுக்கும், கேட்காதவர்களுக்கும் கொடுங்கள். நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு இவ்வாறு அதை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தோம்

[37] (இவ்வாறு குர்பானி செய்தபோதிலும்) அதன் மாமிசமோ அல்லது அதன் இரத்தமோ அல்லாஹ்வை அடைந்து விடுவது இல்லை. உங்கள் இறையச்சம்தான் அவனை அடையும். அல்லாஹ் உங்களுக்கு நேரான வழியை அறிவித்ததற்காக (அவனுக்கு நீங்கள் குர்பானி கொடுத்து) அவனை நீங்கள் பெருமைப்படுத்தும் பொருட்டு இவ்வாறு அவற்றை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். (நபியே! இவ்வாறு குர்பானி கொடுத்து) நன்மை செய்பவர்களுக்கு நீர் நற்செய்தி கூறுவீராக

[38] நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கை கொண்டவர்களை (நிராகரிப்பவர்களின்) தீங்கிலிருந்து தடுத்துக் கொள்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மோசக்காரர்களையும் நன்றி கெட்டவர்களையும் விரும்புவதில்லை

[39] (நிராகரிப்பவர்களால்) அநியாயத்தில் சிக்கி, போருக்கு நிர்பந்திக்கப்பட்ட (நம்பிக்கை கொண்ட)வர்களுக்கு அவர்களை எதிர்த்து போர் புரிய அனுமதியளிக்கப்பட்டு விட்டது. நிச்சயமாக அல்லாஹ் இவர்களுக்கு உதவி செய்ய பேராற்றலுடையவன் ஆவான்

[40] இவர்கள், தங்கள் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறியதற்காக நியாயமின்றி தங்கள் வீடுகளிலிருந்து எதிரிகளால் துரத்தப்பட்டார்கள். மனிதர்களில் (அநியாயம் செய்யும்) சிலரை, (நல்லவர்கள்) சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் கிறிஸ்தவர்களின் ஆலயங்களும், அவர்களுடைய மடங்களும், யூதர்களுடைய ஆலயங்களும், அல்லாஹ்வுடைய திருப்பெயர் அதிகமாக நினைவு செய்யப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டே போயிருக்கும். அல்லாஹ்வுக்கு யார் உதவி செய்கிறாரோ அவருக்கு நிச்சயமாக அல்லாஹ்வும் உதவி செய்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மிகப் பலவானும், (அனைவரையும்) மிகைத்தவனும் ஆவான்

[41] இவர்கள் எத்தகையோர் என்றால், நாம் அவர்களுக்குப் பூமியில் வசதியளித்தால் தொழுகையைக் கடைப்பிடித்துத் தொழுவார்கள்; ஜகாத்தும் கொடுப்பார்கள்; நன்மையானவற்றை ஏவி, பாவமானவற்றைத் தடை செய்வார்கள். எல்லாக் காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது

[42] (நபியே! நிராகரிக்கும்) இவர்கள் உம்மைப் பொய்யாக்கினால் (அதைப் பற்றி நீர் கவலைப்படாதீர். ஏனென்றால்) இவர்களுக்கு முன்னிருந்த நூஹ்வுடைய மக்களும், ஆது, ஸமூது என்னும் மக்களும் (தங்கள் நபிமார்களை) நிச்சயமாக பொய்யாக்கியே இருந்தனர்

[43] (இவ்வாறே) இப்றாஹீமுடைய மக்கள் (இப்றாஹீமையும்), லூத்துடைய மக்கள் (லூத்தையும்) பொய்யாக்கினார்கள்

[44] (அவ்வாறே) மத்யன்வாசிகளும் (தங்கள் நபியைப் பொய்யாக்கினர்). (இவ்வாறே) மூஸாவும் (தன் மக்களால்) பொய்ப்பிக்கப்பட்டார். ஆகவே, நிராகரித்த இவர்கள் அனைவருக்கும் நான் சிறிது அவகாசம் கொடுத்து பின்னர் நான் அவர்களைப் பிடித்துக் கொண்டேன். என் வேதனை எவ்வாறு இருந்தது (என்பதை நீர் கவனித்தீரா)

[45] அநியாயக்காரர்கள் வசித்திருந்த எத்தனையோ ஊர்களை நாம் அழித்திருக்கிறோம். அவற்றுடைய முகடுகள் இடிந்து குட்டிச் சுவராகிக் கிடக்கின்றன. அவற்றின் (எத்தனையோ) கிணறுகள் பாழடைந்து கிடக்கின்றன. அவற்றின் மாட மாளிகைகள் (மக்கள் வசிக்காது) பாழாய் கிடக்கின்றன

[46] ஆகவே, இவர்கள் பூமியில் சுற்றித் திரிந்து (இவற்றைப்) பார்க்க வேண்டாமா? (அவ்வாறு பார்ப்பார்களாயின்) உணர்ந்து கொள்ளக்கூடிய உள்ளங்கள் அவர்களுக்கு ஏற்பட்டுவிடும் அல்லது (நல்லுபதேசத்தைக்) கேட்கக்கூடிய செவிகள் அவர்களுக்கு உண்டாகிவிடும். நிச்சயமாக அவர்களுடைய (புறக்) கண்கள் குருடாகிவிடவில்லை. எனினும், நெஞ்சுகளில் இருக்கும் (அவர்களுடைய அகக் கண்களான) உள்ளங்கள் தான் குருடாகிவிட்டன

[47] (நபியே!) அவர்கள் வேதனையைத் தேடி உம்மிடம் அவசரப்படுகின்றனர். (நீர் கூறுவீராக: உங்கள் மீது வேதனையை இறக்குவதாக) அல்லாஹ் செய்த வாக்குறுதியை அவன் மாற்றமாட்டான். நிச்சயமாக உமது இறைவனிடத்தில் ஒரு நாள் நீங்கள் எண்ணும் (உங்கள்) ஆயிரம் ஆண்டுகளுக்குச் சமமாகும்

[48] நாம் எத்தனையோ ஊரார்களுக்கு அவகாசமளித்தோம். (திருந்தாது) மேலும், அவர்கள் அநியாயம் செய்யவே முற்பட்டார்கள். ஆதலால், நாம் அவர்களைப் பிடித்துக் கொண்டோம். அவர்கள் (இறந்த பின்னரும்) நம்மிடம்தான் வரவேண்டியது இருக்கிறது

[49] (நபியே!) கூறுவீராக: “மனிதர்களே நிச்சயமாக நான் உங்களுக்கு பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்தான்

[50] ஆகவே, எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும் உண்டு; கண்ணியமான உணவும் உண்டு

[51] மேலும் எவர்கள் நம் வசனங்களைத் தோற்கடிக்க முயற்சிக்கிறார்களோ அவர்கள் நரகவாசிகளே

[52] (நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு நபியும், ரசூலும் (வேதத்தை) ஓதிய சமயத்தில் அவருடைய ஓதுதலில் ஷைத்தான் குழப்பத்தை உண்டுபண்ண முயற்சிக்காமல் இருக்கவில்லை. (அவர்களுடைய ஓதுதலில்) ஷைத்தான் உண்டுபண்ணிய (தப்பான)தை அல்லாஹ் நீக்கிய பின்னர் தன் வசனங்களை உறுதிப்படுத்திவிடுகிறான். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவன், ஞானமுடையவன் ஆவான்

[53] (இவ்வாறு) ஷைத்தான் உண்டுபண்ணும் தப்பானதை, எவர்களுடைய உள்ளங்களில் நோய் இருக்கிறதோ அல்லது எவர்களுடைய உள்ளங்கள் (கல்லைப் போல்) கடினமாக இருக்கின்றனவோ அவர்களைச் சோதிப்பதற்கு ஒரு காரணமாகவும் (அல்லாஹ்) ஆக்கிவிடுகிறான். நிச்சயமாக (அத்தகைய கடினமான உள்ளங்களை உடைய) அநியாயக்காரர்கள் வெகு தூரமான விரோதத்தில்தான் இருக்கின்றனர்

[54] எவர்களுக்கு (மெய்யான) கல்வி ஞானம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அவர்கள் நிச்சயமாக இது உமது இறைவனிடமிருந்து வந்த உண்மை என்று திட்டமாக அறிந்து இதை நம்பிக்கை கொண்டு, அவர்களுடைய உள்ளங்கள் பணிந்து அவனுக்கு கட்டுப்பட்டுவிடும். நிச்சயமாக எவர்கள் (மெய்யாகவே) நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களைத்தான், அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறான்

[55] (எனினும்) நிராகரிப்பவர்கள் தங்களிடம் திடீரென்று மறுமை (நாள்) வரும் வரை அல்லது கடினமான வேதனையுடைய நன்மையற்ற நாள் அவர்களிடம் வரும்வரை இதைப் பற்றிச் சந்தேகத்திலேயே ஆழ்ந்து கிடப்பார்கள்

[56] அந்நாளில், ஆட்சி, அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியன. அவனே அவர்களுக்குத் தீர்ப்பளிப்பான். ஆகவே, எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்கள் மிக்க சுகமளிக்கும் சொர்க்கங்களில் தங்கி விடுவார்கள்

[57] எவர்கள் (நம் வேதத்தை) நிராகரித்து, நம் வசனங்களை பொய்யாக்குகிறார்களோ அவர்களுக்கு கண்டிப்பாக இழிவு தரும் வேதனை உண்டு

[58] எவர்கள் (தங்கள் இல்லங்களை விட்டு) அல்லாஹ்வுடைய வழியில் புறப்பட்டு பின்னர் (போரில்) கொல்லப்படுகிறார்களோ அல்லது இறந்துவிடுகிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் மிக்க அழகான (முறையில்) உணவளிக்கிறான். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ், உணவளிப்பவர்களில் எல்லாம் மிக்க மேலானவன்

[59] ஆகவே, நிச்சயமாக அவன் அவர்கள் விரும்பக்கூடிய இடத்தில் அவர்களை சேர்த்துவிடுவான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனும், மிக்க பொறுமையுடையவனும் ஆவான்

[60] இவ்வாறே (காரியம் நடைபெறும்). எவரேனும் தான் துன்புறுத்தப்பட்ட அதே அளவுக்கு பழி வாங்கிய பிறகு, மீண்டும் (முதல் துன்புறுத்திய) அவன் மீது அதிகம் அநியாயம் செய்யப்பட்டால் நிச்சயமாக அல்லாஹ் அ(நீதி இழைக்கப்பட்ட)வனுக்கு உதவி புரிவான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், பிழை பொறுப்பவன் ஆவான்

[61] இதன் காரணமாவது: நிச்சயமாக அல்லாஹ் இரவைப் பகலிலும், பகலை இரவிலும் நுழைய வைக்(க ஆற்றலுடையவனாக இருக்)கிறான். (அதைப் போன்றே துன்புறுத்தும் கெட்டவனை நல்லவனாகவும், துன்பத்திற்குள்ளான நல்லவனைக் கெட்டவனாகவும் ஆக்கி விடுகிறான்.) நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் செவியுறுபவன், உற்று நோக்குபவன் ஆவான்

[62] இதன் காரணமாவது: நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையானவன். நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையன்றி (இறைவனென) அழைப்பவை அனைத்தும் பொய்யானவைதான். நிச்சயமாக அல்லாஹ்தான் உயர்ந்தவன், (மேலானவன்,) மகா பெரியவன்

[63] (நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ்தான் மேகத்திலிருந்து மழையை பொழியச் செய்கிறான். (அதனால்) பூமி பசுமையாகி விடுகிறது. நிச்சயமாக அல்லாஹ் அதிக நுட்பமுடையவனும் அனைத்தையும் நன்கறிந்தவனும் ஆவான்

[64] வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்கு உரியனவே! நிச்சயமாக அல்லாஹ்தான் (பிறரின் உதவி) தேவை அற்றவனும் புகழுக்குரியவனும் ஆவான்

[65] (நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்கு வசப்படுத்திக் கொடுக்கிறான். கப்பல் அவனுடைய கட்டளைப்படி கடலில் செல்கிறது. தன் அனுமதியின்றி பூமியின் மீது வானம் விழாது அவன் தடுத்துக் கொண்டிருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிக்க இரக்கமுடையவன், கருணையுடையவன் ஆவான்

[66] அவன்தான் உங்களை உயிர்ப்பித்தான். பிறகு, அவன்தான் உங்களை மரணிக்க வைப்பான். பிறகு, அவனே உங்களை உயிர்ப்பிப்பான். எனினும், நிச்சயமாக மனிதன் மிக நன்றி கெட்டவன் ஆவான்

[67] (நபியே!) ஒவ்வொரு வகுப்பாருக்கும் (அந்தந்தக் காலத்திற்குத் தக்கவாறு) அவர்கள் என்னை வணங்குவதற்குரிய வழியை நாம் ஏற்படுத்தி இருந்தோம். ஆகவே, (உமது காலத்தில் உமக்கு) நாம் ஏற்படுத்தியிருக்கும் வழியைப் பற்றி அவர்கள் உம்முடன் தர்க்கம் செய்ய வேண்டாம். மேலும் நீர் அவர்களை உமது இறைவன் (ஏற்படுத்திய வழியின்) பக்கம் அழைப்பீராக. நிச்சயமாக நீர் நேரான வழியில்தான் இருக்கிறீர்

[68] (நபியே!) அவர்கள் உம்முடன் தர்க்கித்தாலோ (அவர்களை நோக்கி) கூறுவீராக: “நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்

[69] நீங்கள் எவ்விஷயத்தில் தர்க்கித்துக் கொண்டிருக்கிறீர்களோ அதைப் பற்றி மறுமை நாளில் அல்லாஹ் உங்களுக்கிடையில் தீர்ப்பளிப்பான்

[70] (நபியே!) வானத்திலும் பூமியிலும் இருப்பவற்றை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான் என்பதை நீர் அறியவில்லையா? நிச்சயமாக இவை அனைத்தும் அவனுடைய (நிகழ்ச்சிக் குறிப்பாகிய) ‘லவ்ஹுல் மஹ்ஃபூளில்' இருக்கின்றன. நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிக்க சுலபமானதே

[71] (நபியே! நிராகரிப்பவர்களாகிய) அவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குகின்றனர். இதற்கு அவர்களிடம் (அல்லாஹ்) அத்தாட்சி எதையும் இறக்கவில்லை; அவர்களிடம் அது பற்றி கல்வியும் இல்லை. இந்த அநியாயக்காரர்களுக்கு (மறுமையில்) உதவி செய்பவர்கள் ஒருவருமிரார்

[72] அவர்கள் மீது தெளிவான நமது வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் அதை நிராகரிக்கும் இவர்களுடைய முகங்களில் வெறுப்பை நீர் காண்பீர். நம் வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பிப்பவர்கள் மீது இவர்கள் பாய்ந்து விடுவார்கள் போலும்! (ஆகவே, இவர்களை நோக்கி) நீர் கூறுவீராக! நான் உங்களுக்கு இதைவிட கொடியதொரு விஷயத்தை அறிவிக்கவா? (அது நரக) நெருப்புதான். அதையே (உங்களைப் போன்ற) நிராகரிப்பவர்களுக்கு அல்லாஹ் வாக்களித்து இருக்கிறான். (அது) சேருமிடங்களிலெல்லாம் மிகக் கெட்டது

[73] மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது: அதைசெவிதாழ்த்திக் கேளுங்கள். அல்லாஹ் அல்லாத எவற்றை நீங்கள் (தெய்வங்கள் என) அழைக்கிறீர்களோ அவை அனைத்தும் ஒன்று சேர்ந்(து முயற்சித்)த போதிலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. (ஈயைப் படைப்பதென்ன!) ஈ ஒன்று அவற்றினுடைய ஒரு பொருளை எடுத்துக் கொண்டபோதிலும் அந்த ஈயிடமிருந்து அதை விடுவிக்கவும் அவற்றால் முடியாது. (அவர்கள் தெய்வங்கள் என) அழைக்கும் அவை அவ்வளவு பலவீனமானவை! ஆகவே, அவற்றை(த் தெய்வங்கள் என) அழைப்பவர்களும் பலவீனமானவர்களே

[74] அல்லாஹ்வை கண்ணியப்படுத்த வேண்டியவாறு அவர்கள் கண்ணியப்படுத்த வில்லை. நிச்சயமாக அல்லாஹ் வலுமிக்கவனும் அனைவரையும் மிகைத்தவனும் ஆவான்

[75] வானவர்களிலிருந்தும் மனிதர்களிலிருந்தும் அல்லாஹ் (தன்) தூதர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். நிச்சயமாக அல்லாஹ் செவியுறுபவனும் உற்று நோக்குபவனும் ஆவான்

[76] அவர்களுக்கு முன்(னர் சென்று) இருப்பவற்றையும், அவர்களுக்குப் பின்(னர் வர) இருப்பவற்றையும் அவன் நன்கறிந்தவன். எல்லா விஷயங்களும் அல்லாஹ்விடமே திரும்ப கொண்டு வரப்படும்

[77] நம்பிக்கையாளர்களே! நீங்கள் குனிந்து சிரம் பணிந்து உங்கள் இறைவனை வணங்குங்கள். (மார்க்கத்திற்கும் மக்களுக்கும்) நன்மையே செய்து கொண்டிருங்கள். அதனால் நீங்கள் வெற்றியடையலாம்

[78] (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அல்லாஹ்வுடைய பாதையில் முயற்சிக்க வேண்டியவாறு முயற்சியுங்கள். அவனே உங்களைத் தேர்ந்தெடுத்(து மேன்மையாக்கி வைத்)திருக்கிறான். இந்த மார்க்கத்தில் அல்லாஹ் உங்களுக்கு ஒரு சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை. இது உங்கள் பிதாவாகிய இப்றாஹீமுடைய மார்க்கமாகும். அவர்தான் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டவர். இ(வ்வேதத்)திலும் (அவ்வாறே உங்களுக்குப் பெயர் கூறப்பட்டுள்ளது. இதற்கு) நம் இத்தூதரே உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறார். நீங்கள் மற்ற மனிதர்களுக்கு சாட்சியாக இருங்கள். ஆகவே, தொழுகையை கடைப்பிடியுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வைப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள். அவன்தான் உங்கள் பாதுகாவலன் (பொறுப்பாளன்). அவனே சிறந்த பாதுகாவலன்; சிறந்த உதவியாளன்

அல்முஃமினூன்

Surah 23

[1] நம்பிக்கையாளர்கள் நிச்சயமாக வெற்றி அடைந்து விட்டனர்

[2] அவர்கள் மிக்க உள்ளச்சத்தோடு தொழுவார்கள்

[3] அவர்கள் வீணான காரியங்களிலிருந்து விலகி இருப்பார்கள்

[4] அவர்கள் ஜகாத்து கொடுத்து வருவார்கள்

[5] அவர்கள் தங்கள் மர்மஸ்தானத்தை (விபசாரத்திலிருந்து) காப்பாற்றிக் கொள்வார்கள்

[6] எனினும், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலது கரம் சொந்தமாக்கிக் கொண்ட (அடிமைப்) பெண்களிடமோ (சேர்வதில்) நிச்சயமாக (அவர்கள் குற்றவாளிகளாக மாட்டார்கள். ஆகவே, இவ்விஷயத்தில்) அவர்கள் பழிக்கப்பட மாட்டார்கள்

[7] இதற்குப் புறம்பானதை எவரேனும் விரும்பினால் அவர்கள் வரம்பு மீறியவர்களாகி (குற்றவாளிகளாகி) விடுவார்கள்

[8] மேலும், அவர்கள் (தங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருளையும், தங்கள் வாக்குறுதியையும் பேணி நடப்பார்கள்

[9] அவர்கள் தங்கள் தொழுகைகளையும் (காலாகாலத்தில் தவறாது) கடைப் பிடித்து தொழுது வருவார்கள்

[10] இவர்கள்தான் (சொர்க்கத்திற்கு) உண்மையான வாரிசுதாரர்கள்

[11] ஆகவே, இவர்கள் ‘ஃபிர்தவ்ஸ்' என்னும் சொர்க்கத்திற்கு வாரிசுகளாகி அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்

[12] நிச்சயமாக (ஆரம்பத்தில் முதல்) மனிதனை களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம்

[13] பின்னர், அதை நாம் இந்திரியமாக்கி ஒரு பத்திரமான இடத்தில் வைத்தோம்

[14] பின்னர், அந்த இந்திரியத்தை கருவாக ஆக்கினோம். பின்னர், அக்கருவை சிறிய சதைத் துண்டாக ஆக்கினோம். பின்னர், அந்த சிறிய சதைத் துண்டில் எலும்புகளை உருவாக்கினோம், அடுத்து அவ்வெலும்புகளுக்கு மேல் சதையை அமைத்தோம். பின்னர், அதை வேறு ஒரு படைப்பாக (முழு மனிதனாக) உருவாக்கினோம். படைப்பவர்களிலெல்லாம் மிக்க அழகானவனான அந்த அல்லாஹ் மிக பாக்கியம் பொருந்தியவன்

[15] (மனிதர்களே!) இதற்குப் பின்னர், நிச்சயமாக நீங்கள் இறப்பவர்களே

[16] அதற்குப் பின்னர் மறுமைநாளில் நிச்சயமாக நீங்கள் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவீர்கள்

[17] (மனிதர்களே! இவ்வாறு நாம் உங்களை மட்டுமா படைத்திருக்கிறோம்?) நிச்சயமாக உங்களுக்கு மேலுள்ள ஏழு வானங்களையும் நாமே படைத்தோம். (அவை ஒவ்வொன்றிலும் எத்தனையோ படைப்புகள் இருக்கின்றன. இவற்றைப் படைத்து இருப்பதுடன்) இப்படைப்புக(ளுக்கு வேண்டியவைக)ளைப் பற்றி நாம் பராமுகமாகவும் இருக்கவில்லை. (அவற்றுக்கு வேண்டியவை அனைத்தையும் முழுமையாக நாம் படைத்தும் இருக்கிறோம்)

[18] மேகத்திலிருந்து (நம்) திட்டப்படியே மழையை பொழியச் செய்கிறோம். அதைப் பூமியில் தங்கும் படியும் செய்கிறோம். அதைப் (பூமியிலிருந்து) போக்கிவிடவும் நிச்சயமாக நாம் ஆற்றல் பெற்றுள்ளோம்

[19] அதைக் கொண்டு பேரீச்சை, திராட்சை (ஆகிய) தோப்புகளையும் உங்களுக்காக நாம் உற்பத்தி செய்கிறோம். அவற்றில் உங்களுக்கு வேண்டிய பல கனிவர்க்கங்கள் இருக்கின்றன. அவற்றில் (பலவற்றை) நீங்கள் புசிக்கிறீர்கள்

[20] ‘தூர்ஸீனாய்' மலையில் முளைக்கின்ற (ஜைத்தூன் என்னும் ஒலிவ) மரத்தையும் (நாம் உற்பத்தி செய்கிறோம்). அது எண்ணையையும் புசிப்பவர்களுக்கு ஒரு சுவையையும் (குழம்பையும்) தருகிறது

[21] நிச்சயமாக ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றில் உங்களுக்கு ஒரு படிப்பினை இருக்கிறது. அவற்றின் மடியில் இருந்து (பாலை) நாம் உங்களுக்குப் புகட்டுகிறோம். இன்னும், உங்களுக்கு அவற்றில் அநேக பயன்களும் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை நீங்கள் புசிக்கிறீர்கள்

[22] அவற்றின் மீதும், கப்பல்களின் மீதும் நீங்கள் சுமந்து செல்லப்படுகிறீர்கள்

[23] நிச்சயமாக நாம் ‘‘நூஹ்' (நபியை) நம் தூதராக அவருடைய மக்களிடம் அனுப்பி வைத்தோம். அவர் (அவர்களை நோக்கி) ‘‘ என் மக்களே! அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். அவனைத் தவிர வேறு இறைவன் உங்களுக்கு இல்லவே இல்லை. அவனுக்கு நீங்கள் பயப்பட வேண்டாமா?'' என்று கூறினார்

[24] அவரை நிராகரித்துவிட்ட அவருடைய மக்களில் உள்ள தலைவர்கள் (தமது மக்களுக்கு நூஹ் நபியைச் சுட்டிக் காண்பித்து) இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரே தவிர வேறில்லை. எனினும், அவர் உங்கள் மீது மேலான பதவியை வகிக்கவே நாடுகிறார். (மெய்யாகவே) அல்லாஹ் (நம்மிடம் ஒரு தூதரை அனுப்ப) நாடியிருந்தால் வானவர்களையே அனுப்பிவைத்திருப்பான். முன்னுள்ள எங்கள் மூதாதைகளிடம் இத்தகைய விஷயத்தை நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை என்றும்

[25] ‘‘ இவர் ஒரு பைத்தியக்காரராகவே தவிர வேறில்லை. ஆகவே, இவர் விஷயத்தில் (இவர் கூறுவது நிகழும் வரை) சிறிது காலம் பொறுத்திருந்து பாருங்கள்'' என்றும் கூறினார்கள்

[26] (அதற்கு நூஹ் நபி) ‘‘என் இறைவனே! இவர்கள் என்னைப் பொய்யாக்கி விட்டார்கள். ஆகவே, நீ எனக்கு உதவி செய்'' என்று பிரார்த்தித்தார்

[27] அதற்கு நாம் அவரை நோக்கி நீர் ‘‘நாம் அறிவிக்கின்றபடி நம் கண்முன் ஒரு கப்பலைச் செய்வீராக. நம் உத்தரவு ஏற்பட்டு அடுப்புப்பொங்க ஆரம்பித்தால் (ஒவ்வோர் உயிர்ப் பிராணிகளிலும்) ஆண், பெண் இரண்டிரண்டு சேர்ந்த ஜோடியையும், உமது குடும்பத்தினரையும் நீர் அதில் ஏற்றிக் கொள்வீராக. ஆயினும், எவன் மீது நம் தண்டனை விதிக்கப்பட்டு விட்டதோ அவனைத் தவிர. (ஏனென்றால்,) அநியாயம் செய்பவ(ர் உங்கள் குடும்பத்தவராயினும் அவ)ரைப் பற்றி நீர் என்னிடம் ஏதும் (சிபாரிசாகப்) பேசாதீர். நிச்சயமாக அவர்கள் (வெள்ளப் பிரளயத்தில்) மூழ்கடிக்கப்பட்டு விடுவார்கள்'' என்று வஹ்யி அறிவித்தோம்

[28] நீரும் உம்முடன் உள்ளவர்களும் கப்பலில் ஏறி அமர்ந்து கொண்டதன் பின்னர் ‘‘ அநியாயக்கார இந்த மக்களில் இருந்து எங்களை பாதுகாத்துக் கொண்ட அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்'' என்று கூறுவீராக

[29] ‘‘என் இறைவனே! நீ என்னை மிக்க பாக்கியமுள்ள(வனாக பாக்கியம் பெற்ற இடத்தில் உன்) விருந்தாளியாக(க் கப்பலில் இருந்து) இறக்கிவைப்பாயாக! நீயோ விருந்தாளிகளை வரவேற்று உபசரிப்பதில் மிக்க மேலானவன் என்றும் பிரார்த்திப்பீராக'' (என்றும் கூறினோம்)

[30] நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (நிச்சயமாக மனிதர்களின் நம்பிக்கையை) நாம் சோதிப்பவர்களாக இருக்கிறோம்

[31] (வெள்ளப் பிரளயத்தில் மூழ்கிவிட்ட) இவர்களுக்குப் பின்னர் நாம் (‘ஆது' என்னும்) மற்றொரு வகுப்பினரை உற்பத்தி செய்தோம்

[32] அவர்களில் உள்ள (‘ஹூது' என்ற) ஒருவரையே அவர்களுக்கு நம் தூதராக நாம் அனுப்பிவைத்தோம். அவர் (அவர்களை நோக்கி) ‘‘ அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லவே இல்லை. அவனுக்கு நீங்கள் பயப்பட வேண்டாமா?'' (என்று கூறினார்)

[33] (ஹூது நபியுடைய) மக்களுக்கு இவ்வுலக வாழ்க்கையின் சுகபோகங்களை நாம் கொடுத்திருந்தும் அவர்களுடைய தலைவர்கள் (அவற்றையும்) அவரையும் நிராகரித்துவிட்டு மறுமையைச் சந்திப்பதையும் பொய்யாக்கி (‘ஹூது' நபியை சுட்டிக் காண்பித்து) ‘‘ இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதனே தவிர வேறில்லை. நீங்கள் புசிப்பதையே அவரும் புசிக்கிறார்; நீங்கள் குடிப்பதையே அவரும் குடிக்கிறார்

[34] ஆகவே உங்களைப் போன்ற (இம்) மனிதனை நீங்கள் பின்பற்றினால் நிச்சயமாக நீங்கள் நஷ்டமே அடைந்துவிடுவீர்கள்

[35] நீங்கள் இறந்து எலும்பாகவும், மண்ணாகவும் ஆனதன் பின்னர் நிச்சயமாக நீங்கள் (உயிருடன்) வெளிப்படுத்தப்படுவீர்கள் என்று அவர் உங்களை பயமுறுத்துகிறாரா

[36] அவர் உங்களை பயமுறுத்தும் விஷயம் வெகு தூரமோ தூரம் (அது ஆகக்கூடியதன்று)

[37] நமக்கு இவ்வுலக வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை இல்லை. இதிலேயே நாம் வாழ்ந்திருந்து இதிலேயே இறந்துவிடுவோம். (இதற்குப் பின்னர் உயிர் கொடுக்கப்பட்டு) நாம் எழுப்பப்படப் போவதில்லை

[38] (ஹூது நபி என்னும்) இம்மனிதர் அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்து கூறுபவரே தவிர வேறில்லை. இவரை நாம் நம்பவே மாட்டோம்'' என்றார்கள்

[39] அதற்கவர் ‘‘ என் இறைவனே! இவர்கள் என்னைப் பொய்யாக்கி விட்டார்கள். நீதான் எனக்கு உதவிசெய்ய வேண்டும்'' என்று பிரார்த்தித்தார்

[40] அதற்கு இறைவன் ‘‘(ஹூதே சிறிது பொறுத்திரும்!) அதிசீக்கிரத்தில் இவர்கள் துக்கத்தில் ஆழ்ந்து விடுவார்கள்'' என்று கூறினான்

[41] ஆகவே (இடி முழக்கம் போன்ற) ஒரு சப்தம் மெய்யாகவே அவர்களைப் பிடித்துக் கொண்டது. நாம் அவர்களை (அழித்துக்) குப்பைக் கூளங்களைப் போல் ஆக்கிவிட்டோம். ஆகவே, அநியாயக்கார மக்கள் மீது (இறைவனின்) சாபம் ஏற்பட்டுவிட்டது

[42] இவர்களுக்குப் பின்னரும் மற்ற வகுப்பினர் பலரை நாம் உற்பத்தி செய்தோம்

[43] (அவர்களில் எனக்கு மாறுசெய்த) ஒவ்வொரு வகுப்பாரும் (அவர்கள் அழிந்துபோக நாம் ஏற்படுத்திய) அவர்களது தவணையை முந்தவுமில்லை; பிந்தவுமில்லை. (சரியாக அத்தவணையில் அழிந்து விட்டனர்)

[44] பின்னரும் நம் தூதர்களை ஒருவர் பின் ஒருவராக நாம் அனுப்பிக் கொண்டே இருந்தோம். ஒரு வகுப்பாரிடம் அவர்களுடைய தூதர் வந்தபோதெல்லாம் அவர்கள் அவரைப் பொய்யாக்கிக் கொண்டே இருந்தார்கள். ஆகவே, நாமும் (அவ்வகுப்பினர்களை) ஒருவருக்குப் பின் ஒருவராக அழித்துக் கொண்டே வந்து அவர்கள் அனைவரையும் (பின்னுள்ளவர்கள் பேசக்கூடிய) வெறும் சரித்திரமாக்கி விட்டோம். ஆகவே, நம்பிக்கை கொள்ளாத (இத்தகைய) மக்களுக்குக் கேடுதான்

[45] பின்னர், மூஸாவையும் அவருடைய சகோதரர் ஹாரூனையும் நம் வசனங்களைக் கொண்டும், தெளிவான ஆதாரங்களைக் கொண்டும் நாம் அனுப்பினோம்

[46] ஃபிர்அவ்னிடமும் அவனுடைய பிரதானிகளிடமும் (அனுப்பிவைத்தோம்). அவர்களோ கர்வம் கொண்டு பெருமை அடிக்கும் மக்களாக இருந்தார்கள்

[47] நம்மைப் போன்ற மனிதர்களான (இந்த) இருவரை நாம் நம்பிக்கை கொள்வோமா? (அதுவும்) அவர்களது சமூகத்தினரோ, நமக்கு அடிமைகளாக இருக்கின்றனர்

[48] ஆகவே, இவ்விருவரையும் பொய்யரென அவர்கள் கூறினார்கள். இதன் காரணமாக அவர்கள் அழிக்கப்பட்டுப் போயினர்

[49] அவர்கள் நேரான வழியில் செல்வதற்காக மூஸாவுக்கு நாம் ஒரு வேதத்தைக் கொடுத்தோம். (எனினும், அதை அவர்கள் பொருட்படுத்தவில்லை)

[50] மர்யமுடைய மகனையும் அவருடைய தாயையும் நாம் ஓர் அத்தாட்சி ஆக்கி அவ்விருவரையும் மிக்க செழிப்பும், நீர் வளமும் பொருந்திய, வசிப்பதற்கு மிகவும் தகுதியான உயரிய பூமியில் வசிக்கும்படிச் செய்தோம்

[51] (நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரையும் நோக்கி) “என் தூதர்களே! நீங்கள் பரிசுத்தமானவற்றையே புசியுங்கள். நற்காரியங்களையே செய்யுங்கள். நிச்சயமாக நான் நீங்கள் செய்பவற்றை நன்கறிவேன்

[52] நிச்சயமாக உங்கள் இந்த மார்க்கம் ஒரே ஒரு வழிதான். (இதில் வேற்றுமை கிடையாது.) நான்தான் உங்கள் இறைவன். ஆகவே, நீங்கள் என்னையே அஞ்சுங்கள்'' (என்று கட்டளை இட்டிருந்தோம். அவர்களும் தம் மக்களுக்கு இவ்வாறே கூறி வந்தனர்)

[53] எனினும், (யூதர்களும், கிறித்தவர்களும்) தங்கள் வேதத்தை(ப் புரட்டி) பலவாறாகப் பிரித்துக்கொண்டு (அவர்களில்) ஒவ்வொரு வகுப்பாரும் தங்களிடம் உள்ளவற்றைக் கொண்டு சந்தோஷம் அடைகின்றனர்

[54] ஆகவே, (நபியே!) நீர் அவர்களை ஒரு காலம் வரை அவர்களுடைய மயக்கத்தில் ஆழ்ந்து கிடக்க விட்டு விடுவீராக

[55] நாம் அவர்களுக்கு ஆண் சந்ததிகளையும் பொருள்களையும் கொடுத்து வருவதைப் பற்றி அவர்கள் என்ன நினைத்துக் கொண்டனர்

[56] இதனால் நிச்சயமாக நாம் அவர்களுக்கு நன்மை செய்வதில் தீவிரமாக இருக்கிறோம் என்று நினைக்கின்றனரா? அவ்வாறல்ல! (அது எதற்காக என்பதை) அவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை

[57] நிச்சயமாக எவர்கள் தங்கள் இறைவனுக்குப் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறார்களோ அவர்களும்

[58] எவர்கள் தங்கள் இறைவனின் வசனங்களை மெய்யாகவே நம்பிக்கைகொள்கிறார்களோ அவர்களும்

[59] எவர்கள் தங்கள் இறைவனுக்கு எவரையும் இணை ஆக்காமல் இருக்கின்றனரோ அவர்களும்

[60] எவர்கள் தங்களுக்குச் சாத்தியமான வரை தானம் கொடுப்பதுடன் அவர்களுடைய உள்ளங்கள் நிச்சயமாக தங்கள் இறைவனிடம் செல்வோம் என்று பயந்து கொண்டிருக்கின்றனவோ அவர்களும்

[61] ஆகிய இவர்கள்தான் நன்மையான காரியங்களில் விரைந்து செல்கிறவர்கள். மேலும், அவர்கள் அவற்றை செய்வதில் ஒருவரை ஒருவர் முந்திக் கொள்கின்றனர்

[62] எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்கு அதிகமாக (எதையும் செய்யும்படி) நாம் நிர்ப்பந்திப்பதில்லை. (ஒவ்வொருவரின்) உண்மையை உரைக்கும் தினசரிக் குறிப்பும் நம்மிடம் இருக்கிறது. (அவர்களின் நன்மையைக் குறைத்தோ பாவத்தை அதிகப்படுத்தியோ) அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்

[63] எனினும், (நிராகரிக்கும்) அவர்களுடைய உள்ளங்கள் இ(வ்வேதத்)தைப் பற்றி (சந்தேகித்து) மடமையில் ஆழ்ந்து கிடக்கின்றன. இதையன்றி அவர்கள் செய்து கொண்டிருக்கும் வேறு பல (தீய)காரியங்களும் இருக்கின்றன

[64] ஆகவே, அவர்களின் தலைவர்களை வேதனையைக் கொண்டு நாம் பிடித்துக் கொண்டாலோ, அவர்கள் (அந்நேரத்தில் திடுக்கிட்டுத் தங்களை காப்பாற்றும்படி) பயந்து சப்தமிடுகின்றனர்

[65] (அச்சமயம் அவர்களை நோக்கி) ‘‘இன்றைய தினம் நீங்கள் பயந்து சப்தமிடாதீர்கள். நிச்சயமாக நீங்கள் நம்மால் உதவி செய்யப்பட மாட்டீர்கள்

[66] நிச்சயமாக எனது வசனங்கள் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்ட அச்சமயம் (அவற்றைப் புறக்கணித்து) நீங்கள் பின் வாங்கினீர்கள்

[67] நீங்கள் கர்வங்கொண்டு (உங்கள்) இராக் கதைகளிலும் இதைப் பற்றி (பரிகாசம் செய்து) பிதற்றிக் கொண்டிருந்தீர்கள்'' (என்று கூறப்படும்)

[68] (நம்) வாக்கியத்தை அவர்கள் கவனிக்கவில்லையா? அல்லது அவர்களுடைய முந்திய மூதாதைகளுக்கு வராதது ஏதும் இவர்களுக்கு வந்துவிட்டதா

[69] அல்லது தங்களிடம் வந்த தூதரை தாங்கள் அறியவில்லை என்பதாக(க் கூறி) அவர்கள் நிராகரிக்கின்றனரா

[70] அல்லது ‘‘ அவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது'' என இவர்கள் கூறுகின்றனரா? இவை ஒன்றுமில்லை. (நம் தூதர்) அவர்களுக்குச் சத்தியத்தைக் கொண்டு வந்தார். எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் அந்த சத்தியத்தையே வெறுக்கின்றனர்

[71] சத்தியம் அவர்களுடைய (தப்பான) விருப்பத்தைப் பின்பற்றுவதென்றால் நிச்சயமாக வானங்களும் பூமியும் அவற்றில் உள்ளவையும் அழிந்துவிடும். எனினும், அவர்களுக்கு நல்ல உபதேசத்தையே அனுப்பினோம். அவர்களோ தங்களிடம் வந்த நல்லுபதேசத்தை புறக்கணித்து விட்டனர்

[72] அல்லது, நீர் அவர்களிடம் ஒரு கூலியை கேட்கிறீரா? (அதுவும் இல்லை. ஏனென்றால்,) உமது இறைவன் (உமக்குத்) தரும் கூலியே மிக்க மேலானதாகும். அவனோ கொடையாளிகளிலெல்லாம் மிக்க மேலானவன் ஆவான்

[73] (நபியே!) நிச்சயமாக நீர் அவர்களை நேரான வழிக்கே அழைக்கிறீர்

[74] எவர்கள் மறுமையை நம்பிக்கை கொள்ளவில்லையோ நிச்சயமாக அவர்கள் நேரான வழியைப் புறக்கணித்தவர்களாகவே இருக்கின்றனர்

[75] நாம் அவர்கள் மீது கருணை காண்பித்து அவர்களுக்கு ஏற்பட்ட சிரமத்தை நீக்கியபோதிலும் அவர்கள் தங்கள் வழிகேட்டிலேயே மூழ்கித் தட்டழிகின்றனர்

[76] நிச்சயமாக நாம் அவர்களை வேதனையைக் கொண்டு பிடித்துக் கொண்டோம். ஆனால், அவர்கள் தங்கள் இறைவனிடம் திரும்பவும் இல்லை; (அவனிடம்) பணிந்து பிரார்த்தனை செய்யவும் இல்லை

[77] அவர்கள் மீது கடினமான வேதனையின் ஒரு வாயிலைத் திறந்து விட்டாலோ அவர்கள் திடுக்கிட்டுத் தங்கள் நம்பிக்கையை முற்றிலும் இழந்து விடுகின்றனர்

[78] அவன்தான் உங்களுக்குச் செவி, பார்வை, உள்ளம் ஆகியவற்றைக் கொடுத்தவன். (இவ்வாறிருந்தும்) அவனுக்கு நீங்கள் வெகு சொற்பமாகவே நன்றி செலுத்துகிறீர்கள்

[79] அவன்தான் உங்களைப் பூமியில் (பல பாகங்களிலும்) பரந்து (வசிக்க வைத்து) பெருகச் செய்கிறான். (மரணித்த பின்னரும்) அவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள்

[80] அவனே உயிர் கொடுக்கிறான்; மரணிக்கவும் செய்விக்கிறான். இரவு பகல் மாறி மாறி வருவதும் அவனுடைய கட்டளையினாலேயே! இவ்வளவு கூட நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா

[81] என்னே! இவர்களுக்கு முன்னிருந்தவர்கள் கூறியவாறே இவர்களும் கூறுகின்றனர்

[82] (அதாவது:) ‘‘ நாம் மரணித்து எலும்பாகவும் உக்கி மண்ணாகவும் போனதன் பின்னர் மெய்யாகவே நாம் எழுப்பப்படுவோமா?'' என்று (அவர்கள் கூறியவாறே இவர்களும்) கூறுகின்றனர்

[83] ‘‘ நிச்சயமாக நாமும் நம் மூதாதைகளும் இவ்வாறே பயமுறுத்தப்பட்டோம். இது முன்னுள்ளவர்களின் கட்டுக்கதைகளே தவிர வேறில்லை'' (என்றும் கூறுகின்றனர்)

[84] (ஆகவே நபியே! நீர் அவர்களை நோக்கி) ‘‘பூமியும் அதில் உள்ளவையும் யாருக்குரியன? நீங்கள் அறிந்திருந்தால் கூறுங்கள்'' எனக் கேட்பீராக

[85] அதற்கவர்கள் ‘‘அல்லாஹ்வுக்குரியனவே'' என்று கூறுவார்கள். (அவ்வாறாயின் இதைக் கொண்டு) நீங்கள் நல்லுணர்ச்சிப் பெறமாட்டீர்களா? என்று கேட்பீராக

[86] ‘‘ ஏழு வானங்களுக்கும், மகத்தான அர்ஷுக்கும் சொந்தக்காரன் யார்?'' என்று கேட்பீராக

[87] அதற்கவர்கள் ‘‘அனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே'' என்று கூறுவார்கள். ‘‘அவ்வாறாயின் நீங்கள் அவனுக்குப் பயப்பட வேண்டாமா?'' என்று கேட்பீராக

[88] ‘‘ எல்லா பொருள்களின் அதிகாரம் யார் கையில் இருக்கிறது? யார் (அனைவரையும்) பாதுகாக்கிறான். அவனை ஒருவரும் பாதுகாப்பதில்லை. நீங்கள் அறிந்திருந்தால் (அவன் யார் எனக் கூறுங்கள்)'' எனக் கேட்பீராக

[89] அதற்கவர்கள் (எல்லா அதிகாரங்களும்) ‘‘அல்லாஹ்வுக்குரியனதான்'' என்று கூறுவார்கள். ‘‘அவ்வாறாயின் நீங்கள் எவ்வாறு உங்கள் அறிவை இழந்து விட்டீர்கள்?'' என்று கேட்பீராக

[90] நாம் அவர்களுக்கு சத்தியத்தையே கொடுத்திருந்தோம். (இதை மறுத்துக் கூறும்) அவர்கள் நிச்சயமாக பொய்யர்களே

[91] அல்லாஹ் சந்ததி எடுத்துக்கொள்ளவில்லை. அவனுடன் வணக்கத்திற்குரிய வேறு இறைவனுமில்லை. அவ்வாறாயின் ஒவ்வொரு இறைவனும் தான் படைத்தவற்றைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு, ஒருவர் மற்றவர் மீது போர் புரிய ஆரம்பித்து விடுவர். (நிராகரிக்கும்) இவர்கள் வர்ணிக்கும் இத்தகைய வர்ணிப்புகளை விட்டும் அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன்

[92] அவன் மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிந்தவன். இவர்கள் இணைவைப்பவற்றை விட அல்லாஹ் மிக்க மேலானவன்

[93] ‘‘என் இறைவனே! நீ அவர்களுக்கு வாக்களிக்கும் வேதனையை நீ எனக்கு காண்பிப்பதாயின்

[94] என் இறைவனே! (அச்சமயம்) இந்த அநியாயக்கார மக்களுடன் என்னை நீ சேர்த்து விடாதே'' என்று (நபியே!) பிரார்த்திப்பீராக

[95] ஏனென்றால், நிச்சயமாக நாம் அவர்களுக்கு வாக்களித்திருக்கும் வேதனையை உமக்குக் காண்பிக்கவும் ஆற்றலுடையவர்கள் ஆவோம்

[96] (நபியே!) தீமையை மிக அழகியதைக் கொண்டே நீர் தடுத்துக் கொள்வீராக. அவர்கள் (உம்மைப் பற்றிக்) கூறுவதை நாம் நன்கறிவோம்

[97] ‘‘ என் இறைவனே! (பாவமான காரியங்களைச் செய்யும்படித் தூண்டும்) ஷைத்தான்களுடைய தூண்டுதல்களிலிருந்து என்னைக் காப்பாற்றும்படி நான் உன்னிடம் கோருகிறேன்

[98] என் இறைவனே! ஷைத்தான்கள் என்னிடம் வராமலிருக்கவும் நான் உன்னிடம் கோருகிறேன்'' என்று (நபியே!) பிரார்த்தித்துக் கொண்டிருப்பீராக

[99] (நிராகரித்துக் கொண்டிருக்கும்) அவர்களில் எவனுக்கும் மரணம் வந்தாலோ (அவன் தன் இறைவனை நோக்கி) ‘‘ என் இறைவனே! என்னை (உலகத்திற்கு) திரும்ப அனுப்பிவிடு

[100] நான் விட்டு வந்த அ(ந்த உலகத்)தில் (இனி) நல்ல காரியங்களையே நான் செய்து கொண்டிருப்பேன்'' என்று கூறுவான். (எனினும்,) அது ஆகக்கூடிய காரியமன்று. (இத்தகைய சந்தர்ப்பங்களில்) அவன் கூறக்கூடியது வெறும் வார்த்தையே (தவிர வேறில்லை). அவர்களுக்கு முன் ஓர் அரண் ஏற்பட்டு விடும். (உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாள் வரை அதில் தங்கிவிடுவார்கள்

[101] சூர் (எக்காளம்) ஊதப்பட்டு விட்டால், அந்நாளில் அவர்களுக்கிடையில் பந்துத்துவம் இருக்காது. ஒருவரின் (சுக துக்க) செய்தியை மற்றொருவர் விசாரிக்கவும் மாட்டார். (தத்தம் கவலையே பெரிதாக இருக்கும்)

[102] ஆகவே, எவர்களுடைய நன்மையின் எடைகள் கணக்கிறதோ அவர்கள்தான் வெற்றி அடைவார்கள்

[103] எவர்களுடைய (நன்மையின்) எடைகள் குறைகிறதோ அவர்கள் தமக்குத் தாமே நஷ்டத்தை உண்டுபண்ணிக் கொண்டு எந்நாளுமே நரகத்தில் தங்கிவிடுவார்கள்

[104] அவர்களுடைய முகங்களை (நரகத்தின்) நெருப்புப் பொசுக்கும். அதில் அவர்களுடைய (உதடுகளெல்லாம் வெந்து சுருண்டு) முகம் விகாரமாக இருக்கும்

[105] (அவர்களை நோக்கி) “உங்கள் மீது எனது வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்படவில்லையா? அவற்றை நீங்கள் பொய்யாக்கிக் கொண்டே இருந்தீர்கள்'' (என்று கூறப்படும்)

[106] அதற்கவர்கள் ‘‘எங்கள் இறைவனே! எங்கள் துரதிர்ஷ்டம் எங்களை மீறிவிட்டது. ஆதலால் நாங்கள் வழிகெட்ட மக்களாக இருந்தோம்'' என்று கூறுவார்கள்

[107] ‘‘எங்கள் இறைவனே! இ(ந்த நரகத்)திலிருந்து எங்களை வெளியேற்றி விடு. மீண்டும் நாங்கள் (பாவத்திற்கு) திரும்பினால் நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்களாகி விடுவோம்'' (என்பார்கள்)

[108] அதற்கவன் கூறுவான்: ‘‘அதிலேயே சிறுமைப்பட்டுக் கிடங்கள். நீங்கள் என்னுடன் பேசாதீர்கள்

[109] நிச்சயமாக நம் அடியார்களில் ஒரு வகுப்பார் இருந்தனர். அவர்கள் (என்னை நோக்கி) ‘‘ எங்கள் இறைவனே! நாங்கள் (உன்னை) நம்பிக்கை கொள்கிறோம். நீ எங்கள் குற்றங்களை மன்னித்து, எங்கள் மீது அருள் புரிவாயாக! அருள் புரிபவர்களிலெல்லாம் நீ மிக்க மேலானவன்'' என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர்

[110] ஆனால் நீங்களோ என் நினைவை முற்றிலும் மறந்துவிட்டு அவர்களைப் பரிகசித்து அவர்களைப் பற்றிச் சிரித்துக் கொண்டிருந்தீர்கள்

[111] (உங்கள் பரிகாசத்தை) அவர்கள் சகித்துக் கொண்டிருந்ததன் காரணமாக இன்றைய தினம் நிச்சயமாக நாம் அவர்களுக்கு நற்கூலி கொடுத்தோம். மெய்யாகவே அவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள்

[112] ‘‘ நீங்கள் பூமியில் எத்தனை வருடங்கள் இருந்தீர்கள்?'' என அவன் கேட்பான்

[113] அதற்கவர்கள் ‘‘ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிது பாகம் தங்கியிருந்திருப்போம். (இதைப்பற்றி) கணக்கு வைத்திருப்பவர்களை நீ கேட்பாயாக!'' எனக் கூறுவார்கள்

[114] அதற்கவன் ‘‘ ஒரு சொற்ப காலத்தைத் தவிர (பூமியில் அதிக காலம்) நீங்கள் தங்கவில்லை. இதை முன்னதாகவே நீங்கள் அறிந்திருக்க வேண்டாமா?'' என்று கூறுவான்

[115] (‘‘என்னே!) நாம் உங்களை படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடம் கொண்டு வரப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டிருந்தீர்களா?'' (என்று கேட்பான்)

[116] ஆகவே, மெய்யான அரசனாகிய அல்லாஹ் மிக்க உயர்ந்தவன். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் அறவே இல்லை. கண்ணியமிக்க அர்ஷுக்குச் சொந்தக்காரன் அவனே

[117] (நபியே!) எவன் அல்லாஹ்வுடன் வேறு ஓர் இறைவனை அழைக்கிறானோ அவனிடத்தில் அதற்குரிய ஓர் அத்தாட்சியும் இல்லை. அவனுடைய (பாவக்) கணக்கு அவனுடைய இறைவனிடத்தில்தான் (தீர்க்கப்படும்). நிச்சயமாக (உண்மையை) நிராகரிப்பவர்கள் வெற்றிபெற மாட்டார்கள்

[118] (நபியே!) கூறுவீராக: என் இறைவனே! நீ (என்னை) மன்னித்துக் கருணை செய்வாயாக! கருணை செய்பவர்களிலெல்லாம் நீதான் மிக்க மேலானவன்

அந்நூர்

Surah 24

[1] (மனிதர்களே! இது) ஓர் அத்தியாயம். இதை நாமே இறக்கி (இதிலுள்ள சட்ட திட்டங்களை) நாமே விதித்துள்ளோம். மேலும், இதைக்கொண்டு நீங்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு தெளிவான வசனங்களையே நாம் இதில் இறக்கிவைத்தோம்

[2] விபசாரம் செய்த பெண், விபசாரம் செய்த ஆண் இவர்களில் ஒவ்வொருவரையும் நூறு கசையடிகள் அடியுங்கள். மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், அல்லாஹ் விதித்த இக்கட்டளையை நிறைவேற்றுவதில், அவ்விருவர்களுடைய விஷயத்தில் உங்களுக்கு இரக்கம் ஏற்படக்கூடாது. அவ்விருவருக்கும் (தண்டனையாக) வேதனை கொடுக்கும் சமயத்தில் நம்பிக்கையாளர்களில் ஒரு தொகையினர் அதன் சமீபமாக இருக்கவும்

[3] (கேவலமான) ஒரு விபசாரன் (தன்னைப் போன்ற) ஒரு விபசாரியை அல்லது இணைவைத்து வணங்கும் ஒரு பெண்ணைத் தவிர (மற்றெவளையும்) திருமணம் செய்ய முடியாது. (அவ்வாறே) ஒரு விபசாரி (கேவலமான) ஒரு விபசாரனை அல்லது இணைவைத்து வணங்கும் ஓர் ஆணைத் தவிர (மற்றெவனையும்) திருமணம் செய்ய முடியாது. இத்தகைய திருமணம் நம்பிக்கையாளர்களுக்குத் தடுக்கப்பட்டிருக்கிறது

[4] எவனேனும் கற்புடைய பெண்கள் மீது குற்றம் கூறி (அதற்கு வேண்டிய) நான்கு சாட்சிகளை அவன் கொண்டு வராவிட்டால் அவனை நீங்கள் எண்பது கசையடிகள் அடியுங்கள். பின்னர், அவன் கூறும் சாட்சியத்தை எக்காலத்திலும் ஒப்புக் கொள்ளாதீர்கள். (ஏனென்றால்) நிச்சயமாக இ(த்தகைய)வர்கள் பெரும் பாவிகள்தான்

[5] ஆயினும், (இவர்களில்) எவரேனும் இதற்குப் பின்னர் (தங்கள் குற்றங்களிலிருந்து) விலகி கைசேதப்பட்டு மன்னிப்புக் கோரி(த் தங்கள்) நடத்தைகளை ஒழுங்குபடுத்திக் கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் (அவர்களை) மன்னிப்பவனும் கருணை செய்பவனுமாக இருக்கிறான்

[6] எவர்கள் தங்கள் மனைவிகள் மீது (விபசாரத்தைக் கொண்டு) குற்றம் கூறித் தங்களைத் தவிர அவர்களிடம் (நான்கு) சாட்சிகள் இல்லாமல் இருந்தால் அதற்காக அச்சமயம் நிச்சயமாக தான் உண்மையே கூறுவதாக அல்லாஹ்வின் மீது நான்கு முறை சத்தியம் செய்து கூறி

[7] ஐந்தாவது முறை (இவ்விஷயத்தில்) தான் பொய் சொல்வதாக இருந்தால் நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் தன் மீது உண்டாகுக! என்றும் அவன் சத்தியம் செய்து கூறவேண்டும்

[8] (அவனுடைய மனைவி குற்றமற்றவளாக இருக்க அவள் மீது குற்றம் திரும்பினால்) அவள் தன் மீது விதிக்கப்பட வேண்டிய தண்டனையைத் தட்டிக் கழிப்பதற்காக (அவள் அதை மறுத்து) நிச்சயமாக(த் தனது) அ(க்கண)வன் பொய்யே கூறுகிறான் என்று அல்லாஹ்வின் மீது நான்கு முறை சத்தியம் செய்து

[9] ஐந்தாவது முறை மெய்யாகவே அவன் (இவ்விஷயத்தில்) உண்மை சொல்லியிருந்தால் தன்மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாவதாகுக! என்றும் அவள் கூறவேண்டும். (இதன் மூலம் அவள் மீது விதிக்கப்பட வேண்டிய தண்டனை நீக்கப்பட்டுவிடும்)

[10] அல்லாஹ்வுடைய அருளும், அவனுடைய கருணையும் உங்கள் மீது இல்லையெனில், அல்லாஹ் பாவங்களை மன்னிப்பவனாகவும் ஞானமுடையவனுமாகவும் இல்லையெனில்... (உங்கள் குடும்ப வாழ்க்கையே சிதறி நீங்கள் பல துன்பங்களுக்குள்ளாகி இருப்பீர்கள்)

[11] எவர்கள் (ஆயிஷா (ரழி) மீது பொய்யாக) அவதூறு கூறினார்களோ அவர்களும் உங்களிலுள்ள ஒரு கூட்டத்தினர்தான்! (நம்பிக்கையாளர்களே!) அதனால் உங்களுக்கு ஏதும் தீங்கு ஏற்பட்டு விட்டதாக நீங்கள் எண்ண வேண்டாம். அது உங்களுக்கும் நன்மையாகவே முடிந்தது. (அவதூறு கூறியவர்கள்) ஒவ்வொருவருக்கும் அவர்கள் (அவதூறு கூறித்) தேடிக் கொண்ட பாவத்துக்குத் தக்க தண்டனை(யாக எண்பது கசையடிகள்) உண்டு. இந்த அவதூறில் அவர்களில் எவன் பெரும் பங்கெடுத்துக் கொண்டானோ அவனுக்கு (இத்தண்டனையும்) இன்னும் கடுமையான வேதனையுமுண்டு

[12] இதை நீங்கள் கேள்வியுற்ற மாத்திரத்தில் (இதை மறுத்து) நம்பிக்கை கொண்ட ஆண்களும் நம்பிக்கை கொண்ட பெண்களும் தங்களைப் பற்றி நல்லெண்ணம் வைத்து ‘‘இது பகிரங்கமான அவதூறே'' என்று கூறியிருக்க வேண்டாமா

[13] (அல்லது) இதற்கு வேண்டிய நான்கு சாட்சிகளை அவர்கள் கொண்டு வந்திருக்க வேண்டாமா? இதற்குரிய சாட்சிகளை அவர்கள் கொண்டு வராததினால் நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள்தான் என்று அல்லாஹ்விடத்தில் ஏற்பட்டுவிட்டது

[14] இம்மையிலும் மறுமையிலும் உங்கள் மீது அல்லாஹ்வுடைய அருளும், அவனுடைய கருணையும் இல்லையெனில் இதை நீங்கள் கூறிக்கொண்டிருந்ததன் காரணமாக மகத்தான வேதனை உங்களைப் பிடித்திருக்கும்

[15] (ஒருவரிடமிருந்து ஒருவராக இப்பொய்யான) அவதூற்றை, நீங்கள் திட்டமாக அறியாத விஷயத்தை உங்கள் நாவுகளால் எடுத்துக் கொண்டு, நீங்கள் உங்கள் வாயால் கூறிக்கொண்டு திரிகிறீர்கள். இதை நீங்கள் இலேசாகவும் மதித்து விட்டீர்கள். ஆனால், இதுவோ அல்லாஹ்விடத்தில் (பாவங்களில்) மிக்க பெரியது

[16] நீங்கள் இதைக் கேள்வியுற்ற மாத்திரத்தில், அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன். இதை நாம் (நம் வாயால்) பேசுவதும் நமக்குத் தகுதியில்லை. இது மாபெரும் அவதூறே என்று நீங்கள் கூறியிருக்க வேண்டாமா

[17] மெய்யாகவே நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், இத்தகைய விஷயத்தை இனி ஒரு காலத்திலும் நீங்கள் மீண்டும் செய்யக்கூடாது என அல்லாஹ் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான்

[18] அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு விவரித்துக் கூறுகிறான். அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவன், ஞானமுடையவன் ஆவான்

[19] எவர்கள் (இதற்குப் பின்னரும்) நம்பிக்கையாளர்களுக்கு இடையில் மானக்கேடான செயல்கள் பரவுவதை விரும்புகிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் மிக்க துன்புறுத்தும் வேதனையுண்டு. (அதனால் ஏற்படும் தீங்குகளை) அல்லாஹ்தான் நன்கறிவான்; நீங்கள் அறிய மாட்டீர்கள்

[20] அல்லாஹ்வுடைய அருளும் அவனுடைய கருணையும் உங்கள் மீது இல்லையெனில், அல்லாஹ் மிக்க இரக்கமுடையவனாகவும் கருணையுடையவனாகவும் இல்லையெனில் (அவனுடைய வேதனை இதுவரை உங்களைப் பிடித்தே இருக்கும்)

[21] நம்பிக்கையாளர்களே! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள். (ஏனென்றால்,) எவன் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றிச் செல்கிறானோ அவனை அவன் மானக்கேடான விஷயங்களையும், பாவமான காரியங்களையும் செய்யும்படி நிச்சயமாகத் தூண்டிக் கொண்டே இருப்பான். அல்லாஹ்வுடைய அருளும், கருணையும் உங்கள் மீது இல்லாதிருப்பின் உங்களில் ஒருவருமே எக்காலத்திலும் பரிசுத்தவானாக ஆகி இருக்க முடியாது. எனினும், அல்லாஹ், தான் நாடியவனைப் பரிசுத்தவானாக ஆக்குகிறான். அல்லாஹ் நன்கு செவியுறுபவன், (அனைத்தையும்) நன்கறிபவன் ஆவான்

[22] உங்களில் செல்வந்தரும் (பிறருக்கு உதவி செய்ய) இயல்புடையவரும், தங்கள் பந்துக்களுக்கோ, ஏழைகளுக்கோ, அல்லாஹ்வுடைய பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கோ (தர்மம்) கொடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம். (அவர்களால் உங்களுக்கு ஏதும் வருத்தம் ஏற்பட்டிருந்தால்) அதை நீங்கள் மன்னித்துப் புறக்கணித்து விடவும். அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா? அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், கருணையுடையவன் ஆவான்

[23] எவர்கள் கள்ளம் கபடில்லாத நம்பிக்கையாளரான கற்புடைய பெண்கள் மீது அவதூறு கூறுகிறார்களோ அவர்கள் நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் (இறைவனுடைய) சாபத்திற்குள்ளாவார்கள். இன்னும், அவர்களுக்கு கடுமையான வேதனை உண்டு

[24] (நபியே! ஒரு நாளை நீர் அவர்களுக்கு ஞாபகமூட்டுவீராக.) அந்நாளில் அவர்களுடைய நாவுகளும், அவர்களுடைய கைகளும், அவர்களுடைய கால்களும் (கூட) அவர்களுக்கு விரோதமாக அவர்கள் செய்தவற்றைப் பற்றி சாட்சியம் கூறும்

[25] அந்நாளில் (அவர்களின் செயலுக்குத்தக்க) நீதமான கூலியை அல்லாஹ் அவர்களுக்கு முழுமையாகவே கொடுப்பான். நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையாளன், (அவர்களின் செயல்களை) வெளியாக்கிவிடக் கூடியவன் என்பதை அவர்கள் நன்கறிந்து கொள்வார்கள்

[26] கெட்ட பெண்கள், கெட்ட ஆண்களுக்கும்; கெட்ட ஆண்கள், கெட்ட பெண்களுக்கும் தகுமானவர்கள். (அவ்வாறே) பரிசுத்தமான பெண்கள், பரிசுத்தமான ஆண்களுக்கும்; பரிசுத்தமான ஆண்கள், பரிசுத்தமான பெண்களுக்கும் தகுமானவர்கள். இத்தகைய (பரிசுத்தமான)வர்கள்தான் (இந்த நயவஞ்சகர்கள்) கூறும் குற்றங்குறைகளிலிருந்து பரிசுத்தமாக இருக்கின்றனர். இவர்களுக்கு (மறுமையில்) மன்னிப்பும் உண்டு; கண்ணியமான முறையில் உணவும் உண்டு

[27] நம்பிக்கையாளர்களே! உங்கள் வீடுகள் அல்லாத வீடுகளில் நீங்கள் (நுழையக் கருதினால்,) அதில் இருப்பவர்களுக்கு ஸலாம் கூறி (அவர்களுடைய) அனுமதியைப் பெறும் வரை நுழையாதீர்கள். இவ்வாறு நடந்து கொள்வது உங்களுக்கே மிக்க நன்று. (இதை மறந்து விடாது) நீங்கள் கவனத்தில் வைப்பீர்களாக

[28] அவ்வீட்டில் எவரையுமே நீங்கள் காணாவிடில், உங்களுக்கு அனுமதி கிடைக்கும் வரை அதில் நுழையாதீர்கள். ‘‘ (தவிர இச்சமயம் வீட்டில் நுழைய வேண்டாம்.) நீங்கள் திரும்பிவிடுங்கள்'' என்று (அவ்வீட்டில் இருக்கும் பெண்கள் அல்லது மற்ற எவராலும்) உங்களுக்குக் கூறப்பட்டால், அவ்வாறே நீங்கள் (தாமதிக்காது) திரும்பி விடுங்கள். இதுவே உங்களைப் பரிசுத்தமாக்கி வைக்கும். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் ஆவான்

[29] (நம்பிக்கையாளர்களே!) குடியில்லாத ஒரு வீட்டில் உங்கள் சாமான்கள் இருந்து (அதற்காக) நீங்கள் அதில் (அனுமதியின்றியே) நுழைந்தால் அது உங்கள்மீது குற்றமாகாது. நீங்கள் (உங்கள் மனதில்) மறைத்துக் கொள்வதையும் நீங்கள் வெளியாக்குவதையும் அல்லாஹ் நன்கறிவான்

[30] (நபியே!) நம்பிக்கையாளர்களான ஆண்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வையைக் கீழ் நோக்கியே வைக்கவும். அவர்கள் தங்கள் கற்பையும் பாதுகாத்துக் கொள்ளவும். இது அவர்களைப் பரிசுத்தமாக்கி வைக்கும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கறிந்தவன் ஆவான்

[31] (நபியே!) நம்பிக்கையுள்ள பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்களும் தங்கள் பார்வையைக் கீழ் நோக்கியே வைத்துத் தங்கள் கற்பையும் பாதுகாத்துக் கொள்ளவும். தங்கள் அலங்காரத்தில் (பெரும்பாலும்) வெளியில் இருக்கக்கூடிய (ஹிஜாபின் வெளிப்புறத்)தைத் தவிர எதையும் வெளிக்காட்டாது மறைத்துக் கொள்ளவும். தங்கள் முந்தானைகளால் மார்பையும் மறைத்துக் கொள்ளவும். பெண்கள் தங்கள் கணவர்கள், தங்கள் தந்தைகள், தங்கள் கணவர்களின் தந்தைகள், தங்கள் பிள்ளைகள், தங்கள் கணவர்களின் பிள்ளைகள், தங்கள் சகோதரர்கள், தங்கள் சகோதரர்களின் பிள்ளைகள், தங்கள் சகோதரிகளின் பிள்ளைகள் அல்லது (முஸ்லிமாகிய) தங்கள் இனத்தாரின் பெண்கள், தங்கள் அடிமைகள் அல்லது பெண்களின் விருப்பமற்ற தங்களை அண்டி வாழும் ஆண்கள், பெண்களின் மறைவான அவயங்களை அறிந்துகொள்ளாத சிறு பிராயத்தையுடைய (ஆண்) குழந்தைகள் ஆகிய இவர்களைத் தவிர மற்றெவர் முன்னும் தங்களின் அலங்காரத்தை அறவே வெளிப்படுத்த வேண்டாம். இன்னும் (தாங்கள் அணிந்திருக்கும் ஆடை ஆபரணங்களை போன்ற) மறைந்திருக்கும் தங்கள் அலங்காரத்தை அறிவிக்கும் நோக்கத்துடன் தங்கள் கால்களை (பூமியில்) தட்டித் தட்டி நடக்க வேண்டாம். நம்பிக்கையாளர்களே! (இதில் எதிலும் உங்களால் தவறு ஏற்பட்டு விட்டால்) நீங்கள் வெற்றிபெறும் பொருட்டு பாவமன்னிப்பைக் கோரி அல்லாஹ்வின் பக்கமே (உங்கள் மனதால்) திரும்புங்கள்

[32] (ஆணாயினும், பெண்ணாயினும்) உங்களில் எவருக்கும் வாழ்க்கைத் துணை இல்லாவிட்டால், அவர்களுக்கு(ம் விதவைகளுக்கும்) திருமணம் செய்து வையுங்கள். (அவ்வாறே) உங்கள் அடிமையிலுள்ள நல்லவர்கள் ஆணாயினும் பெண்ணாயினும் சரி (வாழ்க்கைத் துணைவரில்லாத) அவர்களுக்கும் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாயிருந்தாலும் அல்லாஹ் தன் அருளைக்கொண்டு அவர்களுடைய வறுமையை நீக்கிவிடுவான். (கொடை கொடுப்பதில்) அல்லாஹ் மிக்க விசாலமானவன், (மனிதர்களின் நிலைமையை) நன்கறிந்தவன் ஆவான்

[33] (வறுமையினால்) திருமணம் செய்ய சக்தியற்றோர், அல்லாஹ் தன் அருளைக் கொண்டு (அவர்களுடைய வறுமையை நீக்கிப்) பொருளைக் கொடுக்கும் வரை அவர்கள் (நோன்பு நோற்றுக் கொண்டு) உறுதியாகத் தங்கள் கற்பைக் காத்துக் கொள்ளவும். உங்கள் அடிமைகளில் எவரேனும் (ஒரு குறிப்பிட்ட தொகையைச் சேகரித்து உங்களுக்குத் தருவதாகவும், தன்னை விடுதலை செய்து விடும்படியாகவும் கூறி அதற்குரிய) உரிமைப் பத்திரத்தை எழுதித் தரும்படிக் கோரி, அவர்களிடம் அதற்குரிய தகுதியை (அதாவது: விடுதலையான பின்னர், அவர்கள் கண்ணியமான முறையில் தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொள்வார்கள் என்று) நீங்கள் கண்டால், உரிமைப் பத்திரத்தை அவர்களுக்கு எழுதிக் கொடுத்துவிடுங்கள். (நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருளிலிருந்தும் நீங்கள் அவர்களுக்குக் கொடு(த்து அவர்கள் விடுதலையாக உதவி செய்யு)ங்கள். தங்கள் கற்பை பாதுகாத்துக் கொண்டிருக்கும் உங்கள் அடிமைப் பெண்களை இவ்வுலக வாழ்க்கைக்குரிய அற்பப் பொருளை நீங்கள் அடையும் பொருட்டு விபசாரம் செய்யும்படி அவர்களை நிர்ப்பந்திக்காதீர்கள். அவர்களை எவரேனும் (அவர்கள் விருப்பத்திற்கு மாறாக) நிர்ப்பந்தத்திற்குள்ளாக்கி விட்டால், நிச்சயமாக அல்லாஹ் அவர்களை மன்னித்து கருணை புரிவான்.(எனினும், நிர்ப்பந்தித்தவன் பாவி ஆகிவிடுவான்)

[34] நிச்சயமாக நாம் உங்களுக்குத் தெளிவான வசனங்களையும், உங்களுக்கு முன் சென்றவர்களின் உதாரணங்களையும், இறையச்சமுடையவர்களுக்கு நல்லுபதேசங்களையும் (இதில்) இறக்கி வைத்திருக்கிறோம்

[35] அல்லாஹ், வானங்கள் இன்னும் பூமியின் பிரகாசமாக இருக்கிறான். அவனுடைய பிரகாசத்திற்கு உதாரணம் விளக்கு இருக்கின்ற ஒரு மாடத்திற்கு ஒப்பாகும். அவ்விளக்கு ஒரு பளிங்குக் கிண்ணத்தில் இருக்கிறது. அந்தக் கிண்ணமோ முத்தாலாகிய (பிரகாசிக்கின்ற) ஒரு நட்சத்திரத்தைப்போல் (பிரகாசித்துக் கொண்டு) இருக்கிறது. (அதில்) பாக்கியம் பெற்ற ‘ஜைத்தூன்' மரத்தின் எண்ணெய் எரிக்கப்படுகிறது. அது கீழ்நாட்டில் உள்ளதுமல்ல; மேல்நாட்டில் உள்ளதுமல்ல. அந்த எண்ணெயை நெருப்புத் தொடாவிடினும் அது பிரகாசிக்கவே செய்கிறது. (அதுவும்) பிரகாசத்திற்கு மேல் பிரகாசமாக (பிரகாசிக்கிறது). அல்லாஹ், தான் நாடியவர்களைத் தன் பிரகாசத்தின் பக்கம் செலுத்துகிறான். மனிதர்களுக்கு அல்லாஹ் (தன் தன்மையை அறிவிக்கும் பொருட்டு) இத்தகைய உதாரணங்களைக் கூறுகிறான். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவன்

[36] (அவ்விளக்குகள்) வீடுகளில் இருக்கின்றன. அவ்வீடுகள் அவற்றில் அல்லாஹ்வின் திருப்பெயர் கூறப்படவும், அதைக் கண்ணியப்படுத்தப்படவும் அவன் கட்டளையிட்டிருக்கிறான். அவற்றில் காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்துகொண்டு

[37] பல ஆண்கள் இருக்கின்றனர். அவர்களுடைய வர்த்தகமும் கொடுக்கல் வாங்கலும் அவர்கள் அல்லாஹ்வுடைய திருப்பெயரை நினைவு செய்வதில் இருந்தும், தொழுகையை உறுதியாக கடைபிடிப்பதிலிருந்தும், ஜகாத்துக் கொடுப்பதிலிருந்தும் அவர்களைத் திருப்பிவிடாது. உள்ளங்களும் பார்வைகளும் (பயத்தால் திடுக்கிட்டுத்) தடுமாறிவிடக்கூடிய நாளைப் பற்றி அவர்கள் (எந்நேரமும்) பயந்து கொண்டிருப்பார்கள்

[38] அவர்கள் செய்துகொண்டிருந்த (நன்மையான)வற்றை விட அழகான கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுப்பான். தன் அருளைக்கொண்டு மேன்மேலும் அவர்களுக்கு அதிகமாகவே கொடுப்பான். அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றியே கொடுக்கிறான்

[39] எவர்கள் நிராகரிப்பவர்களாகி விட்டார்களோ, அவர்களுடைய செயல்கள் வனாந்தரத்தில் தோன்றும் கானலைப்போல் இருக்கின்றன. தாகித்தவன் அதைத் தண்ணீர் என எண்ணிக் கொண்டு அதன் சமீபமாகச் சென்றபொழுது ஒன்றையுமே அவன் காணவில்லை; எனினும், அல்லாஹ் தன்னிடமிருப்பதை அவன் காண்கிறான். அவன் (இவனை மரிக்கச் செய்து) இவனுடைய கணக்கை முடித்து விடுகிறான். கேள்வி கணக்குக் கேட்பதில் அல்லாஹ் மிகத் தீவிரமானவன்

[40] அல்லது (அவர்களுடைய செயல்) கடலின் ஆழத்திலுள்ள இருளுக்கு ஒப்பாக இருக்கிறது. அதை அலைக்கு மேல் அலைகள் மூடிக் கொண்டிருப்பதுடன் மேகங்களும் (கவிழ்ந்து) மூடிக்கொண்டிருக்கின்றன. அன்றி, அவன் தன் கையை நீட்டிய போதிலும் அதைக் காண முடியாத அளவுக்கு இருள்களும் ஒன்றன்மேல் ஒன்றாகச் சூழ்ந்துகொண்டு இருக்கின்றன. அல்லாஹ் எவனுக்குப் பிரகாசத்தைக் கொடுக்கவில்லையோ அவனுக்கு (எங்கிருந்தும்) ஒரு பிரகாசமும் கிட்டாது

[41] வானங்களிலும் பூமியிலும் உள்ளவையும் (இவற்றிற்கு மத்தியில் உள்ளவையும் குறிப்பாக) பறவைகளும் (தங்கள்) இறக்கைகளை விரித்(துப் பறந்)த வண்ணமாக அல்லாஹ்வை துதித்துக் கொண்டிருக்கின்றன என்பதை (நபியே!) நீர் காணவில்லையா? இவை அனைத்தும் தாங்கள் புகழ்ந்து வணங்க வேண்டிய முறையை நிச்சயமாக அறிந்தே இருக்கின்றன. அல்லாஹ்வும் அவை செய்பவற்றை நன்கறிந்தவன் ஆவான்

[42] வானங்கள் பூமி (ஆகியவை)யின் ஆட்சி அல்லாஹ்வுக்கு உரியதே! அவனிடமே (அனைவரும்) திரும்பச் செல்ல வேண்டியதிருக்கிறது

[43] (பல பாகங்களிலும் சிதறிக் கிடக்கும்) மேகங்களை ஓட்டி அவற்றை ஒன்று சேர்த்து ஒன்றின் மேல் ஒன்றாக நிச்சயம் அல்லாஹ்தான் அடுக்குகிறான் என்பதை (நபியே!) நீர் பார்க்கவில்லையா? பின்னர், அந்த மேகங்களின் மத்தியிலிருந்து மழையை பொழியச் செய்வதையும் நீர் காண்கிறீர். அவனே வானத்தில் மலை போன்றிருக்கும் மேகங்களிலிருந்து ஆலங்கட்டி (கல் மாரி)யையும் பொழியச் செய்கிறான். அதை அவன் நாடியவர்கள் மீது விழும்படி செய்கிறான். அவன் நாடியவர்களை விட்டு அதைத் தடுத்துக் கொள்கிறான். அதன் மின்னலின் வெளிச்சம் பார்வையைப் பறிக்கப் பார்க்கிறது

[44] இரவையும் பகலையும் அல்லாஹ்வே (திருப்பித் திருப்பி) மாற்றிக் கொண்டு இருக்கிறான். அறிவுடையவர்களுக்கு இதில் ஒரு (நல்ல) படிப்பினை உண்டு

[45] (மனிதர்களே!) ஊர்ந்து செல்லக்கூடிய (உயிர்ப் பிராணிகள்) அனைத்தையும் அல்லாஹ் ஒரேவித தண்ணீரைக் கொண்டு படைத்திருந்த போதிலும் (அவை அனைத்தும் ஒரு வகையாக இருக்கவில்லை.) அவற்றில் சில தன் வயிற்றால் (பாம்புகளைப் போல்) ஊர்ந்து செல்கின்றன. அவற்றில் சில இரு கால்களால் நடக்கின்றன. அவற்றில் சில நான்கு கால்களால் நடக்கின்றன. (இவ்வாறு) அல்லாஹ் தான் விரும்பியவற்றை (விரும்பியவாறு) படைப்பான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக்க ஆற்றலுடையவன் ஆவான்

[46] (மனிதர்களே! அனைவரும் எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய) தெளிவான வசனங்களையே நிச்சயமாக நாம் (இதில்) இறக்கியிருக்கிறோம். எனினும், அல்லாஹ் தான் விரும்பிய (நல்ல)வர்களையே (இதன் மூலம்) நேரானவழியில் செலுத்துகிறான்

[47] (நபியே!) அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நாங்கள் நம்பிக்கை கொண்டு அவர்களுக்கு கட்டுப்பட்டு நடக்கிறோம்'' என்று கூறுபவர்களில் சிலர் பின்னர் புறக்கணித்து விடுகின்றனர். ஆகவே, இவர்கள் (உண்மையான) நம்பிக்கையாளர்களே அல்ல

[48] தவிர, தங்களுக்கிடையில் (ஏற்பட்ட விவகாரத்தைப் பற்றி நியாயத்) தீர்ப்புபெற அல்லாஹ்விடமும், அவனுடைய தூதரிடமும் வாருங்கள் என அழைக்கப்பட்டால் அவர்களில் ஒரு பிரிவினர் புறக்கணித்து விடுகின்றனர்

[49] எனினும், தீர்ப்பு அவர்களுக்கு சாதகமாக இருந்தால் (நம் தூதருக்கு) கீழ்ப்படிந்து (நடப்பவர்களைப் போல்) அவரிடம் வருகின்றனர்

[50] என்னே! இவர்களுடைய உள்ளங்களில் ஏதும் நோய் இருக்கிறதா? அல்லது (அவரைப் பற்றி) இவர்கள் சந்தேகிக்கின்றனரா? அல்லது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் இவர்களுக்கு அநியாயம் செய்து விடுவார்கள் என்று பயப்படுகின்றனரா? (அவர்கள் அநீதி செய்யப்படவே மாட்டார்கள்.) மாறாக, இவர்கள்தான் வரம்பு மீறும் அநியாயக்காரர்கள் ஆவர். (ஆதலால்தான் இவ்வாறு செய்கின்றனர்)

[51] எனினும், மெய்யாகவே நம்பிக்கை கொண்டவர்களோ அவர்களுக்கு இடையில் (ஏற்பட்ட விவகாரத்தைப் பற்றித்) தீர்ப்பு பெற அல்லாஹ்விடமும், அவனுடைய தூதரிடமும் வரும்படி அழைக்கப்பட்டால், அதற்கவர்கள் ‘‘நாங்கள் செவி சாய்த்தோம்; நாங்கள் கீழ்ப்படிந்தோம்'' என்று கூறுவதைத் தவிர, வேறு ஒன்றும் கூறுவதில்லை. இவர்கள்தான் முற்றிலும் வெற்றி அடைந்தவர்கள் ஆவர்

[52] எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வுக்குப் பயந்து (அவனுக்கு மாறு செய்வதை விட்டு) விலகி அவனை அஞ்சிக் கொண்டார்களோ அவர்கள்தான் நிச்சயமாக பெரும் பாக்கியம் பெற்றவர்கள்

[53] (நபியே! நயவஞ்சகர்களாகிய) அவர்களுக்கு நீர் கட்டளையிட்டால், அவர்களும் நிச்சயமாக (போருக்குப்) புறப்பட்டு விடுவதாக அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து கூறுகிறார்கள். நீர் (அவர்களை நோக்கிக்) கூறுவீராக: ''(இவ்வாறு) சத்தியம் செய்யாதீர்கள்! நீங்கள் கட்டுப்பட்டு நடப்பதாகக் கூறுவதன் உண்மை தெரிந்த விஷயம்தான். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவன் ஆவான்

[54] (மேலும்) நீர் கூறுவீராக: ‘‘அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் (உண்மையாக) கட்டுப்பட்டு நடங்கள். நீங்கள் புறக்கணித்தாலோ (நமக்கொன்றும் நஷ்டமில்லை. ஏனென்றால்) அவர் மீதுள்ள கடமை எல்லாம், அவர் (தன்) மீது சுமத்தப்பட்ட (தூதை உங்களுக்கு எடுத்துரைப்ப)துதான். உங்கள் மீதுள்ள கடமையெல்லாம் உங்கள் மீது சுமத்தப்பட்ட (அவருக்கு கட்டுப்பட்டு நடப்ப)து தான். நீங்கள் அவருக்கு கட்டுப்பட்டு நடந்தால் நீங்கள்தான் நேரான வழியில் சென்று விடுவீர்கள். (நம் தூதைப்) பகிரங்கமாக (தெளிவாக) அறிவிப்பதைத் தவிர, வேறொன்றும் நம் தூதர் மீது கடமையில்லை

[55] (மனிதர்களே!) உங்களில் எவரேனும் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு நற்செயல்களையும் செய்து வந்தால், அவர்களுக்கு முன்னர் சென்றவர்களை(ப் பூமிக்கு) அதிபதிகளாக்கியது போன்றே இவர்களையும் நிச்சயமாகப் பூமிக்கு அதிபதியாக்கி வைப்பதாகவும், அவன் இவர்களுக்கு விரும்பிய மார்க்கத்தில் இவர்களை உறுதியாக்கி வைப்பதாகவும், அமைதியையும் பாதுகாப்பையும் கொண்டு இவர்களுடைய பயத்தை மாற்றி விடுவதாகவும் நிச்சயமாக அல்லாஹ் வாக்களித்திருக்கிறான். (அன்றி) அவர்கள் தன்னையே வணங்கும்படியாகவும், எதையும் தனக்கு இணையாக்கக் கூடாது என்றும் அவன் கட்டளையிட்டிருக்கிறான். இதன் பின்னர், எவரேனும் நிராகரிப்பவர்களாகி விட்டால் நிச்சயமாக அவர்கள் பெரும் பாவிகள்தான்

[56] (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் தொழுகையைக் கடைப்பிடித்து தொழுது, ஜகாத்தும் கொடுத்து (அவனுடைய) தூதரை (முற்றிலும்) பின்பற்றி வாருங்கள். நீங்கள் (இறைவனுடைய) அருளை அடைவீர்கள்

[57] (நபியே!) நிராகரிப்பவர்கள் பூமியில் (ஓடி ஒளிந்து தப்பித்துக்கொண்டு) நம்மைத் தோற்கடித்து விடுவர் என நீர் எண்ண வேண்டாம். (அவர்களைத் தண்டனைக் குள்ளாக்கியே தீருவோம். மறுமையில்) அவர்கள் செல்லுமிடம் நரகம்தான். அது தங்குமிடங்களில் மிகக் கெட்டது

[58] நம்பிக்கையாளர்களே! உங்கள் அடிமைகளும், உங்களில் பருவமடையாத (சிறிய) பிள்ளைகளும் (நீங்கள் திரைக்குள் அந்தரங்கமாக இருக்கக்கூடிய நேரங்களில்) உங்களிடம் (வருவார்களாயின் உங்கள்) அனுமதியை மூன்று தடவைகள் அவர்கள் கோர வேண்டும். (அந்த நேரங்களாவன:) ‘ஃபஜ்ரு' (அதிகாலை) தொழுகைக்கு முன்னரும் (படுக்கைக்காக உங்கள் மேல் மிச்சமான) ஆடைகளைக் களைந்திருக்கக் கூடிய ‘ளுஹர்' (மதிய) வேளையிலும், ‘இஷா' (இரவு) நேரத்தில் தொழுகைக்குப் பின்னரும் ஆகிய (இம்) மூன்று நேரங்களும் நீங்கள் திரைக்குள் அந்தரங்கமாக இருக்கக்கூடிய நேரங்கள். (இவற்றைத் தவிர மற்ற நேரங்களில் அவர்கள் உங்கள் அனுமதியின்றியே உங்களிடம் வருவது) அவர்கள் மீது குற்றமல்ல. (ஏனென்றால்,) இவர்கள் அடிக்கடி உங்களிடம் வரக்கூடியவர்களாகவும், உங்களில் ஒருவர் மற்றவரிடம் அடிக்கடி செல்ல வேண்டியவர்களாகவும் இருப்பதனாலும் (அடிக்கடி அனுமதி கோரவேண்டிய அவசியமில்லை). இவ்வாறு அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு விவரித்துக் கூறுகிறான். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவன், ஞானமுடையவன் ஆவான்

[59] உங்கள் குழந்தைகள் பருவமடைந்துவிட்டால், அவர்களும் தங்களுக்கு மூத்தவர்கள் அனுமதி கோரவேண்டிய பிரகாரம் அனுமதி கோர வேண்டும். இவ்வாறே அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு விவரித்துக் கூறுகிறான். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவன் ஞானமுடையவன் ஆவான்

[60] திருமண விருப்பமற்ற முதிர்ந்த வயதுடைய (நடமாட முடியாது) உட்கார்ந்தே இருக்கக்கூடிய கிழவிகள், தங்கள் அழகைக் காண்பிக்க வேண்டுமென்ற நோக்கமின்றித் தங்கள் மேல் ஆடைகளைக் களைந்து விட்டிருப்பதில் அவர்கள் மீது குற்றமில்லை. இதையும் அவர்கள் தவிர்த்துக் கொள்வதே அவர்களுக்கு மிக்க நன்று. அல்லாஹ் (அனைத்தையும்) நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்

[61] (நம்பிக்கையாளர்களே! உங்களுடன் சேர்ந்து உணவு உண்பதில்) குருடன் மீதும் குற்றமாகாது; நொண்டி மீதும் குற்றமாகாது; நோயாளி மீதும் குற்றமாகாது; உங்கள் மீதும் குற்றமாகாது. நீங்கள் உங்கள் வீட்டிலோ அல்லது உங்கள் தந்தைகள் வீட்டிலோ அல்லது உங்கள் தாய்மார்கள் வீட்டிலோ அல்லது உங்கள் சகோதரர்கள் வீட்டிலோ அல்லது உங்கள் சகோதரிகள் வீட்டிலோ அல்லது உங்கள் தந்தையின் சகோதரர்கள் வீட்டிலோ அல்லது உங்கள் தந்தையின் சகோதரிகள் வீட்டிலோ அல்லது உங்கள் தாயினுடைய சகோதரர்கள் வீட்டிலோ அல்லது உங்கள் தாயுடைய சகோதரிகள் வீட்டிலோ அல்லது சாவி உங்கள் வசமிருக்கும் வீட்டிலோ அல்லது உங்கள் தோழர்கள் வீட்டிலோ நீங்கள் (உணவு) புசிப்பது உங்கள் மீது குற்றமாகாது. இதில் நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து புசித்தாலும் சரி, தனித்தனியாகப் புசித்தாலும் சரியே (உங்கள் மீது குற்றமில்லை). ஆனால், நீங்கள் எந்த வீட்டில் நுழைந்தபோதிலும் அல்லாஹ்வினால் உங்களுக்குக் கற்பிக்கப்பட்ட மிக்க பாக்கியமுள்ள பரிசுத்தமான (‘ஸலாம்' என்னும்) முகமனை நீங்கள் உங்களுக்குள் (ஒருவருக்கு மற்றொருவர்) கூறிக் கொள்ளவும். இவ்வாறே அல்லாஹ் உங்களுக்குத் தன் வசனங்களை விவரித்துக் கூறுகிறான்! (என்பதை) நீங்கள் அறிந்துகொள்வீர்களாக

[62] நிச்சயமாக உண்மையான நம்பிக்கையாளர்கள் மெய்யாகவே யாரென்றால், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொண்டவர்கள்தான். அவர்கள் ஒரு விஷயத்தைப் பற்றி ஆலோசனை செய்ய அவ(னுடைய தூத)ரிடம் கூடியிருந்தால், அவருடைய அனுமதியின்றி (கூட்டத்திலிருந்து) அவர்கள் விலகிப் போகவே மாட்டார்கள். (அவ்வாறு போகவேண்டிய அவசியம் ஏற்பட்டால், நபியே!) நிச்சயமாக எவர்கள் உம்மிடம் அனுமதியைக்கோரி செல்கிறார்களோ அவர்கள்தான் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் மெய்யாக நம்பிக்கை கொண்டவர்கள். ஆகவே, அவர்கள் தங்கள் அவசர வேலை ஒன்றுக்காக உம்மிடம் அனுமதி கோரினால், அவர்களில் நீர் விரும்பியவர்களுக்கு அனுமதி அளிப்பீராக. அவர்களுக்காக அல்லாஹ்விடத்தில் மன்னிப்புக் கோருவீராக. நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மகா கருணையுடையவன் ஆவான்

[63] (நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வுடைய தூதரை நீங்கள் அழைத்தால் அதை நீங்கள் உங்களுக்குள் ஒருவர் மற்றொருவரை அழைப்பதைப்போல் கருத வேண்டாம். (யா முஹம்மது என பெயர் கூறி அழைக்க வேண்டாம்.) உங்களில் எவர்கள் (நம் தூதர் கூட்டிய சபையிலிருந்து) மறைவாக நழுவி விடுகிறார்களோ அவர்களை அல்லாஹ் நிச்சயமாக நன்கறிவான். ஆகவே, எவர்கள் (தூதராகிய) அவருடைய கட்டளைக்கு மாறுசெய்கிறார்களோ அவர்கள் தங்களுக்கு ஒரு ஆபத்தோ அல்லது துன்புறுத்தும் வேதனையோ வந்தடையும் என்பதைப் பற்றிப் பயந்து கொண்டிருக்கவும்

[64] வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கு உரியனவே என்பதை நிச்சயமாக அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் (இன்றைய தினம்) இருக்கும் நிலைமையையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான். அவனிடம் கொண்டு போகப்படும் நாளில் (இருக்கும் நிலைமையையும் அவன் நன்கறிவான். ஆகவே,) அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றை (அந்த நாளில்) அவன் அவர்களுக்கு அறிவித்து விடுவான். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவன் ஆவான்

அல்ஃபுர்கான்

Surah 25

[1] (நன்மை தீமைகளைத் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தை தன் அடியார் (முஹம்மது) மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன். இது உலகத்தார் அனைவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாக இருக்கிறது

[2] (இவ்வேதத்தை அருளியவன் எத்தகையவனென்றால்,) வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்குரியதே! அவன் ஒரு சந்ததியை எடுத்துக் கொள்ளவும் இல்லை; அவனுடைய ஆட்சியில் அவனுக்கு ஒரு துணையுமில்லை. அவனே அனைத்தையும் படைத்து அவற்றுக்குரிய இயற்கைத் தன்மையையும் அமைத்தவன்

[3] (இவ்வாறெல்லாமிருந்தும் இணைவைத்து வணங்குபவர்கள்) அல்லாஹ் அல்லாதவற்றை தெய்வங்களாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவையோ (அல்லாஹ்வினால்) படைக்கப்பட்டவை. எதையும் அவை படைக்கவில்லை. எவ்வித நன்மையையும் தீமையையும் தங்களுக்கு செய்து கொள்ள அவை சக்தியற்றவை. உயிர்ப்பிக்கவோ, மரணிக்க வைக்கவோ, உயிர் கொடுத்து எழுப்பவோ அவை சக்திபெற மாட்டா

[4] ‘‘ (திருகுர்ஆனாகிய) இது பொய்யாக அவர் கற்பனை செய்து கொண்டதே தவிர, வேறில்லை. இ(தைக் கற்பனை செய்வ)தில் வேறு மக்கள் அவருக்கு உதவி புரிகின்றனர்'' என்று நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர். ஆகவே, (நிராகரிப்பவர்கள் இவ்வாறு கூறுவதன் காரணமாக) அவர்கள் அநியாயத்தையும் பொய்யையுமே சுமந்து கொண்டனர்

[5] ‘‘இது முன்னோர்களின் கட்டுக்கதைகள். காலையிலும் மாலையிலும் இவருக்கு ஓதிக் காண்பிக்கப்படுகிறது. அதை இவர் (மற்றொருவரின் உதவியைக் கொண்டு) எழுதி வைக்கும்படிச் செய்கிறார்'' என்று அ(ந்நிராகரிப்ப)வர்கள் கூறுகின்றனர்

[6] (அதற்கு நபியே!) கூறுவீராக: ‘‘ (அவ்வாறல்ல.) வானங்களிலும், பூமியிலுமுள்ள ரகசியங்களை அறிந்தவன் எவனோ அவனே இதை இறக்கிவைத்தான். (நீங்கள் மனம் வருந்தி அவனளவில் திரும்பினால்) நிச்சயமாக அவன் (உங்கள் குற்றங்களை) மன்னிப்பவனாகவும் மகா கருணையுடையவனாகவும் இருக்கிறான்.’‘

[7] (பின்னும்) அவர்கள் கூறுகின்றனர்: ‘‘ இந்தத் தூதருக்கென்ன (நேர்ந்தது)? அவர் (நம்மைப் போலவே) உணவு உண்ணுகிறார்; கடைகளுக்கும் செல்கிறார். (அவர் இறைவனுடைய தூதராக இருந்தால்) அவருக்காக ஒரு வானவர் இறக்கிவைக்கப்பட்டிருக்க வேண்டாமா? அவ்வாறாயின், அவர் அவருடன் இருந்துகொண்டு அச்சமூட்டி எச்சரிக்கை செய்து கொண்டிருப்பாரே

[8] அல்லது அவருக்கு ஒரு புதையல் கொடுக்கப்பட வேண்டாமா? அல்லது அவர் புசிப்பதற்கு வேண்டிய ஒரு சோலை அவருக்கு இருக்க வேண்டாமா? (என்று கூறுகின்றனர்.) இவ்வக்கிரமக்காரர்கள் (நம்பிக்கையாளர்களை நோக்கி) நீங்கள் சூனியம் செய்கின்ற ஒரு மனிதரையே பின்பற்றுகிறீர்கள்'' என்றும் கூறுகின்றனர்

[9] ஆகவே, (நபியே!) உம்மைப் பற்றி இவ்வக்கிரமக்காரர்கள் என்னென்ன வர்ணிப்புகள் கூறுகிறார்கள் என்பதை கவனித்துப் பார்ப்பீராக. ஆகவே, இவர்கள் (முற்றிலும்) வழிகெட்டு விட்டார்கள்; நேரான வழியை அடைய இவர்களால் முடியாது

[10] (நபியே! உமது இறைவனாகிய) அவன் மிக்க பாக்கியமுடையவன். அவன் நாடினால் (இந்நிராகரிப்பவர்கள் கோரும்) இவற்றைச் சொந்தமாக்கி மிக்க மேலான சொர்க்கங்களை உமக்குத் தரக்கூடியவன். அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அதில் உமக்குப் பல மாட மாளிகைகளையும் அமைத்து விடுவான்

[11] உண்மையில் இவர்கள் விசாரணைக் காலத்தையே பொய்யாக்குகின்றனர். எவர்கள் விசாரணைக் காலத்தைப் பொய்யாக்குகிறார்களோ அவர்களுக்கு கடுமையாக பற்றி எரியும் நரகத்தைத்தான் நாம் தயார்படுத்தி வைத்திருக்கிறோம்

[12] அது இவர்களைக் கண்ட மாத்திரத்தில் சப்தமிட்டு ஆர்ப்பரிப்பதை இவர்கள் வெகு தூரத்திலிருந்தே செவிமடுத்துக் கொள்வார்கள்

[13] அவர்க(ளின் கை கால்க)ளைக் கட்டி, அதில் மிக்க நெருக்கடியான ஓரிடத்தில் எறியப்பட்டால் (துன்பத்தைத் தாங்க முடியாமல் மரணத்தைத் தரக்கூடிய) அழிவையே அவர்கள் கேட்பார்கள்

[14] (ஆகவே, அந்நேரத்தில் அவர்களை நோக்கி,) ‘‘ இன்றைய தினம் நீங்கள் ஓர் அழிவை மாத்திரம் கேட்காதீர்கள். பல அழிவுகளை கேட்டுக் கொள்ளுங்கள்'' (என்று கூறப்படும்)

[15] (நபியே! அவர்களை நோக்கி) நீர் கேட்பீராக: ‘‘ அந்த நரகம் மேலா? அல்லது பரிசுத்தவான்களுக்கு வாக்களிக்கப்பட்ட நிலையான சொர்க்கம் மேலா? அது அவர்களுக்கு (நற்)கூலியாகவும், அவர்கள் சேருமிடமாகவும் இருக்கிறது

[16] ‘‘ அதில் அவர்கள் விரும்பியதெல்லாம் அவர்களுக்குக் கிடைக்கும். (அதில்) அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.'' (நபியே!) இது உமது இறைவன் மீது (அவனால்) வாக்களிக்கப்பட்ட கடமையாக இருக்கிறது

[17] (இணைவைத்து வணங்கிய) அவர்களையும், அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களையும் (விசாரணைக்காக) ஒன்று சேர்க்கும் நாளில், ‘‘ என் இவ்வடியார்களை நீங்கள் வழி கெடுத்தீர்களா? அல்லது அவர்கள் தாமாகவே வழி தவறி சென்று விட்டனரா'' என்று (இறைவன்) கேட்பான்

[18] அதற்கு அவை (இறைவனை நோக்கி) ‘‘ நீ மிகப் பரிசுத்தமானவன். உன்னைத் தவிர (மற்றெவரையும்) நாங்கள் எங்களுக்கு பாதுகாவலர்களாக எடுத்துக்கொள்வது எங்களுக்குத் தகுதியல்ல. எனினும், நீதான் அவர்களுக்கும் அவர்களுடைய மூதாதைகளுக்கும் சுகபோகத்தைக் கொடுத்தாய். அதனால் அவர்கள் (உன்னை) நினைப்பதை(யும் உனது அறிவுரையையும்) மறந்து (பாவங்களில் மூழ்கி) அழிந்துபோகும் மக்களாகி விட்டார்கள்'' என்று அவை கூறும்

[19] (ஆகவே, அந்த நிராகரிப்பவர்களை நோக்கி ‘‘ உங்களை வழி கெடுத்தவை இவைதான் என்று) நீங்கள் கூறியதை இவையே பொய்யாக்கி விட்டன. ஆதலால், (நம் வேதனையைத்) தட்டிக் கழிக்கவும் உங்களால் முடியாது. (இவற்றின்) உதவியைப் பெற்றுக் கொள்ளவும் உங்களால் முடியாது.. ஆகவே, உங்களில் எவன் அநியாயம் செய்து கொண்டிருந்தானோ அவன் பெரும் வேதனையைச் சுவைக்கும்படி நிச்சயமாக நாம் செய்வோம்'' (என்று கூறுவோம்)

[20] (நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிவைத்த நம் தூதர்களெல்லாம் நிச்சயமாக (உம்மைப் போல்) உணவு உண்பவர்களாகவும், கடைகளுக்குச் செல்பவர்களாகவும் இருந்தார்கள். எனினும், உங்களில் சிலரை சிலருக்குச் சோதனையாக ஆக்கி வைத்தோம். ஆகவே, (நம்பிக்கையாளர்களே! இந்நிராகரிப்பவர்கள் உங்களை துன்புறுத்துவதை) நீங்களும் சகித்துக் கொண்டிருங்கள். (நபியே!) உமது இறைவன் (அனைத்தையும்) உற்று நோக்கியவனாகவே இருக்கிறான்

[21] (மறுமை நாளில்) நம்மைச் சந்திப்பதை எவர்கள் நம்பவில்லையோ அவர்கள், ‘‘ எங்கள் மீது (நேரடியாகவே) வானவர்கள் இறக்கப்பட வேண்டாமா? அல்லது (எங்கள் கண்களால்) எங்கள் இறைவனைப் பார்க்க வேண்டாமா?'' என்று கூறுகின்றனர். இவர்கள் தங்களை மிக மிகப் பெரிதாக எண்ணிக்கொண்டு அளவு கடந்து (பெரும் பாவத்தில் சென்று) விட்டனர்

[22] (அவர்கள் விரும்பியவாறு) வானவர்களை அவர்கள் காணும் நாளில், இக்குற்றவாளிகளை நோக்கி ‘‘ இன்றைய தினம் (உங்களுக்கு அழிவைத் தவிர) வேறு ஒரு நல்ல செய்தியும் இல்லை'' என்று (அவ்வானவர்கள்) கூறுவார்கள். (அக்குற்றவாளிகளோ தங்களை அழிக்க வரும் அவ்வானவர்களைத்) ‘‘ தடுத்துக் கொள்ளுங்கள்; தடுத்துக் கொள்ளுங்கள்'' என்று சப்தமிடுவார்கள்

[23] (இம்மையில்) அவர்கள் செய்து கொண்டிருந்த காரியங்களை நாம் நோக்கினால் (அதில் ஒரு நன்மையும் இல்லாததனால்) பறக்கும் தூசிகளைப் போல் அவற்றை நாம் ஆக்கிவிடுவோம்

[24] அந்நாளில் (நம்பிக்கையாளர்களான) சொர்க்கவாசிகளோ, நல்ல தங்குமிடத்திலும் அழகான (இன்பமான) ஓய்வு பெறும் இடத்திலும் இருப்பார்கள்

[25] வானம் மேகங்களால் பிளக்கப்பட்டு அந்நாளில் வானவர்கள் கூட்டம் கூட்டமாக இறங்குவார்கள்

[26] அந்நாளில் உண்மையான ஆட்சி ரஹ்மான் ஒருவனுக்கே இருக்கும். நிராகரிப்பவர்களுக்கு அது மிக்க கடினமான நாளாகவும் இருக்கும்

[27] அந்நாளில் அநியாயக்காரன் தன் இரு கைகளையும் கடித்துக் கொண்டு ‘‘நம் தூதருடன் நானும் நேரான வழியைப் பின்பற்றிச் சென்றிருக்க வேண்டாமா?'' என்று கூறுவான்

[28] ‘‘என் துக்கமே! (பாவம் செய்யும்படித் தூண்டிய) இன்னவனை நான் (எனது) நண்பனாக ஆக்காமல் இருந்திருக்க வேண்டாமா

[29] நல்லுபதேசம் என்னிடம் வந்ததன் பின்னரும் அதிலிருந்து அவன் என்னைத் திருப்பி விட்டானே! அந்த ஷைத்தான் மனிதனுக்குப் பெரும் சதிகாரனாக இருந்தானே!'' (என்றும் புலம்புவான்)

[30] (அச்சமயம் நம்) தூதர் ‘‘என் இறைவனே! நிச்சயமாக என் இந்த மக்கள் இந்த குர்ஆனை முற்றிலும் வெறுத்து(த் தள்ளி) விட்டார்கள்'' என்று கூறுவார்

[31] இவ்வாறே ஒவ்வொரு நபிமாருக்கும் குற்றவாளிகளை நாம் எதிரிகளாக ஏற்படுத்தி இருந்தோம். (நபியே!) உமக்கு நேரான வழியை அறிவித்து, உதவி செய்ய உமது இறைவனே போதுமானவன்

[32] (நபியே!) எவர்கள் (உம்மை) நிராகரிக்கிறார்களோ அவர்கள் ‘‘ இந்த வேதம் முழுவதும் ஒரே தடவையில் அவர்மீது இறக்கப்பட வேண்டாமா?'' என்று கூறுகின்றனர். (இதை) இவ்வாறு நாம் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி (வரிசை முறைப்படி) ஒழுங்குபடுத்துவதெல்லாம் உமது உள்ளத்தைத் திடப்படுத்துவதற்காகவே ஆகும்

[33] இந்நிராகரிப்பவர்கள் (எத்தகைய கேள்விகளைக் கேட்டு அதற்காக ஆச்சரியமான) எந்த உதாரணத்தை உங்களிடம் அவர்கள் கொண்டு வந்த போதிலும் (அதைவிட) உண்மையான விஷயத்தையும், அழகான வியாக்கியானத்தையும் (விவரத்தையும்) நாம் உங்களுக்கு கூறாமல் இருக்கவில்லை

[34] இவர்கள்தான் நரகத்திற்கு முகங்குப்புற இழுத்துச் செல்லப்படுபவர்கள். இவர்கள்தான் மகாகெட்ட இடத்தில் தங்குபவர்களும் வழி தவறியவர்களும் ஆவார்கள்

[35] (இதற்கு முன்னர்) நிச்சயமாக நாம் மூஸாவுக்கு(த் ‘தவ்றாத்' என்னும்) வேதத்தைக் கொடுத்திருந்தோம். அவருடைய சகோதரர் ஹாரூனை அவருக்கு மந்திரியாகவும் ஆக்கினோம்

[36] அவ்விருவரையும் நோக்கி, ‘‘நம் அத்தாட்சிகளைப் பொய்யாக்கிய மக்களிடம் நீங்கள் இருவரும் செல்லுங்கள்'' எனக் கூறினோம். (அவ்வாறு அவர்கள் சென்று அவர்களுக்குக் கூறியதை அந்த மக்கள் நிராகரித்து விட்டதனால்) நாம் அவர்களை அடியோடு அழித்துவிட்டோம்

[37] நூஹ்வுடைய மக்கள் (நம்) தூதர்களைப் பொய்யாக்கிய சமயத்தில் அவர்களையும் மூழ்கடித்து, அவர்களை மனிதர்கள் அனைவருக்கும் ஓர் அத்தாட்சியாக ஆக்கினோம். இத்தகைய அநியாயக்காரர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையையே நாம் தயார்படுத்தி வைத்திருக்கிறோம்

[38] ஆது, ஸமூது மக்களையும், றஸ் (அகழ்) வாசிகளையும், இவர்களுக்கிடையில் வசித்த இன்னும் பல வகுப்பினரையும் (நாம் அழித்திருக்கிறோம்)

[39] (அவர்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு அழிந்துபோன முன்னிருந்தவர்களின் சரித்திரங்களை) அவர்கள் அனைவருக்கும் நாம் பல உதாரணங்களாகக் கூறினோம். (அவர்கள் அவற்றை நிராகரித்து விடவே,) அவர்கள் அனைவரையும் நாம் அடியோடு அழித்து விட்டோம்

[40] நிச்சயமாக (மக்காவிலுள்ள நிராகரிப்பாளர்கள்) கெட்ட (கல்) மாரி பொழிந்த ஊரின் சமீபமாக (அடிக்கடி)ச் சென்றே இருக்கின்றனர். அதை இவர்கள் பார்க்கவில்லையா? உண்மையில் இவர்கள் (மறுமையில்) உயிர் கொடுத்து எழுப்பப்படுவதை நம்பவேயில்லை

[41] (நபியே!) இவர்கள் உம்மைக் கண்டால் உம்மைப் பற்றி ‘‘இவரையா அல்லாஹ் (தன்) தூதராக அனுப்பி வைத்தான்?'' என்று பரிகாசமாகக் கூறுகின்றனர்

[42] ‘‘நாம் உறுதியாக இல்லையென்றால், நம் தெய்வங்களை விட்டும் நம்மை இவர் வழிகெடுத்தே இருப்பார்'' (என்றும் கூறுகின்றனர். மறுமையில்) அவர்கள் வேதனையைத் தங்கள் கண்ணால் காணும் நேரத்தில் வழி கெட்டவர்கள் யார் என்பதை நன்கறிந்து கொள்வார்கள்

[43] (நபியே!) எவன் தன் சரீர இச்சையை(த் தான் பின்பற்றும்) தன் தெய்வமாக எடுத்துக் கொண்டானோ அவனை நீர் பார்த்தீரா? (அவன் வழி தவறாது) நீர் அவனுக்குப் பாதுகாப்பாளராக இருப்பீரா

[44] அவர்களில் பெரும்பாலானவர்கள் (உமது வார்த்தைகளைக் காதால்) கேட்கிறார்கள் என்றோ அல்லது அதை(த் தங்கள் மனதால்) உணர்ந்து பார்க்கிறார்கள் என்றோ நீங்கள் எண்ணிக் கொண்டீரா? அன்று! அவர்கள் மிருகங்களைப் போன்றவர்களே தவிர, வேறில்லை. மாறாக, (மிருகங்களை விட) மிகவும் வழிகெட்டவர்களாகவும் இருக்கின்றனர்

[45] (நபியே!) உமது இறைவன் நிழலை எவ்வாறு (குறைத்து, பின்பு அதை) நீட்டுகிறான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அவன் நாடியிருந்தால், அதை ஒரே நிலையில் வைத்திருக்க முடியும். சூரியனை நிழலுக்கு வழிகாட்டியாக நாம்தான் ஆக்கினோம்

[46] பின்னர் நாம்தான் அதை சிறுகச் சிறுகக் குறைத்து விடுகிறோம்

[47] அவன்தான் உங்களுக்கு இரவைப் போர்வையாகவும், தூக்கத்தை ஓய்வளிக்கக் கூடியதாகவும், பகலை (உங்கள்) நடமாட்டத்திற்காக (பிரகாசமாக)வும் ஆக்கினான்

[48] அவன்தான் மழைக்கு முன்னதாக (குளிர்ந்த) காற்றை நற்செய்தியாக அனுப்பி வைக்கிறான். (மனிதர்களே!) நாம்தான் மேகத்திலிருந்து பரிசுத்தமான நீரை பொழியச் செய்கிறோம்

[49] இறந்த பூமிக்கு அதைக்கொண்டு நாம் உயிர் கொடுத்து நம் படைப்புகளில் ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற உயிரினங்களுக்கும் பல மனிதர்களுக்கும் அதைப் புகட்டுகிறோம்

[50] அவர்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு இவ்விஷயத்தைப் பலவாறாக அவர்களுக்கு எடுத்துரைத்தோம். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் மிக்க நன்றி கெட்டவர்களாகவே இருக்கின்றனர்

[51] நாம் நாடியிருந்தால் ஒவ்வொரு ஊருக்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யக்கூடிய ஒவ்வொரு தூதரை (இன்றைய தினமும்) நாம் அனுப்பியே இருப்போம்

[52] ஆகவே, (நபியே!) நீர் இந்த நன்றி கெட்டவர்களுக்கு கட்டுப்படாதீர். இந்த குர்ஆனை (ஆதாரமாக) கொண்டு நீர் அவர்களிடத்தில் பெரும் போராக போராடுவீராக

[53] அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்திருக்கிறான். ஒன்று, மிக்க இன்பமும் மதுரமுமான தண்ணீர். மற்றொன்று, உப்பும் கசப்புமான தண்ணீர். (இவை ஒன்றோடொன்று கலந்து விடாதிருக்கும் பொருட்டு) இவ்விரண்டுக்கும் இடையில் திரையையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தி இருக்கிறான்

[54] அவன்தான் (ஒரு துளி) தண்ணீரிலிருந்து மனிதனை உற்பத்தி செய்கிறான். பின்னர், அவனுக்குச் சந்ததிகளையும் சம்பந்திகளையும் ஆக்குகிறான். (நபியே!) உமது இறைவன் (தான் விரும்பியவாறெல்லாம் செய்ய) ஆற்றலுடையவனாகவே இருக்கிறான்

[55] இவ்வாறிருந்தும் அவர்களோ தங்களுக்கு நன்மையும், தீமையும் செய்ய சக்தியற்றதை அல்லாஹ்வை அன்றி வணங்குகின்றனர். நிராகரிப்பவர்கள் தங்கள் இறைவனுக்கு விரோதமானவர்களாக இருக்கின்றனர்

[56] (நபியே!) நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே தவிர, உம்மை நாம் அனுப்பவில்லை

[57] (அவர்களை நோக்கி) ‘‘இதற்காக நான் உங்களிடம் ஒரு கூலியையும் கேட்கவில்லை. ஆயினும், எவன் தன் இறைவனின் வழியில் செல்ல விரும்புகிறானோ அவன் செல்வதை (நீங்கள் தடை செய்யாமல் இருப்பதை)யே (நான் உங்களிடம்) விரும்புகிறேன்'' என்று (நபியே!) கூறுவீராக

[58] மரணமற்ற என்றும் நிரந்தரமான அல்லாஹ்வையே நீர் நம்புவீராக. அவனுடைய புகழைக் கூறி அவனைத் துதி செய்து வருவீராக. அவன் தன் அடியார்களின் பாவங்களை அறிந்திருப்பதே போதுமானது. (அதற்குரிய தண்டனையை அவன் கொடுப்பான்)

[59] அவன் எத்தகையவனென்றால் வானங்களையும், பூமியையும், இவற்றுக்கு மத்தியில் உள்ளவற்றையும் ஆறு நாள்களில் படைத்தான். பின்னர், அவன் ‘அர்ஷின்' மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்து விட்டான். அவன்தான் ரஹ்மான் (-அளவற்ற அருளாளன்). இதைப் பற்றித் தெரிந்தவர்களைக் கேட்டறிந்து கொள்வீராக

[60] (ஆகவே,) அந்த ரஹ்மானைச் சிரம் பணிந்து வணங்குங்கள் என அவர்களுக்குக் கூறப்பட்டால், அவர்களுக்கு வெறுப்பு அதிகரித்து ‘‘ரஹ்மான் யார்? நீங்கள் கூறியவர்களுக்கெல்லாம் நாம் சிரம் பணிந்து வணங்குவதா?'' என்று கேட்கின்றனர்

[61] (அந்த ரஹ்மான்) மிக்க பாக்கியமுடையவன். அவன்தான் வானத்தில் நட்சத்திரங்களை அமைத்து, அதில் (சூரிய) ஒளியையும், பிரகாசம் தரக்கூடிய சந்திரனையும் அமைத்தான்

[62] அவன்தான் இரவையும், பகலையும் மாறி மாறி வரும்படி செய்திருக்கிறான். (இதைக் கொண்டு) எவர்கள் நல்லுணர்ச்சி பெற்று, அவனுக்கு நன்றி செலுத்த விரும்புகிறார்களோ அவர்களுக்காக (இதைக் கூறுகிறான்)

[63] ரஹ்மானுடைய அடியார்கள்: பூமியில் (அடக்கமாகவும்) பணிவாகவும் நடப்பார்கள். மூடர்கள் அவர்களுடன் தர்க்கிக்க முற்பட்டால் ‘ஸலாம்' கூறி (அவர்களை விட்டு விலகி) விடுவார்கள்

[64] அவர்கள் தங்கள் இறைவனை, நின்றவர்களாகவும் சிரம் பணிந்தவர்களாகவும் இரவெல்லாம் வணங்குவார்கள்

[65] அவர்கள் “எங்கள் இறைவனே! நரகத்தின் வேதனையை எங்களை விட்டு நீ தடுத்துக் கொள்வாயாக! ஏனென்றால், அதன் வேதனையானது நிச்சயமாக நிலையான துன்பமாகும்'' என்று பிரார்த்தனை செய்வார்கள்

[66] ‘‘ சிறிது நேரமோ அல்லது எப்பொழுதுமோ தங்குவதற்கும் அது மிகக் கெட்ட இடமாகும் (ஆகவே, அதில் இருந்து எங்களை நீ பாதுகாத்துக்கொள்'' என்று பிரார்த்திப்பார்கள்)

[67] அவர்கள் தானம் கொடுத்தால் அளவு கடந்தும் கொடுத்துவிட மாட்டார்கள்; கஞ்சத்தனமும் செய்யமாட்டார்கள். இதற்கு மத்திய தரத்தில் கொடுப்பார்கள்

[68] அவர்கள் அல்லாஹ்வுடன் வேறொரு கடவுளை அழைக்க மாட்டார்கள். (கொலை செய்யக் கூடாதென்று) அல்லாஹ் தடுத்திருக்கும் எம்மனிதனையும் அவர்கள் நியாயமின்றிக் கொலை செய்ய மாட்டார்கள்; விபசாரமும் செய்ய மாட்டார்கள். ஆகவே, எவனேனும் இத்தகைய தீய காரியங்களைச் செய்ய முற்பட்டால், அவன் (அதற்குரிய) தண்டனையை அடைய வேண்டியதுதான்

[69] மறுமை நாளிலோ அவனுடைய வேதனை இரட்டிப்பாக ஆக்கப்பட்டு இழிவுபட்டவனாக அந்த வேதனையில் என்றென்றும் தங்கிவிடுவான்

[70] ஆயினும், (அவர்களில்) எவர்கள் பாவத்திலிருந்து விலகி (மன்னிப்புக் கோரி) நம்பிக்கைகொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ, அத்தகையவர்கள் (முன்னர் செய்துவிட்ட) பாவங்களை அல்லாஹ் (மன்னிப்பது மட்டுமல்ல; அவற்றை) நன்மைகளாகவும் மாற்றிவிடுகிறான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் மகா கருணையுடையவனாகவும் இருக்கிறான்

[71] ஆகவே, எவர்கள் கைசேதப்பட்டு (பாவத்திலிருந்து) விலகி மன்னிப்புக் கோருவதுடன், நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்கள், நிச்சயமாக முற்றிலும் அல்லாஹ்விடமே திரும்பிவிடுகின்றனர்

[72] இன்னும், எவர்கள் பொய் சாட்சி சொல்லாமலும் (வீணான காரியம் நடைபெறும் இடத்திற்குச் செல்லாமலும்) ஒருக்கால் (அத்தகைய இடத்திற்குச்) செல்லும்படி ஏற்பட்டு விட்டபோதிலும் (அதில் சம்பந்தப்படாது) கண்ணியமான முறையில் (அதைக் கடந்து) சென்று விடுகிறார்களோ அவர்களும்

[73] இன்னும் எவர்கள் தங்கள் இறைவனின் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் குருடர்களைப் போலும் செவிடர்களைப் போலும் அதன் மீது (அடித்து) விழாமல்; (அதை முற்றிலும் நன்குணர்ந்து கொள்வதுடன் அதன்படி செயல்படுகிறார்களோ அவர்களும்)

[74] மேலும், எவர்கள் ‘‘எங்கள் இறைவனே! எங்கள் மனைவிகளையும், எங்கள் மக்களையும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியாக்கி வைத்தருள்வாயாக! இறையச்சமுள்ளவர்களுக்கு வழிகாட்டியாகவும் எங்களை நீ ஆக்குவாயாக!'' என்று பிரார்த்திப்பார்களோ அவர்களும்

[75] ஆகிய இத்தகையவர்களுக்கு, அவர்கள் (பல நல்ல காரியங்களைச் செய்திருப்பதுடன் அவற்றைச் செய்யும்போது ஏற்பட்ட) சிரமங்களைச் சகித்துக் கொண்டதன் காரணமாக உயர்ந்த மாளிகைகள் (மறுமையில்) கொடுக்கப்படும். ‘‘ஸலாம் (உண்டாவதாக)'' என்று போற்றி அதில் அவர்கள் வரவேற்கப்படுவார்கள்

[76] என்றென்றும் அதில் தங்கிவிடுவார்கள். சிறிது நேரம் தங்குவதாயினும் சரி, என்றென்றும் தங்குவதாயினும் சரி, அது மிக்க (நல்ல) அழகான தங்குமிடம் ஆகும்

[77] (நபியே!) கூறுவீராக: ‘‘ நீங்கள் என் இறைவனை(க் கெஞ்சிப்) பிரார்த்தனை செய்யாவிடில் (அதற்காக) அவன் உங்களைப் பொருட்படுத்தமாட்டான். ஏனென்றால், நீங்கள் (அவனுடைய வசனங்களை) நிச்சயமாக பொய்யாக்கிக் கொண்டே இருக்கிறீர்கள். ஆகவே, அதன் வேதனை (உங்களைக்) கண்டிப்பாகப் பிடித்தே தீரும்

அஷ்ஷுஅரா

Surah 26

[1] தா ஸீம் மீம். (நபியே!) இவை தெளிவான இவ்வேதத்தின் வசனங்களாகும்

[2] தா ஸீம் மீம். (நபியே!) இவை தெளிவான இவ்வேதத்தின் வசனங்களாகும்

[3] (நபியே!) அவர்கள் (உம்மை) நம்பிக்கை கொள்ளாததன் காரணமாக (துக்கத்தால்) நீங்கள் தற்கொலை செய்து கொள்வீர் போலும்

[4] நாம் விரும்பினால் அவர்களுடைய கழுத்துகள் பணிந்து குனிந்து வரும்படி (வேதனை) செய்யக்கூடிய அத்தாட்சிகளை வானத்திலிருந்து அவர்கள் மீது நாம் இறக்கியிருப்போம்

[5] ரஹ்மானிடமிருந்து புதிதான ஒரு நல்லுபதேசம் வரும்போதெல்லாம் அதை அவர்கள் (நிராகரித்து) புறக்கணிக்காமல் இருப்பதில்லை

[6] (ஆகவே, இதையும்) நிச்சயமாக அவர்கள் பொய்யாக்குகின்றனர். எனினும், அவர்கள் எதைப் (பொய்யாக்கிப்) பரிகசித்துக் கொண்டிருக்கிறார்களோ அதன் (உண்மை) செய்திகள் நிச்சயமாக அவர்களிடம் வந்தே தீரும்

[7] அவர்கள் பூமியைப் பார்க்கவில்லையா? அதில் ஒவ்வொரு வகையிலும் (பயனளிக்கக் கூடிய) மேலான எத்தனையோ புற்பூண்டுகளை ஜோடி ஜோடியாகவே நாம் முளைப்பித்து இருக்கிறோம்

[8] நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை

[9] (நபியே!) உமது இறைவன் நிச்சயமாக (அனைவரையும்) மிகைத்தவன்,மகா கருணையுடையவன் ஆவான்

[10] (நபியே!) உமது இறைவன் மூஸாவை அழைத்து ‘‘ நீர் அநியாயக்காரர்களான ஃபிர்அவ்னுடைய மக்களிடம் செல்வீராக'' எனக் கூறியதை நீர் கவனித்துப் பார்ப்பீராக

[11] ‘‘ அவர்கள் (எனக்குப்) பயப்பட மாட்டார்களா?'' (என்று உமது இறைவன் கேட்டான்)

[12] அதற்கு அவர் ‘‘ என் இறைவனே! அவர்கள் என்னைப் பொய்யாக்கி விடுவார்கள் என நான் பயப்படுகிறேன்'' என்றார்

[13] இன்னும், “(அவ்வாறு அவர்கள் பொய்யாக்கினால்) என் மனமுடைந்து விடும். (அத்துடன் எனக்குக் கோனல் இருப்பதால்) என் நாவால் (சரியாகப்) பேசமுடியாது. ஆதலால் (என்னுடன்) வருமாறு ஹாரூனுக்கு நீ அறிவிப்பாயாக

[14] மேலும், என் மீது அவர்களுக்கு ஒரு குற்றச்சாட்டுதலும் இருக்கிறது. அதற்காக அவர்கள் என்னைக் கொலை செய்து விடுவார்கள் என நான் பயப்படுகிறேன்'' (என்றும் கூறினார்)

[15] அதற்கு (இறைவன்) கூறியதாவது: ‘‘ அவ்வாறல்ல (பயப்படாதீர்; ஹாரூனையும் அழைத்துக் கொண்டு) நீங்கள் இருவரும் என் அத்தாட்சிகளை (எடுத்து)க் கொண்டு செல்லுங்கள். நிச்சயமாக நான் உங்களுடன் இருந்து (அனைத்தையும்) கேட்டுக் கொண்டிருப்பேன்

[16] ஆகவே, நீங்களிருவரும் ஃபிர்அவ்னிடம் சென்று, ‘‘ நிச்சயமாக நாங்கள் உலகத்தார் அனைவரையும் படைத்து பரிபாலிப்பவனின் தூதர்களாவோம்

[17] ஆகவே, ‘‘ இஸ்ராயீலின் சந்ததிகளை நீ எங்களுடன் அனுப்பிவிடு'' எனக் கூறுங்கள்! (என்பதாகவும் கட்டளையிட்டான்)

[18] (அவ்வாறே அவர்கள் ஃபிர்அவ்னிடம் சென்று கூறவே) அதற்கவன் (மூஸாவை நோக்கி) “நாங்கள் உம்மைக் குழந்தையாக எடுத்துக்கொண்டு வளர்க்கவில்லையா? நீர் (உமது வாலிபத்தை அடையும் வரை) பல வருடங்கள் நம்மிடம் வாழ்ந்திருந்தீர்

[19] நீர் செய்(யத் தகா)த (ஒரு) காரியத்தையும் செய்தீர்! (அதை மன்னித்திருந்தும்) நீர் நன்றி கெட்டவராகவே இருக்கிறீர்'' என்றான்

[20] அதற்கு மூஸா கூறினார்: ‘‘ நான் அறியாதவனாக இருந்த நிலைமையில் அதை நான் செய்தேன்

[21] ஆதலால் நான் உங்களுக்குப் பயந்து உங்களை விட்டும் ஓடிவிட்டேன். எனினும், என் இறைவன் எனக்கு ஞானத்தைக் கொடுத்துத் தன் தூதராகவும் என்னை ஆக்கினான்

[22] ஆகவே, நீ இஸ்ராயீலின் சந்ததிகளை அடிமையாக வைத்துக் கொண்டிருக்கும் நிலைமையில், இது நீ எனக்குச் சொல்லி காண்பிக்கக் கூடிய ஒரு நன்றியாகுமா?'' (இவ்வாறு மூஸா கூறினார்)

[23] ‘‘ உலகத்தாரின் இறைவன் யார்?'' என ஃபிர்அவ்ன் கேட்டான்

[24] அதற்கு (மூஸா) ‘‘ வானங்கள், பூமி இன்னும் இவற்றுக்கு மத்தியில் உள்ளவற்றின் இறைவன்தான் (உலகத்தாரின் இறைவனும் ஆவான்). (இவ்வுண்மையை) நீங்கள் நம்பிக்கை கொள்பவர்களாக இருந்தால் (நம்பிக்கை கொள்ளுங்கள்)'' என்று கூறினார்

[25] அதற்கவன், தன்னைச் சூழ இருந்தவர்களை நோக்கி ‘‘ நீங்கள் இதைச் செவியுற வில்லையா?'' என்று கூறினான்

[26] அதற்கவர் ‘‘ (அவன்தான்) உங்கள் இறைவனும் (உங்களுக்கு) முன் சென்று போன உங்கள் மூதாதைகளின் இறைவனும் ஆவான்'' என்று கூறினார்

[27] அதற்கு (ஃபிர்அவ்ன் அவர்களை நோக்கி) ‘‘ உங்களிடம் அனுப்பப்பட்ட(தாகக் கூறும்) இந்தத் தூதர் நிச்சயமாக சுத்தப் பைத்தியக்காரர்'' என்று சொன்னான்

[28] அதற்கு (மூஸா) ‘‘ கீழ் நாடு மேல் நாடு இன்னும் இதற்கு மத்தியிலுள்ள தேசங்களின் இறைவனும் (அவன்தான்). நீங்கள் அறிவுடையவர்களாக இருந்தால் (இதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்)'' என்று கூறினார்

[29] அதற்கவன் ‘‘ என்னைத் தவிர (மற்றெதனையும்) நீர் கடவுளாக எடுத்துக் கொண்டால் நிச்சயமாக நான் உம்மை சிறைப்பட்டோரில் ஆக்கிவிடுவேன்'' என்று கூறினான்

[30] அதற்கவர் ‘‘ தெளிவானதொரு அத்தாட்சியை நான் உன்னிடம் கொண்டு வந்த போதிலுமா?'' என்று கேட்டார்

[31] அதற்கவன் ‘‘ நீர் சொல்வது உண்மையானால், அதைக் கொண்டு வருவீராக'' என்று கூறினான்

[32] ஆகவே, மூஸா தன் தடியை எறிந்தார். உடனே அது தெளிவான பெரியதொரு பாம்பாகி விட்டது

[33] மேலும், அவர் தன் கையை(ச் சட்டைப் பையில்) இட்டு வெளியில் எடுத்தார். உடனே அது பார்ப்பவர்களுக்கு(க் கண்ணைக் கூசச்செய்யும் பிரகாசமுடைய) வெண்மையாகத் தோன்றியது

[34] (இதைக் கண்ணுற்ற ஃபிர்அவ்ன்) தன்னைச் சூழ இருந்த பிரதானிகளை நோக்கி, ‘‘நிச்சயமாக இவர் தேர்ச்சிபெற்ற சூனியக்காரராக இருக்கிறார்

[35] இவர் தன் சூனியத்தால் உங்கள் ஊரை விட்டும் உங்களைத் துரத்திவிட எண்ணுகிறார். ஆகவே, இதைப்பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்'' என்று கேட்டான்

[36] அதற்கவர்கள், ‘‘ அவருக்கும் அவருடைய சகோதரருக்கும் ஒரு தவணை அளித்து, துப்பறிபவர்களைப் பல ஊர்களுக்கும் அனுப்பிவை

[37] தேர்ச்சிபெற்ற சூனியக்காரர்கள் அனைவரையும் அவர்கள் (தேடிப் பிடித்து) உம்மிடம் அழைத்து வருவார்கள்'' என்று கூறினார்கள்

[38] (அவ்வாறே துப்பறிபவர்கள் பல ஊர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டு) குறித்த நாளில், குறித்த நேரத்தில் (குறித்த இடத்தில்) சூனியக்காரர்கள் அனைவரும் ஒன்று சேர்க்கப்பட்டார்கள்

[39] எல்லா மனிதர்களுக்கும், ‘‘ (குறித்த காலத்தில்) நீங்கள் வந்து சேருவீர்களா?'' என்று பறைசாற்றப்பட்டது

[40] (இவ்வாறு அங்கு கூடும்) சூனியக்காரர்கள் வெற்றி கொண்டால் (அவர்களுடைய மார்க்கத்தையே) நாம் பின்பற்றவும் கூடும் (என்றும் பறை சாற்றப்பட்டது)

[41] சூனியக்காரர்கள் அனைவரும் வந்தபொழுது அவர்கள் ஃபிர்அவ்னை நோக்கி ‘‘மெய்யாகவே நாங்கள் வெற்றிபெற்றால் அதற்குரிய கூலி எங்களுக்கு உண்டா?'' என்று கேட்டார்கள்

[42] அதற்கவன் ‘‘ ஆம் (கூலி உண்டு.... கூலி மட்டுமா?) அந்நேரத்தில் நீங்கள் (நம் சபையிலும் வீற்றிருக்கக்கூடிய) நமக்கு நெருங்கிய பிரமுகர்களாகவும் ஆகிவிடுவீர்கள்'' என்று கூறினான்

[43] அவர்களை நோக்கி மூஸா ‘‘ நீங்கள் (சூனியம் செய்ய) எறியக்கூடியதை எறியுங்கள்'' எனக் கூறினார்

[44] ஆகவே, அவர்கள் தங்கள் தடிகளையும், கயிறுகளையும் எறிந்து ‘‘ஃபிர்அவ்னுடைய கௌரவத்தின் மீது சத்தியம் நிச்சயமாக நாங்கள்தான் வென்றுவிட்டோம்'' என்று கூறினார்கள்

[45] பிறகு மூஸாவும் தன் தடியை எறிந்தார். அது (பெரியதொரு பாம்பாகி,) அவர்கள் கற்பனை செய்திருந்த சூனியங்கள் அனைத்தையும் விழுங்க ஆரம்பித்து விட்டது

[46] இதைக் கண்ணுற்ற சூனியக்காரர்கள் அனைவரும் விழுந்து சிரம் பணிந்து

[47] ‘‘ உலகத்தார் அனைவரின் இறைவனையே நாங்கள் நம்பிக்கை கொண்டோம்

[48] அவன்(தான்,) மூஸா, ஹாரூனுடைய இறைவனுமாவான்'' என்று கூறினார்கள்

[49] அதற்கு (ஃபிர்அவ்ன்), ‘‘ நான் உங்களுக்கு அனுமதி அளிப்பதற்கு முன்னதாகவே நீங்கள் அவரை நம்பிக்கை கொண்டு விட்டீர்கள். நிச்சயமாக உங்களுக்கு சூனியம் கற்றுக்கொடுத்த உங்கள் குரு அவர்தான். (இதன் பலனை) அதிசீக்கிரத்தில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். உங்களை மாறு கை, மாறு கால் வெட்டி உங்கள் அனைவரையும் சிலுவையில் அறைந்து விடுவேன்'' என்று கூறினான்

[50] அதற்கவர்கள் கூறினார்கள்: ‘‘ (அதனால் எங்களுக்கு) ஒரு பாதகமுமில்லை. (ஏனென்றால்) நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவன் பக்கமே திரும்பச் சென்று விடுவோம்

[51] நிச்சயமாக (மூஸாவை) நம்பிக்கை கொண்டவர்களில் நாங்கள் முதன்மையானவர்களாக இருக்கும் காரணத்தினால், எங்கள் இறைவன் எங்கள் குற்றங்களை மன்னித்துவிடுவான் என்று நிச்சயமாக நாங்கள் நம்புகிறோம்

[52] பின்னர், மூஸாவுக்கு நாம் வஹ்யி அறிவித்ததாவது: ‘‘ (இஸ்ராயீலின் சந்ததிகளாகிய) என் அடியார்களை அழைத்துக்கொண்டு நீங்கள் இரவோடு இரவாக சென்றுவிடுங்கள். எனினும், நிச்சயமாக நீங்கள் (அவர்களால்) பின்தொடரப்படுவீர்கள்'' (என்றோம்)

[53] (அவ்வாறு அவர்கள் சென்று விடவே அதை அறிந்த) ஃபிர்அவ்ன், பல ஊர்களுக்கும் (மக்களை அழைக்க) பறைசாற்றுபவர்களை அனுப்பிவைத்து

[54] ‘‘ நிச்சயமாக (இஸ்ராயீலின் சந்ததிகளாகிய) இவர்கள் வெகு சொற்ப தொகையினரே. (அவ்வாறிருந்தும்)

[55] நிச்சயமாக அவர்கள் நம்மை கோபத்திற்குள்ளாக்கி விட்டனர்

[56] நிச்சயமாக நாங்கள் பெருந்தொகையினர்; (அத்துடன்) மிக்க எச்சரிக்கை உடையவர்கள்'' (என்று கூறி, பல ஊரார்களையும் ஒன்று திரட்டிக்கொண்டு அவர்களைப் பின்தொடர்ந்து சென்றான்)

[57] (இவ்வாறு) அவர்களுடைய தோட்டங்களிலிருந்தும் துரவுகளிலிருந்தும் நாம் அவர்களை வெளியேற்றி விட்டோம்

[58] (இன்னும், அவர்களுடைய) பொக்கிஷங்களிலிருந்தும் மிக்க நேர்த்தியான வீடுகளிலிருந்தும் (அவர்களை வெளியேற்றினோம்)

[59] இவ்வாறு (அவர்களை வெளியேற்றிய பின்னர்) இஸ்ராயீலின் சந்ததிகளை அவற்றுக்குச் சொந்தக்காரர்களாகவும் ஆக்கிவிட்டோம்

[60] சூரிய உதய (நேர)த்தில் இவர்கள் அவர்களைப் பின் தொடர்ந்தனர்

[61] இவ்விரு கூட்டத்தினரும் ஒருவரையொருவர் கண்ட பொழுது ‘‘ நிச்சயமாக நாம் அகப்பட்டுக் கொண்டோம்'' என்று மூஸாவுடைய மக்கள் கூறினார்கள்

[62] அதற்கு (மூஸா) ‘‘ அவ்வாறல்ல. நிச்சயமாக என் இறைவன் என்னுடன் இருக்கிறான். (நாம் தப்பிக்கும்) வழியை நிச்சயமாக அவன் எனக்கு அறிவிப்பான்'' என்றார்

[63] ஆகவே, நாம் மூஸாவை நோக்கி ‘‘ நீர் உமது தடியினால் இந்தக் கடலை அடிப்பீராக'' என வஹ்யி அறிவித்தோம். (அவர் அடிக்கவே) அது (பல வழிகளாகப்) பிளந்துவிட்டது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலைகளைப்போல் இருந்தது

[64] (பின் சென்ற) மற்ற மக்களையும் அதை நெருங்கச் செய்தோம்

[65] மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் நாம் பாதுகாத்துக் கொண்டோம்

[66] பின்னர் (அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற) மற்ற அனைவரையும் மூழ்கடித்து விட்டோம்

[67] நிச்சயமாக இ(ச்சம்பவத்)தில் ஒரு பெரும் படிப்பினை இருந்தது. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் இதை நம்பவில்லை

[68] (நபியே!) நிச்சயமாக உமது இறைவன்தான் (அனைத்தையும்) மிகைத்தவன், மகா கருணையாளன் ஆவான்

[69] (நபியே!) அவர்களுக்கு இப்றாஹீமுடைய சரித்திரத்தையும் ஓதிக் காண்பிப்பீராக

[70] அவர், தன் தந்தையையும் தன் மக்களையும் நோக்கி ‘‘ நீங்கள் எதை வணங்குகிறீர்கள்?'' என்று கேட்டதற்கு

[71] அவர்கள் ‘‘ நாங்கள் இச்சிலைகளையே வணங்குகிறோம்; அவற்றை தொடர்ந்து ஆராதனை செய்து கொண்டிருக்கிறோம்'' என்றார்கள்

[72] அதற்கு (இப்றாஹீம் அவர்களை நோக்கி) ‘‘ அவற்றை நீங்கள் அழைத்தால் உங்களுக்கு செவி கொடுக்கின்றனவா

[73] அல்லது (அவற்றை நீங்கள் ஆராதனை செய்வதால்) உங்களுக்கு ஏதும் நன்மையோ (ஆராதனை செய்யாவிட்டால்) தீமையோ செய்கின்றனவா?'' எனக் கேட்டார்

[74] அதற்கவர்கள் ‘‘ இல்லை. எனினும் எங்கள் மூதாதைகள் இவ்வாறே (ஆராதனை) செய்து கொண்டிருக்க நாங்கள் கண்டோம் (ஆகவே, நாங்களும் அவற்றை ஆராதனை செய்கிறோம்)'' என்றார்கள்

[75] நீங்கள் எவற்றை வணங்கிக் கொண்டிருந்தீர்கள் என்பதை பார்த்தீர்களா? என (இப்றாஹீம்) கேட்டார்

[76] நீங்களும் உங்கள் முன்னோர்களான மூதாதையர்களும் (எவற்றை வணங்கிக் கொண்டிருந்தீர்கள் என்பதைப் பாருங்கள்)

[77] நிச்சயமாக இவை எனக்கு எதிரிகளே! எனினும், உலகத்தாரைப் படைத்து வளர்ப்பவனே எனது இறைவன்

[78] அவன்தான் என்னைப் படைத்தான். அவனே என்னை நேரான வழியில் நடத்துகிறான்

[79] அவனே எனக்குப் புசிக்கவும் குடிக்கவும் தருகிறான்

[80] நான் நோயுற்ற தருணத்தில் அவனே என்னை குணப்படுத்துகிறான்

[81] அவனே என்னை மரணிக்கச் செய்வான்; பின்னர் அவனே என்னை (மறுமையில்) உயிர்ப்பிப்பான்

[82] கூலி கொடுக்கும் (மறுமை) நாளில் என் குற்றங்களை மன்னிக்க அவனையே நான் நம்பியிருக்கிறேன்

[83] என் இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அருள் புரிந்து, நல்லவர்களுடன் என்னைச் சேர்த்து விடுவாயாக

[84] பிற்காலத்திலும் (உலக முடிவு நாள் வரை அனைவரும்) எனக்கு (அலைஹிஸ்ஸலாம்-அவர் மீது சாந்தி நிலவுக! என்று பிரார்த்திக்கக்கூடிய) நற்பெயரையும் சிறப்பையும் தந்தருள்வாயாக

[85] இன்ப சுகத்தையுடைய சொர்க்கத்தின் வாரிசுகளிலும் என்னை நீ ஆக்கிவைப்பாயாக

[86] என் தந்தையையும் நீ மன்னித்தருள்; நிச்சயமாக அவர் வழிதவறிவிட்டார்

[87] (உயிர் கொடுத்து) எழுப்பப்படும் (மறுமை) நாளில் நீ என்னை இழிவுக்குள்ளாக்காதே

[88] அந்நாளில், பொருளும் பிள்ளைகளும் ஒரு பயனுமளிக்கா

[89] ஆயினும், பரிசுத்த உள்ளத்துடன் (தன் இறைவனாகிய) அல்லாஹ்விடம் வருபவர்தான் (பயனடைவார்)

[90] இறையச்சம் உடையவர்(களுக்காக அவர்)கள் முன்பாக சொர்க்கம் அருகில் கொண்டு வரப்படும்

[91] வழிகெட்டவர்கள் முன்பாக நரகம் வெளிப்படுத்தப்படும்

[92] அவர்களை நோக்கி ‘‘ அல்லாஹ்வையன்றி நீங்கள் ஆராதனை செய்து கொண்டிருந்தவை எங்கே

[93] (இச்சமயம்) அவை உங்களுக்கு உதவி செய்யுமா? அல்லது தங்களையே பாதுகாத்துக் கொள்ளுமா?'' என்று கேட்கப்படும்

[94] (பின்னர்,) அவையும் (அவற்றை வணங்கி) வழி தவறியவர்களும் இப்லீஸுடைய ராணுவங்களும் ஆக இவர்கள் அனைவருமே முகங்குப்புற அ(ந்த நரகத்)தில் தள்ளப்படுவார்கள்

[95] (பின்னர்,) அவையும் (அவற்றை வணங்கி) வழி தவறியவர்களும் இப்லீஸுடைய ராணுவங்களும் ஆக இவர்கள் அனைவருமே முகங்குப்புற அ(ந்த நரகத்)தில் தள்ளப்படுவார்கள்

[96] அதில் அவர்கள் தங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு கூறுவார்கள்

[97] ‘‘ அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருந்தோம் (என்றும்)

[98] (தங்கள் தெய்வங்களை நோக்கி) ‘‘ உங்களை நாம் உலகத்தாரின் இறைவனுக்கு சமமாக்கி வைத்தோம்

[99] (பூசாரிகளை சுட்டிக் காண்பித்து இந்தக்) குற்றவாளிகளே தவிர (வேறு எவரும்) எங்களை வழி கெடுக்கவில்லை

[100] எங்களுக்குப் பரிந்து பேசுபவர்கள் (இன்று) யாருமில்லையே

[101] (எங்கள் மீது அனுதாபமுள்ள) ஒரு உண்மையான நண்பனுமில்லையே

[102] நாம் (உலகத்திற்குத்) திரும்பச் செல்லக்கூடுமாயின், நிச்சயமாக நாம் மெய்யான நம்பிக்கையாளர்களாகி விடுவோம்'' என்று புலம்புவார்கள்

[103] மெய்யாகவே இதில் ஒரு படிப்பினை இருக்கிறது. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் இதை நம்புவதில்லை

[104] (நபியே!) நிச்சயமாக உமது இறைவனே (அனைவரையும்) மிகைத்தவன், மகா கருணையுடையவன் ஆவான்

[105] நூஹ்வுடைய மக்கள் (நம்) தூதர்களைப் பொய்யாக்கினார்கள்

[106] அவர்களின் சகோதரர் நூஹ் அவர்களுக்கு கூறினார்: ‘‘ நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்படவேண்டாமா

[107] மெய்யாகவே நான் உங்களிடம் (இறைவனால்) அனுப்பப்பட்ட மிக்க நம்பிக்கையுள்ள ஒரு தூதனாவேன்

[108] ஆகவே, அல்லாஹ்வுக்குப் பயந்து நீங்கள் எனக்கு கட்டுப்பட்டு நடங்கள்

[109] (இதற்காக) நான் உங்களிடம் ஒரு கூலியையும் கேட்கவில்லை. என் கூலி உலகத்தாரின் இறைவனிடமே இருக்கின்றன

[110] ஆதலால், நீங்கள் (அந்த) அல்லாஹ்வுக்குப் பயந்து எனக்கு கட்டுப்பட்டு நடங்கள்'' (என்று கூறினார்)

[111] அதற்கவர்கள் ‘‘ உம்மை நாங்கள் நம்பிக்கை கொள்வதா? (எங்களுக்குக் கூலி வேலை செய்யும்) ஈனர்கள்தான் உம்மைப் பின்பற்றியிருக்கின்றனர்'' என்று கூறினார்கள்

[112] அதற்கு அவர், ‘‘ நான் அவர்கள் செய்து கொண்டிருக்கும் வேலை இன்னதென அறியமாட்டேன். (அதை விசாரிப்பதும் என் வேலையல்ல) என்றும்

[113] (இவற்றைப் பற்றி) அவர்களிடம் கணக்குக் கேட்பது என் இறைவன் மீதே கடமை. (என் மீதல்ல.) இவ்வளவு கூட நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா

[114] நம்பிக்கை கொண்டவர்களை (அவர்கள் ஏழைகள் என்பதற்காக) நான் விரட்டிவிட முடியாது

[115] பகிரங்கமாக நான் அனைவருக்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனே தவிர வேறில்லை'' என்று கூறினார்

[116] அதற்கவர்கள் ‘‘ நூஹே! நீர் இதை விட்டும் விலகிக் கொள்ளாவிடில் நிச்சயமாக நீர் கல்லெறிந்து கொல்லப்படுவீர்'' என்று கூறினார்கள்

[117] அதற்கவர், ‘‘ என் இறைவனே! என் (இந்த) மக்கள் நிச்சயமாக என்னைப் பொய்யாக்கி விட்டார்கள்

[118] ஆதலால், எனக்கும் அவர்களுக்குமிடையில் நீ ஒரு தீர்ப்பு செய்து, என்னையும் என்னுடனுள்ள நம்பிக்கை கொண்டவர்களையும் பாதுகாத்துக் கொள்வாயாக! என்று பிரார்த்தித்தார்

[119] ஆகவே, நாம் அவரையும் (நம்பிக்கை கொண்டு) அவருடன் இருந்தவர்களையும் (மற்ற உயிர்ப் பிராணிகளால்) நிறைந்திருந்த கப்பலில் ஏற்றி பாதுகாத்துக் கொண்டோம்

[120] இதன் பின்னர் (கப்பலில் ஏறாது) மீதமிருந்தவர்களை நாம் மூழ்கடித்து விட்டோம்

[121] நிச்சயமாக இதிலொரு படிப்பினையிருந்தும் அவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கைக் கொள்ளவில்லை

[122] (நபியே!) நிச்சயமாக உமது இறைவன்தான் (அவர்களை) மிகைத்தவன் மகா கருணையுடையவன்

[123] ‘‘ ஆது' மக்களும் (நம்) தூதர்களைப் பொய்யாக்கினார்கள்

[124] அவர்களுடைய சகோதரர் ‘ஹூது' அவர்களை நோக்கி ‘‘ நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்பட வேண்டாமா

[125] நிச்சயமாக நான் உங்களிடம் அனுப்பப்பட்ட நம்பிக்கையான ஒரு தூதனாவேன்

[126] ஆதலால், நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து எனக்கு கீழ்ப்படிந்து நடங்கள்

[127] இதற்காக நான் உங்களிடத்தில் ஒரு கூலியையும் கேட்கவில்லை. என் கூலி உலகத்தாரின் இறைவனிடமே இருக்கிறது

[128] உயர்ந்த இடங்களிலெல்லாம் (தூண்கள் போன்ற) ஞாபகச் சின்னங்களை நீங்கள் வீணாகக் கட்டுகிறீர்களே

[129] நீங்கள் (அழியாது) என்றென்றும் இருப்பவர்களைப் போல் (உங்கள் மாளிகைகளில் உயர்ந்த) வேலைப்பாடுகளையும் அமைக்கிறீர்கள்

[130] நீங்கள் (எவரையும்) பிடித்தால் (ஈவிரக்கமின்றி) மிகக் கொடுமையாக நடத்துகிறீர்கள்

[131] அல்லாஹ்வுக்குப் பயந்து எனக்கு கீழ்ப்படிந்து நடங்கள்

[132] உங்களுக்குத் தெரிந்திருக்கும் பல பொருள்களையும், எவன் உங்களுக்குக் கொடுத்து உதவி புரிந்தானோ அவனுக்கு நீங்கள் பயப்படுங்கள்

[133] சந்ததிகளையும், ஆடு, மாடு, ஒட்டகங்களையும் (கொடுத்து) அவனே உங்களுக்கு உதவி செய்திருக்கிறான்

[134] தோட்டங்களையும் நீர் ஊற்றுக்களையும் (அவனே உங்களுக்கு அளித்திருக்கிறான்)

[135] (அவனுக்கு மாறு செய்தால்) மகத்தானதொரு நாளின் வேதனை உங்களுக்கு நிச்சயமாக வருவதை(ப் பற்றி) நான் பயப்படுகிறேன்'' என்று கூறினார்

[136] அதற்கவர்கள் கூறினார்கள்: ‘‘ (ஹூதே!) நீங்கள் எங்களுக்கு நல்லுபதேசம் செய்வதும் நல்லுபதேசம் செய்யாதிருப்பதும் சமமே

[137] (பயமுறுத்த) இ(வ்வாறு கூறுவ)து முன்னுள்ளோரின் வழக்கமே தவிரவேறில்லை

[138] (நீங்கள் கூறுவதைப் போல) நாங்கள் வேதனைக்கு ஆளாக்கப்பட மாட்டோம்'' (என்று கூறினார்கள்)

[139] மேலும் அவர்கள் அவரைப் பொய்யாக்கினார்கள். ஆதலால், நாம் அவர்களை அழித்துவிட்டோம். நிச்சயமாக இதில் நல்லதோர் அத்தாட்சியிருந்தும் அவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை

[140] (நபியே!) நிச்சயமாக உமது இறைவன்தான் (அவர்களை) மிகைத்தவன், மகா கருணையுடையவன்

[141] ‘ஸமூது' மக்களும் (நம்) தூதர்களைப் பொய்யாக்கினார்கள்

[142] அவர்களுடைய சகோதரர் ஸாலிஹ் (நபி) அவர்களை நோக்கி ‘‘ நீங்கள் (பாவத்தை விட்டு விலகி) அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்ள வேண்டாமா

[143] நிச்சயமாக நான் உங்களிடம் அனுப்பப்பட்ட மிக்க நம்பிக்கையான ஒரு தூதனாவேன்

[144] ஆதலால், நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து எனக்கு கீழ்ப்படிந்து நடங்கள்

[145] இதற்காக நான் உங்களிடத்தில் ஒரு கூலியும் கேட்கவில்லை. என் கூலி உலகத்தாரின் இறைவனிடமே தவிர (வேறுயாரிடமும்) இல்லை

[146] இங்கு (உள்ள சுகபோகங்களில் என்றென்றுமே) அச்சமற்று (வாழ) விட்டு வைக்கப்படுவீர்களா

[147] (இங்குள்ள) தோட்டங்களிலும், நீர் ஊற்றுகளிலும்

[148] குலை குலையாகத் தொங்கும் பேரீச்சந் தோப்புகளிலும், விவசாயப் பண்ணைகளிலும் (விட்டுவைக்கப்படுவீர்களா)

[149] திறமைசாலிகளாக மலைகளைக் குடைந்து வீடுகளை அமைக்கிறீர்கள். (அதில் என்றென்றுமே தங்கியிருக்க நீங்கள் விட்டு வைக்கப்படுவீர்களா)

[150] ஆகவே, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி எனக்கு கீழ்ப்படிந்து நடங்கள்

[151] வரம்பு மீறுபவர்களின் கட்டளைக்கு நீங்கள் கீழ்ப்படியாதீர்கள்

[152] அவர்கள், பூமியில் விஷமம் செய்வார்கள்; நன்மை செய்ய மாட்டார்கள்'' என்று கூறினார்

[153] அதற்கவர்கள் (ஸாலிஹ் நபியை நோக்கி) கூறினர்: ‘‘ உம்மீது எவரோ சூனியம் செய்துவிட்டார்கள். (ஆதலால், உமது புத்தி தடுமாறிவிட்டது)

[154] நீர் நம்மைப் போன்ற ஒரு மனிதரே தவிர வேறில்லை. நீர் உண்மை சொல்பவராக இருந்தால் (நாம் விரும்பியவாறு) ஓர் அத்தாட்சியைக் கொண்டு வருவீராக'' (என்று கூறினார்கள்)

[155] அதற்கவர் ‘‘ (உங்களுக்கு அத்தாட்சியாக) இதோ ஒரு பெண் ஒட்டகம் (வந்து) இருக்கிறது. (நீங்கள் தண்ணீரருந்தும் இத்துரவில்) அது குடிப்பதற்கு ஒரு நாளும், நீங்கள் குடிப்பதற்கு ஒரு நாளும் குறிப்பிடப்படுகிறது

[156] மேலும், நீங்கள் அதற்கு ஒரு தீங்கும் செய்யாதீர்கள். அவ்வாறாயின் கடினமான ஒரு நாளின் வேதனை உங்களைப் பிடித்துக்கொள்ளும்'' என்று கூறினார்

[157] (இவ்வாறு கூறியிருந்தும்) அவர்கள் அதன் கால் நரம்பைத் தறித்து விட்டார்கள். (அதனால் வேதனை வருவதன் அறிகுறியைக் கண்டபொழுது) அவர்கள் துக்கத்தில் ஆழ்ந்துவிட்டார்கள்

[158] ஆகவே, அவர்களை வேதனை பிடித்துக்கொண்டது. நிச்சயமாக (அவர்களுக்கு) இதிலோர் அத்தாட்சி இருந்தது. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கை கொள்ளவேயில்லை

[159] (நபியே!) நிச்சயமாக உமது இறைவன்தான் (அனைவரையும்) மிகைத்தவன், மகா கருணையுடையவன்

[160] லூத்துடைய மக்களும் (நம்) தூதர்களைப் பொய்யாக்கினார்கள்

[161] அவர்களுடைய சகோதரர் லூத் அவர்களை நோக்கி ‘‘ நீங்கள் (பாவத்திலிருந்து விலகி) அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ள வேண்டாமா

[162] நிச்சயமாக நான் உங்களிடம் அனுப்பப்பட்ட நம்பிக்கையான ஒரு தூதனாக இருக்கிறேன்

[163] (ஆகவே) அல்லாஹ்வுக்குப் பயந்து எனக்கு கீழ்ப்படியுங்கள்

[164] இதற்காக நான் உங்களிடத்தில் ஒரு கூலியையும் கேட்கவில்லை. என் கூலி உலகத்தாரின் இறைவனிடமே தவிர (வேறுயாரிடமும்) இல்லை

[165] நீங்கள் (உங்கள் காம இச்சையைத் தணித்துக் கொள்ள) உலகத்தார்களில் ஆண்களிடமே செல்கிறீர்கள்

[166] உங்கள் இறைவன் உங்களுக்காகப் படைத்த உங்கள் மனைவிகளை நீங்கள் புறக்கணித்து விடுகிறீர்களே! நீங்கள் (அல்லாஹ்வின் இயற்கை முறையை) மீறிவிட்ட மக்கள் ஆவீர்கள்'' என்று கூறினார்

[167] அதற்கவர்கள் ‘‘ லூத்தே! (இவ்வாறு கூறுவதை விட்டு) நீர் விலகிக் கொள்ளாவிடில் நிச்சயமாக நீர் (நம் ஊரை விட்டுத்) துரத்தப்படுவீர்'' என்று கூறினார்கள்

[168] அதற்கவர் ‘‘ நிச்சயமாக நான் உங்கள் (இத்தீய) செயலை வெறுக்கிறேன்'' என்று கூறி

[169] ‘‘ என் இறைவனே! இவர்களின் (தீய) செயலிலிருந்து என்னையும், என் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்வாயாக'' (என்று பிரார்த்தித்தார்)

[170] ஆகவே, அவரையும் அவர் குடும்பத்தினர் அனைவரையும் நாம் பாதுகாத்துக் கொண்டோம்

[171] எனினும், (அவருடைய) ஒரு கிழ (மனை)வியைத் தவிர அவள் (லூத்துடன்) வராது பின் தங்கியவர்களுடன் தங்கி (அழிந்து) விட்டாள்

[172] பின்னர், நாம் மற்ற அனைவரையும் அழித்து விட்டோம்

[173] அவர்கள் மீது நாம் (கல்) மழையை பொழியச் செய்தோம். அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்ட(அ)வர்களின் (மீது பொழிந்த கல்) மழை மகா கெட்டது

[174] நிச்சயமாக இதிலோர் நல்ல அத்தாட்சியிருந்தது. எனினும், அவர்களில் பெரும்பாலான வர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை

[175] (நபியே!) நிச்சயமாக உமது இறைவன்தான் மிகைத்தவன், மகா கருணையுடையவன்

[176] (‘மத்யன்' என்னும் ஊரில்) சோலையில் வசித்திருந்தவர்களும் (நம்) தூதர்களைப் பொய்யாக்கினார்கள்

[177] ஷுஐப் (நபி) அவர்களை நோக்கி ‘‘ நீங்கள் (அல்லாஹ்வுக்கு அஞ்சி பாவத்திலிருந்து) விலகிக் கொள்ள வேண்டாமா

[178] நிச்சயமாக நான் உங்களிடம் அனுப்பப்பட்ட நம்பிக்கையுள்ள ஒரு தூதனாக இருக்கிறேன்

[179] ஆகவே, அல்லாஹ்வை அஞ்சி எனக்கு கீழ்ப்படியுங்கள்

[180] இதற்காக நான் உங்களிடம் ஒரு கூலியும் கேட்கவில்லை. என் கூலி உலகத்தார்களின் இறைவனிடமே தவிர (வேறெவரிடமும்) இல்லை.”

[181] அளவையை முழுமையாக அளந்து கொடுங்கள். நீங்கள் (மக்களுக்கு) நஷ்டமிழைப்பவர்களாக இருக்க வேண்டாம்

[182] சரியான தராசில் நிறுத்துக் கொடுங்கள்

[183] மனிதர்களுக்கு நிறுத்துக் கொடுக்க வேண்டிய அவர்களுடைய பொருள்களை நீங்கள் குறைத்து விடாதீர்கள். நீங்கள் பூமியில் கடுமையாக விஷமம் (-கலகம்) செய்து கொண்டு அலையாதீர்கள்

[184] உங்களையும் உங்களுக்கு முன்னுள்ளோரையும் எவன் படைத்தானோ அவனுக்கு நீங்கள் பயப்படுங்கள்'' என்றும் கூறினார்

[185] அதற்கவர்கள் கூறினர்: ‘‘ நீர் (எவராலோ) பெரும் சூனியம் செய்யப்பட்டு விட்டீர்

[186] நீர் நம்மைப்போன்ற மனிதரே தவிர வேறில்லை. நிச்சயமாக நாம் உம்மைப் பொய்யர்களில் ஒருவராகவே மதிக்கிறோம்

[187] நீர் உண்மை சொல்பவராக இருந்தால் வானத்(தைப் பல துண்டாக்கி, அ)திலிருந்து சில துண்டுகளை நம்மீது விழவையுங்கள்'' (என்று கூறினார்கள்)

[188] அதற்கவர் ‘‘ நீங்கள் செய்து கொண்டிருக்கும் (மோசமான) காரியத்தை என் இறைவன் நன்கறிவான்; (இதற்குரிய தண்டனையை உங்களுக்கு அவசியம் தருவான்)'' என்று கூறினார்

[189] (எனினும்) பின்னரும் அவர்கள் அவரைப் பொய்யாக்கினார்கள். ஆகவே, ஒரு நாள் அவர்களை (அடர்ந்த) நிழலையுடைய மேகத்தின் வேதனை பிடித்துக் கொண்டது. நிச்சயமாக அது மகத்தான நாளின் வேதனையாக இருந்தது

[190] நிச்சயமாக இதிலோர் அத்தாட்சி இருந்தும் அவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை

[191] (நபியே!) நிச்சயமாக உமது இறைவன்தான் (அனைவரையும்) மிகைத்தவன், மகா கருணையுடையவன்

[192] (நபியே!) நிச்சயமாக (குர்ஆன் ஷரீஃப் என்னும்) இது அகிலத்தாரின் இறைவனால்தான் அருளப்பட்டது

[193] (இறை கட்டளைப் பிரகாரம்) ரூஹுல் அமீன் (நம்பிக்கைக்குரிய உயிர் என்னும் ஜிப்ரயீல்) இதை உமது உள்ளத்தில் இறக்கிவைத்தார்

[194] (மனிதர்களுக்கு) நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக

[195] தெளிவான அரபி மொழியில் (இது இறக்கப்பட்டுள்ளது)

[196] நிச்சயமாக இதைப் பற்றிய முன்னறிவிப்பு முன்னுள்ள வேதங்களிலும் இருக்கிறது

[197] இஸ்ராயீலின் சந்ததியிலுள்ள கல்விமான்கள் இதை அறிந்திருப்பதே அவர்களுக்குப் போதுமான அத்தாட்சியல்லவா

[198] (இவர்கள் விரும்புவதைப்போல அரபி அல்லாத) அஜமிகளில் ஒருவர்மீது (அவருடைய மொழியில்) இதை இறக்கிவைத்து

[199] அவர் இதை இவர்களுக்கு ஓதிக் காண்பித்தால் இதை அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்

[200] அத்தகைய (கொடிய) நிராகரிப்பையே இக்குற்றவாளிகளின் உள்ளங்களில் நாம் புகுத்தியிருக்கிறோம்

[201] ஆகவே, துன்புறுத்தும் வேதனையை இவர்கள் (தங்கள் கண்ணால்) காணும் வரை இதை நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்

[202] அவர்கள் உணர்ந்து கொள்ளாதவாறு திடுகூறாகவே (அந்நாள்) அவர்களை வந்தடையும்

[203] அச்சமயம் அவர்கள் ‘‘ எங்களுக்கு(ச் சிறிது) அவகாசம் கொடுக்கப்படுமா

[204] ‘‘ எங்களை வேதனை செய்யவா இவர்கள் அவசரப்படுகின்றனர்?'' என்று கூறுவார்கள்

[205] (நபியே!) நீர் கவனித்தீரா? நாம் இவர்களை (இவர்கள் விரும்புகிறவாறு) பல வருடங்கள் சுகமனுபவிக்க விட்டு வைத்திருந்தபோதிலும்

[206] பின்னர், அவர்கள் பயமுறுத்தப்பட்டுவந்த வேதனை அவர்களை வந்தடைந்தால்

[207] அவர்கள் அனுபவித்த சுகபோகங்கள் ஒன்றுமே அவர்களுக்கு ஒரு பயனுமளிக்காதே

[208] (உபதேசம் செய்து) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களை அனுப்பாத வரை எவ்வூராரையும் நாம் அழித்துவிடவில்லை

[209] (ஒரு தூதரை அனுப்பி, வேதனைப் பற்றி) ஞாபகமூட்டாது நாம் (எவரையும் அழித்து) அநியாயம் செய்பவர்களாக இருக்கவில்லை

[210] (இவர்கள் கூறுகிறவாறு) இ(வ்வேதத்)தை ஷைத்தான்கள் இறக்கவில்லை

[211] அது அவர்களுக்குத் தகுதியுமல்ல; (அதற்குரிய) சக்தியும் அவர்களிடம் இல்லை

[212] நிச்சயமாக அவர்கள் (இதை) காதால் கேட்பதிலிருந்தும் தடுக்கப் பட்டிருக்கின்றனர்

[213] ஆதலால், (நபியே!) நீர் அல்லாஹ்வுடன் வேறொரு கடவுளை அழைக்காதீர். (அழைத்தால்) அதனால் நீர் வேதனைக்குள்ளாவீர்

[214] நீர் உமது நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக

[215] உம்மைப் பின்பற்றிய நம்பிக்கையாளர்களிடம் புஜம் தாழ்த்தி(ப் பணிவாக நடந்து)க் கொள்வீராக

[216] ஆனால், அவர்கள் உங்களுக்கு மாறு செய்தால் ‘‘ நிச்சயமாக நான் நீங்கள் செய்பவற்றிலிருந்து விலகி விட்டேன்'' என்று கூறி

[217] கருணையாளன், அனைவரையும் மிகைத்தவன் (அல்லாஹ்) மீது நம்பிக்கை வைப்பீராக

[218] நீர் நின்று வணங்கும்போதும் அவன் உம்மைப் பார்க்கிறான்

[219] சிரம் பணிந்து வணங்கக்கூடியவர்களுடன் சேர்ந்து நீர் அசைவதையும் அவன் பார்க்கிறான்

[220] நிச்சயமாக அவன்தான் அனைத்தையும் நன்கு செவியுறுபவன், நன்கு அறிபவன்

[221] (நம்பிக்கையாளர்களே!) ஷைத்தான்கள் யார் மீது இறங்குகின்றனர் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கவா

[222] பொய் சொல்லும் ஒவ்வொரு பாவியின் மீதும் இறங்குகின்றனர்

[223] தாங்கள் கேள்விப்பட்டதை எல்லாம் அவர்களுக்குக் கூறுகின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் (பெரும்) பொய்யர்களே

[224] கவிஞர்களை வழிகெட்டவர்கள்தான் பின்பற்றுகின்றனர்

[225] நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு திடலிலும் தட்டழிந்து திரிகிறார்கள் என்பதை (நபியே!) நீர் பார்க்கவில்லையா

[226] நிச்சயமாக அவர்கள், தாங்கள் செய்யாத காரியங்களை(ச் செய்ததாக)க் கூறுகிறார்கள்

[227] (ஆயினும்,) அவர்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்து, (தங்கள் கவிதைகளில்) அல்லாஹ்வை அதிகமாக நினைவு செய்து (பிறர் மூலம்) அநியாயத்திற்கு உள்ளானதன் பின்னர், பழி வாங்கினார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் குற்றவாளிகள்தான். பிறரை துன்புறுத்திய) அநியாயக்காரர்கள் தாங்கள் எங்கு திரும்பச் செல்ல வேண்டுமென்பதை அதிசீக்கிரத்தில் அறிந்து கொள்வார்கள்

அந்நம்ல்

Surah 27

[1] தா ஸீன். இவை இந்தத் திருகுர்ஆனின், தெளிவான வேதத்தின் (சில) வசனங்களாகும்

[2] நம்பிக்கை கொண்டவர்களுக்கு (இது) ஒரு நேர்வழியாகவும், நற்செய்தியாகவும் இருக்கிறது

[3] அவர்கள் தொழுகையைக் கடைப்பிடித் தொழுவார்கள், ஜகாத்தும் கொடுத்து வருவார்கள். மேலும், மறுமையையும் அவர்கள் உறுதியாக நம்புவார்கள்

[4] நிச்சயமாக எவர்கள் மறுமையை நம்பவில்லையோ அவர்களுக்கு (அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக) நாம் அவர்களுடைய (தீய) காரியங்களை அழகாக்கி விட்டோம். ஆகவே, அவர்கள் அதில் சீர்கெட்டு தட்டழிந்து திரிகின்றனர்

[5] இத்தகையவர்களுக்கு (அவர்கள் மரண காலத்தில்) தீய வேதனைதான் உண்டு. மறுமையிலோ அவர்கள்தான் பெரும் நஷ்டம் அடைந்தவர்களாக இருப்பார்கள்

[6] (நபியே!) நிச்சயமாக மிக்க ஞானமுடைய, (அனைத்தையும்) நன்கு அறிந்தவனிடம் இருந்தே இந்த குர்ஆன் உமக்குக் கொடுக்கப்படுகிறது

[7] மூஸா (தூர் என்னும் மலையின் சமீபமாகச் சென்ற பொழுது) தன் குடும்பத்தினரை நோக்கி ‘‘ நிச்சயமாக நான் ஒரு நெருப்பைக் காண்கிறேன். (நீங்கள் இங்கு தாமதித்து இருங்கள்.) நான் சென்று (நம் வழியைப் பற்றி) ஒரு விஷயத்தை அதன் மூலம் அறிந்து வருகிறேன் அல்லது நீங்கள் குளிர் காய்வதற்கு ஓர் எரி கொள்ளியையேனும் கொண்டு வருவேன்'' என்று கூறி

[8] அவர் அதன் சமீபமாக வந்த சமயத்தில் ‘‘ நெருப்பில் இருக்கின்ற (வான)வர் மீதும் அதன் சமீபமாக இருக்கின்றவர் (மூஸா) மீதும் பெரும் பாக்கியமளிக்கப்பட்டுள்ளது. மேலும், உலகத்தார் அனைவரின் இறைவனான அல்லாஹ் மிக்க பரிசுத்தமானவன்'' என்று சப்தமிட்டுக் கூறப்பட்டது

[9] (மேலும்,) ‘‘ மூஸாவே! நிச்சயமாக நான்தான் அல்லாஹ். நான் அனைவரையும் மிகைத்தவன்; (அனைத்தையும் நன்கறிந்த) ஞானமுடையவன்

[10] (மூஸாவே!) உமது தடியை நீர் எறிவீராக'' (என்றும் கூறப்பட்டது. அவ்வாறு அவர் அதை எறியவே) அது ஒரு பாம்பைப் போல் (ஆகி) நெளிவதைக் கண்டு அவர் திரும்பியும் பார்க்காது அதை விட்டும் விலகிச் சென்றார். (ஆகவே, நாம் மூஸாவை நோக்கி) மூஸாவே! பயப்படாதீர். நிச்சயமாக என்னிடத்தில் தூதர்கள் பயப்படமாட்டார்கள்

[11] ஆயினும் தவறிழைத்தவரைத் தவிர. (எனினும்) அவரும் தன் குற்றத்தை (உணர்ந்து அதை மாற்றி) நன்மை செய்தால் நிச்சயமாக நான் (அவரையும்) மன்னித்துக் கருணை செய்வேன்

[12] (மூஸாவே!) நீர் உமது கையை உமது சட்டைப்பைக்குள் புகுத்துவீராக. அது ஒரு மாசற்ற வெண்மையான (பிரகாசத்துடன்) வெளிவரும். (இவ்விரண்டும்) ஒன்பது அத்தாட்சிகளில் உள்ளவையாகும். (இவற்றுடன்) நீர் ஃபிர்அவ்னிடமும் அவனுடைய மக்களிடமும் செல்வீராக. நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் மக்களாக இருக்கின்றனர்'' (என்றும் கூறினோம்)

[13] (மூஸாவுக்கு கொடுக்கப்பட்ட) பார்த்து புரிந்து கொள்ளும்படியான நம் அத்தாட்சிகள் அவர்களிடம் வரவே ‘‘ இது சந்தேகமற்ற சூனியம்தான்'' என்று அவர்கள் கூறினார்கள்

[14] (அத்தாட்சிகளைக் கண்ட) அவர்களுடைய உள்ளங்கள் அவற்றை (உண்மையென) உறுதிகொண்ட போதிலும், கர்வம் கொண்டு அநியாயமாக அவற்றை அவர்கள் மறுத்தார்கள். ஆகவே, இந்த விஷமிகளின் முடிவு எவ்வாறாயிற்று என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக

[15] தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் நிச்சயமாக நாம் (இம்மை மறுமையில் பயனளிக்கக்கூடிய) கல்வியைக் கொடுத்தோம். அதற்கு அவ்விருவரும், ‘‘ புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தமானவை. அவன்தான் நம்பிக்கை கொண்ட தன் நல்லடியார்களில் பலரைவிட எங்களை மேன்மையாக்கி வைத்தான்'' என்று கூறி (நன்றி செலுத்தி)னார்கள்

[16] பின்னர் தாவூதுக்கு ஸுலைமான் வாரிசானார். (ஸுலைமான் மனிதர்களை நோக்கி) ‘‘ மனிதர்களே! எங்களுக்குப் பறவைகளின் மொழி கற்பிக்கப்பட்டிருக்கிறது. எங்களுக்கு (வேண்டிய) எல்லாப் பொருள்களும் (ஏராளமாகவே) கொடுக்கப்பட்டிருக்கின்றன. நிச்சயமாக இது (இறைவனின்) மிக்க தெளிவானதொரு அருளாகும்'' என்று கூறி(யும் நன்றி செலுத்தி)னார்

[17] ஸுலைமானுடைய ராணுவம் ஜின்கள், மனிதர்கள், பறவைகள் ஆகியவற்றிலிருந்து திரட்டப்பட்டு அவை இனவாரியாகப் பிரிக்கப்பட்டு அணியணியாகப் புறப்பட்டன

[18] அவை எறும்புகள் வசிக்கும் ஓர் ஓடையின் சமீபமாக வந்தபொழுது அதிலொரு பெண் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி) ‘‘எறும்புகளே! நீங்கள் உங்கள் வீடுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள். ஸுலைமானும் அவருடைய ராணுவமும் (நீங்கள் இருப்பதை) அறியாது உங்களை(த் தங்கள் கால்களால்) மிதித்துவிடாமல் இருக்கட்டும்'' என்று கூறியது

[19] அதன் சொல்லைக் கேள்வியுற்று ஸுலைமான் சிரித்தவராக புன்னகைப் பூத்தார். மேலும், ‘‘ என் இறைவனே! நீ என் மீதும், என் தாய் தந்தை மீதும் புரிந்த உன் அருள்களுக்கு உனக்கு நான் நன்றி செலுத்த நீ எனக்கு அருள் புரிவாயாக! உனக்குத் திருப்தியளிக்கக்கூடிய நற்செயல்களையும் நான் செய்ய(க்கூடிய பாக்கியத்தை எனக்கு) அருள் புரிந்து, உன் கருணையைக் கொண்டு உன் நல்லடியார்களுடனும் என்னைச் சேர்த்து விடுவாயாக!'' என்று பிரார்த்தனை செய்தார்

[20] அவர் பறவைகளைப் பரிசீலனை செய்தபொழுது ‘‘என்ன காரணம்? ‘ஹுத்ஹுத்' பறவையை நான் காணவில்லையே! (அது பறவைகளின் நெருக்கடியில்) மறைந்திருக்கிறதா? (அல்லது என் அனுமதியின்றி எங்கேனும் சென்றுவிட்டதா)

[21] (அவ்வாறாயின்) நிச்சயமாக நான் அதைக் கடினமான வேதனை செய்வேன். அல்லது அதை அறுத்துவிடுவேன். அல்லது தக்க ஆதாரத்தை அது (என் முன்) கொண்டு வரவேண்டும்'' என்று கூறினார்

[22] (இவ்வாறு கூறி) அதிக நேரமாகவில்லை. (அதற்குள் ஹுத்ஹுத் பறவை அவர் முன் தோன்றி) ‘‘ நீர் அறியாத ஒரு விஷயத்தை நான் அறிந்து கொண்டு ‘ஸபா'வைப் பற்றி நிச்சயமான (உண்மைச்) செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன்

[23] மெய்யாகவே அந்நாட்டு மக்களை ஒரு பெண் ஆட்சி புரிவதை நான் கண்டேன். எல்லா வசதிகளும் அவள் பெற்றிருக்கிறாள். மகத்தானதொரு அரசகட்டிலும் அவளுக்கு இருக்கிறது

[24] அவளும் அவளுடைய மக்களும் அல்லாஹ்வையன்றி சூரியனைச் சிரம் பணிந்து வணங்குவதை நான் கண்டேன். அவர்களுடைய இக்காரியத்தை ஷைத்தான் அவர்களுக்கு அழகாகக் காண்பித்து, அவர்களை நேரான பாதையிலிருந்து தடுத்து விட்டான். ஆதலால், அவர்கள் நேரான வழியை அடையவில்லை

[25] வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை வெளிப்படுத்தக்கூடிய, நீங்கள் மறைத்துக் கொள்வதையும் நீங்கள் வெளியாக்குவதையும் நன்கறியக் கூடிய அல்லாஹ்வுக்கு அவர்கள் சிரம் பணிந்து வணங்க வேண்டாமா

[26] அந்த அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. அவன்தான் மகத்தான அர்ஷுடையவன்'' என்று கூறிற்று

[27] (அதற்கு ஸுலைமான்) ‘‘ நீ உண்மை சொல்கிறாயா அல்லது பொய் சொல்கிறாயா? என்பதை அதிசீக்கிரத்தில் நாம் கண்டு கொள்வோம்

[28] என் இக்கடிதத்தைக் கொண்டு போய் அவர்களின் முன் எறிந்துவிட்டு அவர்களை விட்டு விலகி (மறைவாக இருந்து கொண்டு) அவர்கள் என்ன முடிவுக்கு வருகிறார்கள் என்பதை நீ கவனித்துவா'' என்று கூறினார்

[29] (அவ்வாறே அப்பறவை அவர்கள் முன் அக்கடிதத்தை எறியவே அதைக் கண்ணுற்ற அவ்வரசி தன் பிரதானிகளை நோக்கி) ‘‘ தலைவர்களே! மிக்க கண்ணியமுள்ள ஒரு கடிதம் என் முன் எறியப்பட்டிருக்கிறது

[30] மெய்யாகவே அது ஸுலைமானிடமிருந்து வந்துள்ளது. நிச்சயமாக அ(தன் ஆரம்பத்)தில் ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்' என்றெழுதி

[31] நீங்கள் (கர்வம் கொண்டு) என்னிடம் பெருமை பாராட்டாதீர்கள். (இறைவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டவர்களாக என்னிடம் வாருங்கள்'' (என்றும் எழுதப்பட்டிருக்கிறது) என்று கூறி

[32] (தன் பிரதானிகளை நோக்கி) ‘‘ தலைவர்களே என் இவ்விஷயத்தில் நீங்கள் (உங்கள்) ஆலோசனைகளைக் கூறுங்கள். என் சமூகத்தில் நீங்கள் நேராக வந்து (அபிப்பிராயம்) கூறாதவரை நான் எவ்விஷயத்தையும் முடிவு செய்பவளல்ல'' என்று அவள் கூறினாள்

[33] அதற்கவர்கள் ‘‘ நாங்கள் பலவான்களாகவும், கடுமையாக போர் செய்யக் கூடியவர்களாகவும் இருக்கிறோம். (போர் செய்வதோ, சமாதானம் செய்வதோ அதுபற்றிய) கட்டளை உமது விருப்பத்தைப் பொறுத்திருக்கிறது. ஆகவே, நீர் உத்தரவு செய்வ(திலுள்ள சாதக பாதகத்)தை நன்கு கவனித்துப் பார்'' என்று கூறினார்கள்

[34] அதற்கவள் ‘‘அரசர்கள் ஒரு ஊரில் நுழைந்தால் நிச்சயமாக அதை அழித்துவிடுகின்றனர். மேலும், அங்குள்ள கண்ணியவான்களை கேவலப்பட்டவர்களாக ஆக்கிவிடுகின்றனர். (ஆகவே,) இவர்களும் இவ்வாறே செய்யக்கூடும்

[35] ஆகவே, நான் அவர்களிடம் (உயர்ந்த பொருள்களைக் கொண்ட) ஒரு காணிக்கையை அனுப்பி, (அதை எடுத்துச் செல்லும்) தூதர்கள் (அவரிடமிருந்து) என்ன பதில் கொண்டு வருகிறார்கள் என்பதை எதிர்பார்ப்பேன்'' என்று கூறினாள். (அவ்வாறே அனுப்பியும் வைத்தாள்)

[36] அந்தத் தூதர் ஸுலைமானிடம் வரவே (ஸுலைமான் அவரை நோக்கி) ‘‘ நீங்கள் பொருளைக் கொண்டு எனக்கு உதவி செய்யக் கருதுகிறீர்களா? அல்லாஹ் எனக்குக் கொடுத்து இருப்பவை உங்களுக்குக் கொடுத்திருப்பவற்றை விட (அதிகமாகவும்) மேலானதாகவும் இருக்கின்றன. மாறாக, உங்கள் இக்காணிக்கையைக் கொண்டு நீங்களே சந்தோஷமடையுங்கள். (அது எனக்கு வேண்டியதில்லை) என்றும்

[37] (வந்தவர்களின் தலைவனை நோக்கி) நீ அவர்களிடம் திரும்பச் செல். அவர்களால் எதிர்க்க முடியாததொரு ராணுவத்துடன் நிச்சயமாக நாங்கள் அவர்களிடம் வருவோம். அவர்களை சிறுமைப்பட்டவர்களாக அவ்வூரிலிருந்து துரத்தி விடுவோம்'' என்று (கூறி அனுப்பிவிட்டு)

[38] (ஸுலைமான் தன் மந்திரிகளை நோக்கி) ‘‘ சான்றோர்களே! அவர்கள் கட்டுப்பட்டவர்களாக என்னிடம் வந்து சேருவதற்கு முன்னதாகவே அவளுடைய அரச கட்டிலை என்னிடம் கொண்டு வருபவர் உங்களில் யார்?'' என்று கேட்டார்

[39] அதற்கு ஜின்களிலுள்ள ‘இஃப்ரீத்' (என்னும் ஒரு வீரன்) ‘‘ நீர் இந்தச் சபையை முடித்துக்கொண்டு எழுந்திருப்பதற்கு முன்னதாகவே அதை நான் உம்மிடம் கொண்டு வந்துவிடுவேன். நிச்சயமாக நான் இவ்வாறு செய்ய மிக்க சக்தியும் நம்பிக்கையும் உடையவன்'' என்று கூறினான்

[40] (எனினும், அவர்களில்) வேத ஞானம் பெற்ற ஒருவர் (இருந்தார். அவர் ஸுலைமான் நபியை நோக்கி) “உமது பார்வை உம்மிடம் திரும்புவதற்கு முன் அதை நான் உம்மிடம் கொண்டு வந்துவிடுவேன்'' என்று கூறினார். (அவ்வாறே கொண்டு வந்து சேர்த்தார்.) அது தன் முன் (கொண்டு வந்து வைக்கப்பட்டு) இருப்பதை (ஸுலைமான்) கண்டதும், ‘‘ இது நான் அவனுக்கு நன்றி செலுத்துகின்றேனா இல்லையா என்று என்னைச் சோதிப்பதற்காக என் இறைவன் எனக்குப் புரிந்த பேரருளாகும். எவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகிறானோ அவன் தனக்கே நன்மை செய்து கொள்கிறான். எவன் நன்றியை நிராகரிக்கிறானோ (அதனால் என் இறைவனுக்கு ஒரு நஷ்டமுமில்லை.) நிச்சயமாக என் இறைவன் (எவருடைய) தேவையற்றவனும், மிக்க கண்ணியமானவனும் ஆவான்'' என்று கூறி (தன் வேலைக்காரர்களை நோக்கி)

[41] ‘‘அவளுடைய அரச கட்டிலை அவளுக்கு மாற்றி (அமைத்து) விடுங்கள். அவள் அதை(த் தனக்குரியதுதான் என்று) அறிந்து கொள்கிறாளா அல்லது அறிந்துகொள்ள முடியாதவளாகி விடுகிறாளா?'' என்று பார்ப்போம் எனக் கூறினார்

[42] அவள் வந்து சேரவே (அவளை நோக்கி) ‘‘ உனது அரச கட்டில் இவ்வாறுதானா இருக்கும்?'' என்று கேட்கப்பட்டதற்கு அவள் ‘‘ இது முற்றிலும் அதைப் போலவே இருக்கிறது. இதற்கு முன்னதாகவே (உமது மேன்மையைப் பற்றிய) விஷயம் எங்களுக்கு அறிவிக்கப்பட்டு விட்டது. நாங்கள் முற்றிலும் கட்டுப்பட்டே வந்திருக்கிறோம்'' என்றாள்

[43] இதுவரை (நம்பிக்கை கொள்ளாது) அவளைத் தடுத்துக் கொண்டிருந்ததெல்லாம் அல்லாஹ்வை அன்றி அவள் வணங்கிக் கொண்டிருந்த (பொய்யான) தெய்வங்கள்தான். ஏனென்றால், நிச்சயமாக அவள் அல்லாஹ்வை நிராகரிக்கும் மக்களில் உள்ளவளாக இருந்தாள்

[44] பின்னர் ‘‘ இம்மாளிகையில் நுழை'' என்று அவளுக்குக் கூறப்பட்டது. அவள் அதைக் கண்டு (அதன் தரையில் பதிக்கப்பட்டிருந்த பளிங்கு கற்களை) தண்ணீர் என்று எண்ணி ஆடையை (அது நனைந்து போகாதிருக்க) இரு கெண்டைக்கால்களில் இருந்து உயர்த்தினாள். அதற்கு (ஸுலைமான்) ‘‘ நிச்சயமாக அது (தண்ணீரல்ல) பளிங்கு கற்கள் பதிக்கப்பட்ட மாளிகைதான்'' என்று கூறினார். அதற்கவள் ‘‘ என் இறைவனே! நிச்சயமாக நானே எனக்குத் தீங்கிழைத்துக் கொண்டிருந்தேன். உலகத்தாரின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு ஸுலைமானுடன் நானும் முற்றிலும் கட்டுப்படுகிறேன்'' என்று கூறினாள்

[45] நிச்சயமாக நாம் ஸமூது என்னும் மக்களிடம் அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை அனுப்பி வைத்தோம். அவர், (அவர்களை நோக்கி) ‘‘ நீங்கள் அல்லாஹ் ஒருவனை வணங்குங்கள்'' என்று கூறினார். அச்சமயம் அவர்கள் இரு பிரிவினர்களாகி(த் தங்களுக்குள்) தர்க்கம் செய்துகொண்டார்கள்

[46] (அதற்கு ஸாலிஹ்) ‘‘ என் மக்களே! நீங்கள் ஏன் அவசரப்பட்டு நன்மைக்கு முன்னதாகவே தண்டனையைத் தேடிக்கொள்கிறீர்கள்? அல்லாஹ்விடத்தில் நீங்கள் மன்னிப்புக் கோர வேண்டாமா? நீங்கள் கருணை செய்யப்படுவீர்களே!'' என்று கூறினார்

[47] அதற்கவர்கள் ‘‘ உம்மையும் உம்முடன் இருப்பவர்களையும் நாங்கள் அபசகுணமாக எண்ணுகிறோம்'' என்று கூறினார்கள். அதற்கவர் ‘‘ அல்லாஹ்விடமிருந்துதான் உங்கள் துர்ச்சகுனம் வந்தது. நீங்கள் (அதிசீக்கிரத்தில் அல்லாஹ்வுடைய) சோதனைக்குள்ளாக வேண்டிய மக்கள்'' என்று கூறினார்

[48] அவ்வூரில் (விஷமிகளுக்குத் தலைவர்களாக) ஒன்பது மனிதர்கள் இருந்தார்கள். அவர்கள் நன்மை செய்யாது அவ்வூரிலும் (மற்ற சுற்றுப்புறங்களிலும்) விஷமம் செய்து கொண்டே திரிந்தார்கள்

[49] அவர்கள் ஸாலிஹையும் அவருடைய குடும்பத்தையும் இரவோடு இரவாக நாம் அழித்து விடுவோம். (இதை ஒருவரிடமும் கூறுவதில்லை என்று) நாம் நமக்குள்ளாக அல்லாஹ் மீது சத்தியம் செய்துகொண்டு அவருடைய சொந்தக்காரர்களிடம், ‘‘ அவர் வெட்டுப்பட்ட இடத்திற்கு நாங்கள் வரவேயில்லை. நிச்சயமாக நாங்கள் உண்மையே சொல்லுகிறோம்'' என்று நாம் கூறிவிடலாம் என்று கூறிக் கொண்டார்கள்

[50] (இவ்வாறு) அவர்கள் ஒரு சூழ்ச்சி செய்தார்கள். நாமும் ஒரு சூழ்ச்சி செய்தோம். அவர்கள் அதை உணர்ந்துகொள்ள முடியவில்லை

[51] ஆகவே, அவர்களுடைய சூழ்ச்சியின் முடிவு எவ்வாறு ஆயிற்று என்பதை (நபியே!) நீர் கவனித்துப் பார்ப்பீராக. நிச்சயமாக நாம் அவர்களையும் அவர்களுடைய மக்கள் அனைவரையும் அழித்துவிட்டோம்

[52] அவர்கள் செய்து கொண்டிருந்த அநியாயங்களின் காரணமாக (அழிந்து போன) அவர்களுடைய வீடுகள் இதோ பாழடைந்து கிடக்கின்றன. அறியக்கூடிய மக்களுக்கு நிச்சயமாக இதில் ஒரு (நல்ல) படிப்பினை இருக்கிறது

[53] அவர்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டு (அல்லாஹ்வுக்குப்) பயந்து கொண்டிருந்தார்களோ, அவர்களை நாம் பாதுகாத்துக் கொண்டோம்

[54] லூத்தையும் (நாம் நம் தூதராக அனுப்பிவைத்தோம்). அவர் தன் மக்களை நோக்கி (மறைவு திரையின்றி) ‘‘ மக்கள் முன்பாகவே நீங்கள் மானக்கேடான காரியங்களைச் செய்கிறீர்களா

[55] நீங்கள் பெண்களைவிட்டு ஆண்களிடம் மோகங்கொண்டு வருகிறீர்களே! எனினும் நீங்கள் முற்றிலும் அறிவீனமான மக்களாக இருக்கிறீர்கள்'' என்று கூறினார்

[56] அதற்கவர்கள் (தங்கள் மக்களை நோக்கி) ‘‘ லூத்துடைய குடும்பத்தை உங்கள் ஊரை விட்டும் நீங்கள் ஓட்டிவிடுங்கள். நிச்சயமாக அவர்கள் மிகப் பரிசுத்தமான மனிதர்கள் (போல் பேசுகின்றனர்)'' என்று (பரிகாசமாகக்) கூறியதுதான் அவருடைய மக்களின் பதிலாக இருந்தது

[57] ஆகவே, அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் நாம் பாதுகாத்துக் கொண்டோம். எனினும், அவருடைய மனைவியைத் தவிர. ஏனென்றால், அவள் (அந்தப் பாவிகளுடன்) தங்கிவிட வேண்டுமென்று (ஏற்கனவே) தீர்மானித்து விட்டோம்

[58] ஆகவே, அவர்கள் மீது கல்மழையை நாம் பொழிந்தோம். பயமுறுத்தப்பட்ட அவர்கள் மீது (பொழியப்பட்ட) கல்மழை மகா கெட்டது

[59] ஆகவே, (நபியே!) கூறுவீராக! புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே. தன் அடியார்களில் அவன் தேர்ந்தெடுத்துக் கொண்டவர்களின் மீது ‘ஸலாம்' உண்டாவதாக, அல்லாஹ் மேலானவனா அல்லது அவர்கள் அவனுக்கு இணையாக்குகின்றவை மேலானவையா

[60] வானங்களையும் பூமியையும் படைத்து, மேகத்தில் இருந்து உங்களுக்காக மழை பொழியச் செய்பவன் யார்? நாமே அதைக் கொண்டு கண்ணைக் கவரும் அழகான தோட்டங்களையும் உற்பத்தி செய்கிறோம். (நம் உதவியின்றி) அதன் மரங்களை முளைக்கவைக்க உங்களால் முடியாது. ஆகவே, அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு கடவுள் இருக்கிறானா? (இவ்வாறிருந்தும்) இவர்கள் (தங்கள் கற்பனை தெய்வங்களை அல்லாஹ்வுக்குச்) சமமாக்குகின்றனர்

[61] பூமியை ஓர் உறுதியான தங்குமிடமாக அமைத்து, அதன் மத்தியில் ஆறுகளையும் அ(தை உறுதிப்படுத்துவ)தற்கு மலைகளையும் அமைத்தவன் யார்? இரு கடல்களுக்கிடையில் தடுப்பை ஏற்படுத்தியவன் யார்? (இவற்றைச் செய்த) அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு கடவுள் இருக்கிறானா? (இல்லவே இல்லை.) அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிந்து கொள்வதில்லை

[62] (சிரமத்தில் சிக்கித்) துடிதுடித்துக் கொண்டிருப்பவர்கள் அபயமிட்டழைத்தால் அவர்களுக்குப் பதில் கூறி, அவர்களுடைய சிரமங்களை நீக்குபவன் யார்? பூமியில் உங்களை பிரதிநிதிகளாக ஆக்கி வைத்தவன் யார்? (இத்தகைய) அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு கடவுள் இருக்கிறானா? (இல்லவே இல்லை.) உங்களில் நல்லுணர்ச்சி பெறுபவர்கள் வெகு சொற்பமே

[63] கடலிலோ அல்லது கரையிலோ இருள்களில் (சிக்கிய) உங்களுக்கு வழி காண்பிப்பவன் யார்? அவனுடைய அருள் மழைக்கு முன்னதாக (குளிர்ந்த) காற்றுகளை நற்செய்தியாக அனுப்பிவைப்பவன் யார்? அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு கடவுள் இருக்கிறானா? (இல்லவே இல்லை.) அவர்கள் இணை வைப்பதை விட்டு அவன் மிக்க உயர்ந்தவன்

[64] ஆரம்பத்தில் படைப்புகளை உற்பத்தி செய்தவன் யார்? (அவ்வாறே பின்னும்) பின்னும் உற்பத்தி செய்து கொண்டிருப்பவன் யார்? மேகத்தில் இருந்து (மழையை இறக்கியும்) பூமியில் இருந்து (தானியங்களை முளைக்கச் செய்தும்) உங்களுக்கு உணவளிப்பவன் யார்? அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு கடவுள் இருக்கிறானா? ‘‘ நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் (இதற்கு) உங்கள் அத்தாட்சிகளைக் கொண்டுவாருங்கள்'' என்று (நபியே!) கூறுவீராக

[65] (மேலும்) நீர் கூறுவீராக! ‘‘ வானங்களிலோ பூமியிலோ மறைந்திருப்பவற்றை அல்லாஹ்வைத் தவிர மற்றெவரும் அறிய மாட்டார். (மரணித்தவர்கள்) எப்பொழுது எழுப்பப்படுவார்கள் என்பதையும் இவர்கள் அறிய மாட்டார்கள்

[66] எனினும், மறுமையைப் பற்றிய இவர்களுடைய ஞானம் முற்றிலும் சூனியமாகி விட்டது. மாறாக, (அவ்விஷயத்தில்) அவர்கள் பெரும் சந்தேகத்தில்தான் இருக்கின்றனர். அதுமட்டுமா? அவர்கள் (அறிந்திருந்தும்) அதைப் புரியாத குருடர்களாகி விட்டனர்

[67] ‘‘ (மரணித்து) உக்கி மண்ணாகிப் போனதன் பின்னர் நாங்களும், எங்கள் மூதாதைகளும் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவோமா?'' என்று இந்நிராகரிப்பவர்கள் கேட்கின்றனர்

[68] ‘‘ நாங்களும் இதற்கு முன்னர் இருந்த எங்கள் மூதாதைகளும் இவ்வாறே பயமுறுத்தப்பட்டோம். இது முன்னுள்ளோரின் கட்டுக்கதைகளே தவிர வேறில்லை'' (என்றும் கூறுகின்றனர்)

[69] ஆகவே ‘‘ பூமியில் சுற்றித் திரிந்து (உங்களைப் போன்று இருந்த) குற்றவாளிகளின் முடிவு எவ்வாறாயிற்று என்பதைக் கவனித்துப் பாருங்கள்'' (என்று நபியே!) கூறுவீராக

[70] (நபியே!) அவர்களைப் பற்றி நீர் கவலை கொள்ளாதீர். அவர்களுடைய சூழ்ச்சிகளைப் பற்றியும் நீர் மனமொடிந்து விடாதீர்

[71] (நம்பிக்கையாளர்களை நோக்கி) ‘‘ மெய்யாகவே நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் நீங்கள் பயமுறுத்தும் வேதனை எப்பொழுது வரும்?'' என்று (நிராகரிப்பாளர்கள்) கேட்கிறார்கள்

[72] அதற்கு (நபியே!) கூறுவீராக: ‘‘ நீங்கள் அவசரப்படுபவற்றில் சில இப்பொழுதே உங்களைப் பின் தொடரவும் கூடும்

[73] ஆயினும், நிச்சயமாக உமது இறைவன் மனிதர்கள் மீது மிக்க அருளையுடையவனாக இருக்கிறான். (ஆதலால், தண்டனையை இதுவரை தாமதப்படுத்தி இருக்கிறான்.) எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதற்கு) நன்றி செலுத்துவதில்லை

[74] (நபியே!) நிச்சயமாக உமது இறைவன் அவர்கள் தங்கள் உள்ளங்களில் மறைத்திருப்பதையும், (அதற்கு மாறாக) அவர்கள் வெளிப்படுத்துவதையும் நன்கறிவான்

[75] வானத்திலோ பூமியிலோ மறைவாக இருக்கும் எதுவுமே (‘லவ்ஹுல் மஹ்ஃபூள்' என்னும்) அவனுடைய தெளிவான குறிப்புப் புத்தகத்தில் பதியப்படாமலில்லை

[76] நிச்சயமாக இந்த குர்ஆன், இஸ்ராயீலின் சந்ததிகள் எவ்விஷயத்தில் தர்க்கித்துக் கொண்டிருக்கிறார்களோ அவற்றில் பெரும்பாலானவற்றை அவர்களுக்கு விவரித்துக் கூறுகிறது

[77] ஆகவே, அவர்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டார்களோ அவர்களுக்கு இது நேர்வழிகாட்டியாகவும் அருளாகவும் இருக்கிறது

[78] நிச்சயமாக உமது இறைவன் தன் உத்தரவைக் கொண்டு (இந்த குர்ஆன் மூலம்) அவர்களுக்கிடையில் (ஏற்பட்ட விவகாரங்களைப் பற்றி) தீர்ப்பளிக்கிறான். அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் (அனைத்தையும்) அறிந்தவனும் ஆவான்

[79] ஆகவே, (நபியே!) நீர் அல்லாஹ்வையே நம்புவீராக. நிச்சயமாக நீர் தெளிவான உண்மையின் மீதே இருக்கிறீர்

[80] (நபியே!) மரணித்தவர்களை கேட்கவைக்க நிச்சயமாக உம்மால் முடியாது. (அவ்வாறே உமக்குப்) புறங்காட்டிச் செல்லும் செவிடர்களை, (நீர்) அழைக்கும் (உமது) சப்தத்தைக் கேட்க வைக்கவும் உம்மால் முடியாது

[81] குருடர்களை, அவர்களுடைய வழிகேட்டிலிருந்து நேரான வழிக்குக் கொண்டுவரவும் உம்மால் முடியாது. எவர்கள் நம் வசனங்களை நம்பிக்கை கொண்டு முற்றிலும் நமக்கு பணிந்து நடக்கிறார்களோ அவர்களைத் தவிர மற்றவர்களுக்கு நீர் (நம் வசனங்களைக்) கேட்க வைக்க முடியாது

[82] இறுதிநாள் அவர்களை நெருங்கிய சமயத்தில், அவர்களுக்காகப் பூமியிலிருந்து ஒரு கால்நடையை நாம் வெளிப்படுத்துவோம். அது எந்தெந்த மனிதர்கள் நம் வசனங்களை நம்பிக்கை கொள்ளவில்லை என்பதை அவர்களுக்குச் சொல்லிக் காண்பிக்கும்

[83] ஒவ்வொரு சமுதாயத்திலும் நமது வசனங்களைப் பொய்ப்பித்தவர்களை (தனித்தனி) கூட்டமாக (பிரித்து) நாம் (அவர்களை) ஒன்றுதிரட்டும் நாளை (நபியே! நீர் அவர்களுக்கு) ஞாபகமூட்டுவீராக. ஆகவே, அவர்கள் (அப்போது விசாரனைக்காக) நிறுத்தி வைக்கப்படுவார்கள்

[84] அவர்கள் அனைவரும் (தங்கள் இறைவனிடம்) வரும் சமயத்தில் (இறைவன் அவர்களை நோக்கி) ‘‘ நீங்கள் என் வசனங்களை நன்கறிந்து கொள்வதற்கு முன்னதாகவே அதைப் பொய்யாக்கி விட்டீர்களா? (அவ்வாறில்லையாயின்) பின்னர் என்னதான் நீங்கள் செய்து கொண்டிருந்தீர்கள்?'' என்று கேட்பான்

[85] அவர்கள் செய்த அநியாயத்தின் காரணமாக அவர்கள் மீது (வேதனையின்) கட்டளை உறுதியாகிவிடும். அச்சமயம் அவர்களால் பேசவும் முடியாது

[86] நிச்சயமாக நாம்தான் அவர்கள் சுகமடைவதற்கு இரவையும் (அனைத்தையும்) நன்கு பார்ப்பதற்குப் பகலையும் உண்டு பண்ணினோம் என்பதை அவர்கள் (கவனித்துப்) பார்க்கவில்லையா? நிச்சயமாக இதில் நம்பிக்கை கொண்ட மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன

[87] சூர் (எக்காளம்) ஊதப்படும் நாளில் அல்லாஹ் அருள் புரிந்தவர்களைத் தவிர, வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைவருமே திடுக்கிட்டு, நடுங்கித் தலை குனிந்தவர்களாக அவனிடம் வந்து சேருவார்கள்

[88] நீர் காணும் மலைகளை அவை வெகு உறுதியாக இருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறீர். (எனினும், அந்நாளில்) அவை மேகத்தைப் போல் (ஆகாயத்தில்) பறந்தோடும். ஒவ்வொரு பொருளையும் (படைத்து) அதன் இயற்கை அமைப்பின் மீது உறுதிப்படுத்திய அல்லாஹ்வுடைய கட்டளையால் (அவ்வாறு நடைபெறும்). நிச்சயமாக அவன் நீங்கள் செய்து கொண்டிருக்கும் அனைத்தையும் நன்கறிபவன் ஆவான்

[89] எவரேனும் ஒரு நன்மையைச் செய்தால், அதற்கு(ரிய கூலியைவிட) மேலானதே அவர்களுக்குக் கிடைக்கிறது. மேலும், அந்நாளின் திடுக்கத்திலிருந்தும் அவர்கள் அச்சமற்று விடுகிறார்கள்

[90] எவரேனும் ஒரு பாவம் செய்தால், அவர்கள் நரகத்தில் முகங்குப்புறத் தள்ளப்பட்டு ‘‘நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கே தவிர (வேறு எதற்கும்) உங்களுக்குக் கூலி கொடுக்கப்படுமா?'' (என்று கேட்கப்படும்)

[91] (நபியே! நீர் கூறுவீராக!) இந்த (மக்கா) நகரத்தின் அதிபதியாகிய இறைவன் ஒருவனையே வணங்குமாறு நான் ஏவப்பட்டு உள்ளேன். அவன்தான் இதை மிக்க கண்ணியப்படுத்தியுள்ளான் எல்லாப் பொருள்களும் அவனுக்கு உரியனவே! மேலும், அவனுக்கே முற்றிலும் வழிபட்டவர்களில் நான் இருக்கும்படி நான் ஏவப்பட்டுள்ளேன்

[92] மேலும், திரு குர்ஆனை நான் (அனைவருக்கும்) ஓதிக் காண்பிக்குமாறும் (ஏவப்பட்டுள்ளேன்). (அதைக் கொண்டு) எவன் நேரான வழியை அடைகிறானோ அவன் தன் சுய நன்மைக்காகவே நேரான வழியில் செல்கிறான். எவரேனும் (இதிலிருந்து விலகித்) தவறான வழியில் சென்றால் (நபியே! நீர் அதைப் பற்றிக் கவலைப்படாதீர்.) ‘‘ நிச்சயமாக நான் அச்சமூட்டி எச்சரிப்பவர்களில் ஒருவன்தான் (நிர்ப்பந்திப்பவனல்ல)'' என்று கூறுவீராக

[93] புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. (மறுமை வருவதற்குரிய) தன் அத்தாட்சிகளை அதி சீக்கிரத்தில் அவன் உங்களுக்குக் காண்பிப்பான். அச்சமயம், அவற்றை நீங்கள் (உண்மையென) அறிந்து கொள்வீர்கள். (தற்சமயம்) நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதைப் பற்றி (நபியே!) உமது இறைவன் பராமுகமாயில்லை'' என்று கூறுவீராக

அல்கஸஸ்

Surah 28

[1] தா ஸீம் மீம்

[2] (நபியே!) இவை(யும்) தெளிவான இவ்வேதத்திலுள்ள சில வசனங்களாகும்

[3] (நபியே!) நம்பிக்கை கொண்ட மக்களுக்காக மூஸா இன்னும் ஃபிர்அவ்னைப் பற்றிய சில உண்மை விஷயங்களை உமக்கு ஓதிக் காண்பிக்கிறோம்

[4] நிச்சயமாக ஃபிர்அவ்ன், பூமியில் மிகவும் பெருமை கொண்டு, அதில் உள்ளவர்களைப் பல வகுப்புக்களாகப் பிரித்து, அவர்களில் ஒரு பிரிவினரை பலவீனப்படுத்தும் பொருட்டு அவர்களுடைய ஆண் மக்களைக் கொலை செய்து, பெண் மக்களை உயிருடன் வாழவைத்து வந்தான். மெய்யாகவே (இவ்வாறு) அவன் விஷமிகளில் ஒருவனாகவே இருந்தான்

[5] எனினும், பூமியில் (அவனால்) பலவீனப்படுத்தப்பட்டவர்கள் மீது நாம் அருள் புரிந்து, அவர்களைத் தலைவர்களாக்கி (அங்கு வசித்தவர்களுடைய பொருள்களுக்கும்,) அவர்களையே வாரிசுகளாக ஆக்க விரும்பினோம்

[6] அப்பூமியில் நாம் (பலவீனமான) அவர்களை மேன்மையாக்கி வைத்து ஃபிர்அவ்னும், ஹாமானும், அவர்களுடைய ராணுவங்களும் எந்த வேதனைக்குப் பயந்து கொண்டிருந்தார்களோ, அதை அவர்களுக்குக் காண்பிக்கவும் நாம் கருதினோம்

[7] (ஆகவே, பலவீனமானவர்களில் மூஸாவை நாம் படைத்தோம். மூஸா பிறந்த சமயத்தில், பலவீனமான இவர்களுடைய மக்களில் பிறக்கும் ஆண் குழந்தைகளை ஃபிர்அவ்ன் கொலை செய்து கொண்டிருந்தான். ஆகவே மூஸாவின் தாய், தன் இக்குழந்தையையும் ஃபிர்அவ்ன் கொலை செய்து விடுவானோ என்று அஞ்சி நடுங்கினாள்.) ஆகவே, (அச்சமயம்) மூஸாவின் தாய்க்கு நாம் வஹ்யி மூலம் அறிவித்தோம்: (குழந்தையை உன்னிடமே வைத்துக் கொண்டு) ‘‘ அவருக்குப் பால் கொடுத்து வா. (உன்னிடம் இருப்பதில்) அவரைப் பற்றி நீ பயந்தால், அவரை (பேழையில் வைத்து) ஆற்றில் எறிந்துவிடு. நீ அவரைப் பற்றிக் கவலைப்படாதே! பயப்படாதே! நிச்சயமாக நாம் அவரை உன்னிடமே கொண்டு வந்து சேர்த்து, அவரை (நம்) தூதர்களில் ஒருவராகவும் ஆக்குவோம்'' (என்று அறிவித்தோம்)

[8] (ஆகவே, மூஸாவுடைய தாய் அவரை ஒரு பேழையில் வைத்து ஆற்றில் விட்டு விட்டாள்.) அக்குழந்தையை ஃபிர்அவ்னுடைய குடும்பத்தினர் எடுத்துக் கொண்டனர். அவர் நிச்சயமாக (அவர்களுக்கு) எதிரியாகி துக்கத்தைத் தருவார். ஃபிர்அவ்னும், ஹாமானும், அவர்களுடைய ராணுவங்களும் தவறிழைத்தவர்களாகவே ஆயினர்

[9] (அக்குழந்தையைக் கண்ட) ஃபிர்அவ்னுடைய மனைவி (தன் கணவனை நோக்கி) ‘‘ நீ இதை கொலை செய்துவிடாதே! எனக்கும், உனக்கும் இது ஒரு கண் குளிர்ச்சியாக இருக்கிறது. இதனால் நாம் நன்மை அடையலாம் அல்லது இதை நாம் நம் குழந்தையாக தத்தெடுத்துக் கொள்ளலாம்'' என்று கூறினாள். எனினும், (இவராலேயே தங்களுக்கு அழிவு ஏற்படும் என்பதை) அவர்கள் உணர்ந்துகொள்ளவில்லை

[10] மூஸாவுடைய தாயின் உள்ளம் (அவரை ஆற்றில் எறிந்த பின் துக்கத்தால்) வெறுமையாகி விட்டது. அவள் நமது வார்த்தையை நம்பும்படி அவளுடைய உள்ளத்தை நாம் உறுதிப்படுத்தியிருக்காவிட்டால், (மூஸா பிறந்திருக்கும்) விஷயத்தை அனைவருக்கும் அவள் வெளிப்படுத்தியே இருப்பாள்

[11] (அக்குழந்தையைப் பேழையில் வைத்து ஆற்றில் விட்டதன் பின்னர்) அவள், அக்குழந்தையின் சகோதரியை நோக்கி ‘‘ (ஆற்றில் மிதந்து செல்லும்) அதைப் பின்தொடர்ந்து நீயும் செல்'' என்று கூறினாள். அவளும் அ(தனைப் பின்தொடர்ந்து சென்று அதை எடுத்த)வர்களுக்குத் தெரியாத விதத்தில் அதை(ப் பற்றி என்ன நடக்கிறதென்று) தூரத்திலிருந்தே கவனித்து வந்தாள்

[12] (ஆற்றில் மிதந்து சென்ற குழந்தையை எடுத்துக் கொண்டவர்கள் அதற்குப் பாலூட்ட பல செவிலித் தாய்களை அழைத்து வந்தனர். எனினும்,) இதற்கு முன்னதாகவே அக்குழந்தை (எவளுடைய) பாலையும் அருந்தாது தடுத்துவிட்டோம். (ஆகவே, இதைப் பற்றி அவர்கள் திகைத்துக் கொண்டிருந்த சமயத்தில் மூஸாவின் சகோதரி அவர்கள் முன் வந்து) ‘‘ உங்களுக்காக இக்குழந்தைக்கு செவிலித்தாயாக இருந்து அதன் நன்மையைக் கவனித்து அதற்கு பொறுப்பேற்றுக் கொள்ளக்கூடிய ஒரு வீட்டுடையாரை நான் உங்களுக்கு அறிவிக்கவா?'' என்று கூறினாள்

[13] (அவர்கள் அனுமதிக்கவே, அவள் மூஸாவுடைய தாயை அழைத்தும் வந்து விட்டாள்.) இவ்வாறு நாம் அவரை அவருடைய தாயிடமே சேர்த்துத் தாயின் கண் குளிர்ந்திருக்கவும் அவள் கவலைப்படாதிருக்கவும் செய்து, அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானதுதான் என்று நிச்சயமாக அவள் அறிந்து கொள்ளும்படியும் செய்தோம். எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறியமாட்டார்கள்

[14] அவர் வாலிபத்தையடைந்து அவருடைய அறிவு பூரணப்பக்குவம் அடையவே, அவருக்கு ஞானத்தையும் கல்வியையும் நாம் அளித்தோம். இவ்வாறே நன்மை செய்பவர்களுக்கு நாம் கூலி தருகிறோம்

[15] (மூஸா ஒரு நாளன்று) மக்கள் அயர்ந்து (பராமுகமாக) இருக்கும் சமயத்தில் அவ்வூரில் சென்றபொழுது இரு வாலிபர்கள் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை அவர் கண்டார். ஒருவன் (இஸ்ரவேலரில் உள்ள) இவர் இனத்தைச் சேர்ந்தவன்; மற்றொருவன் (கிப்திகளாகிய) இவருடைய எதிரிகளில் உள்ளவன். அவனுக்கு எதிராக உதவி செய்யுமாறு இவர் இனத்தைச் சேர்ந்தவன் இவரிடத்தில் கோரிக் கொண்டான். (அதற்கிணங்கி) மூஸா அவனை ஒரு குத்துக் குத்தி அவன் காரியத்தை முடித்து விட்டார். (அதனால் அவன் இறந்து விட்டான். இதை அறிந்த மூஸா) ‘‘ இது ஷைத்தானுடைய வேலை. நிச்சயமாக அவன் வழி கெடுக்கக்கூடிய பகிரங்கமான எதிரி'' எனக் கூறினார்

[16] மேலும், ‘‘ என் இறைவனே! நிச்சயமாக நான் எனக்கே தீங்கிழைத்துக் கொண்டேன். நீ என் குற்றத்தை மன்னிப்பாயாக!'' என்று அவர் பிரார்த்தித்தார். ஆகவே, (இறைவனும்) அவருடைய குற்றத்தை மன்னித்து விட்டான். நிச்சயமாக அவன்தான் மிக்க மன்னிப்பவன், மகா கருணை செய்பவன்

[17] (மேலும் அவர் தன் இறைவனை நோக்கி) ‘‘ என் இறைவனே! என் மீது நீ அருள் புரிந்ததன் காரணமாக (இனி) ஒரு காலத்திலும் நான் குற்றவாளிகளுக்கு உதவுபவனாக இருக்க மாட்டேன்'' என்று கூறினார்

[18] (அன்றிரவு அவருக்கு நிம்மதியாகவே கழிந்தது. எனினும்) காலையில் எழுந்து அந்நகரத்தில் (தன்னைப் பற்றி என்ன நடந்திருக்கிறதோ என்று) பயந்தவராகக் கவனித்துக் கொண்டிருந்த சமயத்தில், நேற்று இவரிடம் உதவி தேடியவன் (மறுமுறையும் தனக்கு உதவி செய்யுமாறு) கூச்சலிட்டு இவரை அழைத்தான். அதற்கு மூஸா அவனை நோக்கி ‘‘ நீ பகிரங்கமான கலகக்காரனாக இருக்கிறாய்'' என்று நிந்தித்து

[19] (அவனுக்கு உதவி செய்ய விரும்பி) அவனுக்கும் தனக்கும் எதிரியாக இருப்பவனைப் பிடிக்க விரும்பினார். (எனினும், இவருடைய இனத்தான் இவர் தன்னையே பிடிக்க வருவதாய்த் தவறாக எண்ணிப் பயந்து) ‘‘ மூஸாவே! நேற்றைய தினம் ஒரு மனிதனைக் கொலை செய்தது போல் என்னையும் நீர் கொலை செய்யக் கருதுகிறீரா? இவ்வூரில் (நீர் கொலை குற்றம் செய்யும்) வம்பனாக இருக்கக் கருதுகிறீரோ தவிர, சீர்திருத்தும் நல்ல மனிதராக இருக்க நீர் நாடவில்லை'' என்று கூச்சலிட்டான்

[20] (இக்கூச்சல் மக்களிடையே பரவி, நேற்று இறந்தவனைக் கொலை செய்தவர் மூஸாதான் என்று மக்களுக்குத் தெரிந்து இவரைப் பழிவாங்கக் கருதினார்கள்.) அச்சமயம் பட்டிணத்தின் கோடியிலிருந்து ஒரு மனிதர் (விரைவாக) ஓடிவந்து மூஸாவே! ‘‘ மெய்யாகவே உம்மைக் கொலை செய்துவிட வேண்டுமென்று தலைவர்கள் முடிவு செய்து கொண்டிருக்கிறார்கள். ஆதலால், நீர் (இவ்வூரைவிட்டு) வெளியேறி விடுவீராக. மெய்யாகவே நான் உமது நன்மைக்கே (இதைக்) கூறுகிறேன்'' என்று கூறினார்

[21] ஆகவே, அவர் (தன்னை மக்கள் என்ன செய்யப் போகின்றனரோ என்று) கவலைப்பட்டுப் பயந்தவராக அவ்வூரை விட்டு வெளியேறி, ‘‘ என் இறைவனே! இவ்வக்கிரமக்கார மக்களிடமிருந்து நீ என்னை பாதுகாத்துக் கொள்வாயாக!'' என்று பிரார்த்தித்தார்

[22] அவர் ‘மத்யன்' பக்கம் செல்லக் கருதிய சமயத்தில் (அதன் வழியை அறியாததனால்) ‘‘ என் இறைவன் அதற்குரிய நேரான வழியை எனக்கு அறிவிக்கக்கூடும்'' (என்று தமக்குள்ளாகவே கூறிக்கொண்டு சென்றார்)

[23] (அவ்வாறு சென்ற அவர்) மத்யன் நகரத்தி(ன் வெளியி)லிருந்த ஒரு கிணற்றின் சமீபமாக வந்தபொழுது ஒரு கூட்டத்தினர் (தங்கள் ஆடு, மாடு, ஆகிய கால் நடைகளுக்குத்) தண்ணீர் புகட்டிக் கொண்டிருப்பதையும், அதற்கருகில் இரு பெண்கள் (தங்கள் ஆட்டு மந்தையை) வளைத்து(த் தடுத்து நிறுத்தி)க் கொண்டிருப்பதையும் கண்டு (அப்பெண்களை நோக்கி) ‘‘ உங்கள் விஷயமென்ன? (எதற்காக நீங்கள் தேங்கி நிற்கிறீர்கள்?)'' என்று கேட்டார். அதற்கு அவ்விரு பெண்களும் ‘‘ இம்மேய்ப்பர்கள் (தங்கள் கால்நடைகளுக்குத் தண்ணீர் புகட்டிக்கொண்டு இங்கிருந்து) விலகும் வரை நாங்கள் (எங்கள் ஆடுகளுக்குத்) தண்ணீர் புகட்ட முடியாது. எங்கள் தந்தையோ வயது முதிர்ந்த கிழவர். (அவர் இங்கு வர முடியாததால் நாங்களே இவற்றை ஓட்டி வந்திருக்கிறோம்)'' என்றார்கள்

[24] (இதைச் செவியுற்ற மூஸா) அவ்விரு பெண்களுடைய கால்நடைகளுக்குத் தண்ணீர் (இறைத்துப்) புகட்டிவிட்டு(ச் சிறிது) விலகி ஒரு (மரத்தின்) நிழலில் அமர்ந்துகொண்டு ‘‘என் இறைவனே! எதை நீ எனக்குத் தந்தபோதிலும் நிச்சயமாக நான் அதை விரும்பக்கூடியவனாகவே இருக்கிறேன்'' என்று பிரார்த்தித்தார்

[25] அச்சமயம் (அவ்விரு பெண்களில்) ஒருத்தி மிக்க நாணத்துடன் இவர் முன் வந்து ‘‘நீர் எங்க(ள் கால்நடைக)ளுக்குத் தண்ணீர் புகட்டியதற்குரிய கூலியை உமக்குக் கொடுக்கும் பொருட்டு மெய்யாகவே என் தந்தை உம்மை அழைக்கிறார்'' என்று கூறி அழைத்துச் சென்றாள். மூஸா அவரிடம் சென்று தன் சரித்திரத்தைக் கூறவே அவர் (இனி) ‘‘ நீர் பயப்பட வேண்டாம். அநியாயக்கார மக்களைவிட்டு நீர் தப்பித்துக் கொண்டீர்'' என்று கூறினார்

[26] (அத்தருணத்தில், அவ்விரு பெண்களில் ஒருத்தி தன் தந்தையை நோக்கி) ‘‘ என் தந்தையே! நீர் இவரைக் கூலிக்கு அமர்த்திக் கொள்வீராக. நீர் கூலிக்கு அமர்த்தியவர்களிலேயே மிகச் சிறந்தவர் (இந்த) நம்பிக்கைக்குரிய பலசாலியே ஆவார்'' என்று கூறினாள்

[27] அதற்கு அவர் (மூஸாவிடம்) கூறினார்: ‘‘ நீர் எனக்கு எட்டு வருடங்கள் வேலை செய்ய வேண்டுமென்ற நிபந்தனையின் மீது இவ்விரு பெண்களில் ஒருத்தியை நான் உமக்கு திருமணம் செய்து கொடுக்க விரும்புகிறேன். நீர் அதைப் பத்து வருடங்களாக முழுமை செய்தால், அது நீர் எனக்கு செய்யும் நன்றிதான். நான் உமக்கு (அதிகமான) சிரமத்தைக் கொடுக்க விரும்பவில்லை. அல்லாஹ் நாடினால், நீர் என்னை உமக்கு உபகாரியாகவே காண்பீர்'' (என்றார்)

[28] அதற்கு மூஸா ‘‘ உமக்கும் நமக்குமிடையே இதுவே (உடன்படிக்கையாகும்). இவ்விரு நிபந்தனைகளில் எதையும் நான் நிறைவேற்றலாம். (இன்னதைத்தான் நிறைவேற்ற வேண்டுமென்று) என்மீது கட்டாயமில்லை. நாம் பேசிக்கொண்ட இவ்வுடன்படிக்கைக்கு அல்லாஹ்வே பொறுப்பாளன்'' என்று கூறினார்

[29] மூஸா தன் தவணையை முழுமை செய்து (அவருடைய புதல்விகளில் ஒருத்தியை திருமணம் செய்தார். பிறகு,) தன் குடும்பத்தாரை அழைத்துக் கொண்டு சென்ற பொழுது (ஓர் இரவு வழி தெரியாது திகைத்துக் கொண்டிருந்த சமயத்தில்) தூர் (‘ஸீனாய்' என்னும்) மலையின் பக்கத்தில் ஒரு நெருப்பைக் கண்டு, தன் குடும்பத்தினரை நோக்கி ‘‘ நீங்கள் (சிறிது) தாமதித்து இருங்கள். நான் ஒரு நெருப்பைக் காண்கிறேன். நான் (அங்கு சென்று நாம் செல்லவேண்டிய) பாதையைப் பற்றி ஒரு தகவலை உங்களுக்குக் கொண்டு வரக்கூடும். அல்லது நீங்கள் குளிர் காய்வதற்கேனும் ஒரு எரி கொள்ளியைக் கொண்டு வருகிறேன்'' என்று கூறினார்

[30] அவர் அதனிடம் வந்தபொழுது, மிக்க பாக்கியம் பெற்ற அந்த மைதானத்தின் ஓடையின் வலது பக்கத்தில் உள்ள ஒரு மரத்தில் இருந்து ‘‘ மூஸாவே! நிச்சயமாக அகிலத்தார்களின் இறைவனான அல்லாஹ் நான்தான்'' என்ற சப்தத்தைக் கேட்டார்

[31] (மேலும்) ‘‘ நீர் உமது தடியை எறிவீராக'' (என்றும் அவருக்குக் கூறப்பட்டது. அவ்வாறே அதை அவர் எறியவே) அது பெரியதொரு பாம்பாகி நெளிவதைக் கண்ட அவர் (பயந்து) அதைப் பின்தொடராது திரும்பி ஓடினார். (அச்சமயத்தில் அவரை நோக்கி) ‘‘ மூஸாவே! பயப்படாதீர். நீர் முன் நோக்கி வருவீராக! நிச்சயமாக நீர் அச்சமற்றவர்

[32] உமது சட்டைப் பையில் உமது கையைப் புகுத்துவீராக. அது மாசற்ற பிரகாசமுள்ள வெண்மையாக வெளிப்படும். நீர் பயப்படாதிருக்கும் பொருட்டு உமது கைகளை உமது விலாவில் சேர்த்துக் கொள்வீராக. ஃபிர்அவ்னிடமும் அவனுடைய தலைவர்களிடமும் நீர் செல்லும் பொருட்டு இவ்விரண்டும் உமது இறைவனால் உமக்கு அளிக்கப்பட்ட இரு அத்தாட்சிகளாகும். நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் மக்களாக இருக்கிறார்கள்'' (என்று அவருக்குக் கூறப்பட்டது)

[33] அதற்கவர் ‘‘ என் இறைவனே! மெய்யாகவே நான் அவர்களில் ஒருவரைக் கொலை செய்திருக்கிறேன். அதற்கு(ப் பழியாக) என்னை அவர்கள் வெட்டி விடுவார்கள் என்று நான் பயப்படுகிறேன். (மேலும், என் நாவிலுள்ள கொன்னலின் காரணமாக என்னால் தெளிவாகப் பேசவும் முடிவதில்லை)

[34] என் சகோதரர் ஹாரூனோ என்னைவிட தெளிவாகப் பேசக்கூடியவர். அவரை நீ எனக்கு உதவியாக என்னுடன் அனுப்பிவை. அவர் என்னை உண்மைப்படுத்தி வைப்பார். (நான் தனியே சென்றால்) அவர்கள் என்னைப் பொய்யாக்கி விடுவார்கள் என்று நிச்சயமாக நான் பயப்படுகிறேன்'' என்று கூறினார்

[35] அதற்கு இறைவன் ‘‘ உமது சகோதரரைக் கொண்டு உமது தோள்களை நாம் வலுப்படுத்துவோம். நாம் உங்களுக்கு வெற்றியையும் தருவோம். ஆகவே அவர்கள் உங்களை நெருங்கவும் முடியாது. நீங்கள் நமது (இந்த)அத்தாட்சிகளுடன் (தயக்கமின்றிச் செல்லுங்கள்.) நீங்களும் உங்கள் இருவரைப் பின்பற்றியவர்களும்தான் வெற்றி பெறுவீர்கள்'' என்று கூறினான்

[36] நம் தெளிவான அத்தாட்சிகளுடன் மூஸா அவர்களிடம் வந்தபொழுது அவர்கள் ‘‘இது கற்பனை செய்யப்பட்ட சூனியத்தைத் தவிர வேறில்லை. முன்னிருந்த எங்கள் மூதாதைகளிடத்திலும் இத்தகைய விஷயத்தை நாம் கேள்விப்படவில்லை'' என்று கூறினார்கள்

[37] அதற்கு மூஸா ‘‘ தன் இறைவனிடமிருந்து நேரான வழியைக் கொண்டு வந்தவன் யார் என்பதையும், நல்ல முடிவு யாருக்குக் கிடைக்கும் என்பதையும் என் இறைவனே நன்கறிவான். நிச்சயமாக (சூனியம் செய்யும்) அநியாயக்காரர்கள் வெற்றி பெறமாட்டார்கள்'' என்று கூறினார்

[38] அதற்கு ஃபிர்அவ்ன் (தன் மக்களில் உள்ள தலைவர்களை நோக்கி) ‘‘ தலைவர்களே! என்னைத் தவிர வேறொரு கடவுள் உங்களுக்கு இருப்பதாக நான் அறியவில்லை. ஹாமானே! களிமண்(ணால் செய்த செங்கல்) சூளைக்கு நெருப்பு வை. (அச்செங்கற்களைக் கொண்டு வானளாவ) மாளிகையை நீ கட்டு. (அதில் ஏறி) மூஸாவினுடைய கடவுளை நான் பார்க்க வேண்டும். (அவர் தனக்கு வேறு கடவுள் இருப்பதாகக் கூறுகிறாரே!) இவ்விஷயத்தில் நிச்சயமாக அவர் பொய் சொல்வதாகவே நான் எண்ணுகிறேன்'' என்று கூறினான்

[39] அவனும் அவனுடைய இராணுவங்களும் நியாயமின்றிப் பூமியில் பெருமை அடித்தனர், நிச்சயமாக அவர்கள் நம்மிடம் (விசாரணைக்காக) கொண்டுவரப்பட மாட்டார்கள் என்றும் எண்ணிக் கொண்டனர்

[40] ஆதலால், நாம் அவனையும் அவனுடைய இராணுவங்களையும் பிடித்து அவர்களை கடலில் எறிந்து (மூழ்கடித்து) விட்டோம். (நபியே!) இவ்வக்கிரமக்காரர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதை நீர் கவனிப்பீராக

[41] (அவர்கள் இவ்வுலகத்தில் இருந்தவரை மனிதர்களை) நரகத்திற்கு அழைக்கக்கூடிய தலைவர்களாகவே அவர்களை ஆக்கிவைத்தோம். மறுமை நாளிலோ அவர்களுக்கு எத்தகைய உதவியும் கிடைக்காது

[42] இவ்வுலகில் நம் சாபம் அவர்களைப் பின்பற்றும்படி செய்தோம். மறுமை நாளிலோ அவர்களுடைய நிலைமை மிக்க கேடானதாகவே இருக்கும்

[43] (அவர்களுக்கு) முன்னிருந்த வகுப்பார்களையும் நாம் அழித்துவிட்ட பின்னர் (அவர்களுடைய வேதங்களும் அழிந்து விட்டதனால்) நிச்சயமாக நாம் மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம். அது மனிதர்களுக்கு நல்ல படிப்பினை தரக்கூடியதாகவும், நேரான வழியாகவும், அருளாகவும் இருந்தது. அவர்கள் (இதைக் கொண்டு) நல்லுணர்ச்சி பெறுவார்களாக

[44] (நபியே! தூர் ஸீனாய் என்னும் மலையில்) நாம் மூஸாவுக்குக் (கற்பலகையில் எழுதப்பட்ட) கட்டளைகளை விதித்தபோது நீர் அதன் மேற்குத் திசையிலும் இருக்கவில்லை. அதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களிலும் நீர் இருக்கவில்லை

[45] எனினும், (அவர்களுக்குப் பின்னர்) எத்தனையோ வகுப்பினரை நாம் உற்பத்தி செய்தோம். அவர்கள் சென்றும் நீண்ட காலம் ஆகிவிட்டது. (அவ்வாறிருந்தும் மூஸாவைப் பற்றிய இவ்வளவு உண்மையான சரித்திரத்தை நீர் கூறுவதெல்லாம் இறைவனால் உமக்கு அறிவிக்கப்பட்டதால்தான் என்று இவர்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?) மேலும், (நபியே!) மத்யன் வாசிகளிடமும் நீர் தங்கியிருக்கவில்லை. (அவ்வாறிருந்தும் அவர்களைப் பற்றிய) நம் வசனங்களை நீர் இவர்களுக்கு ஓதிக் காண்பிக்கிறீர். ஆகவே, நிச்சயமாக நாம் உம்மை நம் தூதர்களில் ஒருவராகவே அனுப்பிவைத்திருக்கிறோம். (நம் வஹ்யி மூலம் கிடைத்த விஷயங்களையே நீர் அவர்களுக்கு அறிவிக்கிறீர்)

[46] மேலும், (தூர் ஸீனாய் என்னும் மலைக்கு மூஸாவை) நாம் அழைத்த பொழுது (அந்தத்) தூர் (என்னும்) மலையின் அருகிலும் நீர் இருக்கவில்லை. எனினும், உமக்கு முன்னர் (நமது) தூதர் ஒருவருமே வராத (இந்த) மக்களுக்கு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் பொருட்டே உமது இறைவனின் அருளால் (இவ்விஷயம் உமக்கு அறிவிக்கப்பட்டது). அவர்கள் (இதைக் கொண்டு) நல்லுணர்ச்சி பெறுவார்களாக

[47] (நபியே! உமது மக்களாகிய) இவர்களின் கைகள் செய்த (தீய) செயலின் காரணமாக இவர்களை ஒரு வேதனை வந்தடையும் சமயத்தில் ‘‘ எங்கள் இறைவனே! எங்களிடம் ஒரு தூதரை அனுப்பி வைக்க வேண்டாமா? (அவ்வாறு நீ அனுப்பியிருந்தால்) உன் வசனங்களை நாங்கள் பின்பற்றி (உன்னை) நம்பிக்கை கொண்டிருப்போமே'' என்று கூறாதிருக்கும் பொருட்டே (உம்மை நம் தூதராக இவர்களிடம் அனுப்பிவைத்தோம்)

[48] எனினும், இத்தகைய உண்மை (விஷயங்களையுடைய சத்திய வேதம்) நம்மிடமிருந்து இவர்களிடம் வந்த சமயத்தில் (இதை நம்பிக்கை கொள்வதற்குப் பதிலாக) இவர்கள் ‘‘ மூஸாவுக்கு கொடுக்கப்பட்ட அற்புதங்களைப் போல் இவருக்கும் கொடுக்கப்பட வேண்டாமா?'' என்று கூறுகின்றனர். (என்னே!) இதற்கு முன்னர் மூஸாவுக்குக் கொடுக்கப்பட்ட அற்புதங்களையும் இவர்(களின் மூதாதை)கள் நிராகரித்து விடவில்லையா? ‘‘ (மூஸாவும், ஹாரூனும்) ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ளும் சூனியக்காரர்கள் என்று இவர்கள் கூறியதுடன், நிச்சயமாக நாங்கள் இவ்விருவரையும் நிராகரித்து விட்டோம்'' என்றும் கூறினார்கள்

[49] ஆகவே, (நபியே! அவர்களை நோக்கி) ‘‘ மெய்யாகவே நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால், அல்லாஹ்விடமிருந்து வந்த வேதங்களில் (மூஸாவுடைய வேதம், இன்னும் திரு குர்ஆன் ஆகிய) இவ்விரண்டையும் விட நேரான வழியை அறிவிக்கக்கூடிய ஒரு வேதத்தை நீங்கள் கொண்டு வாருங்கள். நானும் அதைப் பின்பற்றுகிறேன்'' என்று கூறுவீராக

[50] உமக்கு அவர்கள் பதில் சொல்லாவிடில், நிச்சயமாக அவர்கள் தங்கள் சரீர இச்சையையே பின்பற்றுகிறார்கள் என்று உறுதியாக நீர் அறிந்து கொள்வீராக. அல்லாஹ்வுடைய நேரான வழியை தவிர்த்து விட்டுத் தன் சரீர இச்சையைப் பின்பற்றுபவனை விட வழிகெட்டவன் எவனுமுண்டோ! நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்கார மக்களை நேரான வழியில் செலுத்துவதில்லை

[51] அவர்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு நம் வசனத்தை மேன்மேலும் அவர்களுக்கு (இறக்கி)ச் சேர்ப்பித்தே வந்தோம்

[52] ஆகவே, இதற்கு முன்னர் எவர்களுக்கு நாம் (நம்) வேதத்தைக் கொடுத்தோமோ, அவர்கள் இதை உண்மையாகவே நம்பிக்கை கொள்கிறார்கள்

[53] அவர்கள் மீது (இவ்வேதம்) ஓதிக் காண்பிக்கப்பட்டால் அதற்கவர்கள் ‘‘ இதை நாங்கள் நம்பிக்கை கொண்டோம். நிச்சயமாக இது எங்கள் இறைவனிடமிருந்து வந்த உண்மை(யான வேதம்)தான். இதற்கு முன்னதாகவே நிச்சயமாக நாங்கள் இதை (எங்கள் வேதத்தின் மூலம் அறிந்து) ஏற்றுக் கொண்டிருக்கிறோம்'' என்று கூறுவார்கள்

[54] இவர்கள் உறுதியாக இருந்ததன் காரணத்தால், இரண்டு தடவைகள் அவர்களுக்கு (நற்)கூலி கொடுக்கப்படும். இவர்கள், தீய காரியங்களை நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வார்கள். நாம் அவர்களுக்கு அளித்தவற்றில் இருந்து அவர்கள் தானமும் செய்வார்கள்

[55] மேலும், அவர்கள் வீணான வார்த்தைகளைக் கேள்வியுற்றால் (அதில் சம்பந்தப்படாது) அதைப் புறக்கணித்து விட்டு ‘‘ எங்கள் காரியங்கள் எங்களுக்கும், உங்கள் காரியங்கள் உங்களுக்கும் (பெரியது). உங்களுக்கு ‘ஸலாம்.' அறியாதவர்களை (அவர்களிடம் தர்க்கிக்க) நாங்கள் விரும்புவதில்லை'' என்று கூறுவார்கள்

[56] (நபியே!) நிச்சயமாக இவர்களில் நீர் விரும்பியவர்களை நேரான வழியில் செலுத்த உம்மால் முடியாது. எனினும் அல்லாஹ், தான் விரும்பியவர்களை(த்தான்) நேரான வழியில் செலுத்துகிறான். நேரான வழியில் செல்லத் தகுதியுடையவர் யார் என்பதை அவனே நன்கறிவான்

[57] (நபியே! மக்காவாசிகளான) இவர்கள் (உம்மை நோக்கி) ‘‘ நாங்கள் உம்முடன் இந்த குர்ஆனைப் பின்பற்றினால், எங்கள் ஊரில் இருந்த நாங்கள் (இறாய்ஞ்சித்) தூக்கிச் செல்லப்பட்டு விடுவோம்'' என்று கூறுகின்றனர். (இவர்கள் சிந்திக்க வேண்டாமா?) அபயமளிக்கும் மிக்க கண்ணியமான இடத்தில் (இவர்கள் வசித்திருக்க) இவர்களுக்கு நாம் வசதி அளிக்கவில்லையா? ஒவ்வொரு கனிவர்க்கமும் உணவாக நம்மிடமிருந்து அங்கு வந்து குவிந்து கொண்டே இருக்கிறது. எனினும், இவர்களில் பெரும்பாலானவர்கள் (இதன் நன்றியை) அறிய மாட்டார்கள்

[58] (இவர்களைப் போன்று) தன் வாழ்க்கைத் தரத்தால் கொழுத்துத் திமிர் பிடித்த எத்தனையோ ஊரார்களை நாம் அழித்திருக்கிறோம். இதோ! (பாருங்கள்.) இவை அனைத்தும் அவர்கள் வசித்திருந்த இடங்கள்தான். சொற்ப இடங்களைத் தவிர அவற்றில் பல அவர்களுக்குப் பின்னர் வசிக்கப்படவில்லை. நாம்தான் (அவற்றுக்கு) வாரிசுகளாக இருக்கிறோம்

[59] (நபியே!) உமது இறைவன் (தன்) தூதரை (மக்களின்) தலை நகரங்களுக்கு அனுப்பி, அவர்களுக்கு நம் வசனங்களை அவர் ஓதிக் காண்பிக்காத வரை எவ்வூராரையும் அழிப்பதில்லை. எந்த ஊராரையும் அவர்கள் அநியாயம் செய்து கொண்டிருக்கும் நிலையிலேயே தவிர நாம் அழிக்கவில்லை

[60] (நபியே! கூறுவீராக:) உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருப்பவை எல்லாம் இவ்வுலக வாழ்க்கையிலுள்ள அற்ப சுகமும், அதனுடைய அலங்காரமும்தான். (எனினும்,) அல்லாஹ் விடத்தில் இருப்பவையோ மிக்க மேலானவையும் நிலையானவையும் ஆகும். இதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டாமா

[61] எவனுக்கு நாம் (மறுமையில்) நன்மை தருவதாக வாக்களித்து அதை அவன் அடையக்கூடியவனாகவும் இருக்கிறானோ அவன், எவனுக்கு நாம் இவ்வுலகத்தில் அற்ப சுகத்தை அனுபவிக்கும்படி விட்டுவைத்துப் பின்னர் மறுமையில் (அதற்குக் கணக்குக் கொடுக்கும்படி) நம்மிடம் பிடித்துக் கொண்டு வரப்படுவானோ அவனைப் போலாவானா? (இவ்விருவரும் சமமாக மாட்டார்கள்)

[62] (இறைவன்) அவர்களை (விசாரணைக்காக) அழைக்கும் நாளில் (அவர்களை நோக்கி ‘‘ பொய்யான தெய்வங்களை) எனக்கு இணையானவை என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்களே! அவை எங்கே?'' என்று கேட்பான்

[63] (இணைவைக்கும்படி செய்து வழிகெடுத்தவர்களில்) எவர்கள் மீது நம் தண்டனை விதிக்கப்பட்டு விட்டதோ அவர்கள் (இறைவனை நோக்கி) ‘‘ எங்கள் இறைவனே! நாங்கள் வழி கெடுத்தவர்கள் இவர்கள்தான். (எனினும், எவருடைய நிர்ப்பந்தமுமின்றி) எவ்வாறு நாங்கள் வழி கெட்டோமோ அவ்வாறே இவர்களையும் (எவ்வித நிர்ப்பந்தமுமின்றியே) வழி கெடுத்தோம். ஆதலால், உன்னிடம் (அவர்களுடைய பொறுப்பிலிருந்து) நாங்கள் விலகிக் கொள்கிறோம். அவர்கள் எங்களை வணங்கிக் கொண்டிருக்கவும் இல்லை'' என்று கூறுவார்கள்

[64] பின்னர், தங்கள் பொய்யான தெய்வங்களை (உதவிக்கு) அழைக்கும் படி அவர்களுக்குக் கூறப்பட்டு, அவ்வாறே அவர்கள் அவற்றையும் அழைப்பார்கள். எனினும், அவை இவர்களுக்கு (வாய் திறந்து) பதிலும் கொடுக்கா. (அதற்குள்ளாக) இவர்கள் தங்கள் வேதனையைக் கண்டு கொள்வார்கள். இவர்கள் நேரான வழியில் சென்றிருந்தால் (இக்கதிக்கு ஆளாகியிருக்க மாட்டார்கள்)

[65] அவர்கள் (விசாரணைக்காக) அழைக்கப்படும் நாளில், (அவர்களை நோக்கி, நேரான வழியில் அழைக்க உங்களிடம் வந்த நம்) தூதர்களுக்கு நீங்கள் என்ன பதில் கூறினீர்கள்?'' என்று கேட்கப்படும்

[66] அந்நேரத்தில் எல்லா விஷயங்களையும் அவர்கள் மறந்து தடுமாறி (எதைப் பற்றியும்) ஒருவர் ஒருவரைக் கேட்க சக்தியற்றுப் போவார்கள்

[67] எனினும், (இவர்களில்) எவர்கள் கைசேதப்பட்டு (பாவத்தில் இருந்து) விலகி, மன்னிப்புக் கோரி, நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்கள் வெற்றி அடைந்தவர்களில் சேர்ந்து விடுவார்கள்

[68] (நபியே!) உமது இறைவன், தான் விரும்பியவர்களை படைத்து(த் தன் தூதுக்காக அவர்களில்) தான் விரும்பியவர்களைத் தேர்ந்தெடுக்கிறான். (அவ்வாறு தூதரைத்) தேர்ந்தெடுப்பதில் இவர்களுக்கு எத்தகைய உரிமையும் இல்லை. இவர்கள் இணை வைப்பவற்றிலிருந்து அல்லாஹ் மிக்க உயர்ந்தவனும் பரிசுத்தமானவனும் ஆவான்

[69] உமது இறைவன் அவர்களுடைய உள்ளங்கள் மறைத்து வைத்திருப்பதையும் (அதற்கு மாறாக) அவர்கள் வெளியிடுவதையும் நன்கறிவான்

[70] அவன்தான் அல்லாஹ்; அவனைத்தவிர வணக்கத்திற்குரிய இறைவன் இல்லவே இல்லை. இம்மையிலும், மறுமையிலும் புகழ் அனைத்தும் அவனுக்கே உரியன! (மறுமையில் தீர்ப்பு கூறும்) அதிகாரமும் அவனுக்கே உரியது! ஆதலால், (மறுமையில்) நீங்கள் (அனைவரும்) அவனிடமே கொண்டுவரப்படுவீர்கள்

[71] (நபியே!) நீர் கேட்பீராக: ‘‘ இரவை மறுமை நாள் வரை உங்கள் மீது நீண்டிருக்கும்படி அல்லாஹ் செய்து விட்டால், உங்களுக்கு(ப் பகலின்) வெளிச்சத்தைக் கொண்டுவரக்கூடிய இறைவன் அல்லாஹ்வையன்றி வேறு ஒருவன் இருக்கிறானா?'' (இக்கேள்வியை) நீங்கள் செவியுற வேண்டாமா

[72] (மேலும் நபியே!) நீர் கேட்பீராக: ‘‘ பகலை இறுதி நாள் வரை உங்களுக்கு நீண்டிருக்கும்படி அல்லாஹ் செய்து விட்டால், நீங்கள் இளைப்பாறக்கூடிய இரவை உங்களுக்குக் கொண்டு வரக்கூடிய இறைவன் அல்லாஹ்வையன்றி வேறொருவன் இருக்கிறானா?'' (இதை) நீங்கள் (படிப்பினை பெறும் கண்கொண்டு) பார்க்க வேண்டாமா

[73] (அவ்வாறின்றி) நீங்கள் இளைப்பாறுவதற்கு இரவையும் (பல இடங்களுக்குச் சென்று வாழ்க்கைக்குத் தேவையான) அவனுடைய அருளை நீங்கள் தேடிக் கொள்ளும் பொருட்டு பகலையும் உங்களுக்கு அவன் ஏற்படுத்தி இருப்பதற்கு அவனுடைய அருள்தான் காரணம். இதற்கு நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்துவீர்களாக

[74] (நபியே!) அல்லாஹ் அவர்களை (விசாரணைக்காக) அழைத்து, ‘‘ எனக்கு இணையானவை என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்களே அவை எங்கே?'' என்று கேட்கும் நாளை அவர்களுக்கு ஞாபகமூட்டுவீராக

[75] ஒவ்வொரு வகுப்பாரிலிருந்தும் (நம் தூதர்களை) அவர்களுக்கு எதிரான சாட்சிகளாக அழைத்துக் கொண்டு (அவர்களை நோக்கி ‘‘ என்னையன்றி பிற படைப்புகளை தெய்வங்களென நீங்கள் கூறிக் கொண்டிருந்தீர்களே) அதற்குரிய உங்கள் அத்தாட்சிகளைக் கொண்டு வாருங்கள்'' என்று நாம் கூறும் சமயத்தில், அவர்கள் பொய்யாகக் கூறிக் கொண்டிருந்த தெய்வங்களெல்லாம் மறைந்து, உண்மை(யான இறைத் தன்மை) அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானதென்பதை அவர்கள் திட்டமாக அறிந்து கொள்வார்கள்

[76] காரூன் (என்பவன்) மூஸாவுடைய சமுதாயத்தில் உள்ளவனாக இருந்தான். எனினும், அவர்கள் மீது அவன் அநியாயங்கள் செய்யத் தலைப்பட்டான். ஏராளமான பொக்கிஷங்களை நாம் அவனுக்குக் கொடுத்திருந்தோம். அவற்றின் சாவிகளை மாத்திரம் பலசாலிகளான எத்தனையோ பேர்கள் மிக்க சிரமத்தோடு சுமக்க வேண்டியிருந்தது. (இத்தகைய நிலையில் அவனை நோக்கி) அவனுடைய மக்கள் ‘‘ நீ (கர்வத்துடன்) மகிழ்ச்சி அடையாதே! (கர்வம் கொண்டு) மகிழ்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் விரும்புவதில்லை'' என்றும்

[77] ‘‘ (உன்னிடம் இருக்கும் பொருள்களை எல்லாம் அல்லாஹ்வே உனக்குக் கொடுத்தான். ஆகவே) அல்லாஹ் உனக்கு கொடுத்திருப்பதில் (தானம் செய்து) மறுமை வீட்டைத் தேடிக்கொள். இம்மையில் (தானம் செய்து நீ தேடிக் கொண்டதுதான்) உன் பாகம் என்பதை நீ மறந்துவிடாதே! அல்லாஹ் உனக்கு(க் கொடுத்து) உதவி செய்தவாறு அதை(க் கொண்டு பிறருக்கு) நீயும் (தானம் செய்து) உதவி செய். பூமியில் நீ விஷமம் செய்ய விரும்பாதே! ஏனென்றால், விஷமிகளை நிச்சயமாக அல்லாஹ் விரும்புவதில்லை'' என்றும் கூறினார்கள்

[78] அதற்கவன் ‘‘ (என்னிடம் இருக்கும்) பொருள்களை எல்லாம் என் சொந்த அறிவி(ன் திறமையி)னால்தான் நான் அடைந்தேன். (இதில் அல்லாஹ்வின் அருள் ஒன்றுமில்லை)'' என்று (பதில்) கூறினான். இவனுக்கு முன்னிருந்த கூட்டத்தார்களில் இவனைவிட பலசாலிகளாகவும், இவனைவிட அதிகப் பொருள் உடையவர்களாகவும் இருந்த எத்தனையோ பேர்களை அல்லாஹ் நிச்சயமாக அழித்திருக்கிறான் என்பதை இவன் அறியவில்லையா? குற்றவாளிகளிடம் அவர்களின் பாவங்களைப் பற்றி கேட்கப்பட மாட்டாது. (அதற்குரிய தண்டனையை அவர்கள் அடைந்தே தீருவார்கள்)

[79] அவன் (ஒரு நாள் மிக்க ஆடம்பரமான) தன் அலங்காரத்துடன் தன் மக்கள் முன் சென்றான். (அதைக் கண்ணுற்றவர்களில்) எவர்கள் இவ்வுலக வாழ்க்கையை (பெரிதென) விரும்பியவர்களாக இருந்தார்களோ அவர்கள் ‘‘ காரூனுக்கு கொடுக்கப்பட்டது போன்று நமக்கும் கொடுக்கப்பட வேண்டுமே! நிச்சயமாக அவன் பெரும் பாக்கியவான்'' என்று கூறினார்கள்

[80] எனினும், அவர்களில் எவர்களுக்கு மெய்யான ஞானம் கொடுக்கப்பட்டிருந்ததோ அவர்கள் (மற்றவர்களை நோக்கி) ‘‘ உங்களுக்கு என்ன கேடு? (இவ்வாறு ஏன் கூறுகிறீர்கள்?) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்தவர்களுக்கு (மறுமையில்) அல்லாஹ் கொடுக்கும் கூலியோ (இதை விட) எவ்வளவோ மேலானது. அதைப் பொறுமையாளர்களைத் தவிர (மற்ற எவரும்) அடைய மாட்டார்கள்'' என்று கூறினார்கள்

[81] அவனையும், அவனுடைய மாளிகையையும் பூமியில் சொருகி விட்டோம். அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்யக்கூடிய கூட்டத்தார் ஒருவரும் அவனுக்கு இருக்கவில்லை. அல்லது அவன் தன்னைத்தானே (அல்லாஹ்வின் பிடியிலிருந்து) காப்பாற்றிக் கொள்ளவும் முடியவில்லை

[82] நேற்றைய தினம் அவனுடைய பதவியை விரும்பியவர்களெல்லாம் (அவனும், அவனுடைய மாளிகையும் பூமியில் சொருகிப்போனதைக் கண்ணுற்றதும் திடுக்கிட்டு நாணமுற்று) என்ன நேர்ந்தது! நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களில் தான் விரும்பியவர்களுக்கு ஏராளமாகக் கொடுக்கிறான்; (அவன் விரும்பியவர்களுக்கு) குறைத்தும் விடுகிறான் என்றும், (மனிதனுடைய சாமர்த்தியத்தால் மட்டும் ஒன்றும் ஆவதில்லை என்றும்) தெரிகின்றதே! அல்லாஹ் நம்மீது அருள் புரிந்திருக்காவிடில் அவ்வாறே நம்மையும் பூமியில் சொருகி இருப்பான். (என்று கூறினர். பிறகு திடுக்கிட்டு, நாணமுற்று) என்ன நேர்ந்தது! நிச்சயமாக (இறைவனின் அருட்கொடையை மறுக்கும்) நன்றி கெட்டவர்கள் வெற்றி அடையவே மாட்டார்கள் என்று தெரிகின்றதே! என்று கூற ஆரம்பித்தார்கள்

[83] (மிக்க பாக்கியம் பெற்ற) மறுமையின் வீட்டையோ, பூமியில் பெருமையையும் விஷமத்தையும் விரும்பாதவர்களுக்கே நாம் சொந்தமாக்கி விடுவோம். முடிவான நற்பாக்கியம் இறையச்சம் உடையவர்களுக்குத்தான் உண்டு

[84] (உங்களில்) எவரேனும் ஒரு நன்மையை(ச் செய்தால், அவருக்கு அதைவிட மேலான கூலியே கிடைக்கும். உங்களில் எவர்கள் பாவத்தை செய்வார்களோ அவர்கள் தாங்கள் செய்த பாவங்களின் அளவே தவிர (அதற்கதிகமாகத்) தண்டிக்கப்பட மாட்டார்கள்

[85] (நபியே!) நிச்சயமாக எவன் இந்த குர்ஆனின் கட்டளைகளை உம் மீது விதித்து இருக்கிறானோ அவன் நிச்சயமாக உம்மை (மக்காவாகிய) உமது இல்லத்தில் திரும்பச் சேர்த்து வைப்பான். ஆகவே, (நபியே!) கூறுவீராக: நேரான வழியைக் கொண்டு வந்தவர் யார்? (அதை மறுத்துப்) பகிரங்கமான வழிகேட்டில் இருப்பவர் யார்? என்பதை என் இறைவன் நன்கறிவான்

[86] (நபியே!) இவ்வேதம் உமக்குக் கொடுக்கப்படும் என்று நீர் எதிர்பார்த்திருக்கவில்லை. எனினும் உமது இறைவனின் அருளினால்தான் (இது உமக்கு கொடுக்கப்பட்டது). ஆகவே, நிச்சயமாக நீர் நிராகரிப்பவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டாம்

[87] இவ்வேதம் உமக்கு அருளப்பட்ட பின் (இதிலுள்ள) அல்லாஹ்வுடைய வசனங்களி(ன் பக்கம் நீர் மக்களை அழைப்பதி)லிருந்து அவர்கள் உம்மை தடுத்துவிட வேண்டாம். ஆகவே, உமது இறைவன் பக்கம் (நீர் அவர்களை) அழைத்துக் கொண்டேயிருப்பீராக. நிச்சயமாக இணைவைத்து வணங்குபவர்களுடன் சேர்ந்து விட வேண்டாம்

[88] (நபியே!) அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு கடவுளை நீர் அழைக்க வேண்டாம். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு கடவுள் இல்லவே இல்லை. அவனது திருமுகத்தைத் தவிர எல்லா பொருள்களும் அழிந்துவிடக் கூடியனவே. எல்லா அதிகாரங்களும் அவனுக்குரியனவே. அவனிடமே நீங்கள் அனைவரும் கொண்டு வரப்படுவீர்கள்

அல்அன்கபூத்

Surah 29

[1] அலிஃப் லாம் மீம்

[2] மனிதர்கள் ‘‘ நாங்கள் நம்பிக்கை கொண்டோம்'' என்று கூறினால் (மட்டும் போதுமானது, அதைப் பற்றி) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரா

[3] இவர்களுக்கு முன்னிருந்தவர்களை எல்லாம் நிச்சயமாக நாம் சோதித்தே இருக்கிறோம். ஆகவே, (நம்பிக்கை கொண்டோம் என்று கூறுகின்ற) இவர்களில் உண்மை சொல்பவர்கள் எவர்கள் என்பதை நிச்சயமாக அல்லாஹ் (சோதித்து) அறிந்து கொள்வான். (அவ்வாறே இதில்) பொய் சொல்பவர்கள் எவர்கள் என்பதையும் நிச்சயமாக அவன் (சோதித்து) அறிந்து கொள்வான்

[4] அல்லது பாவங்களைச் செய்பவர்கள் (தண்டனை அடையாது) நம்மை விட்டுத் தப்பித்துக் கொள்வார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரா? (அவ்வாறாயின் இதைப் பற்றிய) அவர்களுடைய தீர்மானம் மகா கெட்டது

[5] எவர்கள் அல்லாஹ்வைச் சந்திப்போம் என நம்புகிறார்களோ அவர்கள் (அதற்கு வேண்டிய காரியங்களைச் செய்து கொள்ள வேண்டியது அவசியம். ஏனென்றால்) அதற்காக அல்லாஹ் ஏற்படுத்திய தவணை நிச்சயமாக வந்தே தீரும். அவன் (அனைத்தையும்) செவியுறுபவனும் நன்கறிந்தவனும் ஆவான்

[6] (அல்லாஹ்வுடைய வழியில்) எவரேனும் கடின முயற்சி மேற்கொண்டால், நிச்சயமாக அவர் தன் நலனுக்காகவே முயன்றவராகிறார். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் உலகத்தாரின் (உதவி) தேவையற்றவன்

[7] ஆகவே, எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுடைய பாவத்திற்கு (அவற்றைப்) பரிகாரமாக்கி வைத்து அவர்கள் செய்ததைவிட மிக்க அழகான கூலியையே நிச்சயமாக நாம் அவர்களுக்குக் கொடுப்போம்

[8] தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாக நாம் மனிதனுக்கு நல்லுபதேசம் செய்திருக்கிறோம். (எனினும், கடவுள் என்பதற்கு) எவ்வித ஆதாரமும் இல்லாதவற்றை எனக்கு இணையாக்கும்படி (மனிதனே!) அவர்கள் உன்னை நிர்ப்பந்தித்தால் (அவ்விஷயத்தில்) நீ அவர்களுக்கு கீழ்ப்படியாதே! என்னிடமே நீங்கள் திரும்ப வேண்டியதிருக்கிறது. நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி (நன்மையா தீமையா என்பதை) அச்சமயம் நான் உங்களுக்கு அறிவித்துவிடுவேன்

[9] எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களை நிச்சயமாக நாம் நல்லவர்களுடன் சேர்த்துவிடுவோம்

[10] மனிதர்களில் சிலர் இருக்கின்றனர்: அவர்கள் ‘‘ நாங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கிறோம்'' என்று கூறுகின்றனர். எனினும், அவர்களுக்கு அல்லாஹ்வுடைய வழியில் ஏதும் துன்பம் ஏற்பட்டால், மக்களால் ஏற்படும் அத்துன்பத்தை அல்லாஹ்வுடைய வேதனையைப் போல் (மிகப் பெரிதாக) ஆக்கி (உங்களிடமிருந்து விலகி)க் கொள்(ள விரும்பு)கின்றனர். உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு ஒரு உதவி கிடைத்தால் ‘‘ நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருந்தோம்'' என்று கூறுகின்றனர். உலகத்தாரின் உள்ளங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கு அறிந்தவனாக இல்லையா

[11] ஆகவே, இவர்களில் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்கள் எவர்கள் என்பதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான். (உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும்) நயவஞ்சகர்கள் எவர்கள் என்பதையும் அவன் நன்கறிவான்

[12] நிராகரிப்பவர்கள், நம்பிக்கையாளர்களை நோக்கி ‘‘ நீங்கள் எங்கள் வழியைப் பின்பற்றுங்கள். (அதனால் ஏதும் குற்றங்குறைகள் ஏற்பட்டால்) உங்கள் குற்றங்களை நாங்கள் சுமந்து கொள்கிறோம்'' என்று கூறுகின்றனர். எனினும், அவர்களின் (நம்பிக்கையாளர்களின்) குற்றங்களிலிருந்து எதையுமே அவர்கள் (-நிராகரிப்பவர்கள்) சுமந்துகொள்ள மாட்டார்கள். நிச்சயமாக அவர்கள் பொய்யர்களே

[13] ஆயினும், அவர்கள் தங்கள் பாவச் சுமைகளையும் இன்னும் தங்கள் பாவச் சுமைகளுடன் (மனிதர்களை வழி கெடுத்த) பாவச்சுமைகளையும் நிச்சயமாக சுமப்பார்கள். மேலும், அவர்கள் இவ்வாறு பொய்யாகக் கற்பனை செய்து கூறிக்கொண்டிருந்ததைப் பற்றியும் நிச்சயமாக அவர்கள் மறுமை நாளில் கேட்கப்படுவார்கள்

[14] நூஹ் நபியை நம் தூதராக அவருடைய மக்களிடம் நாம் அனுப்பி வைத்தோம். அவர் ஐம்பது குறைய ஓராயிரம் வருடங்கள் அவர்களிடையே இருந்தார். (இவ்வளவு காலமிருந்தும் அவரை அவருடைய மக்களில் சிலரைத் தவிர பெரும்பாலானவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. இவ்வாறு) அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்ததனால் வெள்ளப் பிரளயம் அவர்களைப் பிடித்துக் கொண்டது

[15] எனினும், அவரையும் (அவருடைய) கப்பலில் இருந்தவர்களையும் நாம் பாதுகாத்துக் கொண்டு இச்சம்பவத்தை உலகத்தாருக்கு நாம் ஒரு படிப்பினையாக ஆக்கினோம்

[16] இப்றாஹீமை (நம் தூதராக அவருடைய மக்களிடம் அனுப்பிவைத்த சமயத்தில்) அவர் தன் மக்களை நோக்கி ‘‘ நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்கி அவனையே நீங்கள் அஞ்சி நடங்கள். நீங்கள் சிந்தித்துப் பார்த்தால் இதுவே உங்களுக்கு மிக்க நல்லதாகும்'' (என்பதை அறிந்து கொள்வீர்கள்)

[17] தவிர, அல்லாஹ்வை அன்றி சிலைகளைத்தான் நீங்கள் வணங்குகிறீர்கள். நீங்கள் பொய்யை கற்பனை செய்கிறீர்கள். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்கும் இவை உங்களுக்கு உணவளிக்க சிறிதும் சக்தியற்றவை. ஆகவே, (உங்களுக்கு வேண்டிய) உணவை அல்லாஹ்விடமே கோரி, அவ(ன் ஒருவ)னையே வணங்கி, அவனுக்கு நன்றி செலுத்தியும் வாருங்கள். அவனிடமே நீங்கள் கொண்டு செல்லப்படுவீர்கள்'' என்றும் கூறினார்

[18] (இப்றாஹீமே! மக்களை நோக்கி நீர் கூறுவீராக:) ‘‘ நீங்கள் (என்னைப்) பொய்யாக்கினால் (அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஏனென்றால்,) உங்களுக்கு முன்னுள்ள மக்களும் (தங்களிடம் வந்த தூதர்களை இவ்வாறே) பொய்யாக்கி இருக்கின்றனர். நம் தூதை (மக்களுக்கு)ப் பகிரங்கமாக எடுத்துரைப்பதைத் தவிர அவர்(களை நிர்ப்பந்திப்பது) அத்தூதர் மீது கடமையில்லை

[19] (ஒன்றுமில்லாதிருந்த) படைப்புகளை அல்லாஹ் எவ்வாறு ஆரம்பத்தில் வெளியாக்கினான் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? (அவ்வாறே மரணித்த) பின்னரும் அவற்றை மீளவைப்பான். நிச்சயமாக இ(வ்வாறு செய்வ)து அல்லாஹ்வுக்கு மிக்க சுலபமானதே!'' (என்று கூறினார்)

[20] (மேலும், மனிதர்களை நோக்கிக் கூறும்படி இப்றாஹீமுக்கு கட்டளையிட்டோம்.) கூறுவீராக! பூமியில் நீங்கள் சுற்றித் திரிந்து பாருங்கள். ஆரம்பத்தில் படைப்புகளை எவ்வாறு உற்பத்தி செய்கிறான். (அவ்வாறே மரணித்த) பின்னரும் அல்லாஹ் (மறுமையில்) மறுமுறையும் உற்பத்தி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக்க ஆற்றலுள்ளவன்

[21] அவன் நாடியவர்களை வேதனை செய்வான்; அவன் நாடியவர்களுக்கு அருள்புரிவான். அவனளவிலேயே நீங்கள் திருப்பப்படுவீர்கள்

[22] (அவன் உங்களை வேதனை செய்ய விரும்பினால்) வானத்திலோ பூமியிலோ (ஒளிந்து கொண்டு) நீங்கள் அவனைத் தோற்கடித்துவிட முடியாது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு ஒரு பாதுகாவலனுமில்லை; உதவி செய்பவனுமில்லை

[23] ‘‘ எவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரித்து அவனைச் சந்திப்பதையும் மறுக்கின்றனரோ, அவர்கள் எனது அருளைப் பற்றி நம்பிக்கை இழந்து விடுவார்கள். அவர்களுக்கு நிச்சயமாகத் துன்புறுத்தும் வேதனையுண்டு

[24] (இவ்வாறெல்லாம் இப்றாஹீம் நபி தன் மக்களுக்குக் கூறியதற்கு) ‘‘இவரை வெட்டி விடுங்கள்; அல்லது நெருப்பில் எரித்து விடுங்கள்'' என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறு விதத்தில்) பதில் கூற அவருடைய மக்களால் முடியாது போயிற்று. (பின்னர் இப்றாஹீமை நெருப்பில் எறிந்தார்கள்.) ஆகவே, (அந்)நெருப்பிலிருந்து அல்லாஹ் அவரை காப்பாற்றினான். நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன

[25] (மேலும், இப்றாஹீம் அவர்களை நோக்கி) ‘‘ நீங்கள் அல்லாஹ்வை அன்றி இந்த சிலைகளைத் தெய்வமாக எடுத்துக் கொண்டதற்கெல்லாம் இவ்வுலக வாழ்க்கையில் உங்களுக்கிடையில் (ஒருவருக்கு மற்றவருடன்) உள்ள சிநேக மனப்பான்மைதான் காரணமாகும். பின்னர், மறுமையிலோ உங்களில் ஒருவர் மற்றவரை நிராகரித்து விட்டு உங்களில் ஒருவர் மற்றவரை (நிந்தித்துச்) சபிப்பார். (முடிவில்) நீங்கள் அனைவரும் செல்லும் இடம் (நரகத்தின்) நெருப்புத்தான். அங்கு உங்களுக்கு உதவி செய்பவர்கள் ஒருவருமிரார்'' என்று கூறினார்

[26] (இப்றாஹீம் இவ்வளவு கூறியும்) லூத் (நபி) ஒருவர் மட்டுமே அவரை நம்பிக்கை கொண்டார். (ஆகவே, இப்றாஹீம் அவரை நோக்கி) ‘‘ நிச்சயமாக நான் என் இறைவனை நாடி (என் இந்த ஊரை விட்டுச்) செல்கிறேன். நிச்சயமாக அவன்தான் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனும் ஆவான்'' என்று கூறினார்

[27] ஆகவே, அவருக்கு இஸ்ஹாக்கையும், யஅகூபையும் (சந்ததிகளாகக்) கொடுத்து அவருடைய சந்ததிகளுக்கே நபிப்பட்டத்தையும் வேதத்தையும் சொந்தமாக்கி, அவருக்கு அவருடைய கூலியை இம்மையிலும் கொடுத்தோம். மறுமையிலோ நிச்சயமாக அவர் நல்லவர்களில்தான் இருப்பார்

[28] லூத்தையும் (நம் தூதராக அவருடைய மக்களிடம் அனுப்பி வைத்தோம்.) அவர் தன் மக்களை நோக்கி ‘‘ உங்களுக்கு முன்னர் உலக மனிதர்களில் ஒருவருமே செய்திராத மானக்கேடான ஒரு காரியத்தை நிச்சயமாக நீங்கள் செய்கிறீர்கள்

[29] (பெண்களை விட்டு விட்டு) ஆண்களிடம் (மோகம் கொண்டு) செல்கிறீர்கள்; (பயணிகளை) வழிமறித்துக் கொள்ளை அடிக்கிறீர்கள். (மக்கள் நிறைந்த) உங்கள் சபைகளிலும் (பகிரங்கமாகவே) மிக்க வெறுக்கத்தக்க காரியத்தைச் செய்கிறீர்களே!'' என்று கூறினார். அதற்கவர்கள் ‘‘ மெய்யாகவே நீங்கள் உண்மை சொல்பவராக இருந்தால் அல்லாஹ்வுடைய வேதனையை எங்களிடம் கொண்டு வாருங்கள்'' என்று கூறியதைத் தவிர (வேறொன்றும்) அவருடைய மக்கள் பதில் கூறவில்லை

[30] அதற்கவர் ‘‘ என் இறைவனே! விஷமம் செய்யும் இந்த மக்களுக்கு விரோதமாக நீ எனக்கு உதவிபுரிவாயாக!'' என்று பிரார்த்தித்தார்

[31] (வானவர்களாகிய) நம் தூதர்கள், இப்றாஹீமுக்கு (இஸ்ஹாக் நபியின் பிறப்பைப் பற்றி) நற்செய்தி கூற அவரிடம் வந்த சமயத்தில் (அவரை நோக்கி ‘‘ லூத்துடைய) இந்த ஊராரை நிச்சயமாக நாங்கள் அழித்துவிடுவோம். ஏனென்றால், நிச்சயமாக அவ்வூரார் (பாவம் செய்வதில் எல்லை கடந்து) அநியாயக்காரர்களாக ஆகிவிட்டார்கள்'' என்று கூறினார்கள்

[32] அதற்கவர் (அவ்வானவர்களை நோக்கி) ‘‘ நிச்சயமாக அதில் லூத்தும் இருக்கிறாரே!'' என்று கூறினார். அதற்கவர்கள் ‘‘ அதில் இருப்பவர்கள் யார் என்பதை நாங்கள் நன்கறிவோம். அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் நிச்சயமாக நாங்கள் பாதுகாத்துக் கொள்வோம். அவருடைய மனைவி (அவருடன் செல்லாது அழிந்து போகக்கூடிய அவ்வூராருடன்) தங்கி (அவர்களுடன் அவளும் அழிந்து) விடுவாள்'' என்று கூறினார்கள்

[33] பின்னர் நம் (வானவ) தூதர்கள் லூத் (நபி) இடம் வந்தபொழுது, (அவ்வூரார் தீய எண்ணத்துடன் அவர்களைத் துரத்திக் கொண்டு வந்தார்கள். அப்போது) அவர், (அந்த வானவர்களை பாதுகாத்துகொள்ள) தன் கையால் ஒன்றும் செய்ய முடியாமல், அவர்களுக்காகத் துக்கித்தார். அதற்கவர்கள், (அவரை நோக்கி) ‘‘ நீர் அஞ்ச வேண்டாம்; துக்கிக்கவும் வேண்டாம். (நாம் இவ்வூராரை அழித்துவிட உமது இறைவனால் அனுப்பப்பட்ட வானவர்களாவோம்.) நிச்சயமாக நாம் உம்மையும், உமது மனைவியைத் தவிர, (மற்ற) உமது குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொள்வோம். அவள் (உம்முடன் வராது, இவ்வூராருடன்) தங்கி (அழிந்து) விடுவாள்'' என்று கூறினார்கள்

[34] இவ்வூரார் செய்து கொண்டிருக்கும் பாவத்தின் காரணமாக நிச்சயமாக நாம் இவர்கள்மீது வானத்திலிருந்து வேதனையை இறக்கிவைப்போம்'' (என்று கூறினார்கள்)

[35] (பின்னர், வானவர்கள் கூறியவாறே அவர்கள் மீது வேதனை இறங்கி அவர்கள் அனைவரும் அழிந்து விட்டனர்.) நிச்சயமாக நாம் அறிவுடைய மக்களுக்குத் தெளிவான அத்தாட்சியை (இன்றளவும்) அவர்கள் இருந்த ஊரில் விட்டு வைத்திருக்கிறோம்

[36] மத்யன்வாசிகளுக்கு அவர்களுடைய சகோதரர் ஷுஐபை (நாம் நம் தூதராக அனுப்பிவைத்தோம். அவர் அவர்களை நோக்கி) ‘‘ என் மக்களே! நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். இறுதி நாளை எதிர்பார்த்திருங்கள். பூமியில் விஷமம் செய்து கொண்டு அலையாதீர்கள்'' என்று கூறினார்

[37] எனினும், அவர்கள் அவரைப் பொய்யாக்கினார்கள். ஆதலால், அவர்களைப் பூகம்பம் பிடித்துக் கொண்டது. எனவே, அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறே இறந்துவிட்டனர்

[38] மேலும், இவ்வாறே ஆது, ஸமூது கூட்டத்தினரையும் (அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக) நாம் அழித்து விட்டோம். (நீங்கள் போகவர உள்ள வழியில்) அவர்கள் இருந்த இடங்கள் உங்களுக்கு நன்றாகவே தென்படுகின்றன. இவர்கள் அனைவருக்கும் அவர்களுடைய (பாவச்) செயல்களை ஷைத்தான் அழகாகக் காண்பித்து, நேரான வழியில் செல்லாது அவர்களைத் தடுத்துக் கொண்டான். அவர்கள் நல்லறிவுடையவர்களாகத்தான் இருந்தார்கள். (ஆனால் ஷைத்தானுடைய வலையில் சிக்கி இக்கதிக்கு ஆளானார்கள்)

[39] காரூனையும், ஃபிர்அவ்னையும், ஹாமானையும் (நாம் இவ்வாறே அழித்து விட்டோம்). நிச்சயமாக மூஸா இவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளையே கொண்டு வந்திருந்தார். எனினும், இவர்கள் (அவற்றை நிராகரித்து விட்டுப்) பூமியில் பெருமை கொண்டு நடந்ததினால் (நம் வேதனைக்கு உள்ளானார்கள். அதில் இருந்து) அவர்கள் தப்பித்துக் கொள்ள முடியவில்லை

[40] அவர்கள் ஒவ்வொருவரையும் அவர்கள் (செய்து கொண்டிருந்த) பாவத்தின் காரணமாகவே நாம் பிடித்துக் கொண்டோம். அவர்களில் (ஆது மக்களைப் போன்ற) சிலர் மீது நாம் கல்மழை பொழிந்தோம். அவர்களில் (ஸமூது மக்களைப் போன்ற) சிலரை இடிமுழக்கம் பிடித்துக் கொண்டது. அவர்களில் (காரூன் போன்ற) சிலரை நாம் பூமியில் சொருகி விட்டோம். அவர்களில் (ஃபிர்அவ்ன், ஹாமான் போன்ற) சிலரை (கடலில்) மூழ்கடித்தோம். அல்லாஹ் இவர்களுக்கு அநீதி செய்யவில்லை. எனினும், இவர்கள் (அனைவரும்) தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்

[41] அல்லாஹ்வையன்றி (மற்றவற்றைத் தங்களுக்கு) பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டவர்களின் உதாரணம்: நூலாம் பூச்சி கட்டிய வீட்டை(த் தாங்கள் வசிக்க எடுத்துக் கொண்டவர்களின் உதாரணத்தை) ஒத்திருக்கிறது. வீடுகளில் எல்லாம் மிக்க பலவீனமானது நிச்சயமாக நூலாம் பூச்சியின் வீடுதான். (நூலாம் பூச்சியின் வீடு இவர்களை எவ்வாறு பாதுகாக்க முடியாதோ அவ்வாறே இவர்கள் தங்களுக்கு பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்ட தெய்வங்களும் இவர்களை பாதுகாக்க முடியாது. இதை) அவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமே

[42] அல்லாஹ்வையன்றி அவர்கள் எவற்றை (கடவுளென) அழைக்கிறார்களோ, அவற்றை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான். (அவற்றுக்கு ஒரு சக்தியுமில்லை; அறிவும் இல்லை.) அவன்தான் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனும் ஆவான்

[43] மனிதர்களுக்காகவே இவ்வுதாரணங்களை நாம் கூறுகிறோம். (சிந்தித்து அறியக்கூடிய) ஞானமுடையவர்களைத் தவிர (மற்றெவரும்) இதை உணர்ந்து கொள்ள மாட்டார்கள்

[44] மெய்யாகவே அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் படைத்தான்.(வேறொருவர் இல்லை.) நம்பிக்கை கொண்டவர்களுக்கு நிச்சயமாக இவற்றிலும் (பல) அத்தாட்சி(கள்) உண்டு

[45] (நபியே!) வஹ்யி மூலம் உமக்கு அறிவிக்கப்பட்ட இவ்வேதத்தை (மக்களுக்கு) நீர் ஓதிக் காண்பித்து தொழுகையைக் கடைப்பிடித்து வருவீராக. ஏனென்றால், நிச்சயமாகத் தொழுகை மானக்கேடான காரியங்களிலிருந்தும். பாவங்களிலிருந்தும் (மனிதனை) விலக்கிவிடும். அல்லாஹ்வை (மறக்காது நினைவில் வைத்து, அவனை) திக்ரு செய்து வருவது மிகமிகப் பெரிய காரியம். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிவான். (ஆதலால், இவற்றுக்குரிய கூலியை நீங்கள் அடைந்தே தீருவீர்கள்)

[46] (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் வேதத்தை உடையவர்களுடன் (தர்க்கிக்க நேரிட்டால்) அழகான முறையிலேயே தவிர அவர்களுடன் தர்க்கிக்க வேண்டாம். ஆயினும், அவர்களில் எவரேனும் வரம்பு மீறிவிட்டால் (அதற்குத் தக்கவாறு நீங்கள் பதில் கூறுவது உங்கள் மீது குற்றமாகாது. அவர்களுடன் தர்க்கித்தால்) ‘‘ எங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்)தை நம்பிக்கை கொள்கின்றபடியே உங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்)தையும் நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம். எங்கள் கடவுளும் உங்கள் கடவுளும் ஒரே ஒருவனே. நாங்கள் அவனுக்குத்தான் முற்றிலும் பணிந்து வழிப்பட்டு நடக்கிறோம்'' என்றும் கூறுங்கள்

[47] (நபியே! அவர்களுக்கு வேதத்தை இறக்கிய) அவ்வாறே நாம் உமக்கு இவ்வேதத்தை அருளியிருக்கிறோம். ஆகவே, நாம் எவர்களுக்கு (முன்னர்) வேதம் கொடுத்திருக்கின்றோமோ அவர்க(ளில் உள்ள சத்தியவான்க)ள் இ(வ்வேதத்)தையும் (அவசியம்) நம்பிக்கை கொள்வார்கள். மேலும், (அரபிகளாகிய) இவர்களில் உள்ள (நியாயவாதிகளில்) பலரும் இதை நம்பிக்கை கொள்கின்றனர். (மன முரண்டாக நிராகரிக்கும்) நிராகரிப்பாளர்களைத் தவிர (மற்ற எவரும்) நம் வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள்

[48] (நபியே!) நீர் இதற்கு முன்னர் ஒரு வேதத்தை ஓதி அறிந்தவருமல்ல; உமது கையால் நீர் அதை எழுதி(ப் பழகி)யவருமல்ல. அவ்வாறு இருந்திருக்குமாயின், நிராகரிப்பவர்கள் (இதை நீர் தாமாகவே கற்பனை செய்து கொண்டீரே தவிர இறைவனால் அருளப்பட்டதல்ல என்று) சந்தேகம் கொள்ளலாம்

[49] அவ்வாறன்று. இது (இறைவனால்தான் அருளப்பட்ட) தெளிவான வசனங்களாக இருக்கின்றன. ஆகவே மெய்யான ஞானம் கொடுக்கப்பட்டவர்களின் உள்ளங்களில் இவை பதிந்துவிடும். ஆகவே, அநியாயக்காரர்களைத் தவிர (மற்றெவரும்) நம் வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள்

[50] மேலும், (‘‘ தாங்கள் விரும்புகிறபடி) சில அத்தாட்சிகள் அவருடைய இறைவனால் அவருக்கு அளிக்கப்பட வேண்டாமா?'' என்று (இவ்வக்கிரமக்காரர்கள்) கூறுகின்றனர். அதற்கு (நபியே!) கூறுவீராக: ‘‘ அத்தாட்சிகள் எல்லாம் அல்லாஹ்விடத்தில்தான் இருக்கின்றன. (என்னிடமில்லை) நான் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவன் மட்டும்தான்

[51] அவர்கள் மீது ஓதிக்காட்டப்படும் இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கி இருப்பது அவர்களுக்கு (அத்தாட்சியால்) போதாதா? ஏனென்றால், இதில் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக (இறைவனுடைய) அருளும் இருக்கிறது; (பல) நல்லுபதேசங்களும் இருக்கின்றன

[52] (நபியே!) கூறுவீராக: ‘‘ எனக்கும் உங்களுக்கும் இடையில் அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கிறான். ஏனென்றால், அவன்தான் வானங்கள் பூமியிலுள்ள அனைத்தையும் நன்கறிந்தவன். ஆகவே, எவர்கள் பொய்யான விஷயங்களை நம்பி அல்லாஹ்வை நிராகரித்து விடுகிறார்களோ அவர்கள்தான் முற்றிலும் நஷ்டமடைந்தவர்கள்

[53] (மறுமையின்) வேதனையைப் பற்றி (அது எப்பொழுது வரும்? என்று) அவர்கள் உம்மிடம் அவசரப்படுகின்றனர். அதற்குறிய ஒரு குறிப்பிட்ட தவணை இல்லாதிருந்தால் (இதுவரை) அவ்வேதனை அவர்களை வந்தடைந்தே இருக்கும். எனினும், அவர்கள் அறிந்துகொள்ளாத விதத்தில் திடீரென நிச்சயமாக அவர்களிடம் (அது) வந்தே தீரும்

[54] நிராகரிப்பவர்களை நிச்சயமாக நரகம் சூழ்ந்து கொண்டிருக்கும் நிலைமையில் வேதனையைப் பற்றி அவர்கள் உம்மிடம் அவசரப் படுகிறார்கள். (அதிலிருந்து அவர்கள் தப்பவே முடியாது)

[55] அவர்களு(டைய தலைகளு)க்கு மேலிருந்தும், அவர்களு(டைய பாதங்களு)க்குக் கீழிருந்தும் வேதனை அவர்களை மூடிக்கொள்ளும் நாளில் அவர்களை நோக்கி ‘‘ நீங்கள் செய்து கொண்டிருந்த செயலின் பயனை நீங்கள் சுவைத்துப் பாருங்கள்'' என்று (இறைவன்) கூறுவான்

[56] நம்பிக்கை கொண்ட என் அடியார்களே! நிச்சயமாக என் பூமி மிக்க விசாலமானது. அதில் நீங்கள் (எங்கு சென்ற போதிலும்) என்னையே வணங்குங்கள். (மற்றெவரையும் வணங்காதீர்கள்)

[57] (உங்களில் உள்ள) ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை அனுபவிக்க வேண்டியதுதான். பின்னர் நீங்கள் (விசாரணைக்காக) நம்மிடமே கொண்டு வரப்படுவீர்கள்

[58] எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களை நிச்சயமாக நாம் சொர்க்கங்களிலுள்ள மேல் மாடிகளில் அமர்த்துவோம். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அதில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். நற்செயல்கள் செய்தவர்களின் கூலியும் நன்றே

[59] உண்மை நம்பிக்கையாளர்கள் (தங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களைப்) பொறுமையுடன் சகித்துக்கொண்டு தங்கள் இறைவனையே நம்பியிருப்பார்கள்

[60] உயிர்வாழும் பிராணிகளில் எத்தனையோ இருக்கின்றன. அவை தங்கள் உணவைச் சுமந்து திரிவதில்லை. அவற்றிற்கும் உங்களுக்கும் அல்லாஹ்தான் உணவளிக்கிறான். (இவ்வாறிருக்க அதற்காக நீங்கள் ஏன் அதிகக் கவலைப்பட வேண்டும்.) அவனோ (அனைத்தையும்) செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்

[61] (நபியே! நீர் அவர்களை நோக்கி) “வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார்? சூரியனையும் சந்திரனையும் தன் திட்டப்படியே நடக்கும்படி செய்தவன் யார்?'' என்று அவர்களைக் கேட்பீராயின் அதற்கவர்கள் ‘‘ அல்லாஹ்தான்'' என்று நிச்சயமாகக் கூறுவார்கள். அவ்வாறாயின், அவர்கள் (நம்மைவிட்டு) எங்கு வெருண்டோடுகின்றனர்

[62] அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியவர்களுக்கு அதிகமாகவும் கொடுக்கிறான்; (தான் நாடியவர்களுக்குக்) குறைத்தும் விடுகிறான். நிச்சயமாக அல்லாஹ் (மனிதர்களின் தகுதிகள்) அனைத்தையும் நன்கறிந்தவன் ஆவான்

[63] (நபியே! நீர் அவர்களை நோக்கி) மேகத்திலிருந்து மழையை பொழியச் செய்பவன் யார்? அதைக் கொண்டு இறந்த பூமியை உயிர்ப்பிப்பவன் யார்? என்று நீர் அவர்களைக் கேட்பீராயின் அதற்கவர்கள் ‘‘ நிச்சயமாக அல்லாஹ்தான்'' என்று கூறுவார்கள். அதற்கு, ‘‘ புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே!'' என்று நீர் கூறுவீராக. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) உணர்ந்து கொள்வதில்லை

[64] இவ்வுலக வாழ்க்கை வீண் விளையாட்டும், வேடிக்கையுமே தவிர வேறொன்றும் இல்லை. மேலும் மறுமையின் வாழ்க்கைதான் நிச்சயமாக நிலையான வாழ்க்கை ஆகும். இதை அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே

[65] (மனிதர்கள்) கப்பலில் ஏறி (ஆபத்தில் சிக்கி)க் கொண்டால், அவர்கள் முற்றிலும் அல்லாஹ்வுக்கு வழிபட்டுக் கலப்பற்ற (பரிசுத்த) மனதோடு அவனை அழைத்துப் பிரார்த்தனை செய்கின்றனர். அவன், அவர்களை கரையில் (இறக்கி) பாதுகாத்துக் கொண்ட பின்னர் அவனுக்கு அவர்கள் (பலரை) இணை ஆக்குகின்றனர்

[66] நாம் அவர்களுக்குச் செய்யும் நன்றியை (இவ்வாறு) அவர்கள் மறுத்துக்கொண்டே இருக்கட்டும். (தங்கள் விருப்பப்படியும்) அவர்கள் சுகமனுபவித்துக் கொண்டே இருக்கட்டும். தங்கள் (செயலின்) பலனை(ப் பின்னர்) நிச்சயமாக அவர்கள் தெரிந்து கொள்வார்கள்

[67] (இந்த மக்காவை) அபயமளிக்கும் புனித இடமாக நாம் ஆக்கியிருப்பதை அவர்கள் பார்க்கவில்லையா? அவர்களைச் சூழவுள்ள மனிதர்கள் (எதிரிகளால்) தாக்கப்படுகின்றனர். இவர்கள் அல்லாஹ்வின் (இந்த) அருட்கொடையை நிராகரித்துவிட்டு பொய்யான தெய்வங்களை நம்பிக்கை கொள்கின்றனரா

[68] அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய் கூறுபவனைவிட அல்லது தன்னிடம் வந்த உண்மையைப் பொய்யாக்குபவனைவிட மகா அநியாயக்காரன் யார்? இத்தகைய நிராகரிப்பவர்களுக்கு தங்குமிடம் நரகத்தில் இல்லையா

[69] எவர்கள் நம் வழியில் (செல்ல) முயற்சிக்கிறார்களோ அவர்களை நிச்சயமாக நாம் நம் (நல்) வழிகளில் செலுத்துகிறோம். நன்மை செய்பவர்களுடன் நிச்சயமாக அல்லாஹ் இருக்கிறான்

அர்ரூம்

Surah 30

[1] அலிஃப் லாம் மீம்

[2] (நமக்குச்) சமீபமான பூமியிலுள்ள ‘ரூம்' வாசிகள் தோல்வி அடைந்தனர்

[3] அவர்கள் (இன்று) தோல்வியடைந்து விட்டபோதிலும் அதிசீக்கிரத்தில் வெற்றி அடைவார்கள்

[4] (அதுவும்) சில ஆண்டுகளுக்குள்ளாகவே (வெற்றி அடைவார்கள்). (வெற்றி தோல்வி என்ற) விஷயம் இதற்கு முன்னரும், இதற்குப் பின்னரும் அல்லாஹ்வுக்கே சொந்தமானது. (அவர்கள் வெற்றியடையும்) அந்நாளில் நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் உதவியைக் கண்டு மகிழ்ச்சியடைவார்கள்

[5] அல்லாஹ், தான் விரும்பியவர்களுக்கு உதவிபுரிகிறான். அவன் (அனைவரையும்) மிகைத்தவன், மகா கருணையுடையவன் ஆவான்

[6] (இது) அல்லாஹ்வுடைய வாக்குறுதியாகும். அல்லாஹ் தன் வாக்குறுதியில் தவறுவதில்லை. எனினும், மனிதரில் பெரும்பாலானவர்கள் (இதை) அறியமாட்டார்கள்

[7] அவர்கள், இவ்வுலக வாழ்க்கையிலுள்ள வெளிப்படையான விஷயங்களை அறி(ந்து கவனிக்)கின்றனர். ஆனால், அவர்கள் மறுமையைப் பற்றி முற்றிலும் பராமுகமாயிருக்கின்றனர்

[8] (இதை) அவர்கள் தங்களுக்குள்ளாகவே கவனிக்க வேண்டாமா? வானங்களையும். பூமியையும், இவற்றுக்கு மத்தியில் உள்ளவற்றையும் நியாயமான காரணமின்றியும், குறிப்பிட்ட தவணையின்றியும் அல்லாஹ் படைக்கவில்லை. எனினும், மனிதரில் பெரும்பாலானவர்கள் தங்கள் இறைவனைச் சந்திப்பதையும் நிராகரிக்கின்றனர்

[9] இவர்கள் பூமியில் சுற்றித்திரிய வேண்டாமா? அவ்வாறாயின், இவர்களுக்கு முன்னிருந்த (நிராகரிப்ப)வர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதைக் கண்டு கொள்வார்கள். (முன்னிருந்த) அவர்கள் இவர்களைவிட பலசாலிகளாகவும், இவர்கள் எவ்வளவு பூமியை அபிவிருத்தி செய்தார்களோ அதைவிட அதிகமாக பூமிகளைப் பண்படுத்தி அபிவிருத்தி செய்தவர்களாகவும் இருந்தார்கள். (இந்நிலைமையில்) அவர்களிடம் அவர்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள். அல்லாஹ் அவர்களுக்குத் தீங்கிழைக்கவில்லை. எனினும், அவர்கள் (அந்நபிமார்களைப் பொய்யாக்கித்) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்

[10] அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யாக்கி அவற்றைப் பரிகசித்துக் கொண்டிருந்ததன் காரணமாக, தீமை செய்து கொண்டிருந்த அவர்களின் முடிவும் தீமையாகவே முடிந்தது

[11] (மனிதர்களே!) அல்லாஹ்வே படைப்புகளை முதலாவதாக உற்பத்தி செய்கிறான். அவனே (அவை இறந்த பின்னரும்) அவற்றை மீளவைப்பான். பின்னர், (மனிதர்களே!) நீங்கள் அனைவரும் அவனிடமே கொண்டு வரப்படுவீர்கள்

[12] விசாரணைக் காலம் வரும் நாளில் குற்றவாளிகள் (இறைவனின் கருணையில்) நம்பிக்கை இழந்து விடுவார்கள்

[13] (ஏனென்றால்) அவர்கள் இணைவைத்து வணங்கியவற்றில் அவர்களுக்குப் பரிந்து பேசுபவர்கள் எவரும் இருக்கமாட்டார். (இணைவைத்த) அவர்களும் தாங்கள் இணைவைத்தவற்றைப் புறக்கணித்து விடுவார்கள்

[14] விசாரணையின் அந்நாள் வரும் சமயத்தில் (நல்லவர்களும் தீயவர்களும்) வெவ்வேறாகப் பிரிந்து விடுவார்கள்

[15] ஆகவே, எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்கள் (மறுமையில் சொர்க்கத்திலுள்ள) உன்னதமாகச் சிங்காரிக்கப்பட்ட பூங்காவனத்தில் மகிழ்விக்கப்படுவார்கள்

[16] எவர்கள் நிராகரித்து நம் வசனங்களையும், மறுமை(யில் நமது) சந்திப்பையும் பொய்யாக்குகிறார்களோ அவர்கள் வேதனையில் சிக்கிக் கிடப்பார்கள்

[17] ஆகவே, (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் உங்கள் காலை நேரத்திலும் மாலை நேரத்திலும் அல்லாஹ்வைப் புகழ்ந்து துதித்துக் கொண்டிருங்கள்

[18] வானங்களிலும் பூமியிலும் இரவிலும் பகலிலும் அனைத்து புகழும் அல்லாஹ்வுக்கே உரியன. (ஆகவே, நீங்களும் அவனைப் போற்றி புகழ்ந்து கொண்டிருங்கள்)

[19] அவனே இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை வெளிப்படுத்துகிறான். அவனே உயிருள்ளவற்றிலிருந்து மரணித்தவற்றை வெளிப்படுத்துகிறான். அவனே இறந்த பூமிகளையும் செழிப்பாக்குகிறான். இவ்வாறே (மரணித்த பின்னர்) மறுமையில் நீங்கள் வெளிப்படுத்தப்படுவீர்கள்

[20] மண்ணிலிருந்து உங்களை படைத்து, பின்னர் நீங்கள் பல பாகங்களிலும் சென்று திரியக்கூடிய மனிதர்களாக ஆனதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும்

[21] நீங்கள் சேர்ந்து வாழக்கூடிய உங்கள் மனைவிகளை உங்களிலிருந்தே அவன் உற்பத்தி செய்து, உங்களுக்கிடையில் அன்பையும் நேசத்தையும் உண்டு பண்ணி இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். சிந்தித்து உணரக்கூடிய மக்களுக்கு இவற்றில் (ஒன்றல்ல) நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன

[22] வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதும், உங்கள் மொழிகளும் நிறங்களும் வெவ்வேறாக இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். இதிலும் கல்விமான்களுக்கு நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன

[23] இரவிலும் பகலிலும் நீங்கள் நித்திரை செய்து இளைப்பாறிக் கொள்வதும் (பூமியின் பல பாகங்களிலும் சென்று) நீங்கள் அவனுடைய அருளைத் தேடிக் கொள்வதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். (நல்லுபதேசத்தைச்) செவியுறும் மக்களுக்கு இதில் நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன

[24] நயமும் பயமும் தரக்கூடியவாறு மின்னலை அவன் உங்களுக்குக் காண்பிப்பதும், மேகத்திலிருந்து மழையை பொழியச் செய்து இறந்த பூமியை செழிக்கச் செய்வதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளனவாகும். அறிவுடைய மக்களுக்கு நிச்சயமாக இதில் (ஒன்றல்ல) பல அத்தாட்சிகள் இருக்கின்றன

[25] வானமும் பூமியும் அவன் கட்டளைப்படி நிலை பெற்றிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். (உங்களுக்குக் குறிப்பிட்ட காலம் வரை நீங்கள் அதில் உயிர் வாழ்ந்து மரணித்துப் பூமியில் அடக்கப்பட்டதன் பின்னர்) அவன் உங்களை அழைக்கும்போது ஒரே அழைப்பில் நீங்கள் பூமியில் இருந்து வெளிப்பட்டு விடுவீர்கள்

[26] வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அவனுக்குரியனவே. இவை அனைத்தும் அவனுக்கே அடிபணிந்து நடக்கின்றன

[27] அவன்தான் படைப்புகளை ஆரம்பத்தில் உற்பத்தி செய்பவன். அவனே (அவை மரணித்த பின்னரும் உயிர் கொடுத்து) அவற்றை மீளவைக்கிறவன். இது அவனுக்கு மிக்க எளிது. வானங்களிலும் பூமியிலும் அவனுடைய (உதாரணமும் பரிசுத்தத்) தன்மை(யும்)தான் மிக்க மேலானதாகும். அவன் (அனைத்தையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனும் ஆவான்

[28] (மனிதர்களே! நீங்கள் அவனுடைய மேன்மையை அறிந்து கொள்வதற்காக) உங்களுக்குள்ளாகவே அவன் ஓர் உதாரணத்தைக் கூறுகிறான். நாம் உங்களுக்குக் கொடுத்த பொருள்களில், உங்கள் அடிமைகளில் எவரேனும் (உங்கள் பொருள்களுக்கு) உங்களுடன் சம உரிமை உடையவர்களாக ஆகிவிடுவார்களா? அல்லது நீங்கள் உங்களைப் பொருட்படுத்துவதைப்போல் அவர்களையும் பொருட்படுத்துவீர்களா? (பொருட்படுத்த மாட்டீர்களே! இவ்வாறிருக்க, படைக்கப்பட்ட இவற்றை நீங்கள் எனக்கு இணை ஆக்கலாமா?) அறிவுடைய மக்களுக்கு (நம்) வசனங்களை இவ்வாறு விவரித்துக் கூறுகிறோம்

[29] எனினும், அநியாயக்காரர்கள் எவ்வித அறிவுமின்றியே (இறைவனின் வசனங்களை நிராகரித்து விட்டுத்) தங்கள் சரீர இச்சைகளைப் பின்பற்றி நடக்கின்றனர். அல்லாஹ் எவர்களைத் தவறான வழியில் விட்டு விட்டானோ அவர்களை நேரான வழியில் செலுத்தக்கூடியவர் யார்? இவர்களுக்கு உதவி செய்பவர்கள் ஒருவரும் இல்லை

[30] (நபியே! இப்ராஹீமுடைய) நேரான மார்க்கத்தை நோக்கி நீர் உமது முகத்தை உறுதியான ஓர்மைப்பாட்டுடன் திருப்புவீராக. (அதுவே) மனிதர்களுக்காக அல்லாஹ் ஏற்படுத்திய இயற்கை மார்க்கமாகும். அவன் படைத்த (மார்க்கத்)தை (எவராலும்) மாற்றிவிட முடியாது. இதுதான் நிலையான (நேர்மையான) மார்க்கம். எனினும், மனிதரில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிந்துகொள்ளவே மாட்டார்கள்

[31] (நம்பிக்கையாளர்களே! நீங்களும்) அவன் ஒருவனிடமே திரும்பி (இஸ்லாம் மார்க்கத்தின் மீது உறுதியாக இருந்து) அவ(ன் ஒருவ)னுக்கே பயந்து தொழுகையையும் கடைப்பிடித்து நடந்து கொள்ளுங்கள். இணைவைத்து வணங்குபவர்களில் நீங்கள் ஆகிவிடாதீர்கள்

[32] (தவிர) எவர்கள் தங்கள் மார்க்கத்திற்குள் பிரிவினையை உண்டு பண்ணி, பல பிரிவுகளாகப் பிரித்து, அவர்கள் ஒவ்வொரு வகுப்பாரும் தங்களிடமுள்ள (தவறான)வற்றைக் கொண்டு சந்தோஷப்படுகின்றனரோ அவர்களுடன் சேர்ந்து விடாதீர்கள்

[33] மனிதர்களை ஒரு தீங்கு அணுகும் போது அவர்கள் தங்கள் இறைவன் பக்கம் முகம் நோக்கி அவனிடம் பிரார்த்திக்கிறார்கள். பின்னர் அவன் (அதை நீக்கி) அவர்களைத் தன் அருளைச் சுவைக்கும்படிச் செய்தால் அவர்களில் ஒரு பிரிவினர் தங்கள் இறைவனுக்கே இணை வைக்கின்றனர்

[34] நாம் அவர்களுக்களித்த அருளுக்கு நன்றி செலுத்தாது நிராகரித்தும் விடுகின்றனர். (இவ்வாறு நிராகரிப்பவர்களே!) நீங்கள் உங்கள் இஷ்டப்படி சுகம் அனுபவித்துக் கொள்ளுங்கள். (உங்கள் செயலின் பலனைப்) பின்னர் நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள்

[35] அவர்கள் இணைவைத்து வணங்குவதற்கு ஆதாரமாகக் கூறக்கூடிய ஓர் அத்தாட்சியை நாம் அவர்களுக்கு அளித்திருக்கிறோமா? (அவ்வாறு ஒன்றும் இல்லையே)

[36] மனிதர்கள் நம் அருளைச் சுவைக்கும்படி நாம் செய்தால் அதைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். எனினும், அவர்களுடைய கைகளே தேடிக் கொண்ட (தீய) செயலின் காரணமாக அவர்களுக்கு ஒரு தீங்கேற்படும்போது உடனே அவர்கள் நம்பிக்கையிழந்து விடுகின்றனர்

[37] நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு உணவை விரிவாக்குகிறான்; (தான் நாடியவர்களுக்குக்) குறைத்து விடுகிறான் என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன

[38] (நபியே! உமது பொருளில்) உறவினருக்கு அவரின் உரிமையை கொடுத்து வருவீராக. அவ்வாறே ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் (அவர்களுடைய உரிமையைக் கொடுத்து வருவீராக). எவர்கள் அல்லாஹ்வுடைய முகத்தை நாடுகிறார்களோ அவர்களுக்கு இதுவே மிக்க நன்றாகும். இவர்கள்தான் வெற்றி பெறுவார்கள்

[39] (மற்ற) மனிதர்களுடைய பொருள்களுடன் சேர்ந்து (உங்கள் பொருளும்) அதிகப்படுவதற்காக வட்டிக்கு நீங்கள் கொடுக்கும் பொருள் அல்லாஹ்விடத்தில் அதிகப்படுவதில்லை. எனினும், அல்லாஹ்வின் முகத்தை நாடி ஜகாத்தாக ஏதும் நீங்கள் கொடுத்தாலோ, கொடுத்தவர்கள் அதை இரட்டிப்பாக்கிக் கொள்கின்றனர்

[40] அல்லாஹ்தான் உங்களை படைத்தவன். உங்களுக்கு உணவு கொடுப்பவனும் அவனே. பின்னர், அவனே உங்களை மரணிக்கச் செய்கிறான். அதன் பின்னர் அவனே உங்களை உயிர்ப்பிப்பான். இவற்றில் எதையும் செய்யக்கூடிய சக்தி உங்கள் தெய்வங்களில் எதற்கும் உண்டோ? இவர்கள் செய்யும் (இத்தகைய) இணைகளிலிருந்து அல்லாஹ் மிக்க உயர்ந்தவன்; அவன் மிகப் பரிசுத்தமானவன்

[41] மனிதர்களின் கைகள் தேடிக்கொண்டதன் காரணமாகக் கடலிலும் தரையிலும் அழிவு வேலைகள் (அதிகமாகப்) பரவிவிட்டன. அவற்றில் இருந்து அவர்கள் விலகிக் கொள்வதற்காக, அவர்களின் தீய செயல்கள் சிலவற்றின் தண்டனையை அவர்களுக்கு (இம்மையிலும்) சுவைக்க வைக்கிறான்

[42] (நபியே!) கூறுவீராக: பூமியில் நீங்கள் சுற்றித் திரிந்து பாருங்கள். உங்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு என்னாயிற்று? முன்னிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இணைவைத்து வணங்குபவர்களாகவே இருந்தனர்

[43] ஆகவே, (நபியே!) அல்லாஹ்விடமிருந்து தப்பித்துக் கொள்ள முடியாத ஒரு நாள் வருவதற்கு முன்னதாகவே நீர் உமது முகத்தை நிலையான (நீதமான) மார்க்கத்தளவில் திருப்பிவிடுவீராக. அந்நாளில் (நல்லவர்களும், தீயவர்களும்) வெவ்வேறாகப் பிரிந்து விடுவார்கள்

[44] எவன் நிராகரிப்பவனாக இருக்கிறானோ அவனுடைய நிராகரிப்பு அவனுக்கே கேடாக முடியும். எவர் நற்காரியங்களைச் செய்கிறாரோ அவர் (அதை மறுமையில்) தனக்கு நன்மையாகவே அமைத்துக் கொள்கிறார்

[45] நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்தவர்களுக்கே அவன் தன் அருளைக் கூலியாகக் கொடுக்கிறான். ஏனென்றால், நிச்சயமாக அவன் நிராகரிப்பவர்களை நேசிப்பதில்லை

[46] (மழைக்கு முன்னர் குளிர்ந்த) காற்றை நற்செய்தியாக அவன் அனுப்பி வைப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றே. (அதைக் கொண்டு) அவன் தன் அருளை (மழையை) நீங்கள் சுவைக்கும்படிச் செய்து, கப்பல்களையும் அவன் தன் கட்டளையைக் கொண்டே செல்லும்படிச் செய்கிறான். அதனால் (பல தீவுகளிலும் நாடுகளிலும் உள்ள) அவனுடைய அருளை நீங்கள் தேடிக் கொள்கிறீர்கள். (இவற்றுக்காக) நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக

[47] (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு முன்னரும் பல தூதர்களை அவர்களுடைய சமுதாய மக்களிடம் அனுப்பி வைத்தோம். அவர்களும் தெளிவான அத்தாட்சிகளையே அவர்களிடம் கொண்டு வந்தனர். (எனினும், அவற்றை அவர்கள் நிராகரித்து விட்டனர்.) ஆகவே, (அவற்றை நிராகரித்த)குற்றவாளிகளை நாம் பழிவாங்கினோம். (ஏனென்றால் இவ்வாறு பழிவாங்கி) நம்பிக்கையாளர்களுக்கு உதவி செய்வது நம்மீது கடமையாக இருக்கிறது

[48] அல்லாஹ்தான் காற்றை அனுப்பிவைக்கிறான். அது மேகத்தை ஓட்டுகிறது. அவன் விரும்பியவாறு அதை வானத்தில் திட்டுத் திட்டாகப் பரப்பிவிடுகிறான். அதிலிருந்து மழை பொழிவதை (நபியே!) நீர் காண்கிறீர். தன் அடியார்களில் அவன் விரும்பியவர்களை அம்மழை வந்தடையும் சமயத்தில் அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்

[49] அதற்கு முன்னர் அவர்கள் தங்கள் மீது மழை பொழியும் என்ற நம்பிக்கையை முற்றிலும் இழந்தவர்களாகவே இருந்தனர்

[50] (நபியே!) அல்லாஹ்வின் இவ்வருளால் ஏற்படும் பலன்களை நீர் கவனிப்பீராக! இறந்துபோன பூமியை எவ்வாறு செழிக்கச் செய்கிறான்! (இவ்வாறே) நிச்சயமாக அவன் இறந்தவர்களையும் உயிர்ப்பிக்கச் செய்வான். அவன் அனைத்தின் மீதும் பேராற்றல் உடையவன்

[51] (மழையில்லாத வெறும் வறண்ட) காற்றை நாம் அனுப்பி (அதனால் தங்கள் பயிர்கள்) மஞ்சளாயிருப்பதை அவர்கள் கண்டால், முன்னர் நாம் அவர்களுக்குச் செய்திருந்த அருளையுமே அவர்கள் நிராகரித்து விடுகின்றனர்

[52] (நபியே!) இறந்தவர்களை செவியுறும்படிச் செய்ய நிச்சயமாக உம்மால் முடியாது. உங்களைப் புறக்கணித்துச் செல்லும் செவிடர்களுக்குச் சப்தத்தைக் கேட்கும்படிச் செய்யவும் உம்மால் முடியாது

[53] குருடர்களை, அவர்களுடைய வழிகேட்டிலிருந்து நேரான வழியில் திருப்பிவிடவும் உம்மால் முடியாது. முற்றிலும் வழிப்பட்டவர்களாக நம் வசனங்களை நம்பிக்கை கொள்பவர்களைத் தவிர மற்றவர்களை (உமது நல்லுபதேசங்களுக்கு) செவிசாய்க்க வைக்க உம்மால் முடியாது

[54] அல்லாஹ் உங்களை (ஆரம்பத்தில்) பலவீனமான நிலைமையில் உற்பத்தி செய்கிறான். அந்தப் பலவீனத்திற்குப் பின்னர் அவனே (வாலிப) பலத்தையும் கொடுக்கிறான். அந்த பலத்திற்குப் பின்னர் வயோதிகத்தையும், பலவீனத்தையும் கொடுக்கிறான். (இவ்வாறெல்லாம்) அவன், தான் விரும்பியவாறு (உங்களை) ஆக்குகிறான். அவன் (அனைத்தையும்) நன்கறிந்தவனும் மிக்க ஆற்றலுடையவனும் அவான்

[55] மறுமை நாளில் குற்றவாளிகள் தாங்கள் (இவ்வுலகில்) ஒரு நாழிகையைத் தவிர (அதிகமாக) இருக்கவில்லை என்று சத்தியம் செய்வார்கள். இவ்வாறே (இவ்வுலகத்திலும்) அவர்கள் பொய்யையே பிதற்றிக் கொண்டிருந்தனர்

[56] எனினும், கல்வியறிவும் நம்பிக்கையும் கொடுக்கப்பட்டவர்கள் (அதை மறுத்து) ‘‘அல்லாஹ் எழுதியவாறு நீங்கள் உயிர் பெற்றெழும் இந்நாள் வரை (பூமியில்) இருந்தீர்கள். இது (மரணித்தவர்கள்) உயிர் பெற்றெழும் நாள். நிச்சயமாக நீங்கள் இதை உறுதி கொள்ளாதவர்களாகவே இருந்தீர்கள்'' என்றும்

[57] ‘‘ஆனால், அந்நாளில் அநியாயம் செய்தவர்கள் கூறும் சாக்குப்போக்கு அவர்களுக்குப் பலனளிக்காது. அவர்கள் இறைவனைத் திருப்திபடுத்தவும் வழி இருக்காது'' என்றும் கூறினார்கள்

[58] மனிதர்களுக்கு (திருப்தி அளிப்பதற்காக) வேண்டிய உதாரணங்கள் அனைத்தையும் இந்த குர்ஆனில் நிச்சயமாக நாம் கூறியே இருக்கிறோம். (இதை அங்கீகரிக்காத அவர்கள் விரும்பும்) ஓர் அத்தாட்சியை நீர் அவர்களிடம் கொண்டு வந்தபோதிலும் (நபியே! உம்மையும் உம்முடன் இருப்பவர்களையும் நோக்கி) நீங்கள் பொய்யர்களேதவிர வேறில்லை'' என்று இந்நிராகரிப்பவர்கள் கூறுவார்கள்

[59] இவ்வாறே அறிவில்லாத இந்த மக்களின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிட்டு விடுகிறான்

[60] ஆகவே, (நபியே!) நீர் (சகித்துக்கொண்டு) பொறுமையுடன் இருப்பீராக. நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி மெய்யானது. (ஆகவே, முடிவில் நபியே! நீர்தான் வெற்றி பெறுவீர்.) மறுமையை நம்பாத இவர்கள் நிச்சயமாக உம்மை இலேசாக எண்ணிவிட வேண்டாம்

லுக்மான்

Surah 31

[1] அலிஃப் லாம் மீம்

[2] இவை ஞானம் நிறைந்த இவ்வேதத்தின் (சில) வசனங்களாகும்

[3] (இது) நன்மை செய்பவர்களுக்கு ஒரு நேர்வழி காட்டியாகவும், ஓர் அருளாகவும் இருக்கிறது

[4] அவர்கள் தொழுகையைக் கடைப்பிடித்து தொழுவார்கள். ஜகாத்தும் கொடுத்து வருவார்கள். இறுதி நாளையும் அவர்கள் உறுதியாக நம்புவார்கள்

[5] இவர்கள்தான் தங்கள் இறைவனின் நேரான வழியில் இருப்பவர்கள். இவர்கள்தான் வெற்றி அடைவார்கள்

[6] (இவர்களைத் தவிர) மனிதரில் பலர் இருக்கின்றனர். அவர்கள் (பொய்யான கட்டுக்கதைகள் முதலிய) வீணான விஷயங்களை விலைக்கு வாங்கி (அவற்றை மக்களுக்கு ஓதிக் காண்பித்து) அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் இருந்து ஞானமின்றி மக்களை வழிகெடுத்து அதைப் பரிகாசமாகவும் எடுத்துக் கொள்கின்றனர். இவர்களுக்கு இழிவு தரும் வேதனை நிச்சயமாக உண்டு

[7] இவர்களில் எவருக்கும் நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் அதை அவன் கேட்காதவனைப் போலும், தன் இரு காதுகளிலும் செவிடு உள்ளவனைப் போலும் கர்வம்கொண்டு விலகிவிடுகிறான். ஆகவே, (நபியே!) அவனுக்குத் துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு நீர் நற்செய்தி கூறுவீராக

[8] ஆயினும், (இவர்களில்) எவர்கள் (நம் வசனங்களுக்குச் செவி சாய்த்து) நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு மிக்க இன்பம் தரும் சொர்க்கங்கள் உள்ளன

[9] அதில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். அல்லாஹ்வுடைய (இவ்)வாக்குறுதி உண்மையானதே! அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனும் ஆவான்

[10] அவனே வானங்களைத் தூண்கள் இன்றியே படைத்திருக்கிறான். அதை நீங்களும் பார்க்கிறீர்கள். பூமி உங்களைக் கவிழ்த்து விடாதிருப்பதற்காக (பளுவான) மலைகளை (அதில்) நிறுத்திவைத்து விதவிதமான உயிரினங்களையும் அதில் பரப்பினான். (மனிதர்களே! அல்லாஹ்வாகிய) நாமே மேகத்தில் இருந்து மழையை பொழியச்செய்து அதிலிருந்தே நேர்த்தியான ஒவ்வொரு வகைப் புற்பூண்டுகளையும் ஜோடி ஜோடியாக முளைப்பிக்கச் செய்கிறோம்

[11] (ஆகவே, நபியே! நீர் அவர்களை நோக்கிக் கூறுவீராக) ‘‘ இவை அனைத்தும் அல்லாஹ் படைத்தவையாகும். அவனையன்றி (நீங்கள் தெய்வங்கள் என்று கூறும்) அவை எதை படைத்திருக்கின்றன என்பதை நீங்கள் எனக்குக் காண்பியுங்கள். அவ்வாறு (ஒன்றும்) இல்லை. (அல்லாஹ்வை அன்றி மற்றவர்களை வணங்கும்) இந்த அநியாயக்காரர்கள் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கின்றனர்

[12] லுக்மானுக்கு நாம் ஞானத்தைக் கொடுத்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும்படி கூறினோம். ஏனென்றால், எவர் நன்றி செலுத்துகிறாரோ அவர் தன் நன்மைக்காகவே நன்றி செலுத்துகிறார். எவன் நிராகரிக்கிறானோ (அவன் தனக்கே தீங்கு தேடிக்கொள்கிறான். அதனால் அல்லாஹ்வுக்கு ஒன்றும் நஷ்டமில்லை. ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் தேவையற்றவனும் புகழுடையவனும் ஆவான்

[13] லுக்மான் தனது மகனுக்கு நல்லுபதேசம் செய்யக் கருதிய சமயத்தில் அவரை நோக்கி ‘‘ என் அருமை மைந்தனே! நீ அல்லாஹ்வுக்கு (ஒன்றையுமே) இணையாக்காதே! ஏனென்றால், இணைவைப்பது நிச்சயமாக மிகப்பெரும் அநியாயமாகும்'' என்று கூறினார்

[14] ‘‘ தனது தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படி மனிதனுக்கு நாம் நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய் துன்பத்தின் மேல் துன்பத்தை அனுபவித்து(க் கர்ப்பத்தில்) அவனைச் சுமந்து கொண்டலைந்தாள். (பிறந்த) பிறகும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே அவனுக்குப் பால் மறக்கடித்தாள். ஆகவே, நீ எனக்கும் நன்றி செலுத்து; உன் தாய் தந்தைக்கும் நன்றி செலுத்து. முடிவில் நீ நம்மிடமே வந்து சேர வேண்டியதிருக்கிறது

[15] எனினும், (இறைவன் என்று) நீ அறிந்துகொள்ளாத ஒரு பொருளை எனக்கு இணைவைக்கும்படி அவர்கள் உன்னை நிர்ப்பந்தித்தால் (அவ்விஷயத்தில்) நீ அவர்களுக்கு கீழ்ப்படிய வேண்டாம். ஆயினும், இவ்வுலக விஷயத்தில் நீ அவர்களுக்கு (நீதமாக) உதவி செய்து (அன்பாக) நேசித்துவா. எவ்விஷயத்திலும் என்னையே நோக்கி நிற்பவர்களின் வழியை நீ பின்பற்றி நட. பின்னர், நீங்கள் அனைவரும் நம்மிடமே வரவேண்டியதிருக்கிறது. நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி அச்சமயம் நான் உங்களுக்கு அறிவுறுத்துவேன்'' (என்று கூறினோம்)

[16] (மேலும், லுக்மான் தனது மகனை நோக்கி) ‘‘ என் அருமை மகனே! (நன்மையோ தீமையோ) அது ஒரு கடுகின் விதை அளவில் இருந்தாலும் சரி, அது (கரும்) பாறைகளுக்குள்ளோ அல்லது வானத்திலோ, பூமியின் ஆழத்திலோ (மறைந்து) இருந்தபோதிலும் (உங்களிடம் கணக்குக் கேட்கும் போது) நிச்சயமாக அல்லாஹ் அதையும் கொண்டு வந்து விடுவான். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் வெகு நுட்பமான அறிவுடையவனும் (அனைத்தையும்) நன்கு தெரிந்து வைத்திருப்பவனும் ஆவான்

[17] என்னருமை மகனே! ‘‘ தொழுகையை நிலைநிறுத்து, நன்மையான காரியங்களைக் கொண்டு ஏவி, பாவமான காரியங்களில் இருந்து (மனிதர்களை) விலக்கி வா. உனக்கேற்படும் சிரமங்களைப் பொறுமையுடன் நீ சகித்துக்கொள். நிச்சயமாக இது எல்லா காரியங்களிலும் வீரமிக்கச் செயலாகும்

[18] (பெருமை கொண்டு) உன் முகத்தை மனிதர்களை விட்டுத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையடித்துக் கொண்டு நடக்காதே! நிச்சயமாக கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை

[19] உன் நடையில் (பெருமையும் கர்வமுமின்றி) மத்திய தரத்தை விரும்பு. உன் சப்தத்தையும் தாழ்த்திக்கொள். ஏனென்றால், சப்தங்களிலெல்லாம் மிக்க வெறுக்கத்தக்கது கழுதையின் (உரத்த) சப்தமே!'' (என்று கூறினார்)

[20] (மனிதர்களே!) வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றை நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கிறான் என்பதையும், அவன் தன் அருட் கொடைகளை மறைவாகவும் வெளிப்படையாகவும் உங்கள் மீது சொரிந்திருக்கிறான் என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா? (இவ்வாறெல்லாமிருந்தும்) மனிதர்களில் பலர் ஒரு கல்வியும், (தர்க்க ரீதியான) வழிகாட்டலும், தெளிவான வேத நூலின் ஆதாரமுமின்றி அல்லாஹ்வைப் பற்றி (வீணாகத்) தர்க்கிக்கின்றனர்

[21] அவர்களை நோக்கி, ‘‘அல்லாஹ் இறக்கிய (இவ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்'' எனக் கூறினால், அதற்கு அவர்கள் ‘‘ இல்லை, எங்கள் மூதாதைகள் எதன் மீது இருக்க நாங்கள் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்'' என்று கூறுகின்றனர். (என்னே!) அவர்கள் மூதாதைகளை ஷைத்தான் நரக வேதனையின் பக்கம் அழைத்து (அவர்களும் சென்று) இருந்தாலுமா? (இவர்கள் அவர்களைப் பின்பற்றிச் செல்வார்கள்)

[22] எவர் தன் முகத்தை முற்றிலும் அல்லாஹ்வின் பக்கம் திருப்பி, பணிந்து நன்மையும் செய்து கொண்டிருக்கிறாரோ அவர் நிச்சயமாக (அறுபடாத) மிக்க பலமானதொரு வளயத்தைப் பிடித்துக் கொண்டார். எல்லா காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது

[23] (நபியே!) எவரேனும் (உம்மை) நிராகரித்து விட்டால், அவர்களுடைய நிராகரிப்பு உம்மைத் துக்கத்தில் ஆழ்த்திவிட வேண்டாம். அவர்கள் நம்மிடமே வரவேண்டும். அச்சமயம் அவர்களுடைய (இச்)செயலைப் பற்றி நாம் அவர்களுக்கு அறிவுறுத்துவோம். நிச்சயமாக அல்லாஹ் (மனிதர்களின்) உள்ளங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன்

[24] அவர்களை (இச்சமயம்) சிறிது சுகமனுபவிக்கும்படி நாம் விட்டு வைப்போம். பின்னர், கடுமையான வேதனையின் பக்கம் (செல்லும்படி) நாம் அவர்களை நிர்ப்பந்தித்து விடுவோம்

[25] (நபியே!) ‘‘ வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார்?'' என்று நீர் அவர்களைக் கேட்பீராயின், அதற்கவர்கள் ‘‘அல்லாஹ்தான்'' என்று நிச்சயமாகக் கூறுவார்கள். (அதற்கு, ‘‘ இவ்வளவேனும் உங்களுக்கு அறிவு இருப்பது பற்றி) அல்லாஹ்வை நான் புகழ்கிறேன்'' என்று நீர் கூறுவீராக. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் (இறைவனை இவ்வாறு புகழ்ந்து துதி செய்ய) அறிய மாட்டார்கள்

[26] வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்கு உரியனவே. எனினும், நிச்சயமாக அல்லாஹ் (இவற்றின்) தேவையற்றவனும் மிகப் புகழுடையவனும் ஆவான்

[27] பூமியிலுள்ள மரங்கள் (செடிகள் என) அனைத்தையும் எழுது கோல்களாகவும், கடல் நீரை மையாகவும் வைத்து (அது தீர்ந்து) பின்னும் ஏழு கடல்களின் நீரையும் மையாக வைத்து எழுதிய போதிலும் அல்லாஹ்வுடைய வசனங்கள் (எழுதி) முடிவு பெறாது. நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனும் ஆவான்

[28] மனிதர்களே! (ஆரம்பத்தில்) உங்களை படைப்பதும், (மரணித்த பின்) உங்களுக்கு உயிர் கொடுத்து எழுப்புவதும் அவனுக்கு, உங்களில் ஒருவரை (ஆரம்பத்தில்) படை(த்து உயிர் கொடு)ப்பது போலவே தவிர வேறில்லை. நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) செவியுறுபவனும் உற்று நோக்குபவனும் ஆவான்

[29] (நபியே!) அல்லாஹ்தான் இரவைப் பகலிலும் பகலை இரவிலும் நுழைய வைத்து சூரியனையும் சந்திரனையும் (தன் அதிகாரத்திற்குள்) அடக்கி வைத்திருக்கிறான் என்பதையும் நீர் பார்க்கவில்லையா? இவற்றில் ஒவ்வொன்றும் (அவற்றுக்கு அவன்) குறிப்பிட்ட திட்டப்படியே நடக்கின்றன. நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவன்

[30] இவையனைத்தும் ‘‘ நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையான இறைவன் என்பதற்கும், அவனையன்றி அவர்கள் (தெய்வங்களென) அழைப்பவை பொய்யானவை என்பதற்கும், நிச்சயமாக அல்லாஹ்தான் மிகப் பெரியவனும் மேலானவனும் ஆவான்'' என்பதற்கும் அத்தாட்சிகளாக இருக்கின்றன

[31] அல்லாஹ்வுடைய அருட்கொடைகளைச் சுமந்துகொண்டு கடலில் செல்லும் கப்பலும் அவனுடைய அத்தாட்சிகளை உங்களுக்கு அறிவிக்கக் கூடியதாக இருப்பதை நீர் கவனிக்கவில்லையா? பொறுமையுடன் (சிரமங்களைச்) சகித்திருந்து, அவனுக்கு நன்றி செலுத்தும் அனைவருக்கும் நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன

[32] (கப்பலில் செல்லும்) அவர்களை(ப் புயல் காற்றடித்து நாலா பக்கங்களிலிருந்தும்) அலைகள் மேல் முகடுகளைப் போல் சூழ்ந்து கொள்ளும் சமயத்தில், அல்லாஹ்வுக்கு வழிபட்டு, கலப்பற்ற மனதுடன் அவனை அழைத்துப் பிரார்த்திக்கின்றனர்! அவன் அவர்களைக் கரையில் இறக்கி பாதுகாத்துக் கொண்டாலோ அவர்களில் சிலர்தான் நிதானமாக நடக்கின்றனர். (பெரும்பாலானவர்களோ நிதானம் தவறியே நடக்கின்றனர்.) மிக நன்றிகெட்ட சதிகாரர்களைத் தவிர (மற்றெவரும்) நம் அத்தாட்சிகளை நிராகரிக்க மாட்டார்கள்

[33] மனிதர்களே! உங்கள் இறைவனுக்கு அஞ்சி ஒரு நாளைப்பற்றியும் பயந்து கொள்ளுங்கள். (அந்நாளில்) தந்தை பிள்ளைக்கு உதவமாட்டார்; பிள்ளையும் தந்தைக்கு ஒரு உதவியும் செய்ய மாட்டான். (ஒவ்வொருவரும் தன்னையே பாதுகாத்துக் கொள்ளும்படி நிர்ப்பந்திக்கின்ற நாளாகும் அது.) நிச்சயமாக (அந்நாள் வருமென்ற) அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானதாகும். ஆகவே, இவ்வுலக வாழ்க்கை உங்களை மயக்கி விட வேண்டாம். (ஷைத்தானாகிய) மாயக்காரனும் அல்லாஹ்வைப் பற்றி உங்களை மயக்கிவிட வேண்டாம்

[34] நிச்சயமாக (உலக முடிவு) காலத்தைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடத்தில் (மட்டும்)தான் இருக்கிறது. அவனே மழையை இறக்கிவைக்கிறான். அவனே கர்ப்பங்களில் (கரு) தரிப்பதையும் அறிவான். (அவனைத் தவிர) எவரும் நாளைக்கு அவர் என்ன செய்வார் என்பதை அறியமாட்டார். எந்தப் பூமியில் இறப்பார் என்பதையும் (அவனைத் தவிர) எவரும் அறியமாட்டார். நிச்சயமாக அல்லாஹ்தான் (இவற்றை) நன்கறிந்தவனும் தெரிந்தவனும் ஆவான்

அஸ்ஸஜ்தா

Surah 32

[1] அலிஃப் லாம் மீம்

[2] (நபியே! உம் மீது) அருளப்பட்ட இவ்வேதம் உலகத்தாரின் இறைவனிடமிருந்தே வந்ததென்பதில் ஒரு சந்தேகமுமில்லை

[3] (நம் நபி) “இதை(த் தாமாகவே) கற்பனை செய்து கொண்டார்'' என்று (உங்களைப் பற்றி) அவர்கள் கூறுகின்றனரா? அவ்வாறன்று. இது உமது இறைவனால் உமக்கு அருளப்பட்ட உண்மையான வேதமாகும். உமக்கு முன்னர் இதுவரை ஒரு தூதருமே வராதிருந்த (இந்த அரபி) மக்களுக்கு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவே (இவ்வேதம் அருளப்பட்டுள்ளது. இதைப் பின்பற்றி) அவர்கள் நேரான வழியில் செல்வார்களாக

[4] அல்லாஹ்தான் வானங்களையும், பூமியையும், இவற்றுக்கு மத்தியில் உள்ளவற்றையும் ஆறே நாள்களில் படைத்து அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான். (உங்களைப்) பாதுகாப்பவனோ அல்லது (உங்களுக்குப்) பரிந்து பேசுபவனோ அவனைத் தவிர (வேறொருவரும்) உங்களுக்கு இல்லை. (இதை அறிந்து) நீங்கள் நல்லுணர்ச்சி பெற வேண்டாமா

[5] வானத்திலிருந்து பூமி வரையிலுமுள்ள எல்லா காரியங்களையும் அவனே ஒழுங்குபடுத்துகிறான். (ஒவ்வொன்றின் முடிவும்) ஒரு நாளன்று அவனிடமே சென்றுவிடும். அந்த (ஒரு) நாள் நீங்கள் எண்ணுகின்ற உங்கள் கணக்கின்படி ஆயிரம் ஆண்டுகளுக்குச் சமமாகும்

[6] அவனே (வானம் பூமியிலுள்ள) மறைவானதையும் வெளிப்படையானதையும் (உள்ளது உள்ளபடி) நன்கறிந்தவன்; (அனைத்தையும்) மிகைத்தவன், மகா கருணையுடையவன் ஆவான்

[7] அவனே எல்லா பொருள்களையும் (படைத்து) அவற்றின் கோலத்தையும் மிக்க அழகாக அமைத்தான். ஆரம்பத்தில் மனிதனை களிமண்ணைக் கொண்டே படைத்தான்

[8] பின்னர், ஓர் அற்பத் துளியாகிய (இந்திரியச்) சத்திலிருந்து அவனுடைய சந்ததியைப் படைக்கிறான்

[9] பின்னர், அவன் (படைப்பாகிய) அதைச் செப்பனிட்டுத் தனது ‘ரூஹை' அதில் புகுத்தி (உங்களை உற்பத்தி செய்கிறான்.) உங்களுக்குக் காதுகள், கண்கள், உள்ளங்கள் ஆகியவற்றையும் அவனே அமைக்கிறான். இவ்வாறு இருந்தும் உங்களில் நன்றி செலுத்துபவர்கள் வெகு சிலரே

[10] ‘‘(நாங்கள் இறந்து) பூமியில் அழிந்து போனதன் பின்னர் மெய்யாகவே நாங்கள் புதிய படைப்பாக அமைக்கப்பட்டு விடுவோமா?'' என்று அவர்கள் கூறுகின்றனர். இதுமட்டுமல்ல, அவர்கள் தங்கள் இறைவனைச் சந்திப்பதையும் நிராகரிக்கின்றனர்

[11] (நபியே!) கூறுவீராக: “உங்கள் மீது (உங்கள் இறைவனால்) சாட்டப்பட்டிருக்கும் ‘மலக்குல் மவ்த்து' (என்ற மரண வானவர்)தான் உங்கள் உயிரைக் கைப்பற்றுவார். பின்னர், உங்கள் இறைவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள்

[12] (நபியே! விசாரணைக்காக) இக்குற்றவாளிகள் தங்கள் இறைவன் முன் (நிறுத்தப்படும் சமயத்தில்) தலை குனிந்தவர்களாக “எங்கள் இறைவனே! எங்கள் கண்களும் காதுகளும் திறந்து கொண்டன. (நாங்கள் அனைத்தையும் பார்த்தும் கேட்டும் தெரிந்தும் கொண்டோம். முந்திய உலகிற்கு ஒரு தடவை) எங்களை திரும்ப அனுப்பிவை. நாங்கள் நற்செயல்களையே செய்வோம். நிச்சயமாக நாங்கள் (இந்த விசாரணை நாளை) உறுதியாக நம்புகிறோம்'' என்று கூறுவதை நீர் காண்பீராயின் (அவர்களுடைய நிலைமை எவ்வளவு கேவலமாயிருக்கும் என்பதை அறிந்து கொள்வீர்)

[13] நாம் விரும்பியிருந்தால் (இவர்களில் உள்ள) ஒவ்வொரு மனிதனுக்கும், அவன் நேரான வழியில் செல்லக்கூடிய வசதியைக் கொடுத்திருப்போம். எனினும், ஜின் இன்னும் மனிதர்களில் (உள்ள பாவிகள்) பலரைக் கொண்டு நிச்சயமாக நரகத்தை நிரப்புவோம் என்ற நம் தீர்ப்பு (முன்னரே) ஏற்பட்டு விட்டது

[14] ஆகவே, ‘‘ (நம்மைச்) சந்திக்கும் இந்நாளை நீங்கள் மறந்துவிட்டதன் பலனை நீங்கள் சுவைத்துக் கொண்டிருங்கள். (இந்நாளை நீங்கள் மறந்தவாறே) நிச்சயமாக நாமும் உங்களை மறந்துவிட்டோம். நீங்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயலின் காரணமாக என்றென்றும் நிலையான இந்த வேதனையை அனுபவித்துக் கொண்டிருங்கள்'' (என்றும் கூறப்படும்)

[15] நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், எவர்கள் (பூமியில்) சிரம் பணிந்து தங்கள் இறைவனைப் புகழ்ந்து துதி செய்கிறார்களோ அவர்கள்தான் நம் வசனங்களை மெய்யாகவே நம்பிக்கை கொள்வார்கள். அவர்கள் கர்வம்கொண்டு பெருமையடிக்கவும் மாட்டார்கள்

[16] அவர்கள் (நித்திரையில் ஆழ்ந்திருக்கும்போது) படுக்கையிலிருந்து தங்கள் விலாக்களை உயர்த்தி, தங்கள் இறைவனிடம் (அவனது அருளை) ஆசை வைத்தும், (அவனது தண்டனையை) பயந்தும் பிரார்த்தனை செய்வார்கள். நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து தானமும் செய்வார்கள்

[17] அவர்கள் செய்த (நற்)காரியங்களுக்குக் கூலியாக நாம் அவர்களுக்காக (தயார்படுத்தி) மறைத்து வைத்திருக்கும் கண் குளிரக்கூடிய (சன்மானத்)தை எவராலும் அறிந்துகொள்ள முடியாது. (அவ்வளவு மேலான சன்மானங்கள் அவர்களுக்கு தயார்படுத்தப்பட்டுள்ளன)

[18] நம்பிக்கை கொண்ட ஒரு மனிதன் (இறைவனுக்கு) மாறு செய்பவனைப் போலாவானா? இருவரும் சமமாக மாட்டார்கள்

[19] எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு அவர்கள் செய்யும் (நற்)செயல்களின் காரணமாக சொர்க்கம் தங்கும் இடமாகி அதில் விருந்தாளியாக உபசரிக்கப்படுவார்கள்

[20] எவர்கள் பாவம் செய்கிறார்களோ அவர்களின் தங்குமிடம் நரகம்தான். அதிலிருந்து அவர்கள் வெளிப்பட முயற்சிக்கும் போதெல்லாம் அதனுள் இழுத்துத் தள்ளப்பட்டு ‘‘நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்த நரக வேதனையைச் சுவைத்துக் கொண்டிருங்கள்'' என்று அவர்களுக்குக் கூறப்படும்

[21] அவர்கள் (பாவங்களிலிருந்து) விலகிக் கொள்வதற்காக (மறுமையில் அவர்கள்) பெரிய வேதனையை அடைவதற்கு முன்பாகவே (இம்மையில்) சிறியதொரு வேதனையை அவர்கள் சுவைக்கும்படிச் செய்வோம்

[22] (இவ்வாறு) இறைவனின் (எச்சரிக்கையான) அத்தாட்சிகளைக் கொண்டு (மறுமையை) ஞாபகமூட்டிய பின்னரும் இதைப் புறக்கணித்து விடுபவனை விட மகா அநியாயக்காரன் யார்? நிச்சயமாக நாம் (இத்தகைய) குற்றவாளிகளை பழிவாங்கியே தீருவோம்

[23] நிச்சயமாக நாம் மூஸாவுக்கு ஒரு வேதத்தைக் கொடுத்து இருந்தோம்.ஆகவே, (நபியே! மிஃராஜ் இரவில்) அவரை சந்தித்ததில் நீர் சந்தேகிக்காதீர்.நாம் (மூஸாவுக்குக் கொடுத்த) அதை இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு நேர்வழி காட்டியாக ஆக்கினோம்

[24] நம் கட்டளைகளைப் பொறுமையுடன் சகித்துக் கொண்டிருந்த இஸ்ராயீலின் சந்ததிகளில் இருந்த ஒரு கூட்டத்தினரை அவர்களுக்கு வழி காட்டிகளாக அமைத்தோம். அவர்கள் நம் வசனங்களை முற்றிலும் உறுதியுடன் நம்பியவர்களாக இருந்தனர்

[25] (நபியே! அவர்களுக்குப் பின்னர் வழிகாட்டியாக ஏற்பட்டவர்கள் தங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு பல பிரிவுகளாகப் பிரிந்து விட்டனர்.) அவர்கள் எவ்விஷயத்தில் தர்க்கித்துக் கொண்டிருக்கிறார்களோ அதைப் பற்றி மறுமை நாளில் உமது இறைவன் அவர்களுக்குத் தீர்ப்பளிப்பான்

[26] இவர்களுக்கு முன்னர் எத்தனையோ வகுப்பினரை நாம் அழித்திருக்கிறோம். அவர்கள் வசித்திருந்த இடங்களின் மீதே இவர்கள் போய் வந்து கொண்டிருப்பதும் இவர்களுக்கு நேரான வழியைக் காட்டவில்லையா? நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (இதற்கும்) அவர்கள் செவிசாய்க்க மாட்டார்களா

[27] நிச்சயமாக நாமே வறண்ட பூமிகளின் பக்கம் மழையின் மேகத்தை ஓட்டி (பொழியச் செய்து) அதன் மூலம் இவர்களும், இவர்களுடைய (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடைகளும் புசிக்கக்கூடிய பயிர்களையும் வெளிப்படுத்துகிறோம் என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? (இதைக்கூட) அவர்கள் கவனித்துப் பார்க்க வேண்டாமா

[28] “(வாக்களிக்கப்பட்ட) தீர்ப்பு நாள் எப்பொழுது வரும்? நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் (அது வரும் காலத்தைக்) கூறுங்கள்'' எனக் கேட்கின்றனர்

[29] (அதற்கு) நீர் கூறுவீராக! “அந்தத் தீர்ப்பு நாளின்போது (இந்)நிராகரிப்பவர்கள் நம்பிக்கை கொள்வது அவர்களுக்கு (ஒரு) பயனும் அளிக்காது. (வேதனையைத் தாமதப்படுத்த) அவர்கள் தவணையும் கொடுக்கப்பட மாட்டார்கள்.”

[30] ஆகவே, நீர் அவர்களைப் புறக்கணித்து (அந்நாளை) எதிர்பார்த்து இருப்பீராக. நிச்சயமாக அவர்களும் எதிர்பார்த்து இருக்கின்றனர்

அல்அஹ்ஸாப்

Surah 33

[1] நபியே! நீர் அல்லாஹ்வுக்கே பயப்படுவீராக. நிராகரிப்பவர்களுக்கும், வஞ்சகர்களுக்கும் (பயந்து அவர்களுக்கு) கீழ்ப்படியாதீர். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) அறிந்தவனாக,ஞானமுடையவனாக இருக்கிறான்

[2] உமது இறைவனால் உமக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டவற்றையே நீர் பின்பற்றுவீராக. நிச்சயமாக அல்லாஹ், நீங்கள் செய்பவற்றை நன்கறிபவனாகவே இருக்கிறான்

[3] (நபியே!) நீர் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படைப்பீராக. அல்லாஹ்வே (உமக்குப்) பொறுப்பேற்றுக்கொள்ள போதுமானவன்

[4] எம்மனிதருடைய நெஞ்சிலும் இரண்டு உள்ளங்களை அல்லாஹ் அமைக்கவில்லை. (ஆகவே, இயற்கை முறைப்படி மனிதர்களுக்குள் ஏற்படும் சம்பந்தங்களே உண்மையான சம்பந்தமாகும். வாயால் கூறும் சம்பந்த முறைகள் எல்லாம் உண்மையாகாது. ஆகவே, நம்பிக்கையாளர்களே! நீங்கள் விவாகரத்தைக் கருதி) உங்கள் மனைவிகளில் எவரையும் நீங்கள் உங்கள் தாய் என்று கூறுவதனால் அல்லாஹ் அவர்களை உங்கள் (உண்மைத்) தாயாக்கிவிட மாட்டான். (அவ்வாறே உங்களுக்குப் பிறக்காத எவரையும் உங்கள் பிள்ளை என்றும்) நீங்கள் தத்தெடுத்துக் கொள்வதனால் அவர்களை உங்கள் (உண்மைச்) சந்ததிகளாக்கிவிட மாட்டான். இவை அனைத்தும் உங்கள் வாய்களால் கூறும் வெறும் வார்த்தைகளே (தவிர. உண்மையல்ல). அல்லாஹ் உண்மையையே கூறி, அவன் உங்களுக்கு நேரான வழியை அறிவிக்கிறான்

[5] ஆகவே, நீங்கள் (வளர்த்த) எவர்களையும் அவர்களுடைய (உண்மையான) தந்தைகளின் பெயர்களைக் கூறி (அன்னாரின் மகன் என்றே) அழையுங்கள். அதுதான் அல்லாஹ்விடத்தில் நீதமாக இருக்கிறது. அவர்களின் தந்தைகளை நீங்கள் அறியாவிட்டால், அவர்கள் உங்கள் மார்க்க சகோதரர்களாகவும் உங்கள் மார்க்க நண்பர்களாகவும் இருக்கின்றனர். (ஆகவே, அவர்களுடைய வயதுக்குத்தக்க முறையில் அவர்களை சகோதரர் என்றோ அல்லது நண்பரென்றோ அழையுங்கள். இவ்விஷயத்தில் இதற்கு முன்னர்) நீங்கள் ஏதும் தவறிழைத்திருந்தால் அதைப் பற்றி உங்கள் மீது குற்றமில்லை. (எனினும், இதன் பின்னர்) வேண்டுமென்றே உங்கள் மனமார கூறினாலே தவிர (அதுதான் உங்கள் மீது குற்றமாகும்). அல்லாஹ் மிக மன்னிப்பவனாக, மகா கருணை உடையவனாக இருக்கிறான்

[6] நம்பிக்கையாளர்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட (நம் தூதரான) நபிதான் மிக்க பிரதானமானவர். அவருடைய மனைவிகளோ அந்நம்பிக்கையாளர்களுக்குத் தாய்மார்கள் ஆவார்கள். (நம்பிக்கை கொண்ட ஒருவருடைய சொத்தை அடைய) மற்ற நம்பிக்கையாளர்களை விடவும், ஹிஜ்ரத்துச் செய்தவர்களைவிடவும், (நம்பிக்கையாளர்களான) அவருடைய சொந்த உறவினர்கள்தான் அல்லாஹ்வுடைய இவ்வேதத்திலுள்ளபடி உரிமையுடையவர்களாக ஆவார்கள். (ஆகவே, அவர்களுக்கே அவர்களுடைய பங்கிற்கேற்ப பொருளைப்பங்கிட்டுக் கொடுக்க வேண்டும்.) எனினும், உங்கள் நண்பர்களில் எவருக்கும் நீங்கள் (ஏதும் கொடுத்து) நன்றி செய்யக்கருதினால் (நீங்கள் ஏதும் கொடுக்கலாம்.) இவ்வாறே வேதத்தில் எழுதப்பட்டுள்ளது

[7] (நபியே! நம் தூதை எடுத்துரைக்கும்படி பொதுவாக) நபிமார்களிடமும் (சிறப்பாக) உம்மிடமும், நூஹ், இப்ராஹீம், மூஸா, மர்யமுடைய மகன் ஈஸாவிடமும் வாக்குறுதி வாங்கியதை நினைவு கூர்வீராக, மிக்க உறுதியான வாக்குறுதியையே இவர்களிடமும் நாம் எடுத்திருக்கிறோம்

[8] ஆகவே, உண்மை சொல்லும் (தூதர்களாகிய) அவர்களிடம், அவர்கள் கூறிய (தூதின்) உண்மைகளைப் பற்றி (அல்லாஹ்) அவர்களையும் கேள்வி (கணக்குக்) கேட்பான். (அவர்களை) நிராகரித்தவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையை அவன் தயார்படுத்தி வைத்திருக்கிறான்

[9] நம்பிக்கையாளர்களே! உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடைகளை நினைத்துப் பாருங்கள். உங்கள்மீது (எதிரிகளின்) படைகள் (அணியணியாக) வந்த சமயத்தில் (புயல்) காற்றையும் உங்கள் கண்ணுக்குப் புலப்படாத படைகளையும் அவர்கள் மீது நாம் ஏவினோம். (அச்சமயம்) நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் உற்று நோக்குபவனாகவே இருந்தான்

[10] உங்களுக்கு மேற்புறமிருந்தும், கீழ்ப்புறமிருந்தும் (உங்களைச் சூழ்ந்து கொண்டு) அவர்கள் வந்த சமயத்தில் உங்கள் திறந்த கண்கள் திறந்தவாறே இருந்து உங்கள் உள்ளங்கள் உங்கள் தொண்டைக் குழிகளை அடைத்து (நீங்கள் திக்குமுக்காடி) அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் பலவாறு எண்ணிய சமயத்தையும் நீங்கள் நினைத்துப் பாருங்கள்

[11] அந்நேரத்தில் நம்பிக்கையாளர்கள் பெரும் சோதனைக்கு உள்ளாகி மிக்க பலமாக அசைக்கப்பட்டனர் (அச்சுறுத்தப்பட்டனர்)

[12] ‘‘அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்குச் சதி செய்வதற்காகவே (வெற்றி நமக்கே கிடைக்குமென்று) வாக்களித்தார்கள்'' என்று எவர்களுடைய உள்ளங்களில் நோயிருந்ததோ அவர்களும் மற்ற நயவஞ்சகர்களும் கூற முற்பட்டதையும் நினைத்துப் பாருங்கள்

[13] அவர்களில் ஒரு கூட்டத்தினர் (மதீனாவாசிகளை நோக்கி) ‘‘யஸ்ரிப் வாசிகளே! (எதிரிகள் முன்) உங்களால் நிற்க முடியாது. ஆதலால், நீங்கள் திரும்பிச் சென்று விடுங்கள்'' என்று கூறியதையும், அவர்களில் மற்றொரு பிரிவினர் அவர்களுடைய வீடுகள் அபாயகரமான நிலைமையில் இல்லாமலிருந்தும் ‘‘ நிச்சயமாக எங்கள் வீடுகள் அபாயகரமான நிலைமையில் இருக்கின்றன'' என்று கூறி (யுத்த களத்திலிருந்து சென்றுவிட நம்) நபியிடம் அனுமதி கோரியதையும் நினைத்துப் பாருங்கள். இவர்கள் (யுத்தத்திலிருந்து) தப்பி ஓடிவிடுவதைத் தவிர (வேறொன்றையும்) விரும்பவில்லை

[14] பல பாகங்களிலிருந்தும் அவர்கள் மீது படைகள் முன்னேறி வந்து (அச்சமயம்) குழப்பம் செய்யும்படி இவர்களைக் கோரியிருந்தால் (இந்த நயவஞ்சகர்கள்) குழப்பம் செய்தே தீருவார்கள். மேலும், (யுத்த களத்திலும்) வெகு சொற்ப நேரமே தவிர அவர்கள் நிலைத்திருக்கவும் மாட்டார்கள். (உடனே அங்கிருந்து ஓடிவிடுவார்கள்)

[15] அவர்கள் (யுத்தத்தில்) புறங்காட்டி ஓடுவதில்லை என்று அல்லாஹ்விடத்தில் இதற்கு முன்னர் நிச்சயமாக வாக்குறுதி செய்திருந்தார்கள். அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை (அவர்கள் மீறியதை)ப் பற்றி மறுமையில் கேட்கப்படுவார்கள்

[16] (நபியே!) நீர் கூறுவீராக: ‘‘மரணத்தைவிட்டு அல்லது வெட்டுப்படுவதை விட்டு நீங்கள் வெருண்டோடிய போதிலும், உங்கள் ஓட்டம் உங்களுக்கு ஒரு பயனும் அளிக்காது. இச்சமயம் (நீங்கள் தப்பித்துக் கொண்ட போதிலும்) வெகு சொற்ப நாள்களன்றி (அதிக நாள்கள்) நீங்கள் சுகமனுபவிக்க மாட்டீர்கள்

[17] (நபியே! மேலும்) கூறுவீராக: ‘‘அல்லாஹ் உங்களுக்குத் தீங்கிழைக்க நாடினால் அவனிடமிருந்து உங்களைப் பாதுகாப்பவன் யார் அல்லது உங்களுக்கு அருள்புரிய நாடினால் அதை தடுப்பவன் யார்? அல்லாஹ்வை அன்றி அவர்கள் தங்களுக்கு உதவி செய்பவர்களையும் பாதுகாப்பவர்களையும் காணமாட்டார்கள்

[18] உங்களில் (யுத்தத்திற்குச் செல்பவர்களைத்) தடை செய்பவர்களையும், தங்கள் சகோதரர்களை நோக்கி நீங்கள் ‘‘(யுத்தத்திற்குச் செல்லாது) நம்மிடம் வந்து விடுங்கள்'' என்று கூறுபவர்களையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தே இருக்கிறான். (அவர்களில்) சிலரைத் தவிர (பெரும்பாலானவர்கள்) யுத்தத்திற்கு வருவதில்லை

[19] (அவர்கள்) உங்கள் விஷயத்தில் கஞ்சத்தனத்தைக் கைக்கொண்டிருக்கின்றனர். (நபியே!) ஒரு பயம் சம்பவிக்கும் சமயத்தில், மரண தருவாயில் மயங்கிக் கிடப்பவர்களைப்போல் அவர்கள் கண்கள் சுழன்று சுழன்று உங்களைப் பார்த்த வண்ணமாய் இருப்பதை நீர் காண்பீர். அந்த பயம் நீங்கி (நம்பிக்கையாளர்களுக்கு வெற்றி ஏற்பட்டு) விட்டாலோ, கொடிய வார்த்தைகளைக் கொண்டு உங்களைக் குற்றங்குறைகள் கூறி (யுத்தத்தில் கிடைத்த) பொருள்கள் மீது பேராசை கொண்டு விழுகின்றனர். இவர்கள் உண்மையான நம்பிக்கையாளர்கள் அல்ல. ஆதலால், அவர்கள் செய்திருந்த (நற்)காரியங்கள் அனைத்தையும் அல்லாஹ் அழித்து விட்டான். இது அல்லாஹ்வுக்கு மிக்க எளிதாகவே இருக்கிறது

[20] (முற்றுகையிட்டிருந்த எதிரிகளின் ராணுவங்கள் முற்றுகையை எடுத்துக் கொண்டுசென்று விட்டபோதிலும்) அந்த ராணுவம் (இன்னும்) போகவில்லை என்றே இவர்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். அந்த ராணுவங்கள் திரும்ப வந்துவிட்டாலோ ஒரு கிராமத்திற்குச் சென்று (ஓடி ஒளிந்து) மறைவாயிருந்து கொண்டு (நீங்கள் வெற்றி பெறுகிறீர்களோ தோல்வியுறுகிறீர்களோ என்ற) உங்களைப் பற்றிய செய்தியை விசாரித்துக் கொண்டிருப்பார்கள். (அவ்வாறு செல்லாது) அவர்கள் உங்களுடன் தங்கி இருந்தாலும், ஒரு சொற்ப நேரமே தவிர (அதிக நேரம்) போர் புரிய மாட்டார்கள்

[21] எவர்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் உறுதியாக நம்புகிறார்களோ, அவர்கள் பின்பற்றி நடக்கவேண்டிய அழகான உதாரணம் நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடமே இருக்கிறது. அவர்கள் (அவரைப் பின்பற்றி நடந்து) அல்லாஹ்வை அதிகமாக நினைவு செய்து கொண்டிருப்பார்கள்

[22] நம்பிக்கையாளர்கள் (எதிரியின்) ராணுவங்களைக் கண்ட பொழுது ‘‘(இதுதான்) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்கு வாக்களித்தது. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையையே கூறினார்கள்'' என்று சொன்னார்கள். தவிர (இவை அனைத்தும்) அவர்களுடைய நம்பிக்கையையும் ஏற்று கீழ்ப்படிவதையும் தவிர வேறொன்றையும் அவர்களுக்கு அதிகப்படுத்திவிடவில்லை

[23] நம்பிக்கையாளர்களில் ஆண்கள் பலர் இருக்கின்றனர். இவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை உண்மையாக்கி வைத்தார்கள். அவர்களில் பலர் (இறந்து ‘ஷஹாதத்' என்னும்) தங்கள் இலட்சியத்தை அடைந்து விட்டனர். வேறு சிலர் (மரணிக்கவில்லை என்றாலும் அதை அடைய ஆவலுடன்) எதிர்பார்த்தே இருக்கின்றனர். (என்ன நேரிட்டாலும் அவர்கள் தங்கள் வாக்குறுதியிலிருந்து) ஒரு சிறிதும் மாறுபட்டுவிடவே இல்லை

[24] உண்மையுடன் நடந்துகொண்ட (இ)வர்களுக்கு அவர்களின் உண்மைக்குத் தக்க கூலியை அல்லாஹ் கொடுத்தே தீருவான். எனினும், நயவஞ்சகர்களை அவன் நாடினால் வேதனை செய்வான். (அவன் நாடினால் அவர்களையும் மன்னிப்புக் கோரும்படிச் செய்து) அவர்களை மன்னித்து விடுவான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மகா கருணையுடையவனாக இருக்கிறான்

[25] நிராகரிப்பவர்களை அவர்களின் கோபத்தில் மூழ்கியவாறே அல்லாஹ் அவர்களைத் தடுத்து விட்டான். (இப்போரில்) அவர்கள் ஒரு நன்மையும் அடையவில்லை. (எல்லா விதங்களிலும் நஷ்டமே அடைந்தார்கள். இந்தப் போரில் நம்பிக்கையாளர்களை அல்லாஹ்வே பாதுகாத்துக் கொண்டான்.) இந்தப் போரில் நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ்வே போதுமானவனாக இருந்தான். அல்லாஹ் (அனைவரையும் விட) மிக்க பலவானாகவும், மிகைத்தவனாகவும் இருக்கிறான்

[26] (நம்பிக்கையாளர்களே! உங்கள்) எதிரிகளுக்கு உதவி செய்த வேதக்காரர்(களாகிய யூதர்)களை அவர்களுடைய அரண்மனைகளிலிருந்து இறங்கவைத்து அவர்களுடைய உள்ளங்களில் (திடுக்கத்தையும்) நடுக்கத்தையும் போட்டுவிட்டான். ஆகவே, அவர்களில் ஒரு தொகையினரை நீங்கள் வெட்டி விட்டீர்கள்; மற்றொரு தொகையினரை நீங்கள் சிறை பிடித்தீர்கள்

[27] அவர்களுடைய பூமிகளையும், அவர்களுடைய வீடுகளையும், அவர்களுடைய பொருள்களையும் (இதுவரை) நீங்கள் கால் வைக்காத அவர்களுடைய மற்ற பூமிகளையும் (அல்லாஹ்) உங்களுக்கு சொந்த மாக்கித் தந்தான். அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக்க ஆற்றலுடையவனாக இருக்கிறான்

[28] நபியே! உமது மனைவிகளை நோக்கி கூறுவீராக: ‘‘ நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும் அதன் அலங்காரத்தையும் மட்டுமே விரும்புவீர்களாயின், வாருங்கள்! உங்களுக்கு ஏதும் கொடுத்து நல்ல முறையில் (தலாக் கொடுத்து) உங்களை நீக்கி விடுகிறேன்

[29] நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், மறுமை வாழ்க்கையையும் விரும்புவீர்களாயின் நிச்சயமாக அல்லாஹ் உங்களிலுள்ள நன்மை செய்பவர்களுக்கு மகத்தான (நற்)கூலியை தயார்படுத்தி வைத்திருக்கிறான்

[30] நபியுடைய மனைவிகளே! உங்களில் எவரேனும் பகிரங்கமான ஒரு மானக் கேடான காரியத்தைச் செய்வாராயின் அதற்குரிய தண்டனை அவருக்கு இரு மடங்காக அதிகரிக்கப்படும். இது அல்லாஹ்விற்கு மிக்க சுலபமாக இருக்கிறது

[31] உங்களில் எவரேனும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு நற்செயல்களைச் செய்தால், அதற்குரிய கூலியை அவருக்கு நாம் இரு மடங்காகத் தருவோம். மேலும், மிக்க கண்ணியமான வாழ்க்கையையும் அவருக்கு நாம் தயார்படுத்தி வைத்திருக்கிறோம்

[32] நபியுடைய மனைவிகளே! நீங்கள் மற்ற (சாதாரண) பெண்களைப் போன்றவர்களல்ல. நீங்கள் (மெய்யாகவே) அல்லாஹ்வுக்குப் பயப்பட்டவர்களாயின் (அந்நியருடன் பேசும் சமயத்தில்) நளினமாகப் பேசாதீர்கள். ஏனென்றால் (பாவ) நோய் இருக்கும் உள்ளத்தையுடையவர் (தவறான) விருப்பங்களைக் கொள்ளக்கூடும். ஆகவே, நீங்கள் (எதைக் கூறிய போதிலும்) யதார்த்தவாதிகளைப்போல் (கண்டிப்பாகப்) பேசிவிடுங்கள்

[33] (நபியுடைய மனைவிகளே!) நீங்கள் உங்கள் (வீடுகளில் இருந்து வெளிச் சென்று திரியாது) வீடுகளுக்குள்ளாகவே தங்கி இருங்கள். முன்னிருந்த அறியாத மக்கள் (தங்களை அலங்கரித்துக் கொண்டு வெளியில் சென்று) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்களும் திரியாதீர்கள். தொழுகையை நிலைநிறுத்துங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு நடங்கள். (நபியுடைய) வீட்டுடையார்களே! உங்களை விட்டு எல்லா அசுத்தங்களையும் நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் விரும்புகிறான்

[34] உங்கள் வீடுகளில் ஓதப்படுகின்ற அல்லாஹ்வுடைய வசனங்களையும், ஞானவாக்கியங்க(ளான ஹதீஸ்க)ளையும் ஞாபகத்தில் வையுங்கள். (அவற்றைக் கொண்டு நல்லுணர்ச்சி பெறுங்கள்.) நிச்சயமாக அல்லாஹ் கிருபையுடையவனாக, நன்கறிந்தவனாக இருக்கிறான்

[35] நிச்சயமாக முஸ்லிம் ஆண்களும் பெண்களும், நம்பிக்கையுடைய ஆண்களும் பெண்களும், (இறைவனுக்கும் அவனுடைய தூதருக்கும்) கீழ்ப்படியும் ஆண்களும் பெண்களும், உண்மையே கூறும் ஆண்களும் பெண்களும், பொறுமையுள்ள ஆண்களும் பெண்களும், (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடக்கும் ஆண்களும் பெண்களும், தானம் செய்யும் ஆண்களும் பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும் பெண்களும், கற்புள்ள ஆண்களும் பெண்களும், அல்லாஹ்வுடைய திருப்பெயரை அதிகமாக நினைவுகூரும் ஆண்களும் பெண்களும் ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார்படுத்தி வைத்திருக்கிறான்

[36] அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு விஷயத்தைப் பற்றிக் கட்டளையிட்ட பின்னர், அவ்விஷயத்தில் (அதை விட்டு) வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு நம்பிக்கையாளரான எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமையில்லை. (இவ்விஷயத்தில்) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால், நிச்சயமாக அவர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்

[37] (நபியே!) அல்லாஹ்வும், நீரும் எவருக்கு அருள் புரிந்திருந்தீர்களோ அவரை நோக்கி ‘‘ நீ அல்லாஹ்வுக்குப் பயந்து உன் மனைவியை (நீக்காது) உன்னிடமே நிறுத்திக் கொள்'' என்று கூறிய சமயத்தில், நீர் மனிதர்களுக்குப் பயந்து அல்லாஹ் வெளியாக்க இருப்பதை உமது உள்ளத்தில் மறைத்தீர். நீர் பயப்படத் தகுதி உடையவன் அல்லாஹ்தான் (மனிதர்கள் அல்ல.) ‘ஜைது' (என்பவர் மனம் மாறி, தன் மனைவியைத்) தலாக்கு கூறிவிட்ட பின்னர் நாம் அப்பெண்ணை உமக்கு திருமணம் செய்து வைத்தோம். ஏனென்றால், நம்பிக்கையாளர்களால் (தத்தெடுத்து) வளர்க்கப்பட்டவர்கள் தங்கள் மனைவிகளைத் தலாக்குக் கூறிவிட்டால், அவர்களை வளர்த்தவர்கள் அப்பெண்களை திருமணம் செய்து கொள்வதில் ஒரு தடையும் இருக்கக் கூடாது என்பதற்காக இது நடைபெற்றே தீரவேண்டிய அல்லாஹ்வுடைய கட்டளை ஆகும்

[38] அல்லாஹ் தனக்கு சட்டமாக்கிய ஒரு காரியத்தை நிறைவேற்றுவது நபி மீது குற்றமாகாது. இதற்கு முன் உள்ளவர்களுக்கு (நபிமார்களுக்கு) அல்லாஹ் ஏற்படுத்திய வழியும் இதுவே. அல்லாஹ்வுடைய கட்டளைகள் முன்னதாகவே நிர்ணயிக்கப்பட்டு விடுகின்றன

[39] அவர்கள் அல்லாஹ்வுடைய கட்டளைகளை எடுத்துரைத்தே தீருவார்கள்; அவ(ன் ஒருவ)னுக்கே பயப்படுவார்கள்; அல்லாஹ்வைத் தவிர மற்றெவருக்கும் பயப்பட மாட்டார்கள். (ஆகவே, நபியே! நீர் மற்றெவருக்கும் பயப்பட வேண்டாம். (இதைப் பற்றி அவர்களிடம்) கேள்வி கணக்குக் கேட்பதற்கு அல்லாஹ் (ஒருவனே) போதுமானவன்

[40] (நம்பிக்கையாளர்களே!) உங்களிலுள்ள ஆண்களில் ஒருவருக்கும் முஹம்மது (நபி அவர்கள்) தந்தையாக இருக்கவில்லை. (ஆகவே, அவர் ஜைதுக்கு எவ்வாறு தந்தையாவார்?) எனினும், அவர் அல்லாஹ்வுடைய தூதராகவும், நபிமார்களுக்கு (இறுதி) முத்திரையாகவும் (இறுதி நபியாகவும்) இருக்கிறார். (ஆகவே, அவருக்குப் பின்னர் ஒரு தூதரையும் அனுப்பமாட்டான்.) அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கிறான்

[41] நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அதிகமதிகமாக நினைவு கூருங்கள்

[42] காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்து வாருங்கள்

[43] அவன்தான் உங்களை(ப் பலவகைப் பாவ) இருள்களில் இருந்து வெளிப்படுத்தி பிரகாசத்தின் பக்கம் கொண்டுவந்து உங்கள் மீது அருள் புரிந்திருக்கிறான். அவனுடைய வானவர்களும் உங்களுக்காகப் பிரார்த்திக்கிறார்கள். அல்லாஹ், நம்பிக்கையாளர்(களாகிய உங்)கள் மீது மிக்க மகா கருணையுடையவனாக இருக்கிறான்

[44] (நம்பிக்கையாளர்கள்) அவனைச் சந்திக்கும் நாளில் (உங்களுக்கு) ‘‘ஈடேற்றம் உண்டாவதாக'' என்று ஆசீர்வதிப்பான். அவர்களுக்காக மிக்க கண்ணியமான கூலியையும் அவன் தயார்படுத்தி வைத்திருக்கிறான்

[45] நபியே! நிச்சயமாக நாம் உம்மை (மனிதர்களுக்குச்) சாட்சியாளராகவும், நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பி வைத்திருக்கிறோம்

[46] மேலும், அல்லாஹ்வுடைய உத்தரவுப்படி (மக்களை நீர்) அவன் பக்கம் அழைப்பவராகவும் பிரகாசிக்கும் ஒரு விளக்காகவும் (இருக்கிறீர்)

[47] ஆகவே, (நபியே!) நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக பெரும் அருள் இருப்பதாக நீர் அவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக

[48] நிராகரிப்பவர்களுக்கும் நயவஞ்சகர்களுக்கும் நீர் கீழ்ப்படியாதீர். அவர்களால் (உமக்கு) ஏற்படும் துன்பங்களை புறக்கணித்து விடுவீராக. (உம்முடைய எல்லா காரியங்களின்) பொறுப்பை அல்லாஹ்விடமே ஒப்படைத்து விடுவீராக. அல்லாஹ்வே (உமக்குப்) பொறுப்பேற்கப் போதுமானவன்

[49] நம்பிக்கையாளர்களே! நீங்கள் நம்பிக்கை கொண்ட பெண்களை திருமணம் செய்து அவர்களை நீங்கள் தொடுவதற்கு முன்னதாகவே ‘தலாக்' கூறி (அவர்களை நீக்கி) விட்டால் (தலாக்குக் கூறப்பட்ட பெண்கள் இத்தா இருக்கவேண்டிய) கணக்கின்படி இத்தா இருக்கும்படி அவர்களை வற்புறுத்த உங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை. (அதாவது: அவர்கள் இத்தா இருக்க வேண்டியதில்லை.) நீங்கள் அவர்களுக்கு ஏதும் (பொருள்) கொடுத்து அழகான முறையில் (மண வாழ்க்கையில் இருந்து) அவர்களை நீக்கிவிடுங்கள்

[50] நபியே! நிச்சயமாக நீர் மஹர் கொடுத்து திருமணம் செய்து கொண்ட பெண்களையும், அல்லாஹ் உமக்கு (யுத்தத்தில்) கொடுத்தவர்களில் உமது வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களையும் நாம் உமக்கு ஆகுமாக்கி வைத்திருக்கிறோம். உமது தந்தையின் சகோதரர்களின் மகள்கள், உமது அத்தையின் மகள்கள், உமது தாய்மாமனின் மகள்கள், உமது தாயின் சகோதரியுடைய மகள்கள் ஆகிய இவர்களில் எவர்கள் (மக்காவை விட்டு) உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களையும் (நீர் திருமணம் செய்துகொள்ள நாம் உமக்கு ஆகுமாக்கி வைத்திருக்கிறோம். மேலும்) நம்பிக்கை கொண்ட ஒரு பெண், தன்னை (மஹரின்றியே) நபிக்கு அர்ப்பணம் செய்து நபியும் அவளை திருமணம் செய்துகொள்ள விரும்பினால், அவளையும் உமக்கு ஆகுமாக்கி வைத்திருக்கிறோம். (நபியே!) இது சொந்தமாக உமக்கு (நாம் அளிக்கும்) விசேஷ சுதந்திரமாகும்; மற்ற நம்பிக்கையாளர்களுக்கல்ல. (மற்ற நம்பிக்கையாளர்களே!) அவர்கள் மனைவிகள் விஷயத்திலும், அவர்களுடைய வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட பெண்கள் விஷயத்திலும் (மஹர் கொடுத்தே திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்றும், நான்குக்கு அதிகமான பெண்களை திருமணம் செய்துகொள்ளக் கூடாதென்றும்) நாம் அவர்கள் மீது சட்டமாக்கி இருக்கும் கட்டளையை நன்கறிவோம். (அதை அவர்கள் நிறைவேற்றியே தீர வேண்டும்.) உமக்கு அத்தகைய நிர்ப்பந்தம் ஏற்படாமல் இருப்பதற்காக (அக்கடமையிலிருந்து) உமக்கு விதி விலக்குச் செய்தோம். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மகா கருணையுடையவனாக இருக்கிறான்

[51] (நபியே!) உமது மனைவிகளில் நீர் விரும்பியவர்களை (விரும்பிய காலம் வரை) விலக்கி வைக்கலாம்; நீர் விரும்பியவர்களை (விரும்பிய காலம் வரை) உம்முடன் இருக்க வைக்கலாம். நீர் விலக்கியவர்களில் நீர் விரும்பியவர்களை உம்முடன் சேர்த்துக் கொள்ளலாம். (இவற்றைப் பற்றி) உம் மீது ஒரு குற்றமுமில்லை. அவர்களுடைய கண்கள் குளிர்ந்திருப்பதற்கும் நீர் அவர்களுக்குக் கொடுத்தவற்றைப் பற்றி அவர்கள் அனைவருமே திருப்தியடைந்து கவலைப்படாதிருப்பதற்கும் இது மிக்க சுலபமான வழியாக இருக்கிறது. உங்கள் உள்ளங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கறிவான். அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவனாக, பொறுமையுடையவனாக இருக்கிறான்

[52] (நபியே! இப்போதிருக்கும் உமது மனைவிகளுக்குப்) பின்னர், வேறு பெண்கள் (அவர்களை நீங்கள் திருமணம் செய்துகொள்ள) உமக்கு ஆகுமாக மாட்டார்கள். மேலும், ஒரு பெண்ணின் அழகு உம்மை கவர்ந்தபோதிலும் உமது மனைவிகளில் எவரையும் நீக்கி, அதற்குப் பதிலாக அவளை எடுத்துக் கொள்வதும் உமக்கு ஆகுமாகாது. ஆயினும், உமது வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட பெண் அவ்வாறல்ல. (அவள் உமக்கு ஆகுமானவளே!) அல்லாஹ் அனைத்தையும் கவனித்தவனாகவே இருக்கிறான்

[53] நம்பிக்கையாளர்களே! (உங்களை உங்கள் நபி விருந்துக்காக அழைத்திருந்த போதிலும்) அனுமதியின்றி நபியின் வீட்டினுள் செல்லாதீர்கள்.அது தயாராவதை எதிர்பார்த்துத் தாமதித்து இருக்கக்கூடிய விதத்தில் முன்னதாகவும் சென்று விடாதீர்கள். (விருந்து தயாரானதன் பின்னர்) நீங்கள் அழைக்கப்பட்டால்தான் உள்ளே செல்லவும். மேலும், நீங்கள் உணவைப் புசித்து விட்டால் உடனே வெளியேறி விடுங்கள். (அங்கிருந்து கொண்டே வீண்) பேச்சுக்களை ஆரம்பித்துவிட வேண்டாம். (அவ்வாறு செய்தால்) நிச்சயமாக இது நபிக்கு பெரும் வருத்தத்தையளிக்கும். (இதை) உங்களிடம் (கூற) அவர் வெட்கப்படலாம். எனினும், உண்மையைச் சொல்ல அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். நபியுடைய மனைவிகளிடம் ஒரு பொருளை நீங்கள் கேட்(கும்படி நேரிட்)டால், (நீங்கள்) திரை மறைவிலிருந்து கொண்டே அவர்களிடம் கேளுங்கள். இது உங்கள் உள்ளங்களையும், அவர்கள் உள்ளங்களையும் பரிசுத்தமாக்கி வைக்கும். அல்லாஹ்வுடைய தூதரை நீங்கள் துன்புறுத்துவது உங்களுக்குத் தகுமான தல்ல. மேலும், அவருடைய மனைவிகளை அவருக்குப் பின்னர் ஒரு காலத்திலும் நீங்கள் திருமணம் செய்து கொள்வதும் கூடாது. நிச்சயமாக இது அல்லாஹ்விடத்தில் மிக்க கடுமையான (பாவமான) காரியமாகும்

[54] நீங்கள் எவ்விஷயத்தை வெளியிட்டபோதிலும் அல்லது மறைத்துக் கொண்ட போதிலும் நிச்சயமாக அல்லாஹ் எல்லா விஷயங்களையுமே நன்கறிபவனாக இருக்கிறான்

[55] நபியுடைய மனைவிகள் தங்கள் தந்தைகள் முன்பாகவும், தங்கள் மகன்கள் முன்பாகவும், தங்கள் சகோதரர்கள் முன்பாகவும், தங்கள் சகோதரர்களின் மகன்கள் முன்பாகவும், தங்கள் சகோதரிகளின் மகன்கள் முன்பாகவும், தங்கள் (போன்ற நம்பிக்கையாளர்களான) பெண்கள் முன்பாகவும், தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்கள் முன்பாகவும் (வருவதில்) அவர்கள் மீது ஒரு குற்றமுமில்லை. (இவர்களைத் தவிர மற்றவர்கள் முன்பாக வருவதைப் பற்றி நபியுடைய மனைவிகளே!) நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் பார்த்தவனாகவே இருக்கிறான்

[56] நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய வானவர்களும் நபியின் மீது ஸலவாத்துச் சொல்கின்றார்கள். ஆகவே, நம்பிக்கையாளர்களே! நீங்களும் அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லி ஸலாமும் கூறிக் கொண்டிருங்கள்

[57] எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் துன்புறுத்துகிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் சபிக்கிறான். இழிவு தரும் வேதனையையும் அவர்களுக்காக தயார்படுத்தி வைத்திருக்கிறான்

[58] எவர்கள் நம்பிக்கை கொண்ட ஆண்களையும் பெண்களையும் அவர்கள் செய்யாத குற்றத்தை(ச் செய்ததாக)க் கூறித் துன்புறுத்துகிறார்களோ அவர்கள், நிச்சயமாக (பெரும்) அவதூற்றையும் பகிரங்கமான பாவத்தையுமே சுமந்து கொள்கின்றனர்

[59] நபியே! நீர் உமது மனைவிகளுக்கும், உமது மகள்களுக்கும், நம்பிக்கையாளர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முந்தானைகளை (தங்கள் முகங்களில் போட்டு) இறக்கிக் கொள்ளும்படி நீர் கூறுவீராக. அதனால், அவர்கள் கண்ணியமானவர்கள் என அறியப்பட்டு, எவருடைய துன்பத்திற்கும் அவர்கள் உள்ளாகாதிருப்பதற்கு இதுசுலபமான வழியாகும். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மகா கருணையாளனாக இருக்கிறான்

[60] (நபியே!) நயவஞ்சகர்களும், உள்ளத்தில் (பாவ) நோயுள்ளவர்களும், மதீனாவில் பொய்ப் பிரச்சாரம் செய்கிறவர்களும் (இனியும் தங்கள் விஷமத்திலிருந்து) விலகிக்கொள்ளாவிடில் நிச்சயமாக நாம் உம்மையே அவர்கள் மீது ஏவிவிட்டு விடுவோம். பின்னர், அதில் உமக்கு அருகில் வெகு சொற்ப நாள்களே தவிர அவர்கள் வசித்திருக்க முடியாது

[61] அவர்கள் சபிக்கப்பட்டு விட்டனர். ஆகவே, அவர்கள் எங்கு காணப்பட்ட போதிலும் (சிறை) பிடிக்கப்பட்டும், வெட்டி அழிக்கப்பட்டும் விடுவார்கள்

[62] அல்லாஹ் ஏற்படுத்திய வழி இதற்கு முன் சென்றவர்களுக்கும் இதுதான். ஆகவே, (நபியே!) அல்லாஹ்வுடைய வழியில் எவ்வித மாறுதலையும் நீர் காணமாட்டீர்

[63] (நபியே!) இறுதிநாளைப் பற்றி (அது எப்பொழுது வரும்? என) மனிதர்கள் உம்மிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘ (அது எப்பொழுது வருமென்ற) அதன் ஞானம் அல்லாஹ்விடம் (மட்டும்)தான் இருக்கிறது. நீர் அறிவீரா? அது சமீபத்திலும் வந்துவிடக்கூடும்

[64] மெய்யாகவே அல்லாஹ் நிராகரிப்பவர்களைச் சபித்து, கொழுந்து விட்டெரியும் நெருப்பை அவர்களுக்கு தயார்படுத்தி வைத்திருக்கிறான்

[65] அவர்கள் என்றென்றும் அதில்தான் தங்கிவிடுவார்கள். (அவர்களை) பாதுகாப்பவர்களையும் (அவர்களுக்கு) உதவி செய்பவர்களையும் அங்கு அவர்கள் காணமாட்டார்கள்

[66] நரகத்தில் அவர்களுடைய முகங்களை புரட்டிப் புரட்டிப் பொசுக்கும் நாளில் ‘‘எங்கள் கேடே! நாங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்திருக்க வேண்டுமே!'' என்று கதறுவார்கள்

[67] மேலும் ‘‘எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் கீழ்ப்படிந்தோம். நாங்கள் தப்பான வழியில் செல்லும்படி அவர்கள் செய்து விட்டார்கள்

[68] (ஆகவே) எங்கள் இறைவனே! நீ அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைக் கொடுத்து, அவர்களை பெரும் சாபத்தால் சபித்துவிடு'' என்று கூறுவார்கள்

[69] நம்பிக்கையாளர்களே! மூஸாவை(ப் பற்றி பொய்யாக அவதூறு கூறி அவரை)த்துன்புறுத்திய மக்களைப் போல் நீங்களும் ஆகிவிட வேண்டாம். அவர்கள் கூறிய அவதூற்றிலிருந்து மூஸாவை அல்லாஹ் பரிசுத்தமாக்கி விட்டான். அவர் அல்லாஹ்விடத்தில் மிக்க கண்ணியமானவராகவே இருந்தார்

[70] (ஆகவே,) நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள்

[71] அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார்

[72] நிச்சயமாக ‘‘(நம்) பொறுப்பைச் சுமந்து கொள்வீர்களா?'' என்று நாம் வானங்கள், பூமி, மலைகள் ஆகியவற்றிடம் நாம் வினவினோம். அதற்கு அவை அதைப் பற்றிப் பயந்து, அதைச் சுமந்து கொள்ளாது விலகிவிட்டன. அத்தகைய பொறுப்பைத்தான் மனிதன் சுமந்துகொண்டான். (ஆகவே) நிச்சயமாக அவன் அறியாதவனாக தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொண்டவனாக இருக்கிறான்

[73] (அத்தகைய பொறுப்பை ஏற்றுக்கொண்டு, அதற்கு மாறாக நடக்கும்) நயவஞ்சக ஆண்களையும் பெண்களையும், இணைவைத்து வணங்கும் ஆண்களையும் பெண்களையும் அல்லாஹ் வேதனை செய்வான். (அந்த பொறுப்பை மதித்து நடக்கும்) நம்பிக்கையாளர்களாகிய ஆண்களையும் பெண்களையும் (அவர்களுடைய) தவறிலிருந்து (அருளின் பக்கம்) அல்லாஹ் திருப்பிவிடுவான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக கருணை உடையவனாக இருக்கிறான்

ஸபா

Surah 34

[1] புகழனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே! வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும் அவனுக்குச் சொந்தமானவைகளே! மறுமையிலும் எல்லா புகழும் அவனுக்குரியதே! அவன்தான் ஞானமுடையவன், அனைத்தையும் நன்கறிந்தவன்

[2] பூமிக்குள் பதிகின்ற (வித்து போன்ற)வற்றையும், அதில் இருந்து (முளைத்து செடிகொடிகளாக) வெளிப்படுகின்றவற்றையும் வானத்தில் இருந்து இறங்குபவற்றையும், அதன் பக்கம் ஏறுகின்றவற்றையும் அவன் நன்கறிவான். அவன் மகா கருணையுடையவன் மிக்க மன்னிப்பவன்

[3] (எனினும்) “மறுமை நமக்கு வராது'' என்று (இந்)நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர். (நபியே!) கூறுவீராக: ‘‘ ஏன் வராது, மறைவானவை அனைத்தையும் அறிந்தவனான என் இறைவன் மீது சத்தியம்! கண்டிப்பாக அது உங்களிடம் வந்தே தீரும். அவன் அறிவை விட்டும் வானங்களிலோ பூமியிலோ உள்ளவற்றில் ஓர் அணுவளவும் தப்பிவிடாது. அணுவைவிட சிறியதோ அல்லது பெரியதோ (ஒவ்வொன்றும் ‘லவ்ஹுல் மஹ்ஃபூள்' என்னும்) தெளிவான குறிப்புப் புத்தகத்தில் பதிவு செய்யப்படாமல் இல்லை

[4] நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்தவர்களுக்குக் கூலி கொடுப்பதற்காக (அவ்வாறு அதில் பதியப்பட்டுள்ளது). இத்தகையவர்களுக்கு மன்னிப்பும் உண்டு; கண்ணியமான உணவும் (வாழ்க்கையும்) உண்டு

[5] எவர்கள் நம் வசனங்களுக்கு எதிராக (நம்மை)த் தோற்கடிக்க முயற்சி செய்கிறார்களோ அவர்களுக்கு மிக்க துன்புறுத்தும் தண்டனையின் வேதனை உண்டு

[6] (நபியே!) எவர்களுக்கு ஞானம் கொடுக்கப்பட்டதோ அவர்கள் உமக்கு இறக்கப்பட்ட இவ்வேதத்தை, உமது இறைவனால் அருளப்பட்ட உண்மையான வேதம் என்றும்; அது அனைவரையும் மிகைத்த மிக்க புகழுக்குரியவனின் நேரான வழியை அறிவிக்கக்கூடியது என்றும் எண்ணுவார்கள்

[7] எனினும், நிராகரித்தவர்கள் (மற்றவர்களை நோக்கி) ‘‘நீங்கள் (இறந்து, மக்கி) அணுவணுவாகப் பிரிக்கப்பட்டதன் பின்னரும் நிச்சயமாக நீங்கள் புதிதாகப் படைக்கப்பட்டு விடுவீர்கள் என்று உங்களுக்கு (பயமுறுத்தி)க் கூறக்கூடிய ஒரு மனிதரை நாம் உங்களுக்கு அறிவிக்கவா'' என்று (பரிகாசமாகக்) கூறுகின்றனர்

[8] என்ன, (இம்மனிதர்) ‘‘அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்து கூறுகிறாரோ அல்லது அவருக்குப் பைத்தியம்தான் பிடித்திருக்கிறதோ'' (என்று அவர்களிடம் கூறுகின்றனர்.) மாறாக. எவர்கள் மறுமையை நம்பவில்லையோ அவர்கள்தான் பெரும் வேதனையிலும், வெகு தூரமானதொரு வழிகேட்டிலும் இருக்கின்றனர்

[9] வானத்திலும் பூமியிலும் அவர்களுக்கு முன்னும் பின்னும் இருப்பவற்றை அவர்கள் கவனிக்கவில்லையா? நாம் விரும்பினால் அவர்களைப் பூமிக்குள் சொருகிவிடுவோம் அல்லது வானத்திலிருந்து சில துண்டுகளை அவர்கள் மேல் எறிந்து (அவர்களை அழித்து) விடுவோம். (அல்லாஹ்வையே) நோக்கி நிற்கும் ஒவ்வொரு அடியானுக்கும் நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது

[10] மெய்யாகவே நாம் நம் புறத்திலிருந்து தாவூதுக்கு பெரும் அருள் புரிந்தோம். மலைகளே! பறவைகளே! ‘‘ நீங்கள் அவருடன் (சேர்ந்து) துதி செய்யுங்கள்'' (என்றும் கட்டளையிட்டோம்). மேலும், அவருக்கு இரும்பை (மெழுகைப் போல்) மென்மையாக்கித் தந்தோம்

[11] மேலும், (சங்கிலி) வளையங்களை செய்து (அவற்றை முறைப்படி) ஒழுங்காக இணைத்து போர்ச்சட்டை செய்யவும் (என்று கட்டளையிட்டதுடன் அவரையும் அவரைச் சார்ந்தவர்களையும் நோக்கி) ‘‘நீங்கள் நற்செயல்களையே செய்து கொண்டிருங்கள்; நிச்சயமாக நான், நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன்'' (என்றோம்)

[12] மேலும், ஸுலைமானுக்கு காற்றை வசப்படுத்தித் தந்தோம். அதன் காலைப் பயணம் ஒரு மாத தூரமும், அதன் மாலைப் பயணம் ஒரு மாத தூரமுமாக இருந்தது. இன்னும், செம்பை ஊற்று (நீரை)ப் போல் நாம் அவருக்கு (உருகி) ஓடச்செய்தோம். தன் இறைவனுடைய கட்டளைப்படி அவருக்கு வேலை செய்யக்கூடிய ஜின்களையும் நாம் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்து (அவருக்கு கட்டுப்பட்டு நடப்பதில்) அவர்களில் எவன் நம் கட்டளையைப் புறக்கணிக்கிறானோ அவனை நரக வேதனையைச் சுவைக்கும் படி நாம் செய்வோம் (என்றோம்)

[13] ஸுலைமான் விரும்பிய மாளிகைகளையும், சிலைகளையும், (பெரிய பெரிய) தண்ணீர்த் தொட்டிகளைப் போன்ற பெரும் கொப்பரைகளையும், அசைக்க முடியாத பெரிய (பெரிய) ‘தேகு' (சமையல் பாத்திரங்)களையும் அவை செய்து கொண்டிருந்தன. (அவருடைய குடும்பத்தினரை நோக்கி) ‘‘தாவூதுடைய சந்ததிகளே ! இவற்றுக்காக நீங்கள் (நமக்கு) நன்றி செலுத்திக் கொண்டிருங்கள்'' (என்று கட்டளையிட்டோம்). எனினும், என் அடியார்களில் நன்றி செலுத்துபவர்கள் வெகு சொற்பமே ஆவார்கள்

[14] ஸுலைமானுக்கு நாம் மரணத்தை விதித்தபொழுது அவர் இறந்து விட்டார் என்பதை, அவர் சாய்ந்திருந்த தடியை அரித்து விட்ட பூச்சியைத் தவிர (மற்ற எவரும்) அந்த ஜின்களுக்கு அறிவிக்கவில்லை. (அவர் சாய்ந்திருந்த தடியைக் கரையான் பூச்சிகள் அரித்து விட்டன. ஆகவே, அதன் மீது சாய்ந்திருந்த ஸுலைமான் கீழே விழுந்துவிட்டார்.) அவர் கீழே விழவே (வேலை செய்து கொண்டிருந்த) அந்த ஜின்களுக்கு தாங்கள் மறைவான விஷயங்களை அறியக் கூடுமாக இருந்தால் (இரவு பகலாக உழைக்க வேண்டிய) இழிவு தரும் இவ்வேதனையில் தங்கி இருக்க மாட்டோம் என்று தெளிவாகத் தெரிந்தது

[15] மெய்யாகவே ‘ஸபா'வாசிகள் வசித்திருந்த இடத்தில் அவர்களுக்கு நல்லதோர் அத்தாட்சியிருந்தது. (அதன் வழியாகச் செல்பவர்களுக்கு) வலப்புறமாகவும் இடப்புறமாகவும் இரு சோலைகள் இருந்தன. ‘‘ உங்கள் இறைவன் உங்களுக்கு அருள் புரிந்தவற்றைப் புசியுங்கள்; அவனுக்கு நன்றி செலுத்துங்கள். (இம்மையில்) வளமான நகரமும், (மறுமையில்) மிக்க மன்னிப்புடைய இறைவனும் (உங்களுக்கு) உண்டு'' (எனவும் கூறப்பட்டது)

[16] எனினும், அவர்கள் (அதைப்) புறக்கணித்து(ப் பாவத்தில் ஆழ்ந்து) விட்டனர். (ஆகவே, அவர்கள் கட்டியிருந்த மகத்தானதொரு அணையை உடைக்கக்கூடிய) பெரும் வெள்ளத்தை அவர்களுக்குக் கேடாக அனுப்பிவைத்தோம். அவர்களுடைய (உன்னதமான கனிகளையுடைய) இரு சோலைகளைக் கசப்பும், புளிப்புமுள்ள காய்களையுடைய மரங்களாலும், சில இலந்தை மரங்களாலும் நிரம்பிய தோப்புகளாக மாற்றிவிட்டோம்

[17] நம் நன்றியை அவர்கள் மறந்ததற்கு இதை நாம் அவர்களுக்குக் கூலியாகக் கொடுத்தோம். நன்றி கெட்டவர்களுக்கே தவிர (மற்றெவருக்கும் இத்தகைய) கூலியை நாம் கொடுப்போமா

[18] அவர்களு(டைய ஊரு)க்கும் நாம் அருள்புரிந்த (சிரியாவிலுள்ள செழிப்பான) ஊர்களுக்கும் இடையில் தொடர்ச்சியாகப் பல கிராமங்களையும் உண்டுபண்ணி அவற்றில் பாதைகளையும் அமைத்து, ‘‘ இரவு பகல் எந்த நேரத்திலும் அச்சமற்றவர்களாக அதில் பிரயாணம் செய்யுங்கள்'' (என்று கூறியிருந்தோம்)

[19] ஆனால், அவர்கள் (இந்த நன்றியைப் புறக்கணித்து ‘‘தொடர்ச்சியாக ஊர்கள் இருப்பது எங்கள் பயணத்திற்கு இன்பம் அளிக்கவில்லை.) எங்கள் இறைவனே! எங்கள் பயணங்கள் நெடுந்தூரமாகும்படிச் செய்(வதற்காக மத்தியில் தொடர்ச்சியாக உள்ள இக்கிராமங்களை அழித்து விடு)வாயாக!'' என்று பிரார்த்தித்துத் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர். ஆகவே, (அவர்களையும் அவர்களுடைய நகரங்களையும் அழித்து) அவர்களையும் பல இடங்களுக்குச் சிதறடித்துப் பலரும் (இழிவாகப்) பேசப்படக்கூடிய கதைகளாக்கிவிட்டோம். பொறுமையுடையவர்கள், நன்றி செலுத்துபவர்கள் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன

[20] நிச்சயமாக (அவர்கள் தன்னைப் பின்பற்றுவார்களென்று) இப்லீஸ் எண்ணிய எண்ணத்தை உண்மை என்றே அவன் கண்டு கொண்டான். ஆகவே, நம்பிக்கை கொண்ட சிலரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் அவனையே பின்பற்றினார்கள்

[21] எனினும், அவர்களை நிர்ப்பந்திக்க அவனுக்கு ஒரு அதிகாரமும் இல்லை. ஆயினும், மறுமையை நம்பாத அவர்களில் (மறுமையை) நம்புபவர் எவர் என்பதை நாம் தெளிவாக அறி(வித்து விடு)வதற்காகவே இவ்வாறு நடைபெற்றது. உம் இறைவனே எல்லா பொருள்களையும் பாதுகாப்பவன் ஆவான்

[22] (நபியே!) கூறுவீராக: அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் (தெய்வங்களென) எண்ணிக் கொண்டீர்களோ அவர்களை நீங்கள் அழைத்துப் பாருங்கள். வானங்களிலோ பூமியிலோ அவர்களுக்கு ஓர் அணுவளவும் அதிகாரம் இல்லை. மேலும், அவற்றை படைப்பதில் அவர்களுக்கு எத்தகைய சம்பந்தமும் இல்லை. (அவற்றை படைப்பதில்) அவை அவனுக்கு உதவி செய்யவுமில்லை

[23] அவனுடைய அனுமதி பெற்ற (வான)வர்களைத் தவிர மற்றவர்கள் அவனிடத்தில் பரிந்து பேசுவதும் பயனளிக்காது. (அல்லாஹ்வுடைய ஒரு கட்டளை பிறக்கும் சமயத்தில் அவர்கள் பயந்து நடுங்குகின்றனர்.) அவர்களுடைய உள்ளத்தில் இருந்து நடுக்கம் நீங்கியதும் (அவர்களில் ஒருவர் மற்றவர்களை நோக்கி) ‘‘ உங்கள் இறைவன் என்ன கட்டளையிட்டான்?'' என்று கேட்பார்கள். அதற்கு மற்றவர்கள் ‘‘ (இடவேண்டிய) நியாயமான கட்டளையையே இட்டான்; அவனோ மிக்க மேலானவன், மிகப் பெரியவன் ஆவான்'' என்று கூறுவார்கள்

[24] (நபியே! நிராகரிக்கும் இவர்களை நோக்கி) ‘‘வானத்தில் இருந்தும் பூமியில் இருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்?'' என்று கேட்பீராக. (அதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன?) ‘‘அல்லாஹ்தான்'' என்று (நீரே) கூறி ‘‘மெய்யாகவே நேரான வழியில் இருப்பவர் அல்லது பகிரங்கமான தவறான வழியில் இருப்பவர் நீங்களா அல்லது நாமா?'' என்றும் கேட்பீராக

[25] (நபியே!) கூறுவீராக: ‘‘நாங்கள் செய்யும் குற்றங்களைப் பற்றி நீங்கள் கேட்கப்பட மாட்டீர்கள்; (அவ்வாறே) நீங்கள் செய்பவற்றைப் பற்றி நாங்கள் கேட்கப்பட மாட்டோம்

[26] (நபியே!) கூறுவீராக: ‘‘முடிவில் (மறுமை நாளில்) நமது இறைவன் நம் அனைவரையும் ஒன்று சேர்த்து, பிறகு நமக்கிடையில் நீதமாகவே தீர்ப்பளிப்பான். அவன் தீர்ப்பளிப்பதில் மிக்க மேலானவனும் (அனைத்தையும்) நன்கறிந்தவனும் ஆவான்

[27] ‘‘ (சிலை வணங்கிகளே) அவனுக்கு இணைதெய்வங்களை நீங்கள் ஏற்படுத்தினீர்களே அவற்றைப்பற்றி எனக்கு கூறுங்கள்'' அவ்வாறு (எதுவும் அவனுக்கு இணை) இல்லை. மாறாக, அவனோ அனைவரையும் மிகைத்தவனும் ஞானமுடையவனும் ஆகிய (ஒரே இறைவனான) அல்லாஹ் ஆவான். (ஆகவே அவனுக்கு அறவே இணை துணை இல்லை)'' என்று (நபியே!) கூறுவீராக

[28] (நபியே!) நாம் உம்மை (இவ்வுலகில் உள்ள) எல்லா மனிதர்களுக்குமே நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவும்தான் அனுப்பிவைத்திருக்கிறோம். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிந்து கொள்ளவில்லை

[29] ‘‘ நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் (விசாரணைக் காலம் என்று) நீங்கள் கூறும் வாக்குறுதி எப்பொழுது வரும்?'' என்று அவர்கள் கேட்கின்றனர்

[30] அதற்கு நீர் கூறுவீராக: ‘‘உங்களுக்காக ஒரு நாள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதிலிருந்து நீங்கள் ஒரு நாழிகை பிந்தவுமாட்டீர்கள்; முந்தவுமாட்டீர்கள்

[31] ‘‘ நிச்சயமாக நாங்கள் இந்த குர்ஆனையும் நம்பமாட்டோம்; இதற்கு முன்னுள்ள வேதங்களையும் நம்பவேமாட்டோம்'' என்று (இந்த) நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர். ஆகவே, இவ்வக்கிரமக்காரர்கள் தங்கள் இறைவன்முன் நிறுத்தப்பட்டு அவர்களில் சிலர் சிலரை நிந்திப்பதையும்; பலவீனமானவர்கள் கர்வம் கொண்டவர்களை நோக்கி ‘‘ நீங்கள் இல்லையெனில் நிச்சயமாக நாங்கள் நம்பிக்கை கொண்டேயிருப்போம்'' என்று கூறுவதையும் நீர் பார்ப்பீராயின் (அவர்களின் இழி நிலைமையைக் கண்டு கொள்வீர்)

[32] அதற்கு (அவர்களில்) கர்வம் கொண்டிருந்தவர்கள் பலவீனமாக இருந்தவர்களை நோக்கி ‘‘உங்களிடம் நேரான வழி வந்ததன் பின்னர் (நீங்கள் அதில் செல்லாது) நாங்களா உங்களைத் தடுத்தோம்? (அவ்வாறு) இல்லை; நீங்கள்தான் (அதில் செல்லாது) குற்றவாளிகளாக ஆனீர்கள்'' என்று கூறுவார்கள்

[33] அதற்கு, பலவீனமாயிருந்தவர்கள் கர்வம் கொண்டிருந்தவர்களை நோக்கி, ‘‘sஎன்னே! நாங்கள் அல்லாஹ்வை நிராகரித்து விட்டு, அவனுக்கு இணை வைக்குமாறு நீங்கள் எங்களை ஏவி, இரவு பகலாக சூழ்ச்சி செய்யவில்லையா?'' என்று கூறுவார்கள். ஆகவே, இவர்கள் அனைவருமே வேதனையைக் (கண்ணால்) காணும் சமயத்தில் தங்கள் துக்கத்தை மறைத்துக்கொண்டு (இவ்வாறு) கூறுவார்கள். (ஆனால்,) நிராகரித்தவர்களுடைய கழுத்துகளில் நாம் விலங்கிட்டு விடுவோம். இவர்கள், தாங்கள் செய்துகொண்டிருந்த (தீய) செயலுக்குத் தக்க கூலியே தவிர மற்றெதுவும் கொடுக்கப்படுவார்களா

[34] அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் (நமது) தூதரை நாம் எங்கெங்கு அனுப்பினோமோ அங்கெல்லாம் இருந்த செல்வந்தர்கள் (அவரை நோக்கி) ‘‘நிச்சயமாக நாம் நீங்கள் கொண்டு வந்த தூதை நிராகரிக்கிறோம்'' என்று கூறாமல் இருக்கவில்லை

[35] மேலும், ‘‘நாங்கள் அதிகமான செல்வங்களையும் சந்ததிகளையும் உடையவர்கள். ஆகவே, (மறுமையில்) நாங்கள் வேதனை செய்யப்பட மாட்டோம்'' என்று கூறினர்

[36] (அதற்கு நபியே!) கூறுவீராக: ‘‘நிச்சயமாக என் இறைவன், தான் விரும்பியவர்களுக்கு வாழ்வாதாரத்தை அதிகமாகவும் கொடுக்கிறான்; (தான் விரும்பியவர்களுக்குக்) குறைத்தும் விடுகிறான். எனினும், மனிதரில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிந்து கொள்வதில்லை

[37] (நீங்கள் எண்ணுகிறவாறு) உங்கள் செல்வங்களும் உங்கள் சந்ததிகளும் உங்களை நம்மிடம் சேர்க்கக் கூடியவை அல்ல. ஆயினும், எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ (அவையே அவர்களை நம்மிடம் சேர்க்கும்.) அவர்களுக்கு அவர்கள் செய்த (நற்)செயலின் காரணமாக இரட்டிப்பான கூலியுண்டு. மேலும், அவர்கள் (சொர்க்கத்திலுள்ள) மேல் மாடிகளில் கவலையற்றும் வசிப்பார்கள்

[38] நம் வசனங்களுக்கு எதிராக (நம்மை) தோற்கடிக்க முயற்சிப்பவர்கள் மறுமை நாளன்று வேதனையில் தள்ளப்படுவார்கள்

[39] (நபியே!) கூறுவீராக: “நிச்சயமாக என் இறைவன் தன் அடியார்களில் தான் விரும்பியவர்களுக்கு அதிகமான வாழ்வாதாரத்தைக் கொடுக்கிறான்; தான் விரும்பியவர்களுக்கு குறைத்து விடுகிறான். ஆகவே, நீங்கள் எதை தானம் செய்தபோதிலும் அவன் அதற்குப் பிரதி கொடுத்தே தீருவான். அவன் கொடையளிப்பவர்களில் மிக்க மேலானவன்

[40] (வானவர்களை வணங்கிக் கொண்டிருந்த) அவர்கள் அனைவரும் ஒன்று சேர்க்கப்படும் நாளில், வானவர்களை நோக்கி ‘‘இவர்கள் உங்களையா வணங்கி வந்தார்கள்?'' என்று கேட்கப்படும்

[41] அதற்கவர்கள், ‘‘(எங்கள் இறைவனே!) நீ மிகப் பரிசுத்தமானவன். நீதான் எங்கள் பாதுகாவலன்; அவர்களன்று. மாறாக, அவர்கள் ஜின்களையே வணங்கிக் கொண்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் அந்த ஜின்களையே நம்பிக்கை கொண்டும் இருந்தார்கள்'' என்று (வானவர்கள்) கூறுவார்கள்

[42] அந்நாளில் உங்களில் ஒருவர் மற்றவருக்கு நன்மையோ தீமையோ செய்ய சக்தியற்றவராக இருப்பார். மேலும், (அச்சமயம்) அவ்வக்கிரமக்காரர்களை நோக்கி ‘‘நீங்கள் (நம் வேதனையைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்த(தன் காரணமாக) இந்நரக வேதனையைச் சுவைத்துப் பாருங்கள்'' எனக் கூறுவோம்

[43] அவர்களுக்கு நம் தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் அதற்கவர்கள் (நம் தூதரைப் பற்றி) ‘‘இவர் ஒரு சாதாரண மனிதரே தவிர வேறில்லை. உங்கள் மூதாதைகள் வணங்கிக் கொண்டிருந்தவற்றிலிருந்து உங்களைத் தடுத்துவிடவே இவர் விரும்புகிறார்'' என்றும் (நம் தூதர் கூறுகின்ற) ‘‘இது வெறும் கட்டுக் கதையே தவிர வேறில்லை'' என்றும் கூறுகின்றனர். மேலும்,”(திரு குர்ஆனாகிய) இந்த உண்மை அவர்களிடம் வந்த சமயத்தில், இது பகிரங்கமான சூனியமே தவிர வேறில்லை'' என்றும் இந்த நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர்

[44] (நபியே! இதற்கு முன்னர்) நாம் (உம்மை நிராகரிக்கும் அரபிகளாகிய) இவர்களுக்கு, இவர்கள் ஓதக்கூடிய வேதம் எதையும் கொடுக்கவில்லை; அச்சமூட்டி எச்சரிக்கக்கூடிய தூதர் எவரையும் உமக்கு முன்னர் நாம் அவர்களிடம் அனுப்பவில்லை. (இவ்வாறிருந்தும் அவர்கள் உம்மை நிராகரிக்கின்றனர்)

[45] இவர்களுக்கு முன்னிருந்த (அரபிகளல்லாத)வர்களும் மற்ற (தூதர்களை இவ்வாறே) பொய்யாக்கினார்கள். அவர்களுக்கு நாம் கொடுத்திருந்ததில் பத்தில் ஒரு பாகத்தையும் இவர்கள் அடைந்து விடவில்லை. (அதற்குள்ளாகவே) இவர்கள் எனது தூதர்களைப் பொய்யாக்க முற்பட்டு இருக்கின்றனர். (இவர்களுக்கு முன்னர் நம் தூதர்களை நிராகரித்து பொய்யாக்கியவர்களை) நான் தண்டித்தது எவ்வாறாயிற்று? (என்பதை இவர்கள் கவனிப்பார்களாக)

[46] (நபியே!) கூறுவீராக: ‘‘நான் உங்களுக்கு உபதேசிப்பதெல்லாம் ஒரே ஒரு விஷயம்தான். நீங்கள் ஒவ்வொருவராகவோ, இரண்டிரண்டு பேர்களாகவோ அல்லாஹ்வுக்காகச் சிறிது பொறுத்திருந்து, பின்னர் (உங்களுக்குள்) ஆலோசித்துப் பாருங்கள். உங்கள் சிநேகிதராகிய எனக்கு எத்தகைய பைத்தியமும் இல்லை. (நான் உங்களுக்குக்) கடினமான வேதனை வருவதற்கு முன்னர் (அதைப் பற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனே தவிர வேறில்லை

[47] (நபியே! மேலும்) கூறுவீராக: ‘‘நான் உங்களிடத்தில் ஏதும் கூலியைக் கேட்டிருந்தால் அது உங்களுக்கே சொந்தம் ஆகட்டும். என் கூலி அல்லாஹ்விடமே தவிர (உங்களிடம்) இல்லை. அவன் அனைத்திற்கும் (அவற்றை நன்கறிந்த) சாட்சி ஆவான்

[48] (மேலும்) கூறுவீராக: ‘‘நிச்சயமாக எனது இறைவன் (பொய்யை அழிப்பதற்காக) மெய்யைத் தெளிவாக்குகிறான். மறைவானவை அனைத்தையும் அவன் நன்கறிந்தவன்

[49] (மேலும்) கூறுவீராக: ‘‘உண்மை வந்துவிட்டது. பொய் புதிதாக எதையும் (இதுவரை) செய்து விடவில்லை. இனியும் செய்யப் போவதில்லை

[50] (மேலும்) கூறுவீராக: ‘‘நான் வழிதவறி இருந்தால் அது எனக்கே நஷ்டமாகும். நான் நேரான வழியை அடைந்து இருந்தால் அது என் இறைவன் எனக்கு வஹ்யி மூலமாக அறிவித்ததன் காரணமாகவே ஆகும். நிச்சயமாக அவன் (அனைத்தையும்) செவியுறுபவனும் (அனைத்திற்கும்) சமீபமானவனும் ஆவான்

[51] ‘‘(மறுமையில்) இவர்கள் திடுக்கிட்டு(த் தப்பி) ஓட முயற்சித்த போதிலும் ஒருவருமே தப்பிவிட மாட்டார்கள். மிக்க சமீபத்திலேயே பிடிபட்டு விடுவார்கள்'' என்பதை நீர் காண்பீராயின் (அது எவ்வாறிருக்கும்)

[52] (அச்சமயம்) இவர்கள் (திடுக்கிட்டு) அதை (நம்பிக்கை கொண்டோம்) நம்பிக்கை கொண்டோம் என்று கதறுவார்கள். (சத்தியத்திலிருந்து) இவ்வளவு தூரம் சென்றுவிட்ட இவர்கள் (உண்மையான நம்பிக்கையை) எவ்வாறு அடைந்து விடுவார்கள்

[53] இதற்கு முன்னரோ, இவர்கள் அதை நிராகரித்துக் கொண்டும், இவ்வளவு தூரத்தில் அவர்களுக்கு மறைத்திருந்ததைப் (பொய் என்று) பிதற்றிக்கொண்டும் இருந்தனர்

[54] அவர்களுக்கும் அவர்கள் விரும்பியவற்றுக்கும் இடையில் தடை ஏற்படுத்தப்பட்டுவிடும். அவ்வாறே இவர்களுக்கு முன்னிருந்த இவர்களுடைய இனத்தாருக்குச் செய்யப்பட்டது. (ஏனென்றால்,) நிச்சயமாக அவர்களும் பெரும் சந்தேகத்தில் ஆழ்ந்தே கிடந்தனர்

ஃபாதிர்

Surah 35

[1] எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! வானங்களையும் பூமியையும் அவனே படைத்தான். வானவர்களைத் தன் தூதைக் கொண்டு போகிறவர்களாகவும் ஆக்கினான். அவர்கள் இரண்டிரண்டு, மும்மூன்று, நான்கு நான்கு இறக்கைகள் உடையவர்களாக இருக்கின்றனர். அவன் விரும்பியதைத் தன் படைப்பில் மேலும் அதிகப்படுத்துவான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்

[2] அல்லாஹ் தன் அருளை மனிதர்களுக்குத் திறந்து விட்டால் அதைத் தடுத்து விடக்கூடியவன் ஒருவனுமில்லை. அவன் (தன் அருளைத்) தடுத்துக் கொண்டால் அதை அனுப்பக்கூடியவனும் ஒருவனுமில்லை. அவன் (அனைவரையும்) மிகைத்தவன், ஞானமுடையவன் ஆவான்

[3] மனிதர்களே! உங்கள் மீதுள்ள அல்லாஹ்வுடைய அருட்கொடையை நினைத்துப் பாருங்கள். அல்லாஹ்வையன்றி வேறொரு படைப்பவன் இருக்கிறானா? வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் அவனே உங்களுக்கு உணவளிக்கிறான். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் இல்லவே இல்லை. ஆகவே, (அவனை விட்டு) நீங்கள் எங்கு வெருண்டோடுகிறீர்கள்

[4] (நபியே!) அவர்கள் உம்மைப் பொய்யாக்கினால் (அதற்காக நீர் கவலைப்படாதீர்.) இவ்வாறே உங்களுக்கு முன்னர் வந்த தூதர் பலரும் பொய்யாக்கப்பட்டனர். அல்லாஹ்விடமே எல்லா காரியங்களும் கொண்டு வரப்படும்

[5] மனிதர்களே! நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானதாகும். ஆகவே, இவ்வுலக வாழ்க்கை மெய்யாகவே உங்களை மயக்கிவிட வேண்டாம். (ஷைத்தானாகிய) மாயக்காரனும் அல்லாஹ்வைப் பற்றி உங்களை மயக்கிவிட வேண்டாம்

[6] நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு எதிரியாக இருக்கிறான். ஆகவே, அவனை நீங்களும் எதிரியாகவே கருதுங்கள். அவன் (தன்னைப் பின் பற்றிய) தன் கூட்டத்தாரை அழைப்பதெல்லாம் அவர்கள் நரகவாசிகளாகி விடுவதற்காகவே

[7] எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்களுக்குக் கடினமான வேதனை உண்டு. எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும் உண்டு; பெரிய கூலியும் உண்டு

[8] எவனுக்குத் தீய காரியங்கள் அழகாகக் காண்பிக்கப்பட்டு அவனும் அதை அழகாகக் காண்கிறானோ அவனா (தீயதை தீயதாகவே கண்டு அதிலிருந்து விலகிக் கொள்கிறவனைப் போன்று ஆவான்)? (ஒரு போதும் ஆக மாட்டான்.) நிச்சயமாக அல்லாஹ் தான் விரும்பியவர்களைத் தவறான வழியில் விட்டு விடுகிறான். தான் விரும்பியவர்களை நேரான வழியில் செலுத்துகிறான். ஆகவே, (நபியே!) அவர்களுக்காக உமது உயிரையே மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு நீர் கவலைப்படாதீர். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கறிகிறான்

[9] அல்லாஹ்தான் காற்றை அனுப்புகிறான். அது மேகங்களை ஓட்டுகிறது. பின்னர், அவற்றை இறந்து (பட்டுப்)போன பூமியின் பக்கம் செலுத்தி, இறந்து போன பூமியை உயிர்ப்பிக்கிறான். (மரணித்தவர்கள் மறுமையில்) உயிர்பெற்று எழுவதும் இவ்வாறே

[10] எவன் கண்ணியத்தையும், சிறப்பையும் விரும்புகிறானோ, (அவன் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு நடக்கவும். ஏனென்றால்) கண்ணியங்கள் அனைத்துமே அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை. (கலிமா தையிப், ஸலவாத்து போன்ற) நல்ல வாக்கியங்கள் அவன் பக்கமே உயருகின்றன. நல்ல காரியங்களை அவனே உயர்த்துகிறான். (நபியே!) எவர்கள் (உமக்குத்) தீங்கிழைக்க சதி செய்கிறார்களோ அவர்களுக்குக் கடினமான வேதனை உண்டு. இவர்களுடைய சதி (ஒன்றுமில்லாது) அழிந்தே போகும்

[11] அல்லாஹ்தான் உங்களை (ஆரம்பத்தில்) மண்ணால் உற்பத்தி செய்தான். பின்னர், ஒரு துளி இந்திரியத்திலிருந்து (படைத்தான்). பின்னர், (ஆண், பெண் ஜோடி) ஜோடியாக உங்களை ஆக்கினான். அவன் அறியாமல் ஒரு பெண் கர்ப்பமாவதும் இல்லை; பிரசவிப்பதும் இல்லை. அவனுடைய ‘லவ்ஹுல் மஹ்ஃபூளில்' இல்லாமல் எவனுடைய வயதும் அதிகரிப்பதுமில்லை; குறைந்து விடுவதும் இல்லை. நிச்சயமாக இ(வை அனைத்தையும் அறிந்திருப்ப)து அல்லாஹ்வுக்குச் சுலபமானதே

[12] இரு கடல்களும் சமமாகி விடாது; ஒன்று குடிப்பதற்கு இன்பமான மதுரமான தண்ணீர்! மற்றொன்று கொடிய உப்பு(த் தண்ணீர். இவ்வாறு இவ்விரண்டிற்கும் வேற்றுமை இருந்தபோதிலும்), இவ்விரண்டில் இருந்துமே புத்தம் புதிய (மீன்) மாமிசத்தைப் புசிக்கிறீர்கள். நீங்கள் ஆபரணமாக அணியக்கூடிய (முத்து, பவளம் போன்ற)வற்றையும் அவற்றிலிருந்து வெளியே எடுக்கிறீர்கள். கடல்களைப் பிளந்து கொண்டு செல்லும் கப்பலில் (பயணம் செய்து பல தேசங்களிலுள்ள) இறைவனுடைய அருளை நீங்கள் தேடிக் கொள்கிறீர்கள். (இதற்கு) நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக

[13] அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான். சந்திரனையும் சூரியனையும் அடக்கி வைத்து இருக்கிறான். இவை அனைத்தும் அவற்றுக்குக் குறிப்பிட்ட தவணைப்படி செல்கின்றன. இவன்தான் உங்கள் இறைவனாகிய அல்லாஹ். எல்லா ஆட்சிகளும் அவனுக்கு உரியனவே! அவனையன்றி எவற்றை நீங்கள் (இறைவனென உதவிக்கு) அழைக்கிறீர்களோ அவற்றுக்கு ஓர் அணு அளவும் அதிகாரமில்லை

[14] அவற்றை நீங்கள் அழைத்தபோதிலும் உங்கள் அழைப்பை அவை செவியுறாது. அவை செவியுற்றபோதிலும் உங்களுக்குப் பதிலளிக்காது. மறுமை நாளிலோ அவற்றை நீங்கள் இணைவைத்து வணங்கியதையும் அவை நிராகரித்துவிடும். (அவற்றின் செயலற்ற தன்மைகள்) அனைத்தையும் அறிந்த (இறை)வனைப் போல் (வேறு) ஒருவரும் (நபியே!) உமக்கு (இவ்வளவு தெளிவாக) அறிவிக்கமாட்டார்

[15] மனிதர்களே! நீங்கள் அனைவரும் (எந்நேரத்திலும்) அல்லாஹ்வுடைய உதவி தேவைப்பட்டவர்களாகவே இருக்கிறீர்கள். அல்லாஹ்வோ முற்றிலும் தேவையற்றவன், புகழுக்குரியவன் ஆவான்

[16] அவன் விரும்பினால் உங்களை அழித்து மற்றொரு புதிய படைப்பைக் கொண்டு வந்துவிடுவான்

[17] இது அல்லாஹ்வுக்கு ஒரு சிரமமானது அல்ல

[18] (மறுமையில்) ஒருவனுடைய பாவச் சுமையை மற்றொருவன் சுமக்கவே மாட்டான். பளுவான சுமையில் ஒரு பாகத்தையேனும் சுமந்து கொள்ளும்படி அழைத்தபோதிலும், அவன் இவனுடைய சொந்தக்காரனாக இருந்த போதிலும், இவனுடைய சுமையில் ஓர் அற்ப அளவையும் அவன் சுமந்துகொள்ள மாட்டான். (நபியே!) நீர் அச்சமூட்டி எச்சரிப்பதெல்லாம், எவர்கள் (தங்கள் கண்ணால்) காணாமல் இருந்தும், தங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து, தொழுகையையும் நிலைநாட்டுகிறார்களோ அவர்களைத்தான். எவர் பரிசுத்தமாக இருக்கிறாரோ அவர் தன் நன்மைக்காகவே பரிசுத்தமாய் இருக்கிறார். அல்லாஹ்விடமே அனைத்தும் செல்ல வேண்டியதிருக்கிறது

[19] குருடனும் பார்வையுடையவனும் சமமாக மாட்டார்கள்

[20] (அவ்வாறே) இருளும் பிரகாசமும் (சமமாகாது)

[21] நிழலும், வெயிலும் (சமமாகாது)

[22] உயிருள்ளவர்களும் மரணித்தவர்களும் சமமாக மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ் தான் விரும்பியவர்களைச் செவியுறும்படிச் செய்கிறான். (நபியே!) சமாதிகளில் உள்ளவர்களை செவியுறும்படிச் செய்ய உம்மால் முடியாது

[23] நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரே தவிர, (நீர் கூறுகிறவாறே அவர்கள் செய்யும்படி அவர்களை நிர்ப்பந்திக்கக் கூடியவர்) அல்ல

[24] (நபியே!) நிச்சயமாக நாம் உம்மை உண்மையைக் கொண்டு நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவும் (மட்டுமே) அனுப்பி இருக்கிறோம். அச்சமூட்டி எச்சரிக்கின்ற (நம்) தூதர் வராத எந்த வகுப்பாரும் (பூமியில்) இருக்கவில்லை

[25] (நபியே!) அவர்கள் உம்மைப் பொய்யாக்கினால் (அதற்காக நீர் கவலைப்பட வேண்டாம். இவ்வாறே) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (தூதர்களை) பொய்யாக்கினார்கள். அவர்களுடைய தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் ‘ஸுஹுஃபு'களையும், பிரகாசமான வேதங்களையும் அவர்களிடம் கொண்டு வந்திருந்தனர்

[26] ஆகவே, (அத்தூதர்களை) நிராகரித்த அவர்களை நாம் பிடித்துக் கொண்டோம். எனது தண்டனை எவ்வாறாயிற்று (என்பதை நீர் கவனித்தீரா)? (அவ்வாறே, உம்மை நிராகரிக்கும் இவர்களையும் வேதனையைக் கொண்டு நாம் பிடித்துக் கொள்வோம்)

[27] (நபியே!) நிச்சயமாக அல்லாஹ்தான் வானத்திலிருந்து மழையை இறக்கிவைக்கிறான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? நாம் அதைக் கொண்டு பலவிதமான (ருசிகளையும்) நிறங்களையு(மு)டைய காய்கனிகளை வெளியாக்குகிறோம். இன்னும் மலைகளில் வெள்ளை, சிகப்பு முதலிய பல நிறங்கள் உள்ளவையும், சுத்தக்கருப்பு நிறம் உள்ளவையும் இருக்கின்றன

[28] மனிதர்களிலும், உயிருள்ளவற்றிலும் (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) கால்நடைகளிலும் இவ்வாறே பல நிறங்கள் இருக்கின்றன. நிச்சயமாக அல்லாஹ்வுடைய அடியார்களில் அவனுக்குப் பயப்படுபவர்களெல்லாம் (அறிவுடைய) கல்விமான்கள்தான். நிச்சயமாக அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனும் மிக்க மன்னிப்புடையவனும் ஆவான்

[29] எவர்கள் அல்லாஹ்வுடைய வேதத்தை ஓதி, தொழுகையையும் கடைப்பிடித்து, நாம் அவர்களுக்கு அளித்தவற்றை இரகசியமாகவும் வெளிப்படையாகவும் தானம் செய்து வருகிறார்களோ அவர்கள் நிச்சயமாக என்றுமே நஷ்டமடையாத (லாபம் தரும்) ஒரு வர்த்தகத்தை எதிர்பார்க்கிறார்கள்

[30] (அல்லாஹ்) அவர்களுக்கு அவர்களுடைய கூலியைப் பூரணமாகவே கொடுத்து, தன் அருளை மேலும் அதிகமாகவும் அவர்களுக்கு கொடுப்பான். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன், நன்றி அறிபவன்

[31] (நபியே!) நாம் உமக்கு வஹ்யி மூலம் கொடுத்திருக்கும் வேதம் முற்றிலும் உண்மையானது. அது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மைப்படுத்தி வைப்பதாகவும் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ், தன் அடியார்களை நன்கறிந்தவன், உற்று நோக்குபவன் ஆவான்

[32] பின்னர், நம் அடியார்களில் நாம் தேர்ந்தெடுத்தவர்களை அவ்வேதத்திற்கு வாரிசுகளாக ஆக்கினோம். எனினும், அவர்களில் பலர் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்; வேறு சிலர் நிதானமாக நடந்து கொண்டனர். மற்றும் சிலரோ அல்லாஹ்வுடைய கட்டளைப்படி நன்மையான காரியங்களில் முந்திக் கொள்கின்றனர். இதுவே மிகப் பெரும் பாக்கியமாகும்

[33] (அவர்கள்) நிலையான சொர்க்கத்திற்குச் சென்று விடுவார்கள். முத்துப் பதிந்த பொற்காப்புக்கள் அவர்களுக்கு (விருதாக) அணிவிக்கப்படும். அதில் அவர்களுடைய ஆடைகளெல்லாம் மிருதுவான பட்டுக்களாக இருக்கும்

[34] மேலும், (அவர்கள்) ‘‘தங்களை விட்டு எல்லா கவலைகளையும் நீக்கிவிட்ட அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் உரியன. நிச்சயமாக எங்கள் இறைவன் மிக்க மன்னிப்பவன், நன்றி அறிபவன்'' என்று புகழ்ந்து (துதி செய்து) கொண்டிருப்பார்கள்

[35] ‘‘அவனே தன் அருளைக் கொண்டு (மிக்க மேலான) ஒரு இல்லத்தில் எங்களை அமர்த்தினான். அதில் ஒரு கஷ்டமும் எங்களை அணுகுவதில்லை. ஒரு சடைவும் அதில் எங்களுக்கு ஏற்படுவதில்லை'' (என்றும் துதி செய்வார்கள்)

[36] எவர்கள் (நம் வசனங்களை) நிராகரித்து விடுகிறார்களோ அவர்களுக்கு நரக நெருப்புத்தான் (கூலியாகக்) கிடைக்கும். அவர்கள் இறந்துபோகும் விதத்தில் அதில் அவர்களுடைய காரியம் முடிவு செய்யப்பட மாட்டாது. (வேதனையை அனுபவித்துக் கொண்டிருப்பதற்காக உயிருடனேயே இருப்பார்கள்.) மேலும், அவர்களுடைய வேதனையில் ஒரு சிறிதும் குறைக்கப்பட மாட்டாது. இவ்வாறே நிராகரிப்பவர்கள் எல்லோருக்கும் நாம் கூலி கொடுப்போம்

[37] அதில் அவர்கள் பெரும் கூச்சலிட்டு ‘‘எங்கள் இறைவனே! (இதிலிருந்து) எங்களை வெளியேற்றி விடு. நாங்கள் செய்து கொண்டிருந்த (தீய) காரியங்களை விட்டுவிட்டு நற்செயல்களையே செய்வோம்'' என்று கூறுவார்கள். (அதற்கு இறைவன் அவர்களை நோக்கி) ‘‘நல்லுணர்ச்சி பெறக்கூடியவன் நல்லுணர்ச்சி பெறுவதற்குப் போதுமான காலம் வரை நாம் உங்களை(ப் பூமியில்) உயிரோடு விட்டு வைக்கவில்லையா? (இவ்வேதனையைப் பற்றி) உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவர் உங்களிடம் வந்தே இருக்கிறார். (அவரை நீங்கள் நிராகரித்து விட்டீர்கள்.) ஆதலால், (நரக வேதனையை) நீங்கள் சுவைத்துக் கொண்டிருங்கள். (உங்களைப் போன்ற) அநியாயக்காரர்களுக்கு உதவி செய்பவர் ஒருவருமில்லை'' (என்று கூறுவான்)

[38] வானங்களிலும் பூமியிலும் மறைந்திருப்பவற்றை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன். நிச்சயமாக அவன் உள்ளங்களில் இருப்பவற்றையும் நன்கறிந்தவன்

[39] அவன்தான் உங்களை இப்புவியில் (உங்களுக்கு முன்னிருந்தவர்களின்) பிரதிநிதிகளாக அமைத்தான். ஆகவே, (உங்களில்) எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்களின் நிராகரிப்பின் கேடு அவர்கள் மீதேசாரும். இந்த நிராகரிப்பவர்களின் நிராகரிப்பு அவர்களுடைய இறைவனிடத்தில் அவர்களுக்கு கோபத்தை தவிர (வேறெதனையும்) அதிகப்படுத்தவில்லை. இந்த நிராகரிப்பவர்களின் நிராகரிப்பு அவர்களுக்கு நஷ்டத்தையே தவிர (வேறெதனையும்) அதிகப்படுத்தவில்லை

[40] (நபியே!) கூறுவீராக: ‘‘அல்லாஹ்வையன்றி நீங்கள் (தெய்வங்கள் என) அழைப்பவற்றைப் பற்றி நீங்கள் கவனித்தீர்களா? அவை பூமியில் எதையும் படைத்திருக்கின்றனவா? அதை எனக்குக் காண்பியுங்கள். அல்லது வானங்களைப் படைப்பதில் அவற்றுக்குப் பங்குண்டா? அல்லது (அவற்றைத் தெய்வங்களெனக் கூறுவதற்குத்) தெளிவான ஆதாரமாக இருக்கின்ற ஒரு வேதத்தையாவது நாம் அவற்றுக்குக் கொடுத்திருக்கின்றோமா? (இவை ஒன்றுமே) இல்லை. (இந்தத் தெய்வங்கள் பாதுகாத்துக் கொள்ளுமென்று) இந்த அநியாயக்காரர்கள் சிலர் சிலருக்குச் செய்யும் வாக்குறுதியெல்லாம் வெறும் ஏமாற்றுதலே தவிர வேறில்லை

[41] வானங்களும் பூமியும் (தத்தம் எல்லையிலிருந்து) விலகிவிடாதபடி தடுத்துக் கொண்டிருப்பவன் நிச்சயமாக அல்லாஹ்தான். (தம் எல்லையில் இருந்து) அவ்விரண்டும் சாய முற்பட்டபோதிலும் அவை சாயாதபடி தடுக்கக்கூடியவன் அல்லாஹ்வைத் தவிர வேறொருவனுமில்லை. நிச்சயமாக அவன் பொறுமையுடையவனாக, மன்னிப்புடையவனாக இருக்கிறான்

[42] ‘‘எங்களிடம் ஒரு தூதர் வருவாராயின் நிச்சயமாக நாங்கள் மற்ற எல்லா வகுப்பாரையும் விட நேரான பாதையில் சென்று விடுவோம்'' என்று (இந்த அரபிகள்) அல்லாஹ்வின் மீது மிக உறுதியான சத்தியம் செய்து கூறினார்கள். எனினும், இவர்களிடம் (நம்) தூதர் வந்த சமயத்தில் அது வெறுப்பைத் தவிர (வேறெதனையும்) இவர்களுக்கு அதிகப்படுத்தவில்லை

[43] (மேலும்,) இவர்கள் கர்வம்கொண்டு பூமியில் தீய காரியங்களைச் செய்யவும் சூழ்ச்சி செய்தார்கள். தீயவர்களின் சூழ்ச்சி அச்சூழ்ச்சிக்காரரைத் தவிர மற்றெவரையும் சூழ்ந்துகொள்ளாது. (அழிந்துபோன) முன் சென்றவர்களின் வழியைத் தவிர (வேறு எவ்வழியிலும் செல்ல) இவர்கள் எதிர் பார்க்கின்றனரா? அல்லாஹ் ஏற்படுத்திய வழிக்கு மாற்றத்தை நிச்சயமாக நீர் காண மாட்டீர். (அவ்வாறே) அல்லாஹ் ஏற்படுத்திய வழியில் கோணலையும் நிச்சயமாக நீர் காணமாட்டீர்

[44] பூமியில் இவர்கள் சுற்றித் திரிந்து பார்க்கவில்லையா? (அவ்வாறாயின்) இவர்களைவிட பலசாலிகளான இவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதைக் கண்டு கொள்வார்கள். (அவர்கள் எவ்வளவோ பலசாலிகளாக இருந்தும் அல்லாஹ்வுடைய வேதனையிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால்,) வானத்திலோ, பூமியிலோ உள்ள எதுவும் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாது. நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) மிக அறிந்தவனாக, பெரும் ஆற்றலுடையவனாக இருக்கிறான்

[45] மனிதர்கள் செய்யும் பாவத்திற்காக அவர்களை (உடனுக்குடன்) அல்லாஹ் தண்டிப்பதாக இருந்தால் பூமியில் ஓர் உயிரையும் விட்டு வைக்க மாட்டான். ஆயினும், அவர்களுக்குக் குறிப்பிட்ட தவணை வரை விட்டுவைக்கிறான். அவர்களுடைய தவணை வரும் சமயத்தில் (உடனே அவர்களைப் பிடித்துக் கொள்வான்.) நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குபவனாகவே இருக்கிறான்

யா ஸீன்

Surah 36

[1] யா ஸீன்

[2] முற்றிலும் ஞானம் நிறைந்த இந்த குர்ஆன் மீது சத்தியமாக

[3] (நபியே!) நிச்சயமாக நீர் (நமது) தூதர்களில் ஒருவர்தான்

[4] (நீர்) நேரான வழியில் இருக்கிறீர்

[5] (இது) அனைவரையும் மிகைத்தவனும் மகா கருணையுடையவனுமான அல்லாஹ்வால் அருளப்பட்டது

[6] (உமது) இந்த மக்களின் மூதாதைகளுக்கு (ஒரு தூதராலும்) எச்சரிக்கை செய்யப்படாததால் (மறுமையைப் பற்றி முற்றிலும்) கவலையற்று இருக்கின்றனர். ஆகவே, இவர்களுக்கு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக

[7] இவர்களில் பெரும்பாலானவர்கள் மீது (அவர்கள் நரகவாசிகள்தான் என்று இறைவனின்) கட்டளை நிச்சயமாக உறுதியாகி விட்டது. ஆதலால், அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்

[8] நிச்சயமாக நாம் அவர்களுடைய கழுத்துகளில் மேல்வாய் கட்டைகள் வரை விலங்குச் சங்கிலிகளைப் போட்டுவிட்டோம். ஆதலால், அவர்களுடைய தலைகள் (குனிய முடியாதவாறு) நிமிர்ந்து விட்டன

[9] அவர்களுக்கு முன்புறம் ஒரு சுவரும், பின்புறம் ஒரு சுவருமாக ஆக்கி நாம் அவர்களை மூடிவிட்டோம். ஆதலால், அவர்கள் (எதையும்) பார்க்க முடியாது

[10] அவர்களுக்கு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும், எச்சரிக்கை செய்யாமலிருப்பதும் சமமே! அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்

[11] நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம், எவர்கள் நல்லுபதேசத்தைப் பின்பற்றி, மறைவான காரியங்களிலும் (அல்லாஹ்வாகிய) ரஹ்மானுக்குப் பயந்து நடக்கின்றார்களோ அவர்களுக்குத்தான். ஆகவே, இவர்களுக்கு மன்னிப்பைக் கொண்டும், கண்ணியமான கூலியைக்கொண்டும் நீர் நற்செய்தி கூறுவீராக

[12] நிச்சயமாக நாம் மரணித்தவர்களை (மறுமையில்) உயிர் கொடுத்து எழுப்புவோம். அவர்கள் செய்து அனுப்பிய செயல்களையும், அவர்கள் விட்டுச் சென்ற காரியங்களையும் நாம் எழுதி வருகிறோம். இவை ஒவ்வொன்றையும் ‘லவ்ஹுல் மஹ்ஃபூளில்' (பதிவுப் புத்தகத்தில்) பதிந்தே வைத்திருக்கிறோம்

[13] (நபியே!) நம் தூதர்கள் சென்ற, ஓர் ஊர்வாசிகளை அவர்களுக்கு உதாரணமாகக் கூறுவீராக

[14] நாம் அவர்களிடம் இரு தூதர்களை அனுப்பியபொழுது அவ்விருவரையும் அவர்கள் பொய்யாக்கினார்கள். ஆகவே மூன்றாவது தூதரைக் கொண்டு (அவ்விருவருக்கும்) உதவி செய்தோம். ஆகவே, இவர்கள் (மூவரும் அவர்களை நோக்கி) ‘‘மெய்யாகவே நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்ட இறைவனின் தூதர்களாவோம்'' என்று கூறினார்கள்

[15] அதற்கவர்கள் “நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களே! (தவிர இறைவனின் தூதர்களல்ல.) ரஹ்மான் (உங்கள் மீது வேதத்தில்) எதையும் அருளவில்லை. நீங்கள் பொய் சொல்பவர்களே தவிர வேறில்லை'' என்று கூறினார்கள்

[16] அதற்கவர்கள் ‘‘ நிச்சயமாக நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்ட தூதர்கள்தான் என்பதை எங்கள் இறைவனே நன்கறிவான்'' என்றனர்

[17] “எங்கள் தூதைப் பகிரங்கமாக எடுத்துரைப்பதைத் தவிர (உங்களை நிர்ப்பந்திப்பது) எங்கள் மீது கடமையல்ல'' (என்றும் கூறினார்கள்)

[18] அதற்கவர்கள் “நாங்கள் உங்கள் வருகையை நிச்சயமாக கெட்ட சகுனமாக நினைக்கிறோம். நீங்கள் (இதிலிருந்து) விலகிக் கொள்ளாவிடில் நிச்சயமாக நாங்கள் உங்களைக் கல்லெறிந்து கொன்று விடுவோம். மேலும், எங்களிடமிருந்து துன்புறுத்தும் வேதனையும் உங்களைப் பிடித்துக் கொள்ளும்'' என்று கூறினார்கள்

[19] அதற்கு (நம் தூதர்கள்) “உங்கள் கெட்ட சகுனம் உங்களிடம்தான் இருக்கிறது. உங்களுக்கு நல்லறிவைப் புகட்டியதற்காகவா? (எங்களைக் கெட்ட சகுனம் என்று கூறுகிறீர்கள்). அது சரியன்று; நீங்கள்தான் வரம்புமீறிய மக்கள்'' என்று கூறினார்கள்

[20] இதற்கிடையில் அப்பட்டிணத்தின் கடைக் கோடியிலிருந்து ‘(ஹபீபுந் நஜ்ஜார்' என்னும்) ஒரு மனிதர் விரைந்தோடி வந்து (அப்பட்டிணவாசிகளை நோக்கிக்) கூறியதாவது: “என் மக்களே! நீங்கள் இத்தூதர்களைப் பின்பற்றுங்கள்

[21] உங்களிடம் ஒரு கூலியையும் கேட்காத இவர்களை நீங்கள் (அவசியம்) பின்பற்றுங்கள். அவர்கள்தான் நேர்வழி அடைந்தவர்கள்

[22] என்னைப் படைத்தவனை நான் வணங்காதிருக்க எனக்கென்ன (நேர்ந்தது? விசாரணைக்காக) அவனிடமே நீங்கள் திரும்ப கொண்டு வரப்படுவீர்கள்

[23] அவனையன்றி, (மற்ற எதையும்) நான் இறைவனாக எடுத்துக் கொள்வேனா? ரஹ்மான் எனக்கொரு தீங்கிழைக்கக் கருதினால் இவற்றின் சிபாரிசு எதையும் என்னை விட்டுத் தடுத்துவிடாது. (அதிலிருந்து) என்னை இவற்றால் விடுவிக்கவும் முடியாது

[24] (அவன் ஒருவனையே நான் வணங்காவிட்டால்) நிச்சயமாக நான் பகிரங்கமான வழிகேட்டில் சென்று விடுவேன்

[25] நிச்சயமாக நான் உங்கள் இறைவனையே நம்பிக்கை கொண்டிருக்கிறேன். (மற்றெவரையும் அல்ல.) ஆதலால், நீங்கள் எனக்குச் செவிசாயுங்கள்'' (என்று கூறினார்)

[26] (எனினும், மக்கள் அவருடைய நல்லுபதேசத்தைக் கேளாது அவரைக் கொலை செய்துவிட்டனர்! ஆகவே, அவரை நோக்கி) “நீர் சொர்க்கத்தில் நுழைவீராக!'' எனக் கூறப்பட்டது

[27] (சொர்க்கத்தில் நுழைந்த) அவர் “என் இறைவன் எனக்கு மன்னிப்பளித்து மிக்க கண்ணியமானவர்களில் ஒருவனாகவும் என்னை ஆக்கிவிட்டதை என் மக்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?'' என்று கூறினார்

[28] அ(வரைக் கொலை செய்த)தற்குப் பின்னர் அவருடைய மக்க(ளை அழிக்க அவர்)களுக்கு வானத்திலிருந்து ஒரு படையையும் நாம் இறக்கி வைக்கவில்லை; அவ்வாறு செய்ய அவசியம் ஏற்படவுமில்லை

[29] ஒரே ஒரு சப்தம்தான் ஏற்பட்டது. உடனே அவர்கள் அனைவரும் (அழிந்து) சாம்பலாகி விட்டார்கள்

[30] அந்தோ! (என் அடியார்களே! என்) அடியார்களைப் பற்றிய துக்கமே! அவர்களிடம் நமது தூதர் எவர் வந்தபோதிலும் அவர்கள் அவரைப் பரிகாசம் செய்யாமல் இருப்பதில்லை

[31] அவர்களுக்கு முன்னர் எத்தனையோ கூட்டத்தினரை நாம் அழித்து விட்டோம் என்பதையும் அ(ழிந்து போன)வர்கள் நிச்சயமாக அவர்களிடம் திரும்பி வரவேமாட்டார்கள் என்பதையும் அவர்கள் கவனிக்க வேண்டாமா

[32] அவர்கள் அனைவரும் நிச்சயமாக நம்மிடமே கொண்டுவரப்படுவார்கள்

[33] இறந்து (பொட்டலாகிக்) கிடக்கும் (அவர்கள் வசித்திருந்த) பூமியும் இவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும். அதை நாமே (மழையைக் கொண்டு) உயிர்ப்பித்து அதிலிருந்து தானியங்களை வெளிப்படுத்துகிறோம். அவற்றை இவர்கள் புசிக்கிறார்கள்

[34] மேலும், அதில் பேரீச்சை, திராட்சை சோலைகளை அமைத்து அதன் மத்தியில் நீரூற்றுக்களை பீறிட்டு ஓடச் செய்கிறோம்

[35] இவர்கள் புசிப்பதற்காக கனி வர்க்கங்களை (நாம் உற்பத்தி செய்கின்றோமே தவிர) இவர்களுடைய கைகள் அதை செய்வதில்லை. (இதற்குக் கூட) இவர்கள் நன்றி செலுத்த மாட்டார்களா

[36] இவர்களையும், பூமியில் முளைக்கும் புற்பூண்டுகளையும் ஜோடி ஜோடியாகப் படைத்து இவர்கள் (இதுவரை) அறியாத மற்றவற்றையும் படைப்பவன் மிகப் பரிசுத்தமானவன்

[37] இரவும் இவர்களுக்கோர் அத்தாட்சியாகும். அதிலிருந்தே நாம் பகலை வெளிப்படுத்துகிறோம். இல்லையென்றால் இவர்கள் இருளில்தான் தங்கிவிடுவார்கள்

[38] தன் வரையறைக்குள் (தவறாமல்) செல்லும் சூரியனும் (ஓர் அத்தாட்சியாகும்). இது (அனைவரையும்) மிகைத்தவன் நன்கறிந்தவனுடைய அமைப்பாகும்

[39] (உலர்ந்து வளைந்த) பழைய பேரீச்ச மடலைப் போல் (பிறையாக) ஆகும் வரை சந்திரனுக்கு நாம் பல நிலைகளை ஏற்படுத்தி இருக்கிறோம்

[40] சூரியன் சந்திரனை அணுக முடியாது. இரவு பகலை முந்த முடியாது. (இவ்வாறே நட்சத்திரங்கள்) ஒவ்வொன்றும் தன் வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன

[41] கப்பல் நிறைய அவர்களுடைய மக்களை நாம் சுமந்து செல்வதும் நிச்சயமாக அவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும்

[42] அவர்கள் ஏறிச் செல்ல அதைப்போன்ற (படகு போன்ற)வற்றையும் நாம் அவர்களுக்காகப் படைத்திருக்கிறோம்

[43] நாம் விரும்பினால் அவர்களை (கடலில்) மூழ்கடித்து விடுவோம். அச்சமயம் (அபயக் குரலில்) அவர்களை பாதுகாப்பவர்கள் ஒருவரும் இருக்க மாட்டார். அவர்கள் விடுவிக்கப்படவும் மாட்டார்கள்

[44] எனினும் நமது கருணையினாலும் சிறிது காலம் (அவர்கள்) சுகம் அனுபவிப்பதற்காகவும் (அவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள்)

[45] “உங்களுக்கு முன்னும், உங்களுக்குப் பின்னும் (இருக்கும் இம்மை மறுமையில்) உள்ள வேதனைகளுக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள். (அதனால்) இறைவனின் கருணையை நீங்கள் அடையலாம்'' என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் (அதை அவர்கள் பொருட்படுத்துவதில்லை)

[46] மேலும், அவர்களுடைய இறைவனின் அத்தாட்சிகளில் எது வந்த போதிலும் அதை அவர்கள் புறக்கணிக்காது இருப்பதும் இல்லை

[47] அல்லாஹ் உங்களுக்கு அளித்தவற்றில் (ஏழைகளுக்குத்) தானம் செய்யுங்கள் என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் “அல்லாஹ் நாடினால் அவனே உணவு கொடுக்கக்கூடியவர்களுக்கு நாம் உணவு கொடுக்கலாமா? பகிரங்கமான வழிகேட்டிலேயே தவிர நீங்கள் இல்லை'' என்றும் இந்த நிராகரிப்பவர்கள் (பரிகாசமாகக்) கூறுகின்றனர்

[48] மேலும், மெய்யாகவே நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால், (எங்களுக்கு வருமென நீங்கள் கூறும்) “தண்டனை எப்பொழுது வரும்?'' என்றும் (பரிகாசமாகக்) கேட்கின்றனர்

[49] ஒரே ஒரு சப்தத்தைத் தவிர வேறு எதையும் அவர்கள் எதிர்பார்க்கவில்லை! (இதைப் பற்றி பரிகாசமாக) அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருக்கும் பொழுதே அது அவர்களைப் பிடித்துக் கொள்ளும்

[50] அந்நேரத்தில் அவர்கள் மரண சாஸனம் கூறவோ அல்லது தங்கள் குடும்பத்தாரிடம் செல்லவோ முடியாமலாகி விடுவார்கள். (அதற்குள் அழிந்து விடுவார்கள்)

[51] (மறுமுறை) ‘ஸூர்' ஊதப்பட்டால் உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டுத் தங்கள் இறைவனிடம் விரைவாக ஓடி வருவார்கள்

[52] ‘‘எங்கள் துக்கமே! எங்களை நித்திரையில் இருந்து எழுப்பியவர் யார்?'' என்று கேட்பார்கள். (அதற்கு வானவர்கள் அவர்களை நோக்கி) “ரஹ்மான் (உங்களுக்கு) வாக்களித்ததும், நபிமார்கள் (உங்களுக்குக்) கூறிவந்த உண்மையும் இதுதான்'' (என்று கூறுவார்கள்)

[53] அது ஒரே ஒரு சப்தத்தைத் தவிர வேறொன்றும் இருக்காது! அதற்குள்ளாக அவர்கள் அனைவரும் நம்மிடம் கொண்டுவரப்பட்டு விடுவார்கள்

[54] அந்நாளில் ஓர்ஆத்மா (அதன் நன்மையைக் குறைத்தோ பாவத்தை அதிகரித்தோ) அநியாயம் செய்யப்படமாட்டாது. நீங்கள் செய்தவற்றுக்கே தவிர உங்களுக்குக் கூலி கொடுக்கப்பட மாட்டாது

[55] அந்நாளில் நிச்சயமாக சொர்க்கவாசிகள் சந்தோஷமாக காலம் கழித்துக் கொண்டிருப்பார்கள்

[56] அவர்களும் அவர்களுடைய மனைவிகளும் நிழல்களின் கீழ் கட்டில்களின் மேல் வெகு உல்லாசமாகச் சாய்ந்து (உட்கார்ந்து) கொண்டிருப்பார்கள்

[57] அதில் அவர்களுக்குப் பலவகைக் கனிவர்க்கங்களுடன் அவர்கள் கேட்பதெல்லாம் அவர்களுக்கு கிடைக்கும்

[58] நிகரற்ற அன்புடைய இறைவனால் (இவர்களை நோக்கி) “ஸலாம் உண்டாவதாகுக!'' என்று கூறப்படும்

[59] (மற்ற பாவிகளை நோக்கி) “குற்றவாளிகளே! இன்றைய தினம் நீங்கள் (நல்லவர்களிலிருந்து) பிரிந்து நில்லுங்கள்'' (என்று கூறப்படும்)

[60] ‘‘ஆதமுடைய சந்ததிகளே! நீங்கள் ஷைத்தானை வணங்கக்கூடாது என்றும் நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரி என்றும் நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா

[61] இன்னும், நீங்கள் என்னையே வணங்கவேண்டும். இதுதான் நேரான வழி (என்றும் நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா)

[62] (அவ்வாறிருந்தும்) உங்களில் பெரும் தொகையினரை அவன் நிச்சயமாக வழி கெடுத்து விட்டான். இதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டாமா

[63] உங்களுக்கு வாக்களிக்கப்பட்டு வந்த நரகம் இதுதான்

[64] இதை நீங்கள் நிராகரித்ததன் காரணமாக இன்றைய தினம் இதில் நீங்கள் நுழைந்து விடுங்கள்'' (என்றும் கூறுவோம்)

[65] அன்றைய தினம் நாம் அவர்களுடைய வாய்களில் முத்திரையிடுவோம். அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசும். அவர்கள் செய்துகொண்டிருந்த (பாவமான) காரியங்களைப் பற்றி அவர்களுடைய கால்களும் சாட்சி கூறும்

[66] நாம் விரும்பினால் அவர்களுடைய கண்களின் பார்வையைப் போக்கிவிடுவோம். (அச்சமயம் இவர்கள் தப்பித்துக்கொள்ள) வழியைத் தேடி ஓடினால் (எதைத்தான்) எப்படி அவர்களால் பார்க்க முடியும்

[67] நாம் விரும்பினால் அவர்கள் உருவத்தையே மாற்றி அவர்கள் இருந்த இடத்திலேயே இருக்கும்படி (கல்லாகவோ நொண்டியாகவோ) ஆக்கி விடுவோம். அச்சமயம் அவர்களால் முன் செல்லவும் முடியாது; பின் செல்லவும் முடியாது

[68] நாம் எவரையும் அதிக நாள்கள் உயிருடன் வாழ்ந்திருக்கும் படி செய்தால் அவருடைய நிலைமையைத் தலைகீழாக்கி (சிறிய குழந்தையைப் போல் ஆக்கி) விடுகிறோம். (இதை) அவர்கள் அறிந்துகொள்ள வேண்டாமா

[69] (நம் தூதராகிய) அவருக்கு நாம் கவி கூறக் கற்றுக் கொடுக்கவில்லை. அது அவருக்குத் தகுமானதும் அல்ல; இது (நன்மை தீமைகளைத்) தெளிவாக்கக்கூடிய குர்ஆனும் நல்லுபதேசமும் தவிர வேறில்லை

[70] உயிரோடு இருப்பவர்களை அது எச்சரிப்பதற்காகவும் (மரணித்தவர்களை போன்றுள்ள) நிராகரிப்பவர்கள் மீது (தண்டனையின்) வாக்கு உறுதியாவதற்காகவும் (இதை நாம் இறக்கினோம்)

[71] நம் கரங்கள் செய்தவற்றிலிருந்து நிச்சயமாக அவர்களுக்காக கால்நடைகளை நாம் படைத்திருக்கிறோம் என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? இன்னும் அவர்கள் அவற்றுக்கு உரிமையாளர்களாக இருக்கிறார்கள்

[72] அவற்றை அவர்களுக்குக் கீழ்ப்படியும்படிச் செய்து கொடுத்தோம். அவர்கள் (வாகனமாக) ஏறக்கூடியவையும் அவற்றில் இருக்கின்றன; (அறுத்து) புசிக்கக்கூடியவையும் அவற்றில் இருக்கின்றன

[73] அவர்கள் குடிக்கக்கூடிய (பால் போன்ற)வையும் இன்னும் பல பயன்களும் அவற்றில் இருக்கின்றன. (இவற்றுக்கெல்லாம்) அவர்கள் நன்றி செலுத்த வேண்டாமா

[74] எனினும், அல்லாஹ் அல்லாதவற்றாலும் தங்களுக்கு உதவி கிடைக்குமென்று அவற்றை அவர்கள் தெய்வங்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர்

[75] அவற்றால் அவர்களுக்கு உதவி செய்ய முடியாது. ஆயினும், அவை இவர்களுக்கு (எதிரான) படையாகக் கொண்டுவரப்படும்

[76] (நபியே! ‘நீர் பொய்யர்' என) அவர்கள் உம்மைப் பற்றிக் கூறுவது உம்மைக் கவலைக்குள்ளாக்க வேண்டாம். நிச்சயமாக நாம் அவர்கள் (தங்கள் மனதில்) மறைத்துக் கொள்வதையும் (அதற்கு மாறாக) அவர்கள் வெளியிடுவதையும் நன்கறிவோம்

[77] மனிதனை ஒரு துளி இந்திரியத்தால்தான் நாம் படைத்தோம் என்பதை அவன் கவனிக்க வில்லையா? அவ்வாறிருந்தும் அவன் பகிரங்கமான எதிரியாகி (நமக்கு மாறுசெய்ய முற்பட்டு) விடுகிறான்

[78] (மரணித்தவர்களை உயிர்ப்பிக்க நம்மால் முடியாதென எண்ணிக் கொண்டு அவர்களில் ஒருவன்) ஓர் உதாரணத்தை நம்மிடம் எடுத்துக் காட்டுகிறான். அவன், தான் படைக்கப்பட்ட (விதத்)தை மறந்துவிட்டு “உக்கி மண்ணாகிப் போன இந்த எலும்பை உயிர்ப்பிப்பவன் யார்?'' என்று (ஓர் எலும்பை எடுத்து அதை தூளாக்கி ஊதிவிட்டு) அவன் கேட்கிறான்

[79] (நபியே!) அதற்கு நீர் கூறுவீராக: “முதல் முறையில் அதைப் படைத்தவன் எவனோ அவனே அதை உயிர்ப்பிப்பான். அவனோ எல்லா படைப்பினத்தையும் மிக அறிந்தவன்

[80] அவனே பசுமையான மரத்திலிருந்து உங்களுக்கு நெருப்பை உண்டு பண்ணுகிறான். பின்னர், அதைக் கொண்டு நீங்கள் (உங்களுக்கு வேண்டிய நெருப்பை) மூட்டிக் கொள்கிறீர்கள்

[81] வானங்களையும் பூமியையும் படைத்தவன் (கேவலம்) அவர்களைப் போன்றவர்களைப் படைக்கச் சக்தியற்றவனா? நிச்சயமாக அவனே மிகப்பெரிய படைப்பாளனும் நன்கறிந்தவனும் ஆவான்

[82] அவன் ஒரு பொருளை(ப் படைக்க) கருதினால் அதை ‘ஆகுக!' எனக் கூறுவதுதான் (தாமதம்). உடன் அது ஆகிவிடுகிறது

[83] சகலவற்றின் பேராட்சியும் சர்வ அதிகாரமும் எவனுடைய கையில் இருக்கிறதோ அவன் மிகப் பரிசுத்தமானவன். அவனிடமே நீங்கள் திரும்பக்கொண்டு வரப்படுவீர்கள்

அஸ்ஸாஃப்பாத்

Surah 37

[1] அணி அணியாக நிற்பவர்கள் மீது சத்தியமாக

[2] (தீமைகளைத்) தீவிரமாக விரட்டுபவர்கள் மீது சத்தியமாக

[3] (இறைவனின் வசனங்களை) ஓதுபவர்கள் மீது சத்தியமாக

[4] நிச்சயமாக உங்கள் வணக்கத்திற்குரிய இறைவன் ஒரே ஒருவன்தான்

[5] வானங்கள், பூமி இன்னும் அவற்றுக்கு மத்தியில் உள்ளவற்றின் இறைவன் அவனே. கீழ் திசை(கள் மேல் திசை)களின் இறைவனும் அவனே

[6] நிச்சயமாக (உங்கள் இறைவனாகிய) நாம், (பூமிக்குச்) சமீபமாக உள்ள வானத்தைப் பிரகாசிக்கும் நட்சத்திரங்களைக் கொண்டு அழகுபடுத்தி வைத்தோம்

[7] மிக்க விஷமிகளான ஷைத்தான்களுக்கு ஒரு தடையாகவும் (ஆக்கி வைத்தோம்)

[8] மேல் உலகத்தில் உள்ளவர்களின் விஷயங்களை (ஷைத்தான்கள்) செவியுற முடியாது. (ஏனென்றால், அதை நெருங்கும் ஒவ்வொருவரும்) பல பாகங்களிலிருந்தும் (கொள்ளிகளால்) எறியப்பட்டு விரட்டப்படுகின்றனர்

[9] மேலும், அவர்களுக்கு நிலையான வேதனையுண்டு

[10] (தப்பித் தவறி ஒரு வார்த்தையை) பறித்துச் செல்ல நெருங்கினால், உடனே அவனை(க் கொழுந்து விட்டெரியும்) பிரகாசமான நெருப்பு பின்தொடர்கிறது

[11] (நபியே!) இந்நிராகரிப்பவர்களை நீர் கேட்பீராக: (இறந்த பின்) உங்களைப் படைப்பது சிரமமா? அல்லது நாம் படைத்திருக்கும் (வானம், பூமி, நட்சத்திரங்கள் ஆகிய) இவற்றைப் படைப்பது சிரமமா? நிச்சயமாக நாம் இவர்களைப் பிசுபிசுப்பான களிமண்ணால்தான் படைத்திருக்கிறோம்

[12] மாறாக, (நபியே!) நீர் (அல்லாஹ்வின் வல்லமையைக்கண்டு) ஆச்சரியப்படுகிறீர்; அவர்களோ (அதைப்) பரிகசிக்கின்றனர்

[13] மேலும், அவர்களுக்கு நல்லுபதேசம் கூறிய போதிலும் அவர்கள் நல்லுணர்ச்சி பெறுவதேயில்லை

[14] எந்த அத்தாட்சியைக் கண்டபோதிலும் அவர்கள் பரிகாசம் செய்கின்றனர்

[15] மேலும், ‘‘ இது பகிரங்கமான சூனியமே தவிர வேறில்லை'' என்றும் கூறுகின்றனர்

[16] ‘‘நாம் இறந்து (உக்கி) எலும்பாகவும் மண்ணாகவும், போன பின்னர் மெய்யாகவே நாம் எழுப்பப்படுவோமா? (என்றும்)

[17] (அவ்வாறே) நம் மூதாதைகளுமா? (எழுப்பப்படுவார்கள்'' என்றும் பரிகாசமாகக் கூறுகின்றனர்)

[18] அதற்கு (நபியே!) கூறுவீராக: ‘‘(நீங்கள் எழுப்பப்படுவது) உண்மைதான். அச்சமயம் நீங்கள் சிறுமைப்பட்டவர்களாக இருப்பீர்கள்

[19] அது ஒரே ஒரு சப்தம்தான்; உடனே அவர்கள் (எழுந்து நின்று திருதிருவென்று) விழிப்பார்கள்

[20] நாங்கள் கெட்டோம்! இது கூலி கொடுக்கும் நாளாயிற்றே'' என்றும் அவர்கள் கூறுவார்கள்

[21] (அதற்கவர்களை நோக்கி) ‘‘நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்த தீர்ப்பு நாள் இதுதான்'' (என்றும் கூறப்படும்)

[22] அநியாயம் செய்தவர்களையும், அவர்களுடைய தோழர்களையும், அல்லாஹ்வை அன்றி அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களையும் நீங்கள் ஒன்று சேர்த்து

[23] ‘‘அவர்களை நரகத்திற்குக் கொண்டு செல்லுங்கள்'' (என்றும்)

[24] ‘‘அங்கு அவர்களை நிறுத்தி வையுங்கள்; நிச்சயமாக அவர்களைக் (கேள்வி கணக்குக்) கேட்க வேண்டியதிருக்கிறது'' (என்றும் கூறப்படும்)

[25] ‘‘உங்களுக்கு என்ன நேர்ந்தது? (உலகத்தில் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டிருந்தபடி இங்கு) நீங்கள் ஏன் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளவில்லை'' (என்றும் கேட்கப்படும்)

[26] எனினும், அன்றைய தினம் அவர்கள் தலை குனிந்தவர்களாக இருப்பார்கள்

[27] அவர்களில் ஒருவர் மற்றொருவருடன் தர்க்கிக்க முற்பட்டு, (சிலர் தங்கள் தலைவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நீங்கள் நம்மிடம் பலவந்தமாகவே வந்(து உங்களுக்கு கீழ்ப்படியும்படி எங்களை நிர்ப்பந்தித்)தீர்கள்'' என்று கூறுவார்கள்

[28] அவர்களில் ஒருவர் மற்றொருவருடன் தர்க்கிக்க முற்பட்டு, (சிலர் தங்கள் தலைவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நீங்கள் நம்மிடம் பலவந்தமாகவே வந்(து உங்களுக்கு கீழ்ப்படியும்படி எங்களை நிர்ப்பந்தித்)தீர்கள்'' என்று கூறுவார்கள்

[29] அதற்கு அ(த்தலை)வர்கள் ‘‘அவ்வாறல்ல. (நாங்கள் உங்களைத் தடை செய்யவில்லை.) நீங்கள்தான் நம்பிக்கை கொள்ளவில்லை

[30] ‘‘எங்களுக்கு உங்கள் மீது ஓர் அதிகாரமும் இருக்கவில்லை. நீங்கள் தான் பொல்லாத மக்களாக இருந்தீர்கள்

[31] ஆதலால், எங்கள் இறைவனுடைய வாக்கு எங்களுக்கு உண்மையாகி விட்டது. நிச்சயமாக நாம் அனைவரும் (வேதனையைச்) சுவைக்க வேண்டியவர்களே

[32] நிச்சயமாக நாங்கள் உங்களை வழிகெடுத்தோம். ஏனென்றால், நாங்கள் வழிகெட்டே போயிருந்தோம் என்று கூறுவார்கள்

[33] முடிவில் நிச்சயமாக அவர்கள் அனைவரும் அன்றைய தினம் வேதனையில் (சம) பங்காளிகள்தான்

[34] நிச்சயமாக நாம், குற்றவாளிகளை இவ்வாறே நடத்துவோம்

[35] ‘‘அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் அறவே இல்லை (ஆகவே, அவனையே வணங்குங்கள்)'' என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், நிச்சயமாக அவர்கள் கர்வம் கொள்கின்றனர்

[36] ‘‘என்னே! நாங்கள் பைத்தியம் பிடித்த ஒரு கவிஞருக்காக எங்கள் தெய்வங்களை மெய்யாகவே விட்டுவிடுவோமா?'' என்றும் அவர்கள் கூறுகின்றனர்

[37] ‘‘(அவர் பைத்தியக்காரர் அல்ல.) மாறாக, அவர் உண்மையையே கொண்டு வந்தார். (தனக்கு முன்னர் வந்த) நபிமார்களையும் அவர் உண்மையாக்கி வைத்தார். (இவற்றை எல்லாம் நீங்கள் பொய்யாக்கி விட்டீர்கள்)

[38] ஆதலால், நிச்சயமாக நீங்கள் துன்புறுத்தும் வேதனையை அனுபவிக்க வேண்டியதுதான்

[39] நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றுக்கே தவிர உங்களுக்குக் கூலி கொடுக்கப்படவில்லை'' (என்றும் கூறப்படும்)

[40] கலப்பற்ற, மனத்தூய்மையுடைய அல்லாஹ்வுடைய அடியார்களைத் தவிர

[41] அவர்களுக்கு (அல்லாஹ்வின் புறத்திலிருந்து உயர்ரக) பழக்கமான உணவு தயார் செய்யப்பட்டிருக்கும்

[42] (இன்னும், சுவையான) கனிவர்க்கங்கள் அவர்களுக்கு உண்டு. அவர்கள் (இவ்வாறு) கண்ணியப்படுத்தப்படுவார்கள்

[43] இன்பம் தரும் சொர்க்கங்களில் இருப்பார்கள்

[44] கட்டில்களில் ஒருவர் மற்றொருவரை முகம் நோக்கி (உல்லாசமாகப் பேசிக்கொண்டு) உட்கார்ந்திருப்பார்கள்

[45] மிகத் தெளிவான ஊற்றுக்களின் பானம் நிறைந்த குவளைகள் அவர்களைச் சுற்றிக்கொண்டே இருக்கும்

[46] (அது) மிக்க வெண்மையானதாகவும், குடிப்பவர்களுக்கு மிக்க இன்பமானதாகவும் இருக்கும்

[47] அதில் போதையே இருக்காது; அதனால், அவர்களுடைய அறிவும் நீங்கிவிடாது

[48] அவர்களிடத்தில் கீழ் நோக்கிய, அடக்கமான பார்வையையுடைய (ஹுருல் ஈன் என்னும்) கண்ணழகிகளும் இருப்பார்கள்

[49] அவர்களின் நிறம் (இறக்கைகளில்) மறைக்கப்பட்ட (நெருப்புக் கோழியின் இலேசான மஞ்சள் வர்ணமுடைய) முட்டைகளைப் போலிருக்கும்

[50] அவர்களில் ஒருவர் மற்றவர்களை நோக்கி, (இம்மையில் நடைபெற்றவற்றைப் பற்றி மகிழ்ச்சியுடன்) பேசிக் கொண்டிருப்பார்கள்

[51] அவர்களில் ஒருவர் கூறுவார்: ‘‘(இம்மையில்) மெய்யாகவே எனக்கொரு நண்பன் இருந்தான்

[52] அவன் என்னை நோக்கி ‘‘நிச்சயமாக நீ இதை நம்புகிறாயா?'' என்று கேட்டான்

[53] என்ன! நாம் இறந்து உக்கி எலும்பாகவும், மண்ணாகவும் போனதன் பின்னர் (எழுப்பப்படுவோமா?) நிச்சயமாக நாம் (நமது செயல்களுக்குரிய) கூலிகள் கொடுக்கப்படுவோமா?'' என்று (பரிகாசமாகக்) கூறிக் கொண்டிருந்தான்

[54] ‘‘(ஆகவே, அவனை) நீங்கள் பார்க்க விரும்புகிறீர்களா? என்று கூறி

[55] அவனை எட்டிப் பார்த்து, அவன் நரகத்தின் மத்தியில் இருப்பதைக் கண்டு

[56] (அவனை நோக்கி) ‘‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ என்னை அழித்துவிடவே கருதினாய்

[57] ‘‘என் இறைவனுடைய அருள் எனக்குக் கிடைக்காதிருந்தால், நானும் (உன்னுடன் நரகத்தில்) சேர்க்கப்பட்டே இருப்பேன்

[58] (இதற்கு முன்னர்) நாம் இறந்துவிடவில்லையா

[59] (பின்னர் உயிர் பெற்றிருக்கும் நமக்கு) முந்திய மரணத்தைத் தவிர வேறில்லை. (இனி நாம் இறக்கவே மாட்டோம். சொர்க்கத்தில் இருக்கும்) நாம் வேதனைக்கு உள்ளாக்கப்படவும் மாட்டோம்'' (என்றும் கூறுவார்)

[60] நிச்சயமாக இதுதான் மகத்தான பாக்கியமாகும்

[61] ஏதும் நன்மை செய்யக்கூடியவர்கள் எல்லோரும் இதைப் போன்ற (நற்பேறுகளை பெறுவ)தற்காகவே பாடுபடவும்

[62] (சொர்க்கத்தில் கிடைக்கும்) இது மேலான விருந்தா? அல்லது (நரகத்திலிருக்கும்) கள்ளி மரம் மேலான விருந்தா

[63] (மனிதர்களே!) நிச்சயமாக நாம் இந்த அநியாயக்காரர்களை வேதனை செய்வதற்காகவே அதை உண்டு பண்ணி இருக்கிறோம்

[64] மெய்யாகவே அது நரகத்தின் அடித்தளத்திலிருந்து வெளிப்பட்ட ஒரு மரமாகும்

[65] அதன் கிளைகள் ஷைத்தான்களின் தலைகளைப் போல் இருக்கும்

[66] நிச்சயமாக அவர்கள் (தங்கள் பசிக் கொடுமையினால்) அதை புசிப்பார்கள்! இன்னும், (வேறு உணவின்றி) அதிலிருந்தே (தங்கள்) வயிறுகளை நிரப்பிக் கொண்டிருப்பார்கள்

[67] பின்னர், அதற்கு மேலும் நரகத்தில் கொதித்து சூடேறி இருக்கும் (சீழ் கலந்த) தண்ணீரே நிச்சயமாக அவர்களுக்கு பானமாக கொடுக்கப்படும்

[68] (இவற்றைப் புசித்துக் குடித்த) பின்னர், நிச்சயமாக ‘ஜஹீம்' என்ற நரகத்திற்கே திருப்பப்படுவார்கள்

[69] இவர்கள் தங்கள் மூதாதைகளை மெய்யாகவே வழி கெட்டவர்களாகக் கண்டு கொண்டார்கள்

[70] அவ்வாறிருந்தும், அவர்களுடைய அடிச்சுவட்டையே இவர்கள் பின்பற்றி ஓடினார்கள்

[71] இவர்களுக்கு முன்னிருந்த பெரும்பாலானவர்களும் (இவ்வாறே) தவறான வழியில் சென்றனர்

[72] நிச்சயமாக நாம் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கும் (நம்) தூதர்களை அனுப்பியே வைத்தோம்

[73] ஆகவே, அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்ட இவர்களுடைய முடிவு எவ்வாறாயிற்று என்பதை (நபியே!) பார்ப்பீராக

[74] அல்லாஹ்வுடைய பரிசுத்த எண்ணமுள்ள அடியார்களைத் தவிர, (மற்றவர்கள் எல்லோரும்) நம் வேதனைக்கு ஆளாகி விட்டார்கள்

[75] நூஹ் (நபி) நம்மிடம் (உதவி கோரி) பிரார்த்தனை செய்தார். (நாமோ) பிரார்த்தனைகளை அங்கீகரிப்பவர்களில் மிக்க சிறந்தவர்கள்

[76] ஆகவே, அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் கடுமையான சிரமத்திலிருந்து பாதுகாத்துக் கொண்டோம்

[77] அவர்களுடைய சந்ததிகளைப் பிற்காலத்தில் என்றுமே நிலைத்திருக்கும்படி செய்தோம்

[78] அவருடைய கீர்த்தியையும், பின்னுள்ளோர்களில் என்றுமே நிலைத்திருக்கும்படி செய்தோம்

[79] ‘‘ஸலாம்'' ஈடேற்றம் நூஹுக்கு உண்டாவதாக! என்று உலகம் முழுவதிலுமே கூறப்படுகிறது

[80] இவ்வாறே நன்மை செய்தவர்களுக்கு நாம் கூலி கொடுக்கிறோம்

[81] (நூஹ் நபி) நம்பிக்கையுள்ள நம் அடியார்களில் ஒருவராகவே இருந்தார்

[82] (ஆகவே, அவரையும் அவரைப் பின்பற்றியவர்களையும் தவிர,) மற்றவர்களை (வெள்ளப் பிரளயத்தில்) நாம் மூழ்கடித்து விட்டோம்

[83] நிச்சயமாக நூஹ் (நபி) உடைய வழியைப் பின்பற்றியவர்தான் இப்ராஹீம்

[84] அவர் (பண்பட்ட) நேரான உள்ளத்துடன் தன் இறைவனிடம் வந்த சமயத்தில்

[85] அவர் தன் தந்தையையும், தன் மக்களையும் நோக்கி ‘‘நீங்கள் எதை வணங்குகிறீர்கள்?'' என்று கேட்டார்

[86] ‘‘நீங்கள் அல்லாஹ்வையன்றி பொய்யான தெய்வங்களையே விரும்புகிறீர்களா

[87] அவ்வாறாயின், உலகத்தாரைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவனைப்பற்றி உங்கள் எண்ணம் என்ன?'' (என்று கேட்டார்)

[88] ‘‘பின்னர், நட்சத்திரங்களைக் கூர்ந்து பார்த்தார்

[89] நிச்சயமாக எனக்கு ஒரு நோய் ஏற்படும் (போல் இருக்கிறது)'' என்று கூறினார்

[90] ஆகவே, அவர்கள் அவரை விட்டுவிட்டு (திருநாள் கொண்டாடச்) சென்று விட்டனர்

[91] (பின்னர்) அவர், (அவர்களுடைய கோயிலுக்குள்) அவர்களுடைய தெய்வங்களிடம் இரகசியமாகச் சென்றார். (விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட பல வகை உணவுகள் இருக்கக் கண்டு, சிலைகளை நோக்கி) ‘‘நீங்கள் இவற்றை ஏன் புசிப்பதில்லை

[92] உங்களுக்கு என்ன (நேர்ந்தது)? நீங்கள் ஏன் பேசுவதில்லை?'' என்று கேட்டார். (ஆனால், அவை பதில் அளிக்கவில்லை)

[93] ஆகவே, அவற்றைப் பலமாக அடித்து (நொறுக்கிவிட்டு வெளியில் சென்று) விட்டார்

[94] ஆகவே, (திருநாள் கொண்டாடச் சென்றவர்கள் திரும்பி வந்து இதைக் கண்டதும் அதைப் பற்றிக் கேட்கவே) இப்ராஹீமிடம் ஓடி வந்தனர்

[95] அவர், (அவர்களை நோக்கி) ‘‘உங்கள் கைகளால் சித்தரித்த பொம்மைகளை நீங்கள் வணங்குகிறீர்களா

[96] உங்களையும், நீங்கள் சித்தரித்த அவற்றையும் அல்லாஹ்வே படைத்தான்'' என்றார்

[97] (அதற்கு அவர்கள் பதில்கூற வகையறியாது கோபம் கொண்டு,) ‘‘இவருக்காகப் பெரியதொரு (நெருப்புக்) கிடங்கை அமைத்து, அந்நெருப்பில் அவரை எறிந்து விடுங்கள்'' என்று கூறினார்கள்

[98] இவ்வாறு அவர்கள், அவருக்குத் தீங்கிழைக்கக்கருதினார்கள். எனினும், நாம் அவர்களையே இழிவானவர்களாக ஆக்கி விட்டோம்

[99] பின்னர், இப்ராஹீம் (அவ்வூரை விட்டு வெளிப்பட்டு,) ‘‘நான் என் இறைவனிடமே செல்கிறேன். அவன் நிச்சயமாக எனக்கு நேரான வழியைக் காண்பிப்பான்'' என்று கூறினார்

[100] ‘‘என் இறைவனே! நல்லோர்களில் (ஒருவரை) நீ எனக்கு(ச் சந்ததியாக) வழங்கி அருள் புரிவாயாக!'' (என்றார்)

[101] ஆதலால், மிகப் பொறுமையுடைய (இஸ்மாயீல் என்னும்) மகனைக் கொண்டு அவருக்கு நற்செய்தி கூறினோம்

[102] (அவருடைய அந்த மகன் அவருடன்) நடந்து திரியக்கூடிய வயதை அடைந்தபொழுது, அவர் (தன் மகனை நோக்கி) ‘‘என் அருமை மைந்தனே! நான் உன்னை (என் கைகொண்டு) அறுத்துப் பலியிடுவதாக மெய்யாகவே நான் என் கனவில் கண்டேன். (இதைப் பற்றி) நீ என்ன அபிப்பிராயப்படுகிறாய்?'' என்று கேட்டார். அதற்கவர், ‘‘என்(னருமைத்) தந்தையே! உங்களுக்கு இடப்பட்ட கட்டளைப்படியே நீங்கள் செய்யுங்கள். அல்லாஹ் அருள் புரிந்தால் (அதைச் சகித்துக் கொண்டு) உறுதியாயிருப்பவனாகவே நீங்கள் என்னைக் காண்பீர்கள்'' என்று கூறினார்

[103] ஆகவே, அவ்விருவரும் (இறைவனின் விருப்பத்திற்கு) முற்றிலும் பணிந்து, (இப்ராஹீம் தன் மகன் இஸ்மாயீலை அறுத்துப் பலியிட) அவரை முகங்குப்புறக் கிடத்தினார்

[104] அச்சமயம் நாம் ‘‘இப்ராஹீமே!'' என அழைத்தோம்

[105] உண்மையாகவே நீர் உமது கனவை மெய்யாக்கி வைத்து விட்டீர் என்றும், நன்மை செய்பவர்களுக்கு நாம் இவ்வாறே கூலி கொடுப்போம்'' (என்றும் கூறி)

[106] ‘‘நிச்சயமாக இதுதான் மாபெரும் சோதனையாகும்'' (என்றும் கூறினோம்)

[107] ஆகவே, மகத்தானதொரு பலியை அவருக்கு பகரமாக்கினோம்

[108] அவருடைய கீர்த்தியைப் பிற்காலத்திலும் நிலைக்க வைத்தோம்

[109] (ஆகவே, உலகத்திலுள்ள அனைவருமே) ‘‘இப்ராஹீமுக்கு ‘‘ஸலாம்'' (ஈடேற்றம்) உண்டாவதாகுக' (என்றும் கூறுகின்றனர்)

[110] இவ்வாறே, நன்மை செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்

[111] நிச்சயமாக அவர் மிக்க நம்பிக்கையுள்ள நம் அடியார்களில் இருந்தார்

[112] இதன் பின்னர், நல்லடியார்களிலுள்ள இஸ்ஹாக் நபியை அவருக்கு (மற்றுமொரு மகனாகத் தருவதாக) நற்செய்தி கூறினோம்

[113] அவர் மீதும், இஸ்ஹாக் மீதும் நாம் நம் நற்பாக்கியங்களைச் சொரிந்தோம். அவர்களுடைய சந்ததிகளில் நல்லவர்களும் இருக்கின்றனர்; பகிரங்கமாக தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்(ட கெட்)டவர்களும் இருக்கின்றனர்

[114] நிச்சயமாக நாம் மூஸாவின் மீதும், ஹாரூன் மீதும் அருள் புரிந்தோம்

[115] அவ்விருவரையும், அவர்களுடைய மக்களையும் கடுமையான துன்பத்திலிருந்து பாதுகாத்துக் கொண்டோம்

[116] அவர்களுக்கு உதவிபுரிந்தோம். ஆகவே, அவர்கள் (தங்கள் எதிரிகளை) வெற்றி கொண்டார்கள்

[117] அவ்விருவருக்கும் தெளிவான வேதத்தையும் நாம் கொடுத்தோம்

[118] அவ்விருவரையும் நேரான வழியிலும் நாம் செலுத்தினோம்

[119] பிற்காலத்திலும் அவ்விருவரின் கீர்த்தியை நிலைக்கச் செய்தோம்

[120] (ஆகவே, உலகத்திலுள்ளவர்கள்) மூஸாவுக்கும், ஹாரூனுக்கும் ‘‘ஸலாம்'' ஈடேற்றம் உண்டாவதாக! (என்று கூறுகின்றனர்)

[121] நிச்சயமாக நாம் இவ்வாறே நன்மை செய்பவர்களுக்குக் கூலி கொடுக்கிறோம்

[122] நிச்சயமாக அவ்விருவரும், நம்பிக்கை கொண்ட நம் அடியார்களில் இருந்தனர்

[123] நிச்சயமாக இல்யாஸும் நம் தூதர்களில் ஒருவர்தான்

[124] அவர் தன் மக்களை நோக்கி, ‘‘நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்பட வேண்டாமா?'' என்று கூறிய சமயத்தில்

[125] ‘‘படைப்பவர்களில் மிக அழகானவனை நீங்கள் புறக்கணித்து விட்டு, ‘பஅலு' என்னும் சிலையை வணங்குகிறீர்களா

[126] உங்கள் இறைவனும், முன் சென்ற உங்கள் மூதாதையர்களின் இறைவனுமான அல்லாஹ்வை விட்டு விடுகிறீர்களா

[127] ஆயினும், அவர்கள் அவரைப் பொய்யாக்கி விட்டனர். ஆதலால், நிச்சயமாக அவர்கள் (மறுமையில் நம்மிடம் தண்டனைக்காகக்) கொண்டு வரப்படுவார்கள்

[128] அல்லாஹ்வுடைய கலப்பற்ற அடியார்களைத் தவிர, (நல்லடியார்களுக்கு நல்ல சன்மானமுண்டு)

[129] பிற்காலத்தில் உள்ளவர்களிலும் இவருடைய கீர்த்தியை நிலைக்கச் செய்தோம்

[130] (ஆகவே உலகத்திலுள்ளவர்கள்) ‘‘இல்யாஸுக்கு ‘‘ஸலாம்'' (ஈடேற்றம்) உண்டாவதாகுக!'' (என்று கூறுகின்றனர்)

[131] நிச்சயமாக நன்மை செய்பவர்களுக்கு நாம் இவ்வாறே கூலி கொடுக்கிறோம்

[132] நிச்சயமாக அவர் நம்பிக்கை கொண்ட நம் அடியார்களில் ஒருவராக இருந்தார்

[133] நிச்சயமாக லூத்தும் நம் தூதர்களில் ஒருவர்தான்

[134] அவரையும் அவருடைய குடும்பம் முழுவதையும் பாதுகாத்துக் கொண்டோம்

[135] ஆயினும், (அவருடைய) ஒரு கிழ (மனை)வியைத் தவிர, அவள் (அந்தப் பாவிகளுடன்) தங்கிவிட்டாள்

[136] (பிறகு பாவம் செய்த) மற்றவர்களையும் நாம் அழித்து விட்டோம்

[137] ஆகவே, (மக்காவாசிகளே! நீங்கள் வர்த்தகத்திற்காக ஷாம் தேசம் போகும்பொழுதும், வரும்பொழுதும்) காலையிலோ மாலையிலோ, நிச்சயமாக நீங்கள் (அழிந்துபோன) அவர்களை கடந்து செல்கிறீர்கள்

[138] (இதைக் கொண்டு நீங்கள்) நல்லறிவு பெறவேண்டாமா

[139] நிச்சயமாக யூனுஸும் நம் தூதர்களில் ஒருவர்தான்

[140] (மக்களால்) நிறைந்த கப்பலின் பக்கம் அவர் தப்பி ஓடிய சமயத்தில் (அதில் ஏறிக்கொண்டார்)

[141] அ(க்கப்பலில் உள்ள)வர்கள் சீட்டு (குலுக்கி)ப் போட்டதில் இவர் (கடலில்) எறியப்பட வேண்டியவரானார்

[142] (அவ்வாறு அவர்கள் இவரை எறியவே) மீன் அவரை விழுங்கி விட்டது. அச்சமயம், அவர் தன்னைத்தானே நிந்தித்துக் கொண்டிருந்தார்

[143] நிச்சயமாக அவர் நம்மைத் துதி செய்பவர்களில் ஒருவராக இல்லாதிருந்தால்

[144] (மறுமையில்) எழுப்பப்படும் நாள் (வரும்) வரை அவர் அதன் வயிற்றில் தங்கியிருந்திருப்பார்

[145] (அவர் துதி செய்திருப்பதன் காரணமாக) வெட்ட வெளியான பூமியில் (மீன் வயிற்றிலிருந்து) அவரை நாம் எறியச் செய்தோம். அச்சமயம் அவரோ மிக களைப்புடனும் சோர்வுடனும் இருந்தார்

[146] ஆகவே, அவருக்கு (நிழலிடுவதற்காக) ஒரு சுரைச்செடியை முளைப்பித்தோம்

[147] பின்னர், நாம் அவரை ஒரு நூறாயிரம் அல்லது அதற்கு அதிகமான மக்களிடம் நம் தூதராக அனுப்பி வைத்தோம்

[148] அவர்கள் அனைவரும் நம்பிக்கை கொண்டார்கள். ஆதலால், நாமும் அவர்களை ஒரு (நீண்ட) காலம் வரை சுகமாக வாழவைத்தோம்

[149] (நபியே!) அவர்களை கேட்பீராக: ‘‘(நீங்கள் வெறுக்கும்) பெண் மக்களை உங்கள் இறைவனுக்கும் உங்களுக்கு ஆண் மக்களையுமா? (விரும்புகிறீர்கள்)

[150] அல்லது நாம் வானவர்களைப் பெண்களாக படைத்த(தாகக் கூறுகின்றனரே அ)தை அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்களா

[151] ‘‘அல்லாஹ் (பிள்ளைகளைப்) பெற்றான் என்று'' இவர்கள் கற்பனையான பொய்யையே கூறுகிறார்கள் என்பதை நிச்சயமாக நீர் அறிந்து கொள்வீராக. நிச்சயமாக இவர்கள் பொய்யர்களே

[152] ‘‘அல்லாஹ் (பிள்ளைகளைப்) பெற்றான் என்று'' இவர்கள் கற்பனையான பொய்யையே கூறுகிறார்கள் என்பதை நிச்சயமாக நீர் அறிந்து கொள்வீராக. நிச்சயமாக இவர்கள் பொய்யர்களே

[153] (அதிலும்) ஆண் சந்ததிகளைவிட்டு, பெண் சந்ததிகளையா அவன் தேர்ந்தெடுத்துக் கொண்டான்

[154] (இவ்வாறு கூற) உங்களுக்கு என்ன நியாயம் (இருக்கிறது.) ஏன் இவ்வாறு (பொய்யாக) தீர்மானிக்கிறீர்கள்

[155] நீங்கள் இதை கவனித்துச் சிந்திக்க வேண்டாமா

[156] அல்லது உங்களுக்கு (இதற்காக ஒரு) தெளிவான ஆதாரம் இருக்கிறதா

[157] (கிறிஸ்தவர்களே! அவ்வாறு) நீங்கள் கூறுவது உண்மையாகவே இருப்பின், அதற்கு உங்கள் வேதத்தை ஆதாரமாகக் கொண்டு வாருங்கள்

[158] (நபியே!) இவர்கள் அல்லாஹ்வுக்கும் ஜின்களுக்கும் இடையில் பந்துத்துவத்தைக் கற்பனை செய்கின்றனர். ஆயினும், ஜின்களோ (தாங்கள் குற்றம் செய்தால் தண்டனைக்காக) நிச்சயமாக அவனிடம் கொண்டு வரப்படுவோம் என்று திட்டமாக அறிந்து இருக்கின்றனர்

[159] அவர்கள் கூறும் இவ்வர்ணிப்புகளை விட்டு அல்லாஹ் மிக்க பரிசுத்தமானவன்

[160] அல்லாஹ்வின் கலப்பற்ற நம்பிக்கையுள்ள அடியார்களைத் தவிர, (அவர்கள் தண்டனைக்குள்ளாக மாட்டார்கள்)

[161] (நபியே! கூறுவீராக:) ‘‘நிச்சயமாக நீங்களும், நீங்கள் வணங்கும் (ஜின்களாகிய) இவையும் ஒன்று சேர்ந்தபோதிலும், (எவரின் உள்ளத்தையும் அல்லாஹ்வுக்கு விரோதமாக) நீங்கள் மாற்றிவிட முடியாது

[162] (நபியே! கூறுவீராக:) ‘‘நிச்சயமாக நீங்களும், நீங்கள் வணங்கும் (ஜின்களாகிய) இவையும் ஒன்று சேர்ந்தபோதிலும், (எவரின் உள்ளத்தையும் அல்லாஹ்வுக்கு விரோதமாக) நீங்கள் மாற்றிவிட முடியாது

[163] நரகம் செல்லக்கூடியவனைத் தவிர

[164] (வானவர்கள் கூறுவதாவது:) எங்களில் ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட பணியுண்டு

[165] நிச்சயமாக நாங்கள் (கட்டளையை நிறைவேற்ற அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்து) அணிவகுத்து நின்ற வண்ணமாகவே இருக்கிறோம்

[166] நிச்சயமாக நாங்கள் அவனைப் புகழ்ந்து துதி செய்து கொண்டும் இருக்கிறோம்

[167] (நபியே! இதற்குமுன் மக்காவாசிகளாகிய) அவர்கள் கூறிக் கொண்டிருந்ததாவது

[168] ‘‘முன்சென்றவர்களிடம் இருந்த வேதத்தைப் போன்று ஒரு வேதம் எங்களிடம் இருந்தால்

[169] நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வுடைய கலப்பற்ற அடியார்களாகி விடுவோம்'' என்றார்கள்

[170] எனினும், இவ்வாறு கூறிக்கொண்டிருந்த இவர்களிடம் (இவ்வேதம் வரவே,) அதை இவர்கள் நிராகரிக்கின்றனர். அதிசீக்கிரத்தில் (இதன் முடிவை) இவர்கள் அறிந்து கொள்வார்கள்

[171] தூதர்களாகிய நம் அடியார்களைப் பற்றி ஏற்கனவே நம் வாக்கு நிச்சயமாக ஏற்பட்டு விட்டது

[172] ஆதலால், நிச்சயமாக அவர்கள்தான் உதவி செய்யப்படுவார்கள்

[173] நிச்சயமாக நம் படையினர்(களாகிய நம்பிக்கையாளர்கள்)தான் வெற்றி பெறுவார்கள்

[174] ஆதலால், (நபியே!) சிறிது காலம் வரை (அரபிகளாகிய) இவர்களிலிருந்து நீர் விலகியிரும்

[175] (இவர்கள் எவ்வாறு தண்டனைக்கு உள்ளாகிறார்கள் என்பதை அறிய) அவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பீராக. அதிசீக்கிரத்தில் அவர்களும் அதைக் கண்டு கொள்வார்கள்

[176] (என்னே!) நம் வேதனைக்காகவா இவர்கள் அவசரப்படுகின்றனர்

[177] (நம் வேதனை) அவர்கள் மத்தியில் இறங்கும் சமயத்தில், அச்சமூட்டி எச்சரிக்கப்பட்ட அவர்களின் விடியற்காலை மகா கெட்டதாகிவிடும்

[178] (நபியே!) அவர்களை நீர் சிறிது காலம் புறக்கணித்து விடுவீராக

[179] (அவர்களுக்கு வேதனை வருவதை) நீர் எதிர்பார்த்திருப்பீராக. அவர்களும் (அதை) நிச்சயமாகக் காண்பார்கள்

[180] அவர்களுடைய (தப்பான) வர்ணிப்புகளை விட்டும் மிக்க கண்ணியத்திற்குரிய உமது இறைவன் மிகப் பரிசுத்தமானவன்

[181] (அவனால்) அனுப்பப்பட்ட தூதர்கள் (அனைவர்) மீதும் (அவனுடைய) ஸலாம் (ஈடேற்றம்) உண்டாவதாக

[182] புகழ் அனைத்தும் உலகத்தாரின் இறைவனான அல்லாஹ்வுக்கு உரித்தானது

ஸாத்

Surah 38

[1] ஸாத்; நல்லுபதேசங்கள் நிறைந்த இந்த குர்ஆன் மீது சத்தியமாக

[2] (இது நம்மால்தான் அருளப்பட்டது. இதை) நிராகரிப்பவர்கள் பெரும் குரோதத்திலும் விரோதத்திலும் (மூழ்கி) இருக்கின்றனர்

[3] இவர்களுக்கு முன்னர், (இவ்வாறு இருந்த) எத்தனையோ வகுப்பாரை நாம் அழித்திருக்கிறோம். (வேதனை வந்த சமயத்தில்) அவர்கள் எல்லோரும் உதவி தேடிக் கூச்சலிட்டார்கள். அது (வேதனையிலிருந்து) தப்பித்துக் கொள்ளக்கூடிய நேரமாய் இருக்கவில்லை

[4] (அவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கக்கூடிய ஒரு தூதர் (ஆகிய நீர்) அவர்களி(ன் இனத்தி)லிருந்தே அவர்களிடம் வந்ததைப் பற்றி அவர்கள் ஆச்சரியப்பட்டு, ‘‘இவர் மிகப் பொய் சொல்லும் சூனியக்காரர்தான்'' என்று (உங்களைப் பற்றி) அந்த நிராகரிப்பாளர்கள் கூறுகின்றனர்

[5] ‘‘என்ன! இவர் (நம்) தெய்வங்கள் அனைத்தையும் (பொய்யெனக் கூறி, வணக்கத்திற்குரியவன்) ஒரே ஓர் இறைவன்தான் என்று ஆக்கிவிட்டாரா? மெய்யாகவே, இது ஓர் ஆச்சரியமான விஷயம்தான்'' (என்று கூறி)

[6] அவர்களிலுள்ள தலைவர்கள் (மற்றவர்களை நோக்கி, ‘‘இவரை விட்டு) நீங்கள் சென்றுவிடுங்கள். உங்கள் தெய்வங்களை ஆராதனை செய்வதில் நீங்கள் உறுதியாயிருங்கள். (உங்கள் தெய்வங்களைக் கைவிடும்படி கூறும்)இவ்விஷயத்தில் ஏதோ (ஒரு சுயநலம்தான்) கருதப்படுகிறது'' என்று கூறிக் கொண்டே சென்று விட்டனர்

[7] ‘‘முன்னுள்ள வகுப்பார்களிலும், இதை நாம் கேள்விப்பட்டதில்லை. இது (இவரால்) புனையப்பட்டதே தவிர வேறில்லை'' என்றும்

[8] ‘‘நம்மைவிட்டு இவர் பேரில் மட்டும்தானா (வேத) உபதேசம் இறக்கப்பட்டு விட்டது'' (என்றும் கூறினார்கள்). அவ்வாறன்று. உண்மையில் இவர்கள் நம் எச்சரிக்கையைப் பற்றியே பெரும் சந்தேகத்தில் இருக்கின்றனர். மேலும், இதுவரை அவர்கள் நம் வேதனையைச் சுவைத்துப் பார்க்கவே இல்லை

[9] (வேத உபதேசம் தங்கள் மீது இறங்க வேண்டுமென்று இவர்கள் கூறுவதற்கு) அனைவரையும் மிகைத்த பெரும் கொடையாளியாகிய, உமது இறைவனின் அருள் பொக்கிஷம் அவர்களிடம்தான் இருக்கிறதா

[10] அல்லது வானங்கள், பூமி, இன்னும் இவற்றின் மத்தியில் உள்ளவற்றின் ஆட்சி அவர்களுக்கு உரியதுதானா? அவ்வாறாயின், அவர்கள் (இறைவனுடன் போர் புரிவதற்காக) ஏணி வைத்து மேலே ஏறவும்

[11] (கேவலம்!) இங்கிருக்கும் இவர்களுடைய கூட்டத்தினர் (எம்மாத்திரம்?) மற்ற கூட்டத்தினர்களைப் போலவே இவர்களும் முறியடிக்கப்படுவார்கள்

[12] (இவ்வாறே) இவர்களுக்கு முன்னர் இருந்த நூஹ்வுடைய மக்களும், ‘ஆத்' என்னும் மக்களும், பெரும் படையுடைய ஃபிர்அவ்னும், (நம் தூதர்களைப்) பொய்யாக்கினார்கள்

[13] அவ்வாறே ‘ஸமூத்' என்னும் மக்களும், லூத்துடைய மக்களும், (மத்யன்) தோப்புவாசிகளும் (பொய்யாக்கினார்கள்). இவர்கள்தான் (முறியடிக்கப்பட்ட) அந்தக் கூட்டத்தினர்கள்

[14] இவர்கள் ஒவ்வொரு கூட்டத்தினரும் தூதர்களைப் பொய்யாக்காமல் இருந்ததில்லை. (ஆகவே, அவர்கள் மீது) என் வேதனை உறுதியாயிற்று

[15] ஆகவே, (அரபிகளாகிய) இவர்களும் (தங்களை அழிக்கக்கூடிய) ஒரே ஒரு சப்தத்தைத் தவிர (வேறெதனை) எதிர்பார்க்கின்றனர். (அது வரும் சமயம்) அதைத் தாமதப்படுத்தவும் வழி இருக்காது

[16] இவர்கள், கேள்வி கணக்குக் கேட்கும் நாள் வருவதற்கு முன்னதாகவே, ‘‘எங்கள் இறைவனே! எங்கள் (வேதனையின்) பாகத்தை எங்களுக்குக் கொடுத்துத் தீர்த்துவிடு!'' என்று (பரிகாசமாகக்) கேட்கிறார்கள்

[17] (நபியே!) இவர்கள் கூறுவதைப் பற்றிப் பொறுமையாக சகித்துக்கொண்டு இருப்பீராக. மேலும், மிக பலசாலியாகிய நம் அடியார் தாவூதை நினைத்துப் பார்ப்பீராக. நிச்சயமாக அவர் (எத்தகைய சிரமத்திலும்) நம்மையே நோக்கி நின்றார்

[18] நிச்சயமாக நாம் மலைகளை அவருக்கு வசப்படுத்தித் தந்தோம். காலையிலும், மாலையிலும் அவை அவருடன் சேர்ந்து துதி செய்து கொண்டிருந்தன

[19] பறவைகளின் கூட்டத்தையும், (நாம் அவருக்கு வசப்படுத்தித் தந்தோம்.) அவை, அவருடைய சப்தத்தைப் பின்பற்றி அவரை சூழ்ந்து (அவ்வாறே) சப்தமிட்டன

[20] அவருடைய ஆட்சியை நாம் பலப்படுத்தி, அவருக்கு ஞானத்தையும் பிரச்சனைகளைத் தீர்க்கும் சக்தியையும் கொடுத்தோம்

[21] (நபியே!) அந்த வழக்காளிகளின் செய்தி உமக்குக் கிடைத்திருக்கிறதா? அவர்கள் (தாவூது வணங்கிக் கொண்டிருந்த) மடத்து அறையின் சுவற்றைத்தாண்டி (வந்து)

[22] தாவூதிடம் நுழைந்தபோது, அவர் அவர்களைப் பற்றி(ப் பயந்து) திடுக்கமுற்றார். அதற்கவர்கள் ‘‘(தாவூதே!) பயப்படாதீர். (நாங்கள் இருவரும்) இரு கட்சிக்காரர்கள். எங்களில் ஒருவர் மற்றொருவர் மீது அநியாயம் செய்திருக்கிறார். எங்களுக்கிடையில் நீர் நீதமாகத் தீர்ப்பளிப்பீராக. அதில் தவறிழைத்து விடாதீர். எங்களை நேரான வழியில் செலுத்துவீராக

[23] இவர் என் சகோதரர். அவருக்கு தொண்ணூற்றி ஒன்பது ஆடுகள் இருக்கின்றன. என்னிடம் ஒரே ஒரு ஆடுதான் இருக்கிறது. (அவ்வாறிருந்தும்) அவர் அதையும் (தனக்குக்) கொடுத்துவிட வேண்டும் என்று கூறி வாதத்தில் அவர் என்னை ஜெயித்து விட்டார்'' என்று கூறினார்

[24] அதற்கு தாவூத், ‘‘உன் ஆட்டை, அவர் தன் ஆடுகளுடன் சேர்த்து விடும்படி கேட்பது நிச்சயமாக அவர் உம் மீது செய்யும் அநியாயமாகும். கூட்டாளிகளில் பெரும்பாலானவர்கள், ஒருவர் ஒருவரை மோசம் செய்து விடுகின்றனர்; நம்பிக்கை கொண்டு நற்செயல் செய்கிறவர்களைத் தவிர, (நம்பிக்கையாளர்கள் அவ்வாறு செய்வதில்லை. மோசம் செய்யாத) இத்தகையவர்கள் வெகு சிலரே!'' என்று கூறினார். இதற்குள் நிச்சயமாக நாம் தாவூதை சோதனைக்குள்ளாக்கி விட்டோம் என்று தாவூத் எண்ணி, தன் இறைவனிடம் தன் குற்றத்தை மன்னிக்கும்படி கோரி, சிரம் பணிந்து வணங்கி தன் இறைவனை நோக்கி பிரார்த்தனை செய்தார்

[25] ஆதலால், நாம் அவருடைய குற்றத்தை மன்னித்து விட்டோம். நிச்சயமாக அவருக்கு நம்மிடத்தில் மிக நெருங்கிய பெரும் பதவியும் அழகான இருப்பிடமும் உண்டு

[26] ஆதலால், (நாம் அவரை நோக்கி) ‘‘தாவூதே! நிச்சயமாக நாம் உம்மைப் பூமியில் (நம்) பிரதிநிதியாக ஆக்கினோம். ஆதலால், நீர் மனிதர்களுக்கிடையில், நியாயமாகத் தீர்ப்பு கூறுவீராக. சரீர இச்சையைப் பின்பற்றாதீர். அது உம்மை அல்லாஹ்வுடைய பாதையிலிருந்தும் தவறி விடும்படி செய்யும். எவர்கள் அல்லாஹ்வின் பாதையிலிருந்து தவறுகிறார்களோ அவர்கள் கேள்வி கணக்குக் கேட்கும் நாளை மறந்து விடுவார்கள். அதன் காரணமாக, அவர்களுக்கு நிச்சயமாக கடினமான வேதனையுண்டு'' (என்று கூறினோம்)

[27] வானங்களையும் பூமியையும் இவற்றுக்கு மத்தியில் உள்ளவற்றையும் வீணுக்காக நாம் படைக்கவில்லை. இது (வீணென்பது) நிராகரிப்பவர்களின் எண்ணமே ஆகும். நிராகரிக்கும் இவர்களுக்குக் கேடுதான்; இவர்களுக்கு நரகமே கிடைக்கும்

[28] நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்தவர்களை பூமியில் விஷமம் செய்தவர்களைப் போல் நாம் ஆக்கிவிடுவோமா? அல்லது இறையச்சமுடையவர்களை (குற்றம்புரியும்) பாவிகளைப்போல் நாம் ஆக்கி விடுவோமா

[29] (நபியே!) இவ்வேதத்தை நாமே உம் மீது இறக்கிவைத்தோம். இது மிக பாக்கியமுள்ளது. அறிவுடையவர்கள் இதன் வசனங்களை கவனித்து ஆராய்ந்து நல்லுணர்ச்சி பெறுவார்களாக

[30] தாவூதுக்கு, ஸுலைமானை நாம் மகனாகத் தந்தருள் புரிந்தோம். அவர் மிக நல்லடியார். மெய்யாகவே அவர் (ஒவ்வொரு விஷயத்திலும்) நம்மையே நோக்கி நின்றார்

[31] (யுத்தத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த) உயர்ந்த குதிரைகள் (ஒரு நாளன்று) மாலை நேரத்தில், அவர் முன் கொண்டு வரப்பட்டபொழுது (அதைப் பார்த்துக் கொண்டிருந்ததனால், சூரியன் அஸ்தமித்து அவருடைய அஸர் தொழுகை தவறி விட்டது. அதற்கவர்)

[32] ‘‘நிச்சயமாக நான் (சூரியன்) திரைக்குள் மறைந்துவிடும் வரை, அல்லாஹ்வின் திருப்பெயரை நினைவுகூர்வதை விட்டுப் பொருளை அதிகமாக அன்பு கொண்டு விட்டேனே (என்று மனம் வருந்தி)

[33] அவற்றை என்னிடம் கொண்டு வாருங்கள்'' எனக் கூறி, அவற்றின் பின்னங்கால்களையும், கழுத்துக்களையும் (கையினால் நீவி) தடவிக் கொடுத்தார்

[34] நிச்சயமாக நாம் ஸுலைமானை (மற்றொரு விதத்திலும்) சோதனை செய்து, அவருடைய சிம்மாசனத்தில் ஒரு முண்டத்தை எறிந்தோம். பிறகு, அவர் நம்மளவில் திரும்பிவிட்டார்

[35] ஆகவே, அவர் ‘‘என் இறைவனே! என் குற்றங்களை மன்னித்து விடு! எனக்குப் பின்னர் எவருமே அடைய முடியாத ஓர் ஆட்சியை எனக்கு நீ தந்தருள் புரிவாயாக! நிச்சயமாக நீதான் பெரும் கொடையாளி'' என்று பிரார்த்தனை செய்தார்

[36] ஆதலால், (அவர் விரும்பிய ஆட்சியைக் கொடுத்துக்) காற்றையும் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். அது அவருடைய கட்டளையின் படி, அவர் செல்லக்கூடிய இடங்களுக்கெல்லாம் மிக்க சௌகரியமாகவே (அவரைச் சுமந்து) சென்று கொண்டிருந்தது

[37] மேலும், ஷைத்தான்களில் உள்ள சிற்பிகள், முத்துக் குளிப்பவர்கள் ஆகிய அனைவரையும் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம்

[38] மேலும், சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த வேறு (மூர்க்கர்கள்) பலரையும் அவருக்கு வசப்படுத்தித் தந்தோம்

[39] பின்னர், (அவரை நோக்கி) ‘‘இவையெல்லாம் நாம் உமக்கு வழங்கிய கொடைகளாகும். ஆகவே, (இவற்றை) நீர் கணக்கின்றி (எல்லோருக்கும் கொடுத்து) நன்றி செய்யவும். அல்லது (அவற்றை உம்மிடமே) நிறுத்திக் கொள்ளும். (அது உமது விருப்பத்தைப் பொறுத்த விஷயம்'' என்றோம்)

[40] நிச்சயமாக அவருக்கு நம்மிடத்தில் மிக்க நெருங்கிய மேலான பதவியும் அழகான இருப்பிடமும் உண்டு

[41] (நபியே!) நம் அடியார் ஐயூபை நினைத்துப் பார்ப்பீராக. அவர் தன் இறைவனிடம் பிரார்த்தனை செய்தபொழுது ‘‘நிச்சயமாக எனக்கு ஷைத்தான் துன்பத்தையும் வேதனையையும் கொடுத்து விட்டான்'' (என்று கூறினார்)

[42] (அதற்கு நாம்) ‘‘உமது காலை(ப் பூமியில்) தட்டுவீராக'' (என்று கூறினோம். அவர் தட்டவே ஓர் ஊற்று உதித் தோடியது. அவரை நோக்கி) ‘‘இதோ குளிப்பதற்கான குளிர்ந்த நீர். (இதுவே உமது) பானமுமாகும்'' (என்று கூறினோம். அதனால் அவருடைய நோய்கள் குணமாகி விட்டன)

[43] பின்னர், நம் அருளாகவும் அறிவுடையவர்கள் நல்லுணர்ச்சி பெறுவதற்காகவும் நாம் அவருக்கு(ப் பிரிந்திருந்த) அவருடைய குடும்பத்தாரையும் அவர்கள் போன்றவர்களையும் அவர்களுடன் கொடுத்து அருள் புரிந்தோம்

[44] ‘‘ஒரு பிடி (புல்) கத்தையை எடுத்து, அதைக்கொண்டு (உமது மனைவியை) அடிப்பீராக. நீர் உமது சத்தியத்தை முறிக்க வேண்டியதில்லை'' (என்று கூறினோம்.) நிச்சயமாக நாம், அவரை மிக்க பொறுமை உடையவராகவே கண்டோம். அவர் மிக்க நல்லடியார். நிச்சயமாக அவர் (ஒவ்வொரு விஷயத்திலும் நம்மை) நோக்கினவராகவே இருந்தார்

[45] (நபியே!) நம் அடியார்கள் இப்ராஹீம், இஸ்ஹாக், யஅகூபையும் நினைத்துப் பார்ப்பீராக. இவர்கள் கொடையாளிகளாகவும், அகப்பார்வை உடையவர்களாகவும் இருந்தார்கள்

[46] மறுமையை (மக்களுக்கு) எந்நேரமும் ஞாபகமூட்டுவதற்காக அவர்களை நாம் பிரத்யேகப்படுத்தினோம்

[47] அவர்கள், நம்மிடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்லடியார்களில் உள்ளவர்களாகவே இருந்தனர்

[48] (நபியே!) இஸ்மாயீல், அல்யஸஉ, துல்கிஃப்லு ஆகிய இவர்களையும் நினைவு கூர்வீராக. இவர்கள் அனைவரும் நல்லடியார்களில் உள்ளவர்கள் தான்

[49] (மேற்கூறிய) இவையெல்லாம் (நம்பிக்கையாளர்களுக்கு) நல்ல அறிவுரையாகும். நிச்சயமாக (இத்தகைய) இறையச்சமுடையவர்களுக்கு (நல்ல) இருப்பிடமுண்டு

[50] அது நிலையான சொர்க்கத்தில் இருக்கிறது. அதன் வாசல்கள் அவர்களுக்கு (எந்நேரமும்) திறக்கப்பட்டிருக்கும்

[51] அதில் (உள்ள தலையணைகளின் மீது) சாய்ந்த வண்ணமாக, ஏராளமான கனி வர்க்கங்களையும் (இன்பமான) பானங்களையும், கேட்டு (வாங்கிப் புசித்து) அருந்திக்கொண்டு இருப்பார்கள்

[52] அவர்களிடத்தில் கீழ்நோக்கிய பார்வையையுடைய ஒத்த வயதுடைய கன்னிகைகள் பலரும் இருப்பார்கள்

[53] (அவர்களை நோக்கி) கேள்வி கணக்குக் கேட்கும் நாளில் உங்களுக்கு(த் தருவதாக) வாக்களிக்கப்பட்டவை இவைதான்

[54] நிச்சயமாக இவை நம் கொடையாகும். இதற்கு அழிவே இல்லை (என்று கூறப்படும்)

[55] (நல்லவர்களின் முடிவு) இதுவாகும். வழிகெட்டவர்களின் தங்கும் இடம் நிச்சயமாக மகா தீயது

[56] அது நரகம்தான். அதில்தான் அவர்கள் புகுவார்கள். அது தங்குமிடங்களில் மகா கெட்டது

[57] (அவர்களை நோக்கி,) ‘‘இதோ! கொதித்த நீரும், சீழ் சலமும்! அதை நீங்கள் சுவைத்துப் பாருங்கள்'' (என்று கூறப்படும்)

[58] இதைப் போன்ற (துன்பம் நிறைந்த) விதவிதமான வேறு (வேதனைகளு)ம் உண்டு

[59] (இவர்களுடைய தலைவர்களை நோக்கி,) ‘‘இந்தக் கூட்டத்தாரும் உங்களுடன் (நரகத்தில்) தள்ளப்படுவார்கள்'' (என்று கூறப்படும். அதற்கு அவர்கள்) ‘‘இது அவர்களுக்கு நல்வரவாகாது. நிச்சயமாக இவர்கள் நரகம் செல்பவர்களே'' (என்று கூறுவார்கள்)

[60] அதற்கு அ(த்தலை)வர்கள் (பின் தொடர்ந்த) அவர்களை நோக்கி, ‘‘(எங்களுக்கு) இல்லை. மாறாக, உங்களுக்குத்தான் நல்வரவில்லை. நீங்கள் தான் எங்களுக்கு இதைத் தேடித்தந்தீர்கள். (ஆதலால், நம்மிருவரின்) தங்குமிடம் மகா கெட்டதுதான்'' என்று கூறுவார்கள்

[61] தவிர, ‘‘எங்கள் இறைவனே! எவன் இதை எங்களுக்குத் தேடி வைத்தானோ, அவனுக்கு நரகத்தில் (வேதனையை) இரு மடங்கு அதிகப்படுத்து'' என்று பிரார்த்திப்பார்கள்

[62] தவிர, ‘‘மிகக் கெட்ட மனிதர்கள் என்று (உலகத்தில்) எண்ணிக் கொண்டிருந்தோமே அவர்களை (நரகத்தில்) காணவில்லையே?'' என்று ஒருவர் ஒருவரைக் கேட்பார்கள்

[63] ‘‘எவர்களைப் பரிகாசம் பண்ணிக் கொண்டிருந்தோமோ (அவர்கள் இங்கிருந்தும்) அவர்களைப் பார்க்காதவாறு நம் கண்கள்தான் மங்கி விட்டனவோ!'' (என்றும் கூறுவார்கள்)

[64] இவ்வாறு நரகவாசிகள் தர்க்கித்துக் கொள்வது நிச்சயமாக உண்மை தான்

[65] ‘‘நிச்சயமாக நான் உங்களுக்கு (இதைப் பற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறேன். (அனைவரையும்) அடக்கி ஆளுகின்ற ஒரே அல்லாஹ்வைத் தவிர (வணக்கத்திற்குரிய) வேறு இறைவன் இல்லவே இல்லை

[66] அவன்தான் வானங்கள், பூமி இன்னும் இவற்றுக்கு மத்தியில் உள்ளவை அனைத்திற்கும் உரிமையாளன். அவன் அனைவரையும் மிகைத்தவன், மிக்க மன்னிப்புடையவன்'' என்று (நபியே!) நீர் கூறுவீராக

[67] (நபியே!) கூறுவீராக: ‘‘(உங்களுக்கு நான் எடுத்துரைக்கும்) இது மிக மகத்தானதொரு விஷயம்

[68] அதை நீங்கள் புறக்கணிக்கிறீர்கள்

[69] (ஆதமை இறைவன் படைத்தபோது,) மேலுலகத்தார் (ஆகிய வானவர்கள்) தங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டது எனக்கொன்றும் தெரியாது. (அதைப் பற்றி) ‘‘எனக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டதைத் தவிர, (நான் அறியேன்)

[70] நிச்சயமாக நான் பகிரங்கமாக, அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனே தவிர வேறில்லை என்றுதான் எனக்கு வஹ்யி அறிவிக்கப்பட்டுள்ளது.''(என்று கூறுவீராக)

[71] உமது இறைவன் வானவர்களை நோக்கி, ‘‘நான் மனிதனைக் களிமண்ணால் படைக்கப் போகிறேன்'' என்று கூறிய சமயத்தில்

[72] நான் அவரைச் செப்பனிட்டு, அவருக்குள் (நான் படைத்த) என் உயிரிலிருந்து ஊதினால் அவருக்குமுன் நீங்கள் சிரம் பணிந்தவர்களாக விழுந்துவிடுங்கள் என்றும் கூறினான்

[73] (அச்சமயம்) வானவர்கள் எல்லோரும் அனைவருமே சிரம் பணிந்தார்கள்

[74] இப்லீஸைத் தவிர, அவன் கர்வம்கொண்டு (நம் கட்டளையை) நிராகரிப்பவனாகி விட்டான்

[75] அதற்கு இறைவன், ‘‘இப்லீஸே! நானே என் இரு கரங்களால் படைத்தவருக்கு முன் நீ சிரம் பணிய உன்னைத் தடுத்தது எது? நீ உன்னை மிகப் பெரியவனாக மதித்துக் கொண்டாயா? அல்லது நீ, (என் கட்டளைக்குக் கீழ்ப்படியக் கூடாத) உயர்ந்த பதவியுடையவனாகி விட்டாயா?'' என்றான்

[76] அதற்கவன், ‘‘அவரைவிட நானே மேலானவன். என்னை நீயே நெருப்பால் படைத்தாய்; அவரை களிமண்ணால் படைத்தாய்'' என்றான்

[77] அதற்கு இறைவன், ‘‘அவ்வாறாயின், நீ இதிலிருந்து வெளியேறிவிடு. நிச்சயமாக நீ விரட்டப்பட்டு விட்டாய்

[78] தீர்ப்பு நாள் வரை என் சாபம் உன்மீது நிச்சயமாக நிலைத்திருக்கும்'' என்றான்

[79] அதற்கவன், ‘‘என் இறைவனே! (மரணித்தவர்கள்) எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் கொடு'' என்றான்

[80] அதற்கு இறைவன் கூறினான்: ‘‘நிச்சயமாக உனக்கு அவகாசம் அளிக்கப்பட்டு விட்டது

[81] குறிப்பிட்ட அந்நாள் வரை (உன் தவணை)

[82] அதற்கவன், ‘‘உன் மகத்துவத்தின் மீது சத்தியமாக நான் (மனிதர்கள்) அனைவரையும் வழி கெடுத்து விடுவேன்

[83] ‘‘(எனினும்,) அவர்களில் பரிசுத்த மனதுடைய உன் அடியார்களைத் தவிர'' என்றான்

[84] அதற்கு இறைவன், ‘‘நான் உண்மையே கூறுபவன். உண்மை என்னவென்றால்

[85] உன்னையும் உன்னைப் பின்பற்றிய அனைவரையும் கொண்டு நரகத்தை நிரப்புவேன்'' என்றான்

[86] ஆகவே, (நபியே!) கூறுவீராக: (மனிதர்களே! இதை ஓதிக் காண்பிப்பதற்காக) நான் உங்களிடத்தில் ஒரு கூலியையும் கேட்கவில்லை. மேலும், (நீங்கள் சுமக்க முடியாத ஒரு சுமையை) நான் உங்கள் மீது சுமத்தவும் இல்லை. இவ்வேதத்தை நான் கற்பனையாக கட்டிக் கொள்ளவும் இல்லை

[87] உலகத்தார் அனைவருக்குமே இது ஒரு நல்லுபதேசமே தவிர வேறில்லை

[88] நிச்சயமாக சிறிது காலத்திற்குப் பின்னர், நீங்கள் இதன் உண்மையைத் திட்டமாக அறிந்து கொள்வீர்கள்

அஸ்ஸுமர்

Surah 39

[1] அல்லாஹ்வினால்தான் இவ்வேதம் இறக்கப்பட்டுள்ளது. அவன் (அனைவரையும்) மிகைத்தவன் (அனைவரையும் அறிந்த) ஞானமுடையவன்

[2] (நபியே!) நிச்சயமாக நாம், உமக்கு இவ்வேதத்தை முற்றிலும் உண்மையைக் கொண்டு இறக்கி வைத்திருக்கிறோம். ஆகவே, முற்றிலும் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு, பரிசுத்த மனதுடன் அவனை வணங்கி வருவீராக

[3] பரிசுத்தமான வழிபாடு அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானது என்பதை அறிந்து கொள்ளுங்கள். எவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை, தங்களுக்குப் பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள், ‘‘அத்தெய்வங்கள் எங்களை அல்லாஹ்வுக்கு மிக்க சமீபமாக்கி வைக்கும் என்பதற்காகவே தவிர நாம் இவற்றை வணங்கவில்லை'' (என்று கூறுகின்றனர்). அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருக்கும் இவ்விஷயத்தைப் பற்றி, அல்லாஹ் (மறுமையில்) அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பான். நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) பொய்யர்களையும், (மனமுரண்டாக) நிராகரிப்பவர்களையும் நேரான வழியில் செலுத்துவதில்லை

[4] அல்லாஹ் சந்ததி எடுத்துக்கொள்ள வேண்டுமென்று விரும்பி இருந்தால், அவன் படைத்தவற்றில் அவன் விரும்பிய (மேலான)வற்றைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருப்பான். (எனினும், இத்தகைய விஷயங்களிலிருந்து) அவன் மிக பரிசுத்தமானவன். அல்லாஹ் ஒரே ஒருவன்தான். (அவனுக்குச் சந்ததி இல்லை. அனைவரையும்) அவன் அடக்கி ஆளுகிறான்

[5] அவன், வானங்களையும் பூமியையும் உண்மையான காரணத்திற்கே படைத்திருக்கிறான். (வீணுக்காக அல்ல.) அவனே இரவைச் சுருட்டிப் பகலை விரிக்கிறான். அவனே பகலைச் சுருட்டி இரவை விரிக்கிறான். சூரியனையும், சந்திரனையும் அடக்கி வைத்திருக்கிறான். இவை ஒவ்வொன்றும், அவற்றுக்குக் (குறிப்பிட்ட எல்லைக்குள்) குறிப்பிட்ட காலப்படி நடக்கின்றன. (நபியே!) அறிந்துகொள்வீராக: நிச்சயமாக அவன் தான் அனைவரையும் மிகைத்தவன் மிக மன்னிப்பவன்

[6] அவன் உங்கள் அனைவரையும், ஆரம்பத்தில் ஒரே ஒரு மனிதரிலிருந்து தான் படைத்தான். பின்னர், அவரிலிருந்து அவருடைய மனைவியை அமைத்தான். (அந்த இருவரிலிருந்து, உங்களை ஆணும் பெண்ணுமாகப் படைத்திருக்கிறான்.) மேலும், (உங்கள் நன்மைக்காகவே) எட்டு வகை கால்நடைகளை (ஜோடி ஜோடியாகப்) படைத்திருக்கிறான். உங்கள் தாய்மார்களின் வயிற்றில், ஒன்றன்பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களைப் படைக்கிறான். இந்த அல்லாஹ்தான் உங்கள் இறைவன். எல்லா ஆட்சிகளும் அவனுக்கே உரியன. அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை. ஆகவே, (அவனை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகிறீர்கள்

[7] அவனை நீங்கள் நிராகரித்துவிட்ட போதிலும் (அவனுக்கு நஷ்டமில்லை. ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் உங்கள் தேவையற்றவனாக இருக்கிறான். எனினும், தன் அடியார்கள் (தன்னை) நிராகரிப்பதை அவன் விரும்புவதே இல்லை. நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாயின், அதனால் உங்களைப் பற்றி அவன் திருப்தியடைவான். ஒருவனின் (பாவச்) சுமையை மற்றொருவன் சுமப்பதில்லை. இனி நீங்கள் செல்ல வேண்டியது உங்கள் இறைவனிடம்தான். அச்சமயம் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அவன் உங்களுக்கு அறிவிப்பான். உள்ளங்களில் உள்ளவற்றையும் நிச்சயமாக அவன் நன்கறிகிறான்

[8] மனிதனுக்கு ஒரு தீங்கு ஏற்படும் சமயத்தில், முற்றிலும் தன் இறைவனையே நோக்கிப் பிரார்த்தனை செய்த வண்ணமாயிருக்கிறான். இறைவன் தன்னிடமிருந்து ஓர் அருளை அவனுக்குப் புரியும் சமயத்தில், இதற்கு முன்னர், தான் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த அவனையே மறந்து விடுகிறான். அல்லாஹ்வுக்கு (பொய்யான தெய்வங்களை) இணைகளாக்கி மற்றவர்களையும் அவனுடைய பாதையிலிருந்து வழி கெடுக்கிறான். (நபியே! அவனை நோக்கி,) நீர் கூறுவீராக: ‘‘நீ (இவ்வாறு இறைவனை) நிராகரித்த வண்ணமே சிறிது காலம் சுகமனுபவி. (முடிவில்) நிச்சயமாக நீ நரகவாசிதான்

[9] எவன் மறுமையை பயந்து, தன் இறைவனின் அருளை எதிர்பார்த்து, இரவு காலங்களில் நின்றவனாகவும், சிரம் பணிந்தவனாகவும் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருப்பவனா (நம்பிக்கை கொள்ளாது நிராகரிப்பவனைப் போலாவான்)? (நபியே!) நீர் கேட்பீராக: கல்வி அறிவுடையவரும், கல்வி அறிவில்லாதவரும் சமமாவார்களா? (இந்த குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுபவர்கள் எல்லாம் (கல்வி) அறிவுடையவர்தான்

[10] (நபியே!) கூறுவீராக: ‘‘நம்பிக்கைகொண்ட (என்) அடியார்களே! உங்கள் இறைவனுக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள். இம்மையில் நன்மை செய்தவர்களுக்கு (மறுமையில்) நன்மைதான் கிடைக்கும். அல்லாஹ்வுடைய பூமி மிக விசாலமானது. நிச்சயமாக பொறுமையாளர்களுக்கு அவர்களுடைய கூலி கணக்கின்றியே கொடுக்கப்படும்

[11] (நபியே!) கூறுவீராக: ‘‘முற்றிலும் நான் அல்லாஹ்வுக்கே வழிப்பட்டு, வணக்கத்தை அவனுக்கே கலப்பற்றதாக ஆக்கி அவன் ஒருவனையே வணங்குமாறு ஏவப்பட்டுள்ளேன்

[12] மேலும், அவனுக்கு முற்றிலும் பணிந்து வழிப்பட்டவர்களில் முதன்மையானவனாக இருக்குமாறும் ஏவப்பட்டுள்ளேன்

[13] (மேலும்,) கூறுவீராக: ‘‘என் இறைவனுக்கு நான் மாறு செய்தால், மகத்தான ஒருநாளின் வேதனைக்கு நிச்சயமாக நான் பயப்படுகிறேன்

[14] (மேலும்,) கூறுவீராக: ‘‘அல்லாஹ் ஒருவனையே கலப்பற்ற மனதுடன் நான் வணங்குவேன், அவனுக்கே என் வணக்கம் அனைத்தும் உரித்தானது

[15] ‘‘அல்லாஹ்வையன்றி நீங்கள் விரும்பியவர்களை வணங்கிக் கொண்டிருங்கள். (ஆகவே, அதற்குரிய தண்டனையை அடைவீர்கள்.)'' “மெய்யாகவே நஷ்டமடைந்தவர்கள் யாரென்றால், (இறைவனுக்கு மாறுசெய்து) தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் மறுமையில் நஷ்டத்தை உண்டு பண்ணிக் கொண்டவர்கள்தான். அறிந்து கொள்ளுங்கள் இதுதான் தெளிவான நஷ்டம் என்று (நபியே) கூறுவீராக

[16] (மறுமை நாளில்) ‘‘இவர்களின் (தலைக்கு) மேல் இருந்தும் நெருப்பு சூழ்ந்து கொள்ளும். இவர்களின் (பாதங்களின்) கீழ் இருந்தும் (நெருப்பு) சூழ்ந்து கொள்ளும்'' இதைக் கொண்டு அல்லாஹ் தன் அடியார்களை பயமுறுத்துகிறான். ‘‘என் அடியார்களே! எனக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள்

[17] (ஆகவே,) ‘‘எவர்கள் ஷைத்தான்களை வணங்காது, அவற்றிலிருந்து விலகி முற்றிலும் அல்லாஹ்வையே முன்னோக்குகிறார்களோ, அவர்களுக்குத்தான் நற்செய்தி. (ஆகவே,) (நபியே!) நீர் எனது (நல்ல) அடியார்களுக்கு நற்செய்தி கூறுவீராக

[18] அவர்கள் எத்தகையவர்கள் என்றால், (குர்ஆனாகிய இப்)பேச்சை செவியுற்று, அதில் மிக அழகியதை பின்பற்றி நடக்கின்றனர். இவர்களையே, அல்லாஹ் நேரான பாதையில் செலுத்துகிறான். இவர்கள்தான் (உண்மையில்) அறிவுடையவர்கள் ஆவார்கள்

[19] (நபியே!) ‘‘எவன் (பாவம் செய்து அவன்) மீது வேதனையின் வாக்கு உறுதியாகி விட்டதோ அவனா (நேர்வழி பெற்றவர்களுக்கு சமமாவான்)? (அவன் நரகம் சென்றே தீருவான்.) நரகத்திலிருக்கும் அவனை நீர் காப்பாற்றி விடுவீரா

[20] எவர்கள் தங்கள் இறைவனுக்குப் பயந்து நடக்கிறார்களோ அவர்களுக்கு, (சொர்க்கத்தில்) மேல்மாடிகள் உண்டு. அதற்கு மேலும் கட்டடங்கள் எழுப்பப்பட்டிருக்கும். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும். (இவ்வாறே அவர்களுக்கு) அல்லாஹ் வாக்களித்திருக்கிறான். அல்லாஹ் தன் வாக்குறுதியில் மாறமாட்டான்

[21] (நபியே!) ‘‘நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ்தான், மேகத்திலிருந்து மழையை பொழியச் செய்து, அதைப் பூமியில் ஊற்றுக்களாக ஓடச் செய்கிறான். பின்னர், அதைக் கொண்டு பல நிறங்களையுடைய (பலவகைப்) பயிர்களை வெளிப்படுத்துகிறான். பின்னர், அவை (கருக்கொண்டு) மஞ்சள் நிறமாக இருக்கக் காண்கிறீர்கள். பின்னர், அதைக் காய்ந்த சருகுகளாக ஆக்கிவிடுகிறான். நிச்சயமாக இதில் அறிவுடையவர்களுக்கு நல்ல படிப்பினை இருக்கிறது

[22] எவருடைய உள்ளத்தை இஸ்லாமை ஏற்க அல்லாஹ் விசாலப்படுத்தினானோ அவர், தன் இறைவனின் பிரகாசத்தில் இருக்கிறார். அல்லாஹ்வை ஞாபகம் செய்வதிலிருந்து விலகி, எவர்களுடைய உள்ளங்கள் (இறுகி) கடினமாகி விட்டனவோ அவர்களுக்குக் கேடுதான். இவர்கள் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கின்றனர்

[23] அல்லாஹ் மிக அழகான விஷயங்களையே (இந்த வேதத்தில்) இறக்கி இருக்கிறான். (இதிலுள்ள வசனங்களுக்கிடையில் முரண்பாடில்லாமல்)ஒன்றை மற்றொன்று ஒத்ததாகவும் (மனதில் பதிவதற்காக ஒரே விஷயத்தை) திரும்பத் திரும்பவும் கூறப்பட்டுள்ளது. எவர்கள் தங்கள் இறைவனுக்குப் பயப்படுகிறார்களோ, (அவர்கள் அதைக் கேட்ட உடன்) அவர்களுடைய தோல்கள் சிலிர்த்து விடுகின்றன. பின்னர், அவர்களுடைய தோல்களும் உள்ளங்களும் அல்லாஹ்வுடைய வேதத்தின் பக்கம் இளகி அதன்படி செயல்படுகின்றன. இதுவே அல்லாஹ்வுடைய நேரான வழியாகும். தான் விரும்பியவர்களை இதன் மூலம் அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறான். எவனை அல்லாஹ் தவறான வழியில் விட்டு விட்டானோ அவனை நேர்வழி செலுத்தக்கூடியவன் ஒருவனுமில்லை

[24] எவன், மறுமையின் கொடிய வேதனையைத் தன் முகத்தைக் கொண்டேனும் தடுத்துக் கொள்ளப் பிரயாசைப்படுபவனா (சொர்க்கவாசிக்கு சமமாவான்)? அநியாயக்காரர்களை நோக்கி நீங்கள் தேடிக் கொண்ட (தீய) செயலைச் சுவைத்துப் பாருங்கள் என்றுதான் கூறப்படும்

[25] (இவ்வாறே) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும், (நம் வசனங்களைப்) பொய்யாக்கினார்கள். ஆதலால், (வேதனை வருமென்பதை) அவர்கள் (ஒரு சிறிதும்) உணர்ந்து கொள்ளாத விதத்தில், வேதனை அவர்களை வந்தடைந்தது

[26] இவ்வுலக வாழ்க்கையிலும் இழிவையே அவர்கள் சுவைக்கும்படி அல்லாஹ் செய்தான். மறுமையிலுள்ள வேதனையோ மிகப் பெரிது. (இதை) அவர்கள் அறிந்து கொள்ளவேண்டுமே

[27] மனிதர்கள் நல்லுணர்ச்சி பெறுவதற்காக, இந்த குர்ஆனில் எல்லா உதாரணங்களையும் நாம் தெளிவாக கூறியிருக்கிறோம்

[28] (அல்லாஹ்வுக்கு) அவர்கள் பயந்து கொள்வதற்காக கோணலற்ற இக்குர்ஆனை(த் தெளிவான) அரபி மொழியில் இறக்கிவைத்தோம்

[29] அல்லாஹ் ஓர் உதாரணத்தைக் கூறுகிறான்: ஒரு மனிதன் பல எஜமான்களுக்கு (அடிமையாக) இருந்து (அவர்கள் ஒவ்வொருவரும், தனக்கே அவன் வேலை செய்யவேண்டுமென்று) இழுபறி செய்து கொள்கின்றனர். மற்றொரு மனிதன் (அடிமைதான்; ஆனால், அவன்) ஒருவனுக்கு மட்டும் சொந்தமானவன். இவ்விருவரும் தன்மையால் சமமாவார்களா? (ஆகமாட்டார்கள் என்பதை அறிவீர்கள். ஆகவே, இதற்காக) புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே (என்று துதி செய்வோமாக! இவ்வாறே பல தெய்வங்களை வணங்கும் ஒருவன், ஒரே அல்லாஹ்வை வணங்குபவனுக்கு சமமாக மாட்டான். எனினும்,) அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதை கூட) அறிந்து கொள்ளவில்லை

[30] (நபியே!) நிச்சயமாக நீரும் இறந்துவிடக்கூடியவரே. நிச்சயமாக அவர்களும் இறந்துவிடக் கூடியவர்கள்தான்

[31] பின்னர், மறுமையில் நிச்சயமாக நீங்கள் அனைவரும் உங்கள் இறைவனிடத்தில் (கொண்டுவரப்பட்டு) நீங்கள் (நீதத்தைக் கோரி உங்களுக்குள்) தர்க்கித்துக் கொள்வீர்கள்

[32] அல்லாஹ்வின் மீது பொய் கூறி தன்னிடம் வந்த (வேதமாகிய) உண்மையைப் பொய்யாக்குபவனைவிட மகா அநியாயக்காரன் யார்? அத்தகைய நிராகரிப்பவர்கள் தங்குமிடம் நரகத்தில் இல்லையா

[33] உண்மையைக் கொண்டுவந்தவ(ராகிய நம் தூத)ரும், அதை உண்மை என்றே நம்பியவரும் ஆகிய இவர்கள்தான் இறையச்சமுடையவர்கள்

[34] அவர்கள் விரும்பியதெல்லாம் அவர்களின் இறைவனிடத்தில் அவர்களுக்குக் கிடைக்கும். (ஏனென்றால், இத்தகைய) நன்மை செய்தவர்களுக்கு இதுவே (தகுதியான) கூலியாகும்

[35] அவர்கள் செய்த குற்றங்களையும் அல்லாஹ் மன்னித்து, அவர்களுடைய கூலியை அவர்கள் செய்ததைவிட மிக அழகான விதத்தில் கொடுப்பான்

[36] தன் அடியாருக்கு (வேண்டிய உதவி செய்ய) அல்லாஹ் (ஒருவனே) போதுமானவனாக இல்லையா? (நபியே!) அவர்கள் (தங்கள் தெய்வங்களாகிய) அல்லாஹ் அல்லாதவற்றைப் பற்றி உங்களை பயமுறுத்துகின்றனர். (அதை நீர் பொருட்படுத்த வேண்டாம்.) எவனை அல்லாஹ் தவறான வழியில் விட்டு விடுகிறானோ, அவனை நேரான வழியில் செலுத்தக்கூடியவன் ஒருவனுமில்லை

[37] எவனை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறானோ அவனை, வழிகெடுப்பவன் ஒருவனுமில்லை. அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனாக பழிவாங்க ஆற்றல் உடையவனாக இல்லையா

[38] (நபியே!) வானங்களையும் பூமியையும், படைத்தவன் யார்? என்று நீர் அவர்களைக் கேட்பீராயின், ‘‘அல்லாஹ்தான்'' என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள். மேலும், (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கிழைக்க நாடினால், (நீங்கள் தெய்வங்களென அழைக்கும் அல்லாஹ் அல்லாத) அவை அத்தீங்கை நீக்கிவிட முடியுமா என்பதை நீங்கள் கவனித்தீர்களா? அல்லது அவன் எனக்கு ஏதும் அருள்புரிய நாடினால், அவனுடைய அருளை இவை தடுத்துவிடுமா (என்பதையும் நீங்கள் கவனித்தீர்களா)? (நபியே!) கூறுவீராக: ‘‘அல்லாஹ் (ஒருவனே) எனக்குப் போதுமானவன். நம்பக்கூடியவர்கள் அனைவரும் அவனையே நம்பவும்

[39] (மேலும், நபியே!) கூறுவீராக: ‘‘என் மக்களே! நீங்கள் உங்கள் நிலைமையில் இருந்து கொண்டு நீங்கள் (செய்யக்கூடியதைச்) செய்து கொண்டிருங்கள். நானும் (என் நிலையிலிருந்து கொண்டு, நான் செய்யக் கூடியதை) செய்து வருவேன். (எவருடைய செயல் தவறு என்பதைப்) பின்னர், நீங்கள் அறிந்துகொள்வீர்கள்

[40] இழிவுபடுத்தும் வேதனை யாரை வந்தடைகிறது? நிலையான வேதனை எவர் மீது இறங்குகிறது? (என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்)

[41] (நபியே!) நிச்சயமாக நாம் மனிதர்களின் நன்மைக்காகவே முற்றிலும் உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை உம் மீது இறக்கி வைத்தோம். ஆகவே, எவன் இதைப் பின்பற்றி நடக்கிறானோ, அது அவனுக்கே நன்று; எவன் (இதிலிருந்து) வழிதவறி விடுகிறானோ அவன், வழி தவறியது அவனுக்கே தீங்காக முடியும். (நபியே!) நீர் அவர்கள் மீது பொறுப்பாளர் அல்ல

[42] மனிதர்கள் இறக்கும்பொழுதும், இறக்காமல் நித்திரையில் இருக்கும் பொழுதும் அல்லாஹ்வே அவர்களுடைய உயிரைக் கைப்பற்றுகிறான். பின்னர், எவர்கள் மீது மரணம் விதிக்கப்பட்டதோ அவர்களுடைய உயிரை(த் தன்னிடமே) நிறுத்திக் கொள்கிறான். மற்றவர்க(ளின் உயிர்க)ளை, குறிப்பிடப்பட்ட காலம்வரை வாழ அவன் அவர்களிடமே அனுப்பிவிடுகிறான். சிந்திக்கக்கூடிய மக்களுக்கு, நிச்சயமாக இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன

[43] இவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குச்) சிபாரிசு செய்பவர்கள் என்று (எண்ணி) எடுத்துக் கொண்டிருக்கின்றனரா? ‘‘அவை எதற்கும் சக்தி அற்றதாக, எதையும் அறியக்கூடிய உணர்ச்சி அற்றதாக இருந்தாலுமா (அவற்றை நீங்கள் உங்களுக்குச் சிபாரிசு செய்பவை என்று எடுத்துக் கொள்வீர்கள்)?'' என்று (நபியே!) அவர்களைக் கேட்பீராக

[44] (மேலும் நபியே!) கூறுவீராக: சிபாரிசுகள் அனைத்துமே அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை. (ஆகவே அவனுடைய அனுமதியின்றி, அவனிடத்தில் ஒருவரும் சிபாரிசு செய்ய முடியாது.) வானங்கள் பூமியின் ஆட்சி முழுவதும் அல்லாஹ்வுக்குரியதே. பின்னர், (மறுமையில்) அவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள்

[45] அல்லாஹ்வின் பெயரை மட்டும் தனியாகக் கூறப்பட்டால், மறுமையை நம்பாத அவர்களின் உள்ளங்கள் (கோபத்தால்) சுருங்கி விடுகின்றன. அவன் அல்லாதவை(களின் பெயர்கள்) கூறப்பட்டாலோ, அவர்கள் சந்தோஷப்படுகின்றனர்

[46] (நபியே! பிரார்த்தனை செய்து) கூறுவீராக: ‘‘எங்கள் இறைவனே! வானங்களையும் பூமியையும் படைத்தவனே! மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிந்தவனே! உன் அடியார்கள் தர்க்கித்துக் கொண்டிருக்கும் விஷயத்தில் அவர்களுக்கிடையில் நீ தீர்ப்பளிப்பாயாக

[47] (நபியே!) அநியாயம் செய்தவர்களுக்குப் பூமியிலுள்ள அனைத்துமே சொந்தமாக இருந்து, அத்துடன் அதைப் போன்றதொரு பாகமும் இருந்த போதிலும் மறுமையின் கொடிய வேதனையில் இருந்து அவர்கள் தப்பித்துக்கொள்ள அவை அனைத்தையுமே பரிகாரமாகக் கொடுத்து விடவே நிச்சயமாக விரும்புவார்கள். (எனினும், அது ஆகக்கூடியதல்ல) மேலும், அவர்கள் எதிர்பார்க்காததெல்லாம் அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு வெளியாகும்

[48] மேலும், அவர்கள் செய்துகொண்டிருந்த (கெட்ட) செயல்களின் தீமைகள் அவர்களுக்கு வெளிப்பட்டுவிடும். அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்த வேதனையும் அவர்களைச் சூழ்ந்துகொள்ளும்

[49] மனிதனை ஏதும் தீங்கு அணுகும் சமயத்தில், (அதை நீக்கும்படி) நம்மிடமே அவன் பிரார்த்தனை செய்கிறான். (அதை நீக்கி) அவனுக்கு நாம் ஒரு அருள் புரிந்தாலோ, ‘‘தான் அதை அடைந்ததெல்லாம் தன் அறிவின் சாமர்த்தியத்தால்தான்'' என்று கூறுகிறான். (அது சரி) அல்ல; அதுவும் (அவர்களுக்கு) ஒரு சோதனையாகும். ஆயினும், அவர்களில் அதிகமானோர் இதை அறிந்து கொள்வதில்லை

[50] இவர்களுக்கு முன்னிருந்தவர்களும், இவ்வாறுதான் கூறிக்கொண்டு இருந்தார்கள். எனினும், அவர்கள் சம்பாதித்து வந்ததில் ஒன்றுமே அவர்களுக்குப் பயனளிக்காமல் போய்விட்டது

[51] அவர்கள் செய்துகொண்டிருந்த (கெட்ட) செயலின் தீமைகள்தான் அவர்களை வந்தடைந்தன. (யூதர்களாகிய) இவர்களிலும் எவர்கள் அநியாயம் செய்கிறார்களோ அவர்களை, அவர்கள் செய்யும் (கெட்ட) செயலின் தீமைகள் அதிசீக்கிரத்தில் வந்தடையும். அவர்கள் (இவ்விஷயத்தில் அல்லாஹ்வைத்) தோற்கடித்துவிட முடியாது

[52] அவர்கள் அறிந்து கொள்ளவில்லையா? அல்லாஹ்தான், தான் நாடியவர்களுக்கு உணவை விரிவாக்குகிறான். (தான் நாடியவர்களுக்குச்) சுருக்கி விடுகிறான். நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன

[53] (நபியே!) கூறுவீராக: ‘‘எனது அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டபோதிலும், அல்லாஹ்வின் அருளைப் பற்றி நீங்கள் நம்பிக்கை இழந்துவிட வேண்டாம். (நீங்கள் பாவத்திலிருந்து விலகி, மனம் வருந்தி மன்னிப்புக் கோரினால்) நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) பாவங்கள் அனைத்தையும் மன்னித்து விடுவான். ஏனென்றால், நிச்சயமாக அவன்தான் மிக்க மன்னிப்பவன், மகா கருணை உடையவன் ஆவான்

[54] ஆகவே, (மனிதர்களே!) உங்களை வேதனை வந்தடைவதற்கு முன்னதாகவே, நீங்கள் உங்கள் இறைவன் பக்கம் திரும்பி, அவனுக்கு முற்றிலும் பணிந்து வழிபட்டு நடங்கள். (வேதனை வந்து விட்டாலோ,) பின்னர் (ஒருவராலும்) நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்

[55] (மனிதர்களே!) நீங்கள் அறியாத விதத்தில் திடீரென உங்களிடம் வேதனை வருவதற்கு முன்னதாகவே உங்கள் இறைவனால் உங்களுக்கு இறக்கிவைக்கப்பட்ட, (வேதங்களில்) மிக அழகான (இ)தைப் பின்பற்றுங்கள்

[56] (உங்களில்) எவரும், ‘‘அல்லாஹ்வைப் பற்றி நான் (கவனிக்க வேண்டியவற்றைக் கவனிக்காது) தவறிவிட்டேன். என் கேடே! நான் (இவற்றைப்) பரிகாசம் செய்து கொண்டிருந்தேனே!'' என்று கூறாமல் இருப்பதற்காகவும்

[57] அல்லது (உங்களில் எவரும்) ‘‘அல்லாஹ் எனக்கு நேரான வழியை அறிவித்திருந்தால், நானும் இறையச்சமுடையவர்களில் ஒருவனாகி இருப்பேன்!'' என்று கூறாமல் இருப்பதற்காகவும்

[58] அல்லது, (உங்களில் எவரும்) வேதனையைக் (கண்ணால்) கண்ட சமயத்தில் ‘‘(இவ்வுலகத்திற்கு) நான் திரும்பிச் செல்ல வழி உண்டா? அவ்வாறாயின் நான் நல்லவர்களில் ஆகிவிடுவேன்'' என்று கூறாமல் இருப்பதற்காகவும் (உங்கள் இறைவன் பக்கம் திரும்பி, அவன் இறக்கிய வேதத்தை பின்பற்றுங்கள்)

[59] (அவ்வாறு எவனேனும் கூறினால், இறைவன் அவனை நோக்கி,) ‘‘ஆம்! மெய்யாகவே என் வசனங்கள் உன்னிடம் வந்தன, நீ அவற்றைப் பொய்யாக்கினாய், கர்வம் கொண்டாய், அதை நிராகரிப்பவர்களில் இருந்தாய்.'' (என்று கூறுவான்)

[60] (நபியே!) மறுமை நாளன்று அல்லாஹ்வின் மீது பொய் கூறும் இவர்களின் முகங்கள் கருத்துப் போயிருப்பதை நீர் காண்பீர். கர்வம் கொண்ட இவர்கள் செல்லுமிடம் நரகத்தில் இல்லையா

[61] எவர்கள் (பாவங்களிலிருந்து) முற்றிலும் (முழுமையாக) விலகிக் கொண்டார்களோ அவர்களை ஒரு தீங்கும் அணுகாது அல்லாஹ் பாதுகாத்துக் கொள்வான்; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்

[62] அல்லாஹ்வே எல்லா பொருள்களையும் படைத்தவன்; அவனே எல்லா பொருள்களின் பொறுப்பாளன்

[63] வானங்கள், பூமியிலுள்ள (பொக்கிஷம் முதலிய)வற்றின் சாவிகள் அவனிடமே இருக்கிறது. ஆகவே, அல்லாஹ்வின் வசனங்களை எவர்கள் நிராகரிக்கிறார்களோ, அவர்கள்தான் முற்றிலும் நஷ்டம் அடைந்தவர்கள்

[64] (நபியே!) கூறுவீராக: ‘‘மூடர்களே! அல்லாஹ் அல்லாதவற்றையா நான் வணங்கும்படி என்னை நீங்கள் ஏவுகிறீர்கள்

[65] (நபியே!) உமக்கும், (நபிமார்களின்) உமக்கு முன்னிருந்தவர்களுக்கும் மெய்யாகவே வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டது: (அது என்ன வென்றால், அல்லாஹ்வுக்கு) நீர் இணைவைத்தால், உமது நன்மைகள் அனைத்தும் அழிந்து, நிச்சயமாக நீர் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிடுவீர்

[66] மாறாக, நீர் அல்லாஹ் ஒருவனையே வணங்குவீராக; அவனுக்கு நன்றி செலுத்துபவர்களில் ஆகிவிடுவீராக

[67] (நபியே!) அல்லாஹ்வின் (மேலான) தகுதிக்குத் தக்கவாறு அவனை அவர்கள் கண்ணியப்படுத்துவதில்லை. பூமி (இவ்வளவு பெரிதாக இருந்த போதிலும் அது) முழுவதும் மறுமையில் அவனுடைய ஒரு கைப்பிடியில் இருக்கும். மேலும், வானங்கள் அனைத்தும் சுருட்டப்பட்டு அவனுடைய வலது கையில் இருக்கும். இவர்கள் இணைவைப்பதை விட்டு அவன் மிக மேலானவன்; அவன் மிக பரிசுத்தமானவன்

[68] ஸூர் (எக்காளம்) ஊதப்பட்டால், வானங்களில் இருப்பவர்களும், பூமியில் இருப்பவர்களும் அல்லாஹ் நாடியவர்களைத் தவிர, மூர்ச்சித்து மதி இழந்து (விழுந்து அழிந்து) விடுவார்கள். மறுமுறை ஸூர் ஊதப்பட்டால் உடனே அவர்கள் அனைவரும் (உயிர் பெற்று) எழுந்து நின்று (இறைவனை) எதிர் நோக்கி நிற்பார்கள்

[69] இறைவனின் ஒளியைக் கொண்டு பூமி பிரகாசிக்கும். (அவரவர்களின்) தினசரிக் குறிப்பு (அவரவர்கள் முன்) வைக்கப்பட்டுவிடும். நபிமார்களையும், இவர்களுடைய (மற்ற) சாட்சியங்களையும் கொண்டுவரப்பட்டு, அவர்களுக்கிடையில் நீதமாகத் தீர்ப்பளிக்கப்படும். (அவர்களுடைய நன்மையில் ஒரு அணுவளவேனும் குறைத்தோ, பாவத்தில் ஒரு அணுவளவேனும் அதிகப்படுத்தியோ) அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்

[70] ஒவ்வொரு மனிதனும், அவன் செய்ததற்குரிய கூலியை முழுமையாகவே அடைவான். அல்லாஹ்வோ, அவர்கள் செய்தவை அனைத்தையும் நன்கறிவான்

[71] (அந்நாளில்) நிராகரித்தவர்கள் அனைவரும், கூட்டம் கூட்டமாக நரகத்தின் பக்கம் ஓட்டி வரப்படுவார்கள். (அதன் சமீபமாக) அவர்கள் வந்தவுடன், அதன் வாயில்கள் திறக்கப்பட்டுவிடும். அதன் காவலாளர்கள் அவர்களை நோக்கி, ‘‘உங்களில் இருந்து அல்லாஹ்வுடைய தூதர்கள் உங்களிடம் வரவில்லையா? உங்கள் இறைவனுடைய வசனங்களை அவர்கள் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கவில்லையா? இந்நாளை நீங்கள் சந்திக்க வேண்டியதைப் பற்றி, அவர்கள் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யவில்லையா?'' என்று கேட்பார்கள். அதற்கவர்கள் ‘‘ஆம்! (வந்தார்கள்)'' என்றே சொல்வார்கள். (ஆயினும், அது பயன் அளிக்காது. ஏனென்றால்,) நிராகரிப்பவர்களுக்கு வேதனையைப் பற்றிய தீர்ப்பு உறுதியாகி விட்டது

[72] ஆகவே, ‘‘நரகத்தின் வாயில்களில் நீங்கள் நுழைந்து விடுங்கள். என்றென்றுமே நீங்கள் அதில் தங்கிவிடுங்கள்'' என்று கூறப்படும். ஆகவே, கர்வம்கொண்ட (இ)வர்கள் தங்குமிடம் மகா கெட்டது

[73] எவர்கள் தங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொண்டிருந்தார்களோ அவர்கள் (அந்நாளில்) கூட்டம் கூட்டமாகச் சொர்க்கத்தின் பக்கம் அழைத்து வரப்படுவார்கள். அதன் சமீபமாக அவர்கள் வரும் சமயத்தில், அதன் வாயில்கள் திறக்கப்பட்டு, அதன் காவலாளர்கள் அவர்களை நோக்கி, ‘‘உங்கள் மீது ஸலாம் உண்டாவதாகுக! நீங்கள் பாக்கியவான்களாகி விட்டீர்கள். நீங்கள் இதில் நுழைந்து, என்றென்றும் இதில் தங்கிவிடுங்கள்'' என்று கூறுவார்கள்

[74] அதற்கவர்கள், ‘‘புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே! அவன் தன் வாக்குறுதியை எங்களுக்கு உண்மையாக்கி வைத்தான். சொர்க்கத்தில் நாங்கள் விரும்பிய இடமெல்லாம் சென்றிருக்க அதன் பூமியை எங்களுக்குச் சொந்தமாக்கி வைத்தான்'' என்று கூறுவார்கள். நன்மை செய்தவர்களின் கூலி இவ்வாறு நன்மையாகவே முடியும்

[75] (நபியே! அந்நாளில்) வானவர்கள் தங்கள் இறைவனைப் புகழ்ந்து, துதி செய்தவண்ணம் ‘அர்ஷை' சூழ்ந்து நிற்பதை நீர் காண்பீர். அச்சமயம் அவர்களுக்கிடையில் நியாயமாகவே தீர்ப்பளிக்கப்பட்டு, ‘‘அகிலத்தார் அனைவரின் இறைவனான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் சொந்தமானது'' என்று (அனைவராலும் துதி செய்து புகழ்ந்து) கூறப்படும்

கஃபீர்

Surah 40

[1] ஹா மீம்

[2] (இது அனைவரையும்) மிகைத்தவனும், (அனைத்தையும்) நன்கறிந்தவனுமாகிய அல்லாஹ்வினால் அருளப்பட்ட வேதம்

[3] அவன் (குற்றவாளிகளுடைய) மன்னிப்புக் கோரலை அங்கீகரித்து பாவங்களை மன்னிப்பவன். (மனமுரண்டாக குற்றம் புரியும் பாவிகளை) வேதனை செய்வதிலும் கடினமானவன். (நல்லவர்கள் மீது) அருள் புரிபவன். அவனைத் தவிர (வணக்கத்திற்குரியவன்) வேறு ஓர் இறைவன் அறவே இல்லை. அவனிடமே (அனைவரும் விசாரணைக்காகச்) செல்ல வேண்டியதிருக்கிறது

[4] (நபியே!) நிராகரிப்பவர்களைத் தவிர (மற்றெவரும்) அல்லாஹ்வுடைய வசனங்களைப் பற்றி (வீணாகத்) தர்க்கிக்க மாட்டார்கள். ஆகவே, (நபியே! வீணாகத் தர்க்கிக்கும்) அவர்கள் பல நகரங்களிலும் (ஆடம்பரத்துடன் சுகபோகமாகச்) சுற்றித் திரிவது உம்மை மயக்கிவிட வேண்டாம்

[5] (இவ்வாறே) இவர்களுக்கு முன்னர் நூஹ்வுடைய மக்களும், அவர்களுக்குப் பின் வந்த ஒவ்வொரு கூட்டத்தினரும் (நம் வசனங்களைப் பொய்யாக்கித்) தங்களிடம் வந்த தூதர்களிடம் குற்றம் கண்டு பிடிக்கவே கருதினார்கள். சத்தியத்தை அழித்து விடுவதற்காகப் பொய்யான விஷயங்களைக் கொண்டு (அவர்களுடன்) தர்க்கித்தார்கள். ஆதலால், அவர்களை நாம் (வேதனையைக் கொண்டு) பிடித்துக் கொண்டோம். ஆகவே, (அவர்களுக்கு) எனது தண்டனை எப்படி இருந்தது? (என்பதைக் கவனிப்பீராக)

[6] இவ்வாறே இந்நிராகரிப்பவர்கள் மீதும், நிச்சயமாக இவர்கள் நரகவாசிகள்தான் என்ற உமது இறைவனின் வாக்கு நிறைவேறியது

[7] எவர்கள், ‘அர்ஷை' சுமந்து கொண்டும், அதைச் சூழவும் இருக்கிறார்களோ அவர்கள், தங்கள் இறைவனின் புகழைக் கொண்டு அவனைத் துதி செய்தும், அவனை நம்பிக்கைகொண்டும், நம்பிக்கை கொண்டவர்களின் குற்றங்களை மன்னிக்கும்படி கோரியும், ‘‘எங்கள் இறைவனே! நீ ஞானத்தாலும் கருணையாலும் அனைவரையும்விட மிக்க விசாலமானவன். ஆகவே, (பாவங்களை விட்டு) விலகி உன் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு நீ மன்னிப்பளித்து, அவர்களை நரக வேதனையில் இருந்து நீ பாதுகாத்துக் கொள்வாயாக!'' என்று பிரார்த்தித்துக் கொண்டும்

[8] ‘‘எங்கள் இறைவனே! நீ இவர்களுக்கு வாக்களித்திருக்கும் நிலையான சொர்க்கங்களில் இவர்களையும் இவர்களுடைய மூதாதைகள், இவர்களுடைய மனைவிகள், இவர்களுடைய சந்ததிகள் ஆகிய இவர்களில் உள்ள நல்லவர்களையும் புகுத்துவாயாக! நிச்சயமாக நீதான் (அனைவரையும்) மிகைத்தவன், (அனைத்தையும் அறிந்த) ஞானமுடையவன்'' என்றும்

[9] ‘‘அவர்களை எல்லா தீங்குகளிலிருந்தும் பாதுகாத்துக்கொள். அன்றைய தினம் எவர்களை நீ எல்லா தீங்குகளிலிருந்தும் பாதுகாத்துக் கொண்டாயோ, அவர்கள் மீது நிச்சயமாக நீ பேரருள் புரிந்துவிட்டாய்'' என்றும் பிரார்த்திப்பார்கள். இதுதான் மிக மகத்தான பெரும் பாக்கியமாகும்

[10] நிச்சயமாக எவர்கள் நிராகரித்து விட்டார்களோ, அவர்களை நோக்கி, ‘‘இன்றைய தினம் நீங்கள் உங்கள் ஆத்மாவை (நிந்தித்துக்) கோபிப்பதை விட, (உங்கள் மீது) அல்லாஹ்வுடைய (நிந்தனையும்) கோபமும் மிகப் பெரியதாகும். ஏனென்றால், நீங்கள் நம்பிக்கையின் பக்கம் அழைக்கப்பட்ட சமயத்தில், அதை நிராகரித்து விட்டீர்கள்'' என்று அவர்களை நோக்கி சப்தமிட்டுக் கூறப்படும்

[11] அதற்கவர்கள், ‘‘எங்கள் இறைவனே! இருமுறை நீ எங்களை மரணிக்கச் செய்தாய்; இருமுறை நீ எங்களுக்கு உயிர் கொடுத்தாய். நாங்கள் எங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டு விண்ணப்பம் செய்கிறோம். ஆகவே, (இதில் இருந்து நாங்கள்) வெளிப்பட ஏதும் வழி உண்டா?'' என்று கேட்பார்கள்

[12] (அதற்கு இறைவன்,) ‘‘உங்களுக்கு இ(த்தண்டனை வந்த)தன் காரணமாவது: அல்லாஹ் ஒருவன்தான் என்று கூறினால், அதை நீங்கள் மறுத்தீர்கள். அவனுக்கு எவரும் இணை உண்டு என்று கூறப்பட்டால், அதை நீங்கள் நம்பினீர்கள்! ஆதலால், (இன்றைய தினம் உங்களுக்குக் கிடைத்திருக்கும் இவ்வேதனை) மிகப் பெரியவனும், மேலானவனுமாகிய அல்லாஹ்வுடைய தீர்ப்பே!'' (என்று கூறுவான்)

[13] அவன் தனது அத்தாட்சிகளை உங்களுக்கு அறிவித்து, வானத்தில் இருந்து உங்களுக்கு உணவுகளையும் இறக்கிவைக்கிறான். (ஒவ்வொரு விஷயத்திலும்) அவனையே முன்நோக்குபவர்களைத் தவிர, மற்றெவரும் (இதைக் கொண்டு) நல்லுணர்ச்சி பெற மாட்டார்கள்

[14] ஆகவே, (நம்பிக்கையாளர்களே!) நிராகரிப்பவர்கள் வெறுத்தபோதிலும் நீங்கள் முற்றிலும் அவனுக்கே வழிப்பட்டு, கலப்பற்ற மனதுடையவர்களாக அல்லாஹ் ஒருவனையே (பிரார்த்தனை செய்து) அழைத்துக் கொண்டிருங்கள்

[15] அவன் மிக்க உயர்ந்த பதவிகள் உடையவன், அர்ஷுக்கு சொந்தக்காரன். (தன்னைச்) சந்திக்கும் நாளைப் பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக, தன் அடியார்களில் தான் விரும்பியவர்களின் மீது தன் கட்டளையை வஹ்யி மூலம் அவன் இறக்கிவைக்கிறான்

[16] (மரணித்த) அவர்கள் அந்நாளில் (சமாதிகளிலிருந்து) வெளிப்பட்டு(த் தங்கள் இறைவனின்) முன் வந்து நிற்பார்கள். அவர்கள் செய்த ஒரு விஷயமும் அல்லாஹ்வுக்கு மறைந்து விடாது. (அவர்களை நோக்கி,) இன்றைய தினம், ‘‘எவருடைய ஆட்சி? (என்று கேட்டு, அனைவரையும்) அடக்கி ஆளும் ஒருவனாகிய அந்த அல்லாஹ்வுக்குரியதே!'' (என்று பதில் கூறப்படும்)

[17] இன்றைய தினம் ஒவ்வொரு ஆத்மாவுக்கும், அவை செய்த செயல்களுக்குத் தக்க கூலி கொடுக்கப்படும். இன்றைய தினம் ஒரு அநியாயமும் நடைபெறாது. அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்(டுத் தீர்ப்பளிப்)பதில் மிகத் தீவிரமானவன்

[18] (நபியே!) சமீபத்திலிருக்கும் (மறுமை) நாளைப் பற்றி நீர் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக! (அந்நாளில் அவர்களுடைய) உள்ளங்கள் கோபத்தால் அவர்களின் தொண்டைகளை அடைத்துக் கொள்ளும். அநியாயம் செய்பவர்களுக்கு உதவி செய்பவர்கள் (அந்நாளில்) ஒருவரும் இருக்கமாட்டார். அனுமதி பெற்ற சிபாரிசு செய்பவர்களும் இருக்கமாட்டார்

[19] (மனிதர்களின்) கண்கள் செய்யும் சூதுகளையும், உள்ளங்கள் மறைப்பவற்றையும் அல்லாஹ் நன்கறிவான்

[20] ஆதலால், முற்றிலும் நீதமாகவே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். இவர்கள் (இறைவனென) அழைக்கும் அல்லாஹ் அல்லாதவையோ (அதற்கு மாறாக) எத்தகைய தீர்ப்பும் கூறமுடியாது. நிச்சயமாக அல்லாஹ்தான் (அனைத்தையும்) செவியுறுபவன், உற்று நோக்குபவன் ஆவான்

[21] (நபியே!) இவர்கள் பூமியில் சுற்றித் திரியவில்லையா? (திரிந்திருந்தால்) இவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எவ்வாறு ஆயிற்று என்பதைக் கண்டுகொள்வார்கள். (முன்னிருந்த) அவர்களோ, பலத்தாலும், பூமியில் விட்டுச் சென்ற (பூர்வ) சின்னங்களாலும் இவர்களைவிட மிகைத்தவர்களாகவே இருந்தனர். (எனினும்,) அவர்களின் பாவங்களின் காரணமாக அவர்களை அல்லாஹ் பிடித்துக் கொண்டான். அல்லாஹ்வின் பிடியிலிருந்து அவர்களை பாதுகாத்துக் கொள்ள ஒருவரும் இருக்கவில்லை

[22] இதன் காரணமாவது: நிச்சயமாக இவர்களிடம், தெளிவான அத்தாட்சிகளுடன் நம் தூதர்கள் வந்து கொண்டிருந்தனர். (அவர்களை) இவர்கள் நிராகரித்து விட்டனர். ஆகவே, அல்லாஹ் அவர்களைப் பிடித்துக் கொண்டான். நிச்சயமாக அவன் மிக பலமுடையவன், (பாவிகளை) வேதனை செய்வதில் மிக கடினமானவன்

[23] மெய்யாகவே நாம் மூஸாவுக்கு நம் வசனங்களையும் தெளிவான அத்தாட்சிகளையும் கொடுத்து அனுப்பிவைத்தோம்

[24] ஃபிர்அவ்ன், ஹாமான், காரூன் ஆகியவர்களிடம் (அவரை அனுப்பி வைத்தோம்). அதற்கவர்கள் (மூஸாவை அவர்) ‘‘பெரும் பொய் சொல்லும் சூனியக்காரர்'' என்று கூறினார்கள்

[25] அவர், உண்மையான அத்தாட்சிகளை அவர்களிடம் கொண்டுசென்ற போதெல்லாம் அதற்கவர்கள், ‘‘(மூஸாவை) நம்பிக்கை கொண்டிருப்பவர்களுடைய ஆண் மக்களை கொலை செய்து, பெண் மக்களை உயிருடன் வாழ விடுங்கள்'' என்று (தன் மக்களுக்குக்) கூறினார்கள். ஆகவே, இந்நிராகரிப்பவர்களின் சூழ்ச்சி வழிகேட்டிலேயே தவிர (வேறு எதிலும்) செல்லவில்லை

[26] மேலும், ஃபிர்அவ்ன் (தன் மக்களை நோக்கி,) ‘‘என்னை(த் தடை செய்யாது) விட்டுவிடுங்கள். நான் மூஸாவைக் கொலை செய்து விடுகிறேன். அவர் (தன்னை காத்துக்கொள்ள) தனது இறைவனை அழைக்கட்டும். நிச்சயமாக அவர் உங்கள் மார்க்கத்தையே மாற்றிவிடக்கூடும்; அல்லது பூமியில் விஷமத்தைப் பரப்பி விடக்கூடும் என்று நான் பயப்படுகிறேன்'' என்றும் கூறினான்

[27] அதற்கு மூஸா, (அவனை நோக்கி) ‘‘கேள்வி கணக்கு(க் கேட்கப்படும்) நாளை நம்பாது, கர்வம்கொண்ட (உங்கள்) அனைவருடைய தீங்கை விட்டும், என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அவன் என்னை பாதுகாத்துக் கொள்ளுமாறு கோருகிறேன்'' என்று கூறினார்

[28] ஃபிர்அவ்னுடைய கூட்டத்திலுள்ள ஒரு மனிதர் நம்பிக்கைகொண்டு இருந்தார். அவர் தன் நம்பிக்கையை மறைத்துக்கொண்டுமிருந்தார். அவர் (அச்சமயம் அவர்களை நோக்கி,) ‘‘அல்லாஹ்தான் என் இறைவன் என்று ஒரு மனிதர் கூறியதற்காக அவரை நீங்கள் கொலை செய்துவிடலாமா? அவரோ, உங்கள் இறைவனிடமிருந்து பல தெளிவான அத்தாட்சிகளை மெய்யாகவே உங்களிடம் கொண்டு வந்திருக்கிறார். அவர் பொய் சொல்பவராயிருந்தால், அவர் சொல்லும் பொய்யின் கேடு அவர் மீதே சாரும். (அதனால் உங்களுக்கு ஒன்றும் நஷ்டமில்லை.) அவர் சொல்வது உண்மையாக இருந்துவிட்டாலோ, அவர் பயமுறுத்துகிற வேதனைகளில் பல உங்களை வந்தடைந்து விடுமே! நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறி பொய் சொல்பவர்களை நேரான வழியில் செலுத்தமாட்டான்'' என்றார்

[29] ‘‘என் மக்களே! இன்றைய தினம் அதிகாரம் உங்கள் கையில்தான் இருக்கிறது. இத்தேசத்தில் (நீங்களே) ஆதிக்கம் வகிக்கிறீர்கள். ஆயினும், அல்லாஹ்வுடைய வேதனை நமக்கு வந்து விட்டால், (அதைத் தடுத்து) நமக்கு உதவி செய்பவன் யார்?'' (என்றும் கூறினார்). அதற்கு, ஃபிர்அவ்ன் (தன் மக்களை நோக்கி,) ‘‘நான் (சரி என்று) கண்டவற்றை தவிர (வேறொன்றையும்) நான் உங்களுக்கு அறிவிக்கவில்லை. நேரான வழியைத் தவிர மற்றெதனையும் நான் உங்களுக்கு காண்பிக்கவில்லை'' என்று கூறினான்

[30] அதற்கு, நம்பிக்கைகொண்(டு தன் நம்பிக்கையை மறைத்துக் கொண்)டிருந்த அவர் (அவர்களை நோக்கி,) ‘‘என் மக்களே! (அழிந்துபோன) மற்ற கூட்டத்தினர்களின் (கெட்ட) நாள்களைப் போன்றவை, உங்கள் மீது வந்துவிடுமென்று நிச்சயமாக நான் பயப்படுகிறேன்

[31] (இதற்கு முன்னிருந்த) நூஹ்வுடைய மக்களுக்கும், ஆதுடைய மக்களுக்கும், ஸமூதுடைய மக்களுக்கும், அதற்குப் பின் வந்த மக்களுக்கும் நிகழ்ந்தது போன்ற (ஆபத்)து (உங்களுக்கும்) நிகழ்ந்து விடுமென்று நான் பயப்படுகிறேன். அல்லாஹ் தன் அடியார்களுக்கு அநியாயம் செய்ய விரும்பமாட்டான்'' என்றும்

[32] ‘‘என் மக்களே! உங்கள் மீது (நீங்கள்) அழைக்கப்படும் (மறுமை) நாளைப் பற்றியும் நான் பயப்படுகிறேன்

[33] நீங்கள் (வேதனைக்குப் பயந்து) புறங்காட்டி ஓடும் அந்நாளில், அல்லாஹ்வை விட்டும் உங்களைக் காப்பாற்றக் கூடியவர் ஒருவரும் இருக்க மாட்டார். அல்லாஹ் எவனை வழி கெடுத்து விடுகிறானோ, அவனை நேரான வழியில் செலுத்தக்கூடியவன் ஒருவனுமில்லை

[34] இதற்கு முன்னரும், யூஸுஃப் (நபி) மெய்யாகவே தெளிவான அத்தாட்சிகளை உங்களிடம் கொண்டு வந்தார். அவர் இறந்துவிடும் வரை, அவர் உங்களிடம் கொண்டு வந்ததைப் பற்றி நீங்கள் சந்தேகித்துக் கொண்டே இருந்தீர்கள். அவர் இறந்த பின்னரோ, (அவரைப் போற்றிப் புகழ்ந்து, இத்தகைய) ஒரு தூதரை அவருக்குப் பின்னர் அல்லாஹ் அனுப்பவே மாட்டான் (என்று கூற முற்பட்டீர்கள்). வரம்பு மீறி (உங்களைப் போல) சந்தேகிப்பவர்களை இவ்வாறே அல்லாஹ் வழிகெடுத்து விடுகிறான்.'' என்றும் கூறினார்

[35] எவர்கள் (இறைவனிடமிருந்து) தங்களுக்கு வந்துள்ளதாகக் கூறக்கூடிய ஓர் ஆதாரமுமின்றியே, அல்லாஹ்வுடைய வசனங்களைப் பற்றி (வீணாகத்) தர்க்கிக்கிறார்களோ... (அவர்கள் நஷ்டமடைந்து விடுவார்கள்). ஏனென்றால், இது அல்லாஹ்விடத்திலும், நம்பிக்கை கொண்டவர்களிடத்திலும் பெரும் அருவருப்பானதாகும். இவ்வாறே, பெருமை கொள்ளும் வம்பர்களின் உள்ளங்களிலெல்லாம் முத்திரையிட்டு விடுகிறான்'' (என்றும் அவர் கூறினார்)

[36] (அதற்குப் ஃபிர்அவ்ன் தன் மந்திரி ஹாமானை நோக்கி,) ‘‘ஹாமானே! வானங்களின் வாசல்களை நான் அடையக்கூடிய உயர்ந்ததொரு கோபுரத்தை நீ எழுப்பு

[37] மூஸாவுடைய ஆண்டவனை நான் பார்க்க வேண்டும். அவர் பொய் சொல்கிறார் என்றே நிச்சயமாக நான் எண்ணுகிறேன்'' என்று கூறினான். இவ்வாறே ஃபிர்அவ்னுக்கு, அவனுடைய தீய காரியங்கள் அழகாகக் காண்பிக்கப்பட்டு, நேரான வழியிலிருந்தும் அவன் தடுக்கப்பட்டு விட்டான். ஃபிர்அவ்னுடைய சூழ்ச்சி எல்லாம் (வீண்) அழிவிலே தவிர (வேறொன்றிலும்) இருக்கவில்லை

[38] அதற்கு, அவர்களில் நம்பிக்கை (கொண்டு தன் நம்பிக்கையை மறைத்துக்) கொண்டிருந்தவர் கூறினார்: ‘‘என் மக்களே! என்னைப் பின்பற்றுங்கள். நான் உங்களுக்கு நேரான வழியைக் காண்பிப்பேன்

[39] என் மக்களே! நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கையெல்லாம் சொற்ப இன்பம்தான். நிச்சயமாக மறுமை தான் நிலையான (இன்பம் தரும்) வீடு

[40] எவனேனும் தீங்கு செய்தால், அதைப் போன்ற தீங்கே தவிர (அதற்கதிகமாய்) அவனுக்குக் கூலியாகக் கொடுக்கப்பட மாட்டாது. ஆணோ பெண்ணோ எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ, அவர்கள் சொர்க்கத்தில் நுழைந்துவிடுவார்கள். அதில் கணக்கின்றி (அதிகமாகவும்) கொடுக்கப்படுவார்கள்

[41] என் மக்களே! எனக்கென்ன, (ஆச்சரியமாக இருக்கிறது!) நானோ உங்களை ஈடேற்றத்திற்கு அழைக்கிறேன். நீங்கள் என்னை நரகத்திற்கு அழைக்கிறீர்கள்

[42] தவிர, நான் அல்லாஹ்வை நிராகரித்துவிட்டு (இறைவனென) நான் நம்பாததை அவனுக்கு இணைவைக்கும்படி என்னை நீங்கள் அழைக்கிறீர்கள். நானோ, உங்களை (அனைவரையும்) மிகைத்தவன், மிக மன்னிப்புடையவனின் பக்கம் அழைக்கிறேன்

[43] என்னை நீங்கள் எதன் பக்கம் அழைக்கிறீர்களோ, அது இம்மையிலும் சரி, மறுமையிலும் சரி (இறைவனென்று) அழைக்கப்படுவதற்கு ஒரு சிறிதும் நிச்சயமாக அதற்குத் தகுதி இல்லை என்பதில் சந்தேகமில்லை. அல்லாஹ்விடமே நாம் அனைவரும் திரும்பச் செல்வோம் (என்பதிலும் அறவே சந்தேகமில்லை). வரம்பு மீறுபவர்கள் நிச்சயமாக நரகவாசிகள்தான் (என்பதிலும் அறவே சந்தேகமில்லை)

[44] நான் உங்களுக்குக் கூறுவதன் உண்மையை நிச்சயமாக அதிசீக்கிரத்தில் நீங்கள் (அறிந்து) நினைத்துப் பார்ப்பீர்கள். எனது எல்லா காரியங்களையும் அல்லாஹ்விடமே ஒப்படைக்கிறேன். நிச்சயமாக அல்லாஹ் அடியார்களை உற்று நோக்குபவன்'' (என்று கூறினார்)

[45] ஆகவே, அவர்கள் செய்த சூழ்ச்சிகளின் தீங்குகளிலிருந்து அவரை அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னுடைய மக்களைக் கடினமான வேதனை சூழ்ந்துகொண்டது

[46] காலையிலும் மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டு போகப்படுகின்றனர். மறுமை நாளிலோ, ஃபிர்அவ்னுடைய மக்களை மிகக் கடினமான வேதனையில் புகுத்துங்கள் எனக் கூறப்படும்

[47] நரகத்தில் அவர்கள் தங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு, (அவர்களில் உள்ள) பலவீனமானவர்கள் பெருமையடித்துக் கொண்டிருந்த (தலை)வர்களை நோக்கி ‘‘மெய்யாகவே நாங்கள் உங்களையே பின்பற்றியிருந்தோம். இன்றைய தினம் நரகத்தி(ன் வேதனையி)லிருந்து ஒரு சிறிதேனும் எங்களை விட்டு நீங்கள் தடுத்துவிட முடியுமா?'' என்று கேட்பார்கள்

[48] அதற்கு, பெருமையடித்துக் கொண்டிருந்த அ(வர்களுடைய தலை)வர்கள், ‘‘மெய்யாகவே (நாங்களும், நீங்களும் ஆக) நாம் அனைவரும் நரகத்தில்தான் இருக்கிறோம். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களுக்கு(ச் செய்ய வேண்டிய) தீர்ப்பைச் செய்து விட்டான். (ஆகவே, உங்களுக்காக நாங்கள் ஒன்றும் உதவி செய்வதற்கில்லை)'' என்று கூறுவார்கள்

[49] பின்னர், நரகத்திலுள்ளவர்கள் நரகத்தின் காவலாளர்களை நோக்கி ‘‘வேதனையை ஒரு நாளேனும் எங்களுக்கு இலேசாக்குமாறு உங்கள் இறைவனிடம் நீங்கள் கேளுங்கள்'' எனக் கூறுவார்கள்

[50] அதற்கவர்கள் (இவர்களை நோக்கி) ‘‘உங்களிடம் வந்த (இறைவனுடைய) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் உங்களிடம் வரவில்லையா?'' என்று கேட்பார்கள். அதற்கு இவர்கள் ‘‘ஆம்! மெய்தான் (வந்தார்கள்)'' என்று கூறுவார்கள். அதற்கவர்கள், ‘‘அவ்வாறாயின், (நாங்கள் இறைவனிடம் கேட்பதற்கில்லை.) நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்'' என்று கூறிவிடுவார்கள். இந்நிராகரிப்பவர்களின் பிரார்த்தனை ஒரு பயனும் அளிக்காது

[51] நிச்சயமாக நாம் நம் தூதர்களுக்கும், நம்பிக்கை கொண்டவர்களுக்கும் இவ்வுலக வாழ்க்கையிலும் (உதவி செய்வோம். இவர்களுக்காக) சாட்சிகள் வந்து கூறும் (மறுமை) நாளிலும் உதவி செய்வோம்

[52] அந்நாளில் அநியாயக்காரர்களுக்கு அவர்கள் கூறும் புகல்கள் ஒன்றுமே பயனளிக்காது. அவர்களுக்கு (இறைவனின்) சாபமும் உண்டு; அவர்களுக்குத் தீய இருப்பிடமும் உண்டு

[53] நிச்சயமாக நாம் மூஸாவுக்கு (தவ்றாத் வேதத்தில்) நேரான வழியைக் கொடுத்து, இஸ்ராயீலின் சந்ததிகளை அவ்வேதத்திற்கு வாரிசுகளாக ஆக்கி வைத்தோம்

[54] அது நேரான வழியாகவும் அறிவுடையவர்களுக்கு நல்லுபதேசமாகவும் இருந்தது. (எனினும், அதை அவர்கள் பின்பற்றவில்லை)

[55] (நபியே!) நீர் (கஷ்டங்களைச்) சகித்துக் கொண்டு பொறுமையாக இருப்பீராக. நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானது. நீர் உமது தவறுகளுக்கு மன்னிப்பைக் கோரிக்கொண்டும், காலையிலும், மாலையிலும் உமது இறைவனைப் புகழ்ந்து துதி செய்து கொண்டும் இருப்பீராக

[56] நிச்சயமாக எவர்கள் தங்களிடம் ஆதாரம் ஏதும் இல்லாதிருக்க அல்லாஹ்வுடைய வசனங்களைப் பற்றித் தர்க்கிக்கிறார்களோ, அவர்களுடைய உள்ளங்களில் (வெறும்) பெருமையைத் தவிர வேறொன்றுமில்லை. (அப்பெருமையை) அவர்கள் அடையவும் மாட்டார்கள். ஆகவே, (உம்மை) பாதுகாத்துக் கொள்ளுமாறு அல்லாஹ்விடம் நீர் கோருவீராக. நிச்சயமாக அவன்தான் (அனைத்தையும்) செவியுறுபவன், உற்று நோக்குபவன் ஆவான்

[57] வானங்களையும் பூமியையும் படைத்திருப்பது, (இறந்த) மனிதர்களை (மறு முறை) படைப்பதைவிட நிச்சயமாக மிகப் பெரிய காரியமாகும். ஆயினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் இதைக்கூட அறிந்து கொள்வதில்லை

[58] குருடனும் பார்வையுடையவனும் சமமாக மாட்டார்கள். (அவ்வாறே) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்பவர்களும் (நம்பிக்கை கொள்ளாத) பாவிகளும் சமமாக மாட்டார்கள். வெகு சொற்பமாகவே இதைக்கொண்டு நீங்கள் நல்லுணர்ச்சி பெறுகிறீர்கள்

[59] விசாரணைக் காலம் நிச்சயமாக வந்தே தீரும். அதில் சந்தேகமே இல்லை. எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) நம்புவதில்லை

[60] உங்கள் இறைவன் கூறுகிறான்: ‘‘நீங்கள் (உங்களுக்கு வேண்டியவை அனைத்தையும்) என்னிடமே கேளுங்கள். நான் உங்கள் பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொள்வேன். எவர்கள் என்னை வணங்காது பெருமையடிக்கின்றனரோ, அவர்கள் நிச்சயமாக சிறுமைப்பட்டவர்களாக நரகம் புகுவார்கள்

[61] அல்லாஹ்தான், நீங்கள் (இளைப்பாறி) சுகமடைவதற்காக இரவையும், (வெளிச்சத்தால் பலவற்றையும்) நீங்கள் பார்க்கும்படி பகலையும் படைத்தான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களின் மீது பேரருள் புரிகிறான். ஆயினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் நன்றி செலுத்துவதில்லை

[62] உங்கள் இறைவனான அந்த அல்லாஹ்தான் (மற்ற) பொருள்கள் அனைத்தையும் படைப்பவன். அவனைத்தவிர வணக்கத்திற்குரிய வேறு ஓர் இறைவன் அறவே இல்லை. ஆகவே, (அவனை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகிறீர்கள்

[63] அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரித்துக்கொண்டு (முன்னர்) இருந்தவர்களும், இவ்வாறுதான் வெருண்டோடிச் சென்றனர்

[64] அல்லாஹ்தான் உங்களுக்கு பூமியை (நீங்கள்) வசித்திருக்கும் இடமாகவும், வானத்தை ஒரு முகடாகவும் அமைத்து, உங்களைச் சித்தரித்து, அழகான கோலத்திலும் உங்களை அமைத்தான். அவனே உங்களுக்கு மேலான உணவுகளையும் வழங்குகிறான். அந்த அல்லாஹ்தான் உங்கள் இறைவன். அகிலத்தார்களின் இறைவனாகிய அல்லாஹ் மிக பாக்கியம் உடையவன்

[65] அவன் நிரந்தரமானவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு ஓர் இறைவன் அறவே இல்லை. ஆகவே, அவனுக்கு நீங்கள் முற்றிலும் வழிப்பட்டுக் கலப்பற்ற மனதுடன் அவனை அழைப்பீர்களாக! உலகத்தார் அனைவரையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தானது

[66] (நபியே!) கூறுவீராக: ‘‘என் இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகள் என்னிடம் வந்ததன் பின்னர், அல்லாஹ்வையன்றி நீங்கள் (இறைவனென)அழைப்பவற்றை நான் வணங்கக்கூடாதென்று தடுக்கப்பட்டுள்ளேன். நிச்சயமாக உலகத்தாரின் இறைவனுக்கே நான் முற்றிலும் பணிந்து வழிபட்டு நடக்கும்படியும் ஏவப்பட்டுள்ளேன்

[67] அவன்தான் உங்களை (ஆரம்பத்தில்) மண்ணிலிருந்தும் பின்னர், இந்திரியத்துளியிலிருந்தும், பின்னர், கருவிலிருந்தும் படைத்தான். பிறகு, அவனே உங்களை ஒரு சிசுவாகவும் வெளிப்படுத்துகிறான். பின்னர், (படிப்படியாக) நீங்கள் உங்கள் வாலிபத்தை அடைந்து, பின்னர் நீங்கள் முதியவர்களாக ஆகிறீர்கள். இதற்கு முன்னரும் உங்களில் பலர் இறந்து விடுகின்றனர். ஆயினும், (உங்களில் ஒவ்வொருவரும்) குறிப்பிட்ட தவணையை அடைந்தே தீருகிறீர்கள். இதை நீங்கள் அறிந்து கொள்வீர்களாக

[68] அவனே உயிர் கொடுக்கிறான்; உயிர் வாங்குகின்றான். எதையும் (படைக்க) அவன் தீர்மானித்தால் அதை ‘ஆகுக' என்று அவன் கூறியவுடன் அது ஆகிவிடுகிறது

[69] (நபியே!) அல்லாஹ்வுடைய வசனங்களைப் பற்றி (வீணாக)த் தர்க்கிப்பவர்கள் எவ்வாறு (உண்மையை விட்டும்) திருப்பப்படுகின்றனர் என்பதை நீர் பார்க்கவில்லையா

[70] எவர்கள் இந்த வேதத்தையும், நமது (மற்ற) தூதர்கள் கொண்டு வந்த (வேதத்)தையும் பொய்யாக்குகின்றனரோ, அவர்கள் (பின்னர் அதை உண்மைதான் என்று) நிச்சயமாக அறிந்து கொள்வார்கள்

[71] அவர்களுடைய கழுத்துகளில் விலங்கிட்டு, சங்கிலிகளால் கட்டப்பட்டு (வேதனை செய்ய) இழுத்துக் கொண்டு போகப்படுவார்கள்

[72] (அவர்கள்) முதலில் கொதிக்கும் நீரின் பக்கமும், பின்னர் நரகத்திற்கும் (கொண்டு போகப்பட்டு, அதில்) எரிக்கப்படுவார்கள்

[73] பின்னர், அவர்களை நோக்கி ‘‘(அல்லாஹ்வுக்கு) இணையென்று நீங்கள் கூறிக்கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவை எங்கே?'' என்று கேட்கப்படும்

[74] அதற்கவர்கள், ‘‘அவையெல்லாம் எங்களை விட்டும் மறைந்து விட்டன. இதற்கு முன்னர் நாம் (அல்லாஹ் அல்லாத) எதையுமே அழைத்துக் கொண்டிருக்கவில்லையே!'' என்று (பொய்) கூறுவார்கள். இவ்வாறு நிராகரிப்பவர்கள் (உடைய புத்தி) தடுமாறும்படி அல்லாஹ் செய்துவிடுவான்

[75] (பின்னர், அவர்களை நோக்கி) ‘‘பூமியில் நீங்கள் செய்த உண்மையற்றதைக் கொண்டு அளவுகடந்து சந்தோஷப்பட்டுக் கொண்டு இருந்ததாலும், இறுமாப்போடு இருந்ததாலும் இதுவே உங்களுக்கு (தகுமான கூலியாகும்)

[76] நீங்கள் நரகத்தின் வாயில்களில் நுழையுங்கள். அதில் என்றென்றும் தங்கி விடுங்கள்'' (என்று கூறப்படும்). கர்வம்கொண்ட இவர்கள் தங்குமிடம் மிகக் கெட்டது

[77] (நபியே!) பொறுமையுடன் (உறுதியாக) இருப்பீராக. நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானது. அவர்களை நாம் பயமுறுத்துகின்ற வேதனைகளில் சிலவற்றை (உமது வாழ்நாளில்) நாம் உமக்குக் காண்பித்தாலும் சரி, அல்லது, (அவை வருவதற்கு முன்னதாகவே) நாம் உம்மைக் கைப்பற்றி (நீர் இறந்து) விட்டாலும் சரி, நிச்சயமாக அவர்கள் நம்மிடமே கொண்டு வரப்படுவார்கள்

[78] (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு முன்னர் தூதர்கள் பலரை அனுப்பியிருக்கிறோம். அவர்களில் சிலருடைய சரித்திரத்தையே நாம் உமக்குக் கூறியிருக்கிறோம். அவர்களில் பலருடைய சரித்திரத்தை நாம் உமக்குக் கூறவில்லை. (இவ்விரு வகுப்பாரில்) எந்தத் தூதராயினும் சரி, அல்லாஹ்வுடைய அனுமதியின்றி ஓர் அத்தாட்சியைக் கொண்டு வருவது அவருக்குச் சாத்தியமானதல்ல. அல்லாஹ்வுடைய கட்டளை வரும் சமயத்தில் (அவர்களுக்கு) நியாயமாகவே தீர்ப்பளிக்கப்படும். அதைப் பொய்யாக்கியவர்கள் அந்நேரத்தில் நஷ்டத்திற்குள்ளாவார்கள்

[79] அல்லாஹ்தான் உங்களுக்காக ஆடு, மாடு, ஒட்டகங்களைப் படைத்திருக்கிறான். (அவற்றில்) சிலவற்றின் மீது நீங்கள் சவாரி செய்கிறீர்கள்; சிலவற்றை நீங்கள் புசிக்கிறீர்கள்

[80] அவற்றில் உங்களுக்கு வேறு பல பயன்களும் இருக்கின்றன. உங்கள் மனதிலுள்ள கோரிக்கைகளை நீங்கள் அடைவதற்காக அவற்றிலும் கப்பல்களிலும் (பல இடங்களுக்கு) நீங்கள் சுமக்கப்படுகிறீர்கள்

[81] இன்னும், அவன் உங்களுக்குத் தனது (கணக்கற்ற) அத்தாட்சிகளைக் காண்பிப்பான். அல்லாஹ்வுடைய அந்த அத்தாட்சிகளில் எதைத்தான் நீங்கள் நிராகரிப்பீர்கள்

[82] (நிராகரிக்கும்) இவர்கள் பூமியில் சுற்றித் திரிந்து பார்க்கவில்லையா? அப்போது, அவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதைக் கண்டுகொள்வார்கள். அவர்கள், இவர்களை விட மக்கள் தொகையில் அதிகமானவர்களாகவும் பலத்தாலும், பூமியில் விட்டுச் சென்ற (பூர்வ) சின்னங்களாலும் மிகைத்தவர்களாகவும் இருந்தார்கள். எனினும், அவர்கள் தேடி சேகரித்து வைத்திருந்தவற்றில் ஒன்றுமே அவர்களுக்குப் பயனளிக்கவில்லை

[83] அவர்களு(க்காக அனுப்பப்பட்ட நம்மு)டைய தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளை அவர்களிடம் கொண்டுவந்த சமயத்தில் (அதை அவர்கள் பரிகாசம் செய்து நிராகரித்துவிட்டு, இவ்வுலக வாழ்க்கைச் சம்பந்தமாகத்) தங்களிடமுள்ள கல்வி (திறமைகளைப்) பற்றிப் பெரும் மகிழ்ச்சி அடைந்திருந்தார்கள். எனினும், (இறுதியில்) அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தது அவர்களைச் சூழ்ந்து கொண்டது

[84] நமது வேதனையை அவர்கள் கண்ணால் கண்ட சமயத்தில் அவர்கள், ‘‘அல்லாஹ் ஒருவனையே நாங்கள் நம்பிக்கை கொண்டு, நாங்கள் இணைவைத்து வணங்கி வந்த தெய்வங்களை நிராகரிக்கிறோம்'' என்று கூறினார்கள்

[85] ஆயினும், நம் வேதனையைக் கண்ணால் கண்ட பின்னர், அவர்கள் கொண்ட நம்பிக்கை அவர்களுக்குப் பயனளிக்கவில்லை. இதுவே, அல்லாஹ்வுடைய வழி. (இதற்கு முன்னரும்) அவனுடைய அடியார்களில் (இவ்வாறே) நிகழ்ந்திருக்கிறது. ஆதலால், (வேதனை இறங்கிய) அந்த நேரத்தில் நிராகரிப்பவர்கள் நஷ்டத்தையே அடைந்தார்கள்

ஃபுஸ்ஸிலத்

Surah 41

[1] ஹா மீம்

[2] அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையவன் (ஆகிய அல்லாஹ்) இடமிருந்து இது இறக்கப்பட்டுள்ளது

[3] இது குர்ஆன் என்னும் வேதமாகும். அறிவுள்ள மக்களுக்காக இதன் வசனங்கள் அரபி மொழியில் விவரிக்கப்பட்டுள்ளன

[4] (நல்லோருக்கு இது) நற்செய்தி கூறுகிறதாகவும் (பாவிகளுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறதாகவும் இருக்கிறது. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதைப்) புறக்கணித்து விட்டனர். ஆதலால், அவர்கள் இதற்கு செவி சாய்ப்பதில்லை

[5] மேலும், ‘‘நீர் எதன் பக்கம் எங்களை அழைக்கிறீர்களோ (அதைக் கவனிக்க முடியாதபடி) எங்கள் உள்ளங்கள் திரையிடப்பட்டு விட்டன. (நீர் கூறுவதைச் செவியுற முடியாதவாறு) எங்கள் செவிகள் செவிடாகி விட்டன. எங்களுக்கும் உங்களுக்கும் இடையில் திரையிட(ப்பட்டுத் தடுக்க)ப்பட்டு விட்டது. ஆகவே, நீர் (விரும்பியதைச்) செய்து கொண்டிருப்பீராக. நாங்களும் (நாங்கள் விரும்பியதையே) செய்து கொண்டிருப்போம்'' என்றும், (இவ்வேதத்தை நிராகரிப்பவர்கள்) கூறுகின்றனர்

[6] ஆகவே, (நபியே!) நீர் கூறுவீராக: மெய்யாகவே நான் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான். ஆயினும், உங்கள் வணக்கத்திற்குரிய இறைவன் ஒரே ஓர் இறைவன்தான் என்று எனக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதலால், அவனையே நோக்கி நீங்கள் உறுதியாக நில்லுங்கள். அவனிடம் நீங்கள் பாவ மன்னிப்பும் கேளுங்கள். அவனுக்கு இணைவைப்பவர்களுக்குக் கேடுதான்

[7] அவர்கள் ஜகாத்து கொடுப்பதில்லை. அவர்கள்தான் மறுமையை நிராகரிப்பவர்கள்

[8] (ஆயினும்,) எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்கிறார்களோ (அவர்கள்தான் மறுமையை நம்பக்கூடியவர்கள்.) அவர்களுக்கு நிச்சயமாக (ஒரு காலத்திலும்) முடிவுறாத (நிலையான) கூலியுண்டு

[9] (நபியே!) கூறுவீராக: “(இவ்வளவு பெரிய) பூமியை இரண்டே நாள்களில் படைத்தவனை நீங்கள் நிராகரித்துவிட்டு (மற்றவற்றை) அவனுக்கு இணையாக்குகிறீர்களா? அவன்தான் உலகத்தார் அனைவரையும் படைத்த இறைவன்

[10] அவனே பூமியின் மீது பெரும் மலைகளை அமைத்து, அதில் எல்லா விதமான பாக்கியங்களையும் புரிந்தான். மேலும், அதில் (வசிப்பவர்களுக்கு) வேண்டிய உணவுகளையும் நான்கு நாள்களில் நிர்ணயம் செய்தான். (அதுவும் நல்லவர்கள் தீயவர்கள் என்ற வித்தியாசமின்றி) கேட்பவர்கள் அனைவருக்கும் சமமாகக் கிடைக்குமாறும் செய்தான்

[11] பின்னர், வானத்திற்கு மேல் உயர்ந்தான். அது ஒரு வகை புகையாக இருந்தது. அதையும் பூமியையும் நோக்கி ‘‘நீங்கள் விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி (கீழ்ப்படிந்து) என்னிடம் வாருங்கள்'' என்று கூறினான். அதற்கு அவை, ‘‘இதோ நாங்கள் விருப்பத்துடனேயே வந்தோம்'' என்று கூறின

[12] பின்னர், (அந்த புகையை) இரண்டு நாள்களில் ஏழு வானங்களாக முடிவு செய்ய திட்டமிட்டு, ஒவ்வொரு வானத்திலும் நடைபெறவேண்டிய விஷயங்களை (அவற்றுக்கு) அறிவித்தான். பின்னர், (இவ்வளவும் செய்த) நாமே (பூமிக்குச்) சமீபமான வானத்தை (நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்காரமாக்கி வைத்து, (அதை அவற்றுக்குப்) பாதுகாப்பாகவும் ஆக்கினோம். இவையெல்லாம், (அனைவரையும்) மிகைத்தவனும் (அனைத்தையும்) நன்கறிந்தவனுடைய ஏற்பாடுதான்

[13] ஆகவே, (நபியே! இவ்வளவு தூரம் அறிவித்த பின்னும்) அவர்கள் (நம்பிக்கை கொள்ளாது) புறக்கணித்தால், நீர் கூறுவீராக: ‘‘ஆது, ஸமூது என்னும் மக்களுக்கு ஏற்பட்ட இடி முழக்கம் போன்றதொரு இடி முழக்கத்தையே நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறேன்

[14] அவர்களிடத்தில் (நமது பல) தூதர்கள் அவர்களுக்கு முன்னும் பின்னுமாக வந்து, (அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ்வைத் தவிர மற்ற எதையும் வணங்காதீர்கள்'' என்று கூறினர். அதற்கு அவர்கள், ‘‘எங்கள் இறைவன் (மெய்யாகவே எங்களுக்கு ஒரு தூதரை அனுப்ப) விரும்பியிருந்தால், வானவர்களையே (தூதர்களாக) இறக்கி வைத்திருப்பான். ஆகவே, நிச்சயமாக நாங்கள், நீங்கள் கொண்டு வந்த (இத்தூ)தை நிராகரிக்கிறோம்'' என்று கூறினார்கள்

[15] ஆது என்னும் மக்களோ, பூமியில் நியாயமின்றிப் பெருமைகொண்டு, எங்களைவிட பலசாலியாரென்று கூறினார்கள். அவர்களைப் படைத்த அல்லாஹ் நிச்சயமாக அவர்களைவிட பலசாலி என்பதை அவர்கள் கவனித்திருக்க வேண்டாமா? (எனினும்,) அவர்கள் நமது (இத்தகைய) அத்தாட்சிகளையும் (தர்க்கித்து) நிராகரித்துக் கொண்டே இருந்தார்கள்

[16] ஆகவே, நாம் அவர்கள் மீது (வந்த வேதனையின்) கெட்ட நாள்களில் கொடிய புயல் காற்றை அனுப்பி, இழிவு தரும் வேதனையை இந்த உலகத்திலேயே அவர்கள் சுவைக்கும்படி செய்தோம். (அவர்களுக்கு) மறுமையிலுள்ள வேதனையோ, (இதைவிட) இழிவு தரக்கூடியதாகும். (அங்கு எவராலும்) அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்

[17] ஸமூது என்னும் மக்களோ, அவர்களுக்கும் நாம் (நம் தூதரை அனுப்பி) நேரான வழியை அறிவித்தோம். எனினும், அவர்களும் நேரான வழியில் செல்லாது குருடராய் இருப்பதையே விரும்பினார்கள். ஆகவே, அவர்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயலின் காரணமாக இழிவான வேதனையைக் கொண்டுள்ள இடி முழக்கம் அவர்களைப் பிடித்துக் கொண்டது

[18] அவர்களில் நம்பிக்கை கொண்டு (பாவத்திலிருந்து) விலகிக் கொண்டவர்களை நாம் பாதுகாத்துக் கொண்டோம்

[19] அல்லாஹ்வுடைய எதிரிகளை நரகத்தின் பக்கம் ஒன்று சேர்க்கப்படும் நாளில் (அதன் சமீபமாக வந்ததும்) அவர்கள் (விசாரணைக்காக குழுக்கள் குழுக்களாக) பிரித்து நிறுத்தப்படுவார்கள்

[20] அச்சமயம் (பாவம் செய்த) அவர்களுக்கு விரோதமாக அவர்களுடைய செவிகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய (உடல்) தோல்களும் அவர்கள் (அவற்றின் மூலம்) செய்தவற்றைப் பற்றி சாட்சி கூறும்

[21] அதற்கவர்கள், தங்கள் தோல்களை நோக்கி, ‘‘எங்களுக்கு விரோதமாக நீங்கள் ஏன் சாட்சியம் கூறினீர்கள்?'' என்று கேட்பார்கள். அதற்கு அவை, ‘‘எல்லா பொருள்களையும் பேசும்படி செய்கின்ற அல்லாஹ்வே எங்களையும் பேசும்படி செய்தான். அவன்தான் உங்களை முதல் முறையாகவும் படைத்தான். (இறந்த) பின்னரும் நீங்கள் அவனிடமே கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள்'' என்றும் அவை கூறும்

[22] உங்கள் செவிகளும், உங்கள் கண்களும், உங்கள் தோல்களும் உங்களுக்கு எதிராக சாட்சியம் கூறாமல் இருக்க, நீங்கள் (உங்கள் பாவங்களை அவற்றை விட்டும்) மறைக்க முடியவில்லை. எனினும், நீங்கள் செய்பவற்றில் அதிகமானவற்றை அல்லாஹ் அறியவே மாட்டான் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்கள்

[23] நீங்கள் உங்கள் இறைவனைப் பற்றி எண்ணிய உங்கள் (இத்தவறான) எண்ணம்தான் உங்களை அழித்துவிட்டது. ஆதலால், நீங்கள் நஷ்டமடைந்தவர்களாகிவிட்டீர்கள்

[24] ஆகவே, அவர்கள் (ஏதும் பேசாது சிரமங்களைச்) சகித்துக் கொண்டிருந்த போதிலும், அவர்களுக்கு தங்குமிடம் நரகம்தான். அவர்கள் மன்னிப்புக் கோரியபோதிலும், அவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள்

[25] நாம் அவர்களுக்கு, இணைபிரியாத (சில கெட்ட) தோழர்களை இணைத்து விட்டோம். அவர்கள், அவர்களுக்கு முன்னும் பின்னுமுள்ள (தீய காரியங்கள்) அனைத்தையும் அவர்களுக்கு அழகாகக் காண்பித்து விட்டார்கள். ஆகவே, இவர்கள் மீதும், இவர்களுக்கு முன்சென்ற (இவர்களைப் போன்ற பல) மனித, ஜின் கூட்டத்தினர் மீதும் (அவர்கள் தண்டனைக்குள்ளாவார்கள் என்ற) நம் வாக்கு உறுதியாகிவிட்டது. நிச்சயமாக இவர்கள் (அனைவரும்) நஷ்டமடைந்து விட்டனர்

[26] நிராகரிப்பவர்கள் (மற்றவர்களை நோக்கி) நீங்கள் ‘‘இந்த குர்ஆனை செவிமடுக்காதீர்கள். (எவர் அதை ஓதியபோதிலும் நீங்கள் அச்சமயம் சப்தமிட்டு) அதில் குழப்பம் உண்டு பண்ணுங்கள். அதனால், நீங்கள் (அவர்களை) வென்று விடுவீர்கள்'' என்றும் கூறினார்கள்

[27] ஆகவே, நிச்சயமாக இந்நிராகரிப்பவர்கள் கடினமான வேதனையைச் சுவைக்கும்படி செய்வோம். நிச்சயமாக நாம் இவர்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயல்களைவிட மிக தீய (கொடிய) வேதனையைக் கூலியாக அவர்களுக்குக் கொடுத்தே தீருவோம்

[28] அல்லாஹ்வுடைய (இந்த) எதிரிகளுக்கு, (இத்தகைய) நரகம்தான் கூலி ஆகும். நம் வசனங்களை இவ்வாறு அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததற்குக் கூலியாக இவர்களுக்கு நிலையான வீடு நரகத்தில்தான் இருக்கிறது

[29] நிராகரித்தவர்கள் அந்நாளில் (இறைவனை நோக்கி,) ‘‘எங்கள் இறைவனே! எங்களை வழிகெடுத்த மனிதர்களையும், ஜின்களையும் எங்களுக்கு நீ காண்பி. அவர்கள் இழிவுக்குள்ளாகும் பொருட்டு, நாங்கள் அவர்களை எங்கள் கால்களுக்குக் கீழாக்கி மிதிப்போம்'' என்று கூறுவார்கள்

[30] எனினும், எவர்கள் எங்கள் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து இருந்தார்களோ அவர்களிடம் நிச்சயமாக வானவர்கள் வந்து (அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் (ஒன்றுக்கும்) பயப்படாதீர்கள்; கவலைப்படாதீர்கள். உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தைக் கொண்டு சந்தோஷமடையுங்கள்'' என்றும்

[31] ‘‘நாங்கள் அவ்வுலக வாழ்க்கையிலும் உங்களுக்கு நண்பர்களாக இருந்தோம்; மறுமையிலும் (நாங்கள் உங்களுக்கு நண்பர்களே). சொர்க்கத்தில் உங்கள் மனம் விரும்பியதெல்லாம் உங்களுக்கு உண்டு. அதில் நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும்

[32] ‘‘பாவங்களை மன்னித்து மகா கருணை செய்பவனின் விருந்தாளியாக (அதில் தங்கி) இருங்கள்'' என்றும் (வானவர்கள்) கூறுவார்கள்

[33] எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து(த் தானும்) நற்செயல்களைச் செய்து ‘‘நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்கு முற்றிலும் பணிந்து வழிப்பட்டவர்களில் ஒருவன்'' என்றும் கூறுகிறாரோ, அவரைவிட அழகான வார்த்தை கூறுபவர் யார்

[34] நன்மையும் தீமையும் சமமாகிவிடாது. (ஆதலால், நபியே! தீமையை) நீர் மிக அழகியதைக் கொண்டு தடுத்துக் கொள்வீராக. அவ்வாறாயின், உமது கொடிய எதிரியை அதே சமயத்தில் உமது உண்மையான, மிக்க நெருங்கிய நண்பனைப் போல் காண்பீர்

[35] பொறுமையுடையவர்களைத் தவிர மற்றெவரும் இதை அடைய மாட்டார்கள். மேலும், பெரும் பாக்கியமுடையவர்களைத் தவிர மற்றெவரும் இதை அடைய மாட்டார்கள்

[36] (நபியே!) ஷைத்தானுடைய ஓர் ஊசலாட்டம் (தீய காரியங்களைச் செய்யும்படி) உம்மைத் தூண்டும் சமயத்தில் (உம்மை அதிலிருந்து) பாதுகாத்துக் கொள்ளும்படி அல்லாஹ்விடத்தில் நீர் கோருவீராக! நிச்சயமாக அவன்தான் (அனைத்தையும்) செவியுறுபவன், நன்கறிபவன். (ஆதலால், அவன் உம்மை பாதுகாத்துக் கொள்வான்)

[37] ‘‘இரவும், பகலும், சூரியனும், சந்திரனும் அவனுடைய (வல்லமையை அறிவிப்பதற்குரிய) அத்தாட்சிகளில் உள்ளவை. ஆகவே, மெய்யாகவே நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குபவர்களாக இருந்தால் சூரியனுக்கும் (சிரம் பணியாதீர்கள்;) சந்திரனுக்கும் சிரம் பணியாதீர்கள். இவற்றை படைத்தவன் எவனோ அவனுக்கே சிரம் பணியுங்கள்'' (என்று நபியே! கூறுவீராக)

[38] ஆகவே (நபியே!) இவர்கள் கர்வம் (கொண்டு இறைவனை வணங்காது விலகிக்) கொள்வார்களாயின், (அதனால் அவனுக்கு ஒரு நஷ்டமும் இல்லை.) உங்கள் இறைவனிடத்தில் உள்ளவர்(களாகிய வானவர்)கள் இரவும் பகலும் அவனைத் துதி செய்து புகழ்ந்துகொண்டே இருக்கின்றனர். (இதில்) அவர்கள் சோர்வடைவதே இல்லை

[39] (நபியே! பயிர்கள் கருகி) பூமி வெட்ட வெளியாக இருப்பதை நீர்காண்பதும் மெய்யாகவே அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். அதன் மீது நாம் மழையை இறக்கினால், அது (செடி கொடிகளால்) பசுமையாகி வளர்கிறது. (இவ்வாறு இறந்து போன) பூமியை எவன் உயிர்ப்பிக்கிறானோ அவன்தான் மரணித்தவர்களையும் மெய்யாகவே உயிர்ப்பிப்பான். நிச்சயமாக அவன் (அனைத்தின் மீதும்) பேராற்றலுடையவன்

[40] நிச்சயமாக எவர்கள் நம் வசனங்களில் தப்பர்த்தங்களை(த் தங்கள் தீய செயல்களுக்கு ஆதாரமாக)க் கற்பிக்கிறார்களோ, அவர்களுடைய செயல்களில் (ஒன்றுமே) நிச்சயமாக நமக்குமறைந்து விடாது. மறுமையில் நரகத்தில் எறியப்படுபவன் நல்லவனா? அல்லது பயமற்றவனாக(ச் சொர்க்கத்திற்கு) வருபவன் மேலானவனா? (மனிதர்களே!) நீங்கள் விரும்பியதைச் செய்து கொண்டிருங்கள். நீங்கள் செய்பவற்றை நிச்சயமாக அவன் உற்று நோக்குகிறான்

[41] நிச்சயமாக எவர்கள் தங்களிடம் வந்த நல்லுபதேசத்தை நிராகரிக்கிறார்களோ (அவர்கள் மறுமையில் தங்கள் நிலைமையை உணர்ந்து கொள்வார்கள். ஏனென்றால்) நிச்சயமாக இது மிக கண்ணியமான வேதமாகும்

[42] இதற்கு முன்னும் சரி, இதற்குப் பின்னும் சரி உண்மைக்கு மாறான ஒரு விஷயமும் (திரு குர்ஆனாகிய) இதை (அணுகவே) அணுகாது. மிக்க புகழும் ஞானமும் உடையவனால் (இது) இறக்கப்பட்டது

[43] (நபியே!) உமக்கு முன் வந்த தூதர்களுக்குக் கூறப்பட்டது எதுவோ, அதைத் தவிர (வேறொன்றும் புதிதாக) உமக்குக் கூறப்படவில்லை. (ஆகவே, இவர்கள் கூறும் நிந்தனைகளைப் பற்றி நீர் கவலைப்படாதீர்.) நிச்சயமாக உமது இறைவன் (நல்லவர்களுக்கு) மிக மன்னிப்புடையவன், (தீயவர்களுக்கு) துன்புறுத்தும் வேதனையுடையவன்

[44] இதை அரபி அல்லாத (வேறு) மொழியில் உள்ள குர்ஆனாக இறக்கி வைத்திருந்தால், (இந்த மக்காவாசிகள்) இதனுடைய வசனங்கள் (நமது அரபி மொழியில்) விவரித்துக் கூறப்பட்டிருக்க வேண்டாமா? என்றும், இதுவோ அரபி அல்லாத (வேறு) மொழி (நாமோ அதை அறியாத அரபிகள்) என்றும் கூறுவார்கள். (நபியே!) கூறுவீராக: ‘‘இது (அவர்களுடைய அரபி மொழியில் இருப்பதுடன்) நம்பிக்கை கொண்டவர்களுக்கு நேரான வழியாகவும், (சந்தேக நோயுள்ள உள்ளங்களுக்கு) நல்லதொரு பரிகாரமாகவும் இருக்கிறது. எவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுடைய காதுகளுக்கு செவிடாகவும், அவர்களுடைய பார்வையை போக்கக் கூடியதாகவும் இருக்கிறது. அவர்கள் (உமது சமீபத்திலிருந்த போதிலும்) வெகு தொலை தூரத்திலிருந்து அழைக்கப்படுகிறார்கள் (போல் இருக்கின்றது)

[45] நிச்சயமாக நாம் மூஸாவுக்கு (தவ்றாத்) வேதத்தைக் கொடுத்திருந்தோம். (அவருடைய மக்களால்) அதில் பல பிரிவுகள் உண்டு பண்ணப்பட்டது. (‘‘அவர்களை விசாரித்துத் தீர்ப்புக் கூறுவது மறுமையில்தான்' என்று) உமது இறைவனின் வாக்கு முன்னதாகவே ஏற்பட்டிருக்காவிடில், அவர்களுடைய காரியம் (இதுவரை) முடிந்தே போயிருக்கும். நிச்சயமாக இவர்களும் அதில் பெரும் சந்தேகத்தில் ஆழ்ந்து கிடக்கின்றனர்

[46] எவர் நன்மைகள் செய்கிறாரோ, அது அவருக்கே நன்று. எவர் பாவம் செய்கிறாரோ, அது அவருக்கே கேடாகும். உமது இறைவன் (தன்) அடியார்கள் எவருக்கும் அறவே தீங்கு செய்வதில்லை. (அவர்கள்தான் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கின்றனர்)

[47] (நபியே! ‘‘விசாரணைக் காலமாகிய மறுமை எப்பொழுது வரும்?'' என அவர்கள் அடிக்கடி உம்மிடம் கேட்கின்றனர். அதற்கு நீர் கூறுவீராக:) மறுமையைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே விடப்பட்டுள்ளது. (ஆகவே, அதைப் பற்றி நான் ஒன்றும் கூறுவதற்கில்லை.) அவன் அறியாமல் ஒரு கனி அதன் மொட்டிலிருந்து வெளிப்படுவதில்லை; ஒரு பெண் கர்ப்பமாவதுமில்லை; பிரசவிப்பதுமில்லை. (ஆகவே, அவை அனைத்தையும் அவனே நன்கறிவான். விசாரணைக் காலமாகிய) அந்நாளில் (இறைவன் அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் எனக்கு இணையாக்கியவை(யாகிய பொய்யான தெய்வங்கள்) எங்கே?'' என்று கேட்பான். அதற்கு அவர்கள் (எங்கள் இறைவனே!) அவ்வாறு சாட்சி கூறுபவர்கள் ‘‘எங்களில் ஒருவருமே (இன்றைய தினம்) இல்லையென்று உனக்கு அறிவித்து விடுகிறோம்'' என்று கூறுவார்கள்

[48] இதற்கு முன்னர் அவர்கள் (இறைவனென) அழைத்துக் கொண்டிருந்தவையெல்லாம் அவர்களை விட்டும் மறைந்து போய்விடும். தங்களுக்குத் தப்ப வழியில்லை என்பதையும் அவர்கள் நன்கு அறிந்துகொள்வார்கள்

[49] (பிரார்த்தனை செய்து) நன்மையைக் கேட்பதில் மனிதன் (ஒருபொழுதும்) சடைவதில்லை. எனினும், அவனை ஒரு தீங்கு அணுகினால் அவன் மனமுடைந்து நம்பிக்கையிழந்து விடுகிறான்

[50] மனிதனைப் பிடித்திருந்த துன்பத்தை நீக்கிய பின்னர், நம் அருளை அவன் சுவைக்கும்படி நாம் செய்தாலோ இது எனக்கு வரவேண்டியதாக இருந்ததே வந்துள்ளது. மறுமை ஏற்படும் என்று நான் நம்பவேயில்லை. அவ்வாறே (மறுமை ஏற்பட்டு) எனது இறைவனிடம் நான் கொண்டு போகப்பட்டாலும், அவனிடத்திலும் நிச்சயமாக எனக்கு நன்மையே கிடைக்கும் என்று கூறுகிறான். ஆனால், எவர்கள் நிராகரிக்கிறார்களோ, அவர்கள் செய்த (தீய) காரியங்களை அந்நாளில் நாம் நிச்சயமாக அவர்களுக்குத் தெளிவாக எடுத்துக் காண்பிப்போம். கடினமான வேதனையை அவர்கள் சுவைக்கும்படியும் நிச்சயமாக நாம் செய்வோம்

[51] மனிதனுக்கு நாம் (ஒரு) அருள் புரிந்தால், அவன் (நமக்கு நன்றி செலுத்துவதற்குப் பதிலாக நம்மையும் நம் கட்டளைகளையும்) புறக்கணித்து (நம்மை விட்டும்) விலகி விடுகிறான். அவனை ஒரு தீங்கு தொடர்ந்தாலோ, வெகு அகல-நீளமான பிரார்த்தனை செய்(து அதை நீக்குமாறு நம்மிடம் கோரு)கிறான்

[52] ‘‘(உண்மையான வேதமாகிய) இது அல்லாஹ்விடமிருந்து வந்திருந்தும், அதை நீங்கள் நிராகரித்து விட்டால் (அதன் மீது) கடினமான விரோதத்திலிருக்கும் உங்களைவிட வெகுதூரமான வழிகேட்டிலிருப்பவர்கள் யார்? என்பதை நீங்கள் கவனித்தீர்களா?'' என்று (நபியே!) நீர் (அவர்களைக்) கேட்பீராக

[53] நிச்சயமாக இவ்வேதம் உண்மையானதுதான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு, நம் அத்தாட்சிகளை (உலகத்தின்) பல பாகங்களிலும் காண்பிப்பதுடன், அவர்களுக்குள்ளாகவும் அதிசீக்கிரத்தில் நாம் (நமது அத்தாட்சிகளைக்) காண்பிப்போம். (நபியே!) உமது இறைவன் நிச்சயமாக அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது (உமக்கு) போதாதா

[54] நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனைச் சந்திப்பதைப் பற்றியும் சந்தேகத்தில் இருக்கிறார்கள் என்பதை நீர் அறிந்துகொள்வீராக. அவன் எல்லாவற்றையும் (தன் ஞானத்தால்) சூழ்ந்து (அறிந்து) கொண்டுமிருக்கிறான் என்பதையும் நிச்சயமாக (நபியே! நீர்) அறிந்துகொள்வீராக

அஷ்ஷூரா

Surah 42

[1] ஹா மீம். அய்ன் ஸீன் காஃப்

[2] ஹா மீம். அய்ன் ஸீன் காஃப்

[3] (நபியே! இந்த அத்தியாயம் உமக்கு அருளப்படுகிறது.) இவ்வாறே உமக்கும், உமக்கு முன்னிருந்தவர்களுக்கும் அனைவரையும் மிகைத்தவனும், மிக்க ஞானவானுமாகிய அல்லாஹ் (தன் வசனங்களை) வஹ்யி மூலம் அறிவித்து வந்திருக்கிறான்

[4] வானங்களில் இருப்பவையும், பூமியில் இருப்பவையும் அவனுக்கே சொந்தமானவை. (அனைவரையும் விட) அவன் மிக மேலானவன்; மிக மகத்தானவன்

[5] (மனிதர்கள் செய்யும் பாவங்களின் காரணமாக) அவர்கள் மீது வானம் வெடித்து (விழுந்து) விடவும் கூடும். (அந்நேரத்தில்) வானவர்களும் (பயந்து) தங்கள் இறைவனைப் புகழ்ந்து துதிசெய்து, பூமியில் உள்ளவர்க(ளின் குற்றங்க)ளை மன்னிக்குமாறு கோருவார்கள். (மனிதர்கள் பாவத்திலிருந்து விலகி மன்னிப்பைக் கோரினால்) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன், மகா கருணையுடையவன் என்பதை (நபியே! நீர்) அறிந்து கொள்வீராக

[6] எவர்கள், அவனையன்றி (மற்றவர்களைத்) தங்களுக்குப் பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டார்களோ, அவர்களை அல்லாஹ் கண்காணிக்கிறான். (நபியே!) அவர்களுக்கு நீர் பொறுப்பாளரல்ல

[7] (நபியே!) இவ்வாறே இந்த குர்ஆனை அரபி மொழியில் நாம் வஹ்யி மூலம் உமக்கு அறிவித்தோம். (இதைக் கொண்டு, அரபி மொழி பேசும் மக்காவாசிகளாகிய) தாய்நாட்டாரையும், அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிப்பவர்களையும், நீர் எச்சரித்து, அனைவரையும் (விசாரணைக்காக) ஒன்று சேர்க்கக்கூடிய நாளைப் பற்றி அச்சமூட்டுவீராக! அந்நாள் வருவதில் சந்தேகமே இல்லை. (அந்நாளில்) ஒரு கூட்டத்தார் சொர்க்கத்திற்கும், ஒரு கூட்டத்தார் நரகத்திற்கும் செல்வார்கள்

[8] அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் அனைவரையுமே (ஒரே மார்க்கத்தைப் பின்பற்றும்) ஒரே சமூகத்தினராக்கி இருப்பான். (எனினும், அவர்கள் அனைவருடைய நடத்தையும் ஒரேவிதமாக இருக்கவில்லை.) ஆகவே, தான் விரும்பியவர்களையே தன் அருளில் புகுத்துகிறான். அநியாயக்காரர்(களைத் தப்பான வழியில் விட்டுவிட்டான். அவர்)களை (அந்நாளில்) பாதுகாப்பவர்களும் இல்லை; (அவர்களுக்கு) உதவி செய்பவர்களும் இல்லை

[9] (நபியே!) அல்லாஹ்வையன்றி (மற்றவர்களைத் தங்கள்) பாதுகாவலர்களாக அவர்கள் எடுத்துக் கொண்டனரா? (அவ்வாறாயின் அது முற்றிலும் தவறாகும்.) அல்லாஹ் (ஒருவன்)தான் உண்மையான பாதுகாவலன். அவனே மரணித்தவர்களை உயிர்ப்பிப்பான். அவன்தான் அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன்

[10] (நபியே! அவர்களை நோக்கி நீர் கூறுவீராக:) ‘‘இதில் நீங்கள் எவ்விஷயத்தைப் பற்றித் தர்க்கித்துக் கொள்கிறீர்களோ, அதன் தீர்ப்பு அல்லாஹ்விடமே இருக்கிறது. அந்த அல்லாஹ்தான் எனது இறைவன். அவனையே நான் முற்றிலும் நம்பி அவனையே நான் முன்னோக்கி இருக்கிறேன்

[11] அவனே வானங்களையும் பூமியையும் படைத்தவன். உங்களிலிருந்தே (உங்கள்) மனைவிகளையும் அவன் உங்களுக்காக படைக்கிறான். (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) கால்நடைகளையும் ஜோடி ஜோடியாக படைத்து, உங்களைப் பூமியின் பல பாகங்களிலும் பரவிப் பெருகச் செய்கிறான். அவனுக்கு ஒப்பானது ஒன்றுமில்லை. அவன் (அனைத்தையும்) செவியுறுபவன், உற்று நோக்குபவன் ஆவான்

[12] வானங்கள், பூமியின் (பொக்கிஷங்களின்) சாவிகள் அவனிடமே இருக்கின்றன. அவன் விரும்பியவர்களுக்கு உணவை விரிவாக்குகிறான். (அவன் விரும்பியவர்களுக்குச்) சுருக்கி விடுகிறான். நிச்சயமாக அவன் சகல வஸ்துக்களையும் (மக்களின் தன்மைகளையும்) நன்கறிந்தவன். (ஆகவே, அவர்களின் தகுதிக்குத் தக்கவாறு கொடுக்கிறான்)

[13] (நம்பிக்கையாளர்களே!) நூஹ்வுக்கு எதை அவன் உபதேசித்தானோ அதையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கி இருக்கிறான். ஆகவே, (நபியே!) நாம் உங்களுக்கு வஹ்யி மூலம் அறிவிப்பதும், இப்றாஹீம், மூஸா, ஈஸா முதலியவர்களுக்கு நாம் உபதேசித்ததும் (என்னவென்றால், ‘‘நீங்கள் ஒருமித்து ஓரிறை கொள்கையுடைய உண்மையான) மார்க்கத்தை நிலைநிறுத்துங்கள். அதில் (பல பிரிவுகளாகப்) பிரிவினை செய்து கொள்ளாதீர்கள் என்பதேயாகும். ஆகவே, அவர்களை எதன் பக்கம் நீங்கள் அழைக்கிறீர்களோ அ(ந்த ஓரிறை கொள்கையான)து, இணைவைத்து வணங்கும் அவர்களுக்குப் பெரும் பளுவாகத் தோன்றும். அல்லாஹ், தான் விரும்பியவர்களையே தன் பக்கம் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். தன்னை முன்னோக்கியவர்களுக்கே தன்னிடம் வரும் வழியையும் அவன் அறிவிக்கிறான்

[14] அவர்கள் தங்களிடம் (வேத) ஞானம் வந்ததன் பின்னரும், தங்களுக்கு இடையிலுள்ள பொறாமையின் காரணமாகவே தவிர (உண்மையிலிருந்து) அவர்கள் பிரிந்துவிடவில்லை. (அவர்களுக்குத் தீர்ப்பளிப்பது) ஒரு குறிப்பிட்ட தவணையில்தான் என்று உமது இறைவனுடைய வாக்கு முன்னதாகவே ஏற்பட்டிருக்காவிடில், அவர்களுடைய காரியம் (இதுவரை)முடிவுபெற்றே இருக்கும். மேலும், அவர்களுக்குப் பின்னர், எவர்கள் அவ்வேதத்திற்கு வாரிசுகளாக ஆக்கப்பட்டார்களோ அவர்களும், நிச்சயமாக இதில் பெரும் சந்தேகத்தில்தான் ஆழ்ந்து கிடக்கின்றனர்

[15] ஆகவே, (நபியே!) அ(ந்)த (உண்மையான மார்க்கத்தி)னளவில் (அவர்களை) நீர் அழைப்பீராக, உமக்கு ஏவப்பட்டபடி நீர் உறுதியாக இருப்பீராக, அவர்களுடைய விருப்பங்களை நீர் பின்பற்றாதீர். மேலும், (அவர்களை நோக்கிக்) கூறுவீராக: அல்லாஹ் வேதமென்று எதை இறக்கி வைத்தானோ அதையே நான் நம்பிக்கை கொள்கிறேன். உங்களுக்கிடையில் (உள்ள விவகாரங்களை) நீதமாகத் தீர்ப்பளிக்கும்படியும் நான் ஏவப்பட்டுள்ளேன். அல்லாஹ்தான் எங்கள் இறைவனும் உங்கள் இறைவனுமாவான். எங்கள் செயல்களுக்குரிய பலன் எங்களுக்குக் கிடைக்கும்; உங்கள் செயல்களுக்குரிய பலன் உங்களுக்குக் கிடைக்கும். எங்களுக்கும் உங்களுக்குமிடையில் ஒரு தர்க்கமும் வேண்டாம். நம் அனைவரையும் (மறுமையில்) அல்லாஹ் ஒன்று சேர்ப்பான். அவனிடமே (நாம் அனைவரும்) செல்ல வேண்டியதிருக்கிறது

[16] எவர்கள் (நம்பிக்கை கொண்டு) அல்லாஹ்வுக்குப் பதில் கூறிய பின்னர், அவனைப் பற்றி (வீணாக)த் தர்க்கித்து(க் குழப்பத்தை உண்டு பண்ணி)க் கொண்டிருக்கிறார்களோ, அவர்களுடைய தர்க்கம் அவர்களுடைய இறைவனிடத்தில் பயனற்றதாகும். அதனால், அவர்கள் மீது (அவனுடைய) கோபமும் ஏற்பட்டு கடினமான வேதனையும் அவர்களுக்குக் கிடைக்கும்

[17] அல்லாஹ்தான் முற்றிலும் உண்மையுடன் கூடிய இவ்வேதத்தை இறக்கி வைத்தான். மேலும், அவனே (நீங்கள் நீதமாக நடந்துகொள்ள) தராசையும் படைத்தான். (நபியே!) மறுமை நெருங்கிவிட்டதென்பதை நீர் அறிவீராக

[18] மறுமையை நம்பாதவர்கள் அதைப் பற்றி (எப்பொழுது வரும், எப்பொழுது வரும் என்று) அவசரப்படுகின்றனர். ஆயினும், எவர்கள் அதை நம்பியிருக்கிறார்களோ அவர்கள் அதைப் பற்றிப் பயந்து கொண்டிருப்பதுடன், நிச்சயமாக அது (வருவது) உண்மைதான் என்றும் திட்டமாக அறிவார்கள். எவர்கள் மறுமையைப் பற்றிச் சந்தேகத்தில் இருக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக வெகு தூரமானதொரு வழிகேட்டில்தான் இருக்கிறார்கள் என்பதை (நபியே!) அறிந்து கொள்வீராக

[19] அல்லாஹ் தன் அடியார்களை அன்பாகக் கவனித்து வருபவன் ஆகவே, அவன் நாடியவர்களுக்கு (வேண்டிய) உணவளித்து வருகிறான். அவன்தான் மிக பலமுள்ளவனும் (அனைவரையும்) மிகைத்தவனும் ஆவான்

[20] எவன் மறுமைக்காகப் பயிரிட விரும்புகிறானோ, அவனுடைய பயிரின் விளைச்சலை நாம் அதிகப்படுத்துகிறோம். எவன் இம்மைக்காக (மட்டும்) பயிரிட விரும்புகிறானோ, நாம் அவனுக்கும் அதிலிருந்து ஓரளவு கொடுக்கிறோம். எனினும், அவனுக்கு மறுமையில் ஒரு பாக்கியமுமில்லை

[21] அல்லாஹ் அனுமதிக்காத எதையும் அவர்களுக்கு மார்க்கமாக்கி வைக்கக்கூடிய தெய்வங்களும் அவர்களுக்கு இருக்கின்றனவா? (ஒவ்வொரு செயலுக்கும் தக்க) கூலி கொடுப்பது மறுமையில்தான் என்று இறைவனுடைய தீர்மானம் ஏற்பட்டிருக்காவிடில், (இதுவரை) அவர்களுடைய காரியம் முடிவு பெற்றேயிருக்கும். நிச்சயமாக (இத்தகைய) அநியாயக்காரர்களுக்கு மிக்க துன்புறுத்தும் வேதனை உண்டு

[22] (நபியே!) வரம்பு மீறிய இவர்கள், தங்கள் செயலின் காரணமாக(த் தங்களுக்கு என்ன தண்டனை கிடைக்குமோ என்று) பயந்து கொண்டிருப்பதை (அந்நாளில்) நீர் காண்பீர். அது அவர்களுக்குக் கிடைத்தே தீரும். எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்கள், சொர்க்கங்களில் உள்ள பூங்காவனங்களில் இருப்பார்கள். அவர்கள் விரும்பியதெல்லாம் அவர்கள் இறைவனிடம் அவர்களுக்குக் கிடைக்கும். இதுதான் மிகப் பெரும் சிறப்பாகும்

[23] நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்த தன் (நல்) அடியார்களுக்கு அல்லாஹ் நற்செய்தி கூறுவதும் இதுவே. (நபியே!) நீர் கூறுவீராக: ‘‘இதற்காக நான் ஒரு கூலியும் கேட்கவில்லை, உறவினர்களை நேசிப்பதைத் தவிர, எவர் நற்செயல்களைத் தேடிக் கொள்கிறாரோ, அவருக்கு நாம் அதில் நன்மையை அதிகரிக்கச் செய்கிறோம். ''நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனும், நன்றியை(யும்) அங்கீகரிப்பவனும் ஆவான்

[24] (நபியே!) அல்லாஹ்வின் மீது நீர் பொய்யைக் கற்பனை செய்து கூறுவதாக அவர்கள் (உம்மைப் பற்றிக்) கூறுகின்றனரா? (அவ்வாறாயின், நம் இவ்வேதத்தை அவர்களுக்கு நீர் ஓதிக்காண்பிக்க முடியாதவாறு) அல்லாஹ் நாடினால், உமது உள்ளத்தின் மீது முத்திரையிட்டு இருப்பான். (ஆகவே, அவர்களுடைய இக்கூற்று முற்றிலும் தவறானதாகும்.) அல்லாஹ்வோ, பொய்யை அழித்துத் தன் வசனங்களைக் கொண்டே உண்மையை உறுதிப்படுத்துவான். நிச்சயமாக அவன், உள்ளங்களில் (ரகசியமாக) உள்ளவற்றையும் நன்கறிந்தவன்

[25] அவன்தான் தன் அடியார்களின் மன்னிப்புக்கோரலை அங்கீகரித்துக் குற்றங்களையும் மன்னித்து விடுகிறான். நீங்கள் செய்பவற்றையும் அவன் நன்கறிகிறான்

[26] நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்தவர்களின் பிரார்த்தனைகளையும் அங்கீகரித்து, அவர்களுக்குத் தன் அருளை அதிகப்படுத்துகிறான். நிராகரிப்பவர்களுக்குக் கடினமான வேதனைதான் கிடைக்கும்

[27] அல்லாஹ் தனது (எல்லா) அடியார்களுக்கு(ம் கூடுதல் குறைவின்றி) பொருளை விரித்து(க் கொடுத்து) விட்டால், அவர்கள் பூமியில் அநியாயம் செய்யத் தலைப்பட்டு விடுவார்கள். ஆகவே, (அவர்களின் தகுதிக்குத் தக்கவாறு)தான் விரும்பிய அளவே (அவர்களுக்குக்) கொடுத்து வருகிறான். நிச்சயமாக அவன் தன் அடியார்களின் தன்மையை நன்கறிந்தவனும், (அவர்களுடைய செயலை) உற்று நோக்குபவனும் ஆவான்

[28] (மனிதர்கள்) நம்பிக்கையிழந்ததன் பின்னரும், அவன்தான் மழையை இறக்கி வைத்துத் தன் அருளை (பூமியில்) பரப்புகிறான். அவனே பாதுகாவலன்; என்றும் புகழுக்குரியவன்

[29] வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதும், அவற்றில் கால்நடை (முதலிய பல உயிரினங்)களை (ஆங்காங்கு) பரப்பி வைத்திருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைகளாகும். ஆகவே, அவன் விரும்பியபோது (மரணித்த பின்னரும்) அவற்றை ஒன்று சேர்க்க ஆற்றுலுடையவன் ஆவான்

[30] ஒரு தீங்கு உங்களை வந்தடைவதெல்லாம், உங்கள் கரங்கள் தேடிக் கொண்ட (தீய) செயலின் காரணமாகவேதான். ஆயினும், (அவற்றில்) அனேகமானவற்றை அவன் மன்னித்தும் விடுகிறான்

[31] நீங்கள் பூமியில் (ஓடி ஒளிந்து) அவனை தோற்கடித்துவிட முடியாது. மேலும், அல்லாஹ்வையன்றி (உங்களை) காப்பாற்றுபவனும் (உங்களுக்கு) இல்லை; உதவி செய்பவனும் (உங்களுக்கு) இல்லை

[32] கடலில் செல்லும் மலைகளைப் போன்ற கப்பல்களும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும்

[33] அவன் விரும்பினால், காற்றை நிறுத்திவிடுவான். கப்பல்கள் கடலில் இருந்தவாறே அசையாது நின்றுவிடும். (அத்தகைய சிரமங்களை அனுபவித்துச்) சகிப்பவர்களும் (கரை சேர்ந்தபின், மகிழ்ச்சியடைந்து இறைவனுக்கு) நன்றி செலுத்துபவர்களும் ஆகிய அனைவருக்கும் நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகளில் இருக்கின்றன

[34] அல்லது அவர்களின் (தீய) செயலின் காரணமாக, அவற்றை (கடலில்) அழித்திருப்பான். ஆயினும், (அவர்களுடைய தவறுகளில்) அதிகமானவற்றை மன்னித்து விடுகிறான்

[35] அவனுடைய வசனங்களில் (வீணாகத்) தர்க்கிப்பவர்களையும் அவன் நன்கறிவான்; (அவனுடைய வேதனையிலிருந்து) அவர்களுக்கு தப்ப வழி ஏதும் இல்லை

[36] (இங்கு) உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருப்பதெல்லாம் (நிலையற்ற) இவ்வுலக வாழ்க்கைக்குரிய அற்ப இன்பங்களே! நம்பிக்கை கொண்டு, தங்கள் இறைவனையே நம்பியிருப்பவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் உள்ளவையோ மிக்க மேலானவையும் நிலையானவையும் ஆகும்

[37] (அல்லாஹ்வை நம்பிய) அவர்கள் பெரும்பாவமான காரியங்களையும், மானக்கேடான விஷயங்களையும் விட்டு விலகி (இருப்பதுடன், பிறரின் தகாத செயல்களால்) கோபமடையும் சமயத்தில் (கோபமூட்டியவர்களை) மன்னித்து விடுவார்கள்

[38] மேலும், அவர்கள் தங்கள் இறைவனின் கட்டளைகளை அங்கீகரித்துத் தொழுகையையும் நிலை நிறுத்துவார்கள். அவர்களுடைய ஒவ்வொரு காரியத்தையும் தங்களுக்குள் ஆலோசனைக்குக் கொண்டு வருவார்கள். நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றிலிருந்து தானமும் செய்வார்கள்

[39] அவர்களுக்கும் கொடுமை நிகழ்ந்தால், அதற்கு அவர்கள் (சரியான) பழிவாங்கியும் விடுவார்கள்

[40] தீமைக்குக் கூலியாக அதைப்போன்ற தீமையையே செய்வார்கள். (அதற்கு அதிகமாக அல்ல.) எவரேனும் (பிறரின் அநியாயத்தை) மன்னித்து, அவருடன் சமாதானம் செய்து கொண்டால், அவருடைய கூலி அல்லாஹ்வின் மீது (கடமையாக) இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் (இதற்கு மாறாக) அநியாயம் செய்பவர்களை நேசிப்பதில்லை

[41] எவரேனும் (தனக்கிழைக்கப்பட்ட) அநியாயத்திற்கு (அதே அளவு) பழிவாங்கினால், அதனால் அவர் மீது ஒரு குற்றமுமில்லை

[42] குற்றமெல்லாம் அளவு மீறி மனிதர்கள் மீது அநியாயம் செய்து, நியாயமின்றிப் பூமியில் கொடுமை செய்பவர்கள் மீதுதான். இத்தகையவர்களுக்கு மிக்க துன்புறுத்தும் வேதனையுண்டு

[43] எவரேனும் (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக்கொண்டு மன்னித்து விட்டால், நிச்சயமாக இது வீரமிக்க செயலாகும்

[44] எவர்களையேனும் (அவர்களின் பாவத்தின் காரணமாக) அல்லாஹ் அவர்களைத் தவறான வழியில் விட்டுவிட்டால், அதற்குப் பின்னர் அவர்களை பாதுகாப்பவர் ஒருவரும் இருக்கமாட்டார். (நபியே!) வரம்பு மீறி அநியாயம் செய்தவர்கள் வேதனையைக் கண்ணால் கண்ட சமயத்தில் ‘‘இதிலிருந்து தப்ப ஏதேனும் வழி உண்டா?'' என்று அவர்கள் கூறுவதை நீர் காண்பீர்

[45] மேலும், சிறுமைப்பட்டுத் தலை கவிழ்ந்தவர்களாகவும், (வேதனையைக்) கடைக் கண்ணால் பார்த்தவண்ணம் அவர்களை நரகத்தின் முன் கொண்டு வரப்படுவதையும் நீர் காண்பீர். மேலும், நம்பிக்கை கொண்டவர்கள் (அவர்களை நோக்கி) ‘‘எவர்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் (இம்மையில்) நஷ்டத்தைத் தேடிக் கொண்டார்களோ அவர்கள் மறுமையில் நிச்சயமாக முற்றிலும் நஷ்டத்தை அடைந்தவர்கள்தான்'' என்று கூறுவார்கள். நிச்சயமாக (இத்தகைய) அநியாயக்காரர்கள் நிலையான வேதனையில் தங்கிவிடுவார்கள் என்பதை நீர் அறிந்துகொள்வீராக

[46] அல்லாஹ்வையன்றி அவர்களுக்கு உதவி செய்யக்கூடிய நண்பர்கள் (அந்நாளில்) அவர்களுக்கு இருக்கமாட்டார்கள். எவர்களை அல்லாஹ் தவறான வழியில் விட்டுவிடுகிறானோ, அவர்களுக்கு(த் தப்ப) ஒரு வழியுமில்லை

[47] அல்லாஹ்விடமிருந்து தட்டிக்கழிக்க முடியாத ஒரு நாள் வருவதற்கு முன்னதாகவே, உங்கள் இறைவனின் கட்டளைக்குக் கீழ்ப்படியுங்கள். அந்நாளில் உங்களுக்குத் தப்புமிடம் கிடைக்காது. (உங்கள் குற்றத்தை) நீங்கள் மறுக்கவும் முடியாது

[48] (நபியே! இவ்வளவு விவரித்துக் கூறிய பின்னரும்) அவர்கள் (உம்மைப்) புறக்கணித்து விட்டால், (அதைப்பற்றி நீர் கவலைப்படாதீர். ஏனென்றால்,) அவர்களைப் பாதுகாப்பவராக நாம் உம்மை அனுப்பவில்லை. (அவர்களுக்கு நம் தூதை) எடுத்துரைப்பதைத் தவிர (வேறொன்றும்) உம் மீது கடமை அல்ல. நம் அருளை மனிதன் சுவைக்கும்படி செய்தால், அதைப் பற்றி அவன் சந்தோஷப்படுகிறான். அவனுடைய கரங்கள் தேடிக் கொண்ட (தீய) செயலின் காரணமாக அவனுக்கொரு தீங்கு ஏற்பட்டால் நிச்சயமாக மனிதன் நன்றி கெட்டவனாகி (இறைவனையே எதிர்க்க ஆயத்தமாகி) விடுகிறான்

[49] வானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே. இவற்றைத் தவிர, அவன் விரும்பியதையும் படைக்கிறான். அவன் விரும்பியவர்களுக்குப் பெண் சந்ததியை மட்டும் கொடுக்கிறான். அவன் விரும்பியவர்களுக்கு ஆண் சந்ததியை மட்டும் கொடுக்கிறான்

[50] அல்லது ஆணையும் பெண்ணையும் கலந்தே கொடுக்கிறான். அவன் விரும்பியவர்களை (சந்ததியற்ற) மலடாகவும் ஆக்கிவிடுகிறான். நிச்சயமாக அவன் (அவரவர்களின் தகுதியை) நன்கறிந்தவனும், (தான் விரும்பியவாறு செய்ய) பேராற்றலுடையவனும் ஆவான்

[51] அல்லாஹ் (நேருக்குநேர்) பேசுவதற்குரிய தகுதி மனிதரில் ஒருவருக்குமில்லை. எனினும், வஹ்யின் மூலமாகவோ அல்லது திரைக்கு அப்பால் இருந்தோ அல்லது வானவர்களை அனுப்பிவைத்து வஹியின் மூலமாகவோ தனக்கு விருப்பமான கட்டளையை (மனிதனுக்கு) அறிவிக்கிறான். (ஏனென்றால்) நிச்சயமாக அவன் மிக மேலானவனும் மிக ஞானமுடையவனுமாவான்

[52] (நபியே!) இவ்வாறே உமக்கு நம் கட்டளையை வஹ்யின் மூலமாக அறிவிக்கிறோம். (இதற்கு முன்னர்) நீர் வேதம் இன்னதென்றும், நம்பிக்கை இன்னதென்றும் அறிந்தவராக இருக்கவில்லை. ஆயினும், (இந்த வேதத்தை உமக்கு நாம் வஹ்யி மூலம் அறிவித்து) அதை ஒளியாகவும் ஆக்கி, நம் அடியார்களில் நாம் விரும்பியவர்களுக்கு அதைக் கொண்டு நேரான வழியைக் காண்பிக்கிறோம். (நபியே!) நிச்சயமாக நீர் (அதன் மூலம் மக்களுக்கு) நேரான வழியைக் காண்பிக்கிறீர்

[53] அதுதான் அல்லாஹ்வுடைய வழி. வானங்களிலும், பூமியிலும் இருப்பவை அனைத்தும் அவனுக்குச் சொந்தமானவையே. சகல காரியங்களும் அவனிடம் வந்தே தீரும் என்பதை (நபியே!) அறிந்து கொள்வீராக

அஸ்ஸுக்ருஃப்

Surah 43

[1] ஹா மீம்

[2] தெளிவான இந்த வேதத்தின் மீது சத்தியமாக

[3] (மக்காவாசிகளே!) நீங்கள் (எளிதில்) அறிந்துகொள்ளும் பொருட்டே இவ்வேதத்தை (நீங்கள் பேசும் உங்கள்) அரபி மொழியில் அமைத்தோம்

[4] நிச்சயமாக இது நம்மிடத்திலுள்ள ‘லவ்ஹுல் மஹ்ஃபூளில்' பதிவு செய்யப்பட்டுள்ளது. இது (வேதங்களில்) மிக மேலானதும் ஞானம் நிறைந்ததுமாகும்

[5] நீங்கள் வரம்பு மீறிய மக்களாகிவிட்டீர்கள் என்பதற்காக, உங்களுக்கு நல்லுபதேசம் செய்வதை விட்டு முற்றிலும் நாம் உங்களைப் புறக்கணித்து விடுவோமா

[6] (உங்களைப் போன்று சென்றுபோன உங்கள்) முன்னோர்களுக்கும் நாம் எத்தனையோ நபிமார்களை அனுப்பியிருக்கிறோம்

[7] (எனினும்) அவர்களிடம் எந்த நபி வந்தபோதிலும், அவர்கள் அவரைப் பரிகாசம் செய்யாது இருக்கவில்லை

[8] இவர்களை விட மிக பலசாலிகளான அவர்களையெல்லாம் (அவர்களின்பாவத்தின் காரணமாக) நாம் அழித்து விட்டோம். இதற்கு முன் சென்றவர்களின் (இத்தகைய) உதாரணம் (இதில் பல இடங்களில் கூறப்பட்டு முன்னர்) சென்றுவிட்டது

[9] வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார் என்று நீங்கள் அவர்களிடம் கேட்டால் (அனைத்தையும்) மிகைத்தவனும், மிக்க ஞானமுடையவனும்தான் அவற்றை படைத்தான் என்று நிச்சயமாக அவர்கள் (பதில்) கூறுவார்கள். (இதை அறிந்திருந்தும் அவனுக்கு மாறு செய்கின்றனர்)

[10] அவன்தான் பூமியை உங்களுக்கு விரிப்பாக ஆக்கி, அதில் நீங்கள் (விரும்பிய இடத்திற்குச்) செல்லும் பொருட்டு வழிகளையும் அமைத்தான்

[11] அவன்தான் மேகத்திலிருந்து மழையைத் தனது திட்டப்படி இறக்கி வைக்கிறான். (இவ்வாறு செய்கின்ற அல்லாஹ்வாகிய) நாம்தான், பின்னர் (மழையை பொழியச் செய்து) அதைக்கொண்டு வறண்டுபோன பூமியை உயிர்ப்பிக்கிறோம். இவ்வாறே நீங்களும் (இறந்த பின்னர் சமாதிகளிலிருந்து உயிர் கொடுத்து) வெளியேற்றப்படுவீர்கள்

[12] அவன்தான் சகலவற்றையும் (ஆணும் பெண்ணும் கலந்த) ஜோடி ஜோடியாக படைத்து, நீங்கள் வாகனித்து செல்லக்கூடிய கால் நடைகளையும் கப்பல்களையும் அமைத்தான்

[13] ஆகவே, அவற்றின் முதுகுகள் மீது நீங்கள் (ஏறி அமர்ந்து கொள்ளுங்கள்.) திருப்தியாக அதன் மீது நீங்கள் அமர்ந்து கொண்டால், உங்கள் இறைவன் புரிந்த இவ்வருளை நினைத்து, (இதற்காக நீங்கள் அவனை நினைவு கூர்ந்து) ‘‘இதன் மீது (ஏற) சக்தியற்றவர்களாக இருந்த எங்களுக்கு, இதை வசப்படுத்தித்தந்தவன் மிக்க பரிசுத்தவான்'' என்றும்

[14] ‘‘நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்வோம்'' என்றும் கூறுவீர்களாக

[15] (இணைவைத்து வணங்கும்) அவர்கள் இறைவனுடைய அடியார்க(ளில் உள்ள வானவர்க)ளை அவனுடைய (பெண்) சந்ததி என்று கூறுகிறார்கள். நிச்சயமாக (இவ்வாறு கூறுகின்ற) மனிதன் பகிரங்கமாகவே பெரும் நன்றி கெட்டவனாவான்

[16] (இறைவன்) தான் படைத்தவற்றில் தனக்கு மகள்களை எடுத்துக் கொண்டு (தன்னைவிட உங்களை கௌரவப்படுத்துவதற்காக) உங்களுக்கு மட்டும் மகன்களை அளித்தானோ

[17] (அல்லாஹ்வாகிய) ரஹ்மானுக்கு (அவனுடைய சந்ததி என்று) அவர்கள் கற்பனை செய்யும் (பெண்) மக்கள் அவர்களில் எவருக்கும் (பிறந்ததாக) நற்செய்தி கூறப்பட்டால், (பெண் மக்களை இழிவாகக் கருதும்) அவருக்கு ஏற்படும் கோபத்தால் அவருடைய முகம் கருத்து விடுகிறது

[18] என்னே! தன் விவகாரத்தைத் தெளிவாக எடுத்துக் கூற சக்தியற்று ஆபரணத்தில், (சிங்காரிப்பில்) வளர்க்கப்படுபவரையா (-பெண்களையா அவனுக்குச் சந்ததி என்று கூறுகின்றனர்)

[19] தவிர, ரஹ்மானின் அடியார்களாகிய வானவர்களைப் பெண்கள் என்று கூறுகின்றனரே! (நாம்) அவர்களைப் படைக்கும் போது இவர்கள் (நம்முடன் இருந்து) பார்த்துக் கொண்டிருந்தனரா? இவர்கள் (பொய்யாகக் கற்பனை செய்து) கூறுகின்ற இவையெல்லாம் (நம் பதிவுப் புத்தகத்தில்) எழுதப்பட்டு (அதைப் பற்றிக்) கேள்வி கேட்கப்படுவார்கள்

[20] தவிர, ரஹ்மான் (அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ்) நாடியிருந்தால் அவனையன்றி நாம் (வானவர்களை) வணங்கியே இருக்க மாட்டோம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். அவர்கள் இவ்வாறு வீண் தர்க்க வாதம் செய்பவர்களேதவிர, அவர்களுக்கு ஓர் அறிவும் இல்லை

[21] அல்லது ஒரு வேதத்தை இதற்கு முன்னர் நாம் அவர்களுக்குக் கொடுத்திருந்து, அதை அவர்கள் (இதற்கு ஆதாரமாக வைத்து) பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கின்றனரா

[22] மாறாக! இவர்கள் (தங்களுக்கு ஆதாரமாகக்) கூறுவதெல்லாம் ‘‘நாங்கள் எங்கள் மூதாதைகளை ஒரு வழியில் கண்டோம். அவர்களது அடிச்சுவடுகளைப் பின்பற்றியே நாங்கள் நடக்கிறோம்'' என்பதுதான்

[23] இவ்வாறே, உங்களுக்கு முன்னரும் எச்சரிக்கும் தூதரை ஓர் ஊராரிடம் நாம் அனுப்பிவைத்தால், அங்குள்ள தலைவர்கள் ‘‘நாங்கள் எங்கள் மூதாதைகளை ஒரு வழியில் கண்டோம்; அவர்களின் அடிச்சுவடுகளையே நாங்கள் பின்பற்றிச் செல்வோம்'' என்று கூறாமல் இருக்கவில்லை

[24] (அதற்கு, அத்தூதர் அவர்களை நோக்கி) ‘‘உங்கள் மூதாதைகளை நீங்கள் எதில் கண்டீர்களோ அதைவிட நேரான வழியை நான் கொண்டு வந்திருந்த போதிலுமா? (உங்கள் மூதாதைகளை நீங்கள் பின்பற்றுவீர்கள்)'' என்று கேட்டார்கள். அதற்கவர்கள் ‘‘(ஆம்! அவர்களையே நாங்கள் பின்பற்றுவதுடன்) நீங்கள் கொண்டு வந்ததையும் நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கிறோம்'' என்றும் கூறினார்கள்

[25] ஆதலால், நாம் அவர்களை பழி வாங்கினோம். (நபியே! நம் தூதர்களைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தவர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதை நீர் கவனித்துப் பார்ப்பீராக

[26] இப்ராஹீம் தன் தந்தையையும், தன் மக்களையும் நோக்கிக் கூறியதை நினைத்துப் பார்ப்பீராக. ‘‘நிச்சயமாக நான் நீங்கள் வணங்கும் தெய்வங்களை விட்டும் விலகிக்கொண்டேன்

[27] எனினும் எவன் என்னை படைத்தானோ (அவனையே நான் வணங்குவேன்). நிச்சயமாக அவனே எனக்கு நேரான வழியை அறிவிப்பான்'' (என்றும் கூறினார்)

[28] ஆகவே, (அவருடைய சந்ததிகளாகிய இந்த அரபிகளும் நம்மிடமே) அவர்கள் திரும்பவரும் பொருட்டு, அவர் தன் சந்ததிகளில் இக்கொள்கையை நிலையான வாக்குறுதியாக அமைத்தார்

[29] (ஆயினும், அவருடைய சந்ததிகளாகிய இந்த அரபிகளோ, தங்கள் மூதாதையாகிய இப்ராஹீமின் நல்லுபதேசத்தை மறந்து, விக்கிரக ஆராதனையில் ஈடுபட்டு விட்டனர். அவ்வாறிருந்தும்) இவர்களையும் இவர்களுடைய மூதாதைகளையும் அவர்களிடம் மெய்யான (இந்த) வேதமும், தெளிவான (நமது இந்தத்) தூதரும் வருகின்றவரை, அவர்களை(த் தண்டிக்காது இவ்வுலகில்) சுகமனுபவிக்கும்படியே நான் விட்டு வைத்தேன்

[30] அவர்களிடம் இந்தச் சத்திய வேதம் வரவே, அவர்கள் (இதை) ‘‘இது சூனியம்தான். நிச்சயமாக நாங்கள் இதை நிராகரிக்கிறோம்'' என்று கூறுகின்றனர்

[31] மேலும் (தாயிஃப், மக்கா ஆகிய) இவ்விரண்டு ஊர்களிலுள்ள ஒரு பெரிய மனிதன் மீது இந்த குர்ஆன் இறக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டாமா? (அவ்வாறாயின் நாங்கள் அதை நம்பிக்கை கொண்டிருப்போம்) என்றும் கூறுகின்றனர்

[32] (நபியே!) உமது இறைவனின் அருளைப் பங்கிடுபவர்கள் இவர்கள்தானா? இவ்வுலகத்தில் அவர்களுடைய வாழ்க்கையின் தரத்தை அவர்களுக்கிடையில் நாமே பங்கிட்டு, அவர்களில் சிலருடைய பதவியை சிலரை விட நாம்தான் உயர்த்தினோம். அவர்களில் சிலர், சிலரை (வேலைக்காரர்களாக) ஐக்கியப்படுத்திக் கொள்கின்றனர். (நபித்துவம் என்னும்) உமது இறைவனின் அருளோ, அவர்கள் சேகரித்து வைத்திருக்கும் பொருளைவிட மிக மேலானதாகும். (அதை அவன் விரும்பியவருக்குத்தான் கொடுப்பான்)

[33] (இந்நிராகரிப்பவர்களின் செல்வ செழிப்பைக் கண்டு, ஆசை கொண்ட மற்ற) மனிதர்கள் அனைவருமே (அவர்களைப் போல் நிராகரிக்கின்ற) ஒரே வகுப்பினராக ஆகிவிடுவார்கள் என்று இல்லாதிருப்பின் ரஹ்மானை (அல்லாஹ்வை), நிராகரிப்பவர்களின் வீட்டு முகடுகளையும் அதன்மீது அவர்கள் ஏறிச் செல்லும் படிக்கட்டுகளையும் கூட நாம் வெள்ளியினால் ஆக்கிவிடுவோம்

[34] அவர்களுடைய வீடுகளின் வாயில்களையும், அவர்கள் சாய்ந்து கொண்டிருக்கும் கட்டில்களையும் கூட (வெள்ளியினால்) ஆக்கி இருப்போம்

[35] (வெள்ளி என்ன! இவற்றைத்) தங்கத்தாலேயே (அலங்கரித்தும் விடுவோம்). ஏனென்றால், இவை அனைத்துமே இவ்வுலக வாழ்க்கையிலுள்ள (அழிந்துவிடக்கூடிய) அற்ப இன்பங்களே தவிர வேறில்லை. உங்கள் இறைவனிடம் இருக்கும் மறுமை(யின் நிலையான இன்ப வாழ்க்கையோ, மிக மேலானதும் நிலையானதுமாகும். அது) இறைவனுக்குப் பயந்து நடப்பவர்களுக்குத்தான் சொந்தமானது

[36] எவன் ரஹ்மானுடைய நல்லுபதேசத்திலிருந்து கண்ணை மூடிக் கொள்கிறானோ, அவனுக்கு நாம் ஒரு ஷைத்தானை (நண்பனாக) சாட்டி விடுவோம். அவன் அவனுக்கு இணை பிரியாத தோழனாகி விடுகிறான்

[37] நிச்சயமாக (அந்த ஷைத்தான்கள்தான்) அவர்களை நேரான பாதையில் இருந்து தடுத்து விடுகின்றனர். எனினும், அவர்களோ தாங்கள் நேரான பாதையில் இருப்பதாகவே எண்ணிக் கொள்வார்கள்

[38] நம்மிடம் (வரும் வரைதான் அவ்வாறு எண்ணிக் கொண்டிருப்பார்கள்.) அவர்கள் (நம்மிடம்) வந்த பின்னரோ (அவர்களில் ஒருவர் மற்றவரை நோக்கி) ‘‘எனக்கும் உமக்கும் இடையில் கீழ் திசைக்கும், மேல் திசைக்கும் உள்ள தொலை தூரம் இருந்திருக்க வேண்டாமா?'' என்றும், ‘‘(எங்களை வழிகெடுத்த எங்கள்) இந்தத் தோழன் மிகப் பொல்லாதவன்'' என்றும் கூறுவார்கள்

[39] (அதற்கு அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் வரம்பு மீறி பாவம் செய்ததன் காரணமாக இன்றைய தினம் உங்களுக்கு (எதுவுமே) பயனளிக்காது. நிச்சயமாக நீங்கள் வேதனையை அனுபவிப்பதில் (அந்த ஷைத்தான்களுக்குக்) கூட்டானவர்கள்தான்'' (என்றும் கூறப்படும்)

[40] (நபியே!) நீர் செவிடர்களைக் கேட்கும்படி செய்து விடுவீரா? அல்லது குருடர்களை (அல்லது மன முரண்டாகவே) பகிரங்கமான வழிகேட்டில் இருப்பவர்களை நேரான வழியில் நீர் செலுத்திவிடுவீரா

[41] (நபியே! அவர்களுக்கு மத்தியிலிருந்து) உம்மை நாம் எடுத்துக் கொண்டபோதிலும், நிச்சயமாக நாம் அவர்களிடம் பழி வாங்கியே தீருவோம்

[42] அல்லது நாம் அவர்களுக்கு வாக்களித்த தண்டனையை நீர் (உயிருடன் இருக்கும்போதே) உமது கண்ணால் காணும்படி செய்வோம். நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஆற்றல் உடையவர்களாகவே இருக்கிறோம்

[43] (நபியே!) வஹ்யி மூலம் உமக்கு அறிவிக்கப்பட்டதைப் பலமாகப் பிடித்துக் கொள்வீராக. நிச்சயமாக நீர் நேரான பாதையில்தான் இருக்கிறீர்

[44] நிச்சயமாக இது உமக்கும், உமது மக்களுக்கும் ஒரு நல்லுபதேசமாகும். (அதிலுள்ளபடி நடந்து கொண்டீர்களா என்பதைப் பற்றி) பின்னர் நீங்கள் கேள்வி கேட்கப்படுவீர்கள்

[45] (நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிவைத்த நம் தூதர்களைப் பற்றி நீர் கேட்பீராக, ‘‘ரஹ்மானையன்றி வணங்கப்படுகின்ற வேறு கடவுள்களை நாம் ஏற்படுத்தினோமா

[46] நிச்சயமாக மூஸாவை, நாம் நமது (பல) அத்தாட்சிகளுடன் ஃபிர்அவ்னிடமும் அவனுடைய மக்களிடமும் அனுப்பிவைத்தோம். அவர் (அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நான் உலகத்தார் அனைவரின் இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு தூதர் ''என்று கூறினார்

[47] அவர், அவர்களிடம் நம் அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது, அவர்கள் அவற்றை (ஏளனம் செய்து) நகைக்க ஆரம்பித்தார்கள்

[48] நாம் அவர்களுக்குக் காண்பித்த ஒவ்வோர் அத்தாட்சியும், மற்றொன்றை விடப் பெரிதாகவே இருந்தது. அவர்கள் (பாவத்திலிருந்து) திரும்பி விடுவதற்காக (உடனே அழித்து விடாமல் இலேசான) வேதனையைக் கொண்டு (மட்டும்) அவர்களைப் பிடித்தோம்

[49] அச்சமயம் அவர்கள் (மூஸாவை நோக்கி) ‘‘சூனியக்காரரே! (உமது இறைவன் உமது பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொள்வதாக) உமக்களித்த வாக்குறுதியைக் கொண்டு (இவ்வேதனையை நீக்கி) எங்களுக்கு அருள் புரிய உமது இறைவனிடம் பிரார்த்தனை செய்வீராக! (அவ்வாறு நீக்கிவிட்டால்) நிச்சயமாக நாங்கள் (உமது) நேரான வழிக்கு வந்து விடுவோம்'' என்று கூறினார்கள்

[50] (அவ்வாறு மூஸாவும் பிரார்த்தனை செய்தார்.) ஆகவே, நாம் அவர்களுடைய வேதனையை நீக்கிய சமயத்தில், அவர்கள் (தங்கள் வாக்குறுதியை) முறித்து விட்டார்கள்

[51] பின்னர், ஃபிர்அவ்ன் தன் மக்களை நோக்கி, ‘‘என் மக்களே! இந்த ‘மிஸ்ர்' தேசத்தின் ஆட்சி எனதல்லவா? (அதிலிருக்கும்) இந்த (நைல்) நதி(யின் கால்வாய்)கள் என் கட்டளைப்படி செல்வதை நீங்கள் பார்க்கவில்லையா?'' என்று பறை சாற்றினான்

[52] ‘‘தவிர, நான் இந்த இழிவான மனிதரை விட சிறந்தவனாயிற்றே! தெளிவாகப் பேசவும் அவரால் முடியவில்லையே!'' (என்றும்)

[53] ‘‘(அவர் நம்மைவிட மேலானவராக இருந்தால், பரிசாக) அவருக்குப் பொற்காப்பு அளிக்கப்பட்டிருக்க வேண்டாமா? அல்லது அவருடன் வானவர்கள் ஒன்று சேர்ந்து பரிவாரங்களாக வரவேண்டாமா?'' (என்றும் கூறி)

[54] அவன் தன் மக்களை மயக்கி விட்டான். ஆதலால், அவர்களும் அவனுக்கு கீழ்ப்படிந்து விட்டார்கள். ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக பாவம் செய்யும் (சுபாவமுடைய) மக்களாக இருந்தனர்

[55] (இவ்வாறு அவர்கள்) நமக்குக் கோபமூட்டவே, அவர்களிடம் நாம் பழிவாங்கும் பொருட்டு, அவர்கள் அனைவரையும் மூழ்கடித்து விட்டோம்

[56] இன்னும், அவர்களை (அழித்து) சென்றுபோன மக்களாக்கி (அவர்களுடைய சரித்திரத்தை) பிற்காலத்தில் உள்ளவர்களுக்கு உதாரணமாக்கினோம்

[57] (நபியே!) மர்யமுடைய மகனை உதாரணமாகக் கூறப்பட்ட சமயத்தில், அதைப்பற்றி உமது மக்கள் (கொக்கரித்துக்) கைதட்டி, நகைக்க ஆரம்பித்து விட்டனர்

[58] ‘‘எங்கள் தெய்வங்கள் மேலா? அல்லது அவர் மேலா?'' என்று கேட்கத் தலைப்பட்டனர். வீண் விதண்டாவாதத்திற்கே தவிர உமக்கு அவர்கள், அவரை உதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. இவர்கள் வீண் தர்க்கம் செய்யும் மக்கள்தான்

[59] ஈஸாவோ, நமது அடிமையே தவிர வேறில்லை. (அவர் கடவுளல்ல; நமது பிள்ளையுமல்ல; அவர் இவ்வாறு கூறவுமில்லை; மாறாக, இதை மறுத்தே கூறியிருக்கிறார்.) அவர் மீது நாம் அருள்புரிந்து, இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு அவரை நாம் ஓர் உதாரணமாக்கினோம்

[60] நாம் விரும்பினால் (உங்களை அழித்து விட்டு பிறகு,) உங்களுக்குப் பதிலாக வானவர்களை படைத்து, பூமியில் பிரதிநிதிகளாக ஆக்கி விடுவோம்

[61] நிச்சயமாக (வரவிருக்கும்) மறுமைக்குரிய அத்தாட்சிகளில் அவரும் ஓர் அத்தாட்சியாவார். ஆகவே, நிச்சயமாக நீங்கள் இதில் சந்தேகிக்க வேண்டாம். என்னையே பின்பற்றி நடங்கள். இதுவே நேரான வழி

[62] உங்களை ஷைத்தான் (நேர்வழியைவிட்டு) தடுத்து விட வேண்டாம். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரி ஆவான்

[63] ஈஸா தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபொழுது (தன் மக்களை நோக்கி) ‘‘மெய்யாகவே ஞானத்தை நான் உங்களுக்குக் கொண்டு வந்திருக்கிறேன். நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருப்பவற்றில் சிலவற்றை உங்களுக்கு விவரித்தும் கூறுவேன். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து எனக்குக் கீழ்ப்படியுங்கள்'' என்றும்

[64] ‘‘நிச்சயமாக அல்லாஹ்தான் என் இறைவனும், உங்கள் இறைவனுமாவான். (நான் இறைவன் அல்ல.) ஆதலால், அவன் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். (வேறு எதையும், எவரையும் என்னையும் வணங்காதீர்கள்.) இதுதான் நேரான வழி'' என்றும் கூறினார்

[65] எனினும், அவருடைய கூட்டத்தினர் (அவரைப் பற்றித்) தங்களுக்குள் (தர்க்கித்துக் கொண்டு) அவருக்கு மாறுசெய்ய முற்பட்டனர். ஆகவே, இந்த அநியாயக்காரர்களுக்கு கடிண துன்பமுடைய வேதனையின் கேடுதான்

[66] இவர்கள் அறிந்துகொள்ளாத விதத்தில் திடீரென இவர்களிடம் மறுமை வருவதைத் தவிர (வேறு எதையும்) இவர்கள் எதிர்பார்க்கின்றனரா

[67] அந்நாளில் நண்பர்கள் சிலர் சிலருக்கு எதிரியாகி விடுவர். ஆனால், இறை அச்சமுடையவர்களைத் தவிர

[68] (அந்நாளில் இறையச்சமுடையவர்களை நோக்கி) ‘‘என் அடியார்களே! இன்றைய தினம் உங்களுக்கு ஒரு பயமும் இல்லை. நீங்கள் துக்கப்படவும் மாட்டீர்கள்'' (என்று கூறப்படும்)

[69] இவர்கள்தான் நம் வசனங்களை நம்பிக்கை கொண்டு (நமக்கு) முற்றிலும் பணிந்து வழிபட்டு நடப்பவர்கள்

[70] ஆகவே, (மறுமையில் இவர்களை நோக்கி) ‘‘நீங்களும் உங்கள் மனைவிகளும் மகிழ்ச்சியடைந்தவர்களாக சொர்க்கத்திற்குச் சென்று விடுங்கள்'' (என்று கூறப்படும்)

[71] (பலவகை உணவுகளும் பானங்களும் நிறைந்த) தங்கத் தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக் கொண்டே இருக்கும். அங்கு, அவர்கள் மனம் விரும்பியவையும், அவர்களுடைய கண்களுக்கு ரம்மியமானவையும் அவர்களுக்குக் கிடைக்கும். (அவர்களை நோக்கி) ‘‘இதில் என்றென்றும் நீங்கள் வசித்திருங்கள்'' (என்றும் கூறப்படும்)

[72] நீங்கள் செய்த நன்மைகளின் காரணமாகவே, இச்சொர்க்கத்திற்கு நீங்கள் வாரிசாக ஆனீர்கள்

[73] நீங்கள் புசிக்கக்கூடிய (விதவிதமான) பல கனிவர்க்கங்களும் அதில் உங்களுக்கு உள்ளன'' (என்றும் கூறப்படும்)

[74] (ஆயினும் பாவம் செய்த) குற்றவாளிகள் நிச்சயமாக நரக வேதனையில் என்றென்றும் நிலைபெற்று விடுவார்கள்

[75] அவர்களுடைய (வேதனையில்) ஒரு சிறிதும் குறைக்கப்பட மாட்டாது. அதில் அவர்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள்

[76] நாம் அவர்களுக்கு ஒரு தீங்கும் இழைத்துவிடவில்லை. எனினும், அவர்கள் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்

[77] (இந்நிலையில் அவர்கள் நரகத்தின் அதிபதியை நோக்கி) ‘‘மாலிக்கே! உமது இறைவன் எங்கள் காரியத்தை முடித்து விடட்டும். (மரணத்தின் மூலமாயினும் எங்களுக்கு விடுதலை கிடைக்கட்டும்)'' என்று சப்தமிடுவார்கள். அதற்கவர் ‘‘(முடியாது!) நிச்சயமாக நீங்கள் இதே நிலைமையில் (வேதனையை அனுபவித்துக் கொண்டே மரணிக்காது) இருக்க வேண்டியதுதான்'' என்று கூறுவார்

[78] (நிராகரிப்பாளர்களே!) நிச்சயமாக நாம் உங்களிடம் உண்மையான வேதத்தை கொண்டுவந்தோம். எனினும், உங்களில் பெரும்பாலானவர்கள் அந்த உண்மையை வெறுக்கின்றனர்

[79] (நபியே! உமக்குச் சதி செய்ய) அவர்கள் ஏதும் முடிவு கட்டிக் கொண்டிருக்கின்றனரா? அவ்வாறாயின், (அதற்குரிய பரிகாரத்தை) நாமும் முடிவு கட்டித்தான் வைத்திருக்கிறோம்

[80] அல்லது அவர்கள் (தங்கள் மனதில்) மறைத்து வைத்திருப்பதும் அல்லது (தங்களுக்குள்) இரகசியமாகப் பேசுவதையும் நாம் செவியேற்க மாட்டோம் என்று அவர்கள் நினைக்கின்றனரா? அவ்வாறில்லை! அவர்களிடத்தில் இருக்கும் நம் வானவர்கள் (ஒவ்வொன்றையும்) பதிவு செய்துகொண்டே வருகின்றனர்

[81] (நபியே!) கூறுவீராக: ‘‘ரஹ்மானுக்கு சந்ததி இருந்தால் (அதை) வணங்குபவர்களில் நானே முதன்மையானவனாக இருப்பேன்

[82] வானங்கள் இன்னும் பூமியின் இறைவன், அர்ஷுடைய இறைவன் இவர்கள் கூறும் (பொய்யான) வர்ணிப்புகளை விட்டும் மிக்க பரிசுத்தமானவன்

[83] ஆகவே, (நபியே!) இவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட (வேதனையின்) நாளை இவர்கள் சந்திக்கும் வரை, வீண் தர்க்கத்தில் மூழ்கி விளையாடிக் கொண்டிருக்கும் படி இவர்களை விட்டுவிடுவீராக

[84] வானத்திலும் அவன்தான் வணக்கத்திற்குரிய இறைவன்; பூமியிலும் அவன்தான் வணக்கத்திற்குரிய இறைவன். (ஈஸாவும் அல்ல, வேறு எவரும் அல்ல.) அவன்தான் மிக்க ஞானமுடையவன், நன்கறிந்தவன்

[85] வானங்கள், பூமி இன்னும் இவற்றுக்கு மத்தியிலுள்ளவற்றின் ஆட்சி (ரஹ்மானாகிய) அவனுக்குரியதே. அவன் பெரும் பாக்கியம் உடையவன். அவனிடத்தில்தான் மறுமையின் ஞானம் இருக்கிறது. அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு போகப்படுவீர்கள்

[86] அல்லாஹ்வையன்றி எவற்றை இவர்கள் (இறைவனென) அழைக்கிறார்களோ அவை (இவர்களுக்காக அவனிடத்தில்) பரிந்து பேசவும் சக்தி பெறாது. ஆயினும், எவர்கள் உண்மையை அறிந்து அதைப் பகிரங்கமாகவும் கூறுகிறார்களோ அவர்களைத் தவிர. (அவர்களுக்கு அவனுடைய அனுமதி கிடைத்தால் அவனிடம் அவர்கள் பரிந்து பேசுவார்கள்)

[87] (நபியே!) அவர்களை படைத்தவன் யார் என்று நீர் அவர்களிடம் வினவினால் (ஈஸாவும் அல்ல, வேறு எவரும் அல்ல.) அல்லாஹ்தான் என்று நிச்சயமாகக் கூறுவார்கள். அவ்வாறாயின், (அவனைவிட்டு) இவர்கள் எங்கு வெருண்டோடுகின்றனர்

[88] ‘‘என் இறைவனே! நிச்சயமாக இவர்கள் நம்பிக்கை கொள்ளாத மக்கள்'' என்று (தூதராகி) அவர் கூறுவது நமக்குத் தெரியும்

[89] ஆகவே, நீர் அவர்களைப் புறக்கணித்து விட்டு ‘ஸலாம்' என்று கூறி வருவீராக. பின்னர் அவர்கள் (இதன் உண்மையை) அறிந்து கொள்வார்கள்

அத்துகான்

Surah 44

[1] ஹா மீம். தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக

[2] ஹா மீம். தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக

[3] நிச்சயமாக இதை மிக்க பாக்கியமுள்ள (‘லைலத்துல் கத்ரு' என்ற) ஓர் இரவில் (முதல் முறையாக) இறக்கிவைத்தோம். நிச்சயமாக நாம் (இதன் மூலம்) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறோம்

[4] உறுதியான எல்லா காரியங்களும் அதில்தான் நம் கட்டளையின்படி (தீர்மானிக்கப்பட்டு) பிரித்துக் கொடுக்கப்படுகின்றன

[5] (நபியே!) நிச்சயமாக நாம் (உங்களை அவர்களிடம் நம் தூதராக) அனுப்புகிறோம்

[6] (அது) உமது இறைவனின் அருளாகும். நிச்சயமாக அவன்தான் (அனைத்தையும்) செவியுறுபவனும், நன்கறிந்தவனும் ஆவான்

[7] நீங்கள் (உண்மையை) உறுதி கொள்பவர்களாக இருந்தால் வானங்கள், பூமி, இன்னும் இவற்றுக்கு மத்தியில் உள்ளவற்றின் சொந்தக்காரன் அவனே (என்பதை நம்புங்கள்)

[8] அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவனில்லை. அவனே (படைப்புகளை) உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கவும் வைக்கிறான். அவனே உங்கள் இறைவனும் உங்கள் மூதாதைகளின் இறைவனுமாவான்

[9] எனினும், அவர்கள் (இவ்விஷயத்திலும் வீண்) சந்தேகத்தில்தான் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்

[10] (நபியே!) தெளிவானதொரு புகை, வானத்திலிருந்து வரும் நாளை எதிர்பார்த்திருப்பீராக

[11] மனிதர்கள் அனைவரையும் அது சூழ்ந்து கொள்ளும். அது ஒரு துன்புறுத்தும் வேதனையாகும்

[12] (அந்நாளில் மனிதர்கள் இறைவனை நோக்கி) ‘‘எங்கள் இறைவனே! எங்களை விட்டும் இவ்வேதனையை நீக்கிவிடு. நிச்சயமாக நாங்கள் (உன்னை) நம்பிக்கை கொள்கிறோம்'' (என்று கூறுவார்கள்)

[13] (அந்நேரத்தில் அவர்களின்) நல்லுணர்ச்சி எவ்வாறு அவர்களுக்குப் பயனளிக்கும்? நிச்சயமாக (நமது) தெளிவான தூதர் (இதற்கு முன்னர்) அவர்களிடம் வந்தே இருக்கிறார்

[14] எனினும், அவர்கள் அவரைப் புறக்கணித்து, (அவரைப்பற்றி ‘‘இவர்) எவராலோ கற்பிக்கப்பட்ட ஒரு பைத்தியக்காரர்தான்'' என்று கூறினர்

[15] (மெய்யாகவே நீங்கள் நல்லுணர்ச்சி பெறுவீர்கள் என்று) அவ்வேதனையை மேலும் சிறிது காலத்திற்கு நீக்கிவைத்தோம். (எனினும்) நிச்சயமாக (நீங்கள் பாவம்) செய்யவே மீளுகிறீர்கள்

[16] மிக்க பலமாக (அவர்களை) நாம் பிடிக்கும் அந்நாளில் நிச்சயமாக (அவர்களிடம்) பழிவாங்கியே தீருவோம்

[17] இவர்களுக்கு முன்னரும், ஃபிர்அவ்னுடைய மக்களை நிச்சயமாக நாம் சோதித்தோம். அவர்களிடம் கண்ணியமான (நம்) தூதர் ஒருவர் வந்தார்

[18] ‘‘அல்லாஹ்வின் அடியார்(களாகிய இஸ்ராயீலின் சந்ததி)களை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள். நிச்சயமாக நான் (இறைவனிடமிருந்து) உங்களிடம் வந்துள்ள நம்பிக்கையான தூதர் ஆவேன்

[19] அல்லாஹ்வுக்கு (முன் ஆணவம் கொள்ளாதீர்கள், அவனுக்கு) நீங்கள் மாறு செய்யாதீர்கள். நிச்சயமாக நான் உங்களிடம் தெளிவான ஓர் அத்தாட்சியைக் கொண்டுவந்திருக்கிறேன்'' என்று அவர் கூறினார். (அதற்கவர்கள் ‘‘நாங்கள் உங்களை கல்லெறிந்து கொன்று விடுவோம்'' என்று கூறினார்கள்)

[20] (அதற்கு மூஸா) ‘‘என்னை நீங்கள் கல்லெறிந்து கொல்வதை விட்டும் எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்றார்

[21] ‘‘நீங்கள் என்னை நம்பாவிடில் என்னைவிட்டு விலகிக் கொள்ளுங்கள்'' (என்றும் கூறி)

[22] தன் இறைவனை அழைத்து ‘‘நிச்சயமாக இவர்கள் பாவம் செய்யும் மக்களாகவே இருக்கிறார்கள்'' என்று கூறினார்

[23] (அதற்கு இறைவன்) ‘‘நீர் (இஸ்ரவேலர்களாகிய) என் அடியார்களை அழைத்துக்கொண்டு இரவோடு இரவாக சென்று விடுங்கள். எனினும், நிச்சயமாக (அவர்கள்) உங்களைப் பின்தொடர்ந்து வருவார்கள்

[24] (நீங்கள் செல்வதற்காகப் பிளந்த) கடலை வறண்டுபோன அதே நிலையில் விட்டு விட்டு (நீங்கள் கடலைக் கடந்து) விடுங்கள். நிச்சயமாக அவர்களுடைய படைகள் அனைத்தும் கடலில் மூழ்கடிக்கப்பட்டு விடும்'' (என்று கூறி, அவ்வாறே மூழ்கடித்தான்)

[25] (அவர்கள்) எத்தனையோ சோலைகளையும், நீரருவிகளையும் விட்டுச் சென்றனர்

[26] இன்னும் எவ்வளவோ விவசாயங்களையும், மேலான வீடுகளையும் (விட்டுச் சென்றனர்)

[27] அவர்கள் இன்பம் அனுபவித்துக் கொண்டிருந்த எத்தனையோ சுகம் தரும் பொருள்களையும் (விட்டுச் சென்றனர்)

[28] இவ்வாறே (நடைபெற்றது). அவற்றையெல்லாம் அவர்கள் அல்லாத வேறு மக்களுக்குச் சொந்தமாக்கி வைத்தோம்

[29] (அழிந்துபோன) அவர்களைப் பற்றி, வானமோ பூமியோ (ஒன்றுமே துக்கித்து) அழவில்லை! (தப்பித்துக் கொள்ளவும்) அவர்களுக்கு அவகாசம் கொடுக்கப்பட வில்லை

[30] (இவ்வாறே) இழிவு தரும் வேதனையில் இருந்து இஸ்ராயீலின் சந்ததிகளை பாதுகாத்துக் கொண்டோம்

[31] ஃபிர்அவ்னிடமிருந்து (அவர்களைப் பாதுகாத்தோம்). நிச்சயமாக அவன் வரம்பு மீறிகளில் ஓர் ஆணவம் கொண்டவனாக இருந்தான்

[32] (இவ்வாறு ஃபிர்அவ்னை மூழ்கடித்த பின்னர்) இஸ்ராயீலுடைய சந்ததிகளின் தன்மையை அறிந்தே உலகத்தார் அனைவரிலும் அவர்களைத் தேர்ந்தெடுத்தோம்

[33] இன்னும், அவர்களுக்கு (மன்னு ஸல்வா போன்ற) பல அத்தாட்சிகளையும் நாம் கொடுத்தோம். அவற்றில், அவர்களுக்குப் பெரும் சோதனை இருந்தது

[34] (எனினும்,) நிச்சயமாக (நிராகரிப்பாளர்களாகிய) இவர்கள் கூறுகிறார்கள்

[35] ‘‘இவ்வுலகில் நாம் மரிக்கும் இம்மரணத்தைத் தவிர வேறொன்றும் இல்லை. (மரணித்த பின்னர்,) நாம் உயிர் கொடுத்து எழுப்பப்பட மாட்டோம்

[36] (மேலும், நம்பிக்கையாளர்களை நோக்கி,) ‘‘நீங்கள் கூறுவது உண்மையாயின், (இறந்து போன) எங்கள் மூதாதைகளைக் கொண்டு வாருங்கள்'' (என்றனர்)

[37] (நபியே!) இவர்கள் மேலானவர்களா? அல்லது ‘துப்பஉ' என்னும் மக்களும் அவர்களுக்கு முன்னிருந்தவர்களும் மேலானவர்களா? அவர்களை (எல்லாம்) நாம் அழித்துவிட்டோம். ஏனென்றால், நிச்சயமாக அவர்களும் பாவம் செய்பவர்களாகவே இருந்தனர்

[38] வானங்களையும், பூமியையும், அதற்கு மத்தியில் உள்ளவற்றையும் விளையாட்டுக்காக நாம் படைக்கவில்லை

[39] நிச்சயமாக தக்க காரணத்திற்காகவே தவிர, இவற்றை நாம் படைக்கவில்லை. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் இதை அறிந்துகொள்வதில்லை

[40] நிச்சயமாக நியாயத் தீர்ப்பு நாள்தான் அவர்கள் அனைவருக்கும் குறிப்பிட்ட தவணையாகும்

[41] அந்நாளில், ஒரு நண்பன் மற்றொரு நண்பனுக்கு எத்தகைய உதவியும் புரிந்து பயனளிக்க மாட்டான். அவனுக்கும் எவருடைய உதவியும் கிடைக்காது

[42] ஆயினும், எவர்கள் மீது அல்லாஹ் அருள் புரிந்தானோ (அவர்களுக்கு எல்லா உதவியும் கிடைக்கும்). நிச்சயமாக அவன்தான் (அனைவரையும்) மிகைத்தவனும் மகா கருணையுடையவனும் ஆவான்

[43] நிச்சயமாக (நரகத்திலிருக்கும்)கள்ளி மரம்தான்

[44] பாவியின் உணவு

[45] (அது) உருகிய செம்பைப்போல் அவனுடைய வயிற்றில் கொதிக்கும்

[46] சூடான தண்ணீர் கொதிப்பதைப் போல் (அது கொதித்துப் பொங்கி வரும்)

[47] ‘‘அவனைப் பிடித்து இழுத்துக் கொண்டு நரகத்தின் மத்தியில் செல்லுங்கள்

[48] பிறகு, அவனுடைய தலைக்குமேல் கொதித்(துக் காய்ந்)த தண்ணீரை ஊற்றி நோவினை செய்யுங்கள்'' (என்று கூறப்படுவதுடன், அவனை நோக்கி ஏளனமாக)

[49] ‘‘நிச்சயமாக நீ மிக்க கண்ணியமும் மரியாதையும் உடையவன். ஆதலால், நீ (இவ்வேதனையைச் சிறிது) சுவைத்துப் பார்'' (என்றும் கூறப்படும்)

[50] நிச்சயமாக இதுதான் நீங்கள் சந்தேகித்துக் கொண்டிருந்தவை

[51] இறையச்சமுடையவர்களோ, நிச்சயமாக அச்சமற்ற இடத்தில்

[52] அதுவும் சொர்க்கச் சோலைகளில், ஊற்றுகளின் சமீபமாக

[53] மெல்லியதும் மொத்தமானதும் (ஆக, அவர்கள் விரும்பிய) பட்டாடைகளை அணிந்து, ஒருவரை ஒருவர் முகம் நோக்கி (உட்கார்ந்து மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டு) இருப்பார்கள்

[54] இவ்வாறே (சந்தேகமின்றி நடைபெறும்). மேலும், ‘ஹூருல் ஈன்' (என்னும் கண்ணழகிகளாகிய கன்னி)களையும் நாம் அவர்களுக்கு திருமணம் செய்து வைப்போம்

[55] அச்சமற்றவர்களாக (அவர்கள் விரும்பிய) கனிவர்க்கங்கள் அனைத்தையும், அங்கு கேட்டு (வாங்கிப் புசித்து) கொண்டும் இருப்பார்கள்

[56] முந்திய மரணத்தைத் தவிர, அதில் அவர்கள் வேறு ஒரு மரணத்தையும் அனுபவிக்க மாட்டார்கள். (அதாவது: மரணிக்காது என்றென்றும் வாழ்வார்கள்.) இன்னும், அவர்களை நரக வேதனையிலிருந்து, (இறைவன்) காப்பாற்றினான்

[57] (நபியே! இது) உமது இறைவனின் அருளாகும். இதுதான் மகத்தான பெரும் வெற்றியுமாகும்

[58] (நபியே!) அவர்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டே இவ்வேதத்தை நாம் உமது மொழியில் (இறக்கி அதை) எளிதாக்கி வைத்தோம்

[59] (இதைக் கொண்டு அவர்கள் நல்லுணர்ச்சி பெறவில்லையெனில், அவர்களுக்கு வரக்கூடிய தீங்கை) நீர் எதிர்பார்த்திருப்பீராக. நிச்சயமாக அவர்களும் எதிர்பார்த்தே இருப்பார்கள்

அல்ஜாஸியா

Surah 45

[1] ஹா மீம். (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனுமாகிய அல்லாஹ்வினால் இவ்வேதம் இறக்கப்பட்டது

[2] ஹா மீம். (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனுமாகிய அல்லாஹ்வினால் இவ்வேதம் இறக்கப்பட்டது

[3] நம்பிக்கை கொண்டவர்களுக்கு, வானங்களிலும் பூமியிலும் நிச்சயமாக பல அத்தாட்சிகள் இருக்கின்றன

[4] உங்களைப் படைத்திருப்பதிலும், (பூமியில்) பல ஜீவராசிகளை(ப் பல பாகங்களிலும்) பரப்பி வைத்திருப்பதிலும், (நம்பிக்கையில்) உறுதியான (நல்ல) மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன

[5] இரவு, பகல் மாறிமாறி வரும்படி அல்லாஹ் செய்திருப்பதிலும், வானத்திலிருந்து மழையை இறக்கி வைத்து, அதைக்கொண்டு (வறண்டு) இறந்துபோன பூமியை உயிர்ப்பிப்பதிலும், (பல திசைகளுக்கு) காற்றுகளை திருப்பி விடுவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன

[6] (நபியே!) இவை அல்லாஹ்வுடைய வசனங்களாகும். மெய்யாகவே உம் மீது நாம் இவற்றை ஓதிக் காண்பிக்கிறோம். அல்லாஹ்வுக்கும் அவனுடைய வசனங்களுக்கும் பின்னர் இவர்கள் எவ்விஷயத்தைத்தான் நம்புவார்கள்

[7] (இவ்வாறு நிராகரித்துவிட்டுப் பொய்யான தெய்வங்களைக்) கற்பனையாகக் கூறும் பாவிகளுக்கெல்லாம் கேடுதான்

[8] அவர்கள் அல்லாஹ்வின் வசனங்கள் தங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டதை செவிமடுத்து விட்டு பின்னர், அதை செவிமடுக்காதவர்களைப்போல் கர்வம் கொண்டு (நிராகரிப்பின் மீதே) பிடிவாதமாக இருக்கிறார்கள். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு (நபியே!) நற்செய்தி கூறுவீராக

[9] நம் வசனங்களில் எதை அவர்கள் அறிந்த போதிலும், அதை அவர்கள் பரிகாசமாகவே எடுத்துக் கொள்கின்றனர். இவர்களுக்கு இழிவு தரும் வேதனை உண்டு

[10] இவர்களுக்கு (இவர்கள் மரணித்த) பின்னால் நரகம்தான் இருக்கிறது. அவர்கள் சேகரித்திருப்பவையோ அல்லது தங்களுக்குப் பாதுகாப்பாளர்கள் என்று அவர்கள் எடுத்துக்கொண்ட அல்லாஹ் அல்லாதவையோ, அவர்களுக்கு ஒரு பயனும் அளிக்காது. அவர்களுக்கு கடுமையான வேதனை உண்டு

[11] இவ்வேதம்தான் நேரான பாதை. ஆகவே, எவர்கள் தங்கள் இறைவனின் வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களுக்கு மிக கடினமான துன்புறுத்தும் வேதனை உண்டு

[12] அல்லாஹ், கடலை உங்களுக்கு வசதியாக அமைத்திருக்கிறான். அவன் கட்டளையைக் கொண்டு (பல நாடுகளுக்குக்) கப்பலில் சென்று (அதன் மூலம்) அவனுடைய அருளை நீங்கள் தேடிக் கொள்கிறீர்கள். (அதற்காக அவனுக்கு) நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக

[13] (அவ்வாறே) வானங்களிலும் பூமியிலுமுள்ள அனைத்தையுமே அவன் தன் அருளால் உங்களு(டைய நன்மை)க்கு (உழைக்கும்படி) கட்டுப்படுத்தி வைத்திருக்கிறான். கவனித்து ஆராயும் மக்களுக்கு நிச்சயமாக இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன

[14] (நபியே!) நம்பிக்கையாளர்களுக்கு நீர் கூறுவீராக: “அவர்கள் அல்லாஹ்வுடைய தண்டனைகளை நம்பாத மக்களை மன்னித்து (அவர்கள் விஷயத்தை அல்லாஹ்விடமே விட்டு) விடுவார்களாக. (நன்மையோ, தீமையோ செய்யும்) மக்களுக்கு அவர்கள் செய்யும் செயலுக்குத் தக்க பலனை அவன் கொடுப்பான்

[15] எவர் நன்மை செய்கிறாரோ அது அவருக்கே நன்று. எவன் தீமை செய்கிறானோ அது அவனுக்கே கேடாகும். பின்னர், நீங்கள் உங்கள் இறைவனிடமே கொண்டு வரப்படுவீர்கள்

[16] நிச்சயமாக நாம் இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு வேதத்தையும், (ஞானத்தையும்,) அதிகாரத்தையும், நபிப்பட்டத்தையும் கொடுத்து மேலான உணவுகளையும் கொடுத்தோம். மேலும், உலகத்தார் அனைவரிலும் அவர்களை மேன்மையாக்கி வைத்தோம்

[17] மேலும், நம் கட்டளைகளைப் பற்றித் தெளிவான வசனங்களை நாம் அவர்களுக்குக் கொடுத்தோம். (இவ்வாறிருந்தும்) அவர்கள் தங்களுக்கிடையிலுள்ள பொறாமையின் காரணமாக, அவர்களிடம் (வேத) ஞானம் வந்ததன் பின்னர், அவர்கள் தங்களுக்குள் (தர்க்கித்துக் கொண்டு) பிரிந்து விட்டனர். (நபியே!) நிச்சயமாக உமது இறைவன் அவர்கள் தர்க்கித்துக் கொண்டவற்றைப் பற்றி மறுமையில் அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பான்

[18] பிறகு, (நபியே!) மார்க்கத்தின் நேரான ஒரு வழியில்தான் நாம் உம்மை ஆக்கியிருக்கிறோம். ஆகவே, அதையே நீர் பின்பற்றி நடப்பீராக! கல்வி ஞானமற்ற இந்த மக்களின் விருப்பங்களை நீர் பின்பற்றாதீர்

[19] நிச்சயமாக இவர்கள் அல்லாஹ்வுக்கு விரோதமாக உமக்கு ஒரு உதவியும் செய்துவிட முடியாது. நிச்சயமாக அநியாயக்காரர்கள் சிலர், (அவர்களில்) சிலருக்குத்தான் நண்பர்கள். (நம்பிக்கையாளர்களுக்கு அல்ல.) அல்லாஹ்தான் இறையச்சமுடையவர்களின் நண்பன் ஆவான்

[20] இது மனிதர்களுக்கு தெளிவான விளக்கமாகவும் நம்பக்கூடிய மக்களுக்கு நேரான வழியாகவும் அருளாகவும் இருக்கிறது

[21] எவர்கள் பாவத்தைத் தேடிக் கொண்டார்களோ அவர்களை, நம்பிக்கைகொண்டு நற்செயல்களைச் செய்தவர்களைப் போல் நாம் ஆக்கிவிடுவோம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரா? அவர்கள் உயிருடன் இருப்பதும் அவர்கள் இறந்துவிடுவதும் சமமே. அவர்கள் (இதற்கு மாறாகச்) செய்து கொண்ட முடிவு மகா கெட்டது

[22] வானங்களையும் பூமியையும் அல்லாஹ் தக்க காரணத்தின் மீதே படைத்திருக்கிறான். ஆகவே, (அவர்களில் உள்ள) ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அவற்றின் செயலுக்குத்தக்க கூலியே கொடுக்கப்படும். அவை (அணுவளவும்) அநியாயம் செய்யப்பட மாட்டாது

[23] (நபியே!) தன் இச்சையை(த் தான் வணங்கும்) தெய்வமாக எடுத்துக் கொண்ட ஒருவனை நீர் கவனித்தீரா? அவனுக்கு(ப் போதுமான) கல்வி இருந்தும் (அவனது பாவத்தின் காரணமாக) அல்லாஹ் அவனைத் தவறான வழியில் விட்டுவிட்டான். அவனுடைய செவியின் மீதும், உள்ளத்தின் மீதும் முத்திரையிட்டு விட்டான். அவனுடைய பார்வையின் மீதும் ஒரு திரையை அமைத்து விட்டான். அல்லாஹ் இவ்வாறு செய்த பின்னர், அவனை யாரால்தான் நேரான வழியில் செலுத்த முடியும்? நீங்கள் நல்லுணர்வு பெற வேண்டாமா

[24] ‘‘இவ்வுலகத்தில் நாம் வாழும் வாழ்க்கையைத் தவிர வேறொரு வாழ்க்கை இல்லை'' என்றும், ‘‘(இதில்தான்) நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்; பின்னர் இறந்து விடுகிறோம். காலத்தைத் தவிர (வேறு எதுவும்) நம்மை அழிப்பதில்லை'' என்றும் அவர்கள் கூறுகின்றனர். இதைப்பற்றி இவர்களுக்கு ஒரு ஞானமும் இல்லை. இவர்கள் வீண் சந்தேகத்தில் ஆழ்ந்திருப்போரைத் தவிர வேறில்லை

[25] அவர்களுக்கு தெளிவான நமது வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் (அவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கி,) ‘‘மெய்யாகவே (மரணித்தவர்கள் உயிர்பெற்று எழும்புவார்கள் என்ற விஷயத்தில்) நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால், (இறந்து போன) எங்கள் மூதாதைகளை (உயிர்ப்பித்துக்) கொண்டு வாருங்கள்'' என்று கூறுவதைத் தவிர, (வேறு) பதில் கூற அவர்களுக்கு முடிவதில்லை

[26] (நபியே!) நீர் அவர்களை நோக்கி கூறுவீராக: ‘‘அல்லாஹ்தான் உங்களை உயிர்ப்பித்தான்; (நானல்ல.) அவனே உங்களை மரணிக்கவைப்பான். பின்னர், மறுமை நாளில் (உயிர் கொடுத்து) உங்களை ஒன்று சேர்ப்பான். இதில் ஒரு சந்தேகமும் இல்லை. ஆயினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் இதை அறிந்து கொள்வதில்லை

[27] வானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே. விசாரணை நாள் வரும் அன்று (நம் வசனங்களைப்) பொய்யாக்கியவர்கள் அந்நாளில் நஷ்டத்திற்கு உள்ளாகி இருப்பார்கள்

[28] (நபியே! அந்நாளில்) ஒவ்வொரு வகுப்பாரும், முழந்தாளிட்டிருக்கக் காண்பீர். ஒவ்வொரு வகுப்பாரும் (விசாரணைக்காக) அவர்களுடைய (பதிவுப்) புத்தகத்தை நோக்கி அழைக்கப்படுவார்கள். (அவர்களை நோக்கி) ‘‘இன்றைய தினம் நீங்கள் உங்கள் செயலுக்குரிய கூலியை கொடுக்கப்படுவீர்கள்'' (என்றும்)

[29] ‘‘இது (உங்கள் செயலைப் பற்றிய) நமது (பதிவுப்) புத்தகம். இது உங்களைப் பற்றிய உண்மையையே கூறும். நிச்சயமாக நாம், நீங்கள் செய்தவற்றையெல்லாம் எழுதி வைத்திருக்கிறோம்'' (என்றும் கூறப்படும்)

[30] எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்தார்களோ அவர்களை, அவர்களுடைய இறைவன் தன் அருளில் புகுத்துவான். இதுதான் மிகத் தெளிவான வெற்றியாகும்

[31] எவர்கள் (நம் வசனங்களை) நிராகரித்தார்களோ (அவர்களை நோக்கி) உங்களுக்கு நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்படவில்லையா? அச்சமயம் நீங்கள் பெருமைகொண்டு (அதைப் புறக்கணித்து) விட்டீர்கள். இன்னும் நீங்கள் குற்றவாளிகளாக இருந்தீர்கள்'' (என்றும் கூறப்படும்)

[32] மேலும், ‘‘ நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானது, மறுமை வருவதில் அறவே சந்தேகமில்லை'' என்று (உங்களுக்குக்) கூறப்பட்டால் அதற்கு, ‘‘மறுமை இன்னதென்றே நாங்கள் அறியோம். அது (வீணான) வெறும் எண்ணத்தைத் தவிர வேறில்லை என்றே எண்ணுகிறோம். அதை (மெய்யென்று) நாங்கள் நம்பவுமில்லை'' என்று நீங்கள் கூறினீர்கள் (அல்லவா?) என்று (அவர்களிடம்) கேட்கப்படும்

[33] அவர்கள் செய்து கொண்டிருந்த தீய செயல்கள் அனைத்தும், அவர்களுக்கு வெளிப்பட்டுவிடும். அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தவை அவர்களைச் சூழ்ந்துகொள்ளும்

[34] (அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் இந்நாளை சந்திப்பதை மறந்தவாறே, நாமும் இன்றைய தினம் உங்களை மறந்துவிட்டோம். உங்கள் தங்குமிடம் நரகம்தான். (இன்றைய தினம்) உங்களுக்கு உதவி செய்பவர்கள் யாருமில்லை'' என்றும் கூறப்படும்

[35] இதன் காரணமாவது: நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வுடைய வசனங்களைப் பரிகாசமாக எடுத்துக் கொண்டீர்கள். இவ்வுலக வாழ்க்கை உங்களை மயக்கி விட்டது (என்றும் கூறப்படும்). இன்றைய தினம் நரகத்திலிருந்து அவர்கள் வெளியேற்றப்படமாட்டார்கள். அவர்களுடைய மன்னிப்புக் கோரலும் அங்கீகரிக்கப்படாது

[36] வானங்களின் இறைவனும், பூமியின் இறைவனும், இன்னும் அகிலத்தார் அனைவரின் இறைவனுமாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தாகும்

[37] வானங்களிலும், பூமியிலும் உள்ள எல்லா பெருமைகளும் அவனுக்கே சொந்தமானவை. அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனும் ஆவான்

அல்அஹ்காஃப்

Surah 46

[1] ஹா மீம். (அனைவரையும்) மிகைத்தவனும், ஞானமுடையவனுமாகிய அல்லாஹ்வினால் இவ்வேதம் அருளப்பட்டுள்ளது

[2] ஹா மீம். (அனைவரையும்) மிகைத்தவனும், ஞானமுடையவனுமாகிய அல்லாஹ்வினால் இவ்வேதம் அருளப்பட்டுள்ளது

[3] வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு மத்தியில் உள்ளவற்றையும் தக்க காரணமும், (அவற்றுக்குக்) குறிப்பிட்ட தவணையுமின்றி நாம் படைக்கவில்லை. எவர்கள் (அல்லாஹ்வை) நிராகரிக்கிறார்களோ அவர்கள், தங்களுக்குப் பயமுறுத்தி எச்சரிக்கை செய்யப்பட்டதை மறுக்கின்றனர்

[4] ஆகவே, (நபியே! அவர்களை நோக்கி) நீர் கூறுவீராக: ‘‘அல்லாஹ்வை தவிர்த்து நீங்கள் (இறைவனென) எவற்றை அழைக்கிறீர்களோ அவற்றை நீங்கள் கவனித்தீர்களா? அவை பூமியில் எதைத்தான் படைத்திருக்கின்றன? அதை நீங்கள் எனக்குக் காண்பியுங்கள் அல்லது வானங்களில் (அவற்றின் ஆட்சியிலோ அல்லது அவற்றை படைத்ததிலோ) அவற்றுக்குப் பங்குண்டா? நீங்கள் உண்மை சொல்பவர்களாயிருந்தால், இதற்கு (ஆதாரமாக) முன்னுள்ள ஒரு வேதத்தை, அல்லது (இது சம்பந்தமான) ஞானமுடையவர்களின் ஒரு வாக்கியத்தைக் கொண்டு வாருங்கள்

[5] மறுமை நாள் வரை (அழைத்தபோதிலும்) அவை இவர்களுக்கு பதில் கொடுக்காது. ஆகவே, அல்லாஹ் அல்லாதவற்றை அழைப்பவர்களைவிட மிக வழிகெட்டவர்கள் யார்? தங்களை இவர்கள் அழைப்பதையுமே அவை அறியாது

[6] தவிர, மனிதர்களை (உயிர்கொடுத்து) எழுப்பப்படும் சமயத்தில், அவை இவர்களுக்கு எதிரிகளாகி, இவர்கள் (தங்களை) வணங்கிக் கொண்டிருந்தார்கள் என்பதையும் (அவை) நிராகரித்துவிடும்

[7] நம் தெளிவான வசனங்கள் இவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், தங்களிடம் வந்த அந்தச் சத்திய வசனங்களை நிராகரித்துவிட்டு, அவற்றைத் தெளிவான சூனியமென்றும் கூறுகின்றனர்

[8] (நபியே!) இதை நீர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டீர் என்று இவர்கள் கூறுகின்றனரா? (அவ்வாறாயின், நபியே!) கூறுவீராக: ‘‘இதை நான் பொய்யாகக் கற்பனை செய்துகொண்டால் (அதற்காக) அல்லாஹ் (என்னைத் தண்டிக்க மாட்டானா? அந்நேரத்தில் அல்லாஹ்)வுக்கு எதிரிடையாக நீங்கள் எனக்கு எதுவும் (உதவி) செய்ய சக்தியற்றவர்கள் (தானே!) இதைப் பற்றி (எனக்கு விரோதமாக) நீங்கள் என்னென்ன கூறுகிறீர்களோ, அவற்றை அவன் நன்கறிந்துமிருக்கிறான். ஆகவே, எனக்கும் உங்களுக்கும் மத்தியில் அவனே போதுமான சாட்சியாக இருக்கிறான். அவன்தான் மிக மன்னிப்பவன், மகா கருணையுடையவன் ஆவான்

[9] (நபியே! அவர்களை நோக்கி, மேலும்) கூறுவீராக: (இறைவன் அனுப்பிய) தூதர்களில் நான் புதிதாக வந்தவனல்ல. (எனக்கு முன்னர் தூதர்கள் பலர் வந்தே இருக்கின்றனர்.) மேலும், என்னைப் பற்றியோ அல்லது உங்களைப் பற்றியோ என்ன செய்யப்படும் என்பதையும் நான் அறியமாட்டேன். எனக்கு வஹ்யி மூலமாக அறிவிக்கப்பட்டவற்றை தவிர, (மற்ற எதையும்) நான் பின்பற்றுபவன் அல்ல. நான் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனே தவிர வேறில்லை

[10] (நபியே!) கூறுவீராக: ‘‘(யூதர்களே! இவ்வேதம்) அல்லாஹ்விடம் இருந்தே வந்திருக்க, அதை நீங்கள் நிராகரித்து விட்டீர்களே! (உங்கள் இனத்தைச் சார்ந்த) இஸ்ராயீலின் சந்ததிகளிலுள்ள ஒருவர், இதைப் போன்ற ஒரு வேதம் வர வேண்டியதிருக்கிறது என்று சாட்சியம் கூறி, அதை அவர் நம்பிக்கை கொண்டுமிருக்க, நீங்கள் பெருமைகொண்டு (இதை நிராகரித்து) விட்டால், (உங்கள் கதி) என்னவாகும் என்பதை கவனித்தீர்களா? நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்கார மக்களை நேரான வழியில் செலுத்த மாட்டான்

[11] நிராகரிப்பவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கி ‘‘இவ்வேதம் நன்மையானதாக இருந்தால் (அதை நம்பிக்கைகொள்ள இப்பாமர மக்கள்) எங்களைவிட முந்தியிருக்க மாட்டார்கள். (இதில் ஒரு நன்மையுமே இல்லை. ஆதலால்தான், அதை நாங்கள் நிராகரித்து விட்டோம்)'' என்றும் கூறுகின்றனர். அவர்கள் இ(வ்வுண்மையான வேதத்)தைப் பின்பற்றாத நிலைமையில், இது பழங்காலத்துப் பொய்யான கட்டுக்கதைகள்தான் என்றும் அவர்கள் கூறுவார்கள்

[12] இதற்கு முன்னர், மூஸாவுடைய வேதம் (மக்களுக்கு) வழிகாட்டியாகவும், அருளாகவும் இருந்தது. இதுவோ, (அதை) உண்மைப்படுத்தும் வேதமாகத் தெளிவான அரபி மொழியில் இருக்கிறது. இன்னும் அநியாயக்காரர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்துகொண்டும், நன்மை செய்பவர்களுக்கு நற்செய்தி கூறிக்கொண்டும் இருக்கிறது

[13] எவர்கள், எங்கள் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறி (அவன் அருள்புரிந்த இவ்வேதத்தை நம்பிக்கை கொண்டு,) அதில் உறுதியாகவும் இருக்கிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக ஒரு பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்

[14] இவர்கள்தான் சொர்க்கவாசிகள். அவர்கள் செய்யும் நன்மைக்குக் கூலியாக என்றென்றுமே அதில் அவர்கள் தங்கிவிடுவார்கள்

[15] மனிதன் தன் தாய் தந்தைக்கு நன்றி செலுத்தும்படி நாம் அவனுக்கு நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய், சிரமத்துடனேயே அவனை (கர்ப்பத்தில்) சுமந்திருந்து சிரமத்துடனேயே பிரசவிக்கிறாள். அவள் கர்ப்பமானதிலிருந்து, இவன் பால்குடி மறக்கும் வரை, முப்பது மாதங்கள் (மிக்க சிரமத்துடன்) செல்கின்றன. இவன் வாலிபமாகி நாற்பது வயதையடைந்தால் ‘‘என் இறைவனே! நீ என் மீதும், என் தாய் தந்தை மீதும் புரிந்த அருளுக்காக உனக்கு நான் நன்றி செலுத்தி, உன் திருப்தியை அடையக்கூடிய நற்செயல்களைச் செய்யும்படி(யான நல்லறிவை) நீ எனக்குத் தந்தருள்வாயாக! எனக்கு உதவியாக இருக்கும்படி என் குடும்பத்தை சீர்திருத்திவை. நிச்சயமாக நான் உன்னையே நோக்கினேன். (உனக்கு) முற்றிலும் வழிபட்டவர்களில் நானும் ஒருவன்'' என்று கூறுவான்

[16] இத்தகையவர்கள் செய்த நன்மைகள் அனைத்தையும் நாம் அங்கீகரித்துக் கொண்டு, சொர்க்கவாசிகளான இவர்களின் பாவங்களையும் மன்னித்து விட்டு விடுவோம். இவர்களுக்கு அளிக்கப்பட்ட இவ்வாக்கு உண்மையான வாக்குறுதியாகும்

[17] எவன் தன் தாய் தந்தையை நோக்கி (அவர்கள் மறுமையைப் பற்றிக் கூறிய அறிவுரைகளை மறுத்து) ‘‘சீச்சீ! உங்களுக்கென்ன நேர்ந்தது! (நான் இறந்தபின்) உயிர்ப்பிக்கப்படுவேன் என்று நீங்கள் என்னைப் பயமுறுத்துகிறீர்களா? எனக்கு முன்னர் எத்தனையோ கூட்டத்தார் சென்று விட்டனர். (அவர்களில் ஒருவருமே திரும்ப வராது இருக்க நான் மட்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவேனா?) என்று அவன் கூறுகிறான். அதற்கு அவ்விருவரும் (அவனை) பாதுகாக்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து (பின்னர் அவனை நோக்கி) ‘‘உனக்கென்ன கேடு! நீ அல்லாஹ்வை நம்பிக்கை கொள். நிச்சயமாக அவனுடைய வாக்குறுதி மெய்யானது'' என்று கூறுகிறார்கள். அதற்கவன், ‘‘இவையெல்லாம் முன்னுள்ளோரின் கட்டுக் கதைகளே தவிர வேறில்லை, (இதை நான் நம்பவே மாட்டேன்)'' என்று கூறுகிறான்

[18] இத்தகையவர்களின் கதியோ, இவர்களுக்கு முன் சென்றுபோன (பாவிகளான) மனித, ஜின்களிலுள்ள கூட்டத்தார்களைப்போல் (இவர்களும் அழிந்து) இவர்களின் மீதும் (அல்லாஹ்வுடைய வேதனை வந்திறங்கியே தீருமென்ற) வாக்குறுதி உண்மையாகிவிட்டது. நிச்சயமாக இவர்கள் நஷ்டமடைந்து விட்டார்கள்

[19] இவர்களில் ஒவ்வொருவருக்கும் (நன்மையோ தீமையோ) அவர்கள் செயலுக்குத் தக்க பதவிகள் இருக்கின்றன. ஆகவே, அவர்கள் தங்கள் செயலுக்குரிய கூலியை முழுமையாகவே கொடுக்கப்படுவார்கள். (நன்மையைக் குறைத்தோ, பாவத்தை அதிகரித்தோ) இவர்களில் ஒருவருக்கும் (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டாது

[20] நிராகரிப்பவர்களை நரகத்தின்முன் கொண்டுவரப்படும் நாளில் (அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் உலகத்தில் வாழ்ந்திருந்த காலத்தில், நீங்கள் பெற்றிருந்த நல்லவற்றை எல்லாம், (நன்மையான காரியங்களில் உபயோகிக்காது) உங்கள் சுகபோகங்களிலேயே உபயோகித்து இன்பமனுபவித்து விட்டீர்கள். ஆகவே, நீங்கள் பூமியில் நியாயமின்றிப் பெருமையடித்துக்கொண்டும், பாவம் செய்துகொண்டும் இருந்ததன் காரணமாக, இழிவு தரும் வேதனையே இன்றைய தினம் உங்களுக்குக் கூலியாகக் கொடுக்கப்படும்'' (என்று கூறப்படும்)

[21] (நபியே!) நீர் (ஹூத் நபியாகிய) ‘ஆது' உடைய சகோதரரை நினைவு கூறுவீராக. அவருக்கு முன்னும், பின்னும் தூதர்கள் பலர் (அவர்களிடம்) வந்திருக்கின்றனர். (அவர்) தன் மக்களை ‘அஹ்காஃப்' என்ற (மணற்பாங்கான) இடத்தில் (சந்தித்து), ‘‘அல்லாஹ்வைத் தவிர (மற்றெவரையும்) நீங்கள் வணங்காதீர்கள். நிச்சயமாக மகத்தான நாளின் வேதனை உங்கள் மீது இறங்கி விடுமென்று நான் பயப்படுகிறேன்'' என்று அச்சமூட்டி எச்சரித்தார்

[22] அதற்கவர்கள், ‘‘எங்கள் தெய்வங்களை விட்டும் எங்களைத் திருப்பிவிடவா நீர் எங்களிடம் வந்தீர்? நீர் மெய்யாகவே உண்மை சொல்பவராக இருந்தால், நீர் எங்களைப் பயமுறுத்தும் வேதனையை நம்மிடம் கொண்டு வருவீராக'' என்று கூறினார்கள்

[23] அதற்கவர், (அவர்களை நோக்கி ‘‘உங்களுக்கு வேதனை எப்பொழுது அனுப்பப்படும் என்ற) ஞானம் எல்லாம் அல்லாஹ்விடம்தான் இருக்கிறது. எவ்விஷயத்தை உங்களுக்கு அறிவிக்க நான் அனுப்பப்பட்டேனோ, அதையே நான் உங்களுக்கு எடுத்துரைக்கிறேன். ஆயினும், நீங்கள் அறிவில்லாத மக்கள் என்று நான் எண்ணுகிறேன்'' என்று கூறினார்

[24] பின்னர், (வேதனைக்கு அறிகுறியாக வந்த) மேகம் அவர்கள் இருந்த பள்ளத்தாக்குகளை நோக்கி வருவதை அவர்கள் காணவே, ‘‘இது எங்களுக்கு மழை பெய்ய வரும் மேகம்தான்'' என்று கூறினார்கள். (அதற்கு அவர்களை நோக்கி) ‘‘அல்ல! இது நீங்கள் அவசரப்பட்ட வேதனைதான் என்றும், இது ஒரு காற்று; இதில் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது'' (என்றும் கூறப்பட்டது)

[25] ஆகவே, அது தன் இறைவனின் கட்டளைப்படி எல்லாவற்றையும் அழித்து விட்டது. அவர்கள் இருந்த வீடுகளைத் தவிர, (அனைவரும் அழிந்து ஒருவருமே) காணப்படாமல் ஆகிவிட்டார்கள். இவ்வாறே குற்றம் செய்யும் மக்களுக்கு நாம் கூலி கொடுக்கிறோம்

[26] உங்களுக்குச் செய்து கொடுக்காத வசதிகளையெல்லாம் நிச்சயமாக நாம் அவர்களுக்குச் செய்து கொடுத்திருந்தோம். மேலும் நாம் அவர்களுக்குச் செவியையும் (கொடுத்தோம்.) கண்களையும் (கொடுத்தோம். சிந்திக்கக்கூடிய) உள்ளத்தையும் கொடுத்தோம். ஆயினும், அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரித்ததன் காரணமாக அவர்களுடைய செவிகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய உள்ளங்களும் அவர்களுக்கு ஒரு பயனுமளிக்கவில்லை. அவர்கள் பரிகாசம் செய்துகொண்டிருந்த தண்டனை அவர்களைச் சூழ்ந்துகொண்டது

[27] உங்களைச் சூழ்ந்து (வசித்து) இருந்த ஊரார்களையும் நிச்சயமாக நாம் அழித்து விட்டோம். அவர்கள் (பாவத்திலிருந்து விலகி நம்மிடம்) திரும்பி வரும் பொருட்டுப் பல அத்தாட்சிகளை (ஒன்றன் பின் ஒன்றாக) நாம் காண்பித்து வந்தோம். (எனினும், அவற்றை அவர்கள் பொருட்படுத்தவே இல்லை. ஆதலால், நாம் அவர்களை அழித்துவிட்டோம்)

[28] (அல்லாஹ்வுக்குத்) தங்களைச் சமீபமாக்கி வைக்கக்கூடிய தெய்வங்கள் என்று அல்லாஹ் அல்லாதவற்றை இவர்கள் எடுத்துக் கொண்டார்களே, அவையேனும் இவர்களுக்கு உதவி செய்திருக்க வேண்டாமா? ஆனால், அவையெல்லாம் இவர்களை விட்டும் மறைந்து விட்டன. இவையெல்லாம் அவர்கள் கற்பனை செய்துகொண்டு பொய்யாகக் கூறியவைதான் (என்று தெளிவாகி விட்டது)

[29] (நபியே!) இந்த குர்ஆனைக் கேட்கும் பொருட்டு, ஜின்களில் சிலரை நாம் உம்மிடம் வருமாறு செய்து, அவர்கள் வந்த சமயத்தில் (அவர்கள் தங்கள் மக்களை நோக்கி) ‘‘நீங்கள் வாய் பொத்தி (இதைக் கேட்டுக்கொண்டு) இருங்கள்'' என்று கூறினார்கள். (இது) ஓதி முடிவு பெறவே, தங்கள் இனத்தார்களிடம் சென்று அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய முற்பட்டனர்

[30] (அவர்களை நோக்கி) ‘‘எங்கள் இனத்தார்களே! நிச்சயமாக நாங்கள் ஒரு வேதத்தைச் செவியுற்றோம். அது மூஸாவுக்குப் பின்னர் அருளப்பட்டிருக்கிறது. அது, தனக்கு முன்னுள்ள வேதங்களையும் உண்மைப்படுத்துகிறது. அது சத்தியத்திலும், நேரான வழியிலும் செலுத்துகிறது

[31] எங்கள் இனத்தார்களே! அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவர்களுக்குப் பதில் கூறி, அவரை நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் பாவங்களை (அல்லாஹ்) மன்னித்தும் விடுவான். துன்புறுத்தும் வேதனையிலிருந்து உங்களை காப்பாற்றுவான்

[32] எவன் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவர்களுக்குப் பதில் கூறவில்லையோ (அவனை நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பான். தண்டனையில் இருந்து தப்ப) அவன் பூமியில் எங்கு ஓடியபோதிலும் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாது. பாதுகாப்பவர் அல்லாஹ்வைத் தவிர அவனுக்கு ஒருவருமில்லை. (அவனைப் புறக்கணிக்கும்) இவர்கள் பகிரங்கமான வழி கேட்டில்தான் இருப்பர்'' என்றார்கள்

[33] வானங்களையும், பூமியையும் எவ்வித சிரமமின்றி படைத்த அல்லாஹ், மரணித்தவர்களை உயிர்ப்பிக்க நிச்சயமாக ஆற்றல் உடையவன்தான் என்பதை அவர்கள் கவனிக்க வேண்டாமா? ஆம், நிச்சயமாக அவன் சகலவற்றிற்கும் ஆற்றலுடையவன்

[34] நிராகரிப்பவர்களை நரகத்தின்முன் கொண்டுவரப்படும் நாளில் (அவர்களை நோக்கி,) ‘‘இது உண்மையல்லவா? (என்று கேட்கப்படும்.) அதற்கு அவர்கள் ஏனில்லை! ‘‘எங்கள் இறைவன் மீது சத்தியமாக! உண்மைதான்'' என்று கூறுவார்கள். (அதற்கவர்களை நோக்கி) ‘‘நீங்கள் இதை நிராகரித்ததன் காரணமாக இதன் வேதனையை அனுபவித்துக் கொண்டிருங்கள்'' என்று கூறுவான்

[35] (நபியே!) நம் தூதர்களிலுள்ள உறுதியுடைய வீரர்கள் (சிரமங்களைச்) சகித்துக் கொண்டிருந்தபடியே நீரும் சகித்துக்கொண்டு பொறுமையாக இருப்பீராக. அவர்களுக்கு (வேதனையை) நீர் அவசரப்பட வேண்டாம். அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை அவர்கள் காணும் நாளில் (இப்புவியில்) பகலின் ஒரு நாழிகையே தவிர (அதற்கு அதிகமாக)த் தங்கியிருக்கவில்லை என்று அவர்கள் எண்ணுவார்கள். (இதை) அவர்களுக்கு (நீர்) அறிவிக்க வேண்டும். ஆகவே, பாவம் செய்த மக்களைத் தவிர (மற்றெவரும்) அழிக்கப்படுவார்களா? (இல்லவே இல்லை)

முஹம்மது

Surah 47

[1] எவர்கள், (இவ்வேதத்தை) நிராகரித்துவிட்டதுடன், அல்லாஹ்வின் பாதையில் (மனிதர்கள்) செல்வதையும் தடுத்துக் கொண்டிருந்தார்களோ, அவர்களின் செயல்களை அவன் பயனற்றதாக்கி விட்டான்

[2] எவர்கள், (அல்லாஹ்வை) நம்பிக்கைகொண்டு நற்செயல்களையும் செய்து, முஹம்மது (நபி (ஸல்)) அவர்கள் மீது இறைவனால் இறக்கப்பட்ட உண்மையான இவ்வேதத்தையும் நம்பிக்கை கொண்டிருந்தார்களோ, அவர்கள் (செய்த) பாவத்திற்கு இதைப் பரிகாரமாக்கி, அவர்களுடைய காரியங்களையும் அவன் சீர்படுத்தி விட்டான்

[3] ஏனென்றால், நிச்சயமாக நிராகரிப்பவர்கள் பொய்யையே பின்பற்றி இருந்தார்கள். நம்பிக்கை கொண்டவர்களோ, நிச்சயமாகத் தங்கள் இறைவனிடமிருந்து வந்த உண்மையையே பின்பற்றி இருந்தார்கள். இவ்வாறே (மற்ற) மனிதர்களுக்கு அல்லாஹ் அவர்களின் தன்மைகளை தெளிவாக்குகிறான்

[4] (நம்பிக்கையாளர்களே! உங்களை எதிர்த்து போர் புரியும்) நிராகரிப்பவர்களை நீங்கள் சந்திப்பீர்களாயின், (தயக்கமின்றி) அவர்களுடைய கழுத்துகளை வெட்டுங்கள். அவர்களை முறியடித்து விட்டால், (மிஞ்சியவர்களைச் சிறை) பிடித்துக் கட்டுங்கள். அதன் பின்னர், அவர்களிடம் ஒரு ஈடுபெற்று அல்லது (ஈடின்றி அவர்கள் மீது) கருணையாக விட்டு விடுங்கள். இவ்வாறு, (எதிரிகள்) தம் ஆயுதத்தைக் கீழே வைக்கும்வரை (போர் செய்யுங்கள்). இது அல்லாஹ்(வின் கட்டளை. அவன்) நாடியிருந்தால், (அவர்கள் உங்களுடன் போர்புரிய வருவதற்கு முன்னதாகவே) அவர்களை பழிவாங்கியிருப்பான். ஆயினும், (போரின் மூலம்) உங்களில் சிலரை, சிலரைக் கொண்டு சோதிக்கிறான். ஆகவே, அல்லாஹ்வுடைய பாதையில் எவர்கள் வெட்டப்பட்டு (இறந்து) விடுகிறார்களோ, அவர்களுடைய நன்மைகளை அவன் வீணாக்கிவிட மாட்டான். (தக்க கூலியையே கொடுப்பான்)

[5] அவர்களை நேரான பாதையில் செலுத்தி அவர்களுடைய நிலைமையையும் சீர்படுத்திவிடுவான்

[6] இன்னும் அவன் அவர்களுக்கு அறிவித்திருந்த சொர்க்கத்திலும் அவர்களைப் புகுத்துவான்

[7] நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி புரிந்தால், அவனும் உங்களுக்கு உதவி புரிந்து உங்கள் பாதங்களை உறுதியாக்கி விடுவான்

[8] எவர்கள் (இவ்வேதத்தை) நிராகரிக்கிறார்களோ, அவர்களுக்குக் கேடுதான். (அவர்களுடைய கால்களைப் பெயர்த்து) அவர்களுடைய செயல்களையெல்லாம் பயனற்றதாக்கி விடுவான்

[9] இதன் காரணமாவது : அல்லாஹ் இறக்கிவைத்ததை மெய்யாகவே அவர்கள் வெறுத்து (நிராகரித்து) விட்டார்கள். ஆதலால், அவர்களுடைய செயல்களை (எல்லாம் அல்லாஹ்) அழித்துவிட்டான்

[10] அவர்கள் பூமியில் சுற்றித் திரிந்து பார்க்கவில்லையா? அவ்வாறாயின் இவர்களுக்கு முன்னர் (விஷமம் செய்துகொண்டு) இருந்தவர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதைக் கண்டு கொள்வார்கள். (முன்னர் விஷமம் செய்திருந்த) அவர்களை அடியோடு அழித்துவிட்டான். நிராகரிக்கும் இவர்களுக்கும் இது போன்ற தண்டணைகளே நிகழும்

[11] இதன் காரணமாவது : நிச்சயமாக நம்பிக்கை கொண்டவர்களை காப்பவனாக அல்லாஹ்வே இருக்கிறான். நிராகரிப்பவர்களுக்கோ, நிச்சயமாக ஒரு பாதுகாவலனுமில்லை

[12] எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் சொர்க்கத்தில் புகுத்துகிறான். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும். எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்கள், மிருகங்கள் தின்பதைப்போல் தின்று கொண்டும், (மிருகங்களைப் போல்) சுகம் அனுபவித்துக் கொண்டும் இருக்கிறார்கள். (எனினும்,) அவர்கள் செல்லுமிடம் நரகம்தான்

[13] (நபியே!) உமது ஊரைவிட்டும் உம்மை வெளிப்படுத்திய இவர்களைவிட எத்தனையோ ஊரார்கள் மிக்க பலசாலிகளாக இருந்தனர். (அவர்கள் செய்த அநியாயத்தின் காரணமாக) அவர்கள் அனைவரையும் நாம் அழித்து விட்டோம். (அச்சமயம்) அவர்களுக்கு உதவி செய்பவர்கள் ஒருவரும் இருக்கவில்லை. (ஆகவே, இவர்கள் எம்மாத்திரம்! இவர்களையும் நாம் அழித்தே தீருவோம்)

[14] தங்கள் இறைவனின் தெளிவான (நேரிய) பாதையின் மீது இருப்பவர்கள், தங்கள் தீய காரியங்களையே அழகாகக் கண்டு, தங்கள் சரீர இச்சைகளையே பின்பற்றுகிறவர்களுக்கு ஒப்பாகுவார்களா

[15] இறையச்சமுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தின் தன்மையாவது: அதில் தீங்கற்ற (பரிசுத்தமான) நீரருவிகள் இருக்கின்றன. பரிசுத்தமான ருசி மாறாத பாலாறுகளும் இருக்கின்றன. திராட்சை ரச ஆறுகளும் இருக்கின்றன. அது குடிப்பவர்களுக்குப் பேரின்பமளிக்கக் கூடியது. தெளிவான தேனாறுகளும் இருக்கின்றன. இன்னும் அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவர்க்கங்கள் இருப்பதுடன், இறைவனின் மன்னிப்பும் அவர்களுக்கு உண்டு. (இத்தகைய இன்பங்களை அனுபவிப்பவர்கள்) நரகத்தில் என்றென்றுமே தங்கியிருந்து, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு, குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடக்கூடிய நரகவாசிகளுக்கு ஒப்பாகுவார்களா

[16] (நபியே! நீர் இவ்வேதத்தை ஓதிய சமயத்தில்) உமக்குச் செவிசாய்ப்பவர்களைப் போல் இருந்து பிறகு, உம்மை விட்டு வெளிப்பட்டதும், (நம்பிக்கையாளர்களாகிய, இவ்வேத) ஞானம் கொடுக்கப்பட்டவர்களை நோக்கி(ப் பரிகாசமாக ‘‘உங்கள் நபி) சற்று முன் என்ன கூறினார்?'' எனக் கேட்பவர்களும் அவர்களில் பலர் இருக்கின்றனர். இத்தகையவர்களின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். (ஆதலால்,) இவர்கள் தங்கள் சரீர இச்சையைத்தான் பின்பற்றி நடக்கின்றனர்

[17] எவர்கள் நேரான வழியில் செல்கிறார்களோ (அவர்கள் இந்த வேதத்தை கவனத்துடன், பின்பற்றும் எண்ணத்துடன் செவியுறுவதன் காரணமாக) அவர்களுடைய நேர்வழியை (மேலும்) அதிகப்படுத்தி இறையச்சத்தையும் அவர்களுக்கு (அல்லாஹ்) அளிக்கிறான்

[18] (நபியே! அந்தப் பாவிகள்) தங்களிடம் திடீரென வரக்கூடிய மறுமை(யின் வேதனை)யைத் தவிர (வேறெதனையும்) எதிர்பார்க்கின்றனரா? அதன் அடையாளங்கள் (பல) நிச்சயமாக வந்துவிட்டன. அது அவர்களிடம் வந்ததன் பின்னர், அதைப் பற்றி அவர்கள் நல்லுணர்வு பெறுவதால் என்ன பயன்

[19] (நபியே!) நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் இல்லை என்பதை நீர் உறுதியாக அறிந்துகொண்டு, உமது தவறுகளை மன்னிக்கக் கோருவதுடன், நம்பிக்கைகொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் மன்னிப்புக் கோருவீராக! (நம்பிக்கையாளர்களே!) உங்கள் நடமாட்டத்தையும் நீங்கள் தங்கும் இடங்களையும் அல்லாஹ் நன்கறிவான்

[20] நம்பிக்கை கொண்டவர்களிலும் பலர், (போரைப் பற்றி) ஒரு (தனி) அத்தியாயம் இறக்கப்பட வேண்டாமா? என்று கூறுகின்றனர். அவ்வாறே (தெளிவான) ஒரு திட்டமான அத்தியாயம் இறக்கப்பட்டு போர் செய்யுமாறு அதில் கூறப்பட்டிருந்தால், எவர்களுடைய உள்ளங்களில் நோய் இருக்கிறதோ அவர்கள், மரண அவஸ்தையில் சிக்கி மயங்கிக் கிடப்பவர் பார்ப்பதைப் போல் (நபியே!) உம்மை அவர்கள் நோக்குவார்கள். ஆகவே, அவர்களுக்குக் கேடுதான்

[21] (நபியே! உமக்கு) கீழ்ப்படிந்து நடப்பதும், (உம்மிடம் எதைக் கூறியபோதிலும்) உண்மையைச் சொல்வதும்தான் அவர்களுக்கு நன்று. ஆகவே, (போரைப் பற்றி) ஒரு காரியம் முடிவாகிவிட்ட பின்னர், அல்லாஹ்வுக்கு (அவர்கள்) உண்மையாக நடந்துகொண்டால், அது அவர்களுக்குத்தான் நன்மையாக இருக்கும்

[22] (நயவஞ்சகர்களே!) நீங்கள் (போருக்கு வராது) விலகிக் கொண்டதன் பின்னர், நீங்கள் பூமியில் சென்று விஷமம் (கலகம்) செய்து உங்கள் இரத்த உறவுகளை துண்டித்துவிடப் பார்க்கிறீர்களா

[23] இத்தகையவர்களை அல்லாஹ் சபித்து, அவர்களைச் செவிடர்களாக்கி, அவர்களுடைய பார்வையையும் போக்கி குருடர்களாக்கி விட்டான்

[24] அவர்கள் இந்த குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது, அவர்களுடைய உள்ளங்கள் மீது தாளிடப்பட்டு விட்டதா

[25] நிச்சயமாக எவர்களுக்கு நேரான வழி இன்னதென்று தெளிவானதன் பின்னரும், அவர்கள் (அதன்மீது செல்லாது) தங்கள் பின்புறமே திரும்பிச் சென்று விட்டார்களோ, அவர்களை ஷைத்தான் மயக்கி விட்டான். மேலும், அவர்களுடைய தப்பெண்ணங்களையும் விரிவாக்கி, அவர்களுக்கு அவற்றை அழகாக்கியும் விட்டான்

[26] இதன் காரணமாவது: நிச்சயமாக இவர்கள் அல்லாஹ் இறக்கிய (இந்த வேதத்)தை வெறுப்பவர்(களாகிய யூதர்)களை நோக்கி ‘‘நாங்கள் சில விஷயங்களில் உங்களையே பின்பற்றி நடப்போம்'' என்று (இரகசியமாகக்) கூறுகின்றனர். இவர்களுடைய இரகசியங்களை அல்லாஹ் நன்கறிவான்

[27] இவர்கள் (சாகும்பொழுது) உயிர்களைக் கைப்பற்றும் வானவர்கள் இவர்களுடைய முகத்திலும், முதுகிலும் பலமாக அடி(ப்பார்கள். அவர்கள் அடி)க்கும்பொழுது இவர்களுடைய நிலைமை எவ்வாறிருக்கும்

[28] இதன் காரணமாவது: நிச்சயமாக இவர்கள் அல்லாஹ்வுக்குக் கோப மூட்டக் கூடியவற்றையே பின்பற்றி, அவனுக்குத் திருப்தித்தரக்கூடியவற்றை வெறுத்து வந்தனர். ஆதலால், இவர்களுடைய நன்மைகள் அனைத்தையும் அல்லாஹ் அழித்துவிட்டான்

[29] எவர்களுடைய உள்ளங்களில் (வஞ்சகமென்னும்) நோய் இருக்கிறதோ அவர்கள், தங்கள் சூழ்ச்சிகளை அல்லாஹ் வெளிப்படுத்திவிட மாட்டான் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரா

[30] (நபியே!) நாம் விரும்பினால், அவர்களை உமக்கு காட்டிக் கொடுத்து விடுவோம். (அப்போது) அவர்களுடைய முகக்குறியைக் கொண்டே நீரும் அவர்களை அறிந்து கொள்வீர். அவர்களுடைய தந்திரமான பேச்சின் போக்கைக் கொண்டும் நீர் அவர்களை நிச்சயமாக அறிந்து கொள்வீர். (நயவஞ்சகர்களே!) அல்லாஹ் உங்கள் செயல்களை நன்கறிவான்

[31] (நம்பிக்கையாளர்களே!) உங்களில் (மனமொப்பி) போர் புரிபவர்கள் எவர்கள் என்பதையும், (போரில் ஏற்படும்) சிரமங்களை (உறுதியாக) சகித்திருப்பவர்கள் எவர்கள் என்பதையும் நாம் அறிந்து வெளிப்படுத்தும் வரை, உங்களையும் உங்களைப் பற்றிய விஷயங்களையும் நாம் சோதனைக்குள்ளாக்கியே வருவோம்

[32] நிச்சயமாக எவர்கள் நேரான வழி இன்னதென்று தெளிவான பின்னரும் (அதை) நிராகரித்துவிட்டு, அல்லாஹ்வின் பாதையை விட்டு (மக்களைத்) தடுத்துக் கொண்டு (அல்லாஹ்வுடைய) தூதருக்கு விரோதமாக நடக்கிறார்களோ அவர்கள், (அதனால்) நிச்சயமாக அல்லாஹ்வுக்கு ஒரு தீங்கும் செய்துவிட முடியாது. அவர்களுடைய (சூழ்ச்சியான) காரியங்களை எல்லாம் நிச்சயமாக அல்லாஹ் அழித்து விடுவான்

[33] நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்ப்படியுங்கள், அவனுடைய தூதருக்கு கீழ்ப்படியுங்கள். (அவர்களுக்கு மாறு செய்து) உங்கள் நன்மைகளை நீங்கள் வீணாக்கிவிடாதீர்கள்

[34] எவர்கள் நிராகரித்து, அல்லாஹ்வுடைய பாதையை விட்டு (மக்களைத்) தடுத்துக் கொண்டு, நிராகரித்த வண்ணமே இறந்துவிடுகிறார்களோ, அவர்களுடைய குற்றங்களை அல்லாஹ் ஒரு காலத்திலும் மன்னிப்பதே இல்லை

[35] (நம்பிக்கையாளர்களே! இழிவு தரக்கூடிய விதத்தில்) நீங்கள் தைரியம் இழந்து சமாதானத்தைக் கோராதீர்கள். (ஏனென்றால்,) நீங்கள்தான் வெற்றி பெறுவீர்கள். அல்லாஹ் உங்களுடன்தான் இருக்கிறான். உங்கள் நன்மைகளில் ஒன்றையும் அவன் உங்களுக்கு குறைத்துவிட மாட்டான்

[36] இவ்வுலக வாழ்க்கையெல்லாம் வீண் விளையாட்டும் வேடிக்கையும்தான். நீங்கள் மெய்யாகவே நம்பிக்கைகொண்டு அவனுக்குப் பயந்து நடந்துகொண்டால், உங்கள் நற்கூலிகளை உங்களுக்கு வழங்குவான்.உங்கள் பொருள்களை அவன் (தனக்காக) உங்களிடம் கேட்கவில்லை. (நன்மைக்காகவே கேட்கிறான்)

[37] அவ்வாறு, அவன் (தனக்காக) உங்களிடம் கேட்டு வற்புறுத்தினாலும் (அதைக் கொடுக்காது) நீங்கள் கஞ்சத்தனம் செய்வீர்கள்; (அந்நேரத்தில்) அல்லாஹ் உங்கள் கெட்ட எண்ணங்களை வெளியாக்கி விடுவான்

[38] (மக்களே!) நீங்கள் நன்கு கவனத்தில் வையுங்கள். அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்ய அழைக்கப்படும் சமயத்தில், கஞ்சத்தனம் செய்பவரும் உங்களில் இருக்கிறார். அவ்வாறு எவரேனும் கஞ்சத்தனம் செய்தால், அவர் தனக்குக் கேடாகவே கஞ்சத்தனம் செய்கிறார். அல்லாஹ்வோ தேவையற்றவன். நீங்கள் தேவைப்பட்டவர்களாகவே இருக்கிறீர்கள். (அவனுடைய கட்டளைகளை) இன்னும் நீங்கள் புறக்கணித்தால், (உங்களை அழித்து) உங்களை அல்லாத மக்களை (உங்கள் இடத்தில்) மாற்றி (அமைத்து) விடுவான். பின்னர், அவர்கள் உங்களைப் போல் இருக்கமாட்டார்கள்

அல்ஃபத்ஹ்

Surah 48

[1] (நபியே! ஹுதைபிய்யாவின் சமாதான உடன்படிக்கையின் மூலம்) நிச்சயமாக நாம் உமக்கு (மிகப் பெரிய) தெளிவானதொரு வெற்றியைத் தந்தோம்

[2] (அதற்காக நீர் உமது இறைவனுக்கு நன்றி செலுத்துவீராக! அதனால்,) உமது முன் பின் தவறுகள் அனைத்தையும் அல்லாஹ் மன்னித்து தனது அருட்கொடையையும் உம் மீது முழுமைப்படுத்தி வைத்து, உம்மை அவன் நேரான வழியிலும் நடத்துவான்

[3] (நபியே!) மேலும் (தொடர்ந்து) அல்லாஹ் உமக்குப் பலமான உதவி புரிந்தே வருவான்

[4] நம்பிக்கை கொண்டவர்களுடைய உள்ளங்களில் அவன்தான் சாந்தியையும், ஆறுதலையும் அளித்து, அவர்களுடைய நம்பிக்கை மேலும் அதிகரிக்கும்படி செய்தான். வானங்கள், பூமி முதலியவற்றிலுள்ள படைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே. (அவற்றைக்கொண்டு அவன் விரும்பியவர்களுக்கு உதவி புரிவான்.) அவன் (அனைத்தையும்) நன்கறிந்தவனாக ஞானமுடையவனாக இருக்கிறான்

[5] நம்பிக்கைகொண்ட ஆண்களையும், பெண்களையும் (அல்லாஹ்) சொர்க்கங்களில் புகுத்துவான். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டேயிருக்கும். என்றென்றும் அவர்கள் அதில் தங்கி விடுவார்கள். அவர்களின் பாவங்களையும், அவர்களிலிருந்து நீக்கிவிடுவான். இது அல்லாஹ்விடத்தில் கிடைக்கும் மகத்தான ஒரு வெற்றியாக இருக்கிறது

[6] அல்லாஹ்வைப் பற்றிக் கெட்ட எண்ணம் கொள்கின்ற நயவஞ்சகமுள்ள ஆண்களையும் பெண்களையும், இணைவைத்து வணங்குகின்ற ஆண்களையும் பெண்களையும் (அல்லாஹ்) வேதனை செய்தே தீருவான். வேதனை அவர்கள் (தலைக்கு) மேல் சூழ்ந்துகொண்டு இருக்கிறது. அல்லாஹ் அவர்கள் மீது கோபப்பட்டு, அவர்களைச் சபித்து, அவர்களுக்காக நரகத்தையும் தயார்படுத்தி வைத்திருக்கிறான். அது செல்லுமிடங்களில் மகா கெட்டது

[7] வானங்கள் பூமியிலுள்ள படைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவையே. அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனாக. ஞானமுடையவனுமாக இருக்கிறான்

[8] (நபியே!) நிச்சயமாக நாம் உம்மை (நம்பிக்கையாளர்களின் ஈமானைப் பற்றி) சாட்சி கூறுபவராகவும், (அவர்களுக்கு) நற்செய்தி கூறுபவராகவும், (பாவிகளுக்கு) அச்சமூட்டி எச்சரிப்பவராகவும் அனுப்பி வைத்தோம்

[9] ஆகவே, (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொண்டு, அவருக்கு உதவி புரிந்து, அவரை கண்ணியப்படுத்தி வைத்து, காலையிலும் மாலையிலும் அவனை துதி செய்து வாருங்கள்

[10] (நபியே!) எவர்கள் (தங்கள் உடல், பொருள், உயிரை தியாகம் செய்து உமக்கு உதவி புரிவதாக ஹுதைபிய்யாவில் உமது கையைப் பிடித்து) உம்மிடம் வாக்குறுதி செய்கிறார்களோ, அவர்கள் அல்லாஹ்விடமே வாக்குறுதி செய்கின்றனர். அவர்கள் கை மீது அல்லாஹ்வுடைய கைதான் இருக்கிறது. ஆகவே, (அவ்வாக்குறுதியை) எவன் முறித்து விடுகிறானோ, அவன் தனக்குக் கேடாகவே அதை முறிக்கிறான். எவர் அல்லாஹ்விடம் செய்த அந்த வாக்குறுதியை முழுமைப்படுத்தி வைக்கிறாரோ, அவருக்கு அல்லாஹ் மகத்தான கூலியை அதிசீக்கிரத்தில் கொடுப்பான்

[11] (நபியே! போர் செய்ய உம்முடன் வராது) பின் தங்கிவிட்ட நாட்டுப்புறத்து அரபிகள் உம்மிடம் வந்து ‘‘நாங்கள் உம்முடன் வர எங்கள் பொருள்களும் எங்கள் குடும்பங்களும் எங்களுக்கு அவகாசமளிக்கவில்லை'' என்று (பொய்யாகக்) கூறி, ‘‘(இறைவனிடம்) நீர் எங்களுக்கு மன்னிப்புக் கோருவீராக!'' என்று கூறுவார்கள். அவர்கள் தங்கள் உள்ளங்களில் இல்லாதவற்றைத் தங்கள் நாவுகளால் கூறுகின்றனர். ஆகவே, (நபியே!) (அவர்களை நோக்கிக்) கூறுவீராக: ‘‘அல்லாஹ் உங்களுக்கு ஒரு தீமை செய்ய நாடினாலும் அல்லது அவன் உங்களுக்கு ஒரு நன்மை செய்ய நாடினாலும் அதில் எதையும் அல்லாஹ்வுக்கு விரோதமாக உங்களுக்குத் தடுத்து விடக்கூடியவன் யார்? மாறாக, நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்

[12] மாறாக, (அல்லாஹ்வுடைய) தூதரும் அவரை நம்பிக்கை கொண்டவர்களும் (போரிலிருந்து) தங்கள் குடும்பத்தார்களிடம் ஒரு காலத்திலும் திரும்பி வரவே மாட்டார்கள் என்று நீங்கள் நிச்சயமாக எண்ணிக் கொண்டிருந்தீர்கள். (ஆதலால்தான் போருக்கு நீங்கள் வரவில்லை.) இதுவே உங்கள் மனதில் அழகாக்கப்பட்டது. ஆதலால், நீங்கள் கெட்ட எண்ணத்தையே எண்ணிக் கொண்டிருந்தீர்கள். நீங்கள்தான் அழிந்து போகும் மக்களாக இருந்தீர்கள்

[13] எவன் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் உண்மையாகவே நம்பிக்கை கொள்ளவில்லையோ (அவன் நிராகரிப்பவன்தான். ஆகவே,) அத்தகைய நிராகரிப்பாளர்களுக்கு நரகத்தையே நிச்சயமாக நாம் தயார்படுத்தி வைத்திருக்கிறோம்

[14] வானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே! அவன் நாடியவர்களை மன்னித்து விடுகிறான். அவன் நாடியவர்களை வேதனை செய்கிறான். அல்லாஹ் மிக மன்னிப்பவனாக, கருணையுடையவனாக இருக்கிறான்

[15] (நபியே! முன்னர் போருக்கு உம்முடன் வராது) பின் தங்கிவிட்டவர்கள், போரில் கிடைத்த பொருள்களை எடுத்துக்கொள்ள நீங்கள் செல்லும் சமயத்தில், (உங்களை நோக்கி) ‘‘நாங்களும் உங்களைப் பின்பற்றிவர எங்களை (அனுமதித்து) விடுங்கள்'' என்று கூறுவார்கள். இவர்கள் அல்லாஹ்வுடைய கட்டளையை மாற்றிவிடவே கருதுகிறார்கள். ஆகவே, நீர் அவர்களை நோக்கி ‘‘நீங்கள் எங்களைப் பின்பற்றி வர வேண்டாம். இதற்கு முன்னரே அல்லாஹ் இவ்வாறு கூறிவிட்டான்'' என்றும் கூறுவீராக. அதற்கவர்கள், (‘‘அல்லாஹ் ஒன்றும் கூறவில்லை;'') மாறாக, நீங்கள்தான் நம்மீது பொறாமைகொண்டு (இவ்வாறு) கூறுகிறீர்கள் என்று கூறுவார்கள். மாறாக, அவர்களில் சிலரைத் தவிர (மற்றெவரும் இதன் கருத்தை) உணர்ந்து கொள்ள மாட்டார்கள்

[16] (நபியே!) பின்தங்கிய நாட்டுப்புறத்து அரபிகளை நோக்கி நீர் கூறுவீராக: ‘‘மிக பலசாலிகளான மக்களுடன் (போர்புரிய) அதிசீக்கிரத்தில் நீங்கள் அழைக்கப்படுவீர்கள். அவர்கள் முற்றிலும் கட்டுப்படும் வரை, நீங்கள் அவர்களுடன் போர்புரிய வேண்டியதிருக்கும். (இதில்) நீங்கள் (எனக்கு) கட்டுப்பட்டு நடப்பீர்களாயின், அல்லாஹ் உங்களுக்கு அழகான கூலியைக் கொடுப்பான். இதற்கு முன்னர் நீங்கள் (போர் செய்யாது) திரும்பிவிட்டபடி (அச்சமயம் போர் புரியாது) நீங்கள் திரும்பி விடுவீர்களாயின், அவன் உங்களை மிகக் கடினமாகத் துன்புறுத்தி வேதனை செய்வான்.”

[17] (போருக்கு வராததைப் பற்றிக்) குருடர் மீது ஒரு குற்றமுமில்லை; நொண்டி மீதும் ஒரு குற்றமுமில்லை; நோயாளி மீதும் ஒரு குற்றமுமில்லை. எவர் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மெய்யாகவே கீழ்ப்படிந்து (போருக்கு உம்முடன்) வருகிறாரோ, அவரை (அல்லாஹ்) சொர்க்கங்களில் புகுத்துவான். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். எவர் (உமக்கு கீழ்ப்படியாமல் போருக்கு உம்முடன் வராது) புறக்கணிக்கிறாரோ, அவரை மிகக் கடினமாகவே துன்புறுத்தி வேதனை செய்வான்

[18] அந்த மரத்தினடியில் உம்மிடம் (கைகொடுத்து) வாக்குறுதி செய்த நம்பிக்கையாளர்களைப் பற்றி நிச்சயமாக அல்லாஹ் திருப்தியடைந்தான். அவர்களின் உள்ளங்களிலிருந்த (உண்மையான தியாகத்)தை நன்கறிந்து, சாந்தியையும், ஆறுதலையும் அவர்கள் மீது சொரிந்தான். உடனடியான ஒரு வெற்றியையும் (கைபர் என்னும் இடத்தில்) அவர்களுக்கு வெகுமதியாகக் கொடுத்தான்

[19] (அந்த போரில்) ஏராளமான பொருள்களையும் அவர்கள் கைப்பற்றும்படி செய்தான். அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான்

[20] ஏராளமான பொருள்களை (போரில்) நீங்கள் கைப்பற்றுவீர்கள் என்று அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்திருந்தான். (அவற்றில்) இதை உங்களுக்கு அதிசீக்கிரத்திலும் கொடுத்துவிட்டான். (உங்களுக்கு எதிரான) மனிதர்களின் கைகளையும் உங்களைவிட்டுத் தடுத்துவிட்டான். இது நம்பிக்கையாளர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஏற்பட்டது. அவனே உங்களை நேரான பாதையில் நடத்துவான்

[21] (பாரசீகம், ரோம் முதலிய தேசங்களில் உங்களுக்கு) மற்றொரு வெற்றி (இருக்கிறது.) அதற்கு நீங்கள் இன்னும் தகுதியுடையவர்களாகவில்லை; எனினும், அல்லாஹ் அதை சூழ்ந்து கொண்டிருக்கிறான். அல்லாஹ் அனைத்தின் மீதும் ஆற்றலுடையவனாகவே இருக்கிறான்

[22] நிராகரிப்பவர்கள் (இச்சமயம்) உங்களுடன் போர் புரிவார்களாயின், அவர்களே புறங்காட்டி ஓடுவார்கள். பின்னர், தங்களுக்கு ஒரு பாதுகாவலனையும் உதவி செய்பவனையும் காணமாட்டார்கள்

[23] (நிராகரிப்பவர்கள் விஷயத்தில் கடைப்பிடிக்கப்படுகிற) அல்லாஹ்வுடைய வழிமுறை இதுதான். இதற்கு முன்னரும் (இவ்வாறே) நடந்திருக்கின்றன. ஆகவே, அல்லாஹ்வுடைய வழிமுறையில் நீர் எவ்வித மாறுதலையும் காணமாட்டீர்

[24] மக்காவின் சமீபமாக அவர்கள் மீது உங்களுக்கு வெற்றியைக் கொடுத்ததன் பின்னர், அவர்களுடைய கைகளை உங்களைவிட்டும் அவனே தடுத்துக் கொண்டான். (அவ்வாறே) உங்கள் கைகளையும் அவர்களை விட்டுத் தடுத்துக் கொண்டான். ஏனென்றால், அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்கியவனாகவே இருந்தான்

[25] (நீங்கள் வெற்றிகொண்ட) இந்த மக்காவாசிகள்தான் (அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும்) நிராகரித்து விட்டதுடன், உங்களையும் சிறப்புற்ற மஸ்ஜிது (என்னும் கஅபாவு)க்குச்செல்லாதும், குர்பானியையும் அது செல்ல வேண்டிய எல்லைக்குச் செல்லாதும் தடுத்து நிறுத்தியவர்கள். ஆயினும், அங்கு அவர்களுடன் நீங்கள் அறியாத நம்பிக்கைகொண்ட ஆண்களும், பெண்களும் இருந்தனர். (அச்சமயம் உங்கள் எதிரிகளை நீங்கள் வெட்டினால்,) இந்த நம்பிக்கையாளர்களும் (நீங்கள் அறியாமல்) உங்கள் காலில் மிதிபட்டு, அதன் காரணமாக நீங்கள் அறியாது உங்களுக்கு நஷ்டம் ஏற்படக்கூடும் என்பது இல்லாதிருந்தால், (அச்சமயம் அவர்களுடன் போர்புரிய உங்களுக்கு அனுமதி கொடுத்து, மக்காவில் நீங்கள் நுழையும்படியும் செய்திருப்பான். அப்பொழுது நீங்கள் மக்காவில் நுழையாது உங்களை அவன் தடுத்துக் கொண்டதெல்லாம், ஹுதைபியா உடன்படிக்கையின் மத்திய காலத்தில்) அல்லாஹ், தான் நாடியவர்களை (இஸ்லாம் என்னும்) தன் அருளில் புகுத்துவதற்காகவே ஆகும். (நீங்கள் அறியாத மக்காவிலுள்ள நம்பிக்கையாளர்கள்) அவர்களிலிருந்து விலகி இருப்பார்களேயானால், (அவர்கள் மீது போர் புரிய உங்களுக்கு அனுமதி கொடுத்து) அவர்களில் உள்ள நிராகரிப்பவர்களை நாம் கடினமாகவே துன்புறுத்தி வேதனை செய்திருப்போம்

[26] நிராகரித்தவர்கள் தங்கள் உள்ளங்களில் (உங்களை வேருடன் அழித்துவிட வேண்டுமென்ற) மூடத்தனமான வைராக்கியத்தை நிலை நிறுத்திக்கொண்ட சமயத்தை நினைத்துப் பாருங்கள். அச்சமயம் அல்லாஹ் தன் தூதர் மீதும், நம்பிக்கை கொண்டவர்கள் மீதும், தன் ஆறுதலையும், உறுதியையும் இறக்கி வைத்துப் பரிசுத்த வாக்கியத்தின் மீது அவர்களை உறுதிப்படுத்தினான். அவர்கள் அதற்குத் தகுதியுடையவர்களாகவும், அதை அடைய வேண்டியவர்களாகவும் இருந்தார்கள். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கிறான்

[27] நிச்சயமாக அல்லாஹ் தன் தூதருக்கு அவர் கண்ட கனவை மெய்யாகவே உண்மையாக்கி வைத்து விட்டான். அல்லாஹ் நாடினால், நிச்சயமாக நீங்கள் சிறப்புற்ற மஸ்ஜிதில் அச்சமற்றவர்களாகவும், உங்கள் தலை முடிகளைச் சிரைத்துக் கொண்டவர்களாகவும், கத்தரித்துக் கொண்டவர்களாகவும் நுழைவீர்கள். அச்சமயம், நீங்கள் (ஒருவருக்கும்) பயப்படமாட்டீர்கள். (அப்போது) நீங்கள் அறியாதிருந்ததை (ஏற்கனவே அல்லாஹ்) அறிந்திருந்தான். ஆகவே, இதையன்றி உடனடியான மற்றொரு வெற்றியையும் உங்களுக்குக் கொடுத்தான்

[28] அவனே, தன் தூதரை நேரான வழியைக் கொண்டும், சத்தியமான மார்க்கத்தைக் கொண்டும் அதை எல்லா மார்க்கங்களைவிட மேலோங்க வைப்பதற்காக அனுப்பி வைத்தான். இதற்கு அல்லாஹ்வே போதுமான சாட்சியாவான்

[29] முஹம்மது (ஸல்) அல்லாஹ்வுடைய திருத்தூதராவார்கள். (அவரும்)அவருடன் இருப்பவர்களும் நிராகரிப்பவர்கள் விஷயத்தில் கண்டிப்பானவர்களாகவும், தங்களுக்குள் மிக்க அன்புடையவர்களாகவும் இருப்பார்கள்.குனிந்து சிரம் பணிந்து வணங்குபவர்களாக அவர்களை நீர் காண்பீர். அல்லாஹ்வின் அருளையும், அவனுடைய திருப்பொருத்தத்தையும் (எந்த நேரமும்) விரும்பியவர்களாக இருப்பார்கள். அவர்களுடைய அடையாளமாவது: அவர்களுடைய முகங்களில் சிரம் பணி(ந்து வணங்கு)வதின் அடையாளம் இருக்கும். இதுவே தவ்றாத் (என்னும் வேதத்)தில் உள்ள அவர்களின் வர்ணிப்பு. இன்ஜீலில் அவர்களுக்குள்ள உதாரணமாவது: ஒரு பயிரை ஒத்திருக்கிறது. அப்பயிர் (பசுமையாகி, வளர்ந்து) உறுதிப்படுகிறது. பின்னர், அது தடித்துக் கனமாகிறது. பின்னர், விவசாயிகளுக்கு ஆச்சரியம் கொடுக்கும் விதத்தில் (வளர்ந்து,) அது தன் தண்டின் மீது நிமிர்ந்து நிற்கிறது. இவர்களைக் கொண்டு நிராகரிப்பவர்களுக்குக் கோபமூட்டும் பொருட்டு (அந்த நம்பிக்கையாளர்களை படிப்படியாக அபிவிருத்திக்குக் கொண்டுவருகிறான்). அவர்களில் எவர்கள் நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ, அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் வாக்களித்திருக்கிறான்

அல்ஹுஜுராத்

Surah 49

[1] நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் முன்பாக(ப் பேசுவதற்கு) நீங்கள் முந்திக்கொள்ளாதீர்கள். அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்

[2] நம்பிக்கையாளர்களே! (நபி பேசும்பொழுது) நபியுடைய சப்தத்திற்கு மேல் உங்கள் சப்தத்தை உயர்த்தாதீர்கள். மேலும், உங்களுக்குள் ஒருவர் மற்றொருவருடன் கூச்சலிட்டுச் சப்தமாகப் பேசுவதைப் போல், அவரிடம் சப்தத்தை உயர்த்தி நீங்கள் கூச்சலிட்டுப் பேசாதீர்கள். இதன் காரணமாக உங்கள் நன்மைகள் எல்லாம் அழிந்துவிடக்கூடும். (இதை) நீங்கள் உணர்ந்து கொள்ள முடியாது

[3] எவர்கள் அல்லாஹ்வுடைய தூதரின் முன்பாக (மரியாதைக்காகத்) தங்கள் சப்தத்தைத் தாழ்த்திக் கொள்கிறார்களோ, அவர்களுடைய உள்ளங்களை நிச்சயமாக அல்லாஹ் சோதனை செய்து இறையச்சத்திற்கு எடுத்துக் கொண்டான். அவர்களுக்கு மன்னிப்பும் உண்டு; மகத்தான கூலியும் உண்டு

[4] (நபியே!) எவர்கள் (நீர் வசித்திருக்கும்) அறைக்கு முன்பாக நின்று கொண்டு உம்மை(க் கூச்சலிட்டு)ச் சப்தமிட்டு அழைக்கிறார்களோ, அவர்களில் பெரும்பாலானவர்கள் (மார்க்கத்தை) விளங்காதவர்களே

[5] (உமது அறையிலிருந்து) நீர் வெளிப்பட்டு அவர்களிடம் நீர் வரும் வரை அவர்கள் பொறுத்திருந்தால், அது அவர்களுக்கு எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும். அல்லாஹ் மிக மன்னிப்பவன், கருணையுடையவன் ஆவான்

[6] நம்பிக்கையாளர்களே! ஒரு விஷமி உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டுவந்தால், (அதன் உண்மையை அறியும் பொருட்டு அதைத்) தீர்க்க விசாரணை செய்து கொள்ளுங்கள். (இல்லையெனில், அவனுடைய சொல்லை நம்பி) அறியாமையால் ஒரு கூட்டத்திற்கு நீங்கள் தீங்கிழைத்து விட்டுப் பின்னர், நீங்கள் செய்தவற்றைப் பற்றி நீங்களே துக்கித்துக் கவலைப்படும்படியும் நேர்ந்துவிடும்

[7] (நம்பிக்கையாளர்களே!) நிச்சயமாக உங்களிடம் அல்லாஹ்வுடைய தூதர் இருக்கிறார். பல விஷயங்களில் அவர் உங்களுக்கு கட்டுப்படுவதென்றால், நிச்சயமாக நீங்கள்தான் கஷ்டத்திற்குள்ளாகி விடுவீர்கள் என்பதை நீங்கள் உறுதியாக அறிந்துகொள்ளுங்கள். ஆயினும், அல்லாஹ் நம்பிக்கையின் மீதே உங்களுக்கு அன்பைக் கொடுத்து, உங்கள் உள்ளங்களிலும் அதையே அழகாக்கியும் வைத்தான். மேலும், நிராகரிப்பையும், பாவத்தையும், மாறு செய்வதையும் உங்களுக்கு வெறுப்பாகவும் ஆக்கிவைத்தான் இத்தகையவர்கள்தான் நேரான வழியில் இருக்கின்றனர்

[8] (மிகச்சிறந்த இத்தன்மைகளை அடைவது) அல்லாஹ்வுடைய அருளும், (அவனுடைய) கிருபையுமாகும். அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவன், ஞானமுடையவன் ஆவான்

[9] நம்பிக்கையாளர்களிலுள்ள இரு வகுப்பார் தங்களுக்குள் சச்சரவு செய்து கொண்டால், அவர்களை சமாதானப்படுத்தி விடுங்கள். அவர்களில் ஒரு வகுப்பார், மற்றொரு வகுப்பாரின் மீது வரம்பு மீறி அநியாயம் செய்தால், அநியாயம் செய்தவர்கள் அல்லாஹ்வுடைய கட்டளையின் பக்கம் வரும் வரை, அவர்களிடம் நீங்கள் போர் செய்யுங்கள். அவர்கள் (அல்லாஹ்வின் கட்டளையின் பக்கம்) திரும்பிவிட்டால், நியாயமான முறையில் அவ்விரு வகுப்பார்களுக்கிடையே சமாதானம் செய்து, நீதமாகத் தீர்ப்பளியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்

[10] நிச்சயமாக நம்பிக்கையாளர்கள் அனைவரும் சகோதரர்களே! ஆகவே, உங்கள் சகோதரர்களுக்கிடையில் ஒழுங்கை(யும் சமாதானத்தையும்) நிலை நிறுத்துங்கள். (இதில்) அல்லாஹ்வுக்குப் பயந்து நடங்கள். (இதன் காரணமாக) அவனுடைய அருளை நீங்கள் அடைவீர்கள்

[11] நம்பிக்கையாளர்களே! எந்த ஆண்களும் மற்றெந்த ஆண்களையும் பரிகாசம் செய்யவேண்டாம். அவர்கள் (அல்லாஹ்விடத்தில் பரிகாசம் செய்யும்) இவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம். அவ்வாறே எந்தப் பெண்களும் மற்ற எந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்யவேண்டாம்.) அவர்கள் (பரிகாசம் செய்யும்) இவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம். உங்களில் ஒருவர் ஒருவரை இழிவாகக் கருதி குறை கூறவேண்டாம். உங்களில் ஒருவர் மற்றவருக்கு(த் தீய) பட்டப் பெயர் சூட்ட வேண்டாம். நம்பிக்கை கொண்டதன் பின்னர், கெட்ட பெயர் சூட்டுவது மகா கெட்ட (பாவமான)தாகும். எவர்கள் (இவற்றிலிருந்து) விலகிக் கொள்ளவில்லையோ அவர்கள்தான் (வரம்பு மீறிய) அநியாயக்காரர்கள்

[12] நம்பிக்கையாளர்களே! அதிகமான சந்தேகங்களிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். ஏனென்றால், நிச்சயமாகச் சந்தேகங்களில் சில பாவமானவையாக இருக்கின்றன. (எவருடைய குற்றத்தையும்) நீங்கள் துருவித்துருவி விசாரித்துக் கொண்டிருக்க வேண்டாம். உங்களில் ஒருவர் மற்றெவரையும் புறம் பேசவேண்டாம். உங்களில் எவனும் தன் இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவானா? அதை நீங்கள் வெறுப்பீர்களே! (புறம் பேசுவதும் அவ்வாறே. இவ்விஷயங்களில்) அல்லாஹ்வுக்குப் பயந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (பாவத்திலிருந்து விலகுபவர்களை) அங்கீகரிப்பவன், கருணையுடையவன் ஆவான்

[13] மனிதர்களே! உங்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் ஒரேஓர் ஆண், ஒரேஓர் பெண்ணிலிருந்துதான் படைத்தோம். பின்னர், ஒருவர் மற்றவரை அறிந்துகொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆதலால், உங்களில் ஒருவர் மற்றவரைவிட மேலானவர் என்று பெருமை பேசாதீர்கள்.) எனினும், உங்களில் எவர் இறையச்சம் உடையவராக இருக்கிறாரோ, அவர்தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவன், நன்கு தெரிந்தவன் ஆவான்

[14] (நபியே!) நாட்டுப்புறத்து அரபிகளில் பலர், தாங்களும் நம்பிக்கையாளர்கள் எனக் கூறுகின்றனர். (அவர்களை நோக்கி) நீர் கூறுவீராக: ‘‘நீங்கள் உங்களை நம்பிக்கையாளர்கள் எனக் கூறாதீர்கள். ஏனென்றால், நம்பிக்கை உங்கள் உள்ளங்களில் நுழையவே இல்லை. ஆயினும், (வெளிப்படையாக) வழிபடுபவர்கள் என்று (உங்களை) நீங்கள் கூறிக் கொள்ளுங்கள். எனினும், மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடப்பீர்களாயின், உங்கள் நன்மைகளில், எதையும் அவன் உங்களுக்குக் குறைத்து விடமாட்டான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன் கருணையுடையவன் ஆவான்

[15] (உண்மையான) நம்பிக்கையாளர்கள் எவர்களென்றால், அவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு, பின்னர் எவ்வித சந்தேகமும் கொள்ளாது, அல்லாஹ்வுடைய பாதையில் தங்கள் உயிரையும் பொருளையும் தியாகம் செய்து போர் புரிவார்கள். இவர்கள்தான் (தங்கள் நம்பிக்கையில்) உண்மையானவர்கள்

[16] (நபியே!) கூறுவீராக: (‘‘நீங்கள் மார்க்கத்தைப் பின்பற்றி நடப்பவர்கள் என்று) உங்கள் வழிபாட்டை(யும், பக்தியையும்) நீங்கள் அல்லாஹ்வுக்கு அறிவிக்கிறீர்களா? அல்லாஹ்வோ வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றை அறிந்தவன். (தவிர, மற்ற) எல்லா பொருள்களையுமே அல்லாஹ் நன்கறிந்தவன்

[17] (நபியே!) அவர்கள் இஸ்லாமில் சேர்ந்ததன் காரணமாக உம்மீது உபகாரம் செய்து விட்டதாக கருதுகின்றனர். (நபியே!) கூறுவீராக: ‘‘நீங்கள் இஸ்லாமில் சேர்ந்ததனால் என்மீது உபகாரம் செய்து விட்டதாக எண்ணாதீர்கள். மாறாக, நீங்கள் நம்பிக்கையாளர்களாக ஆகும்படி செய்ததன் காரணமாக அல்லாஹ்தான் உங்கள் மீது உபகாரம் செய்திருக்கிறான். நீங்கள் (உங்கள் நம்பிக்கையில்) உண்மையாளர்களாக இருந்தால் (இதை நன்கறிந்து கொள்வீர்கள்)

[18] நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலும் பூமியிலும் மறைந்திருப்பவற்றை நன்கறிவான். ஆகவே, நீங்கள் செய்பவற்றையும் அல்லாஹ் உற்று நோக்குபவன் ஆவான்

காஃப்

Surah 50

[1] காஃப். (நபியே!) மிக்க மேலான இந்த குர்ஆன் மீது சத்தியமாக! (நீர் நம்மால் அனுப்பப்பட்ட தூதர்தான்)

[2] ஆயினும், அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் ஒருவர் (-முஹம்மதாகிய நீர்) அவர்களில் இருந்தே (இறைத்தூதராக) அவர்களிடம் வந்ததைப் பற்றி ஆச்சரியப்பட்டு, இந்நிராகரிப்பவர்கள் ‘‘இது மிக அற்புதமான விஷயமென்று'' கூறுகின்றனர்

[3] (மேலும், ‘‘இத்தூதர் கூறுகின்றபடி) நாம் இறந்து உக்கி மண்ணாகப் போனதன் பின்னரா (உயிர்கொடுத்து மீட்கப்படுவோம்?) இவ்வாறு மீளுவது வெகு தூரம். (அது நிகழப்போவதில்லை'' என்றும் கூறுகின்றனர்)

[4] (மரணித்த)பின் அவர்களின் தேகத்தை மண் தின்று அழித்துக் கொண்டிருப்பதை நிச்சயமாக நாம் அறிவோம். (எனினும், நாம் விரும்பிய நேரத்தில் மரணித்த அவர்களை உயிர் கொடுத்து எழுப்பிவிடுவோம்.) மேலும், (அவர்களின் செயல்களைப் பற்றிய) பாதுகாக்கப்பட்ட பதிவுப் புத்தகம் நம்மிடத்தில் இருக்கிறது. (அதில் ஒவ்வொன்றும் வரையப்பட்டுள்ளது)

[5] இவ்வாறிருந்தும் அவர்களிடம் வந்த உண்மையான (வேதத்)தை அவர்கள் பொய்யாக்கி வெறும் குழப்பத்திற்குள்ளாகி விட்டனர்

[6] தங்களுக்கு மேலிருக்கும் வானத்தை அவர்கள் கவனித்துப் பார்க்கவில்லையா? நாம் அதை எவ்வாறு ஒரு கட்டுக்கோப்பாக அமைத்து, அதை (நட்சத்திரங்களைக் கொண்டு) அலங்காரமாக்கி வைத்திருக்கிறோம். அதில் எவ்வித வெடிப்புகளும் இல்லை. (ஓட்டை உடைசலும் இல்லை)

[7] மேலும், நாமே பூமியை விரித்து, அதில் உறுதியான மலைகளையும் அமைத்து அழகான புற்பூண்டுகள் அனைத்தையும் (ஆண், பெண் கொண்ட) ஜோடி ஜோடியாக முளைப்பித்தோம்

[8] (இது) நம்மை நோக்கி நிற்கும் எல்லா அடியார்களுக்கும் நல்ல உபதேசங்களாகவும் ஒரு படிப்பினையாகவும் (இருக்கிறது)

[9] மேகத்திலிருந்து மிக பாக்கியமுள்ள மழையை நாம் பொழியச் செய்து, அதைக்கொண்டு பல சோலைகளையும் (விவசாயிகள்) அறுவடை செய்யும் தானிய மணிகளையும் உற்பத்தி செய்கிறோம்

[10] அடுக்கடுக்காய் (கனிகள்) நிறைந்த குலைகளையுடைய நீண்டு வளரும் பேரீச்ச மரங்களையும் (முளைப்பிக்கச் செய்தோம்)

[11] அதை (நம்) அடியார்களுக்கு உணவாக்கி, அவற்றைக்கொண்டு இறந்த பூமியை நாம் உயிர்ப்பிக்கிறோம். இவ்வாறே (மரணித்தவர்கள் சமாதிகளில் இருந்து) வெளியாகுவதும் ஏற்படும்

[12] (இவற்றையெல்லாம்) இவர்களுக்கு முன்னர் இருந்த நூஹ்வுடைய மக்களும், ரஸ்ஸு (அகழு)டைய மக்களும், ஸமூத் என்னும் மக்களும் பொய்யாக்கினர்

[13] ஆது என்னும் மக்களும், ஃபிர்அவ்னும், லூத்துடைய சகோதரர்களும் (பொய்யாக்கினர்)

[14] மேலும், தோப்பில் வசித்தவர்களும், ‘துப்பஉ' என்னும் மக்களும் (பொய்யாக்கினர்). இவர்கள் ஒவ்வொருவரும் (எனது) தூதர்களைப் பொய்யாக்கினர். ஆகவே, (அவர்களை அழிப்போமென்ற) எனது வாக்கு பூர்த்தியாயிற்று

[15] (படைப்புகள் அனைத்தையும்) முதல்முறை படைத்ததில் நாம் களைத்து விட்டோமா? (இவர்களை மறுமுறை படைப்பது நமக்குச் சிரமமெனக் கூறுவதற்கு!) எனினும், (மீண்டும் இவர்களை) புதிதாகப் படைக்கும் விஷயத்தில் இவர்கள் சந்தேகத்தில் இருக்கின்றனர்

[16] நிச்சயமாக நாம்தான் மனிதனை (முதன் முதலாகவும்) படைத்தோம். அவன் மனதில் உதிக்கும் எண்ணத்தையும் நாம் அறிவோம். பிடரியிலுள்ள இரத்த நரம்பைவிட நாம் அவனுக்கு மிக சமீபமாகவே இருக்கிறோம்

[17] வலது புறத்தில் ஒருவரும், இடது புறத்தில் ஒருவருமாக இருவர் (அவன் செய்யும் செயலைக்) குறிப்பெடுத்துக் கொண்டிருக்கின்றனர்

[18] (மனிதன்) எதைக் கூறியபோதிலும் அதை எழுதக் காத்துக் கொண்டிருக்கும் ஒருவர் அவனிடம் இல்லாமலில்லை. (அவன் வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையும் உடனுக்குடன் பதியப்படுகிறது)

[19] மரணத்தின் சிரமம் மெய்யாகவே வந்துவிடும் சமயத்தில் (அவனை நோக்கி) ‘‘நீ தப்பிவிடக் கருதியது இதுதான்'' (என்று கூறப்படும்)

[20] எக்காளம் ஊதப்பட்டால் (அவனை நோக்கி ‘‘உனக்குப்) பயமுறுத்தப்பட்டு வந்த (விசாரணை) நாள் இதோ (வந்துவிட்டது)'' என்று கூறப்படும்

[21] (அந்நாளில்) ஒவ்வொரு ஆத்மாவையும், அதன் சாட்சியுடன் ஒருவர் ஓட்டிக் கொண்டு வருவார்

[22] அவனை நோக்கி, ‘‘நிச்சயமாக நீ இதைப் பற்றிக் கவலையற்றிருந்தாய். உன் பார்வையை மறைத்துக் கொண்டிருந்த திரையை உன்னை விட்டும் நாம் நீக்கி விட்டோம். இன்றைய தினம் உன் பார்வை கூர்மையாயிருக்கிறது. (ஆகவே, நீ மறுத்துக் கொண்டிருந்ததை உன் கண் திறந்து பார்'' என்று கூறப்படும்)

[23] (சாட்சி கூற) அவனுடன் வந்தவர் ‘‘இதோ (அவனுடைய பதிவேடு, அவனுடைய நடவடிக்கையின் குறிப்பு) என்னிடம் (தயாராக) இருக்கிறது'' என்று கூறுவார்

[24] (உடனே இரு காவலர்களை நோக்கி) ‘‘நிராகரித்துக் கொண்டிருந்த (ஷைத்தானையும்) ஒவ்வொரு வம்பனையும் நரகத்தில் தள்ளுங்கள்'' (என்று கூறப்படும்)

[25] (‘‘அவன்) நன்மையான காரியங்களைத் தடுத்துக்கொண்டு, (இந்நாளைச்) சந்தேகித்து வரம்பு மீறிக்கொண்டுமிருந்தான்'' என்றும்

[26] ‘‘இவன் அல்லாஹ்வுடன் வேறொரு கடவுளை ஏற்படுத்தினான் என்றும், ஆகவே, நீங்களிருவரும் இவனைக் கொடிய வேதனையில் போட்டுவிடுங்கள்'' (என்றும் கூறப்படும்)

[27] (அச்சமயம்) இவனுடைய இணை பிரியாத சினேகிதன் (ஆக இருந்த ஷைத்தான் இறைவனை நோக்கி,) ‘‘என் இறைவனே! நான் இவனை வழிகெடுக்கவில்லை. தானாகவே அவன் வெகு தூரமான வழிகேட்டில் சென்றுவிட்டான்'' என்று கூறுவான்

[28] (ஆகவே, இறைவன் அவர்களை நோக்கி,) ‘‘என் முன்பாக நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருக்க வேண்டாம். ஏற்கனவே (இதைப் பற்றி) உங்களுக்கு (எச்சரித்துப்) பயமுறுத்தியிருந்தேன்

[29] என் கட்டளை மாற்றப்படுவதில்லை; நான் என் அடியார்களுக்கு அறவே அநியாயம் செய்பவனல்ல'' என்றும் கூறுவான்

[30] அந்நாளில் நரகத்தை நோக்கி, ‘‘உன் வயிறு நிறைந்துவிட்டதா?'' என்று நாம் கேட்போம். அதற்கு அது ‘‘இன்னும் ஏதும் இருக்கிறதா?'' என்று கேட்கும்

[31] (அந்நாளில்) இறையச்சமுடையவர்களுக்கு சொர்க்கம் மிக்க சமீபமாகக் கொண்டு வரப்படும்

[32] ‘‘இதுதான் உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது'' (என்றும்,) ‘‘எப்பொழுதும் இறைவனையே நோக்கி இருந்து (இறைவனுடைய கட்டளைகளைப்) பேணி நடந்து கொண்ட அனைவருக்கும் இது கிடைக்கும்'' (என்றும்)

[33] எவர்கள், மறைவிலும் ரஹ்மானுக்குப் பயந்து நடந்து (ரஹ்மானையே முற்றிலும்) நோக்கிய மனதுடன் வருகிறார்களோ

[34] (அவர்களை நோக்கி,) ‘‘ஈடேற்றம் பெற்று நீங்கள் இதில் நுழைந்து விடுங்கள். இது நிரந்தரமான நாளாகும்'' (என்றும் கூறப்படும்)

[35] அவர்கள் விரும்பியதெல்லாம் அதில் அவர்களுக்குக் கிடைக்கும். மேலும், நம்மிடமிருந்து (அவர்கள் கேட்காததும் இன்னும்) அதிகமாகக் கொடுக்கப்படும்

[36] இவர்களுக்கு முன்னர் எத்தனையோ கூட்டத்தாரை நாம் அழித்திருக்கிறோம். அவர்கள் இவர்களைவிட மிக பலசாலிகளாக இருந்தார்கள். அவர்கள் (தப்பித்துக்கொள்ள) பல தேசங்களில் சுற்றித் திரிந்தார்கள். (அப்போது அவர்களுக்கு) தப்ப இடம் கிடைத்ததா? (இல்லை, கிடைக்காமல் அழிந்து விட்டனர்)

[37] எவருக்கு (பரிசுத்தமான) உள்ளமிருந்து, ஓர்மைப்பாடான மனதுடன் செவிசாய்க்கிறாரோ, அவருக்கு நிச்சயமாக இதில் நல்ல படிப்பினை இருக்கிறது

[38] நிச்சயமாக நாம்தான் வானங்களையும், பூமியையும் அதற்கு மத்தியில் உள்ளவற்றையும் ஆறே நாட்களில் படைத்தோம். அதனால் நமக்கு ஒரு களைப்பும் (சோர்வும்) ஏற்பட்டு விடவில்லை

[39] (நபியே!) அவர்கள் (உம்மைக் குறை) கூறுவதைப் பற்றி (கவலைப்படாதீர்;) நீர் பொறுமையாக அதைச் சகித்துக் கொண்டிருந்து, சூரிய உதயத்திற்கும், அது மறைவதற்கும் முன்னர் உமது இறைவனைப் புகழ்ந்து துதி செய்துவருவீராக

[40] இரவில் ஒரு பாகத்திலும், ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் அவனைத் துதி செய்வீராக

[41] (நபியே!) நீர் செவிமடுத்துக் கேட்பீராக. (சமாதிகளுக்கு) சமீபமான இடத்திலிருந்து (கொண்டு ‘‘மரணித்தவர்களே! எழும்புங்கள்'' என்று) அழைப்பவர் அழைக்கும் நாளில்

[42] (வானவர்கள் அவர்களை விரட்டி ஓட்டும்) பெரும் சப்தத்தை மெய்யாகவே அவர்கள் அந்நாளில் கேட்பார்கள். அதுதான் (மரணித்தவர்கள் சமாதியிலிருந்து) வெளிப்படும் நாள்

[43] நிச்சயமாக நாம்தான் உயிர்ப்பிக்கிறோம்; நாம்தான் மரணிக்கச் செய்கிறோம்; நம்மிடமே அனைவரும் வரவேண்டியதிருக்கிறது

[44] (மரணித்தவர்களை மூடிக்கொண்டிருக்கும்) பூமி வெகு தீவிரமாக (வெடித்து) அவர்களை விட்டு விலகும் நாளை (நினைவு கூருவீராக). அதுதான் (விசாரணைக்காக அனைவரையும்) ஒன்று சேர்க்கும் நாள். இ(வ்வாறு செய்வ)து நமக்கு மிக்க எளிதானதே

[45] (நபியே! உம்மைப் பற்றி) அவர்கள் கூறுவதை நாம் நன்கறிவோம். நீர் அவர்களை நிர்ப்பந்திக்கக்கூடியவரல்ல. எனது வேதனையைப் பயப்படுபவர்களுக்கு இந்த குர்ஆனைக் கொண்டு நீர் நல்லுபதேசம் செய்வீராக

அத்தாரியாத்

Surah 51

[1] (கடல் நீரை ஆவியாக்கிச் சிதறடிக்கும்) சூறாவளிகள் மீதும்

[2] (அந்த நீராவியை) சுமந்து செல்லும் மேகங்கள் மீதும்

[3] (பல பாகத்திற்கு அதை) எளிதாக(த் தாங்கிச்) செல்லும் மேகங்கள் மீதும்

[4] அதை (பூமியின் பல பாகங்களில்) மழையாக பிரித்துவிடும் வானவர்கள் மீதும் சத்தியமாக

[5] (செயலுக்குத் தக்க கூலி கொடுக்கப்படுமென்று) உங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி நிச்சயமாக உண்மையானதே

[6] நிச்சயமாக (செயல்களுக்குரிய) கூலி கொடுக்கப்பட்டே தீரும்

[7] (நட்சத்திரங்களின்) அழகிய பாதைகளுடைய வானத்தின் மீது சத்தியமாக

[8] நிச்சயமாக நீங்கள் (சத்தியத்திற்கு) முரணாகப் பேசுவதில்தான் நிலைத்து விட்டீர்கள்

[9] (ஏற்கனவே, அல்லாஹ்வுடைய விதியின்படி) திருப்பப்பட்டவனே சத்தியத்தை விட்டும் திருப்பப்படுவான்

[10] பொய் சொல்பவர்கள் அழிந்தே போவர்

[11] அவர்கள் தங்கள் மடமையால் (மறுமையையே) மறந்துவிட்டனர்

[12] அவர்கள், ‘‘கூலி கொடுக்கும் நாள் எப்பொழுது வரும்?'' என்று (பரிகாசமாகக்) கேட்கின்றனர்

[13] அந்நாளில் அவர்கள், நெருப்பில் பொசுக்கி வேதனை செய்யப்படுவார்கள்

[14] (அவர்களை நோக்கி) ‘‘உங்கள் வேதனையை சுவைத்துப் பாருங்கள். நீங்கள் (எப்பொழுது வருமென்று) அவசரப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ அது இதுதான்'' (என்றும் கூறப்படும்)

[15] நிச்சயமாக இறையச்சமுடையவர்கள் சொர்க்கங்களிலும், நீரருவிகளுக்கு அருகிலும் இருப்பார்கள்

[16] அவர்கள் தங்கள் இறைவன் கொடுப்பதை(த் திருப்தியுடன்) பெற்றுக் கொள்வார்கள். நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் நன்மை செய்பவர்களாகவே இருந்தார்கள்

[17] அவர்கள் இரவில் வெகு சொற்ப (நேர)மே நித்திரை செய்பவர்களாக இருந்தனர்

[18] அவர்கள் விடியற்காலை நேரத்தில் (எழுந்து தங்கள் இறைவனை வணங்கி, அவனிடம் பாவ) மன்னிப்புக் கோருவார்கள்

[19] அவர்களுடைய பொருள்களில், (வாய் திறந்து) யாசகம் கேட்பவர்களுக்கும், (கேட்காத) வறியவர்களுக்கும் பாகமுண்டு. (அனைவருக்கும் அவர்கள் தானம் செய்வார்கள்)

[20] உறுதி(யாக நம்பிக்கை) கொண்டவர்களுக்குப் பூமியில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன

[21] உங்களுக்கு உள்ளாகவும் (பல அத்தாட்சிகள் இருக்கின்றன. அவற்றை) நீங்கள் ஆழ்ந்து கவனித்துப் பார்க்க வேண்டாமா

[22] உங்களுக்கு வாக்களிக்கப்பட்டவையும் உங்கள் உணவும் வானத்தில் தான் இருக்கின்றன

[23] வானம், பூமியின் இறைவன் மீது சத்தியமாக! நிச்சயமாக இது, (உங்கள் வார்த்தைகளை) நீங்கள்தான் கூறுகிறீர்கள் என்பதில் சந்தேகமில்லாதிருப்பதைப் போல் (இந்த குர்ஆனில் உள்ள அனைத்தும்) உண்மையானதாகும்

[24] (நபியே!) இப்ராஹீமுடைய மிக்க கண்ணியமுள்ள விருந்தினர்களின் விஷயம் உமக்கு எட்டியிருக்கிறதா

[25] அவர்கள் அவரிடம் வந்தபோது (அவரை நோக்கி “உமக்கு) ஸலாம் (ஈடேற்றம்) உண்டாவதாக!'' என்று கூறினார்கள். அதற்கு (இப்ராஹீம், “உங்களுக்கும்) ஸலாம் (ஈடேற்றம்) உண்டாவதாக!'' என்று கூறி, (இவர்கள் நாம்) அறியாத மக்களாக இருக்கின்றனரே! (என்று தன் மனத்தில் எண்ணினார்)

[26] பிறகு, விரைவாகத் தன் வீட்டினுள் சென்று கொழுத்ததொரு கன்றுவின் (பொரித்த) மாமிசத்தைக் கொண்டுவந்தார்

[27] அதை அவர்கள் முன் வைத்தார். (ஆனால், அதை அவர்கள் புசிக்கவில்லை. ஆதலால், அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் புசிக்க மாட்டீர்களா?'' என்று கேட்டார்

[28] (இருப்பினும், அவர்கள் புசிக்காமலிருப்பதைக் கண்ட) அவர், அவர்களைப் பற்றி பயந்தார். (இதை அறிந்த அவர்கள் ‘‘இப்ராஹீமே!) பயப்படாதீர்'' என்று கூறி, (இஸ்ஹாக் என்னும்) மிக்க ஞானமுள்ள மகனை அவருக்கு நற்செய்தி கூறினார்கள்

[29] (இதைச் செவியுற்ற) அவருடைய மனைவி (ஸாரா) கூச்சலுடன் அவர்கள் முன்வந்து, தன் முகத்தில் அறைந்துகொண்டு ‘‘(நானோ) தள்ளாடிய கிழவி; அதிலும் மலடி. (எவ்விதம் எனக்குக் குழந்தை பிறக்கும்?)'' என்று கூறினார்

[30] அதற்கவர்கள், ‘‘இவ்வாறே, உமது இறைவன் கூறுகிறான். நிச்சயமாக அவன்தான் மிக ஞானமுள்ளவன், அனைத்தையும் நன்கறிந்தவன் ஆவான்'' என்றார்கள்

[31] (பின்னர் இப்ராஹீம் வானவர்களை நோக்கி) ‘‘தூதர்களே! உங்கள் காரியமென்ன? (எதற்காக நீங்கள் இங்கு வந்தீர்கள்?)'' என்று கேட்டார்

[32] அதற்கவர்கள் ‘‘நிச்சயமாக நாங்கள் (பெரும்) குற்றவாளிகளான (லூத் நபியின்) மக்களிடம் அனுப்பப்பட்டுள்ளோம்'' என்று கூறினர்

[33] ‘‘நாங்கள், அவர்கள் மீது களி மண்ணால் செய்த (சுட்ட) கற்களை எறிவதற்காக (அனுப்பப்பட்டுள்ளோம்)

[34] ‘‘(அவை) உமது இறைவனிடம் வரம்பு மீறியவர்களுக்கென (பெயர்கள் எழுதப்பட்டு) அடையாளமிடப்பட்டவையாகும்

[35] ஆகவே, (அவர்கள் அழிவதற்கு முன்னதாகவே அவ்வூரில் இருந்த) நம்பிக்கை கொண்டவர்களை அதிலிருந்து நாம் வெளிப்படுத்தி விட்டோம்

[36] எனினும், அதில் (லூத்துடைய) ஒரு வீட்டாரைத் தவிர, நம்பிக்கை கொண்ட ஒருவரையும் நாங்கள் காணவில்லை

[37] துன்புறுத்தும் வேதனையை பயப்படுகிறவர்களுக்கு அதில் ஒரு படிப்பினையை விட்டு வைத்தோம்

[38] மூஸாவுடைய (சரித்திரத்)திலும் (ஒரு படிப்பினை) இருக்கிறது. தெளிவான அத்தாட்சிகளுடன் அவரை ஃபிர்அவ்னிடம் நாம் அனுப்பிய சமயத்தில்

[39] அவன் வலுவான தன் ஆட்சியின் கர்வத்தால் அவரைப் புறக்கணித்து, ‘‘இவரொரு சூனியக்காரர்; அல்லது பைத்தியக்காரர்'' என்று கூறினான்

[40] ஆதலால், அவனையும் அவனுடைய படைகளையும் நாம் பிடித்துக் கடலில் எறிந்துவிட்டோம். அவன் என்றென்றுமே நிந்தனைக்குள்ளாகி விட்டான்

[41] ‘ஆது' என்னும் மக்களிலும் (ஒரு படிப்பினையுண்டு). அவர்கள் மீது நாம் (நாசகரமான) மலட்டுக் காற்றை அனுப்பிய சமயத்தில்

[42] அது பட்டதையெல்லாம் தூசியா(க்கிப் பறக்கடி)க்காமல் விடவில்லை

[43] ‘ஸமூது' என்னும் மக்களிலும் (ஒரு படிப்பினையுண்டு). ‘‘நீங்கள் ஒரு காலம் வரை சுகமாக வாழ்ந்திருங்கள்'' என்று அவர்களுக்குக் கூறப்பட்டதற்கு

[44] அவர்கள் தங்கள் இறைவனின் கட்டளையை மீறினார்கள். ஆகவே, அவர்கள் (தங்களை அழிக்க வந்த மேகத்தைப்) பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே அவர்களை ஓர் இடி முழக்கம் பிடித்துக் கொண்டது

[45] ஆகவே, அவர்கள் நிற்கவும் முடியவில்லை. (உட்காரவும் முடியவில்லை;) நம்மிடம் பழிவாங்கவும் முடியவில்லை. (இருந்தவாறே அழிந்து விட்டனர்)

[46] இதற்கு முன்னர் (இருந்த) நூஹுடைய மக்களையும் (அழித்து விட்டோம்). நிச்சயமாக அவர்களும் பாவம் செய்யும் மக்களாகவே இருந்தனர்

[47] (எவருடைய உதவியுமின்றி) நம் சக்தியைக் கொண்டே வானத்தை அமைத்தோம். நிச்சயமாக நாம் (அதை அவர்களின் அறிவிற்கெல்லாம் எட்டாதவாறு) மிக்க விசாலமாக்கியும் வைத்திருக்கிறோம்

[48] பூமியை நாம் (விசாலமாக) விரித்தோம். விரிப்பவர்களிலெல்லாம் மிக்க மேலான விதத்தில் விரிப்பவர் நாமே

[49] ஒவ்வொரு வஸ்துக்களையும் (ஆண், பெண் கொண்ட) ஜோடி ஜோடியாகவே நாம் படைத்திருக்கிறோம். (இதைக்கொண்டு) நீங்கள் நல்லுணர்ச்சி பெறுவீர்களாக

[50] ஆகவே, (பாவத்திலிருந்து விலகி) அல்லாஹ்வின் பக்கம் வெகு தீவிரமாக நீங்கள் விரைந்து செல்லுங்கள். நிச்சயமாக நான் அவனைப் பற்றி உங்களுக்குப் பகிரங்கமாகவே அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறேன்

[51] அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு இறைவனை ஆக்காதீர்கள். நிச்சயமாக நான், அவனிடமிருந்து உங்களுக்கு (இதைப் பற்றியும்) பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராக இருக்கிறேன்

[52] இவ்வாறே இவர்களுக்கு முன்னிருந்தவர்களும், அவர்களிடம் எந்தத் தூதர் வந்தபோதிலும், அவரை சூனியக்காரர் அல்லது பைத்தியக்காரர் என்று கூறாமலிருக்கவில்லை

[53] (இவ்வாறு கூறும்படியே) அவர்கள் தங்களுக்குள் (பரம்பரை பரம்பரையாக) ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து வந்தனர் போலும்! இல்லை, அவர்கள் (இயற்கையிலேயே இவ்வாறு கூறக் கூடிய) அநியாயக்கார மக்களாக இருந்தனர்

[54] (நபியே!) நீர் அவர்களைப் புறக்கணித்து விடுவீராக. (அவர்கள் நிராகரிப்பதைப் பற்றி) நீர் நிந்திக்கப்பட மாட்டீர்

[55] (நபியே!) நீர் நல்லுபதேசம் செய்வீராக. நிச்சயமாக நல்லுபதேசம் நம்பிக்கையாளர்களுக்குப் பயனளிக்கும்

[56] ஜின்களையும், மனிதர்களையும் (அவர்கள் என்னை அறிந்து) என்னை வணங்குவதற்கே தவிர (வேறெதற்காகவும்) நான் படைக்கவில்லை

[57] அவர்களிடத்தில் நான் ஒரு பொருளையும் கேட்கவில்லை. அவர்கள் எனக்கு உணவு கொடுத்துக் கொண்டிருக்குமாறும் நான் கோரவில்லை. (ஆகவே)

[58] (நபியே! நீர் கூறுவீராக:) நிச்சயமாக அல்லாஹ்தான் அனைவருக்கும் உணவளிப்பவனும், அசைக்க முடியாத பலசாலியுமாவான்

[59] இவ்வக்கிரமக்காரர்களின் நண்பர்களுக்கு இருந்த (நன்மை, தீமையை அளக்கக்கூடிய) அளவுப் படிகளைப் போலவே, நிச்சயமாக இவர்களுக்கும் அளவுப் படிகளுண்டு. (அவை நிறைந்ததும் வேதனையைக் கொண்டு இவர்களைப் பிடித்துக் கொள்வோம்.) ஆதலால், அவர்கள் அவசரப்பட வேண்டாம்

[60] (விசாரணைக்காக பாவிகளுக்கு) வாக்களிக்கப்பட்ட நாளில் இந்நிராகரிப்பவர்களுக்குக் கேடுதான்

அத்தூர்

Surah 52

[1] தூர் (என்னும்) மலையின் மீது சத்தியமாக

[2] விரித்த ஏட்டில் வரி வரியாக எழுதப்பட்ட வேத நூலின் மீது சத்தியமாக

[3] விரித்த ஏட்டில் வரி வரியாக எழுதப்பட்ட வேத நூலின் மீது சத்தியமாக

[4] பைத்துல் மஃமூர் (என்னும் ஆலயத்தின்) மீது சத்தியமாக

[5] உயர்ந்த முகட்டின் மீது சத்தியமாக

[6] (தொடர்ந்து) அலைகள் மோதிக் கொண்டிருக்கும் சமுத்திரத்தின் மீது சத்தியமாக

[7] (நபியே!) நிச்சயமாக உமது இறைவனின் வேதனை (அவர்களுக்கு) வந்தே தீரும்

[8] எவராலும் அதைத் தடுக்க முடியாது

[9] வானமும் துடிதுடித்துக் குமுறும் நாளில்

[10] மலைகள் (பெயர்ந்து) பறந்தோடும் (நாளில்)

[11] (நபியே! உம்மைப்) பொய்யாக்கும் இவர்களுக்கு அந்நாளில் கேடுதான்

[12] அவர்கள் (வீண் விதண்டாவாதத்தில்) மூழ்கி விளையாடிக்கொண்டு இருக்கின்றனர்

[13] அவர்கள் நரகத்தின் பக்கம் (அடித்து) வெருட்டி ஓட்டப்படும் நாளில்

[14] (அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்த நரக நெருப்பு இதுதான்'' என்று கூறப்படும்

[15] இது வெறும் சூனியம்தானா? அல்லது, இதை நீங்கள் (உங்கள் கண்ணால்) பார்க்கவில்லையா

[16] அதில் நுழைந்து விடுங்கள். (அதன் வேதனையைப் பொறுத்துச்) சகித்துக் கொண்டிருங்கள்; அல்லது சகிக்காதிருங்கள். (இரண்டும்) உங்களுக்குச் சமமே! (வேதனையில் ஓர் அணுவளவும் குறையாது.) நீங்கள் செய்தவற்றுக்குரிய கூலிதான் உங்களுக்குக் கொடுக்கப்படும்

[17] அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்தவர்கள் நிச்சயமாக சொர்க்கங்களிலும் இன்பத்திலும் இருப்பார்கள்

[18] தங்கள் இறைவன் தங்களுக்கு அளித்திருப்பவற்றைப் பற்றியும், நரக வேதனையிலிருந்து தங்களைத் தங்கள் இறைவன் பாதுகாத்துக் கொண்டதைப் பற்றியும் மகிழ்ச்சி அடைந்தவர்களாக இருப்பார்கள்

[19] (அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் செய்த நன்மைகளின் காரணமாக (இதில் உள்ளவற்றை) மிக்க தாராளமாகப் புசித்துக் கொண்டும், பருகிக் கொண்டும் இருங்கள்'' (என்றும் கூறப்படும்)

[20] வரிசையாகப் போடப்பட்ட கட்டில்களின் மீது சாய்ந்(து படுத்)தவர்களாக இருப்பர். நாம் அவர்களுக்கு (‘ஹூருல்ஈன்' என்னும்) கண்ணழகிக(ளாகிய கன்னி)களை திருமணம் செய்து வைப்போம்

[21] எந்த நம்பிக்கையாளர்களின் சந்ததிகள், தங்கள் பெற்றோர்களைப் பின்பற்றி நம்பிக்கை கொள்கிறார்களோ (அந்தச் சந்ததிகளின் நன்மைகள் குறைவாக இருந்தும் அவர்களின் பெற்றோர்கள் திருப்தியடையும் பொருட்டு) அவர்களுடைய சந்ததிகளையும் அவர்களுடன் (சொர்க்கத்தில்) சேர்த்துவிடுவோம். இதனால் அவர்களுடைய பெற்றோர்களின் நன்மைகளில் எதையும் நாம் குறைத்துவிட மாட்டோம். ஒவ்வொரு மனிதனும், தான் செய்த செயலுக்குப் பிணையாக இருக்கிறான்

[22] அவர்கள் விரும்பிய (பற்பல வகை) கனிவர்க்கங்களையும், மாமிசங்களையும் அவர்களுக்கு (நாள்தோறும்) நாம் (ஏராளமாகக்) கொடுத்து வருவோம்

[23] ஒருவருடைய கிண்ணத்தை மற்றொருவர் (களிப்பால்) பிடுங்கிக் கொள்வார். (அதனால்) மனத்தாங்கலோ அல்லது மரியாதைக்குறைவோ ஏற்படாது

[24] அவர்களைச் சுற்றி (அவர்களுக்குப் பணி செய்ய எந்நேரமும்) சிறுவர்கள் பலர் சுற்றி வருவார்கள். அவர்கள் பதிந்த முத்துக்களைப் போல் (பிரகாசமாக) இருப்பார்கள்

[25] அவர்களில் ஒருவர் மற்றொருவரை நோக்கி (அமர்ந்து கொண்டு மகிழ்ச்சியாக) உரையாடுவார்கள்

[26] ‘‘இதற்கு முன்னர், நாம் நம் குடும்பத்தைப் பற்றி (அவர்களுடைய கதி என்னவாகுமோ என்று) மெய்யாகவே பயந்துகொண்டே இருந்தோம்

[27] ஆயினும், அல்லாஹ் நம்மீது அருள் புரிந்து கொடிய வேதனையிலிருந்து நம்மை(யும் நம் குடும்பத்தினரையும்) காப்பாற்றினான்

[28] இதற்கு முன்னர் (வேதனையிலிருந்து நம்மை காக்கும்படி) மெய்யாகவே நாம் அவனிடம் பிரார்த்தனை செய்துகொண்டு இருந்தோம். மெய்யாகவே அவன்தான் நன்மை செய்பவன், பேரன்புடையவன் ஆவான்'' என்று கூறுவார்கள்

[29] (நபியே!) (நிராகரிப்பவர்களுக்கு வேதனையை) ஞாபகமூட்டிக் கொண்டே இருப்பீராக. உமது இறைவனின் அருளால் நீர் குறி சொல்பவருமல்ல; பைத்தியக்காரருமல்ல

[30] (உம்மைப் பற்றி) அவர்கள் (நீர்) ஒரு கவிஞர்தான் என்று கூறுகின்றனரா? (இக்கூற்றுக்குத் தண்டனையாக அவர்கள் மீது சம்பவிக்கக்கூடிய சோதனையின்) காலச்சக்கரத்தை எதிர்பார்த்திருப்போம்

[31] ஆகவே (அவர்களை நோக்கி, அதை) ‘‘நீங்களும் எதிர்பார்த்திருங்கள். (என்ன நடக்கிறது என்பதை) நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர்பார்த்திருக்கிறேன்'' என்று கூறுவீராக

[32] (நபியே! உம்மை குறிகாரர் என்றும், பைத்தியக்காரர் என்றும் கூறும்படி) அவர்களுடைய அறிவுதான் அவர்களைத் தூண்டுகிறதா? அல்லது (இயற்கையாகவே) அவர்கள் விஷமிகள்தானா

[33] அல்லது (நம் நபியாகிய) இவர் பொய்யாகவே அதைக் கற்பனை செய்து கொண்டாரென்று அவர்கள் கூறுகின்றனரா? மாறாக (மனமுரண்டாகவே) இதை அவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை

[34] (நபியே! இதை நீர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டீரென்று கூறுவதில்) அவர்கள் உண்மை சொல்பவர்களாயிருந்தால் (அவர்களும் கற்பனை செய்து கொண்டு) இதைப்போன்ற ஒரு வாக்கியத்தைக்கொண்டு வரவும்

[35] அல்லது இவர்கள் எவருடைய படைப்பும் இல்லாமல் தாமாகவே உண்டாகி விட்டனரா? அல்லது இவர்கள் தம்மைத்தாமே படைத்துக் கொண்டனரா

[36] அல்லது வானங்களையும் பூமியையும் இவர்கள் படைத்தார்களா? மாறாக, (இவற்றை எல்லாம் படைத்தவன் அல்லாஹ்தான். அவனை) இவர்கள் நம்புவதில்லை

[37] அல்லது இவர்களிடம்தான் உமது இறைவனின் பொக்கிஷங்கள் அனைத்தும் இருக்கின்றனவா? அல்லது இவர்கள் அதைப் பங்கிடக்கூடிய அதிகாரிகளா

[38] அல்லது இவர்களுக்கு (வானத்தில் ஏறக்கூடிய) ஏணி இருந்து, அதில் (ஏறிச் சென்று, அங்கு நடைபெறும் பேச்சுகளைக்) கேட்டு வருகின்றனரா? அவ்வாறாயின், (அவற்றை) கேட்டு வந்தவர் (அதற்குத்) தெளிவான ஓர் ஆதாரத்தைக் கொண்டுவரவும்

[39] அல்லது (நீங்கள் கூறுகின்றபடி) அல்லாஹ்வுக்குப் பெண் சந்ததிகள்; உங்களுக்கு மட்டும் ஆண் சந்ததிகளா

[40] அல்லது நீர் அவர்களிடம் கூலி ஏதும் கேட்டு அந்தப் பளுவை அவர்கள் சுமக்க முடியாமல் இருக்கின்றனரா

[41] அல்லது இவர்களிடம் மறைவான விஷய(த்தின் ஞான)ம் இருக்கிறதா? இவர்கள் (அதை அல்லாஹ்வைப் போல்) எழுதி வருகின்றனரா

[42] அல்லது ஒரு சூழ்ச்சி செய்ய இவர்கள் கருதுகின்றனரா? அவ்வாறாயின், இந்நிராகரிப்பவர்கள்தான் சூழ்ச்சிக்குள்ளாவார்கள்

[43] அல்லது அல்லாஹ்வையன்றி இவர்களுக்கு வணக்கத்திற்குரிய வேறு ஓர் இறைவன் இருக்கிறானா? இவர்கள் இணை வைப்பவற்றை விட்டும் அல்லாஹ் மிக்க பரிசுத்தமானவன்

[44] வானம் இடிந்து அதிலிருந்த ஒரு துண்டு விழுவதை இவர்கள் கண்ணால் கண்டபோதிலும் (அது வானமல்ல;) மேகம்தான் என்றும், ஆனால் அது உறைந்து இறுகிவிட்டதென்றும் கூறுவார்கள்

[45] (நபியே!) இவர்களுடைய அறிவு பறந்துவிடக்கூடிய நாளை இவர்கள் சந்திக்கும் வரை நீர் இவர்களை விட்டு விடுவீராக

[46] அந்நாளில் இவர்களுடைய சூழ்ச்சிகள் ஒன்றுமே இவர்களுக்குப் பயனளிக்காது. எவர்களுடைய உதவியும் இவர்களுக்குக் கிடைக்காது

[47] நிச்சயமாக இவ்வக்கிரமக்காரர்களுக்கு (மறுமையின்) வேதனைக்கு முன்னால் (இம்மையிலும்) வேதனை இருக்கிறது. எனினும் அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிந்துகொள்ள மாட்டார்கள்

[48] (நபியே!) உமது இறைவனின் தீர்ப்பைப் பொறுமையாக எதிர்பார்த்திருப்பீராக. நிச்சயமாக நீர் நம் கண்களுக்கு முன்பாகவே இருக்கிறீர். (ஆகவே, அவர்கள் உம்மைத் தங்கள் விருப்பப்படி துன்புறுத்த முடியாது.) ஆயினும், நீர் (நித்திரையிலிருந்து) எழுந்த நேரத்தில் உமது இறைவனின் புகழைக்கூறித் துதி செய்வீராக

[49] இரவின் ஒரு பாகத்திலும், நட்சத்திரங்கள் மறையும் (காலை) நேரத்திலும் அவனை துதி செய்வீராக

அந்நஜ்ம்

Surah 53

[1] விழுந்து மறையும் நட்சத்திரத்தின் மீது சத்தியமாக

[2] (நம் தூதராகிய) உங்கள் தோழர் வழி தவறி விடவுமில்லை; தவறான வழியில் செல்லவுமில்லை

[3] அவர் தன் விருப்பப்படி எதையும் கூறுவதில்லை

[4] இது அவருக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டதே தவிர (வேறு) இல்லை

[5] (ஜிப்ரயீல் என்னும்) வலுவான ஆற்றலுடையவர் இதை அவருக்குக் கற்றுக் கொடுக்கிறார்

[6] அவர் மிக்க ஆத்ம சக்தியுடையவர். அவர் (தன் இயற்கை ரூபத்தில் நபி முன்) தோன்றினார்

[7] அவர் உயர்ந்த (வானத்தின்) கடைக்கோடியில் இருந்தார்

[8] இன்னும் நெருங்கினார், (அவர் முன்) இறங்கினார்

[9] (சேர்ந்த) இரு வில்களைப்போல், அல்லது அதைவிட சமீபமாக அவர் நெருங்கினார்

[10] (அல்லாஹ்) அவருக்கு (வஹ்யி மூலம்) அறிவித்ததையெல்லாம் அவர் அவனுடைய (நபியாகிய) அடியாருக்கு அறிவித்தார்

[11] (நபியுடைய) உள்ளம், தான் கண்டதைப் பற்றிப் பொய் கூறவில்லை

[12] அவர் கண்டதைப் பற்றி நீங்கள் (சந்தேகித்து) அவருடன் தர்க்கிக்கிறீர்களா

[13] நிச்சயமாக அவர், மற்றொரு முறையும் (தன்னிடத்தில் ஜிப்ரயீலாகிய) அவர் இறங்கக் கண்டிருக்கிறார்

[14] ‘‘ஸித்ரத்துல் முன்தஹா' என்னும் (இலந்தை) மரத்தின் சமீபத்தில்

[15] அதன் சமீபத்தில்தான் (நல்லடியார்கள்) தங்கும் சொர்க்கம் இருக்கிறது

[16] அந்த மரத்தை மூடியிருந்தவை அதை முற்றிலும் மூடிக்கொண்டன

[17] (அதிலிருந்து அவருடைய) பார்வை விலகவும் இல்லை; கடக்கவும் இல்லை

[18] அவர் தன் இறைவனின் மிகப்பெரிய அத்தாட்சிகளையெல்லாம் மெய்யாகவே கண்டார்

[19] (நீங்கள் ஆராதனை செய்யும்) லாத், உஜ்ஜா (என்னும் சிலை)களை நீங்கள் கவனித்தீர்களா

[20] மற்றொரு மூன்றாவது மனாத் (என்னும் சிலையைப்) பற்றியும் நீங்கள் சிந்தித்தீர்களா? (அவற்றுக்கு ஏதேனும் இத்தகைய சக்தி உண்டா)

[21] என்னே! உங்களுக்கு ஆண் மக்கள், அவனுக்குப் பெண் மக்களா

[22] அவ்வாறாயின், அது மிக்க அநியாயமான பங்கீடாகும்

[23] இவையெல்லாம் நீங்களும், உங்கள் மூதாதைகளும் வைத்துக் கொண்ட வெறும் பெயர்களே தவிர (அவை வணங்கத் தகுதியானவை) இல்லை. அ(வை வணங்கத் தகுதியானவை என்ப)தற்காக அல்லாஹ் உங்களுக்கு எந்த ஆதாரத்தையும் (முந்திய வேதங்களிலும்) இறக்கிவைக்கவில்லை. அவர்கள் (தங்கள்) மன இச்சைகளையும் வீண் சந்தேகத்தையும் தவிர, (இறை வேதத்தை பின்பற்றுவது) இல்லை. நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடமிருந்து அவர்களுக்கு நேரான வழி (இந்த குர்ஆன்) வந்தே இருக்கிறது. (எனினும், அதை அவர்கள் பின்பற்றுவதில்லை)

[24] மனிதன் விரும்பியதெல்லாம் அவனுக்குக் கிடைத்துவிடுமா

[25] (ஏனென்றால்) இம்மையும் மறுமையும் அல்லாஹ்வுக்குறியனவே! (அவன் விரும்பியவர்களுக்கே அவற்றின் பாக்கியத்தை அளிப்பான்)

[26] வானத்தில் எத்தனையோ வானவர்கள் இருக்கின்றனர். (எவருக்காகவும்)அவர்கள் பரிந்து பேசுவது ஒரு பயனும் அளிக்காது. ஆயினும், அல்லாஹ் விரும்பி, எவரைப் பற்றித் திருப்தியடைந்து (அவருக்காக) அவன் அனுமதி கொடுக்கிறானோ அவருக்கே தவிர (மற்றவருக்கு பயனளிக்காது)

[27] நிச்சயமாக எவர்கள் மறுமையை நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்கள் வானவர்களுக்குப் பெண்களின் பெயர்களை சூட்டுகின்றனர்

[28] இதைப் பற்றி அவர்களுக்கு ஒரு ஞானமும் கிடையாது. (ஆதாரமற்ற) வீண் சந்தேகத்தைத் தவிர (வேறு எதையும்) அவர்கள் பின்பற்றுவதில்லை. வீண் சந்தேகம் எதையும் உறுதிப்படுத்தாது

[29] (நபியே!) எவன் என்னைத் தியானிக்காது விலகி, இவ்வுலக வாழ்க்கையைத் தவிர, (மறுமையை) விரும்பாதிருக்கிறானோ, அவனை நீர் புறக்கணித்து விடுவீராக

[30] இவர்களுடைய கல்வி ஞானம் இவ்வளவு தூரம்தான் செல்கிறது (இதற்கு மேல் செல்வதில்லை.) நிச்சயமாக உமது இறைவன், தன் வழியிலிருந்து தவறியவன் யாரென்பதையும் நன்கறிவான். நேரான வழியில் செல்பவன் யாரென்பதையும் அவன் நன்கறிவான்

[31] வானங்களிலுள்ளவை, பூமியிலுள்ளவை அனைத்தும் அல்லாஹ்வுக்கு உரியனவே. ஆகவே, தீமை செய்தவர்களுக்கு அவர்களுடைய (தீய) செயலுக்குத் தக்கவாறு (தீமையைக்) கூலியாகக் கொடுக்கிறான். நன்மை செய்தவர்களுக்கு நன்மையைக் கூலியாகக் கொடுக்கிறான்

[32] (நன்மை செய்யும்) அவர்கள் (ஏதும் தவறாக ஏற்பட்டுவிடும்) அற்பமான பாவங்களைத் தவிர, மற்ற பெரும்பாவங்களிலிருந்தும், மானக்கேடான விஷயங்களிலிருந்தும் விலகியிருப்பார்கள். நிச்சயமாக உமது இறைவன் மன்னிப்பதில் மிக்க தாராளமானவன். உங்களைப் பூமியிலிருந்து உற்பத்தி செய்த சமயத்தில் (உங்கள் தன்மையை) அவன் நன்கறிவான். நீங்கள் உங்கள் தாயின் வயிற்றில் கர்ப்பப்பிண்டமாயிருந்த சமயத்திலும் உங்களை அவன் நன்கறிவான். ஆகவே, ‘‘தூய்மையானவர்கள்' என உங்களை நீங்களே தற்புகழ்ச்சி செய்துகொள்ளாதீர்கள். உங்களில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்பவர்கள் யாரென்பதை அவன் நன்கறிவான்

[33] (நபியே!) உம்மை விட்டும் விலகியவனை நீர் கவனித்தீரா

[34] அவன் ஒரு சொற்பத்தை தர்மம் கொடுத்துவிட்டு, கொடுப்பதையே (முற்றிலும்) நிறுத்திக் கொண்டான்

[35] அவனிடத்தில் மறைவான விஷயத்தின் ஞானமிருந்து (தன் முடிவை அதில்) அவன் பார்த்தானா

[36] அல்லது மூஸாவுடைய வேதத்திலுள்ளவை அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா

[37] (அல்லது இறைவனுடைய கட்டளைகளை) முழுமையாக நிறைவேற்றிய இப்ராஹீமுடைய விஷயமேனும் (அவனுக்குத் தெரியாதா)

[38] (நபியே!) அறிந்து கொள்வீராக! ஒருவனின் பாவச் சுமையை மற்றொருவன் சுமக்க மாட்டான்

[39] ‘‘இன்னும் நிச்சயமாக மனிதனுக்கு அவன் செய்த செயலைத் தவிர வேறொன்றும் கிடைக்காது

[40] நிச்சயமாக (மனிதன் செய்த) செயல்தான் கவனிக்கப்படும்

[41] பின்னர், செயலுக்குத் தக்க கூலி முழுமையாகக் கொடுக்கப்படுவான்

[42] (நபியே!) நிச்சயமாக உமது இறைவனிடம்தான் (உங்கள் அனைவரின்) இறுதி இடம் இருக்கிறது

[43] நிச்சயமாக அவனே சிரிக்க வைக்கிறான்; அழவும் வைக்கிறான்

[44] நிச்சயமாக அவன்தான் மரணிக்க வைக்கிறான்; (திரும்பவும்) உயிர்ப்பிக்கிறான்

[45] நிச்சயமாக அவன்தான் ஆண், பெண் ஜோடிகளாகப் படைக்கிறான்

[46] (கர்ப்பத்தில்) செலுத்தப்படும் ஒரு துளி இந்திரியத்தைக் கொண்டே (உங்களைப் படைக்கிறான்)

[47] நிச்சயமாக (நீங்கள் மரணித்தப் பின்னர் உங்களை) மறுமுறை உயிர் கொடுத்து எழுப்புவதும் அவன் மீது கடமையாக இருக்கிறது

[48] பொருளைக் கொடுத்து (அதை நீங்கள்) சேகரித்துச் சீமானாகும்படி செய்பவனும் நிச்சயமாக அவன்தான்

[49] (இணைவைப்பவர்களே! நீங்கள் வணங்கும்) ‘ஷிஃரா' என்னும் நட்சத்திரத்தின் இறைவனும் நிச்சயமாக அவன்தான்

[50] (அந்த நட்சத்திரத்தை வணங்கிக் கொண்டிருந்த) முந்திய ஆது என்னும் மக்களை அழித்தவனும் நிச்சயமாக அவன்தான்

[51] ஸமூத் என்னும் மக்களையும் (அழித்தவன் அவன்தான். அவர்களில் ஒருவரையுமே) அவன் தப்பவிடவில்லை

[52] இவர்களுக்கு முன்னர் இருந்த நூஹுடைய மக்களையும் (அழித்தவன் அவன்தான்). நிச்சயமாக இவர்கள் (அனைவரும்) அநியாயக்காரர்களாகவும், வரம்பு மீறியவர்களாகவும் இருந்தனர்

[53] (லூத்தின் மக்களுடைய) கவிழ்ந்துபோன பட்டிணங்களைப் புரட்டி அடித்தவனும் அவன்தான்

[54] (அவர்கள் அழிவுற்ற நேரத்தில்) அவர்களைச் சூழ்ந்துகொள்ள வேண்டிய (வேதனையான)து முற்றிலும் அவர்களைச் சூழ்ந்து கொண்டது

[55] ஆகவே, (மனிதனே! நீ) உனது இறைவனின் கொடைகளில் எதைத் தான் சந்தேகிக்கிறாய்

[56] முன்னர் (மனிதர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்த தூதர்களைப் போல் இவரும் ஒரு தூதரே

[57] தீவிரமாக வரவேண்டிய (உலக முடிவு) காலம் நெருங்கி விட்டது

[58] அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அதைத் தடுக்க முடியாது

[59] இதைப் பற்றி நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா

[60] (இதைப் பற்றி) நீங்கள் சிரிக்கிறீர்களே? அழ வேண்டாமா

[61] (இதைப் பற்றி) நீங்கள் கவலையற்று இருக்கிறீர்களே

[62] ஆகவே, (அவ்வாறு இருக்காமல்) அல்லாஹ்வுக்குச் சிரம் பணிந்து (அவன் ஒருவனையே) வணங்குவீர்களாக

அல்கமர்

Surah 54

[1] மறுமை நெருங்கிவிட்டது. (அதற்கு அத்தாட்சியாக) சந்திரனும் பிளந்து விட்டது

[2] எனினும், அவர்கள் எந்த அத்தாட்சியைக் கண்டபோதிலும் (அதைப்) புறக்கணித்து ‘‘இது சகஜமான சூனியம்தான்'' என்று கூறுகின்றனர்

[3] மேலும், அதை பொய்யாக்கி தங்களது சரீர இச்சைகளையே பின்பற்றுகின்றனர். (அவர்கள் எதை புறக்கணித்தாலும் வரவேண்டிய) ஒவ்வொரு விஷயமும் (அதனதன் நேரத்தில்) உறுதியாகி விடும்

[4] (இவர்களுக்குப்) போதுமான படிப்பினை தரக்கூடிய பல விஷயங்கள் (இதற்கு முன்னரும்) நிச்சயமாக அவர்களிடம் வந்தே இருக்கின்றன

[5] (அவை அவர்களுக்கு) முழு ஞானம் அளிக்கக்கூடியவைதான். எனினும், (அவற்றைக் கொண்டு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்தது (இவர்களுக்கு) ஒரு பயனும் அளிக்கவில்லை

[6] ஆகவே, (நபியே!) நீர் அவர்களைப் புறக்கணித்து விடுவீராக. இவர்கள் வெறுக்கும் (அந்தக் கேள்வி கணக்கு) விஷயத்திற்காக (இஸ்ராஃபீல் என்னும்) அழைப்பவர் அழைக்கும் நாளில்

[7] (அந்நாளில்) இவர்கள் கீழ் நோக்கிய பார்வையுடன் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டுப் பரவிக் கிடக்கும் வெட்டுக் கிளியைப்போல்

[8] அழைப்பவரிடம் விரைந்தோடி வருவார்கள். இது மிக சிரமமான நாள் என்றும் அந்நிராகரிப்பவர்கள் (அச்சமயம்) கூறுவார்கள்

[9] (இவ்வாறே) இவர்களுக்கு முன்னிருந்த நூஹுடைய மக்களும் (அந்த நாளைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தார்கள். ஆகவே, அவர்கள் (அதைப் பற்றி எச்சரிக்கை செய்த) நம் (தூதராகிய) அடியாரைப் பொய்யாக்கியதுடன், அவரைப் பைத்தியக்காரனென்று கூறி (அவரை துன்புறுத்துவதாக) மிரட்டிக்கொண்டும் இருந்தார்கள்

[10] ஆகவே, அவர் தன் இறைவனை நோக்கி ‘‘நிச்சயமாக நான் (இவர்களிடம்) தோற்றுவிட்டேன். நீ எனக்கு உதவி செய்!'' என்று பிரார்த்தனை செய்தார்

[11] ஆதலால், வானத்தின் வாயில்களைத் திறந்து விட்டு, தாரை தாரையாய் மழை கொட்டும்படி நாம் செய்தோம்

[12] மேலும், பூமியின் ஊற்றுக்கண்களையும் (பீறிட்டுப்) பாய்ந்தோடச் செய்தோம். ஆகவே, நிர்ணயிக்கப்பட்ட ஒரு காரியத்திற்காக தண்ணீர் ஒன்று சேர்ந்தது

[13] நாம் அவரை(யும், அவரை நம்பிக்கை கொண்டவர்களையும்) பலகையினாலும், ஆணியினாலும் செய்யப்பட்ட கப்பலின் மீது சுமந்து கொண்டோம்

[14] அது நம் கண்களுக்கு முன்பாகவே (பிரளயத்தில் மிதந்து) சென்றது. (மற்றவர்களோ மூழ்கி மாண்டனர்.) எவரை இவர்கள் (மதிக்காது) நிராகரித்தனரோ, அவருக்காக இவ்வாறு கூலி கொடுக்கப்பட்டது

[15] நிச்சயமாக நாம் இதை (பிற்காலத்தவருக்கு) ஒரு படிப்பினையாகச் செய்து விட்டோம். (இதைக்கொண்டு) நல்லுணர்ச்சி பெறக்கூடியவர் உண்டா

[16] எனது வேதனையும், எனது எச்சரிக்கைகளும் எவ்வாறாயிற்று (என்பதைக் கவனிப்பார்களா)

[17] (மனிதர்கள்) நல்லுணர்ச்சி பெறுவதற்காக இந்த குர்ஆனை எளிதாக்கி வைத்திருக்கிறோம். (இதன் மூலம்) நல்லுணர்ச்சி பெறுபவர்கள் உண்டா

[18] ஆது என்னும் மக்களும் (இவ்வாறே நம் தூதரைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தனர். எனினும், (அவர்களுக்கு ஏற்பட்ட) எனது வேதனையும், எனது எச்சரிக்கைகளும் எவ்வாறாயிற்று (என்பதைக் கவனிப்பார்களா)

[19] நிச்சயமாக நாம் அவர்கள் மீது (என்றும்) நிலையான துர்ப்பாக்கியமுடைய ஒரு நாளில் மிக்க கடினமான புயல் காற்றை அனுப்பிவைத்தோம்

[20] அது வேரற்ற பேரீச்ச மரங்களைப்போல், மனிதர்களைக் களைந்து (எறிந்து) விட்டது

[21] எனது வேதனையும், எனது எச்சரிக்கைகளும் எவ்வாறாயிற்று (என்பதைக் கவனிப்பார்களா)

[22] (மனிதர்கள்) நல்லுணர்ச்சி பெறுவதற்காக இந்த குர்ஆனை எளிதாக்கி வைத்திருக்கிறோம். (இதன் மூலம்) நல்லுணர்ச்சி பெறுபவர்கள் உண்டா

[23] (இவ்வாறே) ஸமூது என்னும் மக்களும் (தங்களுக்கு அனுப்பப்பட்ட ஸாலிஹ் நபியையும் நமது) எச்சரிக்கைகளையும் பொய்யாக்கினர்

[24] (பொய்யாக்கியதுடன்) ‘‘நம்மிலுள்ள ஒரு மனிதனையா நாம் பின்பற்றுவது? பின்பற்றினால், நிச்சயமாக நாம் வழிகேட்டில் சென்று சிரமத்திற்குள்ளாகி விடுவோம்'' என்று கூறினார்கள்

[25] ‘‘நமக்கு மத்தியில் (நம்மை தவிர்த்து) இவர் மீது தானா வேதம் இறக்கப்பட்டது? மாறாக! இவர் பெரும் பொய் சொல்லும் இறுமாப்புக் கொண்டவர்'' (என்றனர்)

[26] பொய் சொல்லும் இறுமாப்புக் கொண்டவர் யாரென்பதை, வெகு விரைவில் நாளைய தினமே அறிந்துகொள்வார்கள்

[27] (ஆகவே,) அவர்களைச் சோதிப்பதற்காக, மெய்யாகவே ஒரு பெண் ஒட்டகத்தை நாம் அனுப்பி வைப்போம். ஆகவே, (ஸாலிஹ் நபியே!) நீர் பொறுமையாயிருந்து, அவர்களைக் கவனித்து வருவீராக

[28] ‘‘(அவ்வூரில் உள்ள ஊற்றின்) குடிநீர் அவர்களுக்கு(ம் அந்த ஒட்டகத்திற்கும்) இடையில் நிச்சயமாகப் பங்கிடப்பட்டுவிட்டது. ஒவ்வொருவரும் தன் பங்கிற்குத் தகுந்தாற்போல் குடிப்பதற்கு வரலாம்'' என்று அவர்களுக்கு அறிவித்து விடுவீராக

[29] எனினும், அவர்கள் (கத்தார் என்னும்) தங்கள் நண்பனை அழைத்தனர். அவன் அதை வெட்டி, அதன் கால் நரம்புகளைத் தறித்து விட்டான்

[30] ஆகவே, எனது வேதனையும், எனது எச்சரிக்கைகளும் எவ்வாறாயிற்று (என்பதைக் கவனிப்பார்களா)

[31] நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஒரே ஒரு (இடி முழக்கச்) சப்தத்தைத் தான் அனுப்பி வைத்தோம். அதனால், பிடுங்கி எறியப்பட்ட வேலி(க் கூளங்)களைப் போல் அவர்கள் ஆகிவிட்டார்கள்

[32] (மனிதர்கள்) நல்லுணர்ச்சி பெறுவதற்காக இந்த குர்ஆனை எளிதாக்கி வைத்திருக்கிறோம். (இதன் மூலம்) நல்லுணர்ச்சி பெறுபவர்கள் உண்டா

[33] லூத்துடைய மக்களும் நம் எச்சரிக்கையைப் பொய்யாக்கினார்கள்

[34] லூத்துடைய குடும்பத்தாரைத் தவிர, மற்றவர்கள் மீது நாம் கல்மாரி பொழியச் செய்தோம். விடியற்காலை நேரத்தில் நாம் அவ(ருடைய குடும்பத்தா)ர்களை பாதுகாத்துக் கொண்டோம்

[35] இது நமது அருளாகும். இவ்வாறே நன்றி செலுத்துபவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்

[36] (அவர்களை) நாம் பிடித்துக்கொள்வோம் என்று நிச்சயமாக அவர், அவர்களுக்கு எச்சரிக்கை செய்தார். எனினும், அந்த எச்சரிக்கைகளைப் பற்றி அவர்கள் தர்க்கிக்க ஆரம்பித்தார்கள்

[37] மேலும், அவருடைய விருந்தாளியையும் (கெட்ட காரியத்திற்காக) மயக்கி (அடித்து)க்கொண்டு போகப் பார்த்தார்கள். ஆகவே, அவர்களுடைய கண்களை நாம் துடைத்து(க் குருடாக்கி) விட்டோம். எனது வேதனையையும், எனது எச்சரிக்கைகளையும் சுவைத்துப்பாருங்கள் என்று கூறினோம்

[38] ஆகவே, அதிகாலையில் நிலையான வேதனை அவர்களை வந்தடைந்தது

[39] ஆகவே, எனது வேதனையையும், எனது எச்சரிக்கைகளையும் நீங்கள் சுவைத்துப் பாருங்கள் (என்று கூறினோம்)

[40] (மனிதர்கள்) நல்லுணர்ச்சி பெறுவதற்காக இந்த குர்ஆனை எளிதாக்கி வைத்திருக்கிறோம். (இதன் மூலம்) நல்லுணர்ச்சி பெறுபவர்கள் உண்டா

[41] நிச்சயமாக, ஃபிர்அவ்னுடைய மக்களிடம் பல எச்சரிக்கைகள் வந்தன

[42] நமது அத்தாட்சிகள் அனைத்தையும் அவர்கள் பொய்யாக்கிக் கொண்டே வந்தார்கள். ஆகவே, மிக்க சக்திவாய்ந்த பலசாலி பிடிப்பதைப் போல் நாம் அவர்களைப் பிடித்துக் கொண்டோம்

[43] (மக்காவாசிகளே!) உங்களிலுள்ள நிராகரிப்பவர்கள் (அழிந்துபோன) இவர்களைவிட மேலானவர்களா? அல்லது, (உங்களைத் தண்டிக்கப்படாது என்பதற்கு) உங்களுக்கு (ஏதேனும்) விடுதலைச் சீட்டு உண்டா? அல்லது

[44] ‘‘நாங்கள் பெருங்கூட்டத்தினர், நாங்கள் ஒருவருக்கொருவர் உதவி புரிந்து கொள்ளக் கூடியவர்கள். (ஆகவே, எங்களுக்கு ஒரு பயமுமில்லை.)'' என்று (நபியே!) இவர்கள் கூறுகின்றனரா

[45] அதிசீக்கிரத்தில் இவர்களுடைய கூட்டம் சிதறடிக்கப்பட்டு, (இவர்கள்) புறங்காட்டிச் செல்வார்கள்

[46] மாறாக, மறுமை நாள்தான் இவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட தவணையாகும். அந்த மறுமை நாள் மிக்க திடுக்கமானதாகவும், மிக்க கசப்பாகவும் இருக்கும்

[47] நிச்சயமாகக் குற்றவாளிகள் (இம்மையில்) வழிகேட்டிலும் (மறுமையில்) நரகத்திலும்தான் இருப்பார்கள்

[48] இவர்கள் நரகத்திற்கு முகங்குப்புற இழுத்துச் செல்லும் நாளில் இவர்களை நோக்கி ‘‘(உங்களை) நரக நெருப்பு பொசுக்குவதைச் சுவைத்துப் பாருங்கள்'' என்று கூறப்படும்

[49] நிச்சயமாக நாம் ஒவ்வொரு பொருளையும் குறிப்பான திட்டப்படியே படைத்திருக்கிறோம்

[50] (ஒரு பொருளை நாம் படைக்க நாடினால்) நம் கட்டளை (யெல்லாம்) கண் சிமிட்டுவதைப்போன்ற ஒன்றுதான்

[51] (மக்காவாசிகளே!) உங்கள் இனத்தாரில், (பாவம் செய்து கொண்டிருந்த) எத்தனையோ வகுப்பார்களை நாம் அழித்திருக்கிறோம். உங்களில் நல்லுணர்ச்சி பெறுபவர்கள் உண்டா

[52] இவர்கள் செய்கின்ற ஒவ்வொரு காரியமும் (அவர்களுடைய) பதிவுப் புத்தகத்தில் இருக்கிறது

[53] சிறிதோ, பெரிதோ அனைத்துமே அதில் வரையப்பட்டிருக்கும்

[54] நிச்சயமாக இறையச்சமுடையவர்கள் சொர்க்கங்களிலும், (அதிலுள்ள) நீரருவிகளின் சமீபத்திலும் இருப்பார்கள்

[55] அது மெய்யாகவே மிக்க கண்ணியமுள்ள இருப்பிடம்; அது மிக்க சக்திவாய்ந்த பேரரசனிடம் இருக்கிறது

அர்ரஹ்மான்

Surah 55

[1] (நபியே! அல்லாஹ்தான்) அளவற்ற அருளாளன்

[2] (அவன்தான்) இந்த குர்ஆனை (உங்களுக்குக்) கற்றுக் கொடுத்தான்

[3] அவனே மனிதனைப் படைத்தான்

[4] அவனே மனிதனுக்குப் பேசவும் கற்பித்தான்

[5] சூரியனும் சந்திரனும் (அவற்றுக்கு இறைவன் ஏற்படுத்திய) கணக்கின்படியே (செல்கின்றன)

[6] செடிகள், (கொடிகள்,) மரங்கள் (ஆகிய அனைத்தும் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டுச்) சிரம் பணிகின்றன

[7] அவனே வானத்தை உயர்த்தினான். மேலும் (உங்கள் வியாபாரத்திற்காக) தராசை அமைத்தான். ஆகவே, நீங்கள் நிறுவையில் அநியாயம் செய்யாதீர்கள்

[8] அவனே வானத்தை உயர்த்தினான். மேலும் (உங்கள் வியாபாரத்திற்காக) தராசை அமைத்தான். ஆகவே, நீங்கள் நிறுவையில் அநியாயம் செய்யாதீர்கள்

[9] ஆகவே, நீங்கள் நீதமாக நிறுங்கள். எடையைக் குறைத்து விடாதீர்கள்

[10] படைப்புகள் வசித்திருக்க வசதியாகப் பூமியை அமைத்தான்

[11] அதில் (பலவகை) கனிவர்க்கங்களும் (குலைகள் நிறைந்த) பாளைகளை உடைய பேரீச்சை மரங்களும் உற்பத்தியாகின்றன

[12] உமியால் மூடப்பட்ட தானியங்களும், வாசனைப் புற்பூண்டுகளும் உண்டாகின்றன

[13] ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

[14] சுட்ட பாத்திரத்தைப் போல் (அதை தட்டும்போது ‘கன் கன்' என்று) சப்தமிடும் களிமண்ணால் அவன் (முதல்) மனிதரைப் படைத்தான்

[15] நெருப்பின் கொழுந்தினால் அவன் ஜின்னைப் படைத்தான்

[16] ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

[17] (சூரியன், சந்திரன் இரண்டும்) உதிக்கும் இரு திசைகளுக்கும் அவனே சொந்தக்காரன். மேலும், (அவை) மறைகின்ற இரு திசைகளுக்கும் அவனே சொந்தக்காரன்

[18] ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

[19] இரு கடல்களையும் அவை சந்தித்துக் கொள்ளுமாறு அவனே இணைத்தான்

[20] ஆயினும், அவை இரண்டுக்கிடையில் ஒரு தடுப்புண்டு. (அத்தடுப்பை) அவ்விரண்டும் மீறாது

[21] ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

[22] அவ்விரு கடல்களிலிருந்தே முத்து, பவளம் (போன்றவை) உற்பத்தியாகின்றன

[23] ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

[24] கடலில் மலைகளைப் போல செல்லும் உயர்ந்த கப்பல்களும் அவனுக்குரியனவே

[25] ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

[26] பூமியிலுள்ள அனைத்தும் அழிந்தேபோகும்

[27] மிக கண்ணியமும் பெருமையும் உடைய உமது இறைவனின் திருமுகம் மட்டும் (அழியாது) நிலைத்திருக்கும்

[28] ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

[29] வானங்களிலும் பூமியிலுமுள்ள அனைத்தும் (தங்களுக்கு வேண்டியவற்றை) அவனிடமே கேட்கின்றன. (அவன் செயலற்றிருக்கவில்லை.) ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு வேலையில் இருக்கிறான்

[30] ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

[31] (மனித, ஜின் ஆகிய) இரு வகுப்பார்களே! நிச்சயமாக அதிசீக்கிரத்தில் நாம் உங்களை கவனிக்க முன்வருவோம்

[32] ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

[33] மனித, ஜின் கூட்டத்தார்களே! நீங்கள் வானங்கள் இன்னும் பூமியின் எல்லையைக் கடந்து சென்றுவிட உங்களால் கூடுமாயின் அவ்வாறு சென்று விடுங்கள். ஆயினும், (அவற்றை ஆட்சி புரியக்கூடிய) மிகப் பெரும் பலத்தைக் கொண்டே தவிர நீங்கள் செல்ல முடியாது

[34] ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

[35] (நீங்கள் அவற்றை விட்டும் வெளிப்பட விரும்பிச் சென்றால்) உங்கள் மீது அக்னி ஜூவாலையும், உருக்கப்பட்ட செம்பும் எறியப்படும். அதை நீங்கள் தடுத்துக்கொள்ள முடியாது

[36] ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

[37] (யுக முடிவுக்காக) வானம் பிளக்கும் சமயத்தில் அது (ஜைத்தூன்) எண்ணெய்யைப் போல் ரோஜா வர்ணமாகிவிடும்

[38] ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

[39] அந்நாளில், மனிதனிடமும், ஜின்னிடமும் அவர்களின் பாவத்தைப் பற்றிக் கேட்கப்பட மாட்டாது. (அவர்களின் குறிப்பைக் கொண்டே அறிந்து கொள்ளப்படும்)

[40] ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

[41] குற்றவாளிகள், அவர்களின் முகக் குறியைக் கொண்டே அறிந்து கொள்ளப்படுவார்கள். அவர்களுடைய உச்சி மயிரையும், பாதங்களையும் பிடிக்கப்(பட்டு பின்னர், நரகத்தில் தூக்கி எறியப்)படும்

[42] ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

[43] இதுதான் குற்றவாளிகள் பொய்யாக்கிக் கொண்டிருந்த நரகம்

[44] இதற்கும், கொதித்த தண்ணீருக்கும் இடையில் (இரு தலைக்கொள்ளியில் சிக்கிய எறும்பைப் போல் அவர்கள்) சுற்றித் திரிவார்கள்

[45] ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

[46] எவன் தன் இறைவனின் சந்திப்பைப் பற்றிப் பயப்படுகின்றானோ, அவனுக்குச் (சொர்க்கத்தில்) இரு சோலைகள் உண்டு

[47] ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

[48] அவ்விரண்டும், கிளைகள் அடர்ந்து நிறைந்த மரங்களை உடைய சோலைகள்

[49] ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

[50] அவ்விரண்டிலும் இரு ஊற்றுக்கள் ஓடிக் கொண்டே இருக்கும்

[51] ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

[52] அவ்விரண்டிலும் ஒவ்வொரு கனிவர்க்கத்திலும் (உலர்ந்தும், பச்சையுமாக) இரு வகை உண்டு

[53] ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

[54] இஸ்தப்ரக்' என்னும் பட்டு விரிப்பின் மீது (உள்ள பஞ்சணைகளில்) சாய்ந்தவர்களாய் இருப்பார்கள். அவ்விரு சோலைகளில் கனிவர்க்கங்கள் அடர்ந்திருக்கும்

[55] ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

[56] அவற்றில், கீழ் நோக்கிய பார்வையையுடைய (அழகிய) கன்னிகைகளும் இருப்பார்கள். இவர்களுக்கு முன்னர், அவர்களை மனிதர்களோ ஜின்களோ தீண்டியதில்லை

[57] ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

[58] அவர்கள், சிகப்பு மாணிக்கத்தைப்போலும் பவளங்களைப்போலும் இருப்பார்கள்

[59] ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

[60] (உங்களின்) நன்மைக்கு நன்மையைத் தவிர (வேறு) கூலி உண்டா

[61] ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

[62] இவ்விரண்டைத் தவிர, (சொர்க்கத்தில் அவர்களுக்கு) மேலும் இரு சோலைகளுண்டு

[63] ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

[64] அவ்விரண்டும், கரும் பச்சை நிறமுடையன

[65] ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

[66] அவ்விரண்டிலும், தொடர்ந்து பொங்கிக்கொண்டே இருக்கின்ற இரு ஊற்றுக்கண்கள் உண்டு

[67] ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

[68] அவ்விரண்டிலும், (பலவகை) கனிகளும், பேரீச்சையும், மாதுளையும் உண்டு

[69] ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

[70] அவற்றில், சிறந்த குணமுடைய அழகிகள் உள்ளனர்

[71] ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

[72] (அவர்கள்தான்) ‘ஹூர்' (என்னும் வெந்நிற) கண்ணழகிகள் (முத்து மற்றும் பவளங்களால் ஆன) கூடாரங்களில் வசித்திருப்பார்கள்

[73] ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

[74] இவர்களுக்கு முன்னர் அப்பெண்களை, மனிதர்களோ ஜின்களோ தீண்டியதில்லை

[75] ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

[76] (அவர்களின் கணவர்கள்) சிறந்த பசுமையான, இரத்தினக் கம்பளங்களில் திண்டு தலையணைகளின் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள்

[77] ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

[78] (நபியே!) மிக்க சிறப்பும், கண்ணியமும் உள்ள உமது இறைவனின் திருப்பெயர் மிக பாக்கியமுடையது

அல்வாகிஆ

Surah 56

[1] (யுகமுடிவு என்னும்) மாபெரும் சம்பவம் நிகழ்ந்தால்

[2] அதை(த் தடை செய்து) பொய்யாக்குவதற்கு ஒன்றுமில்லை

[3] அது (பலரின் பதவிகளைத்) தாழ்த்திவிடும். (பலரின் பதவிகளை) உயர்த்திவிடும்

[4] (அச்சமயம்) மிக்க பலமான பூகம்பம் ஏற்பட்டு

[5] மலைகள் (பெயர்ந்து ஒன்றோடொன்று மோதி) தூள் தூளாகப் பறந்து விடும்

[6] அவை (ஆகாயத்தில்) தூசிகளாகப் பறந்துவிடும்

[7] (அந்நாளில்) நீங்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிந்து விடுவீர்கள்

[8] (முதலாவது:) வலப்பக்கத்திலுள்ளவர்கள். வலப்பக்கத்திலுள்ள (இ)வர்கள் யார்? (என்பதை அறிவீர்களா? அவர்கள் மிக பாக்கியவான்கள்)

[9] (இரண்டாவது:) இடப்பக்கத்திலுள்ளவர்கள். இடப்பக்கத்திலுள்ள (இ)வர்கள் யார்? (என்பதை அறிவீர்களா? இவர்கள் மிக்க துரதிர்ஷ்டசாலிகள்)

[10] (மூன்றாவது:) முன்சென்று விட்டவர்கள். (இவர்கள் நன்மையான காரியங்களில் மற்ற அனைவரையும்விட) முன்சென்று விட்டவர்கள்

[11] இவர்கள் தங்கள் (இறைவனுக்கு) மிக்க நெருங்கியவர்கள்

[12] இவர்கள் இன்பம் தரும் சொர்க்கங்களில் இருப்பார்கள்

[13] (இவர்களுடன்) முதலாவது வகுப்பாரில் ஒரு பெருங்கூட்டத்தினரும்

[14] பின்னுள்ளோரில் ஒரு சொற்ப தொகையினரும் இருப்பார்கள்

[15] பொன் வேலைப்பாடுள்ள உன்னத கட்டில்கள் மீது

[16] ஒருவரை ஒருவர் முகம் நோக்கி(ப் பஞ்சணையின் மீது) சாய்ந்தவர்களாக இருப்பார்கள்

[17] என்றென்றுமே குழந்தைகளாக இருக்கக்கூடிய சிறுவர்கள் (பணி செய்ய எந்நேரமும்) இவர்களைச் சுற்றிக் கொண்டே இருப்பார்கள்

[18] இன்பமான குடிபானம் நிறைந்த குவளைகளையும், கெண்டிகளையும், கிண்ணங்களையும் தூக்கிக்கொண்டு (அவர்களைச் சுற்றிக்கொண்டே இருப்பார்கள்)

[19] (அக்குடிபானங்களால்) இவர்களுக்குத் தலைவலியும் ஏற்படாது; அவர்களுடைய புத்தியும் மாறாது

[20] இவர்கள் பிரியப்பட்ட கனிவர்க்கங்களையும்

[21] விரும்பிய பட்சிகளின் மாமிசத்தையும் (கைகளில் ஏந்தி சுற்றி வருவார்கள்)

[22] (அங்கு இவர்களுக்கு) ‘ஹூருல் ஈன்' (என்னும் கண்ணழகிகளான மனைவி)களும் இருப்பார்கள்

[23] அவர்கள் பேணிப் பாதுகாக்கப்படும் முத்துக்களைப் போல் இருப்பார்கள்

[24] இவை அனைத்தும் இவர்கள் செய்த நன்மைகளுக்குக் கூலியாகக் கிடைக்கும்

[25] அங்கு இவர்கள் ஒழுங்கீனமான வார்த்தைகளையும், வீணான பேச்சுக்களையும் செவியுற மாட்டார்கள்

[26] ஆயினும், ஸலாம்! ஸலாம்! (சாந்தியும், சமாதானமும்) என்ற சப்தத்தையே செவியுறுவார்கள்

[27] வலப்பக்கத்தில் உள்ளவர்களின் பாக்கியம்தான் என்ன! வலப்பக்கத்தில் இருக்கும் அவர்கள்

[28] முள்ளில்லாத இலந்தை மரத்தின் கீழும்

[29] (நுனி முதல்) அடி வரை குலை குலைகளாகத் தொங்கும் (பூவில்லா) வாழை மரத்தின் கீழும்

[30] அடி சாயாத நிழலிலும் இருப்பார்கள்

[31] அங்கு(தொடர்ந்து) நீரைக் கொட்டிக் கொண்டிருக்கும் ஊற்றுக்களும்

[32] ஏராளமான கனிவர்க்கங்களும் உண்டு

[33] அதன் கனிகள் (புசிக்க) தடுக்கப்படாது, (பறிப்பதால்) குறைவுறாது

[34] (ஒன்றைப் பறித்தால், மற்றொன்று அதே இடத்தில் காணப்படும்.) உயர்ந்த மேலான விரிப்புகளில் (அமர்ந்திருப்பார்கள்)

[35] (அவர்களுடன், கண்ணழகிகளாகிய ஹூருல் ஈன் என்னும் கன்னியர்களும் இருப்பார்கள். அவர்கள் ஒருவராலும் பெற்றெடுக்கப்பட்டவர்கள் அல்லர்.) நிச்சயமாக நாம் அவர்களைச் (சொந்தமாக இவர்களுக்கெனப் புதிதாகவே) படைத்திருக்கிறோம்

[36] கன்னியர்களாக அவர்களைப் படைத்திருக்கிறோம்

[37] அவர்கள் தன் கணவனையே காதலிக்கும் சம வயதுடையவர்கள்

[38] (முன்னர் வர்ணிக்கப்பட்ட இவை) வலது பக்கத்திலுள்ளவர்களுக்குக் கிடைக்கும்

[39] (இவர்களுடன்) முன்னுள்ளோரில் ஒரு பெரும் கூட்டத்தினரும்

[40] பின்னுள்ளோரில் ஒரு பெரும் கூட்டத்தினரும் இருப்பார்கள்

[41] இடப்பக்கத்தில் உள்ளவர்களோ, இவர்களின் துர்ப்பாக்கியம்தான் என்னே

[42] (அவர்கள்) கொடிய வெப்பத்திலும், முற்றிலும் கொதிக்கும் நீரிலும்

[43] அடர்ந்த இருண்ட புகையின் மத்தியிலும் இருப்பார்கள்

[44] (அங்கு) குளிர்ச்சியான குடிபானமும் இருக்காது; கண்ணியமான (உணவு) எதுவும் இருக்காது

[45] இதற்கு முன்னர் இவர்கள், நிச்சயமாக பெரும் சுகபோகங்களில் இருந்தனர்

[46] எனினும், பெரும்பாவங்களைச் செய்வதில் உறுதியாக இருந்தனர்

[47] மேலும், என்னே! நாம் இறந்து (உக்கி) மண்ணாகவும், எலும்பாகவும் போனதன் பின்னர், மெய்யாகவே நாம் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவோமா

[48] (அவ்வாறே) முன் சென்றுபோன நம் மூதாதையர்களுமா (எழுப்பப்படுவார்கள்)? என்று (பரிகாசமாகக்) கூறிக்கொண்டிருந்தனர்

[49] (நபியே!) கூறுவீராக: நிச்சயமாக (உங்களில்) முன்னுள்ளோரும், பின்னுள்ளோரும்

[50] (நீங்கள் யாவருமே) அறியப்பட்ட ஒரு நாளின் குறித்த நேரத்தில் (தவறாமல் உயிர் கொடுத்து எழுப்பப்பட்டு) ஒன்று சேர்க்கப்படுவீர்கள்

[51] பிறகு, (கூறப்படும். இந்நாளைப்) பொய்யாக்கி வழி கெட்டவர்களே! நிச்சயமாக நீங்கள்

[52] கண்டிப்பாக கள்ளி மரத்தையே புசிப்பீர்கள்

[53] இன்னும் அதைக் கொண்டே உங்கள் வயிற்றை நிரப்புவீர்கள்

[54] அத்துடன் முற்றிலும் கொதித்த சுடு நீரைக் குடிப்பீர்கள்

[55] (அதுவும் அவசர அவசரமாக) தாகித்த ஒட்டகம் குடிப்பதைப்போல் (நீங்கள்) குடிப்பீர்கள்

[56] கூலி கொடுக்கும் நாளில் அவர்களுக்கு அளிக்கப்படும் விருந்து இதுதான்

[57] (வழிகெட்டவர்களே!) நாமே உங்களை (முதன் முறையாக) படைத்திருக்கிறோம். (ஆகவே, மறுமுறை நாம் உங்களை உயிர்ப்பிப்பதை) நீங்கள் உண்மையென நம்ப வேண்டாமா

[58] நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா

[59] அதை (சிசுவாக) நீங்கள் படைக்கிறீர்களா அல்லது நாம் படைக்கின்றோமா

[60] நாம்தான் உங்களுக்கு மரணத்தை நிர்ணயித்தோம். (உங்களுக்குப் பதிலாக) உங்களைப் போன்றவர்களை மாற்றிக் கொண்டுவருவதற்கும், இன்னும் உங்களை நீங்கள் அறியாத ஒரு ரூபத்தில் அமைத்து விடுவதற்கும் நாம் இயலாதவர்கள் அல்ல

[61] நாம்தான் உங்களுக்கு மரணத்தை நிர்ணயித்தோம். (உங்களுக்குப் பதிலாக) உங்களைப் போன்றவர்களை மாற்றிக் கொண்டுவருவதற்கும், இன்னும் உங்களை நீங்கள் அறியாத ஒரு ரூபத்தில் அமைத்து விடுவதற்கும் நாம் இயலாதவர்கள் அல்ல

[62] முதல்முறை (உங்களைப்) படைத்ததை நிச்சயமாக நீங்கள் நன்கறிந்து இருக்கிறீர்கள். (இதைக் கொண்டு) நீங்கள் நல்லறிவு பெறவேண்டாமா? (இவ்வாறுதான் மறுமையிலும் நாம் உங்களை உயிர் கொடுத்து எழுப்புவோம்)

[63] (நீங்கள் பூமியில்) பயிரிடுபவற்றைக் கவனித்தீர்களா

[64] அதை, நீங்கள் (முளைக்க வைத்துப்) பயிராக்குகிறீர்களா அல்லது நாம் பயிராக்குகின்றோமா

[65] நாம் விரும்பினால், அதை (விளையாத) சாவிகளாக்கி விடுவோம். அந்நேரத்தில் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்

[66] ‘‘நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்து விட்டோம்

[67] மாறாக, எங்களுக்கு ஒன்றுமே கிடைக்காது போயிற்று'' (என்று கூறிக்கொண்டிருப்பீர்கள்)

[68] நீங்கள் குடிக்கின்ற தண்ணீரைக் கவனித்தீர்களா

[69] மேகத்திலிருந்து அதை நீங்கள் பொழிய வைக்கிறீர்களா? அல்லது நாம் பொழிய வைக்கின்றோமா

[70] நாம் விரும்பினால் அதை (நீங்கள் குடிக்க முடியாத) உப்பு நீராக ஆக்கியிருப்போம். (இதற்கு) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா

[71] நீங்கள் (அடுப்பில்) மூட்டுகின்ற நெருப்பையும் கவனித்தீர்களா

[72] அதன் விறகை நீங்கள் உற்பத்தி செய்கிறீர்களா? அல்லது நாம் உற்பத்தி செய்கின்றோமா

[73] (நரகத்தின் நெருப்பை உங்களுக்கு) ஞாபகமூட்டும் பொருட்டும், வழிப்போக்கருக்குப் பயனளிக்கும் பொருட்டும் அதை நாம்தான் படைத்திருக்கிறோம்

[74] ஆகவே, (நபியே!) மகத்தான உமது இறைவனின் பெயரைக்கொண்டு நீர் (அவனை) புகழ்வீராக

[75] நட்சத்திரங்கள் மறையும் இடங்களின் மீது நாம் சத்தியம் செய்கிறோம்

[76] மனிதர்களே! (உங்களுக்கு) அறிவிருந்தால் நிச்சயமாக இது ஒரு மகத்தான சத்தியம் என்பதைத் தெரிந்து கொள்வீர்கள்

[77] நிச்சயமாக இது மிக்க கண்ணியமுள்ள குர்ஆனாகும்

[78] (இது ‘லவ்ஹுல் மஹ்ஃபூள்' என்னும்) பாதுகாக்கப்பட்ட புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது

[79] பரிசுத்தவான்களைத் தவிர, (மற்றெவரும்) இதைத் தொட மாட்டார்கள்

[80] உலகத்தார் அனைவரின் (எஜமானாகிய) இறைவனால் இது இறக்கப்பட்டது

[81] ஆகவே, இதிலுள்ள விஷயங்களையும் நீங்கள் அலட்சியம் செய்யக் கருதுகிறீர்களா

[82] அல்லது பொய்யாக்குவதையே நீங்கள் உங்கள் தொழிலாக்கிக் கொள்கிறீர்களா

[83] (உங்களில் மரணிக்கும் ஒருவரின் உயிர்) தொண்டைக் குழியை அடைந்தால்

[84] அந்நேரத்தில் நீங்கள் (இறப்பவனுக்குச் சமீபமாயிருந்தும், ஒன்றும் செய்ய முடியாமல்) பரக்கப் பரக்க விழிக்கிறீர்கள்

[85] ஆயினும், நாம் அவனுக்கு உங்களைவிட மிக சமீபமாக இருக்கிறோம். எனினும், நீங்கள் (நம்மைப்) பார்ப்பதில்லை

[86] நீங்கள் எவருக்குமே கட்டுப்படாமல் (பூரண சுதந்திரம் உடையவர்களாக) இருந்தால்

[87] மெய்யாகவே, நீங்கள் (இதில்) உண்மை சொல்பவர்களாகவுமிருந்தால், (இறந்த அவனுடைய உயிரை) நீங்கள் மீட்டுக் கொண்டு வரவேண்டியது தானே

[88] (இறந்தவர் இறையச்சமுடையவராக இருந்து அல்லாஹ்வின்) நெருக்கத்தை பெற்றவர்களில் ஒருவராக இருந்தால்

[89] அவருக்குச் சுகமும் மகிழ்ச்சியும் நறுமனமும் உண்டு; இன்பமளிக்கும் சொர்க்கமும் உண்டு

[90] (அதிலும்) அவர் வலப்பக்கத்திலுள்ளவராக இருந்தாலோ

[91] அவரை நோக்கி ‘‘வலப்பக்கத்தில் உள்ளவர்களில் இருந்து உமக்கு ‘‘ஸலாம்'' ஈடேற்றம் உண்டாகுக! (என்ற முகமன்) கூறப்படும்

[92] அவன் வழிகெட்டவனாகவும் (இவ்வேதத்தைப்) பொய்யாக்குகிறவனாகவும் இருந்தால்

[93] முற்றிலும் கொதித்த சுடுநீர் அவனுக்கு விருந்தாகும்

[94] இன்னும், நரகத்தில் தள்ளப்படுவான்

[95] நிச்சயமாக இது சந்தேகமற்ற உண்மையாகும்

[96] ஆகவே (நபியே!) நீர் மகத்தான உமது இறைவனின் திருப்பெயரைக் கூறி புகழ்ந்து கொண்டிருப்பீராக

அல்ஹதீத்

Surah 57

[1] வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்துமே அல்லாஹ்வைப் புகழ்ந்து துதி செய்கின்றன. அவன் (அனைவரையும்) மிகைத்தவன், ஞானமுடையவன் ஆவான்

[2] வானங்கள் பூமியின் ஆட்சியும் அவனுக்குரியதே! அவனே உயிர்ப்பிக்கிறான்; அவனே மரணிக்க வைக்கிறான். அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்

[3] அவனே முதலானவன்; அவனே இறுதியானவன்; அவனே வெளிப்படையானவன்; அவனே மறைவானவன்; அவனே ஒவ்வொன்றையும் நன்கறிந்தவன்

[4] அவன்தான் வானங்களையும் பூமியையும் ஆறு நாள்களில் படைத்தான். பின்னர், அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தகுந்தாற்போல்) உயர்ந்து விட்டான். (வித்து முதலியவை) பூமியில் விதைக்கப்படுவதையும் அவை முளைத்து வெளிப்படுவதையும், வானத்தில் இருந்து இறங்குபவற்றையும், (பூமியிலிருந்து) ஏறுபவற்றையும் அவன் நன்கறிவான். நீங்கள் எங்கிருந்த போதிலும், அவன் உங்களுடன் இருக்கிறான். நீங்கள் செய்பவற்றையும் (அந்த) அல்லாஹ் உற்று நோக்குகிறான்

[5] வானங்கள் பூமியின் ஆட்சி அவனுக்குரியதே! எல்லா விஷயங்களும் (அந்த) அல்லாஹ்விடமே கொண்டு வரப்படும்

[6] அவனே, இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான். மனதிலுள்ள எல்லா எண்ணங்களையும் அவன் நன்கறிவான்

[7] ஆகவே, (மனிதர்களே! நீங்கள்) அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நம்பிக்கைகொள்ளுங்கள். இன்னும், அல்லாஹ் உங்களுக்கு முன் சென்றவர்களின் எப்பொருள்களுக்கு உங்களைப் பிரதிநிதிகளாக ஆக்கினானோ அப்பொருள்களிலிருந்து நீங்கள் தானம் செய்யுங்கள். உங்களில் எவர்கள் நம்பிக்கைகொண்டு தானம் செய்கிறார்களோ, அவர்களுக்குப் பெரியதொரு கூலி உண்டு

[8] (மனிதர்களே!) நீங்கள் அல்லாஹ்வை ஏன் நம்பிக்கைகொள்வதில்லை? உங்களைப் படைத்துக் காக்கும் உங்கள் இறைவனைத்தான் நீங்கள் நம்பிக்கைகொள்ளுமாறு, உங்களை (நமது) தூதர் அழைக்கிறார். (இதைப்பற்றி, இறைவன்) உங்களிடம் நிச்சயமாக வாக்குறுதி பெற்றிருக்கிறான். நீங்கள் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்களாயிருந்தால் (இதன் உண்மையை நீங்கள் நன்கறிந்து கொள்வீர்கள்)

[9] உங்களை(ப் பாவத்தின்) இருள்களிலிருந்து ஒளியின் பக்கம் கொண்டு வரும் பொருட்டே, அவன் தனது அடியார் மீது தெளிவான வசனங்களை இறக்கி வைத்திருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிக இரக்கமுடையவனும் மகா கருணையுடையவனும் ஆவான்

[10] உங்களுக்கென்ன நேர்ந்தது! அல்லாஹ்வுடைய பாதையில் நீங்கள் தர்மம் செய்ய வேண்டாமா? வானங்கள், பூமியிலுள்ளவற்றின் உரிமை அல்லாஹ்வுக்குரியதுதானே! உங்களில் எவர்கள் (மக்காவை) வெல்வதற்கு முன்னர் தம் பொருளைச் செலவு செய்து போர் புரிந்தார்களோ, அவர்களும் அதற்குப் பின்னர், தம் பொருளைச் செலவு செய்து போர் புரிந்தவர்களும் சமமாக மாட்டார்கள். அவர்கள் (-மக்கா வெற்றிக்கு முன் செலவு செய்து போரிட்டவர்கள்) அதற்கு பின்னர் செலவு செய்து போரிட்டவர்களைவிட மகத்தான பதவி உடையவர்கள். எனினும், இவ்விருவருக்கும் அல்லாஹ் நன்மையை (சொர்க்கத்தை)த்தான் வாக்களித்திருக்கிறான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவன் ஆவான்

[11] எவர் அல்லாஹ்வுக்காக அழகான கடன் கொடுக்கிறாரோ அவருக்கு, அதை இரட்டிப்பாக்கியே வைத்திருக்கிறான். மேலும் அவருக்கு மிக கண்ணியமான கூலியும் உண்டு

[12] (நபியே!) நம்பிக்கை கொண்ட ஆண்களையும் பெண்களையும் நீர் காணுகின்ற அந்நாளில், அவர்களுடைய பிரகாசம் அவர்களுக்கு முன்னும், அவர்களது வலப்பக்கத்திலும் சென்று கொண்டிருக்கும். (உண்மையான அவர்களின் நம்பிக்கையின் காரணமாக, வானவர்கள் அவர்களை நோக்கி:) ‘‘தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சொர்க்கங்கள் (உங்களுக்கு உண்டு) என்ற நற்செய்தி இன்று உங்களுக்கு அறிவிக்கப்படுகிறது. என்றென்றும் அதில் தங்கி விடுவீர்கள்'' என்று கூறுவார்கள். இதுதான் மகத்தான வெற்றியாகும்

[13] அந்நாளில், நயவஞ்சக ஆண்களும் பெண்களும் நம்பிக்கை கொண்டவர்களை நோக்கி ‘‘நீங்கள் (முன்னேறி சென்றுவிடாமல்) எங்களுக்காகச் சிறிது தாமதியுங்கள். உங்கள் பிரகாசத்தைக் கொண்டு நாங்கள் பயனடைவோம்'' என்று கூறுவார்கள். (அதற்கு அவர்களை நோக்கி ‘‘எங்கள் முன் நிற்காதீர்கள்.) நீங்கள் உங்கள் பின்புறம் சென்று (அங்குப்) பிரகாசத்தைத் தேடிக்கொள்ளுங்கள்'' என்று கூறப்படும். அந்நேரத்தில், இவர்களுக்கும் அவர்களுக்கும் மத்தியில் ஒரு சுவர் எழுப்பப்பட்டு விடும். அதற்கு வாசலும் இருக்கும். (நம்பிக்கையாளர்கள் இருக்கக்கூடிய) அதன் உட்புறத்தில் (இறைவனின்) அருளும், அதன் வெளிப்புறத்தில் (பாவிகள் அனுபவிக்கக்கூடிய அவனுடைய) வேதனையுமிருக்கும்

[14] இவர்கள் (நம்பிக்கையாளர்களை நோக்கி ‘‘உலகத்தில்) நாங்கள் உங்களுடன் சேர்ந்திருக்க வில்லையா?'' என்று சப்தமிட்டுக் கூறுவார்கள். அதற்கவர்கள் (இவர்களை நோக்கி) ‘‘மெய்தான். ஆயினும், நீங்களே உங்களைத் துன்பத்திற்குள்ளாக்கிக் கொண்டீர்கள். (நாங்கள் அழிந்து போவதை) நீங்கள் எதிர்பார்த்தீர்கள்; (இந்நாளைப் பற்றியும்) நீங்கள் சந்தேகித்துக் கொண்டிருந்தீர்கள். அல்லாஹ்வுடைய கட்டளை(யாகிய மரணம்) வரும் வரை, உங்கள் பேராசைகள் உங்களை மயக்கி விட்டன! மாயக்கார (ஷைத்தா)ன் அல்லாஹ்வைப் பற்றி உங்களை மயக்கிவிட்டான்

[15] ஆகவே, இன்றைய தினம் உங்களிடமிருந்தோ அல்லது (உங்களைப் போல்) நிராகரித்தவர்களிடமிருந்தோ (உங்களுக்குக் கிடைக்கவேண்டிய வேதனைக்குப் பதிலாக) எதையும் பரிகாரமாகப் பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது. நீங்கள் செல்லுமிடம் நரகம்தான். (நரக) நெருப்புத்தான் உங்களுக்குத் துணை'' (என்றும் கூறப்படும்). அது தங்குமிடங்களில் எல்லாம் மகா கெட்டது

[16] நம்பிக்கை கொண்டவர்களின் உள்ளங்கள் அல்லாஹ்வை நினைத்தும், அவன் இறக்கிவைத்த சத்திய (வசன)ங்களைக் கவனித்தும் பயப்படக்கூடிய நேரம் (இன்னும்) வரவில்லையா? இவர்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களைப் போல், இவர்களும் ஆகிவிட வேண்டாம். (இவ்வாறே) அவர்கள் மீதும் ஒரு நீண்ட காலம் கடந்து விட்டது. ஆகவே, அவர்களுடைய உள்ளங்கள் கடினமாக இருகிவிட்டன. இன்னும், அவர்களில் பெரும்பாலானவர்கள் பாவிகளாகி விட்டனர்

[17] (மனிதர்களே!) நிச்சயமாக அல்லாஹ்தான், இறந்த பூமியை உயிர்ப்பிக்கிறான் என்பதை உறுதியாக அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டே, நிச்சயமாக அவன் பல உதாரணங்களை உங்களுக்குத் தெளிவாக்கி இருக்கிறான்

[18] நிச்சயமாக ஆண்களிலோ, பெண்களிலோ எவர்கள் தானம் செய்து அழகான முறையில் அல்லாஹ்வு(க்காகப் பிறரு)க்கு கடன் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு, அது பன் மடங்காக்கப்படுகிறது. மேலும், அவர்களுக்கு மிக்க கண்ணியமான கூலியுமுண்டு

[19] எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் மெய்யாகவே நம்பிக்கை கொள்கிறார்களோ, அவர்கள்தான் ‘ஸித்தீக்' என்ற உண்மையாளர்கள். சன்மார்க்கப் போரில் உயிர்த்தியாகம் செய்த ‘ஷஹீது' என்பவர்கள் தங்கள் இறைவனிடத்தில் இருப்பார்கள். மேலும், அவர்கள் அனைவருக்கும் அவர்களுடைய கூலி (குறைவின்றி) உண்டு. (நேரான வழியை அறிவிக்கக்கூடிய) பிரகாசமும் உண்டு. எவர்கள் நம் வசனங்களை நிராகரித்துப் பொய்யாக்குகிறார்களோ, அவர்கள் நரகவாசிகள்தான்

[20] (மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அறிந்துகொள்ளுங்கள் இவ்வுலக வாழ்க்கையெல்லாம் வீண் விளையாட்டும், வேடிக்கையும், வெறும் அலங்காரமும்தான். தவிர உங்களுக்கிடையில் ஏற்படும் வீண் பெருமையும், பொருளிலும் சந்ததியிலும் அதிகரிக்க வேண்டுமென்ற வீண் எண்ணமும்தான். (இதன் உதாரணமாவது:) ஒரு மழையின் உதாரணத்தை ஒத்திருக்கிறது. அந்த மழையினால் முளைத்த பயிர்கள் (நன்கு வளர்ந்து) விவசாயிகளுக்குக் களிப்பை உண்டு பண்ணிக்கொண்டிருந்தன. பின்னர், அவை மஞ்சனித்துக் காய்ந்து, சருகுகளாகிவிடுவதை நீர் காண்கிறீர். (இவ்வுலக வாழ்க்கையும் அவ்வாறே இருக்கிறது.) மறுமையிலோ (அவர்களில் பலருக்குக்) கொடிய வேதனையும், (பலருக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவனது திருப்பொருத்தமும் கிடைக்கின்றன. ஆகவே, இவ்வுலக வாழ்க்கை (மனிதனை) மயக்கும் சொற்ப இன்பமே தவிர வேறில்லை

[21] ஆகவே, (மனிதர்களே!) நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பை நோக்கியும், சொர்க்கத்தை நோக்கியும் முந்திச் செல்லுங்கள். அச்சொர்க்கத்தின் விசாலமோ வானம், பூமியின் விசாலத்தைப்போல் இருக்கிறது. அது அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொண்டவர்களுக்காகவே தயார்படுத்தப்பட்டிருக்கிறது. இது அல்லாஹ்வுடைய அருளாகும். இதை அவன் விரும்பியவர்களுக்கே கொடுக்கிறான். அல்லாஹ் மகத்தான அருளாளன்

[22] (பொதுவாக) பூமியிலோ அல்லது (குறிப்பாக) உங்களுக்கோ ஏற்படக்கூடிய எந்தச் சிரமமும், (நஷ்டமும்) அது ஏற்படுவதற்கு முன்னதாகவே (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்யப்படாமல் இல்லை. நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதே

[23] உங்களை விட்டும் தவறிப்போனதைப் பற்றி நீங்கள் கவலை கொள்ளாதிருக்கவும் (அல்லாஹ்) உங்களுக்குக் கொடுத்ததைப் பற்றி நீங்கள் கர்வம் கொள்ளாதிருக்கவும். (இதை உங்களுக்கு அறிவிக்கிறான்). அல்லாஹ், கர்வம் கொள்பவர்களையும் பெருமையடிப்பவர்களையும் நேசிப்பதில்லை

[24] எவர்கள் கஞ்சத்தனம் செய்து, மற்ற மனிதர்களையும் கஞ்சத்தனம் செய்யும்படி தூண்டுகிறார்களோ (அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு. ஆகவே, அல்லாஹ்வுடைய கட்டளைகளை) எவன் புறக்கணிக்கிறானோ (அது அவனுக்குத்தான் நஷ்டத்தை உண்டுபண்ணும். அல்லாஹ்வுக்கு ஒரு நஷ்டமும் ஏற்படாது.) ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ்தான் பெரும் சீமான், பெரும் புகழுடையவன் ஆவான்

[25] நாம் நம் தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டே அனுப்பி வைத்தோம். அத்துடன் அவர்களுக்கு வேதத்தையும் கொடுத்தோம். மனிதர்கள் நீதமாக நடந்து கொள்ளும் பொருட்டு தராசையும் கொடுத்தோம். இரும்பையும் நாமே படைத்தோம். அதில் பெரும் சக்தி இருக்கிறது; இன்னும் மனிதர்களுக்கு பல பயன்களும் உள்ளன. அல்லாஹ்வைக் (கண்ணால்) காணாமலேயே (அவனை நம்பிக்கை கொண்டு) இதன் மூலம் அவனுக்கும், அவனுடைய தூதருக்கும் உதவி செய்பவர்கள் யார் என்பதை அல்லாஹ் (சோதித்து) அறிந்து கொள்கிறான். நிச்சயமாக அல்லாஹ் பலசாலியும் (அனைவரையும்) மிகைத்தவனும் ஆவான்

[26] நூஹையும், இப்ராஹீமையும் மெய்யாகவே நாம்தான் நம் தூதர்களாக அனுப்பி வைத்தோம். அவ்விருவர்களுடைய சந்ததிகளுக்குள்ளாகவே நபிப்பட்டத்தையும் வேதத்தையும் (சொந்தமாக) ஆக்கினோம். ஆயினும், நேரான வழியில் சென்றவர்கள் அவர்க(ள் சந்ததிக)ளில் சிலர்தான். அவர்களில் பெரும்பாலரோ பாவிகளாகிவிட்டனர்

[27] ஆகவே, (சென்றுபோன நூஹ், இப்ராஹீமுக்குப் பின்னர்) அவர்களுடைய வழியைப் பின்பற்றி (நடக்கக்கூடிய பல) தூதர்களை ஒருவருக்குப் பின் ஒருவராக அனுப்பி வைத்தோம். அவ்வாறே, மர்யமுடைய மகன் ஈஸாவையும் (அவர்களுக்குப் பின்னர், அவர்களைப் பின்பற்றி நடக்குமாறு) அனுப்பிவைத்தோம். அவருக்கு இன்ஜீலையும் கொடுத்தோம் இவரைப் பின்பற்றியவர்களுடைய உள்ளங்களில், கருணையையும் இரக்கத்தையும் உண்டு பண்ணினோம். (உலகத்தின் எல்லா இன்பங்களையும் துறந்து விடக்கூடிய) துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது கடமையாக விதிக்கவில்லை. எனினும், அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய விரும்பி, அவர்களே அதை உண்டுபண்ணிக்கொண்டார்கள். அவ்வாறிருந்தும், அதை அனுசரிக்க வேண்டிய முறைப்படி அவர்கள் அனுசரிக்கவில்லை. ஆயினும், (நபியே!) அவர்களில் எவர்கள் (மெய்யாகவே உம்மை) நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களுடைய கூலியை நாம் அவர்களுக்குக் கொடுப்போம். எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் (நபியே! உம்மை நிராகரிக்கின்ற) பாவிகளாகவே இருக்கின்றனர்

[28] ஆகவே, (ஈஸாவை) நம்பிக்கை கொண்ட (கிறிஸ்த)வர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து, அவனுடைய இத்தூதரை (முஹம்மதை)யும் நம்பிக்கை கொள்ளுங்கள். உங்களுக்கு அவனுடைய அருளிலிருந்து (ஈஸாவை நம்பிக்கை கொண்டதற்கு ஒரு பங்கும், இத்தூதரை நம்பிக்கை கொண்டதற்கு ஒரு பங்கும், ஆக) இரண்டு பங்கு கூலி கொடுப்பான். உங்களுக்கு (நேரான வழியை அறிவிக்கக்கூடிய இந்த குர்ஆன் என்னும்) ஒளியையும் கொடுப்பான். அதன் பிரகாசத்தைக் கொண்டு நீங்கள் (நேரான வழியில்) செல்லலாம். (உங்கள்) குற்றங்களையும் உங்களுக்கு மன்னித்து விடுவான். அல்லாஹ் மிக மன்னிப்பவனும், மகா கருணையுடையவனும் ஆவான்

[29] (இத்தூதரை நம்பிக்கை கொண்டவர்களுக்கு) அல்லாஹ்வுடைய அருளில் ஒரு பாகமும் கிடைக்காதென்று, வேதத்தை உடையவர்கள் எண்ணிக் கொள்ளாதிருக்கும் பொருட்டே (இதை அவன் உங்களுக்கு அறிவித்தான்). அருள் அனைத்தும் நிச்சயமாக அல்லாஹ்வின் கையில் தான் இருக்கின்றன. அவன் விரும்பியவர்களுக்கு அதை அளிக்கிறான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன் ஆவான்

அல்முஜாதலா

Surah 58

[1] (நபியே!) எவள் தன் கணவரைப் பற்றி உம்மிடம் தர்க்கித்து (அவரைப் பற்றி) அல்லாஹ்விடமும் முறையிட்டாளோ, அவளுடைய முறையீட்டை அல்லாஹ் நிச்சயமாகக் கேட்டுக் கொண்டான். (அதைப்பற்றி) உங்கள் இருவரின் தர்க்க வாதத்தையும் அல்லாஹ் செவியுற்றான். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) செவியுறுபவன், (ஒவ்வொருவரின் செயலையும்) உற்று நோக்குபவன் ஆவான்

[2] உங்களில் எவரேனும் தம் மனைவிகளில் எவளையும், தன் தாயென்று கூறிவிடுவதனால், அவள் அவர்களுடைய (உண்மைத்) தாயாகிவிடமாட்டாள். அவர்களைப் பெற்றெடுத்தவர்கள்தான் (உண்மைத்) தாயாவார்கள். (இதற்கு மாறாக எவளையும் எவரும் தாயென்று கூறினால் கூறுகின்ற) அவர்கள் நிச்சயமாகத் தகாததும், பொய்யானதுமான ஒரு வார்த்தையையே கூறுகின்றனர். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், பிழை பொறுப்பவன் ஆவான். (ஆகவே, இத்தகைய குற்றம் செய்தவர்கள் அல்லாஹ்விடம் மன்னிப்பைக் கோரவும்)

[3] ஆகவே, எவரேனும் தங்கள் மனைவிகளை(த் தன்) தாய்க்கு ஒப்பிட்டுக் கூறிய பின்னர், அவர்களிடம் திரும்ப (சேர்ந்துகொள்ள) விரும்பினால், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தொடுவதற்கு முன்னதாகவே (இவ்வாறு ஒப்பிட்டுக் கூறிய குற்றத்திற்குப் பரிகாரமாக) ஓர் அடிமையை விடுதலை செய்யவேண்டும். இதை (அல்லாஹ்) உங்களுக்கு உபதேசம் செய்கிறான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவன் ஆவான்

[4] (விடுதலை செய்யக்கூடிய அடிமையை) எவரேனும் பெற்றிருக்காவிடில், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தொடுவதற்கு முன்னதாகவே, (அவன்) இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும். (இவ்வாறு நோன்பு நோற்க) சக்தி பெறாதவன். அறுபது ஏழைகளுக்கு (மத்திய தரமான) உணவளிக்க வேண்டும். அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நீங்கள் (மெய்யாகவே) நம்பிக்கை கொண்டிருக்கிறீர்கள் என்பதற்காக (இந்த கட்டளையை இவ்வாறு இலேசாக்கி வைத்தான்). இவை அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகளாகும். (இதை) மீறுபவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையுண்டு

[5] எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்கிறார்களோ அவர்கள், நிச்சயமாக அவர்களுக்கு முன்னுள்ளோர் இழிவுபடுத்தப்பட்டபடியே இழிவுபடுத்தப் படுவார்கள். நிச்சயமாக (இதைப் பற்றி)த் தெளிவான வசனங்களையே நாம் இறக்கி இருக்கிறோம். (அதற்கு) மாறுசெய்பவர்களுக்கு இழிவு தரும் வேதனையுண்டு

[6] அவர்கள் அனைவரையும் அல்லாஹ் (உயிர் கொடுத்து) எழுப்பும் நாளில், அவர்கள் செய்தவற்றைப் பற்றி அவர்களுக்கு அறிவிப்பான். அதை அவர்கள் மறந்துவிட்டபோதிலும், அவற்றை அல்லாஹ் சேகரித்து வைக்கிறான். (அவர்கள் செய்யும்) அனைத்திற்கும் அல்லாஹ் (நன்கறிந்த) சாட்சியாளன் ஆவான்

[7] (நபியே!) வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அனைத்தையும் நிச்சயமாக அல்லாஹ் அறிகிறான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அவர்களில் மூன்று பேர்கள் (கூடிப் பேசும்) ரகசியத்தில் அவன் நான்காவதாக இல்லாமல் இல்லை. ஐந்து பேர்கள் (கூடிப் பேசும்) இரகசியத்தில் அவன் ஆறாவதாக இல்லாமலில்லை. இதைவிட குறைவாகவோ அல்லது அதிகமாகவோ உள்ளவர்கள் (கூடிப் பேசும்) இரகசியத்திலும், அவன் அவர்களுடன் இல்லாமல் இல்லை. இவ்வாறு அவர்கள் எங்கிருந்த போதிலும் (ரகசியம் பேசினால் அவன் அவர்களுடைய ரகசியங்களை அறிந்து கொள்கிறான்). பின்னர், அவர்கள் செய்தவற்றைப் பற்றி அவர்களுக்கு மறுமை நாளில் அறிவி(த்து அதற்குரிய கூலியைக் கொடு)க்கிறான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவன் ஆவான்

[8] (நபியே!) ரகசியமே கூடாதென்று தடுக்கப்பட்டிருந்தும், தடுக்கப்பட்டதை நோக்கியே செல்லும் அவர்களை நீர் கவனித்தீரா? பாவத்திற்கும், வரம்பு மீறுவதற்கும், (நம்) தூதருக்கு மாறு செய்வதற்குமே, அவர்கள் ரகசியமாகச் சதி ஆலோசனை செய்கின்றனர். பின்னர் அவர்கள் உங்களிடம் வந்தாலோ, அல்லாஹ் உங்களுக்குக் கூறாத வார்த்தையைக் (கொண்டு, அதாவது: ‘‘அஸ்ஸலாமு அலைக்க' உம்மீது சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக! என்று கூறுவதற்குப் பதிலாக, ‘‘அஸ்ஸாமு அலைக்க' உமக்கு மரணம் உண்டாவதாக! என்று) கூறிவிட்டு, அவர்கள் தங்களுக்குள் (இவர் உண்மையான தூதராக இருந்தால் ‘‘பரிகாசமாக) நாம் கூறியதைப் பற்றி, அல்லாஹ் நம்மை வேதனை செய்யமாட்டானா?'' என்றும் கூறுகின்றனர். நரகமே அவர்களுக்குப் போதுமானதாகும். அதில் அவர்கள் நுழைந்தே தீருவார்கள். அது செல்லுமிடங்களில் மகா கெட்டது

[9] நம்பிக்கையாளர்களே! உங்களுக்குள் நீங்கள் ரகசியம் பேசினால் பாவம் செய்வதற்காகவும், வரம்பு மீறுவதற்காகவும், (நம்) தூதருக்கு மாறுசெய்வதற்காகவும், ரகசியம் பேசாதீர்கள். ஆயினும், நன்மை செய்வதற்காகவும் இறையச்சத்திற்காகவும் இரகசியம் பேசலாம். (அனைத்தையும் அறிந்த) அல்லாஹ்வின் சமூகத்திற்கு நீங்கள் கொண்டு போகப்படுவீர்கள். ஆகவே, அவனுக்கு நீங்கள் பயந்து நடந்துகொள்ளுங்கள்

[10] (அவர்களை) ஷைத்தான் இரகசியமாகப் பேச வைப்பதெல்லாம், நம்பிக்கை கொண்டவர்களுக்குக் கவலையை உண்டுபண்ணுவதற்காகவே. அல்லாஹ்வுடைய நாட்டமின்றி, அவர்களுக்கு அது (-இரகசியம்) அறவே தீங்கிழைக்காது. ஆகவே, நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வையே நம்பியிருக்கவும்

[11] நம்பிக்கையாளர்களே! (நீங்கள் ஒரு சபையிலிருக்கும் பொழுது, எவரேனும்) உங்களை நோக்கிச் ‘‘சபையில் நகர்ந்து இடம் கொடுங்கள்'' என்று கூறினால், (அவ்வாறே) நீங்கள் நகர்ந்து இடம் கொடுங்கள். இடத்தை அல்லாஹ் உங்களுக்கு விசாலமாக்கி கொடுப்பான். தவிர, (சபையில் ஒரு காரணத்திற்காக உங்களை நோக்கி) ‘‘எழுந்து (சென்று) விடுங்கள்'' என்று கூறப்பட்டால், அவ்வாறே நீங்கள் எழுந்து (சென்று) விடுங்கள். (இவ்வாறு நடந்துகொள்ளும்) உங்களிலுள்ள நம்பிக்கையாளர்களுக்கும், கல்வி ஞானம் உடையவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிவான்

[12] நம்பிக்கையாளர்களே! நீங்கள் நம் தூதருடன் இரகசியம் பேச விரும்பினால், உங்கள் இரகசியத்திற்கு முன்னதாகவே (ஏழைகளுக்கு) ஏதும் தானம் செய்து விடுங்கள். இது உங்களுக்கு நன்மையும் பரிசுத்தத் தன்மையும் ஆகும். (தானம் கொடுப்பதற்கு எதையும்) நீங்கள் அடைந்திரா விட்டால், (அதைப்பற்றி உங்கள் மீது குற்றமில்லை.) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன், மகா கருணையுடையவன் ஆவான்

[13] நீங்கள் உங்கள் இரகசியத்திற்கு முன்னர், நீங்கள் தானம் கொடுப்பதைப் பற்றிப் பயந்துவிட்டீர்களா? (மெய்யாகவே) உங்களால் (தானம்) செய்ய முடியாவிடில், அல்லாஹ் உங்களை மன்னித்து விடுவான். எனினும், தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் (உண்மையாகவே) கீழ்ப்படிந்து நடந்து கொள்ளுங்கள். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் ஆவான்

[14] (நபியே!) அல்லாஹ் எவர்கள் மீது கோபமானானோ, அந்த மக்களுடன் உறவாடுகிறவர்களை நீர் பார்த்தீரா? இவர்கள் உங்களிலும் உள்ளவர்களல்ல; அவர்களிலும் உள்ளவர்களல்ல. இவர்கள் நன்கறிந்திருந்தும் (உங்களுடன் இருப்பதாக) வேண்டுமென்றே பொய் சத்தியம் செய்கின்றனர்

[15] இவர்களுக்காக அல்லாஹ், கடினமான வேதனையை தயார்படுத்தி வைத்திருக்கிறான். நிச்சயமாக இவர்கள் செய்யும் காரியம் மகா கெட்டது

[16] இவர்கள் தங்கள் (பொய்) சத்தியங்களைக் கேடயமாக வைத்துக்கொண்டு (மக்களை) அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து தடுத்துவிட்டனர். ஆகவே, இவர்களுக்கு மிக்க இழிவு தரும் வேதனையுண்டு

[17] இவர்களுடைய பொருள்களும், இவர்களுடைய சந்ததிகளும், அல்லாஹ்வி(ன் வேதனையி)லிருந்து எதையும் இவர்களை விட்டும் தடுத்துவிடாது. இவர்கள் நரகவாசிகள்தான்; அதில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள்

[18] அல்லாஹ் இவர்கள் அனைவரையும் (உயிர் கொடுத்து) எழுப்பும் நாளிலும் (இன்றைய தினம்) உங்களிடம் அவர்கள் சத்தியம் செய்ததைப் போன்று, அல்லாஹ்விடத்திலும் சத்தியம் செய்துவிட்டு, நிச்சயமாகத் தாங்கள் ஏதோ (தப்பித்துக் கொள்ளக்கூடிய ஒரு நல்ல) காரியத்தைச் செய்து விட்டதாகவும் எண்ணிக் கொள்வார்கள். மெய்யாகவே இவர்கள்தான் பொய்யர்களன்றோ

[19] ஷைத்தான் இவர்களை ஜெயித்து, அல்லாஹ்வைப் பற்றிய எண்ணத்தையே இவர்களுக்கு மறக்கடித்து விட்டான். இவர்கள்தான் ஷைத்தானுடைய கூட்டத்தினர். ஷைத்தானுடைய கூட்டத்தினர் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள்

[20] எவர்கள், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்க்கிறார்களோ, அவர்கள் இழிவுக்குள்ளாவார்கள்

[21] தானும், தன் தூதர்களுமே நிச்சயமாக வெல்வார்கள் என்று அல்லாஹ் விதித்து விட்டான். நிச்சயமாக அல்லாஹ் பலவானும் (அனைவரையும்) மிகைத்தவனும் ஆவான்

[22] (நபியே!) எந்த மக்கள் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் (மெய்யாகவே) நம்பிக்கை கொண்டிருக்கின்றார்களோ அவர்கள், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்பவர்களிடம் நேசம் கொண்டு உறவாடுவதை நீர் காண மாட்டீர். அவர்கள், தங்கள் பெற்றோர்களாக அல்லது தங்கள் சந்ததிகளாக அல்லது தங்கள் சகோதரர்களாக அல்லது தங்கள் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் சரியே! (அவர்களை நம்பிக்கையாளர்கள் நேசிக்க மாட்டார்கள்.) இவர்களுடைய உள்ளங்களில்தான் அல்லாஹ் நம்பிக்கையை பதியவைத்துத் தன் அருளைக் கொண்டும் இவர்களைப் பலப்படுத்தி வைத்திருக்கிறான். தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சொர்க்கங்களிலும் இவர்களைப் புகுத்தி விடுவான். அதில் என்றென்றும் இவர்கள் தங்கி விடுவார்கள். இவர்களைப் பற்றி அல்லாஹ் திருப்தியடைவான். அவர்களும் அல்லாஹ்வைப் பற்றித் திருப்தியடைவார்கள். இவர்கள்தான் அல்லாஹ்வின் கூட்டத்தினர். நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர்தான் வெற்றி அடைந்தவர்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்

அல்ஹஷ்ர்

Surah 59

[1] வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அல்லாஹ்வைத் துதி செய்கின்றன. அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனும் ஆவான்

[2] வேதத்தை உடையவர்களில் எவர்கள் நிராகரிப்பவர்களாக ஆனார்களோ அவர்களை, அவர்களுடைய வீடுகளிலிருந்து வெளிப்படுத்தியவன் அவன்தான். (அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய தண்டனைகளில்) இது முதலாவதாகும். அவர்கள் (தங்கள் வீடுகளிலிருந்து) வெளிப்பட்டு விடுவார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்களும் தங்கள் கோட்டைக் கொத்தளங்கள், அல்லாஹ்வை விட்டுத் தங்களை தடுத்துக் கொள்ளுமென்று மெய்யாகவே எண்ணிக் கொண்டிருந்தார்கள். எனினும், அவர்கள் எதிர்பார்க்காத வகையில் அல்லாஹ் அவர்களிடம் வந்து, அவர்களுடைய உள்ளங்களில் திகிலைப் போட்டு, அவர்கள் தங்கள் கையைக் கொண்டே தங்கள் வீடுகளை அழிக்குமாறு செய்ததுடன், நம்பிக்கையாளர்களுடைய கைகளைக் கொண்டும் அவர்களுடைய வீடுகளை அழித்தான். (அகப்)பார்வையுடையவர்களே! (இதைக் கொண்டு) நீங்கள் அறிவுணர்ச்சி பெறுவீர்களாக

[3] அவர்களை நாடு கடத்தல் (மட்டும்) செய்துவிடுமாறு அல்லாஹ் (ஏற்கனவே) விதித்திருக்காவிடில் இவ்வுலகத்திலேயே அவர்களை(க் கடினமான) வேதனை செய்திருப்பான். எனினும், மறுமையில் நரக வேதனை அவர்களுக்குக் காத்திருக்கிறது

[4] இதன் காரணமாவது: நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் (மிகக் கடினமாக) எதிர்த்தார்கள் என்பதுதான். (இவ்வாறு) எவன் அல்லாஹ்வை எதிர்க்கிறானோ, (அவனை) நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பான்

[5] நீங்கள் அவர்களுடைய பேரீச்சமரங்களை வெட்டியதும் அல்லது (வெட்டாது) வேருடன் (இருந்தவாறே) அதன் அடிகளின் மீது நின்றிருக்கும்படி நீங்கள் அவற்றை விட்டுவைத்ததும், அந்தப் பாவிகளை இழிவுபடுத்தும் பொருட்டு, அல்லாஹ்வின் அனுமதிபடியே (நடைபெற்ற காரியம் ஆகும்)

[6] அவர்களிடமிருந்து, அல்லாஹ் தன் தூதருக்கு (சிரமம் ஏதுமின்றி)க் கொடுத்த பொருள்களுக்காக (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் குதிரையின் மீதேறியோ, ஒட்டகத்தின் மீதேறியோ (போர் புரிந்து) சிரமப்படவில்லை. எனினும், அல்லாஹ் தான் நாடியவர்களின் மீது தன் தூதர்களுக்கு ஆதிக்கத்தைக் கொடுப்பான். அல்லாஹ் சகலவற்றின் மீதும் பேராற்றல் உடையவன் ஆவான்

[7] அவ்வூராரிடம் இருந்தவற்றில் அல்லாஹ் தன் தூதருக்குக் கொடுத்தவை அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், அவருடைய உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் உரித்தானதாகும். செல்வம் உங்களிலுள்ள பணக்காரர்களுக்கிடையில் மட்டுமே சுற்றிக் கொண்டிருக்காமல் (மற்றவர்களுக்கும் கிடைக்கும் பொருட்டு, இவ்வாறு பொருளைப் பங்கிடும்படி கட்டளையிடுகிறான்.) ஆகவே, நம் தூதர் உங்களுக்குக் கொடுத்ததை நீங்கள் (மனமுவந்து) எடுத்துக்கொள்ளுங்கள். அவர் எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ, அதைவிட்டு நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். (இவ்விஷயத்தில்) நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கடும் தண்டனை தருபவனாவான்

[8] தங்கள் வீடுகளை விட்டும், தங்கள் பொருள்களை விட்டும் (அநியாயமாக) வெளிப்படுத்தப்பட்டு (மக்காவிலிருந்து) ஹிஜ்ரத் செய்து வந்த ஏழைகளுக்கும் அதில் பங்குண்டு. அவர்கள் அல்லாஹ்வுடைய அருளையும், அவனுடைய திருப்பொருத்தத்தையும் அடையக் கருதி (தங்கள் உயிரையும் பொருளையும் தியாகம் செய்து) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உதவி செய்து கொண்டிருக்கின்றனர். இவர்கள்தான் உண்மையான நம்பிக்கையாளர்கள் ஆவர்

[9] முஹாஜிர்கள் தங்களிடம் வருவதற்கு முன்னதாகவே (மதீனாவில்) வீட்டையும் அமைத்துக் கொண்டு நம்பிக்கையையும் ஏற்றுக் கொண்டார்களே அவர்களுக்கும் அதில் பங்குண்டு. இவர்கள் ஹிஜ்ரத்துச் செய்து தங்களிடம் வருபவர்களை அன்பாக நேசித்து வருவதுடன், (எவரும் தங்களுக்குக் கொடுக்காது) அவர்களுக்கு (மட்டும்)கொடுப்பதைப் பற்றித் தங்கள் மனதில் ஒரு சிறிதும் பொறாமை கொள்ளாதும், தங்களுக்கு அவசியம் இருந்த போதிலும், தங்கள் பொருளை அவர்களுக்குக் கொடுத்து உதவி செய்தும் வருகின்றனர். இவ்வாறு எவர்கள் (அல்லாஹ்வின் அருளால்) கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாக்கப்பட்டார்களோ அவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள் ஆவர்

[10] எவர்கள் இவர்களுக்குப் பின் வந்தார்களோ, அவர்கள் ‘‘எங்கள் இறைவனே! எங்களையும் நீ மன்னித்தருள்! எங்களுக்கு முன் நம்பிக்கை கொண்ட எங்கள் (முஹாஜிர், அன்சாரி) சகோதரர்களையும் மன்னித்தருள்! அந்த நம்பிக்கை கொண்டவர்களைப் பற்றி எங்கள் உள்ளங்களில் குரோதங்களை உண்டு பண்ணாதே! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக இரக்கமுடையவன், மகா கருணையுடையவன்'' என்று பிரார்த்தனை செய்துகொண்டே இருக்கின்றனர்

[11] (நபியே! இந்த) நயவஞ்சகர்களை நீர் கவனிக்கவில்லையா? அவர்கள், வேதத்தை உடையவர்களில் உள்ள நிராகரிக்கும் தங்கள் சகோதரர்களை நோக்கி ‘‘நீங்கள் (உங்கள் இல்லத்தை விட்டு) வெளியேற்றப்பட்டால் நாங்களும் உங்களுடன் வெளியேறிவிடுவோம். உங்கள் விஷயத்தில் (உங்களுக்கு விரோதமாக) நாங்கள் ஒருவருக்கும், ஒரு காலத்திலும் கட்டுப்பட மாட்டோம். (எவரும்) உங்களை எதிர்த்து போர் புரிந்தால், நிச்சயமாக நாம் உங்களுக்கு உதவி புரிவோம்'' என்று கூறுகின்றனர். ஆனால், நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள் என்று அல்லாஹ் சாட்சியம் கூறுகிறான்

[12] ஏனென்றால், அவர்கள் (தங்கள் இல்லங்களிலிருந்து) வெளியேற்றப்பட்டால், இவர்கள் அவர்களுடன் வெளியேற மாட்டார்கள். அவர்களை எதிர்த்து (எவரும்) போர் புரிந்தால், அவர்களுக்கு உதவி புரிய முன்வரவும் மாட்டார்கள். முன்வந்த போதிலும், நிச்சயமாக புறங்காட்டியே ஓடுவார்கள். பின்னர் (எவராலுமே) அவர்கள் எத்தகைய உதவியும் பெற மாட்டார்கள்

[13] அவர்களுடைய உள்ளங்களில் உங்களைப் பற்றிய பயம் அல்லாஹ்வை(ப் பற்றிய பயத்தை)விட அதிகமாகவே இருக்கிறது! மெய்யாகவே அவர்கள் அறிவில்லா மக்கள் என்பதுதான் இதற்குக் காரணமாகும்

[14] அவர்கள் அனைவருமே ஒன்று சேர்ந்தபோதிலும், பலமான ஒரு கோட்டைக் குள்ளாகவோ அல்லது மதில்களுக்கப்பாலோ இல்லாமல் (நேருக்கு நேராக) உங்களுடன் போர் புரியமாட்டார்கள். அவர்களுக்குள்ளாகவே பெரும் (பகைமையும்) சண்டைகளும் இருக்கின்றன. அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டிருப்பதாக நீர் எண்ணுகிறீர். (இல்லை) அவர்களுடைய உள்ளங்கள் சிதறிக் கிடக்கின்றன. மெய்யாகவே அவர்கள் (எதையும்) அறிந்துகொள்ள சக்தியற்ற மக்கள் என்பதுதான் இதற்குரிய காரணமாகும்

[15] (இவர்களுக்கு உதாரணமாவது:) இவர்களுக்குச் சிறிது காலத்திற்கு முன்னர் தங்கள் கெட்ட செயல்களின் பலனை (பத்ரு யுத்தத்தில்) அனுபவித்தவர்களின் உதாரணத்தை ஒத்திருக்கிறது. (மறுமையில்) இவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையுண்டு

[16] (இன்னும், இவர்களுடைய உதாரணம்:) ஒரு ஷைத்தானுடைய உதாரணத்தையும் ஒத்திருக்கிறது. அவன் மனிதனை நோக்கி ‘‘நீ (அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும்) நிராகரித்துவிடு'' என்று கூறுகிறான். அவ்வாறே அவனும் நிராகரித்து விட்டான். (பின்னர், ஷைத்தான் அவனை நோக்கி) ‘‘நிச்சயமாக நான் உன்னைவிட்டு விலகிவிட்டேன். ஏனென்றால், உலகத்தாரின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு மெய்யாகவே நான் பயப்படுகிறேன்'' என்று கூறுவான்

[17] நிச்சயமாக அவ்விருவரும் நரகம்தான் செல்வார்கள் என்று முடிவாகி விட்டது. அதில்தான் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள். (இத்தகைய) அநியாயக்காரர்களின் கூலி இதுவேயாகும்

[18] நம்பிக்கையாளர்களே! நீங்கள் (மெய்யாகவே) அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு மனிதனும் (மறுமை என்னும்) நாளைய தினத்திற்காக, தான் எதைத் தயார்படுத்தி வைக்கிறான் என்பதைக் கவனித்து கொள்ளட்டும், நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ், நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவன் ஆவான்

[19] (நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வை (நிராகரித்து அவனை முற்றிலும்)மறந்து விட்டவர்களைப் போல் நீங்களும் ஆகிவிட வேண்டாம். ஏனென்றால், (அதன் காரணமாக) அவர்கள் தம்மையே மறக்கும்படி (அல்லாஹ்) செய்துவிட்டான். இவர்கள்தான் பெரும்பாவிகள் ஆவார்

[20] நரகவாசிகளும் சொர்க்கவாசிகளும் சமமாக மாட்டார்கள். (ஏனென்றால்) சொர்க்கவாசிகள் தான் பெரும் பாக்கியமுடையவர்கள். (நரகவாசிகள் துர்ப்பாக்கியமுடையவர்கள்)

[21] (நபியே!) ஒரு மலையின் மீது நாம் இந்த குர்ஆனை இறக்கிவைத்திருந்தால், அது அல்லாஹ்வின் பயத்தால் நடுங்கி வெடித்துப் பிளந்து போவதை நிச்சயமாக நீர் காண்பீர். மனிதர்கள் சிந்திப்பதற்காக இவ்வுதாரணங்களை நாம் கூறுகிறோம்

[22] அந்த அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு இறைவனில்லை. (அவனே) மறைவானதையும் வெளிப்படையானதையும் நன்கறிந்தவன். அவனே அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையவன்

[23] அந்த அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு இறைவனுமில்லை. அவன்தான் மெய்யான அரசன்; பரிசுத்தமானவன்; சாந்தியும் சமாதானமும் அளிப்பவன்; அபயமளிப்பவன்; பாதுகாவலன்; (அனைவரையும்) மிகைத்தவன்; அடக்கி ஆளுபவன்; பெருமைக்குரியவன். இவர்கள் கூறும் இணை துணைகளை விட்டு அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன்

[24] அந்த அல்லாஹ்தான் படைப்பவன். (அவனே) படைப்புகளை ஒழுங்கு செய்பவன்; (அவனே) படைப்புகளின் உருவத்தையும் அமைப்பவன். அவனுக்கு அழகான பல திருப்பெயர்கள் இருக்கின்றன. வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அவனையே துதி செய்கின்றன. அவனே (அனைவரையும்) மிகைத்தவன்; மிக ஞானமுடையவன்

அல்மும்தஹினா

Surah 60

[1] நம்பிக்கையாளர்களே! எனக்கும் உங்களுக்கும் விரோதமாக இருப்பவர்களை நீங்கள் நேசர்களாக எடுத்துக் கொண்டு, அன்பின் அடிப்படையில் (ரகசியமாகக் கடிதம் எழுதி) அவர்களிடம் உறவாட வேண்டாம். உங்களிடம் வந்த சத்திய (வேத)த்தை நிச்சயமாக அவர்கள் நிராகரித்துவிட்டனர். நீங்கள் உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டீர்கள் என்பதற்காக உங்களையும் (நம்) தூதரையும் (உங்கள் இல்லங்களிலிருந்து) வெளியேற்றினார்கள். (நம்பிக்கையாளர்களே! நீங்கள்)என் திருப்பொருத்தத்தை விரும்பி, என் பாதையில் போர் புரிய மெய்யாகவே நீங்கள் (உங்கள் இல்லங்களிலிருந்து) வெளியேறியிருந்தால், அவர்களுடன் நீங்கள் இரகசியமாக உறவாடிக் கொண்டிருப்பீர்களா? நீங்கள் மறைத்துக் கொள்வதையும், இன்னும் நீங்கள் வெளிப்படுத்துவதையும் நான் நன்கறிவேன். (இவ்வாறு) உங்களில் எவரேனும் செய்தால், நிச்சயமாக அவர் நேரான பாதையிலிருந்து தவறிவிட்டார்

[2] அவர்களுக்கு சமயம் கிடைத்தால் (பகிரங்கமாகவே) அவர்கள் உங்களுக்கு எதிரியாகி, தங்கள் கைகளையும் உங்கள் மீது நீட்டி, தங்கள் நாவாலும் உங்களுக்குத் தீங்கிழைப்பார்கள். மேலும், நீங்களும் (நம்பிக்கையை விட்டு) நிராகரிப்பவர்களாக ஆகிவிடவேண்டும் என்றும் அவர்கள் விரும்புகின்றனர்

[3] (அவர்களுடன் இருக்கும்) உங்கள் சந்ததிகளும், உங்கள் பந்துத்துவமும் மறுமைநாளில் உங்களுக்கு ஒரு பயனுமளிக்காது. (அந்நாளில் அல்லாஹ்) உங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்திவிடுவான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் உற்று நோக்குபவன் ஆவான்

[4] இப்ராஹீமிடத்திலும், அவருடன் இருந்தவர்களிடத்திலும் உங்களுக்கு ஒரு நல்ல உதாரணம் நிச்சயமாக இருக்கிறது. அவர்கள் தம் மக்களை நோக்கி ‘‘நிச்சயமாக நாங்கள் உங்களில் இருந்தும், அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்குகிறவற்றிலிருந்தும் விலகிவிட்டோம். உங்களையும் (அவற்றையும்) நிராகரித்து விட்டோம். அல்லாஹ் ஒருவனையே நீங்கள் நம்பிக்கை கொள்ளும்வரை எங்களுக்கும் உங்களுக்குமிடையில் விரோதமும், குரோதமும் ஏற்பட்டுவிட்டது'' என்று கூறினார்கள். மேலும் இப்ராஹீம் தன் (சொல்லைக் கேளாத) தந்தையை நோக்கி ‘‘அல்லாஹ்விடத்தில் உமக்காக (அவனுடைய வேதனையில்) எதையும் தடுக்க எனக்கு சக்தி கிடையாது. ஆயினும், உமக்காக அவனிடத்தில் பின்னர் நான் மன்னிப்பைக் கோருவேன்'' என்று கூறி, ‘‘எங்கள் இறைவனே! உன்னையே நாங்கள் நம்பினோம். உன்னையே நாங்கள் நோக்கினோம். உன்னிடமே (நாங்கள் அனைவரும்) வர வேண்டியதிருக்கிறது'' (என்றும்)

[5] ‘‘எங்கள் இறைவனே! எங்களை நீ நிராகரிப்பவர்களின் துன்பத்திற்குள்ளாக்கி விடாதே! எங்களை நீ மன்னிப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீதான் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனும் ஆவாய்'' (என்றும்) பிரார்த்தித்தார்

[6] நிச்சயமாக அல்லாஹ்வையும், மறுமை நாளையும் மெய்யாகவே நம்புகிற உங்களுக்கு இவர்களில் அழகான முன்னுதாரணம் இருக்கிறது. எவர் புறக்கணிக்கிறாரோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களின்) தேவையற்றவன், மிக புகழுடையவன் ஆவான்

[7] உங்களுக்கும், அவர்களில் உள்ள உங்கள் எதிரிகளுக்கும் இடையில், அல்லாஹ் நேசத்தை ஏற்படுத்தி விடக்கூடும். (இதற்கும்) அல்லாஹ் ஆற்றலுடையவனே! அல்லாஹ் மிக மன்னிப்பவனும் மகா கருணையுடையவனும் ஆவான்

[8] (நம்பிக்கையாளர்களே!) மார்க்க விஷயத்தில் உங்களுடன் எதிர்த்து போர் புரியாதவர்களுக்கும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாதவர்களுக்கும், நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுடன் நீங்கள் நீதமாக நடந்து கொள்வதையும் அல்லாஹ் தடுக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதிவான்களை நேசிப்பான்

[9] அல்லாஹ் உங்களைத் தடுப்பதெல்லாம், மார்க்க விஷயத்தில் உங்களுடன் போர் புரிந்தவர்களையும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றியவர்களையும், வெளியேற்றுவதில் (எதிரிகளுக்கு) உதவி செய்தவர்களையும் நீங்கள் நண்பர்களாக ஆக்கிக் கொள்வதைத்தான். (ஆகவே,) எவர்கள் அவர்களுடன் நட்பு பாராட்டுகிறார்களோ, அவர்கள்தான் அநியாயக்காரர்கள்

[10] நம்பிக்கையாளர்களே! (நிராகரிப்பவர்களில் உள்ள) பெண்கள் நம்பிக்கைகொண்டு (தம் கணவர்களை வெறுத்து) வெளியேறி உங்களிடம் வந்தால், அவர்களைச் சோதித்துப் பாருங்கள். அவர்களுடைய உண்மை நம்பிக்கையை அல்லாஹ்தான் நன்கறிவான். எனினும், (நீங்கள் சோதித்ததில்) அவர்கள் நம்பிக்கையாளர்கள்தான் என்று உங்களுக்குத் தெரிந்தால், அந்த பெண்களை (அவர்களின் கணவர்களாகிய) நிராகரிப்பவர்களிடம் திரும்ப அனுப்பிவிடாதீர்கள். (ஏனென்றால் முஸ்லிமான) இப்பெண்கள் அவர்களுக்கு (மனைவிகளாக இருப்பதும்) ஆகுமானதல்ல; அவர்கள் இவர்களுக்கு (கணவர்களாக இருப்பதும்) ஆகுமானதல்ல. (எனினும், இப்பெண்களுக்காக அவர்கள்) செலவு செய்திருந்த பொருளை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள். நீங்கள் அந்தப் பெண்களுக்கு மஹரைக் கொடுத்து, அவர்களை திருமணம் செய்துகொள்வது உங்கள் மீது குற்றமாகாது. தவிர, (உங்கள் பெண்களில் எவரும் நம்பிக்கை கொள்ளாதிருந்தால்) நம்பிக்கை கொள்ளாத அந்தப் பெண்களின் திருமண உறவை (நீக்கிவிடாது) நீங்கள் பிடித்துக் கொண்டிருக்க வேண்டாம். (அவர்களை நீக்கி, அவர்களுக்காக) நீங்கள் செலவு செய்ததை (அப்பெண்கள் சென்றிருக்கும் நிராகரிப்பவர்களிடம்) கேளுங்கள். (அவ்வாறே நம்பிக்கை கொண்டு உங்களிடம் வந்துவிட்ட அவர்களுடைய மனைவிகளுக்குத்) தாங்கள் செலவு செய்ததை அவர்கள் உங்களிடம் கேட்கலாம். இது அல்லாஹ்வுடைய கட்டளை. அவன் உங்களுக்கிடையில் (நீதமாகவே) தீர்ப்பளிக்கிறான். அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவனும், ஞானமுடையவனும் ஆவான்

[11] உங்கள் மனைவிகளில் எவளும் உங்களைவிட்டுப் பிரிந்து, நிராகரிப்பவர்களிடம் சென்று (அவளுக்குச் செலவு செய்த பொருள் அவர்களிடமிருந்து கிடைக்காமலும்) இருந்து அதற்காக (அவர்களுடைய நம்பிக்கைகொண்ட மனைவிகளுக்காகக் கொடுக்க வேண்டியதை) நீங்கள் நிறுத்திக் கொண்டுமிருந்தால் (அல்லது நிராகரிப்பவர்களுடன் போர் ஏற்பட்டு அவர்களுடைய பொருளை நீங்கள் அடைந்தாலும்) அதிலிருந்து (உங்களில்) எவருடைய மனைவி நிராகரிப்பவர்களிடம் சென்று விட்டாளோ அவளுக்காக, (அவளுடைய கணவன்) செலவு செய்தது போன்றதைக் கொடுத்து விடுங்கள். நீங்கள் (இவ்விஷயத்தில்) அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். அவனையே நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறீர்கள்

[12] நபியே! நம்பிக்கைகொண்ட பெண்கள் உம்மிடம் வந்து, ‘‘அவர்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைப்பதில்லை, திருடுவதில்லை, விபசாரம் செய்வதில்லை, தங்கள் (பெண்) சந்ததிகளைக் கொலை செய்வதில்லை, தங்கள் கை கால்கள் அறிய (அதாவது: பொய்யெனத் தெரிந்தே) கற்பனையாக அவதூறு கூறுவது இல்லை'' என்று உம்மிடம் (பைஅத்து கொடுத்து) வாக்குறுதி செய்தால், அவர்களுடைய வாக்குறுதியைப் பெற்றுக்கொண்டு, நீர் அவர்களுக்காக (முன்னர் அவர்கள் செய்துவிட்ட குற்றங்களை) அல்லாஹ்விடம் மன்னிக்கக் கோருவீராக. நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன், மகா கருணையுடையவன் ஆவான்

[13] நம்பிக்கையாளர்களே! எந்த மக்களின் மீது அல்லாஹ் கோபப்பட்டானோ அவர்களை நீங்கள் நேசிக்காதீர்கள். சமாதிகளில் இருப்பவர்களைப்பற்றி நிராகரிப்பவர்கள் (அவர்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட மாட்டார்கள் என) நம்பிக்கை இழந்தபடியே, மறுமையைப் பற்றி நிச்சயமாக இவர்களும் நம்பிக்கை இழந்து விட்டனர்

அஸ்ஸஃப்

Surah 61

[1] வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வைத் துதி செய்கின்றன. அவன்தான் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனும் ஆவான்

[2] நம்பிக்கையாளர்களே! நீங்கள் செய்யாத காரியங்களை (செய்ததாக பிறரிடம்) ஏன் கூறுகிறீர்கள்

[3] நீங்கள் செய்யாத காரியங்களை(ச் செய்ததாகக்) கூறுவது அல்லாஹ்விடத்தில் பெரும் பாவமாக இருக்கிறது

[4] (நம்பிக்கையாளர்களே!) எவர்கள் ஈயத்தால் உருக்கி வார்க்கப்பட்ட பலமான அரணைப்போல அணியில் (இருந்து பின்வாங்காது) நின்று, அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிகிறார்களோ, அவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்

[5] மூஸா தன் மக்களை நோக்கி ‘‘என் மக்களே! என்னை ஏன் நீங்கள் துன்புறுத்துகிறீர்கள். மெய்யாகவே நான் உங்களிடம் அனுப்பப்பட்ட அல்லாஹ்வுடைய தூதர் என்பதை நிச்சயமாக நீங்கள் நன்கறிவீர்களே'' என்று கூறியதை (நபியே! நீர்) நினைத்துப் பார்ப்பீராக. (நேரான பாதையிலிருந்து) அவர்கள் விலகவே, அல்லாஹ்வும் அவர்களுடைய உள்ளங்களை (நேரான பாதையிலிருந்து) திருப்பிவிட்டான். பாவம் செய்யும் மக்களை அல்லாஹ் நேரான பாதையில் செலுத்துவதில்லை

[6] மர்யமுடைய மகன் ஈஸா (இஸ்ராயீலின் சந்ததிகளை நோக்கி) ‘‘இஸ்ராயீலின் சந்ததிகளே! மெய்யாகவே நான் உங்களிடம் அனுப்பப்பட்ட அல்லாஹ்வுடைய ஒரு தூதர் ஆவேன். நான் எனக்கு முன்னுள்ள தவ்றாத்தையும் உண்மைப் படுத்துகிறேன். எனக்குப் பின்னர் ‘அஹ்மது' என்னும் பெயர் கொண்ட ஒரு தூதர் வருவதைப் பற்றியும் நான் உங்களுக்கு நற்செய்தி கூறுகிறேன்'' என்று கூறியதை (நபியே! நீர் அவர்களுக்கு) ஞாபகமூட்டுவீராக. (அவர் அறிவித்தவாறு அத்தூதர்) தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களிடம் வந்த (இச்)சமயத்தில் (அவரை நம்பிக்கை கொள்ளாது,) இது தெளிவான சூனியம் என்று அவர்கள் கூறுகின்றனர்

[7] அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய் சொல்பவனைவிட அநியாயக்காரன் யார்? அவன் (நபி இப்ராஹீமின் மார்க்கமாகிய) இஸ்லாமின் பக்கம் அழைக்கப்ப(ட்)டு(ம் அவன் அதை நிராகரிக்)கிறான். இத்தகைய அநியாயக்கார மக்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்த மாட்டான்

[8] அல்லாஹ்வுடைய பிரகாசத்தைத் தன் வாயினால் ஊதி அணைத்து விடலாமென்று இவர்கள் கருதுகின்றனர். இந்நிராகரிப்பவர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் பிரகாசத்தை (உலகமெங்கும் ஜொலிக்கும்படி) முழுமையாகவே ஆக்கிவைப்பான்

[9] அவன்தான் தன் (இத்)தூதரை நேரான வழியைக்கொண்டும், உண்மையான மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பிவைத்தான். (ஈஸாவை அல்லாஹ்வுடைய மகனென்று, அவனுக்கு) இணை வைத்து வணங்கும் இவர்கள் வெறுத்தபோதிலும், எல்லா மார்க்கங்களையும் அது வென்ன்ற தீரும்

[10] நம்பிக்கையாளர்களே! ஒரு வியாபாரத்தை நான் உங்களுக்கு அறிவிக்கவா? அது துன்புறுத்தும் வேதனையிலிருந்து உங்களைக் காப்பாற்றும்

[11] (அதாவது:) அல்லாஹ்வையும், அவனுடைய (இத்)தூதரையும் நம்பிக்கை கொண்டு, உங்கள் பொருள்களையும், உயிர்களையும் தியாகம் செய்து அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரியுங்கள். நீங்கள் அறிவுடையவர்களானால் இதுவே உங்களுக்கு மிக மேலானதாக இருக்கும் (என்பதை அறிந்து கொள்வீர்கள்)

[12] (அவ்வாறு செய்தால்) உங்கள் பாவங்களை மன்னித்து, சொர்க்கங்களிலும் உங்களைப் புகுத்துவான். அவற்றில் நீரருவிகள் ஓடிக்கொண்டே இருக்கும். மேலும், நிலையான சொர்க்கத்திலுள்ள மேலான இருப்பிடங்களும் (உங்களுக்கு) உண்டு. இதுதான் மகத்தான வெற்றியாகும்

[13] நீங்கள் விரும்பக்கூடிய மற்றொன்றும் உண்டு. அது அல்லாஹ்வுடைய உதவியும், சமீபத்தில் கிடைக்கக் கூடிய ஒரு வெற்றியும். (ஆகவே, நபியே! இதைக் கொண்டு) நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி கூறுவீராக

[14] நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி புரிபவர்களாகி விடுங்கள். மர்யமுடைய மகன் ஈஸா, தன் தோழர்களை நோக்கி ‘‘அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்பவர் யார்?'' என்று கேட்ட சமயத்தில், ‘‘நாங்கள் அல்லாஹ்வுக்காக உதவி செய்வோம்'' என்று அந்த சிஷ்யர்கள் கூறியவாறே, (நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்கு உதவி செய்பவர்களாகி விடுங்கள்.) எனினும், இஸ்ராயீலின் சந்ததிகளில் ஒரு கூட்டத்தினர்தான் (அவரை) நம்பிக்கை கொண்டனர். மற்றொரு கூட்டத்தினர் (அவரை) நிராகரித்தனர். ஆகவே, நம்பிக்கை கொண்ட அவர்களுக்கு, அவர்களுடைய எதிரியின் மீது (வெற்றி பெற) உதவி புரிந்தோம். ஆகவே, அவர்கள் வெற்றி பெற்றவர்களாகிவிட்டார்கள்

அல்ஜுமுஆ

Surah 62

[1] வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வை புகழ்கின்றன. (அவன்தான்) மெய்யான அரசன்; பரிசுத்தமானவன்; (அனைவரையும்) மிகைத்தவன்; ஞானமுடையவன் ஆவான்

[2] கல்வி அறிவில்லாத (அரபு) மக்களில் அவர்களில் உள்ள ஒருவரை அவன் (தன்) தூதராக அனுப்பி வைத்தான். அவர்கள் இதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டில் இருந்தபோதிலும், அத்தூதர் அவர்களுக்கு அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதிக்காண்பித்து, அவர்களைப் பரிசுத்தமாக்கி வைத்து, அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கிறார்

[3] (தற்காலமுள்ள இவர்களுக்காகவும்) இதுவரை இவர்களுடன் சேராத இவர்கள் இனத்தில் (பிற்காலத்தில் வரும்) மற்றவர்களுக்காகவும் (அத்தூதரை அனுப்பிவைத்தான்). அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனும் ஆவான்

[4] இது அல்லாஹ்வுடைய அருளாகும். அவன் விரும்பியவர்களுக்கே இதைக் கொடுக்கிறான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன் ஆவான்

[5] ‘தவ்றாத்' என்னும் வேதத்தைச் சுமந்து கொண்டு, அதிலுள்ளபடி நடக்காதவர்களின் உதாரணம்: புத்தகங்களைச் சுமக்கும் கழுதையின் உதாரணத்தை ஒத்திருக்கிறது. அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யாக்கும் மக்களின் இவ்வுதாரணம் மகா கெட்டது. அல்லாஹ் இத்தகைய அநியாயக்கார மக்களை நேரான வழியில் செலுத்தமாட்டான்

[6] (நபியே!) நீர் கூறுவீராக: ‘‘யூதர்களே! நீங்கள் மற்ற மனிதர்களைவிட அல்லாஹ்வுக்குச் சொந்தமானவர்கள் என்று மெய்யாகவே நீங்கள் எண்ணிக்கொண்டிருந்து, அந்த எண்ணத்தில் நீங்கள் உண்மையானவர்களாகவும் இருந்தால், நீங்கள் மரணத்தை விரும்புங்கள்

[7] இவர்களின் கரங்கள் தேடிக்கொண்ட (பாவத்)தின் காரணமாக, எக்காலத்திலும் இவர்கள் மரணத்தை விரும்பவே மாட்டார்கள். அல்லாஹ் இந்த அநியாயக்காரர்களை நன்கறிந்தவன்

[8] (நபியே! அவர்களை நோக்கி,) கூறுவீராக: ‘‘நீங்கள் வெருண்டோடும் மரணம் உங்களை நிச்சயமாகப் பிடித்துக் கொள்ளும். பின்னர், மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிந்தவனிடம் கொண்டு போகப்பட்டு, நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்

[9] நம்பிக்கையாளர்களே! வெள்ளிக்கிழமையன்று ஜூமுஆ தொழுகைக்காக (அதான் சொல்லி) நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டு விட்டு, அல்லாஹ்வை நினைவுகூர நீங்கள் விரைந்து செல்லுங்கள். அறிவுடையவர்களாக இருந்தால் இதுவே உங்களுக்கு மிக நன்று. (இதை நீங்கள் அறிந்து கொள்வீர்களாக)

[10] (ஜூமுஆ) தொழுகை முடிவு பெற்றால், (பள்ளியிலிருந்து புறப்பட்டுப்) பூமியில் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக்கொள்ளுங்கள். நீங்கள் வெற்றி அடைவதற்காக அதிகமதிகம் அல்லாஹ்வை நினைவு கூருங்கள்

[11] (நபியே! சிலர் இருக்கின்றனர்;) அவர்கள் ஒரு வியாபாரத்தையோ, அல்லது வேடிக்கையையோ கண்டால், (பிரசங்கம் நிகழ்த்துகின்ற) உம்மை நின்ற வண்ணமாக விட்டுவிட்டு அதனளவில் சென்று விடுகின்றனர். (ஆகவே, நபியே! அவர்களை நோக்கி,) நீர் கூறுவீராக: ‘‘அல்லாஹ்விடத்தில் உள்ளது, இந்த வியாபாரத்தையும் வேடிக்கையையும்விட மிக மேலானதாகும், மேலும், உணவு அளிப்பவர்களிலும் அல்லாஹ்தான் மிக மேலானவன்

அல்முனாஃபிகூன்

Surah 63

[1] (நபியே! உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும்) நயவஞ்சகர்கள் உம்மிடம் வந்து, ‘‘நிச்சயமாக நீர் அல்லாஹ்வுடைய தூதர்தான் என்று நாங்கள் சாட்சி கூறுகிறோம்'' என்பதாகக் கூறுகின்றனர். நிச்சயமாக நீர் அல்லாஹ்வுடைய தூதர் என்பதை அல்லாஹ் நன்கறிவான். எனினும், இந்த நயவஞ்சகர்கள் நிச்சயமாகப் பொய்யையே கூறுகின்றனர் என்று அல்லாஹ் சாட்சியம் கூறுகிறான்

[2] (தவிர, இவர்கள்) தங்கள் (பொய்) சத்தியங்களை ஒரு கேடயமாக வைத்துக் கொண்டு (மக்களை) அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து தடுக்கின்றனர். நிச்சயமாக இவர்கள் செய்து கொண்டிருக்கும் காரியம் மகா கெட்டது

[3] இதற்குரிய காரணமாவது: இவர்கள் ‘‘நம்பிக்கைக் கொண்டோம்'' என்று (வாயினால்) கூறிப் பின்னர் அதை நிராகரித்துவிட்டது தான் (காரணம்). ஆகவே, அவர்களுடைய உள்ளங்களில் முத்திரையிடப்பட்டு விட்டது. ஆகவே, (எதையும்) அவர்கள் உணர்ந்துகொள்ள மாட்டார்கள்

[4] (நபியே!) அவர்களை நீர் பார்த்தால், அவர்களுடைய தேகங்கள் உங்களை ஆச்சரியப்படுத்தும். அவர்கள் பேச ஆரம்பித்தால், அவர்களுடைய வார்த்தையையே நீங்கள் கேட்கும்படி ஏற்படும். (நீர் பேசுவதற்கு வாய்ப்பளிக்காது பேசுவார்கள்.) சுவற்றில் சாய்ந்த மரங்களைப்போல் அவர்கள் (அசையாது) இருப்பார்கள். (அவர்கள் செவியுறும்) எந்தச் சப்தத்தையும் தங்களுக்கு விரோதமாகப் பேசுவதாகவே எண்ணிக் கொள்வார்கள். (நபியே!) இவர்கள்தான் (உமது உண்மையான) எதிரிகள். ஆகவே, இவர்களைப் பற்றி நீர் எச்சரிக்கையாக இருந்து கொள்வீராக. அல்லாஹ் அவர்களை அழித்துவிடுவான். (சத்தியத்திலிருந்து) அவர்கள் எங்கு செல்கின்றனர்

[5] அவர்களை நோக்கி, ‘‘வாருங்கள்; அல்லாஹ்வுடைய தூதர் உங்கள் குற்றங்களை மன்னிக்க, (இறைவனிடம்) கோருவார்'' என்று கூறப்பட்டால், அவர்கள் தங்கள் தலைகளை அசைத்துக் கர்வம்கொண்டு (உங்களைப் பார்க்காதவர்களைப் போல்) திரும்பிச் செல்வதை நீர் காண்பீர்

[6] (நபியே!) நீர் அவர்களுக்குப் பிழைபொறுக்கத் தேடுவதும் அல்லது, அவர்களுக்குப் பிழை பொறுக்கத் தேடாதிருப்பதும் அவர்களுக்குச் சமமே. அல்லாஹ் அவர்களுக்குப் பிழை பொறுக்கவே மாட்டான். நிச்சயமாக அல்லாஹ் பாவம் செய்யும் (இத்தகைய) மக்களை நேரான வழியில் செலுத்துவதில்லை

[7] இவர்கள்தான் (மற்ற மக்களை நோக்கி,) ‘‘அல்லாஹ்வுடைய தூதருடன் இருக்கும் மக்களுக்கு நீங்கள் தர்மம் செய்யாதீர்கள். அதனால், அவர்கள் அவரை விட்டும் விலகிவிடுவார்கள்'' என்று கூறுகின்றனர். (நபியே! நீர் கூறுவீராக:) ‘‘வானங்கள் பூமியிலுள்ள பொக்கிஷங்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவையே; எனினும், இந்த நயவஞ்சகர்கள் (இதை) உணர்ந்துகொள்ள மாட்டார்கள்

[8] மேலும், ‘‘நாங்கள் மதீனாவிற்குத் திரும்ப வந்தால், கண்ணியமுள்ள நாங்கள் (நம்பிக்கை கொண்ட இந்த) இழிவானவர்களை அதிலிருந்து நிச்சயமாக வெளியேற்றி விடுவோம்'' என்றும் கூறுகின்றனர். (நபியே! நீர் கூறுவீராக:) கண்ணியமெல்லாம், அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், நம்பிக்கையாளர்களுக்கும் சொந்தமானது. எனினும், இந்த நயவஞ்சகர்கள் (அதை) அறிந்து கொள்ளவில்லை

[9] நம்பிக்கையாளர்களே! உங்கள் பொருள்களும், உங்கள் சந்ததிகளும் அல்லாஹ்வுடைய ஞாபகத்தை உங்களுக்கு மறக்கடித்துவிட வேண்டாம். எவரேனும், இவ்வாறு செய்தால் அத்தகையவர்கள் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்கள்தான்

[10] உங்களுக்கு மரணம் வருவதற்கு முன்பாகவே, நாம் உங்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து தர்மம் செய்யுங்கள். (அவ்வாறு செய்யாதவன் மரணிக்கும் சமயத்தில்,) ‘‘என் இறைவனே! ஒரு சொற்ப காலத்திற்கு என்னை விட்டுவைக்க வேண்டாமா? (அவ்வாறு விட்டால்,) நான் தானமும் செய்வேன்; (நன்மைகளைச் செய்து) நல்லோர்களிலும் ஆகிவிடுவேன்'' என்று கூறுவான்

[11] (எனினும்) ஓர் ஆத்மாவுடைய (மரணத்தின்) தவணை வரும்போது அதை அல்லாஹ் பிற்படுத்தவே மாட்டான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் ஆவான்

அத்தகாபுன்

Surah 64

[1] வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் (தொடர்ந்து) அல்லாஹ்வைத் துதிக்கின்றன. (இவற்றின்) ஆட்சியும் அவனுக்குரியதே! ஆகவே, அவனுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது. அனைத்தின் மீதும் அவன் ஆற்றலுடையவன் ஆவான்

[2] அவன்தான் உங்களைப் படைத்தவன். (அவ்வாறிருந்தும் அவனை) நிராகரிப்பவர்களும் உங்களில் உண்டு. (அவனை) நம்பிக்கை கொள்பவர்களும் உங்களில் உண்டு. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் உற்று நோக்குகிறான்

[3] உண்மையான காரணத்திற்கே வானங்களையும் பூமியையும் படைத்திருக்கிறான். அவனே உங்கள் உருவத்தை அமைத்து, அதை மிக அழகாகவும் ஆக்கிவைத்தான். அவனிடம்தான் (நீங்கள் அனைவரும்) செல்ல வேண்டியதிருக்கிறது

[4] வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும் அவன் நன்கறிவதுடன், நீங்கள் இரகசியமாகச் செய்வதையும் நீங்கள் பகிரங்கமாகச் செய்வதையும் அவன் நன்கறிகிறான். (இது மட்டுமா? உங்கள்) உள்ளங்களில் உள்ளவற்றையும் அல்லாஹ் நன்கறிகிறான்

[5] (மனிதர்களே!) உங்களுக்கு முன்னர் இருந்த நிராகரித்தவர்களின் செய்தி உங்களுக்குக் கிடைக்கவில்லையா? அவர்கள் தங்கள் தீய செயலின் பலனை (இவ்வுலகில்) அனுபவித்ததுடன், (மறுமையிலும்) அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையுண்டு

[6] இதன் காரணமாவது: நிச்சயமாகத் தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களுக்காக அனுப்பப்பட்ட (நம்) தூதர்கள் அவர்களிடம் வந்து கொண்டே இருந்தார்கள். எனினும் அவர்களோ ‘‘(நம்மைப் போன்ற) ஒரு மனிதரா நமக்கு நேரான வழியைக் காட்டிவிடுவார்?'' என்று கூறி அவர்களை நிராகரித்துப் புறக்கணித்து விட்டனர். அல்லாஹ்வும் அவர்களைப் பொருட்படுத்தவில்லை. அல்லாஹ் (இவர்களின்) தேவையற்றவனும், புகழுடையவனும் ஆவான்

[7] (மரணித்த பின்னர் உயிர் கொடுத்து) எழுப்பப்பட மாட்டோம் என்று நிச்சயமாக நிராகரிப்பவர்கள் எண்ணிக்கொண்டு இருக்கின்றனர். (நபியே!) நீர் கூறுவீராக: ‘‘அவ்வாறல்ல. என் இறைவன் மீது சத்தியமாக! மெய்யாகவே நீங்கள் எழுப்பப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருப்பவற்றைப் பற்றி பின்னர் நீங்கள் அறிவுறுத்தவும் படுவீர்கள். இவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு மிக்க எளிதானதே.”

[8] ஆகவே, நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், அவன் இறக்கிவைத்த (இவ்வேத மென்னும்) பிரகாசத்தையும் நம்பிக்கை கொள்ளுங்கள். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவன் ஆவான்

[9] ஒன்று கூட்டப்படும் (மறுமை) நாளில் அவன் உங்களை ஒன்று சேர்ப்பான். அதுதான் (பாவிகளுக்கு) நஷ்டம் உண்டாக்கும் நாளாகும். எவர் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறாரோ, அவருடைய பாவத்திற்கு (அவற்றைப்) பரிகாரமாக்கி, தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சொர்க்கங்களிலும் அவரைப் புகுத்திவிடுகிறான். என்றென்றுமே அதில் அவர் தங்கிவிடுவார். இதுதான் மிக மகத்தான வெற்றியாகும்

[10] எவர்கள் நிராகரித்து, நம் வசனங்களைப் பொய்யாக்குகிறார்களோ அவர்கள் நரகவாசிகளே. அதில் என்றென்றும் அவர்கள் தங்கிவிடுவார்கள். அது மகா கெட்ட சேரும் இடமாகும்

[11] அல்லாஹ்வுடைய அனுமதியின்றி ஒரு தீங்கும் (எவரையும்) வந்தடையாது. ஆகவே, எவர் அல்லாஹ்வை நம்பிக்கைகொள்கிறாரோ, அவருடைய உள்ளத்தை(ச் சகிப்பு, பொறுமை என்ற) நேரான வழியில் நடத்துகிறான். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவன் ஆவான்

[12] அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிந்து நடங்கள். அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடங்கள். நீங்கள் புறக்கணித்தால் (அது உங்களுக்குத்தான் நஷ்டம். ஏனென்றால்,) நம் தூதர் மீதுள்ள கடமையெல்லாம், அவர் தன் தூதைப் பகிரங்கமாக எடுத்துரைப்பதுதான்

[13] அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் இல்லவே இல்லை. ஆகவே, நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படையுங்கள்

[14] நம்பிக்கையாளர்களே! உங்கள் மனைவிகளிலும், உங்கள் சந்ததிகளிலும் நிச்சயமாக உங்களுக்கு எதிரிகள் இருக்கின்றனர். ஆகவே, அவர்களைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். அவர்(களின் குற்றங்)களை நீங்கள் சகித்துப் புறக்கணித்து மன்னித்து வந்தால், நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனும், மகா கருணையுடையவனும் ஆவான். (ஆகவே, உங்கள் குற்றங்களையும் அவ்வாறே மன்னித்துவிடுவான்)

[15] உங்கள் பொருள்களும், உங்கள் சந்ததிகளும் (உங்களுக்கு) ஒரு சோதனையாகவே உள்ளன. (இச்சோதனையில், நீங்கள் தேர்ச்சி பெற்றால் உங்களுக்கு) அல்லாஹ்விடத்தில் மகத்தான கூலி இருக்கிறது

[16] ஆதலால், உங்களால் சாத்தியமான வரை அல்லாஹ்வுக்குப் பயந்து, அவனு(டைய வசனங்களு)க்குச் செவிசாய்த்து கீழ்ப்படிந்து நடந்து, தர்மமும் செய்யுங்கள். இது உங்களுக்குத்தான் மிக நன்று. எவர்கள் கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாக்கப்பட்டார்களோ அவர்கள்தான் நிச்சயமாக வெற்றியடைந்து விடுவார்கள்

[17] அழகான முறையில் அல்லாஹ்வுக்கு நீங்கள் கடன் கொடுத்தால், அதை உங்களுக்கு இரு மடங்காக்கி வைப்பதுடன், உங்கள் குற்றங்களையும் மன்னித்து விடுகிறான். அல்லாஹ் (நன்றியை) அங்கீகரிப்பவனும் மிக்க சகிப்பவனும் ஆவான்

[18] அவன் மறைவானதையும், வெளிப்படையானதையும் நன்கறிந்தவன்; (அனைவரையும்) மிகைத்தவன்; ஞானமுடையவன் ஆவான்

அத்தலாக்

Surah 65

[1] நபியே! (நம்பிக்கையாளர்களை நோக்கி நீர் கூறுவீராக:) “நீங்கள் உங்கள் மனைவிகளை ‘தலாக்கு' (விவாகப்பிரிவினை) செய்ய விரும்பினால், அவர்களுடைய (சுத்த காலமான) ‘இத்தா'வின் ஆரம்பத்தில் கூறி, இத்தாவைக் கணக்கிட்டு வாருங்கள். (இவ்விஷயத்தில்) உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து நடந்து கொள்ளுங்கள். (நீங்கள் தலாக் கூறிய) பெண்கள் பகிரங்கமாக ஒரு மானக்கேடான காரியத்தைச் செய்தாலே தவிர, அவர்களை அவர்கள் இருக்கும் (உங்கள்) வீட்டிலிருந்து (இத்தாவுடைய காலம் முடிவு பெறுவதற்கு முன்னர்) வெளியேற்றிவிட வேண்டாம். அவர்களும் வெளியேறிவிட வேண்டாம். இவைதான் அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகள். எவர்கள் அல்லாஹ்வுடைய சட்ட வரம்புகளை மீறுகிறார்களோ, அவர்கள் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொள்கின்றனர். (இதிலுள்ள நன்மையை நீங்கள் அறியமாட்டீர்கள். தலாக் கூறிய) பின்னரும், (நீங்கள் சேர்ந்து வாழ) உங்களுக்கிடையில் (சமாதானத்திற்குரிய) ஒரு வழியை அல்லாஹ் ஏற்படுத்திவிடவும் கூடும்

[2] அப்பெண்கள் தங்கள் (இத்தாவின்) தவணையை அடைந்தால், நேரான முறையில் அவர்களை (மனைவியாகவே) நிறுத்திக்கொள்ளுங்கள். அல்லது நேரான முறையில் அவர்களை நீக்கிவிடுங்கள். (இவ்விரண்டில் நீங்கள் எதைச் செய்த போதிலும் அதற்கு) உங்களில் நீதமான இரு சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். (அந்த சாட்சிகள், சாட்சி சொல்ல வந்தால்) அல்லாஹ்வுக்காக உண்மையையே கூறவும். உங்களில் எவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிறாரோ, அவருக்கு இந்நல்லுபதேசம் கூறப்படுகிறது. (தவிர, இவ்விஷயத்தில்) எவர்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து நடக்கிறார்களோ, அவர்களுக்கு (இத்தகைய விவகாரங்களிலிருந்து) ஒரு (நல்ல தீர்வுபெற) வழியை ஏற்படுத்தித் தருவான்

[3] மேலும், அவர்கள் எதிர்பார்க்காத வகையில் அவர்களுக்கு வேண்டிய வசதிகளை அளிப்பான். எவர்கள் அல்லாஹ்வை முற்றிலும் நம்புகிறார்களோ, அவர்களுக்கு அவனே (முற்றிலும்) போதுமானவன். நிச்சயமாக அல்லாஹ் தன் காரியத்தைச் செய்தே முடிப்பான். ஆயினும், அல்லாஹ் ஒவ்வொன்றிற்கும் (ஒரு காலத்தையும்) அளவையும் ஏற்படுத்திவிட்டான். (அதன்படியே நடைபெறும்)

[4] (தலாக் சொல்லப்பட்ட) உங்கள் மனைவிகளில் எவர்கள் (அதிக வயதாகி) மாதவிடாயின் நம்பிக்கை இழந்து, (இத்தாவைக் கணக்கிட) என்ன செய்வதென்று நீங்கள் சந்தேகத்திற்கு உள்ளாகிவிட்டால், அத்தகைய பெண்களுக்கும், இன்னும் எவர்களுக்கு இதுவரை மாதவிடாய் ஏற்படவில்லையோ அவர்களுக்கும், இத்தாவின் தவணை மூன்று மாதங்களாகும். கர்ப்பமான பெண்களுக்கு இத்தாவின் தவணை அவர்கள் பிரசவிக்கும் வரை இருக்கிறது. எவர்கள் (மெய்யாகவே) அல்லாஹ்வுக்குப் பயப்படுகிறார்களோ, அவர்களுடைய காரியத்தை அவர்களுக்கு எளிதாக்கி விடுகிறான்

[5] அல்லாஹ் உங்களுக்கு இறக்கிவைத்த கட்டளை இதுதான். ஆகவே, எவர் அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்து கொள்கிறாரோ, அவருடைய பாவங்களை அவன் மன்னித்து, (அவருடைய) கூலியையும் அவருக்கு பெரிதாக்கி விடுகிறான்

[6] (‘தலாக்' கூறிய பின்னர் இத்தா இருக்கவேண்டிய உங்கள்) பெண்களை உங்களால் முடிந்தவரை, நீங்கள் இருக்கும் இடத்திலேயே வசித்திருக்கும்படி செய்யுங்கள். அவர்களை நிர்ப்பந்திக்கக் கருதி அவர்களைத் துன்புறுத்தாதீர்கள். அவர்கள் கர்ப்பமான பெண்களாக இருந்தால், அவர்கள் பிரசவிக்கும் வரை அவர்களுக்குச் செலவுக்குக் கொடுத்து வாருங்கள். (பிரசவித்ததன்) பின்னர் (குழந்தைக்கு) உங்களுக்காக அவர்கள் பாலூட்டினால் அதற்குரிய கூலியை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள். (இதைப் பற்றி முன்னதாகவே) உங்களுக்குள் முறையாக பேசி முடிவு செய்துகொள்ளுங்கள். இதில் உங்களுக்குள் சிரமம் ஏற்பட்டால், (அக்குழந்தைக்கு) மற்றவளைக் கொண்டும் பால் கொடுக்கலாம்

[7] (பால் குடிப்பாட்ட செலவு செய்யும் விஷயத்தில்) வசதியுடையவர் தன் தகுதிக்குத் தக்கவாறு (தாராளமாகச்) செலவு செய்யவும். ஏழ்மையானவர், அல்லாஹ் அவருக்குக் கொடுத்ததிலிருந்துதான் செலவு செய்வார். எம்மனிதனையும் அல்லாஹ் அவனுக்குக் கொடுத்ததற்கு அதிகமாக(ச் செலவு செய்யும்படி) நிர்ப்பந்திப்பதில்லை. சிரமத்திற்குப் பின்னர், அல்லாஹ் அதிசீக்கிரத்தில் இலகுவை கொடுத்துவிடுவான்

[8] எத்தனையோ ஊர்வாசிகள் தங்கள் இறைவனின் கட்டளைக்கும், அவனுடைய தூதர் களுக்கும் மாறுசெய்தனர். ஆதலால், அவர்களை நாம் வெகு கடினமாகவே கேள்வி கணக்குக் கேட்டு, அவர்களை மிகக் கடினமான வேதனையைக்கொண்டு வேதனை செய்தோம்

[9] ஆகவே, அவர்களின் தீய செயலுக்குரிய பலனை அவர்கள் அனுபவித்தனர். அவர்களின் (தீய) காரியங்களின் முடிவு (இம்மையிலும்) நஷ்டமாகவே ஆகிவிட்டது

[10] (இன்னும் மறுமையில்) அல்லாஹ் அவர்களுக்குக் கடினமான வேதனையை தயார்படுத்தி வைத்திருக்கிறான். ஆகவே, நம்பிக்கைகொண்ட அறிவாளிகளே! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு(த் திரு குர்ஆன் என்னும்) நல்லுபதேசத்தை இறக்கி வைத்திருக்கிறான்

[11] (மேலும்), ஒரு தூதரையும் (அனுப்பி வைத்திருக்கிறான்). அவர் அல்லாஹ்வுடைய தெளிவான வசனங்களை உங்களுக்கு ஓதிக்காண்பித்து, (உங்களில்) நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் செய்பவர்களை, இருள்களில் இருந்து பிரகாசத்தின் பக்கம் கொண்டு வருகிறார். ஆகவே, (உங்களில்) எவர்கள் (மெய்யாகவே) அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ, அவர்களை சொர்க்கங்களில் புகச்செய்வான். அதில் தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும். என்றென்றும் அவர்கள் அதில் தங்கிவிடுவார்கள். நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கு அழகான அருளே புரிவான்

[12] ஏழு வானங்களையும், அவற்றைப்போல் பூமியையும் அல்லாஹ்தான் படைத்தான். இவற்றில் (தினசரி நிகழக்கூடிய) எல்லா விஷயங்களைப் பற்றிய கட்டளை இறங்கிக்கொண்டே இருக்கிறது. (ஆகவே, நம்பிக்கையாளர்களே!) நிச்சயமாக அல்லாஹ் சகலவற்றின் மீதும் ஆற்றலுடையவன் என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் தன் ஞானத்தால், எல்லாவற்றையும் ஆழமாக அறிந்துகொண்டிருக்கிறான் என்பதையும் நீங்கள் திட்டமாக அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இவற்றைப் படைத்தான்

அத்தஹ்ரீம்

Surah 66

[1] நபியே! நீர் உமது மனைவிகளின் திருப்தியைக் கருதி, அல்லாஹ் உமக்கு ஆகுமாக்கி வைத்தவற்றை (எடுத்துக் கொள்வது இல்லை என்று) நீர் ஏன் (சத்தியம் செய்து அதை ஹராம் என்று) விலக்கிக் கொண்டீர்? அல்லாஹ் மிக மன்னிப்பவனும் மகா கருணையுடையவனும் ஆவான்

[2] ஆகவே, உங்கள் அந்தச் சத்தியத்திற்கு (நீங்கள் பரிகாரம் கொடுத்து) அதை நீக்கிவிடுமாறு நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிடுகிறான். அல்லாஹ்தான் உங்கள் எஜமானன். அவன் (அனைவரையும்) நன்கறிந்தவனும் ஞானமுடையவனும் ஆவான்

[3] (நம்) நபி தன் மனைவிகளில் ஒருவரிடம் ஒரு விஷயத்தை இரகசியமாகக் கூறிய சமயத்தில், அப்பெண் அதை (மற்றொரு மனைவிக்கு) அறிவித்து விட்டார். அதை அல்லாஹ் அவருக்கு வெளியாக்கித் தந்தான். நபி (அதில்) சிலவற்றை (அம்மனைவிக்கு) அறிவித்துச் சிலவற்றை (அறிவிக்காது) புறக்கணித்து விட்டார். (இவ்வாறு) நபி தன் மனைவிக்கு அறிவிக்கவே, அம்மனைவி ‘‘இதை உங்களுக்கு அறிவித்தவர் யார்?'' எனக் கேட்டார். அதற்கு அவர் “(அனைத்தையும்) நன்கறிந்து தெரிந்தவனே அதை எனக்கு அறிவித்தான்'' என்று கூறினார்

[4] (நபியுடைய அவ்விரு மனைவிகளே!) நீங்கள் இருவரும் (உங்கள் குற்றங்களைப் பற்றி) அல்லாஹ்வின் பக்கம் கைசேதப்பட்டு மன்னிப்புக் கோரி மீண்டுவிட்டால் அது உங்களுக்கே நன்று. ஏனென்றால், உங்கள் இருவரின் உள்ளங்கள் (நேரான வழியில் இருந்து) சாய்ந்துவிட்டன. ஆகவே, நீங்கள் இருவரும் அவருக்கு விரோதமாக ஒன்று சேர்ந்தால், நிச்சயமாக அல்லாஹ் அவரை பாதுகாப்பவனாக இருக்கிறான். இன்னும் ஜிப்ரயீலும், நம்பிக்கையாளர்களிலுள்ள நல்லடியார்களும், இவர்களுடன் (மற்ற) வானவர்களும் (அவருக்கு) உதவியாக இருப்பார்கள்

[5] நபி உங்களை ‘தலாக்' கூறி (விலக்கி) விட்டால், உங்களைவிட மேலான பெண்களை அவருடைய இறைவன் அவருக்கு மனைவியாக்கி வைக்க முடியும். (மனைவியாக வரக்கூடிய அப்பெண்களோ) முஸ்லிமானவர்களாக, நம்பிக்கைக் கொண்டவர்களாக, (இறைவனுக்குப்) பயந்து (நம் நபிக்கு கட்டுப்பட்டு) நடக்கக்கூடியவர்களாக, (பாவத்தைவிட்டு) விலகியவர்களாக, (இறைவனை) வணங்குபவர்களாக, நோன்பு நோற்பவர்களாக, கன்னியர்களாகவும், கன்னியர் அல்லாதவர்களாகவும் இருப்பார்கள். (ஆகவே, இதனால் உங்களுக்குத்தான் நஷ்டம், அவருக்கு அல்ல)

[6] நம்பிக்கையாளர்களே! நீங்கள் உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதனுடைய எரிகட்டை, மனிதர்களும் (சிலைகளாக இருந்த) கற்களுமாகும். அதில் கடின சித்தமுடைய பலசாலிகளான வானவர்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றனர். அல்லாஹ் அவர்களுக்கு ஏவியதில் ஒரு சிறிதும் மாறுசெய்ய மாட்டார்கள். அவர்கள் (பாவிகளை வேதனை செய்யுமாறு) தங்களுக்கிடப்பட்ட கட்டளைகளையே செய்து வருவார்கள்

[7] (அந்நாளில் நிராகரிப்பவர்களை நோக்கி) ‘‘நிராகரிப்பவர்களே! இன்றைய தினம் நீங்கள் (வீண்) புகல் கூறாதீர்கள். நீங்கள் கூலி கொடுக்கப்படுவதெல்லாம், நீங்கள் செய்தவற்றுக்குத்தான். (நீங்கள் செய்யாதவற்றுக்கு அல்ல'' என்று கூறப்படும்)

[8] நம்பிக்கையாளர்களே! நீங்கள் கலப்பற்ற மனதுடன் (பாவத்திலிருந்து விலகி) அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். உங்கள் இறைவனோ அதை உங்கள் பாவங்களுக்குப் பரிகாரமாக்கி, (மன்னித்து) சொர்க்கங்களிலும் உங்களைப் புகுத்திவிடுவான். அதில் தொடர்ந்து நீரருவிகள் ஓடிக் கொண்டிருக்கும். (தன்) நபியையும், அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் அந்நாளில் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான். அந்நாளில், இவர்களுடைய பிரகாசம் இவர்களுக்கு முன்னும், இவர்களுடைய வலது பக்கத்திலும் ஊடுருவிச் சென்றுகொண்டிருக்கும். இவர்கள் ‘‘எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பிரகாசத்தை (அணையாது) நீ பரிபூரணமாக்கிவை. எங்கள் குற்றங்களையும் நீ மன்னித்து அருள்புரி. நிச்சயமாக நீ அனைத்தின் மீதும் ஆற்றலுடையவன்'' என்று பிரார்த்தனை செய்து கொண்டிருப்பார்கள்

[9] நபியே! (இந்த) நிராகரிப்பவர்களுடன் (வாளைக் கொண்டும், இந்த) நயவஞ்சகர்களுடன் (தர்க்கத்தைக் கொண்டும்) போர் புரிவீராக. அவர்களுடன் நீங்கள் (தயவு தாட்சண்யம் காட்டாது) கடுமையாகவே இருப்பீராக. அவர்கள் செல்லுமிடம் நரகம்தான்; அது மகாகெட்ட சேரும் இடமாகும்

[10] நிராகரிக்கும் பெண்களுக்கு, நூஹ் நபியினுடைய மனைவியையும், லூத் நபியினுடைய மனைவியையும் அல்லாஹ் உதாரணமாக்கி வைக்கிறான். இவ்விரு பெண்களும், நம் அடியார்களில் இரு நல்லடியார்களின் மனைவிகளாகவே இருந்தனர். எனினும், இவ்விரு பெண்களும் தங்கள் கணவன்மார்களுக்குத் துரோகம் செய்தனர். (ஆகவே, இவர்கள் இருவரும் நபிமார்களின் மனைவிகளாயிருந்தும்) அல்லாஹ்வுடைய வேதனையிலிருந்து எதையும் தடுத்துக்கொள்ள முடியவில்லை. (இவர்கள் துரோகம் செய்ததன் காரணமாக இவர்களை நோக்கி) ‘‘நரகத்தில் புகுபவர்களுடன் நீங்கள் இருவரும் புகுந்து விடுங்கள்'' என்றே கூறப்பட்டது

[11] நம்பிக்கைகொண்ட பெண்களுக்கு(ம் இரு பெண்களை) அல்லாஹ் உதாரணமாகக் கூறுகிறான். (முதலாவது:) ஃபிர்அவ்னுடைய மனைவி (ஆசியா). அவள் (தன் இறைவனிடம்) ‘‘என் இறைவனே! உன்னிடத்தில் உள்ள சொர்க்கத்தில் எனக்கு ஒரு வீட்டை அமைத்துத் தா, ஃபிர்அவ்னை விட்டும் அவனுடைய செயலை விட்டும் என்னை பாதுகாத்துக் கொள், அநியாயக்கார சமுதாயத்தை விட்டும் என்னை பாதுகாத்துக்கொள்'' என்று பிரார்த்தனை செய்துகொண்டே இருந்தாள்

[12] (இரண்டாவது:) இம்ரானுடைய மகள் மர்யம். அவள் தன் கற்பை பாதுகாத்துக் கொண்டாள். ஆகவே, அவளுடைய கர்ப்பத்தில் நம் ரூஹிலிருந்து ஊதினோம். அவள் தன் இறைவனின் வசனங்களையும், வேதங்களையும் உண்மையாக்கி வைத்ததுடன் (இறைவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டவளாகவும் இருந்தாள்

அல்முல்க்

Surah 67

[1] (மனிதர்களே! வானம் பூமி உடைய) ஆட்சி எல்லாம் எவன் கையில் இருக்கிறதோ அவன் மிக பாக்கியமுடையவன். (வானம் பூமிகளை அழிக்கவும், ஆக்கவும்) அவன் (விரும்பியவாறு அவற்றைச் செய்ய) அனைத்தின் மீதும் ஆற்றலுடையவன்

[2] உங்களில் மிகத்தூய்மையான அமல் செய்பவர்கள் யார் என்று சோதிப்பதற்காகவே, அவன் மரணத்தையும், வாழ்க்கையையும் படைத்திருக்கிறான். அவன் (அனைவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்புடையவன் ஆவான்

[3] அவனே ஏழு வானங்களையும் அடுக்கடுக்காகப் படைத்தவன். (மனிதனே!) அந்த ரஹ்மானுடைய படைப்பில் நீ ஒரு ஒழுங்கீனத்தையும் காணமாட்டாய். மற்றொரு முறை (அதைக் கவனித்துப்)பார். அதில் ஒரு பிளவை நீ காண்கிறாயா

[4] (பின்னும்) மேலும் இரு முறைப் பார்! (இவ்வாறு நீ எத்தனை முறை துருவித் துருவிப் பார்த்த போதிலும் ஒரு குறையையும் காண முடியாது.) உன் பார்வைதான் அலுத்து, கேவலமுற்று உன்னிடம் திரும்பிவிடும்

[5] நிச்சயமாக நாம், சமீபமாக உள்ள வானத்தை (பூமியிலுள்ளவர்களுக்கு நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்காரமாக்கி வைத்தோம். மேலும், அவற்றை ஷைத்தான்களுக்கு ஓர் எறிகல்லாகவும் அமைத்தோம். இன்னும் அவர்களுக்கு நரக வேதனையையும் நாம் தயார்படுத்தி வைத்திருக்கிறோம்

[6] இன்னும் எவர்கள் தங்கள் இறைவனை நிராகரிக்கிறார்களோ, அவர்களுக்கு நரக வேதனையுண்டு. அது மகாகெட்ட செல்லுமிடமாகும்

[7] அதில் அவர்கள் (தூக்கி) எறியப்படும்பொழுது (கழுதையின் பெரிய சப்தத்தைப் போல்) அதன் கொதி சப்தத்தைக் கேட்பார்கள்

[8] அது கோபத்தால் வெடித்து விடுவதைப்போல் குமுறிக் கொண்டிருக்கும். அதில் ஒரு கூட்டத்தினர் எறியப்படும் பொழுதெல்லாம், அதன் காவலாளர் அவர்களை நோக்கி (‘‘இவ்வேதனையைப் பற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் தூதர் உங்களிடம் வரவில்லையா'' என்று கேட்பார்கள்

[9] அதற்கவர்கள் ‘‘மெய்தான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் தூதர் நிச்சயமாக எங்களிடம் வந்தார். எனினும், நாங்கள் (அவரைப்) பொய்யாக்கி, அல்லாஹ் (உங்கள் மீது) எதையும் இறக்கிவைக்கவே இல்லை. நீங்கள் பெரும் வழிகேட்டிலே தவிர இருக்கவில்லை என்று (அவர்களை நோக்கி) நாங்கள் கூறினோம்'' என்று கூறுவார்கள்

[10] இன்னும் ‘‘(அத்தூதர்களின் வார்த்தைகளுக்கு) நாங்கள் செவிசாய்த்து அவற்றை நாங்கள் சிந்தித்திருந்தால், நாங்கள் நரகவாசிகளில் ஆகியிருக்கவே மாட்டோம்'' என்று கூறுவார்கள்

[11] மேலும் தங்கள் பாவத்தை ஒப்புக் கொள்வார்கள். ஆகவே, இந்நரகவாசிகளுக்குக் கேடுதான்

[12] நிச்சயமாக எவர்கள் மறைவான சமயத்திலும், தங்கள் இறைவனுக்குப் பயப்படுகிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும் உண்டு; பெரும் கூலியும் உண்டு

[13] (மனிதர்களே!) நீங்கள் உங்கள் வார்த்தைகளை இரகசியமாகக் கூறுங்கள் அல்லது பகிரங்கமாகவே கூறுங்கள். (எவ்விதம் கூறியபோதிலும், இறைவன் அதை நன்கறிவான். ஏனென்றால்,) நிச்சயமாக அவன், உள்ளங்களில் உள்ளவற்றையும் நன்கறிபவன் ஆவான்

[14] (அனைவரையும்) படைத்தவன் (அவற்றில் உள்ளவற்றை) அறிய மாட்டானா? அவனோ அருளுடையவனும் (அனைத்தையும்) வெகு நுட்பமாக அறிந்தவனும் ஆவான்

[15] அவன்தான் உங்களுக்குப் பூமியை (நீங்கள் வசிப்பதற்கு) வசதியாக ஆக்கி வைத்தான். ஆகவே, அதன் பல கோணங்களிலும் சென்று, அவன் (உங்களுக்கு) அளித்திருப்பவற்றைப் புசித்துக் கொண்டிருங்கள். (மறுமையில்) அவனிடமே (அனைவரும்) செல்ல வேண்டியதிருக்கிறது

[16] வானத்தில் இருப்பவன், உங்களைப் பூமியில் சொருகிவிட மாட்டான் என்று நீங்கள் அச்சமற்றிருக்கிறீர்களா? அந்நேரத்தில் பூமி அதிர்ந்து நடு நடுங்(கிக்) கு(முறு)ம்

[17] அல்லது வானத்திலிருப்பவன், உங்கள் மீது கல்மழையை பொழிய மாட்டான் என்று நீங்கள் பயமற்றிருக்கிறீர்களா? அவ்வாறாயின், எனது எச்சரிக்கை (செய்யப்பட்ட வேதனை) எவ்வாறிருக்கும் என்பதை நிச்சயமாக நீங்கள் அறிந்துகொள்வீர்கள்

[18] இவர்களுக்கு முன்னுள்ளவர்களும் (நம் வசனங்களைப்) பொய்யாக்கி (நிராகரித்து)க் கொண்டிருந்தனர். ஆகவே (அவர்களுக்கு) எனது கண்டிப்பு எவ்வாறு இருத்தது என்பதை (நபியே! கவனித்தீரா)

[19] இறக்கைகளை விரித்துக்கொண்டும், மடக்கிக்கொண்டும் இவர்களுக்கு மேல் ஆகாயத்தில் (அணி) அணியாகச் செல்லும் பறவைகளை இவர்கள் கவனிக்கவில்லையா? ரஹ்மானைத் தவிர, (மற்றெவரும்) அவற்றை (ஆகாயத்தில் தூக்கி)ப் பிடித்துக் கொண்டிருக்கவில்லை! நிச்சயமாக அவன் அனைத்தையும் உற்று நோக்குபவன் ஆவான்

[20] ரஹ்மானையன்றி உங்களுக்கு உதவி செய்யக்கூடிய படைகள் எவை? இந்நிராகரிப்பவர்கள் வெறும் மாயையிலே தவிர வேறில்லை

[21] அல்லாஹ் (உங்களுக்களிக்கும்) தன் உணவைத் தடுத்துக் கொண்டால், உங்களுக்கு உணவு கொடுப்பவன் யார்? (இதையும் இவர்கள் கவனிப்பதில்லை.) மாறாக, இவர்கள் வழிகேட்டிலும், (சத்தியத்தை) வெறுப்பதிலுமே மூழ்கிக் கிடக்கின்றனர்

[22] என்னே! முகங்குப்புற விழுந்து செல்பவன் தன் லட்சியத்தை அடைவானா? அல்லது நேரான பாதையில் ஒழுங்காகச் செல்பவன் அடைவானா

[23] (நபியே!) கூறுவீராக: அவன்தான் உங்களைப் படைத்து உங்களுக்குச் செவிகளையும், கண்களையும், உள்ளங்களையும் கொடுத்தவன். (அவ்வாறிருந்தும்) நீங்கள் வெகு சொற்பமாகவே (அவனுக்கு) நன்றி செலுத்துகிறீர்கள்

[24] (நபியே!) கூறுவீராக: அவன்தான் உங்களைப் பூமியில் (பல பாகங்களிலும்) பரப்பி வைத்திருக்கிறான். (மறுமையில்) அவனிடமே ஒன்று சேர்க்கப்படுவீர்கள்

[25] (இவ்வாறிருந்தும் அவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கி,) ‘‘நீங்கள் உண்மை சொல்பவர்களாயிருந்தால் (மறுமையைப் பற்றிய) இந்த வாக்குறுதி எப்பொழுது (வரும்?)'' என்று கேட்கிறார்கள்

[26] அதற்கு (நபியே!) கூறுவீராக: (‘‘அது எப்போது வரும் என்ற) ஞானம் அல்லாஹ்விடத்தில்தான் இருக்கிறது. நான் (அதைப் பற்றிப்) பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்தான்

[27] (நீர் அச்சமூட்டிய) வேதனை (இவர்களை) நோக்கி வருவதை அவர்கள் கண்டால், அந்நிராகரிப்பவர்களுடைய முகங்கள் கருகிவிடும். (இன்னும், அவர்களை நோக்கி) ‘‘(எப்பொழுது வரும், எப்பொழுது வரும் என்று) நீங்கள் கேட்டுக் கொண்டிருந்தது இதுதான்'' என்றும் கூறப்படும்

[28] (நபியே!) கூறுவீராக: என்னையும், என்னுடன் இருப்பவர்களையும் (நீங்கள் விரும்புகிறபடி) அல்லாஹ் அழித்து விட்டாலும் அல்லது அவன் எங்களுக்கு அருள் புரிந்தாலும் (அது எங்கள் விஷயம். ஆயினும்,) துன்புறுத்தும் வேதனையிலிருந்து நிராகரிக்கும் உங்களை பாதுகாப்பவர் யார் என்பதை(க் கவனித்து)ப் பார்த்தீர்களா

[29] (நபியே!) கூறுவீராக: ‘‘அவன்தான் ரஹ்மான். அவனையே நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். அவனையே நாங்கள் நம்பியும் இருக்கிறோம். ஆகவே, பகிரங்கமான வழிகேட்டில் இருப்பவர்கள் யாரென்பதை அதிசீக்கிரத்தில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்

[30] (நபியே!) கூறுவீராக: ‘‘(நீங்கள் குடிக்கும்) தண்ணீர் பூமிக்குள் வெகு ஆழத்தில் சென்றுவிட்டால், பிறகு தண்ணீரின் (வேறொரு) ஊற்றை உங்களுக்குக் கொண்டு வருபவன் யாரென்று கவனித்தீர்களா

அல்கலம்

Surah 68

[1] நூன். எழுதுகோலின் மீதும் (அதைக் கொண்டு) அவர்கள் எதை எழுதுகிறார்களோ அதன்மீதும் சத்தியமாக

[2] (நபியே!) உமது இறைவனருளால் நீர் பைத்தியக்காரரல்ல

[3] நிச்சயமாக உமக்கு முடிவுறாத (நீடித்த) கூலி இருக்கிறது

[4] நிச்சயமாக நீர் மகத்தான நற்குணமுடையவராகவே இருக்கிறீர்

[5] ‘‘உங்களில் யார் பைத்தியக்காரர்'' என்பதை அதிசீக்கிரத்தில் (நபியே!) நீர் கண்டுகொள்வீர்; அவர்களும் கண்டுகொள்வார்கள்

[6] ‘‘உங்களில் யார் பைத்தியக்காரர்'' என்பதை அதிசீக்கிரத்தில் (நபியே!) நீர் கண்டுகொள்வீர்; அவர்களும் கண்டுகொள்வார்கள்

[7] நிச்சயமாக உமது இறைவன் அவன் வழியிலிருந்து தவறியவர் யார் என்பதையும் நன்கறிவான். நேரான வழியில் செல்பவர்களையும் அவன் நன்கறிவான்

[8] ஆகவே, (நபியே!) இப்பொய்யர்களுக்கு நீர் கீழ்ப்படியாதீர்

[9] (கடமையை நிறைவேற்றுவதில்) நீர் அலுத்து(ச் சலித்தால்) அவர்களும் சலித்து (உம்மை விட்டு) விலகி விடவே விரும்புகின்றனர்

[10] (நபியே! எடுத்ததற்கெல்லாம்) சத்தியம் செய்யும் அந்த அர்ப்பமானவனுக்கு நீர் கீழ்ப்படியாதீர்

[11] (அவன்) தொடர்ந்து (புறம்பேசிக்) குற்றம் கூறி, கோள் சொல்வதையே தொழிலாகக்கொண்டு திரிபவன்

[12] (அவன்) எப்போதுமே நன்மையான காரியங்களைத் தடை செய்யும் வரம்பு மீறிய பெரும்பாவி

[13] கடின சுபாவமுள்ளவன். இத்துடன் இழிவானவனும் கூட

[14] ஏதோ சந்ததிகளும், பொருள்களும் (அவனுக்கு) இருக்கிறது என்பதற்காக (அவன் கர்வம்கொண்டு)

[15] நம் வசனங்கள் அவனுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால், இது முன்னுள்ளோரின் கட்டுக் கதைகள் என்று கூறுகிறான்

[16] (என்றென்றும் இருக்கக்கூடியவாறும், அனைவரும் அறியக்கூடியவாறும்) அவனுடைய மூக்கில் அதிசீக்கிரத்தில் ஓர் அடையாளமிடுவோம்

[17] (யமன் நாட்டில் வசித்த) தோப்பின் சொந்தக்காரர்களை நாம் சோதித்தவாறே (மக்காவாசிகளாகிய) இவர்களையும், (ஆறு ஆண்டுகள் பஞ்சத்தைக் கொண்டு) நிச்சயமாக நாம் சோதித்தோம். (அத்தோப்புடையவர்கள்) அதிலுள்ள விளைச்சலை (மறுநாள்) அதிகாலையில் சென்று அறுத்துவிடுவோம் என்று சத்தியம் செய்தார்கள்

[18] எனினும், ‘இன்ஷா அல்லாஹ்' (அல்லாஹ் நாடினால்) என்று கூறவில்லை

[19] ஆகவே, அவர்கள் நித்திரையில் ஆழ்ந்து கிடக்கும்போதே உமது இறைவனிடமிருந்து ஓர் ஆபத்து (வந்து) அத்தோட்டத்தைத் துடைத்து (அழித்து) விட்டது

[20] பயிர்களையெல்லாம் வேருடன் களைந்துவிட்ட மாதிரி (அது அழிந்து) போயிற்று

[21] (அதை அறியாத தோட்டக்காரர்கள்) விடியற்காலையில் ஒருவருக்கொருவர் சப்தமிட்டு அழைத்து

[22] ‘‘நீங்கள் விளைச்சலை அறுப்பதாயிருந்தால், அதை அறுவடை செய்ய உங்கள் தோட்டத்திற்கு அதிகாலையில் வாருங்கள்'' (என்றும் கூறிக் கொண்டார்கள்)

[23] (தங்களுக்குள்) ஒருவருக்கொருவர் மெதுவாகப் பேசிக்கொண்டே சென்றார்கள்

[24] (யாசகம் கேட்கக்கூடிய) ஏழை ஒருவர் (கூட) உங்களிடம் இன்றைய தினம் அதில் நுழையாதிருக்கவும் (என்று மெதுவாகப் பேசிக்கொண்டார்கள்)

[25] தங்கள் எண்ணத்தில் (தங்களுடன் ஓர் ஏழையும் வராது) தடுத்து விட்டதாக எண்ணிக்கொண்டு, அதிகாலையில் சென்றார்கள்

[26] (சென்று) அதைப் பார்க்கவே, (விளைச்சலெல்லாம் அழிந்து போயிருப்பதைக் கண்டு ‘‘இது நம்முடையதல்ல; வேறொருவருடைய தோட்டத்திற்கு) நிச்சயமாக நாம் வழிதவறியே வந்துவிட்டோம்'' என்றார்கள்

[27] (பின்னர், அதைத் தங்கள் தோட்டம்தான் என்று அறிந்து) அல்ல. நாம்தான் நம் பலன்களை இழந்து விட்டோம் (என்று கூறினார்கள்)

[28] அவர்களிலுள்ள ஒரு நடுநிலையாளன் அவர்களை நோக்கி ‘‘(அடிக்கடி) நான் உங்களுக்குக் கூறவில்லையா? (நான் கூறியபடி) நீங்கள் (இறைவனைத்) துதிசெய்து கொண்டிருக்க வேண்டாமா?'' என்று கூறினார்

[29] அதற்கவர்கள் ‘‘எங்கள் இறைவனே! நீ மிக்க பரிசுத்தமானவன்; நிச்சயமாக நாங்கள்தான் (எங்களுக்கு) தீங்கிழைத்துக் கொண்டோம்'' என்று கூறி

[30] பின்னர், அவர்களில் ஒருவர் மற்றொருவரை நோக்கி, ஒருவர் மற்றவரை நிந்தனை செய்து கொண்டனர்

[31] ‘‘நிச்சயமாக நாங்கள் வரம்பு மீறிவிட்டோம்; எங்களுக்குக் கேடுதான்'' என்று அவர்கள் கூறினர்

[32] ‘‘நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனையே நோக்குகிறோம். எங்கள் இறைவன் இதைவிட மேலானதொன்றை எங்களுக்குத் தரக்கூடும்'' (என்றும் கூறினர்)

[33] (நபியே! உம்மை நிராகரிக்கின்ற இவர்களுக்கும்) இத்தகைய வேதனைதான் கிடைக்கும். மறுமையிலுள்ள வேதனையோ (இதைவிட) மிகப் பெரிது. இதை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டாமா

[34] நிச்சயமாக, இறையச்சமுடையவர்களுக்கு, தங்கள் இறைவனிடத்தில் மிக்க இன்பம் தரும் சொர்க்கங்கள் உண்டு

[35] (நமக்கு) முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களை (பாவம் செய்யும்) குற்றவாளிகளைப் போல் நாம் ஆக்கி விடுவோமா

[36] உங்களுக்கு என்ன நேர்ந்தது? (இருவரும் சமமென) எவ்வாறு, தீர்ப்பு அளிக்கிறீர்கள்

[37] அல்லது உங்களிடம் (ஏதும்) வேத நூல் இருக்கிறதா? அதில் நீங்கள் (இரு வகுப்பாரும் சமமெனப்) படித்திருக்கிறீர்களா

[38] நீங்கள் விரும்பியதெல்லாம் நிச்சயமாக உங்களுக்குக் கிடைக்குமென்று அதில் இருக்கிறதா

[39] அல்லது நீங்கள் கட்டளையிடுவதெல்லாம் மறுமை நாள் வரை, நிச்சயமாக உங்களுக்குக் கிடைத்துக் கொண்டே இருக்குமென்று நாம் உங்களுக்கு சத்தியம் செய்து கொடுத்திருக்கின்றோமா

[40] (நபியே!) அவர்களிடம் கேட்பீராக: ‘‘(அவ்வாறாயின்) அவர்களில் இதற்கு யார் பொறுப்பாளி

[41] அல்லது அவர்கள் இணைவைத்து வணங்கும் தெய்வங்கள் அவர்களுக்குப் பொறுப்பாளியா? இதில் அவர்கள் உண்மை சொல்பவர்களாயிருந்தால், அவர்கள் இணைவைத்தவற்றை (இன்றைய தினம் தங்கள் சாட்சிகளாக) அழைத்து வரவும்

[42] கெண்டைக்காலை விட்டும் திரை அகற்றப்படும் நாளை (பயந்து கொள்ளுங்கள்). அன்றைய தினம், சிரம் பணிந்து வணங்கும்படி அவர்கள் அழைக்கப்படுவார்கள். (அவர்களின் பாவச்சுமை அவர்களை அழுத்திக் கொண்டிருப்பதனால் அவ்வாறு செய்ய) அவர்களால் இயலாமல் போய்விடும்

[43] அவர்களுடைய பார்வையெல்லாம் கீழ்நோக்கி நிற்கும். இழிவு அவர்களைச் சூழ்ந்துகொள்ளும். (இம்மையில்) சுகமா(ன தேகத்தை உடையவர்களா)க இருந்த சமயத்தில், சிரம் பணிந்து வணங்க நிச்சயமாக அழைக்கப்பட்டனர். (எனினும், தங்கள் கர்வத்தால் அதை நிராகரித்து விட்டனர்)

[44] ஆகவே, (நீர் மத்தியில் வராது) என்னையும் இவ்வசனங்களைப் பொய்யாக்கும் இவர்களையும் விட்டு விடுவீராக. அவர்கள் அறியாத விதத்தில் அதிசீக்கிரத்தில் அவர்களை சிரமத்தில் சிக்க வைப்போம்

[45] (அவர்களுடைய பாவம் அதிகரிப்பதற்காக) அவர்களை விட்டுவைப்போம். நிச்சயமாக நம் சூழ்ச்சி மிக்க பலமானது. (அவர்கள் தப்பவே முடியாது)

[46] (நபியே!) அவர்களிடம் (வரியாக) கூலி ஏதும் கேட்கிறீரா? அவ்வாறாயின் (அதற்காக அவர்கள்) பட்ட கடனில் (அல்லது அந்த வரியின் பளுவைச் சுமக்க முடியாது) அவர்கள் மூழ்கிவிட்டனரா

[47] அல்லது மறைவான விஷயங்கள் (எழுதப்படும் குறிப்பு) அவர்களிடம் இருந்து, அதில் (தங்களை நல்லவர்களென) எழுதிக் கொண்டிருக்கின்றனரா

[48] (நபியே!) உமது இறைவனின் கட்டளைக்காகப் பொறுத்திருப்பீராக. (கோபம் தாங்காது) மீன் வயிற்றில் சென்றவரை (-யூனுஸை)ப் போல் நீரும் ஆகிவிடவேண்டாம். அவர் கோபத்தில் மூழ்கிச் சென்று (மீனால் விழுங்கப்பட்டு அதன் வயிற்றில் இருந்துகொண்டு இறைவனைப்) பிரார்த்தனை செய்து கொண்டிருந்ததை நினைத்துப் பார்ப்பீராக

[49] அவருடைய இறைவனின் அருள் அவரை அடையாதிருப்பின், வெட்ட வெளியான (அந்த) மைதானத்தில் எறியப்பட்டு நிந்திக்கப்பட்டவராகவே இருப்பார்

[50] (இறைவனின் அருள் அவரை அடைந்ததால்) அவருடைய இறைவன் அவரை (மன்னித்துத்) தேர்ந்தெடுத்து, அவரை நல்லவர்களிலும் ஆக்கிவைத்தான்

[51] (நபியே!) நிராகரிப்பவர்கள் நல்லுபதேசத்தைக் கேட்கும் போதெல்லாம், அவர்கள் தங்கள் பார்வைகளைக் கொண்டே உம்மை வீழ்த்தி விடுபவர்களைப்போல் (கோபத்துடன் விரைக்க விரைக்கப்) பார்க்கின்றனர். மேலும், அவர்கள் (உம்மைப் பற்றி) நிச்சயமாக, இவர் பைத்தியக்காரர்தான் என்று கூறுகின்றனர்

[52] (நீர் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கும்) இது, பொதுவாக உலகத்தார் அனைவருக்கும் ஒரு நல்லுபதேசமே தவிர வேறில்லை

அல்ஹாக்கா

Surah 69

[1] (நிகழக்கூடிய) உண்மை(ச் சம்பவம்)

[2] அந்த உண்மை(ச் சம்பவம்) எது

[3] (நபியே!) அந்த உண்மை(ச் சம்பவம்) என்னவென்பதை நீர் அறிவீரா

[4] ‘ஸமூத்' என்னும் மக்களும் ‘ஆத்' என்னும் மக்களும் (மரணித்தவர்களைத்) தட்டி எழுப்பு(ம் அச்சம்ப)வ(த்)தைப் பொய்யாக்கினர்

[5] ஆகவே, ‘ஸமூத்' மக்கள் பெரும் சப்தத்தைக்கொண்டு அழிக்கப்பட்டனர்

[6] ஆத் என்னும் மக்களோ, அதிவேகமாக விரைந்து (இரைந்து) செல்லும் (புயல்) காற்றைக்கொண்டு அழிக்கப்பட்டனர்

[7] ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ச்சியாக அவர்கள் மீது அக்காற்றை நடத்தி வைத்தான். (நபியே! அச்சமயம் நீர் அங்கிருந்தால்) வேரற்று சாய்ந்த ஈச்சமரங்களைப் போல், அந்த மக்கள் பூமியில் விழுந்து கிடப்பதைக் கண்டிருப்பீர்

[8] (இன்றைக்கும்) அவர்களில் எவரும் தப்பி(ப் பிழைத்து) இருப்பதை நீர் காண்கிறீரா

[9] ஃபிர்அவ்னும், அவனுக்கு முன்னிருந்தவர்களும் தலைகீழாகப் புறட்டப்பட்ட ஊரிலிருந்த (லூத்துடைய) மக்களும் (அந்த உண்மையான சம்பவத்தை நிராகரித்துப்) பாவம் செய்துகொண்டே வந்தார்கள்

[10] இன்னும் அவர்கள், தங்கள் இறைவனின் தூதருக்கு மாறு செய்தனர். ஆதலால், அவன் அவர்களை மிக்க பலமாகப் பிடித்துக்கொண்டான்

[11] (நூஹ் நபி காலத்தில் ஏற்பட்ட பிரளயத்தில்) தண்ணீர் பெருக்கெடுத்தபோது, நிச்சயமாக நாம் உங்(கள் மூதாதை)களைக் கப்பலில் ஏற்றி (காப்பாற்றி)க் கொண்டோம்

[12] அதை உங்களுக்கு ஒரு படிப்பினையாகச் செய்வதற்கும், அதைக் காதால் கேட்பவன் ஞாபகத்தில் வைப்பதற்கும் (அவ்வாறு செய்தோம்)

[13] (பலமாக) ஒரு முறை ஸூர் ஊதப்பட்டு

[14] பூமியும் மலைகளும் தூக்கி (எறியப்பட்டு) ஒன்றோடொன்று மோதி பலமாக அடிக்கப்பட்டால்

[15] அந்நாளில்தான் யுகமுடிவின் மாபெரும் சம்பவம் நிகழும்

[16] அந்நாளில் வானம் வெடித்து, அது பலவீனமாகி விடும்

[17] (நபியே!) வானவர்கள் அதன் கோடிகளிலிருப்பார்கள். மேலும், அந்நாளில் உமது இறைவனின் அர்ஷை, எட்டு வானவர்கள் தங்களுக்கு மேலாகச் சுமந்து கொண்டு நிற்பார்கள்

[18] (மனிதர்களே!) அந்நாளில் நீங்கள் (உங்கள் இறைவன் முன்) கொண்டு போகப்படுவீர்கள். மறைவான உங்களுடைய எந்த விஷயமும் அவனுக்கு மறைந்து விடாது

[19] எவருடைய (செயல்கள் எழுதப்பட்ட) ஏடு அவருடைய வலது கையில் கொடுக்கப்படுகிறாரோ அவர் (மற்றவர்களை நோக்கி மகிழ்ச்சியுடன்)கூறுவார்: ‘‘இதோ! என் ஏடு; இதை நீங்கள் படித்துப் பாருங்கள்

[20] நிச்சயமாக நான் என் கேள்வி கணக்கைச் சந்திப்பேன் என்றே நம்பியிருந்தேன்

[21] ஆகவே, அவர் திருப்தியான (சுகபோக) வாழ்க்கையில்

[22] மேலான சொர்க்கத்தில் இருப்பார்

[23] அதன் கனிகள் (இவர்கள், படுத்திருந்தாலும் உட்கார்ந்திருந்தாலும், நின்று கொண்டிருந்தாலும், எந்நிலைமையிலும் கைக்கு எட்டக்கூடியதாக இவர்களை) நெருங்கி இருக்கும்

[24] (இவர்களை நோக்கி) ‘‘சென்ற நாள்களில் நீங்கள் சேகரித்து வைத்திருந்த (நன்மையான)வற்றின் காரணமாக, மிக்க தாராளமாக இவற்றைப் புசியுங்கள்! அருந்துங்கள்'' (என்று கூறப்படும்)

[25] எவனுடைய (செயல்கள் எழுதப்பட்ட) ஏடு அவனுடைய இடது கையில் கொடுக்கப்பெறுவானோ அவன், ‘‘என் ஏடு எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டாமா? என்று கூறுவான்

[26] மேலும், என் கணக்கை இன்னதென்று நான் அறியாதிருக்க வேண்டுமே

[27] நான் இறந்தபொழுதே என் காரியம் முடிவு பெற்றிருக்க வேண்டுமே

[28] என் பொருள் எனக்கு ஒன்றும் பயனளிக்கவில்லையே

[29] என் அரசாட்சியும் அழிந்துவிட்டதே!'' (என்றும் புலம்புவான்)

[30] (பின்னர் நாம்) ‘‘அவனைப் பிடியுங்கள், அவனுக்கு விலங்கிடுங்கள்

[31] அவனை நரகத்தில் தள்ளுங்கள் என்றும்

[32] எழுபது முழ நீளமுள்ள சங்கிலியால் அவனைக் கட்டுங்கள்'' என்றும் (கூறுவோம்)

[33] நிச்சயமாக அவன் மகத்தான அல்லாஹ்வையே நம்பிக்கை கொள்ளவில்லை

[34] ஏழைகளுக்கு (தானும் உணவளிக்காததுடன், பிறரையும்) உணவளிக்கும்படி அவன் தூண்டவில்லை

[35] ‘‘ஆகவே, இன்று அவனுக்கு (இங்கு) ஒரு நண்பனும் இல்லை

[36] (புண்களில் வடியும்) சீழ் சலங்களைத் தவிர, (அவனுக்கு வேறு) உணவில்லை'' (என்றும் கூறப்படும்)

[37] அதைக் குற்றவாளிகளைத் தவிர (மற்றெவரும்) உண்ண மாட்டார்கள்

[38] (மக்களே!) நீங்கள் பார்ப்பவற்றின் மீதும், (உங்கள் கண்களுக்குத் தோன்றுபவற்றின் மீதும்)

[39] நீங்கள் பார்க்காதவற்றின் மீதும், (உங்கள் கண்களுக்குத் தோன்றாதவற்றின் மீதும்) சத்தியமாக

[40] இது, நிச்சயமாக (நம்மால் அறிவிக்கப்பட்டபடியே) மிக்க கண்ணியமான ஒரு தூதரால் கூறப்பட்டதாகும்

[41] இது, ஒரு கவிஞனுடைய சொல்லல்ல. எனினும், (இதை) நீங்கள் வெகு சொற்பமாகவே நம்பிக்கை கொள்கிறீர்கள்

[42] (இது) ஒரு குறிகாரனுடைய சொல்லுமல்ல. (எனினும், இதைக் கொண்டு) வெகு சொற்பமாகவே நீங்கள் நல்லுபதேசம் பெறுகிறீர்கள்

[43] அகிலத்தார்களின் இறைவனால் (இது) இறக்கப்பட்டுள்ளது

[44] ஒரு சில வார்த்தைகளை அவர் நம்மீது கற்பனை செய்து பொய்யாகக் கூறினாலும்

[45] அவருடைய வலது கரத்தை நாம் (பலமாகப்) பிடித்துக் கொண்டு

[46] பிறகு, அவருடைய உயிர் நாடியை நாம் தறித்து விடுவோம்

[47] உங்களில் எவருமே அவரை விட்டும் அதைத் தடுத்துவிட முடியாது

[48] நிச்சயமாக இது இறையச்சமுடையவர்களுக்கு நல்லுபதேசமாகவே இருக்கிறது

[49] (எனினும்,) உங்களில் அதைப் பொய்யாக்குகிறவர்களும் இருக்கின்றனர் என்பதை நிச்சயமாக நாம் நன்கறிவோம்

[50] நிச்சயமாக அது நிராகரிப்பவர்களுக்குத் துக்கத்தைத் தரக்கூடியதாகவே இருக்கிறது

[51] (எனினும்) நிச்சயமாக இது, ஒரு சிறிதும் சந்தேகமற்ற உண்மையாகும்

[52] ஆகவே, (நபியே!) நீர் மகத்தான உமது இறைவனின் திருப்பெயரை துதிசெய்து கொண்டிருப்பீராக

அல்மஆரிஜ்

Surah 70

[1] (நபியே! நிராகரிப்பவர்களுக்குச்) சம்பவிக்கக்கூடிய வேதனையைப் பற்றி கேட்பவன் ஒருவன் (உம்மிடம் அது) எப்பொழுது வருமென(ப் பரிகாசமாக)க் கேட்கிறான்

[2] நிராகரிப்பவர்களுக்கு (அது சம்பவிக்கும் சமயத்தில்) அதைத் தடுத்து விடக்கூடியவன் ஒருவனுமில்லை

[3] உயர்ப் பாதைகளையுடைய அல்லாஹ்வினால் (அது சம்பவிக்கும்)

[4] அந்நாளில் வானவர்களும், ஜிப்ரயீலும் அவனிடம் போய்ச் சேருவார்கள். (அந்நாள்) ஐம்பதினாயிரம் வருடங்களுக்குச் சமமாக இருக்கும்

[5] (நபியே!) நீர் நேர்த்தியான சாந்தத்தோடு பொறுத்திருப்பீராக

[6] (எனினும்,) நிச்சயமாக அவர்கள் அதை வெகு தூரமாக எண்ணுகின்றனர்

[7] நாமோ அதை வெகு சமீபமாகக் காண்கிறோம்

[8] அந்நாளில் வானம் பழுக்கக் காய்ந்த செம்பைப்போல் ஆகிவிடும்

[9] மலைகள் பஞ்சைப் போல் ஆகி (பறந்து) விடும்

[10] ஒரு நண்பன் மற்றொரு நண்பனை(ப் பார்த்த போதிலும் அவனுடைய சுகத்தை) விசாரிக்க மாட்டான்

[11] அவர்கள் ஒருவர் மற்றவரைப் பார்த்துக் கொள்வார்கள். குற்றவாளி, அந்நாளில் தன் வேதனைக்குப் பரிகாரமாகத் தன் பிள்ளைகளையும்

[12] தன் மனைவிகளையும், தன் சகோதரனையும்

[13] தன்னை ஆதரித்து வந்த தன் சொந்தக்காரர்களையும்

[14] இன்னும், பூமியிலுள்ள அனைத்தையுமே கொடுத்தேனும் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளப் பிரியப்படுவான்

[15] (எனினும்) அது ஆகக்கூடியதல்ல. நிச்சயமாக அது நரகத்தின் நெருப்பு. (இவனைச் சூழ்ந்து கொள்ளும்)

[16] அது தோல்களை எரித்து (மூளையை உருக்கி) விடும்

[17] புறம்காட்டிச் சென்று புறக்கணித்தவர்களை எல்லாம் அது அழைக்கும்

[18] (பொருளைச்) சேகரித்து(ச் செலவு செய்யாது) பத்திரப்படுத்தி வைத்திருந்தவர்களையும் (தன்னிடம் அழைக்கும்)

[19] மெய்யாகவே மனிதன் பதற்றக்காரனாகவே படைக்கப்பட்டுள்ளான்

[20] ஏனென்றால், அவனை ஒரு தீங்கு அடைந்தால், (திடுக்கிட்டு) நடுங்குகிறான்

[21] அவனை ஒரு நன்மை அடைந்தாலோ, அதை (தர்மம் செய்யாது) தடுத்துக் கொள்கிறான்

[22] ஆயினும், தொழுகையாளிகளைத் தவிர

[23] அவர்கள் தங்கள் தொழுகையைத் தவறாது தொழுது வருவார்கள்

[24] அவர்களுடைய பொருள்களில் (ஏழைகளுக்குக்) குறிப்பிட்ட பங்கு உண்டு

[25] அதைக் கேட்பவர்களுக்கும் (வெட்கத்தால் கேட்காத) வரியவர்களுக்கும் (கொடுப்பார்கள்)

[26] கூலி கொடுக்கும் நாளையும் அவர்கள் உண்மை என்றே நம்புகின்றனர்

[27] (இவ்வாறிருந்தும்) அவர்கள் தங்கள் இறைவனின் வேதனைக்குப் பயந்து கொண்டே இருப்பார்கள்

[28] (ஏனென்றால்,) நிச்சயமாகத் தங்கள் இறைவனின் வேதனை அச்சமற்றிருக்கக் கூடியதல்ல

[29] அவர்கள், தங்கள் மர்மஸ்தானத்தையும் பாதுகாத்துக் கொள்வார்கள்

[30] ஆயினும், தங்கள் மனைவிகளிடத்திலும், தங்கள் அடிமைப் பெண்களிடத்திலும் தவிர. நிச்சயமாக அவர்கள் (இவர்களுடன் சம்பந்தப்படுவதைப் பற்றி) நிந்திக்கப்பட மாட்டார்கள்

[31] இதைத்தவிர (மற்றெதையும்) எவரேனும் விரும்பினால், அத்தகையவர்கள் வரம்பு மீறியவர்களாவார்கள்

[32] இன்னும், எவர்கள், தங்களிடம் (நம்பி) ஒப்படைக்கப்பட்ட அமானிதப் பொருள்களையும், (தாங்கள் செய்த) வாக்குறுதிகளையும் பேணி, (யோக்கியமாக நடந்து) கொள்கிறார்களோ அவர்களும்

[33] இன்னும், எவர்கள், தங்கள் சாட்சியத்தில் (தவறிழைக்காது) உறுதியாக இருக்கிறார்களோ அவர்களும்

[34] இன்னும், எவர்கள் தொழுகையையும் கவனித்து(த் தவறாது) ஒழுங்காகத் தொழுது வருகிறார்களோ அவர்களும்

[35] ஆகிய இவர்கள்தான் சொர்க்கத்தில் கண்ணியப்படுத்தப்படுவார்கள்

[36] (நபியே!) இந்நிராகரிப்பவர்களுக்கு என்ன சுதந்திரம்? (அவர்கள்) உமக்கு முன் ஓடி வருகின்றனர்

[37] வலது புறமிருந்தும், இடது புறமிருந்தும் கூட்டம் கூட்டமாக (ஓடி வருகின்றனர்)

[38] அவர்களில் ஒவ்வொருவரும் இன்பம் தரும் சொர்க்கத்தில் நுழைந்து விடலாமென்று ஆசைப்படுகின்றனரா

[39] அது ஆகப்போவதில்லை. அவர்கள் அறிந்த ஓர் (அற்ப) வஸ்துவிலிருந்தே நாம் அவர்களைப் படைத்திருக்கிறோம்

[40] கிழக்கு மற்றும் மேற்குத் திசையின் இறைவன்மீது சத்தியமாக! நிச்சயமாக நாம் (நம் விருப்பப்படி செய்ய) ஆற்றலுடையோம்

[41] (இவர்களை நீக்கி) இவர்களைவிட மேலானவர்களை மாற்றிவிடவும் (ஆற்றலுடையோம்!) இதில் நாம் இயலாதவர்களல்ல

[42] ஆகவே, (நபியே!) அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாளை அவர்கள் சந்திக்கும் வரை, அவர்கள் விளையாடிக்கொண்டும், (வீண் காரியங்களில்) ஆழ்ந்து கிடக்குமாறும் அவர்களை நீர் விட்டுவிடுவீராக

[43] (நபியே!) அவர்களுக்கு ஒரு நாளை நீர் ஞாபகமூட்டுவீராக. (சிலை வணங்குபவர்கள் தங்கள் திருநாள்களில் பூஜைக்காக நட்டுவைக்கப்பட்ட) கொடிகளின் பக்கம் விரைந்தோடுவதைப் போலவே, சமாதிகளிலிருந்து வெளிப்பட்டு (ஹஷ்ருடைய மைதானத்திற்கு) வெகு தீவிரமாகச் செல்வார்கள்

[44] (அந்நாளில்) பயந்த பார்வையுடன் ஓடுவார்கள். இழிவும் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். (நபியே!) இந்நாள்தான் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாளாகும்

நூஹ்

Surah 71

[1] நிச்சயமாக, நாம் நூஹை அவருடைய மக்களிடம் (நம்) தூதராக அனுப்பிவைத்து, (அவரை நோக்கி) ‘‘நீர் உமது மக்களுக்குத் துன்புறுத்தும் வேதனை வருவதற்கு முன்னதாகவே, அவர்களுக்கு அதைப் பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக'' என்று கட்டளையிட்டோம்

[2] (அவரும் அவ்வாறே அவர்களை நோக்கி) கூறினார்: ‘‘என் மக்களே! நிச்சயமாக நான் உங்களுக்குப் பகிரங்கமாகவே அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறேன்

[3] அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். அவனுக்கே நீங்கள் பயப்படுங்கள். எனக்கு நீங்கள் கட்டுப்பட்டு நடங்கள்

[4] (அவ்வாறு நீங்கள் நடந்தால், அல்லாஹ்) உங்கள் குற்றங்களை மன்னித்து, குறிப்பிட்ட காலம் வரை உங்களை (அமைதியாக வாழ) விட்டு வைப்பான். நிச்சயமாக (வேதனைக்காகக் குறிப்பிடப்பட்ட) அல்லாஹ்வுடைய தவணை வரும் சமயத்தில், அது ஒரு சிறிதும் பிந்தாது (இதை) நீங்கள் உறுதியாக நம்ப வேண்டாமா

[5] (அவ்வாறு அவர் எவ்வளவோ காலம் கூறியும் அவர்கள் அதை மறுத்து அவரைப் புறக்கணித்து விடவே, அவர் தன் இறைவனை நோக்கி) கூறினார்: ‘‘என் இறைவனே! நிச்சயமாக நான் என் மக்களை இரவு பகலாக அழைத்தேன்

[6] வெருண்டோடுவதையே தவிர, (வேறொன்றையும்) என் அழைப்பு அவர்களுக்கு அதிகப்படுத்தவில்லை

[7] நீ அவர்களுக்கு மன்னிப்பளிக்க (உன் பக்கம்) நான் அவர்களை அழைத்த போதெல்லாம், தங்கள் காதுகளில் தங்கள் விரல்களைப் புகுத்தி அடைத்துக் கொண்டு, (என்னைப் பார்க்காது) தங்கள் ஆடைகளைக் கொண்டும் தங்களை மறைத்துக் கொண்டார்கள். பெரும் அகங்காரம் கொண்டு, (தங்கள் தவறின் மீதே பிடிவாதமாக) நிலைத்திருந்தார்கள்

[8] பிறகு, நிச்சயமாக நான் அவர்களைச் சப்தமிட்டு (அதட்டியும்) அழைத்தேன்

[9] மேலும். நான் அவர்களுக்குப் பகிரங்கமாகவும் கூறினேன்; இரகசியமாகவும் அவர்களுக்குக் கூறினேன்

[10] ‘‘உங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோருங்கள். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவனாக இருக்கிறான்'' என்றும் கூறினேன்

[11] (அவ்வாறு செய்வீர்களாயின், தடைப்பட்டிருக்கும்) மழையை உங்களுக்குத் தொடர்ச்சியாக அனுப்புவான்

[12] பொருள்களையும், ஆண் மக்களையும் கொடுத்து, உங்களுக்கு உதவி புரிவான்; உங்களுக்குத் தோட்டங்களையும் உற்பத்தி செய்து, அவற்றில் நதிகளையும் ஓட வைப்பான்

[13] உங்களுக்கென்ன நேர்ந்தது? அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் நம்பவில்லை

[14] உங்களை விதவிதமாகவும் அவன் படைத்திருக்கிறான்

[15] ஏழு வானங்களையும், அடுக்கடுக்காக எவ்வாறு அல்லாஹ் படைத்திருக்கிறான் என்பதை நீங்கள் கவனிக்கவில்லையா

[16] அவனே, அவற்றில் சந்திரனைப் பிரதிபலிக்கும் வெளிச்சமாகவும், சூரியனை ஒளி விளக்காகவும் அமைத்தான்

[17] அல்லாஹ்வே உங்களை (ஒரு செடியைப் போல்) பூமியில் வளரச் செய்தான் (வெளிப்படுத்தினான்)

[18] பின்னர், அதில்தான் உங்களை (மரணிக்கவைத்து அதில்) சேர்த்துவிடுவான். (அதிலிருந்தே) மற்றொரு முறையும் உங்களை வெளிப்படுத்துவான்

[19] அல்லாஹ்தான் உங்களுக்குப் பூமியை விரிப்பாக அமைத்தான்

[20] அதில் (பல பாகங்களுக்கும்) நீங்கள் செல்வதற்காக, விரிவான பாதைகளையும் அமைத்தான்'' (என்றெல்லாம் அவர் தன் மக்களுக்குக் கூறினார்)

[21] (பின்னர் நூஹ் நபி தன் இறைவனை நோக்கி) கூறினார்: ‘‘என் இறைவனே! நிச்சயமாக அவர்கள் எனக்கு மாறு செய்கின்றனர். பொருள்களும் சந்ததிகளும் எவர்களுக்கு நஷ்டத்தை தவிர வேறு எதையும் அதிகப்படுத்தவில்லையோ, அவர்களையே பின்பற்றுகின்றனர்

[22] பெரும் பெரும் சூழ்ச்சிகளையும் (எனக்கெதிராக) செய்கின்றனர்

[23] (மற்றவர்களை நோக்கி) நீங்கள் உங்கள் தெய்வங்களை விட்டு விடாதீர்கள். ‘வத்' (என்னும் விக்கிரகத்)தையும் விடாதீர்கள். ‘ஸுவாஉ' ‘எகூஸ்' ‘யஊக்' ‘நஸ்ர்' (ஆகிய விக்கிரகங்)களையும் விட்டுவிடாதீர்கள்'' என்று கூறுகின்றனர்

[24] நிச்சயமாக பலரை வழிகெடுத்து விட்டனர். (ஆகவே, என் இறைவனே!) இந்த அநியாயக்காரர்களுக்கு வழிகேட்டைத் தவிர வேறு எதையும் நீ அதிகப்படுத்தி விடாதே!'' (என்றும் பிரார்த்தித்தார்)

[25] ஆகவே, அவர்கள் செய்துகொண்டிருந்த பாவத்தின் காரணமாக, (வெள்ளப் பிரளயத்தில்) மூழ்கடிக்கப்பட்டு, பின்னர் நரகத்திலும் புகுத்தப்பட்டனர். அல்லாஹ்வையன்றி அவர்களுக்கு உதவி செய்பவர்களை அவர்கள் காணவில்லை

[26] இன்னும், நூஹ் பிரார்தித்தார்: ‘‘என் இறைவனே! பூமியில் இந்நிராகரிப்பவர்களில் ஒருவரையும் நீ வசித்திருக்க விட்டு வைக்காதே

[27] நிச்சயமாக நீ அவர்களை விட்டு வைப்பாயானால், உன் (மற்ற) அடியார்களையும் வழிகெடுத்தே விடுவார்கள். பாவிகளையும் நிராகரிப்பவர்களையும் தவிர, (வேறொரு குழந்தையை) அவர்கள் பெற்றெடுக்க மாட்டார்கள்

[28] என் இறைவனே! எனக்கும் என் தாய் தந்தைக்கும், நம்பிக்கை கொண்டவராக என் வீட்டில் நுழைந்தவருக்கும், (வீட்டில் நுழையாத மற்ற) நம்பிக்கைகொண்ட ஆண்களுக்கும், நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் நீ மன்னித்தருள் புரிவாயாக! இந்த அநியாயக்காரர்களுக்கு அழிவைத் தவிர நீ அதிகப்படுத்தாதே

அல்ஜின்

Surah 72

[1] (நபியே!) கூறுவீராக: வஹ்யி மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டதாவது: மெய்யாகவே ஜின்களில் சிலர் (இவ்வேதத்தைச்) செவியுற்று(த் தங்கள் இனத்தார்களிடம் சென்று அவர்களை நோக்கி) கூறினார்கள்: ‘‘நிச்சயமாக நாங்கள் மிக்க ஆச்சரியமான ஒரு குர்ஆனைச் செவியுற்றோம்

[2] அது நேரான வழியை அறிவிக்கிறது. ஆகவே, அதை நாங்கள் நம்பிக்கை கொண்டோம். (இனி) நாங்கள் எங்கள் இறைவனுக்கு ஒருவனையும் அறவே இணையாக்க மாட்டோம்

[3] நிச்சயமாக எங்கள் இறைவனுடைய மகத்துவம் மிக்க மேலானது. அவன் எவரையும் (தன்) மனைவியாகவோ, குழந்தையாகவோ எடுத்துக் கொள்ளவில்லை

[4] மேலும், நிச்சயமாக நம்மிடமுள்ள மடையன் அல்லாஹ்வின் மீது (அவனுடைய பரிசுத்தத் தன்மைக்குத்) தகாத விஷயங்களைக் கூறுகிறவனாக இருந்தான்

[5] மனிதர்களும், ஜின்களும் நிச்சயமாக அல்லாஹ் மீது பொய் கூறமாட்டார்கள் என்று மெய்யாகவே (இது வரை) நாங்கள் எண்ணிக்கொண்டு இருந்தோம்

[6] மனிதர்களிலுள்ள ஆண்கள் பலர், ஜின்களிலுள்ள பல ஆண்களிடம் மெய்யாகவே (தங்களை) பாதுகாக்கக் கோருகின்றனர். எனவே, மனிதர்கள் அந்த ஜின்களுக்கு கர்வத்தை அதிகப்படுத்தி விட்டனர்

[7] நீங்கள் எண்ணுகிறபடியே அவர்களும் (இறந்த பின்னர்) அல்லாஹ், ஒருவரையும் (உயிர்கொடுத்து) எழுப்பமாட்டான் என்று நிச்சயமாக எண்ணிக் கொண்டனர்

[8] நிச்சயமாக நாங்கள் வானத்தைத் தடவிப் பார்த்தோம். அது பலமான பாதுகாவலர்களாலும், எரி நட்சத்திரங்களாலும் நிரப்பப்பட்டிருப்பதை நாங்கள் கண்டோம்

[9] (முன்னர்) அங்கு (நடைபெறும் விஷயங்களைச்) செவியுறக்கூடிய பல இடங்களில் நாங்கள் அமர்ந்திருப்போம். இப்பொழுதோ, (அவற்றைச்) செவியுற எவனும் சென்றால், நெருப்பின் ஒரு கங்கு அவனை (அடிப்பதற்காக) எதிர்பார்த்திருப்பதை அவன் காண்பான்

[10] பூமியிலுள்ளவர்களுக்கு (இதனால்) தீங்கு விரும்பப்படுகிறதோ, அல்லது அவர்களின் இறைவன் (இதனால்) அவர்களுக்கு நன்மையை நாடியிருக்கிறானோ என்பதை நிச்சயமாக நாங்கள் அறிய மாட்டோம்

[11] நிச்சயமாக நம்மில் நல்லவர்களும் சிலர் இருக்கின்றனர்; மற்றவர்களும் நம்மில் சிலர் இருக்கின்றனர். நாம் பல பிரிவுகளாகப் பிரிந்துவிட்டோம்

[12] நிச்சயமாக நாம் பூமியில் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாது என்பதையும், (பூமியிலிருந்து) ஓடி அவனை விட்டுத் தப்பித்துக்கொள்ள முடியாது என்பதையும் உறுதியாக அறிந்து கொண்டோம்

[13] (இந்த குர்ஆனிலுள்ள) நேரான வழிகளைச் செவியுற்றபோதே அதை நாங்கள் நம்பிக்கை கொண்டோம். எவன் தன் இறைவனை நம்பிக்கை கொள்கிறானோ, அவன் நஷ்டத்தைப் பற்றியும், துன்பத்தைப் பற்றியும் பயப்படமாட்டான்

[14] முற்றிலும் (அவனுக்கு) பணிந்து வழிப்பட்டவர்களும் நிச்சயமாக நம்மில் பலர் இருக்கின்றனர்; வரம்பு மீறியவர்களும் நம்மில் பலர் இருக்கின்றனர். எவர்கள் முற்றிலும் பணிந்து வழிப்படுகிறார்களோ, அவர்கள்தான் நேரான வழியைத் தெரிந்து கொண்டவர்கள்

[15] வரம்பு மீறியவர்களோ, நரகத்தின் எரி கட்டைகளாக ஆகிவிட்டனர்'' (இவ்வாறு ஜின்கள் கூறினர்)

[16] (நபியே! இந்த மனிதர்கள்) நேரான பாதையில் உறுதியாக இருந்தால், தடையின்றியே அவர்களுக்கு தண்ணீரைப் புகட்டிக் கொண்டிருப்போம்

[17] இதில் அவர்களை நாம் சோதிப்போம். ஆகவே, எவன் தன் இறைவனை நினைப்பதையே புறக்கணிக்கின்றானோ அவனைக் கடினமான வேதனையில் அவன் புகுத்திவிடுவான்

[18] நிச்சயமாக பள்ளிவாசல் (மஸ்ஜிது)களெல்லாம், அல்லாஹ்வை வணங்குவதற்காக உள்ளன. ஆகவே, (அவற்றில்) அல்லாஹ்வுடன் மற்றெவரையும் (பெயர் கூறி) அழைக்காதீர்கள்

[19] நிச்சயமாக அல்லாஹ்வுடைய அடியா(ராகிய நம் தூத)ர், அவனைப் பிரார்த்தனை செய்து தொழ ஆரம்பித்தால், (இதைக் காணும் ஜின்களும், மக்களும் ஆச்சரியப்பட்டுக்) கூட்டம் கூட்டமாக வந்து அவரைச் சூழ்ந்துகொள்கின்றனர்

[20] (நபியே! அவர்களுக்கு) கூறுவீராக: ‘‘நான் பிரார்த்தனை செய்து அழைப்பதெல்லாம் என் இறைவனையே! அவனுக்கு ஒருவரையும் நான் இணையாக்க மாட்டேன்

[21] நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மை செய்யவோ, தீமை செய்யவோ ஒரு சிறிதும் சக்தியற்றவன்'' என்றும் கூறுவீராக

[22] ‘‘நிச்சயமாக, அல்லாஹ்விடமிருந்து ஒருவனுமே என்னை பாதுகாக்க முடியாது. அவனையன்றி அண்டும் இடத்தையும் நான் காணமாட்டேன்.'' என்றும் கூறுவீராக

[23] ஆயினும், அல்லாஹ்விடமிருந்து (எனக்குக் கிடைத்த) அவனுடைய தூதை எடுத்துரைப்பதைத் தவிர (எனக்கு வேறு வழியில்லை.) ஆகவே, எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறுசெய்கிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக நரக நெருப்பு தான் (கூலியாகும்). அதில் அவர்கள் என்றென்றுமே தங்கிவிடுவார்கள்

[24] பயமுறுத்தப்பட்ட வேதனையை அவர்கள் (கண்ணால்) காணும் சமயத்தில், எவனுடைய உதவியாளர், மிக்க பலவீனமானவர்கள் என்பதையும் (எவருடைய உதவியாளர்) மிக்க குறைந்த தொகையினர் என்பதையும் சந்தேகமின்றி அறிந்து கொள்வார்கள்

[25] (நபியே!) கூறுவீராக: ‘‘உங்களுக்குப் பயமுறுத்தப்படும் வேதனை சமீபத்தில் இருக்கிறதா? அல்லது எனதிறைவன் அதற்குத் தவணை ஏற்படுத்தி இருக்கிறானா என்பதை நான் அறிய மாட்டேன்

[26] அவன்தான் மறைவான இவ்விஷயங்களையெல்லாம் நன்கறிந்தவன் ஆவான். மறைவாக உள்ள இவ்விஷயங்களை அவன் ஒருவருக்கும் வெளிப்படுத்துவது இல்லை

[27] ஆயினும், தன் தூதர்களில் எவர்களைத் தேர்ந்தெடுத்தானோ அவர்களுக்கு அதை அவன் அறிவிக்கக் கூடும். (அதை அவன் அவர்களுக்கு அறிவித்த சமயத்தில்) நிச்சயமாக அவன் அவர்களுக்கு முன்னும் பின்னும் (ஒரு மலக்கைப்) பாதுகாப்பவராக அனுப்பிவைக்கிறான்

[28] (அத்தூதர்கள்) தங்கள் இறைவனின் தூதுகளை மெய்யாகவே எடுத்துரைத்தார்கள் என்பதை, தான் அறிந்து கொள்வதற்காக (அவ்வாறு பாதுகாப்பாளரை அனுப்புகிறான்). அவர்களிடம் உள்ளவற்றை அவன் தன் ஞானத்தால் சூழ்ந்தறிந்து கொண்டிருப்பதுடன், ஒவ்வொரு பொருளின் கணக்கையும் முழுமையாக அறிந்தவனாக இருக்கிறான்

அல்முஸ்ஸம்மில்

Surah 73

[1] போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே

[2] (நபியே!) இரவில் நீர் (தொழுகைக்காக எழுந்து) நிற்பீராக. (முழு இரவிலுமல்ல; அதிலொரு) சொற்ப பாகம். (அதாவது)

[3] அதில் பாதி (நேரம்). அதில் நீர் சிறிது குறைத்தும் கொள்ளலாம்

[4] அல்லது அதில் சிறிது கூட்டியும் கொள்ளலாம். (அதில்) இந்த குர்ஆனை நன்கு திருத்தமாக ஓதுவீராக

[5] நிச்சயமாக நாம் அதிசீக்கிரத்தில், மிக உறுதியான ஒரு வார்த்தையை உம் மீது இறக்கிவைப்போம்

[6] நிச்சயமாக இரவில் எழுந்திருப்பது, (ஆத்மாவை) மிக அதிகம் பழக்கி, (அடக்கி வைப்பதுடன்) எதையும் உள்ளமும், நாவும் ஒத்துக் கூறும்படியும் செய்கிறது

[7] நிச்சயமாக உமக்குப் பகலில் நீண்ட வேலைகள் இருக்கின்றன

[8] நீர் (அவற்றில் இருந்து ஓய்வுபெற்று) அவனளவில் முற்றிலும் திரும்பி, அவனுடைய திருப்பெயரை நினைவு செய்து கொண்டிருப்பீராக

[9] அவனே கீழ் திசைக்கும் மேல் திசைக்கும் எஜமான். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை. ஆகவே, அவனையே நீர் (உமது) பொறுப்பாளனாக எடுத்துக் கொள்வீராக

[10] (நபியே!) அவர்கள் (உம்மைப்பற்றிக் குற்றங்குறைகள்) கூறுவதைச் சகித்துக் கொண்டு, கண்ணியமான முறையில் அவர்களை விட்டு விலகி வெறுத்திருப்பீராக

[11] (நபியே! நீர் அவர்களுக்குச் சிபாரிசு செய்யாது) என்னையும், என்னைப் பொய்யாக்கி வைக்கும் அந்தச் சுகவாசிகளையும் விட்டுவிடுவீராக! அவர்களுக்குச் சிறிது அவகாசமும் கொடுப்பீராக

[12] நிச்சயமாக நம்மிடத்தில் (அவர்களுக்கு கை கால்களில் போடப்படும்) விலங்குகளும் இருக்கின்றன; நரகமும் இருக்கிறது

[13] விக்கிக் கொள்ளக்கூடிய உணவும் (அவர்களுக்காக) இருக்கிறது; துன்புறுத்தும் வேதனையும் இருக்கிறது

[14] அந்நாளில், பூமியும் மலைகளும் ஆட்டம் கொடுத்து (ஒன்றோடொன்று மோதி) மலைகள் சிதறுண்ட மண் குவியல்களாகி விடும்

[15] (மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களிடம் (நமது) தூதர் ஒருவரை அனுப்பி வைத்தோம். (மறுமையில்) அவர் உங்களுக்குச் சாட்சியாக வருவார். இவ்வாறே ஃபிர்அவ்னிடமும் முன்னர் ஒரு தூதரை நாம் அனுப்பிவைத்தோம்

[16] எனினும், ஃபிர்அவ்ன் அத்தூதருக்கு மாறு செய்தான். ஆகவே, நாம் அவனைப் பலமாகப் பிடித்துக் கொண்டோம்

[17] நீங்கள் (இதை) நிராகரித்துவிட்டால், எவ்வாறு நீங்கள் (நம் பிடியிலிருந்து) தப்பித்துக் கொள்வீர்கள்? (நாம் பிடிக்கின்ற) அந்நாளில் (திடுக்கம்) சிறு குழந்தைகளையும் நரைத்தவர்களாக ஆக்கிவிடும்

[18] (அந்நாளில்) வானம் பிளந்துவிடும்; இது நடந்தே தீரவேண்டிய அவனுடைய வாக்குறுதியாகும்

[19] நிச்சயமாக இது மிக்க நல்லுபதேசமாகும். ஆகவே, விரும்பியவர் தன் இறைவனிடம் செல்லக்கூடிய (இவ்)வழியை எடுத்துக்கொள்ளவும்

[20] (நபியே!) நிச்சயமாக நீரும், உம்மோடு இருப்பவர்களில் ஒரு கூட்டத்தினரும், சற்றேறக்குறைய இரவில் மூன்றில் இரண்டு பாகம் அல்லது பாதி அல்லது மூன்றில் ஒரு பாக நேரம் (தொழுகையில்) நின்று வருகிறீர்கள் என்பதை நிச்சயமாக உமது இறைவன் அறிவான். இரவு பகலைக் கணக்கிட அல்லாஹ்வால்தான் முடியும். நீங்கள் அதைச் சரிவரக் கணக்கிட முடியாதென்பதை அவன் அறிந்து (இருப்பதனால்தான், இரவில் இன்ன நேரத்தில், இவ்வளவு தொழவேண்டுமெனக் குறிப்பிட்டுக் கூறாது,) உங்களை அவன் மன்னித்து விட்டான். ஆகவே, (இரவில் நீங்கள் தொழுதால்) குர்ஆனில் உங்களுக்குச் சாத்தியமான அளவு ஓதுங்கள். ஏனென்றால், உங்களில் நோயாளிகள் இருக்கக்கூடுமென்பதையும், வேறு சிலர் அல்லாஹ்வின் அரு(ளாகிய பொரு)ளைத் தேடி, பூமியின் பல பாகங்களிலும் செல்ல வேண்டியதிருக்கும் என்பதையும், வேறு சிலர் அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரியச் செல்ல வேண்டியதிருக்குமென்பதையும் அவன் நன்கறிவான். ஆதலால், (உங்கள் அவகாசத்திற்குத் தக்கவாறு கூட்டியோ குறைத்தோ) உங்களுக்குச் சௌகரியமான அளவே ஓதுங்கள். (ஆயினும்) தொழுகையை (தவறவிடாது) சரியாக நிலை நிறுத்துங்கள். இன்னும் ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். (ஏழைகளுக்கு உதவுவதன் மூலம்) அல்லாஹ்வுக்கு அழகான முறையில் கடனும் கொடுங்கள். நன்மையான காரியங்களில் எவற்றை நீங்கள் உங்களுக்காக, (உங்கள் மரணத்திற்கு முன்னதாகவே) செய்து வைத்துக் கொண்டீர்களோ அவற்றையே, மேலான நன்மைகளாகவும் மகத்தான கூலியாகவும் நீங்கள் அல்லாஹ்விடத்தில் காண்பீர்கள். (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன், மகா கருணையுடையவன் ஆவான்

அல்முத்தஸ்ஸிர்

Surah 74

[1] (நபியே! வஹ்யின் அதிர்ச்சியால்) போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே

[2] நீர் எழுந்து நின்று (மனிதர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக

[3] உமது இறைவனைப் பெருமைப்படுத்துவீராக

[4] உமது ஆடையைப் பரிசுத்தமாக்கி வைத்துக்கொள்வீராக

[5] அசுத்தங்களை வெறுத்துவிடுவீராக

[6] எவருக்கும் நீர் (நன்மை) உபகாரம் செய்து, (அதைவிட) அதிகமாக (அவனிடம்) பெற்றுக்கொள்ளக் கருதாதீர்

[7] உமது இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக (சிரமங்களை) நீர் பொறுத்திருப்பீராக

[8] எக்காளத்தில் (மகா ஊதுகுழாயில்) ஊதப்படும் சமயத்தில்

[9] அந்நாள் மிக்க கஷ்டமான நாளாகும்

[10] (அந்நாள்) நிராகரிப்பவர்களுக்கு எளிதானதல்ல

[11] (நபியே! நீர் சிபாரிசுக்கு வராது) என்னை(யும் அவனையும்) விட்டுவிடுவீராக. அவனை நான் தனியாகவே படைத்தேன்

[12] பின்னர், நான் அவனுக்கு ஏராளமான பொருளையும் கொடுத்தேன்

[13] எந்நேரமும் அவனுடன் இருக்கக்கூடிய ஆண் பிள்ளைகளையும் (நான் அவனுக்குக் கொடுத்தேன்)

[14] அவனுக்கு வேண்டியவை எல்லாம் ஏற்கனவே அவனுக்காக தயார்படுத்தியும் வைத்தேன்

[15] பிறகு, நான் அவனுக்கு (மறுமையில்) இன்னும் அதிகமாகவும் கொடுப்பேன் என்றும் எதிர்பார்க்கிறான்

[16] அவ்வாறு ஆகக்கூடியதல்ல. ஏனென்றால், நிச்சயமாக அவன் நம் வசனங்களுக்கு எதிரியாக இருக்கிறான்

[17] அதிசீக்கிரத்தில் அவனை ஒரு சிரமமான சிகரத்தில் ஏற்றிவிடுவேன்

[18] நிச்சயமாக அவன் (இந்த குர்ஆனைப் பற்றி மிக மிகக்) கவனித்து (ஒரு பொய்யைக்) கற்பனை செய்தான்

[19] அவன் அழிந்துபோவான்; என்னதான் கற்பனை செய்து விட்டான்

[20] பின்னும், அவன் அழிந்துபோவான்; என்னதான் கற்பனை செய்து விட்டான்! (ஒன்றுமில்லை)

[21] பின்னும், (அதைப் பற்றிக்) கவனித்தான்

[22] பின்னர், (தன் இயலாமையைப் பற்றி முகம்) கடுகடுத்தான்; (முகம்) சுளித்தான்

[23] பின்னர், புறங்காட்டிச் சென்றான். (எனினும், பின்னும்) கர்வம் கொண்டான்

[24] ஆகவே, ‘‘இது மயக்கக்கூடிய சூனியமே தவிர வேறில்லை'' என்றும்

[25] ‘‘இது மனிதர்களுடைய சொல்லே தவிர வேறில்லை'' என்றும் கூறினான்

[26] ஆகவே, நாம் அவனை ‘சகர்' நரகத்தில் எறிவோம்

[27] (நபியே!) அந்த ‘சகர்' நரகம் என்னவென்று நீர் அறிவீரா

[28] அது எவரையும் மிச்சம் வைக்காது; விடவுமாட்டாது

[29] அது (எரித்து) மனிதனுடைய கோலத்தையே மாற்றிவிடும்

[30] (அவனை வேதனை செய்ய) அதில் பத்தொன்பது பேர்கள் இருக்கின்றனர்

[31] நரகத்தின் காவலாளிகளாக வானவர்களையே தவிர (மற்றெவரையும்) நாம் ஏற்படுத்தவில்லை. நிராகரிப்பவர்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு)இவர்களுடைய தொகையை(ப் பத்தொன்பதாக) நாம் ஏற்படுத்தினோம். வேதத்தையுடையவர்கள் இதை உறுதியாக நம்பவும். நம்பிக்கை கொண்டவர்களின் நம்பிக்கையை இது அதிகப்படுத்தும். வேதத்தை உடையவர்களும், நம்பிக்கையாளர்களும் (இதைப் பற்றிச்) சந்தேகிக்கவே வேண்டாம். எனினும், எவர்களுடைய உள்ளங்களில் நோய் இருக்கிறதோ அவர்களும், நிராகரிப்பவர்களும் இந்த உதாரணத்தைக் கொண்டு, அல்லாஹ் என்ன அறிவிக்க நாடினான்? என்று கூறுவார்கள். (நபியே!) இவ்வாறே, அல்லாஹ், தான் நாடியவர்களைத் தவறான வழியில் விட்டு விடுகிறான். தான் நாடியவர்களை நேரான வழியில் செலுத்துகிறான். (நபியே!) உமது இறைவனின் படைகளை அவனைத் தவிர மற்றெவரும் அறியமாட்டார்கள். இவை மனிதர்களுக்கு நல்லுபதேசங்களே தவிர வேறில்லை

[32] அவ்வாறு அல்ல! நிச்சயமாக சந்திரன் மீது சத்தியமாக

[33] செல்கின்ற இரவின் மீது சத்தியமாக

[34] வெளிச்சமாகும் விடியற்காலை மீது சத்தியமாக

[35] நிச்சயமாக அது (நரகம்) மிகப் பெரிய காரியங்களில் ஒன்றாகும்

[36] அது, மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது

[37] உங்களில் எவன் (அதனளவில்) முந்திச் செல்லவோ அல்லது (அதை விட்டும்) விலகிக் கொள்ளவோ விரும்புகிறானோ அவன் அவ்வாறு செய்யவும்

[38] ஒவ்வொரு மனிதனும், தான் செய்யும் செயலுக்கே பிணையாளியாக இருக்கிறான்

[39] ஆயினும், (எவர்களுடைய செயலேடு வலது கையில் கொடுக்கப்பட்டதோ அவர்கள்) வலது பக்கத்தில் இருப்பவர்கள்

[40] அவர்கள் சொர்க்கத்தில் இருந்துகொண்டு, குற்றவாளிகளை நோக்கி, ‘‘உங்களை ‘சகர்' நரகத்தில் புகுத்தியது எது?'' என்று கேட்பார்கள்

[41] அவர்கள் சொர்க்கத்தில் இருந்துகொண்டு, குற்றவாளிகளை நோக்கி, ‘‘உங்களை ‘சகர்' நரகத்தில் புகுத்தியது எது?'' என்று கேட்பார்கள்

[42] அவர்கள் சொர்க்கத்தில் இருந்துகொண்டு, குற்றவாளிகளை நோக்கி, ‘‘உங்களை ‘சகர்' நரகத்தில் புகுத்தியது எது?'' என்று கேட்பார்கள்

[43] அதற்கவர்கள் கூறுவார்கள்: ‘‘நாங்கள் தொழவில்லை

[44] நாங்கள் ஏழைகளுக்கு உணவளிக்கவில்லை

[45] வீணான காரியங்களில் மூழ்கிக் கிடந்தவர்களுடன் நாங்களும் மூழ்கிக் கிடந்தோம்

[46] கூலி கொடுக்கும் இந்நாளையும் நாங்கள் பொய்யாக்கினோம்

[47] (நாங்கள் மரணித்து) இதை உறுதியாகக் காணும் வரை (இவ்வாறே இருந்தோம்). ''(இவ்வாறு ‘சகர்' நரகவாசிகள் கூறுவார்கள்)

[48] ஆகவே, (அவர்களுக்காகப்) பரிந்து பேசும் எவருடைய சிபாரிசும், அன்றைய தினம் அவர்களுக்கு ஒரு பயனுமளிக்காது

[49] அவர்களுக்கு என்ன நேர்ந்தது? இந்நல்லுபதேசத்தை (இவ்வாறு) புறக்கணிக்கின்றனர்

[50] வெருண்டோடும் (காட்டுக்) கழுதையைப்போல் அவர்கள் இருக்கின்றனர்

[51] அதுவும், சிங்கத்தைக் கண்டு வெருண்டோடும் (கழுதையைப் போல் ஓடுகின்றனர்)

[52] (இதுமட்டுமா?) அவர்களில் ஒவ்வொருவனும், விரித்து ஓதப்படும் ஒரு வேதம் தனக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறான்

[53] அவ்வாறு ஒருகாலும் நடக்கப்போவதில்லை. மாறாக இவர்கள் மறுமையைப் பற்றி பயப்படுவதேயில்லை

[54] அவ்வாறு ஒருகாலும் நடக்கப் போவதில்லை. நிச்சயமாக இது ஒரு நல்லுபதேசமே ஆகும்

[55] (நல்லுபதேசம் பெற) விரும்பியவன் இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும்

[56] அல்லாஹ் நாடினால் தவிர, அவர்கள் நல்லுபதேசம் பெற முடியாது.(படைப்பினங்கள்) அஞ்சுவதற்கு அவனே தகுதியானவன், (படைப்பினங்களை) மன்னிப்பதற்கும் அவனே தகுதியானவன்

அல்கியாமா

Surah 75

[1] மறுமை நாளின் மீது நான் சத்தியம் செய்கிறேன்

[2] (குற்றம் செய்தவனை) நிந்திக்கும் அவனுடைய மனசாட்சியின் மீதும் நான் சத்தியம் செய்கிறேன்

[3] (இறந்து உக்கி மண்ணாய்ப் போன) அவனுடைய எலும்புகளை, நாம் ஒன்று சேர்க்கமாட்டோம் என்று மனிதன் எண்ணிக் கொண்டிருக்கிறானா

[4] அவ்வாறல்ல! அவனுடைய (சரீர) அமைப்பை (இறந்த பின்னரும் முன்னிருந்தபடி) சரிப்படுத்த நாம் ஆற்றலுடையோம்

[5] எனினும், மனிதன் இறைவன் முன்பாகவே குற்றம் செய்யக் கருதுகிறான்

[6] (பரிகாசமாக) ‘‘மறுமை நாள் எப்பொழுது வரும்'' என்று கேட்கிறான்

[7] அது (வரும்) சமயம் பார்வை தட்டழிந்து விடும்

[8] சந்திரனின் பிரகாசம் மங்கி விடும்

[9] (அதுநாள் வரை பிரிந்திருந்த) சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டு விடும்(போது)

[10] அந்நாளில் (தப்பித்துக்கொள்ள) “எங்கு ஓடுவது'' என்று மனிதன் கேட்பான்

[11] ‘‘முடியவே முடியாது. தப்ப இடமில்லை'' (என்று கூறப்படும்)

[12] (நபியே!) அந்நாளில் உமது இறைவனிடமே (அனைவரும்) நிற்க வேண்டியதிருக்கிறது

[13] மனிதன், முன் பின் செய்த பாவங்களைப் பற்றி அந்நாளில் அவனுக்கு அறிவுறுத்தப்படும்

[14] தவிர, ஒவ்வொரு மனிதனும் தன் நிலைமையைத் தானாகவும் அறிந்துகொள்வான்

[15] ஆகவே, அவன் (தன் குற்றங்களுக்கு) எவ்வளவு புகல்களைக் கூறிய போதிலும் (அது அங்கீகரிக்கப்படாது)

[16] (நபியே! வஹ்யி மூலம் ஜிப்ரயீல் ஓதிக்காண்பிக்கும் வசனங்கள் தவறி விடுமோ என்று பயந்து, அவர் ஓதி முடிப்பதற்கு முன்னர்) நீர் அவசரப்பட்டு அதை ஓத உமது நாவை அசைக்காதீர்

[17] ஏனென்றால், அதை ஒன்று சேர்த்து (நீர்) ஓதும்படி செய்வது நிச்சயமாக நம்மீதுள்ள கடமையாகும்

[18] ஆகவே, (ஜிப்ரயீல் மூலம்) அதை நாம் (உமக்கு) ஓதிக்காண்பித்தால், (அவர் ஓதி முடித்த பின்னர்) அவ்வாறே அதை நீர் பின்தொடர்ந்து ஓதுவீராக

[19] பின்னர், அதை விவரித்துக் கூறுவதும் நம்மீதுள்ள கடமையாகும்

[20] எனினும் (மனிதர்களே!) நீங்கள் (அவசரமான) உலக வாழ்க்கையைத்தான் விரும்புகிறீர்கள்

[21] (ஆதலால்தான், இம்மையை விரும்பி) மறுமையை நீங்கள் விட்டு விடுகிறீர்கள்

[22] அந்நாளில் சில(ருடைய) முகங்கள் மிக்க ஒளிவுடன் மகிழ்ச்சியுடையவையாக இருக்கும்

[23] (அவை) தங்கள் இறைவனை நோக்கிய வண்ணமாக இருக்கும்

[24] வேறு சில(ருடைய) முகங்களோ அந்நாளில் (துக்கத்தால்) வாடியவையாக இருக்கும்

[25] (பாவச் சுமையின் காரணமாகத்) தங்கள் இடுப்பு முறிந்துவிடுமோ என்று எண்ணி(ப் பயந்து) கொண்டிருப்பார்கள்

[26] எனினும், (எவனேனும் நோய்வாய்ப்பட்டு, அவனின்) உயிர் தொண்டைக் குழியை அடைந்துவிட்டால்

[27] (அவனுக்குச் சமீபத்தில் இருப்பவர்கள் அவனைச் சுகமாக்க) மந்திரிப்பவன் யார்? (எங்கிருக்கிறான்?) என்று கேட்கின்றனர்

[28] எனினும், அவனோ நிச்சயமாக இதுதான் (தன்) பிரிவினை என்பதை (உறுதியாக) அறிந்துகொள்கிறான்

[29] (அவனுடைய) கெண்டைக்கால், கெண்டைக் காலோடு பின்னிக் கொள்ளும்

[30] அச்சமயம், அவன் (காரியம் முடிவு பெற்று) உமது இறைவன் பக்கம் ஓட்டப்பட்டு விடுகிறான்

[31] (அவனோ அல்லாஹ்வுடைய வசனங்களை) உண்மையாக்கவுமில்லை; தொழவுமில்லை

[32] ஆயினும் (அவன் அவற்றைப்) பொய்யாக்கி வைத்து(த் தொழாதும்) விலகிக்கொண்டான்

[33] பின்னர், கர்வம்கொண்டு தன் குடும்பத்துடன் (தன் வீட்டிற்குச்) சென்று விட்டான்

[34] (மனிதனே!) உனக்குக் கேடுதான்; மேலும் கேடுதான்

[35] பின்னர், உனக்குக் கேடுதான்! மேலும் கேடுதான் (உனக்கு)

[36] (ஒரு கேள்வியும் தம்மிடம் கேட்காது) சும்மா விட்டு விடப்படுவோம் என்று மனிதன் எண்ணிக் கொண்டானா

[37] அவன் (கர்ப்பத்தில்) செலுத்தப்பட்ட ஓர் இந்திரியத் துளியாக இருக்க வில்லையா

[38] (இந்திரியமாக இருந்த) பின்னர், அவன் கருவாக மாறினான் (அவனை) அல்லாஹ்தான் படைத்து முழுமையான மனிதனாக ஆக்கிவைத்தான்

[39] ஆண், பெண் ஜோடிகளையும் அதிலிருந்து உற்பத்தி செய்கிறான்

[40] (இவற்றையெல்லாம் செய்த) அவன் மரணித்தவர்களை உயிர்ப்பிக்க ஆற்றலுடையவனாக இல்லையா

அல்இன்ஸான்

Surah 76

[1] ஒவ்வொரு மனிதனுக்கும் (உலகில் அவன் வெளிவருவதற்கு) முன்னர் ஒரு காலம் செல்லவில்லையா? அதில் அவன், இன்ன பொருள் என்றும் கூறுவதற்கில்லாத நிலைமையில் இருந்தான்

[2] (பின்னர் ஆண், பெண்) கலந்த ஓர் இந்திரியத் துளியைக் கொண்டு நிச்சயமாக நாம்தான் மனிதனைப் படைத்தோம். அவனை நாம் சோதிப்பதற்காகவே, செவியுடையவனாகவும் பார்வையுடையவனாகவும் அவனை ஆக்கினோம்

[3] பின்னர், நிச்சயமாக நாம் அவனுக்கு நேரான வழியையும் அறிவித்தோம். எனினும், (அதைப் பின்பற்றி நமக்கு) நன்றி செலுத்துபவர்களும் இருக்கின்றனர். (அதை) நிராகரித்துவிடுபவர்களும் இருக்கின்றனர்

[4] நிராகரிப்பவர்களுக்கு நாம் சங்கிலிகளையும், (கை, கால்) விலங்குகளையும், நரகத்தையும் நிச்சயமாக தயார்படுத்தி வைத்திருக்கிறோம்

[5] நல்லவர்கள், கிண்ணங்களிலுள்ள கற்பூரம் கலந்த பானத்தை அருந்துவார்கள்

[6] அது (சொந்தமாக) அல்லாஹ்வுடைய (நல்) அடியார்கள் அருந்துவதற்காக ஏற்பட்ட ஓர் ஊற்றின் நீராகும். அதை அவர்கள் (தாங்கள் விரும்பிய இடமெல்லாம்) ஓடச் செய்வார்கள்

[7] இவர்கள் (தங்கள்) நேர்ச்சைகளையும் நிறைவேற்றுவார்கள். நீண்ட வேதனையுடைய (மறுமை) நாளை பயந்துகொள்வார்கள்

[8] மேலும், அல்லாஹ்வின் மீதுள்ள அன்பின் காரணமாக ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், சிறைப்பட்டவர்களுக்கும் உணவளிப்பார்கள்

[9] (தம்மிடம் பெறுபவர்களை நோக்கி) ‘‘நாம் உங்களுக்கு உணவளிப்பதெல்லாம் அல்லாஹ்வின் முகத்திற்காகத்தான். உங்களிடம் நாம் ஒரு கூலியையோ அல்லது (நீங்கள் நமக்கு) நன்றி செலுத்துவதையோ கருதவில்லை (என்றும்)

[10] ‘‘நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனின் ஒரு நாளைப் பற்றிப் பயப்படுகிறோம். அந்நாளில் முகம் கடுகடுத்துச் சுண்டி விடும்'' (என்றும் கூறுவார்கள்)

[11] ஆகவே, அல்லாஹ் அத்தகைய நாளின் தீங்கிலிருந்து அவர்களை பாதுகாத்துக் கொண்டு, அவர்களுடைய முகத்தில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொடுத்தான்

[12] மேலும், அவர்கள் இம்மையில் (சிரமங்களைச்) சகித்துக் கொண்டிருந்ததன் காரணமாகச் சொர்க்கத்தையும், (அணிவதற்குப்) பட்டாடைகளையும் அவர்களுக்குக் கூலியாகக் கொடுத்தான் (என்று கூறப்படும்)

[13] (அவர்கள்) அங்குள்ள கட்டில்களின் மீது(ள்ள பஞ்சணைகளின் மேல்) சாய்ந்து கொண்டிருப்பார்கள். அதில் சூரிய வெப்பத்தையும், பனியின் கொடிய குளிர்ச்சியையும் காண மாட்டார்கள்

[14] அதிலுள்ள (மரங்களின்) நிழல்கள் அவர்கள் மீது தாழ்ந்து (சூழ்ந்து) கொண்டிருக்கும். அதன் கனிகள் (சுலபமாகப் பறிக்கக்கூடிய விதத்தில்) அவர்கள் முன் சாய்ந்து வரும்

[15] (பலவகை இன்பமான பானங்கள் நிறைந்த) பளிங்குக் கெண்டிகளும், வெள்ளிக் கிண்ணங்களும் அவர்கள் முன் சுற்றிக் கொண்டே இருக்கும்

[16] (அவை பளிங்குகளல்ல; எனினும்,) பளிங்குகளைப் போல் வெள்ளியினால் (அவர்களின் அவசியத்திற்குத்) தக்கவாறு நிர்மாணிக்கப்பட்டுள்ளன

[17] (இஞ்சி கலந்த) ‘சன்ஜபீல்' என்னும் (மிக்க உயர்ந்ததொரு) பானமும் அங்கு அவர்களுக்குப் புகட்டப்படும்

[18] அது அங்குள்ள ஓர் ஊற்றின் நீர், அதற்கு ‘ஸல்ஸபீல்' என்றும் பெயர் கூறப்படும்

[19] (என்றுமே) சிறுவர்களாக இருக்கக்கூடிய பணியாளர்கள் அவர்களைச் சுற்றிக்கொண்டே திரிவார்கள். (நபியே!) அவர்களை நீர் கண்டால் சிதறிய முத்துக்கள் என்றே கருதுவீர்

[20] பின்னும் கவனித்துப் பார்த்தால், பெரிய அரச மாளிகையில் உள்ள சுகபோகங்களையெல்லாம் நீர் (அங்குக்) காண்பீர்

[21] அவர்கள் தேகத்தின் மேல் மெல்லிய பசும் பட்டாடையோ அல்லது தடிப்பான (பல நிற) பட்டாடையோ இருக்கும். (விருதாக) வெள்ளிக் காப்பும் அவர்களுக்கு அணிவிக்கப்படும். பரிசுத்தமான ஒரு பானத்தையும் அவர்களின் இறைவன் அவர்களுக்குப் புகட்டுவான்

[22] (அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக இது உங்களுக்குக் கூலியாக கொடுக்கப்பட்டது; உங்கள் முயற்சியும் அங்கீகரிக்கப்பட்டது'' (என்றும் கூறுவான்)

[23] (நபியே!) நிச்சயமாக நாம் இந்த குர்ஆனைச் சிறிது சிறிதாகவே உம்மீது இறக்கி வைக்கிறோம்

[24] ஆகவே, உமது இறைவனின் கட்டளையை (பெற்றுக் கொள்ள) நீர் பொறுத்திருப்பீராக. அவர்களிலுள்ள பாவிகளையும், நன்றி கெட்டவர்களையும் நீர் பின்பற்றாதீர்

[25] காலையிலும் மாலையிலும் உங்கள் இறைவனின் திருநாமத்தை(க் கூறி) நினைவு கூருவீராக

[26] இரவிலும், அவனுக்குச் சிரம் பணிந்து வணங்கி, இரவு நேரத்தில் நெடுநேரம் அவனைத் துதி செய்து கொண்டிருப்பீராக

[27] நிச்சயமாக இந்த மக்கள் இம்மையை விரும்பி, அவர்களுக்கு முன்னிருக்கும் (மறுமையின்) கடினமான நாளைப் புறக்கணித்து விடுகின்றனர்

[28] நாம்தான் அவர்களைப் படைத்தோம். நாம்தான் அவர்களுடைய அமைப்பையும் உறுதிப்படுத்தினோம். நாம் நாடினால் (அவர்களை) மாற்றி அவர்களைப் போன்ற மற்றவர்களை (அவர்கள் இடத்தில்) அமர்த்திவிடுவோம்

[29] நிச்சயமாக இது ஒரு நல்லுபதேசமாகும். விரும்பியவர் தன் இறைவன் பக்கம் செல்லக்கூடிய (நேரான) வழியைப் பலமாகப் பிடித்துக் கொள்ளவும்

[30] எனினும், அல்லாஹ் நாடினால் தவிர நீங்கள் (எதையும்) விரும்ப முடியாது. நிச்சயமாக அல்லாஹ் (உங்கள் அனைவரின் தன்மைகளையும்) நன்கறிந்தவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான்

[31] (ஆகவே, உங்களில்) அவன் விரும்பியவர்களைத் தன் அருளில் புகுத்தி விடுகிறான். அநியாயக்காரர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையைத்தான் தயார்படுத்தி வைத்திருக்கிறான்

அல்முர்ஸலாத்

Surah 77

[1] நன்மைக்காக அனுப்பப்படுபவர்கள் மீது சத்தியமாக

[2] இன்னும் அதி வேகமாகச் செல்லும் (புயல்) காற்றுகள் மீது சத்தியமாக

[3] (மேகங்களை பல திசைகளில்) பரப்பிவிடுபவர்கள் மீதும் சத்தியமாக

[4] (உண்மை, பொய்களுக்கிடையில்) தெளிவாகப் பிரித்தறிவிப்பவை(யான வேதங்கள்) மீதும் சத்தியமாக

[5] மன்னிப்பு அல்லது எச்சரிக்கையாக இருக்கும் நல்லுரைகளை (வஹ்யின் மூலம் இறைத்தூதர்களுக்கு) எடுத்துரைப்பவர்கள் மீதும் சத்தியமாக

[6] மன்னிப்பு அல்லது எச்சரிக்கையாக இருக்கும் நல்லுரைகளை (வஹ்யின் மூலம் இறைத்தூதர்களுக்கு) எடுத்துரைப்பவர்கள் மீதும் சத்தியமாக

[7] நிச்சயமாக உங்களுக்குப் பயமுறுத்தப்படும் (நாள்) வந்தே தீரும்

[8] அந்நேரத்தில், நட்சத்திரங்கள் அழிக்கப்பட்டுவிடும்

[9] அப்போது வானம் திறக்கப்பட்டுவிடும்

[10] அப்போது மலைகள் (தூசிகளைப் போல்) தவிடு பொடியாக்கப்படும்

[11] அப்போது தூதர்கள் விசாரணைக்காகக் கொண்டு வரப்படுவார்கள்

[12] (இவை எல்லாம்) எதுவரை பிற்படுத்தப்பட்டிருக்கின்றன (என்பதை நபியே! நீர் அறிவீரா)

[13] தீர்ப்பு கூறப்படும் நாள் வரைதான்

[14] (நபியே!) தீர்ப்பு கூறப்படும் நாளின் தன்மையை நீர் அறிவீரா

[15] (நம் வசனங்களைப்) பொய்யாக்கியவர்களுக்கு அந்நாளில் கேடுதான்

[16] (அதைப் பொய்யாக்கிக் கொண்டிருந்த) முன்னிருந்தவர்களையும் நாம் அழித்துவிடவில்லையா

[17] அதற்கு பின்னுள்ளவர்களையும் (அழிந்து போன அவர்களைப்) பின்தொடரும்படி நாம் செய்வோம்

[18] (அவர்களையும் அழித்தோம்.) அவ்வாறே, இக்குற்றவாளிகளையும் நாம் (அழிந்துபோகச்) செய்வோம்

[19] ஆகவே, (நம் வசனங்களைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்

[20] ஓர் அற்பத் துளியைக் கொண்டு நாம் உங்களைப் படைக்கவில்லையா

[21] அதை(ப் பத்திரமாக) உறுதிமிக்க (கர்ப்ப) ஸ்தானத்தில் குறிப்பிட்ட காலம் வரை தங்கும்படி நாம் செய்தோம்

[22] அதை(ப் பத்திரமாக) உறுதிமிக்க (கர்ப்ப) ஸ்தானத்தில் குறிப்பிட்ட காலம் வரை தங்கும்படி நாம் செய்தோம்

[23] பின்னர் நாமே அதை (மனிதனாகவும்) நிர்ணயம் செய்தோம். நிர்ணயம் செய்பவர்களில் நாமே மிக மேலானோர்

[24] ஆகவே, (இவற்றைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்

[25] பூமியை, (உங்களில்) உயிரோடு இருப்பவர்களுக்கும், மரணித்தவர்களுக்கும் இடமளிக்கக்கூடியதாக நாம் ஆக்கி வைக்கவில்லையா

[26] பூமியை, (உங்களில்) உயிரோடு இருப்பவர்களுக்கும், மரணித்தவர்களுக்கும் இடமளிக்கக்கூடியதாக நாம் ஆக்கி வைக்கவில்லையா

[27] அதில் உயர்ந்த மலைகளையும் நாம் அமைத்து (அவற்றிலிருந்து) மதுரமான நீரையும் உங்களுக்குப் புகட்டுகிறோம்

[28] (நம் அருட்கொடைகளைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்

[29] ‘‘எ(ந்த நரகத்)தை நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்தீர்களோ, அதன் பாலே நீங்கள் செல்லுங்கள்

[30] மூன்று கிளைகளையுடைய (நரகத்தின்) புகையின் நிழலின் பக்கம் நீங்கள் செல்லுங்கள்'' (என்றும் கூறப்படும்)

[31] அதில் (குளிர்ச்சிதரும்) நிழலுமிராது; உஷ்ணத்தைத் தணிக்கக்கூடிய எதுவுமிராது

[32] (எனினும்,) பெரிய மாளிகைகளைப்போன்ற நெருப்புக் கங்குகளை அது கக்கிக் கொண்டே இருக்கும்

[33] அவை மஞ்சள் நிறமுள்ள (பெரிய) ஒட்டகங்களைப் போல் தோன்றும்

[34] (இவற்றைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்

[35] இது ஒரு நாளாகும். (இந்நாளில் எதுவுமே) அவர்கள் பேச சக்தி பெறமாட்டார்கள்

[36] மேலும், புகல் கூறவும் அவர்களுக்கு அனுமதி கிடைக்காது

[37] (இவற்றைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்

[38] இதுவே தீர்ப்பு நாள். உங்களையும், (உங்களுக்கு) முன்னுள்ளோரையும் (விசாரணைக்காக) நாம் ஒன்று சேர்த்துவிடுவோம்

[39] ஆகவே, (அந்நாளில் அவர்களை நோக்கி, ‘‘தப்பித்துக் கொள்ள) நீங்கள் ஏதும் சூழ்ச்சி செய்யக் கூடுமானால் சூழ்ச்சி செய்து பாருங்கள்'' (என்றும் கூறப்படும்)

[40] (இதைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்

[41] நிச்சயமாக இறையச்சமுடையவர்கள், நிச்சயமாக (அந்நாளில் சொர்க்கத்திலுள்ள மரங்களின்) நிழல்களிலும் (அதன் அடியில் உள்ள) ஊற்றுக்களிலும் இருப்பார்கள்

[42] அவர்கள் விரும்பிய கனிவர்க்கங்கள் அவர்களுக்குண்டு

[43] (அவர்களை நோக்கி,) ‘‘நீங்கள் செய்து கொண்டிருந்த நன்மையின் காரணமாக, மிக தாராளமாக இவற்றைப் புசித்துப் பருகிக் கொண்டிருங்கள்'' (என்று கூறப்படும்)

[44] இவ்வாறே நன்மை செய்பவர்களுக்கு நிச்சயமாக நாம் கூலி கொடுப்போம்

[45] (இதைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்

[46] (இதைப் பொய்யாக்குபவர்களே! இம்மையில்) நீங்கள் புசித்துச் சிறிது சுகமனுபவித்துக் கொள்ளுங்கள். எனினும், நிச்சயமாக நீங்கள் குற்றவாளிகள்தான்

[47] (இறைவனின் வசனங்களைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்

[48] அவர்களை நோக்கி, ‘‘(இறைவன் முன்) நீங்கள் குனிந்து வணங்குங்கள்'' என்று கூறப்பட்டால், அவர்கள் குனிந்து வணங்கவே மாட்டார்கள்

[49] (அவனுடைய இக்கட்டளையைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்

[50] இதற்குப் பின்னர், எவ்விஷயத்தைத்தான் அவர்கள் நம்பிக்கை கொள்வார்களோ

அந்நபா

Surah 78

[1] (நபியே!) எதைப்பற்றி அவர்கள் (தங்களுக்குள்) கேட்டுக் கொள்கின்றனர்

[2] மகத்தான செய்தியைப் பற்றிய(ல்லவா)

[3] அதைப்பற்றி அவர்கள் (உண்மைக்கு) முரணான அபிப்பிராயம் கொண்டிருக்கின்றனர்

[4] (தங்கள் எண்ணம் தவறு என்பதை) அதிசீக்கிரத்தில் அவர்கள் நன்கு அறிந்து கொள்வார்கள்

[5] பின்னர், அவசியம் அதிசீக்கிரத்தில் (அதன் உண்மையை) நன்கு அறிந்து கொள்வார்கள்

[6] (இவ்வளவு பெரிய) பூமியை நாம் (உங்களுக்கு) விரிப்பாக அமைக்க வில்லையா

[7] இன்னும், (அதில் நாம்) மலைகளை முளைகளாக (நிறுத்தவில்லையா)

[8] ஜோடி ஜோடியாக உங்களை நாமே படைத்திருக்கிறோம்

[9] நாமே உங்கள் நித்திரையை (உங்களுக்கு) ஓய்வாக ஆக்கினோம்

[10] நாமே இரவை (உங்களுக்கு)ப் போர்வையாக ஆக்கினோம்

[11] நாமே பகலை (உங்கள்) வாழ்வைத் தேடிக்கொள்ளும் நேரமாக்கினோம்

[12] உங்களுக்கு மேலிருக்கும் பலமான ஏழு வானங்களையும் நாமே அமைத்தோம்

[13] அதில் (சூரியனைப்) பிரகாசிக்கும் தீபமாக அமைத்தோம்

[14] கார்மேகத்திலிருந்து பெரும் மழையை பொழியச் செய்கிறோம்

[15] அதைக் கொண்டு தானியங்களையும் புற்பூண்டுகளையும் முளைப்பிக்கிறோம்

[16] இன்னும், கிளைகள் அடர்ந்த சோலைகளையும் (உற்பத்தி செய்கிறோம்)

[17] நிச்சயமாக (இவர்கள் தர்க்கித்து நிராகரித்துக் கொண்டிருக்கும்) அந்தத் தீர்ப்பு நாள்தான் (விசாரணைக்குக்) குறிப்பிட்ட காலமாகும்

[18] (அதற்காக) ஸூர் (என்னும் எக்காளம்) ஊதப்படும் நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக வருவீர்கள்

[19] வானம் திறக்கப்பட்டு (அதில்) பல வழிகள் ஏற்பட்டு விடும்

[20] மலைகள் (தம் இடத்திலிருந்து) பெயர்க்கப்பட்டு தூள்தூளாகி (பறந்து) விடும்

[21] நிச்சயமாக நரகம் (இந்தப் பாவிகளின் வரவை) எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது

[22] (பாவிகளாகிய) இந்த அநியாயக்காரர்கள் தங்குமிடம் அதுவே

[23] அதில் அவர்கள் நீண்ட காலங்கள் தங்கிவிடுவார்கள்

[24] அதில் கொதிக்கும் நீரையும் சீழ் சலத்தையும் தவிர அவர்கள் (வேறு ஒரு) குடிபானத்தையும், குளிர்ச்சியையும் சுவைக்க மாட்டார்கள்

[25] அதில் கொதிக்கும் நீரையும் சீழ் சலத்தையும் தவிர அவர்கள் (வேறு ஒரு) குடிபானத்தையும், குளிர்ச்சியையும் சுவைக்க மாட்டார்கள்

[26] இது (அவர்கள் செயலுக்குத்) தகுமான கூலியாகும்

[27] ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் (மறுமையின்) கேள்வி கணக்கை நம்பவே இல்லை

[28] அவர்கள் நம் வசனங்களை மிக அலட்சியமாகப் பொய்ப்பித்தார்கள்

[29] எனினும், இவை அனைத்தையும் நாம் (நம் குறிப்புப்) புத்தகத்தில் பதிவு செய்து கொண்டோம்

[30] ஆகவே, (மறுமையில் அவர்களை நோக்கி) ‘‘வேதனையைத் தவிர நாம் உங்களுக்கு (வேறெதையும்) அதிகப்படுத்த மாட்டோம். ஆகவே, (இதைச்) சுவைத்துப் பாருங்கள்'' (என்று கூறுவோம்)

[31] (ஆயினும்), இறையச்சமுடையவர்களுக்கோ நிச்சயமாக பாதுகாப்பான (சொர்க்கம் என்னும்) இடம் உண்டு

[32] (அங்கு வசிப்பதற்கு) தோட்டங்களும் (அவற்றில் புசிப்பதற்கு அவர்களுக்கு) திராட்சைக் கனிகளும் உண்டு

[33] (மனைவிகளாக) ஒரே வயதுடைய (கண்ணழகிகளான) நெஞ்சு நிமிர்ந்த கன்னிகளும்

[34] (பானங்கள்) நிறைந்த கிண்ணங்களும் (அவர்களுக்குக் கிடைக்கும்)

[35] அங்கு அவர்கள் வீண் வார்த்தையையும் பொய்யையும் செவியுற மாட்டார்கள்

[36] (இவையெல்லாம் இவர்களின் நன்மைகளுக்குக்) கணக்கான கூலியாகவும் (கிடைக்கும். அதற்கு மேல்) உமது இறைவன் புறத்தால் நன்கொடையாகவும் (இன்னும் அதிகம்) அவர்களுக்குக் கிடைக்கும்

[37] அவனே வானங்கள், பூமி, இவற்றுக்கு மத்தியிலுள்ள அனைத்தின் உரிமையாளனும் அளவற்ற அருளாளனும் ஆவான். எனினும், (அந்நாளில் எவருமே) அவன் முன் பேச சக்தி பெறமாட்டார்கள்

[38] ஜிப்ரயீலும், வானவர்களும் அணி அணியாக நிற்கும் அந்நாளில், எவருமே அவன் முன் பேச (சக்தி பெற) மாட்டார்கள். எனினும், ரஹ்மான் எவருக்கு அனுமதி கொடுத்து ‘‘சரி! பேசுவீராக!'' எனவும் கூறினானோ அவர் (மட்டும்) பேசுவார்

[39] இத்தகைய நாள் (வருவது) உறுதி! ஆகவே, விரும்பியவன் தன் இறைவனிடமே தங்கும் இடத்தைத் தேடிக்கொள்ளவும்

[40] சமீபத்தில் நிச்சயமாக உங்களுக்கு வரக்கூடிய ஒரு வேதனையைப் பற்றி நாம் எச்சரிக்கை செய்கிறோம். அந்நாளில் ஒவ்வொரு மனிதனும் தன் கரங்கள் செய்த செயலின் பலனை(த் தன் கண்ணால்) கண்டுகொள்வான். நிராகரிப்பவனோ தான் மண்ணாக ஆகவேண்டுமே என்று புலம்புவான்

அந்நாஸிஆத்

Surah 79

[1] (பாவிகளின் உயிர்களைப்) பலமாகப் பறிப்பவர்கள் மீது சத்தியமாக

[2] (நல்லவர்களின் ஆத்மாவை) எளிதாகக் கைப்பற்றுபவர்கள் மீது சத்தியமாக

[3] (ஆகாயத்திலும், கடலிலும்) அதிவேகமாக(ப் பறந்து) நீந்திச் செல்லும் வானவர்கள் மீது சத்தியமாக

[4] (இறைவனின் கட்டளையை நிறைவேற்ற) போட்டி போட்டுக்கொண்டு முந்தி செல்பவர்கள் மீதும் சத்தியமாக

[5] எல்லாக் காரியங்களையும் (இறைவனின் கட்டளைப்படி) நிர்வகிக்கின்ற (வான)வர்கள் மீது சத்தியமாக

[6] (கொடிய பூகம்பத்தால் பூமி) பலமாக அதிர்ச்சியுறும் நாளில்

[7] (மேலும்) அதைத் தொடர்ந்து (பல பூகம்ப அதிர்ச்சிகள்) வரும் (நாளில் உலகம் முடிவுற்றே தீரும்)

[8] அந்நாளில், உள்ளங்களெல்லாம் திடுக்கிட்டு நடுங்கிக் கொண்டிருக்கும்

[9] பார்வைகளெல்லாம் (பயத்தால்) கீழ்நோக்கி நிற்கும்

[10] (இவ்வாறிருக்க, நிராகரிப்பவர்கள் இதை மறுத்து) ‘‘நாம் (இறந்த பின்னர்) மெய்யாகவே நாம் (உயிர்ப்பிக்கப்பட்டு) முந்திய நிலைமைக்குத் திருப்பப்படுவோமா

[11] (அதுவும்) நாம் உக்கி எலும்பாகப் போனதன் பின்னரா (உயிர் கொடுத்து எழுப்பப்படுவோம்?) என்று கூறுகின்றனர்

[12] ‘‘அவ்வாறாயின், அது பெரும் நஷ்டமான மீட்சிதான் என்றும் அவர்கள் (பரிகாசமாகக்)'' கூறுகின்றனர்

[13] (இது அவர்களுக்கு அசாத்தியமாகத் தோன்றலாம்; எனினும், நமக்கோ) அது ஓர் அதட்டல் (ஒரு உறுத்தல், ஒரு சப்தம்)தான்

[14] உடனே அவர்கள் அனைவரும் (உயிர் பெற்றெழுந்து) வந்து ஒரு திடலில் கூடிவிடுவார்கள்

[15] (நபியே!) மூஸாவுடைய செய்தி உமக்கு எட்டியதா

[16] ‘துவா' என்னும் பரிசுத்தமான ஓடைக்கு அவருடைய இறைவன் அவரை அழைத்ததை நினைவு கூறுங்கள்

[17] ‘‘ஃபிர்அவ்னிடம் செல்வீராக! நிச்சயமாக அவன் வரம்பு மீறிவிட்டான்

[18] (அவனிடம்) கூறுவீராக! ‘‘(பாவங்களை விட்டும்) நீ பரிசுத்தவானாக ஆக உனக்கு விருப்பம் தானா

[19] (அவ்வாறாயின்) உன் இறைவன் பக்கம் செல்லக்கூடிய வழியை நான் உனக்கு அறிவிக்கிறேன். அவனுக்கு நீ பயந்துகொள்'' (இவ்வாறு, மூஸாவுக்கு இறைவன் கட்டளையிட்டான்)

[20] (மூஸா அவனிடம் சென்று அவ்வாறு கூறிப்) பெரியதொரு அத்தாட்சியையும் அவனுக்குக் காண்பித்தார்

[21] (எனினும்) அவனோ, அதைப் பொய்யாக்கி (அவர் கூறியதற்கு) மாறு செய்தான்

[22] பின்னர் (அவரை விட்டும்) விலகி (அவருக்குத் தீங்கிழைக்கவும்) முயற்சி செய்தான்

[23] இதற்காக(த் தன் மக்களை) ஒன்று கூட்டி (அவர்களுக்கு) அறிக்கையிட்டான்

[24] (அவர்களை நோக்கி) ‘‘நான்தான் உங்கள் மேலான இறைவன்'' என்று கூறினான்

[25] ஆதலால், அல்லாஹ் அவனை இம்மை மறுமையின் வேதனையைக் கொண்டு பிடித்துக் கொண்டான்

[26] பயப்படுபவர்களுக்கு மெய்யாகவே இதில் ஒரு நல்ல படிப்பினை இருக்கிறது

[27] (மனிதர்களே!) நீங்கள் பலமான படைப்பா? அல்லது வானமா? அவன்தான் அவ்வானத்தைப் படைத்தான்

[28] அவனே அதன் முகட்டை உயர்த்தி, அதை ஒழுங்குபடுத்தினான்

[29] அவனே, அதன் இரவை இருளாக்கி(ச் சூரியனைக் கொண்டு) அதன் பகலை வெளியாக்கி (வெளிச்சமாக்கி)னான்

[30] இதற்குப் பின்னர், அவனே பூமியை விரித்தான்

[31] அவனே அதிலிருந்து நீரையும், மேய்ச்சல் பொருள்களையும் வெளியாக்குகிறான்

[32] மலைகளையும் அவனே (அதில்) உறுதியாக ஊன்றினான்

[33] உங்களுக்கும், உங்கள் கால்நடைகளுக்கும் பயனளிக்கக்கூடியவையாக (அவற்றை அதில் அமைத்தான்)

[34] (மறுமையின்) பெரும் அமளி வந்தால்

[35] மனிதன் செய்ததெல்லாம் அந்நாளில் அவனுடைய ஞாபகத்திற்கு வந்துவிடும்

[36] மனிதர்கள் கண் முன் நரகம் கொண்டு வந்து வைக்கப்பட்டு விடும்

[37] எவன் வரம்பு மீறினானோ

[38] (மறுமையைப் புறக்கணித்து) இவ்வுலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து கொண்டானோ

[39] அவன் செல்லும் இடம் நிச்சயமாக நரகம்தான்

[40] எவன் தன் இறைவனின் முன்னால் (விசாரணைக்காக) நிற்பதைப் (பற்றிப்) பயந்து, (தப்பான) சரீர இச்சையை விட்டுத் தன்னைத்தடுத்துக் கொண்டானோ

[41] அவன் செல்லுமிடம் நிச்சயமாக சொர்க்கம்தான்

[42] (நபியே!) மறுமையைப் பற்றி, அது எப்பொழுது வருமென உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர்

[43] (எப்பொழுது வருமென்று) எதற்காக நீர் கூற வேண்டும்

[44] அதன் முடிவெல்லாம், உமது இறைவனிடமே இருக்கிறது

[45] அந்நாளைப் பற்றிப் பயப்படக்கூடியவர்களுக்கு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரே தவிர வேறில்லை. (அது வரும் காலத்தையும், நேரத்தையும் அறிவிப்பது உமது கடமையல்ல)

[46] அதை அவர்கள் கண்ணால் காணும் நாளில், மாலையிலோ அல்லது காலையிலோ ஒரு சொற்ப நேரமே தவிர (இவ்வுலகில்) தங்கியிருக்கவில்லை என்றே அவர்களுக்குத் தோன்றும்

அபஸ

Surah 80

[1] (நம் நபி) கடுகடுத்தார்; புறக்கணித்தார். (எதற்காக)

[2] தன்னிடம் ஓர் பார்வையற்றவர் வந்ததற்காக

[3] (நபியே! உம்மிடம் வந்த) அவர் பரிசுத்தவானாக இருக்கலாம் என்பதை நீர் அறிவீரா

[4] அல்லது அவர் நல்லுணர்வு பெறுவார். (உமது) நல்லுபதேசம் அவருக்குப் பயனளிக்கலாம் (என்பதை நீர் அறிவீரா? அவ்வாறிருக்க, அவரை நீர் ஏன் கடுகடுத்துப் புறக்கணித்தீர்)

[5] (நபியே! மார்க்கத்தை) எவன் அலட்சியம் செய்கிறானோ

[6] அவனை வரவேற்பதில் நீர் அதிக சிரமத்தை எடுத்துக் கொள்கிறீர்

[7] அவன் பரிசுத்தவானாக ஆகாவிட்டால் அதைப் பற்றி உம் மீது ஒரு குற்றமும் இல்லை(யே)

[8] எவர் (தானாகவே) உம்மிடம் ஓடி வருகிறாரோ

[9] அவர்தான் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறவர்

[10] எனினும், நீர் அவரை அலட்சியம் செய்து விடுகிறீர்

[11] அவ்வாறு செய்யாதீர். (திரு குர்ஆனாகிய) இது ஒரு நல்லுபதேசம்தான்

[12] எவர் (நேரான வழியில் செல்ல) விரும்புகிறாரோ அவர் இதை(ச் செவியுற்று) ஞாபகத்தில் வைத்துக் கொள்வார்

[13] இது (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) மிக்க கண்ணியமான புத்தகத்தில் (வரையப்பட்டுள்ளது)

[14] உயர்வுமிக்க தூய்மையான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது; (அது) மிகப் பரிசுத்தமானது

[15] எழுதுபவர்களின் கைகளினால் (வரையப்பட்டது)

[16] (அவர்கள்) மிக கண்ணியமானவர்கள், மிக நல்லவர்கள்

[17] (பாவம் செய்யும்) மனிதனுக்குக் கேடுதான். அவன் எவ்வளவு நன்றிகெட்டவனாக இருக்கிறான்

[18] எதைக்கொண்டு (இறைவன்) அவனைப் படைத்திருக்கிறான் (என்பதை அவன் கவனித்தானா)

[19] ஒரு துளி இந்திரியத்தைக் கொண்டுதான் அவன் அவனைப் படைக்கிறான். (அவன் இருக்கின்ற இவ்வாறே, அவனை மனிதனாக அமைத்து) அவனுக்குச் சக்தியைக் கொடுத்தான்

[20] பின்னர், அவன் செய்யக்கூடிய (நன்மை தீமைக்குரிய) வழியை அவனுக்கு எளிதாக்கி வைத்தான்

[21] பின்னர், அவனை மரணிக்கச் செய்து சமாதியில் புகுத்துகிறான்

[22] பின்னர் (அவன் விரும்பியபொழுது உயிர் கொடுத்து) அவனே அவனை உயிர்ப்பிப்பான்

[23] எனினும், நிச்சயமாக மனிதன் இறைவனுடைய கட்டளையை நிறைவேற்றுவதில்லை

[24] மனிதன் தன் உணவை (அது எங்கிருந்து எவ்வாறு வருகிறது என்பதைச்) சிறிது கவனித்துப் பார்க்கவும்

[25] நிச்சயமாக நாமே ஏராளமான மழையை பொழியச் செய்தோம்

[26] பின்னர், பூமியையும் பிளந்(து வெடிக்கச் செய்)தோம்

[27] பின்னர், அதிலிருந்து வித்துக்களை முளைத்து வளரும்படி செய்கிறோம்

[28] (இவ்வாறு) திராட்சைக் கனிகளையும் மற்ற காய்கறிகளையும்

[29] ஜைத்தூனையும், பேரீச்சை மரத்தையும்

[30] கிளைகள் அடர்ந்த தோப்புகளையும்

[31] கனிவர்க்கங்களையும், புற்பூண்டுகளையும்

[32] உங்களுக்கும் உங்கள் கால்நடைகளுக்கும், பயனளிக்குமாறு (முளைக்க வைக்கிறோம்)

[33] (உலக முடிவின்பொழுது செவிகளை) செவிடாக்கும்படியான (பயங்கரச்) சப்தம் ஏற்படுமாயின்

[34] அந்நாளில் மனிதன் தன் சகோதரனை விட்டும் வெருண்டோடுவான்

[35] தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்

[36] தன் மனைவியை விட்டும், தன் பிள்ளைகளை விட்டும் (ஓடுவான்)

[37] அந்நாளில், அவர்களில் ஒவ்வொரு மனிதனுக்கும், மற்றவர்களைக் கவனிக்க முடியாதவாறு சொந்தக் கவலை ஏற்பட்டுவிடும்

[38] எனினும், அந்நாளில் சில முகங்கள் பிரகாசமுள்ளவையாகவும்

[39] சந்தோஷத்தால் சிரித்தவையாகவும் இருக்கும்

[40] அந்நாளில் வேறு சில முகங்கள் மீது, புழுதி படிந்து கிடக்கும்

[41] கருமை இருள் அவற்றை மூடிக்கொள்ளும், (துக்கத்தால் அவர்களது முகங்கள் இருளடைந்து கிடக்கும்)

[42] இவர்கள்தான் (மறுமையை) நிராகரித்துப் பாவம் செய்பவர்கள்

அத்தக்வீர்

Surah 81

[1] (உலக முடிவுக்காகச்) சூரியனின் பிரகாசம் மங்க வைக்கப்படும்போது

[2] நட்சத்திரங்கள் உதிர்ந்துவிடும்போது

[3] மலைகள் அதனிடங்களில் இருந்து அகற்றப்படும் போது

[4] (இந்த அமளிகளால் பத்துமாத) கர்ப்பமடைந்த ஒட்டகங்கள் (கவனிப்பின்றி) விடப்படும்போது

[5] காட்டு மிருகங்கள் (பயந்து ஊர்களில் வந்து) ஒன்றுகூடும்போது

[6] கடல் நீர் நெருப்பாக மாற்றப்படும்போது. (இவ்வாறு உலகம் முடிவுபெற்று, விசாரணைக் காலம் ஏற்படும்)

[7] அப்போது உயிர்கள் உடலுடன் (மீண்டும்) சேர்க்கப்படும்

[8] அப்போது (உயிருடன்) புதைக்கப்பட்ட பெண் குழந்தைகளை நோக்கி கேட்கப்படும்

[9] ‘‘எந்த குற்றத்திற்காக நீங்கள் (உயிருடன் புதைக்கப்பட்டுக்) கொலை செய்யப்பட்டீர்கள்?'' என்று

[10] அப்போது (விசாரணைக்காக மனிதர்களுடைய) ஏடுகள் விரிக்கப்படும்

[11] அப்போது வானம் (பிளந்து) அகற்றப்பட்டுவிடும்

[12] அப்போது நரகம் எரிக்கப்படும்

[13] அப்போது சொர்க்கம் சமீபமாகக் கொண்டு வரப்படும்

[14] (அந்நாளில்) ஒவ்வோர் ஆத்மாவும் (நன்மையோ தீமையோ) தான் செய்து கொண்டு வந்திருப்பதை நன்கறிந்து கொள்ளும்

[15] (மனிதர்களே!) சென்றவழியே மேலும் செல்லும் நட்சத்திரங்கள் மீது சத்தியமாக

[16] தோன்றி மறையும் (வால்) நட்சத்திரங்கள் மீது சத்தியமாக

[17] செல்கின்ற இரவின் மீதும் சத்தியமாக

[18] உதயமாகும் காலையின் மீதும் சத்தியமாக

[19] நிச்சயமாக (திரு குர்ஆன் என்னும்) இது மிக்க கண்ணியமுள்ள (ஜிப்ரயீல் என்னும்) ஒரு (வானவத்) தூதர் மூலம் கூறப்பட்டதாகும்

[20] அவர் மிக்க பலவான். அவருக்கு அர்ஷுடையவனிடத்தில் பெரும் பதவியுண்டு

[21] (அவர் அவ்விடத்திலுள்ள வானவர்களின்) தலைவர்; மிக்க நம்பிக்கையுடையவர்

[22] (மக்காவாசிகளே! நம் தூதராகிய) உங்கள் தோழர் பைத்தியக்காரரல்ல

[23] நிச்சயமாக அவர் (ஜிப்ரயீலை) தெளிவான வானத்தின் கோடியில் மெய்யாகவே கண்டார்

[24] (அச்சமயம் அவர் கண்ட) மறைவானவற்றை (அறிவிப்பதில்) கஞ்சத்தனம் செய்பவரல்ல

[25] இன்னும், இது வெருட்டப்பட்ட ஷைத்தானின் சொல்லுமல்ல

[26] ஆகவே, (இதைவிட்டு) நீங்கள் எங்கு செல்லுகிறீர்கள்

[27] இது உலகத்தார் அனைவருக்கும் ஒரு நல்லுபதேசமே தவிர வேறில்லை

[28] உங்களில் எவர் நேரான பாதையில் செல்ல விரும்புகிறாரோ அவருக்கு (இது பயனளிக்கும்)

[29] எனினும், உலகத்தாரின் இறைவனாகிய அல்லாஹ் நாடினால் தவிர, நீங்கள் (நல்லுணர்ச்சி பெற) விரும்பமாட்டீர்கள்

அல்இன்ஃபிதார்

Surah 82

[1] (உலக முடிவில்) வானம் வெடித்துவிட்டால்

[2] நட்சத்திரங்கள் சிதறிவிட்டால்

[3] கடல்கள் பிளக்கப்பட்டுவிட்டால்

[4] சமாதிகளும் திறக்கப்பட்டால் (மரணித்தவர்கள் உயிர் பெற்றெழுந்து)

[5] ஒவ்வோர் ஆத்மாவும் தான் (உலகத்தில்) முன்னர் செய்தவற்றையும், (உலகத்தில்) தான் விட்டு வந்தவற்றையும் நன்கறிந்துகொள்ளும்

[6] மனிதனே! மிக கண்ணியம் உள்ள உனது இறைவனைப் பற்றி உன்னை மயக்கிவிட்டது எது

[7] அவன்தான் (ஒன்றுமில்லாதிருந்த) உன்னைப் படைத்து மேலான விதத்தில் மிக ஒழுங்காக உன்னை அமைத்தான்

[8] அவன் விரும்பிய (மிக்க அழகான) கோலத்தில் உன் அவயங்களைப் பொறுத்தினான்

[9] எனினும், (மனிதர்களே!) நீங்கள் கூலி கொடுக்கும் (தீர்ப்பு) நாளைப் பொய்யாக்குகிறீர்கள்

[10] நிச்சயமாக உங்கள் மீது காவலாளர்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றனர்

[11] அவர்கள் (வானவர்களில் உள்ள) கண்ணியமான எழுத்தாளர்கள்

[12] நீங்கள் செய்பவற்றையெல்லாம் அவர்கள் (தவறாது) அறிந்து (எழுதிக்) கொள்வார்கள்

[13] ஆகவே, நிச்சயமாக நல்லவர்கள், இன்பம் நிறைந்த சொர்க்கத்தில் இருப்பார்கள்

[14] நிச்சயமாகத் தீயவர்கள் நரகத்தில்தான் இருப்பார்கள்

[15] கூலி கொடுக்கும் நாளில் அதையே அவர்கள் அடைவார்கள்

[16] அவர்கள் அதிலிருந்து மறைந்து (தப்பி ஓடி) விட முடியாது

[17] (நபியே!) கூலி கொடுக்கும் அந்நாள் என்னவென்று நீர் அறிவீரா

[18] பிறகு, கூலி கொடுக்கும் அந்நாள் என்னவென்று உமக்கு எவரேனும் அறிவித்தனரா

[19] அந்நாளில் ஓர் ஆத்மா, மற்றோர் ஆத்மாவுக்கு ஒரு பயனுமளிக்க சக்தி பெறாது. அதிகாரமும் அந்நாளில் அல்லாஹ்வுக்கே இருக்கும்

அல்முதஃப்ஃபிஃபீன்

Surah 83

[1] அளவில் மோசடி செய்பவர்களுக்குக் கேடுதான்

[2] அவர்கள் மனிதர்களிடம் அளந்து வாங்கினால், நிறைய அளந்து கொள்கின்றனர்

[3] மற்றவர்களுக்கு அவர்கள் அளந்து கொடுத்தாலும் அல்லது நிறுத்துக் கொடுத்தாலும் குறைத்து (அவர்களை நஷ்டப்படுத்தி) விடுகின்றனர்

[4] மகத்தான ஒரு நாளில், நிச்சயமாக அவர்கள் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவார்கள் என்பதை அவர்கள் நம்பவில்லையா

[5] மகத்தான ஒரு நாளில், நிச்சயமாக அவர்கள் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவார்கள் என்பதை அவர்கள் நம்பவில்லையா

[6] அந்நாளில், மனிதர்கள் அனைவருமே உலகத்தாரின் இறைவன் முன் (விசாரணைக்காக) நின்று கொண்டிருப்பார்கள்

[7] நிச்சயமாக பாவிகளின் பதிவேடு (நரகத்தின்) சிறைக்கூடத்தில் இருக்கும்

[8] (நபியே!) அச்சிறைக்கூடத்தின் பதிவேட்டை நீர் அறிவீரா

[9] அது ஒரு பதிவுப்புத்தகம் (தண்டிக்கப்பட வேண்டியவர்களின் பெயர்கள் எல்லாம்) அதில் பதியப்பட்டிருக்கும்

[10] (இதைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்

[11] அவர்கள் (இதை மட்டுமா பொய்யாக்குகின்றனர்?) கூலி கொடுக்கும் நாளையும் பொய்யாக்குகின்றனர்

[12] வரம்புமீறிய பாவியைத் தவிர (மற்றெவரும்) அதைப் பொய்யாக்க மாட்டான்

[13] அவனுக்கு நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், இது முன்னுள்ளோரின் கட்டுக்கதைகள் தான் என்று கூறுகிறான்

[14] நிச்சயமாக அவ்வாறல்ல. அவர்கள் செய்து கொண்டிருந்த தீய செயல்களே அவர்களின் உள்ளங்கள் மீது (துருவாகப்படிந்து) மூடிக் கொண்டன. (ஆதலால்தான், இவ்வாறு கூறுகின்றனர்)

[15] அவ்வாறல்ல. (விசாரணைக்காகக் கொண்டு வரப்படும்) அந்நாளில் நிச்சயமாக இவர்கள் தங்கள் இறைவனை விட்டும் தடுக்கப்பட்டு விடுவார்கள்

[16] பின்னர், நிச்சயமாக இவர்கள் நரகத்தில் நுழைவார்கள்

[17] பின்னர், (இவர்களை நோக்கி) ‘‘நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்தது இதுதான்'' என்று கூறப்படும்

[18] அவ்வாறல்ல! நிச்சயமாக நன்மை செய்தவர்களின் பதிவேடு ‘‘இல்லிய்யூன்' என்ற (மேலான) இடத்தில் இருக்கும்

[19] (நபியே!) ‘இல்லிய்யூன்' என்னும் (மேலான) இடத்தில் இருக்கும் பதிவேடு என்னவென்று நீர் அறிவீரா

[20] அது ஒரு பதிவுப் புத்தகம். அதில் (நல்லவர்களின் பெயர்களெல்லாம்) பதியப்பட்டிருக்கும்

[21] ‘முகர்ரப்' (இறைநெருக்கத்திற்குரிய) வானவர்கள் அதை(க் காத்து)ப் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்

[22] ஆகவே, நிச்சயமாக நல்லவர்கள் (அந்நாளில்) இன்பம் நிறைந்த சொர்க்கத்தில்

[23] உயர்ந்த கட்டில்கள் மீது (சாய்ந்த வண்ணம் சொர்க்கத்தின் காட்சிகளைப்) பார்த்துக் கொண்டிருப்பார்கள்

[24] அவர்கள் முகங்களில் அவர்களின் சுகவாசத்தின் செழிப்பை (நபியே!) நீர் அறிந்து கொள்வீர்

[25] முத்திரையிடப்பட்டிருக்கும் கலப்பற்ற திராட்சை ரசம் அவர்களுக்குப் புகட்டப்படும்

[26] அது கஸ்தூரியால் முத்திரையிடப்பட்டிருக்கும். (பானத்தை) ஆசை கொள்ள விரும்புவோர் அதையே ஆசை கொள்ளவும்

[27] அதில் ‘தஸ்னீம்' என்ற (வடிகட்டிய) பானமும் கலந்திருக்கும்

[28] (தஸ்னீம் என்பது அல்லாஹ்வுக்குச்) சமீபமானவர்கள் அருந்துவதற்கென ஏற்பட்ட ஒரு (சிறப்பான) சுனையின் நீராகும்

[29] நிச்சயமாக குற்றவாளிகளோ (இன்று) நம்பிக்கை கொண்டவர்களைக் கண்டு (ஏளனமாகச்) சிரிக்கின்றனர்

[30] அவர்களின் சமீபமாகச் சென்றால், (பரிகாசமாகத் தங்களுக்குள்) ஒருவருக்கொருவர் கண் ஜாடையும் காட்டிக்கொள்கின்றனர்

[31] (அவர்களை விட்டும் விலகித்) தங்கள் குடும்பத்தார்களிடம் சென்று விட்டபோதிலும், இவர்களுடைய விஷயங்களையே (பரிகாசமாகப் பேசி) மகிழ்ச்சியடைகின்றனர்

[32] (வழியில்) இவர்களைக் கண்டால் (இவர்களைச் சுட்டிக் காண்பித்து) ‘‘நிச்சயமாக இவர்கள் வழிகெட்டுப் போனார்கள்'' என்றும் கூறுகின்றனர்

[33] (நம்பிக்கையாளர்களைப் பற்றி எதற்காக இவர்கள் இவ்வளவு கவலைப்படுகின்றனர்?) இவர்கள் அவர்கள் மீது பாதுகாப்பாளர்களாக அனுப்பப்படவில்லையே

[34] எனினும், (மறுமை நாளாகிய) இன்றைய தினம் நம்பிக்கை கொண்டவர்கள் அந்நிராகரிப்பவர்களைக் கண்டு சிரிக்கின்றனர்

[35] (சொர்க்கத்திலுள்ள சிறந்த) இருக்கைகள் மீது (சாய்ந்த வண்ணம்) இருந்து கொண்டு, இந்தப் பாவிகள் படும் வேதனையைப்) பார்த்துக்கொண்டு

[36] (மறுமையை) நிராகரித்த இவர்களுக்கு, இவர்களுடைய செயலுக்குத்தக்க கூலி கொடுக்கப்பட்டதா? (என்றும் கேட்பார்கள்)

அல்இன்ஷிகாக்

Surah 84

[1] (உலகம் அழியும் சமயத்தில்) வானம் பிளந்து விடும்போது

[2] அது தன் இறைவனின் கட்டளைக்கு செவிசாய்த்துவிடும் போது. (அவ்வாறே) அதற்கு விதிக்கப்பட்டுள்ளது

[3] மேலும், பூமி விரிக்கப்படும்போது

[4] மேலும், அது தன்னிடம் உள்ளவற்றையெல்லாம் எறிந்து வெறுமனே ஆகிவிடும்போது

[5] மேலும், அது தன் இறைவனின் கட்டளைக்கு செவிசாய்த்து விடும் (போது மனிதன் தன் செயலுக்குரிய கூலியைப் பெறுவான்). (அவ்வாறே) அதற்கு விதிக்கப்பட்டுள்ளது

[6] மனிதனே! நீ உன் இறைவனிடம் செல்லும் வரை (நன்மையோ தீமையோ பல வேலைகளில் ஈடுபட்டு) சிரமத்துடன் முயற்சி செய்துகொண்டே இருக்கிறாய். (பின்னர், மறுமையில்) அவனை நீ சந்திக்கிறாய்

[7] ஆகவே, (அந்நாளில்) எவருடைய வலது கையில் அவருடைய செயலேடு கொடுக்கப்படுகிறதோ

[8] அவர் மிக்க இலகுவாகக் கேள்வி கணக்குக் கேட்கப்படுவார்

[9] அவர் மகிழ்ச்சியடைந்தவராக(ச் சொர்க்கத்திலுள்ள) தன் குடும்பத்தார்களிடம் திரும்புவார்

[10] எவனுடைய செயலேடு அவனுடைய முதுகுப்புறம் கொடுக்கப்பட்டதோ

[11] அவன், (தனக்குக்) கேடுதான் என்று (அப்படியே) சப்தமிடுவான்

[12] நரகத்தில் நுழைவான்

[13] ஏனென்றால், நிச்சயமாக அவன் (இம்மையிலிருந்த காலமெல்லாம் மறுமையை மறந்து) தன் குடும்பத்தார்களுடன் மிக்க மகிழ்ச்சியாக இருந்தான்

[14] மெய்யாகவே அவன் (தன் இறைவனிடம்) மீளவே மாட்டோம் என்றும் எண்ணிக் கொண்டிருந்தான்

[15] அது சரியன்று! நிச்சயமாக அவனுடைய இறைவன் அவனை உற்று நோக்குபவனாகவே இருந்தான்

[16] (மாலை நேர) செம்மேகத்தின் மீது சத்தியமாக

[17] இரவின் மீதும், அது மறைத்துக் கொண்டிருப்பவற்றின் மீதும் (சத்தியமாக)

[18] பூரணச் சந்திரன் மீது சத்தியமாக

[19] (ஒரு நிலைமையிலிருந்து மற்றொரு நிலைமைக்கு) நிச்சயமாக நீங்கள் படிப்படியாகக் கடக்க வேண்டியதிருக்கிறது

[20] ஆகவே, (இதை மறுத்துக் கொண்டிருக்கும்) அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் இதை நம்பிக்கை கொள்வதில்லை

[21] அவர்களுக்கு இந்த குர்ஆன் ஓதிக் காண்பிக்கப்பட்ட போதிலும், (இறைவனை) அவர்கள் சிரம் பணிந்து வணங்குவது இல்லை

[22] அது மட்டுமா? இந்நிராகரிப்பவர்கள் (இந்த குர்ஆனையே) பொய்யாக்குகின்றனர்

[23] எனினும், இவர்கள் (தங்கள் மனதில்) சேகரித்து (மறைத்து) வைத்திருப்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தே இருக்கிறான்

[24] ஆகவே, (நபியே!) துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு அவர்களுக்கு நீர் நற்செய்தி கூறுவீராக

[25] எனினும், இவர்களில் எவர்கள் (தங்கள் பாவத்திலிருந்து திருந்தி) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு (என்றென்றுமே) முடிவுறாத (நற்)கூலியுண்டு

அல்புரூஜ்

Surah 85

[1] கோள்கள் நிறைந்த வானத்தின் மீது சத்தியமாக

[2] வாக்களிக்கப்பட்ட (மறுமை) நாள் மீது சத்தியமாக

[3] சாட்சியின் மீதும், சாட்சி சொல்ல வேண்டிய நாளின் மீதும் சத்தியமாக

[4] அகழுடையவர்கள் அழிக்கப்பட்டார்கள். (அவ்வாறே இம்மக்காவாசிகளும் அழிக்கப்படுவார்கள்)

[5] அது, விறகுகள் போட்டெரித்த நெருப்பு (அகழ்)

[6] அதன் முன் அவர்கள் உட்கார்ந்து கொண்டிருந்த சமயத்தில்

[7] நம்பிக்கையாளர்களை (நெருப்புக் கிடங்கில் போட்டு) நோவினை செய்வதை அவர்கள் (வேடிக்கையாகப்) பார்த்துக் கொண்டுமிருந்தார்கள்

[8] (நம்பிக்கை கொண்ட) அவர்களில் ஒரு குற்றத்தையும் அவர்கள் காணவில்லை. எனினும், மிக்க புகழுடையவனும், (அனைவரையும்) மிகைத்தவனுமாகிய அல்லாஹ்வை அவர்கள் நம்பிக்கை கொண்டதையே அவர்கள் குற்றமாகக் கண்டனர்

[9] வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்குரியதே! (அவனை நம்பிக்கை கொண்டதற்காகவே அந்த பாவிகள் அவர்களை நெருப்பில் எறிந்தனர்.) அல்லாஹ்வோ, (இவர்கள் செய்த) அனைத்திற்கும் சாட்சி ஆவான்

[10] ஆகவே, எவர்கள் நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் இவ்வாறு துன்புறுத்தி பின்னர், அதைப்பற்றி அவர்கள் (கைசேதப்பட்டு) மன்னிப்புக் கோரவும் இல்லையோ, அவர்களுக்கு நிச்சயமாக நரக வேதனை உண்டு. மேலும், (அவர்கள் நம்பிக்கையாளர்களை நெருப்பிட்டவாறு) அவர்களுக்கும் பொசுக்குகின்ற வேதனையுண்டு

[11] எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ நிச்சயமாக அவர்களுக்கு தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சொர்க்கங்களுண்டு. இதுதான் மாபெரும் வெற்றி

[12] (நபியே! இந்த விஷமிகளைப் பற்றி நீர் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால்) நிச்சயமாக உமது இறைவனின் பிடி மிக்க கடுமையானது. (அதிலிருந்து அவர்கள் தப்பவே முடியாது)

[13] நிச்சயமாக அவன்தான் (அவர்களை) உற்பத்தி செய்கிறான். (அவர்கள் மரணித்த பின்னரும்) அவர்களை மீளவைப்பான்

[14] அவன்தான் (நம்பிக்கை கொண்டவர்களை) மிக்க மன்னிப்பவனும், மிக நேசிப்பவனும் ஆவான்

[15] (அவன்தான்) அர்ஷுடையவன், மகா கீர்த்தியுடையவன்

[16] தான் விரும்பியதையெல்லாம் செய்யக் கூடியவன்

[17] (நபியே!) அந்தப் படைகளின் செய்தி உமக்கு எட்டியதா? (யாருடைய படைகள்)

[18] ஃபிர்அவ்ன், ஸமூதுடைய (படைகள்)

[19] எனினும், இந்நிராகரிப்பவர்கள் (குர்ஆனைப்) பொய்யாக்குவதிலேயே (முனைந்து) கிடக்கின்றனர்

[20] அல்லாஹ்வோ, அவர்களை முற்றிலும் சூழ்ந்து கொண்டிருக்கிறான்

[21] (இது கவியல்ல.) மாறாக, இது கீர்த்திமிக்க குர்ஆன்

[22] (இது) லவ்ஹுல் மஹ்பூளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. (அதை இவர்கள் நிராகரிப்பதனால் ஆகக்கூடியதென்ன)

அத்தாரிக்

Surah 86

[1] வானத்தின் மீதும், (இரவில்) உதயமாகக்கூடியதின் மீதும் சத்தியமாக

[2] (நபியே!) உதயமாகக்கூடியது என்னவென்று நீர் அறிவீரா

[3] (இதுதான்) இரவெல்லாம் சுடரிட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கின்ற நட்சத்திரம்

[4] ஒவ்வொரு மனிதனிடமும் (நம்மால் ஏற்படுத்தப்பட்ட) கண்காணிக்கக் கூடிய ஒரு (வான)வர் இல்லாமலில்லை

[5] ஆகவே, மனிதன், தான் எதனால் படைக்கப்பட்டிருக்கிறான் என்பதை கவனிக்கவும்

[6] குதித்து வெளிப்படும் ஒரு துளித் தண்ணீரைக் கொண்டே படைக்கப்பட்டான்

[7] அது, முதுகந்தண்டுக்கும் நெஞ்சுக்கும் மத்தியிலிருந்து வெளிப்படுகிறது

[8] (இவ்வாறு படைக்கின்ற) அவன் (மனிதன் இறந்தபின் உயிர் கொடுத்து) அவனை மீளவைக்கவும் நிச்சயமாக ஆற்றலுடையவன்ன

[9] என்றைய தினம் எல்லா மர்மங்களும் வெளிப்பட்டுவிடுமோ

[10] (அன்றைய தினம்) மனிதனுக்கு ஒரு சக்தியும் இருக்காது. உதவி செய்பவனும் இருக்க மாட்டான்

[11] மழை பொழியும் வானத்தின் மீது சத்தியமாக

[12] (புற்பூண்டுகள் முளைக்க) வெடிக்கும் பூமியின் மீதும் சத்தியமாக

[13] மெய்யாகவே இது (நன்மை தீமைகளைப்) பிரித்தறிவிக்கக்கூடிய சொல்லாகும்

[14] இது வீண் பரிகாசமா(ன வார்த்தைய)ல்ல

[15] (நபியே!) நிச்சயமாக அவர்கள் (உமக்கு விரோதமாக) ஒரு சூழ்ச்சி செய்கிறார்கள்

[16] நானும் (அவர்களுக்கு விரோதமாக) ஒரு சூழ்ச்சி செய்வேன்

[17] ஆகவே, இந்நிராகரிப்பவர்களுக்கு (அது வரை) நீர் அவகாசமளிப்பீராக. (அதிகமல்ல;) ஒரு சொற்ப அவகாசம் அவர்களுக்கு அளிப்பீராக

அல்அஃலா

Surah 87

[1] (நபியே!) மிக மேலான உமது இறைவனின் திருப்பெயரை நீர் புகழ்ந்து துதி செய்வீராக

[2] அவனே (எல்லா படைப்புகளையும்) படைத்து, (அவற்றை) ஒழுங்குபடுத்தியவன்

[3] அவனே (அவற்றுக்கு வேண்டிய சகலவற்றையும்) நிர்ணயம் செய்து, (அவற்றை அடையக் கூடிய) வழிகளையும் (அவற்றுக்கு) அறிவித்தான்

[4] அவனே (கால்நடைகளுக்கு) மேய்ச்சல் பொருள்களையும் வெளிப்படுத்துகிறான்

[5] பின்னர் அவற்றை உலர்ந்த சருகுகளாக ஆக்குகிறான்

[6] (நபியே! இந்த குர்ஆனை) நாம் உமக்கு ஓதக் கற்பிப்போம். அல்லாஹ் நாடினாலே தவிர, (அதில் எதையும்) நீர் மறக்க மாட்டீர். நிச்சயமாக அவன் மறைந்திருப்பவற்றையும் வெளிப்படையானதையும் நன்கறிகிறான்

[7] (நபியே! இந்த குர்ஆனை) நாம் உமக்கு ஓதக் கற்பிப்போம். அல்லாஹ் நாடினாலே தவிர, (அதில் எதையும்) நீர் மறக்க மாட்டீர். நிச்சயமாக அவன் மறைந்திருப்பவற்றையும் வெளிப்படையானதையும் நன்கறிகிறான்

[8] சொர்க்கப் பாதையை நாம் உமக்கு எளிதாக்கித் தருவோம்

[9] ஆகவே, நல்லுபதேசம் (மக்களுக்குப்) பயனளிக்கின்ற வரை நீர் உபதேசித்துக் கொண்டே வருவீராக

[10] நிச்சயமாக எவர் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறாரோ அவர், (இதைக் கொண்டு) நல்லறிவை அடைவார்

[11] துர்ப்பாக்கியமுடையவனோ, இதிலிருந்து விலகிக்கொள்வான்

[12] (எனினும்,) அவன் (நரகத்தின்) பெரிய நெருப்பை அடைவான்

[13] பின்னர், அதில் அவன் மரணிக்கவுமாட்டான்; (சுகமாக) வாழவும் மாட்டான்

[14] எவர் (பாவங்களை விட்டு விலகிப்) பரிசுத்தவானாக ஆனாரோ அவர், நிச்சயமாக வெற்றி பெற்றார்

[15] அவன் தன் இறைவனின் திருப்பெயரை நினைவு செய்து கொண்டும், தொழுது கொண்டுமிருப்பார்

[16] எனினும், நீங்களோ (மறுமையை விட்டுவிட்டு) இவ்வுலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்

[17] மறுமையின் வாழ்க்கைதான் மிக்க மேலானதும் நிலையானதுமாகும்

[18] நிச்சயமாக இது முன்னுள்ள வேதங்களிலும்

[19] இப்ராஹீம், மூஸாவுடைய வேதங்களிலும் இருக்கிறது

அல்காஷியா

Surah 88

[1] (நபியே! அனைவரையும்) சூழ்ந்து கொள்ளக்கூடிய (மறுமையைப் பற்றிய) செய்தி உமக்குக் கிடைத்ததா

[2] அந்நாளில், சில முகங்கள் இழிவடைந்து இருக்கும்

[3] அவை (தவறான வழியில்) அமல் செய்து (அதிலேயே) நிலைத்திருந்தவை

[4] கொழுந்துவிட்டு எரியும் நெருப்பிற்கே அவை செல்லும்

[5] (அவை) கொதிக்கின்ற ஓர் ஊற்றிலிருந்து நீர் புகட்டப்படும்

[6] அதில் அவர்களுக்கு(க் கருவேல) முட்களைத் தவிர, வேறொன்றும் உணவாகக் கிடைக்காது

[7] (அது அவர்களுடைய உடலைக்) கொழுக்கவும் வைக்காது; (அவர்களுடைய) பசியையும் தீர்த்து வைக்காது

[8] எனினும், அந்நாளில் வேறு சில முகங்களோ, மிக்க செழிப்பாக இருக்கும்

[9] (இம்மையில்) தாங்கள் செய்த (நல்ல) காரியங்களைப் பற்றித் திருப்தியடையும்

[10] (அவை) மேலான சொர்க்கத்தில் இருக்கும்

[11] அதில் வீண் வார்த்தையை அவை செவியுறாது

[12] அதில் (இவர்கள் அருந்துவதற்கு) தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கின்ற (தெளிவான) ஒரு சுனையுண்டு

[13] அதில் (இவர்கள் அமருவதற்கு) உயர்ந்த இருக்கைகளுண்டு

[14] (பல வகை இன்பமான பானங்கள் நிறைந்த) கெண்டிகள் (இவர்கள் முன்) வைக்கப்பட்டிருக்கும்

[15] (இவர்கள் சாய்ந்து கொள்வதற்காகத்) திண்டு தலையணைகள் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும்

[16] உயர்ந்த விரிப்புகள் இவர்களின் கீழ் விரிக்கப்பட்டிருக்கும். (இத்தகைய சுகபோகத்தில் நல்லடியார்கள் இருப்பார்கள்)

[17] (நபியே! இந்நிராகரிப்பவர்கள் தங்களிடமுள்ள) ஒட்டகத்தையேனும் அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது

[18] (அவர்களுக்கு மேல் உள்ள) வானத்தையும் (அவர்கள் கவனிக்க வேண்டாமா?) அது எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது

[19] (அவர்கள் கண்முன் தோன்றும்) மலைகளையும் அவர்கள் (கவனிக்க வேண்டாமா?) அவை எவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளன

[20] (அவர்கள் வசிக்கும்) பூமியையும் (அவர்கள் கவனிக்க வேண்டாமா?) அது எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது

[21] (ஆகவே, நபியே!) இவற்றை அவர்களுக்கு எடுத்துக் காண்பித்து, இவற்றைப் படைத்தவனின் அருள்களை, அவர்களுக்கு நீர் கூறி) நல்லுபதேசம் செய்வீராக! (இவற்றைக்கொண்டு அவர்கள் நல்லுணர்ச்சி பெறாவிடில் அதற்காக நீர் கவலைப்படாதீர். ஏனென்றால்,) நீர் அவர்களுக்கு நல்லுபதேசம் செய்பவர்தான்

[22] (அவ்வாறே நடக்கும்படி) அவர்களை நீர் நிர்ப்பந்திக்கக்கூடியவர் அல்ல

[23] எனினும், எவர்கள் புறக்கணித்து நிராகரிக்கிறார்களோ

[24] அவர்களை அல்லாஹ் பெரும் வேதனை செய்வான்

[25] நிச்சயமாக அவர்கள் அனைவரும் நம்மிடம்தான் வர வேண்டும்

[26] நிச்சயமாக அவர்களைக் கேள்வி கணக்குக் கேட்பதும் நம் மீதுதான் கடமையாகும்

அல்ஃபஜ்ர்

Surah 89

[1] விடியற்காலையின் மீதும், சத்தியமாக! பத்து இரவுகளின் மீதும், சத்தியமாக

[2] விடியற்காலையின் மீதும், சத்தியமாக! பத்து இரவுகளின் மீதும், சத்தியமாக

[3] ஒற்றை இரட்டை(த் தொழுகை)யின் மீதும், சத்தியமாக

[4] நிகழ்கின்ற இரவின் மீது சத்தியமாக! (கேள்வி கணக்கு கேட்கும் நாள் வந்தே தீரும்)

[5] இதில் அறிவுடையவர்களுக்கு (நம்பிக்கையளிக்கக்கூடிய) பெரியதொரு சத்தியம் இருக்கிறது

[6] (நபியே! உயர்ந்த) தூண்களைப்போன்ற இரம் என்னும் ஆது மக்களை உமது இறைவன் எப்படி (வேதனை) செய்தான் என்பதை நீர் கவனிக்கவில்லையா

[7] (நபியே! உயர்ந்த) தூண்களைப்போன்ற இரம் என்னும் ஆது மக்களை உமது இறைவன் எப்படி (வேதனை) செய்தான் என்பதை நீர் கவனிக்கவில்லையா

[8] அவர்களைப் போன்று, (பலசாலிகள் உலகத்திலுள்ள) நகரங்களில் (எங்குமே) படைக்கப்படவில்லை

[9] இன்னும், ஸமூத் என்னும் மக்களை (உமது இறைவன் எவ்வாறு வேதனை செய்தான் என்பதை நீர் கவனிக்கவில்லையா?) இவர்கள் பள்ளத்தாக்கில் மலைகளைக் குடைந்து, (அதில் வசித்துக்) கொண்டிருந்தார்கள்

[10] இன்னும், (இராணுவங்களையுடைய) ஆணிக்கார ஃபிர்அவ்னை (உமது இறைவன் எவ்வாறு வேதனை செய்தான் என்பதை நீர் கவனிக்க வில்லையா)

[11] இவர்களெல்லாம் பூமியில் வரம்பு மீறியே நடந்தார்கள்

[12] (பூமியில்) அவர்கள் மிக்க அதிகமாகவே விஷமம் செய்து கொண்டிருந்தனர்

[13] ஆதலால், உங்கள் இறைவன் அவர்கள் மீது வேதனையின் சாட்டையைக்கொண்டு (அடி மேல் அடி) அடித்தான்

[14] நிச்சயமாக உமது இறைவன் (இந்தப் பாவிகளின் வரவை) எதிர்பார்த்த வண்ணமாக இருக்கிறான்

[15] ஆகவே, இறைவன் மனிதனைச் சோதித்து அவனுக்கு அருள்புரிந்து அவனை மேன்மையாக்கினால், என் இறைவன் என்னைக் கண்ணியப்படுத்தினான் என்று (பெருமையாகக்) கூறுகிறான்

[16] ஆயினும், (இறைவன்) அவனைச் சோதித்து அவனுடைய பொருளை அவனுக்குக் குறைத்துவிட்டால், எனது இறைவன் என்னை இழிவுபடுத்தி விட்டான் என்று (குறை) கூறுகிறான்

[17] (விஷயம்) அவ்வாறல்ல. நீங்கள் அநாதைகளைக் கண்ணியப்படுத்துவதில்லை

[18] ஏழைகளுக்கு உணவு(ம் வாழ்வாதாரமும் நீங்கள் அளிக்காததுடன் மற்ற எவரையும்) அளிக்கும்படி தூண்டுவதில்லை

[19] பிறருடைய சொத்துக்களை உங்கள் சொத்துடன் சேர்த்து புசித்துவிடுகிறீர்கள்

[20] மிக்க அளவு கடந்து பொருளை நேசிக்கிறீர்கள்

[21] அவ்வாறல்ல! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் சமயத்தில்

[22] உமது இறைவனும் வருவான். வானவர்களும் அணிஅணியாக வருவார்கள்

[23] அந்நாளில் (பாவிகளுக்காக) நரகம் கொண்டுவரப்படும். அந்நாளில் மனிதனுக்கு நல்லறிவு உதயமாகும். எனினும், அப்போது (உதயமாகின்ற) அறிவால் அவனுக்கு என்ன பயன்

[24] ‘‘என் வாழ்க்கையில் நான் (ஒரு) நன்மையைச் செய்து வைத்திருக்க வேண்டுமே!'' என்று புலம்புவான்

[25] அந்நாளில் (பாவிகளை) அவன் செய்யும் வேதனையைப் போல் மற்றெவனும் (எவரையும்) செய்யமாட்டான். (அவ்வளவு கடினமாக அவன் வேதனை செய்வான்)

[26] (பாவிகளை) அவன் கட்டுவதைப்போல் பலமாக மற்ற எவனுமே கட்டமாட்டான். (அவ்வளவு பலமாக அவன் கட்டுவான்)

[27] (எனினும், அந்நாளில் நல்ல மனிதனை நோக்கி) “நிம்மதிபெற்ற ஆத்மாவே

[28] நீ (இறைவனைக் கொண்டு) திருப்தியடைந்ததாக! (இறைவனால் நீ) திருப்தி கொள்ளப்பட்டதாக உன் இறைவன் பக்கம் திரும்பச் செல்!'' (என்றும்)

[29] ‘‘நீ என் நல்லடியார்களில் சேர்ந்து

[30] என் சொர்க்கத்திலும் நீ நுழைந்துவிடு'' (என்றும் கூறுவான்)

அல்பலத்

Surah 90

[1] (நபியே! அபயமளிக்கும்) இந்நகரத்தின் மீது சத்தியம் செய்கிறேன்

[2] அதிலும் நீர் இந்நகரத்தில் தங்கக்கூடிய சமயத்தில்

[3] (மனிதர்களின்) தந்தை மீதும், அவர் பெற்றெடுத்த சந்ததிகள் மீதும் சத்தியமாக

[4] மெய்யாகவே நாம் மனிதனை சிரமத்தில் மூழ்கியவனாகவே படைத்திருக்கிறோம்

[5] (அவ்வாறிருக்க,) அவன் தன்னை அடக்க எவராலும் முடியாது என்று எண்ணிக் கொண்டானா

[6] ‘‘ஏராளமான பொருளை நான் (சம்பாதித்துச் செலவு செய்து) அழித்துவிட்டேன்'' என்று, அவன் (கர்வம் கொண்டு பெருமையாகக்) கூறுகிறான்

[7] அவ்வளவு பொருளை ஒருவருமே பார்த்திருக்கவில்லை என்று அவன் எண்ணிக் கொண்டானோ

[8] (பார்க்கக்கூடிய) இரு கண்களையும், நாம் அவனுக்குக் கொடுக்கவில்லையா? (அவ்வாறிருந்தும் உண்மையை அவன் கண்டுகொள்ளவில்லை)

[9] (பேசக்கூடிய) ஒரு நாவையும், இரு உதடுகளையும் (நாம் அவனுக்குக் கொடுக்கவில்லையா? அதைத் தானாகவே அவன் அடைந்துவிட்டானா)

[10] (நன்மை தீமையின்) இரு வழிகளையும் நாம் அவனுக்குப் பிரித்தறிவித்தோம்

[11] எனினும், (இதுவரை) அவன் ‘அகபா'வை (கணவாயை)க் கடக்கவில்லை

[12] (நபியே!) ‘அகபா' என்னவென்று நீர் அறிவீரா

[13] அதுதான் ஓர் அடிமையை விடுதலை செய்வது

[14] அல்லது, உறவினர்களில் உள்ள ஓர் அநாதைக்கோ அல்லது கடினமான வறுமையுடைய (மண்ணைக் கவ்விக் கிடக்கும்) ஓர் ஏழைக்கோ பசியுடைய (பஞ்ச) நாளில் உணவு அளிப்பதாகும்

[15] அல்லது, உறவினர்களில் உள்ள ஓர் அநாதைக்கோ அல்லது கடினமான வறுமையுடைய (மண்ணைக் கவ்விக் கிடக்கும்) ஓர் ஏழைக்கோ பசியுடைய (பஞ்ச) நாளில் உணவு அளிப்பதாகும்

[16] அல்லது, உறவினர்களில் உள்ள ஓர் அநாதைக்கோ அல்லது கடினமான வறுமையுடைய (மண்ணைக் கவ்விக் கிடக்கும்) ஓர் ஏழைக்கோ பசியுடைய (பஞ்ச) நாளில் உணவு அளிப்பதாகும்

[17] பிறகு, எவர்கள் நம்பிக்கை கொண்டும் ஒருவருக்கொருவர் பொறுமையைக் கடைபிடிக்குமாறு நல்லுபதேசம் செய்துகொண்டும், கருணை காட்டவேண்டும் என்று ஒருவருக்கொருவர் நல்லுபதேசம் செய்துகொண்டும் இருக்கிறார்களோ அவர்களிலும் அவர் சேர்ந்துவிடுவார்

[18] இவர்கள்தான் வலது பக்கத்தில் இருப்பவர்கள்

[19] எவர்கள் நம் வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்கள்தான் இடப்பக்கத்தில் இருப்பவர்கள்

[20] அவர்களை நரகத்தில் போட்டு (எல்லா வழிகளும்) மூடப்பட்டுவிடும்

அஷ்ஷைஸ்

Surah 91

[1] சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக

[2] (அது அஸ்தமித்ததற்குப்) பின் உதயமாகும் சந்திரன் மீதும்

[3] (சூரியன்) பிரகாசிக்கும் பகலின் மீதும்

[4] (அதை) மறைத்துக்கொள்ளும் இரவின் மீதும்

[5] வானத்தின் மீதும், அதை அமைத்தவன் மீதும்

[6] பூமியின் மீதும், அதை விரித்தவன் மீதும்

[7] ஆத்மாவின் மீதும், அதை (மனிதனாக) உருவாக்கியவன் மீதும்

[8] அதன் நன்மை தீமைகளை அதற்கறிவித்தவன் மீதும் சத்தியமாக

[9] எவர் (பாவங்களை விட்டும் தன் ஆத்மாவைப்) பரிசுத்தமாக்கிக் கொண்டாரோ அவர், நிச்சயமாக வெற்றி அடைந்துவிட்டார்

[10] எவன் அதைப் (பாவத்தில்) புதைத்துவிட்டானோ அவன், நிச்சயமாக நஷ்டமடைந்து விட்டான்

[11] ஸமூது கூட்டத்தினர் (ஸாலிஹ் நபியைத்) தங்கள் அநியாயத்தால் பொய்யாக்கினார்கள்

[12] அவர்களிலுள்ள ஒரு துர்பாக்கியன் முன் வந்தபொழுது

[13] அல்லாஹ்வின் தூதர் (ஆகிய சாலிஹ் நபி) தன் மக்களை நோக்கி ‘‘இது அல்லாஹ்வுடைய ஒரு பெண் ஒட்டகம் (இதைத் துன்புறுத்தாமலும்) இது தண்ணீர் அருந்த (தடை செய்யாமலும்) விட்டு விடுங்கள்'' என்று கூறினார்

[14] எனினும், அவர்கள் அவரைப் பொய்யாக்கி, அதன் கால் நரம்பைத் தறித்துவிட்டனர். ஆகவே, அவர்களுடைய இறைவன் அவர்களின் இந்தப் பாவத்தின் காரணமாக, அவர்களின் மீது வேதனையை இறக்கி, அவர்கள் அனைவரையும் (தரை) மட்டமாக்கி விட்டான்

[15] இவர்களின் முடிவைப் பற்றி(த் தன்னைப் பழிவாங்கி விடுவார்களென்று இறைவன்) பயப்படவில்லை

அல்லைல்

Surah 92

[1] (அனைத்தையும்) மூடிக்கொள்ளும் (இருண்ட) இரவின் மீது சத்தியமாக

[2] பிரகாசமுள்ள பகலின் மீது சத்தியமாக

[3] ஆணையும் பெண்ணையும் படைத்தவன் மீது சத்தியமாக

[4] (மனிதர்களே!) நிச்சயமாக உங்கள் முயற்சிகள் பலவாறாக இருக்கின்றன

[5] ஆகவே, (உங்களில்) எவர் தானம் செய்து (அல்லாஹ்வுக்குப்) பயந்து

[6] (இந்த மார்க்கத்திலுள்ள) நல்ல காரியங்களையும் (நல்லதென்றே) உண்மையாக்கி வைக்கிறாரோ

[7] அவருக்கு சொர்க்கப் பாதையை நாம் எளிதாக்கித் தருவோம்

[8] எவன் கஞ்சத்தனம் செய்து (அல்லாஹ்வையும்) பொருட்படுத்தாது

[9] (இம்மார்க்கத்திலுள்ள) நல்ல காரியங்களையும் பொய்யாக்கி வைக்கிறானோ

[10] அவனுக்குக் (கஷ்டத்திற்குரிய) நரகப் பாதையைத்தான் நாம் எளிதாக்கி வைப்போம்

[11] அவன் (நரகத்தில்) விழுந்துவிட்டால், அவனுடைய பொருள் அவனுக்கு (ஒரு) பயனுமளிக்காது

[12] நிச்சயமாக நேர்வழியை அறிவிப்பது நம்மீதுதான் கடமையாகும்

[13] நிச்சயமாக இம்மையும், மறுமையும் நமக்கே சொந்தமானவை

[14] (மக்காவாசிகளே!) கொழுந்து விட்டெரியும் நெருப்பைப் பற்றி நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறேன்

[15] மிக்க துர்பாக்கியம் உடையவனைத் தவிர, (மற்றெவனும்) அதற்குள் செல்லமாட்டான்

[16] அவன் (நம் வசனங்களைப்) பொய்யாக்கிப் புறக்கணித்துவிடுவான்

[17] இறையச்சமுடையவர்தான் அதிலிருந்து தப்பித்துக்கொள்வார்

[18] அவர் (பாவத்திலிருந்து தன்னைப்) பரிசுத்தமாக்கிக் கொள்வதற்காக தன் பொருளை(த் தானமாக)க் கொடுப்பார்

[19] தான் பதில் நன்மை செய்யக்கூடியவாறு எவருடைய நன்றியும் தன் மீது இருக்காது

[20] இருப்பினும், மிக்க மேலான தன் இறைவனின் திருமுகத்தை விரும்பியே தவிர (வேறு எதற்காகவும் தானம் செய்ய மாட்டார்)

[21] (இறைவன் அவருக்கு அளிக்கும் கொடையைப் பற்றிப்) பின்னர் அவரும் திருப்தியடைவார்

அத்துஹா

Surah 93

[1] காலைப்பொழுதின் மீது சத்தியமாக

[2] மறைத்துக் கொள்ளும் (இருண்ட) இரவின் மீது சத்தியமாக

[3] (நபியே!) உமது இறைவன் உம்மைக் கைவிடவுமில்லை; (உம்மை) வெறுக்கவுமில்லை

[4] (ஒவ்வொரு நாளும் உமது) பிந்திய நிலைமை, முந்திய நிலைமையை விட நிச்சயமாக மிக்க மேலானதாக இருக்கிறது

[5] உமது இறைவன் மேலும் (பல உயர் பதவிகளை) உமக்கு அளிப்பான். (அவற்றைக் கொண்டு) நீர் திருப்தியடைவீர்

[6] உம்மை அநாதையாகக் கண்டு, அவன் உமக்குத் தங்கும் இடம் அளி(த்து ஆதரி)க்க வில்லையா

[7] திகைத்துத் தயங்கியவராக உம்மைக் கண்ட அவன் நேரான வழியில் (உம்மைச்) செலுத்தினான்

[8] முடைப்பட்டவராக உம்மைக் கண்ட அவன் (உம்மைத்) தனவந்தராக்கி வைத்தான். (அல்லவா)

[9] ஆகவே, (இவற்றுக்கு நன்றி செலுத்துவதற்காக) நீர் அநாதைகளைக் கடுகடுக்காதீர்

[10] யாசிப்பவரை வெருட்டாதீர்

[11] (உம்மீது புரிந்துள்ள) உமது இறைவனின் அருளைப் (பிறருக்கு) அறிவித்து (அவனுக்கு நன்றி செலுத்தி)க் கொண்டிருப்பீராக

அஷ்ஷர்ஹ்

Surah 94

[1] (நபியே!) உமது உள்ளத்தை நாம் உமக்கு விரிவாக்கவில்லையா

[2] உமது சுமையையும் உம்மைவிட்டும் நாம் இறக்கிவிட்டோம்

[3] அது, உமது இடுப்பையே முறித்துக் கொண்டிருந்தது

[4] உமது கீர்த்தியையும் நாம் உயர்த்தினோம்

[5] நிச்சயமாக சிரமத்துடன் சௌகரியம் இருக்கிறது

[6] மெய்யாகவே சிரமத்துடன் சௌகரியம் இருக்கிறது

[7] ஆகவே, (மார்க்கப் பிரச்சாரத்திலிருந்து) நீர் விடுபட்டதும், (இறைவனை வணங்குவதற்கு) சிரத்தை எடுப்பீராக

[8] மேலும், (துன்பத்திலும் இன்பத்திலும்) உமது இறைவனையே நீர் நோக்கி நிற்பீராக

அத்தீன்

Surah 95

[1] அத்தியின் மீதும்,ஜெய்தூனின் மீதும் சத்தியமாக

[2] ஸினாய் மலையின் மீதும் சத்தியமாக

[3] அபயமளிக்கும் இந்நகரத்தின் மீதும் சத்தியமாக

[4] நிச்சயமாக நாம் மனிதனை மிக்க அழகான அமைப்பில் படைத்திருக்கிறோம்

[5] (அவனுடைய தீய நடத்தையின் காரணமாகப்) பின்னர், அவனைத் தாழ்ந்தவர்களிலும் தாழ்ந்தவனாக நாம் ஆக்கி விடுகிறோம்

[6] ஆயினும், எவர்கள் நம்பிக்கைகொண்டு நற்செயல்களைச் செய்து வருகிறார்களோ அவர்களைத் தவிர. (அவர்கள் மேலான தன்மையில் இருப்பதுடன்) அவர்களுக்கு (என்றென்றுமே) தடைபடாத (நற்)கூலியுண்டு

[7] கூலி கொடுக்கும் நாளைப் பற்றி (நபியே!) இதற்குப் பின்னர், உம்மை எவர்தான் பொய்யாக்க முடியும்

[8] தீர்ப்பளிப்பவர்களில் எல்லாம், அல்லாஹ் மிக மேலான நீதிபதியல்லவா

அல்அலக்

Surah 96

[1] (நபியே! அனைத்தையும்) படைத்த உமது இறைவனின் பெயரால் (அவனது கட்டளைகள் அடங்கிய திரு குர்ஆனை) ஓதுவீராக

[2] அவனே மனிதனை இரத்தக்கட்டியிலிருந்து படைக்கிறான்

[3] (நபியே! மேலும்) நீர் ஓதுவீராக! உமது இறைவன் மாபெரும் கொடையாளி

[4] அவன்தான் எழுதுகோலைக் கொண்டு (எழுதக்) கற்றுக் கொடுத்தான்

[5] (அதன் மூலம்) மனிதன் அறியாதவற்றை எல்லாம் அவனுக்குக் கற்றுக் கொடுக்கிறான்

[6] (இவ்வாறிருந்தும்,) மனிதன் (அவனுக்கு நன்றி செலுத்துவதற்குப் பதிலாகத்) தன்னை (இறைவனின் அருளிலிருந்து) தேவையற்றவன் என்று மெய்யாகவே எண்ணிக்கொண்டு, அவனுக்கு மாறு செய்கிறான்

[7] (இவ்வாறிருந்தும்,) மனிதன் (அவனுக்கு நன்றி செலுத்துவதற்குப் பதிலாகத்) தன்னை (இறைவனின் அருளிலிருந்து) தேவையற்றவன் என்று மெய்யாகவே எண்ணிக்கொண்டு, அவனுக்கு மாறு செய்கிறான்

[8] நிச்சயமாக உமது இறைவன் பக்கம்தான் (அவன்) மீள வேண்டும்

[9] (நபியே!) ஓர் அடியார் தொழுதால், அதைத் தடை செய்கின்றவனை நீர் (கவனித்துப்) பார்த்தீரா

[10] (நபியே!) ஓர் அடியார் தொழுதால், அதைத் தடை செய்கின்றவனை நீர் (கவனித்துப்) பார்த்தீரா

[11] அவர் நேரான பாதையில் இருந்துகொண்டு, இறையச்சத்தை ஏவிக்கொண்டிருந்தும் (அவரை அவன் தடை செய்வதை) நீர் (கவனித்துப்) பார்த்தீரா

[12] அவர் நேரான பாதையில் இருந்துகொண்டு, இறையச்சத்தை ஏவிக்கொண்டிருந்தும் (அவரை அவன் தடை செய்வதை) நீர் (கவனித்துப்) பார்த்தீரா

[13] (அவன், அவரைப்) பொய்யாக்கிப் புறக்கணிப்பதையும் நீர் கவனித்தீரா

[14] (அவன் செய்யும் இந்த துஷ்ட காரியங்களை) நிச்சயமாக அல்லாஹ் பார்க்கிறான் என்பதை அவன் அறிந்து கொள்ளவில்லையா

[15] (இவ்வாறு அவன் செய்வது) தகாது; (இந்த துஷ்ட செயலிலிருந்து) அவன் விலகிக் கொள்ளாவிடில், குற்றம் செய்யும் அப்பொய்யனின் முன் குடுமியைப் பிடித்து நாம் இழுப்போம்

[16] (இவ்வாறு அவன் செய்வது) தகாது; (இந்த துஷ்ட செயலிலிருந்து) அவன் விலகிக் கொள்ளாவிடில், குற்றம் செய்யும் அப்பொய்யனின் முன் குடுமியைப் பிடித்து நாம் இழுப்போம்

[17] ஆகவே, அவன் (தன் உதவிக்காகத்) தன் சபையோரை அழைக்கட்டும்

[18] நாமும் (அவனை நரகத்திற்கு அனுப்ப, நரகத்தின்) காவலாளிகளை அழைப்போம்

[19] (நபியே!) நிச்சயமாக நீர் அவனுக்குக் கீழ்ப்படியாதீர். (உமது இறைவனுக்குச்) சிரம் பணிந்து வணங்கி (அவனை) நெருங்குவீராக

அல்கத்ர்

Surah 97

[1] நிச்சயமாக நாம் இந்த குர்ஆனை (மிக்க கண்ணியமுள்ள) லைலதுல் கத்ர் என்னும் ஓர் இரவில் (முதலாவதாக) இறக்கிவைத்தோம்

[2] (நபியே!) அந்தக் கண்ணியமுள்ள இரவின் மகிமையை நீர் அறிவீரா

[3] கண்ணியமுள்ள அந்த இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும்

[4] அதில் வானவர்களும், ஜிப்ரயீலும், தங்கள் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) எல்லா காரியங்களுடன் இறங்குகின்றனர்

[5] ‘‘ஸலாம்'' (ஈடேற்றம்) உண்டாகுக! (அவ்விரவின் இச்சிறப்பு) விடியற்காலை உதயமாகும் வரை (நீடிக்கிறது)

அல்பய்யினா

Surah 98

[1] இதை நிராகரிக்கும் வேதத்தையுடையவர்களிலும், இணைவைத்து வணங்குபவர்களிலும் பலர், தங்களிடம் தெளிவான அத்தாட்சி வரும் வரை (ஒரு தெளிவான அத்தாட்சி வந்தால், அதைப் பின்பற்ற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இருந்து) விலகாது (உறுதியாகவே) இருந்தனர்

[2] (அவர்களிடம் வந்திருக்கும் தெளிவான அத்தாட்சி என்னவென்றால், அவர்களுக்குப்) பரிசுத்தமான வேதங்களை ஓதிக் காண்பிக்கக்கூடிய அல்லாஹ்வினுடைய (இந்தத்) தூதர்தான்

[3] (அவர் ஓதிக் காண்பிக்கும்) அதில் நிலையான சட்ட திட்டங்களே வரையப்பட்டிருக்கின்றன

[4] (அவர்களின் வரவை எதிர்பார்த்து, அவர்களைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொண்டிருந்த) வேதத்தை உடையவர்கள் தங்களிடம் தெளிவான அத்தாட்சி(யாகிய நம் தூதர்) வந்ததன் பின்னர் (அவருக்கு) மாறுசெய்து பிளவுபட்டு விட்டனர்

[5] (எனினும், அவர்கள்) இறைவனுடைய கலப்பற்ற மார்க்கத்தையே பின்பற்றி, மற்ற மார்க்கங்களைப் புறக்கணித்து, அல்லாஹ் ஒருவனையே வணங்கி, தொழுகையையும் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருமாறே தவிர, (வேறெதுவும் இத்தூதர் மூலம்) அவர்களுக்கு ஏவப்படவில்லை. (இது, அவர்களுடைய வேதத்திலும் ஏவப்பட்ட விஷயம்தான்.) இதுதான் நிலையான சட்டங்களுடைய மார்க்கம்

[6] ஆகவே, வேதத்தையுடையவர்களிலும், இணைவைத்து வணங்குபவர்களிலும், (இந்த நபியின் வரவை எதிர்பார்த்திருந்தவர்களில்) எவர்கள் (அவரை) நிராகரிக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக நரக நெருப்பில் தான் இருப்பார்கள். அதில், அவர்கள் என்றென்றுமே தங்கிவிடுவார்கள். இவர்கள்தான் படைப்புகளில் மகா கெட்டவர்கள்

[7] ஆயினும், (இந்த நபியின் வரவை எதிர்பார்த்திருந்தவர்களில்) எவர்கள்(அவரை) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களே, நிச்சயமாக படைப்புகளில் மிகச் சிறந்தவர்கள்

[8] அவர்களுடைய கூலி அவர்களின் இறைவனிடத்தில் உள்ள ‘அத்ன்' என்னும் நிலையான சொர்க்கங்களாகும். அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருக்கும். என்றென்றுமே அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கிவிடுவார்கள். அல்லாஹ்வும் அவர்களைப் பற்றி திருப்தியடைவான். அவர்களும் அல்லாஹ்வைப் பற்றி திருப்தி அடைவார்கள். எவர் தன் இறைவனுக்குப் பயப்படுகிறாரோ, அவருக்குத்தான் இந்த பாக்கியம் கிடைக்கும்

அஸ்ஸல்ஸலா

Surah 99

[1] (பூகம்பத்தால்) பூமி பலமாக அசைக்கப்படும்போது

[2] அது, தான் சுமந்திருப்பவற்றை (எல்லாம் வெளியில்) எறிந்துவிடும் சமயத்தில்

[3] மனிதன் (திடுக்கிட்டு) ‘இதற்கென்ன நேர்ந்தது' (ஏன் இவ்வாறு அசைக்கப்பட்டது?) என்று கேட்பான்

[4] அந்நாளில் அது, தனக்குத் தெரிந்தவற்றை எல்லாம் அறிவித்து விடும்

[5] (இவ்வாறே) உமது இறைவன் வஹ்யி மூலம் (தனக்கு) கட்டளையிட்டிருக்கிறான் என்று கூறும்

[6] அந்நாளில் மனிதர்கள், (நன்மையோ தீமையோ) தாங்கள் செய்த செயல்களைக் காண்பதற்காக(ப் பல பிரிவுகளாகப் பிரிந்து) கூட்டம் கூட்டமாக (விசாரணைக்காக) வருவார்கள்

[7] ஆகவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர், (அங்கு) அதையும் கண்டுகொள்வார்

[8] (அவ்வாறே) எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தானோ, அதையும் அவன் (அங்கு) கண்டு கொள்வான்

அல்ஆதியாத்

Surah 100

[1] மூச்சுத் திணர அதிவேகமாகச் செல்லும் குதிரைகள் மீது சத்தியமாக

[2] (அவை செல்லும் வேகத்தில் குளம்புகளிலிருந்து) நெருப்பைக் கக்கும்

[3] இன்னும் அவை அதிகாலையில் (எதிரிகள் மீதும்) பாய்ந்து செல்லும்

[4] (அவ்வாறு வேகமாகச் செல்லும்போது, மேகத்தைப்போல்) புழுதியைக் கிளப்பும்

[5] பின்னர், (எதிரிகளின் படையின்) மத்தியில் நுழைந்துவிடும்

[6] (இத்தகைய குதிரைகள் மீது சத்தியமாக!) நிச்சயமாக மனிதன் தன் இறைவனுக்கு நன்றிகெட்டவன் ஆவான்

[7] நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாவான்

[8] நிச்சயமாக அவன் பொருள்களை மிக்க கடினமாகவே நேசிக்கிறான்

[9] அவனைக் கப்ரிலிருந்து எழுப்பப்படும் சமயத்தில், அவனுடைய உள்ளத்தில் உள்ளவையெல்லாம் அறியப்பட்டுவிடும் என்பதை அவன் அறிந்து கொள்ளவில்லையா

[10] அவனைக் கப்ரிலிருந்து எழுப்பப்படும் சமயத்தில், அவனுடைய உள்ளத்தில் உள்ளவையெல்லாம் அறியப்பட்டுவிடும் என்பதை அவன் அறிந்து கொள்ளவில்லையா

[11] நிச்சயமாக மனிதர்களுடைய இறைவன் (தீயவன் யார்? நல்லவன் யார்? என்று) அவர்களை அந்நாளில் நன்கு அறிந்து கொள்வான்

அல்காரிஆ

Surah 101

[1] (மரணித்தவர்களையும்) திடுக்கிடச் செய்யும் சம்பவம்

[2] (அத்தகைய) திடுக்கிடச் செய்யும் சம்பவம் என்ன

[3] (நபியே!) திடுக்கிடச் செய்யும் சம்பவம் இன்னதென்று நீர்அறிவீரா

[4] அந்நாளில் மனிதர்கள் சிதறிக்கிடக்கும் ஈசல்களைப் போல் ஆகிவிடுவார்கள்

[5] கொட்டப்பட்ட பஞ்சுகளைப்போல் மலைகள் ஆகிவிடும்

[6] எவருடைய (நன்மையின்) எடை கனத்ததோ

[7] அவர் திருப்தியுள்ள வாழ்க்கையில் (சுகமாக) வாழ்ந்திருப்பார்

[8] எவனுடைய (நன்மையின்) எடை இலேசாகி(ப் பாவ எடை கனத்து) விட்டதோ

[9] அவன் தங்குமிடம் ஹாவியாதான்

[10] அந்த ஹாவியா இன்னதென்று (நபியே!) நீர் அறிவீரா

[11] (அதுதான்) கனிந்து கொண்டிருக்கும் (நரக) நெருப்பாகும்

அத்தகாஸுர்

Surah 102

[1] நீங்கள் புதைக்குழிகளைச் சந்திக்கும் வரை (பொருளை) அதிகப்படுத்திக் கொள்ளும் பேராசை (அல்லாஹ்வை விட்டும்) உங்களைப் பராக்காக்கி விட்டது (திருப்பிவிட்டது)

[2] நீங்கள் புதைக்குழிகளைச் சந்திக்கும் வரை (பொருளை) அதிகப்படுத்திக் கொள்ளும் பேராசை (அல்லாஹ்வை விட்டும்) உங்களைப் பராக்காக்கி விட்டது (திருப்பிவிட்டது)

[3] நீங்கள் நினைப்பது போன்றல்ல. (அவை என்ன என்பதை) நீங்கள் நன்கறிந்து கொள்வீர்கள்

[4] பின்னர், நீங்கள் நினைப்பது போன்றல்ல. (அவற்றின் பலன்களையும்) நீங்கள் நன்கறிந்து கொள்வீர்கள்

[5] நீங்கள் நினைப்பது போன்றல்ல. (அதன் பலனைச்) சந்தேகமற உறுதியாக நீங்கள் அறிவீர்களாயின்

[6] நிச்சயமாக நரகத்தையே நீங்கள் (உங்கள் கண்முன்) காண்பீர்கள்

[7] பிறகு, சந்தேகமற மெய்யாகவே அதை நீங்கள் உங்கள் கண்களால் கண்டுகொள்வீர்கள்

[8] (உங்களுக்கு இறைவன் புரிந்த) அருளை (நீங்கள் எவ்வழியில் செலவு செய்தீர்கள் என்பதை)ப் பற்றியும், பின்னர் அந்நாளில் நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்

அல்அஸ்ர்

Surah 103

[1] காலத்தின் மீது சத்தியமாக

[2] (தன் ஆயுளை வீணில் செலவு செய்து) நிச்சயமாக மனிதன் நஷ்டமடைந்து விட்டான்

[3] ஆயினும், எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களையும் செய்து, சத்தியத்தை ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து (பாவங்களை விடுவதிலும் நன்மைகளைச் செய்வதிலும் ஏற்படும் சிரமங்களைச்) சகித்துக் கொள்ளுமாறும் ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து வந்தார்களோ, அவர்களைத் தவிர (இவர்கள் நஷ்டமடையவில்லை)

அல்ஹுமஸா

Surah 104

[1] குறை கூறிப் புறம் பேசித் திரிபவர்களுக்கெல்லாம் கேடுதான்

[2] பொருளைச் சேகரித்து (நல்ல வழியில் செலவு செய்யாது) அதை எண்ணிக்கொண்டே இருப்பவன்

[3] தன் செல்வம் தன்னை என்றென்றுமே (உலகத்தில்) நிலைத்திருக்கச் செய்யுமென்றும் எண்ணிக் கொண்டான்

[4] அவ்வாறல்ல! (நிச்சயமாக அவன் மரணிப்பான். பின்னர்) நிச்சயமாக அவன் ‘ஹுதமா' என்னும் நரகத்தில் எறியப்படுவான்

[5] (நபியே!) ‘ஹுதமா' (என்றால்) என்னவென்று நீர் அறிவீரா

[6] (அதுதான்) அல்லாஹ்வுடைய (கட்டளையால்) எரிக்கப்பட்ட நெருப்பு

[7] (அது உடல்களில் பட்டவுடன்) உள்ளங்களில் பாய்ந்துவிடும்

[8] (நரகத்திலுள்ள) உயர்ந்த கம்பங்களில் அவர்கள் கட்டப்பட்டு அவர்கள் மீது அதன் வாயில்களும் மூடப்பட்டுவிடும்

[9] (நரகத்திலுள்ள) உயர்ந்த கம்பங்களில் அவர்கள் கட்டப்பட்டு அவர்கள் மீது அதன் வாயில்களும் மூடப்பட்டுவிடும்

அல்பீல்

Surah 105

[1] (நபியே!) யானைப் படையினரை உமது இறைவன் எவ்வாறு (அழியச்) செய்தான் என்பதை நீர் (கவனித்துப்) பார்க்கவில்லையா

[2] அவர்களுடைய சூழ்ச்சியை அவன் வீணாக்கிவிட வில்லையா

[3] அவர்கள் மீது பறவைகளை கூட்டங்கூட்டமாக அனுப்பிவைத்தான்

[4] (கெட்டியான) சுடப்பட்ட சிறிய கற்களை அவை அவர்கள் மீது எறிந்தன

[5] அதனால், அவன் அவர்களை(ப் பறவைகளால்) கொத்தித் தின்னப்பட்ட கதிர்களைப்போல் ஆக்கி (அழித்து) விட்டான்

குறைஷ்

Surah 106

[1] குறைஷிகளுக்கு (பிரயாணத்தின் மீது) விருப்பமுண்டாக்கி

[2] குளிர்கால பயணத்தையும், கோடைகால பயணத்தையும் அவர்கள் விரும்பிக் கைகொள்ளும்படி செய்ததற்காக

[3] (அதற்கு நன்றி செலுத்துவதற்காக) இவ்வீட்டின் இறைவனையே அவர்கள் வணங்கவும்

[4] அவன்தான் (அவர்கள் உழவடித்துப் பயிரிடாமலே இந்த வர்த்தக பிரயாணத்தின் மூலம்) அவர்களுடைய பசிக்கு உணவளித்து வருகிறான். (கொலை, களவு முதலிய கொடிய) பயத்திலிருந்தும் அவர்களுக்கு அபயமளித்தான்

அல்மாஊன்

Surah 107

[1] (நபியே!) கூலி கொடுக்கும் நாளைப் பொய்யாக்குபவனை நீர் (கவனித்துப்) பார்த்தீரா

[2] (ஆதரவற்ற) அநாதைகளை வெருட்டுபவன் அவன்தான்

[3] அவன் ஏழைகளுக்கு (உணவளிக்காததுடன்) உணவளிக்கும்படி (பிறரைத்) தூண்டுவதுமில்லை

[4] (கவனமற்ற) தொழுகையாளிகளுக்கும் கேடுதான்

[5] அவர்கள் தங்கள் தொழுகைகளை விட்டும் மறந்தவர்களாக இருக்கிறார்கள்

[6] (மேலும்,) அவர்கள் (தொழுதபோதிலும் மக்களுக்குக்) காண்பிக்கவே தொழுகிறார்கள்

[7] (மேலும், ஊசி போன்ற) அற்பப் பொருளையும் (இரவல் கொடுக்காது) தடுத்துக் கொள்கிறார்கள்

அல்கவ்தர்

Surah 108

[1] (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு ‘கவ்ஸர்' என்னும் நீர் தடாகத்தை கொடுத்திருக்கிறோம்

[2] ஆகவே, (அவற்றுக்கு நன்றி செலுத்துவதற்காக) நீர் உமது இறைவனைத் தொழுது, குர்பானி (பலி) கொடுத்து வருவீராக

[3] நிச்சயமாக உமது எதிரிதான் சந்ததியற்றவன்

அல்காஃபிரூன்

Surah 109

[1] (நபியே! நிராகரிக்கும் மக்களை நோக்கி) கூறுவீராக: நிராகரிப்பவர்களே

[2] நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்

[3] நான் வணங்குபவனை நீங்கள் வணங்கவில்லை

[4] (அவ்வாறே) இனியும் நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவன் அல்லன்

[5] நான் வணங்குபவனை இனி நீங்களும் வணங்குபவர்கள் அல்லர்

[6] உங்கள் (செயலுக்குரிய) கூலி உங்களுக்கும்; என் (செயலுக்குரிய) கூலி எனக்கும் (கிடைக்கும்)

அந்நஸ்ர்

Surah 110

[1] (நபியே! உமக்கு) அல்லாஹ்வுடைய உதவியும், (மக்காவின்) வெற்றியும் கிடைத்து

[2] அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதையும் நீர் கண்டால்

[3] (அதற்கு நன்றி செலுத்துவதற்காக) உமது இறைவனைப் புகழ்ந்து துதி செய்து, அவனுடைய (அருளையும்) மன்னிப்பையும் கோருவீராக! நிச்சயமாக அவன் (பிரார்த்தனைகளை அங்கீகரித்து) மன்னிப்புக் கோருதலை(யும்) அங்கீகரிப்பவனாக இருக்கிறான்

அல்மஸத்

Surah 111

[1] அழியட்டும் அபூலஹபின் இரு கரங்கள்; அவனுமே அழியட்டும்

[2] அவனுடைய பொருளும், அவன் சேகரித்து வைத்திருப்பவைகளும் அவனுக்கு ஒரு பயனுமளிக்காது

[3] வெகு விரைவில் அவன் கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் நுழைவான்

[4] விறகு சுமக்கும் அவனுடைய மனைவியோ

[5] அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங்கயிறுதான். (அதனால் சுருக்கிடப்பட்டு அவளும் அழிந்து விடுவாள்)

அல்இக்லாஸ்

Surah 112

[1] (நபியே! மனிதர்களை நோக்கி) கூறுவீராக: அல்லாஹ் ஒருவன்தான்

[2] (அந்த) அல்லாஹ் (எவருடைய) தேவையுமற்றவன். (அனைத்தும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன)

[3] அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. (ஆகவே, அவனுக்குத் தகப்பனுமில்லை சந்ததியுமில்லை)

[4] (தவிர) அவனுக்கு ஒப்பாகவும் (நிகராகவும்) ஒன்றுமில்லை

அல்ஃபலக

Surah 113

[1] (நபியே! நீர் பிரார்த்தனை செய்து) கூறுவீராக அதிகாலையின் இறைவனிடம், நான் பாதுகாப்பைக் கோருகிறேன்

[2] அவன் படைத்திருக்கும் பொருள்களின் தீங்கை விட்டும்

[3] (அனைத்தையும்) மறைத்துக் கொள்ளும் இருண்ட இருளின் தீங்கை விட்டும்

[4] முடிச்சுப் போட்டு ஊதும் (சூதுக்கார) பெண்களின் தீங்கைவிட்டும்

[5] பொறாமைக்காரன் பொறாமைப்படும்போது அவனின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகிறேன்)

அந்நாஸ்

Surah 114

[1] (நபியே! பிரார்த்தனை செய்து) கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடம் நான் பாதுகாப்பைக் கோருகிறேன்

[2] (அவன்தான்) மனிதர்களின் (உண்மையான) அரசன்

[3] (அவனே) மனிதர்களின் வணக்கத்திற்குரிய உண்மையான இறைவன்

[4] மனிதர்களுடைய உள்ளங்களில் (வீணான) சந்தேகங்களை உண்டு பண்ணிவிட்டு, மறைந்து கொள்ளும் விஷமிகளின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகிறேன்)

[5] மனிதர்களுடைய உள்ளங்களில் (வீணான) சந்தேகங்களை உண்டு பண்ணிவிட்டு, மறைந்து கொள்ளும் விஷமிகளின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகிறேன்)

[6] (அத்தகைய விஷமிகள்) ஜின்களிலும் இருக்கின்றனர்; மனிதர்களிலும் இருக்கின்றனர்